அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2026 அன்று யாழ் இணையம் 27 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 28 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும், தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களையும் தாண்டி, சமூக ஊடகங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாக இருக்கின்றது. யாழ் இணையம் 28 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். குறிப்பு: ஆக்கங்கள், ஒளிப்படங்கள், ஓவியங்கள், காணொளிகள் செயற்கை நுண்ணறிவு செயலிகள் மூலம் உருவாக்கப்பட்டால் கட்டாயம் அவை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது எனக் குறிப்பிடப்படவேண்டும். சுய ஆக்கங்கள் உறுப்பினர்கள் விரும்பும் எத்தகைய கருப்பொருள்களிலும் அமையலாம். இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி, துணுக்குகள் போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 28 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது. எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம். யாழ் களம் 28 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு சில வாரங்களே இருக்கின்றன. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள். விதிமுறைகள்: யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும். ஆக்கங்கள் யாழ் இணையம் 28 அகவைக்கு எனத் தனித்துவமாக/பிரத்தியேகமாக புதிதாக உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். ஆக்கங்கள், ஒளிப்படங்கள், ஓவியங்கள், காணொளிகள் செயற்கை நுண்ணறிவு செயலிகள் மூலம் உருவாக்கப்பட்டால் கட்டாயம் அவை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது எனக் குறிப்பிடப்படவேண்டும். ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி, துணுக்குகள் போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம். எனினும் பலரது படைப்புத் திறன்களை வெளிக்காட்ட சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும் என்பதால் பத்துக்கு மேலாகவோ, தினம் ஒன்றாகவோ பதியாமல் தவிர்ப்பது விரும்பப்படுகின்றது. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம். ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். வேறு தளங்களில், சமூகவலைத் தளங்கள் உள்ளடங்கலாக, பிரசுரிக்க விரும்பினால் குறைந்தது இரு நாட்கள் தாமதித்துப் பிரசுரிக்கலாம். ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்