Everything posted by ஏராளன்
-
பிரித்தானிய பிரதமர் - சீன ஜனாதிபதி சந்திப்பு!
சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்குடன் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் வரலாற்றுச் சந்திப்பு! Published By: Digital Desk 3 29 Jan, 2026 | 05:00 PM கடந்த எட்டு ஆண்டுகளில் பிரித்தானியப் பிரதமர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ பயணம் இதுவாகும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகளால் உலகளாவிய பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பிரித்தானியாவின் இந்தப் பயணம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பீஜிங்கில் உள்ள 'கிரேட் ஹால் ஆஃப் த பீப்பிள்' மண்டபத்தில் 80 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையே "ஆரோக்கியமான மற்றும் நிலையான" உறவை வளர்க்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். பிரித்தானியாவின் புகழ்பெற்ற 'விஸ்கி' மதுபானம் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க சீனா இணங்கியுள்ளது. இது பிரித்தானிய ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் வாய்ப்பாக அமையும். பிரித்தானியப் பிரஜைகளுக்கு சீனாவுக்குச் செல்ல 'விசா இல்லா பயணச் சலுகை' வழங்குவது குறித்து சீனா தீவிரமாகப் பரிசீலிப்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங் உறுதியளித்துள்ளார். ஆள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக இணைந்து செயல்படவும், குறிப்பாக சிறிய படகுகளில் பயன்படுத்தப்படும் சீனத் தயாரிப்பு எஞ்சின்களைக் கட்டுப்படுத்தவும் இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. "சீனா உலக அரங்கில் ஒரு தவிர்க்க முடியாத சக்தி. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொருளாதார வளர்ச்சிக்காக நாம் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்" எனப் பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்தார். ஷேக்ஸ்பியர் மற்றும் கால்பந்து குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237347
-
வவுனியா மாவட்டத்தில் அரசு முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா திட்டம் தமிழருக்கு ஆபத்து; பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பறித்து சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி
திட்டமிட்ட இன அழிப்பின் மூலம் நிலையான அபிவிருத்தி சாத்தியமில்லை – தமிழர் மரபுரிமை பேரவை 29 Jan, 2026 | 04:07 PM இலங்கைத்தீவில் நிலையான அபிவிருத்தி சமாதானம் சமத்துவம் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் இவ்வாறான திட்டமிட்ட இன அழிப்பிணுடாக அதனை ஒருபோதும் அடைய முடியாது என்பதனை அரசிற்கு சுட்டிக்காட்டுகின்றோம் அதற்கு எதிராக தமிழ மக்கள் தொடர்ச்சியாக போராடுவார்கள் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என தமிழர் மரபுரிமை பேரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழர் மரபுரிமைத் பேரவையின் இணைத்தலைவர் வண லியோ ஆம்ஸ்ரோங் அடிகளார் வெளியீட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாகாவலி அதிகார சபையினால் வெளியிடப்பட்டிருக்கின்ற திட்ட அறிக்கையின் படி கிவுல் ஓயா நீர்த்தேக்கமானது வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரவில் உள்ள தமிழர்களின் புர்வீக கிராமமான வெடிவைத்த கல்லு கிராமத்திற்கு அண்மையாக வட கிழக்கு திசையாக மகாவலி அதிகார சபையினால் அமைக்கப்படவுள்ள மிகப்பாரிய நீர்த்தேக்கமாகும். மகாவலி அதிகாரசபை தனது திட்ட அறிக்கையில் வெளிப்படையாகவே இன் நீர்த்தேக்கத்தின் பயனாளிகள் 3203 சிங்க குடும்பங்கள் என தெரிவித்துள்ளது. 37 மீற்றர்கள் (121.37 அடிகள்) உயரமான அணையின் மூலம் உருவாக்கப்படவுள்ள இந் நீரத்தேகத்தின் எல்லைகள் தற்பொழுது மகாவலி அதிகார சபையினால் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் எல்லைக்கல்லிடப்பட்டு காட்டப்ட்டுள்ளன. இதன்படி பாரம்பரிய தமிழ் கிராமங்களான வெடிவைத்த கல்லு, ஈச்சங்குளம், கூழாங்குளம், காட்டுப்புஸ்ரீவரசங்குளம் காஞ்சூரமோட்டை போன்ற கிராமங்களின் 400 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் நீரினுள் மூழ்கும் நிலை காணப்படுகின்றது. மேலும் 1921இல் வர்த்தமான அறிவித்தல் மூலம் ஒதுக்கு காடாக அறிவிக்கப்பட்ட பெரிய கட்டிக்குளம் ஒதுக்குக்காட்டில் 4000 ஏக்கரும் இந் நீர்த்தேக்கத்தில் அமிழ்ந்து போவதுடன் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் அடையாளப்படுத்தப்பட்ட 47 தொல்லியல் பிரதேசங்களும் கிவுல் ஓயாவினுள் மூழ்கிப்போகவுள்ளது என்பதனை மகாவலி அதிகார சபையின் திட்ட அறிக்னையின் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது. இந் நீர்த்தேக்கத்திற்கு மிக அண்மையாக உள்ள சைவ வழிபாட்டு இடமான வெடுக்குனாறிமலை பிரதேசத்தினை தொல்லியல் இடமெனக்கூறி தமிழ் மக்களின் வழிபாட்டினை தடைசெய்யும் தொல்லியல் நிணைக்களம் இந்த 47 தொல்லியல் பிரதேசங்களினையும் கிவுல் ஓயாவினுள் நீரினுள் மூழ்கிப்போவதற்கு தனது இசைவினை தெரிவித்துள்ளமை தமிழர் புரீர்வீக நிலங்களில் அமைந்துள்ள இத் தொல்லியல் சின்னங்கள் தமிழர் மரபுரிமை சார்ந்தவையாக அமைந்திருப்பதனாலேயே என சந்தேகிக்க ஏதுவாகின்றது. இத் திட்டத்தின் மூலம் பயன்பெறவுள்ள 3203 சிங்கள குடும்பங்களும் ஏற்கனவே திட்டமிடப்பட்டு தமிழர் புர்வீக பகுதிகளில் இராணுவ நடவடிக்கை மூலம் துரத்தியடித்து அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசங்களினை வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவாக அறிவித்து அங்கு குடியேற்றப்பட்ட சிங்களமக்களேயாவர். இவ்வாறு அபகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் இன்றுவரை அவர்களுக்கு மீளவும் வழங்கப்படாத நிலையில் வாழ்வாதாரத்திற்காக தமது சொந்த நிலத்தினை ஆக்கிரமித்து வைத்திருக்கும் சிங்கள மக்களிடம் நாட்கூலிகளாக வேலை செய்யும் அவல நிலை காணப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கொக்குத் தொடுவாய் மத்தி, கொக்குதொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் தெற்கு. கருநாட்டுக்கேணி ஆகிய கிராம அலுவலர் பிரிவுக்குரிய ஆமையன் குளம், உந்தராயன் குளம், அடையகர்த்தான், படுகாட்டுக் குளம், சாம்பான் குளம் போன்ற 2000 ஏக்கர் வளமான விவசாய நிலங்கள் தமிழ் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களிற்கு வழங்கப்பட்டுள்ளது. துற்போது கிவுல் ஓயா திட்டத்தின்கீழ் இது மேலும் விஸ்தீரிக்கப்பட்டு கொக்குத்தொடுவாய் சூரியநாற்றுப்பகுதியில் தமிழ் மக்களுக்கு மத்தியவகுப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 1990 ஏக்கர் காணிகள் கிவுல் ஓயா திட்டத்தில் உள்வாங்கப்பட்டு திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட நில அபகரிப்பையும் வடபகுதியின் இனப்பரம்பல் கோலத்தினை மாற்றுவதனை இலக்காக கொண்டு காலத்திற்கு காலம் ஆட்சிபீடமேறும் அரசுகள் காய்நகர்த்தி வருவது வெளிப்படையாகவே அவதானிக்கப்படுகிறது. இவையெல்லாவற்றினையும் மூடிமறைத்து மீன்பிடித்துறை அமைச்சர் சந்திரசேகரன் அவர்கள் இது தொடர்பாக தமிழ் அரசியல்வாதிகளின் கூற்று பொய் என கூறியிருப்பதை தமிழர் மரபுரிமை பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.இவரின் கூற்று அநுர அரசின் இரட்டை வேடத்தினை தோலுரித்துக்காட்டியுள்ளது. இவர்கள் வடக்கில் மக்களை அரவணைப்பது போல நாடகமாடி முதுகில் குத்தும் வேலையினை கச்சிதமாக செய்துவருகின்றார்கள். இன்றுவரை மகாவலி அதிகார சபையினால் எந்தவொரு வடமாகாண தமிழ் பொதுமகனும் பயனடையாதவகையில் இனவாத இயந்திரமாக்கப்பட்டுள்ள மகாவலலி அபிவிருத்தி அதிகார சபை தமிழ் மக்களின்தொடர்ச்சியான எதிர்ப்பினையும் மீறி தமதுதிட்டமிட்ட குடியேற்றத்தினை செய்வதற்காக முனைப்ப்புக்காட்டி கண்டிக்கின்றோம் வருவதனை. வன்மையாக இலங்கைத்தீவில் நிலையான அபிவிருத்தி சமாதானம் சமத்துவம் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் இவ்வாறான திட்டமிட்ட இன அழிப்பிணுடாக அதனை ஒருபோதும் அடைய முடியாது என்பதனை அரசிற்கு சுட்டிக்காட்டுகின்றோம் அதற்கு எதிராக தமிழ மக்கள் தொடர்ச்சியாக போராடுவார்கள் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம். https://www.virakesari.lk/article/237345
-
இந்தியா - நியூசிலாந்து ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டித் தொடர்
பலன் கொடுக்காத ஷிவம் துபே அதிரடி: இந்தியா மேற்கொண்ட 3 சோதனை முயற்சிகளின் முடிவு என்ன? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது இந்திய அணி. முதலில் விளையாடிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்தது. ஓப்பனர்கள் டிம் செய்ஃபர்ட் (62 ரன்கள்), டெவன் கான்வே (44 ரன்கள்) ஆகியோர் கொடுத்த நல்ல தொடக்கமும், டேரில் மிம்ட்செலின் அதிரடி ஃபினிஷிங்காலும் (18 பந்துகளில் 39 ரன்கள்) அந்த அணி அந்த ஸ்கோரை எட்டியது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்து விளையாடிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தது. ஆல்ரவுண்டர் ஷிவம் துபே மட்டுமே ஓரளவு போராடி 65 ரன்கள் எடுத்தார். அவர் இந்தப் போட்டியில் 15 பந்துகளிலேயே அரைசதம் கடந்தார். இது, சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியர் ஒருவர் அடித்த மூன்றாவது அதிவேக அரைசதம். துபேவுக்கு ரிங்கு சிங் தவிர்த்து யாரும் பெரிதாக ஒத்துழைப்பு கொடுக்காததால், இந்தியா 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் மூன்று போட்டிகளையும் வென்று ஏற்கெனவே இந்தத் தொடரைக் கைப்பற்றி விட்டதால் இந்தப் போட்டியில் சில சோதனை முயற்சிகளை இந்திய அணி பரிசோதித்துப் பார்த்தது. அவற்றுள் எந்த முடிவுகள் கைகொடுத்தன? எவை கைகொடுக்காமல் போயின? ஒரு பேட்டர் குறைவு டாஸின் போதே இந்திய அணி சோதனை முயற்சிகளை மேற்கொள்கிறது என்பதை சொல்லாமல் சொன்னார் கேப்டன் சூர்யகுமார் யாதவ். இஷான் கிஷன் சிறு காயத்தால் அவதிப்படுவதால், அவருக்குப் பதில் அர்ஷ்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறினார் அவர். ஒரு பேட்டருக்குப் பதிலாக, ஒரு முழுநேர பௌலரைக் களமிறக்கியது இந்திய அணி. டி20 போட்டிகளில், கடினமான சூழ்நிலைகளில் கூட அதிரடி அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது இந்திய அணி. 7 பேட்டர்களுடன், எட்டாவதாக அக்ஷர் பட்டேல் அல்லது ஹர்ஷித் ராணா என பேட்டிங் செய்யக்கூடிய வீரர் ஒருவர் என்றுதான் இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி ஆடியிருந்தது. இப்படி பெரிய பேட்டிங் ஆர்டர் இருக்கும்போது, அது அதிரடியாக ஆடுவதற்கான நம்பிக்கையை பேட்டர்களுக்குக் கொடுத்தது. சூழ்நிலை பற்றிய குழப்பங்கள் இல்லாமல் அவர்கள் அதைக் கையாண்டார்கள். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்திய பேட்டர்களில் ஷிவம் துபே மட்டுமே நெருக்கடியை உணராமல் விளையாடி அரைசதம் அடித்தார் ஏற்கெனவே தொடரை வென்றுவிட்டதாலும், உலகக் கோப்பைக்கு தயாராகவேண்டும் என்பதாலும், அந்த கூடுதல் நம்பிக்கை இல்லாத சூழ்நிலையை தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக்கொண்டு சோதித்துப் பார்க்க நினைத்திருக்கிறது அணி நிர்வாகம். அதனால், அர்ஷ்தீப்பைக் கொண்டுவந்து ஒரு பேட்டரைக் குறைத்திருக்கிறார்கள். போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதை உறுதி செய்தார். "நாங்கள் வேண்டுமென்றே ஒரு பேட்டர் குறைவாக விளையாடினோம். ஐந்து பௌலர்களோடு விளையாடி எங்களுக்கு சவால் ஏற்படுத்தவேண்டும் என்று நினைத்தோம். இரண்டு, மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகு 180-200 என்ற இலக்கை எப்படி சேஸ் செய்கிறோம் என்று பார்க்க நினைத்தோம்" என்று அவர் கூறினார். ஆனால், இந்தியா ஏற்படுத்திக்கொண்ட சவாலை இந்தப் போட்டியில் அவர்களால் வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. ஒரு பேட்டர் குறைவாக இருந்த போட்டியில் டாப் ஆர்டர் சீக்கிரமாக அவுட் ஆகிவிட்டபோது, மிடில் ஆர்டர் மீது சற்று கூடுதல் நெருக்கடி ஏற்படுகிறது. நேற்றைய சூழ்நிலையில் அது மிடில் ஓவர்களில் ரன் ரேட்டையும் பாதித்தது. சாம்சன் அவுட் ஆனதற்கும், ரிங்கு சிங் அவுட் ஆனதற்கும் இடைப்பட்ட 3.5 ஓவர்களில் இந்தியா 27 ரன்கள் தான் எடுத்திருந்தது. ஏனெனில், ரன் சேர்ப்பதை விட விக்கெட் வீழ்ச்சியில் கவனம் அதிகம் செலுத்தவேண்டியிருந்தது. அதுமட்டுமல்லாமல் ஒரு பெரிய சேஸின்போது ஹர்ஷித் ராணா 11வது ஓவரிலேயே களமிறங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நன்றாக ஆடிக்கொண்டிருந்த துபேவும் 15வது ஓவரிலேயே அவுட்டாக, ஒரு 200+ சேஸின் கடைசி 5 ஓவர்களில் இந்தியாவின் முன்னணி பேட்டர்கள் யாரும் களத்தில் இருக்கவில்லை. ஒரு பேட்டர் குறைவாக இருந்தது 'விக்கெட் வீழ்ச்சி' பற்றி கவலைப்படாமல் ஆடிய இந்தியாவின் அணுகுமுறையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதை இந்தப் போட்டியில் காண முடிந்தது. இந்தப் போட்டி பற்றி கிரிக்பஸ் நிகழ்ச்சியில் பேசிய வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, "(இந்தத் தொடரின்) முதல் போட்டியில் ஆடிய இந்திய அணி சரியான அணி என்று நினைக்கிறேன். பும்ரா, அர்ஷ்தீப், வருண் மற்றும் 8 பேட்டர்கள் ஆடுவது சரியாக இருக்கும்" என்று கூறினார். விக்கெட் வீழ்ச்சியைத் தடுக்கும் இன்னொரு வீரர் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரண்டாவது ஓவர் முடிந்ததுமே இந்தப் போட்டியில் களமிறக்கப்பட்டார் ரிங்கு சிங் பொதுவாகவே விரைவாக டாப் ஆர்டர் விக்கெட்டுகள் விழும்போது, விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து அணிக்கு நிலைத்தன்மையை கொடுக்கும் வகையில் ஆடவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்த ரோலை குறிப்பிட்ட சில வீரர்கள் சரியாகச் செய்வார்கள். இந்திய அணிக்கு, விராட் கோலி அவர் இருந்த வரை அந்த வேலையைப் பார்த்துக்கொண்டார். இந்த அணியில் அக்ஷர் பட்டேல் அப்படியான சூழ்நிலைகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டுவந்தார். இந்தப் போட்டியில் அவர் இல்லாததால், ரிங்கு சிங் கையில் அந்த வேலை கொடுக்கப்பட்டது. 