Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. இலங்கையை 6 விக்கெட்களால் வெற்றிகொண்டு மும்முனை ரி - 20 தொடரில் பாகிஸ்தான் சம்பியனானது Published By: Digital Desk 3 29 Nov, 2025 | 11:22 PM (நெவில் அன்தனி) ராவல்பிண்டியில் இன்று சனிக்கிழமை (29) நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் 6 விக்கெட்களால் வெற்றியீட்டிய பாகிஸ்தான் எதிர்பார்த்தவாறு மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. ஆனால், இந்த வெற்றி பாகிஸ்தானுக்கு இலகுவாக அமையவில்லை. இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 115 ஓட்டங்கள் என்ற மிகவும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் சிரமத்துக்கு மத்தியில் 18.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி சம்பயினானது. பாபர் அஸாம் ஆட்டம் இழக்காமல் 37 ஓட்டங்களையும் சய்ம் அயூப் 36 ஓட்டங்களையும் சாஹிப்ஸதா பர்ஹான் 23 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவிச்சில் பவன் ரத்நாயக்க 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஏஷான் மாலிங்க, வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 114 ஓட்டங்களுக்கு சுருண்டது. இலங்கை துடுப்பாட்டத்தில் காமில் மிஷார மாத்திரம் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் பெற்றார். அவரது சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடன் இலங்கை அணி 10.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 83 ஓட்டங்களைப் பெற்று ஓரளவு பலமான நிலையில் இருந்தது.ஆனால், இலங்கையின் எஞ்சிய 9 விக்கெட்கள் 31 மேலதிக ஓட்டங்களுக்கு சரிந்தன. காமில் மிஷார 2 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். அவரைவிட குசல் மெண்டிஸ் 14 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 11 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைத் தொடவில்லை. காமில் மிஷாரவும் குசல் மெண்டிஸும் 2ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். உதிரிகளாக 13 ஓட்டங்கள் கிடைத்தது.பந்துவீச்சில் மொஹம்மத் நவாஸ் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷஹீன் ஷா அப்றிடி 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அப்ரார் அஹ்மத் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/231983
  2. வெனிசுவேலாவை தாக்க அமெரிக்கா தயாராகிறதா? டிரம்ப் அறிவிப்பால் பதற்றம் பட மூலாதாரம்,Getty Images 30 நவம்பர் 2025, 07:09 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வெனிசுவேலா வான்வெளி மூடப்பட்டிருப்பதாகக் கருதப்பட வேண்டும் என்பதன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 'காலனித்துவ அச்சுறுத்தல்' விடுப்பதாக வெனிசுவேலா குற்றம்சாட்டியுள்ளது. அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சகம், டிரம்பின் கருத்துகளை வெனிசுவேலா மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சட்டவிரோதமான மற்றும் நியாயமற்ற தாக்குதல் என்று கூறியுள்ளது. போக்குவரத்துத் துறையில் நிச்சயமற்ற சூழல் உருவாகவும், விமான நிறுவனங்கள் அங்கு விமானங்களை இயக்காமல் தவிர்க்கவும் டிரம்பின் இணையதள பதிவு, காரணமாக அமையக்கூடும். கரீபியன் தீவுகளில் தனது ராணுவ இருப்பை அமெரிக்கா அதிகரித்து வருகிறது. இது போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் முயற்சி என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்காவின் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகள், 'தன்னைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கான முயற்சி' என்று கூறி நிராகரித்துள்ளார். டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) தள பதிவில், "விமான நிறுவனங்கள், விமானிகள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள், மனித கடத்தலில் ஈடுபடுபவர்கள் ஆகிய அனைவரும், வெனிசுவேலாவின் வான்வெளியும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் முழுவதும் மூடப்பட்டிருப்பதாகக் கருதவும்" என்று பதிவிட்டிருந்தார். இதுபற்றி கருத்து கேட்க பிபிசி தொடர்புகொண்டபோது, வெள்ளை மாளிகை உடனடியாக பதிலளிக்கவில்லை. "வெனிசுவேலாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக"அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்ஏஏ) விமான நிறுவனங்களை எச்சரித்த சில நாட்களுக்குப் பிறகு டிரம்பின் இந்த கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன. "இந்த ஒழுக்கமற்ற தாக்குதல் செயலை உறுதியாக நிராகரிக்க சர்வதேச சமூகத்தையும், உலகின் சுயாட்சி அரசுகளையும், ஐநாவையும், இது தொடர்புடைய பல்தரப்பு அமைப்புகளையும் நேரடியாக அழைக்கிறோம்" என்று சனிக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் வெனிசுவேலாவின் வெளிநாட்டு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கிறது. முன்னதாக, 48 மணி நேர காலக்கெடுவுக்கு விமான சேவையை மீண்டும் தொடங்க தவறியதால், ஐபீரியா, டிஏபி போர்ச்சுகல், கோல், லாடம், ஏவியன்கா மற்றும் டர்கிஷ் ஏர்லைன்ஸ் ஆகிய ஆறு முக்கிய சர்வதேச விமான நிறுவனங்களின் விமானங்கள் தரையிறங்க வெனிசுவேலா புதன்கிழமை தடை விதித்தது. உலகின் மிகப்பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்ட் கப்பலையும் சுமார் 15,000 படையினரையும் வெனிசுவேலாவுக்கு அருகில் அமெரிக்கா நிறுத்தியுள்ளது. 1989-ல் பனாமாவை ஆக்கிரமித்த பிறகு இந்தப் பகுதிக்கு இவ்வளவு பெரிய படையை அனுப்புவதற்கான காரணம் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகப் போராடுவதே என்று அமெரிக்கா கூறியுள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டு விமானந்தாங்கி போர்க்கப்பல் (கோப்புப் படம்) வெனிசுவேலாவில் தரைவழி போதைப்பொருள் கடத்தலை தடுத்து நிறுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் மிக விரைவில் தொடங்கும் என்று டிரம்ப் வியாழனன்று எச்சரித்தார். அமெரிக்கப் படைகள் போதைப்பொருளை ஏற்றிச் சென்றதாகக் கூறி படகுகள் மீது குறைந்தது 21 தாக்குதல்களை நடத்தி எண்பதுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுள்ளன. எனினும், அந்த படகுகள் போதைப்பொருள் கொண்டு சென்றதற்கான ஆதாரங்களை அமெரிக்கா இதுவரை வழங்கவில்லை. வெனிசுவேலா அரசாங்கம், இந்த அமெரிக்க நடவடிக்கையின் நோக்கம் மதுரோவை பதவி நீக்கம் செய்வதே என்று நம்புகிறது. கடந்த ஆண்டு அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை வெனிசுவேலா எதிர்க்கட்சியும் பல வெளிநாடுகளும் மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டின. மதுரோ தலைமையில் இயங்குவதாக அமெரிக்கா குற்றம்சாட்டும் கார்டெல் டி லாஸ் சோல்ஸ் அல்லது கார்டெல் ஆஃப் தி சன்ஸ் என்ற குழுவை, ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஒரு அமைப்புக்கு பயங்கரவாதக் குழு என்று முத்திரை குத்துவது, அமெரிக்க சட்ட அமலாக்க மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அதை குறிவைத்து அகற்றுவதற்கான அதிகாரங்களை வழங்குகிறது. வெனிசுலாவின் வெளியுறவு அமைச்சகம் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr4d262100yo
