Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விக்கினேஸ்வரன் அனைத்து கட்சிகளையும் நோக்கி அழைப்பு - தமிழ் கட்சிகளின் பதில் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

விக்கினேஸ்வரன் அனைத்து கட்சிகளையும் நோக்கி அழைப்பு - தமிழ் கட்சிகளின் பதில் என்ன?

<p>விக்கினேஸ்வரன் அனைத்து கட்சிகளையும் நோக்கி அழைப்பு - தமிழ் கட்சிகளின் பதில் என்ன?</p>
யதீந்திரா

 

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவருமான வி.ஆனந்தசங்கரி, சில தினங்களுக்கு முன்னர் ஒரு பகிரங்க அழைப்பொன்றை விடுத்திருந்தார். அதாவது, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உடன்பட்டால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்க தான் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். அதேவேளை தான் தற்போது வகித்துவரும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி நிலையையும், முதலமைச்சர் விரும்பும் ஒருவருக்கு வழங்குவதற்கும் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில், வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பதிலளித்திருக்கின்றார்.

விக்கினேஸ்வரன் தனது பதிலில் தெரிவித்திருக்கும் சில அபிப்பிராயங்கள், தமிழ் அரசியலில் கூர்ந்து நோக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. விக்கினேஸ்வரன் தனது பதிலில், அனைத்து தமிழ் கட்சிகளும் அர்ப்பணிப்புடனும், பற்றுதியுடனும் எவருக்கும் விலைபோகாமல், சில்லறை லாபங்களுக்கு சரிந்து கொடுக்காமல், எமது செயற்திட்டங்களை முன்னெடுக்க வரவேண்டும் என்றும், இதனைவிடுத்து, உட்கட்சி மோதல்கள், கருத்து முரண்பாடுகளினால் எமது செயற்பாடுகள் வேறுவழிகளில் திசைதிருப்பப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். சங்கரியின் அழைப்பு தொடர்பில் விக்கினேஸ்வரன் அவர்கள் நேரடியாக பதிலளிக்காது விட்டாலும் கூட, சங்கரி தனது அரசியல் செயற்பாடுகள் குறித்தும், தன்மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை தொடர்பிலும் தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டிருக்கும் விக்கினேஸ்வரன், இதை மட்டுமே தன்னால் தற்போதைக்கு கூற முடியுமென்றும் தெரிவித்திருக்கின்றார்.

அண்மைக்காலமாக முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமிழ் அரசியல் விவாதங்களில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றார். ஆரம்பத்தில் அவர் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்த முன்னணி தமிழ் அபிப்பிராய உருவாக்குனர்கள் கூட, தற்போது விக்கினேஸ்வரனின் கருத்துக்களை கூர்ந்து நோக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இங்கு கவனிக்க வேண்டிய விடயம், அண்மைக்காலமாக சம்பந்தன் தொடர்பான ஊடக அவதானங்கள் குறைவடைந்து செல்கின்றன. இதற்கு விக்னேஸ்வரன் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக எதிர்வினையாற்றி வருவது மட்டுமல்லாது, தமிழரசு கட்சியின் உயர்பீடத்தினருக்கும் விக்கினேஸ்வரனுக்கும் இடையில் நிலவும் பனிப்போரும் ஒரு காரணமாகும். மேற்படி பனிப்போரின் விளைவாகவே விக்கினேஸ்வரனின் தலைமையில் ஏனைய கட்சிகள் இணையக் கூடிய சாத்தியம் இருக்கின்றதா என்னும் கேள்வி எழுந்தது. இது தொடர்பில் எனது முன்னைய பத்தியொன்றிலும் குறிப்பிட்டிருக்கின்றேன்.

