Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    22997
  • Joined

  • Last visited

  • Days Won

    16

Everything posted by ஏராளன்

  1. டி20 உலகக் கோப்பை 2022: உலகக்கோப்பை கனவை நனவாக்குமா இந்தியா? பாகிஸ்தானுக்கு வாய்ப்பு எப்படி இருக்கிறது? அஷ்ஃபாக் பிபிசி தமிழ் 6 நவம்பர் 2022 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமையுடன் சூப்பர் 12 ஆட்டங்கள் முடிவடைந்து அரையிறுதியில் மோதப் போகும் அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. முதல் அரையிறுதி ஆட்டம் சிட்னி மைதானத்தில் வரும் 9ம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது. இதில் குரூப் 1 பிரிவில் முதலிடம் பிடித்த நியூசிலாந்தும் குரூப் 2 பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த பாகிஸ்தானும் மோதுகின்றன. மறுநாள், அதாவது 10ம் தேதி வியாழக்கிழமை அடிலைட் மைதானத்தில் 2வது அரையிறுதி நடைபெறுகிறது. இதில் குரூப் 2 சுற்றில் முதலிடம் பிடித்த இந்தியாவும் குரூப் 1 சுற்றில் இரண்டாம் இடம் பிடித்த இங்கிலாந்தும் விளையாடுகின்றன. இங்கிலாந்து அணி எப்படி? நடப்பு டி20 தொடரில் இங்கிலாந்து அணி 5 போட்டிகளில் விளையாடியது. இதில் நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. அயர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பான கம்பேக்கை கொடுத்தது. இதுதவிர, ஆஸ்திரேலியா உடனான ஆட்டம் மழையால் ரத்தானது. இந்த தொடரில் இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக அலெக்ஸ் ஹேல்ஸ் 4 போட்டிகளில் விளையாடி 125 ரன்களையும், ஜாஸ் பட்லர் 119 ரன்களையும் சேர்த்துள்ளனர். இது இந்தியாவுடன் ஒப்பிடும்போது மிக மிக குறைவு. டேவிட் மாலன் பேட்டிங்கில் கணிசமான ரன்களை சேர்க்கிறார். ஆனால் அவர் தற்போது காயத்தால் அவதிப்பட்டு வருவது அணிக்கு பின்னடைவை தந்துள்ளது. அரையிறுதியில் அவர் விளையாடாத பட்சத்தில் அது இந்தியாவுக்கு சாதகமாக அமையக்கூடும். பந்துவீச்சில் சாம் கரண் இந்த தொடரில் 10 விக்கெட் வீழ்த்தி மிரட்டியிருக்கிறார். மார்க் உட் 9 விக்கெட்களை இதுவரை சாய்த்துள்ளார். இதுதவிர பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் பங்களிப்பு செய்வார். இங்கிலாந்தை மிரட்டிய அந்த 2 வீரர்கள் இங்கிலாந்துக்கு இந்திய அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது மூன்று டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் 2 - 1 கணக்கில் இந்தியா தொடரையும் வென்று திரும்பியது. இதில் கவனிக்கப்பட வேண்டியது சூர்யகுமாரும் புவனேஸ்வர் குமாரும்தான். கடைசி டி20 ஆட்டத்தில் டேவிட் மாலன் அதிரடியால் இங்கிலாந்து 215 ரன்களை சேர்த்தது. அதிரடி காட்டிய சூர்யகுமார்; 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற இந்திய அணி இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியில் ராகுல் டிராவிட்டின் பங்கு என்ன? இந்தியா இந்த போட்டியை தோற்றிருந்தாலும் சூர்யகுமாரின் ஆட்டம் சற்று ஆறுதலை தந்தது. இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்து 55 பந்துகளில் 117 ரன்கள் விளாசினார் சூர்யகுமார். தற்போது அவர் நல்ல ஃபாமில் இருப்பது நிச்சயம் இங்கிலாந்துக்கு அச்சுறுத்தலை தரும். இதேபோல அந்த தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றவர் புவனேஸ்வர் குமார். துல்லியமான பந்துவீச்சால் இங்கிலாந்து பேட்டிங்கை திணறடித்தது கவனிக்கத்தக்கது. ஜொலிக்கும் கோலி, சூர்யகுமார்; ஆனால்.. விராட் கோலி - சூர்யகுமார் யாதவ் இருவருமே அற்புதமான ஃபார்மில் வலம் வருகின்றனர். இதுவரை 5 போட்டிகளில் விளையாடி இருவரும் தலா 3 அரைசதங்களை விளாசியுள்ளனர். நடப்பு தொடரில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 246 ரன்களுடன் கோலி முதலிடமும் 225 ரன்களுடன் சூர்யகுமார் 2ம் இடமும் வகிக்கினறனர். ஆசிய கோப்பை தொடரில் கோலி சதம் விளாசிய பிறகு அவர் பேட்டிங் திறன் அபாரமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நடப்பு தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் கோலி பெற்றுக்கொடுத்த வெற்றி பலருக்கும் நம்பிக்கை அளித்திருக்கிறது. கோலி - சூர்யகுமார் இருவருமே இங்கிலாந்தை அச்சுறுத்த காத்திருப்பார்கள். இருப்பினும் அவர்கள் இருவரை மட்டுமே இந்திய அணி சார்ந்திருக்க முடியாது. இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES "பேட்டிங்கை பொறுத்தவரை ரோஹித்தின் ஃபார்ம் கவலையை அளிக்கிறது. இடக்கை வேகப்பந்து வீச்சாளர் சாம் கர்ரன் அவருக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை ராகுலோ ரோஹித்தோ பவர் பிளேவுக்குள் விக்கெட்டை இழந்தால் கர்ரனை சமாளிக்க இடக்கை வீரரான ரிஷபை இறக்குவதும் ஒரு நல்ல ஆப்சனே! மிடில் ஓவர்களில் மார்க் வுட் தவிர நம்பகமான ஒரு பவுலர் இங்கிலாந்துக்கு இல்லை. பலவீனமான இங்கிலாந்து டெத் பவுலிங்கை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள பிராப்பர் பேட்ஸ்மேன் ஆன கோலி இறுதிவரை களத்தில் நிற்பது அவசியம். மார்க் வுட் Vs சூர்யகுமார் யாதவ் ஒரு முக்கியமான மோதலாக இருக்க வாய்ப்புள்ளது. பெரிய அணிகளுடனான போட்டிகளில் முதலில் பேட் செய்யும் போது இந்தியா தடுமாறுவது வாடிக்கையாக உள்ளது; அதற்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம். டாப் ஆர்டர்தான் இந்த தொடரில் இங்கிலாந்தின் பலமாக உள்ளது. குறிப்பாக கேப்டன் பட்லரை விரைவாக வீழ்த்த வேண்டியது அவசியம். ஆகவே பவர் பிளேவில் அர்ஸ்தீப் சிங் உடன் புவனேஷ்வர் குமாரும் பொறுப்புடன் வீச வேண்டிய தேவையுள்ளது" என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் தினேஷ் அகிரா. இந்திய அணியில் மாற்றம் இருக்குமா? ஆசிய கோப்பை தொடரில் இந்தியா தனது அணி வீரர்களை தேர்வு செய்ததில் தவறிழைத்தது. அதன் விளைவாக தொடரில் இருந்து விலகவும் நேரிட்டது. இந்த முறை ரோஹித் சர்மா, பெரிய மாற்றங்களின்றி ஒரே வீரர்களை கொண்டு போட்டிகளை எதிர்கொண்டார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அக்சர் படேலுக்கு பதில் தீபக் ஹூடா களமிறக்கப்பட்டாலும் அவரிடம் இருந்து எந்த பங்களிப்பும் கிடைக்காததால் அடுத்த போட்டியே அவர் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் அக்சர் படேல் கொண்டு வரப்பட்டார். காணொளிக் குறிப்பு, பேட்டிங்கில் மிரள வைத்த சூரியகுமார் யாதவ்; அரையிறுதிக்கு தெம்புடன் நுழைந்த இந்தியா ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி சூப்பர் 12 ஆட்டத்தில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக ரிஷப் பண்ட் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டார். வீரர்களை தேர்வு செய்வதில் ரோஹித் அதிக கவனத்துடன் செயல்படுவது தெரிகிறது. பெரும்பாலும் இந்தியா சூப்பர் 12 சுற்றில் விளையாடிய அதே வீரர்களை கொண்டு அரையிறுதி ஆட்டத்தில் களமிறங்கும் என எதிர்பார்க்கலாம். உத்தேச ஆடும் லெவன்: ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், அர்ஷ்தீப் சிங், புவனேஸ்வர் குமார், முகமது சமி நியூசிலாந்து - பாகிஸ்தான் ஆட்டம் எப்படி இருக்கும்? நடப்பு தொடரில் நியூசிலாந்து அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் போட்டியிலேயே 200 ரன்களை குவித்ததோடு ஆஸ்திரேலியாவை வெறும் 111 ரன்களில் சுருட்டியது. இங்கிலாந்திடம் வீழ்ந்திருந்தாலும் இலங்கை, அயர்லாந்து அணிகளை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. ஆப்கானிஸ்தானுடனான ஆட்டம் மழையால் ரத்தானது. பேட்டிங்கில் க்ளென் பிலிப்ஸ், கேன் வில்லியம்சன், டெவோன் கான்வே ஆகியோர் கவனிக்கப்பட வேண்டியவர்கள். நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சும் பாகிஸ்தானுக்கு சவாலாக அமையக்கூடும். மறுபுறம் பாகிஸ்தான் தனது சொந்த ஆட்டத்திறனால் அரையிறுதிக்கு வரவில்லை. அரையிறுதி வாய்ப்பு பிரகாசம் அடைய பிற அணிகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் பேட்டிங். கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் மிரட்டிய பாபர் ஆசாம் இந்த தொடரில் சொற்ப ரன்களில் நடையை கட்டுவது, எந்த ஒரு பேட்ஸ்மேனிடமும் கன்சிஸ்டன்சி இல்லாதது உள்ளிட்ட பல பிரச்னைகளை சரி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது பாகிஸ்தான். பேட்டிங்கை சிறப்பாக செய்யும் பட்சத்தில் நியூசிலாந்துக்கு சவாலாக மாறலாம். இல்லை எனில், முதல் அரையிறுதி ஆட்டம் ஒன் சைடட் கேமாக மாறிவிடும். https://www.bbc.com/tamil/sport-63536272
  2. இன்னொரு குழப்பமா ? By DIGITAL DESK 5 06 NOV, 2022 | 04:44 PM கபில் “சம்பந்தனுக்குப் பின்னர் தலைமைத்துவத்தை யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தாலும், இப்போது அது உச்சம் பெற்றிருக்கிறது” “சுமந்திரனுக்கு எதிராக சிறிதரன் ஏன், பகிரங்கமாக போரைத் தொடங்கியிருக்கிறார்? அதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா எதற்காக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, ஊடகச் சந்திப்பை நடத்தியிருக்கிறார்? 22ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் காணப்பட்ட முரண்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் காணப்படும் ஜனநாயகமின்மை, பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறியாமல் முடிவுகள் எடுக்கப்படுவது போன்ற விடயங்களில் நீண்டகாலமாக காணப்பட்டு வந்த சர்ச்சை இப்போது வெளிப்படையாக வெடித்திருக்கிறது. 22 ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதா- எதிர்ப்பதா என்று பாராளுமன்றக் குழு தீர்மானிக்கும் கட்டம் வந்த போது, அதில் பங்கேற்ற 7 உறுப்பினர்களில் தர்மலிங்கம் சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகிய நான்கு பேர், அதனை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர். நடுநிலை வகிக்க சிறிதரன் முடிவு செய்தார். கலையரசன், பெரும்பான்மையானவர்களின் முடிவுக்கு கட்டுப்படுவதாக தெரிவித்தார். ஆனால் எம்.ஏ.சுமந்திரன் வாக்களிக்கப் போவதில்லை என்று மறுத்தார். இந்த நிலையில், பெரும்பான்மையினரின் கருத்துக்கு இணங்கி, தானும் ஆதரவாக வாக்களித்ததாக கூறியிருக்கிறார் சிறிதரன். கூட்டமைப்பின் இரண்டு உறுப்பினர்கள் சுகவீனம் காரணமாகவும், ஒரு உறுப்பினர் வெளிநாட்டில் இருந்த காரணத்தினாலும் பாராளுமன்றத்தில் சமூகமளிக்காமல் தவிர்க்க, ஆறு பேர் ஆதரவாக வாக்களிக்க சுமந்திரன் வாக்களிப்பை புறக்கணித்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முரண்பட்டுக் கொண்டு, வெளியேறி வாக்களிப்பின் போது, முரண்பட்ட நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். இப்போது, கட்சிக்குள் இருந்து கொண்டே, முரண்பட்ட முடிவுகளை எடுத்து வாக்களிக்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே, ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு முடிவு செய்திருந்தது. அந்த வாக்கெடுப்பில், ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றிருந்தார். தனக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் வாக்களித்தனர் என்று அவர் கூறியிருந்தார். ஆனால், கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் அதனை நிராகரித்திருந்தார். அதே சுமந்திரன் இப்போது, வெளியே நிற்கிறார். கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள், 22 ஆவது திருத்தத்தை ஆதரிக்க அவர் மட்டும், வாக்களிப்பை புறக்கணித்திருந்தார். அத்தோடு அந்த விவகாரம் முடிந்து போகவில்லை. இனி நாங்கள் சுமந்திரனின் முடிவுகளுக்கு கட்டுப்படப் போவதில்லை என்று பகிரங்கமாக சிறிதரன் அறிவிக்க, தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் சட்டத்தரணி தவராசா அதற்கு ஆதரவு தெரிவிக்க, இப்போது கூட்டமைப்புக்குள்ளேயும், தமிழரசுக் கட்சிக்குள்ளேயும், பூகம்பம் வெடித்திருக்கிறது. நீண்டகாலமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், சுமந்திரன் எதிர்ப்புணர்வு புகைந்து கொண்டிருந்தது. சம்பந்தனும் சுமந்திரனும் இணைந்தே முடிவுகளை எடுக்கிறார்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைமைகளுடன் கலந்தாலோசிப்பதில்லை, என்ற கருத்து நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சினைகளும் கூட, சுரேஸ் பிரேமச்சந்திரன், சி.