  3. வடமராட்சி கிழக்கு பகுதியில் இறந்த நிலையில் கால்நடைகள் 30 Nov, 2025 | 11:22 AM நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சீரற்ற காலநிலையால் யாழ். வடமராட்சி கிழக்கு புன்னையடி பகுதியில் கால்நடைகள் இறந்துள்ளன. இறந்து கிடக்கும் கால்நடைகளை அகற்றும் பணிகளை உடனடியாக பருத்தித்துறை பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றனர். கால்நடைகள் உயிரிழந்தமைக்கான காரணம் என்ன என தெரியவரவில்லை. https://www.virakesari.lk/article/232019
  4. Published By: Digital Desk 3 30 Nov, 2025 | 12:38 PM மாவிலாறு நீர்தேக்கத்தின் அணை உடைந்ததால் அந்த பகுதியை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் கவனமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறவேண்டுமென அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/232018 மாவிலாறு வெள்ளம்: விமானப்படை ஹெலிகொப்டர்கள் மூலம் 121 பேர் மீட்பு Nov 30, 2025 - 01:38 PM மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த 121 பேர், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்திகள் மூலம் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இலங்கை விமானப்படை ஊடகப் பேச்சாளர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இந்த மீட்புப் பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான Bell-412 மற்றும் MI-17 ஆகிய இரண்டு உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விமானப்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmilfuau90276o29nnnccan8m
  5. வலிகாமம் கிழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உணவுகள் உதவிகள் தேவை - தவிசாளர் நிரோஸ்! 30 Nov, 2025 | 10:37 AM வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை எல்லைக்குள் அதிக வெள்ளப்பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ள நிலையில் எமது பகுதிக்கு உடனடி உணவு உதவிகள் தேவையாகவுள்ளன என உதவிகளை நல்கக் கூடியவர்களின் கவனத்தினை ஈர்க்கும் முகமாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் கோரிக்கை விடுத்துள்ளார். எமது பிரதேசம் பொதுவாக வசதிக்குறைவான மக்களைக்கொண்ட பகுதியாகும். குறிப்பாக ஒவ்வொரு கிராமங்களின் ஐம்பது சதவீதமான பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் முகாம்களுக்குச் செல்வொருக்கே உடனடி உதவி என்ற சுற்று நிருபத்தினை வெளியிட்டிருந்தது. அதன் வாயிலாக வீடுடுகளுக்குள் கடும் வெள்ளப்பாதிப்புக்களை எதிர்கொண்டு முடக்கப்பட்டுள்ள மக்கள் உணவுக்குத் திண்டாடும் நிலையை நிலை உள்ளது. இந் நிலையில் முகாம்களுக்குள் செல்ல முடியாதவர்களுக்கு உதவிகள் கிட்டவில்லை. பிரதேசத்தில் ஏற்கனவே பலருக்கும் ஒருவகை வைரஸ் காய்ச்சல் உள்ள நிலையில் முகாம்களுக்குள் செல்லவதை மக்களில் பலரும் விரும்பவில்லை. இந்நிலையில் வீடுகளுக்குள் வெள்ள நீர்புகுந்து கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டு பலரும் திண்டாடுகின்றார்கள். முதியவர்கள், சிறுவர்கள், நோயாளிகள் என பலரும் உடனடி உணவிற்கே திண்டாடுகின்றார்கள். தற்போதைய நிலையில் முகாம்களுக்கள் சென்றால் தான் உதவி என்ற நிலையில் சுற்றுநிருப மாற்றங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எவ்வாறிருந்தபோதிலும் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரச உதவிகள் சென்றடைய வேண்டும். மேலும் தன்னார்வலர்களின் உதிவகள் ஆங்காங்கே குறைந்தளவில் கிடைக்கப்பெற்று வருகின்றன. இந் நிலையில் உனடி உதவிகளை வழங்கத்தவர்கள் வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் காணப்படுவதால் அவற்றிற்கு உதவிகளை நல்க முன்வரவேண்டும். என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/232012
  6. A/L உட்பட அனைத்துப் பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைப்பு Nov 30, 2025 - 01:39 PM கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் நடைபெறவிருந்த ஏனைய அனைத்துப் பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும். பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்தார். மின்சாரத் தடை மற்றும் தொடர்பாடல் சிக்கல்கள் காரணமாகப் பரீட்சைகள் குறித்து வினவி பரீட்சை திணைக்களத்திற்குப் பொதுமக்களிடமிருந்து அதிகளவான தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இதன் காரணமாகவே, பரீட்சை ஒத்திவைப்பு குறித்த இந்தத் தீர்மானத்தை மீண்டும் உத்தியோகபூர்வமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இது தொடர்பில் குழப்பமடைய வேண்டாம் எனவும், புதிய திகதிகள் அறிவிக்கப்படும் வரை காத்திருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmilfwg900277o29nmdld9vq8
  7. கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவு Published By: Digital Desk 3 30 Nov, 2025 | 10:00 AM கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி கிளிநொச்சி மாவட்டத்தின் பொக்கனியில் பதிவாகியுள்ளது. அதன்படி, அந்தப் பகுதியில் 274 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. குறிப்பிடத்தக்களவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள பிற மாவட்டங்கள் பின்வருமாறு: மன்னார் - பொற்கேணி - 210 மி.மீ. மன்னார் - மடு - 193 மி.மீ. கேகாலை - துனுமல்லே பகுதி - 181 மி.மீ. கம்பஹா - கிரிந்திவலை, - 121 மி.மீ. நுவரெலியா - கிலேண்டில்ட் பகுதி - 104 மி.மீ. https://www.virakesari.lk/article/232007
  8. வெள்ளத்தில் சிக்கிய விலங்குகளுக்கு மருத்துவ உதவி Nov 30, 2025 - 12:58 PM வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அல்லது சிக்குண்டுள்ள செல்லப்பிராணிகள், பண்ணை விலங்குகள் அல்லது வீதி விலங்குகளுக்கு அவசர கால்நடை மருத்துவ உதவிகளை வழங்க இலங்கை கால்நடைவைத்தியர்கள் சங்கம் தயாராக உள்ளது. இத்தகைய உதவிகள் தேவைப்படின், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொள்ளுமாறு சங்கத்தின் தலைவர் சுகத் பிரேமசந்திர கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள்: தொலைப்பேசி இலக்கம்: 071 6000 666 வைத்தியர் மாலக லசந்த: 071 414 5242 வைத்தியர் நிலூஷா: 070 610 3808 https://adaderanatamil.lk/news/cmilefssf0274o29ntcgdpfzt
  9. மன்னாரில் சீரற்ற வானிலையால் 310 நபர்களின் தொடர்புகள் துண்டிப்பு : பலர் மரங்களிலும், வீட்டு கூரைகளிலும் உள்ளதாக தகவல் Published By: Digital Desk 3 29 Nov, 2025 | 09:09 PM நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சுமார் 310 நபர்கள் எவ்வித தொடர்பும் இன்றி இருப்பதாகவும் அவர்கள் மரங்களிலும், கட்டிடங்களின் கூறைப் பகுதிகளிலும் தஞ்சமடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த 310 நபர்கள் கடந்த இரண்டு நாட்களாக எவ்வித தொடர்புகளும் இன்றி இருக்கின்றார்கள். மேலும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட சிலரை படகுகள் மூலம் மீட்டுள்ளோம். மேலும் கூராய் பிரதேசத்தில் 36 நபர்கள் எவ்வித தொடர்புகளும் இன்றி மரத்திலும்,கூரைகள் மேலும் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை மீட்கும் நடவடிக்கையில் கடற்படையினர்,விமானப்படையினர் மற்றும் ஏனைய அரச அலுவலகர்களின் உதவியுடன் மீட்க முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். கடற்படையினரால் மீட்பிற்காக சென்ற படகு நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உள்ளமையினால் பாதிக்கப்பட்ட மக்களை நெருங்குவதில் கடினமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீரற்ற காலநிலை காரணமாக விமானப்படையின் உதவியையும் பெற்றுக் கொள்ள கஷ்டமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி மீண்டும் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை சீரான நிலைக்கு வரும் சந்தர்ப்பத்திலேயே மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். மேலும் மாந்தை மேற்கு, மடு, முசலி பிரதேச செயலாளர் ஆகிய பிரிவுகள் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. தொலைபேசிகள் இயங்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை பெற்றுக் கொள்வதில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. மாந்தை மேற்கு பிரதேசம் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளது. மன்னாரில் இருந்து கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கான பாதைகளும் தடைப்பட்டுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/231979