இவ்வாறானதொரு சூழலில்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் ஆனந்தசங்கரி, விக்கினேஸ்வரனை நோக்கி மேற்படி பகிரங்க அழைப்பை விடுத்திருக்கின்றார். விக்கினேஸ்வரன் மேற்படி அழைப்பை நிராகரிக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ இல்லை என்பதையும் இந்த இடத்தில் குறித்துக் கொள்ளலாம். இதிலிருந்து விக்கினேஸ்வரன், சங்கரியின் தலைமையில் இருக்கின்ற தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்பில் எத்தகைய அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கின்றார் என்பதை அவர் வெளிப்படுத்தாது போனாலும், அனைத்து கட்சிகளும் ஒரு அணியாக, மக்களுக்கான வேலைத்திட்டங்களில் ஒன்றிணைய வேண்டுமென்னும் விருப்பை கொண்டிருக்கின்றார் என்பது வெள்ளிடைமலை.

மேலும் விக்கினேஸ்வரனின் விருப்பில் வெறுமனே கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் மட்டும் இருப்பதாக தெரியவில்லை. மாறாக, கூட்டமைப்புக்கு வெளியில் இருக்கின்ற கட்சிகளை நோக்கியும்தான் அவர் கைநீட்டியிருக்கின்றார். இதன் மூலம் விக்கினேஸ்வரன் மறைமுகமாக ஒரு கருத்தை வலியுறுத்த முற்படுகின்றாரா? தான் ஒரு அணிக்கான தலைமையை நோக்கி வருவதை விடவும், அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றும் போது, தலைமை தானாக வெளித்தெரியும். உண்மையில் இது தொடர்பில் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

ஒருவேளை விக்கினேஸ்வரன் எதிர்பார்ப்பது போன்று, தமிழ்த் தேசிய நிலையில் இயங்கிவரும் அனைத்து கட்சிகளும், தமிழர் அரசியல் அபிலாஷைகளை முன்னிறுத்தி, விக்கினேஸ்வரனுடன் இணைந்து செயற்பட முன்வந்தால், அது தமிழ் அரசியல் சூழலை பொறுத்தவரையில் ஒரு முக்கிய மாற்றமாக அமையலாம். ஆனந்தசங்கரி, மேற்படி கருத்தை ஒரு இணையத்தளமொன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே தெரிவித்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்ட ஒரு விடயத்துடன் இப்பத்தியாளர் முற்றிலும் உடன்படுகின்றார். அவர் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்குமான பேச்சுவார்த்தையின் போது, அதனை குழப்பும் வகையில் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுத்தவர் சந்திரிக்கா. ஆனால், இன்று அவரும் ரணிலும் ஒரே மேடையில் நிற்கின்றனர். அப்படியாயின் நாங்கள் ஏன் ஒரு பொது இலக்கிற்காக ஒரணியில் நிற்க முடியாது? இது மிகவும் நியாயமான கேள்வி. இதற்கு நியாயமாக பதிலளிப்பதாயின் - நிச்சயம் நிற்க முடியுமென்றே பதிலளிக்க வேண்டும்.

2009இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்பட்ட போது, அந்த அழிவிலிருந்து கற்றுக் கொண்டிருக்க வேண்டிய முதல் பாடமே, எங்களுக்குள் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் கூட, எங்களுக்குள் ஒரு பொது இணக்கம் அவசியம் என்னும் புரிதலாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது நிகழவில்லை. கண் முன்னே நிகழ்ந்த ஒரு பேரழிவின் பின்னரும் கூட, எங்களுக்குள் கோழிச் சண்டை பிடிக்க முடிகிறதொன்றால், உண்மையில் எங்களுக்கு தமிழ் மக்களின் நலனைவிடவும், எங்களின் சொந்த நலன்கள் பெரிதாக இருக்கின்றன என்பதே பொருளாகும். இதுபோன்ற போராடங்கள் நடைபெற்ற ஏனைய நாடுகளிலும் கருத்து முரண்பாடுகள் இருந்திருக்கின்றன. கருத்து முரண்பாடுகள் நிச்சயமாக இருக்கவும் வேண்டும். ஏனெனில் அது ஒரு சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கான சாட்சி. ஆனால் எங்கள் மத்தியில் நிகழும் முரண்பாடுகளின் அடிப்படைகளோ வேறு. இது தனிப்பட்ட ஈகோ வாதங்களினதும், பதவி நலன்களினதும் விளைவுகள். இந்த விளைவுகளின் வெறும் பார்வையாளர்களாக தற்போது தமிழ் சமூகம் இருந்து கொண்டிருக்கிறது.

