Jump to content

திருக்கைலாய யாத்திரை அற்புத அனுபவம் தரும் பயணக்கட்டுரை. (படங்கள் இணைப்பு)


Recommended Posts

திருக்கைலாய யாத்திரை 
 
நான் இணையத்தில் வாசித்த நல்ல ஆன்மிகப் பயணக்கட்டுரை. இரண்டு பகுதிகளை இங்கே இனைத்துள்ளேன். பிடித்திருந்தால் சொல்லுங்கள் தொடர்ந்து இணைக்கின்றேன்.
நன்றி.
 
நன்றி: நிகழ்காலத்தில் சிவா - http://www.arivhedeivam.com/
 
 
 
 
Link to comment
Share on other sites

திருக்கைலாய யாத்திரை பகுதி 1

 

ஜீன் 5 ந் தேதி காலை டெல்லி பயணம், அங்கே பாஸ்போர்ட்களை டிராவல் ஏஜென்சி அன்பர் கொண்டு வந்து கொடுக்க, அப்படியே நேபாள் தலைநகர் காட்மண்டு வரை  ஜெட் ஏர்வேஸ் விமான பயணம்.

எங்களது குழுவில் மொத்தமாக 40 பேர் தமிழகம், கேரளா மற்றும் மலேசியாவில் இருந்தும் சென்று காட்மண்டு ஹோட்டலில் மாலை ஒன்றிணைந்தோம்.

ஓய்விற்குபின் அடுத்த நாள் 6.6.2011 அன்று நேபாளில் சில கோவில்களைத் தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஓய்வு., அதற்கடுத்த நாள் 7.6.2011 அன்று நேபாளத்தில் எல்லைப்பகுதியான kodari நோக்கி பயணம்.

 

 

friendship+bridge.JPG

 

இந்தப்பாலம் நட்புப்பாலம் எனப்படும். இங்கேதான் சீன அனுமதிக்காக சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்தோம். பாலத்துக்கு வலதுபுறம் சீனாவின் ஜாங்மூ.....

 

 
tibet_map.gif
 

யாத்திரை தொடரும்.....

 

 
திருக்கைலாய யாத்திரை பகுதி 2
 

நட்புபாலத்தில் எந்த வாகனமும் போக அனுமதி கிடையாது. நடந்துபோக மட்டுமே அம்மாம் பெரிய பாலம்., இது எதுக்குன்னு சீன அரசாங்கத்துக்கே வெளிச்சம். அந்த நட்புப்பாலத்தை கடந்தால் அந்த முனையில் இரண்டு சீன இராணுவ சிப்பாய்களின் சிலைகள் பாலத்தின் இருபக்கமும் கண்ணாடி கூண்டுக்குள் நின்று கொண்டிருந்தன.

நடுப்பாலத்தில் கடுமையான பாதுகாப்புச் சோதனைக்கு பின் சீன பகுதி பாலத்தில், செல்லும் வழியில் அந்த சிலைகளை அருகில் பார்த்தேன். சிலையின் கண் விழிகள் உருளத் தொடங்கின. சற்று பிரமிப்பாக இருந்தது. உற்றுப்பார்த்தில் இரண்டுமே சிலைகள் அல்ல., நிஜ சீன காவல்துறையினர். துளிகூட  அசையாமல், முகத்திலும் எந்தவித உணர்ச்சியும் வெளிக்காட்டாது சிலையினை தோற்கடிக்கும் வண்ணம் இருபுறமும்  நின்று கொண்டிருந்தனர். இது நமக்கு ஆச்சரியத்தை தந்தாலும், எங்களால் எதையும் செய்ய முடியும் சீன அரசாங்கம் நமக்கு தரும் செய்தியாகவே தெரிந்தது.

ஒருவழியாக சீன இமிக்ரேசன் முடித்து வெளியே வந்தால் லேண்ட்குரூஸ்யர் ஜீப்கள் 10 தயாராக இருந்தன. ஒரு ஜீப்புக்கு 4 பேர் வீதம் அமர்ந்தோம். கூட  ஜீப்பிற்கு ஒருவர் என்ற விகிதத்தில் ஷெர்பாஎனப்படும் உதவியாளர்கள் ஏறிக்கொள்ள அடுத்த தங்குமிடமான நியாலம் நோக்கி ஜீப் பறந்தது.

way+to+nylam.JPG
 
way+to+nylam+2%252Ckailash+yatra%252C+ar
 
way+to+nylam+3%252Ckailash+yatra%252C+ar
 
போகும் பாதையில் தார்ரோடு, மற்றும் அறிவிப்பு பலகைகள், மண்சரிவு ஏற்படாவண்ணம் கட்டுமானங்கள் என பாதையின் தரத்தை பாராட்டித்தான் ஆகவேண்டும் 

வழியில் காவல்நிலையத்தில் நமது வருகையை பதிவு செய்துவிட்டு பயணத்தைத் தொடர்ந்தால் மேலும் இரண்டு செக்போஸ்ட்கள். இங்கும் பாஸ்போர்ட்களை பரிசோதித்துவிட்டுத்தான் நம்மை அனுமதிக்கிறார்கள். இத்த்னைக்கும் நியாலம் வரை எந்த பாதையும் இணைவதோ அல்லது பிரிவதோ கிடையாது. இருப்பினும் சீனருக்கு தெரியாமல் எந்தநபரும் உள்ளே நுழைவது சாத்தியமே இல்லை என்கிற அளவில் பாதுகாப்புகள் பலமாக இருந்தது.

way+to+nylam+4%252Ckailash+yatra%252C+ar

அதிலும் ஒரு செக்போஸ்ட் அருகில் காம்பவுண்டுடன் கூடிய பயிற்சிக்கூடம், அதில் தடிகளை வைத்து, காற்றில் அவற்றை வீசி பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தனர் காவலர்கள். இதற்கும் யாத்திரைக்கும் என்ன சம்பந்தம் என்றால் நாம் பாதுகாப்பு/பயிற்சிகள் விசயத்தில் எப்படி இருக்கிறோம். சீனர்கள் எப்படி இருக்கின்றனர் என்கிற அடிப்படைஒப்பீடுதான் 

 காவல்துறையினர்உற்சாக பானத்துடன் வலம் வருவதும், அரசியல் கட்சிகளுக்கு அடிபணிவதுமாக இருப்பது நாட்டை பற்றிய கவலை அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இல்லை என்பதை உறுதி செய்கிறது.

சுமார் ஒன்றரை மணி நேர  பயணம்தான், உயரத்திலிருந்து கீழே பாயும் சிற்றருவிகளும், மேகமூட்டம் சூழ்ந்த மலைகளும், அடர்ந்த மரங்கள் என பாதை கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. ஆனால் மெலே செல்ல செல்ல மரங்களின் அடர்த்தி குறைந்து பசுமை அற்ற, வெறுமையான மலைகளின் துவக்கத்தில் நியாலம் வந்தடைந்தோம். இடைஇடையே காத்திருத்தலுக்கான நேரம் சுமார் இரண்டு மணி நேரம் இருக்கும். சரி நியாலம் வந்து சேர்ந்துவிட்டோம். இந்த இடத்தின் சிறப்புகள் என்ன?

 
தொடர்ந்து பார்ப்போம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது போன்ற கட்டுரைகள் மன அமைதி தருவன.

 

தந்ததற்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கில் இருந்த சிவனை வடக்குக்கு அனுப்பி வைத்த வரலாற்றுத் தவறின் அடையாளம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி, தொடருங்கள் ஆதவன்

Link to comment
Share on other sites

தொடருங்கள் .

நான் இறப்பதற்கு முதல் போக விரும்பும் இடத்தில் இதுதான் முதல் இடம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குள்ளேயே கடவுளைத் தேடுவது தான் எனது நம்பிக்கை!

 

இருந்தாலும், இப்படியான யாத்திரைக் கட்டுரைகள், வாசிக்கப் படிக்கும்! குறிப்பாக, அழகிய, இமாலய மலைச்சாரலும், கங்கோத்திரி, ஜமுனோத்திரி, பசுபதிநாத், பத்ரிநாத், வாரணாசி போன்ற இடங்களின் சிறப்புப் பற்றி அறிய ஆவல்..!

 

தொடருங்கள், ஆதவன்!

Link to comment
Share on other sites

 
திருக்கைலாய யாத்திரை பகுதி 3
 
நாங்கள் சீனப்பகுதியில் பயணம் செல்லும்போது, கூடவே லாரியில் எங்கள் பொருள்கள் அனைத்தும் டிராவல்ஸ்காரர்கள் கொடுத்த பெரிய தனிதனிப் பையில் பயணம் செய்தன. அதே லாரியில் 12 நாட்களுக்கான உணவுப் பொருள்கள், சமையல் பொருள்கள் வந்ததால் நியாலம் வந்து சேர்ந்த இரண்டு மணிநேரத்தில் உணவு தயாராகிவிட்டது.

 

guest+house%252Cnyalam%252Ctibet.JPG
 

 

தங்குமிடங்களில் எங்குமே ஓட்டல்  கிடையாது. நல்ல பாத்ரூம் வசதிகளும் மிகக்குறைவே. மேலும் அங்கு நிலவும் தட்பவெப்பநிலை குளிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தாது. :) ஆக தினசரி ஆச்சாரங்களை எல்லாம் வேறு வழி இல்லாததால் ஒதுக்கி வைத்து விட வேண்டியதுதான் :)

மார்பளவு சுவர், அதற்குள் நமது சாலையோர கழிவுநீர் ஓடும் சாக்கடை சைசில்  அமைக்கப்பட்ட இடத்தில் நமது காலைக்கடன்களை முடிக்க வேண்டும். டாய்லெட் வசதிகள் எதிர்பார்க்க்கூடாது. டிஸ்யூ பேப்பர் உபயோகித்துதான் ஆகவேண்டும். கூடவே ஈர டிஸ்யூ பேப்பர் வாங்கி வைத்துக்கொள்வது அவசியம். தங்குமிடங்களில் நமது டிராவல்ஸ்காரர்கள் ஏற்பாடு செய்கிற அறை எப்படி இருக்கும் என நமக்குத் தெரியாது. சகல வசதிகளுடன் இருக்கலாம். அல்லது ஏதுமின்றி மேலே சொன்னவாறும் இருக்கலாம் :) கண்டிப்பாக குறைந்தபட்சம் ஐந்து பேர் ஒன்றாக தங்க வேண்டி வரும். அறையில் படுக்கை மட்டும்தான் இருக்கும். பாத்ரூம் இருக்காது :)

nyalam+hills+tibet.JPG

இந்த நியாலம் கடல்மட்டத்திலிருந்து 3750 மீட்டர் (காட்மண்டு 1300 மீட்டர்)உயரத்தில் அமைந்திருக்கும். இங்கு  இரண்டு இரவுகள், ஒரு பகல் என தங்க வைத்து விடுவார்கள்.காரணம் நமது உடல் அந்த உயரத்திற்கு பழக வேண்டும். புவிஉயர்மட்ட நோய்த் தாக்குதலுக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

nylalam+hills+kailsh+yatra.JPG

காட்மண்டுவில் ஏதேனும் பொருள்கள் வாங்குவதாக இருந்தால் அவற்றை இங்கு வாங்கிக்கொள்ளலாம். சீன பணம் ஒரு யுவான் நமது பணமதிப்பிற்கு சுமார் 7.50. இந்த பணபரிமாற்றம் நீங்கள் காட்மண்டுகள் இதெற்கென இருக்கும் பல கடைகளில் மாற்றிக்கொள்ளலாம். சுமார் 3000 யென் வாங்கிக்கொள்ளலாம். நான் இரண்டாயிரம் வாங்கினேன்

மற்ற பொருள்களின் விலை #கையுறை, வாக்கிங் ஸ்டிக் போன்றவை காட்மண்டுவை விட பாதிதான். மேலும் தொலைபேசியும் இருக்கிறது சுமார் 5யுவான் ஒருநிமிடத்திற்கு ஆகும்( ரூபாய் 37)..

 

 

திருக்கைலாய யாத்திரை பகுதி 4

 

நியாலத்தில் அன்று இரவு தங்கினோம். ஒரு அறையில் 7 பேர், கிட்டத்தட்ட சின்ன சின்ன குழுக்களாக எங்களை அறியாமலே சேர்ந்துவிட்டோம். மாலைவரை உடலில் குளிரின் தாக்கம் தெரியவில்லை. ஆனால் இரவு வந்தவுடன் குளிர் அதிகமாகிவிட்டது. இதை எப்படி தாங்குவது?

தெர்மல்வேர் என்கிற உடலை ஒட்டிய ஆடைகள் (உள்ளாடைகளுக்கு அடுத்ததாக)அணிந்து கொண்டோம். இந்த உடைகள் என்றால் என்ன என தெரியாமல் வந்த நண்பரும் உண்டு. இந்த உடைகள் உள்பக்கம் ரைசிங் என்கிற நுட்பத்தில் பஞ்சு வெளியே தெரியும் வண்ணம் செய்யப்பட்ட பனியன் துணியினால் ஆனது.

லைட்வெயிட் ஆக இருக்கும். அதே சமயம் வெப்பநிலை எளிதில் இந்த ஆடையை ஊடுருவமுடியாது. காற்றும் புகுந்து வெளியே வரமுடியாது. அதே சமயம் ஈரத்தை எளிதில் வெளியே கடத்திவிடும்.தனக்குள்ளே வைத்திருக்காது.
இதனால் உடலின் வெப்பம் வெளியே அதிகம் கடத்தப்படாமல் காப்பாற்றும்.. இதன்மீது கண்டிப்பாக வேறு வழக்கமான உடைகள் அணிய வேண்டும். இதற்கு மேல் மூன்றாவது அடுக்காக ஜெர்கின்போன்றவையும் அணிந்து கொள்ளலாம்.

அதே சமயம் காது மூக்கு தொண்டை போன்ற பகுதிகளை முடிந்தவரை மூடியே வைத்திருத்தல் மிக முக்கியமாக கவனத்தில் வைத்துக் கொள்ளவேண்டிய அம்சம்.

 குளிரினால் மூக்குமுனைப்பகுதி பாதிக்கப்பட்டு பாளம் பாளமாக மேல்தோல் வெடிக்க ஆரம்பித்துவிடும். இதற்கு மூக்கையும் தலை, முகம் அனைத்தையும் முக்கால்வாசி மூடியே வைத்திருப்பதுடன் பகல்வேளைகளில் சன்கிரீம் 30+ உபயோகப்படுத்த வேண்டும். முகத்தை மூட மங்கிகேப் அணிதல் அவசியம்.

காதினை மூடி வைக்காவிடில் எளிதில் உடல் வெப்பநிலை குறைந்துவிடும். தொண்டை பகுதி ஏற்கனவே தொண்டையில் கிச்கிச் இருந்தால் அதிகம் ஆகிவிடும். உடலின் வெப்பநிலை குறைந்தால் மீண்டும் இயல்புநிலைக்கு வர சிரமப்பட வேண்டி இருக்கும்.

கூடவே பிளாஸ்க் வைத்திருப்பதால் இரவு உணவின்போது குடிக்க வழங்கப்படும் வெந்நீர் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு  சில பாடல்கள் பஜன் வகையைச் சார்ந்தவை குழுவாக அனைவரும் சேர்ந்து பாடிவிட்டு உறங்கச் சென்றோம். இந்த பாடல்கள் மறைமுகமாக மூச்சு எடுக்கும் திறனை அதிகப்படுத்தும் தன்மையில் இருந்தது எனக்குப்புரிந்தது. ஆகவே லயித்து பாடிவிட்டு உறங்கச் சென்றோம். 

அடுத்தநாளும் நியாலத்தில் தங்குவதாக திட்டம். ஏனென்றால் நம் உடல் இந்த உயர் மட்ட நோய்குறிகளான தலைசுற்றல் வாந்தி மயக்கம் போன்றவை பழக வேண்டும். நியாலம் ஒரு சோதனைத்தளம் என்றும் சொல்லலாம் :)

எனக்கு ஏதும் ஆகவில்லையா என்றால் இரவு உணவின்போது சற்று தலைசுற்றல் வந்தது.....

 

தொடர்ந்து பார்ப்போம்.

Link to comment
Share on other sites

திருக்கைலாய யாத்திரை பகுதி 5

 

இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது லேசாக தலைசுற்றல் ஆரம்பித்தது. அப்படியே அமர்ந்தவாறு மூச்சை மெதுவாகவும், ஆழமாகவும் இழுத்துவிட்டுக்கொண்டே என்னுள் நடப்பதை கவனித்தேன். மெல்ல காது அடைத்தது. நண்பர்கள் பேசுவது எல்லாம் கேட்பது குறையத்துவங்க, கண்ணுள் பூச்சி பறந்தது. இதெல்லாம் சுமார் 20 முதல் 30 விநாடிக்ள் இருக்கும்.

