Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்பாவைக் கூட்டிவர காசு தருவீங்களா சித்தி....!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவைக் கூட்டிவர காசு தருவீங்களா சித்தி....!

அம்மா....!

தர்சன் மாமா , சுகன் மாவெல்லாம் தடுப்பிலயிருந்து வந்திட்டாங்களாம்....!

ஏனம்மா எங்கடை அப்பாவை கூட்டியர நீங்கள் போறீங்களில்லை....!

இன்று முழுவதும் மகிழன் அபிராவை இப்படித்தான் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தான்.

மகன் அம்மாட்டைக் காசில்லை....அதான அப்பாவைக் கூட்டியரப் போகேலா....!

தாயின் சமாதானத்தில் அமைதியடையாதவன் மேசையில் இருந்த கொப்பி புத்தகங்களை நிலத்தில் எறிந்தான்.

கன்னத்தைப் பொத்தி அறைந்தாள் அபிரா. என்னடா....! என்ன வேணுமிப்ப...!

பொறுமையின் எல்லை கடந்த நிலையில் அபிராவின் கைகள் அவனைத் தாக்கின.

அடியின் நோவில் அவன் நீண்ட நேரம் அழுது கொண்டேயிருந்தான். எப்போதும் போலன்றிய அவனது அடம்பிடித்தல் இன்று எல்லைமீறியதும் அவளது அடியையும் நினைக்க அவளுக்கும் அழுகை வந்தது.

மகன் அம்மா எவ்வள கஸ்ரப்படுறனெண்டது உங்களுக்குத் தெரியுமெல்ல....

அவனை அணைத்து அழுதான் அபிரா.

நீங்க போங்கோ....! அப்பா வரட்டுமன் எல்லாம் சொல்லுவன்....!

அவளை உதறிக் கொண்டு முற்றத்தில் போயிருந்து அழுதான்.

சரி நீங்க போங்க தம்பி அம்மா செத்துப்போறன்....!

வாசல் வரை அழுது கொண்டு போனவளை ஓடிப்போய் கையில் பிடித்தான்.

இல்லம்மா நான் கோவிக்கேல்ல...வாங்கம்மா....!

அவளைப்பிடித்து இழுத்து வீட்டிற்குள் கொண்டு போனான். அத்தோடு அம்மாவுக்கும் மகனுக்குமான கோபம் முடிந்து நிலமை வளமைக்குத் திரும்பியது.

முற்றத்தில் நின்ற வாழையொன்று குலைபோட்டிருந்தது. வாழைப்பொத்தியை வெட்டியெடுத்தாள். இன்றைய சோற்றுக்கு வாழைப்பொத்தி வறையே இன்றைய கறி. அபிரா சமைக்கத் தொடங்க அவளது மகிழன் வெங்காயம் உரித்துக் கொண்டிருந்தான்.

அம்மா....!

என்ன மகன்.....!

சித்தி அப்பாவைக் கூட்டிவர காசுதரமாட்டாவோ...?

சித்தி பிள்ளைக்கு புதுவருசத்துக்கு உடுப்பு வாங்கச் சொல்லி காசனுப்பினவ....நாங்க நாளைக்கு கடைக்குப் போய் புதுவருசத்துக்கு உடுப்பு வாங்குவமென்ன...

அவனது அப்போதைய கதையை மாற்ற புதுவருடத்தை ஞாபகப்படுத்தினாள். புதுவருடம் பற்றிச் சொன்னதும் ஓடிப்போய் தோழில் கட்டி முத்தமிட்டான் மகிழன்.

என்ரை செல்லம்...!

அபிராவும் அவனைக் கட்டி முத்தமிட்டாள்.

தம்பி போய் விளையாடுங்கோ அம்மா சமைச்சிட்டுக் கூப்பிடுறன்....