வி.விக்னேஸ்வரன் போன்றவர்கள் கூட்டமைப்பை விட்டு வெளியேறும் நிலைக்கு காரணமாகியது. அவர்களின் வெளியேற்றத்துக்கு இது மட்டுமே காரணமாக இல்லாத போதும், இப்போது எழுந்து வரும் சுமந்திரன் எதிர்ப்பு அலையானது, எல்லா வெளியேற்றங்களுக்கும் அவரே காரணம் என்ற பழியைப் போடுவதற்கு வசதியானதாக மாறியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சுமந்திரனின் ஆதிக்கம் அதிகம் இருந்து வந்தது உண்மை. சம்பந்தனின் ஆதரவுடன் அவரே முடிவுகளை எடுப்பது என்ற நிலை காணப்பட்டது. இப்போது, அதனை பங்காளிக் கட்சிகளும் விரும்பவில்லை, சக பாராளுமன்ற உறுப்பினர்களும் விரும்பவில்லை. இந்தச் சூழலில், சுமந்திரனுக்கு ஆதரவாக சாணக்கியன் மட்டும் இருக்கிறார். அதேவேளை, சம்பந்தன் தவிர, ஏனைய 7 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரே கோட்டில் இணைந்து பயணிக்கும் நிலையில் காணப்படுகின்றனர். இந்தப் பிளவு நிலை வரும் நாட்களில் விரிசலடையுமா அல்லது கடந்தகாலத் தவறுகளை சீர் செய்து கொண்டு கூட்டமைப்பு சரியான வழிக்குத் திரும்புமா என்ற கேள்வி பரவலாக காணப்படுகிறது. சுமந்திரனுக்கு எதிராக சிறிதரன் ஏன், பகிரங்கமாக இந்தப் போரைத் தொடங்கியிருக்கிறார்? அதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா எதற்காக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, ஊடகச் சந்திப்பை நடத்தியிருக்கிறார்? அவை எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற விடயங்கள் என்றோ, எதேச்சையான சம்பவங்கள் என்றோ ஒதுக்க முடியாது. தற்போது, இரா.சம்பந்தன் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். அவரால் பெரிதாக அரசியலில் செயற்பட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. வரும் பெப்ரவரி மாதத்துடன் 90 வயதை தொடப் போகும் இரா.சம்பந்தன், தற்போதுள்ள 9 ஆவது பாராளுமன்ற அமர்வுகளில், 169 நாட்கள் பங்கேற்கவில்லை. வெறும் 35 நாட்கள் மட்டும் தான் பாராளுமன்றம் வந்திருந்தார். 22 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான வாக்களிப்பு, விவாதம் போன்றவற்றில் கூட அவர் பங்கேற்கவில்லை. ஜனாதிபதியை தேர்வு செய்யும் வாக்கெடுப்பில் அவரை கைத்தாங்கலாக இரண்டு பேர் அழைத்து வர வேண்டியிருந்தது. முதுமையும், முதுமைக்கால உபாதைகளும் அவருக்கு இன்று பிரச்சினையாக உள்ளது போலவே, அவரது இடத்தைப் பிடிக்க நடக்கின்ற போட்டியும் அவருக்கு சவாலானதாக உள்ளது. சம்பந்தனுக்குப் பின்னர் தலைமைத்துவத்தை யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தாலும், இப்போது அது உச்சம் பெற்றிருக்கிறது. இவ்வாறான நிலையில் தான், இதுவரை சுமந்திரனின் முடிவுகளை ஏற்றுக் கொண்டு வந்த அல்லது விருப்பமில்லா விட்டாலும் பம்மிக் கொண்டிருந்து, அதற்குத் தலையாட்டியவர்கள், அவருக்கு எதிராக கிளர்ந்தெழத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கியமான காலகட்டம் இது. இதனை எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. வெறும் கோச அரசியலோ கன்னை கட்டி நின்று மோதுகின்ற அரசியலோ இப்போது தேவையில்லை. கூட்டமைப்பை ஒரு முகமாக மாற்றுவது தான் இன்றுள்ள தேவை. ஒருமித்த கருத்துடன், ஒருமித்த நிலைப்பாட்டுடன் கொண்ட- இறுக்கமான கட்டமைப்பாக மீண்டும் கூட்டமைப்பை கட்டமைக்க வேண்டும். இப்போதைய நிலையில் அதற்கான வாய்ப்புகள் அருகத் தொடங்கியிருப்பதாகவே தோன்றுகிறது. ஏனென்றால் சுமந்திரனுக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள பனிப்போர், அவரை ஓரம் கட்டும் திட்டத்துடன் தான் முன்னெடுக்கப்படுகிறது. இந்தப் பனிப்போரின் உச்சக்கட்டம், அவரை வெளியே தள்ளுவதை இலக்காகவும் கூட கொண்டிருக்கலாம். இந்தப் பனிப்போரில் யார் வெல்லப் போகிறார்கள் என்பதல்ல முக்கியம், அது கூட்டமைப்பை ஒன்றுபடுத்துமா, பலப்படுத்துமா என்பதே முக்கியமான விடயம். அந்த நிலையில் இருந்து பார்த்தால், கூட்டமைப்பு இன்னொரு பிளவையோ, உட்கட்சிக் குழப்பத்தையோ சந்தித்தால் அது ஆச்சரியமான விடயமாக இருக்க முடியாது. https://www.virakesari.lk/article/139284
  3. அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்! - பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல் முனைவர் க. நெடுஞ்செழியன் தமிழ்ப் பண்பாட்டின் மேன்மைகளை மீட்டெடுப்பதற்காகத் தன் வாழ்வின் பெரும் பகுதியை ஒப்படைத்துக்கொண்டவர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன். 35 வயதில் தொடங்கிய பயணம் 74 வயதிலும் தொடர்கிறது. மொத்தம் 18 நூல்களை எழுதியிருக்கிறார். அதில் பெரும்பான்மையானவை ஆய்வு நூல்கள். ‘ஆசீவகமும் அய்யனார் வரலாறும்’ நூல் அவரது ஆய்வின் உச்சம். அவரை சித்தன்னவாசல் குகைக்கோயிலில் சந்தித்தோம். அங்கு சுற்றுலா வந்திருந்த ஐயப்ப பக்தர்களிடம், “இங்கே சிலையாக இருக்கிற மூவரும், நீங்க கும்பிடுற ஐயப்பன், அய்யனார்கள்தான்” என்று அறிமுகப்படுத்தி, விளக்கமளிக்கத் தொடங்கிவிட்டார். அவருடன் உரையாடியதிலிருந்து... அடிப்படையில் நீங்கள் கடவுள் மறுப்பாளர். இந்த ஆய்வில் இறங்கியது எப்படி? எனது முனைவர் பட்ட ஆய்வுக்காக (1980) நான் எடுத்துக்கொண்ட தலைப்பு ‘தமிழ் இலக்கியத்தில் உலகாயதம்’. பொருள்முதல்வாதம் எனப்படும் உலகாயதம் பற்றி ஏற்கெனவே தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா மிகப்பெரிய ஆய்வுசெய்திருந்தார். அதில் ஒரு பகுதியாக ஆசீவகம் பற்றியும் எழுதியிருந்தார். அதை வாசித்தபோது, அதில் சொல்லப்பட்ட பல செய்திகள் நாம் ஏற்கெனவே கேள்விப்பட்டவையாக இருந்தன. அதற்கு அவர் என்னென்ன நூல்களைப் பயன்படுத்தியிருந்தாரோ அதை எல்லாம் நானும் வாசித்துப் பார்த்தபோது இன்னும் ஆச்சரியம். ஆசீவகம் பற்றிய அடிப்படைத் தகவல்களையெல்லாம் அந்த நூலாசிரியர்கள் பாலி, பிராகிருத மொழி நூல்களிலிருந்துதான் பெற்றிருந்தனர். ஆனால், அவற்றின் மூலச்சான்று தமிழில் இருக்கிறது என்பதை ஒரு பேராசிரியராக என்னால் உணர முடிந்தது. எனவே, சட்டோபாத்தியாயாவை விட்டுவிட்டு, ஏ.எல்.பாஷம் எழுதிய புத்தகங்களை நாடினேன். அவர் 1950-களிலேயே, ‘ஆசீவகம்: இந்தியாவில் அழிக்கப்பட்ட ஒரு சமயம்’ என்ற பெயரில் முனைவர் பட்ட ஆய்வுசெய்தவர். நான் ஆசீவகம் பக்கம் போனது இப்படித்தான். “ஆசீவகம் வட நாட்டில் கி.மு.3-ம் நூற்றாண்டின் இறுதியிலேயே செல்வாக்கை இழந்துவிட்டது. ஆனால், தென்னகத்திலோ கி.பி.14-ம் நூற்றாண்டு வரை அது செல்வாக்கோடு இருந்துள்ளது. இப்போதும் அதன் வேர்களைத் தமிழகத்தில் காண முடிகிறது” எனக் கூறியிருந்தார் பாஷம். ஆசீவகத்தை நிறுவியவர்களும், தமிழகத்தில் தற்போது அய்யனாராக வணங்கப்படுகிறவர்களும் ஒரே நபர்களே என்ற முடிவுக்கு எப்படி வந்தீர்கள்? ஆசீவகத்தை உருவாக்கியவர் மற்கலி என்பதை தமிழ் இலக்கியம், பௌத்தம், ஜைனம் ஆகிய மூன்று மரபுகளும் உறுதிசெய்துள்ளன. ஆனால், ஆசீவகம் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் அனைவரும் பௌத்த, ஜைன மரபுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதால், அந்த ஆய்வு ஒருதலைச் சார்பாக அமைந்துவிட்டது. தமிழ் இலக்கிய, நாட்டார் மரபுகளையும் சேர்த்து ஆராய்ந்தபோது, மற்கலிதான் தமிழ் மக்கள் வணங்குகிற ‘தர்ம சாஸ்தா’ (அய்யனார்களில் ஒருவர்) என்று உறுதிசெய்ய முடிந்தது. மகாவீரரும் மற்கலிகோசாலரும் ஒன்றாகப் பணியாற்றி, பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர் என்று ஜைன இலக்கியத்தில் குறிப்பு உள்ளது. மற்கலியின் ஆயுதம் செண்டாயுதம். நம் அய்யனார் கையில் இருப்பதுவும் அதுவே. பெரிய புராணத்தின் ‘வெள்ளானைச் சருக்கம்’ வழியாக அய்யனார் பிறந்த இடம் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகேயுள்ள திருப்பட்டூர் என்று அறிய முடிந்தது. அங்கே கள ஆய்வுசெய்தபோது, அய்யனார் பிறந்த ஊர் என்பதற்கான கல்வெட்டு ஆதாரம் கிடைத்தது. அவ்வூரில் சிவாலயமும், அய்யனார் கோயிலும் உள்ளன. சிவாலயத்தை நுட்பமாக ஆராய்ந்தபோது, அதுவும் ஆசீவக ஆலயமாக இருந்து பறிக்கப்பட்டதுதான் என்ற உண்மை விளங்கியது. ‘தர்ம சாஸ்தா’ மரணமடைந்த இடமான சித்தன்னவாசலில், குகைக்குள்ளாக மூன்று சிலைகள் இருக்கின்றன. கிறிஸ்தவ மதத்தில் துறவியர் தொடங்கி போப் ஆண்டவர் வரையில் படிநிலைகள் இருப்பதுபோல, ஆசீவகத்திலும் வண்ணக் கோட்பாடு இருந்தது. கருப்பு, நீலம், பச்சை, செம்மை எல்லாவற்றையும் கடந்து கழிவெண் பிறப்பு (பரம சுக்ல) நிலையை அடைந்தவர்கள் இவர்கள் மூவரும். நடுவில் இருப்பவர் வேளிர் மரபில் பிறந்து சிற்றரசராக வாழ்ந்து, துறவியான அறப்பெயர் சாத்தன் (தர்ம சாஸ்தா). இரண்டாவது நபர் கிராமங்களில் பூரணம், பொற்கலை எனும் இரு மனைவியரோடு அருள்பாலிக்கிற பூரண அய்யனார். மூன்றாவதாக இருப்பவர் அடைக்கலம் காத்த அய்யனார் (பாண்டிய மன்னரின் படைத்தளபதியாக இருந்து துறவியானவர்). ஆசீவகம் தாக்கப்பட்டபோது, ஓவியம் சிதைக்கப்பட்டது. இப்போது மலையடிவாரத்தில் மூன்று அய்யனாருக்கும் கோயில்கள் கட்டி வணங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆசீவகத்தின் வண்ணக்கோட்டுப் படிநிலை யின் குறியீடுதான் 18 படிகள். அந்த அடையாளத்தை முன்பு ஆசீவகத்தலமாக இருந்த திருச்சி திருவெள்ளறை, மதுரை அழகர்கோயில் முதலான இடங்களில் இப்போதும் பார்க்கலாம். சபரிமலை இப்போதும் சாஸ்தா கோயிலாகவே இருக்கிறது. ஆசீவகத்தைக் கடவுள் மறுப்புக் கோட்பாடு என்கிறீர்களே எப்படி? வானத்தையும் பூமியையும் உயிரினங்களையும் படைத்தது இறைவன் என்று மத நிறுவனங்கள் சொல்கின்றன. ஆனால், ஆசீவகம் அணுக்கோட்பாட்டின் அடிப்படையில், தற்செயலாகவே உலகம் தோன்றியதாகச் சொல்கிறது. இதுகுறித்து ‘ஆசீவகம் எனும் தமிழர் அணுவியம்’ என்ற ஆய்வு நூலை வெளியிட்டுள்ளேன். இந்தப் பேரண்டத்தின் தோற்றம், பெருவெடிப்பு, கருந்துளை பற்றியெல்லாம் அறிவியல் உலகம் 40, 50 ஆண்டுகளாகத்தான் பேசத்தொடங்கியிருக்கிறது. ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் இலக்கியமான பரிபாடலில் இதுபோன்றதொரு குறிப்பு உள்ளது. “பாழ்பட்டுப்போன வெட்டவெளியில், அணு கரு நிலையில் இருந்தபோது ஏற்பட்ட பெரிய வெடிப்பின் காரணமாக வெப்பம் தோன்றியது. பிறகு காற்றும் தோன்றியது. வெப்பத்தின் மீது காற்று மோத மோதத் தீயாகியது. தீ எரிந்து எரிந்து அணையத் தொடங்கியபோது ஆவிப்படலம் மேகமாகப் படிந்து, அது குளிர்ந்து மழையாகப் பெய்தது” என்கிறது பரிபாடல். இதுதான் ஆசீவகத்தின் பேரண்டம் பற்றிய கோட்பாடு. ‘பெரும்பான்மையான சிவன் கோயில்களும் பெருமாள் கோயில்களும் பெளத்த விகாரங்களையும் சமணக் கோயில்களையும் இடித்துக் கட்டப்பட்டவையே’ என்ற தொல்.திருமாவளவனின் கூற்றை ஏற்கிறீர்களா? அவரது கூற்று சரியே. ஆனால், ஆசீவகம் பற்றிய ஆய்வு முடிவுகள் பரவலாவதற்கு முந்தைய கால நிலைப்பாட்டிலிருந்து அவர் கருத்து சொல்லியிருக்கிறார். தமிழகத்தைப் பொறுத்தவரையில் 90% கோயில்கள் ஆசீவக (ஆதிநாதர், ஸ்ரீ) கோயில்களாக இருந்து, பிற மதத் தலங்களாக மாற்றப்பட்டவையே. தமிழகத்தில் எந்தெந்த கோயில்களில் எல்லாம் ஸ்ரீ என்ற திருநிலைக்கு (இன்றைய கஜலட்சுமி) தனி சன்னதி இருக்கிறதோ அவை அனைத்தும் ஆசீவக ஆலயங்கள்தான். அதேபோல எந்தெந்த சிவன்கோயில்களில் யானையை முதலை விழுங்குவது, சிங்கம் தாக்குவது போன்ற புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளனவோ அவை அனைத்துமே ஆசீவகத்திடமிருந்து பறிக்கப்பட்ட ஆலயங்களே. - கே.கே.மகேஷ் (நன்றி: தி இந்து) https://www.commonfolks.in/bookreviews/ayyanar-ayyappan-aaseevagam-peraasiriyar-ka-nedunchezhiyan-nerkaanal பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்களின் நூல்களை இந்த இணைப்பில் வாங்கலாம். https://www.panuval.com/7553
  4. நன்றி கிருபன் அண்ணை. முன்னேறிய நீர்வேலியான் அண்ணைக்கு வாழ்த்துகள்.