மூச்சைக்கவனிக்க ஆரம்பித்துவிட, அப்படியே எல்லாம் அடங்கி உடல் இயல்பான நிலைக்குத் திரும்பியது. இதுவும் உயர்மட்டத்தில் உடல் தன்னைத் தானே சரி செய்துகொள்ளும் தந்திரம்தான். இதற்குப்பின் எந்த இடத்திலும் இதுபோன்ற எந்த அறிகுறிகளும் வரவில்லை.

இதை இங்கே பகிரக் காரணம் உங்கள் உடல்நிலையில் எந்த பாதிப்பும் இல்லாமல், இப்படி திடீரென உடல்நிலை மாற்றம் வந்தால்  அச்சமோ, கலவரமோ அடைய வேண்டாம். எளிதில் சரியாகிவிடும். அதே சமயம் நேரெதிராக உடல்நிலை பாதிப்பு சரி அடையவில்லை என்றால்  பயண நிர்வாகியிடம் தெரிவித்து பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு முக்கிய பங்காற்றுவது DIAMOX மாத்திரைதான். நீங்கள் இயற்கை மருத்துவம் முதலியன பின்பற்றினால் கூட அவசியத்தை ஒட்டி மாத்திரை சாப்பிடலாம். நான் அன்று மட்டும்தான் சாப்பிட்டேன். மறுபடி சாப்பிடவே இல்லை:)

அடுத்த நாள் காலை உணவிற்குப்பின் நியாலத்தில் மேற்குப்புறத்தில்  சிறிய குன்றில் (சுமார் ஒரு கி.மீ நடத்தல்)மலையேறுதல் பயிற்சி. டிராவல் ஏஜென்சியின் வழிகாட்டி எல்லோரும் இதில் கலந்து கொள்ளவேண்டும் எனவும்,  சுமார் மூன்று அல்லது நான்குகிலோ எடையுள்ள பொருள்களை பையில் போட்டு முதுகில் மாட்டிக்கொண்டு கிளம்பச் சொல்லிவிட்டார்.

மலையேறும்போது நம் கவனம் முழுவதும் அதிலேயே இருக்க வேண்டும். நம் நண்பர்,உறவினர் வந்துவிட்டாரா? அவரால் ஏற முடியாவிட்டால் நாம் என்ன செய்வது? என்ற குழப்பமெல்லாம் வேண்டாம். சிரமப்படுபவர்களை நாங்கள் (வழிகாட்டி) பார்த்துக்கொள்வோம். என்று தெளிவாக சொல்லிவிட்டார்.  சொன்னதோடு தேவையானவர்களுக்கு, தேவையான உதவிகளையும் செய்தனர்.

நடக்க ஆரம்பித்தவுடன் தான் ஒவ்வொருவருக்கும் தன் உடல்நிலை என்ன என்பது தெளிவாகத் தெரிந்தது. சுமார் 6 பேர் இந்த பயிற்சிக்கே வராமல் அறையிலேயே தங்கிவிட்டனர். இன்னும் 5-6 பேர் கால்வாசி மலையேற்றத்திலேயே முடியவில்லை எனச் சொல்லி அமர்ந்துவிட்டனர்.

25 பேர் மேலே ஏறி இருப்போம். தத்தி தத்தி வந்தவர்கள் இதில் பாதி., அவர்களிலும் சிலர் மேலே ஏறியவுடன் கால் பிடிப்பு, ,மயக்கமடைதல், குளிர் போன்றவைகளால் பாதிக்கப்பட்டனர். 15 பேர் எந்த தொந்தரவும் இல்லாமல் ஏறி விட்டு அங்கே ஓய்வெடுத்தனர். ஓய்வின்போது முடியாதவர்களுக்கு கைகால் பிடித்து விடுதல் போன்ற பணிகளைச் செய்து அவர்களை இயல்புநிலைக்கு கொண்டு வர உதவினர்.

இதையெல்லாம் ஏன் விரிவாக சொல்ல வேண்டி இருக்கின்றது?  நீங்கள் எந்த நபராக இருக்கப்போகிறீர்கள் என்ற கேள்வி உங்களுக்குள் எழ வேண்டும் என்பதற்காகத்தான். ’அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்பதனை நாம பாட்டுக்கு இருந்தால் போதும் அவன் பார்த்துக்குவான் என்பதாக இல்லாமல், நாம் பாட்டுக்கு செய்ய வேண்டியதை எல்லாம் சரியா செஞ்சிட்டு இருந்தால்போதும் மத்ததை அவன் பாத்துக்குவான் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.

அதாவது திருக்கைலாயம் போக வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் இருந்தால் மட்டும் போதாது. அதற்கேற்றவாறு உடல்தகுதியை, நலத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த யாத்திரைக்கு என இல்லாமல் நமது அன்றாட வாழ்வின் அங்கமாக இது மாற வேண்டும். இது உங்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள்... 

யாத்திரை தொடரும்.,

திருக்கைலாய யாத்திரை பகுதி 6

 

மலைமீது ஏறினால் அங்கே இதுவரை காணாத பனிபடர்ந்த மலையின் காட்சி என்னைக் கட்டிப்போட்டது. இந்த யாத்திரையில் முதன்முதலாக பனிபடர்ந்த மலைகள், கயிலைநாதனைக் காணச் செல்லும் நமக்கு கட்டியம் கூறுவது போல் காட்சியளித்தன.

nyalam%252Ckailash+yatra+1.JPG

 

nyalam%252Ckailash+yatra+2.JPG

 

இங்கே நடைபயிற்சியின்போது காலில் போடும் ஷூ, ஏங்கிள் ஷீ (டிரெக்கிங் ஷூ)எனப்படும் உள்பகுதியில் கால்மணிக்கட்டு,பாதம் இவற்றிற்கு  ஆதரவாக  உள்பகுதியில் உலோகப்பகுதிகள் வைத்து தயார் செய்யப்பட்டிருக்கும், இது நாம் நடக்கும்போது  கால் பிறழ்ந்து விடாமல் இருக்க மிகவும் உதவியாக இருக்கும். இது குறித்து தெரியாத நண்பர்கள் சாதரண ஷூக்களை வாங்கி வந்திருக்க, பரிக்கிரமாவின்போது நடக்க முடியாமல் மிகவும் தடுமாறினர்.

பாதைகளில் பெரும்பாலான இடங்கள் கற்களின்மீதுதான் நடக்க வேண்டியதாக இருக்கும். ஆக இந்த காலணியினை வாங்கத் தவறாதீர்கள். ஒருமாதம் முன்னதாகவே வாங்கி அதனோடு நடைபயிற்சி மேற் கொள்ளுங்கள். காலுக்கு பழகிவிடும். அதிலும் முக்கியம்,  வாங்கும்போது காலில் மாட்டி, ஒரு விரலை பின் குதிகாலுக்கும் ஷூவுக்கும் இடையில் செலுத்திப்பார்த்து வாங்குங்கள். அப்போதுதான் அசைவின்போது கடிக்காமல், இருக்கும். . கால்விரல்கள் இருக்குமிடம் சற்று அகலமாக (கிடைக்கும்) வாங்கிக் கொள்ளுங்கள்., 

மேலே ஏறிய களைப்பு தீர ஓய்வெடுத்துவிட்டு கீழிறங்கினோம். மலையேற்றம் வேறொரு வகையில் நமக்கு நன்மை செய்கிறது. அதாவது புவிஉயர்மட்ட நோய்க்குறிகளாக வாந்தி,தலைசுற்றல், மயக்கம் வந்தால் அந்த உயரத்தில் இருந்து கீழிறங்கினால் சரியாகிவிடும். தங்குமிடமான நியாலத்தில் இருந்து மேலே இன்னும் உயர்மட்டத்திற்கு ஏறி, பின் இறங்குகையில் உடல் சமநிலை அடைந்து நோய்க்குறிகள் சரியாகிவிடும். ஆகவே முடிந்தவரை மலையேறுவதை தவிர்க்க வேண்டாம். இதையெல்லாம் கவனத்தில் வைத்துப்பார்த்தால் மலையேறாத சில அன்பர்கள்மீது எனக்கு அனுதாபமே ஏற்பட்டது.

அடுத்தநாள் ஜூன் 10 ம் தேதி நியாலத்திலிருந்து சாகா நோக்கி பயணம்.

 

nyalam+to+saga%252C+kailash+yatra.JPG

 

nyalam+to+saga+3%252C+kailash+yatra.JPG

 

nyalam+to+saga+2%252C+kailash+yatra.JPG

 

யாத்திரை தொடரும்

 

Link to comment
Share on other sites

திருக்கைலாய யாத்திரை பகுதி 7

 

பொதுவாக நியாலத்தில் இருந்து கிளம்பி,(230கிமீ தாண்டி)பிரம்மபுத்திரா நதிக்கரையில் அமைந்துள்ள  சாகா என்கிற ஊரில் தங்குவதே வழக்கம். ஆனால் அங்கு இடமில்லை என்று அதற்கு அடுத்ததாக(மொத்தம் 375 கிமீ) டோங்பா என்ற இடத்தில் ஏழுமணிநேரம் ஜீப்பில் பயணித்து தங்கினோம். இடமில்லை என்ற காரணம் உண்மையானதாக எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் சாகா ஊரை கடக்கும்போது அங்கு நிறைய தங்கும் வசதியுடைய கட்டிடங்கள் இருந்தன. ஒருவேளை கட்டணங்கள் அதிகமாக இருந்திருக்கலாம். நமது வழிகாட்டி பணத்தை மிச்சம் பிடிப்பதற்காக டோங்பா சென்றிருக்கலாம் என்பது என் கணிப்பு, டோங்பா வசதிகள் மிகக்குறைவாகவே இருந்தது.

இரவு உடன் வந்த சில பெண் யாத்திரீகர்களுக்கு மயக்கம், தலைசுற்றல் அதிகமாகவே இருந்தது. அவரளுக்கு டயாமாக்ஸ் மாத்திரை வழங்கப்பட்டது. இது நீண்ட பயணம் மற்றும் இடையில் சுமார் 80 கிமீ பாதை மண்ரோடுதான். அருகில் உள்ள புதிய டோங்பா என்கிற ஊரில் எல்லா வசதிகளும் உண்டு. சூரிய சக்தியால் அந்த ஊரே இயங்குகின்றது :) 

அடுத்தநாள் ஜீன் 11 நேராக மானசரோவர்  நோக்கி பயணம் தொடங்கினோம். 335 கிமீ பயணம், இருபுறமும் மலைகள், நடுவே அகண்ட சமவெளி பரப்பு என இயற்கை அமைத்த பாதையில் வியந்து கொண்டே  சென்றோம். இங்கு விவசாயம் என்பதே கிடையாது. இருக்கிற சிறு புற்கள் ஆடுகளும், யாக்குகளும் மட்டுமே மேயும். 

dongba+to+manasarover%252Ckailash+yatra+

 

திடீர் மணல் குன்றுகள் இவை உருவான விதம் எப்படி என ஊகிக்கவே முடியாது:)

 
dongba+to+manasarover%252Ckailash+yatra+
நீண்ட பாதை சலிப்பே இல்லாத பயணத்திற்கு உத்தரவாதம்
 
dongba+to+manasarover%252Ckailash+yatra+
பூத்தூவலாய் பனித் துகள்கள் மலைகளின்மீது படர்ந்திருக்கும் காட்சி
 
dongba+to+manasarover%252Ckailash+yatra+
திபெத்திய அக்காவும் தம்பியும்...
 
dongba+to+manasarover%252Ckailash+yatra+
 
மனோசரோவர் ஏரிக்கரை வந்தடைந்தோம். அதன் கரையின் வலதுபுறத்தில் அடர்த்தியான பனிபடர்ந்த மலைகளின் காட்சி நம்மை உற்சாகம் கொள்ள வைக்கும்.புத்தம் புது உலகத்தில் நுழைந்த உணர்வு மனதையும் உடலையும் கவ்விக்கொள்ள ஆனந்தமான சூழ்நிலை அங்கே நிலவியதை உணர்ந்தோம்.
 
யாத்திரை தொடரும்
 

 

Link to comment
Share on other sites

திருக்கைலாய யாத்திரை பகுதி 8

 

மானசரோவர் ஏரி  கண்களில் பட்டதுமே சிறு குழந்தை போல் உள்ளம் துள்ளியது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை தண்ணீர்தான். கடலைப் போல் பரந்து விரிந்து கிடந்தது ஏரி. வாகனத்தை விட்டு இறங்கியதுதான் தாமதம். எப்போது மானசரோவரில் நீராடலாம் என்கிற ஆர்வம் அடக்க முடியாததாக இருந்தது.

வழிகாட்டியிடம் இங்கிருந்து திருக்கைலாய தரிசனம்  காண முடியுமா எனக்கேட்டோம். எங்கும் மேக மூட்டமாக இருக்க வலதுபுறம் கவனிக்கச் சொன்னார். திரும்பிப் பார்த்தால் அங்கும் மேகமூட்டம், சற்று ஏமாற்றமாக கவனிக்கத் துவங்கினோம்.

வாங்க வாங்க உங்களுக்கு இல்லாத தரிசனமா. , ஆசை தீர பாருங்க என்று சொல்லும் விதமாக சுமார் ஐந்து நிமிடங்களுக்குள்ளாக கைலையங்கிரி நாதர் தன்னைச் சுற்றிலும் இருந்த மேகத்தை மட்டும் விலக்கி காட்சியளித்தார்.

kailash+view+from+manasarover.JPG

 

தீவிரமான சைவ வழிமுறைகளிலோ,வழிபாடுகளிலோ ஈடுபடாத எனக்கு இறைசக்தி சிறப்பான வரவேற்பையும், அங்கீகாரத்தையும் கொடுத்ததாக உணர்ந்தேன்

இதை நான் இங்கே தொடர்புபடுத்திக் காட்டுவதன் உள்ளர்த்தம், நன்கு படிக்கும் மாணவனுக்கு எப்படி கூடுதலான கவனிப்பு ஆசிரியரிடத்தில் இருந்து கிடைக்குமோ, அதுபோல் எல்லோருக்கும் இறை எல்லாவற்றையும் வழங்கினாலும் எனக்கென இன்னும் சிறப்பு வாய்ந்த தருணங்களை வழங்கப்போகிறது என்பது  குறிப்பால் உணர்த்தப்பட்டதாக உணர்ந்தேன்.

தற்செயலாக நடந்ததுக்கு இவ்வளவு பில்டப்பா என யாரேனும் கேட்கலாம் தற்செயல் என்பது  எதுவுமில்லை. நடந்த நிகழ்வுக்கு காரணிகளை அறியும் திறன்/இணைத்துப் பார்க்கும் திறன்  நமக்கு இல்லையே தவிர நடப்பது எதுவும் தனித்தனியானது அல்ல என்பது என் கருத்து

போதும் என்கிற அளவு தரிசனம் செய்துவிட்டு குளிக்கச் சென்றேன்.  நாங்கள் சென்றபோது இறைகருணையால் நல்ல வெயில் அடித்தது. வழக்கமாக இப்படி இருக்காதாம். (அங்கீகாரம்?)  குளிர் அல்லது கடுங்குளிரே நிலவும். மானசரோவரில் நீராடுவது என்பது சவாலான விசயம். அதுமட்டுமல்ல காட்மண்டுவில் நாங்கள் சந்தித்த சென்னை அன்னபூரணி டிராவல்ஸ் செந்தில் அவர்கள் சொன்னது எக்காரணம் கொண்டு மானசரோவரில் ஐந்து நிமிடத்திற்கு மேல் நீராடாதீர்கள். காரணம் உடலின் வெப்பநிலை குறைந்துவிட்டால் மீண்டும் பழைய நிலைக்கு வருவது சிரமம்.  இருக்கின்ற வெப்பத்தை இழக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். மூன்றுமுறை முழுகி எழுந்து வந்துவிடுங்கள் என்றார்.

