Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ. பரந்தாமன் ஐயா காலமானார்

ஜூன் 15, 2025

1000525945.jpg

“மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன் அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார் புலி வீரர்…” என்ற புகழ்பெற்ற ஈழப் புரட்சிப்பாடலை எழுதிய கவிஞர் தமிழ் அறிஞர் பண்டிதர் வீ. பரந்தாமன் அவர்கள் காலமானார்.

பண்டிதர் பரந்தாமன் வடமராட்சியை புலோலியைச் சேர்ந்த ஒரு தமிழறிஞர் ஆவார். இவர் கிளிநொச்சியில் உள்ள பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக் கல்லூரியின் நிறுவனர் ஆவார். மேலும், இவர் எழுதிய “தமிழர் உறவுமுறைச் சொல் வழக்கு அகராதி” என்ற நூல் குறிப்பிடத்தக்கது.

கெரில்லாப் போர் விரகுகள் என்ற விடுதலைப் போராட்டம் சார்ந்த முக்கிய நூலையும் இவர் எழுதியுள்ளார். அத்துடன் மனிதரும் கடவுளும் மற்றும் வேர் – அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகரமுதலி முதலிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

—-—-

1000525944.jpg

வீரவணக்கம்  மொழிக்கான இனத்துக்கான தேசத்துக்கான வீரவணக்கம் 

இனத்துக்காகவும், தமிழ்மொழிக்காகவும், தமிழீழ விடுதலைக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்து, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடியவர். 

தமிழ்த் துறை ஆசானும், பண்டிதரும், பருத்தித்துறையைச் சேர்ந்த முன்னாள் ஹாட்லி கல்லூரி தமிழ் ஆசிரியருமான எங்கள் மதிப்பிற்குரிய ஆசான் பண்டிதர் வீ. பரந்தாமன் ஐயா இன்று காலமானார் என்ற துயரான செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் பகிர்கின்றோம்.

அவரது பங்களிப்புகள் எங்கள் மனதில் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்.வரும் ஓகஸ்ட் மாதத்தில், எங்கள் வகுப்பு தோழர்களுடன் அவரை நேரில் சந்தித்து, ஆசி பெறும் ஆசையுடன் எதிர்நோக்கியிருந்த நாங்கள், இன்று அவரை இழந்த வெறுமையில் நிலைகுலைந்து நிற்கிறோம். இன்று அவரின் தமிழ் உரைகளும், பாடசாலை நாட்களில் அவர் கற்பித்த தமிழின் நயமும், அவரது குரலோடு எங்கள் மனங்களில் இன்னமும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

1000525946.jpg

அவரது அறிவும், கருணையும், நாட்டுப்பற்று நிரம்பிய வாழ்வும் எங்களுக்குத் தாங்க முடியாத இழப்பாகவே திகழ்கின்றன.அன்னாரின் ஆழ்ந்த பணிகள் எப்போதும் எங்கள் நினைவில் நிலைத்திருக்கும்.

அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

அவரது குடும்பத்தாருக்கும் நெருங்கிய உறவினருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

-நவஜீவன் அனந்தராஜ்- 

https://www.battinatham.com/2025/06/blog-post_264.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது பெருமதிப்புக்குரிய ஆசானுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

கணீர் என்ற குரலுடன், முகத்தில் புன்னகையும், மகிழ்வும் ததும்பக் கற்பித்த நாத்திகரான பண்டிதர் பரந்தாமன் ஆசிரியரிடம் சைவ சமய பாடம் கற்கும் பாக்கியம் எனக்கும் இருந்தது. சைவ சமயத்தை வெறும் பக்தி மதமாகக் பார்க்காமல் மெய்யியலாகக் கற்பித்து தத்துவம் மேல் விருப்பை ஊட்டியவர்.