2 ஓவர்கள் முடிவில் இந்தியா 9/2 என்ற நிலையில் இருந்தபோது களமிறங்கினார் ரிங்கு சிங். மிகவும் நிதானமாகத் தொடங்கிய அவர், சரியான பந்துகள் கிடைக்கும்போது பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களும் அடித்தார். ஆனால், எந்தவித ரிஸ்க்கும் எடுக்காமல், அடிக்கக்கூடிய வகையில் வந்த பந்துகளை மட்டுமே டார்கெட் செய்தார். நன்கு அதிரடி காட்டி ஆட்டத்தை முடிக்கக்கூடியவர் என்பதால் ரிங்கு சிங் பெரும்பாலும் ஃபினிஷராகவே கருதப்படுகிறார். பல போட்டிகளில் அவர் தாமதமாகவே களமிறக்கவும் படுவார். ஆனால், அவரால் நிலையான ஆட்டத்தையும் கொடுக்க முடியும். ஏற்கெனவே ஒருசில முறை அந்த வேலையை செய்திருந்தாலும், இந்தப் போட்டியில் அதை மீண்டும் காட்டியிருக்கிறார் அவர். அதுமட்டுமல்லாமல், ஷிவம் துபே இந்தப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஃபோக்ஸ், ஹென்றி போன்றவர்களின் பந்துவீச்சிலும் பவுண்டரிகள் அடித்திருப்பதால், அவரை ஃபினிஷராகப் பயன்படுத்துவதற்கு அது அணியை ஊக்குவிக்கும் என்றும், அதனால் ரிங்கு சிங்கின் 'ரோல்' சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவது அணிக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கருதப்படுகிறது. ஆல் ரவுண்டர்கள் பயன்படுத்தப்படவில்லை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பல பௌலிங் ஆப்ஷன்கள் இருந்தும், இந்தப் போட்டியில் இந்திய அணி 5 பௌலர்களை மட்டுமே பயன்படுத்தியது அதிக ஆல்ரவுண்டர்களைக் களமிறக்குவதன் மூலம் நிறைய பௌலிங் ஆப்ஷன்கள் இந்திய அணிக்கு எப்போதுமே இருந்தது. கேப்டன் சூர்யாவும் அவற்றை பயன்படுத்திக்கொண்டிருந்தார். ஆனால், இந்தப் போட்டியில் 5 முழுநேர பௌலர்களைக் களமிறக்கியதால், அவர்களை மட்டுமே பயன்படுத்தும் நோக்கில் அவர் செயல்பட்டார். முதல் 3 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே இருவரும் இணைந்து 14 ஓவர்கள் பந்துவீசியிருந்தார்கள். அதில் அவர்கள் 7 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தார்கள். ஆனால், இந்தப் போட்டியில் அவர்களுக்கு ஒரு ஓவர் கூடக் கொடுக்கப்படவில்லை. "உலகக் கோப்பையில் ஆடும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்று நினைத்தோம்" என்று போட்டிக்குப் பின் சொல்லியிருந்தார் சூர்யா. ஒருவேளை உலகக் கோப்பைக்குள் வாஷிங்டன் சுந்தர் காயத்திலிருந்து மீளாதபட்சத்தில் அவருடைய இடத்தில் ரவி பிஷ்னாயை சோதித்துப் பார்க்கவேண்டும் என்பதால் அவர்கள் ஐந்து பௌலர்களை மட்டுமே பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், நியூசிலாந்து பௌலர்கள் பிஷ்னாய் வீசிய 4 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்துவிட்டார்கள். அதுமட்டுமல்லாமல், ஹர்திக் மற்றும் துபே ஆகியோரின் பார்ட்னர்ஷிப்பை உடைக்கும் தன்மையையும் இந்தியா இந்தப் போட்டியில் பயன்படுத்தவில்லை. குறிப்பாக பவர்பிளேவில் ஹர்திக் நல்ல தாக்கம் ஏற்படுத்திக்கொண்டிருந்த நிலையில், அவரை அங்கு பயன்படுத்தாமலேயே விட்டார் சூர்யா. நியூசிலாந்தின் முதல் விக்கெட் ஜோடியும் 8.2 ஓவர்களிலேயே 100 ரன்கள் எடுத்து இந்தியாவைப் பின்தங்கவைத்துவிட்டது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டி சனிக்கிழமை நடக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y4zr97lrro
-
'கனவுப் பாடசாலை' நோக்கிய பயணம் ஆரம்பம்
'கனவுப் பாடசாலை' நோக்கிய பயணம் ஆரம்பம் Jan 29, 2026 - 11:50 AM இந்த வருடம் 6 ஆம் தரத்தில் இணையும் மாணவர்களையும் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் கொண்டுவருவதற்கான திட்டம் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். அந்தப் பிள்ளைகளை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்பதை வலியுறுத்திய பிரதமர், 2030 ஆம் ஆண்டு வரை வருடாந்தம் புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 'கனவுப் பாடசாலை' ஒன்றை நோக்கிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும், அதனை யதார்த்தமாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இதன்போது மேலும் தெரிவித்தார். இன்று (29) அத்துருகிரிய குணசேகர வித்தியாலயத்தில் ஆரம்பமான, புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தர மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தேசிய விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். ஆசிரியர் மையக் கல்விக்குப் பதிலாக மாணவர் மையக் கல்வியை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் இதன்போது கூறினார். புதிய கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாக நற்பண்புகள் மற்றும் பச்சாதாபம் கொண்ட மாணவர் சமுதாயத்தை உருவாக்குவதாகக் கூறிய பிரதமர், பிள்ளைகள் சுமந்து செல்லும் புத்தகப் பையின் எடையைக் குறைப்பதிலிருந்து ஆரம்பிக்கப்படும் இந்த வேலைத்திட்டம், மனஅழுத்தம் இன்றி கல்வி கற்பதற்குத் தேவையான சூழலை உருவாக்கப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmkz2f2hn04kgo29ngonu78ld
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
19 வயதின் கீழ் ஆண்கள் உலகக் கிண்ணம்: அரை இறுதிக்கு முதல் அணியாக அவுஸ்திரேலியா தகுதிபெற்றது Published By: Vishnu 29 Jan, 2026 | 03:51 AM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் கூட்டாக நடத்தப்படும் 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் அரை இறுதியில் விளையாட முதலாவது மற்றும் தோல்வி அடையாத அணியாக நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா தகுதிபெற்றது. ஏ குழுவில் ஈட்டிய 4 வெற்றிப் புள்ளிகளுடன் சுப்பர் சிக்ஸஸ் குழு 1இல் தென் ஆபிரிக்காவையும் இன்றைய தினம் மேற்கிந்தியத் தீவுகளையும் வெற்றிகொண்டதன் மூலம் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 6 விக்கெட்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, இன்றைய போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளின் சவாலுக்கு மத்தியில் 22 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. அணித் தலைவர் ஒலிவர் பீக் குவித்த அபார சதம், சார்ள்ஸ் லெச்மண்ட் பதிவுசெய்த 4 விக்கெட் குவியல் என்பன அவுஸ்திரேலியாவின் வெற்றியை இலகுவாக்கின. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய இளையோர் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 314 ஓட்டங்களைக் குவித்தது. இதில் ஒலிவர் பீக் 109 ஓட்டங்களையும் இலங்கை வம்சாவளி வீரர் நிட்டேஷ் செமுவல் 56 ஓட்டஙகளையும் வில் மலாஜ்சுக் 46 ஓட்டங்களையும் அலெக் லீ யங் 45 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜக்கீம் பொலார்ட் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆர்'ஜய் கிட்டன்ஸ் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 292 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஸக்காரி கார்ட்டர் 64 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஜொஷுவா டோர்ன் 62 ஓட்டங்களையும் ஜுவெல் அண்ட்றூ 44 ஓட்டங்களையும் குணல் திலோகனி 35 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சார்ள்ஸ் லெச்மண்ட் 66 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஆரியன் ஷர்மா 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹேடன் ஷில்லர் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஒலிவர் பீக். https://www.virakesari.lk/article/237278
-
ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!
'நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது' இரானை எச்சரித்த டிரம்ப் - வளைகுடாவில் குவிக்கப்படும் அமெரிக்க ராணுவம் பட மூலாதாரம்,Handout via Reuters படக்குறிப்பு,இந்தக் கடற்படைக்கு விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் தலைமை தாங்குகிறது (கோப்புப் படம்) கட்டுரை தகவல் யாரோஸ்லாவ் லுகிவ் மற்றும் கேத்ரின் ஆம்ஸ்ட்ராங் 29 ஜனவரி 2026, 07:18 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரான் தனது அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு "நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது" என்று டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். வளைகுடா பகுதியில் அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படைப் பிரிவு "மிகுந்த வலிமையுடனும், வேகத்துடனும், உற்சாகத்துடனும் நகர்ந்து வருகிறது" என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதில் அளித்துள்ள இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, தங்கள் நாட்டுப் படைகள் "துப்பாக்கியின் விசையில் விரல்களை வைத்தபடி" தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். கடல் வழியாகவோ அல்லது தரை வழியாகவோ ஏதாவது தாக்குதல் நடந்தால், அதற்கு உடனடியாகவும் சக்திவாய்ந்த முறையிலும் பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இரான் தனது அணுசக்தி திட்டம் முற்றிலும் அமைதியானது என்று வலியுறுத்துகிறது, மேலும் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அணு ஆயுதங்களை உருவாக்க முயல்வதாக சுமத்தும் குற்றச்சாட்டுகளை பலமுறை மறுத்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இரானில் போராட்டங்கள் நடந்தன. கடுமையான முறையிலும், இதுவரை இல்லாத அளவிலும் அப்போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அமெரிக்கா தலையிடும் என்று டிரம்ப் முன்பு அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து அவரது சமீபத்திய எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இரானிய நாணயத்தின் மதிப்பு திடீரென வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் தொடங்கின. ஆனால் அவை விரைவிலேயே நாட்டின் மதகுரு ஆட்சியின் சட்டபூர்வத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் அரசியல் நெருக்கடியாக மாறின. "உதவி வந்து கொண்டிருக்கிறது" என்று டிரம்ப் கூறினார். பின்னர் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, நம்பகமான தகவல்களின் அடிப்படையில் போராட்டக்காரர்களின் தூக்கு தண்டனை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஹியூமன் ரைட்ஸ் ஆக்டிவிட்ஸ் நியூஸ் ஏஜென்சி (HRANA) அமைப்பு, டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய கலவரங்களுக்குப் பிறகு, 5,925 பேர் போராட்டக்காரர்கள் உட்பட, 6,301 பேருக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்ட போதிலும், மேலும் 17,000 இறப்புகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அந்த அமைப்பு கூறுகிறது. மற்றொரு குழுவான நார்வேயைத் தளமாகக் கொண்ட இரான் மனித உரிமைகள் அமைப்பு, இறுதி எண்ணிக்கை 25,000 ஐ தாண்டக்கூடும் என்று எச்சரித்துள்ளது. பட மூலாதாரம்,Vahid Online படக்குறிப்பு,இரானில் போராட்டக்காரர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளில் குவிந்துள்ள பாதுகாப்பு படையினர் (ஜனவரியின் முற்பகுதியில் எடுக்கப்பட்ட படம்) இரான் குறித்து டிரம்ப் வெளியிட்ட சமீபத்திய கருத்துகள், அந்த நாட்டின் அணுசக்தி திட்டத்தையே அதிகமாகக் கவனத்தில் கொண்டதாகத் தெரிகிறது. "இரான் விரைவில் பேச்சுவார்த்தைக்கு வந்து, நியாயமான ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளும் என நம்புகிறேன். அணு ஆயுதங்கள் கண்டிப்பாக இருக்கக்கூடாது," என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக வெனிசுவேலா அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோவைப் பிடிக்க அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட்டபோது இருந்ததை விட, தற்போது வளைகுடா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள கடற்படை மிகவும் பெரியது என்று டிரம்ப் கூறியுள்ளார். மேலும், இந்தப் படை "தனது இலக்கை மிக வேகமாகவும், விருப்பத்துடனும், தேவைப்பட்டால் ஆக்ரோஷமாகவும் நிறைவேற்றத் தயாராக உள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம், இரான்–இஸ்ரேல் இடையிலான 12 நாள் போரின் போது இரானின் அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலைக் குறிப்பிடும் வகையில், "அடுத்த தாக்குதல் இன்னும் மிகக் கடுமையானதாக இருக்கும். அது மீண்டும் நடக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள்," என்று அமெரிக்க அதிபர் எச்சரித்தார். புதன்கிழமையன்று செனட் வெளிநாட்டு உறவுகள் குழுவில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, "இரானின் ஆட்சி இதுவரை இல்லாத அளவுக்கு பலவீனமாக இருக்க வாய்ப்பு உள்ளது," என்றார். "போராட்டக்காரர்களின் அடிப்படைக் குறைகளைத் தீர்க்க அவர்களிடம் எந்த வழியும் இல்லை. அதாவது, அவர்களின் பொருளாதாரம் சிதைந்த நிலையில் உள்ளது," என்றும் ரூபியோ கூறினார். மேலும், "தற்போது நீங்கள் காண்பது, எங்கள் பணியாளர்களுக்கு எதிராக இரானிலிருந்து எழக்கூடிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, பிராந்தியத்தில் வளங்களை நிலைநிறுத்தும் திறனே ஆகும்," என்று அவர் தெரிவித்தார். டிரம்பின் சமீபத்திய எச்சரிக்கைக்குப் பதிலளித்த இரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி, "இரான் எப்போதும் பரஸ்பர நன்மை தரும், நியாயமான மற்றும் சமமான அணு ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளது. அந்த ஒப்பந்தம் சமமான நிலைப்பாட்டில், கட்டாயப்படுத்துதல், அச்சுறுத்தல், மிரட்டல் விடுத்தல் போன்றவற்றில் இருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். அது அமைதியான முறையில் அணு ஆயுத தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான இரானின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்.