Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாக்கு

Featured Replies

வெங்கடேசன் இருக்காரா?’

“இன்னும் ஆபீசிலிருந்தே வரலியே! உள்ளே வாங்க!” என்று என்னை வரவேற்றாள் வெங்கடேசனின் மனைவி.

“பரவாயில்லை. நான் அப்புறம் வரேன். போன வாரம் நான் வந்துட்டுப் போனதை சொன்னீங்களா?”

“சொன்னேன். எப்படியும் இந்த மாதக் கடைசிகுள்ளே குடுத்துடறேன்னு சொல்லச் சொன்னாங்க. உங்க மனேஜர் கிட்ட சொல்லி நீங்கதான் எப்படியாவது கொஞ்சம் போருத்துக்கச் சொல்லணும்.”

“அவரு நம்ப மாட்டாரு. இதோட நீங்களும் பத்துப் பதினைஞ்சு தடவைக்கு மேல் இப்படியே சொல்லிக்கிட்டு இருக்கீங்க.”

“இல்லை. இந்த தடவை மட்டும் எப்படியும் நிச்சயம் குடுத்துடுவார். இப்ப ஒரு இடத்தில் டேம்பரரியா வேலை கிடைச்சிருக்கு. கொஞ்சம் தயவு செய்து போருத்துக்கச் சொல்லுங்க.”

நான் தெருவில் இறங்கி நடந்தேன். வெங்கடேசனின் மனைவியை பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. ஒவ்வொரு தடைவையும் எனக்கு அவள்தான் பதில் சொல்கிறாள். வெங்கடேசன் வீட்டுக்குள் இருதாலும் இல்லையென்று போய் சொல்கிறான். அவர் இல்லாத போதும் அவருக்காகக் என்னிடம் மன்னிப்புக் கோருகிறாள்.

கோபாலன் எங்கள் ஆபீஸின் பிராஞ்ச் மனேஜர். ரொம்பவும் கண்டிப்பானவர். வாழ்க்கையில் பல படிகளைக் கடந்து வந்தவர். அதனாலேயே எல்லோரும் அப்படியே வர வேண்டும் என்று நினைப்பவர். காலையில் சரியாக ஒன்பது மணிக்கி ஆபீசுக்கு வந்தாரானால் மலை ஐந்து வரை வேறு எதைப் பற்றிய சிந்தனையையும் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு அவருக்குச் சரியாக ஓடவேண்டும். மூன்று மாதத்திற்கு முன் ஒரு நாள் என்னைக் கோபாலன் அழைத்தார்.

‘”உட்கார்! உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும்.”

உட்கார்ந்தேன். உடம்பில் ஒரு விதமான் குறுகுறுப்பு ஏற்பட்டது. கோபாலன் முகம் இவ்வளவு சாந்தமாக இருந்து நான் பார்த்ததில்லை.

“நீ க்ரோம்பெட்டையிலிருந்தா வருகிறாய்?”

“எஸ் சார்!”

“ஒன்றுமில்லை. அங்கே துரைராஜ் தெரு ஆறாம் நம்பர் வீட்டில் வேங்கடேசன்னு ஒருத்தன் இருக்கான். அவன் எனக்கு ஒரு ஐநூறு ரூபாய் பணம் தரணும். ரொம்ப நாளா ஏமாத்திண்டு வரான். அவனைப் போய் நீ பார்க்கணும்.”

“வெறுமன போய் பார்த்தா போராது. நாலு வார்த்தை அவனை சூடாக் கேட்கணும். உன்னை அலைக்கழிப்பான். விடாம் போயிண்டே இருந்தாத்தான் தருவான். புரிஞ்சுதா?”

“சரி, சார்!”

அன்று ஆரம்பித்த இந்த வசூல் படலம் இன்று வரை தொடருகிறது. வெங்கடேசன் வெகு நாட்களாய் வேலை ஏதும் இல்லாதவர். அப்படியே எங்கேயாவது வேலை கிடைத்தாலும் அங்கு மூன்று மாதத்திற்கு மேல் அவர் இருப்பதில்லை. ஊரில் அவர் பாக்கி வைக்காத இடம் பாக்கியில்லை. இரவு வெகு நேரம் கழித்துத்தான் வீடு திரும்புகிறார். இவருக்காகக் காத்திருக்கும் கடன்காரர்கள் சோர்ந்து போய் வீடு திரும்பிய பின்தான் இவர் வந்து சேருவார். அவரை இதுவரை என்னால் ஒரு தடவைதான் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு முறையும் அவர் வீட்டுக்குப் போய் வந்த பின், கோபாலனிடம் வேறு நான் திட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். எதிர்த்துப் பேசினால் வேலை போய் விடும்.