000 000 000

வெறுமையான தேங்காய்ச் சிரட்டைகளையும் உரித்துப்போட்ட வாழைப்பொத்தித் தோலையும் எடுத்துக் கொண்டு முற்றத்திற்குப் போனான் மகிழன். ஆரிசிப்பானை கொதித்துக் கொண்டிருந்தது.

நேற்றுப்போல எல்லாத் துயரங்களும் ஒன்றும் மறக்காமல் நெஞ்சுக்குள் கனலாக எரிந்து கொண்டிருந்தது. காணாமற்போன கணவன் தொடங்கி கடைசிக்கள முடிவு வரை எல்லாமே தலையைக் குடைந்து கொண்டிருந்தது.

ஒரு போராளியாக அவள் நிமிர்ந்த காலங்களும் அவளது சாதனைகளும் போய் இப்போ சாமானியப் பெண்ணிலும் பார்க்க மோசமானவளாக காலம் அவளது வாழ்வைத் துவைத்துப் போட்டிருக்கிறது. ஒரு சமூகத்தின் மாற்றத்தின் எடுகோளாகவும் அடையாளமாகவும் எழுதப்பட்ட பெண்ணின் மாற்றமும் ஏற்றமும் அவளையும் வைத்தே வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் எழுதப்பட்டது.இன்று அவள் ? அவளது மாற்றம் ? அவளுக்கே அவள் மீது வெறுப்பாயிருந்தது.

அபிரா இன்னும் மாறுதில்லை.....அப்பிடியே இருக்குது...

ஊரில் பலர் அவளை தற்போதைய நிலமைக்கு ஏற்ப மாறாமல் அவளே தனது வாழ்வை வதம் செய்வதாய் கதைத்துக் கொள்ளும் அளவு அவள் இன்னும் தனது எழுச்சியை இன்றும் மறக்காமல் யாருக்காகவும் மாறாமல் இருக்கிறாள் என்றது அவளது குறையாகவே எல்லாரும் கதைப்பார்கள்.

அவளது மாற்றமின்மையே அவளது வீட்டில் வறுமையை தாராளமாக ஏற்றி வைத்திருக்கிறது என்பதும் பலரது குற்றச்சாட்டு. தன்னை வளர்த்த வாழ்வித்தவர்களின் நினைவுகள் உள்ளவரை தனது வாழ்வு இதுதான் என்றே நினைத்துக் கொள்வாள்.

15வயதில் அபிரா தனது ஊரைவிட்டுக் காணாமல் போனவள். 3வது பயிற்சிப்பாசறையின் மாணவியாய் பயிற்சி முடித்து 24வது பாசறைவரை பயிற்சியாசிரியையாயிருந்து அவள் கண்ட களங்களும் அவள் படைத்த சாதனைகளும் எங்கேயும் பதியப்படாக பக்கங்கள். பதிவுகளுக்குள்ளே வரையறுக்க முடியாத அதிசயங்களையெல்லாம் சாதித்த மகளீரணியின் வெற்றிகள் யாவிலும் அடையாளங்கள் யாவிலும் அவளும் எங்கோ ஒரு புள்ளியில் இருந்திருக்கிறாள்.

காதல் திருமணமென்றாகி 2குழந்தைகள் பிறந்து குடும்பமும் போராட்ட வாழ்வுமென அவள் வாழ்க்கை தளம்பலில்லாத நதிபோல் ஓடிக்கொண்டிருந்தது.

2004டிசம்பர் அவளது காதல் கணவன் கடமையின் நிமித்தம் தலைமையைச் சந்திக்கப்போயிருந்தான். 26.12.2004 தமிழர்களின் கரையோரங்களை அலைகளால் அள்ளிச்சுருட்டிப் போன அலைகள் அபிராவின் வீட்டையும் அவளையும் அவளது குழந்தைகள் இரண்டையும் அள்ளிக் கொண்டு போய் அவளை மரமொன்றில் செருகிவிட்டுத் திரும்பவும் கடலோடு அலைகள் கரைந்தது. அவள் காப்பாற்றப்பட்டு உயிர் மீட்கப்பட்டாள். அவளது சின்னஞ்சிறு குழந்தைகள் இரண்டையும் சுனாமியலைகள் கொன்று தின்று பிணமாக்கிப்போட்டது.