எங்கள் குரூப்பில் சென்ற வருடம் வந்த ஒரு நண்பர் டிரெட்மில்லில் பயிற்சி எடுத்து மிகவும் துடிப்பாக இருந்தவர், என்னால் பரிக்கிராமா செய்ய முடியும் என அறுதியிட்டு சென்னவர் மானோசரவர் நீரில் குளித்துவிட்டு காய்ச்சலில் விழுந்தவர் திரும்ப வரும் வரை படுக்கையை விட்டு எழவே இல்லை. ஆக உஙகள் மனம் நினைப்பது வேறு. உடல் ஒத்துழைப்பது என்பது வேறு. புரிந்து கொண்டு மானோசரவரில் நீராடுவதில் ஆர்வத்தைவிட நிதானமே முக்கியம் எனப்தை கவனித்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

நீராடவில்லை எனில் எந்த தவறுமேஇல்லை. சற்று தீர்த்தத்தை அள்ளி தலையில் தெளித்துவிட்டு வந்துவிடுங்கள்

 

kailash+view+from+manasarover+lake.JPG

 

உங்கள் உள்ளுணர்வு சொல்வதை கேளுங்கள்  இதெல்லாம் உங்களின் பாதுகாப்பு கருதியும், குழுவிற்கு நம்மால் சிரமம் ஏற்படாமல் இருக்கவும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

சரி இன்னொருவிதமாகவும் பார்ப்போம். அப்படி நீராட முடியாத நிலையில் உங்கள் உடல்நிலை இருக்குமானால், உங்களுக்கு எதுக்கு இந்த யாத்திரை? இதை நினைவில் கொண்டு இன்றிலிருந்தே உடல்நலம் பேணுவதில் அக்கறை காட்டுங்கள். இதை உங்கள் இயல்பாக்குங்கள்

யாத்திரை தொடரும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக பயனுள்ள, சுவாரசியமான கட்டுரை, கண் கொள்ள காட்சிகள் . இங்கு போவது வாழ் நாளில் நாம் செய்த பாக்கியமே. இணைப்புக்கு நன்றி ஆதவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதம்......இணைப்பிற்கு நன்றிகள். :)

Link to comment
Share on other sites

தெற்கில் இருந்த சிவனை வடக்குக்கு அனுப்பி வைத்த வரலாற்றுத் தவறின் அடையாளம்...

 

சிவன் வடக்கில்தான் இருந்தார்.  அதற்கும் மேலே இருந்தவர்கள் வடக்கிற்கு படையெடுத்ததன் விளைவு வடக்கில் சிவனின் அடையாளங்கள் மறைக்கப்பட்டு விட்டது.   இன்றும் வடக்கில் வாழும் சிலருக்குச் சிவன்தான் கடவுள்.  ஆனால் வேறு பெயரில் அழைப்பார்கள்.  என்னோடு வேலை செய்யும் ஒரு வடக்கிந்தியக் (பஞ்சாபி) குடும்பத்தினரின் கடவுள் சிவன்தான்.   இந்த வருடம்கூட சிவராத்திரி அன்று அவர்கள் அதனைக் கடைப்பிடித்தார்கள்.  

 

எனக்குள்ளேயே கடவுளைத் தேடுவது தான் எனது நம்பிக்கை!

 

இருந்தாலும், இப்படியான யாத்திரைக் கட்டுரைகள், வாசிக்கப் படிக்கும்! குறிப்பாக, அழகிய, இமாலய மலைச்சாரலும், கங்கோத்திரி, ஜமுனோத்திரி, பசுபதிநாத், பத்ரிநாத், வாரணாசி போன்ற இடங்களின் சிறப்புப் பற்றி அறிய ஆவல்..!

 

தொடருங்கள், ஆதவன்!

 

 

நானும் என்னை நானேதான் அறிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.  தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று சின்ன வயதில் படித்ததன் அர்த்தம் இப்போதுதான் விளங்குகிறது.   அதேபோல் எங்களுக்குள்தான் எல்லாமே இருக்கிறது என்பதுதான் எனது நம்பிக்கை.  இருந்தாலும் வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாறான இடங்களை நேரில் சென்று பார்க்கப் பிடிக்கும்.  அடுத்த முறை இந்தியா செல்லும்போது அனைத்துக் கோவில்களுக்கும் செல்லவுள்ளேன்.  

Link to comment
Share on other sites

திருக்கைலாய யாத்திரை பகுதி 9

 

மானசரோவர் ஏரியில் குளிக்க சென்றோம். அருகில் சென்ற போது சிறுபுற்கள் நிறைய நீருக்குள் இருந்தன. சேறு மாதிரி தெரிந்ததே ஒழிய, காலில் ஏதும் ஒட்டவில்லை. நீருக்குள் இறங்கியபோது சுனைநீரில் இருக்கும் ஜில்லென்ற தன்மை இருந்தது. . இயல்பாக நீராட முடிந்தது. கரையிலிருந்து சுமார் 100 அடி தூரம் நடந்தும் முழங்காலைவிட சற்றே மேலாக நீர்மட்டம் இருந்தது.

 

manasarover+lake+water.JPG

 

kailash+from+mansarovar.JPG

 

மானசரோவர் ஏரி சக்தியின் அடையாளமாக கருதப்படுகிறது. சக்தியின் துணையின்றி சிவத்தை காணமுடியாது. அடைய முடியாது. ஆகவே மானசீகமாக ஏரியினை வணங்கி, சிவத்தை வணங்க வந்த எனக்கு அனுமதி கொடு தாயே, இதற்கு என்ன தகுதிகள் வேண்டுமோ அதனை எனக்கு கூட்டுவிப்பாயாக என மனதார வணங்கிவிட்டு கிட்டதட்ட கால்மணிநேரத்திற்கு மேல் நீராடிவிட்டு கூடாரத்திற்கு திரும்பினேன்

 

சற்று ஓய்வெடுத்தேன். அப்போது உள்காய்ச்சல் ஏற்பட்டது போல் உணர்ந்தேன். நல்லவேளையாக இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் சரியாகிவிட்ட்து. அப்போதுதான் அதிகநேரம் மானசரோவரில் குளிக்க வேண்டாம் என்பதன் பொருள் புரிந்தது. மெல்ல இரவும் வர, தூங்கப்போனோம். அதற்குமுன்னதாக இரவு 1 மணிவாக்கில் மானசரோவரின் கரைக்குச் சென்று தேவகணங்கள், சித்தர்கள் ஏரியில் நீராடுவதை காண்போம் என முடிவுடன் தூங்கச்சென்றோம்.

நாங்கள் எழுந்தபோது மணி மூன்று , ஆனால் நாய்கள் முன்னதாக சப்தமெழுப்ப எழுந்து சென்று கரையில் காத்திருந்தோம். மனோசரோவரின் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருந்த மலைத்தொடரின் (மேலே படம் அல்லது வீடியோ 30 முதல் 45 விநாடிகள்)பின்னணியில் வெளிச்சம் வெட்டி வெட்டி தோன்றியது. அவைகள் மின்னல்கள் தாம். நம்ம ஊரில் மின்னல் கோடுகோடாக பிரிந்து வேடிக்கை காட்டும். அங்கோ சின்னசின்ன வெடிகள் வெடித்ததுபோல் குபீர்குபீர் என வெளிச்சங்கள் முக்கோண வடிவிலும் பல்வேறு வடிவிலும் காட்சியளித்தன. ஆனால் ஒரு சப்தம் இல்லை. அப்படி ஒரு நிசப்தம். மின்னல் வெட்டினால் அதன் ஒலி இடியாக நம் காதுகளை வந்தடைய வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இல்லை. வாணவேடிக்கை மட்டும் நடந்து கொண்டே இருந்தது.

இந்த ஒளிகள் சில சமயங்கள் மலைகள் அமைப்பின் காரணமாக பின்னணியில் இருந்து உருண்டு வந்து ஏரியில் விழுவதுபோலும் தென்பட்டது. மற்றபடி வானிலிருந்து எந்த நட்சத்திரமும் இறங்கிவரவில்லை. ஒருவேளை எனக்கு சித்தர்களைக்காணும் பாக்கியம் இல்லையோ

சித்தர்கள்  காட்டாற்று வெள்ளம் போல் நம்முள் பாய்ந்து மாற்றங்களை ஏற்படுத்த வல்லவர்கள். ஊனக்கண்களால் காண வேண்டுவது அவசியமில்லை. இறையின் விளையாட்டு, இயற்கையின் விளையாட்டை சுமார் ஒருமணிநேரத்திற்கு மேல் இருந்து கண்டு களித்துவிட்டு மீண்டும் கூடாரம் வந்து படுத்தோம்.

யாத்திரை தொடரும்

Link to comment
Share on other sites

திருக்கைலாய யாத்திரை பகுதி-10

 

அடுத்தநாள் (12/06/2011)முழுவதும் மானசரோவரில்தான் தங்கினோம். நாங்கள் ஒருநாள் முன்னதாக வந்துவிட்டது முக்கிய காரணம், தட்பவெப்பநிலையை, உடல் ஏற்றுக் கொள்ள இன்னும் உதவியாக இருந்தது.கூட வந்த நண்பர் தனுஷ்கோடி (வயது 60)அவர்களுக்கு உணவு முறைகள் ஒத்துகொள்ளாமல் உணவை நிறுத்தி விட்டார். என்னால் பரிக்ரமா செய்ய நிச்சயம் முடியும். இதை சொல்வதைவிட செய்துகாட்டுவேன் என்றவர், இரவு மானசரோவர் குளிர் தாங்க முடியாமலும், உணவை அடியோடு ஒதுக்கி விட்டதாலும், பரிக்ரமா தேவையில்லை. வீடு சென்று சேர்ந்தால்போதும் என்றார். இதை நான் இங்கே குறிப்பிடக்காரணம். அவரை குறை சொல்வதற்காக அல்ல.

பயண ஆரம்பத்தில் உறுதியோடு இருக்கும் ஒருவர் கிளைமாக்ஸ் நெருங்கும்போது எப்படி சூழ்நிலைகளால் மாற வேண்டியதாக இருக்கிறது என்பதை மனதில் கொள்ளுங்கள். இதுதான் நிஜம். மனதார, உணவை வெறுக்காமல், நாக்கின் சொல்படி கேட்காமல், கிடைப்பதை கால்வயிறேனும் சாப்பிடுங்கள். இங்கே உடல் ஏற்புத்தன்மையுடன்தான் இருக்கும். ஆனால் மனதில் ஏற்புத்தன்மை இல்லாததால் வரும் பிரச்சினைகளே அதிகம்.

மகளிரில் மதுரை சகோதரி ஒருவர் டில்லியில் விமானத்தில் ஏறும்போது தான் முதல்நாள் பரிக்ரமா மட்டும் செய்ய இருப்பதாகவும், நீங்கள் எப்படி என என்னிடம் கருத்து கேட்டார்.

நான் எந்த முடிவும் செய்யவில்லை. அங்கே சென்ற பின் பார்த்துக்கொள்ளலாம். சிவம் என்ன சொல்கிறதோ அதன்படி, ஒருநாளோ, மூன்றுநாளோ, அல்லது அடிவாரத்துடனோ அதன் இஷ்டம்தான் என்றேன்.

எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்வது என்பது நிகழ்காலத்தில் இருத்தலை தடை செய்யும். வாழ்க்கைக்கும் இதே சூத்திரம்தான்

உங்கள் மனநிலையில் மகிழ்ச்சியைத்தவிர, வருத்தமோ, கலக்கமோ, பயமோ இருப்பின் அது உங்கள் உடல்நிலையை நேரடியாக பாதிக்கும் என்பதை மனதில் கொண்டு இயல்பாக இருங்கள்.

ஆரம்பத்தில் இருந்தே குளிர் எனக்கு பிடிக்காத ஒன்றாக இருந்தாலும் மனதை மாற்றிக்கொண்டேன். சூழ்நிலையை மனதளவில் ஏற்றுக்கொண்டு இருக்க குளிர் பழகிவிட்டது. சாதரண ஆடைகளை அணிந்து கொண்டு இயல்பாக வலம் வரமுடிந்தது. இங்கே என் உடல் ஏற்றுக்கொள்ளும் தகுதியில்தான் இருந்தது. மனதைமுரண்டு பிடிக்காமல் சாந்தப்படுத்தியதும் எல்லாமே எளிதானது. நீங்கள் பயணம் செய்யும்போது உங்கள் உடல்நிலையை கருத்தில் கொண்டு இதுபோல் இயங்கிப்பாருங்கள்.

இன்று ஏரியினுள் அல்லது ஏரிக்கரையினில் இயற்கையாக கிடைக்கும், தெய்வங்கள் வடிவிலான மூர்த்தங்கள் சேகரிக்கத் தொடங்கினோம். கரையினில் நிறையக் கிடைக்கின்றன. பலருக்கும் விருப்ப வடிவ மூர்த்தங்கள் கிடைக்க, நானோ எந்தவித விருப்பமும் இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்த வடிவங்களை எடுத்தேன். அவைகளை எனது நண்பர் தனுஷ்கோடி அய்யாவிடம் காண்பித்தேன். அவர் மலைத்தார்.

 

moorthas%252C+kailash+manasoravar.JPG

 

”என்னங்க இது கைலாசநாதனே வந்திருக்கார்” என்றார். (அங்கீகாரம்!?)” பசுபதி நாதரும் வந்திருக்கார். சிவன் மட்டுமே உங்கள் கண்ணில பட்டிருக்கார்” என்றார். ”எனக்கென்னங்க தெரியும். கண்ணில பட்டுது எடுத்துட்டு வந்திட்டேன். நீங்க சொன்னதுக்கு அப்புறம்தான் எனக்கே அடடே அப்படியான்னு தோணுது” எனச் சொல்லிவிட்டு, அவர் தனது குடும்பத்தினரின் ஆத்மலிங்கங்களை வைத்து பூஜைகள் செய்ய, பரம திருப்தியோடு அவருடன் பூஜையில் கலந்து கொண்டு, பின் கூடாரம் திரும்பினேன்.

அடுத்த நாள் காலை  திருக்கயிலைக்கு அருகில் அமைந்துள்ள டார்சன் என்கிற முகாமுக்கு செல்லக் கிளம்பினோம்.


யாத்திரை தொடரும்

 


 
திருக்கைலாய யாத்திரை பகுதி-11
 
மானசரோவரில் இருந்து கிளம்பி அந்த ஏரியை ஜீப்பிலேயே வலம் வந்தோம். தண்ணீர் கடல் அலைபோல வீசிக்கொண்டு இருக்க, தண்ணீரோ ஒரு துளி கூட கலங்கல் இல்லாமல் அடி ஆழம் வரை பார்க்கும் வண்ணம் இருந்தது. மறுகரையில் அனைத்து ஜீப்புகளும் நிறுத்தப்பட, கரையில் கிடந்த கற்களில் தனக்குகந்த மூர்த்தங்களை நண்பர்கள் பொறுக்கி எடுத்தனர். நான் ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்துவிட்டேன்.  மானசரோவர் ஏரி இந்த இடம் அந்த இடம் என்று வேறுபாடு இல்லாது எல்லா இடத்திலும் அதன் சக்தியை எளிதில் உணர முடிந்தது. 

அங்கிருந்து கிளம்பி டார்சன் முகாமுக்கு வரும் வழியில் நமக்கு கைலாயநாதர் காட்சி தருவதைப்பாருங்கள். மலையில் முகம் போன்ற அமைப்பு தெரியும்.!

kalash+view+from+manasarover+to+darchen.

 

டார்சனில் தங்குமிடம் இன்னும் வசதியாக இருந்தாலும் எங்களின் டிராவல்ஸ்காரர்கள் சுமாரான அறைகளையே ஏற்பாடு செய்திருந்தனர் இங்கு தொலைபேசி வசதி இருக்கிறது சூரிய பகவானின் புண்ணியத்தில் வீட்டிற்கு போன் பேசிவிட்டு வெளியே, ரோட்டுக்கு வந்தால் இருபது யுவான்-(150ரூபாய்)ல் வெந்நீர் குளியல் வாய்ப்பு கிடைத்தது. சரி கைலை நாதனை காண வந்த நமக்கு உடல்தூய்மைக்கு ஒரு வாய்ப்பு என நிறைவாக குளித்து வந்தேன்.

இங்கும் தேவையான பொருள்கள் வாங்கிக்கொள்ளலாம். கடைகள் நிறைய உண்டு. மாலை உணவு அருந்திக்கொண்டு இருந்தபோது திருக்கைலை யாத்திரை நாளைக்கு செல்வது ஒருநாள் மட்டுமே சாத்தியம், இரண்டாம் நாள் யாத்திரை செல்ல முடியாது.பனிப்பொழிவு அதிகம். குதிரைகளும், யாக்குகளுமே போகவில்லை. போனால் பார்ப்போம் என்று வழிகாட்டிகள் சொன்னார்கள்.

முதலிலிருந்தே வழிகாட்டிகள் நிறைவாகவே எங்களுக்கு உதவிகள் செய்து வந்தாலும் இந்த விசயத்தில் எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. அதுவும் அவர்கள் சகயாத்திரிகர்கள் அனைவரிடமும் இதே மாதிரி சொல்ல, இது உண்மையா அல்லது பொய்யா என்ற சந்தேகம் எனக்கும் மலேசியாவைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற நண்பருக்கும் வந்துவிட்டது.

முக்கியமான விசயம் பரிக்கிரமாவின் இரண்டாம்நாளும், மூன்றாம் நாளும் உணவு ஏற்பாடுகள் செய்வது என்பது குதிரைக்கொம்புதான் எல்லா பொருள்களும், பாத்திரங்கள் உள்பட யாக்குகளின் மேல்தான் கொண்டு செல்ல வேண்டும். 