  10. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் பொருள் நன்கொடைகளை எளிதாகவும் விரைவாகவும் விடுவிக்க விரைவான பொறிமுறை Published By: Digital Desk 3 29 Nov, 2025 | 11:20 PM தற்போது நாடு எதிர்கொண்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்குவதில் வெளிநாடுகள், அரசாங்கங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதுடன், மக்களுக்கு நிவாரணங்களை எளிதாகவும் விரைவாகவும் வழங்குவதற்கான விரைவான பொறிமுறையை நிறுவும் நோக்கில் சனிக்கிழமை (29) ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. சுங்கம் மூலம் பொருள் நன்கொடைகளை விடுவிக்கும் போது பல்வேறு வரி செலுத்துதல்கள், தர ஆய்வுகள் மற்றும் அனுமதிகளைப் பெறுதல் ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்காக, முக்கியமாக வரி விலக்குடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு பொறிமுறையின் கீழ் செயற்பட்டு, இந்தப் பொருட்களை விடுவிப்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. அதன்படி, இந்நாட்டிற்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகள் பலதரப்பு நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், வெளிநாட்டு வர்த்தகங்கள் மற்றும் தனிநபர்களால் வழங்கப்படும் உதவிகள் என்று நான்கு முக்கிய வகைகளாகப் பிரித்து இனங்காணப்பட்டன. ஏற்கனவே இலங்கை அரசாங்கம் நாட்டிற்கு அவசரமாகத் தேவைப்படும் பொருட்களின் பட்டியலை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளதுடன், வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம் பெறுநராக பெயரிடப்பட வேண்டும் என்றும் அவ்வாறு செய்யும்போது, அந்தப் பொருட்களுக்கான சுங்க வரிகள் மற்றும் பெறுமதி சேர் வரி (VAT) விலக்கு அளிப்பது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இதன் மூலம் பொருள் உதவிகளை செயற்திறனாகவும், முறையான வகையிலும் விடுவிக்க முடியும். பொருள் உதவிகளைப் பெறுபவராக இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம் பெயரிடப்படவில்லை என்றால், சாதாரண நடைமுறையின் கீழ் வரி செலுத்தி விடுவிக்க வேண்டும். அதன்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்படும் பொருட்கள் திறம்பட அவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்கான முன் ஏற்பாடுகளுடன், இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முகவரி உள்ளிட்ட தகவல்களைக் கொண்ட வழிகாட்டுதல்களை வெளியிடுவதன் மூலம் துரித நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதன் அனைத்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் சுங்க பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட மேற்கொள்ளவுள்ளார். துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, ஜனாதிபதியின் சிரேஷ்டமேலதிக செயலாளர்களான ரோஷன் கமகே மற்றும் ரஸ்ஸல் அபோன்சு மற்றும் இலங்கை சுங்கம் உட்பட இறக்குமதி மற்றும் ஏற்றுமதி துறையுடன் தொடர்புடைய அதிகாரிகள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் பற்கேற்றனர். https://www.virakesari.lk/article/231985
  11. ஜப்பான் இலங்கைக்கு அவசர உதவி Nov 30, 2025 - 09:48 AM சீரற்ற வானிலை காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்திற்குப் பதிலளிக்கும் வகையில், ஜப்பான் இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் ஊடாக, மதிப்பீட்டுக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப ஜப்பானிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இக்குழுவில் மருத்துவ அதிகாரிகளும் உள்ளடங்குவர். அவர்கள் நாட்டின் மருத்துவத் தேவைகளைக் கண்காணிப்பதுடன், ஜப்பானிய அனர்த்த நிவாரணக் குழுவொன்றை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளை ஒருங்கிணைப்பார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு JICA நிறுவனத்தின் ஊடாக கூடாரங்கள் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட அவசர நிவாரணப் பொருட்களையும் வழங்க ஜப்பானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmil7mie0026po29nmypw1y88
  12. 'திட்வா' புயலால் மழை, வெள்ளம், நிலச்சரிவு என இலங்கை முழுவதும் பெரும் இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டு வருவதால் நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 153 பேர் உயிரிழந்த நிலையில் 191 பேரை காணவில்லை என பேரிடர் மேலாண்மை மையம் கூறுகிறது. சுமார் ஒரு லட்சத்து 79 ஆயிரம் குடும்பங்களும், 6.46 லட்சம் தனி நபர்களும் இந்த இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகள், தொழிற்சாலைகள், குடியிருப்புப் பகுதிகள் என எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்படுகின்றனர். மேலும் நிலச்சரிவில் தமிழர்களும் உயிரிழந்துள்ளனர். இலங்கையின் தற்போதைய நிலை என்ன? 'திட்வா' புயலால் அங்குள்ள தமிழர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது? இந்த காணொளியில் பார்க்கலாம். #SrilankaRains #SrilankaFlood #Ditwahcyclone இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  13. திட்வா, சென்யார்: வங்கக்கடலில் ஒரே காலகட்டத்தில் இரு புயல்கள் உருவானது எதைக் காட்டுகிறது? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வங்கக்கடலில் புயல் நிலை கொண்டிருப்பதை காட்டும் படம் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் திட்வா புயல், இலங்கையில் சமீபத்திய ஆண்டுகளில் பேரழிவை ஏற்படுத்திய மோசமான வானிலை நிகழ்வுகளில் ஒன்று. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டிலும் திட்வா புயல் எதிரொலியாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில், வங்கக்கடலில் உருவான சென்யார் புயல் கிழக்கு நோக்கி நகர்ந்து இந்தோனீசியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வங்கக் கடலில் புயல்கள் மற்றும் அவற்றின் தீவிரத்தன்மை அதிகரித்து வருவதை இது உணர்த்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். நிபுணர்களின் கூற்றுப்படி, புவி வெப்பமயமாதலின் விளைவாகக் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதும், வளிமண்டல ஈரப்பதம் அதிகரிப்பதும், வங்கக் கடலில் புயல்கள் அதிகரிக்கக் காரணமாக இருக்கின்றன. ஆனால், கடல் சூடாவதற்கும் திட்வா புயல் இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தியதற்கும் என்ன தொடர்பு? வங்கக்கடலில் ஒரே காலகட்டத்தில் 2 புயல்கள் உருவானது எதைக் காட்டுகிறது? 