Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீயினில் வெந்த தியாகி முத்துக்குமரனின் பிறந்த நாள் இன்று

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீயினில் வெந்த தியாகி முத்துக்குமரனின் பிறந்த நாள் இன்று

தமிழீழத்தைக் காக்கக்கோரி தன்னுயிரைக்கொடுத்து தமிழகத்தில் பேரெழுச்சியை ஏற்படுத்திய ஈகி முத்துக்குமரனின் பிறந்த நாள் இன்று. தமிழ்நாட்டு மக்களால் மறக்கப்பட்ட அத்தியாகியை மீனகம் மூலம் மீண்டும் உங்களுக்கு நாங்கள் நினைவுபடுத்துகிறோம்.

தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டம், புலியநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் (28) எனும் இளைஞ‌ர் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலக‌‌ங்கள் அமை‌ந்து‌ள்ள சாஸ்திரி பவ‌னு‌க்கு சனவரி 29 அன்று காலை வந்து திடீரென, ஈழத்தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற கோரியும் சத்தமிட்டபடி மண்எ‌ண்ணெ‌‌யை உட‌லி‌ல் ஊற்றி தீயை பற்ற வைத்தார். அவர் கையிலிருந்த ஈழத்தமிழரின் போராட்டத்திற்கன பிரசுரங்கள் காற்றில் பறந்தன. உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமர‌ன் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார். அவர் மீது எரிந்துக் கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டு உடனடியாக அவரை காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அ‌ங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப‌ட்டும் பயனின்றி இறந்தார்.

இறக்க முன்பு முத்துக்குமார் காவற்துறையினரிடம் அளித்த மரண வாக்குமூலத்தில், “இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும். நடுவண் அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன். வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் மத்திய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன். இலங்கை தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்களில் நிறைய புத்திசாலிகள் இருக்கின்றனர். அவர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது.” என்று குறிப்பிட்டார்.

தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் – இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ”தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா”னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே…

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே… உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது – இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய – இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே…

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே…

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் – அதுதான், இந்திய உளவுத்துறை – ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா… இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த

இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே…

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே… ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் பாலியல் வல்லுறவின் மூலமாகவே வந்திருக்குமென்று… நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா – என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்… வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல… இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்… எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,

கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

FIRE4

ஈகி முத்துக்குமாரனின் பிறந்த நாளான இன்று அவரின் நோக்கங்களை செயற்படுத்த உறுதி எடுக்குமாறு தமிழ் மக்களை மீனகம் தளம் வேண்டிக்கொள்கிறது.

http://www.meenagam.org/?p=16754

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயக தமிழனின் முதல் வீர வணக்கம்! – தமிழன்பன்

salute_muththukkumarஈழத்தமிழனுக்கு மிகவும் பரிச்சயமான வார்த்தை ‘வீர வணக்கம்’. ஈழத்தில் வீர மரணம் அதிகம். தாயககனவுடன் சாவினை தழுவிய வீரர்களை வீரவணக்கம் செலுத்தி மாவீரருக்குரிய மரியாதையுடன் அடக்கம் செய்தல் ஈழப் போராளிகளின் பண்பாடு. மாவீரர் தினம் என்ற ஒன்றை வீர சாவை தழுவிய போராளிகளை மரியாதை செய்யும் நிமித்தமாக போராளிகள் கொண்டாடுகிறார்கள். ஆயுத போராட்டத்தில் உயிர்விட்ட முதல் போராளி சங்கர் உயிர்விட்டது நம் தாயக மண்ணான தமிழகம்தான். அங்கு எழுந்ததே புலிகளின் முதல் வீர வணக்கம்.

[இது முத்துகுமரன் மரணத்தின் பொழுது எழுதியது. முத்துகுமரன் பிறந்தநாள் என்பதால் இதனை இன்று காலத்தின் தேவை கருதி மீண்டும் மீனகம் தளத்தில் வெளியிடுகிறோம்.]

