வாக்காளப் பெருங்குடி மக்களே! – 12
உங்கள் ஓட்டு தமிழனுக்கா, அந்நியனுக்கா? - வாக்காளப் பெருங்குடி மக்களே! – 12
Listen to Vikatan stories on our AI-assisted audio player
எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சி சோபிக்காது என்றே பலரும் நினைத்தனர். ‘அ.தி.மு.க-வின் பலம் ஒரு தனிமனிதனின் கவர்ச்சிதான். மூன்று, நான்கு மாதங்களில் அந்தக் கட்சி கரைந்துவிடும்’ என்றார் நெடுஞ்செழியன். அ.தி.மு.க-வை இப்படிக் குறைத்து மதிப்பிட்டவர்களையெல்லாம் திகைக்க வைத்துவிட்டது திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தல்!
கருணாநிதி கையிலெடுத்த ஆயுதம்!
1973, மே மாதம். திண்டுக்கல் மக்களவைத் தொகுதி எம்.பி-யாக இருந்த தி.மு.க-வின் ராஜாங்கம் மரணமடைந்ததால், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மாயத்தேவரை அ.தி.மு.க-வின் வேட்பாளராக எம்.ஜி.ஆர் அறிவித்தார். தி.மு.க வேட்பாளராக பொன்.முத்துராமலிங்கம், ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளராக என்.எஸ்.வி.சித்தன், இந்திரா காங்கிரஸ் வேட்பாளராக கரு.சீமைச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) வேட்பாளராக என்.சங்கரய்யா ஆகியோர் நிறுத்தப்பட்டனர்.
எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. ஆனாலும், இவை மட்டுமே வெற்றிக்குப் போதாது என்று எம்.ஜி.ஆர் கருதினார். ஆகவே, சி.பி.எம் தலைவர் பி.ராமமூர்த்தியைச் சந்தித்து ஆதரவு கோரினார் எம்.ஜி.ஆர். இரண்டு காங்கிரஸ் கட்சிகளையும், தி.மு.க-வையும் தோற்கடிக்க வேண்டும் என்பது சி.பி.எம் கட்சியின் நோக்கம். எனவே, அ.தி.மு.க-வுக்கு ஆதரவளிப்பது என்று சி.பி.எம் முடிவெடுத்தது. போட்டியிலிருந்து விலகினார் என்.சங்கரய்யா.
கருணாநிதி
திண்டுக்கல் தொகுதியில் வேலை செய்ய ஒட்டுமொத்த தி.மு.க-வும் களமிறங்கியது. அத்தனை அமைச்சர்களும் முகாமிட்டார்கள். ‘தி.மு.க வெற்றிபெற வேண்டும்’ என்று அறிக்கை வெளியிட்டார் பெரியார். பட்டி தொட்டியெங்கும் பிரசாரம் செய்த முதல்வர் கருணாநிதி, ‘உங்கள் ஓட்டு தமிழனுக்கா, அந்நியனுக்கா?’ என்ற கேள்வியை முன்வைத்தார். எம்.ஜி.ஆர் பிறப்பால் மலையாளி. அந்த இன அடையாளத்தைத் தேர்தல் வெற்றிக்கான ஓர் ஆயுதமாகக் கையிலெடுத்தார் கருணாநிதி.
யுத்த பூமியான திண்டுக்கல்!
தேர்தல் நெருங்க நெருங்க யுத்த பூமியாக மாறியது திண்டுக்கல். அ.தி.மு.க-வினரும், தி.மு.க-வினரும் பயங்கர ஆயுதங்களுடன் நாகல்நகரில் மோதிக்கொண்டனர். சிலருக்குக் கத்திக்குத்து விழுந்தது. அதில் ஒருவர் பலியானார். வன்முறையை அடக்குவதற்காகத் தடியடி நடத்தப்பட்டது, கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டன.
வத்தலக்குண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய பி.ராமமூர்த்தி, ‘மக்கள் ஆதரவைப் பெற முடியாத தி.மு.க., அதிகாரத்தின் மூலம் குண்டர்களைவைத்து உருட்டி, மிரட்டித் தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்று பார்க்கிறது. தி.மு.க குண்டர்களின் ரௌடித்தனத்தை மக்கள் முறியடிக்க வேண்டும்’ என்றார். நிலக்கோட்டையில் பிரசாரம் செய்த முதல்வர் கருணாநிதி, ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அழிப்பதுதான் என் முதல் வேலை’ என்றார்.