  5. Published:04 Nov 2022 8 PMUpdated:04 Nov 2022 8 PM “அந்த வழக்கு மட்டும் இல்லையென்றால்..!” பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நினைவலைகள் கே.கே.மகேஷ் Social Affairs க.நெடுஞ்செழியன் “அந்த வழக்கில் மட்டும் சிக்காமல் இருந்திருந்தால், அவரது திறமைக்கும், தகுதிக்கும், அரசியல் தொடர்புக்கும் பல்கலைக்கழக துணைவேந்தரே ஆகியிருப்பார் பேராசிரியர் க.நெடுஞ்செழியன்." - கொளத்தூர் மணி க.நெடுஞ்செழியன் “அந்த வழக்கில் மட்டும் சிக்காமல் இருந்திருந்தால், அவரது திறமைக்கும், தகுதிக்கும், அரசியல் தொடர்புக்கும் பல்கலைக்கழக துணைவேந்தரே ஆகியிருப்பார் பேராசிரியர் க.நெடுஞ்செழியன். திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகவும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவராகவும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையத் தலைவராகவும் பணியாற்றியவர் அவர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய, அஞ்சல் வழிக்கல்விக்கான பெரியாரியல் பாடத்திட்டத்தை நன்னன், மு.க.சுப்பிரமணியன் ஆகியோருடன் சேர்ந்து உருவாக்கியவர் அவர்” என்கிறார் அவருடன் சிறையில் ஒன்றாக இருந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. கொளத்தூர் மணி மேலும் அவர் கூறுகையில், “பேராசிரியர் க.நெடுஞ்செழியனுக்கு பல முகங்கள் உண்டு. அதில் முக்கியமானது அவரது அதிதீவிர விடுதலைப்புலிகள் ஆதரவு நிலைப்பாடு. தலைவரோடு அவருக்கு நேரடி அறிமுகம் உண்டு. பேராசிரியருக்கு பண்ணன் என்றொரு மகன் இருந்தார். அவர் எங்கே என்ன ஆனார் என்பது பலருக்கும் தெரியாது. இலங்கைக்கு அமைதிப்படை சென்றதே, அந்த காலகட்டத்தில் புலிகளுக்கு ஆதரவாக ஈழத்துக்கு நம்முடைய இளைஞர்கள் பலர் நேரடியாகச் சென்றார்கள். அதில் பண்ணனும் ஒருவர். அதில் பலர் பத்திரமாகத் திரும்பிவந்துவிட்டார்கள். ஆனால், பண்ணன் திரும்பவே இல்லை. தகவலும் இல்லை. ஆனாலும், நெடுஞ்செழியன் தன் புலிகள் இயக்க ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை” என்கிறார் கொளத்தூர் மணி. சிறையில் ஒன்றாக இருந்த அனுபவம் பற்றிக் கேட்டோம். “திருச்சியில் ஒரு கூட்டம் நடத்தி பிரிவினைக்கு ஆதரவாகப் பேசினார் என்று அ.தி.மு.க ஆட்சி காலத்தில் அவரை தடா சட்டத்தில் கைது செய்தது போலீஸ். 1994-95 காலகட்டத்தில் நானும் தடா சட்டத்தில் கைதாகி அவருடன் சிறையில் இருந்தேன். அப்போது தினமும் மாலை நேரங்களில், இளைஞர்கள், இன உணர்வாளர்கள் மத்தியில், திராவிட இயக்கப் பார்வையில் இலக்கியம் பேசுவார். சங்க இலக்கியங்களில் எப்படி ஆரிய சார்பின்மை இருந்தது... எப்படி வைதீக எதிர்ப்பு இருந்தது என்று சொல்வார். சைவமும், வைணவமும் கூட வைதீக எதிர்ப்பு மதங்கள்தான் என்பது அவருடைய கருத்து. ‘சைவ குரவர்களும், வைணவ ஆழ்வார்களும்கூட தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் ஆதரித்து ஆரிய பண்பாட்டிற்கும் சம்ஸ்கிருதத்துக்கும் எதிராக இருந்தவர்கள்தான்’ என்பார். அந்த வழக்கில் ஜாமீன்பெற்று வெளிவந்த பிறகு, அதே பழைய பயிற்சி வகுப்பு சம்பவத்துக்காக பொய் வழக்கு போட்டு அவரை கைது செய்தது கர்நாடக காவல்துறை. அதாவது பெங்களூரு பிரேஸர் டவுன் வழக்கில் பிடிபட்டவன் இவரது அந்தப் பயிற்சியில் பங்கேற்றவன் என்று வழக்கு புனைந்து, கைது செய்தார்கள். இந்த வழக்கில் 32 மாத காலம் சிறையில் இருந்தார். அதனால், அவரது சமூக, ஆய்வுப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. க.நெடுஞ்செழியன் அவர் நல்ல கவிஞரும்கூட. ஆரம்பக் காலத்தில் அவரது கவிதையால்தான் நான் ஈர்க்கப்பட்டேன் என்று அவருடைய காதல் மனைவியார் சக்குபாய் என்னிடம் ஒரு முறை தெரிவித்தார்கள். அவர் எழுதிய பல கவிதைகள் விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ இதழான ‘எரிமலை’யில் வெளியாகியிருக்கிறது. சிறையில் இருந்துகூட பல கவிதைகள் எழுதினார். அதில், ‘பொய் வழக்குப் போட்டு - என் புகழையெல்லாம் தீய்த்து கைவிலங்கு மாட்டியெனை கடுஞ்சிறையில் பூட்டி வெங்கொடுமைச் செய்தாலும் நான் வீழ்ந்துவிட மாட்டேன் பங்கமெலாம் கண்டு நான் பயந்து விடமாட்டேன் வஞ்சகத்தின் முன்னே நான் மண்டியிட மாட்டேன்’ எனத் தொடங்கும் கவிதை பலருக்கும் பிடித்தமானது” என்றார் கொளத்தூர் மணி. https://www.vikatan.com/social-affairs/politics/kolathur-mani-talks-about-professor-k-neduncheliyan-memories
  6. சுயநிர்ணயம் வென்ற மோரோ மக்கள் போராட்டம் By DIGITAL DESK 5 06 NOV, 2022 | 04:20 PM ஐங்கரன் விக்கினேஸ்வரா உலகில் பல இனங்களின் போராட்டம் வெற்றி பெற்றோ அல்லது முற்றிலும் நசுக்கப்பட்டோ உள்ளது. ஆயினும் மோரோ போராட்டம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இது உயிர்வாழ்வதற்கும், கலாசார அடையாளத்திற்கும், சுயநிர்ணய உரிமைக்கும் தொடர்ச்சியானதொரு போராட்டமாகும். பிலிப்பைன்ஸின் தென்பகுதியில் உள்ள மின்டானோ பிரதேசம் அங்குள்ள பிரதானமான தீவுக்கூட்டமாகும். இங்கு 6 மில்லியன் மக்கள் உள்ளனர். பிலிப்பைன்ஸில் முதல் நாகரிகமென மோரோ மக்களை பதிவுசெய்கிறது என்பதையும், அதன் பொருளாதாரம் மற்ற பழங்குடி சமூகங்களை விட மிகவும் முன்னேறியது என்பதையும் வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகிறது. ஆனால் மோரோ மக்கள் முழுமையான நாடுநிலைக்கு முழுமையாக வளருமுன், தொடர்ச்சியான வெளிநாட்டு காலனித்துவ தலையீடுகளை சந்தித்தனர். மோரோவுக்கு எதிரான காலனித்துவ ஆக்கிரமிப்பு 300ஆண்டுகளுக்குப் முன் ஸ்பானிஷ் படையெடுப்பு மற்றும் காலனித்துவ தொடக்கமாக வடக்கு தீவுகளான லுசோன் மற்றும் விசயாக்களில் அவர்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியது. இதன்பின் அமெரிக்க 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மோரோ மக்கள் கடுமையாக போராடினர். சுயநிர்ணய உரிமைப் போரில் அமெரிக்கா மரண அடியை மோரோக்களிடம் வாங்கியதும் உண்மையே. ஆயினும் அமெரிக்கர்கள் மோரோ எதிர்ப்பைத் தணிக்க இராணுவ சக்தியைப் பயன்படுத்துவதையும், பிளவு மற்றும் தந்திரோபாயங்களையும் பாவித்தனர். அத்துடன் பொது மன்னிப்புத் திட்டம் மோரோ கிளர்ச்சியாளர்களை அமெரிக்க அதிகாரிகளிடம் சரணடைய அனுமதித்தது. அமெரிக்க காலனித்துவ அரசாங்கம் அரசியல் கட்டுப்பாட்டைப் பெற்ற பின்னர், முழு தீவுக்கூட்டத்தையும் பொதுநிலமாக அறிவித்தது, ஆனால் இந்நிலமே மோரோ மூதாதையர்களின் தாயகமாகக் கருதப்பட்டது. அதேநேரம், மிண்டானாவோவில் அமெரிக்கா தமது கல்வி நிலையங்கள நிறுவியது. தாங்கள் வெளிநாட்டு அரசாங்கத்தை அமைத்து, வடக்கிலிருந்து குடியேற்ற வாசிகளை அழைத்து வந்து, மைண்டானோவின் வளமான வளங்களை சுரண்ட அனுமதித்தனர். இவ்வாறு மோரோ மக்களை சிறுபான்மை இனமாக மாற்றி அமெரிக்காவும் அழிக்க ஆரம்பித்தது. இந்தக்காலனித்துவ ஆதிக்கத்தின் தாக்கம் இன்றும் உணரப்படுகிறது. இந்தக் காலனித்துவ ஆதிக்கம் காரணமாக மோரோ மக்கள் நிலங்களை இழந்தனர். லுசோன் மற்றும் விசாயாஸின் பிலிப்பைன்ஸ் மக்கள் 1946இல் சுதந்திரம் பெற்றதொரு புதிய தேசத்தின் பிறப்பின் ஆரம்பம் என்று கருதி மகிழ்ச்சியுடன் கொண்டாடியபோது, மோரோ மக்கள் இந்த நிகழ்வை தங்கள் சொந்த சுதந்திரம் மற்றும் நீண்ட கால இறையாண்மையின் மரணமாக கருதினர். மோரோ மண்ணில் குடியேற்ற வாசிகளை கொண்டு வந்து நில அபகரிப்பை சட்டபூர்வமாக்கினர். இதன் பின் மோரோ மக்களும் தாங்களும் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை அடைந்தனர். அவர்கள் தங்கள் நலன்களைப் பாதுகாக்க, அதாவது தங்கள் நிலத்தைப் மீளப் பெறவும், அதிகாரத்தைக் கைப்பற்றவும், போராட்ட குழுக்களை ஏற்பாடு செய்து ஆயுதம் ஏந்தினர். நான்கு நூற்றாண்டுகளாக ஜப்பானியர்கள் பிலிப்பைன்ஸ்காரர்கள், ஸ்பானியர்கள் மற்றும் அமெரிக்கர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களை மோரோ மக்கள் தாங்கள் நடத்தி வரும் தேசிய விடுதலை இயக்கத்தின் (பங்ஸமோரோ) போராட்டமாகவே பார்க்கின்றனர். 1970களின் முற்பகுதியில், மோரோ மக்களுக்கு எதிரான தொடர்ச்சியான பல படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. தொடர் மோதல்கள் மிண்டானாவோவில் குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்பட இல்லை. மார்கோஸ் ஆட்சியில் இதன் பின் இராணுவச் சட்டம் தொடர்ச்சியாக அமுல்படுத்தியது. பிலிப்பைன்ஸ் அரசின் இராணுவச் சட்ட உச்சக்கட்டத்தில் இனப்படுகொலை தீவிரம் அடைந்தது. மோரோ மக்கள் ஆபத்தை எதிர்கொள்ள ஒரு புதிய புரட்சிகர இயக்கத்தை உருவாக்கினர். மிகவும் ஆக்ரோஷமான இளைஞர்கள் தலைமையில் உருவான ‘மோரோ தேசிய விடுதலை முன்னணி’ தங்கள் சுதந்திரத்திற்கான போராட்டத்தைத் தொடர்ந்தது. இதனால், தேசிய விடுதலை முன்னணியுடன், மார்கோஸ் அரசாங்கத்தை 1976 ஆம் ஆண்டு திரிபோலி ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மின்டனோ மோரோ மக்களுக்கு சுயாட்சி வழங்குவதன் மூலம் மோரோ பிரச்சனைக்கு அரசியல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாகும். உடன்படிக்கையில் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் தன்னாட்சி அரசாங்கத்தின் பிரதேசங்களைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் பொது வாக்கெடுப்பை வலியுறுத்தியது. ஆயினும் பொது வாக்கெடுப்பின் முடிவை தேசிய விடுதலை முன்னணி அங்கீகரிக்கவில்லை, இதனால் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இதன்பின் இரண்டு மோரோ நிர்வாக தன்னாட்சி பகுதிகள் உருவாக்கப்பட்டன. இது காலனித்துவ அமெரிக்க ஆட்சியின் கீழ் அமைக்கப்பட்ட மாகாணத்தை நினைவூட்டுவதாக இருந்தது. ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் நேரடியாக முஸ்லிம் விவகார அலுவலகம் உருவாக்கப்பட்டது. இவையனைத்தும் மோரோ மக்களைத் திருப்திப்படுத்தவே. இத்தனை அரசாங்க வேலைத்திட்டங்களுக்கு மத்தியிலும் ஆயுதப் போராட்டம் அமைதியாக இருந்தாலும் தொடர்ந்தது. மோரோ தேசிய விடுதலை முன்னணியில் இருந்ததொரு பிளவுபட்ட குழு தனியான அமைப்பை உருவாக்கியது. 1996 இல் பிலிப்பைன்ஸ் அரசும் மோரோ தேசிய விடுதலை முன்னணியும் இறுதி சமாதான உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டன. இது முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசத்துக்கு சுயாட்சியை வழங்கியது. ஆனால் 1984இல் மோரோ தேசிய விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்த மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி விடுதலை போராட்டத்தை தொடர்ந்து நடத்த தீர்மானித்தது. பின்னர் அவர்களும் 1997இல் பேச்சுவார்த்தைகள் மூலமான தீர்வில் கவனம் செலுத்தி 1997 இல் அரசாங்கத்துடன் சமாதான உடன்படிக்கையை செய்து கொண்டனர். இது சமாதான பேச்சுக்களின் தொடக்கத்துக்கு நல்ல சமிக்ஞையாக அமைந்தது. 2012 ஒக்டோபர் 7இல் மோரோ தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமாதான உடன்படிக்கை தயாரானது. முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மேற்கு மின்டானோவை உள்ளடக்கிய பங்ஸ்மோரோ சுயாதிக்க பிரதேசத்துக்கான அதிகார மாற்றத்துக்கு வழிவகுத்தது. 2014 மார்ச்சில் பங்ஸ்மோரோவுக்கான விரிவான உடன்படிக்கையில் தேசிய விடுதலை முன்னணியும் பிலிப்பைன்ஸ் அரசாங்கமும் ஒப்பமிட்டன. இந்த சமாதான உடன்படிக்கையின் அமுலாக்கம் அதிகார மாற்றம் என்பன தான் கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கிய விடயங்களாகின. 2013இல், மோரோ தேசிய விடுதலை முன்னணியின் நூர் மிசுவாரி பிரிவு மோரோ குடியரசுக்கு சுதந்திரம் அறிவித்து, ஜாம்போங்கா நகரத்தை பாரியளவில் தாக்கியது. பிலிப்பைன்ஸின் ஆயுதப் படைகளுடனான மோரோ தேசிய விடுதலை முன்னணியுடனான மோதலின் போது, அந்தக் குழு பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதாக பிலிப்பைன்ஸால் குற்றம் சாட்டப்பட்டது, இதனால் அவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 12இல் மோரோ தேசிய விடுதலை முன்னணியின் அப்துல்கரீம் மிசுவாரி, நூர்ஹெடா மிசுவாரி உடன் தற்போதய பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி போங் பாங் மார்கோஸின் கீழ் பாங்சமோரோ இடைநிலை ஆணையத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 2025ஆம் ஆண்டு பாங்சமோரோ பாராளுமன்றத்திற்கான வழக்கமான தேர்தல்கள் நடைபெறும் வரை இந்த நியமனம் நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் நீண்ட காலமாக தொடர்ந்த காலனித்துவ ஆதிக்கம் தகர்க்கப்பட்டு, மோரோ மக்களின் போராட்டம் தேசிய சுயநிர்ணயத்தை வென்றுள்ளது. அத்துடன் இறையாண்மை பெற்ற மின்டோனா தேசமாக தற்போது உருவாகியும் உள்ளது. மோரோ விடுதலை போராட்டத்தின் வெற்றி பிலிப்பைன்ஸ் அடித்தட்டு மக்களின் போராட்ட வெற்றியாக இருக்கும் என கருதப்படுகிறது. அதுவே ஒடுக்கப்பட்ட இனப்போராட்டத்தின் ஒற்றுமையின் வெற்றியாக இருக்குமெனத் தெளிவாகுகிறது. https://www.virakesari.lk/article/139292