ஒரு நாள் வெங்கடேசனை அதி காலையில் பிடித்து விட்டேன்.

”வாங்கோ! உள்ளே வாங்கோ!” என்று வாய் நிறைய வரவேற்றார். நான் தயங்கிய படியே உள்ளே நுழைந்தேன். அவருடைய பெண்களும், பிள்ளை களும் கூடத்தில் வரிசையாகக் மறுநாள் பற்றிய கவலையே இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்தார்கள். எனக்குப் பேச்சை ஆரம்பிப்பதற்குக் கஷ்டமாக இருந்தது. வெங்கடேசன் சிறிதும் தயக்கமின்றி, “சொல்லுங்கோ” என்றார்.

“ஒன்றுமில்லை. உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம்னு தான் வந்தேன். கோபாலன் என்னைக் கொவிச்சுக்கறார்.”

“பாவம்! அவர் ரொம்ப நல்லவர். சரியான் நேரத்தில் பணம் கொடுத்து உதவினார். இந்தப் பணம் அவர் கிட்ட எதுக்கு வாங்கினேன் தெரியுமா உங்களுக்கு?”

நான் அவை நிமிர்ந்து பார்த்தேன்.

“என் மனைவிக்குப் பிரசவ டைம். கையில் காலணா இல்லை. ரொம்பக் கஷ்டப்பட்டுப் போயிட்டேன். கோபாலனைப் போய்ப் பார்த்தேன். உடனே குடுத்து உதவினார். ஒரு வருஷம் ஆயிடுத்து. அதோ, அந்த கொடியில படுத்துண்டு இருக்காளே, அவதான் கடைசிப் பொண்ணு! ரொம்ப தங்கமான மனுஷன்!”

“ஆனால் தினமும் ஆபீஸ்ல என்னைக் கொவிச்சுக்கிறார் சார்.”

‘நான் என்ன பண்ணட்டும் சொல்லுங்கோ. எனக்கு நிரந்தரமா ஒரு வேலையும் இல்லை. ஒவ்வொரு நாளையும் தள்ளறதே கஷ்டமாக இருக்கு. பாருங்கோ, நேத்திக்கு குழந்தைகள் யாருமே சாப்பிடலை. நான் வரும்போது பத்து இட்டிலி வாங்கிண்டு வந்தேன்.எல்லாம் காக்கா மாதிரி விழுந்து பிடுங்கி தின்றதுகள். பார்க்கவே கஷ்டமாக இருக்கு. ஒரு காலத்தில் எங்க தாத்தா எல்லாம் ரொம்ப வசதியா இருந்தவா. ஒவ்வொரு நாளும் கொறஞ்சது பத்து அசலூர் காரா வந்து சாப்பிட்டு விட்டுப் போவா! இன்னும் நன்னா ஞாபகம் இருக்கு. எங்க அப்பா எனக்குத் தடைபுடலாக் கல்யாணம் பண்ணினார். என் பெண்டாட்டி வந்து ஒரு வருஷம் கூட ஆகலை. ஒரு நாள் என்னைக் கேட்டா, “இது என்ன சத்திரமா! ஊர்ல இருக்கிற அன்னக்காவடிகெல்லாம் சோறு போட?” அப்படின்னு. அவ்வளவுதான். இப்ப நாங்களே அன்னக்காவடி ஆயிட்டோம். அத்தனை நிலமும், சொத்தும் எப்படிப் போச்சுன்னே தெரியலே. இப்ப பிச்சக்காரன் மாதிரி அலையறேன். உங்க மனேஜர் கோபாலனை எனக்கு எப்படித் தெரியும்னு உங்களுக்குத் தெரியுமோ? அவனோட அப்பா எங்க கிராமத்திலே எங்க நிலத்தை எல்லாம் மேற்பார்வை பார்க்கிறவர். இப்ப கோபாலன் பெரிய ஆளாயிட்டான்! என்னோட கஷ்டம் அவனுக்கு நல்லாத் தெரியம். இருந்தாலும் போட்டு நெருக்கறான்.”