இறைவனின் விருப்பம் ஒருநாள் யாத்திரை ஆயின் ஏற்றுக்கொள்வோம். ஆனால் பணம், சிரமம் இரண்டையும் கருத்தில் கொண்டு வழிகாட்டிகள் தவிர்க்க நினைத்தால்,அதை ஏற்றுக்கொள்ளமுடியாது என முடிவு செய்து வழிகாட்டி மற்றும் அமைப்பாளர்களிடம் இதை இப்போது ஏற்றுக்கொள்ள முடியாது. அங்கே சென்ற பின் நிலைமைக்கேற்றவாறு முடிவு செய்து கொள்ளலாம் என தகவல் தெரிவித்து விட்டோம். 

 காலையில் யாத்திரை சென்று ஒரே நாளில் திரும்பி வந்தால் அதன் பின்னர் டார்சனில் தங்குமிட கட்டணமாக இரண்டு நாளுக்கும் 100 யுவான்  அல்லது ஒருவேளை மூன்று நாள் யாத்திரை செல்லும் வாய்ப்பு இருந்தால் மலைமீது இரவு தங்க இரண்டு நாளைக்கு 160 யுவான்களும் வசூலித்தார்கள்.

மேலும் சுமைதூக்கிகள் தேவையெனில் 450 யுவான், இந்த சுமைதூக்கிகள் சீன அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் முன்னதாக பணம் கட்ட வேண்டும் என அதையும் வசூலித்துக்கொண்டார்கள். சுமைதூக்கிகளுக்கான பணம் மானசரோவரிலேயே வசூலிக்கப்பட்டுவிட்டது. குதிரையில் பயணம் செய்ய 1350 யுவான் (10000ரூபாய்), ஆனால் எதுவுமே போவதில்லை. கட்டிய பணம் எக்காரணம் கொண்டும் திரும்பக் கிடைக்காது எனவே அவர்களே வேண்டாம் எனச் சொல்லி விட்டனர். நான் போகிறமோ இல்லையோ சுமைதூக்கிக்கான பணத்தை கட்டி விட்டேன். 

வந்த 40 பேரில் 15 பேர் ”நாங்கள் யாத்திரைக்கு வரவில்லை” எனச் சொல்லி விட்டனர். இதில் நால்வர்  திரும்பி ஜாங்மூ செக்போஸ்டுக்கே சென்று விட்டனர். டார்சனில் குளிர் இன்னும் அதிகம். டிராவல்ஸ்காரர்கள் எங்கள் அனைவருக்கும் ஸ்லீப்பிங் பேக் காட்மண்டுவில் கொடுத்திருந்தனர். அதனுள் புகுந்து படுத்துக்கொண்டு ஜிப்பை இழுத்துவிட்டு தூங்க ஆரம்பித்தோம். குளிர் தாங்கியது.

யாத்திரை தொடரும்.

 

Link to comment
Share on other sites

திருக்கைலாய யாத்திரை பகுதி-12

 
இரவு தூங்குமுன்னர் ஒரு சில அன்பர்கள் பச்சைக்கற்பூரத்தை பொடித்து தன் படுக்கையைச் சுற்றிலும் தூவிக்கொண்டனர். இது காற்றில் ஆக்சிஜனை இழுத்துக்கொடுக்கும். மூச்சித் திணறலை சமாளிக்கும். எனக்கு ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லையே தவிர அவர்கள் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள்.

இன்னும் தங்குமிடங்களில் LED டார்ச்லைட்டுகள் உபயோகப்படுத்துவது நல்லது, பேட்டரியும் தீராது. சூடும் வராது. டார்சன் மற்றும் பரிக்கிரமாவின்போது தங்குமிடங்களில் எக்காரணம் கொண்டும் அறைக்குள் மெழுகுவர்த்தி/சி.லைட்டர் ஏற்றி வைத்துவிட்டு தூங்குவதை தவிர்க்கவேண்டும். காரணம் காற்றில் ஏற்கனவே இருக்கும் குறைந்த பட்ச அளவு ஆக்சிஜனையும் மெழுகுவர்த்தி காலி செய்துவிடும் என்றும் சொன்னார்கள். யாரேனும் ஒருவருக்கும் பாதிப்பு இருந்தாலும் தூக்கத்திலேயே உயிர் பிரிய நேரிடும்.

ஏதேனும் மூச்சுத் தொந்தரவு/திணறல் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் இது போன்றவற்றை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அரைத்தூக்கமே தூங்கி எழுந்தோம்.

14/06/2011 அன்று காலை எழுந்தவுடன் எங்களது பொருட்களை எல்லாம் டிராவல்ஸ் லாரியில் ஒப்படைத்து விட்டோம். எங்களுக்கு முதுகில் சுமக்கும் பையில் மிக அத்தியாவசியமான ஒரு செட் ஆடைகள், இதுவும் எப்படியோ நாம் போட்டிருக்கிற உடைகள் நனைந்து விட்டால் போட மட்டுமே, இல்லையென்றால் அப்படியே திருப்பிக்கொண்டு வர வேண்டியதுதான்
கொஞ்சம் உலர்பழங்கள் எடுத்துக்கொண்டோம். 

தண்ணீர் பாட்டில், மதிய உணவாக ஒரு ஆப்பிள்,ஒரு ரொட்டி,ஜீஸ் பெட்டியில் அடைத்து கொடுத்துவிட்டார்கள். காலையில் கிளம்பி பரிக்ரமா தொடங்குமிடமான டோராபுக் வந்தடைந்தோம். அங்கும் அரசு நடைமுறைகள் இருந்தன.ஆனாலும் கெடுபிடி இல்லை. அருகில் இருந்த(நுழைவாயில்கள் மட்டும்) யமதுவாரைக் கடந்து எங்கள் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

பரிக்ரமா செல்லாத நண்பர்களும் எங்களை வழி அனுப்ப வந்தனர். இங்கே எங்களைப்போல் பல குழுக்கள் இருந்தனர். இதில் குதிரைகளில் செல்வோரும் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது மூன்று நாள் பரிக்ராமா குறித்து இன்று சொல்ல முடியாது. நாளைதான் தெரியும் என்று பதில் கிடைக்க, பரிக்ரமா வராத நண்பர்கள் வழிகாட்டிகள் சொன்னதில் உண்மை இருக்கிறது போல என தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

பரிக்ராமா என்பது அனைவருக்கும் எளிதானதல்ல., சிரமம் தரக்கூடியதே., அதிலும் உடல்நிலை பாதிப்பு இருப்பின் திடீர் தட்பவெப்ப நிலை மாற்றம், மழை ஆகியவற்றை சமாளிக்க முடியாமல் ஓரிருவர் இறந்துபோவதும் உண்டு. இந்த தகவலை அனைவரும் கேள்விப்பட்டே இருந்தால் சகநண்பர்கள் குறிப்பாக வராதவர்கள், கிளம்பிய எங்களை மிகுந்த உணர்ச்சிக்குவியாலாக கட்டிப்பிடித்து கண்கள் கலங்க, பார்த்து எச்சரிக்கையாக சென்று வரும்படியும். அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம் என  வேண்டுகோளுடன் வழி அனுப்பி வைத்தனர்.

சூரிய பகவானின் கடைக்கண் பார்வை எங்கள் மீது படர, நாங்கள் நடந்து செல்ல ஆரம்பித்தோம். சுமார் பத்துபேர் தங்கள் சுமைகளை தாங்களே தூக்கிக்கொண்டு நடக்க.,இன்னும் பத்துப்பேருக்கு ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட சுமைதூக்கிகள் வந்து சேர்ந்தனர். மீதி பேருக்கு எங்கள் டிராவல்ஸ் உடன் வந்த ஷெர்பாக்கள் எனப்படும் உதவியாளர்கள் வந்தார்கள். நாம் கட்டிய பணம் இவர்களுக்குச் சேரும். 

நடக்க ஆரம்பித்ததும் மற்ற எண்ண ஓட்டங்களெல்லாம் குறைந்துவிட்டன. கீழே இருக்கிற படங்களை பாருங்களேன். நாந்தான் பெரிய ஆளு என்கிற எண்ணமெல்லாம் எவ்வளவு நகைப்புக்குரிய விசயம்., இயற்கையின் படைப்பில் நாம் ஒரு அற்ப புழுதான். இந்த மலையை பார்க்க, பார்க்க இதன் விஸ்தீரணம், விசுவரூபம் மனதில் அழுத்தமாக ஏறி உட்கார்ந்து கொண்டது.
 
kailash+yatra+first+day+%25281%2529.JPG
 
kailash+yatra+first+day+%25282%2529.JPG
 
kailash+yatra+first+day+%25283%2529.JPG
 
kailash+yatra+first+day+%25284%2529.JPG
 
பயணம் தொடரும்
Link to comment
Share on other sites

திருக்கைலாய யாத்திரை பகுதி 13

 
இடுப்பில் மழையில் நனையாத பெல்ட், அதில் டார்ச், கொஞ்சம் பணம் யுவான், கேமரா, எக்ஸ்ட்ரா பேட்டரி, கழுத்தில் கயிறுடன் கூடிய UV கண்ணாடி, இது பனியில் சூரிய ஒளி பட்டு பிரதிபலிக்கும்போது புற ஊதா கதிர்களினால் கண் பாதிக்கப்படாமல் இருக்க, கையில் பனியிலும் நடக்க உதவியாக வாக்கிங் ஸ்டிக். தோளில் மாட்டியுள்ள பையில் ஒரு செட்காலுறை, கையுறை இவற்றுடன் பாதயாத்திரையாக கிளம்புவோம் என்பது  நான் நினைத்துப்பார்க்காத ஒன்றே.

சரி சதுரகிரி,வெள்ளியங்கிரி என மலை ஏறிய அனுபவங்கள் இருப்பதால் அதிகம் யோசிக்காமல் ஷெர்பா எனப்படும் உதவியாளருடன் நடையைக் கட்டி விட்டேன். கிளம்பும்போது மணி 11.30 சீன நேரம். யார் பின்னால் வருகிறார்கள் என்றெல்லாம் பார்க்காமல் நடக்க ஆரம்பித்து விட்டேன்.
 
kailash+yatra+first+day+%25285%2529.JPG
 
kailash+yatra+first+day+%25286%2529.JPG
 
kailash+yatra+first+day+%25287%2529.JPG
 
மலேசியாவில் இருந்து வந்த சகோதரி ஒருவர் ஏற்கனவே நுரையீரலில் சிறு அறுவைச்சிகிச்சை செய்திருப்பார் போலும்.  ஒரு கி.மீ நடந்தவுடன் மூச்சுத்திணறல் ஏற்பட உதவியாளருடன் திருப்பி அனுப்பப்பட்டார். 

நான் சற்று தனிமையை விரும்பியதால் யாரோடும் சேராமல் நடக்க ஆரம்பித்துவிட்டேன். அதிகம் பேசுவது என்பது அங்கு உடலில் உள்ள ஆக்சிஜனில் இழப்பை ஏற்படுத்தும் என்பதும் ஒரு காரணம். 

நண்பர்கள் உடன் வர கொஞ்சம் தூரம் நடந்தவுடனே களைப்பு அடைந்து அமர்ந்து ஓய்வெடுத்து, ஓய்வெடுத்தே வந்தோம். கொண்டு வந்த ஸ்நாக்ஸ், எனர்ஜி டிரிங்ஸ் என எல்லாவற்றையும் நண்பர்கள் காலி செய்து கொண்டே வந்தனர்.

ஆனால் கூட வந்த ஷெர்பாக்களோ தண்ணீர் மட்டுமே அருந்தினர். அதுவும் மிகவும் குறைவாகவே., அவர்களை பார்த்து நானும் தண்ணீர் மட்டுமே அருந்தினேன். 
 
kailash+yatra+first+day+%25288%2529.JPG
 
மேற்கு முக தரிசனம், சத்யோஜாத முகம் என்று அழைக்கப்படும் கைலயங்கிரியின் தோற்றம்.  இடதுபுறம் பாதியாக தெரிவது நந்தி பர்வதம். மலையை சற்று உற்று பாருங்கள்..பார்த்துக்கொண்டே இருங்கள்., உங்கள் மனதில் என்ன உணர்வு தோன்றுகிறதோ அதேதான் எனக்கும்
 
kailash+yatra++first+day+%25289%2529.JPG
 
நீங்கள் திருக்கைலாய மலையிலிருந்து நேரடியாக உருகிவரும் தீர்த்தத்தை இங்கு மட்டுமே பார்க்க/சேகரிக்க முடியும். இந்த விவரம் எனக்குத் தெரியாததால் தீர்த்தத்தை தலையில் வைத்தும், கண்களில் ஒற்றிக்கொண்டும், நிறைவாக போதும் என்கிற வரையும் அருந்தினேனே தவிர சேமிக்கவில்லை. ஆனால் ஒரு நாள் யாத்திரையாக இதே வழியாக திரும்பிவரும்போது சேமித்துக்கொள்வது நல்லது., சுமையைக் குறைக்கும்


யாத்திரை தொடரும்
 
 

திருக்கைலாய யாத்திரை பகுதி 14

 
இந்த மேற்கு முக தரிசனத்திற்கு பிறகு தொடர்ந்து நடக்க ஆரம்பித்தோம். நம்முடன் கூடவே வருகிறார்போல் திருக்கைலை நாதர் தோற்றமளித்துக் கொண்டே வந்தார். கூடவே நந்தி பர்வதம் மலையும்.,
kailash+nandi+parvatham.JPG
 
அதே இடத்தில் நின்று  பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல பரவச உணர்வு உள்ளத்தில் பொங்க,  உடன் வந்த யாத்திரீக நண்பர்கள் என்னைத் தாண்டிச் செல்ல, நானும் வேறு வழியில்லாமல் மெள்ள மெள்ள நகர்ந்தேன்.
 தூரம் செல்லசெல்ல, கால்கள் ஓய ஆரம்பித்தது. பாதித்தூரத்தை கடந்தது போன்ற உணர்வு ஏற்பட கண்ணில் பட்டது கடை.. ஆம் அங்கே பிஸ்கட், குளிர்பானங்கள், சூப், நூடுல்ஸ் போன்றவை விற்பனைக்கு இருந்தன.
 
kailash+yatra+1st+day+shop.JPG
 
நல்ல பசியாக இருந்ததால் ஒரு பாக்கெட் பிஸ்கெட் வாங்கிகொண்டேன். கூட வந்த ஷெர்பாவுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டேன். ஒரே ஒரு கோக் மட்டும் வாங்கிக்கொண்டார்.வேறு ஏதும் தேவையில்லை என மறுத்து விட்டார். கடையைத் தாண்டி இன்னும் தூரம் சென்று அமர ஏதுவாக பசுமை, நீரோடை என ஒரு இடம் கிடைக்க அமர்ந்தேன்.

கூடவே யாக்குகள் எனப்படும் லக்கேஞ்களை தூக்கிக்கொண்டு வந்த எருமைகள் வந்தன. அவைகளும் அதே இடத்தில் மேய்ந்து கொண்டு இருந்தன.
 
kailash+yak.JPG
 
பத்து நிமிட ஓய்விற்குப்பின் நடக்க ஆரம்பிக்க, மேற்கு முக தரிசனத்திலிருந்து வடக்கு முகமும் தெரிய ஆர ம்பிக்கிறது. திருக்கைலைநாதரின் மேற்கும் முகமும் வடக்கு முகமும் ஒரு சேர காட்சியளிக்கும் அற்புதத்தை நீங்களும் கண்டு களியுங்களேன் !!
 
kailash+northwest+face.JPG
 
mt+kailash+first+day+view.JPG
 
kailash+first+day+view.JPG
 
நடந்து சென்ற பாதை... லாசூ பள்ளத்தாக்கின் காட்சி....

யாத்திரை தொடரும்
Link to comment
Share on other sites

திருக்கைலாய யாத்திரை பகுதி 15

 
லா சூ பள்ளத் தாக்கில் திபெத்திய யாத்திரீகர்கள் எங்களைப்போல் பாதயாத்திரையாக வந்தாலும் தொடர்ச்சியாக நடக்கவில்லை.திருக்கைலை மலையை நாம் சிவமாக பார்த்தால், அவர்கள் மலை அமைந்த அந்த பீடபூமி பகுதி முழுவதையும் சிவமாகவே பார்க்கிறார்கள்!.

அதோடு, அத்தகைய தன்மையில் திருக்கைலை மலை இருக்கும்போது தாங்கள் நடந்து போவதை பொறுத்துக்கொள்ளும்படியோ என்னவோ கீழே விழுந்து வணங்கி, பின் எழுந்து மீண்டும் விழுந்து வணங்கி, நமஸ்காரம் செய்து கொண்டே செல்கின்றனர். இப்படித்தான் இவர்களது முழுப்பயணமும் இருக்கிறது.!!