வரலாறு திரும்புகிறது தாயக தமிழகத்தில் வீரவணக்கம் என்ற வார்த்தையை இன உணர்வுள்ள தமிழன் ஒவ்வொருவனும் உச்சரிக்கும் தருவாயை ஏற்படுத்தி தந்திருக்கிறது மாவீரன் முத்துகுமாரின் வீரச்சாவு. தமிழகத்தையே உலுக்கி எடுத்திருக்கிறது நம் சகசகோதரன் முத்துகுமாரின் ‘இறுதி அறிக்கை’. தன்மானமுள்ள அனைத்து தமிழனுன் தயக்கம் இல்லாமல் உச்சரிக்கும் வார்த்தை ‘வீரவணக்கம் வீரவணக்கம்’.

சுயநல தலைவர்கள் அரசியல் ஆதாயம் தேடி தமிழனை குழப்பியதால் ஈழப்போராட்டம் வழுவிழந்து அணைந்த தீபமான பொழுது. தன்னையே திரியாக்கி மீண்டும் அந்த தீபத்தை சுடர்விட்டு ஏறிய செய்திருக்கிறான் முத்துகுமார். தாயக தமிழம் தள்ளாடிய வேளையில் போராட்டபாதைக்கு அடித்தளம் அமைத்து நம்மை வழிநடத்தி செல்கிறது முத்துகுமார் தன் சாவுக்கு முன் எழுதிய தமிழர்களுக்கான உயில்

தோழர் முத்துகுமாரின் மரணத்தை வெறும் தற்கொலை என்றோ கோழைத்தனமான செயல் என்றோ அவசரத்தில் எடுத்த முடிவேன்றோ யாரேனும் சொல்வார்களேயானால் அவர்கள் முகத்தில் அறைந்தது போலே மரண நேரத்தில் ‘காவியம்’ படைத்து சென்றிருக்கிறான் முத்துகுமார். இது அவரசரத்தில் எடுத்த முடிவுகள் அல்ல தோழர்களே! மிக தெளிவான சிந்தனையாளன் எடுத்த தீர்க்கமான முடிவே இது என்பதற்கு அவன் அறிக்கையே சாட்சி. மரணத்தை தீர்மானித்த எவனும் இதுபோலே தெளிவான கடிதத்தை எழுதிட முடியாது என்பதே உண்மை. கடிதத்தின் ஒருவரியை கூட படித்திடாமல் சிலர் இதை நாம் ஆதரிக்க கூடாது என்று உளருவது வேதனைக்குரியது.

இந்த வீரமரணத்தை கடந்த காலங்களோடு ஒப்பிடும் பொழுது ஈழப்போராளி திலீபனோடும் தோழர் பகத் சிங்கும் நம் நினைவில் நிழலாடுகிறார்கள். திலீபனின் தண்ணீரும் அருந்தாத உண்ணாவிரதம் பரவலாக ஈழப்போராட்டத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. கொண்ட லட்சியத்திற்காக உண்ணா நோம்பில் உயிரைவிட்ட திலீபனின் மரணம் அகிம்சை போராட்டம் தீர்வாகாது என்ற உண்மையை உணர்த்தியதோடு போராட்டத்தில் போராளிகளின் மன உரத்தை உலகிற்கு உணர்த்தியது. மரணத்தை கண்டு கொஞ்சமும் அஞ்சாமல் தன் போராட்டத்தின் உண்மையை உணத்த மரணத்திற்கு முந்தைய நாளில் கடிதம் எழுதிய பகத்சிங்கின் வீரம் மாந்த சமூகத்தை வியப்பில் ஆழ்த்தியதோடு இல்லாமல் போராட்டத்திற்கு ஆதரவாக வீறு கொண்டு எழும்படி இளைஞர்களை தூண்டியது. தான் வீழ்ந்தாலும் தன் கொள்கைகள் மேலே மேலே செல்ல அவரது எழுத்துக்கள் பயன்பட்டது.