இப்படியானதொரு சூழலில் அனைவரும் ஒரு இடத்தில், ஒரு பொது நன்மைக்காக கூட முடியுமென்றால், அது மிகவும் ஆரோக்கியமான ஒன்று என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால் அண்மைக்காலமாக விக்கினேஸ்வரனை முன்வைத்து இடம்பெற்றுவரும் விவாதங்களின் போது, ஒரு கேள்வியும் அவ்வப்போது எட்டிப் பார்க்கவே செய்கிறது. விக்கினேஸ்வரன் உறுதியாக பேசுகின்றார். எவருக்கும் முன்னாலும் அவர் தனது கருத்துக்களை முன்வைக்கப் பின்நிற்கவில்லை. சுருங்கச் சொன்னால் அண்மைக்காலமாக தமிழ் அரசியலில் தனித்து தெரியும் ஒருவராகவே அவர் இருக்கின்றார். இப்படியான பல விடயங்கள் இருந்தாலும் கூட, தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்களுக்கு தலைமை தாங்க வேண்டுமென்னும் ஆர்வம் உண்மையிலேயே விக்கினேஸ்வரனுக்கு இருக்கிறதா? இப்படியொரு கேள்வி கூட்டமைப்பின் தலைவர்களுக்கு மட்டுமல்ல, அரசியல் நோக்கர்கள் மத்தியிலும் உண்டு. ஆனால் தற்போது விக்கினேஸ்வரன் அளித்திருக்கும் பதிலில், மேற்படி கேள்விக்கான பதில் மறைமுகமாக இருக்கின்றது என்பதே எனது பார்வை.

<p>விக்கினேஸ்வரன் அனைத்து கட்சிகளையும் நோக்கி அழைப்பு - தமிழ் கட்சிகளின் பதில் என்ன?</p>

விக்கினேஸ்வரனை பொறுத்தவரையில் பதவி நிலைகளை நோக்கி தான் பயணிக்க விரும்பவில்லை. மாறாக, அதற்கான சூழல் உருவாகுமாக இருந்தால், அதற்கான தேவை எழுமானால், அப்போது அதனுடன் தான் இணைந்து கொள்வேன். விக்கினேஸ்வரன் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்திவிட்டார், எனவே தங்களுடைய நிலைப்பாடு என்ன? என்பதை குறிப்பிட்ட கட்சிகளின் தலைமைகளே தெளிவுபடுத்த வேண்டும். விக்கினேஸ்வரன் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று கூறுவதன் மூலம், எதனை உணர்த்த முற்படுகின்றார் என்பதில் அழுத்தமான விடயங்கள் இல்லாது போனாலும், இலங்கைக்கு விஜயம் செய்யும் ராஜதந்திரிகளுக்கு விளக்கமளிப்பது தொடக்கம், இலங்கையில் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படும் அரசியல் மறுசீரமைப்பு மற்றும் இடைக்கால நீதிக்கான பொறிமுறை போன்ற அனைத்து விடயங்களிலும், வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் ஏனைய கட்சிகளும் ஒரு குடையின் கீழ் பணியாற்றும் உடன்பாட்டை எட்டுமாக இருந்தால், இதுவரை கொழும்பை மையப்படுத்தி நடைபெறும் அனைத்து விடயங்களும் வடக்கிற்கு இடம்மாறும். இதற்கு ஏனைய கட்சிகள் தயாரா? 