—-—-

“பிறமொழிக் கலப்பை அதீத மொழிப்பற்றுக் கொண்டு எதிர்த்த பண்டிதர் வீ.பரந்தாமன்”

-வீரகேசரி-

08.12.2024 கொழும்பில் இருந்து வெளிவந்திருக்கும் வீரகேசரி வாரவெளியீட்டில்(ஞாயிற்றுக் கிழமை) பதிவேற்றம் பெற்றிருக்கும் ஆளுமை…….

ஈழத்துக் கலை,இலக்கியப் பரப்பில் தமிழ்மொழி வாழ, இன உணர்வு மேலெழ அரும்பாடுபட்டு தற்போது உடலால்,உளத்தால் நலிவுற்றிருக்கும் பேரன்புக்குரிய மிகப் பெரும் ஆளுமை பண்டிதர் வீ.பரந்தாமன் ஐயா அவர்களின் பார்வையோடு இணைவோம்……

அன்போடு நோக்குகிறோம்:-

தாயகக் கவிதாயினி பிறேமா எழில் அவர்களை.

அன்புமிகு நன்றி

திரு.சி.சிறிகஜன் அவர்கள்,

பிரதம ஆசிரியர்,

வீரகேசரி,

மற்றும் நிர்வாகக் குழுமத்தினர்க்கும்.

யாழ்.உரும்பையூர் து.திலக்(கிரி)

சுவிற்சர்லாந்திலிருந்து எழுதும்…

வாரம் ஒரு படைப்பாளி…

***********************

(பார்வை - 20)

தாயக மண்ணின் முதுபெரும் கலை இலக்கியப் பேராளரும் கல்விசார் ஆசிரியரும் பாலபண்டிதர், பண்டிதர், மொழி ஆய்வாளர், கவிஞர், பாடலாசிரியர், நாடக ஆசிரியர், தாயக தேசப்பற்றாளர் என இப் பேராளுமைகளைக் கொண்ட பலராலும் நன்கு அறியப்பட்டு விருப்பத்தோடு அணுகக்கூடிய பண்டிதர் வீ.பரந்தாமன் அவர்கள் பற்றிய பார்வையோடு இவ்வாரம் இணைகிறோம்…

பழம்பெரும் பாரம்பரியத்தையும், புராதன மொழி, சமயம், கலாச்சார மரபு, பண்பாட்டு விழுமியங்களையும் தனித்துவமாகக் கொண்டு புலவர்கள் வாழ்ந்து நிறைந்த யாழ் வடமராட்சி பிரதேசத்தின் புலோலி தெற்கு எனும் சிற்றூரில் வீரகத்திப்பிள்ளை பார்வதிப்பிள்ளை இணையருக்கு 1942ஆம் ஆண்டு பண்டிதர் பரந்தாமன் அவர்கள் பிறந்தார்.

ஈழ, உலக தமிழ் இலக்கியப் பரப்பு இவரைப் புறந்தள்ளியதாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் பட்டிதொட்டியெங்கும், உலகத்தின் மூலை முடுக்கெங்கும், தமிழர் வாழ்கின்ற தேசங்களெங்கும் இவரது வரிகளில் அமைந்த பாடல்கள் இவரது தனித்துவத்தை சாட்சியாக இன்று கட்டியங்கூறி நிற்கிறது.

இன்றுமட்டுமல்லாது என்றென்றும் இவர் வரிகளும் ஆளுமைகளும் பேசப்படும். இவர் நவீனத்தைக் கிளறி எறிந்து மரபுரிமையோடு பின்னிப் பிணைந்தவையாக இவரது படைப்புகள் அமைவதோடு மக்களை அதற்குள் இலகுவாக உள்ளீர்த்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நிற்கின்றன.