'ஒரே காலகட்டத்தில் உருவான இரண்டு புயல்கள்' வங்கக் கடல் பகுதியில் இந்த வாரம் மலாக்கா ஜலசந்திக்கு அருகில் சென்யார், இலங்கையின் தெற்கே திட்வா என இரண்டு புயல்கள் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் உருவாயின. "வங்கக் கடல் பகுதியில் இது மிகவும் அரிதான நிகழ்வு" என்றார், சென்னையைச் சேர்ந்த சுயாதீன வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த். "சில தருணங்களில் ஒரு புயல் சின்னம் வங்கக் கடலிலும் மற்றொரு புயல் சின்னம் அரபிக் கடல் பகுதியிலும் உருவாகும் என்றாலும் வங்கக் கடல் பகுதியிலேயே ஒரே நேரத்தில் இப்படி இரண்டு சுழற்சிகள் உருவாகிப் புயலாக மாறியது அரிதிலும் அரிது," என்று கூறுகிறார் ஸ்ரீகாந்த். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது உடலில் இருந்து வாயுவை வெளியேற்றுவதற்கான நடைபயிற்சி பற்றி தெரியுமா? 1971: பாகிஸ்தான் சிறையில் இருந்து இந்திய விமானிகள் தப்ப உதவிய 'கோககோலா பாட்டில்' தமிழ்நாடு கடற்கரை அருகே திட்வா புயல் நகர்வதால் எங்கெல்லாம் மிக கனமழை பெய்யும்? புதிய அப்டேட் பாம்பு கடித்தபின் சிகிச்சை எடுக்காமல் இறுதி தருணங்களை எழுதி வைத்தவர் End of அதிகம் படிக்கப்பட்டது கடந்த 2019-ஆம் ஆண்டில், கியார், மஹா ஆகிய இரு புயல்கள் அரபிக் கடலில் ஒரே நேரத்தில் உருவானதை நினைவுகூர்ந்த அவர், "அதுபோன்ற நிகழ்வு வங்கக் கடல் மண்டலத்திற்குள் பதிவாவது அரிதான ஒன்று," என்று தெரிவித்தார். படக்குறிப்பு,திட்வா புயல் இலங்கையில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு இந்தப் புயல்கள் எங்கு உருவாயின என்பதுதான் இவற்றின் மீது மேலதிகமாக கவனம் செலுத்துவதற்கு காலநிலை ஆய்வாளர்களைத் தூண்டுகிறது. பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள கடல் பகுதிகளில் கோரியாலிஸ் ஆற்றல் மிகவும் பலவீனமாக இருக்கும் என்பதால், 5 டிகிரிக்கும் உள்ளே இருக்கும் பகுதிகளில் புயல் உருவாவது அரிதிலும் அரிது. புயல்கள் சுழல்வதற்குத் தேவையான ஆற்றலே கோரியாலிஸ் விளைவு என்றழைக்கப்படுகிறது. ஆனால், சென்யார், பூமத்திய ரேகைக்கு மிக அருகில், வடக்கே 4.9 டிகிரிக்கு அருகில் உருவானது. அங்கு உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், சென்யார் புயலாக உருவெடுத்து, இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் திட்வா புயலாக மாறியது. இந்தப் புயல் மெதுவாக நகர்ந்து வருவதால், நீண்டநேரம் நீடித்திருந்து, அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,Sri Lanka Airforce படக்குறிப்பு,இந்திய பெருங்கடல் பகுதி, உலகின் வேகமாக வெப்பமடையும் வெப்பமண்டல பெருங்கடல் என்று கூறப்படுகிறது. கடல் சூடாவதே அசாதாரண புயல்கள் உருவாகக் காரணமா? ஹைதராபாத்தில் உள்ள பார்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் பப்ளிக் பாலிசியின் ஆராய்ச்சி இயக்குநரும் காலநிலை விஞ்ஞானியுமான பேராசிரியர் அஞ்சல் பிரகாஷின் கூற்றுப்படி, புயல் அசாதாரணமாக பூமத்திய ரேகைக்கு அருகிலேயே உருப்பெறுவது ஒரு தற்செயலான நிகழ்வு இல்லை. "காலநிலை மாற்றத்தால் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் பூமத்திய ரேகைக்கு அருகிலும் கடல் நீர் சூடாகி, புயல் உருவாவதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்கத் தொடங்கியுள்ளது." "கடல் மேற்பரப்பின் வெப்பநிலை 28 முதல் 30 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு சூடாக இருந்தால் அங்கு புயல் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கு முன்பு புயல் உருவாகாத பகுதிகளிலும்கூட வெப்பநிலை இந்த அளவுக்கு உயரும்போது, அது நிலைமையை மாற்றுகிறது," என்று விளக்கினார் அஞ்சல் பிரகாஷ். கடந்த சில தசாப்தங்களில் வங்கக் கடல், அரபிக் கடல் என இரண்டுமே கணிசமாக வெப்பமடைந்துள்ளதாகக் கூறுகிறார் அவர். மேலும், "கடல் மேற்பரப்பின் வெப்பநிலை பல பகுதிகளில் 0.5 டிகிரி செல்சியஸ் முதல் 1.4 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. கடல் பரப்பில் வெப்ப அலைகள் தோன்றுவதும் அவை நீடிக்கும் காலமும் அதிகரித்துள்ளது," என்றும் பேராசிரியர் அஞ்சல் பிரகாஷ் சுட்டிக்காட்டுகிறார். பட மூலாதாரம்,Sri Lanka Airforce படக்குறிப்பு,புயலின் தன்மையை அடிப்படையாக வைத்து பேரிடர் மேலாண்மை தொடர்பான திட்டங்களை வகுப்பதைச் சவாலாக்குகிறது. இந்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் தரவுகள்படி, 1951 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் பத்து ஆண்டுகளுக்கு 0.15 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இந்திய பெருங்கடலின் வெப்பநிலை உயர்ந்து வந்துள்ளது. 1982 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் வங்கக் கடலில் மட்டும் 94 கடல் வெப்ப அலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இந்தப் போக்கு, புயல்கள் மற்றும் பருவநிலைகளை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறும் பேராசிரியர் அஞ்சல் பிரகாஷ், இதனால் அவற்றைக் கணிப்பதிலும் சவால்கள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார். 'திட்வா புயல் மெதுவாக நகர்வதே காரணம்' ஆனால், அனைத்து நிபுணர்களும் சமீபத்திய தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என்ற கருத்துடன் உடன்படவில்லை. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் முனைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா, பிபிசி தமிழிடம் பேசியபோது, சென்யார் மற்றும் திட்வா புயல் ஒரே காலகட்டத்தில் உருவானது ஒரு தற்செயலான நிகழ்வுதான் என்று குறிப்பிட்டார். அதோடு, "புயல் உருவாவதை வெப்பநிலை தவிர வேறு பல காரணிகளும் தீர்மானிக்கின்றன. வங்கக் கடல் இயற்கையாகவே தீவிர புயல்கள் உருவெடுக்கக் கூடிய கடல் பகுதியாகும். அத்தகைய பகுதியில், புயல்களின் எண்ணிக்கையும் தீவிரமும் எந்த வகையிலும் அதிகரித்துவிடவில்லை" என்று அவர் தெரிவித்தார். அவரது கூற்றுப்படி, சென்யாரும் திட்வாவும் ஒப்பீட்டளவில் குறைந்த தீவிரம் கொண்ட புயல்களே. "இலங்கை மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் திட்வா பெருமளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக் காரணம், அது மெதுவாக நகர்வதுதான். அது மெல்ல நகர்வதாலும், அதிக நேரம் புயல் நீடிப்பதாலும், மழைப் பொழிவு தீவிரமாக உள்ளது," என்று குறிப்பிட்டார் முனைவர் மொஹபத்ரா. படக்குறிப்பு,புயல் மற்றும் கனமழையுடன், வெள்ளப் பேரிடர்களும் நிலச்சரிவுகளும் சேர்ந்து வருவதால், கிழக்கு மற்றும் மேற்குக் கடலோரங்களில் உள்ள பல மாவட்டங்களில் காலநிலை தணிப்பு மற்றும் தகவமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினமாகிறது. வானிலையை கணிப்பதில் ஏற்படும் சிக்கல் புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுப்படி, ஒரு காலத்தில் ஒப்பீட்டளவில் அமைதியானதாகக் கருதப்பட்ட அரபிக் கடலில், 1980களில் இருந்து தீவிர புயல்கள் தோன்றுவது 150% அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், வங்கக் கடல் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான வெப்பநிலை பதிவாகி வருகிறது. உதாரணமாக ஆம்பன் புயல் உருவானபோது வங்கக் கடலில் 32-33 டிகிரி செல்ஷியஸ் வரையிலான வெப்பநிலை நிலவியது. அதாவது, "ஒரு காலத்தில் உச்சகட்ட பருவமழை மற்றும் பருவமழைக்குப் பிந்தைய மாதங்களில் மட்டுமே இருந்த நிலைமை இப்போது ஏப்ரல் முதல் டிசம்பர் வரை