  7. ஆர்.எஸ்.எஸ். பேரணி: லத்தி, ஆயுதம் கூடாது என்ற நிபந்தனையோடு, 3 இடங்களில் எப்படி நடந்தது? நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் நீதிமன்றம், வழக்கு என்று சர்ச்சைகளைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் இன்று (நவம்பர் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை) நடந்த ஆர்.எஸ்.எஸ். பேரணி எப்படி நிகழ்ந்தது? என்னென்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன? தமிழ்நாட்டில் பல இடங்களில் காந்தி ஜெயந்தி அன்று ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்ததை தொடர்ந்து பல கட்ட நீதிமன்ற வழக்குகளைத் தாண்டி கடைசியியில் 44 இடங்களில் பலவிதமான கட்டுப்பாடுகளோடு நிகழ்வை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளை ஏற்காத ஆர்.எஸ்.எஸ். மேல் முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்தது. ஆனால், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மூன்று இடங்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை இந்த ஊர்வலத்தை ஆர்.எஸ்.எஸ். நடத்தி முடித்துவிட்டது. இந்த ஊர்வலங்கள் எப்படி நடந்தன? என்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன? ஊர்வலம் நடந்த நகரங்களுக்கு தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். ஊர்வலம் நடந்த ஒவ்வோர் இடத்திலும் சுமார் 1,200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இன்று நடைபெற்ற ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு காவல் துறை என்னென்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டன என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவனிடம் பிபிசி தமிழ் கேட்டது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழ்நாட்டில் அனுமதி மறுப்பு ஏன்? ஆர்.எஸ்.எஸ். வரலாறு என்ன? காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணங்கள் ஆர்எஸ்எஸ் பற்றிய 64 பக்க புத்தகம் கர்நாடகத்தை அதிரவைப்பது எப்படி? அது பற்றிப் பேசிய அவர், "இந்த பேரணி, கூட்டத்திற்கு உயர் நீதிமன்றம் நிபந்தனைகளை வழங்கியுள்ளது. அதனுடன் காவல் துறையும் சில கட்டுப்பாடுகளை விதித்தது, அவற்றை ஏற்று பேரணி, கூட்டத்தை விதிமுறைக்குள் நடத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்," என்றார். போலீஸ் விதித்த நிபந்தனைகள் என்னென்ன? 1. அனுமதிக்கப்பட்ட பாதை வழியாக மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும். 2. கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் பேரணி, கூட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும். 3. மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வு, 6 மணிக்குள் பொதுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்தையும் முடித்துக்கொள்ளவேண்டும். 4. பேரணியில் லத்தி, ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது. 5. குழாய் வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது. பெட்டி வடிவிலான ஒலிபெருக்கியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 6. பேரணி செல்லும் வழியிலும், வண்டியிலும் பேனர்கள், பலகைகள் இருக்கக் கூடாது. 7. மத ரீதியான வாசகங்கள், சுலோகங்களை ஊர்வலம், கூட்டத்தில் வாய் மொழியாகவோ அல்லது பதாகைகளிலோ பயன்படுத்தக்கூடாது. 8. பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்குபெற அனுமதி இல்லை என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக கூறினார் பகலவன். எதற்காக ஊர்வலம்? நாட்டின் 75வது சுதந்திர ஆண்டு, ராமலிங்க அடிகளார் பிறந்து 200வது ஆண்டு, மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாள் ஆகியவற்றை ஒட்டி காந்தி பிறந்த நாளில் இந்த ஊர்வலம் திட்டமிடப்பட்டது. ஆனால், வழக்கு முடிவில் 44 இடங்களில் நிபந்தனைகளோடு ஊர்வலம் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கினாலும், இந்த நிபந்தனைகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். மேல் முறையீடு செய்ய முடிவெடுத்தது. ஆனால், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 3 இடங்களில் ஏற்கெனவே ஊர்வலத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்ததால், அதன் அடிப்படையில் அங்கே ஊர்வலங்கள் நடந்தன. எப்படி நடந்தது பேரணி? கடலூரில் பேரணி, கூட்டம் நடந்த இடங்களில் கடும் போலீஸ் பாதுகாப்பு நிலவியது. வடக்கு மண்டல ஐஜி கண்ணன், காஞ்சிபுரம் டிஐஜி காந்திமதி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், செங்கல்பட்டு மற்றும் திருப்பத்தூர் மாவட்ட எஸ்பிக்கள் மேற்பார்வையில் மூன்று மாவட்டங்களில் இருந்து 1200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்வு இடங்களில் முன்னதாக வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். கடலூரில் நடந்த ஆர்எஸ்எஸ் பேரணியில் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஊர்வலம் செல்லும் பகுதிகளில் இருந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மேலும் பேரணியில் பங்கேற்போர் தவிர குறிப்பிட்ட நேரத்தில், அந்த சாலைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. கள்ளக்குறிச்சியில் காவல் கண்காணிப்பாளர் பகலவன் தலைமையில் மூன்று மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பேரணியில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த சுமார் 400 பேர் சீருடையுடன் கலந்து பங்கேற்றனர். பெரம்பலூரிலும், மாலை 4 மணிக்கு அணிவகுப்பு தொடங்கியது. அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. எந்த இடத்திலும் எந்த அசம்பாவிதங்களோ, பதற்றங்களோ இல்லை. https://www.bbc.com/tamil/india-63533339
  8. அமில பரிசோதனையில் பா.ஜ.கவா ? தி.மு.கவா ? By DIGITAL DESK 5 06 NOV, 2022 | 04:39 PM குடந்தையான் கோவையில் எரிவாயு உருளை வெடித்து விபத்து ஏற்பட்டதென தமிழக அரசும், கோவையில் நடைபெற்றது தீவிரவாதிகளின் தற்கொலை தாக்குதலென தமிழக பா.ஜ.கவும் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறது. இவ்விவகாரம் தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் ஆவேசமான பேச்சுகள் மக்களிடத்தில் குறிப்பாக அறிவார்ந்த மக்களிடத்தில் நேர்நிலையான தாக்கங்களை ஏற்படுத்துவதற்கு பதிலாக, எதிர்நிலையான தாக்கங்களே ஏற்படுத்தி வருகிறது. இவர் காவல்துறையில் பணியாற்றிய முன்னாள் உயரதிகாரி என்றாலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உளவுத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பான விவரங்களையும், அரசு மற்றும் காவல்துறை நிர்வாகத்திற்கு மட்டும் தெரிந்திருக்கும் சில ரகசிய விடயங்களை, இவர் பொதுவெளியில் பகிரங்கமாக வெளியிட்ட விவரங்களையும் உற்று நோக்கினால், தமிழக காவல்துறையின் உயர்மட்டத்தில் இருக்கும் சிலர், இரகசிய தகவல்களை பாஜக தரப்பிற்கும், ஆளுநர் தரப்பிற்கும் கசிய விடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு, பா.ஜ.க. தலைவரான அண்ணாமலை மீது அவதூறு அல்லது வேறு வகையினதான வழக்குகளை பதிவு செய்து விசாரிப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால் தமிழக அரசோ, எந்த ஒரு நடவடிக்கையும், தமிழக பா.ஜ.க. தலைவரான அண்ணாமலை மீது எடுக்காமல் நிதானமான அணுகுமுறையை கையாண்டு வருகிறது. இதன் பின்னணியில் மறைந்திருக்கும் அரசியல் என்னவென்பது கேள்வியாகிறது. மேலும் வன்முறை சம்பவம் நடைபெற்ற இடத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் துரிதமாக அங்கு செல்வது என்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தும், மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் ஆலயத்திற்கு சென்றிருக்கிறார். கடந்த ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற போது, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்கு எதிர்க்கட்சி தலைவர்களை அங்கு செல்ல அரசும், மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அத்துடன் தமிழக அரசுக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்க வேண்டிய மத்தியில் ஆளும் தேசிய கட்சியான பா.ஜ.க., கோவை சம்பவத்தில் மாநில அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்காததுடன், மாநில அரசின் நிர்வாக திறமையின்மை மீது குற்றம் சுமத்துவது தவறாகும். இதனிடையே கோவை சம்பவத்தை முன்னிறுத்தி அரசியல் ஆதாயம் தேட முயன்ற பா.ஜ.க.வின் மாநில தலைவரான அண்ணாமலையின் அதிரடி பேச்சால், அக்கட்சி, உட்கட்சி பூசலை எதிர்கொண்டிருக்கிறது. அண்ணாமலை கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு வருகை தந்த போது, அத்தொகுதியின் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசனும், கோவையில் செல்வாக்கு மிக்க பா.ஜ.க. தலைவரான முன்னாள் மக்களவை உறுப்பினரான சி.பி.இராதாகிருஷ்ணனும் உடன் வரவில்லை. ஏனெனில் சி.பி.இராதாகிருஷ்ணன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் கோவை சம்பவத்தை முன்வைத்து, கோவையில் கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது ஆஜரான அண்ணாமலை, ‘இந்த போராட்டத்தை மாநில பா.ஜ.க. அறிவிக்கவில்லை’ என்று தெரிவித்திருந்தார். இது அக்கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர்களிடையே பெரும் அரசியல் ரீதியான அழுத்தத்தையும், உட்கட்சி பூசலையும் ஏற்படுத்தியது. என்பதும், ஏற்கனவே பா.ஜ.க. மாநில செயலாளரான கே டி ராகவன் விடயத்தில் அண்ணாமலை பக்கம் சார்ந்து மாநில நிர்வாகிகளை கதிகலங்கடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோவை சம்பவம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இவ்விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க பரிந்துரை செய்தார். கோவையில் சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று தமிழக காவல்துறையினர், ஏராளமான விவரங்களையும், தடயங்களையும் சேகரித்தனர். இவர்களது விசாரணை துரிதமாகவும், தூய்மையாகவும் நடைபெற்றது. ஆனால் இவ்வகாரத்தில் அண்டை மாநிலங்களுக்கும், அண்டை நாடுகளுக்கும் தொடர்பு இருக்கிறதென சந்தேகம் எழுந்ததால், இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிப்பது தான் பொருத்தமென தீர்மானித்து அதன் விசாரணைக்கு முதல்வர் பரிந்துரை செய்தார். அவரது இந்த நடவடிக்கை தமிழக மக்களால் பாராட்டப்படுகிறது. ஆனால் தமிழக அரசு மீது ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். அவர் அரசு அல்லாத தனியார் நிகழ்வில் பங்கு பற்றினாலும் அரசு மீது குற்றச்சாட்டு சுமத்துவதை கைவிடவில்லை. கோவை விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு உத்தரவிட தாமதப்படுத்தியது ஏன்? என்று வினா எழுப்பி இருக்கிறார். இதனிடையே கோவை சம்பவம் குறித்து, தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை எப்படி இருக்கும்? என்பதற்கு, அந்த முகமையின் கடந்த கால வரலாற்றை பலரும் உற்று நோக்குகிறார்கள். தேசிய புலனாய்வு முகமை இதற்கு முன் மலேக்கான் குண்டு வெடிப்பு, ஹைதராபாத் மசூதி குண்டுவெடிப்பு, சம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு. போன்ற பல குண்டு வெடிப்புகளை விசாரித்து இருக்கிறது. இதில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு நெருக்கமான தலைவரான பிரக்யா தாக்கூர் போன்ற தலைவர்களை தேசிய புலனாய்வு முகமை காப்பாற்றி இருக்கிறது என்பதனையும்; கவனத்தில் கொள்ள வேண்டும். இந்நிலையில் கோவை சம்பவத்திற்கு தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை, அரசியல் குறுக்கீடுகள் இன்றி நேர்மையாக நடைபெற வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும். ஆனால் தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் பா.ஜ.க., அதிலும் கோவையில் தங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது என்று உறுதியாக நம்பும் பா.ஜ.க., தேசிய புலனாய்வு முகாமையின் விசாரணை நேர்பட நடைபெறுவதற்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும் என்பது சந்தேகம் தான். அதேதருணத்தில்கோவை சம்பவத்தை, ‘பயங்கரவாத செயல்’ எனக் கருதி, மத்திய அரசு தேசிய புலனாய்வு முகமை மூலம் விசாரணை என்கிற பெயரில் அதனை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தக்கூடும் என்றும், இவ்விகாரத்தில் திராவிட முறைமை பாணியிலான ஆட்சியை நன்முறையில் நடத்தி வரும் தி.மு.க. அரசு, ‘கண் கொத்தி பாம்பாக’ கவனித்து செயல்பட வேண்டியுள்ளது. இதனிடையே கோவை சம்பவம் நடைபெற்ற போது ஊடகங்களுக்கு பேட்டியளித்த மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, 'கோவையில் தற்கொலை தாக்குதல் நடந்திருந்தால், இந்த ஆட்சி டிஸ்மிஸ் ஆகியிருக்கும்” எனப் பேசியிருக்கிறார். அவரது இந்த பேச்சுக்கு தமிழகத்தை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும் வலிமையான கண்டனத்தை அறிக்கைகளின் மூலம் பதிவு செய்திருக்கிறமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/139288
  9. தமிழ், முஸ்லிம்களின் பூர்வீக நிலங்கள் பறி போகின்றன : சிறுபான்மை தலைமைகள் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும் - கவிஞர் கால்தீன் By VISHNU 06 NOV, 2022 | 04:50 PM கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் விவசாய நிலங்களை அரசாங்கம் அபகரித்து, அம்மக்களை விவசாயம் செய்யாமல் தடை செய்து, இனவாத அதிகாரிகளால் விரட்டியடிக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வந்தும் எந்தத் தீர்வும் கிடைக்க வில்லை என எழுத்தாளரும், பன்நூல் ஆசிரியருமான கவிஞர் கால்தீன் குற்றம் சாட்டுகின்றார். அக்கரைப்பற்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர். அங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது, நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இத் தருணத்தில், ஜனாதிபதி இதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதது மிகுந்த வேதனையளிக்கின்றது. மூன்று தசாப்தங்களாக விவசாயம் செய்து வந்த காணிகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு நீதி இல்லாமல் நடு வீதியில் நிற்கிறார்கள். இதற்கான தீர்வொன்றினைப் பெற்றுக் கொள்ள தமிழ் முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து வடக்குக் கிழக்கில் அதிகாரப் பகிர்வொன்றினைப் பெற்றுக் கொண்டு நமது மக்களின் துன்பங்களைப் போக்க முயற்சிக்க வேண்டும் என்றும் வேண்டுகோளொன்றையும் இதன்போது முன்வைத்தார். https://www.virakesari.lk/article/139297
  10. நன்றி. இன்றோடு முதல்வர் பதவி இழப்பேன் என நினைக்கிறேன். அரையிறுதி அணிகளில் 2 சரி, 2 தவறு. அங்கால எல்லாமே தவறு.
  11. ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கிம்புலஎல குணாவின் சகா கைது By NANTHINI 06 NOV, 2022 | 04:43 PM ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் உதவியாளரும், அவருடன் தொடர்புடைய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. வத்தளை, ஹுணுப்பிட்டிய வெவெல்துவ வீதி பகுதியில் மேற்கொண்ட இந்த கைது நடவடிக்கையின்போது சந்தேக நபர்களிடமிருந்து 16 கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், முதலாவது சந்தேக நபர், இந்தியாவில் தலைமறைவாகியுள்ள பிரதான போதைப்பொருள் கடத்தல்காரரான கிம்புலஅல குணாவின் நெருங்கிய சகா என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பைச் சேர்ந்த 29, 30 மற்றும் 49 வயதுடைய இந்த சந்தேக நபர்கள், விசாரணைக்காக கிரிபத்கொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/139286
  12. நல்ல தலையங்கம், குழந்தையை மாற்றி எடுத்துச் சென்ற தாய் என்று போடலாமே தமிழ்மிரர்?