சிறுபராயத்திலேயே தன் தாய்மொழிமீது தீராத காதல் கொண்டு தமிழ்ப் பொத்தகங்களை தேடி நாடி வாங்கி தானாகவே கற்று அறிந்துகொண்டு மனப்பாடம் செய்தலையும் தனது விருப்போடு ஒன்றாக்கிக்கொண்டார். பண்டிதர் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை

யா/புற்றளை பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை

யா/கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் கற்றார். தமிழ் அறிஞர் கந்த முருகேசனாரிடம் குருகுல முறையில் மேலதிகமாக தமிழ்க் கல்வியைக் கற்று பாலபண்ணிதர், பண்டிதர் கல்வியை (ஆசிரிய திராவிட பா.ஜா அபிவிருத்திச் சங்கத்தில் நிறைவு செய்தார். குடும்பம் வறுமையில் வாடிய போதும் தன் தாய்மொழி மீது கொண்ட அதீத தேடலையும் விருப்பத்தையும் கைவிடவில்லை. அதன் பயனாக தனது மேற்படிப்புவரை கல்விகற்று ஆசிரியப் பணியையும் ஆரம்பித்தார். கற்பித்தல் காலத்தில் இலகு முறையில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்ததால் இவருக்கு “நல்லாசிரியர்” விருது கிடைக்கப்பெற்றதும் சிறப்பம்சமாகும்.

இவரது ஆசிரியப் பணி பற்றி நோக்குகையில்

* 1970ஆம் ஆண்டு

மாணவ ஆசிரியராக

* 1973 - 1974 வரை திருகோணமலை இந்துக்கல்லுரியில் பயிற்றப்பட்ட ஆசிரியராக

* பதினெரு (11) ஆண்டுகள்

யா/புற்றளை மகாவித்துயாலயத்தில்

* யா/உடுத்துறை மகா வித்தியாலயம்

* யா/மணற்காடு தமிழ்க் கலவன் பாடசாலை

* 1983 - 1996 வரை

யா/பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி

* 1996 - 2002 வரை

மு/கோம்பாவில் விக்னேஸ்வரா வித்தியாலயம்

* 2005 - 2008 வரை

கிளி/தமிழ்ப் பயிற்சிக் கல்லூரி

ஆகிய கல்விச் சாலைகளில் தன் கற்பித்தல் திறனை பெரிதும் வெளிக்காட்டிநின்ற பண்டிதர் வீ.பரந்தாமன் அவர்கள் தமிழ்மொழி மீதும், ஈழதேசத்தின் மீதும், தலைமைத்துவம் மீதும், களச் செயற்பாட்டாளர்கள் மீதும் தீராத பற்றுக்கொண்டு தனதுவீடு முதலான தன்பிள்ளைகளுக்குத் தூய தமிழ்ப்பெயர்களைச் சூட்டி மாணவர்களுக்கும், களச் செயற்பாட்டாளர்களுக்கும் தமிழ்ப்பற்றை ஊட்டிக் கற்பித்தார்.

தமிழ் இலக்கண இலக்கியத்தை இலகுவாக இனிமையாகக் கற்பிப்பதில் வல்லவர்.

“தமிழைப் பழித்தால் தாய் தடுத்தாலும் விடேன்"

என்று கவிஞர் பாரதிதாசன் கூற, பண்டிதர் வீ.பரந்தாமன் அவர்கள் ஒருபடி மேலே சென்று,

"தமிழ்மொழியைப் பழித்துரைத்தால் எம்மையீன்ற தாயெனினும் அன்னாளைக் கொல்ல வேண்டும்"

என முழக்கமிட்டார். இவரின் மொழியாற்றலால் கவரப்பட்ட தேசத்தின் தலைமைத்துவம் களச் செயற்பாட்டாளர்களுக்கு தமிழ்மொழி கற்பிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்திருந்தார்.

அன்றைய காலத்தில் போக்குவரத்திற்காக தன் பணி நிமிர்த்தம் தனக்கு ஒரு மோட்டார் சைக்கிள் வேணும் என்று தேசத் தலைமைக்கு ஒரு வேண்டுகையைக் கவிதை வடிவில் எழுதினார். அவ்வரிகளாவன,

"கொந்துமணி தேர்வேண்டேன்

கோமகனே உன்னிடத்தில்

கந்துகடா களிறும் யான் வேண்டேன்

முன் நீ அழைத்தால்

வந்துசெல்ல வளமாக

மனமகிழ்ந்தே ஒரு சிறிய

உந்துருளி தந்துதவ

வல்லையோ உடன்பிறப்பே"

என வரிகளைக் கோர்த்தனுப்பினார் பண்டிதர் வீ.பரந்தாமன் அவர்கள்.