 

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=7fbf9839-e3e7-49f8-b93f-b9e390bb8a6e

கூட்டமைப்புக்கு மாற்று உருவாகுமா? சங்கரியாரின் அழைப்பும் முதலமைச்சரின் பதிலும் (ஒரு அலசல்)

 

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தமிழ் அரசியலரங்கில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றார். தவறான நேரங்களில் தவறாகக் காய்களை நகர்த்துவதுதான் சங்கரியின் வழமை. இப்போதைய அவரது நகர்வுகள் அவ்வாறான ஒன்றா அல்லது, சரியான நேரத்தில் சரியான இலக்கில்அவர் காய் நகர்தியுள்ளாரா என்பதை உடனடியாகச் சொல்லமுடியவில்லை. சங்கரியாரின் இந்தக் காய்நகர்தலால் கூட்டமைப்பின் தலைமை அதிர்ந்து போயிருப்பதாகவும் தகவல்.  எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பதை கூட்டமைப்பின் தலைமை நுணுக்கமாக அலதானித்துக்கொண்டிருக்கின்றது.

“வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இணங்கினால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பதவியையும், உதயசூரியன் சின்னத்தையும் அவரிடம் கொடுப்பதற்கு நான் தயார். அவர் சுட்டிக்காட்டும் ஒருவரிடம் பொதுச் செயலாளர் பதவியைக் கொடுத்துவிடுவதற்கும் விரும்புகிறேன்” என்பதுதான் ஆனந்தசங்கரி வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் சாரம்சம். தமிழ் அரசியல் வட்டாரங்களில் ஒரு சலசலப்பை இந்த அறிவிப்பு ஏற்படுத்தியிருக்கின்றது. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக மற்றொரு அணி களம் இறங்கப்போகின்றதா என்ற கேள்வியையும் இது எழுப்பியிருக்கின்றது.

1976 க்குப் பின்னர் தமிழ் மக்களின் பிரதான அரசியல் அணியாக மேலோங்கியிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியையும், அதன் உதயசூரியன் சின்னத்தையும் முடக்கிவைத்துள்ளார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆனந்தசங்கரியின் இந்த அறிவிப்பு தமிழ் அரசியல்பரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.

சங்கரியிடமுள்ள துருப்புச் சீட்டு

தொடர்ச்சியாகப் பல தேர்தல்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மிகவும் மோசமான தோல்விகளை ஆனந்தசங்கரி சந்தித்திருந்தாலும், இன்று அவரிடம் இருக்கும் துருப்புச் சீட்டு அந்த உதயசூரியன் சின்னம் மட்டும்தான்.  அது அவர் எதிர்பார்ப்பதைப்போல பலமான ஒரு துருப்புச் சீட்டாக இருக்குமா என்ற கேள்வியும் உள்ளது. காரணம் கடந்த காலங்களில் அதனை வைத்துக்கொண்டு அவரால் எதனையும் சாதிக்க முடியவில்லை.

தமிழ் அரசியல் பாரம்பரியமான இரண்டு பெரும் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு உதயசூரியன் சின்னமே பயன்படுத்தப்பட்டது. இரு துருவங்களாக இருந்த தந்தை செல்வாவும், ஜீ.ஜி.பொன்னம்பலமும் இணைந்து 1976 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கிய போது, தமிழ் இளைஞர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை காணப்பட்டது. அந்த நம்பிக்கையையும் எழுச்சியையும் 1977 இல் தமிழர் விடுதலைக் கூட்டணி பாரிய தேர்தல் வெற்றியாக அறுவடை செய்தது. எதிர்க்கட்சித் தலைவராக அ.அமிர்தலிங்கமும் தெரிவானார்.

ஆனால், இளைஞர்களின் நம்பிக்கையைத் தொடர்ந்தும் தக்கவைக்கும் வகையில் கூட்டணி செயற்படாத நிலையில்தான் ஆயுதப்போராட்டம் தீவிமடைந்தது. 2002 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் உருவான சமாதான சூழ்நிலையில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புக்கள் அரசியலில் இறங்கியிருந்த நிலையில் அவற்றை ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதற்கும் உதயசூரியன் சின்னமே பயன்படுத்தப்பட்டது.