இந்த இருவரின் வீரமும் தோழர் முத்துகுமாரிடம் ஒருங்கே அமைந்து இருக்கிறது. இருவரோடும் மரணத்தை தழுவிய முறையில் வேணுமெனில் முத்துகுமார் மாறுபடலாமே அன்றி கொள்கையை முன்னெடுத்து செல்வதில் இருவரின் ஒன்றுபட்ட உருவமாகவே தெரிகிறார் முத்துக்குமார்.

மேலும் பகத்சிங்கின் தந்தை கொடுக்கவிருந்த கருணைமனு தனது போராட்டத்தை இழிவு படுத்துவதாக கூறி மறுத்த செயலும். தமிழக அரசு அறுவித்த கருணை தொகையை மறுத்த முத்துகுமாரின் தந்தையின் செயலும் வேறுவேறு அல்ல.

தோழர் முத்துகுமாரின் அறிக்கையை தமிழகம் மற்றுமன்று உலகெங்கும் கொண்டு சேர்க்கும் சேவையை தமிழ் பற்றாளர்கள் செய்து கொண்டிருக்கின்றனர்.கட்சி சார்பில்லாத சாதி, சார்பில்லாத தமிழர்கள் முத்துகுமாரின் தியாகத்திற்கு வீரவணக்கம் செய்துகொண்டிருக்கின்றனர். முத்துகுமாரின் மரணத்தை தொடர்ந்து அவரது ஆசைப்படி அவரது உடலை சட்டகல்லூரி மாணவர்கள் கைபற்றியதோடு அல்லாமல் கட்சிக்காரர்களோ சாதிசங்கத்தினரோ நெருங்காமல் அரண் போல் காத்தனர். மகஇக தோழர்கள் கட்டுகோப்போடு இறுதிஊர்வலம் வரை கோசங்கள் எழுப்பி உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

தலைவர்கள் வழக்கம் போலே ஆளும் தரப்பிற்கு ஆதரவாக நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் மாணவர்கள் மீது அந்த கருத்துக்களை திணிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை என்பதை அங்கு காண முடிந்தது. உணர்ச்சி பிழம்பாக இருந்த மாணவர்கள் முத்துகுமாரின் உடலை துருப்பு சீட்டாக வைத்து போராட்டத்தை தொடர நினைத்த பொழுது பாகுபாடு இல்லாமல் அனைத்து கட்சியும் தங்களின் ஆளுவர்க்கத்தின் ஆதரவான போக்கையே வெளிப்படுத்தியது நாம் கவனிக்க வேண்டியது.முத்துகுமாரின் வேண்டுகோள்கள் அனைத்து தரப்பு மக்களையும் சற்று கவனிக்க செய்திருக்கிறது. மெத்த படித்த மேதைகளுக்கு முத்துகுமாரின் வேண்டுகோள்கள் ‘படிக்க’ நேரமில்லாத அளவுக்கு வேலைப்பழு வந்து விட்ட நிலையில் பாமர மக்கள் ஆச்சரியத்துடன் கூறுகின்றனர் சிங்கள காதலர்களுக்கும் குரல் கொடுத்த முத்துகுமாரின் பறந்துவிரிந்த பார்வை பற்றியும் தமிழக மீனவ படுகொலைக்கு நியாயம் கேட்ட பாங்கும். இணையம் பயன்படுத்தும் மேதாவிகளை சென்றடையாத முத்துகுமாரனின் கோரிக்கைகள் எம்மின பாட்டாளிவர்க்கத்தின் காதுகளை சென்றடைந்தது ஆச்சரியமே!