 

இவர்களைப் பார்த்தபோது, நடந்து சென்றதில் எனக்கு இருந்த தற்பெருமை கரையத் தொடங்கியது பாத யாத்திரையில் இன்னும் தொடர்ந்து நடக்க, நடக்க மெதுவாக, உடலில் களைப்பு ஏற்பட்டது., மனமும் களைக்க ஆரம்பித்தது. இது சரியல்லவே., உடல் வலுவைக்காட்டிலும் மனவலிமை முக்கியமாயிற்றே., மனதின் வலுவைக்கூட்ட, மனதை பஞ்சாட்சர மந்திரத்தை திரும்பதிரும்ப உச்சரித்துக்கொண்டே இருக்கச் செய்தேன். நடையை இன்னும் எட்டிப்போடத் துவங்கினேன். ஒய்வை குறைத்து நடையை அதிகப்படுத்தியது நான் செய்த தவறுகளில் ஒன்று. நிகழ்காலத்தில் இருத்தல் என்பதை விட்டு போய்சேர வேண்டிய இடத்தில் மனதை வைத்தது இரண்டாம் தவறு.

ஆனால் நடப்பதில் மனம் லயிக்கவில்லை என்றபோது, உடலும் மனமும் மெள்ள இசைவு குறையக்குறைய என் உடல்,மன ஆற்றல்கள் அதிகம் விரயம் ஆகத் தொடங்கியது. மனமும் மந்திரந்தை உச்சரிக்க மாட்டேன் என அடம்பிடித்து 'சிரமமாக இருக்கிறது' என புலம்ப ஆரம்பித்தது.

புறப்பட்டதில் இருந்து சுமார் 6 மணி நேரம் நடந்தாயிற்று. ஆயாசத்துடன் அண்ணாந்து பார்க்க தூரத்தில் எங்களின் வழிகாட்டி நின்று கொண்டு எங்களை வரவேற்று கையை அசைத்தார்.! தங்குமிடமான ’திராபுக்’ வந்துவிட்டது என தூரரரரத்தில் இருந்த கட்டிடத்தை காட்டினார். அங்கு எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையை அடைந்தேன். உடல்முழுவதும் வியர்த்து இருந்தது. உள்ளே அணிந்திருந்த பேண்ட்,பனியன் நனைந்திருந்தன. அவற்றை முதலில் கழட்டி விட்டு மாற்று உடைகளை அணிந்து கொண்டேன்.

அதன் பின் இரண்டு மணிநேர இடைவெளியில் சகயாத்திரீகர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். மிக ஆர்வமாக தாங்களே சுமைகளைத் தூக்கி வந்தவர்களும், மற்ற அனைவருமே களைத்து, ஆயாசத்துடனே வந்து சேர்ந்தனர்.!!

 

kailash+north+face.JPG

 

முதல் நாள் மாலை தங்கியிருந்த திராபுக் என்ற இடத்திலிருந்து கைலையின் வடக்குமுக தரிசனம்...

 

kailash+diraphuk+view.JPG

 

திராபுக் தங்குமிடமும்., வடக்கு முக தரிசனமும்

 

kailash+view.JPG

 

கொஞ்ச நேரம் கழித்து இன்னும் கிட்டே இருந்து...

 

kailash+diraphuk+beds.JPG

 

திராபுக் தங்குமிடத்தில் அறையினுள் படுக்கை வசதிகள் மட்டும்..

 

kailash+view+with+mist.JPG

 

இரவு நெருங்க நெருங்க மேகமும், பனியும் சேர்ந்து புகைபோல் கைலைநாதரைச் சூழ்ந்து கொள்ள.. அவரைப்போலவே எங்கள் மனமும் குளிர்ந்தது.. மேலே குளுமையான தரிசனம்.....

யாத்திரை தொடரும்

 


திருக்கைலாய யாத்திரை பகுதி 16

 
நடந்து வந்ததின் களைப்பு அனைவரிடத்திலும் ஆக்ரமித்து இருக்க, கிடைத்த படுக்கைகளில் அனைவரும் ஓய்வெடுத்தனர். வழக்கமான உரையாடல்கள் எதுவும் இல்லை. விட்டால்போதும் என்கிற மனநிலை பலருக்கும்). அப்போது வழிகாட்டி வந்து அனைவரும் தயவு செய்து ஒரு மணி நேரம் உறங்க வேண்டாம். படுப்பதைவிட அமர்ந்து கொண்டால் நலம். உணவு தயாராகிக்கொண்டு இருக்கிறது என்றார்.

உயர் மட்ட நோய்க்குறி தாக்குதலுக்கு ஆளாகிவிட வாய்ப்புகள் இருப்பதால் இந்த எச்சரிக்கை என்றார். படுத்து ஒரு வேளை உறங்கிவிட்டால் உடலின் மாறுதல்களை உணர்ந்து எச்சரிக்கையாக வாய்ப்பு இல்லாமலே போய்விடும் என்றார்.

நான் மலை ஏறும்போதே நீர்புகா (ரெயின் கோட் பேண்ட்,ஜெர்கின்)ஆடைகளை அணிந்திருந்தேன். அதனால் வியர்க்கவும் செய்தது. அதே சமயம் குளிர் காற்றில் பாதிக்கப்படாமலும் வந்து சேர்ந்தேன்.

சில நண்பர்கள் உப்புசம், நடக்கும்போது வியர்வை என ஜீன்ஸ் பேண்ட்களை அணிந்து வந்திருந்தனர். அவர்களுக்கு அதிகம் வியர்க்கவில்லை. ஆனால் குளிர் காற்றினால், அதன் ஈரப்பதத்தினால் அவர்களின் பேண்ட் ஏறத்தாழ நனைந்துவிட்டிருந்தது. அறைக்கு வந்தவுடன் அதில் ஒரு நண்பருக்கு கால் தொடை தசைகளில் (குறக்களி?)இழுத்துப்பிடித்துக்கொண்டது. காரணம் ஈர ஜீன்ஸ் பேண்ட்தான்..

வலி தாங்கமுடியவில்லை என்பதை அவரது முக,உடல் அசைவுகளில் இருந்து கண்டு கொண்ட நான் உடனே அவரது பேண்டை கழட்டிவிட்டு, தைலம் போட்டு அழுந்த, வேகமாக அரக்கித் தேய்த்துவிட்டேன். சற்று சூடேற இயல்பு நிலைக்கு வந்தார். ஆக நனைந்த உடைகளோடு இருப்பதைத் தவிருங்கள்.

இரவு உணவு தயாரிக்கப்பட்டு கொண்டு இருந்தது. அடுத்த நாளைய நடவடிக்கைகளைப் பற்றி அமைப்பாளர்களுடன் ’வழிகாட்டி’ ஆலோசனை நடத்தினார். அதாவது நாளை பரிக்ரமா (கோரா)வை தொடரலாமா அல்லது திரும்பலாமா.? தொடரலாம் என்றால் முதலில் நாளைய இயற்கைச்சூழ்நிலை எப்படி இருக்கும். மேலே செல்லும் வழியில் பனி எந்த அளவிற்கு இருக்கும்? ஒரு வேளை இரவு மழை பெய்து, இன்னும் பனி அதிகமாகிவிட்டால் என்ன செய்வது? என மேற்கொண்டு யாத்திரையைத் தொடர்வதில் உள்ள இடர்பாடுகளை ஆலோசித்துக்கொண்டு இருந்தனர். அத்தோடு யாத்திரை தொடர்வதற்கு யார் யார்க்கு உடல் தகுதி இருக்கிறது என்பது குறித்தும் ஆலோசனை நடந்தது.

மலை அடிவாரத் தங்குமிடமான டார்சனில் நாங்கள் ஏற்கனவே மூன்று நாள் பரிக்ராமா கண்டிப்பாக போகவேண்டும் என வற்புறுத்தி இருந்ததால் எங்களை மனதில் வைத்தே இந்த முடிவினை வழிகாட்டியும், அமைப்பாளர்களும் மறுபரிசீலனை செய்தனர்.
எனக்கு உண்மையில் முதலில் மூன்று நாள் செல்ல வேண்டும் என்று இருந்த ஆர்வம் சமனாகி, திரும்பிப்போவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. தொடர்ந்தாலும் சம்மதமே என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன்)., அதனால் பரிக்ரமாவைத் தொடரச்சொல்லி அமைப்பாளர்களிடம் கேட்பதில்லை என்பதில் உறுதி ஆக இருந்தேன்.

யாத்திரை தொடரும்
 
 

திருக்கைலாய யாத்திரை பகுதி 17

 
மூன்று நாள் கோரா எனப்படும் பரிக்ரமாவில் உள்ள சிரமங்கள் அலசப்பட்டன. ஒரு நாள் பரிக்ரமாவை முடித்துக்கொண்டு, மறுநாள் திரும்பினால் கூடவே சமையல்குழுவும் இருப்பதால் உணவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் மூன்று நாள் பரிக்ரமாவில் அடுத்த இரண்டு நாளுக்கு உணவு சமைக்க இயலாது. காரணம் பொருள்கள் கொண்டு போவதில் உள்ள சிரமங்கள்., இரண்டாம் நாள் பயண நேரம் 10-12 மணி நேரம் இருக்கலாம்.ஒரு ஆப்பிளும் ஒரு பாக்கெட் ஜீஸ் மட்டுமே ஒவ்வொரு வேளைக்கும் கொடுக்கப்படும். இதற்கு வருபவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

இரண்டாவது நாள் பரிக்ரமாவில் கைலை நாதனின் தரிசனம் கொஞ்ச நேரம் மட்டுமே தெரியும். முதல்நாளில் தரிசனம் கிடைக்கிற அளவிற்கு இருக்காது. 

அப்படி செல்லும்போது டோல்மாலா பாஸ் என்ற இந்த பரிக்ரமாவின் உயர்ந்த இடத்தை கடக்க வேண்டும். அப்போது ஆக்சிஜன் பற்றாக்குறையாக இருக்கும். இதை சமாளிக்கும் தகுதியான உடல்திறன் இருக்க வேண்டும்.

இதையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு எங்களின் வழிகாட்டியான ’க்யான்’  தகுதியானவர்களைத் தானே தேர்ந்தெடுப்பதாகக்கூறினார். அவருக்கு பலமுறை பரிக்ரமா வந்த அனுபவம் இருப்பதால் அவரது வார்த்தைகளை ஏற்றுக்கொண்டோம்.

நீங்கதான் நான் தேர்ந்தெடுக்கும் முதல் நபர் என என்னை நோக்கி கையைக் காட்டினார். முதல் நாள் பரிக்ரமாவின் தங்குமிடமான ’திராபுக்’கிற்கு முதலாவதாக வந்ததோடு, ஓய்வெடுக்காமல் காமெராவை கையில் வைத்துக்கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்ததும்,  டயாமாக்ஸ் மாத்திரை தினமும் எடுக்காமலே இதுவரை வந்து சேர்ந்தாலும் என்னைத் தேர்ந்தெடுத்தாக தெரிவித்தார். அடுத்ததாக மலேசியாவைச் சேர்ந்த நண்பர் ஒருவர், கேரளாவைச் சேர்ந்த நண்பர் ஒருவர், அமைப்பாளரும், அவரது உதவியாளரும் ஆக மொத்தம் ஐந்து பேர் மட்டுமே போதும் என்றார்.

அந்த வழிகாட்டியின் தேர்வு, எனக்கு சிவத்தின் ஆணையாகவே மனதில் பட்டது.ஏற்கனவே நியாலத்தில் மலை ஏறியும் ,மனோசரவோரில் தீர்த்தமாடியும், சூரியனின் முழு ஆசிர்வாததுடன் இறைசக்தியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த எங்களுக்கு, (எனக்கு), இதுவும் கூடுதல் அங்கீகாரமாகவே பட  தன் தேவை எது என  கண்டறிந்து தந்தை செயல்படும்போது  எப்படி குழந்தையின் மனம் கவலையின்றி, குதூகலத்துடன் இருக்குமோ அதுபோல் உணர்ந்தேன்.

எங்களுக்கு உதவியாக நான்கு ஷெர்பாக்களும் உடன் வருவார்கள்.நாளை விடியலுக்கு முன் கிளம்பலாம். நாளைய பொழுது இனியதாக அமையட்டும் எனக்கூறி வழிகாட்டி ’க்யான்’விடைபெற்றார். 

யாத்திரை தொடரும்
Link to comment
Share on other sites

திருக்கைலாய யாத்திரை பகுதி 18

 
ஜீன் 15 ம் தேதி, விடியலுக்கு முன் எங்களை வழிகாட்டி தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டதோடு. இரவு மழை ஏதும் இல்லாததால், மற்ற குழுக்கள் செல்வதாகவும் நாங்களும் கிளம்பலாம் என எங்களின் இரண்டாவது நாள் பரிக்ரமாவை உறுதி செய்தார்.

காலைக்கடன்களை முடித்து கிளம்ப தயாரானபோது அமைப்பாளர், தன் விருப்பத்திற்கு ஏற்ப இன்னும் இரண்டு பேரை உங்களால் நன்கு நடக்க முடியும் நான் அழைத்துச் செல்கிறேன் வாங்க என அழைத்தார்.அவர்கள் தங்களின் பிற பொருள்களை திரும்பிச் செல்வோரிடம் ஒப்படைத்துவிட்டு, தயாராக கூடுதலாக இன்னும் முக்கால் மணிநேரம் ஆனது.

இன்னும் இருள் விலகாத நேரம், இருட்டில் டார்ச் உதவியுடன் நடக்க ஆரம்பித்தோம். பாதை ஏதும் இல்லை. கூழாங்கற்களின் மீது நடக்க ஆரம்பித்தோம். புதிதாக கிளம்பிய இருவரில் ஒருவர் பெண்மணி. அரை பர்லாங் தூரம் சென்றதும் நடக்க இயலாமல் திரும்பிவிட்டார் கூடவே இன்னொரு நபரும் எனக்கு காலணி சரியில்லை கால் பிரளுகின்றது என அவரும் திரும்பிவிட்டார்

இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் உங்களுக்கு உள்மனதில் போகலாம் எனத் தோன்றாத பட்சத்தில் அவரு சொல்லிட்டாரு.,கிளம்புவோம், எதுனாலும் அவரு பாத்துக்குவாரு என கிளம்பிவிட வேண்டாம். இந்த ஒரு மணி நேர காலதாமதத்தினால், பல குழுக்களும் முன்னதாக சென்றுவிட கிட்டத்தட்ட கடைசியாக நாங்கள் சென்றோம்.,
kailash+2nd+day+view.JPG
 
காலை நேரத்தில் கைலை நாதனின் தரிசனம். வடக்கு முகமும், கிழக்கு முகமும் சேர்ந்து.....
 
 
kailash+hills+2nd+day.JPG
அருகில் உள்ள மலைகள் சூரியனின் ஒளியில்..
 
kailash+2nd+day+cora.JPG
ஐந்து யாத்திரீகர்கள், நான்கு உதவியாளர்கள் எங்களின் குழு
 
kailash+2nd+day+view+1.JPG
 
திருக்கைலையின் வடகிழக்கு தரிசனம் 
 
 
kailash+view+2nd+day+view+2.JPG
 
யாத்திரை தொடரும்
 
 
Link to comment
Share on other sites

திருக்கைலாய யாத்திரை பகுதி 19
 
காலை 7 மணிக்கு கிளம்பிய நாங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தோம். சுமார் 9.15 மணிக்கு டோல்மாலாபாஸ் அமைந்திருக்கின்ற  மலை அடிவாரத்தை அடைந்தோம். முதல் மூன்று படங்களும் போகும் வழியில் எடுக்கப்பட்டவை, திருக்கைலையை விட்டு சற்று விலகித்தான் இனி பாதை செல்லும். அதன் வழியே யாத்திரை தொடர்ந்தது.
 
kailash%2Bparikrama%2B2nd%2Bday.JPG
 
kailash%2Bparikrama%2Bview%2B2nd%2Bday.J
 
இன்று நடக்க வேண்டிய தூரம் சுமார் 20 கி.மி என்பதால் நான் நடையை சற்று எட்டிபோட்டேன். முதல் நாள் இப்படி நடந்து வந்ததில் சற்று களைப்பு இருந்தாலும் இன்றும் அப்படியே நடந்ததை கண்ட வழிகாட்டி ’க்யான்’ எக்காரணம் கொண்டும் தனக்கு முன்னால் முந்திக்கொண்டு போக வேண்டாம். Go Slowly எனச் சொல்லிக்கொண்டே வந்தார். ஆர்வமிகுதியால் மறுபடியும் அவரை முந்திக்கொண்டு செல்ல மீண்டும் மீண்டும் மெல்லச் செல்லும்படி என்னை பணித்தார். அவரும் வழக்கமான வேகத்தைவிட பாதிவேகத்தில்தான் சென்றார். அதற்கான அப்போது தெரியவில்லை. பின்னர்தான் தெரிந்தது. வேகமான நடையினால் நம் உடலில் உள்ள ஆக்சிஜன் சதவீதம் குறைந்து கொண்டே வரும். டோல்மாலாபாஸ் (மலை உச்சியி)ல் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும்போது அதை நம் உடலால் சமாளிக்க முடியாது என்பதே. ஆக நண்பர்க்ள் ஒருவேளை நடந்து சென்றால் இதைக் கவனத்தில் முக்கியமாகக் கொள்ள வேண்டும்.
 
kailash%2Bview%2B2nd%2Bday%2B.JPG
 
 
டோல்மாலா பாஸ் என்கிற பகுதி அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் இருந்து...(கீழே உள்ள படம்)
 
kailash%252C%2Bnear%2Bdolamala%2Bpass.JP
 
 
கீழே உள்ள படத்தில் வலதுபுறத்தில் உள்ள உச்சிப்பகுதியே நாங்கள் கடக்க வேண்டிய பகுதி. யாத்திரீகர்கள் எறும்பு சாரிபோல் ஊர்ந்து சென்று கொண்டிருப்பார்கள்.  படத்தை கிளிக்கினால் பெரிதாகும், பாருங்களேன்.
 
base+of+dolamalapasss%252Ckailash.JPG
 
யாத்திரை தொடரும்
Link to comment
Share on other sites

திருக்கைலாய யாத்திரை பகுதி 20

 
டோலமா லா பாஸ் அமைந்துள்ள மலையில் ஏறத் துவங்கினோம்.பார்வைக்கு சீக்கிரம் சென்றுவிடக்கூடிய தொலைவாகத்தான் தெரிந்தது. மணியைப் பார்த்தால் காலை 9.15. அதிகாலையில் இருந்து நடந்து கொண்டு இருந்ததால்

காலை உணவுக்கு வயிறு ஏங்க ஆரம்பித்தது. ஆனால் முதலிலேயே உணவு கிடைக்காது என்ற சொல்லப்பட்டு இருந்ததால், வயிற்றை சமாதானப்படுத்திக்கொண்டே  நடக்க ஆரம்பித்தோம்.