என்னால் பதில் பேச முடியவில்லை. அந்தக் குழந்தைகளை ஒரு தடவை திரும்பிப் பார்த்தேன். காலையில் எழுந்தவுடன் மறுபடி அதுகளுக்கு பசிக்கும். அப்பாவைப் பிடுங்கும்.

“சார்! நீங்க கொவிச்சுக்கலேன்னா நான் ஒன்று சொல்லாட்டுமா?”

‘சொல்லுங்கோ”

“இன்னிக்கி உங்க ஓய்பையும் குழந்தைகளையும் அழைச்சுண்டு எங்க வீட்டுக்கு சாப்பிட வரீங்களா?”

“வேண்டாம். உங்களுக்கு எதுக்கு சிரமம்?”

“பரவாயில்லை சார்! எனக்கென்னமோ நீங்க ஒரு தடவை எங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டா திருப்தியா இருக்கும்.”

“சரி, வரேன்!”

“இன்னிக்கே வரீங்களா?”

“வரேன்.”

ஆபீசுக்கு போனவுடன் அக்கௌண்டண்டிடம் ஐநூறு ரூபாய் அட்வான்ஸ் கேட்டு ஒரு வின்னபத்தைக் கொடுத்தேன். உடனே கைழெத்திட்டுக் கொடுத்தார். பணத்தை வாங்கிக் கொண்டு நேராக் கோபாலனின் அறைக்குப் போனேன்.

“என்ன? வேங்கடேசனைப் பார்த்தியா?”

“பார்த்தேன் சார். குடுத்துட்டார்!”

“என்னது? பணமா?”

“ஆமாம் சார்!” பாக்கெட்டிலிருந்து அந்த ஐநூறு ரூபாயை எடுத்து அவர் மேஜை மேல் வைத்தேன். கோபாலனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

“எப்படிக் குடுத்தான்? ஏதாவது சொன்னானா? பாவம்! நல்லவன்தான். அவன் போறாத வேளை! அவன் குடும்பம் எல்லோருக்கும் குடுத்தே அழிஞ்சு போச்சு. அவனோட அப்பா தன்னோட நிலத்தில் விளைச்சல் இல்லேன்னாலும் கடன் வாங்கி தானம் பண்ணுவார். அதுக்காக நாம்பளும் அப்படியே இருக்க முடியுமோ? அப்புறம் இந்த வேங்கடேசனைப் போல் நடுத் தெருவில் நிக்க வேண்டியதுதான்!” என்று சொல்லிக்கொண்டே பணத்தைப் பையில் பத்திர படுத்திக் கொண்டார்.

அன்று இரவு வெங்கடேசன் தன் குடும்ப சகிதமாய் என் வீட்டுக்கு சாப்பிட வந்தார். என் மனைவி லலிதா கிட்டதட்ட ஒரு விருந்து மாதிரி அமர்க்களப் படுத்தி விட்டாள்.

சாப்பாடு முடிந்து அவர்களை வழியனுப்ப வெளியே வந்த போது வெங்கடேசனிடம் விஷயத்தைச் சொன்னேன்.

“உங்களால் எப்ப முடியுமோ அப்ப எனக்குத் திருப்பிக் குடுங்க போதும். எனக்கும் உங்க வீட்டுக்கு அடிக்கடி வந்த தொந்தரவு குடுக்க கஷ்டமாயிருதது. அதனால் தான் ஆபீஸ்ல நானே அட்வான்ஸ் போட்டு வாங்கிக் குடுத்துட்டேன். நீங்களே பணத்தைத் திருப்பிக் குடுத்துட்டீங்கன்னு அவர் கிட்ட சொல்லிட்டேன். அவரை எப்பவாவது பாத்தீங்கன்னா இதைப் பத்தி ஒன்னும் சொல்லிடாதீங்க. அப்ப நான் வரட்டுமா!”

வெங்கடேசன் குரல் தழுதழுக்க காலில் விழாத குறையாக ஏதேதோ பேசினார். அவரைச் சமாதானப் படுத்திவிட்டு வீட்டுக்குத் திரும்புவதற்குள் பெரும்பாடாகி விட்டது. எனக்குச் சந்தோஷமாக இருந்தது. ஏதோ என்னாலும் ஒருத்தருக்கு உதவ முடியும் என்கிற தன்னபிக்கையில் உடம்பு புல்லரித்தது.

உள்ளே வந்து சாப்பிட உட்கார்ந்தேன்.