நிலவுகின்றன. இதனால் புயல்கள் தோன்றக்கூடிய காலகட்டங்களும் மாறுகின்றன," என்று கூறுகிறார் அஞ்சல் பிரகாஷ். அவரது கூற்றுடன் உடன்படும் வகையில் பேசிய, இந்திய வெப்பமண்டல வானியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த காலநிலை விஞ்ஞானி முனைவர் ராக்ஸி மேத்யூ கோல், இந்தியாவின் வானிலை கணிக்க முடியாததாக மாறி வருவதாகக் கூறுகிறார். "புவி வெப்பமடைவதில் 93 சதவிகிதத்திற்கும் அதிகமான வெப்பத்தை பெருங்கடல்கள் உறிஞ்சிக் கொள்கின்றன. இந்தியா மூன்று பக்கங்களிலும் வேகமாகச் சூடாகி வரும் இந்திய பெருங்கடலால் சூழப்பட்டுள்ளது. அந்தச் சூடான கடல் பரப்பில் நிலவும் வெப்பக் காற்று, ஈரப்பதத்தை அதிகமாகத் ஈர்த்துக் கொள்ளும். இதனால் நீண்ட காலம் மழை பெய்யாமல் இருக்கும். எனவேதான், மழை பெய்யும் காலகட்டத்தில், அது லேசான, பரவலான மழைப்பொழிவாக இல்லாமல், குறுகிய, மிகத் தீவிரமான கனமழையாக இருக்கிறது," என்று விளக்கினார் முனைவர் ராக்ஸி. அதோடு, இதே கடல் வெப்பம்தான், இந்திய பெருங்கடல் பகுதிகளில் புயல்களையும் தீவிரப்படுத்தி, அவை நீண்ட காலம் நீடிக்கவும், வேகமாகத் தீவிரமடையவும் வழிவகுப்பதாகத் தெரிவித்தார் அவர். கடலோரப் பகுதிகளுக்கு காத்திருக்கும் ஆபத்து புயல் மற்றும் கனமழையுடன், வெள்ளப் பேரிடர்களும் நிலச்சரிவுகளும் சேர்ந்து வருவதால், கிழக்கு மற்றும் மேற்குக் கடலோரங்களில் உள்ள பல மாவட்டங்களில் காலநிலை தணிப்பு மற்றும் தகவமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினமாகிறது. அதோடு, ஒவ்வொரு ஒரு டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை உயர்வும் புயலின் தீவிரம் பத்து மடங்கு அதிகரிக்க வழிவகுப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலநிலை விஞ்ஞானிகளை கவலையடைச் செய்யும் விஷயமும் இதுதான். பேராசிரியர் அஞ்சல் பிரகாஷ் கூற்றுப்படி, "கடல் வெப்ப அலைகள் 2050ஆம் ஆண்டுக்குள், 'ஆண்டின் மூன்றில் இரண்டு பங்கு' காலத்திற்கு நீடிக்கலாம். அதன் காரணமாக, சென்யார், திட்வா போன்று ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாவது பொதுவான வானிலை நிகழ்வாகிவிடக் கூடும்." இதனால், புயல்களின் தாக்கங்களுக்கு நடுவில், "மீட்புக்குத் தேவைப்படும் கால அளவு" சுருங்கக்கூடிய ஆபத்து இருப்பதாக எச்சரிக்கிறார் அவர். குறிப்பாக, ஒரு புயலை எதிர்கொண்டு சமாளிக்கும் நேரத்திற்குள், மக்கள் மற்றுமொரு புயலின் தாக்கத்தையும் எதிர்கொள்ள நேர்ந்தால், அதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வது சவாலாகிவிடும் என்கிறார் அஞ்சல் பிரகாஷ். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு, மாறி வருகின்ற இந்த சூழல் மிகப்பெரிய சவால்களை ஏற்படுத்துகின்றன, அதற்கு திட்வா மிகச் சமீபத்திய சான்றாக விளங்குகிறது என்றார் அவர். தெற்காசியாவில் மோசமான வானிலை நிகழ்வுகள், மிகவும் முக்கியமான காலகட்டத்தில் நடந்துள்ளன. ஐ.நா.வின் 30வது காலநிலை உச்சி மாநாட்டில் இந்தியா தனது புதுப்பிக்கப்பட்ட காலநிலை வாக்குறுதிகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடலோரப் பாதுகாப்பு, நகர்ப்புற வெள்ளப் பேரிடர் மேலாண்மை, தாங்குதிறன் மிக்க உள்கட்டமைப்பு போன்ற காலநிலை தகவமைப்பு நடவடிக்கைகள் குறித்த தெளிவு இந்தியாவிடம் இன்னும் குறைவாகவே இருப்பதாகக் கூறுகிறார் அஞ்சல் பிரகாஷ். உறுதியான தகவமைப்புத் திட்டங்கள் இல்லாமல், கிழக்குக் கடற்கரைகளின் பாதிப்புகளை இந்தியா எதிர்கொள்வதாக எச்சரிக்கும் அவர், போதுமான, நீண்டகாலத் திட்டமிடலின்றி இலங்கையும் தொடர்ந்து காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்வதாகத் தெரிவித்தார். மேற்கொண்டு பேசிய அவர், "இந்தியா தனது நீண்டகால இலக்குகளை அடைய சுமார் 21 டிரில்லியன் டாலர் காலநிலை நிதி தேவை என்று சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால், தெளிவான திட்டத்தை முன்வைக்காத காரணத்தால், அதுகுறித்த விவாதங்களில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது." என்று குறிப்பிட்டார். இந்தியா, இலங்கை இடையிலான முன்னெச்சரிக்கை ஒத்துழைப்பு மேம்பட்டுள்ளதாகக் கூறிய அஞ்சல் பிரகாஷ், "இரு நாடுகளும் தொடர்ந்து பேரிடர்களைச் சந்திக்கின்றன. அவை கணிக்க முடியாதவையாக, கடுமையானவையாக இருக்கின்றன. ஆகவே அதற்கேற்ற பேரிடர் மேலாண்மை மற்றும் முன்னெச்சரிக்கை கட்டமைப்புகளை இரு நாடுகளும் மேம்படுத்த வேண்டியது அவசியம்," என்று விளக்கினார். அவரது கூற்றுப்படி, சென்யார் மற்றும் திட்வா புயல்கள் ஒரே நேரத்தில் தோன்றியது, கடல் நிலைமைகள் மாறிக் கொண்டிருப்பதன் அறிகுறி. உலகில் வேகமாகச் சூடாகி வரும் வெப்பமண்டல கடல் பரப்பில் இருக்கும் இந்தியா மற்றும் இலங்கையின் புதிய யதார்த்தம் இதுதான் என்கிறார் அஞ்சல் பிரகாஷ். அவரைப் பொருத்தவரை, சென்யார் மற்றும் திட்வாவின் கதை இரண்டு புயல்களைப் பற்றியது மட்டுமல்ல. அது மாறி வரும் ஒரு பெருங்கடலின் தன்மை மற்றும் அதன் விளைவாக, இந்த நாடுகளின் கடலோரப் பகுதிகளில் எதிர்காலத்தில் மேலதிகமாக பாதிக்கப்படக் கூடிய நிலையில் வாழ்ந்து வரும் கோடிக்கணக்கான மக்களைப் பற்றியது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g9w1wvy35o
  14. யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை Nov 30, 2025 - 12:10 PM யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் கடும் மழைக்கு மத்தியில், இளைஞன் ஒருவன் வன்முறைக் கும்பலால் மிகக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளான். திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று (30) காலை வேளையில் இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: கொக்குவில் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இதற்கமைய, இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்ட பின்னர், தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் ஆடியபாதம் வீதி ஊடாகத் தனது வீடு நோக்கிப் பயணித்துள்ளார். அப்போது, பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில், திருநெல்வேலி சந்தியை அண்மித்த பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் அவர்களின் மோட்டார் சைக்கிளை வழிமறித்துள்ளது. அவர்கள் பின்னால் அமர்ந்து பயணித்த இளைஞன் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டனர். தாக்குதலாளிகளிடமிருந்து உயிரைக் காத்துக்கொள்ள, வாள்வெட்டுக் காயங்களுடன் வீதியில் சுமார் 50 மீற்றர் தூரம் ஓடிச் சென்றவரை, அக்கும்பல் துரத்திச் சென்று வெட்டியுள்ளது. ஓடிச் சென்றவர் வர்த்தக நிலையமொன்றின் முன்பாக விழுந்தபோது, துரத்தி வந்த நால்வரும் சரமாரியாக வெட்டியதில், இளைஞனின் கால் ஒன்று கணுக்காலுடன் துண்டிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு, நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், வைத்தியசாலையில் அந்த இளைஞன் உயிரிழந்துள்ளான். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். முன்விரோதம் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கெமராக்களில் (CCTV) சம்பவங்கள் பதிவாகியுள்ளதால் சந்தேகநபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmilcpimo0272o29nmzlmzydi