சற்று உயரமாக ஏறவேண்டி இருந்ததால் மனம் ஆர்வமாக மேலே ஏறத்துடித்தாலும் கால்கள் முன்னெடுத்துவைக்கும் வேகம் குறைந்துவிட்டது. இருந்தாலும் அதிகம் பேசாமல் ஏறிக்கொண்டே இருந்தோம். நடந்து சென்ற வேறு குழுவைச் சார்ந்தவர்களில் சிலர் எங்களை தாண்டி சென்றனர். அவர்கள் பலர் திபெத்தியர்கள். இன்னும் சிலர் வெளிநாட்டவர் முடிந்தவரை தம்பதியர்(?) ஆகவும் சென்றனர். குதிரைகளும் யாத்திரிகர்களுடன் எங்களைத் தாண்டி சென்றனர்.குதிரை ஏற்றம் எளிதானதே., குதிரையின் அசைவுக்கு தகுந்தவாறு விறைப்பாக இல்லாமல் தளார்வாக இருந்து நாமும் ஒத்துழைத்தால் குதிரை பயணம் எளிதானதே. எங்களின் கண்முன்னே ஒரு குதிரை சற்று மிரள அதன் மீது அமர்ந்திருந்த யாத்திரிகர் ஒருவர் கீழே விழுந்தார். விழுந்த சப்தம் கேட்டு நான் அதிர்ச்சியானேன். நல்லவேளையாக பெரிய அடி ஏதும் படவில்லை.

எங்களின் வழிகாட்டியிடம் அடிவாரமான டார்சானில் தங்கியிருந்தபோது பரிக்ரமாவிற்கு குதிரை ஏற்பாடு செய்யச் சொன்னோம். அதற்கு அவர் ”திருக்கைலாய மலை சாட்சாத் இறையேதான். அதன் அருளை,ஆற்றலை பெற வேண்டுமானால் நீங்கள் உடல்வருத்தி யாத்திரை மேற்கொள்ளுங்கள். குதிரையில் சென்றால் கஷ்டப்படும் குதிரைக்கு மட்டுமே இறையருள் கிட்டும். உங்களுக்கு கிட்டாது எப்படி வசதி?” என சிரித்துக்கொண்டே கேட்டார். 

சிரமப்படாமல் குதிரையில் செல்லலாம் என எண்ணியிருந்த என்னைப்போன்ற சிலரும் இதைக்கேட்டவுடன் எந்த ஆராய்ச்சியும் பண்ணாமல் அந்த எண்ணத்தையும் கைவிட்டுவிட்டோம்.

 
dolmalapass+kailash+yatra.JPG
 
பயணம் என்னைப்பொறுத்தவரை கடினமாக மாறிக்கொண்டு இருந்தது. தொடர்ந்து நடந்து வந்தது போய், கொஞ்ச தூரம் நடப்பது, பின்னர் அமர்ந்து ஓய்வெடுப்பது என யாத்திரையின் வேகம் குறைந்துவிட்டது. நேரம் கடக்க கடக்க , நடக்கும் நேரம் குறைவாகவும், உட்கார்ந்து உட்கார்ந்து ஓய்வெடுக்கும் நேரம் அதிகமாகவும் மாறிவிட்டது. ஒருவழியாய் சுமார் 10 மணி அளவில் வழிகாட்டி தன்னுடன் கொண்டுவந்திருந்த ஒருஆப்பிளையும், பெட்டியில் அட்டைக்கப்பட்ட் ஆப்பிள் ஜூஸ் கொடுத்தார். அதைச் சாப்பிட்டவுடன் சற்று தெம்பு வந்தது. மீண்டும் தொடர்ந்து நடக்க ஆயத்தமானோம்.
dolmalapass%252Ckailash+yatra.JPG
 
முதல் பாதி கற்களாக இருந்தாலும் மேலே ஏறஏற பனிபடர்ந்து இருந்த காட்சி
 
dolmalapass+kailash+yatra+3.JPG
 
dolmalapass%252C+kailash+yatra+4.JPG
 

யாத்திரை தொடரும்

 
Link to comment
Share on other sites

திருக்கைலாய யாத்திரை பகுதி 21

 
ஆப்பிள் சாப்பிட்டுவிட்டு மீண்டும் மெள்ள மெள்ள நடக்க ஆரம்பித்தோம். இதுவரை நடப்பதற்கான பாதையேனும் ஓரளவிற்கு தெரிந்தது. இப்போது முழுக்க முழுக்க பாறைக்கற்கள் மேல் நடக்க வேண்டி இருந்தது. இடைஇடையே பனிக்குவியல் கிடந்தது. அந்த இடங்களையும் தாண்டிச் சென்றோம். அந்த பனிக்குவியல்களில் ஏற்கனவே யாத்திரீகர்கள் முன்னர் நடந்து சென்ற கால் தடங்களின் மீதே நாங்களும் நடந்து சென்றோம். பனிக்குவியலில் கால்கள் அரை இன்ஞ் முதல் ஒரு இன்ஞ் வரை புதைய ஆரம்பித்தது. இதைத் தவிர்கக இயலாது. கால் தடங்களைத் தவிர்த்து, விலகி,அருகில் கிடந்த பனியின் மீது நடக்க முயற்சிப்பது ஆபத்தே..

அதாவது அந்த பனிக்குவியலின் கீழ் பாறைக்கற்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். கால்கள் புதைய வாய்ப்புகள் உண்டு. சுமார் ஒரு அரை அடிமுதல் ஒன்றரை அடிவரை புதையலாம். யாக் எனப்படும் எருமைகள் கூட கவனமாக ஏற்கனவே சென்ற அடையாளத்தை பின்பற்றியே சென்றன,. விலகினால் அவற்றின் கால்கள் புதைந்து, சமாளிக்க முடியாமல் கீழே விழுவதும் உண்டாம்.

கூட வந்த யாத்திரிக நண்பர்களில் ஒருவர் நாம் இந்த பரிக்ரமாவை முடிப்பதற்கு அடையாளமாக நமக்குப்பிடித்தமான ஒன்றை விட்டுவிடுவதாக உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். தனக்கு மிகவும் பிடித்தமான பூரியை விட்டு விடுவதாகவும் சொன்னார்.

எனக்கு இதில் ஆர்வமில்லை. சிவம் இங்க நாம் வந்து, பூரி சாப்பிடும் வழக்கத்தை தரவேண்டும் என்றுதான் உட்கார்ந்து கொண்டு இருக்கிறது என நான் நம்பவில்லை. மேலும் எனக்கு பிடித்தது இனிப்புதான். அதை எப்படி விடமுடியும். சிவமா..இனிப்பா என்றால் நான் இனிப்பு என்பதைத்தான் தேர்ந்தெடுப்பேன். ஆனாலும் இனிப்புக்கு நான் அடிமை அல்ல.

ஏற்கனவே முதல் நாள் பரிக்ரமாவில் நடந்த களைப்பு,தொடர்ந்த பல இரவுகளாக மிகக்குறைவான தூக்கம், இரண்டாவது நாளிலும் அதிகாலையிலேயே பயணம் கிளம்பியது எனத் தொடர்ந்து உடலில் ஆற்றல்கள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டே வந்ததால், உடல் மீண்டும் கெஞ்ச ஆரம்பித்துவிட்டது. ”என்னை விட்டுடு ரெஸ்ட் வேணும், இனி என்னால் நடக்க இயலாது” எனத் திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பித்துவிட்டது.

முதல்நாளில் மனம் உற்சாகமாய் இருந்ததால் களைப்பு அவ்வளவாகத் தெரியவில்லை. ஆனால் இன்றோ மனமும் அசதியடையத் துவங்கியது. உடலினால் முடியவில்லை, அதிகபட்ச முயற்சியால் இருப்பில் இருந்த சக்தி அனைத்தும் செலவாகிவிட்டது. உண்மையிலேயே உடல் நீண்ட ஓய்வு இல்லையெனில் இயங்காத அளவிற்கு சக்தி இழந்துவிட்டது. ”நான் இனி ஒண்ணும் பண்ண முடியாது” என மனமும் குப்புறப்படுத்துக்கொண்டது.

”சிவத்தை இறுகப்பற்றிக்கொள் மனமே” எனச் சொன்னாலும் ’அதற்கும் என்னால முடியல” என்று மனம் சொல்ல.. இருப்பினும் இருக்கின்ற சக்தியைத் திரட்டி நடந்தேன்.

எனக்கு முன்னதாகச் சென்ற எங்கள் குழுவினர் சற்று முன்னதாகச் சென்று கொண்டிருந்தாலும் அவர்களுக்கும் எனக்குமான இடைவெளி அதிகமாகத் தொடங்கியது. என்னைச் சுற்றி உள்ள சூழ்நிலையின் நிதர்சனம்,உண்மைத்தன்மை என்னவென்றால் இனி திரும்பவும் முடியாது. திரும்பினாலும் 5மணிநேர பயணம், அதற்கான உடல்வலு சாத்தியமில்லை.

நடக்கவே சாத்தியம் இல்லை என்ற நிலையில் சில அடிகள் நடப்பது, பல நிமிடங்கள் ஓய்வெடுப்பது என மீண்டும் தொடர்ந்தேன். இந்த நிலை கிட்டத்தட்ட சுமார் முக்கால்மணி நேரம் நீடித்தது. இடையில் கொஞ்சம் கொஞ்சமாக மனமும் முடியல முடியல எனச் சொல்லிக்கொண்டு வந்தது போய் ”முடியல” எனச் சொலலவும் சக்தியற்று அமைதியாகத் தொடங்கியது. உய்ரம் செல்லச் செல்ல குளிர் காற்று அதிகமாகி உடலைத் துளைக்கத் தொடங்கியது.

kailash%2Byatra%2Bdolmala%2Bpass%2Bhills
 
kailash%2Byatra%2Bdolmala%2Bpass%2Bside%
 
டோல்மாலா பாஸ் அமைந்திருக்கும் மலைப்பகுதியிலிருந்து வலது இடதுபுறக் காட்சிகள்..

யாத்திரை தொடரும்.

 

Link to comment
Share on other sites

திருக்கைலாய யாத்திரை பகுதி 22

 

நடக்கவே சாத்தியம் இல்லை என்ற நிலையில் சில அடிகள் நடப்பது, பல நிமிடங்கள் ஓய்வெடுப்பது என மீண்டும் தொடர்ந்தேன். இந்த நிலை நீடிக்க நீடிக்க,  கொஞ்சம் கொஞ்சமாக மனமும் "முடியல முடியல" எனச் சொல்லிக்கொண்டு வந்தது போய் ”முடியல” எனச் சொல்லவும் சக்தியற்று அமைதியாகத் தொடங்கியது. உயரம் செல்லச் செல்ல குளிர்காற்று இன்னும் அதிகமாகி உடலைத் துளைத்தது. .

உடலில் சக்தி இழப்பு என்பது என்னால் நன்கு உணரப்பட்ட அதேவேளையில் உடல் பாதிப்புகள் எதுவும் இல்லை. டோல்மாலா பாஸ் அமைந்த இடம் சுமார் 1200 அடி தூரத்தில் கண்ணில் தெரிந்துகொண்டே தான் இருந்தது.ஒரிரு குதிரைகள் எதிரே யாத்திரிகர்கள் இன்றி வந்தன. இனி நடப்பதை விட குதிரையில்  தொடர்ந்தால் என்ன எனத் தோன்றியதால் விசாரித்தேன். அவர்கள் முழுத்தொகையான 1350 யுவான் கேட்டனர். பாதிக்கும் மேல் கடந்துவிட்ட நிலையில் இந்த தொகை அதிகம், அதுவுமில்லாமல் கையில் அந்த அளவு பணமும் இல்லை என்பதால் அந்த எண்ணத்தையும் கைவிட்டுவிட்டு மீண்டும் நடந்தேன். மனமோ கடைசி வாய்ப்பாக குதிரை கிடைக்கும் என எண்ணி ஆர்வத்தோடு இருந்தது. அதுவும் நடக்காமல் போக, ”என்னமோ பண்ணு போ” என்றபடி அடங்கிவிட்டது.

நடக்க நடக்க தூரம் குறையத் துவங்குவதற்கு பதிலாக அதிகமாவது போல் கண்ணுக்குத் தெரிந்தது. இனி ஒரு அடி கூட எடுத்துவைப்பது சாத்தியமில்லை என்பது தெரியவர, கண்ணை மூடிக்கொண்டு கீழே உட்கார்ந்து விட்டேன். கண்ணை மூடி இருந்தாலும் அருகில் யாத்திரிகர்கள் தொய்வின்றி நடந்து போவதை லேசாக உணர முடிந்தது.

அப்படி சிலநிமிட நேரம் அமர்ந்திருந்தேன்.. சட்டென கண்ணை விழித்துப்பார் என ஏதோ உள்ளிருந்து ஏதோ சொல்ல, கண்விழித்தேன். அதே இடம், அதே தூரம், அதே நபர்கள் ஆனால் எல்லாமும் புதிதாய்த் தோன்றியது. மனம் உற்சாகமாய் பிறந்து இருந்தது.. அதுவரை  இருந்த உடலின் களைப்பு இப்போது  ஒரு துளிகூட இல்லை.

கண் மீண்டும் தானாக மூடிக்கொள்ள, உடலை என்னால் உள்புறமாக காலி இடமாக உற்றுப்பார்க்க முடிந்தது. காலியான மைதானத்தில் வீசப்பட்டு ஓடும் பந்தைப்போல் மனம் உடலினுள் சுற்றிச்சுற்றி வந்தது. அப்படி சுற்றி வருகையில் தொடர்ந்து ஆனந்தமும் உற்சாகமும்  பீறிட்டுக்  கொண்டே வந்தது. உள்ளும் புறமும் வெளியிலும் ஒருசேர நான் இருப்பதை உணர்ந்தேன்.

மிகுந்த உற்சாகமாய்  எழுந்து நடக்க ஆரம்பித்தேன். அப்படி நடந்தபோதும்  மனம் உடலோடு ஒட்டவே இல்லை. என் உடல் நடப்பதை நானே உள்ளிருந்தும் வெளியிலிருந்து கொண்டும் ரசிக்கத் தொடங்கினேன். டோல்மாலா பாஸ் இடத்தை அடைய இருந்த தூரம் மளமளவென குறையத் துவங்கியது. உடலின் எடையற்ற நிலை, நடப்பது குறித்த உணர்வை மிக எளிதாக்கியது.