மேலும் அணு ஆயுதங்கள் எதுவும் இல்லை என்பதற்கும் இரான் உத்தரவாதம் அளிக்கிறது" என்றார். "எங்கள் பாதுகாப்பு திட்டங்களில் அத்தகைய ஆயுதங்களுக்கு இடம் இல்லை. அவற்றைப் பெற நாங்கள் ஒருபோதும் முயன்றதில்லை," என்றும் அவர் கூறினார். "செய்தி பரிமாற்றங்கள் நடந்தாலும், அமெரிக்காவுடன் தற்போது எந்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை," என்று இரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசிம் கரீபாபாதி தெரிவித்தார். பிபிசி வெரிஃபை தனது ஆய்வின் மூலம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளின் நகர்வுகளைக் கண்டறிந்துள்ளது. சாட்டிலைட் புகைப்படங்களின்படி, குறைந்தது 15 போர் விமானங்கள் ஜோர்டானின் முவாஃபக் விமானத் தளத்திற்கு வந்துள்ளன. மேலும் ஜோர்டான், கத்தார் மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா தளங்களிலும் அமெரிக்க விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு பல்வேறு சரக்கு விமானங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் வருவதை பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இரானிய வான்வெளிக்கு அருகில் இயங்கும் ஃப்ளைட்ராடார்24 கண்காணிப்பு தளத்தில் ட்ரோன்களும் பி-8 போஸிடான் உளவு விமானங்களும் காணப்பட்டுள்ளன. டிரம்ப் குறிப்பிட்ட , யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிக் கப்பலின் தலைமையிலான கடற்படையான "ஆர்மடா", மத்திய கிழக்குப் பகுதிக்கு வந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிபிசி வெரிஃபையிடம் உறுதிப்படுத்தினார். திங்கட்கிழமை, ஃப்ளைட்ராடார்24-ல் ஒரு ஆஸ்ப்ரே விமானத்தின் கண்காணிப்புக் கருவி, அது வளைகுடாவில் உள்ள கடலோரப் பகுதியை விட்டு புறப்பட்டு ஓமனில் தரையிறங்கியதாக காட்டியது. இதன் மூலம், லிங்கன் கப்பல் அருகில் எங்கோ இயங்கக்கூடும் எனத் தெரிகிறது. "அமெரிக்கா கடந்த இரண்டு வாரங்களில் இப்பகுதியில் தனது கடற்படை மற்றும் வான்படை பலத்தை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் அந்தப் பிராந்தியத்தில் அதன் ராணுவ நிலை நிறுத்தம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது," என்று அபாய ஆலோசனை நிறுவனமான சிபிலைனின் முதன்மை பகுப்பாய்வாளர் மேகன் சட்கிளிஃப் தெரிவித்தார். குறைந்தது இரண்டு வழிநடத்தும் ஏவுகணைகளை உடைய கப்பல்கள் (guided missile destroyers) மற்றும் மூன்று போர் கப்பல்கள் பல மாதங்களாக பஹ்ரைனில் நங்கூரமிட்டுள்ளதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. இதற்கிடையில், கடந்த ஆண்டு பணியில் இணைந்த இரானின் ட்ரோன் தாங்கி கப்பலான ஐஆர்ஐஸ் ஷாஹித் பாகேரியை, கரைக்கு அருகில் இரான் நிறுத்தியுள்ளதாகவும் செயற்கைக்கோள் படங்கள் கூறுகின்றன. பட மூலாதாரம்,Maxar Techn படக்குறிப்பு,டிசம்பர் 2024 இல் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தில் காட்டப்பட்டுள்ள ஐஆர்ஐஎஸ் ஷாஹித் பகேரி 2015 ஆம் ஆண்டு உலக நாடுகளுடன் செய்யப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் படி, 3.67% விட அதிகமாக தூய்மை கொண்ட யூரேனியத்தை செறிவூட்ட இரான் அனுமதிக்கப்படவில்லை. இந்த அளவுதான் வணிக அணுமின் நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் தரமாகும். மேலும், இரான் தனது ஃபோர்டோ அணு நிலையத்தில் 15 ஆண்டுகள் எந்தவித செறிவூட்டல் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது. ஆனால், 2018 ஆம் ஆண்டு தனது முதல் பதவிக்காலத்தில் டிரம்ப் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகினார். அது அணுகுண்டு தயாரிப்பதற்கான பாதையைத் தடுக்க போதுமானதாக இல்லை என்று கூறிய அவர், இரான் மீது மீண்டும் தடை விதித்தார். இதனால் இரானின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக, ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இரான் படிப்படியாக மீறத் தொடங்கியது. குறிப்பாக, அணு உலை எரிபொருளுக்கும் அணு ஆயுதங்களுக்கும் பயன்படக்கூடிய செறிவூட்டப்பட்ட யூரேனியம் உற்பத்தி தொடர்பான கட்டுப்பாடுகளை அதிகமாக மீறியது. இந்நிலையில், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இரான் யூரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும், தனது ஏவுகணை திட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும், மேலும் மத்திய கிழக்கில் உள்ள தனது பினாமி அமைப்புகளுக்கு ஆதரவை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்திகள் கூறின. இரானின் அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா கடைசியாக நடவடிக்கை எடுத்தது. அப்போது ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று யூரேனியம் செறிவூட்டல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. "மிட்நைட் ஹாமர்" எனப் பெயரிடப்பட்ட அந்த நடவடிக்கை, இரான் அணு ஆயுதம் உருவாக்கும் வாய்ப்பை குறிப்பிடத்தக்க அளவில் பின்னடையச் செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இரான் அரசுத் தொலைக்காட்சியின் துணை அரசியல் இயக்குநர் ஹசன் அபேதினி இதுகுறித்துக் கூறுகையில், "அந்தத் தளங்களில் இருந்த பொருட்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டிருந்ததால், நாட்டுக்கு பெரிய சேதம் ஏற்படவில்லை," என்று கூறினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இரான் கத்தாரில் உள்ள ஒரு அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலை டிரம்ப் "மிகவும் பலவீனமானது" என்றும் "எதிர்பார்க்கப்பட்ட தாக்குதல்" என்றும் விவரித்தார். கூடுதல் தகவல் -ஜோசுவா சீதம், மாட் மர்பி, அலெக்ஸ் முர்ரே, பார்பரா மெட்ஸ்லர் மற்றும் சோபியா ஃபெரீரா சாண்டோஸ் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8rj1g01n4o
-
சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் பரிசீலனை
சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் பரிசீலனை Published By: Digital Desk 3 29 Jan, 2026 | 09:18 AM 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் அரசாங்கம் பரீசிலனை செய்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதை முழுமையாக தடை செய்ய அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாகவும், சமூக ஊடக தளங்களை அணுகுவதை தடை செய்வதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் பல நாடுகள் ஏற்கனவே பாடசாலை மாணவர்களிடையே சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்தும் சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன எனவும், இலங்கையும் அத்தகைய மாதிரிகளை ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் சுட்டிக்காட்டியுள்ளார். சிறுவர்கள் இணையத்தை பயன்படுத்தும் போது ஒழுக்க ரீதியாக தீங்கு விளைவிக்கும் மற்றும் துஷ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சிறுவர்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை குறைக்க அரசாங்கம் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானம் செய்துள்ளது, இதற்கு ஏற்கனவே அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237293
-
விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு!
'ஓடுபாதை தெரியவில்லை' - அஜித் பவார் பயணித்த விமானத்திலிருந்து வந்த செய்தி என்ன? பட மூலாதாரம்,ANI 28 ஜனவரி 2026 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மகாராஷ்டிராவில் நேரிட்ட விமான விபத்தில் அந்த மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் காலமானார். அவருக்கு வயது 66. விமான விபத்தின் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது என்பது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விரிவான தகவல்களை வழங்கியுள்ளது. புனே (கிராமப்புற) எஸ்பி சந்தீப் சிங், ''இன்று (புதன்கிழமை) காலை 8.40 மணிக்கு தரையிறங்குவதற்கு முன்பு விமானம் விபத்துக்குள்ளானது, அதில் ஐந்து பேர் இருந்தனர்.'' என்றார். பிபிசி மராத்தி செய்தியின்படி, அஜித் பவாருடன் இறந்த மற்ற நபர்களின் பெயர்கள் சுமித் கபூர், ஷாம்பவி பதக், விதிப் ஜாதவ் மற்றும் பிங்கி மாலி. 'தரையிறங்கும் போது ஏதோ பிரச்னை தெரிந்தது, விமானம் விபத்துக்குள்ளாகலாம் என்று தோன்றியது' என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். மகாராஷ்டிராவில் எதிர்வரும் மாவட்ட ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களுக்காகப் பிரசாரம் செய்ய அஜித் பவார் பாராமதியில் நான்கு பொதுக்கூட்டங்களில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். அதற்காக, அவர் மும்பையிலிருந்து விமானம் மூலம் பாராமதிக்குச் சென்று கொண்டிருந்தார். விமானம் பாராமதியில் தரையிறங்குவதற்கு முன்பு விமானிக்கும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புக்கும் இடையிலான உரையாடலின் விவரங்களையும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது. அஜித் பவாரின் மறைவுக்கு பிரதமர், மகாராஷ்டிரா முதல்வர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா அரசு மாநிலத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. விமான போக்குவரத்து அமைச்சகம் என்ன கூறியது? விபத்து தொடர்பாக, விமான போக்குவரத்து அமைச்சகத்தின் அறிக்கையை, பத்திரிகை தகவல் பணியகம் வெளியிட்டுள்ளது. அதில், பாராமதி விமான தளம் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு (ATC)) கோபுரம் இல்லாத தளம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போக்குவரத்துத் தகவல்கள் பாராமதியில் அமைந்துள்ள விமானி பயிற்சி அமைப்பின் (Flying Training Organisation) பயிற்றுநர்கள் அல்லது விமானிகளால் வழங்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது. ஷார்ட் வீடியோ Play video, "விமான விபத்தில் அஜித் பவார் மரணம் - என்ன நடந்தது?", கால அளவு 0,56 00:56 காணொளிக் குறிப்பு,என்ன நடந்தது? டிஜிசிஏ கூறியுள்ளது என்ன? சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டை (ATC) கையாண்ட நபர் அளித்த தகவல்களின்படி, ஜனவரி 28, 2026 அன்று, விமானம் VI-SSK காலை 8:18 மணிக்கு பாராமதியுடன் முதல் தொடர்பை ஏற்படுத்தியது. அந்த விமானம் பாராமதிக்கு 30 நாட்டிகல் மைல் தூரத்தில் இருந்து, பாராமதி நோக்கி வருவதாகத் தகவலைத் தெரிவித்தது. அப்போது புனே விமான போக்குவரத்து கட்டுப்பாட்டில் இருந்து விமானம் விடுவிக்கப்பட்டு பாராமதி நோக்கி நோக்கி பறக்க அனுமதிக்கப்பட்டது வானிலையை பொறுத்து அவருடைய சொந்த கணிப்பின்படி தரையிறங்க அதன் விமானி அறிவுறுத்தப்பட்டார். காற்று மற்றும் தெரிவுநிலை (visibility) குறித்து விமான குழுவினர் விசாரித்தனர். காற்று சீராக இருப்பதாகவும், தெரிவுநிலை சுமார் 3,000 மீட்டர் என்றும் அவர்களிடம் கூறப்பட்டது. பட மூலாதாரம்,Getty Images பின்னர் விமானம் ஓடுபாதை 11-ல் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குழுவினர் கூறினர். ஆனால், குழுவினரால் ஓடுபாதையைப் பார்க்க முடியாததால், அவர்கள் தங்கள் முதல் முயற்சியில் தரையிறங்கும் முடிவை கைவிட்டு திரும்பிச் சென்றனர். அதன்பின், விமானத்தின் நிலை குறித்து குழுவினரிடம் கேட்கப்பட்டது. பின்னர் விமானக் குழுவினர் ஓடுபாதை 11-ல் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளில் இருப்பதாகத் தெரிவித்தனர். ஓடுபாதை தெரிகிறதா தகவலை தெரிவிக்க அவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கு, "ஓடுபாதை தற்போது தெரியவில்லை. அது தெரியும்போது அழைப்பதாக" பதிலளித்துள்ளனர். சில வினாடிகளுக்குப் பிறகு, ஓடுபாதை தெரிவதாக குழுவினர் கூறியுள்ளனர். காலை 8:43 மணிக்கு, விமானம் ஓடுபாதை 11-ல் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது, ஆனால் தரையிறங்கும் அனுமதி குறித்து விமானக் குழுவினரால் எந்த உறுதியும் வழங்கப்படவில்லை. பின்னர், காலை 8:44 மணிக்கு, ஓடுபாதை 11-க்கு