  13. டி20 உலகக் கோப்பை 2022: அதிரடி காட்டிய சூர்யகுமார்; 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற இந்திய அணி அஷ்ஃபாக் பிபிசி தமிழ் 59 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கிரிக்கெட் காலண்டரில் 2022ம் ஆண்டு விராட் கோலிக்கானது மட்டுமல்ல.. 360 கோணங்களில் தனது அதிரடியான ஷாட்களால் அடித்து பலரையும் அன்னார்ந்து பார்க்க வைத்த சூர்யகுமாருக்கும் இது ஒரு சிறந்த ஆண்டு. ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டம் ஒன் சைடட் கேமாக இருந்தாலும் சூர்யகுமாரின் ஆட்டம் ரசிகர்களை இருந்த இடத்திலேயே கட்டிப்போட்டது என்றே சொல்லலாம். சச்சின், சேவாக் போன்ற ஜாம்பவான்கள் போற்றும் அளவுக்கு தனது பேட்டிங்கை கூர் தீட்டியிருக்கிறார் சூர்யகுமார். 'எனக்கு உதவியது ரப்பர் பால் கிரிக்கெட்' டி20 கிரிக்கெட்டில் சொற்பமான வீரர்கள் மட்டுமே சூர்யகுமார் இப்போது ஆடுவதை போல மிரட்டியிருக்கிறார்கள் என மூத்த கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே குறிப்பிட்டுள்ளார். ரப்பர் பந்துகளை வைத்துதான் சிறுவயதில் கிரிக்கெட் விளையாடினேன். பலமுறை பந்தடிபட்டுள்ளது. அந்த கிரிக்கெட்தான் இப்போது என்னை சிறப்பான ஷாட்களை ஆட வைத்திருக்கிறது. உலகத்தில் ஒரேயொரு 360 டிகிரி கிரிக்கெட் வீரர் தான் இருக்கிறார். அவர் தென்னாப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ். அவரைபோல நானும் விளையாட முயற்சிப்பேன் என்கிறார் சூர்யகுமார் யாதவ். நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் ஆடிய பெரும்பாலான ஆட்டங்கள் ரன் ரேட்டை எகிற வைத்திருக்கிறது. 3 முறை அரை சதங்களையும் பதிவு செய்திருக்கிறார். நடப்பாண்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்ததோடு ஐசிசி டி20 தரவரிசையிலும் முதலிடத்தில் ஜொலிக்கிறார் சூர்யகுமார் யாதவ். எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்திலும் சூர்யா எதிரணி பவுலர்களை கடுமையாக அச்சுறுத்துவார் என்றே எதிர்பார்க்கலாம். இந்த முறை இந்தியா உலகக்கோப்பையை வெல்லும் பட்சத்தில் அதைத் தாங்கிப் பிடித்து உச்சிமுகர சூர்யகுமாருக்கு அத்தனை தகுதிகளும் உள்ளன. டி20: அரையிறுதிக்குள் பாகிஸ்தான்: இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் மோதுமா? இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியில் ராகுல் டிராவிட்டின் பங்கு என்ன? இன்றைய போட்டி சுருக்கம் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடைசி சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ரோஹித் 15, கோலி 26 ரன்களில் வெளியேற கே.எல்.ராகுல், சூர்யகுமார் இருவரும் எதிரணி பந்துவீச்சை பொளந்து கட்டினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோலி மற்றும் சூர்யகுமார் 51 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் விக்கெட் இழந்தாலும் இறுதிவரை களத்தில் நின்ற சூர்யகுமார் 25 பந்துகளில் 4 சிக்சர் 6 பவுண்டரிகள் விளாசி 61 ரன்கள் குவித்தார். பண்ட் 3, ஹர்திக் 18 ரன்களில் விடைபெற்றனர். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் சேர்த்தது. ஜிம்பாப்வே 115 ரன்களில் ஆல் அவுட்டானது. பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்களை வீசி 3 விக்கெட்களையும் ஷமி, பாண்டியா தலா 2 விக்கெட்களும், அக்சர் பட்டேல், புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். தினேஷ் கார்த்திக் Vs ரிஷப் பண்ட் - யார் பெஸ்ட்? டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடக்கம் முதலே தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அணியில் ஜடேஜா இல்லாததால் ஃபினிசர் ரோலில் தினேஷ் கார்த்திக்கை பயன்படுத்துவது இந்திய அணியின் திட்டம். இருப்பினும் இதுவரை நடந்த ஆட்டங்களில் அவர் பெரியளவில் ரன் குவிப்பில் பங்களிக்கவில்லை. குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் அவர் சோபிக்காதது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. அந்த போட்டியில் அவர் 15 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 6 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். இது ஒருபக்கம் இருக்க, ஜிம்பாப்வேவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பண்ட் இதுவரை ஒரு போட்டிக்கூட விளையாடவில்லை. அவருக்கு வாய்ப்பு வழங்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார். இருப்பினும் கிடைத்த வாய்ப்பை பண்ட் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. தவறான ஷாட் ஆடி 5 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்த சமயத்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES அரையிறுதி ஆட்டங்களில் விக்கெட் கீப்பராக ரோஹித் சர்மா யாரை தேர்ந்தெடுக்கப்போகிறார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுபவம் வாய்ந்த வீரர், போட்டியை முடித்துக் கொடுப்பவர் என்கிற அடிப்படையில் தினேஷ் கார்த்திக் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்தியா - இங்கிலாந்து கடந்து வந்த பாதை நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 1 தோல்வியும் 3 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு ஆட்டம் மழையால் ரத்தானது. அயர்லாந்திடம் இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது பல விமர்சனங்களுக்கு வித்திட்டது. அதேசமயம், இந்திய அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளையும் தென்னாப்பிரிக்காவுடனான ஆட்டத்தில் ஒரு தோல்வியையும் சந்தித்திருக்கிறது. இரு அணிகளும் சம பலத்துடன் மோதும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது இந்தியா - பாகிஸ்தான் இறுதிப்போட்டியில் விளையாடுமா? டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் குரூப்-ஏ புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை நியூசிலாந்தும், 2வது இடத்தை இங்கிலாந்தும் பிடித்துள்ளது. பி பிரிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன. வரும் 9ம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. 10ம் தேதி நடைபெறும் 2வது அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்த்து இந்தியா களமிறங்குகிறது. இந்த போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வெல்லும் பட்சத்தில் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் உலகக்கோப்பைக்கான இறுதி யுத்தத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரிட்சை நடத்தும். https://www.bbc.com/tamil/india-63533542
  14. அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம் By VISHNU 06 NOV, 2022 | 04:48 PM மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சியில் கல்மடு நகர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு 100 நாள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகிறது. நில அபகரிப்பு ,தொல்லியல் என்ற பெயரில் வனஇலா காணிகளை சுவீகரிப்பு போன்ற விடயங்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி 100 நாள் போராட்டத்தை வலியுறுத்தி 98வது நாளான இன்று 06.11.2022 கிளிநொச்சி கல்மடுநகர் கிராம அலுவளர் பிரிவுக்குற்ப்பட்ட ரங்கன் குடியிருப்பு பகுதியல் நடைபெற்றது இவ் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடையமாகும். https://www.virakesari.lk/article/139299
  15. பங்களாதேஷை வென்று அரை இறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான் By DIGITAL DESK 5 06 NOV, 2022 | 02:49 PM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற தீர்மானம் மிக்க குழு 2 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் வெற்றியீட்டிய பாகிஸ்தான், ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண அரை இறுதியில் கடைசி அணியாக இணைந்துகொண்டது. சுப்பர் 12 சுற்றில் தனது முதல் இரண்டு போட்டிகளில் இந்தியாவிடமும் ஸிம்பாபப்வேயிடமும் கடைசி பந்துகளில் தோல்வி அடைந்த பாகிஸ்தான், தொடர்ச்சியாக நெதர்லாந்து, தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய அணிகளை வெற்றிகொண்டு அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. ஷஹின் ஷா அப்றிடியின் நான்கு விக்கெட் குவியல் பங்ளாதேஷை கட்டுப்படுத்தி பாகிஸ்தானின் வெற்றிக்கு அடிகோலியது. இந்த வெற்றியினால் பாகிஸ்தான் வீரர்கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. இன்று காலை நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து நம்பமுடியாத வெற்றியை ஈட்டியதைத் தொடர்ந்து இந்தியாவுடன் பாகிஸ்தான் அல்லது பங்களாதேஷ் அரை இறுதிக்கு செல்வது உறுதியாகி இருந்தது. இந் நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 129 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், வெற்றியை மாத்திரம் குறிவைத்து நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி அதனை நிறைவெற்றிக்கொண்டது. முதலாவது ஓவரில் தஸ்கின் அஹ்மதின் பந்துவீச்சில் மொஹமத் ரிஸ்வான் கொடுத்த இலகுவான பிடியை விக்கெட் காப்பாளர் நூருள் ஹசன் தவறவிட்டார். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல் அதன் பின்னர் எல்லாம் பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்தது. அணித் தலைவர் பாபர் அஸாமும் மொஹமத் ரிஸ்வானும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி ஆரம்ப விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது பாபர் அஸாம் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மொஹமத் ரிஸ்வான் 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மொஹமத் நவாஸ் (4), ஓட்டங்களுடன் வெளியேறினார். எனினும் மொஹமத் ஹரிஸுடன் நவாஸ் 31 ஒட்டங்களைப் பகிர்ந்தமை குறிப்பிடத்தக்கது. (91 - 3 விக்.) அதனைத் தொடர்ந்து மொஹமத் ஹரிஸும் ஷான் அஹ்மதும் 4ஆவது விக்கெட்டில் 13 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அண்மிக்கச் செய்தனர். இப்திகார் அஹ்மத் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தபோதிலும் ஷான் மசூத் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தானின் வெற்றியையும் அரை இறுதி வாய்ப்பையும் உறுதிசெய்தார். பங்களாதேஷ் பந்துவீச்சில் நசும் அஹ்மத், ஷக்கிப் அல் ஹசன், முஸ்தாபிஸுர் ரஹ்மான், எபாதொத் ஹொசெய்ன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷின் ஆரம்பம் சிறப்பாக அமைந்தபோதிலும் பின்னர் சரிவுகண்டு 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவும் லிட்டன் தாஸும் வேகமாகத் துடுப்பெடுத்தாடி 21 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது லிட்டன் தாஸ் 10 ஓட்டங்களுடன் வெளியேறினார். அதன் பின்னர் ஷன்டோவும் சௌம்யா சர்க்காரும் 2ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்த முயற்சிக்கையில் சர்க்கார் 20 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். அடுத்த பந்தில் ஷிக்கிப் அல் ஹசன் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்ததாக கள மத்தியஸ்தர் தீர்ப்பு வழங்கினார். அதனை உடனடியாகவே ஷக்கிப் அல் ஹசன் மீளாய்வுக்கு உட்படுத்தினார். மூன்றாவது மத்தியஸ்தரின் மீளாய்வின்போது ஷக்கிப் அல் ஹசன் எல்லைக்கோட்டிலிருந்து சிறிது தூரம் முன்னால் நகர்ந்திருப்பதும் பந்து அவரது துடுப்பை உராய்ந்து செல்வதும் சலன அசைவுகளில் தெரிந்தது. ஆனால், மூன்றாவது மத்தியஸ்தர் பந்து துடுப்பில் படவில்லை என தீர்மானித்து களமத்தியஸ்தரின் முன்னைய தீர்ப்பை அங்கீகரித்தார். இந்த சர்ச்சைக்குரிய தீர்ப்பினால் ஷக்கிப் அல் ஹசன் களம் விட்டு வெளியேறாமல் சற்று நேரம் ஆடுகளத்தில் நின்றார். பின்னர் கள மத்தியஸ்தர் அவரை ஆடுகளம் விட்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டதற்கு அமைய அவர் களம் விட்டு வெளியேறினார். அதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழக்க அவ்வணியினால் மீள முடியாமல் போனது. முதல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 70 ஓட்டங்களைப் பெற்றிருந்த பங்களாதேஷ், கடைசி 10 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 48 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 54 ஓட்டங்களைப் பெற்றார். மத்தியவரிசையில் அபிப் ஹொசெய்ன் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷதாப் கான் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஷஹீன் ஷா அப்றிடி https://www.virakesari.lk/article/139277
  16. டிசம்பரில் மீண்டும் விலை அதிகரிக்கப்படலாம் என்கிறார் லிட்ரோ நிறுவன தலைவர் By NANTHINI 06 NOV, 2022 | 03:12 PM (இராஜதுரை ஹஷான்) எரிவாயு விலை சூத்திரத்துக்கமைய இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 30 ரூபாவினாலும், 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 15 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிவாயு விலை சூத்திரத்துக்கமைய கடந்த மூன்று மாத காலமாக எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டிருந்தது. எதிர்வரும் டிசெம்பர் மாதம் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகிறது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, "எரிவாயு விலை சூத்திரத்துக்கமைய ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மறுசீரமைக்கப்படும். அதற்கமைய இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 30 ரூபாவினாலும், 2.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 15 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,360 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1750 ரூபாவாகவும், 2.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 815 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக எரிவாயு விலை சூத்திரத்துக்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டரின் விலையை 210 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. அந்த தொகையில் 130 ரூபாவை நிறுவன மட்டத்தில் செலுத்தி மிகுதி 80 ரூபா விலை அதிகரிப்பின் ஊடாக பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிவாயு விலை சூத்திரத்துக்கமைய கடந்த மூன்று மாத காலமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது. இருப்பினும், உலக சந்தையின் விலை நிலவரத்துக்கமைய இந்த மாதம் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசெம்பரில் குளிர்காலம் ஆரம்பமாவதால், எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது" என்றார். https://www.virakesari.lk/article/139276