  15. இலங்கையை விட்டு முழுவதுமாக விலகிச் சென்ற 'டித்வா' Nov 30, 2025 - 06:27 AM "டித்வா" புயலானது நேற்று (29) இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே சுமார் 130 கி.மீ தொலைவில் (அகலாங்கு 10.7°N மற்றும் நெட்டாங்கு 80.6°E இற்கு அருகில்) மையங்கொண்டிருந்தது. இந்தத் தொகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணித்தியாலங்களில் இந்தியாவின் தமிழ்நாட்டு கடற்கரைக்குச் சமாந்தரமாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, நிலவும் மழையுடனான வானிலை இன்று (30) முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் மிக பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://adaderanatamil.lk/news/cmil0gz81026fo29nxfcmrnyq
  16. மன்னார் வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன; கால்நடை வளர்ப்போர் வாழ்வாதாரம் பாதிப்பு Published By: Digital Desk 1 30 Nov, 2025 | 08:45 AM மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மாவட்டத்தின் பல பகுதிகளிலில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நானாட்டான், மடு, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆடு, மாடு உள்ளடங்களாக ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. குறிப்பாக நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அவர்களினால் இயன்றளவிற்கு வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட கால் நடைகளை காப்பாற்றி படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்து காப்பாற்றி உள்ளனர். மேலும் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்பதோடு பிரதான பாதைகள்; மூழ்கியுள்ளன. இதனால் மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி, மன்னார் - மதவாச்சி பிரதான வீதிகளின் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளது. மேலும் மடு, மாந்தை மேற்கு, நானாட்டான், முசலி ஆகிய பகுதிகளிலுள்ள வீதிகளும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. இதனால் மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் தொடர்புகள் இல்லாத நிலையில் மரங்களிலும், கூரைகளிலும் தஞ்சமடைந்துள்ளவர்களை ஹெலிகப்டர் மூலம் மீட்கும் பணிகள் இன்றையதினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232000
  17. Published By: Digital Desk 1 30 Nov, 2025 | 07:32 AM கொட்டுகோட பகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக கொட்டுகோட 220/132/33kV மின் இணைப்புக்கான துணை மின்நிலையம் தற்காலிகமாக செயல்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழையால் சுற்றியுள்ள வெள்ள நீர் வேகமாக உயர்ந்து, துணை மின்நிலைய வளாகம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நேற்று (29) சனிக்கிழமை மாலை நிலவரப்படி, நீர் மட்டம் கட்டுப்பாட்டுப் பலகை அளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய நிலைமை மோசமாக உள்ளதால், இலங்கை மின்சார சபையின் கொட்டுகோட மின் இணைப்புபின் துணை மின்நிலையத்தை பாதுகாப்பாக துண்டித்து அணைத்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு, தளத்தில் உள்ள ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் முக்கியமான மின் உட்கட்டமைப்பின் பாதுகாப்பிற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் குழுக்கள், நிலைமையை கண்காணித்து வருவதுடன், நீர் மட்டம் குறைந்து துணை மின்நிலையம் செயல்பாட்டிற்கு பாதுகாப்பானதா என்று சரிபார்க்கப்பட்டவுடன் மின் மறுசீரமைப்பு ஆரம்பிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231993
  18. கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (இக்கட்டுரையில் உள்ள விவரங்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.) ''தாய் ஒருவர் அவருடைய 8 மாத குழந்தையை அரவணைத்தபடியே இறந்திருந்தார்.'' என்கிறார் வி.கே.முத்துகிருஸ்ணன். இலங்கையின் கண்டி - சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 23 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் நான்கு சிறார்களும் அடங்குவதாகவும் அங்குள்ள மக்கள் பிபிசி தமிழுக்கு தெரிவித்தனர். இந்த மண்சரிவு சம்பவம் நேற்று முன்தினம் (27) இரவு ஏற்பட்டது. சரசவிகம - ஹதபிம பகுதியில் சுமார் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 6 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு பெய்த கடும் மழையுடனான வானிலையின் போது, இந்த பகுதியிலுள்ள வீடொன்று மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளது. இந்த செய்தியை அறிந்த பிரதேச இளைஞர்கள் உள்ளிட்ட பலர் குறித்த வீட்டை அண்மித்து மீட்பு பணிகளை ஆரம்பித்த தருணத்தில் அந்த பகுதியில் மீண்டும் பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ராணுவத்தின் உதவியுடன் தேடல் இந்த மண்சரிவில் அப்பகுதியிலிருந்த ஏனைய வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டதுடன், காப்பாற்றுவதற்காக விரைந்த இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் மண்ணுக்குள் புதையுண்டனர். பிரதேச இளைஞர்கள் உள்ளிட்ட பலர் நேற்றைய தினம் மேற்கொண்ட தேடுதல்களில் 9 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், இன்றைய தினம் 5 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை மண்ணுக்குள் புதையுண்ட 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனையோரின் உடல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட உடல்கள் கிராம சேவை உத்தியோகத்தரின் கண்காணிப்பில் புதைக்கப்பட்டன. ஏனையோரை தேடும் பணிகளுக்காக ராணுவத்தினர் இன்று வரவழைக்கப்பட்டு, மாலை முதல் தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டன. அப்பகுதியில் ஆறொன்று ஊடறுத்து செல்கின்றமையினால், மீட்பு பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது. படக்குறிப்பு,வி.கே.முத்துகிருஸ்ணன் மண்சரிவு ஏற்பட்ட இடத்திலுள்ள வீடொன்றின் உரிமையாளரான வி.கே.முத்துகிருஸ்ணன், முதல் வீட்டில் மண்சரிவு ஏற்பட்டதை அடுத்து, ஏனைய இளைஞர்களுக்கு தகவலை வழங்கியுள்ளார். உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக சற்று மேலே வந்த தருணத்திலேயே அவருடைய வீட்டுக்கு கீழுள்ள அனைத்து வீடுகளும் மண்ணுக்குள் புதையுண்டுள்ளன. இறுதி நொடியில் தப்பித்த தருணம் இறுதி நொடியிலேயே தான் தப்பித்ததாக வி.கே.முத்துகிருஸ்ணன் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார். ''மண்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்த குடும்பங்களுடன் காப்பாற்ற போன இளைஞர்களும் இறந்து விட்டார்கள். முதல் வீட்டை காப்பாற்றுவதற்காகவே அவர்கள் சென்றார்கள். மண்சரிவு ஏற்பட்ட முதல் வீட்டிலுள்ளவர்களை காப்பாற்றும் போது, மறுபடியும் மண்சரிவு வந்தது. பாரிய சத்தத்துடன் மண்சரிவு வந்தது. எனக்கு தெரிந்தளவில் 23 பேர் அந்த இடத்தில் இருந்தனர். குழந்தைகள் உள்ளிட்ட பலர் இருந்தனர். ஐந்து குடும்பங்கள் அந்த இடத்தில் இருந்தது. என்னுடைய வீட்டோடு சேர்ந்து 6 குடும்பங்கள். குறிப்பிட்டளவு உடல்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. இன்னும் பலரை தேட வேண்டியுள்ளது. இனிமேல் நாங்கள் அந்த இடத்தில் இருக்க மாட்டோம். அந்த இடத்திலுள்ள மக்களுக்கு நிரந்தர இடமொன்றை அரசாங்கம் வழங்க வேண்டும்'' என குறிப்பிட்டார். உதவ சென்றவர் உயிரிழந்த சோகம் படக்குறிப்பு,மண்சரிவில் உறவினரை இழந்த உஷா தனது மைத்துனனை இழந்த சரசவிகம பிரதேசத்தைச் சேர்ந்த உஷா, ''சரியான மழை. அப்போது இரண்டு பேர் வந்து, பிள்ளைகள் எல்லாம் தத்தளித்துக்கொண்டு இருக்கின்றனர் என மைத்துனரிடம் சொன்னார்கள். போய் உதவி செய்வோம் என்று மைத்துனர் அழைத்தார். நாங்கள் போக வேண்டாம் என கூறினோம். ஆனாலும் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். அதற்கு பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவரை பற்றிய தகவலே கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலையில் தான் தெரியும் இப்படியான சேதம் நடந்திருக்கிறது என்று. அவருடைய உடல் கிடைத்தது.'' என கண்ணீருடன் தெரிவித்தார். 