அருகில் தீப்பிழம்புகள் எழுவதை ATC கவனித்தது. பின்னர் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வந்தன. விமானத்தின் சிதைந்த பாகங்கள் ஓடுபாதை 11-க்கு அருகில் இடது பக்கத்தில் காணப்பட்டன. பட மூலாதாரம்,ANI விமான போக்குவரத்து அமைச்சகம் கூறுகையில், "விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணையை மேற்கொண்டுள்ளது. விசாரணையை நடத்த AAIB இயக்குநர் ஜெனரல் விபத்து நடந்த இடத்திற்கு செல்லவுள்ளார். இது குறித்த கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது பகிரப்படும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷார்ட் வீடியோ Play video, "சௌந்தர்யா முதல் அஜித் பவார் வரை - வான் விபத்தில் உயிரிழந்த பிரபலங்கள்", கால அளவு 1,45 01:45 காணொளிக் குறிப்பு,சௌந்தர்யா முதல் அஜித் பவார் வரை - வான் விபத்தில் உயிரிழந்த பிரபலங்கள் விமானக் குழுவினர் பற்றி தெரியவந்தது என்ன? சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கூற்றுப்படி, விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்தனர். ஒரு விமானி 15,000 மணிநேர விமானப் பயண அனுபவமுள்ளவர். இரண்டாவது விமானிக்கு 1,500 மணிநேரம் பறக்கும் அனுபவம் இருந்தது. பட மூலாதாரம்,ANI நேரில் கண்டவர்கள் கூறியது என்ன? விபத்தை நேரில் கண்ட ஒருவர் ஏஎன்ஐ செய்தி முகமையிடம், "நான் அதை என் கண்களால் பார்த்தேன். இது மிகவும் வேதனையானது. விமானம் கீழே விழும்போது, அது தரையிறங்க முடியாது என்று தோன்றியது, அதுதான் நடந்தது. அதன் பிறகு, அந்த விமானம் வெடித்தது. அந்த விமான வெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்தது. அதன்பின், நாங்கள் விமானம் தீப்பிடித்து எரிந்ததைக் கண்டோம்." என்றார். "பின்னர் விமானத்தில் மேலும் நான்கு அல்லது ஐந்து வெடிப்புகள் ஏற்பட்டன. அதன் பிறகு, பொதுமக்கள் பலரும் சம்பவ இடத்திற்கு வந்து விமானத்தில் இருந்தவர்களை வெளியேற்ற முயன்றனர். ஆனால் தீ மிகவும் கடுமையாக இருந்ததால், மக்களால் உதவ முடியவில்லை. அஜித் பவாரும் விமானத்தில் இருந்தார், இது எங்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அதை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது..." காணொளிக் குறிப்பு,அஜித் பவார் உயிரிழப்பு - விமான விபத்தை நேரில் கண்டவர் கூறியது என்ன? மற்றொரு நபர் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் கூறுகையில், "நாங்கள் இங்கே வசிக்கிறோம், எங்களுக்குப் பின்னால் ஒரு விமான ஓடுபாதை உள்ளது. ஒரு விமானம் வருவதைக் கண்டோம், ஆனால் அது தரையிறங்கவில்லை. அது முன்னோக்கிச் சென்றது, பின்னர் சிறிது நேரம் கழித்து அது திரும்பி தரையிறங்கத் தொடங்கியது. ஆனால் அது ஓடுபாதைக்கு சற்று முன்பு விபத்துக்குள்ளானது." என்றார். "இதைப் பார்த்தவுடன், ஓடுபாதையைச் சுற்றியுள்ள எங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு நாங்கள் தகவல் தெரிவித்தோம், அதன் பிறகு காவல்துறையினரும் மற்றவர்களும் உடனடியாக வந்தனர். அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm24p673px7o
-
புதிய அரசியலமைப்பு வரைவுக்கு பல் தரப்பு செயலணி அவசியம்; முந்தைய முயற்சிகளை கருத்தில் கொள்ள பரிந்துரை
புதிய அரசியலமைப்பு வரைவுக்கு பல் தரப்பு செயலணி அவசியம்; முந்தைய முயற்சிகளை கருத்தில் கொள்ள பரிந்துரை Published By: Vishnu 29 Jan, 2026 | 05:16 AM (இராஜதுரை ஹஷான்) இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை வரைவதற்கான செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக ஏற்புடைய அரச அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும் அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், பல் தரப்பு செயலணியொன்றை நிறுவ வேண்டும். அந்த செயலணியானது 1995-2000 மற்றும் 2015 ,2018 ஆம் ஆண்டுகாலப்பகுதிகளில் முன்னெடுத்த செயற்பாடுகளை கருத்திற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் ஆலோசனை செயல்முறையின் பெறுபேறுகளின் அடிப்படையில் பிணக்கற்ற மக்கள் தீர்ப்பொன்றின் மூலம் அங்கிகரிப்பதற்காக ஒரு அரசியலமைப்பு கோட்பாடு கட்டமைப்பை வரைதல் அவசியமாகும் என புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து சட்டத்தரணிகள் மற்றும் பேராசிரியர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு 06 முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான உரையாடலை முன்னிட்டு சட்டத்தரணி லால் விஜேநாயக்க,பேராசிரியர் பிரியங்க துனுசிங்க,கலாநிதி அதுலசிறி சமரகோன், சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே, சட்டத்தரணி விரஞ்ஞன ஹேரத், சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம தஸநாயக்க,சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ்,சட்டத்தரணி ஷிரால் லக்திலக, பேராசிரியர் சரித ஹேரத்,சட்டத்தரணி நிமல்கா பெர்னாண்டோ,கருணாரத்ன பரணவிதாரன, சட்டத்தரணி சமன் சேனாதீர,சட்டத்தரணி ஜகன ரணதுங்க ஆகியோர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்கள். அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதல் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட வலியுறுத்தலை நாங்கள் வரவேற்கிறோம். அத்தகைய அர்ப்பணிப்பு கொண்ட ஒரு அரசாங்கம் இருப்பது இலங்கையில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு கிடைத்த ஒரு வரலாற்று ரீதியான வாய்ப்பாகும்.புதிய அரசியலமைப்பை உருவாக்கிக் கொள்ளல் என்பது இலங்கைக்கு முக்கியமான சவாலாகும். அது அனைத்து மக்கள் பிரிவினரையும் பிரிதிநித்துவப்படுத்தும் ஒரு அரசியலமைப்பு ரீதியிலான தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும். இதில் அனைவரையும் உள்ளடக்குவதும் சவால்மிக்கதாகும். தற்போது நடைமுறையில் உள்ள 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு இதுவரையில் 21 முறை திருத்தங்களுக்குட்படுத்தப்பட்டுள்ளது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவைச அரசாங்கத்தின் தேவைகளை பிரதிப்பலித்துள்ளதே தவிர மக்களின் நிலைப்பாட்டை பிரதிப்பலிக்கவில்லை.அரசியலமைப்பின் 17,19 மற்றும் 21 ஆம் ஆகிய திருத்தங்கள் மாத்திரமே மக்களை பிரதிபலிக்கின்றன. கடந்தகால அனுபவங்கள் மற்றும் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு இலங்கையின் சமூக- அரசியல் சூழலுக்கு பொருத்தமான அரசியலமைப்பு சீர்த்திருத்த மாதிரியை பின்பற்றுவதற்கான சாத்தியம் குறித்து பரிசீலனை செய்யுமாறு நாம் முன்மொழிகின்றோம். அதன்படி பின்வரும் முன்மொழிவுகளை முன்வைக்கிறோம். இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை வரைவதற்கான செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக ஏற்புடைய அரச அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும் அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், பல் தரப்பு செயலணியொன்றை நிறுவுதல், அந்த செயலணியானது 1995-2000 மற்றும் 2015 ,2018 ஆம் ஆண்டுகாலப்பகுதிகளில் முன்னெடுத்த செயற்பாடுகளை கருத்திற்கொள்ள வேண்டும். எதிர்கால அரசியலமைப்பொன்றை அடிப்படையாகக் கொண்ட அடிப்படை அரசியலமைப்பு கோட்பாடு கட்டமைப்பை கட்டியெழுப்புவதற்காக விரிவான அடிப்படையாகக் கொண்ட எவர் ஒருவரையும் தவிர்க்காத வகையில் அனைவரும் பிரதிநிதித்துவப்படுத்தும் விரிவான மக்கள் சார் ஆலோசனை செயல்முறையை உருவாக்க வேண்டும். அத்துடன் பொதுமக்கள் ஆலோசனை செயல்முறையின் பெறுபேறுகளின் அடிப்படையில் பிணக்கற்ற மக்கள் தீர்ப்பொன்றின் மூலம் அங்கிகரிப்பதற்காக ஒரு அரசியலமைப்பு கோட்பாடு கட்டமைப்பை வரைதல் அவசியமாகும். மக்களால் அங்கிகரிக்கப்பட்ட அரசியலமைப்பு கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு அரசியலமைப்பை வரைவதற்காக அரசியல் கட்சிகள், கல்வியியலாளர்கள்,சிவில் சமூகம், சமூக விஞ்ஞானிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் அடங்கிய ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறிமுறையை ஸ்தாபிக்க வேண்டும்.டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தி பொதுமக்களின் கருத்துக்களும் கோரப்பட வேண்டும்.மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்புசார் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு சட்டவரைவை தயாரித்தல் வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் விதித்துரைக்கப்பட்டுள்ளவாறு,இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் மக்கள் தீர்ப்பு மூலம் நிறைவேற்றிக்கொள்வதையும் உள்ளடக்கிய வகையில் ஒரு அரசியலமைப்பு சீர்த்திருத்த செயன்முறையை பின்பற்றுதல் வேண்டும். அரசாங்கத்தின் வளமான நாடு – அழகான வாழ்க்கை கொள்கைக்கு அமைய புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டும். https://www.virakesari.lk/article/237283
-
'வைரல்' பென்குயின் போல வேறு எந்த உயிரினங்கள் கூட்டத்தை விட்டு தனியே செல்கின்றன தெரியுமா?
'வைரல்' பென்குயின் போல வேறு எந்த உயிரினங்கள் கூட்டத்தை விட்டு தனியே செல்கின்றன தெரியுமா? பட மூலாதாரம்,Thinkfilm/Werner Herzog கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 28 ஜனவரி 2026 "அந்த கூட்டத்தில் ஒன்று மட்டும் எங்களின் கவனத்தை ஈர்த்தது. நடுவில் இருந்த அந்த பென்குயின், பனியின் எல்லையில் உள்ள அதன் உணவருந்தும் பகுதிக்கும் செல்லவில்லை, அதன் காலனிக்கும் திரும்பிச் செல்லவில்லை. சிறிது நேரம் கழித்து அங்கிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தது." சமூக ஊடகங்களில் வைரலாக உள்ள பென்குயின் காணொளியில் பின்னணியில் ஒலிக்கும் குரல் இது. அந்தக் காணொளியில், ஒரே ஒரு பென்குயின் மட்டும் தனது கூட்டத்துடன் செல்லாமல் பனி போர்த்திய மலையை நோக்கி நடக்கத் தொடங்கும். அண்டார்டிகாவில் 2007-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட "என்கவுன்டர்ஸ் அட் தி என்ட் ஆஃப் தி வேர்ல்ட்" என்கிற ஆவணப்படத்தில் அந்தக் காணொளி இடம்பெற்றது. வெர்னர் ஹெர்ஸோக் இயக்கிய இந்த ஆவணப்படத்திற்கு பீட்டர் ஸெயிட்லிங்கர் ஒளிப்பதிவு செய்திருந்தார். பென்குயின் பற்றி நம்மில் பலரும் அறிவியல் புத்தகங்களில் படித்து தெரிந்திருப்போம், ஆவணப்படங்களிலும் பார்த்திருப்போம். தென் துருவ உயிரினமான பென்குயின் பெரும்பாலும் அண்டார்டிகாவிலும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை ஒட்டிய பகுதிகளிலும் அதிகம் வாழ்கின்றன. கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் இந்த பென்குயின் பற்றிய பதிவுகளை அதிகம் பார்க்க முடிகிறது. அந்தக் காணொளியில் இருந்த பின்னணிக் குரல் தரும் செய்தியும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி பல அரசியல்வாதிகளும், திரை மற்றும் விளையாட்டு பிரபலங்களும் கூட ஒற்றை பென்குயினுடன் இருப்பது போல புகைப்படங்களை எடிட் செய்து பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆவணப்படத்தின் இயக்குநர் வெர்னர் காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,Werner Herzog படக்குறிப்பு,இயக்குநர் வெர்னர் ஹெர்ஸோக் காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், "20 ஆண்டுகளுக்கு முன்பு நான் படம்பிடித்த பென்குயின் ஒன்று இன்றும் பலரின் கற்பனைகளைத் தூண்டுவதைப் பார்க்கையில் ஆச்சரியமாக உள்ளது. இதற்குப் பின்னால் ஒரு கதை உள்ளது. அந்த பென்குயின் தனது மரணத்தை நோக்கி கண்டத்தின் உள்பகுதியில் உள்ள மலைகளை நோக்கி நடக்கத் தொடங்கும். பென்குயின் பற்றி ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் அவற்றின் விநோதத்தன்மை பற்றி என்னிடம் பேசியுள்ளனர்." எனத் தெரிவித்துள்ளார். ஆவணப்படத்தில் உள்ள தனது பின்னணிக் குரல் பற்றி குறிப்பிடுகையில், "நான் தீர்க்கப்படாத மர்மங்கள் பற்றிய நிறைய கிரைம் திரில்லர்களைப் பார்ப்பேன். அதில் வருகின்ற தொனியில் தான் இந்த ஆவணப்படத்திற்கும் குரல் கொடுத்திருப்பேன்," என்றார். அதன் வசிப்பிடத்திலிருந்து 80 கிலோமீட்டருக்கு அப்பால் சென்ற இதே போன்றதொரு பென்குயினைப் பார்த்ததாக அந்த ஆவணப்படத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். "அந்த பென்குயின் மரணம் நேரிடும் வரை இன்னும் பல கிலோமீட்டர் அப்படியே நகர்ந்து கொண்டே இருக்கும்," என்று வெர்னர் தனது குரலில் பதிவு செய்திருப்பார். இதே காணொளியில் கடல் சூழலியலாளர் டேவிட் ஐன்லியிடம் பென்குயின்கள் விநோதமாக நடந்து கொள்ளுமா எனக் கேள்வி முன்வைக்கப்பட்ட போது, "அவை சில நேரங்களில் திசைமாறிப் போய் கடலுக்கு மிகத் தொலைவில் சென்றுவிடும்." என்றார். அந்த பென்குயினை மீட்டு மீண்டும் அதன் காலனிக்கு அழைத்து வந்தாலும் அது மீண்டும் மலையை நோக்கியே செல்லும் என்றும் அந்த ஆவணப்படத்தில் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Thinkfilm/Werner Herzog படக்குறிப்பு,கடல் சூழலியலாளர் டேவிட் ஐன்லி கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கை முறை அவை வாழும் சூழலுக்கு ஏற்ப மாறுபடும் என்கிறார் உலக காட்டுயிர் நிதியத்தின் இணை இயக்குநரான வினோத் மலயிலேது. "கடல் உயிரினங்களைப் பொருத்தவரை வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள சேர்ந்து வாழும். முட்டையிடுவதற்கும், இரை தேடியும் தான் அவை வேறு இடங்களுக்கு