தலைமையைச் சந்திக்கப் போன கணவன் சுனாமியடித்த பகுதிகளில் ஒன்றான வடமராட்சியில் சுனாமி கொன்ற இடங்களில் மக்களுக்கு ஆதரவாகப் பணி செய்து கொண்டிருந்தான். பணியில் நின்றவனுக்கு அடுத்த தொங்கலில் அவனது குழந்தைகளும் அலையோடு அள்ளுப்பட்ட துயரத்தைச் சொல்லவே ஆட்களில்லாது போனது.

விடயமறிந்து ஊர் வந்தவன் அபிராவை மட்டும்தான் உயிரோடு பெற்றான். அவனது அன்புக் குழந்தைச் செல்வங்கள் இரண்டும் அலைகளோடு அள்ளுப்பட்டுப் போயிருந்தனர். தன் குழந்தைகளைக் கொண்டு போன அலைகளைச் சபித்து அழுது புலம்பி அபிரா ஆறுதற்பட ஆண்டுகள் சில எடுத்தது.

குழந்தைகள் இல்லாத காலங்களின் கண்ணீரை மறைக்கவும் மறக்கவும் வைக்க 2006இல் மகிழன் வந்து பிறந்தான். அவன் பிறந்ததோடு அபிரா அரசியல்துறையில் பணிகளுக்காய் புறப்பட்டாள். தளிர் சிறுவர் காப்பகத்தில் மகிழனைக் காலையில் விட்டுவிட்டு மக்கள் பணிக்காய் மாலைவரை இயங்கிக் கொண்டிருந்தாள். அவளோடு வளர்ந்ததைவிட மகிழன் வளர்ந்தது தளிரில்தான். தாயக விடுதலைப்போராட்டத்தில் குடும்பம் குழந்தைகள் தடைகளாக இருக்கக்கூடாதென்ற எண்ணமும் தானில்லாது போனால் தன் குழந்தையை தாயகம் காக்குமென்ற தைரியமுமே அவளை அவ்வாறெல்லாம் இயக்கியது.

விடிவு வருவதாகக் காட்டப்பட்ட நம்பிக்கைகள் சிதைவுற்று முடிவு முள்ளிவாய்க்காலில் எழுதும் வரை அவள் வன்னிக்கள முனையில் தான் வாழ்ந்தாள். கடைசிச் சரணடைதல் என்றதும் அவளது காதல் கணவன் அவளையும் மகிழனையும் உள்ளே போகுமாறு அனுப்பி வைத்தான்.

நான் வருவன் நீ போ....பிள்ளையைக் கவனமாப் பார்...!

என்று சொல்லியே அவளை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தான். முகாம் போய் , தடுப்பில் இருந்து வெளியேறி இன்று 3வருடங்களாகியும் வருவேன் என்றவன் வரவேயில்லை..... கொழும்பு ஈறாக மனுவோடு அவள் திரிந்து அவனைத் தேடி ஓய்ந்து போனாள்.

வறுமையும் வாழ்வைக் கேள்வியாக்குகிற அவன் பற்றிய செய்திகளும் மனசைக் குலைத்துப் போட்டாலும் அவள் விதவையாகாமல் இன்னும் பொட்டும் தாலியும் சுமந்து கொண்டு அவன் வருவான் என்று நம்புகிறாள்.

000 000 000

அவளது நிலமையை அறிந்த வெளிநாட்டில் இருக்கும் அவளது கணவனின் நண்பன் மூலம் ஒரு தொடர்பு கிடைத்தது. அந்த உறவு அவளுக்கு மிக அருகாமையில் உரையாடி உறவாடி அவளது மனச்சுமைகளைத் தாங்கிக் கொண்ட போது கருகிய வாழ்வைப் புதுப்பிக்கவும் பழைய கதைகளைப் பகிரவும் பழைய வாழ்வை நினைக்கவும் ஒரு தோழமை கிடைத்ததாய் உணர்ந்தாள் அபிரா. கிடைத்த புது உறவிற்கு தனதும் தனது மகிழனிதும் படங்களை அனுப்பி வைத்தாள்.