இறுதி ஊர்வலத்தில் வீரவணக்கம் செலுத்திய மாணவர் படைகள் மத்திய மாநில அரசுகளின் தமிழர் விரோத போக்கினை கண்டித்து எழுப்பிய கோசங்கள் ஆளும்வர்க்கத்தை நடுநடுங்க வைத்திருக்கிறது அதற்க்கு கல்லூரி மூடல் உத்தரவே சான்று. கட்டுக்கடங்காத அளவில் மாணவர்கள் உணர்ச்சி அலைகள் எழுந்ததை கண்டு காவல்துறை கொஞ்சம் ஆடித்தான் போனாது. பொதுமக்கள் பெருமளவில் சாலைகளில் நின்று வேடிக்கை பார்ப்பது தமிழனின் பிறவி குணம் என்பது போல வேடிக்கை பார்த்ததும் பதிலுக்கு தோழர்களின் ‘வேடிக்கை பார்க்கும் தமிழினமே! வீதியில் வந்து போராடு’ என்று கோசங்கள் ஒலிப்பதும் நடந்தது.முதன்முதலில் தமிழவீதிஎங்கும் ஒலிக்கும் வீரவணக்கம் முழக்கங்கள் தமிழ்நாட்டிற்கு புதிதுதான். ஈழத்தில் எரியும் நெருப்பு ஒவ்வொரு தமிழனின் நெஞ்சங்களிலும் எரிய துவங்கி இருக்கிறது என்பது தோழர்களின் முழக்கங்கள் மூலம் உணரமுடிகிறது. போராளிகளை வெளிப்படையாக ஆதரித்தும் புலிக்கொடிகள் ஏந்தியும் தோழர்கள் ஆர்பரித்த காட்சி புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

முத்துகுமரன் தன்னுடலை எரித்து ஈழத்தில் சர்வதேச வெளிச்சம் படுவதற்கு பாடு பட்டிருக்கின்றான் தமிழன தலைவன் என்று அடையாளம் காட்டப்படும் தலைமை எப்பாடு பட்டாவது இந்த நெருப்பை இருட்டடிப்பு செய்துவிடலாம் என்று துடிக்கிறது.

இவர்கள் தொலைக்காட்சிகள் செய்தித்தாள்களில் செய்திகள் இருட்டடிப்புகள் செய்தால் நம் தோழனின் கனவுகள் முடங்கிவிடுமா என்ன? கல்லூரியை பூட்டிவைத்தால் மாணவர்கள் ஒருங்கிணைய முடியாது என்று தமிழக ஆளும் வர்க்கம் முடிவு எடுத்திருக்கிறது. எங்கள் சகோதரன் இங்கே விளைத்துவிட்டு போன கேள்விகள் முடங்கிபோகாது தோழர்களே! நீங்கள் எவ்வளவு அடக்கினானாலும் இருட்டடிப்பு செய்தாலும் மீண்டும் மீண்டும் வீரத்தமிழன் சொல்லுவான்

‘வீரவணக்கம் வீரவணக்கம்’

‘முத்துகுமாருக்கு வீரவணக்கம்’

—-

தமிழகத்திலிருந்து தமிழன்பன்

http://www.meenagam.org/?p=16761

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் முத்துகுமார்!

நீ எனது மனதில் என்றும் இருந்து எனக்கு ஒரு வழிகாட்டியாக இருப்பாய்!

விடியல்: "தமிழீழத்தைக் காக்கக்கோரி தன்னுயிரைக்கொடுத்து தமிழகத்தில் பேரெழுச்சியை ஏற்படுத்திய ஈகி முத்துக்குமரனின் பிறந்த நாள் இன்று. தமிழ்நாட்டு மக்களால் மறக்கப்பட்ட அத்தியாகியை மீனகம் மூலம் மீண்டும் உங்களுக்கு நாங்கள் நினைவுபடுத்துகிறோம்."

முத்துக்குமார் தன்னுயிரினை தியாகம் பண்ணியது தமிழ்நாட்டு மக்களுக்காக அல்ல... தமிழீழ மக்களுக்காக. அதை மறவாமல் இருக்கவேண்டியது முதலில் நாங்கள்தான். ஆனால் ... அவர்களின் தியாகத்தினை மறந்தவர்களாய் நாம் இருக்கின்றோம்.