அந்த நேரத்தில், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது. இன்னொரு புறம், திண்டுக்கல் இடைத்தேர்தலில் வாக்குகளை அ.தி.மு.க அள்ளிக்குவித்தது. 2,60,824 வாக்குகளைப் (52 சதவிகிதம்) பெற்று மாயத்தேவர் ஜெயித்தார். ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாம் இடம்பிடிக்க, தி.மு.க மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.
இருவரும் இந்திரா பக்கம்!
அ.தி.மு.க வளர்ந்துகொண்டிருந்தது. எஸ்.டி.சோமசுந்தரம், பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற தி.மு.க-வின் முக்கியத் தலைகள் அ.தி.மு.க-வுக்குத் தாவிக்கொண்டிருந்தனர். அந்தக் கோபத்தில் முதல்வர் கருணாநிதி, எம்.ஜி.ஆரைக் கடுமையாக விமர்சித்தார். அவரது தாக்குதல் இனரீதியில் போனது. திண்டுக்கல் இடைத்தேர்தலின்போது, ‘உங்கள் ஓட்டு தமிழனுக்கா, அந்நியனுக்கா?’ என்று கேட்ட கருணாநிதி, அந்த ஆயுதத்தை மீண்டும் கையிலெடுத்தார்.
அதற்கு பதிலடியாக, ‘கருணாநிதியின் சமூகம் குறித்து’ எம்.ஜி.ஆர் பேசியதாக ஒரு புரளி கிளம்பியது. ‘எம்.ஜி.ஆர் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்று தி.மு.க-வினர் போராட்டத்தில் இறங்கினர். திடீரென சென்னை வாழ் மலையாளிகள்மீது தாக்குதல் நடந்தது. மலையாளிகளின் வீடுகளும் கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. மலையாளப் படங்கள் ஓடிய திரையரங்குகள் சூறையாடப்பட்டன. இதன் எதிரொலியாக, திருவனந்தபுரத்தில் தமிழர்கள்மீது தாக்குதல் நடந்தது. அதையடுத்து, சி.பி.எம் தலைவர் ஏ.கே.கோபாலன் முதல்வர் கருணாநிதிக்குக் கடிதம் எழுதினார். நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த கருணாநிதி, `இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அறிவித்தார். அந்தப் பிரச்னை ஒருவழியாக முடிவுக்கு வந்தது.
அடுத்ததாக, கச்சத்தீவு விவகாரம் பெரிதாக எழுந்தது. 1974-ம் ஆண்டு, ஜூன் மாதம் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது இந்திரா காந்தி அரசு. அந்த விவகாரத்தில், இந்திரா காங்கிரஸ் அரசை தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் எதிர்த்தன. ஆனால், அடுத்து வந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் இரு கட்சிகளும் பல்டி அடித்தன. இந்திரா காந்தியால் நிறுத்தப்பட்ட பக்ருதீன் அலி அகமதுவை தி.மு.க., அ.தி.மு.க இரு கட்சிகளுமே போட்டி போட்டுக்கொண்டு ஆதரித்தன.
அப்போது, அரிசி விலை கடுமையாக உயர்ந்திருந்தது. ‘ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம், ஒரு படி நிச்சயம்’ என்று சொன்ன தி.மு.க-வின் ஆட்சியில், கிலோ அரிசி 5 ரூபாய்க்கும், 6 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. மாநில அரசால் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அரிசி விலையைக் குறைப்பதற்கு எந்த உதவியையும் இந்திரா காங்கிரஸ் அரசு செய்யவில்லை. ஆனால், அந்த இந்திரா காங்கிரஸுடன் சேர்ந்துகொண்டு, அரிசி விலை உயர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார் எம்.ஜி.ஆர். அதேபோல, அப்போது தமிழகத்தில் கடும் மின்வெட்டு நிலவியது. அதைத் தீர்ப்பதற்கு இந்திரா காங்கிரஸ் அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை; புதிய மின் திட்டங்களைத் தமிழ்நாட்டுக்குத் தரவில்லை. ஆனால், அதே இந்திரா காங்கிரஸுடன் சேர்ந்துகொண்டு மின்வெட்டுக்கு எதிராகப் பேரணி நடத்தினார் எம்.ஜி.ஆர்.
இந்திராகாந்தி
இருள் கவ்வியது!
1975-ம் ஆண்டு, ஜூன் 25-ம் தேதி. இந்திய தேசத்தை ‘எமர்ஜென்சி’ என்ற இருள் கவ்வியது. ‘நாடு முழுவதும் நெருக்கடி நிலை அமலுக்கு வருகிறது’ என்று அறிவித்தது இந்திரா காந்தி அரசு. காவல்துறை நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கைதுசெய்யலாம். ‘தேசியப் பாதுகாப்பு’ என்று சொல்லி, ஆண்டுக்கணக்கில் சிறையில் வைக்கலாம். ஜூன் 25 அன்று இரவே கைது வேட்டை தொடங்கியது. நாடு முழுவதும் விடிய விடிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள்.
ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி, சரண் சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ், மது தண்டவதே, அருண் ஜெட்லி, சந்திரசேகர், சரத் யாதவ், கர்பூரி தாக்கூர் உட்பட ஏராளமான அரசியல்வாதிகள் கைதுசெய்யப்பட்டனர். குல்தீப் நய்யார் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள், மாணவர்கள், செயற்பாட்டாளர்கள் எனச் சுமார் ஒரு லட்சம் பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள், ‘மிசா’வில் (Maintenance of Internal Security Act) சிறையில் அடைக்கப்பட்டனர்.
அப்போது, பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருந்தவர் இந்திரா காந்தி என்றாலும், அவருடைய புதல்வர் சஞ்சய் காந்திதான் இந்தியாவின் அதிகார மையமாக இருந்தார். மத்திய அமைச்சர்களும், அதிகாரிகளும், மாநில முதல்வர்களும் சஞ்சய் காந்தியின் ஆணைக்கிணங்க செயல்பட்டனர். சஞ்சய் காந்தி அறிமுகப்படுத்திய முக்கியத் திட்டங்களில் ஒன்று ‘குடும்பக் கட்டுப்பாடு திட்டம்’.
டாக்ஸி ஓட்டுநர்கள், கூலித் தொழிலாளர்கள் என ஏழைகள்தான் இந்தத் திட்டத்தின் இலக்கு. அவர்களை வலுக்கட்டாயமாகப் பிடித்துச் சென்று ‘வாசெக்டமி’ எனும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தார்கள். கிராமங்களில் போலீஸார் சுற்றிவளைத்து, அங்கிருக்கும் ஆண்களைப் பிடித்துச் சென்று குடும்பக் கட்டுப்பாடு செய்துவிட்டார்கள். சுகாதாரமற்ற முறையில் குடும்பக் கட்டுப்பாடு செய்ததால், பலர் மரணமடைந்தனர்.
‘நகரை அழகுபடுத்துதல்’ என்பது சஞ்சய் காந்தியின் இன்னொரு திட்டம். டெல்லியில் ‘துர்க்மேன் கேட்’ என்ற குடிசைப் பகுதியில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பல தலைமுறைகளாக வசித்துவந்தன. அவர்களில் பெரும்பாலானோர் ஏழை முஸ்லிம்கள். திடீரென்று புல்டோசர்களைக் கொண்டு சென்று அங்கிருந்த வீடுகளை அதிகாரிகள் இடித்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களைத் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினார்கள். அதில், பலர் உயிரிழந்தனர்.
பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டிருந்தது. அரசின் அனுமதியில்லாமல் எந்தச் செய்தியையும் வெளியிட முடியாது. அதனால், ‘துர்க்மேன் கேட்’ கொடுமைகள் போன்ற பல செய்திகள், எமர்ஜென்சி முடிவுக்கு வந்த பிறகுதான் வெளியுலகுக்கே தெரியவந்தன.
சஞ்சய் காந்தி
`உங்கள் மகன் ஸ்டாலினை..!’
1976, ஜனவரி 31-ம் தேதி. தமிழகத்தில் தி.மு.க ஆட்சி நடந்துவந்தது. தனியார் பள்ளி விழா ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் கருணாநிதி, ‘அநேகமாக, முதல்வர் என்ற முறையில் நான் கலந்துகொள்ளும் கடைசி நிகழ்ச்சி இதுவாகத்தான் இருக்கும்’ என்று பேசுகிறார். நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்குத் திரும்புகிறார். `தி.மு.க அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது’ என்ற தகவல் வருகிறது. நண்பர்களிடம் பேசுவதற்காகத் தொலைபேசியை எடுக்கிறார். சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. முதல்வரின் பாதுகாப்புக்காக இருந்த காவலர்கள் வாபஸ் பெறப்படுகிறார்கள். இரவு 8 மணிக்குக் காவல்துறையினர் வருகிறார்கள். ‘என்னைக் கைதுசெய்ய வேண்டுமா?’ என்று கருணாநிதி கேட்கிறார். ‘உங்களை அல்ல...’ என்று பதில் வருகிறது. ‘பிறகு, யாரைக் கைதுசெய்ய வந்திருக்கிறீர்கள்?’ என்று கருணாநிதி கேட்கிறார். ‘உங்கள் மகன் ஸ்டாலினை...’ என்கிறார் காவல்துறை அதிகாரி!
By
புலவர் ·
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.