அக்கா நீங்க அபிராக்காவெல்லோ ? நீங்க றெயினிங் மாஸ்ரரா இருந்தனீங்களெல்லோ...? அந்தப் புது உறவு அவளை இனங்கண்டு கொண்டது. அவள் பற்றி அந்த உறவு விசாரித்த விசாரணைகள் தேடல்கள் முதல் முதலில் கேட்ட போது அபிரா அழுதேவிட்டாள்.

ஆரம்மா...? ஏனம்மா அழுறீங்க.....? இது பிள்ளேன்ரை சித்தியடா....! நானும் கதைக்கத் தாங்கம்மா...அவளிடமிருந்து ரெலிபோனைப் பிடுங்கி அவளுக்கு ஆறுதலாய் கிடைத்த உறவைச் சித்தியென்று உரிமை கொண்டாடினான் மகிழன்.

சித்தி சுகமாயிருக்கிறீங்களே...? சித்தி சாப்பிட்டீங்களே ? அவளோடு கூடப்பிறக்காத உறவை அவன் தனக்குச் சித்தியாக்கிக் கொண்டு சித்திக்கு தனது சின்னக் கைகளால் கடிதம் எழுதத் தொடங்கியதில் ஆரம்பித்த சித்தியுறவு தான் அபிராவின் இப்போதைய ஆதாரம்.

ஏதோ வாழ்வோம் என்றிருந்தவளுக்கு இல்லை நீ வாழ வேண்டுமென்று நம்பிக்கை கொடுத்து அவளுக்குத் தங்கையாய் கிடைத்தவளிடம் தனது குறைகளையெல்லாம் கொட்டித் தீர்த்தாள்.

ஏன்னக்காச்சி வருமானம்....? 2500ரூபாய்க்கு ஒரு இடத்தில வேலைசெய்யிறன். துப்பரவாக்கிற வேலையொண்டு....பிள்ளேன்ரை படிப்புக்கு அதுதான் உதவி....ஆற்றையேன் வீடுகளில மா இடிக்கிறது உடுப்புத் தோய்க்கிறதெண்டு செய்யிறன் அதுதான் சாப்பாடு செலவுகளுக்கு....காணாதுதான் ஆனால் கவுரவமா வாழ வேணுமே....!

இந்த 3வரிசத்தில நான் பட்ட துன்பங்கள் இருக்கே அதுகளைவிட இந்த வேலை பெரிய கஸ்ரமேயில்லை....அவர் வந்தா நானும் பிள்ளையும் முன்னேறிடுவம் தான....இந்தா இப்ப நீங்க கிடைச்சமாதிரி அவரும் திரும்பிக் கிடைப்பாரெண்ட நம்பிக்கையிருக்கு....! அபிராவின் நம்பிக்கையைச் சிதைக்க விரும்பாத புதிய உறவும் சொல்லுவாள்.....,

அண்ணை வருவரக்காச்சி....! யோசிக்காதையுங்கோ....!

அபிராவின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவளது உடன் பிறவாத தங்கை அவளுக்கொரு உதவியை புலம்பெயர் உறவுகளிடமிருந்து பெற்றுக்கொடுத்தாள். களத்தில் நின்ற கால்கள் விளைநிலத்தில் வியசாயத்தில் கால்பதிக்கத் தொடங்கியது. அபிராவின் கனவு மகிழனின் எதிர்காலம் நோக்கியதாக உழைக்கத் தொடங்குகிறாள்.

30.03.2012 அபிராவின் தங்கையும் மகிழனின் சித்தியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டாள். அக்காச்சி...!