உரியவர் கரம் கிடைத்ததும் உடனே படித்து மெய்சிலிர்த்தார். உள்ளத்தில் இருந்தவற்றை எழுத்துவடிவாய் வேண்டுகை விடுத்த பண்டிதரின் உரிய வகைத் தேவை அறிந்து அவ்வேண்டுகையை சிரமேற்று அவருக்கான உந்துருளியை வழங்கியதோடு, முதன்முதலாக மோட்டார் சைக்கிள்( motor bike) என்ற வாகனத்துக்கான தூய தமிழ்ச்சொல்லான 'உந்துருளி' என்ற சொல் பண்டிதரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இவருடைய புலமைக்குச் சான்று.

இவர் தமிழின எழுச்சி, மனங்கள் மாற்றங்காணும் வகையிலான எழுச்சி, மொழியினுடைய வளர்ச்சி நிலை என்ற கட்டமைப்புக்குள் நின்று இலக்கியங்களைப் படைத்தவராவார். இவருடைய தாயகப் பாடல்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மனதில் இன உணர்வையும் மொழிப்பற்றையும் தேசப்பற்றையும் பெரிதும்

விதைத்தது எனலாம்.

இவர் எழுதிய பாடல்கள் பல ஒலி நாடாக்களில் பதிவாக்கம் பெற்றுநிற்கிறது அவற்றுள் சில…

01. மானம் ஒன்றே வாழ்வெனக்கூறி..

02. போடு போடு வீர நடைபோடு...

03. கோணமலை எங்கள் ஏணைமலை...

04. நெஞ்சினில் நெருப்பேந்தி வாருங்கள்...

05. தம்பிகளே அன்புத் தங்கைகளே கொஞ்சம் நில்லுங்கள்..

06.நிலவற்ற வானத்தில் வெள்ளி சிரிக்கும்….

இப் பாடல்கள் எக் காலத்திலும் மனதிற்கு இனிமையையும் தேசத்தின் பெருமையையும் இனமான உணர்வுகளையும் பறைசாற்றி நிற்கும் சான்றுகளாகும்.

இதனை வரியாக்கிய அவரது கரங்களுக்கும் சிந்தனா சக்திக்கும் ஈழதேசம் சார்பாக நன்றியுணர்வைக் காணிக்கையாக்குவதோடு இவர் இலக்கியப் பெருநிலத்தில் விதையாகத் தூவிய நூல்களாவன…

01. மனிதரும் கடவுளும் - 1968

02. தமிழ் 9 இன் பயிற்சி விடைகள் - 1975,1986

03. தமிழ்மலர் 10 இன் பயிற்சி விடைகள் - 1986

04.புதியதோர் புறம் (ஒலிநாடா) - 1990

05.தமிழ் நடந்த தடங்கள்( கவிதை) - 1995

06. கெரிலாப்போர் விரகுகள் - 1996

07. பண்டைக்குமரியும் பழங்குடித் தமிழரும் - 2001

08. திருக்குறளில் செந்தமிழாட்சி - 2005

09. வேரடிவழித் தமிழ்ச் சொற்பிறப்பியல் சிற்றகரமுதலி -2004

10. தமிழ்ப்பெயர் கையேடு மக்கட்பெயர் 46000

11. அருகிவரும் பழந்தமிழ்ப் பேச்சுவழக்கு

சொற்பிறப்பியல் அகராதி 'அ' மட்டும். -2008

12. தமிழர் உறவுமுறைச் சொல்வழக்கு அகராதி -2016

இவ்வாறான அரிய நூல்களை தமிழுக்கும் அதன் நுகர்வோருக்கும் அள்ளியள்ளி படையல் செய்திருக்கும் இப் பண்டிதர் காலத்திருக்கு தந்திருப்பது அளப்பரிய கனதியாகும். அதுமட்டுமன்றி