  17. டி20: அரையிறுதிக்குள் பாகிஸ்தான்: இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் மோதுமா? அஷ்ஃபாக் பிபிசி தமிழ் 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா, ஜிம்பாப்வே என அடுத்தடுத்து அதிர்ச்சி தோல்விகளை சந்தித்த பாகிஸ்தானுக்கு அரை இறுதி வாய்ப்பு மங்கிப்போய் இருந்தது. ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு நெதர்லாந்து கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தால், தனது கடைசி சூப்பர் 12 ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கிறது பாகிஸ்தான் அணி. நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளுக்கு நாள் பல திருப்பங்களும் சுவாரஸ்யங்களும் நிகழ்ந்து வருகின்றன. 2 முறை கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸால் உலக கோப்பைக்கு தகுதி பெற முடியாமல் போனது, ஆசிய கோப்பையை வென்ற இலங்கையை நமீபியா தோற்கடித்தது, அயர்லாந்திடம் இங்கிலாந்து சறுக்கியது, பாகிஸ்தானை 1 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வீழ்த்தியது, நெதர்லாந்திடம் தோல்வியைத் தழுவி அரையிறுதி வாய்ப்பை தென்னாப்பிரிக்கா நழுவவிட்டது, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அரையிறுதி வாய்ப்பை இழந்தது என நடப்பு தொடரில் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமே இல்லாமல் போனது. "தென்னாப்பிரிக்காவுக்கு என்னதான் பிரச்னை"என ரசிகர்கள் கேள்வி எழுப்பும் அளவுக்கு, அந்த அணியின் நிலைமை கவலைக்கிடமாக மாறியிருக்கிறது. இந்தியாவை வீழ்த்திய கையோடு புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்காவை தனது அட்டகாசமான ஆட்டத்தால் வீழ்த்தி அரையிறுதி கனவை கானல் நீராக்கியது நெதர்லாந்து. இதனால் பாகிஸ்தான் - வங்கதேசம் இடையே அரையிறுதிக்கான பந்தயம் இன்று சூடுபிடித்தது. அரையிறுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவின் அடிலைட் மைதானத்தில், இரு அணிகள் மோதிய கடைசி சூப்பர் 12 ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியிருந்தாலும் மிடில் ஆர்டரின் தடுமாற்றத்தால் வெறும் 127 ரன்கள் மட்டுமே சேர்த்தது. எளிய இலக்குடன் நிதானமாக ஆடிய பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. தனக்கு பேருதவி செய்த நெதர்லாந்துக்கு பாகிஸ்தான் ஒரு பிரதிபலனையும் செய்திருக்கிறது. வங்கதேசத்தை வீழ்த்தியதால் புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்தை பிடித்து அடுத்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பு நெதர்லாந்திற்கு கிடைத்துள்ளது. ஆனால் இது சாத்தியமாக இந்தியாவின் உதவியும் தேவை. இந்தியா ஜிம்பாப்வேயிடம் அதிர்ச்சி தோல்வி அடையாமல் இருக்க வேண்டும். பாலியல் புகார்: ஆஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க கைது - முழு விவரம் அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் - இன்னொரு மோதலுக்கு வாய்ப்பு இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியில் ராகுல் டிராவிட்டின் பங்கு என்ன? மூன்றாவது நடுவரால் ஏற்பட்ட சர்ச்சை பட மூலாதாரம்,GETTY IMAGES வங்க தேச அணி 73 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த சமயத்தில், பேட்டிங் ஆட வந்தார் கேப்டன் ஷாகிப் அல் ஹசன். சதாப் கான் வீசிய பந்தில் LBW முறையில் நடுவர் அவுட் வழங்கினார். இதை வங்கதேசம் அணி டி.ஆர்.எஸ் முறையில் ரிவ்யூ செய்தது. பந்து பேட் எட்ஜில் பட்டது போன்ற திரையில் தெரிந்தாலும், மூன்றாவது நடுவர் பேட் தரையில் பட்டதாக எண்ணி அவுட் வழங்கியதாக சர்ச்சை எழுந்தது. அவுட் வழங்கிய பின்னும் ஷாகிப் அல் ஹசன் நடுவரிடம் பேசி முறையிட்டார். இருப்பினும் முடிவில் எந்த மாற்றமும் செய்யப்படாததால் களத்தில் இருந்து ஏமாற்றத்துடன் திரும்பினார். முக்கியமான ஆட்டத்தில் மூன்றாவது நடுவர் வழங்கிய தீர்ப்பு இணையத்தில் டிரெண்டானது. வங்கதேச ரசிகர்கள் நடுவர்களை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். இதேபோல பாகிஸ்தான் பேட்டிங்கின்போது ஷாகிப் அல் ஹசன் டி.ஆர்.எஸ் எடுப்பதற்கான நேரம் முடிந்ததும் அப்பீல் செய்தார். இதனை நடுவர் ஏற்க மறுத்ததால் ஆவேசம் அடைந்த ஷாகிப், தனது தொப்பியை கழற்றி தரையில் தூக்கி வீசியவாறு கோபத்தை வெளிப்படுத்தினார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோத வாய்ப்புள்ளதா? இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினால் வரும் 10ஆம் தேதி இங்கிலாந்தை எதிர்த்து அரையிறுதியில் விளையாடும். ஒருவேளை தோல்வியைத் தழுவினால் 9ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்த்து களமிறங்கும். அதே சமயம், அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா - பாகிஸ்தான் இரு அணிகளுமே வெற்றிபெறும் பட்சத்தில், இறுதிப்போட்டியில் மீண்டும் ஒரு கடும் மோதலை எதிர்பார்க்கலாம். வரும் 13ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பைக்காக பலப்பரிட்சை நடத்தும். கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது ஆகச்சிறந்த விருந்தாக அமையும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. https://www.bbc.com/tamil/sport-63532373
  18. சமையல் எரிவாயுவின் புதிய விலை விபரம் இதோ! By NANTHINI 06 NOV, 2022 | 01:20 PM லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 4,360 ரூபா ஆகும். 5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 1,750 ரூபா ஆகும். 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 815 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/139257
  19. பொலிஸாரிடம் சிக்கினர் சுள்ளான் திருட்டுக் கும்பல் தலைவர் உள்ளிட்ட 6 பேர் By DIGITAL DESK 2 06 NOV, 2022 | 02:22 PM மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் பல வீடுகளை உடைத்து நீண்ட கலமாக திருட்டில் ஈடுபட்டுவந்த சுள்ளான் தீருட்டுக்கும்பல் தலைவர் உட்பட 6 பேரை இன்று ஞாயிறுறுக்கிழமை (நவ, 06) கைது செய்ததுடன் திருடப்பட்ட ரிவி, தண்ணீர் மோட்டர் 8 , சைக்கிள் 2, தங்க ஆபரணங்கள் என்பற்றை மீட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசங்களில் உள்ள வீடுகளை உடைத்து அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் தங்க ஆபரணங்கள் திருட்டுப்போயுள்ள சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுவந்த கல்குடா பொலிஸார் சம்பவதினமான இன்று காலை வாழைச்சேனை மருதநகரில் வைத்து திருட்டுக் கும்பலின் தலைவர் சுள்ளான் உட்பட 6 பேரை கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்டவர்கள் வாழைச்சேனை சந்திவெளி பிரதேசங்களில் இடம்பெற்ற வீடுகளை உடைத்து திருடிடப்பட்ட சம்பவங்களில் தொடர்புடையவர்கள் எனவும் இவர்கள் கல்குடா, கல்மடு, பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்கள் எனவும் இவர்களிடமிருந்து திருடப்பட்ட ரிவி ஒன்று, தண்ணீர் இறைக்கும் மோட்டர் 8 சைக்கிள் 2, மேசைமின்விசிறி ஒன்று , கால் பவுண் சங்கிலி ஒன்று, கால்பவுண் தங்க மோதிரம் இரண்டு, மடிக்கணினி ஒன்று, டிஜிடட்ல் தராசு ஒன்று என்பவற்றை மீட்டுள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/139258
  20. COP27: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா கொடுத்த வாக்குறுதிகளின் நிலை என்ன? ஜானவி மூலே பிபிசி மராத்தி 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS வெப்பக்காற்று, புயல், சீரற்ற பருவமழை, வெள்ளம், வறட்சி என தீவிர வானிலை நிகழ்வுகள் இந்தியாவில் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. இதில் பல நிகழ்வுகள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதை எதிர்கொள்ள போதுமான நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்துள்ளதா? காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது. இந்தாண்டின் பருவநிலை மாநாடு எகிப்தில் உள்ள ஷர்ம் அல் ஷேக்கில் நவம்பர் 6 முதல் 18 வரை நடைபெறவுள்ளது. இது காலநிலை தொடர்பான 27ஆவது மாநாடு என்பதால் COP27 என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்த மாநாட்டில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்பு மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதி உதவி ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா மாதிரியான நாடுகள் என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன என்பது குறித்து அறியவும் இந்த மாநாடு நல்வாய்ப்பாக இருக்கும். இந்தியா என்ன வாக்கு கொடுத்துள்ளது? உலக வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயரக்கூடாது என்பதை வலியுறுத்தும் பாரிஸ் ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 200 நாடுகள் கடந்த 2015ஆம் ஆண்டு கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தத்தின் பெரும்பகுதி பசுமை இல்ல வாயுக்களைக் குறைப்பதை வலியுறுத்துகின்றன. எனவே ஒவ்வொரு நாடும் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட இலக்குகள் (NDC) தொடர்பான விவரங்களை சமர்பிக்க வேண்டும். அதில், ஒரு நாடு எவ்வளவு கார்பன் உமிழ்வைக் குறைக்க உறுதியளிக்கிறது மற்றும் அவை எவ்வாறு சாத்தியப்படுத்தப்படும் என்ற விவரங்கள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா தன்னுடைய தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு இலக்குகளை (NDC) சமர்பித்தது. இந்தியா அளித்துள்ள மூன்று வாக்குறுதிகள் இந்தியா தன்னுடைய கார்பன் உமிழ்வை 2030ஆம் ஆண்டிற்குள் 45 சதவிகித அளவிற்கு குறைக்கும். 2030ஆம் ஆண்டிற்குள் புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தி ஆதாரங்கள் மூலம் 50 சதவிகித மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும். காடுகள் மற்றும் மரங்கள் வளர்ப்பை அதிகப்படுத்தி 2.5 முதல் 3 பில்லியன் டன் மதிப்பிலான கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வை வளிமண்டலத்தில் மட்டுப்படுத்தும். இதற்கு என்ன அர்த்தம்? சுத்தமான எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள், குறைவான உமிழ்வு கொண்ட பொருட்கள் மற்றும் மின்னணு வாகனங்கள் போன்ற பல திட்டங்களை அரசாங்கம் ஊக்குவிக்கும் என்றும் அதற்கான உதவிகள் வழங்கும் என்றும் இந்தியா உறுதியளித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட NDC பற்றிய தகவலை வெளியிடும் போது, மத்திய அரசு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. அதில், "இந்தியாவின் NDC தனிப்பட்ட எந்தத் துறையையும் சார்ந்தது அல்ல என்றும் ஒட்டுமொத்த உமிழ்வு தீவிரத்தை குறைப்பதும், காலப்போக்கில் அதன் பொருளாதாரத்தின் ஆற்றல் திறனை மேம்படுத்துவதும், அதே நேரத்தில் நமது சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பொருளாதாரம் மற்றும் பிரிவுகளைப் பாதுகாப்பதும் இந்தியாவின் குறிக்கோள் என்று குறிப்பிடப்பட்டிருந்த்து. கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற COP26 மாநாட்டில், இந்தியா 2070ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைய பிரதமர் நரேந்திர மோதி இலக்கு நிர்ணயித்தார். ஐ.நா. வரையறையின்படி, 'நிகர பூஜ்யம்' என்பது பசுமை இல்ல வாயு உமிழ்வின் அளவும், அது உறிஞ்சிக்கொள்ளப்படும் அளவும் சமமாக இருப்பதாகும். ஒரு நாடு வளிமண்டலத்தில் வெளியிடும் பசுமை இல்ல வாயுக்கள் முற்றிலும் உறிஞ்சிக்கொள்ளப்படும்போது நிகர பூஜ்ஜிய இலக்கு அடையப்படும். காலநிலை மாற்றம்: ஐபிசிசி அறிக்கை தரும் 5 முக்கிய பாடங்கள் காலநிலை மாற்றம்: 25 பெருநிறுவனங்கள் செய்வதை அம்பலப்படுத்தும் அறிக்கை பருவநிலை மாற்றம் என்றால் என்ன? - ஓர் எளிய விளக்கம் இந்த இலக்கை அடையும் பொருட்டு, இந்திய ரயில்வே 2030ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி, இந்திய ரயில்வே ஆண்டுதோறும் அதன் உமிழ்வை 60 மில்லியன் டன் குறைக்க திட்டமிட்டுள்ளது. அதேபோல, இந்தியாவின் மிகப்பெரிய எல்இடி விளக்கு இயக்கம் ஆண்டுதோறும் 40 மில்லியன் டன் உமிழ்வைக் குறைக்கிறது. ஆற்றல் துறையில் உள்ள சவால்கள் 2030ஆம் ஆண்டுக்குள் புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தி ஆதாரங்கள் மூலம் 50 சதவிகித மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக இந்தியா கூறியுள்ளது. நீர் மின்சாரம், சூரிய சக்தி மற்றும் உயிரி ஆற்றல் உதவியுடன் அடுத்த எட்டு ஆண்டுகளில் இந்த இலக்கை இந்தியா அடைய வேண்டும். சுத்தமான எரிசக்தியின் பயன்பாடு தற்போது அதிகரித்திருப்பதைப் பார்க்க முடிந்தாலும், அதன் வேகம் இந்தியா எதிர்பார்த்த அளவில் இல்லை. இன்றும்கூட, புதைபடிவ எரிபொருள் மூலம் கிடைக்கும் அனல் மின்சாரத்தையே இந்தியா பெரும்பாலும் சார்ந்துள்ளது. இந்த முறையில் நிலக்கரி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பட மூலாதாரம்,GAUTUM DEY/AFP சமீபத்தில் நிறுவப்பட்ட புதிய மின்நிறுவனங்களின் பட்டியலைப் பார்த்தால், அதில் 60 சதவிகிதம் அனல் மின் நிலையங்கள் உள்ளன. நிலக்கரி அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இந்தாண்டு செப்டம்பரில் இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் நிலக்கரி பயன்பாடு குறைவதற்குப் பதிலாக அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் இதை சுட்டிக்காட்டினார். அதேநேரத்தில், மத்திய மின்சார ஆணையத்தின் அறிக்கையின்படி சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்தியா பின்தங்கியே உள்ளது. 