என்னேயிறீங்க...?

வாழைப்பொத்தி வறை செய்து சாப்பிட்டிட்டு இருக்கிறன்....!

மகிழன் ஓடிவந்து தொலைபேசியைப் பறித்தான்.

சித்தி....! சித்தி....! சுகமாயிருக்கிறீங்களோ ? சித்தி அம்மா எனக்கு அடிச்சவ இண்டைக்கு...

நீங்கென்ன குழப்படி செய்தீங்கள்....? அவன் அழத் தொடங்கினான்.

தர்சன் மாமா , சுகன் மாவெல்லாம் தடுப்பிலயிருந்து வந்திட்டாங்கள்....! அம்மாட்டைக் காசில்லையாம் ..... அதான் எனக்கு அடிச்சவ...அப்பாவைக் கூட்டிவர காசு தருவீங்களா சித்தி....!

வாறன் பொறுங்கோ....! ஆரைக்கேட்டு பிள்ளைக்கு அடிச்சவா....! அம்மாட்டைக் குடுங்கோ அவக்கு நல்ல பேச்சுக் குடுக்கிறன்....

அந்தக் குழந்தை தொலைபேசியைத் தாயிடம் கொடுத்துவிட்டுச் சிரித்தான்.

அபிரா கட்டி வைத்திருந்த கண்ணீர் தொலைபேசிக்கால் உடைந்தது.

நேற்றைக்கு விடுதலையானவங்கள் ஊருக்கு வந்திருக்கிறாங்கள்....இவரைப் பற்றி ஒண்டும் தெரியுதில்ல....இவன் ஒரே கேட்டுக் கொண்டிருக்கிறான்.....எங்க தேடுறதெண்டு தெரியேல்ல....காலம் போகப்போக பயமாக்கிடக்கு.....தாங்கேலாமப் புள்ளைக்கு அடிச்சப் போட்டன்.

அபிராவின் அழுகை யேர்மனி வரையும் ஒலித்துக் கொண்டிருந்தது. என்னக்காச்சி செய்யேலும் பொறுமையா இருங்கோ....அவன் குழந்தை அவனுக்கென்ன தெரியும்....அண்ணை கட்டாயம் வருவரக்கா.....அண்ணை இனித் திரும்பமாட்டாரென்றதை அறிந்தும் அபிராவைச் சமாதானப்படுத்த அண்ணை வருவர் எனப் பொய் சொன்னாள் அபிராவின் உடன்பிறவாத்தங்கை....

புள்ளையளைக் கொண்டு போன சுனாமி என்னையும் கொண்டு போயிருக்கலாம்.....! முதல் முதலாய் அவளது நம்பிக்கைகள் சிதைந்து கொண்டதன் அடையாளமாக அபிரா சத்தமிட்டு அழுத்தொடங்கினாள்....

30.03.2012

  • கருத்துக்கள உறவுகள்

முடிவேயில்லாத தொடர்களாய் இவர்கள் சோகங்கள் :(

  • கருத்துக்கள உறவுகள்

புலத்து உறவுகள் நினைத்தால் முடிவுறுத்தலாம் என் உறவுகளின் சோகங்களை!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலத்து உறவுகள் நினைத்தால் முடிவுறுத்தலாம் என் உறவுகளின் சோகங்களை!!!!!

நிச்சயமாக நிறுத்தலாம்.

மனதை உருக்கும் வரிகள் என்று வெறுமையாய் சொல்வதைவிட.... இவைதான் இன்று எம் இனத்தின் தினசரி அவலங்களாய் திகழ்கின்றது....! இப்பொழுதெல்லாம் 'ஆறுதல்' என்ற வார்த்தையை விட 1 டொலர் என்பது பெறுமதி வாய்ந்ததாய் தெரிகின்றது.

அவர்களின் 1 டொலர் புன்னகையில் மூன்றுவேளை சாப்பிட்ட திருப்தி எனக்கிருந்தது.