மனதில் எப்போதுமே ஓடிக்கொண்டு இருக்கும் தேவையற்ற எண்ணங்கள்/கவலைகள் எல்லாம் கழுவி விடப்பட்டு பளிங்கு போல் இருந்தது. இதை என்னால் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நானாக வலுக்கட்டாயமாக  நினைந்த போதும் எந்த எண்ணங்களும் வரவே இல்லை.!!

துள்ளலாக குதித்து நடக்க நடக்க , எனக்கு நானே விசித்திரமாகப் பட்டேன். உடல் முழுவதும் ஆடைகளினால் போர்த்தப்பட்டு இருக்க வெளியே தெரிந்தது முகம் மட்டும்தான். அந்த குளிர் காற்றில் முகம் இறுகி,உணர்வற்று போயிருக்க வேண்டும் ஆனால் எனக்கோ முகத்தில் உள்ள ஒவ்வொரு மயிர்க்கால்களும் அதிரத் துவங்கின. அந்த அதிர்வுகள், ஆனந்த துள்ளலாக தொடர்ந்து  இருந்து கொண்டே வந்தது. கையுறையைக் கழட்டிவிட்டு முகம் முழுவதும் தடவிப்பார்க்க, முகம் வெப்பத்துடனும் குழந்தையின் முகம்போல் மிருதுவாகவும் இருந்தது.

அதே சமயம் முகம் முழுவதுமான துள்ளல் குறையவோ அடங்கவோ இல்லை. கால் மணிநேரத்திற்கும் மேலாக இந்நிலை நீடிக்க, இதை ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டே  நடந்தேன். மெள்ள அதிர்வுகள் குறையத் துவங்கவும் டோல்மாலாபாஸ் இடத்தை அடையவும் சரியாக இருந்தது. 

உள்ளும் புறமுமாக இயங்கிக்கொண்டிருந்த மனம் மெதுவாக அடங்கி எனக்குள் நிலையானது. ஆழ்ந்த அமைதி எனக்குள் குடிகொள்ள செய்வதறியாமல் அங்கே தெண்டனிட்டேன்....... 

எனக்கு எது வேண்டுமோ அது கொடுக்கப்பட்டது..
என்னிடமிருந்து எது எடுக்கப்பட வேண்டுமோ அது எடுத்துக்கொள்ளப்பட்டது.

இறைரூபமான திருக்கையிலையை சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினேன்.