2022 டிசம்பருக்குள் அதன் திறனை 175GW ஆக உயர்த்தவும், சுத்தமான ஆற்றலைப் பயன்படுத்தி அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் இந்தியா திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த இலக்கில் இருந்து இந்தியா வெகு தொலைவில் உள்ளது. இந்தியா தற்போது 116 ஜிகாவாட் மின்சாரத்தை மட்டுமே இந்த வகையில் உற்பத்தி செய்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் எரிசக்தி தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. சுத்தமான ஆற்றல் ஆதாரங்கள் மூலம் மட்டுமே அதில் தன்னிறைவு அடைவது பெரும் சவால். காடு வளர்ப்பில் உள்ள பிரச்னை 2.5 முதல் 3 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சக்கூடிய அளவிற்கு காடுகள் மற்றும் மரங்களை வளர்க்க இந்தியா திட்டமிட்டுள்ளது. வன ஆய்வு அறிக்கையின்படி, இந்தியாவில் 2019-21ஆம் ஆண்டில் 2,261 சதுர கிலோமீட்டர் அளவிற்கு காடுகளின் பரப்பளவு அதிகரித்துள்ளதாக அரசு கூறுகிறது. ஆனால், அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டிருந்தாலும் உண்மை வேறு மாதிரி இருப்பதாக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிபுணர் அதுல் தியோல்கோகர் சுட்டிக்காட்டுகிறார். பச்சை நிறத்தால் மூடப்பட்ட அனைத்து இடங்களும் காடுகள் அல்ல. இந்தியாவில், காடுகளின் பரப்பை அளவிடும் போது, தாவரங்களின் அடர்த்தி கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. சில நேரங்களில் புதர்கள் மற்றும் பயிர் செய்யப்படும் இடங்கள்கூட காடுகளாக கணக்கிடப்படுகின்றன. காடுகள் இயற்கையாக உருவாகும் என்றும் அதற்கு சிறந்த பாரம்பரியம் இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். YouTube பதிவை கடந்து செல்ல, 1 Google YouTube பதிவை அனுமதிக்கலாமா? இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும். ஏற்பு மற்றும் தொடரவும் காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 2019 மற்றும் 2021ஆம் ஆண்டு வன ஆய்வு அறிக்கையை ஒப்பிடுகையில், சதுப்புநிலங்களின் பரப்பளவு 17 சதுர கி.மீ மட்டுமே அதிகரித்துள்ளது. இது போதுமானதா? மாநில அரசின் திட்டங்கள் என்ன? NDC இலக்குகளை அடைய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். இந்தாண்டு செப்டம்பரில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இரண்டு நாள் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது, இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களின் சுற்றுச்சூழல் அமைச்சர்களும் பங்கேற்றனர். இதில், மாநில அரசின் செயல் திட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட்ட்து. சென்னையில் ஒரு பகுதி மூழ்கப்போகிறதா? காலநிலை மாற்ற செயல்திட்ட அறிக்கை சொல்வது என்ன? பருவநிலை மாற்றம்: காரணமாகும் பணக்கார நாடுகள்; பாதிக்கப்படும் ஏழை நாடுகள் மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான செயல் திட்டங்கள் தங்களிடம் இருப்பதாக தெரிவித்தது. இந்தாண்டு மார்ச் மாதத்தில் மும்பை நகருக்கான காலநிலை செயல்திட்டத்தை மும்பை மாநகராட்சி அறிவித்த்து. நிகர பூஜ்ஜிய இலக்கை மும்பை 2050ஆம் ஆண்டிற்குள் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவநிலை இலக்கை ஆதரிப்பதற்கான நிதி உதவி பட மூலாதாரம்,GETTY IMAGES கார்பன் உமிழ்வைக் குறைப்பது என்பது வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு எளிதானது அல்ல என்பதால் COP 27 மாநாட்டில் நிதி உதவி குறித்த விவாதம் மையமாக இருக்கும். மின்சார விநியோக தேவையைப் பூர்த்தி செய்ய, சுத்தமான எரிசக்தி துறையில் பெரிய முதலீடுகள் அவசியம். இந்தியாவும் ஆற்றலைச் சேகரிப்பதற்கான சேமிப்புத் திறனைக் கட்டியெழுப்ப வேண்டும். இதற்காக இந்தியாவிற்கு 401 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் என பாங்க் ஆஃப் அமெரிக்கா சர்வே கூறுகிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்பு மற்றும் சேதங்கள் குறித்த விவாதங்களும் COP27 மாநாட்டில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளுக்கு 2020ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்குவதாக கடந்த 2009ஆம் ஆண்டு கோபன்ஹேகனில் நடந்த பருவநிலை உச்சி மாநாட்டில் பணக்கார நாடுகள் உறுதியளித்தன. இந்தாண்டு அது தொடர்பான பேச்சுவார்த்தையும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளரும் நாடுகள் சார்பாக இந்தக் கோரிக்கையை வலியுறுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.bbc.com/tamil/india-63525926
  21. மலேசியாவுக்கு மருது சகோதரர்களின் வாரிசு நாடு கடத்தப்பட்ட வரலாறு - அதிர்ச்சிக்குறிப்புகள் சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, மருது சகோதரர்கள் மருது சகோதரர்களின் வாரிசுகளில் ஒருவர் மலேசியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாகவும், அவர் அந்நாட்டிலேயே பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு உயிரிழந்ததாகவும் ஒரு தகவல் நீண்ட காலமாக உலவி வருகிறது. காலஞ்சென்ற தமிழக முதல்வர் கருணாநிதிகூட மலேசியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது அங்கு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இது குறித்துப் பேசியுள்ளார். அதன் பிறகுதான் மலேசிய தமிழர்கள் பலருக்கும் மருது சகோதரர்கள் பற்றி தெரியவந்தது எனலாம். இதுதொடர்பான பல்வேறு பதிவுகள், ஆவணங்கள் மூலம் இளைய மருதுவின் மகனான துரைச்சாமி என்பவர்தான் நாடு கடத்தப்பட்டார் என்பது உறுதியானாலும், அவரது இறுதி வாழ்க்கை எப்படி கழிந்தது என்பதில் மலேசியத் தமிழர்கள் மத்தியில் இதுவரை தெளிவில்லை. தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கு சஞ்சிக் கூலிகளாக (ஒப்பந்தக் கூலி) ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் அங்குள்ள ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யப் பணிக்கப்பட்டனர். இது ஒருபுறமிருக்க, 1818ஆம் ஆண்டு மருது பாண்டிய சகோதரர்களில் இளையவரான மருதுவின் மகன் துரைச்சாமி மலேசியாவில் உள்ள பினாங்கு தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். அவருடன் சில அரசியல் கைதிகள், பொதுமக்கள் உட்பட 71 பேர் நாடு கடத்தப்பட்டனர். (ஆதாரம்: 'Military Reminiscences: Extracted from a Journal of Nearly Forty Years' Active Service in the East Indies` (volume 1, பக்கம் 130) மருது சகோதரர்கள் ஆதிக்கம் செலுத்திய தமிழகப் பகுதியை கர்னல் வெல்ஷ் என்ற ஆங்கிலேய அதிகாரி கண்காணித்து வந்தார். இவருக்கும் மருது சகோதரர்களுக்கும் தொடக்கத்தில் இணக்கமான உறவே நிலவியது. அதிலும் இளைய மருதுவின் நெருங்கிய நண்பராக இருந்தார் கர்னல் வெல்ஷ். இவருக்கு ஈட்டி எறிய பயிற்சி அளித்ததே இளைய மருதுதான். 1795, பிப்ரவரியில் தான் இளைய மருதுவை முதன்முதலாக சந்தித்துள்ளார் வெல்ஷ். அச்சமயம் இளைய மருதுவின் அரண்மனையில் அவருக்கென ஒரு பாதுகாவலர் கூட இல்லை எனத் தெரிவித்துள்ளார். புல்லாங்குழல் செய்ய கரடியின் தொடை எலும்பை பயன்படுத்திய நியாண்டர்தால்கள் 'தலை பிரிந்தால் ஆவி அலையும்': மண்டை ஓடுகளை தேடிவரும் ஜிம்பாப்வே நவீன அறிவியலை விட பண்டைய அறிவியல் உயர்ந்ததா? வெடிக்கும் புதிய சர்ச்சை தமிழக நரபலிகளின் பயங்கர வரலாறு - தேர் ஓட்ட, புதையல் எடுக்க நடந்த படுகொலைகள் அதிர்ச்சிக்குறிப்புகள் படக்குறிப்பு, சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ள சின்ன மருது, பெரிய மருது சிலைகள் இதுகுறித்து, 'Military Reminiscences: Extracted from a Journal of Nearly Forty Years' Active Service in the East Indies` (volume 1, பக்கம் 130) என்ற நூலில் வெல்ஷ் குறிப்பிட்டுள்ளார். சின்ன மருதுவின் நாடு வழியாக சென்றபோது நிகழ்ந்த சாதாரண சந்திப்பின் மூலம் அவர் தமக்கு நண்பராகி விட்டதாகவும், அவரது திறந்தவெளி அரண்மனைக்குள் எவரும் சுதந்திரமாக சென்றுவர முடியும் என்றும் சின்னமருதுவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு தமக்கு கிடைத்ததாகவும் வெல்ஷ் கூறுகிறார். "நான் மதுரையில் இருந்த சமயத்தில் உயர்ந்த வகை அரிசியையும் சுவையான பழங்களையும் சின்ன மருது அனுப்புவார். குறிப்பாக கெட்டியான தோலுடன் கூடிய சுவை மிக்க பெரிய ரக ஆரஞ்சுப்பழங்கள் சின்ன மருதுவிடம் இருந்து எனக்கு அனுப்பப்படும். அத்தகைய அருமையான பழங்களை நான் இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் கண்டதில்லை," என்று வெல்ஷ் தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். எனினும் பின்னாட்களில் இவரது தலைமையில்தான் ஆங்கிலேய படை மருது சகோதரர்களை தூக்கிலிட்டது. இதுகுறித்தும் தமது நூலில் (பக்கம் 130) வெல்ஷ் குறிப்பிட்டுள்ளார். 'மானங்காத்த மருதுபாண்டியர்' என்ற தமது நூலில் பேராசிரியர் ந. சஞ்சீவி அந்தச் சம்பவத்தை இவ்வாறு விவரிக்கிறார். "சின்ன மருதுதான் எனக்கு முதன்முதலாக ஈட்டி எறியவும், வளரி வீசவும் கற்றுக் கொடுத்தவர். வளரி எனும் ஆயுதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆற்றலும் திறமையும் படைத்த ஒருவர் 300 அடி தொலைவிலுள்ள ஒரு பொருள் மீது கூட வளரியை வியக்கத்தக்க வகையில் குறிபார்த்து எறிந்து வெற்றி பெறலாம். "இத்தகைய வீர மனிதனையே நான் பிற்காலத்தில் போர்க்காரணமாக காட்டு விலங்கைப் போல் விரட்டிப் படுகாயப்படுத்தி சாதாரண வேலையாட்களைக் கொண்டு பிடிக்க நேர்ந்தது. அதன்பின்னர் முறிந்துபோன தொடையோடு சிறையில் அவன் நொந்து கிடந்ததையும் இறுதியாக வீரம் மிக்க தன் அண்ணனோடும் அவன் வீரத்திற்குச் சிறிதும் குறையாத மகனோடும் உயிர்த்தோழர் பலரோடும் சாதாரண தூக்கு மரம் ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்ததையும் காண நேர்ந்தது," என்று கர்னல் வெல்ஷ் தமது புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது 'மானங்காத்த மருதுபாண்டியர்' புத்தகத்தில் (பக்.30) இடம்பெற்றுள்ளது. மருது சகோதரர்களின் எழுச்சிப் போராட்டம் படக்குறிப்பு, மருது பாண்டியரின் நினைவிடம் "கப்பம் கட்டாத ஒட்டுமொத்த பாளையக்காரர்கள் மீதும் ஆங்கிலேயருக்குக் கடும் கோபம். மொத்த பாளையத்தையுமே தீவைத்து அழிக்கத் திட்டமிட்டனர். கண்ணில் பட்ட ஆண்கள் அனைவரையும் கைது செய்தனர். மறுபேச்சின்றி தூக்கிலிட்டனர்," என்கிறார் மலேசிய எழுத்தாளரும் ஆய்வாளருமான மலாக்கா முத்துக்கிருஷ்ணன். மருது சகோதரர்களின் வீரதீரப் போராட்டம் என்பது 1785ஆம் ஆண்டு தொடங்கி 1801ஆம் ஆண்டு வரை நீடிக்கிறது. விடுதலைக்காக ஆங்கிலேயரை தைரியமாக எதிர்த்து நின்ற மருது சகோதரர்கள் 1,801ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி சிவகங்கைச் சீமையின் திருப்பத்தூர் கோட்டை வளாகத்தில் தூக்கிலிடப்பட்டனர். தூக்கிலிடும் உத்தரவை நிறைவேற்றியவர் கர்னல் வெல்ஷ். அப்போது நடந்தவற்றைத் தமது கட்டுரை ஒன்றில் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார் மலாக்கா முத்துக்கிருஷ்ணன். (மலேசியாவில் வெளிவரும் தமிழ் மலர் நாளேட்டில் 15-10-2020 அன்று வெளிவந்த கட்டுரை) "தூக்குக் கயிறுக்கு முன்னால் பெரிய மருது நிற்கிறார். அப்போது தனக்கு எந்த ஒரு தயவு தாட்சண்யமும் காட்ட வேண்டாம் என்று வெள்ளைக்காரர்களைக் கேட்டுக் கொள்கிறார். 'நான் என் நாட்டைக் காப்பாற்றுவதற்குப் போராடினேன். ஆனால் தோற்கடிக்கப்பட்டேன். பரவாயில்லை. அதற்காக என்னுடைய உயிரைப் பறிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. 'இந்தச் சின்னச் சிறுசுகளைப் பாருங்கள். இந்தச் சிறுவர்கள் என்ன தவறு செய்தார்கள். என்ன பாவம் செய்தார்கள். இவர்கள் ஆயுதம் எதையும் எடுத்தார்களா? இல்லை இவர்களால் ஆயுதங்களைத் தான் தூக்க முடியுமா? 'தயவு செய்து அவர்களை ஒன்றும் செய்யாதீர்கள். விட்டுவிடுங்கள்' என்று கெஞ்சினார். உயிரை துச்சமென மதித்த மருது சகோதரர்கள் படக்குறிப்பு, சின்ன மருது, பெரிய மருது சாகும் போதுகூட மருது சகோதரர்கள் தங்கள் உயிரைப் பெரிதாக நினைக்கவில்லை. மருதுவின் அந்தக் கடைசி ஆசை இருக்கிறதே, அதை இப்படியும் சொல்லலாம். கப்பல் கடலில் மூழ்குகிறது. கப்பல் தலைவன் அந்த ஆழ்கடலிடம் போய் மடிப் பிச்சை கேட்க முடியுமா? இங்கே அந்த மாதிரி தான் நடந்தது. சின்ன மருது; பெரிய மருது மகன்களும்; பத்துப் பன்னிரெண்டு வயது பேரப் பிள்ளைகளும் தூக்கிலிடப் பட்டார்கள். அது ஒரு பெரிய கொடுமை. இந்தச் சடங்குகளை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் 74, 77, 94-ஆம் ரெஜிமெண்ட் துருப்புகள் நடத்தின. கப்பம் கட்டாத ஒட்டு மொத்த பாளையக்காரர்கள் மீது ஆங்கிலேயருக்குப் பயங்கரமான கோபம். மொத்தப் பாளையத்தையுமே தீ வைத்து அழிக்கத் திட்டம் போட்டார்கள். கண்ணில் தென்படுகின்ற அத்தனை ஆண்களையும் பிடித்தார்கள். மறுபேச்சு இல்லாமல் தூக்கில் போட்டார்கள். காணொளிக் குறிப்பு, ஆந்திரா லேபக்ஷி ஆலயம்: இங்கிருப்பது உண்மையிலேயே தொங்கும் தூணா? திருப்பத்தூர் தூக்குக் கயிற்றில் மருது வாரிசுகள் அதே திருப்பத்தூர் தூக்குக் கயிற்றில், பெரிய மருதுவின் மகன்கள் கருத்தம்பி; முல்லிக்குட்டித் தம்பி; சின்ன மருதுவின் மகன்கள் செவத்த தம்பி, முத்துசாமி உள்பட பலர் தூக்கு மரத்தைப் பார்த்தார்கள்." இந்தத் தூக்கிலிடும் கொடும் நிகழ்வின்போது சின்ன மருதுவின் மகன் துரைசாமி அந்த இடத்தில் இல்லாததால் உயிர் தப்பியதாகவும் அவர் சுட்டிக் காட்டுகிறார். எனினும் பிறகு துரைசாமி கைது செய்யப்பட்டதாகவும் அப்போது அவருக்கு 15 வயதுதான் ஆகியிருந்தது என்றும் முத்துக்கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். கர்னல் வெல்ஷ் தமது புத்தகத்தில் இதைப் பதிவு செய்துள்ளார் (பக்கம் 133). துரைசாமி நாடு கடத்தப்பட்டது குறித்தும் அவரது புத்தகத்தில் (பக்கம் 133-135) விவரங்கள் உள்ளன. "போர் முடிந்ததும் எஞ்சியிருந்த பகைவர்களை எல்லாம் கப்பலேற்றித் தீவாந்தரம் அனுப்பும் பொறுப்பை நானே ஏற்க வேண்டியதாயிற்று. சின்னமருது மைந்தன் தனக்கு நேர்ந்த கதியை நொந்த உள்ளத்தோடு, ஆனால் கம்பீரமாகப் பொறுத்துக்கொண்டான். பெருந்தன்மையும் தியாக உணர்ச்சியும் தவழும் முகத்தோடு விளங்கிய அவ்விளைஞன் - இனிய பண்புகள் படைத்த அந்நல்லோன் - தன் கொடிய தலை விதியை ஒரு சிறு முணுமுணுப்பும் இன்றி ஏற்றுக் கொண்டான். ஆனால், அவனுடைய அழகு பொருந்திய திருமுகத்தில் குடி கொண்டிருந்த அந்த ஆழ்ந்த துயர உணர்ச்சியைக் கண்ணால் காண்பதும் கண்டு கலங்காமல் இருப்பதும் அறவே முடியாத செயல். "அவன் எனது நேரடியான பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தமையால், நான் அவன் தப்பி ஓடுவதற்கு உடந்தையாய் இருக்க முடியவில்லை. ஆனால், பலத்த பாதுகாப்புடைய ஒரே இடத்தில் நானும் அவனும் இருந்தமையால், அவனைத் தன் வேலையாள்களுக்கு நடுவிலேயே அவமானம் தரும் கைவிலங்குகளோடு நிற்கும் காட்சியினின்றும் விடுதலை செய்யக் கருதி, தன் முன்னாள் வேலையாள்களிடமிருந்து