முத்துக்குமாரும் நம் மாவீரர்களில் ஒருவன்தான். வரும் மாவீரர் தினத்தன்றும் எமக்காக தம்முயிரினை தியாகம்செய்த அனைவருக்கும் எம் வீர வணக்கத்தினைச் செலுத்துவோம்!

முத்துக்குமார் எரிந்த மண்ணும்,

ஈழத்து வீரம் சரிந்த மண்ணும்

தமிழனுக்கென்றே ஆகும் காலம் விரைவில் வரும்!

பிறப்புக்கோர் காரணம் கண்டேன்- முத்துக்குமாரின் இறப்பில்!

இல்லை... இல்லை... இன்னும் அவன் இறக்கவில்லை! - பிறந்திருக்கின்றான்!!!

Edited by பருத்தியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் பருத்தியன் இத்தகவலை அத்தளத்தின் நண்பர்ருக்கு நான் அனுப்பிவிட்டேன், நீங்களும் அத்தளத்தில் கமெண்ட் போட்டுவிடுங்கள்..

விடியல்: "தமிழீழத்தைக் காக்கக்கோரி தன்னுயிரைக்கொடுத்து தமிழகத்தில் பேரெழுச்சியை ஏற்படுத்திய ஈகி முத்துக்குமரனின் பிறந்த நாள் இன்று. தமிழ்நாட்டு மக்களால் மறக்கப்பட்ட அத்தியாகியை மீனகம் மூலம் மீண்டும் உங்களுக்கு நாங்கள் நினைவுபடுத்துகிறோம்."

முத்துக்குமார் தன்னுயிரினை தியாகம் பண்ணியது தமிழ்நாட்டு மக்களுக்காக அல்ல... தமிழீழ மக்களுக்காக. அதை மறவாமல் இருக்கவேண்டியது முதலில் நாங்கள்தான். ஆனால் ... அவர்களின் தியாகத்தினை மறந்தவர்களாய் நாம் இருக்கின்றோம். யாழில் மாங்கனிகள்..அது இதுவென்று கருத்தெழுதியவர்களில் நூறில் ஒரு பங்கானவர்கள் கூட இதில் கருத்துத் தொடர முன்வரவில்லையென்பது..ஏன் வாசிக்கவே முனையவில்லையென்பது கவலையளிப்பதாகவுள்ளது. முத்துக்குமாரும் நம் மாவீரர்களில் ஒருவன்தான். வரும் மாவீரர் தினத்தன்றும் எமக்காக தம்முயிரினை தியாகம்செய்த அனைவருக்கும் எம் வீர வணக்கத்தினைச் செலுத்துவோம்!

முத்துக்குமார் எரிந்த மண்ணும்,

ஈழத்து வீரம் சரிந்த மண்ணும்

தமிழனுக்கென்றே ஆகும் காலம் விரைவில் வரும்!

பிறப்புக்கோர் காரணம் கண்டேன்- முத்துக்குமாரின் இறப்பில்!

இல்லை... இல்லை... இன்னும் அவன் இறக்கவில்லை!!!

முத்துக்குமாரனே கடைசி ஒரு தமிழன் ஈழத்தில் வாழும்வரை நீ எங்கள் மனங்களில் இருந்து இறக்கப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

eelam-2.jpg

Edited by கிறுக்குபையன்26

  • கருத்துக்கள உறவுகள்

முத்துக்குமார் எங்களது மனதில் என்றும் இருப்பார்.

அந்த ஈக செம்மலின் நினைவுகள் ஈழதமிழர் நெஞ்சினில் இருந்து எண்றுமே அழியாத ஒரு பதிவாகி விட்டது..

தீயினில் வெந்த தீரர்களுக்கு எனது வீர வணக்கங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

தியாகி முத்துக்குமாரையும் ஏனைய தியாகிகளையும் உயிருள்ளவரை மறவோம்..!