“என்ன லலிதா? பேசாமல் இருக்கே? இந்த மாதிரி பசிக்கிறவங்களுக்குச் சாதம் போட்டா ஒரு சந்தோஷம் வரலை?”

“ம்……”

“என்ன, சுவாரசியமே இல்லாம இருக்கே?”

“சந்தோஷம்தான். ஆனா ஏதோ ஒரு தடவை போட்டா சரிதான். அப்புறம் இதுவே பழக்கம் ஆயிடும்.”

“நீ என்ன சொல்றே?”

“இவாள்ளாம் ஒட்டுண்ணிகள் மாதிரி. யாராவது கிடைக்க மாட்டாளான்னு காத்துண்டு இருப்பா. உங்களை மாதிரி ஒருத்தர் கிடைச்சாப் போதும். அப்படியே ஒட்டிண்டு விடுவா. நம் என்ன, சத்திரமா வெச்சுண்டு இருக்கோம், ஊர்ல பட்டினியா இருக்கிறவாளையெல்லாம் கூட்டி விருந்து படைக்க?”

கல்யாணம் ஆன இந்த இரண்டு வருடத்தில் அன்றுதான் முதன்முதலாய் என் மனைவியைக் கை நீட்டி அடித்தேன்

தெலுங்கில் -சுப்ரமணியராஜு

தமிழில் -கௌரி கிருபானந்தன்

http://siliconshelf.wordpress.com/

நல்லதொரு கதை . தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும் என எண்ணியதால் இக்கதையில் வரும் இரு பெண் பாத்திரங்களும் ஒரே வார்த்தையையே பதிலாக்கி இருப்பார்கள். இவ்வார்த்தை எங்கே தன்னையும் வெங்கடேசனைப் போல தன்னையும் நடுத்தெருவில் நிறுத்திவிடுமோ என்ற அர்த்தமற்ற மூடநம்பிக்கையில் லலிதாவை கை நீட்டி அடித்திருப்பாரோ? எப்படியென்றாலும் மற்றோர்க்கு உதவி செய்வதில் திருப்தி உண்டென்பது நிஜம். நல்லதொரு இணைப்பிற்கு நன்றிகள்.

கை நீட்டி அடிப்பது என்பது தேவையற்ற ஒன்று. எம்மால் பதில் கூறமுடியாத போதே வேறு விதமான வழிகள் கையாளப்படுகின்றன.

மற்றபடி கதையின் கருத்து நன்றே. இளமையில் வறுமையும் , பிள்ளைகளுக்கு சாப்பிடக் கொடுக்க முடியாமையும் மிகவும் கடினமானதாக் இருக்கும். எம்மக்கள் இன்னமும் இந்நிலை தாண்ட முடியாமல் வாழ்வதை நினைக்கும் போது வேதனை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் ராவணன்.

கடன்பட்டவர்களுக்கும் வட்டிக்குக் வட்டி குட்டி கட்டியவர்களுக்கும் தான்

அந்த நிலமை விளங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் வாங்கும் மட்டும் வாங்குவதற்கு அருகில் இருப்பார்கள் கடைசியில் கொடுப்பதற்கு ஒன்றுமில்லா விட்டால் பக்கத்தில் ஒருவரும் இருக்க மாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு அருமையான கதை, அபராஜிதன்! நன்றிகள்!

உங்கட முந்தின அவதாரில், ஒரு ஈர்ப்பு இருந்தது போல இருக்கு! :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு அருமையான கதை, அபராஜிதன்! நன்றிகள்!

உங்கட முந்தின அவதாரில், ஒரு ஈர்ப்பு இருந்தது போல இருக்கு! :D

நான் அதை ஆமோதிக்கின்றேன் :) .

முந்தின அவதார், நன்றாக இருந்தது அபராஜிதன்.

  • தொடங்கியவர்

கருத்துகளை கூறிய கல்கி அக்கா , ஈஸ்அண்ணா , வாத்தியார் அண்ணா , ரதி அக்கா, புங்கையூரன் அண்ணா தமிழ் சிறி அண்ணா எல்லாருக்கும் நன்றிகள்

புங்கையூரன் அண்ணா தமிழ் சிறி அண்ணா நீங்கள் சொன்ன அதே அவதாரையே திரும்ப வைத்திருக்கிறன் :D

இருவர் மனைவியும் ஒரே மாதிரி சொல்லியிருப்பது என்பதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. :wub: மற்றபடி நல்லதொரு கருத்தை கொண்ட கதை. :) இணைப்புக்கு நன்றி. :)

பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை. ஆனால் பெருமளவில் பணத்தை வைத்துக்கொண்டு உதவி செய்யாமல் கோபாலன் என்ற கதாபாத்திரம் போல் வாழ்வது உபயோகமற்றது. :wub: இறக்கும் போது பணத்தை கொண்டு செல்ல முடியாது. :icon_mrgreen: இப்படியானவர்கள் வாழும் வரை சுயநலமாக இருந்து விட்டு இறக்கும் தறுவாயில் தான் யோசிப்பார்கள். சிலர் அப்பொழுதும் யோசிப்பதில்லை. :( :(

  • கருத்துக்கள உறவுகள்

அந்தரம்,அவதிக்கு உதவி செய்வதில் தப்பில்லை...நெடுகலும் ஒரே பேர்வளியிடம் எதிர் பார்ப்பது தான் தப்பு என்று நினைக்கிறன்..அதுவும் கிறடிட் கார்ட்டில் இருந்தாலாவது எடுத்து தாருங்கள் என்று கேட்பது இன்னும் சிரிக்கிறதா அழுவதாக என்று தெரியாத நிலைமையாகத் தான் இருக்கும்.. கையில் பணத்தை வைச்சுக் கொண்டு இருந்து குடுத்து வட்டி,குட்டி எல்லாம் கட்டினால் பிரச்சனை இல்லை..கிறடிட் கார்ட்டில் எடுத்து குடுத்துட்டு நின்று முழுசும் நிலை இருக்கே சொல்லி மாளாது..நானும் இந்தச் சிக்கலில் மாட்டுபட்டு இருக்கிறன்..

ஒரு முறை தந்தையாரின் சொல்லைக் கேட்டு,மறு முறை அம்மாவின் சொல்லைக் கேட்டு அடுத்தவர்களுக்கு கடன் அட்டையில் பணம் எடுத்து குடுத்து நிறையவே அனுபவ பட்டு இருக்கிறன்...ஆனால் மீண்டும்,மீண்டும் யாராச்சும் என்ன உதவி கேட்டாலும் இல்லை,என்னால் செய்ய முடியாது என்று மட்டும் சொல்ல முடியாது இருக்கிறது.

அந்தரம்,அவதிக்கு உதவி செய்வதில் தப்பில்லை...நெடுகலும் ஒரே பேர்வளியிடம் எதிர் பார்ப்பது தான் தப்பு என்று நினைக்கிறன்..அதுவும் கிறடிட் கார்ட்டில் இருந்தாலாவது எடுத்து தாருங்கள் என்று கேட்பது இன்னும் சிரிக்கிறதா அழுவதாக என்று தெரியாத நிலைமையாகத் தான் இருக்கும்.. கையில் பணத்தை வைச்சுக் கொண்டு இருந்து குடுத்து வட்டி,குட்டி எல்லாம் கட்டினால் பிரச்சனை இல்லை..கிறடிட் கார்ட்டில் எடுத்து குடுத்துட்டு நின்று முழுசும் நிலை இருக்கே சொல்லி மாளாது..நானும் இந்தச் சிக்கலில் மாட்டுபட்டு இருக்கிறன்..

ஒரு முறை தந்தையாரின் சொல்லைக் கேட்டு,மறு முறை அம்மாவின் சொல்லைக் கேட்டு அடுத்தவர்களுக்கு கடன் அட்டையில் பணம் எடுத்து குடுத்து நிறையவே அனுபவ பட்டு இருக்கிறன்...ஆனால் மீண்டும்,மீண்டும் யாராச்சும் என்ன உதவி கேட்டாலும் இல்லை,என்னால் செய்ய முடியாது என்று மட்டும் சொல்ல முடியாது இருக்கிறது.

வருத்தம், துன்பம், பிரசவம் போன்ற முக்கிய நேரங்களில் அவர்கள் திருப்பி தருவார்களோ இல்லையோ பணம் கொடுத்து உதவ வேண்டும் :) ஆனால் மற்றைய சந்தர்ப்பத்தில் ஒருதரம் கொடுக்கலாம். அதையே சாட்டாக வைத்து திரும்ப திரும்ப கேட்டால் கொடுக்க வேண்டுமென்றில்லை :wub:

அக்கா நல்லா தான் அனுபவப்பட்டுட்டா... :D:icon_idea:

Edited by காதல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.