பெண்ணடிமை, பண்பாட்டுச்சிதைவுகள் , குடும்பவன்முறை போன்ற விழிப்புணர்வுசார் நாடகங்களையும் எழுதி ஆரம்பநிலை களச்செயற்பாட்டாளர்களுக்கு பயிற்றுவித்து அரங்கேற்றி பெரு வரவேற்பைப்பெற்ற

அரங்காற்றுகைகளாக

* அறியாமையின் விடிவு

* வாழவிடுங்கள்

* ஒற்றைச்சிலம்பு

* காடுகாத்த காவலன்

* வீழ்ந்த யாழ்ப்பாணம்.

இவ்வாறான பல்வேறுபட்ட கலை வடிவங்களை மொழி பிறழாது தாய்மொழியின்பால் நின்று படைப்பியக்கம் செய்தது வரலாற்று முக்கியத்துவம்பெற்று நிற்கிறது.

பண்டிதர் வீ. பரந்தாமன் அவர்களுடைய கவிதைகளை நோக்கினால் சீர்திருத்த கருத்துகள் நிறைந்த சந்தங்கள், இயைபுகள் நிறைந்த வரிகளாகவே அமையும். இவருடைய

“தமிழ் நடந்த தடங்கள்” என்ற கவிதையில்…

"கடவுள் என்று வணங்குவர் செதுக்கிய கல்லை

கனிச்சிலை கொள்வதற்கு ஏன் மனமில்லை

மடமைக்கு இதைவிட வேறென்ன எல்லை --கெட்ட

ஆடவர்க்கு போடுங்கள் மாடுண்ணும் புல்லை"

இவ்வாறாக வாசிக்கும்போதே எல்லையற்ற ஆர்வத்தைத் தூண்டிவிடுகின்ற இப் பண்டிதர் சமூகத்துள் புரையோடிப் போயுள்ள சீர்வரிசைக் கொடுமையை கனகட்சிதமாக சாடி நிற்கிறார்.

இவ்வாறாக பல விடயப் பரப்புளை உள்ளடக்கிய கவிதைகளை தனது படைப்புகளில் ஆழமாகவும் அழகாகவும் வடித்துள்ளார்.

பண்டிதர் அவர்கள் தனது பன்முக ஆளுமைகளுக்காகப் பல விருதுகளும் சான்றுகளும் பெற்று மாண்பேற்றப்பட்டார்.

* நல்லாசிரியர்விருது

* இலக்கியதுறை கலைப்பரிதி விருது ( வடமராட்சி வடக்கு கலாசாரபேரவை)

* இயல்துறை கலைவாரிதி (வடமராட்சி கல்விவலயம்)

* தமிழ்மாமணி விருது(அகில இலங்கை இளங்கோ கழகம்)

* பேராளுமை விருது(வெண்மேரி அறக்கட்டளை) பன்முகத்தன்மை ஆளுமைக்கான விருது.

மேற்குறிப்பிட்ட விருதுகள் மதிப்பளித்து நின்றாலும் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் உலக இலக்கியப் பரப்பிலும் பண்டிதர் வீ.பரந்தாமன் என்றாலே தமிழின் மாமேதை என்கின்ற தனித்துவ அடையாளம் என்றும் அவரை அலங்கரித்து நிற்கிறது. இது பெறுதற்கரிய விருதாகும்.

சமூகப் பரப்பிற்குள், வாழ்வியல் முறைமைகளுக்குள் பார்த்தீனியச் செடியைப்போல் ஆங்காங்கே பற்றிப் படர்ந்திருக்கும் சமூகப் பிறழ்வுமிக்க செயற்பாடுகளை தன் தாய்மொழியை ஆயுதமாகக் கொண்டு சீர்செய்ய நினைத்த பண்டிதர் அவர்கள் தனது முதலாவது காகிதப் பிரசவமாக “கடவுளும் மனிதனும்” என்ற தலைப்புத்தாங்கி வெளிவந்து அவரது கொள்கையைச் சுட்டிக்காட்டி நிற்கிறது.