அன்பின் எம் தொப்புற் கொடி உறவே நீ மறையவிலையடா. நாளும் நாளும் ஈழத்தமிழனின் இதயத்தில் புதிதாய் பிறந்து கொண்டிருபாயடா. உன் தியாகம் வீரம் எம் மாவீரரின் வீரத்திற்கு தியாகத்திற்கு இணையானது. காலன் உனை கவர்நதிடினும் நாளும் எம் நெஞ்சில் உன் நினைவு நீங்கா நினைவுடன். ஈழத்தமிழரின் இதயத்துள் வாழும் உனக்கு எனது வாழ்த்துக்கள்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

உன் தியாகம் வீரம் எம் மாவீரரின் வீரத்திற்கு தியாகத்திற்கு இணையானது. காலன் உனை கவர்நதிடினும் நாளும் எம் நெஞ்சில் உன் நினைவு நீங்கா நினைவுடன். ஈழத்தமிழரின் இதயத்துள் வாழும் உனக்கு எனது வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

.

index.1.jpg

தியாகி முத்துக்குமாரன் என்றவுடன் உடனே நினைவுக்கு வருவது, அவர் எழுதிய இறுதிக்கடிதம்.

அவர் ஒரு பத்திரிகையாளராக இருந்தாலும் , ஒரு கை தேர்ந்த வழக்கறிஞர் போல் சிந்தித்து ,

ஈழத்தமிழருக்கு உதவ உலகில் உள்ள அனைவரயும் தொட்டுச் சென்ற கடிதம் அல்லவா .

முத்துக்குமாரா ... உனை நான் ஒரு போதும் மறவேன்.

Edited by தமிழ் சிறி

வார்த்தைகளில் சொல்ல உண்மையில் எதுவும் வருகுது இல்லை... அவர்களை தியாகிகள் என்பதா வீரர்கள் என்பதா...?? எங்களுக்காக ஏன் இதை செய்தார்கள்...?? எங்களின் துன்பத்தை இன்னும் அதிகரிக்கவா..??

இவர்களோடு ஒப்பிடும் போது என்னை நான் சிறுமையாக எண்ணுகிறேன்...

.

.

உன்னை மறவோம்.

மனிதம், இனப்பற்று , தற்கொடை.

இம்மூன்று குணங்க‌ளையும் கொண்ட‌

அந்த முகத்தை நான் மறவேன்.

அன்புச் ச‌கோத‌ர‌னே,

உன‌க்கு என் பிற‌ந்த‌நாள் வாழ்த்துக்க‌ள்.

.

.

முதுமையான முத்துவேல் கருணாநிதியை மிஞ்சிய முத்துக்குமரன் நீ...

தமிழன் மனம் படும் வேதனையை நீ அறிந்தாய்...

தமிழருக்காகவே இன்னுயிர் தந்தாய்....

எங்கிருந்தாலும் நீ உடலுடன் இல்லையென்றாலும்

தமிழரின் உள்ளங்களில் நிறைந்துள்ளாய்....

உனக்கு எங்களின் வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முத்து உன்னக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்தவர்களில் நானும் ஒருவன்

எந்த ஒரு பாரம்பரிய பின்னனியும் இல்லாமல்

இத்தனை ஆயிரம் தமிழர்கள்

உன் இறுதி ஊர்வலத்தில் திரண்டதைக் கண்டு

உன்மையிலேயே புளங்காகிதம் அடந்தேன்

உன்னுடய அப்பாவின் உறுதியைக் கண்டு

மேலும் தன்னம்பிக்கைய பெற்றேன்

இருந்தாலும் உனக்கு வந்த துணிச்சல் என்க்கு

வரவில்லையே என்ற குற்ற உணர்ச்சியுடனும் இயலமையுடனுமே வீடு திருப்பினேன்.

இன்று உலகத் தமிழர் மனதில் வாழும் உனக்கு

இதயப்பூர்வமான பிறந்த தின வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.