தனித்துச் செல்கின்றன. சில உயிரினங்கள் அடிப்படையில் சேர்ந்து வாழக்கூடியவை, ஆனால் சில உயிரினங்கள் பல்வேறு காரணங்களால் தனித்துச் செல்லும்," என்றார். இதனை உதாரணங்களுடன் விளக்கிப் பேசிய அவர், "டால்பின்கள் பல இணைந்து ஒன்றாக உலவும். ஆனால் திமிங்கலங்கள் நீண்ட தூரம் பயணங்கள் மேற்கொள்ளக்கூடியவை. நீலத் திமிங்கலங்கள் (blue whales) தனியாக வாழக்கூடியவை. இரைதேடி நீண்ட தூரம் செல்லும் திமிங்கலங்கள் அவை வழக்கமாக உலவும் கடற்பகுதியைத் தாண்டிச் சென்றால் இரை கிடைக்காமல் போகக் கூடும். அதனால் தான் திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கும் சம்பவங்களைப் பார்க்கிறோம்." என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கை முறையும் அவை வாழும் சூழலுக்கு ஏற்ப மாறுபடும் (கோப்புப் படம்) தனித்து வாழ்வது அல்லது தனித்துச் செல்வது என்பது பல உயிரினங்களிலும் காணப்படுகிறது. உணவு, வாழ்விடம், இனப்பெருக்கம், உடல்நிலை என்று பல்வேறு காரணங்களுக்காக விலங்குகளும் பறவைகளும் தனித்துச் செல்கின்றன. இவ்வாறு விலங்குகள் தனித்துச் செல்வது குறுகிய காலத்திற்கோ அல்லது நிரந்தரமாகவோ இருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கான யானையும் இதற்கு விதிவிலக்கல்ல. குழுக்களாக வாழும் 'சமூக விலங்காக' அறியப்படும் யானையும் சில சந்தர்ப்பங்களில் தனித்துச் செல்லும் என்கிறார் ஊட்டி அரசு கல்லூரி வனவிலங்கு உயிரியல் துறையின் தலைவரும் பேராசிரியருமான ராமகிருஷ்ணன். இவர் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச கூட்டமைப்பில் ஆசிய யானைகளுக்கான சிறப்புக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். அவரின் கூற்றுப்படி, தாய்வழிச் சமூகமாக வாழும் யானைகளில், ஆண் யானைகள் 14, 15 வயது ஆன உடன் தனித்து விடப்படும், அவை மற்ற ஆண் யானைகளுடன் இணைந்து வாழ்கின்றன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆண் யானைகள் 14, 15 வயது ஆன உடன் தனித்து விடப்படும், அவை மற்ற ஆண் யானைகளுடன் இணைந்து வாழ்கின்றன. "இந்த ஆண் யானைகள் 25 வயது ஆகிறபோது பிற கூட்டங்களில் தனக்கான இணையைத் தேடும். ஒருவேளை வலுவான ஆண் யானையால் தோற்கடிக்கப்பட்டால் திரும்பிச் சென்றுவிடும். சிறிது காலம் கழித்து மீண்டும் இணை தேடிச் செல்லும். இணை கிடைக்கின்ற வரை ஆண் யானைகள் தனியாகவே வாழும்," என்றார். யானைகளில் தந்தம் இல்லாத ஆண் யானையான 'மக்னா யானை' தான் பெரும்பாலும் தனித்தே வாழ்வதாக அவர் குறிப்பிடுகிறார். "பெண் யானைகள் வலுவான ஆண் யானைகளைத் தான் தேர்வு செய்யும். இதனால் தந்தம் இல்லாத மக்னா யானைகள் தனித்து விடப்படுகின்றன," என்றும் தெரிவித்தார். யானை குழு என்றால் தலைமை தாங்கும் பெண் யானை மற்றும் அதன் வழிவந்த யானைகள் அடங்கும் எனக் கூறும் ராமகிருஷ்ணன் அதில் பெண் யானையின் பங்கு தான் முதன்மையானது என்றும் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,Getty Images அதனை விளக்கிப் பேசிய அவர், "யானைகள் பெரும்பாலும் முதுமை அல்லது உடல்நலக் குறைவு காரணமாக மட்டுமே தங்களது குழுவை விட்டுச் செல்கின்றன. அதிலும் ஒரு வேறுபாடு உள்ளது, மூத்த பெண் யானை உடல்நலம் முடியாமல் போகும்போது மற்ற யானைகள் அதனை விட்டுச் செல்வதில்லை. அவை வசிக்கின்ற பகுதியில் உணவு கிடைக்காமல் போகும் பட்சத்தில் மட்டுமே மற்ற யானைகள் அதனை விட்டுச் செல்லும். "பெண் யானைகள் தனித்து வாழ பழக்கப்பட்டவை அல்ல என்பதோடு ஒரு யானை குழுவிற்கும் பெண் யானைகளின் இருப்பு அவசியமாகிறது. ஒரு பெண் யானை அதன் குட்டிகளை மட்டுமல்லாது, குழுவில் உள்ள மற்ற யானைகளின் குட்டிகளையும் கவனித்துக் கொள்ளும். மாறாக ஆண் யானைகள் குழுவை விட்டுச் சென்றால் மற்ற யானைகள் அதனை பின்தொடர்ந்து செல்லாது. அதன் இடத்தை இன்னொரு ஆண் யானை வந்து நிரப்பும். சிறு வயதிலிருந்தே ஆண் யானைகள் அதிக காலம் தனித்து வாழ பழக்கப்பட்டதும் இதற்கு ஒரு காரணம்." என்றார். இவ்வாறு குழுவிலிருந்து தனித்துச் செல்லும் தன்மை பறவைகளிடமும் காணப்படுவதாகக் குறிப்பிடுகிறார் பிபிசி தமிழிடம் பேசிய பறவைகள் ஆய்வாளரும் மெட்ராஸ் நேச்சுரலிஸ்டிக் சோசைடியின் உறுப்பினருமான சாந்தராம். சமூக ஊடகங்களில் வரும் அனுமானங்களை முழுமையாக நம்பிவிடக்கூடாது எனக் கூறும் அவர், "பறவையினங்கள் மத்தியிலும் இந்த பழக்கம் பரவலாகவே இருந்து வருகிறது. ஒரு குறிப்பிடட பறவை மட்டும் இவ்வாறு நடந்து கொள்ளும் எனக் கூறிவிட முடியாது. கூட்டமாக வாழும் பறவைகள் உணவு, கூடு அமைப்பது மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் வழிதவறிச் செல்வது போன்ற காரணங்களால் தனித்துச் செல்கின்றன." என்று தெரிவித்தார். "உணவு கிடைக்கவில்லை என்றாலும் கூடு அமைப்பதற்கு இடம் கிடைக்கவில்லை என்றாலும் பறவைகள் தனித்துச் செல்லும். பெரும்பாலும் சிறிய பறவைகள் தான் வழிதவறிச் செல்கின்றன. குழுக்களாகவே வாழும் பறவைகள் கூட இனப்பெருக்க காலத்தில் தனித்துச் செல்கின்றன," என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவில் காணப்படும் தேரை இனம் புதிய வாழ்விடத்தை தேடி தனித்துச் செல்லும் வழக்கம் கொண்டுள்ளது (கோப்புப் படம்) விலங்குகள் தனிமைப்படுத்திக் கொள்வது அவற்றின் பரிணாம வளர்ச்சியின் மீது தாக்கம் செலுத்துவதாக 2018-ஆம் ஆண்டு புனித ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐரோப்பாவில் பாறை எறும்புகள் (டெம்னோதோராக்ஸ் யூனிஃபாசியேட்டஸ் - Temnothorax unifasciatus) என அறியப்படும் எறும்புகள் பூச்சிக் கொல்லி மருந்துகளால் தாக்கப்பட்டால் உயிரிழக்கின்ற வரை தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. "தனது கூட்டில் வாழும் மற்ற எறும்புகளிடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் தொற்று பரவுவதில் இருந்து காத்து மற்ற எறும்புகள் பாதிக்கப்படுவதை தவிர்க்கிறது," என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் காணப்படும் தேரை இனம் புதிய வாழ்விடத்தை தேடி தனித்துச் செல்லும் வழக்கம் கொண்டுள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆசிய சிங்கங்கள் (கோப்புப் படம்) வன உயிரினங்கள் மத்தியிலும் தனித்துச் செல்லும் வழக்கம் இருப்பதாகக் கூறுகிறார் மூத்த விஞ்ஞானியும் வன உயிர் ஆய்வாளருமான ஒய்.வி.ஜாலா. இதற்கு உளவியல் என்பதைவிடவும் பரிணாம வளர்ச்சியே காரணம் என்றும் அவர் குறிப்பிடுகிறார், பூனை குடும்பத்தின் கீழ் வரும் உயிரினங்கள் தனித்து வாழப் பழகி இருந்தாலும் சூழலுக்கு ஏற்ப அவை சேர்ந்தும் வாழ்வதாகக் குறிப்பிடுகிறார். அவர்களின் வாழ்விடத்தை யார் கட்டுப்படுத்துவது என்பதைப் பொருத்தே இவை தீர்மானிக்கப்படுகின்றன என்றார். "சிங்கங்களைப் பொருத்தவரை அவை வாழும் சூழலுக்கு ஏற்ப வாழ்க்கை முறையும் மாறும். ஆசிய சிங்கங்கள் மற்றும் ஆப்ரிக்க சிங்கங்கள் இடையே பல வேறுபாடுகள் உள்ளன." சிங்கங்கள் குழுக்களாகவே வாழும் என்கிறார் ஜாலா. "பெண் சிங்கங்கள் எப்போதும் குட்டிகளுடன் குடும்பமாக வாழும் சூழலில் ஆண் சிங்கங்கள் தனித்து விடப்படும். இவை சில சூழல்களில் பிற ஆண் சிங்கங்களுடன் சேர்ந்து குழுக்களாக வாழும் அல்லது வேறு குழுக்களுடன் இணைந்து கொள்ள முயற்சிக்கும். இதில் முதுமையடைந்த, இளம் சிங்கங்களுடன் போட்டி போட முடியாத சிங்கங்கள் தனியாகச் செல்கின்றன." என்றார். பட மூலாதாரம்,Roop Singh Meena புலிகள் சேர்ந்தும் தனித்தும் வாழ்வதாகக் குறிப்பிடும் அவர், "பெரிய இரைகளை வேட்டையாடும்போதும் இனப்பெருக்க காலத்தின் போதும் மட்டுமே புலிகள் சேர்ந்து கொள்ளும். மற்ற நேரங்களில் ஆண் புலி தனித்தே வாழும். ஆண் புலிகள் பெண் புலிகளையும் அதன் குட்டிகளையும் சேர்த்துக் கொள்வதில்லை. இதில் விதிவிலக்காக இரை உபரியாக கிடைக்கும் இடங்களில் புலிகள் சேர்ந்திருக்கக் கூடும். பெண் புலிகள் தங்களின் குட்டிகளுக்கு வயதானாலும் அவர்களுக்கு அருகிலே வாழும்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8d085v1r55o
-
நோயாளர்கள் பாதிக்கப்பட்டால் அமைச்சரே பொறுப்பு - GMOA குற்றச்சாட்டு
தொழிற்சங்க மிரட்டல்களுக்கு அடிபணிந்து தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை - சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவிப்பு 28 Jan, 2026 | 03:10 PM (செ.சுபதர்ஷனி) எந்தவொரு தொழிற்சங்கத்தினதும் அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களுக்கு அடிப்பனிந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை எனச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 213 பேருக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரைய யாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், சுகாதார சேவையில் நிலவும் மனிதவள பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, மக்களுக்குத் தரமான சேவையை வழங்குவதே எமது இலக்காகும். வெளிநாடுகளில் அதிக சம்பளம் கிடைப்பதாகக் கூறிக்கொண்டு, நாட்டை விட்டு வெளியேறப்போவதாக மிரட்டி சம்பள உயர்வுகளைக் கோரும் எந்தவொரு தரப்பினரின் கோரிக்கைகளுக்கும் அரசாங்கம் பணியப்போவதில்லை. இவ்வாறானவர்களுக்கு எதனை வழங்கினாலும் அவர்கள் நாட்டை விட்டுச் செல்வது உறுதி. ஆனால், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாட்டுக்காகத் தங்கி நின்று சேவையாற்றும் ஊழியர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும். கடந்த ஓராண்டு காலத்தில் சுகாதார அமைச்சுக்கு 10 ஆயிரம் ஊழியர்களை இணைத்துக்கொள்ள அனுமதி பெறப்பட்டு, அதில் 8 ஆயிரம் பேர் ஏற்கனவே சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர். வரலாற்றில் முதல் முறையாக 4,141 தாதியர்கள் ஒரே கட்டமாக இணைக்கப்பட்டனர். 2021 ஆம் ஆண்டு நடத்தப்படவிருந்த பரீட்சைகள் தாமதமாகி, தற்போது 2025 இல் நடத்தப்பட்டு இந்த 213 உதவியாளர்களும் இன்று நியமனம் பெற்றுள்ளனர். அரசியல் அதிகாரங்களும் அமைச்சர்களும் மாறலாம், ஆனால் அரச சேவை நிலையானதாக இருக்க வேண்டும். பதவி உயர்வு மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் வைத்தியர்கள் முதல் அனைத்து ஊழியர்களுக்கும் முறையான பொறிமுறை எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படும். புதிய நியமனம் பெற்றவர்கள் இடமாற்றங்கள் குறித்துச் சிந்திக்காது, மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க முன்வர வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/237243
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'ஈ-கேட்' இன்று திறப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மின்னணு வாயில்கள் உத்தியோகபூர்வமாக திறப்பு Published By: Vishnu 29 Jan, 2026 | 04:24 AM கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வருகை முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாயில்கள் புதன்கிழமை (28) முதல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. முதற்கட்டமாக நான்கு மின்னணு வாயில்கள் இவ்வாறு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மின்னணு வாயில்கள் (e-Gate) திட்டமானது ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் விமான நிலையத்தின் குடிவரவு நடைமுறைகளை விரைவாகவும், அதிக வினைத்திறனுடனும் முன்னெடுக்க முடியும் என முதன்மை குடிவரவு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ தெரிவித்தார். இந்த நவீன வசதி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் குறைந்து, விமான நிலையச் சேவைகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/237279
-
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழாவுக்கான ஆரம்பகட்ட பணிகள்; இலங்கை கடற்படை உத்தியோகபூர்வ விஜயம்
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழாவுக்கான ஆரம்பகட்ட பணிகள்; இலங்கை கடற்படை உத்தியோகபூர்வ விஜயம் Published By: Vishnu 28 Jan, 2026 | 11:07 PM கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை கடற்படையால் ஆற்றப்படும் ஆரம்பகட்ட பணிகளை அவதானிப்பு செய்வதற்கான உத்தியோகபூர்வ விஜயமானது புதன்கிழமை (28) இடம்பெற்றது. குறித்த விஜயத்தில் நெடுந்தீவில் பிரதேசசெயலர் என். பிரபாகரன், கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல பரிபாலகர் அருட்பணி P.பத்திநாதன் அடிகளார், பிரதேசசபை தவிசாளர் ச.சத்தியவரதன் மற்றும் கடற்படை உத்தியோகத்தர்கள் இணைந்துகொண்டனர். பக்தர்களின் உயரிய நலன்கருதி இலங்கை கடற்படையால் ஆற்றப்படும் ஆரம்பகட்ட பணிகளை பார்வையிட்டார். https://www.virakesari.lk/article/237276
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அண்ணை, சின்ன சின்ன வேலைகள் செய்து விட்டே பனர் அடித்து விளம்பரம் செய்கிறார்கள். நான் விளம்பரத்தை விட பலருக்கு அடிப்படைச் சுகாதார வசதி கிடைக்கலாம் என்ற விருப்பத்திலும் நன்கொடையாளர்களை ஈர்க்கலாம் என்ற கருதுகோளிலும் இதனை முன்வைத்தேன். படங்களை விட காணொளிக் காட்சிகளின் தாக்கம் கூடவாக இருக்கும். சதுர அடி 100 - 120 ரூபாவிற்குள் வரும் அண்ணா. (3*4=12*120=1440 ரூபா) ஆனால் எல்லோரும் சம்மதித்தால் செய்வோம். இருப்பு 200,970.67-33225=167,745.67 சதம் இன்று 23/01/2026 ரூபா 33200 வைப்புச் செய்த பின் தற்போதைய வங்கி மீதி. வங்கி மீதி சரி முன்னாலுள்ள கணக்கு பிழையாக இருந்தது, திருத்தி விட்டேன்.