தாய்மொழியையே தெய்வீகமாகக் கொண்டு இன்பத் தமிழில் மட்டுமே இறையின்பம் காண்பவர் பண்டிதர் வீ.பரந்தாமன் ஆவார். பேச்சுவழக்கிலோ எழுத்துமுறையிலோ பிறமொழிக் கலப்பை அதீத மொழிப் பற்றுடன் எதிர்ப்பவர். தமிழ், ஆளுமைமிக்க தலைமை, தாயக நிலம், தமிழர் கலை கலாச்சாரப் பண்பாடு, என தான் வரித்த கொள்கைப் பற்றோடும் உணர்வோடும் வாழ்ந்துவருபவர். இவ்வாறான ஆளுமையும் தாயக தேசத்தில் தீராத பற்றுமுடைய இவர் தமிழ் இனத்திற்குக் கிடைத்த அரும்பெரும் சொத்து எனலாம்.

வயது மூப்பின் காரணமாக உடல்மெலிந்து குரல் தளர்ந்து சிந்தனாசக்தி குன்றி நின்றாலும் ஓடியோடி தமிழுக்காய் உழைத்த கால் ஓய்ந்தாலும் படைத்த படைப்புகளும் ஆற்றிய சேவைகளும் தமிழுக்காய் அர்ப்பணித்த வாழ்வியல் தடங்களும் ஓயாது நிலைத்திருந்து உங்கள் கதை பேசி நிற்கும். உங்கள் படைப்புகளுக்காய் ஈழதேசம் என்றும் நன்றியுணர்வைப் பற்றி நிற்பதோடு நலம்பெற வேண்டி நிற்கிறோம்.

து.திலக்(கிரி),

08.12.2024,

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_8478.jpeg.3d47897481464ca93fde

பண்டிதர் பரந்தாமன் எனது அண்ணன் நித்தியகீர்த்தியின் நண்பர். அறுபதுகளில், என் அண்ணன் நடத்திய மக்கள் நாடகக் குழுவில் அவர் முக்கியமான வேடங்களில் நடித் திருந்தார். தமிழகத்தில் "பால பண்டிதர்" என்ற பட்டத்தை பெற்றுக்கொண்டு, அவர் நாடு திரும்பிய பின்னர் எந்த வேலைகளும் கிடைக்காமல் இருந்தபோது பொழுதுபோக்குக்காக  நாடக மேடையில் நுழைந்தார். பரந்தாமன் நாடகங்களுக்கு பாடல்களையும் எழுதியுள்ளார். அவருடைய பாடல்களில் ஒரு வரி எனது மனதில் இன்றும் பதிந்துள்ளது: “தொட்டால் சுடுவது நெருப்பல்லவா? தொடாமல் சுடுவது அழகல்லவா?” என்று அந்தப் பாடல் தொடங்கும்.

புலோலி தமிழறிஞர் கந்தமுருகேசனாரின் மாணவனான வீரகத்தி பரந்தாமன், எனது அண்ணனுடன் கந்தமுருகேசனார் பற்றி உரையாடும்போது, அடுத்த அறையில் இருந்து நான் கேட்ட சில சுவாரஸ்யமான விடயங்கள் எனக்குள் பதிந்து விட்டன. அதில் இரு முக்கியமான விடயங்கள்,“கந்தமுருகேசனார் ஒரு விஷயத்தை வேகமாகச் சொல்லும்போது, வேறு விதமான அர்த்தம் பிறக்குமென்று கூறுவார்.  ‘அக்காளைக்கு மேல் ஏறும் அந்நஞ்சு உண்ணியை எக்காளமும் காண்பது அரிது’ என்று ஒன்று. மற்றையது, புலவர் சண்முகநாதன் ஒரு விருந்துக்குப் போன போது உணவு பரிமாறுவதற்கு அவருக்கு முன்னால் வாழை இலை வைத்தார்கள். அந்த இலையைப் பார்த்த புலவர் சண்முகநாதன், “புண்ட இலை” என்று சொன்னார். அதன் பின்னர் அண்ட இலை போட அதுவும் புண்ட இலை என்றார்” 

இந்த இரண்டும் நான் நண்பர்களுடன் அன்று பகிர்ந்து கொண்டவை.