தனியாகப் பிரித்து வைத்தேன். அவன் கை விலங்குகளையும் கழற்றும்படி செய்தேன். "அவ்வாறு நான் என்னுடைய வருந்தத்தக்க பழைய நண்பன் சின்ன மருதுவின் மக்களுள் தப்பி உயிரோடிருந்த அந்த ஒரே மைந்தன் - பதினைந்தே ஆண்டான இளைஞன் - நிலையான தீவாந்தர வாசத்திற்கு இரையாக்கப்பட்டிருந்த துரைசாமியின் கைவிலங்குகளைத் தளர்த்தியது வாயிலாகத் தான் என் உள்ளத்தில் ஏதோ ஒரு வகையான துன்பம் கலந்த ஆறுதலாவது ஏற்பட்டது," என்று கர்னல் வெல்ஸ் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் 'மானங்காத்த மருதுபாண்டியர்' புத்தகத்தில் (பக்.64) இடம்பெற்றுள்ளன. துரைசாமியைத் தம்மால் நாடு கடத்தும் தண்டனையிலிருந்து காப்பாற்ற முடியவில்லை எனும் வருத்தம் வெல்ஷின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. துரைசாமியை நாடு கடத்திய அந்த இறுதித் தருணத்தை அவரும் கனத்த இதயத்தோடு தமது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், துரைசாமியின் உணர்வுகள் எவ்வாறு இருந்தன என்றும் வெல்ஸ் விவரித்துள்ளார். "எனக்குத் தரப்பட்டிருந்த பொறுப்பைத் தூத்துக்குடித் துறைமுகத்தில் லெப்டினன்டு ராக்ஹெட்டிடம் ஒப்படைத்த அந்தத் துயரம் நிறைந்த நாளை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது! அந்த இளைஞன் துரைசாமியைக் கடல் கடந்து போகும் கப்பலில் ஒப்படைத்த போது அழகொழுகும் அவன் முகத்தில் புதைந்து கிடந்த ஏக்கம் இப்பொழுதும் கண்ணெதிரே காண்பது போலவே தோன்றுகிறது. "அதோடு அவனைப் போலவே வெந்துயரில் வீழ்ந்து கிடந்த அவன் நண்பர்கள், பெற்ற நாட்டைப் பிரியும் நேரத்தில் உண்டான பெருந்துன்பத்தைப் பேசாமலும் ஆண்மையுடன் பொறுத்துக்கொண்ட காட்சி இன்றும் என் கண் முன் தோன்றுகிறது" என்று பேராசிரியர் சஞ்சீவி வெல்ஸின் வார்த்தைகளை ஆவணப்படுத்தி உள்ளார். முதலில் தோன்றிய மொழி எது? மனிதர்கள் பேச தொடங்கியது எப்போது? தமிழ் ஏன் உலகச் செம்மொழிகளில் ஒன்று? அதன் சிறப்பும் தொன்மையும் என்ன? #தமிழர்_பெருமை திருவள்ளுவரின் உருவம் உருவானது எப்படி - விரிவான தகவல் பினாங்கை துறைமுக நகரமாக மாற்ற ஆங்கிலேயர்கள் திட்டம் மருது சகோதரர்கள் காலத்தில் தமிழகத்தில் இருந்து 71 பேர் அரசியல் கைதிகளாக பினாங்கு தீவுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று கர்னல் வெல்ஷ் எழுதி, 1830ம் ஆண்டு வெளிவந்த நூலின் அடிப்படையில் சொல்கிறார் தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவரான ஜெர்மனியைச் சேர்ந்த முனைவர் சுபாஷினி. மேலும், பால்மரத் தோட்டங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களாக சென்றவர்கள் பின்னர் அங்கேயே தங்கிவிட்டதாகவும் குறிப்பிடுகிறார். "வீரபாண்டிய கட்டபொம்மனும் ஊமைத்துரையும் தூக்கிலிடப்பட்ட பின்னர் பாளையக்காரர்கள் பலரை ஆங்கிலேர்கள் கைது செய்தனர். பின்னர் அரசியல் கைதிகள் பலர் மலேசியாவின் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டனர். இவர்களை வைத்து பினாங்கை ஒரு துறைமுக நகரமாக மாற்ற வேண்டும் என்பதே ஆங்கிலேயர்களின் திட்டம். "ஒருமுறை 71 பேர் இவ்வாறு நாடு கடத்தப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவராக சின்னமருதுவின் மகன் துரைச்சாமியும் இருந்தார். அப்போது அவருக்கு 15 வயது போல இருக்கும் என்கிறார் கர்னல் வெல்ஷ். "மலேசியா சென்ற பின்னர் மீண்டும் தமிழகம் திரும்ப துரைச்சாமி பலவாறு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், அது சாத்தியமாகவில்லை. கடைசியில் அவர் பினாங்கிலேயே இறந்துபோனார் என்றும், அவர் தமிழகம் திரும்பி அங்கு உயிரிழந்ததாகவும் முரண்பட்ட தகவல்கள் உள்ளன," என்கிறார் முனைவர் சுபாஷினி. தப்பிப் பிழைத்த இளைய மருதுவின் மகன் துரைச்சாமி மருது சகோதரர்கள் கொல்லப்பட்ட பிறகு குடும்பத்தையும் உறவுகளையும் இழந்துவிட்ட சோகத்தில் இருந்த துரைசாமி நாடு கடத்தப்படும் துயரத்துக்கும் ஆட்பட்டார். மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டபோது துரைச்சாமி எங்கிருந்தார், எப்படி தப்பிப் பிழைத்தார்? அவருக்கு உதவியது யார் என்பன குறித்துப் போதுமான விவரங்கள் இல்லை. எனினும் மருது பாண்டியர்களும் அவரது ஆதரவாளர்களும் கூண்டோடு கொல்லப்பட்ட பிறகே துரைசாமி ஆங்கிலேயர்களிடம் சிக்கியதாக மலாக்கா முத்துக்கிருஷ்ணன் கூறுகிறார். "துரைசாமியின் இயற்பெயர் முத்து வடுகநாதன். அரசர் முத்து வடுகநாத ராஜாவின் நினைவாக சின்ன மருது இப்பெயரைத் தன் மகனுக்குச் சூட்டியுள்ளார். துரைச்சாமி பார்க்க அழகாக இருந்ததால் மருதுபாண்டியர்களின் ஆதரவாளர்களுக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். அதனால் அவர்மீது அனைவரும் அதிக பாசம் கொண்டிருந்தனர்," என்று செல்லியல்.காம் இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு பாசத்துடன் வளர்க்கப்பட்ட மருது சகோதரர்களின் வாரிசு துரைசாமி பினாங்கு தீவுக்கு நாடு கடத்தப்பட, கப்பலில் ஏற்றப்பட்ட அந்த நொடியிலிருந்து அவரது வாழ்க்கையின் இரண்டாவது சோகப்பதிவு தொடங்கியது எனலாம். துரைசாமி உள்ளிட்ட அரசியல் கைதிகள் பினாங்கு தீவை நோக்கி மேற்கொண்ட பயணம் 76 நாட்கள் நீடித்தது. பயணத்தின்போது இவர்களில் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. காய்ச்சலால் ஒருவர் இறந்துபோனார். மற்றொருவர் கடலில் வீழ்ந்து உயிரை மாய்த்துக்கொண்டார். மற்ற அனைவரும் பினாங்கு சென்றடைந்தனர் என்று கர்னல் வெல்ஷ் குறிப்பிட்டுள்ளதாக மனைசெல்வி ராஜாராம் தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். வெள்ளையர்கள் இவ்வாறு நாடு கடத்துவதையும் சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கொடுமைப்படுத்தும் வகைகளில் ஒன்றாக வைத்திருந்தனர். இதன்மூலம் அன்றாடம் மனச்சோர்வுக்கு ஆட்பட்டு அவர்கள் இறந்துபோக வேண்டும் என்று கருதினர். அந்த வகையில் பெரிய மருதுவின் மருமகன் வேங்கன் பெரிய உடையார் தேவர் என்பவர் சுமத்ரா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். சிவகங்கை ராஜாவான இவர், முதலில் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டார். எனினும் பின்னர் சுமத்ரா தீவிலுள்ள பென்கூலன் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். 1825ஆம் ஆண்டு பெங்கால் மற்றும் சென்னையிலிருந்து சுமார் 800 கைதிகள் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டனர் என்று P.C. Majumdar எழுதிய Penal Settlements in Andaman's, P.47-49 என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக மனைசெல்வி ராஜாராம் கூறியுள்ளார். 1802ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி வேங்கன் பெரிய உடையார் தேவர் பெங்கூலன் சிறையில் காலமானதாக எம். பாலபகி ருஷ்ணன் தமது A struggle for freedom in the red soil of south என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய மர்மக் கோபுரங்களும், புதிரான கோயில் கட்டுமானங்களும் பண்டைய உலகின் மர்மமான 5 புனித இடங்கள் முகலாயப் பேரரசர் அக்பர் உண்மையில் ஜோதா பாயை திருமணம் செய்தாரா? 17 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்த சந்திப்பு படக்குறிப்பு, மருது சகோதரர்களின் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாடு கடத்திய பிறகு துரைச்சாமி குறித்து வெல்ஷ் அதிகம் யோசித்திருக்கவில்லை. எனினும் 1818ஆம் ஆண்டு அவர் மீண்டும் பினாங்கு செல்லவேண்டி இருந்தது. சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு துரைசாமியைச் சந்திப்போம் என்று அவரும் நினைக்கவில்லை. ஆனால் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அப்போது துரைசாமிக்கு 33 வயதாகி இருந்தது. அவரது நிலையைக் கண்டு வெகுவாக வருந்தியுள்ளார் வெல்ஷ். அந்த சோக நிகழ்வை அவர் பதிவு செய்துள்ளார். மீண்டும் தாய்மண்ணுக்குத் திரும்பவேண்டும் என்ற ஏக்கத்துடன் இருந்தார் துரைச்சாமி. கர்னல் வேல்ஷ் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று அவரைத் துரைச்சாமி சந்தித்தபோது ஒரு முதியவர்தான் தன்முன் நிற்பதாக நினைத்து விட்டார் வேல்ஷ். பின்னர் அது, தன் நண்பர் சின்னமருதுவின் மகன் துரைச்சாமி என்பதை அறிந்தபோது துணுக்குற்றுப் போனார். "ஒருநாள் நான் அலுவலகத்தில் இருந்தபோது, திடீரென மூத்துத்தளர்ந்து போன ஓர் ஏழைக் கிழவன் என் முன் தோன்றினான். பழைய நினைவு எதுவுமே அற்ற மனத்தோடு இருந்த நான், அவனை அதிகாரக் குரலில், 'நீ யார்? எதற்காக வந்தாய்?' என்று அதட்டிக் கேட்டேன். அவன் என்னைச் சிறிது நேரம் உற்று நோக்கினான். கோடு கோடாய்த் திரை விழுந்து போன அவன் முகத்தில் தாரை தாரையாய்க் கண்ணீர் வழிந்தோடியது. நெடுநேரம் கழித்துக் கடைசியாகவன் சொல்லிய சொல், 'துரைசாமி' என்பது. ஆம்! அந்தச் சொல் என் இதயத்தில் ஈட்டி போலப் பாய்ந்தது!" "என்னிடம் அவன் வந்த காரணம், தன் தாயகத்தில் வாழும் உறவினர்களுக்குக் கடிதம் அனுப்ப உதவவேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், சட்டம் அதற்கு இடம் தராததால், என்னால் ஒன்றும் செய்ய முடியாது என மறுத்துவிட்டேன்." ராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியா மற்றும் கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன் இலங்கை: அம்பாறையில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா? 'சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே' தன் 'நினைவுகளின்' இறுதியில் கர்னல் வெல்ஷ் கூறியதைப் படிக்கும் போது நம் உள்ளத் துயர் எல்லை கடந்து போகிறது! இதோ இது பற்றி வெல்ஷின் இறுதிச் சொற்கள்: "துரைசாமிக்கு என்னால் ஒன்றுமே செய்ய முடியாமல் போய்விட்டது. ஆனால், இறுதியாக என் உள்ளத்தில் உள்ள நம்பிக்கையை மட்டும் கூறிவிடுகிறேன். துரைசாமியைப் பற்றி மேலே நான் சொல்லியுள்ள சொற்களை வருங்காலத்தில் படிக்கும் எந்தக் கிழக்கிந்தியக் கம்பெனித் தலைவனாவது அருள் கூர்ந்து ஒரு குற்றமும் செய்யாத இந்த மனிதனுக்கு முழு விடுதலை தர முடியாவிடினும், இவன் படும் அல்லலயாவது குறைக்க முற்படுவானாக!' என்று மானங்காத்த மருதுபாண்டியர்' நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. துரைசாமியின் இறுதிக்காலம்: முரண்பட்ட தகவல்கள் பட மூலாதாரம்,AMAZON "பினாங்கு சிறையிலிருந்து விடுதலையானதும் சென்னைக்குச் சென்றார் துரைச்சாமி. அங்கு ஆங்கிலேய அரசிடம் தமக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரியதுடன் மதுரையில் தங்கியிருக்கவும் அனுமதி கேட்டுள்ளார். ஆனால், திடீரென நோய்வாய்ப்பட்டதால் சிவகங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் காலமானதாக சில வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. அதேசமயம் சென்னையிலிருந்து மதுரைக்குச் சென்ற அவர், அங்குள்ள கிராமங்களில் தமது குடும்பத்தாரையும் உறவினர்களையும் தேடி அலைந்ததாகவும் ஒரு குறிப்பு உள்ளது," என்கிறார் முத்துக்கிருஷ்ணன். இப்படி துரைச்சாமியின் இறுதிக்காலம் எப்படியாகக் கழிந்தது என்பது குறித்து மலேசியத் தமிழர்கள் மத்தியில் முரண்பட்ட தகவல்கள் உள்ளன. மனைசெல்வி ராஜாராமன் தமது The Great Kings Maruthu Pandiyars: The Spark of the First War of Independence கீழ்கண்ட தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அன்றைய பினாங்கு அரசாங்கம் துரைசாமியை விடுதலை செய்து உத்தரவிட்டதாகவும் இதையடுத்து அவர் இந்தியா வந்தடைந்ததாகவும் எஸ். குருதாசபிள்ள (S. Gurudhasa Pillai) எழுதிய 'திருநெல்வேலி சீமை சரித்திரம்' என்ற புத்தகத்தில் விவரம் உள்ளது (பக். 303). இதேபோல் திரு. சந்திரகாந்த் பி. (Chandrakanth. P) தம்முடைய ஆளப்பிறந்த மருது மைந்தன் என்ற புத்தகத்தில் பினாங்கு சிறையில் அடைக்கப்பட்ட அரசியல் கைதிகளில் துரைசாமி உள்ளிட்ட 10 சுதந்திரப் போராட்ட வீரர்களே எஞ்சியிருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். (Ref. Kernial Singh Sandhu, "Tamil Other Indian Convicts in the Straights Settlements. 1790-1831) என்ற புத்தகத்தை அவர் மேற்கோள் காட்டியுள்ளர். பேராசிரியர் சி. ராக்கப்பன் எழுதிய Report of Marudhu Pandiars என்ற புத்தகத்தில் 1821ஆம் ஆண்டு துரைசாமி பினாங்கிலிருந்து மதுரை திரும்பினார் என்றும் அங்கு சில காலம் வாழ்ந்து மறைந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். சில வரலாற்று ஆய்வாளர்கள் துரைசாமி சிவகங்கையில் காலமானார் என்றும் அவரது இறுதிச்சடங்கு காளையார் கோவிலில் நடைபெற்றது என்றும் குறிப்பிடுவதாக என்ற தமது புத்தகத்தில் மனைசெல்வி ராஜாராமன் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர்களால் 1802ஆம் ஆண்டு பினாங்கு தீவுக்கு நாடு கடத்தப்பட்டு, அங்கு நிகழ்ந்த கொடுமைகளையும் மீறி எஞ்சியிருந்த அரசியல் கைதிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதும் தாயகம் திரும்பவில்லை. மாறாக, பினாங்கிலேயே தங்கிவிட்டனர். அங்குள்ள பெண்களை மணமுடித்து இறுதி வரை மலேசியாவிலேயே வாழ்ந்து இறந்தனர். அந்த அரசியல் கைதிகளின் வாரிசுகள் இன்றளவும் மலேசியாவில் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். மருது சகோதரர்கள் கொல்லப்பட்டு 220 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனினும் நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த அந்த வீரரின் வாரிசுக்கு என்னவானது என்பது இதுவரை தெரியவில்லை. https://www.bbc.com/tamil/global-63526014
  22. பாலியல் குற்றச்சாட்டில் கைதான தனுஷ்கவின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை - இலங்கை கிரிக்கெட் 06 NOV, 2022 | 10:33 AM பாலியல் குற்றச்சாட்டில் கைதான இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக்கவின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுடையான நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தனுஷ்க குணதிலக்க சிட்னியில் கைதுசெய்யப்பட்டள்ளதாகவும் இது தொடர்பில் நாளை திங்கட்கிழமை (7) நீதிமன்றில் குணதிலக்க ஆஜராக வேண்டுமெனவும் சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை, நீதிமன்ற நடவடிக்கைகளை சர்வதேச கிரிக்கெட் சபை உன்னிப்பாக கண்காணிக்கும் எனவும் ஐ.சி.சி.யுடன் கலந்தாலோசித்து இது குறித்த விரிவான விசாரணைகளை மேற்கொண்டு தனுஷ்க குணதிலக்கவின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/139232
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.