ஆனால்.... விடை தெரியாத கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாத பாவிகளாய்த்தான் நாம்!

காக்க மறந்த வக்கற்றவர்கள் ஆகிப் போனோம்! காலம் கடந்த ஞானம் .... !!! :(

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதெல்லாம் 'ஆறுதல்' என்ற வார்த்தையை விட 1 டொலர் என்பது பெறுமதி வாய்ந்ததாய் தெரிகின்றது.

ஒரு டொலர் மட்டுமே இப்போது அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் அமிர்தமாக உள்ளது கவிதை. பல்லாயிரம் பேரின் எதிர்பார்ப்பு எங்களிடமிருந்து உதவிகள் தான்.

" அபிரா கட்டி வைத்திருந்த கண்ணீர் தொலைபேசிக்கால் உடைந்தது.

நேற்றைக்கு விடுதலையானவங்கள் ஊருக்கு வந்திருக்கிறாங்கள்....இவரைப் பற்றி ஒண்டும் தெரியுதில்ல....இவன் ஒரே கேட்டுக் கொண்டிருக்கிறான்.....எங்க தேடுறதெண்டு தெரியேல்ல....காலம் போகப்போக பயமாக்கிடக்கு.....தாங்கேலாமப் புள்ளைக்கு அடிச்சப் போட்டன். "

தமிழ் என்னிடம் கடன் கேட்கின்றது .

  • 6 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் ஒருபோதும் வரமுடியாத தூரம் போய்விட்ட தனது தந்தையை தனது பிறந்தநாளுக்கு வர வேண்டுமென்று கடவுளை வேண்டுகிற 8வயதுக் குழந்தையின் கடிதம் இது. இவன் போல எத்தனையோ குழந்தைகள் தங்கள் அப்பாக்களுக்காக காத்திருக்கிறார்கள்.

mahil.jpg

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

04.11.2012 அன்று தனது எட்டாவது பிறந்தநாளில் கட்டாயம் தனது போராளித்தந்தை வருவாரென நம்பிக்கையோடிருக்கிற குழந்தையின் பிறந்தநாள் நாளை. அவனது அப்பா என்றுமே வரமாட்டார்.

அந்தக் குழந்தையின் பிறந்தநாளான 04.12.2012 கள உறவு சபேசன் அவர்களுக்கும் பிறந்தநாள். இந்தக் குழந்தையின் பிறந்தநாளுக்கு சபேசன் தனது அன்பளிப்பாக 50€ உதவியிருக்கிறார். சபேசனின் உதவி எமது தொடர்பாளரால் பிள்ளையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தனது பிறந்தநாளில் ஒழு குழந்தைக்கு புதிய ஆடைகளுக்காகவும் அவனது கல்விக்காகவும் உதவிய சபேசனுக்கு நன்றிகளும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களும்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சபேசன், உங்கள் பிறந்தநாள் பரிசைப் பெற்ற 8வயது சிறுவன் கௌரீசன் எழுதிய கடிதம் இது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணும் கருணையாளர்களின் வரிசையில் உங்கள் உதவி அந்தக் குழந்தையை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறது.

IMG.jpg

இந்த ஞானகௌரீசனுக்கு மாதாந்தம் யேர்மனியிலிருந்து நேசேந்திரன் என்ற உறவின் உதவி கல்விக்கு கிடைக்கிறது. எனினும் நேசேந்திரனுக்கு இவன் எழுதிய கடிதத்தை அனுப்ப முடியவில்லை. உங்கள் உதவி மாதாந்தம் நேசக்கரம் வங்கிக்கு வருகிறது. ஆயினும் உங்களது தொடர்புக்கு எவ்வித விபரமும் இல்லை.நேசேந்திரன் நீங்கள் இவ்விடத்தை பார்க்க நேர்ந்தால் தயவு செய்து மின்னஞ்சலிடுங்கள்.

Edited by shanthy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.