'காப்பாற்ற சென்றவர் உயிருடன் இல்லை' படக்குறிப்பு,தனது சகோதரனின் மகனை இழந்த பாக்கியராஜா தனது சகோதரனின் மகனை இழந்த பாக்கியராஜாவும், '' அவர் என்னுடைய அண்ணாவின் மூன்றாவது மகன். அவருக்கு கல்யாணம் முடிந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. அவர் தொழில் செய்துவிட்டு வரும்போது, இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஒரு பிள்ளையை தூக்கி வந்து வீடொன்றில் விட்டுவிட்டு, வீட்டில் அம்மாவிடம் சொல்லியிருக்கின்றார். மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிவிட்டு வருகின்றேன் என்று சொல்லி இன்னுமொரு முறை போயிருக்கின்றார். அப்படி சென்றவர் மண்சரிவில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.'' என குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cde69885rk6o
  19. சீரற்ற வானிலை காரணமாக யாழ்ப்பாணத்தின் முழுமையான பாதிப்பு! 29 Nov, 2025 | 08:46 PM நிலவுகின்ற அசாதாரண வானிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6288 குடும்பங்களை சேர்ந்த 19 ஆயிரத்து 919 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிபலிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தின் பாதிப்புகள் குறிப்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 432 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு வீடுகள் பகுதிகளில் சேதமடைந்துள்ளன. நான்கு பாதுகாப்பான இடங்களில் 60 குடும்பங்களை சேர்ந்த 186 தங்க வைக்கப்பட்டுள்ளனர். சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 1664 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 521 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. மூன்று பாதுகாப்பு மையங்களில் 27 குடும்பங்களை சேர்ந்த 92 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஊர்க்காவல்துறை பிரதேச செயலர் பிரிவில் 229 குடும்பங்களைச் சேர்ந்த 760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 222 குடும்பங்களைச் சேர்ந்த 699 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது. ஒரு பாதுகாப்பு மையத்தில் 47 குடும்பங்களை சேர்ந்த 166 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வேலனைப் பிரதேச செயலர் பிரிவில் 328 குடும்பங்களை சேர்ந்த 1035 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 வீடுகளும் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன. மூன்று பாதுகாப்பு மையங்களில் 162 குடும்பங்களைச் சேர்ந்த 420 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 335 குடும்பங்களை சேர்ந்த 1085 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 13 வீடுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. ஆறு பாதுகாப்பு மையங்களில் 66 குடும்பங்களை சேர்ந்த 393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 251 குடும்பங்களைச் சேர்ந்த 802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வீடுகள் முழுமையாகவும் 14 வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளன. பாதுகாப்பு மையம் ஒன்றில் 48 குடும்பங்களைச் சேர்ந்த 180 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காரைநகர் பிரதேச செயலப்பிரிவில் அறுபது குடும்பங்களை சேர்ந்த 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. பாதுகாப்பு மையம் ஒன்றில் ஆறு குடும்பங்களை சேர்ந்த 18 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 508 குடும்பங்களைச் சேர்ந்த 1621 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 57 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 57 குடும்பங்களை சேர்ந்த 185 பேர் பாதிக்கப்பட்ட உள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீடு ஒன்றும் அடிப்படைக் கட்டமைப்பு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. தெல்லிப்பழைப் பிரதேச செயலர் பிரிவில் 601 குடும்பங்களை சேர்ந்த 2042 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் 1183 குடும்பங்களை சேர்ந்த 3526 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். ஒரு வீடு முழுமையாகவும் ஒன்பது வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளன. ஐந்து அடிப்படைக் கட்டமைப்புகள் முழுமையாகவும் இரண்டு அடிக்கடி கட்டமைப்புகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. இரண்டு பாதுகாப்பு மையங்களில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 217 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 58 குடும்பங்களை சேர்ந்த 192 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். ஒன்பது வீடுகள் பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளதுடன் ஒரு அடிப்படைக் கட்டமைப்பும் சேதமடைந்துள்ளது. ஒரு பாதுகாப்பு மையத்தில் எட்டு குடும்பங்களை சேர்ந்த 29 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் ஏழு குடும்பங்களை சேர்ந்த 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 353 குடும்பங்களை சேர்ந்த 1104 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இரண்டு பாதுகாப்பு மையங்களில் 95 குடும்பங்களை சேர்ந்த 255 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/231969
  20. மட்டக்களப்பில் 166.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு 29 Nov, 2025 | 08:45 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வந்த பலத்த மழை சனிக்கிழமை (29) ஓயந்துள்ளது. எனினும் தொடர்ந்து வெள்ள நிலமை காணப்படுகின்றன. எது எவ்வாறாயிருப்பினும், மட்டக்களப்பு முகத்துவாரம், மற்றும் பெரியகல்வாறு ஆற்றுவாய் எனபன வற்றினூமாக மிக வேகமாக வெள்ளநீர் கடலை நோக்கிப் பாய்ந்து வருகின்றது. இன்றிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறிய நீர்ப்பாசனக் குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றது. அதபோல் பெரிய நீர்ப்பாசனக் குளங்களாகவுள்ள வாகனேரிக் குளத்தின் நீர்மட்டம 19 அடி 7 அங்குலம், உறுகாமம் 16 அடி 3 அங்குலம், உன்னிச்சைக்குளத்தின் நீர்மட்டம் 29 அடி 6 அங்குலம், நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 29 அடியாக உயர்ந்துள்ளதாகவும் உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இது இவ்வாறு இருக்க இவ்வருடம ஆரம்பத்திலிருந்து சனிக்கிழமை (29) காலை 8.30 மணிவரையில் 166.7 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. எனினும் இம்முறை செய்கை பண்ணப்பட்டிருந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில் பல ஆயிரக்கணக்கான நெல்வயல் நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளன. இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,994 குடும்பங்களைச் சேர்ந்த 30,443 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட அனர்த்த முன்னாயத்த பிரிவு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231968