60களில் பண்டிதர் பரந்தாமன், சத்தியசாயிபாபாவுக்கு எதிராக"புட்டர் புரத்துப் புரட்டன்" என்று தொடராக பல கட்டுரைகளை எழுதிவந்தார். பின்னர் அவற்றைத் தனது  பணத்திலேயே அச்சிட்டு இலவசமாக விநியோகித்தார். அவர் தனது ஆசிரியர் வேலையில் இணைந்து திருமணம் செய்து கொண்ட பிறகு, எனது அண்ணனும் வெளிநாட்டிற்கு புறப்பட்டுப் போக  அவருடனான எனது தொடர்புகள் நின்றுவிட்டன.

நான் புலம் பெயர்ந்த பிறகு, பண்டிதர் பரந்தாமன் விடுதலைப் புலிகளுக்காக புரட்சிப் பாடல்களை எழுதியிருந்தார் என அறிந்தேன். அதில் குறிப்பிட்ட பாடலாக, “மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்.அவன் போன வழியில் புயலென எழுந்து போரில் வந்தார் புலி வீரர்என்ற பாடலைச் சொல்வேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

I அஞ்சலி I I பண்டிதர் பரந்தாமன் I


இரண்டாம் ஈழப்போர் தொடங்கிய தொண்ணூறுகளில் தன்னுடைய நாற்பதுகளிலிருந்த பண்டிதர் ஆசிரியர் வேலையைவிட்டு விலகி முழுநேர உறுப்பினராக சீருடையணிந்து புலிகளில் இணைந்தார். சங்க காலக் கவிதைகளில் ஒரு அதிபதியான பரந்தாமனின் பொற்காலமும் சங்ககாலத்திலேயே இருந்தது. விடுதலைப் புலிகளின் பொற்காலமான தொண்ணூறுகளில் புராதன சங்ககாலம் “தமிழீழத்தில்” Re Enact பண்ணப்படுவதாக ஒரு குழந்தையின் முகச்சாயலைக் கொண்டிருந்த பண்டிதர் உண்மையிலேயே நம்பினார். சங்ககாலத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்த பண்டிதர் சங்ககால மொழியையும் பதங்களையும் கொண்டு பிரச்சாரமில்லாத சில நல்ல கவிதைகளையும் எழுதியுள்ளார்.

பண்டிதர் பரந்தாமனுடைய மகனும் வேறொரு பிரிவில் எங்கள் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அவனும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளில் போய்ச் சேர்ந்தான். மகன் புலிகளில் இணைவதை பண்டிதர் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊக்குவித்திருந்தார். அதுமட்டுமின்றி தன் மகன் இணைந்ததை மிகப்பெருமையாகச் சொல்லியும் திரிந்தார். புலிகள் யாழை விட்டு வன்னிக்குச் சென்றபோது பண்டிதரும் வன்னிக்குப் போனார். ஈழப்போர் முடிந்தபின் புனர்வாழ்வுபெற்று தன் ஊருக்கு திரும்பி தன் எஞ்சிய நாட்களை நேற்று இறக்கும்வரை வாழ்ந்துவந்தார். அந்தணன் - அவர் மகன் ஊருக்கு திரும்பவில்லை.

விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஒரு மாயையிலிருந்தாலும் நியாயமானதாக நம்பியவரும் கவிஞர் முருகையனைப் போன்ற Hypocrite அல்லாதவருமான நேர்மையான மனிதனும் கவிஞரும் சொல்லப்பட்ட தமிழாசிரியருமானவர் பண்டிதர் பரந்தாமன். பகுத்தறிவுத் தந்தை என வர்ணிக்கப்படும் தென்புலோலியூர் கந்த முருகேசனார் இவருடைய குரு. ஹாட்லிக்கல்லூரியில் நான் படித்த காலப்பகுதியில் இவர் ஆசிரியராக இருந்தாலும் இவரிடத்தில் தமிழ் படித்திருக்ககூடிய பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை.

பண்டிதரின் நல்ல கவிதையொன்று



I நல்லையல்லை நெடுவெண்ணிலவே I

இல்லும் இழந்தனம்
ஊரும் இழந்தனம்

ஏல்லாம் இழந்தே ஏதிலியர் ஆனோம் வேற்றூர் தன்னில் வெய்யிலுக்கொதுங்கல் போற்றெருவோரம்
புளியோ வேம்போ ஆலோ அரசோ அருநிழல் தேடி
ஓலை மறைப்பில் உழலும் வாழ்க்கை ஒழியுநாள் வருமோ?

முன்னாள் எம்மூர் உழுது வித்திய
பழனச் செந்நெல்
அலைகடற் படுத்த விளைமீன் குழம்பொடு ஆர உண்டே
மூரல் முறுவலர்
சேர இருந்து திங்கள் சொரிந்த

பாலொழிப் பரப்பில்
மாலைத் தென்றல்
முல்லை நறுமணம் முகந்து வீச
மேனி சிலிர்ப்ப இன்பில் மிதந்த
எழில் வாழ்வு கழிந்தது மாதோ

இன்னாள் ஏர்க்களம் யாவும்
போர்க்களம் ஆன
வாரியிடையே
வலைஞர் செல்லார்
குயிலும் கோழியும் கூவல் மறந்தன கிள்ளை மழலையும் கேளா
நல் ஆன் கன்று துள்ளா
கறவை சுரவா
எல்லாம்
அழுக்காறுடையான் உள்ளம் போல் புல்லென்றாகிப் போன யாமோ கடுவெயில் அருவழி
நெடுந்தொலை ஏகி
கான விறகு கட்டி விற்கும்
அல்லல் வாழ்க்கையே ஆனோம்

இங்ஙன் சிறுவர் மகிழார்
இளையோர் நயவார்
பாடுநர் நோக்கார்
பகையறக் களத்தில் ஆடுநர் வேண்டார் நீடொழி பரப்பி
மெல்ல வானில் வருகுவை
நல்லை அல்லை நெடுவெண்ணிலவே
❤️

இவர் கிளிநொச்சியில் உள்ள பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக் கல்லூரியின் நிறுவனர் ஆவார். மேலும், இவர் எழுதிய “தமிழர் உறவுமுறைச் சொல் வழக்கு அகராதி” என்ற நூல் குறிப்பிடத்தக்கது.

கெரில்லாப் போர் விரகுகள் என்ற விடுதலைப் போராட்டம் சார்ந்த முக்கிய நூலையும் இவர் எழுதியுள்ளார். அத்துடன் மனிதரும் கடவுளும் மற்றும் வேர் – அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகரமுதலி முதலிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.


- நட்சத்திரன் செவ்விந்தியன்

https://www.facebook.com/share/p/15mXpGm7oi/?

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

large.0ee1576c-e59c-4350-bb8f-fbbb4f12359b.jpeg

large.e774fe42-a93e-4f6f-9f4f-566b02d41f05.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் . ......... !

  • கருத்துக்கள உறவுகள்

dc27f8f7-9cbf-46a7-9a4f-364471f5aace.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டிதர் பரந்தாமனின் நூலில் இருந்து சில பகுதிகள்

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

இவர் வன்னியில் vnhitத்துறை போராளிகளுக்கு தமிழ் பாடம் வந்து சொல்லிக்கொடுத்தவர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.