-
நோயாளர்கள் பாதிக்கப்பட்டால் அமைச்சரே பொறுப்பு - GMOA குற்றச்சாட்டு
அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடு - GMOA Jan 28, 2026 - 05:40 PM வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஆக்கபூர்வமான தலையீடு மேற்கொள்ளப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு இன்று (28) கூடியதுடன், இதன்போது மேலதிக நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்கான முழுமையான அதிகாரம் நிறைவேற்றுச் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வைத்தியசாலைகளில் கையிருப்பில் இல்லாத மருந்துகளை வெளியில் இருந்து கொள்வனவு செய்வதற்கான மருந்துச்சீட்டுகளை எழுதும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும், அரசியல் குழுக்களால் நடத்தப்படும் சுகாதார முகாம்களில் பங்கேற்கப் போவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வைத்தியர்கள் போதுமான அளவு இல்லாத வைத்தியசாலைகளில் புதிதாக நிர்மாணிக்கப்படும் விடுதிகள் மற்றும் பிரிவுகளின் கட்டிடப் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmkxzhh7v04jlo29n50upxzrd
-
யாழ். காற்று மாசுபாடு குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணத்தின் காற்று மாசடைவு: மாநகர சபைக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு! Jan 28, 2026 - 02:31 PM யாழ்ப்பாணப் பகுதியில் ஏற்படும் காற்று மாசடைவைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணப் பகுதியில் ஏற்படும் காற்று மாசடைவைக் குறைப்பதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு கோரி, அப்பகுதியில் வசிக்கும் வைத்தியர் உமாசுகி நடராஜா தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக 'அத தெரண' நீதிமன்றச் செய்தியாளர் தெரிவித்தார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹான்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இம்மனு அழைக்கப்பட்டது. இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கையில், யாழ்ப்பாணப் பகுதியில் திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பதன் காரணமாக அப்பகுதியில் காற்று மாசடைவு கடுமையாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், தென்னிந்தியாவிலிருந்து காற்று மூலமாக அடித்து வரப்படும் கழிவுகள் காரணமாகவும் அப்பகுதியில் பாரிய காற்று மாசடைவு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதன்போது யாழ்ப்பாணப் பகுதியில் ஏற்படும் காற்று மாசடைவின் தன்மையைக் காட்டும் அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சட்டத்தரணி, இந்தக் காற்று மாசடைவு காரணமாக நோய் நிலைமைகள் தீவிரமடையக் காரணமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், யாழ்ப்பாணப் பகுதியில் காற்று மாசடைவைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபைக்கும் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும் உத்தரவிட்டது. இப்பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள யாழ்ப்பாண மாநகர சபையால் மத்திய சுற்றாடல் அதிகார சபையுடன் இணைந்து ஏன் செயற்பட முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இவ்வாறான பிரச்சினைகளை அரச நிறுவனங்கள் இணைந்து கலந்துரையாடித் தீர்த்துக்கொள்ள முடியும் எனச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, இவ்வாறான விடயங்களை வழக்குகள் மூலம் நீதிமன்றத்திற்குக் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmkxsptxy04j8o29n1phy2xpz
-
உணவுப் பாதுகாப்பு என்பது பிள்ளைகளின் நடத்தையாக மாற வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய
உணவுப் பாதுகாப்பு என்பது பிள்ளைகளின் நடத்தையாக மாற வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய 28 Jan, 2026 | 03:24 PM உணவுப் பாதுகாப்பு தொடர்பான பழக்கவழக்கங்கள் பாடசாலை பாடத்திட்டங்களுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், அவை பிள்ளைகளின் நடத்தையின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் இன்று புதன்கிழமை (28) நடைபெற்ற "உணவுத் துறையில் சுழற்சிப் பொருளாதாரத் திட்டம் (2024-2027)" என்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) நிதிப் பங்களிப்பில், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் 'குளோபல் கேட்வே' (Global Gateway) திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கருத்தரங்கு பல தொழில்நுட்ப அமர்வுகளைக் கொண்டிருந்தது. இதன்போது, குறிப்பாகப் பாடசாலைக் கல்வியில் சுழற்சி பொருளாதாரக் கருத்துருக்களை உள்வாங்குவதில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும், கொள்கை வகுப்பாளர்கள், இளைஞர்கள், திறன் அபிவிருத்திப் பிரிவுகள் மற்றும் முறைசார் கல்விப் பங்குதாரர்களை உள்ளடக்கிய மூன்று குழுக்களின் ஊடாக சுழற்சி பொருளாதாரத்தை நடைமுறையில் செயல்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அத்துடன், 2027ஆம் ஆண்டு வரை இலங்கையின் உணவுத் துறையில் நிலையான மற்றும் சுழற்சி பொருளாதார முறைகளை ஊக்குவிப்பதற்கும், அதற்கான கல்வித் தளத்தை உருவாக்குவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்: கல்வி என்பது வெறும் பரீட்சைகளில் சித்தியடைந்து வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வது மாத்திரமல்ல. உண்மையான கல்வி என்பது தனிமனிதனுக்குள் சமூகம் மற்றும் சூழல் மீதான பொறுப்புணர்வையும் பிணைப்பையும் ஏற்படுத்துவதேயாகும். குறிப்பாக, தற்காலச் சூழலில் எமக்கு மிகவும் முக்கியமானது 'சுழற்சி பொருளாதாரம்' (Circular Economy), அதாவது வளங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் ஒரு முறைமையே ஆகும். இன்று நாம் 'Circular Economy' என அழைக்கும் இந்தக் கருத்துரு எமது முன்னோர்களுக்குப் புதிய ஒன்றல்ல. எனக்கு எனது பாட்டி நினைவுக்கு வருகின்றார். உணவு வீணாவதைக் குறைப்பதில் அவர் வியக்கத்தக்க திறமையைக் கொண்டிருந்தார். நாம் தூக்கி எறியும் பஸன் புரூட் (Passion Fruit) தோல்களிலிருந்தும் அவர் சுவையான ஜாம் மற்றும் சட்னிகளைத் தயாரித்தார். பால் போத்தல்களின் உலோக மூடிகளைக் கூட அவர் வீசுவதில்லை, அவற்றைக் கொண்டு வீட்டை அலங்கரிக்கும் பல்வேறு கலைப்படைப்புகளை உருவாக்குவார். இன்று சுப்பர் மார்க்கெட்களில் இலகுவாகக் கிடைக்கக்கூடிய பொருட்களை, அன்று அவர்கள் தமது கைகளாலேயே உருவாக்கிக்கொண்டார்கள். 'எதனையும் வீணாக்காதிருத்தல்' என்பதே அவர்களின் வாழ்க்கை தத்துவமாக இருந்தது. ஆயினும், இன்று காலம் மாறியுள்ளது. அன்று எமது பாட்டிமாருக்கு இவற்றைச் செய்ய நேரம் இருந்தது. இன்று பெண்கள் தொழிலுக்குச் செல்கிறார்கள், பிள்ளைகளின் பணிகளைக் கவனிக்கிறார்கள், அவர்கள் கடும் பணிச்சுமைக்கு முகம் கொடுத்துள்ளார்கள். ஒரு வீட்டின் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தால், நேரமின்மை காரணமாக வீணாகிப்போன காய்கறிகளையோ அல்லது பழைய தேங்காய்த் துண்டுகளையோ காண்பது சாதாரண விடயமாக மாறியிருக்கின்றது. இது வெறும் பெண்ணின் அல்லது தாயின் பொறுப்பாக மட்டும் இருக்கக் கூடாது. ஒரு வீட்டிற்குள் இந்தப் பொறுப்புகளும் உழைப்பும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும். உணவுப் பாதுகாப்பு தொடர்பான பழக்கங்கள் பாடசாலைப் பாடத்திட்டத்துடன் மட்டும் மட்டுப்படுத்தப்படாது, பிள்ளைகளின் மனப்பாங்கு மற்றும் பழக்கவழக்கங்களின் ஓர் அங்கமாக அவை மாற வேண்டும். உணவைப் பரிமாறும்போது தமக்குத் தேவையான அளவை மட்டும் பெற்றுக்கொள்ளுதல், தனது தட்டைத் தானே கழுவுதல், வளங்களைப் பாதுகாப்பதில் ஆர்வம் காட்டுதல் போன்றவை வெறும் பாடங்களாக அன்றி, வாழ்க்கை முறைகளாக மாற வேண்டும். சுற்றுலாத்துறை போன்ற துறைகளுக்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான இந்தக் கருத்துருக்கள் மிகவும் முக்கியமானவை. கல்வி அமைச்சு என்ற ரீதியில் நாம் இதற்குப் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம். வெறும் அறிவை மாத்திரமன்றி, மனப்பூர்வமாகச் சூழலையும் சமூகத்தையும் நேசிக்கும் பிரஜைகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும், எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் ஒத்துழைப்புத் தலைவர் கலாநிதி ஜொஹான் ஹெஸே (Dr. Johann Hesse), இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் தூதுவர் கார்மென் மொரேனோ (H. E. Carmen Moreno), இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) பிரதிநிதி விம்லேந்திர ஷரன் (Vimlendra Sharan) உள்ளிட்ட தேசிய கல்வி நிறுவனம் (NIE), ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்புகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/237251
-
Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை
குரியாச்சன் என்ன ஆனார்? கோம்பை நாய்களை நடிக்க வைத்தது பற்றி பிபிசி தமிழுக்கு 'Eko' பட இயக்குநர் பேட்டி பட மூலாதாரம்,AARADYAA STUDIOS கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 28 ஜனவரி 2026, 09:06 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 'பிரேமம்', 'மஞ்சும்மல் பாய்ஸ்', 'பிரேமலு', 'ஆவேஷம்' என மலையாள திரைப்படங்கள் பலவும் தமிழ்நாட்டில் ரசிகர்களால் வரவேற்புப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் இணைந்துள்ள சமீபத்திய மலையாளத் திரைப்படம் 'எக்கோ'. "சில சமயங்களில் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு, இரண்டும் ஒரே மாதிரியாகத் தோன்றலாம்", "சில நாய்களுக்கு எப்போதும் ஒரே முதலாளி தான்", "நாயை சங்கிலி போட்டோ கூண்டிலோ வளர்க்கக் கூடாது, அதை சுதந்திரமாக வளர்க்கவேண்டும்", என திரைப்படத்தின் வசனங்களும் காட்சிகளும் இணையத்தில் பிரபலமாயின. மனிதர்களுக்கும் நாய்களுக்குமான பந்தங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை, தின்ஜித் அய்யதன் இயக்கியுள்ளார். காக்ஷி: அம்மினிப்பிள்ள, கிஷ்கிந்தா காண்டம் படங்களைத் தொடர்ந்து இது அவரது மூன்றாவது திரைப்படம். இந்தத் திரைப்படம் குறித்த சமூக ஊடகப் பதிவுகளில் பெரும்பாலும் முன்வைக்கப்படும் கேள்வி, 'குரியாச்சன் என்ன ஆனார்?' என்பதே. பிபிசி தமிழுக்கு இயக்குநர் தின்ஜித் அய்யதன் அளித்த பேட்டியில் 'எக்கோ' குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். பட மூலாதாரம்,AARADYAA STUDIOS படக்குறிப்பு,இயக்குநர் தின்ஜித் அய்யதன் 'எக்கோ' கதை உருவானது எப்படி? இத்திரைப்படத்திற்கு 'எக்கோ' (Eko) என பெயரிட்டது ஏன்? இதை நிறைய பேர், ஈக்கோ என சொல்கிறார்கள். இது எக்கோ (Echo) தான். அதாவது எதிரொலி அல்லது 'கர்மா', 'பூமராங்', என்பதைக் குறிப்பது போல. நாம் செய்யும் செயல்களின் விளைவுகளில் இருந்து நாம் தப்பிக்க முடியாது, அது நம்மை என்றாவது ஒருநாள் பின்தொடர்ந்து வரும் அல்லது அது வாழ்க்கையில் எதிரொலிக்கும் என்ற அர்த்தத்தில் தான் 'எக்கோ' என வைத்தோம். இதில் குரியாச்சன் கதாபாத்திரம் (நடிகர் சௌரப் சச்தேவா) தான் முன்னர் செய்த செயல்களின் விளைவுகளால் தான் தலைமறைவு வாழ்க்கைக்குள் செல்வார். அவரை பிற கதாபாத்திரங்கள் தேடி வருவதும் அதற்காக தான். மற்றபடி, 'Echo' என வைக்காமல் 'Eko' என தலைப்பு வைத்தது, வித்தியாசமாக இருக்கட்டுமே என்பதற்காக தான். இந்தக் கதை உருவானது எப்படி? பஹுல் ரமேஷ் (எக்கோ திரைப்படத்தின் கதாசிரியர் மற்றும் ஒளிப்பதிவாளர்) வீட்டிற்கு அருகில் வசித்த ஒருவர், மலேசியாவுக்கு வேலைக்குச் சென்று, அங்கு ஒரு மலேசியப் பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கேரளாவிற்கு அழைத்து வந்து, வாழ்ந்து கொண்டிருந்தவர். அதிலிருந்து தான், ரமேஷுக்கு 'எக்கோ' கதை தோன்றியது. இந்தக் கதையை ரமேஷ் சொன்னபிறகு, நாய்கள் வளர்ப்பவர்கள் குறித்தும், புதிய நாய் இனங்களை தேடிச் செல்பவர்கள் குறித்தும் படித்தோம். பல நாய் இனங்கள் குறித்தும் அவற்றின் நடத்தைகள் குறித்தும் படித்தோம். அது கதை மேலும் விரிவதற்கு உதவியது. கோம்பை நாய்கள் பட மூலாதாரம்,AARADYAA STUDIOS திரைப்படத்தில் 'மலேசியாவைச் சேர்ந்த நாய்கள்' என ஒரு இனத்தைக் காட்டியிருப்பீர்கள், அவை உண்மையில் எந்த இனம்? அவை தமிழ்நாட்டின் தேனியைச் சேர்ந்த கோம்பை நாய்கள். இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரங்களே நாய்கள் தான். மலேசியாவிலிருந்து கொண்டுவரப்பட்டவை என்று கதையில் சொல்லப்படுவதால், எந்த இனத்தை காட்டுவது என்ற குழப்பம் இருந்தது. நாய்களை திரையில் பார்க்கும்போது நம்பகத்தன்மையும் இருக்க வேண்டும், அதேசமயம் அவை வழக்கமான வெளிநாட்டு நாய்களைப் போலவும் இருக்கக்கூடாது. மற்றொரு பிரச்னை கன்டினியூட்டி (Continuity). எனவே நாய்கள் ஒரே மாதிரியான தோற்றத்துடன் இருக்க வேண்டும். ஆனால், மக்களுக்கு நெருக்கமாகவும் தோன்ற வேண்டும். எனது நண்பரும் துணை இயக்குநருமான துரை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவர் தான் கோம்பை நாய்கள் பற்றிச் சொன்னார். தேனிக்குச் சென்று, கோம்பை