  21. பாகிஸ்தானுடனான இறுதிப் போட்டியில் 114 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை 29 Nov, 2025 | 09:04 PM (நெவில் அன்தனி) ராவல்பிண்டியில் தற்போது நடைபெற்றுவரும் பாகிஸ்தானுக்கு எதிரான மும்முனை சர்வதேச ரி20 கிரக்கெட் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 114 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஷீஹீன் ஸா அப்றிடி, மொஹம்மத் நவாஸ், அப்ரார் அஹ்மத் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளில் இலங்கை வீரர்களில் ஒருவரைத் தவிர மற்றையவர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். காமில் மிஷாரவின் சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடன் இலங்கை அணி 10.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 83 ஓட்டங்களைப் பெற்ற ஓரளவு பலமான நிலையில் இருந்தது. ஆனால், குசல் மெண்டிஸின் ஆட்டம் இழப்புடன் 52 பந்துகளில் எஞ்சிய 9 விக்கெட்களை 31 ஓட்டங்களுக்கு இலங்கை இழந்தது. காமில் மிஷார 2 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். அவரைவிட குசல் மெண்டிஸ் 14 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 11 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைத் தொடவில்லை. காமில் மிஷாரவும் குசல் மெண்டிஸும் 2ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். உதிரிகளாக 13 ஓட்டங்கள் கிடைத்தது. பந்தவீச்சில் மொஹம்மத் நவாஸ் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷஹீன் ஷா அப்றிடி 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அப்ரார் அஹ்மத் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 115 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் தற்போது பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வருகிறது. https://www.virakesari.lk/article/231978
  22. 29 Nov, 2025 | 04:33 PM "திட்வா" சூறாவளி மற்றும் களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்ததால் கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று சனிக்கிழமை (29) மாலை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். போமிரியா கனிஷ்ட வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களையும் பிரதமர் சந்தித்தார். இடம்பெயர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் குறைபாடுகளை ஆய்வு செய்த பிரதமர், உணவு, சுகாதார உபகரணங்கள் உட்பட அத்தியாவசியத் தேவைகளை விரைவாக வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை மேற்பார்வையிட்டார். தற்போது ஏற்பட்டுள்ள தேசிய அனர்த்தத்தைப் புரிந்துகொண்டு, இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் அவர்களைப் பாதுகாப்பதில் அயராது உழைக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர்களான எரங்க குணசேகர, சதுரங்க அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், கொழும்பு மாவட்டச் செயலாளர், கொலன்னாவ பிரதேச செயலாளர், நகர பிதா உட்பட அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/231944
  23. அலவத்துகொடை பகுதியில் பாரிய மண்சரிவு - சுமார் 20 குடும்பங்கள் மண்சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்! 29 Nov, 2025 | 04:50 PM கண்டியில் அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரம்புக்கே ஆறு பகுதியில் இன்று சனிக்கிழமை (29) பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் சுமார் 20 குடும்பங்கள் இருந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் மண்சரிவில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/231949
  24. டிட்வா புயலின் உள்வளையத்தின் பின்பகுதி கடலுக்கு செல்கின்றது - அடுத்த கட்டங்கள் எப்படி அமையும்! Published By: Priyatharshan 29 Nov, 2025 | 04:08 PM டிட்வா புயல் 29.11.2025 சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணி நிலைவரப்படி, புயலின் மையத்தின் பின்பகுதி தற்போது நிலத்திலிருந்து கடலுக்குள் சென்றது. புயலின் மையம் எப்போதும் அமைதியானது. அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. டிட்வா புயலின் உள்வளையத்தின் பின்பகுதி கடலுக்கு செல்கின்றது. அதன் விளைவே தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்கள் பெற்றுக்கொள்ளும் சற்று கனமான மழை. இந்த மிதமான அல்லது சற்று கனமான மழை நாளை காலை வரை தொடரும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். அத்தோடு வடக்கு மாகாணத்தில் இந்த புயல் முழுவதும் கடலைச் சென்றடையும் வரை காற்று சற்று வேகமாக வீசும் ( மணிக்கு 40-60 கி.மீ.) என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே காற்று வேகத்தால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். ஒரு புயலின் மிக ஆபத்தான பகுதி உள்வளையமே. வலுவான காற்றையும், அடர்த்தியான ஈரப்பதன் மிக்க முகில்களையும் கொண்ட உள்வளையமே புயலின் மிக ஆபத்தான பகுதி. அது நீர்ப் பகுதியிலிருந்து நிலப்பகுதிக்குள் வரும்போதும், நிலப்பகுதியிலிருந்து நீர்ப் பகுதிக்கு செல்லும்போதும் அமைதியாக செல்லாது. இதுவே இலங்கை முழுவதும் இந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இன்று இரவு இதன் வெளிவளையமும் வெளியேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மழை குறைந்தாலும் குளங்களுக்கான நீர்வரத்து அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகமாகவே இருக்கும். ஆகவே வடக்கு மாகாணத்தின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்தும் அவதானமாக இருப்பது அவசியம். இந்த புயல் இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் நிலவும் என்பதனால் வடக்கு, வட மேற்கு, கிழக்கு கடற்பகுதிகள் தொடர்ந்தும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என நாகமுத்து பிரதீபராஜா மேலும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/231942
  25. கொத்மலை ரம்பொடை பகுதியில் மண்சரிவு : 14 பேர் உயிரிழப்பு Published By: Digital Desk 1 29 Nov, 2025 | 03:04 PM நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கொத்மலை ரம்பொடை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒரு குழுவினர் காயமடைந்துள்ளதாகவும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. கொத்மலை பொலிஸார் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/231923 குருணாகல் - அலவ்வ பகுதியில் பாரிய மண்சரிவு! 29 Nov, 2025 | 02:02 PM குருணாகல் - அலவ்வ பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவில் சிக்கி சுமார் 22 பேர் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகிறது. மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. https://www.virakesari.lk/article/231924 அரநாயக்க மண்சரிவு; குழந்தைகள் உட்பட 120 பேர் மண்சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்! 29 Nov, 2025 | 03:36 PM கேகாலை - அரநாயக்க பகுதியில் இன்று சனிக்கிழமை (29) மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவில் 20 குழந்தைகள் உட்பட 120 பேர் சிக்கியுள்ளனர். மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/231938

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.