யாத்திரை தொடரும்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU 27 APR, 2024 | 01:12 AM   (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால்  செயற்பட்டுள்ளார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தின் உண்மை தன்மை என்ன,இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதா,? இந்த தாக்குதலால் இலங்கை தேர்தலில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை,இந்திய தேர்தலிலேயே பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன .எதிர்காலத்தில் தாக்குதல்கள் இடம்பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரசன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் பின்னணியின் உண்மை இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை. இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்திலும் இடம்பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் வழங்கப்படவில்லை. குண்டுத்தாக்குதல் தொடர்பான விவாதம் இடம்பெறும் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்,நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க சபைக்கு வருகை தராமல் இருப்பது கவலைக்குரியது.  பிரதான சூத்திரதாரி யார் என்று அனைவரும் கேட்கிறார்கள்.ஆனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதான சூத்திரதாரியை தான் அறிவதாக குறிப்பிட்டுக் கொண்டு  குற்றப்புலனாய்வு  திணைக்களத்துக்கும்,நீதிமன்றத்துக்கும் இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார். குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் யுடியுப் வலைத்தளத்தில் நேர்காணல் ஒன்று வழங்கியுள்ளார்.இந்த தாக்குதலின் பின்னணியில்  இந்திய பிரதமரின்  பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவால் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.ஆகவே இதன் உண்மை என்னவென்பதை ஆராய வேண்டும்.  உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட மறு நாளன்று அதாவது 2019.04.22 ஆம் திகதி இந்தியாவில் கோவா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு ஏற்பட்ட நிலையை இந்தியாவில் உள்ள கத்தோலிக்கர்களுக்கு நேரிட இடமளிக்க போவதில்லை என்று உத்வேகமாக உரையாற்றினார்.அக்காலப்பகுதியில் அவரது பிரசாரங்கள் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை முன்னிலைப்படுத்தியதாகவே காணப்பட்டது.இதனால் இந்தியாவில் வாழும் கத்தோலிக்கர்கள் அவருக்கு வாக்களித்தார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பெறுமளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. கத்தோலிக்கர்கள் செறிவாக வாழும் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றார்.தேர்தலில் வெற்றிப்பெற்ற கோட்டபய ராஜபக்ஷவுக்கு பெருமளவில் வாக்குகள் கிடைக்கப் பெறவில்லை.ஆகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இந்திய தேர்தலில் தான் மாற்றம் ஏற்படுத்தியது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் கத்தோலிக்கர்கள் பாதிக்கப்படுவதற்கு முன்னர் சுதேசிய முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டார்கள். பயங்கரவாதி சஹ்ரான் சுதேசிய முஸ்லிம்களின் பாரம்பரிய மத நம்பிக்கைக்கு எதிராக செயற்பட்டான். 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் சுதேசிய முஸ்லிம்களின் 117 குடியிருப்புக்கள் அழிக்கப்பட்டன.காத்தான்குடி பகுதியில் பயங்கரவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில்  சுதேசிய முஸ்லிம்கள் அப்போதைய அரசாங்கத்திடமும்,பாதுகாப்பு தரப்பினரிடமும் முறைப்பாடளித்தார்கள்.ஆனால் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் சுதேசிய முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டார்கள்.அதனை அரசாங்கம் அலட்சியப்படுத்தியது.இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலாக உச்சமடைந்தது.ஆகவே சமூக கட்டமைப்பில் மறைந்துள்ள அடிப்படைவாதம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்றார். https://www.virakesari.lk/article/182060
    • மதுரையைச் சுற்றியுள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தலங்கள் பட மூலாதாரம்,KERALATOURISM படக்குறிப்பு,இடுக்கி ராமக்கல்மேடு 10 நிமிடங்களுக்கு முன்னர் மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கும் கள்ளழகர் திருவிழா, ஜல்லிக்கட்டு போன்ற கலாசார நிகழ்வுகளுக்கும் பெயர் போனது. இவைதவிர பல சுற்றுலா தலங்களும் குறிப்பாக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் இங்குள்ளன. குறிப்பாக, மதுரைக்கு அருகே உள்ள மாவட்டங்களில் இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பகுதிகள் உள்ளன. தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலும் பல சுற்றுலா தலங்கள் உள்ளன. அப்படி, இந்த கோடைக்காலத்தில் மதுரைக்கு அருகே உள்ள சில இயற்கை சூழல் நிறைந்த இடங்களையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலங்களையும் இங்கு அறியலாம். இடுக்கி ராமக்கல்மேடு ‘டைட்டானிக்' புகழ் ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகேப்ரியோ, தான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த இடம் என ராமக்கல்மேட்டைக் குறிப்பிட்டுப் புகழ்ந்துள்ளார். பசுமையான மலைகள், குளிர்ச்சியான மலைக்காற்று இரண்டும் ராமக்கல்மேட்டுக்கு செல்பவர்களை மயக்கிவிடும். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ராமக்கல்மேடு, தேக்கடியில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள ராமக்கல்மேடு, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு வீசும் இதமான காற்றுக்கு ராமக்கல்மேடு மிகவும் புகழ்பெற்றது. ஆசியாவிலேயே அதிக காற்று வீசும் பகுதிகளுள் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது. இங்கு பழங்குடியின தம்பதியான குருவன்-குருவாட்டியின் மிக உயர்ந்த சிலைதான் இங்கு மிகவும் ஈர்க்கக்கூடிய ஒன்று. கேரளாவில் உள்ள மிக உயர்ந்த சிலைகளுள் இதுவும் ஒன்று. ஹைக்கிங், பாரா கிளைடிங் போன்றவற்றை இங்கு மேற்கொள்ளலாம். ‘தமிழ்நாடு வியூ பாயிண்ட்', ‘ஆமைப் பாறை வியூ பாயிண்ட்’ போன்ற இடங்களுக்கும் இங்கு செல்லலாம். இடுக்கியின் நெடுங்கண்டம் எனும் இடத்திலிருந்து சுமார் 12.4 கி.மீ. தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு நெடுங்கண்டத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.   திண்டுக்கல் மலைக்கோட்டை பட மூலாதாரம்,TAMILNADUTOURISM படக்குறிப்பு,திண்டுக்கல் மலைக்கோட்டை மலைக்கோட்டை என்றாலே திருச்சிதான் உடனே நம் நினைவுக்கு வரும். ஆனால், திண்டுக்கல் பகுதியிலும் மலைக்கோட்டை உள்ளது. வரலாற்று ரீதியாக பல முக்கியத்துவம் இந்த இடத்திற்கு உண்டு. மதுரை நாயக்கர் வம்சத்தால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, பின்னர் விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர் மற்றும் ஆங்கிலேயர்கள் உட்படப் பல ஆட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது. சுமார் 280 அடி (85 மீட்டர்) உயரமுள்ள பாறையில் அமைந்துள்ள திண்டுக்கல் மலைக்கோட்டையின் கட்டடக்கலை உண்மையிலேயே நம்மைப் பிரம்மிக்க வைக்கும். இது பண்டைய இந்திய கல்வெட்டு கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. கோட்டை வளாகத்தில் கோவில், தானியக் கிடங்கு, தண்ணீர் தொட்டி உட்படப் பல கட்டமைப்புகள் உள்ளன. இவை அனைத்தும் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கு மத முக்கியத்துவம் வாய்ந்த பல பழமையான கோவில்களும் உள்ளன. கோட்டையில் உள்ள சிவன் கோவில் மற்றும் கோட்டை மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஆன்மீக பயணத்தில் நாட்டம் உள்ளவர்கள் செல்லலாம். 350 படிகள் ஏறி மேலே சென்ற பிறகு, பார்வையாளர்கள் அழகான காட்சியை அனுபவிக்க முடியும்.   கும்பக்கரை அருவி பட மூலாதாரம்,TAMILNADUTOURISM படக்குறிப்பு,கும்பக்கரை அருவி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த அழகான கும்பக்கரை அருவி. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் நீர் இருக்கும். கோடை நாட்களில் தண்ணீரின் அடர்த்தி குறைவாகவும், குளிர்கால நாட்களில் அதிகமாகவும் இருக்கும். மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து இதற்கு நீராதாரம் கிடைக்கிறது. எனினும், கும்பக்கரை நீர்வீழ்ச்சி ஆபத்தானது என்பதால், மிகவும் பாதுகாப்பாகவே இங்கு குளிக்கச் செல்ல வேண்டும். கும்பக்கரை அருவிக்குச் சென்றால் அதன் அருகிலுள்ள சுருளி அருவிக்கும் செல்லலாம். சுற்றுலாத் தலமாக விளங்கும் இன்றைய கும்பக்கரை, ஒரு காலத்தில் அருவிகள் நிறைந்த காடாகவே இருந்தது. அந்தக் காலத்தில் பெரியகுளத்தைச் சேர்ந்த வசதியான தொழிலதிபர் கே.செல்லம் ஐயர் கும்பக்கரை நீர்வீழ்ச்சியை குற்றாலத்தைப் போலவே மற்றொரு சுற்றுலாத் தலமாக மாற்ற விரும்பி,1942ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசிடம் அனுமதி பெற்று அந்தப் பகுதியில் தனது சொந்த செலவில் ஆடை அறைகள், படிக்கட்டுகள் மற்றும் குளியலறைகளைக் கட்டியதாக, கும்பக்கரை அருவியில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.   தேனி மேகமலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேனி மேகமலை தேனி மாவட்டத்தின் மேகமலை ஊராட்சியில் அமைந்துள்ள மேகமலை, மேகங்களுக்கு நடுவே அமைந்துள்ளது போன்றே இருக்கும். 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து, மேகமலையை அடையும்போது அதற்கு இந்தப் பெயர் எவ்வளவு பொருத்தம் என்பது உங்களுக்கே புரியும். தேயிலைத் தோட்டங்கள், பசுமையான மலைத் தொடர்கள் என மேகமலை உண்மையில் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது. மேகமலை நீர்வீழ்ச்சி, சுருளி நீர்வீழ்ச்சிகள், அணைகள், மகாராஜா மெட்டு ‘வியூ பாயிண்ட்', தேயிலை, ஏலக்காய் தோட்டங்கள், வெள்ளிமலை ஆகியவை இங்கு குறிப்பிடத்தக்க அடையாளங்கள். யானை, புள்ளிமான் போன்ற காட்டுயிர்களையும் நீங்கள் இங்கு காணலாம். கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வெள்ளி மலைக்குச் செல்லுங்கள். வெள்ளி மலை என்பது, மேகமலை வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். மதுரை யானைமலை பெயருக்கு ஏற்றாற்போல் இந்த மலை பார்ப்பதற்கு யானை உருவில் இருக்கும். விமானத்திலிருந்தோ, வெகு தூரத்திலிருந்தோ பார்த்தால், ஒரு யானை காலை மடக்கிக்கொண்டு படுத்திருப்பது போன்று இருக்கும். இந்த மலையில் சமண படுகைகளும் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. மதுரை மாநகரிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் நெடுஞ்சாலையை ஒட்டி, இந்த யானை மலை அமைந்துள்ளது. சுமார் 4 கி.மீ. நீளம் கொண்ட இந்த மலை, சுமார் 1,200 மீட்டர் அகலம் உடையது. பல்வேறு தமிழ் திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. யானை மலையில் ஏறுவது சற்று சிரமம் என்பதால், கவனத்துடன் செல்ல வேண்டும். இது, இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. சமணர் மலைகள் பட மூலாதாரம்,TAMILNADUTOURISM மதுரையில் உள்ள சமணர் மலைகள் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகவும், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாகவும் இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மலை என அழைக்கப்படும் இந்த சமணர் மலை மதுரை மாவட்டத்தில் உள்ள கீழக்குயில்குடி கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. மலைகளில் காணப்படும் நினைவுச் சின்னங்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 12ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டவை. கோமதேஸ்வரர், மகாவீரர், யக்ஷி மற்றும் யக்ஷா ஆகியோரின் சிற்பங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செட்டிபொடவு தளம் மற்றும் பேச்சிப்பள்ளம் தளம் ஆகியவை இங்குள்ள முக்கிய இடங்கள். செட்டிப்பொடவு தளத்தில் சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரரின் உருவம் உள்ளது. சமண துறவிகள் ஓய்வெடுக்கப் பயன்படுத்திய தட்டையான கற்கள் அல்லது கல் படுக்கைகளையும் இங்கு காணலாம். பேச்சிப்பள்ளத்தில் பாகுபலி, மஹாவீர் மற்றும் பார்ஸ்வநாதர் உள்ளிட்ட எட்டு சமண சிற்பங்கள் அரிய சின்னங்களுடன் உள்ளன. இந்த தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் கிமு 9ஆம் நூற்றாண்டில் சமண துறவிகளால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகள் 200 ஆண்டுகளுக்கும் மேலானவை என நம்பப்படுகிறது. சமணர் மலையில் உள்ள தொல்பொருள் ஆய்வுகள் மலையின் மேல் ஒரு சமணப் பள்ளி இருந்ததாகக் கூறுகின்றன. இந்த இடத்தின் அமைதியான சூழல் மலைகளின் அடிவாரத்தில் உள்ள தாமரைக் குளத்தால் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cv2x075gy0eo
    • 26 APR, 2024 | 09:33 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மாற்றுத்திறனாளிகளுக்கு  வழங்கப்படும் உதவித்தொகை கொடுப்பனவு  5000 ரூபாவிலிருந்து  7500 ரூபா  வரை அதிகரிக்கப்பட்டாலும் அவை குறித்த திகதிகளில் கிடைப்பதாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் சமூகத்தை இவ்வாறான சிரமங்களுக்கு உள்ளாக்காமல் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) பிரதமரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்த அவர் மேலும் பேசுகையில், பொது நிர்வாக சுற்றறிக்கை 1988/27இன் பிரகாரம், அரச நிறுவனங்களில் வேலைவாய்ப்பை வழங்கும்போது மாற்றுத் திறனாளிக்கு 3 வீத  வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என இருந்தாலும், அது இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்து புதிய சட்டமூலம் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டாலும் இதுவரை அது கொண்டுவரப்படவில்லை. குறித்த புதிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்படாமைக்கான காரணங்கள் என்ன? சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம், இந்நாட்டில் 17 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர்.  இவர்களது உரிமைகள் தொடர்பில் பல முறை கேள்வியெழுப்பியுள்ளேன். சைகை மொழி சட்டத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து அதை நாட்டின் சட்டமாக மாற்றுங்கள். பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகள் பிரவேச  அணுகல் விடயத்தில் பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு வற்  வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், சந்தையில் தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றுக்கான தீர்வுகளை வழங்குங்கள். அதுமட்டுமல்லாமல் இவர்களின் காப்புறுதி குறித்து அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/182038
    • KKR vs PBKS: பேர்ஸ்டோ விஸ்வரூபம், வெலவெலத்துப் போன கொல்கத்தா - பஞ்சாபின் வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2024 ஐபிஎல் சீசனில் ஒரு அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோர் என்பது நேற்றைய பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தெரிந்துவிட்டது. 'என்ன அடி... என்ன மாதிரியான ஷாட்கள்...' என்று ரசிகர்களைப் பிரமிக்க வைத்த ஆட்டம் நேற்று நடந்தது. களத்தில் நீயா-நானா பார்த்துவிடலாம் என்ற ரீதியில் கொல்கத்தா அணி வீரர்களும், பஞ்சாப் வீரர்களும் மோதினர். இரு அணி பேட்டர்களின் பேட்டில் இருந்து சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தவாறு இருந்தன. கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் மட்டும் 37 பவுண்டரிகள், 42 சிக்ஸர்கள், 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஏறக்குறைய 10 ஓவர்களை ரசிகர்கள் வானத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்திருக்கும் அளவுக்கு பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தவாறு இருந்தன. இதுவரை ஐபிஎல் டி20 தொடரில், டி20 போட்டிகளில் சேஸிங் செய்ய முடியாத ஸ்கோரை அடைந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்தது. 262 ரன்கள் என்னும் கடின இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் 8 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது.   வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS ஐபிஎல் டி20 போட்டியில், உலக டி20 வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 261 ரன்களை சேஸிங் செய்தது இல்லை. ஆனால், அதையும் 8 பந்துகள் மீதமிருக்கும்போது சேஸிங் செய்து பஞ்சாப் கிங்ஸ் டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் டி20 லீக்கிலும் புதிய வரலாற்றையும், சாதனையையும் படைத்துள்ளது. கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து சேர்த்த ஸ்கோரை பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சேஸிங் செய்து சவால்விட்டது. பஞ்சாப் கிங்ஸ் பேட்டர்கள் பேர்ஸ்டோ, சஷாங் இருவரும் நேற்று இருந்த ஃபார்முக்கு 285 ரன்களைக்கூட சேஸிங் செய்திருப்பார்கள். இருவரும் மதம்பிடித்த யானை போல் பேட்டால் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை வதம் செய்தனர். சவாலாக மாறும் பஞ்சாப் இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் அடையவில்லை என்றாலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி, மற்ற அணிகளுக்கு அச்சத்தைத் தரும். அடுத்து வரும் போட்டிகளில் பஞ்சாப் அணி தொடர் வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்று இன்னும் கடும் போட்டி நிறைந்ததாக மாறிவிடும். பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியால் 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.187 என்ற ரீதியில் இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பஞ்சாப் அணி பெறும் வெற்றி, புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். கொல்கத்தா அணி இந்தத் தோல்வியால் 2வது இடத்திலிருந்து சரியவில்லை. ஆனால் அந்த அணியின் நிகர ரன்ரேட் சரிந்துவிட்டது. இதற்கு முன் ஒரு புள்ளிக்கு மேல் நிகர ரன்ரேட் வைத்திருந்த கொல்கத்தா இந்தத் தோல்வியால் 0.972 ஆகக் குறைந்துவிட்டது. கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது.   பேர்ஸ்டோ விஸ்வரூபம் பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை சந்தித்த 9 போட்டிகளிலும் பேர்ஸ்டோ ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்காமல் இருந்ததால், இந்த சீசன் அவருக்கு மோசமாக அமைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், நேற்று நிதானமாகத் தொடங்கிய பேர்ஸ்டோ, அதன்பின் கோடை இடி முழக்கம்போல் அடிக்கத் தொடங்கினார். பேர்ஸ்டோ பேட்டிலிருந்து தெறித்த பந்துகள் பெரும்பாலும் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறந்தன. மிரட்டலாக பேட் செய்த பேர்ஸ்டோ 45 பந்துகளில் சதம் அடித்து, 108 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். பேர்ஸ்டோ கணக்கில் மட்டும் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் டி20 தொடரில் பேர்ஸ்டோ அடித்த 2வது சதம் இது. மூன்று பார்ட்னர்ஷிப்பில் முடிந்த ஆட்டம் அதேபோல பேர்ஸ்டோவுக்கு நெம்புகோலாக இருந்தது தொடக்க பேட்டர் பிரப்சிம்ரன் சிங். இவரின் அதிரடி ஆட்டத்தால் உற்சாகம் பெற்ற பேர்ஸ்டோ வெளுத்து வாங்கத் தொடங்கினார். பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல சஷாங் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் ஏலத்தில் தவறிப்போய் வேறு சஷாங் சிங்கை எடுத்துவிட்டோமே என்று கவலைப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, தற்போது சஷாங் சிங் பெரிய சொத்தாக, முத்தாக மாறிவிட்டார். இந்த 3 பேட்டர்களும் சேர்ந்துதான் கொல்கத்தா அணி சேர்த்த இமாலய ஸ்கோரை எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றனர். பிரப்சிம்ரன் சிங்-பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப், ரூஸோ-பேர்ஸ்டோ 2வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப், சஷாங் சிங்-பேர்ஸ்டோ 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் என மொத்தமே 3 பார்ட்னர்ஷிப்பில் ஆட்டத்தை முடித்துவிட்டனர்.   நேற்றைய ஆட்டத்தில் படைக்கப்பட்ட சாதனைகள் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் சேஸிங் செய்தது டி20 வரலாற்றிலும், ஐபிஎல் டி20 வரலாற்றில் மிக அதிகபட்சம். இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 259 ரன்களை தென் ஆப்பிரிக்கா சேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஐபிஎல் தொடரில் 224 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது, அந்த ரன்களைவிட 38 ரன்கள் கூடுதலாக சேஸிங் செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் மட்டும் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இதற்கு முன் கடந்த மாதம் மும்பை-சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயும், கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையே 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தது. அது நேற்றைய ஆட்டத்தில் முறியடிக்கப்பட்டது. சேஸிங்கில் பஞ்சாப் கிங்ஸ் அணி 24 சிக்ஸர்களை நேற்று விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த 2வது அதிகபட்ச சிக்ஸர்களாகும். ஐபிஎல் வரலாற்றில் சேஸிங் செய்யும் அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை பஞ்சாப் பெற்றது. இதற்கு முன் ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் 22 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் டி20 போட்டிகளில் இரு அணிகள் சேர்ந்து சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் இது. கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் சேர்ந்து 549 ரன்கள் சேர்த்தன. கொல்கத்தா, பஞ்சாப் அணிகளில் 4 தொடக்க ஆட்டக்காரர்கள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71), பிரப்சிம்ரன் சிங்(54), ஜானி பேர்ஸ்டோ(108) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் 50 ரன்களுக்கு மேல் குவித்தது இதுதான் முதல்முறை. டி20 போட்டியில் இது 11வது முறை. 4 தொடக்க ஆட்டக்காரர்களும் சேர்ந்து 308 ரன்கள் சேர்க்கப்பட்டது ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. இந்த ஆட்டத்தில் 5 பேட்டர்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் வைத்து அரைசதம் அடித்ததும் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. சால்ட்(25பந்துகள்), நரைன்(23பந்துகள்), பிரப்சிம்ரன்(18), பேர்ஸ்டோ(23), சஷாங் சிங்(23) ஆகியோர் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து ஸ்ட்ரைக் ரேட்டை 200க்கு மேல் வைத்திருந்தனர். டி20 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி 7வது முறையாக வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது. இதுதான் டி20 போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச சேஸிங். மும்பை இந்தியன்ஸ், இந்தியா, ஆஸ்திரலேியா, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் 5 முறை மட்டுமே 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளன.   பந்துவீச்சாளர்கள் பாவம் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் போன்ற பேட்டர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட, சொர்க்கபுரி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிலைமை படுமோசமாகும். இந்த ஆட்டத்தில் இரு அணிகளைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களும் துவைத்து எடுக்கப்பட்டனர். இரு அணிகளிலும் சுனில் நரைன், ராகுல் சாஹர் இருவர்தான் ஒற்றை இலக்கத்தில் ரன்ரேட்டை வைத்திருந்தனர். மற்ற வகையில் இரு அணிகளின் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 15 ரன்களை வாரி வழங்கினர். இதுபோன்ற பேட்டர்களுக்கு மட்டும் சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணியாக மாற்றப்படுகிறார்கள். குறிப்பாக ரஸல், ரபாடா, அங்குல் ராய், சாம்கரன், ஹர்சல் படேல், வருண், ஹர்சித் ராணா, சமீரா ஆகியோர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் சராசரியாக 17 ரன்கள் விளாசப்பட்டன. டி20 போட்டி "ரசிகர்களின் ரசிப்புத்தன்மையை அதிகப்படுத்துவதற்காக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேட்டர்களுக்கு மட்டும் உதவும் விக்கெட்டாக மாற்றுவது ஆட்டத்தை ஒருதரப்பாகவே கொண்டு செல்லும். இதில் பந்துவீச்சாளர்களின் பணி, அவர்களுக்கான அறம், மரியாதை அறவே இல்லாமல் போகும்," என்ற விமர்சனம் ஒருபுறம் இதனால் முன்வைக்கப்படுகிறது. பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் விதத்தில் ஆடுகளம் அமைக்கப்பட்டால்தான் ஆட்டம் சுவாரஸ்யமாகச் செல்லும். பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றப்படும்போது, பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை உடைக்கப்படும், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழந்து அடுத்தடுத்த போட்டிகளில் அவர்களின் திறமை பாதிக்கப்படும். எதிர்காலத்தில் இளம் தலைமுறைகள்கூட பேட்டர்களாக மாற விரும்புவார்களே தவிர பந்துவீச்சாளர்கள் மீது வெறுப்பு உண்டாகிவிடும். இதுபோன்ற பேட்டர்களுக்கான விக்கெட் என்பது வீடியோ கேம் பார்த்த உணர்வுதான் ரசிகர்களுக்கு ஏற்படும்.   கொல்கத்தா என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்ள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71) இருவரும் அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த பேட்டர்கள் வெங்கடேஷ் (39), ரஸல்(24), ஸ்ரேயாஸ்(28) என கேமியோ ஆடி உயிரைக் கொடுத்து 261 ரன்கள் சேர்த்தனர். பெரும்பாலும், 120 பந்துகளைக் கொண்ட டி20 போட்டியில் 262 ரன்களை சேஸிங் செய்வது என்பது மிகக்கடினமானது என்று பார்க்கப்பட்டது. 261 ரன்களை அடித்துவிட்டோம் வெற்றி உறுதி என்ற மனநிலையுடன் இருந்த கொல்கத்தா அணிக்கு நேற்றைய சேஸிங் சம்மட்டி அடியாக இறங்கியுள்ளது. 261 ரன்கள் என்பதே மிகப்பெரிய ஸ்கோர் இதையே சேஸிங் செய்துவிட்டதால், எந்த ஸ்கோர் பாதுகாப்பானது என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் 160 ரன்கள் அடித்து ஐபிஎல் தொடரில் டிபெண்ட் செய்யும் அணிகள் இருக்கும் நிலையில் 261 ரன்கள் சேர்த்தும் கொல்கத்தா அணியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பது அந்த அணியின் பந்துவீச்சு மீதும், திறன் மீது பெரிய கேள்வியை எழுப்புகிறது. பஞ்சாப் அணியை 261 ரன்களை சேஸிங் செய்ய அனுமதித்த பந்துவீச்சாளர்கள் மீது குறை சொல்வதா, அல்லது பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றியதைக் குறை சொல்வதா என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் கொல்கத்தா நிர்வாகம் இருக்கிறது. ஆனால், 261 ரன்களைக்கூட டிபெண்ட் செய்ய முடியாவிட்டால், நிச்சயமாக பந்துவீச்சில் பெரிய சிக்கல் ஏதோ இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டர்களை சிந்திக்க வைக்கும் அளவுக்கு, நெருக்கடி தரும் அளவுக்கு கொல்கத்தா பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். இரு ஓவர்களில் நெருக்கடியாக பந்துவீசியிருந்தால் ஆட்டம் மாறியிருக்கும். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருவர்கூட யார்க்கர் வீசவில்லை, ஸ்லோபால் பவுன்ஸர், ஷார்ட்பால் அதிகம் வீசவில்லை. பந்துவீச்சில் வேரியேஷன் என்பதே பெரிதாக இல்லாமல் பேட்டர்களின் பேட்டை நோக்கியே பந்து வீசப்பட்டது பேட்டர்களின் பணியை இன்னும் எளிதாக்கியது. ஆதலால், கொல்கத்தா அணி நிர்வாகம் பந்துவீச்சு குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.   ‘அறியப்படாத ஹீரோ’ சஷாங் சிங் பட மூலாதாரம்,SPORTZPICS சஷாங் சிங், அஷுடோஷ் சர்மா இருவரும் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கிடைத்த இரு சொத்துகள் என்று கூறலாம். பஞ்சாப் அணி கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தோல்வி அடைந்த ஆட்டங்களில் ஆட்டத்தை ஒற்றை பேட்டராக இழுத்து வந்தவர் சஷாங் சிங். ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தாவை சேர்ந்த சஷாங் சிங்கை வாங்குவதற்குப் பதிலாக இந்த சஷாங் சிங்கை ரூ.20 லட்சத்துக்கு வாங்கிவிட்டோமே என்ற கவலையில் இருந்தது. ஆனால், சஷாங் சிங் ஆட்டம் என்பது அவரின் விலையான ரூ.20 லட்சத்துக்கும் அதிகமானது என்பதை பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் புரிந்து கொண்டுள்ளது. பிகாரை சேர்ந்த சஷாங் சிங், சத்தீஸ்கர், மும்பை, புதுச்சேரி அணிகளுக்குக்கூட ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளார். தனது திறமையை அங்கீகரிக்க ஒரு ஆட்டம் கிடைக்காதா என்று ஏங்கியவர் சஷாங் சிங். மும்பை, சத்தீஸ்கர் கிரிக்கெட் வட்டாரங்கள் அறிந்திருந்த சஷாங் சிங்கை இந்தியா முழுவதும் யாரும் இதற்கு முன் அறியவில்லை. ஆனால் கடந்த சில போட்டிகளாக சஷாங் சிங் அடிக்கும் அடி, ஆட்டத்தின் திறமை, உலக கிரிக்கெட்டை திரும்பப் பார்க்க வைத்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாட முடியுமா என்று கேட்கும் அளவுக்கு சஷாங் சிங் ஆட்டம் பேசப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் அணியில் வழக்கமாக 6வது வரிசையில் களமிறங்கும் சஷாங் சிங், நேற்று முதல்முறையாக 4வது வீரராகக் களமிறங்கினார். களமிறங்கி 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் வருண் பந்தவீச்சில் சஷாங் சிக்ஸர் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி என்பது சவாலாக இருந்த நிலையில் சஷாங் சிங் களமிறங்கிய பின் அது இலகுவானது. சமீரா ஓவரில் ஸ்வாட், ஸ்கூப், புல் ஷாட் என 3 விதங்களில் சஷாங் சிங் சிக்ஸர் விளாசி, வெற்றியை எளிதாக்கினார். அது மட்டுமல்லாமல் ஹர்சித் ராணா, ராமன்தீப் ஓவரிலும் சிக்ஸர்களை வெளுத்து வாங்கினார் சஷாங் சிங். 23 பந்துகளில் அரைசதத்தை சஷாங் அடைந்து 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் மட்டும் 8 சிக்ஸர்கள் அடங்கும். பேஸ்பால் ஆட்டமா? பஞ்சாப் சிங்ஸ் கேப்டன் சாம் கரன் வெற்றிக்குப் பின் கூறுகையில், “இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, முக்கியமானவெற்றி. கிரிக்கெட் பேஸ்பாலாக மாறிவிட்டதா என எனக்குத் தோன்றியது. கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தவறவிட்டது கடினமாக இருந்தது. நாங்கள் ஸ்கோரை பார்க்கவில்லை, வெற்றியை மட்டும்தான் பார்த்தோம். பேர்ஸ்டோ மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது அருமை. இந்த சீசனில் நாங்கள் கண்டறிந்த சிறந்த வீரர் சஷாங் சிங். அவருக்கான பணியை இன்றும் சிறப்பாகச் செய்தார். கொல்கத்தாவில் கிடைத்த பெரிய வெற்றியை நாங்கள் ரசிக்கிறோம்,” என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ckdq2ygdqpdo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.