நாய் வளர்ப்பவர்களை சந்தித்து பேசி, புகைப்படங்கள் அனுப்பி வைத்தார். அப்போதே முடிவு செய்துவிட்டோம், கோம்பை நாய்களை தான் பயன்படுத்த வேண்டும் என்று. ஆனால், மீண்டும் ஒரு சிக்கல் வந்தது. ஒரு நாய்க்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை கேட்டார்கள். எங்கள் திரைப்படத்தின் மொத்த பட்ஜெட்டே 8 கோடி தான். எனவே நாய்களுக்கு மட்டும் எங்களால் பல லட்சங்களை செலவழிக்க முடியாது. ஒருவழியாக 2 மாதங்கள் படப்பிடிப்பிற்கு ஒரு நாய்க்கு வாடகை 5000 ரூபாய் எனப் பேசி, 10 நாய்களை கொண்டு வந்தோம். பட மூலாதாரம்,AARADYAA STUDIOS படப்பிடிப்பில் எவ்வாறு அவற்றை சமாளித்தீர்கள்? அதற்கு வழங்கப்பட்ட பயிற்சிகள் குறித்து சொல்ல முடியுமா? நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் நிபுணர் ஒருவர் எங்களிடம் சொன்னது, 'நாட்டு நாய்கள் எனும்போது ஒன்றரை வயதிற்குள் இருந்தால் மட்டுமே அவற்றுக்கு சொல் பேச்சு கேட்டு நடக்கும் வகையில் பயிற்சி அளிக்க முடியும்.' எனவே 1 முதல் ஒன்றரை வயதிற்குள் இருக்கும் கோம்பை நாய்களையே தேர்ந்தெடுத்து 1 மாதம் முறையாக பயிற்சி கொடுக்கப்பட்டது. திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஒரு நாய், மலாத்தி சேட்டத்தி கதாபாத்திரத்தை எட்டி உதைப்பது போல இருக்கும். அதற்கு நாங்கள் இரண்டு நாய்களுக்கு பயிற்சி அளித்து தயாராக வைத்திருந்தோம். ஒருவேளை ஒரு நாய், அதைச் சரியாக செய்யவில்லை என்றால் மற்றொரு நாய் செய்யவேண்டும் என்பதற்காக. இந்த நாய்கள் மிகவும் ஆக்ரோஷமானவை. சில சமயங்களில் அவை தங்களுக்குளே சண்டையிட்டுக் கொள்ளும். அவை சமாதானமடையும் வரை காத்திருந்து, பின்னர் காட்சிகளை எடுப்போம். இதெல்லாம் சவாலாகவே இருந்தது. இருப்பினும், 45 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். பட மூலாதாரம்,Dinjith Ayyathan/Facebook 45 நாட்களில் முழு திரைப்படத்தையும் முடித்துவிட்டீர்களா? ஆமாம், அதற்கு காரணம் பட்ஜெட் தான். படத்தின் நாயகன் சந்தீப், மலையாள சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் ஹீரோ. 3 முதல் 5 கோடி பட்ஜெட் திரைப்படம் என்பது அவருக்கான அதிகபட்ச மார்கெட் (Market). ஆனால், இது 8 கோடி பட்ஜெட் திரைப்படம். தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிடக்கூடாது. எனவே, செலவுகளில் மிகவும் கவனமாக இருந்தோம். அனைத்தையும் முன்பே திட்டமிட்டு செய்தோம். உங்களது முந்தைய திரைப்படம் கிஷ்கிந்தா காண்டம், இப்போது எக்கோ, இரண்டிலும் கதை நடக்கும் பகுதிகள் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவும், கதை சொல்வதற்கான ஒரு கருவியாகவும் பயன்பட்டிற்கும் அல்லவா? உதாரணத்திற்கு எக்கோ-வின் இறுதிக் காட்சியில் சேட்டத்தியும் பீயூஸும் அமர்ந்து பேசும் ஒரு பாறை. ஆம், குறிப்பிட்ட நிலவியல் அமைப்புகள் ஒரு கதைக்கு பெரும் பலமாக இருக்கும். உதாரணத்திற்கு, எக்கோ திரைப்படத்திற்காக நான் தேடியது காய்ந்த புல்வெளிகள் கொண்ட ஒரு மலை. அதன் உச்சியில் குரியாச்சன்- சேட்டத்தி வீடு இருக்கும் என்பது போல. அதற்காக இடுக்கியில் ஒரு பகுதியை முடிவு செய்து, படப்பிடிப்புக்கு அங்கு சென்றபோது, மழை காரணமாக அந்த காய்ந்த புற்கள் பசுமையாக மாறியிருந்தன. வேறு வழியில்லை என படப்பிடிப்பு நடத்தினோம். ஆனால் திரைப்படத்தில் பார்க்கும்போது அந்தப் பசுமை கதைக்கு பெரிதும் உதவியாக இருந்தது. இதுபோல சில விஷயங்களை நாங்கள் முடிவு செய்கிறோம், சிலவற்றை இயற்கை முடிவு செய்கிறது. குரியாச்சனுக்கு என்ன ஆனது? பட மூலாதாரம்,AARADYAA STUDIOS எக்கோ திரைப்படத்தில் பல விஷயங்களை நீங்கள் நேரடியாக சொல்லவில்லை. உதாரணத்திற்கு நரேன் கதாபாத்திரம் ஏன் குரியாச்சனை தேடுகிறது? அதேபோல பல விஷயங்கள் வசனங்களாக அல்லது மறைமுகமாக சொல்லப்பட்டிருக்கும், அல்லவா? ஆம், அதற்கு காரணம் இது குரியாச்சன்- மலாத்தி சேட்டத்தி பற்றிய கதை மட்டுமே. அதனால் தான் அவர்கள் தொடர்பான 'பிளாஷ்பேக்' மட்டும் காட்சிகளாக வைக்கப்பட்டிருக்கும். நரேன், வினீத், அல்லது சந்தீப் கதாபாத்திரங்களின் கதைகளைச் சொன்னால் அது அவர்களுடைய கதையாகிவிடும். அவர்கள் குரியாச்சன்- மலாத்தி சேட்டத்தி கதையின் ஒரு அங்கம் மட்டுமே. எல்லா கதாபத்திரங்களுக்கும் ஒரு பின்கதை இருக்கும், ஆனால் அதை சொல்லி திரைப்படத்தின் மையக்கருவை சிதைக்க வேண்டாம் என நினைத்தேன். அதுமட்டுமல்லாது, கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஓடிடி-களின் வரவு காரணமாக மக்கள் உலகத் திரைப்படங்களை அதிகம் பார்க்கிறார்கள். திரைப்படங்கள் குறித்த ரசனையும், எதிர்பார்ப்பும் மாறிவிட்டது. எனவே எதையும் நேரடியாக சொல்லவேண்டாம் என நினைத்தோம். 'குரியாச்சனுக்கு என்ன ஆனது?' என திரைப்படத்தின் இறுதிக்காட்சி குறித்து சமூக ஊடகங்களில் வரும் பதிவுகளை பார்த்தீர்களா? ஆமாம், பார்த்தேன். ஏஐ (AI) கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு காணொளியை மிகவும் ரசித்தேன். திரைப்படத்தின் இறுதிக்காட்சியை மட்டும் இன்னும் கொஞ்சம் விவரமாக சொல்லியிருக்கலாம் என எனக்கு முன்பே தோன்றியது. அதாவது, மலாத்தி சேட்டத்தி அந்தப் பாறையில் அமர்ந்து பைனாகுலர் மூலம், தொலைவில் உள்ள ஒரு பாறை இடுக்கைப் பார்க்கிறார். அந்த பாறை இடுக்கின் வாசலில் சில நாய்கள் காவலுக்கு நிற்கின்றன. அது குரியாச்சன் அங்கு தான் சிறை வைக்கப்பட்டுள்ளார் என்பதை உணர்த்திவிடும், எனவே இதை காட்சியாக வைத்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், என் குழு வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்கள். ஒருவேளை, அந்தக் காட்சியை வைத்திருந்தால், மக்கள் இன்னும் திருப்தியாக உணர்ந்திருப்பார்களோ எனத் தோன்றுகிறது. 'குரியாச்சனுக்கு என்ன ஆனது?' என்பதை இன்னும் சற்று தெளிவாக சொல்லியிருந்தால், இந்தத் திரைப்படம் இன்னும் அதிகமாக மக்களால் கொண்டாடப்பட்டிருக்குமோ என்றும் தோன்றியது. மலையாள சினிமா அதன் யதார்த்தமான திரைப்படங்களுக்காக இந்தியா முழுவதும் அறியப்படுகிறது. அத்தகைய திரைப்படங்கள் இங்கு அதிகம் உருவாக முக்கிய காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? தயாரிப்பாளர்கள் மற்றும் மக்கள் தான். ஒரு கதையைச் சொல்லும்போது, அதில் பாடல்களை சேருங்கள், இந்தக் காட்சிகளைச் சேருங்கள், இவரை வைத்து எடுக்கவேண்டாம் என்றெல்லாம் இங்கு பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நிபந்தனைகள் விதிப்பதில்லை. மக்களும் வித்தியாசமான முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். அதேசமயம், எல்லா திரைப்படங்களுக்கும் இந்த அங்கீகாரம் கிடைத்துவிடுவதில்லை தான். இருப்பினும், பிற மொழி திரைப்படத்துறைகளுடன் ஒப்பிடும்போது, 'வணிக அம்சங்கள்' தொடர்பான அழுத்தம் இங்கு குறைவாக இருப்பதாக நான் நினைக்கிறேன். பட மூலாதாரம்,AARADYAA STUDIOS தமிழ் சினிமாவிலிருந்து வந்த பாராட்டுகள் தமிழ் சினிமாவிலிருந்து உங்களுக்கு பாராட்டுகள் வந்தனவா? ஆம், நடிகர் ரவி மோகன் அழைத்துப் பேசினார். தனுஷ் 'எக்கோ' திரைப்படத்தைப் பாராட்டி பதிவிட்டிருந்தார். சில இயக்குநர்களும் பேசினார்கள். கமல் சாருக்கும், ரஜினி சாருக்கும் எக்கோ திரைப்படத்தை போட்டுக் காட்ட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட ஆசை. அது நிறைவேறும் என நம்புகிறேன். என் முதல் திரைப்படம் தமிழில் தான் எடுத்திருக்க வேண்டும். சில காரணங்களால் அது நடக்கவில்லை. நான் 20 வருடங்களாக சென்னையில் தான் வசிக்கிறேன். படித்தது எல்லாம் இங்கே தான். 'கிஷ்கிந்தா காண்டம்- குரங்குகள்', 'எக்கோ- நாய்கள்', உங்கள் அடுத்த திரைப்படம்? விலங்குகளை வைத்து தான் எடுப்பேன் என்று இல்லை. கதைகள் அவ்வாறு அமைந்தன. அடுத்த திரைப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டன. விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வரும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd9ep7g7244o
-
வடக்கு மாகாணத்தில் ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் - ஜெயசேகரம்
பணம் படைத்த எல்லோருக்கும் உதவுவதற்கு மனம் வருவதில்லை - வடக்குமாகாண ஆளுநர் வேதநாயகன் 28 Jan, 2026 | 04:13 PM (எம்.நியூட்டன்) போரின் இறுதிக் காலத்தில் நான் கிளிநொச்சி மாவட்டச் செயலராகக் கடமையாற்றியவன் என்ற வகையில், இப்பகுதி மக்கள் அனுபவித்த வேதனைகளை நான் நன்கறிவேன். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதே எமது நோக்கம். பணம் படைத்த எல்லோருக்கும் உதவுவதற்கு மனம் வருவதில்லை. ஆனால், சிங்கப்பூரைச் சேர்ந்த துரை குடும்பத்தினருக்கு அந்தத் தாயுள்ளம் வந்திருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். சிங்கப்பூரைச் சேர்ந்த ரி.ரி.துரை குடும்பத்தினர் மற்றும் செல்வி சரசீஜா ராமன் ஆகியோரின் நிதிப் பங்களிப்பில், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இ.ஜெயசேகரம் ஏற்பாட்டில், பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (28) கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன்விருத்தி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உதவிகளை வழங்கி வைத்து உரையாற்றும் போதே ஆளுநர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்: எமது மண்ணையும் மக்களையும் நினைத்து சிங்கப்பூரிலிருந்து உதவும் இவர்களது நல்ல மனதுக்கு இறைவன் இன்னும் அதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பான். தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளிடம் நான் அன்பாகக் கேட்பது ஒன்றே ஒன்றுதான். உங்களுக்கு உதவி செய்யும் இந்தப் பரோபகாரிகளுக்கு நீங்கள் செய்யக்கூடிய ஒரேயொரு கைமாறு, இந்த உதவியைச் சரியாகப் பயன்படுத்தி, சமூகத்தில் நீங்கள் முன்னேறி, உங்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைவது மாத்திரமேயாகும். இத்திட்டத்தை ஒருங்கிணைத்துச் செயற்படுத்திய ஜெயசேகரம் நன்றிகள். அவர் எதை ஆரம்பித்தாலும் அதனை முழுமையாக நிறைவேற்றாமல் ஓயமாட்டார். கிளிநொச்சியில் மிகச் சிறப்பாகச் செயற்படக்கூடிய ஒரு மாவட்டச் செயலாளர் இருக்கின்றார் என்ற அடிப்படையில், இத்திட்டத்தின் முதல் கட்டத்துக்கு அவர் கிளிநொச்சியைத் தெரிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள், என்றார். வடக்கு மாகாணத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 1000 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் இத்திட்டத்தின் முதல் கட்டமாக, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 181 குடும்பங்களுக்கு இன்று உதவிகள் வழங்கப்பட்டன. இதற்காக ஒரு கோடியே 46 இலட்சத்து 24 ஆயிரத்து 400 ரூபா செலவிடப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட உதவிகள் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளன. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், திட்ட ஏற்பாட்டாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான இ.ஜெயசேகரம், மாவட்டச் செயலகப் பதவியினர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/237257
-
விசேட தேவையுடைய மாணவர்களுக்காக சிவபூமி பாடசாலை தென்மராட்சியில் திறந்து வைப்பு
சிவபூமி பாடசாலை தென்மராட்சியில் திறந்து வைப்பு 28 Jan, 2026 | 05:19 PM (எம்.நியூட்டன்) தென்மராட்சி சிவபூமி பாடசாலை வேலயுதம் வீதி சாவகச்சேரியில் புதன் கிழமை (28) திறந்துவைக்கப்பட்டது. சிவபூமி அறக்கட்டளை தலைவர் காலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மங்கல விளக்கேற்ரலுடன் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் சிவபூமி பாடசாலையை நாடாவெட்டி திறந்துவைத்ததுடன் படிம கல்லையூம் திறந்து வைத்தார். இதேவேளை சிவபூமி அறக்கட்டளையானது கடந்த 25 ஆண்டுகளாக அறப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பிறப்பிலேயே மனவளர்ச்சி குறைந்த விசேட தேவையுடைய மாணவர்களுக்காக 2003 கோண்டாவிலிலும், 2016இல் கிளிநொச்சியிலும் எமது அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட பாடசாலைகள் மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றன. இந்நிலையில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் லண்டனில் வசிப்பவர்களுமாகிய வைத்திய கலாநிதி கனகசபை கதிர்காமநாதன் இரட்ணேஸ்வரி தம்பதிகள் மனமுவந்து வழங்கிய இல்லத்தைப் புனரமைத்து இப்பாடசாலை ஆரம்பிக்கப்படுகிறது. பெரிய பரப்பளவு கொண்ட தென்மராட்சித் திருநகரில் மாற்றுவலுவுடைய குழந்தைகளை மகிழ்வாய் வாழ வைக்க இந்த பீடசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சாவகச்சேரி பிரதேச செயலர் எப்.சி.சத்தியசோதி கெளரவ விருந்தினர் கேன் பற்றுநோய் காப்பக தலைவர் வைத்திய கலாநிதி கமலா வைத்தியநாதன் , சாவகச்சேரி நகர சபை தவிசாளர் சிறிபிரகாஸ் ஆகியோர் கலந்து கொண்டார்கள் அதிதிகள் உரையை தொடர்ந்து சிவபூமி மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. https://www.virakesari.lk/article/237269
-
இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!
இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம் டிரம்புக்கு சொல்லும் செய்தி என்ன? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ரஜ்னீஷ் குமார் பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்கா இந்திய இறக்குமதிகள் மீது 50% வரியையும், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 27 நாடுகளின் இறக்குமதிகள் மீது 15% வரியையும் விதித்தது. தற்போது இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன. இது அமெரிக்காவுக்கு விடுக்கப்படும் ஒரு செய்தியாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்கா தற்போது ஆக்ரோஷமான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. ஜனவரி 24 அன்று அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட், "ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது வரி விதிக்க எங்கள் ஐரோப்பிய நட்பு நாடுகள் மறுத்துவிட்டன. ஏனெனில், அவர்கள் இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை விரும்பினர். யுக்ரேனுக்கு எதிரான போரில் ஐரோப்பாவே ரஷ்யாவுக்கு உதவுகிறது" என்றார். இந்தியாவுக்கு எதிராக ஐரோப்பாவும் வரிகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்பியது, ஆனால் அது நடக்கவில்லை. யுக்ரேன் மீதான ரஷ்யத் தாக்குதலை ஐரோப்பா தனக்கு நேர்ந்த பெரிய அச்சுறுத்தலாகக் கருதுகிறது. இருப்பினும், ரஷ்ய எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி அமெரிக்கா இந்தியா மீது வரிகளை விதித்தது. கடந்த மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு வருகை தந்தார். அடுத்த மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தலைவர்கள் இந்தியா வந்தனர். ஐரோப்பிய ஒன்றியம் - இந்தியா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து அல்பானி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் கிறிஸ்டோஃபர் கிளேரி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "மற்ற நாடுகளுக்கும் மாற்று வழிகள் உள்ளன என்பதை இந்த ஒப்பந்தம் நினைவூட்டுகிறது. அமெரிக்கா தனது பொருளாதார ஆதிக்கத்தின் அடிப்படையில் வரி கொள்கையை வகுத்து அதைத் தவறாகப் பயன்படுத்தினால், அதன் அழுத்தம் பலனற்றதாகிவிடும். அமெரிக்காவின் தன்னிச்சையான போக்குக்கு உலகளாவிய எதிர்ப்பு அதிகரித்து வருகிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் அமெரிக்கா மீதான இந்தியாவின் சார்புத்தன்மையைக் குறைக்கும் என்று பிரபல உத்தி விவகார நிபுணர் பிரம்மா செலானியும் நம்புகிறார். "விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டு, பாதுகாப்புவாதம் அதிகரித்து வரும் இக்கட்டான காலத்தில், இது ஒரு சாதாரண வர்த்தக ஒப்பந்தத்தை விட முக்கியமானது" என்று செலானி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "வரிகளை ஆயுதமாகப் பயன்படுத்தும் டிரம்பின் உத்தியை இது பலவீனப்படுத்துகிறது. இந்த ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் மீதான இந்தியாவின் சார்பைக் குறைக்கிறது" என்றும் அவரது பதிவு கூறுகிறது. திங்களன்று இந்தியாவின் 77-வது குடியரசு தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் போது, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், "அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் இந்திய வானில் பறப்பதைப் பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருந்தது" என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்திய வானில் அமெரிக்க விமானங்கள் மட்டுமல்ல, ரஷ்ய விமானங்களும் பறந்தன. குடியரசு தின அணிவகுப்பில் ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பும் காட்சிப்படுத்தப்பட்டது. இந்தியாவின் குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு இது சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஏனெனில், நேட்டோ அமைப்பு எஸ்-400ஐ தங்களுக்கு எதிரான அச்சுறுத்தலாகக் கருதுகிறது. தி ஹிந்து நாளிதழின் தூதரக விவகாரங்கள் பிரிவின் ஆசிரியர் சுஹாசினி ஹைதர் இது குறித்து வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தளப் பதிவில், "இந்தியாவின் உத்தி சார்ந்த சுயாட்சி குடியரசு தின அணிவகுப்பில் முழுமையாக வெளிப்பட்டது. எஸ்-400 அமைப்பு, டி-90 டாங்கிகள் மற்றும் கூட்டாகத் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகள் உள்ளிட்ட ரஷ்ய ராணுவத் தளவாடங்கள், சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டன" என்று கூறியிருந்தார். டிரம்ப் மற்றும் ஐரோப்பா ஆகிய இரு தரப்புமே ரஷ்யாவுடனான இந்தியாவின் நெருக்கத்தைக் குறைக்க விரும்புகின்றன. ஆனால், அமெரிக்காவைப் போல இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க ஐரோப்பா வரிகளை விதிக்கவில்லை. பட மூலாதாரம்,Getty Images உத்தியாக மாறிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் டெல்லியைச் சேர்ந்த 'குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ்' அமைப்பின் அஜய் ஸ்ரீவஸ்தவா, இந்தச் சங்கடங்களைப் பற்றி இந்தியா கவலைப்படவில்லை என்றும், டிரம்ப் இதை விரும்பவில்லை என்றும் கூறுகிறார். "அமெரிக்காவின் ராஜீய சூழல் இப்போது பழையபடி இல்லை. டிரம்ப் நிர்வாகத்தின் கவனம் உள்நாட்டு அரசியல் மற்றும் பரிவர்த்தனை சார்ந்த உறவுகளிலேயே உள்ளது. அமெரிக்காவுடனான தனது கூட்டாண்மையைத் தொடர இந்தியா விரும்புகிறது, ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அதிகப்படியான சார்பு ஆபத்தானது என்பதையும் இந்தியா புரிந்துகொண்டுள்ளது" என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "டிரம்பின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு நிலையான தன்மை இல்லை. பாகிஸ்தான், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் குறித்த அவரது நிலைப்பாடு அடிக்கடி மாறியுள்ளது. இது இந்தியா ஒரு நீண்ட கால உத்தியை வகுப்பதைக் கடினமாக்குகிறது" என்று குறிப்பிடுகிறார் அஜய் ஸ்ரீவஸ்தவா. அமெரிக்க வரிகளின் தாக்கத்தைக் குறைக்க இந்தியா பல நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. "ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு டிரம்பின் கொள்கைகளே ஒரு காரணமாக அமைந்தன. ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்காக இரு தரப்புமே தங்களை தாராளமயமாக்கிக்கொண்டுள்ளன. இப்போது கேள்வி என்னவென்றால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்த ஒப்பந்தம் டிரம்பின் வரிகளின் தாக்கத்தைக் குறைக்குமா என்பதுதான்" என்கிறார். மேலும், "அமெரிக்கா ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு மிகப்பெரிய சந்தை. கடந்த இரண்டு மாதங்களில் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 20 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வர சுமார் ஒரு வருடம் ஆகும். நிச்சயமாக, இது அமல்படுத்தப்பட்டவுடன் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும் மற்றும் டிரம்பின் வரிகளால் ஏற்படும் அழுத்தம் குறையும்.'' என்றார் ''நான் டிரம்புக்கு நன்றி கூறுகிறேன், ஏனென்றால் யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம் என்ற உண்மையை அவர் உணர்த்தியுள்ளார். டிரம்பின் நடவடிக்கைகளால் இந்தியா ஏற்கெனவே பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டது, மேலும் பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவை மட்டுமே நம்பியிருப்பது ஆபத்தானது" என்கிறார் அஜய் ஸ்ரீவஸ்தவா. முன்னதாக, இந்தியா ஓமன், நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகளால் உலகம் கொந்தளிப்பில் இருக்கும் வேளையில் இது தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,@narendramodi ஒப்பந்தத்தின் தாக்கம் என்ன? அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் மீதான தங்கள் சார்பைக் குறைக்க இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் விரும்புகின்றன. இதற்கு முன்பு இந்தியா தனது சந்தையை முழுமையாகத் திறக்க முன்வராத ஒரு 'பாதுகாப்புவாத' நாடாகக் கருதப்பட்டது. ஆனால், இப்போது இந்தியா அந்த பிம்பத்திலிருந்து விடுபட்டு வருவது போல் தோன்றுகிறது. டிரம்பின் கொள்கைகளால் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்வதும், அதே நேரத்தில் ரஷ்யாவுடன் வலுவான உறவைப் பேணுவதும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் தனக்குச் சாதகமான வர்த்தகத்தை மேற்கொள்வதும் இந்தியாவுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. டிரம்பின் கொள்கைகளைச் சுற்றியுள்ள "நிச்சயமற்ற சூழலில்", நாடுகள் தங்கள் கடந்த கால கசப்புகளை மறந்து ஒன்றுசேரத் தயாராகி வருவதாக, தெற்காசிய ஆய்வுகள் நிறுவனத்தின் வர்த்தக மற்றும் பொருளாதார ஆராய்ச்சித் தலைவர் அமிதேந்து பாலித் 'ப்ளூம்பெர்க்' செய்தியில் தெரிவித்துள்ளார். "ஏதோ ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டு வருவது இப்போது மிகவும் அவசியமாகியுள்ளது," என்று அவர் கூறியுள்ளார். எம்கே குளோபல் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் மாதவி அரோராவின் அறிக்கை, ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 2031ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதியை 50 பில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்கும் என்று தெரிவிக்கிறது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் மருந்து, ஜவுளி மற்றும் ரசாயனத் துறைகளுக்கு நேரடிப் பலன் அளிக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. கடந்த நிதியாண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 136.5 பில்லியன் டாலர்களாக இருந்தது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 17 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்கினை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுள்ளது. இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒன்பதாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாகத் திகழ்கிறது. இந்த ஒப்பந்தம் மூலம் 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியச் சந்தையை ஐரோப்பிய ஒன்றியம் அணுக முடியும். இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக அமெரிக்கா உள்ளது. வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2024-25 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தகம் 131.84 பில்லியன் டாலர்களாக இருந்தது. கடந்த நிதியாண்டில் அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் இந்தியா 41.18 பில்லியன் டாலர் வர்த்தக உபரியைக் கொண்டிருந்தது. அதாவது, அமெரிக்காவிடம் இருந்து வாங்கியதை விட அதிகமான பொருட்களை இந்தியா அங்கு விற்றுள்ளது. இதில் அதிருப்தி அடைந்துள்ள அதிபர் டிரம்ப், இந்த வர்த்தக உபரி அமெரிக்காவுக்குச் சாதகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். புளூம்பெர்க் எகனாமிக்ஸ் கணிப்பின்படி, டிரம்பின் வரி விதிப்புகளால் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 52 சதவிகிதம் வரை குறையக்கூடும். டிரம்பின் வரி விதிப்பால் 41 பில்லியன் டாலர் வர்த்தக உபரி மோசமாகப் பாதிக்கப்படும் என்று அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார். இருப்பினும், இந்தியா தற்போது மேற்கொண்டு வரும் வர்த்தக ஒப்பந்தங்கள் இந்த இழப்பை உடனடியாக இல்லாவிட்டாலும், அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் ஈடுசெய்யும் என்று அவர் கருதுகிறார். "ஐரோப்பிய பொருளாதாரங்கள் அமெரிக்காவை விட இந்தியாவுக்கு அதிக நன்மை பயக்கும். ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்களில் ஜெட் என்ஜின்கள் மற்றும் தொழிற்சாலை கட்டுப்பாட்டு வால்வுகள் போன்ற உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள் அடங்கும். இதற்கு நேர்மாறாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை மிகவும் பொதுவானவை. இதில் சோளம் மற்றும் சோயாபீன்ஸ் போன்ற விவசாய பொருட்கள் அடங்கும். இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்கள் ஜவுளி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் அடங்கும்" என்று ஸ்ரீவஸ்தவா கூறுகிறார். இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தத்தின்படி, 90 சதவிகிதத்திற்கும் அதிகமான ஐரோப்பியப் பொருட்கள் மீதான வரிகளை இந்தியா நீக்கவோ அல்லது குறைக்கவோ செய்யும். குறிப்பாக, ஐரோப்பிய கார்கள் மீதான வரி தற்போதுள்ள 110 சதவிகிதத்திலிருந்து படிப்படியாக 10 சதவிகிதமாகக் குறைக்கப்படும். இந்த சலுகை ஆண்டுக்கு அதிகபட்சமாக 2,50,000 வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். இயந்திரங்கள், ரசாயனப் பொருட்கள் மற்றும் மருந்துகள் மீது இந்தியா விதித்து வரும் வரிகள் முழுமையாக நீக்கப்படும் என்றும் முக்கிய விவசாயப் பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படும் அல்லது நீக்கப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்தியாவும் நியூசிலாந்தும் கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவும் நியூசிலாந்தும் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தன. உலகளாவிய பொருளாதார ரீதியில் தனது எல்லையை விரிவுபடுத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் இதனை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் என்று வர்ணித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவுக்கான தற்போதைய ஏற்றுமதிகளில் 95 சதவிகிதப் பொருட்களுக்கு வரி நீக்கப்படும் அல்லது கணிசமாகக் குறைக்கப்படும் என்று அவர் கூறினார். இதில் நிலக்கரி, ஆட்டுக்கறி மற்றும் குழந்தைகளுக்கான பால் பவுடர் வரை பல பொருட்கள் அடங்கும். குறிப்பாக, நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களுக்கு இந்தியா தனது வரிச் சலுகையை வழங்கியுள்ளது. அமெரிக்க ஆப்பிள்களுக்கு இந்தியச் சந்தையைத் திறக்க வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் வேளையில், இந்தியா நியூசிலாந்துக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பதிலாக, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் நியூசிலாந்து வரிகளை ரத்து செய்யும். மேலும், இந்திய மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் இடப்பெயர்வு விதிகளையும் அந்த நாடு எளிதாக்கும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோஃபர் லக்சனும் தொலைபேசி மூலம் உரையாடி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய நியூசிலாந்து ஒப்புக்கொண்டுள்ளது. இருப்பினும், தற்போதைய வர்த்தக அளவு குறைவாக இருப்பதால், இது உடனடியாக இந்தியாவின் ஏற்றுமதிக்கு மிகப்பெரிய உத்வேகத்தைத் தந்துவிடாது. 2024-25 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் சுமார் 1.3 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், இந்தியாவின் ஏற்றுமதி 711 மில்லியன் டாலராகவும், நியூசிலாந்தின் இறக்குமதி 587 மில்லியன் டாலராகவும் உள்ளது. பட மூலாதாரம்,Getty Images பிரிட்டன் உடனான வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஆண்டு மே மாதம் இந்தியாவும் பிரிட்டனும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் இருதரப்பு வர்த்தகத்தை 34 பில்லியன் டாலர்கள் அதிகரிக்கும் என்று பிரிட்டன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரிட்டன் விஸ்கி மற்றும் ஜின் மீதான வரிகள் தற்போது பாதியாகக் குறைக்கப்பட்டு, பின்னர் 40 சதவிகிதமாகக் குறைக்கப்படும். மேலும், 100 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்த கார்கள் மீதான வரிகளையும் இந்தியா 10 சதவிகிதமாகக் குறைக்கும் (குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கார்களுக்கு மட்டும்). மறுபுறம் பிரிட்டன் ஆடை, காலணிகள் மற்றும் இறால் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீதான வரிகளைக் குறைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் பிரிட்டன் அரசாங்கத் தரவுகளின்படி, பிரிட்டன் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான சரக்கு மற்றும் சேவைகளின் மொத்த வர்த்தக மதிப்பு 58 பில்லியன் டாலராக இருந்தது. இது பிரிட்டனின் 11-வது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இந்தியாவை மாற்றியுள்ளது. மேலும், கடந்த டிசம்பர் மாதம், இந்தியாவும் ஓமனும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஓமன் சுல்தானுடன் நரேந்திர மோதி (கோப்புப் படம்) அடுத்து கனடா மற்றும் பிரேசில்? பிரேசில் அதிபர் லூலா டா சில்வா பிப்ரவரி 19 முதல் 21 வரை இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அண்மையில் பிரதமர் நரேந்திர மோதியுடன் அவர் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்தப் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுமே பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. தற்போது இரு நாடுகளுமே டிரம்பின் வர்த்தக வரிகளால் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. மேலும், கனடாவின் பிரதமர் மார்க் கார்னி மார்ச் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2p14nk3xdo
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
சரி அண்ணை. சரி அண்ணை.
-
பிரித்தானியாவை உலுக்கும் சாண்ட்ரா புயல் : 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளப் பெருக்கு அபாயம் - அவசர நிலை பிரகடனம்!
பிரித்தானியாவை உலுக்கும் சாண்ட்ரா புயல் : 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளப் பெருக்கு அபாயம் - அவசர நிலை பிரகடனம்! Published By: Digital Desk 3 28 Jan, 2026 | 08:47 AM பிரித்தானியாவைத் தாக்கி வரும் 'சாண்ட்ரா' புயல் காரணமாக பல பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. சமர்செட் பகுதியில் மிக மோசமான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அங்கு 'பாரிய பேரழிவுச் சம்பவம்' என அறிவிக்கப்பட்டு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இங்கிலாந்து முழுவதும் 95-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளப் பெருக்கு எச்சரிக்கையும், 250-க்கும் மேற்பட்ட இடங்களில் அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டெவன் பகுதியில் 'ஆட்டர்' ஆறு வரலாற்றில் இல்லாத அளவு மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளது. வடக்கு அயர்லாந்தில் 10,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளன. சுமார் 300-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பெல்பாஸ்ட், லண்டன், மான்செஸ்டர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து புறப்பட வேண்டிய நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அயர்லாந்து கடற்பரப்பில் பலத்த காற்று வீசுவதால் படகு சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்ததாலும், தண்டவாளங்களில் வெள்ளம் சூழ்ந்ததாலும் ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கிய 25-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்து மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/237205
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'ஈ-கேட்' இன்று திறப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'ஈ-கேட்' இன்று திறப்பு Jan 28, 2026 - 09:39 AM கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று (28) முதல் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படுவதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நான்கு இலத்திரனியல் நுழைவாயில்கள் இவ்வாறு திறக்கப்படுவதாகத் திணைக்களத்தின் பிரதம குடிவரவு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ தெரிவித்தார். ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடனேயே இந்த 'ஈ-கேட்' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதன் ஊடாக விமான நிலையத்தின் வினைத்திறனை அதிகரிக்க முடியும் எனவும் பிரதம குடிவரவு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார். https://adaderanatamil.lk/news/cmkxia6ph04ijo29ng3gttjr2
-
"கறுப்பு ஜனவரி": மட்டக்களப்பில் சுடர் ஏற்றி ஊடகவியலாளர்கள் அஞ்சலி!
"கறுப்பு ஜனவரி": மட்டக்களப்பில் சுடர் ஏற்றி ஊடகவியலாளர்கள் அஞ்சலி! Jan 27, 2026 - 10:31 PM படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பில் இன்று (27) மாலை தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூரும் 'கறுப்பு ஜனவரி' மாதத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு காந்தி பூங்காவிலுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கு அருகில் இப்போராட்டம் நடைபெற்றது. மட்டக்களப்பு ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கிலங்கைச் செய்தியாளர் சங்கம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. மட்டக்களப்பு ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து சுடர் ஏற்றப்பட்டு, 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி தீப்பந்தம் ஏந்திப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டம் நடைபெற்ற இடத்தில் பொலிஸாரும் புலனாய்வுத் துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். இதன்போது, "படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை வழங்கு", "கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் எங்கே?", "ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்து" போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. நாட்டின் உள்ளகப் பொறிமுறையில் ஊடகவியலாளர்கள் நம்பிக்கை இழந்துள்ளதன் காரணமாக, சர்வதேச நீதிப் பொறிமுறையின் கீழ் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmkwufp9504i9o29n2gon85j2