வீட்டுக்கு முக்கியத்துவம்

பின்னர் ஏற்பட்ட உள்முரண்பாடுகளால் உதயசூரியன் சங்கரியின் வசமாக, அதில் இணைந்திருந்த கட்சிகள் தமிழரசுக் கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டன. வீட்டுக்கு உயிர் கொடுக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்யாமல் தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்துவதில் தமிழரசுத் தலைமை இறங்கியது. இன்னைய உள்முரண்பாடுகளுக்கு இதுதான் காரணம்.

இருந்தபோதிலும், கூட்டமைப்பை உடைத்துக்கொண்டு தனியாகச் செல்வதற்கான துணிச்சல் பங்காளிக்கட்சிகளுக்கு இருக்கவில்லை. 2010 தேர்தலில் கஜேந்திரகுமார் அணியினருக்கு நிகழ்ந்ததை தமக்கான ஒரு படிப்பினையாகவே இந்தக் கட்சிகள் கருதுகின்றன.

அதனால், மக்களை வசீகரிக்கக்கூடிய – நம்பிக்கையைக் கொடுக்கக்கூடிய பலமான ஒரு தலைமை, அதேபோன்ற இயல்புகளைக் கொண்டுள்ள ஒரு கட்சி கையில் இல்லாமல் களத்தில் இறங்குவது தற்கொலைக்குச் சமமானது என இக்கட்சிகள் கருதுகின்றன. இதில் பெருமளவுக்கு உண்மை உள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ள போதிலும், கூட்டமைப்பிலிருந்த போது பெற்றுக்கொண்ட ஒரு லட்சம் விருப்பு வாக்குகளை அவரால் பின்னர் பெறமுடியவில்லை.

இந்த முன்னுதாரணங்களை அடிப்படையாகக் கொண்டுதான் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அவமானங்களையும் பொறுத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியுடன் கூட்டுக்குடும்பம் நடத்தும் நிர்ப்பந்தத்துக்குள்ளாகியுள்ளன. தமிரசுடனான சகவாசத்தை முறித்துக்கொண்டு வெளிவருவது குறித்து தீவிரமாக ஆலோசித்தாலும், களத்தில் இறங்க முடியாதவையாகவே அவை உள்ளன.

விக்னேஸ்வரனின் பதில்  

இந்தப் பின்னணியில்தான் தமிழரசுத் தலைமையுடன் விக்னேஸ்வரனுக்கு உருவாகியிருக்கும் முரண்பாட்டைப் பயன்படுத்திக்கொள்ள பங்காளிக் கட்சிகள் முற்பட்டுள்ளன. மக்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்ற ஒரு தலைவராக விக்னேஸ்வரன் உள்ளார். அவரைத் தலைவராக முன்னிறுத்தி அரசியல் செய்வதற்கு பங்காளிக்கட்சிகள் முயற்சிகளை மேற்கொண்டுவருவது இரகசியமானதல்ல. விக்னேஸ்வரன் தலைமையேற்றால் அவருடன் இணைந்து செயற்பட தானும் தயாராக இருப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தெரிவித்திருக்கின்றார். அதற்கும் ஒருபடி மேலே சென்று தன்னுடைய கையில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியை தாரைவார்த்துக்கொடுக்க தான் தயாராக இருப்பதாக ஆனந்தசங்கரி இப்போது அறிவித்திருக்கின்றார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் இதற்கான தன்னுடைய பிரதிபலிப்பை உடனடியாகவே வெளியிட்டிருக்கின்றார். ஆனந்தசங்கரின் அழைப்புக்கான நேரடியான பதிலாக அது அமைந்திருக்கவில்லை. மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முதலில் ஒற்றுமையாகச் செயற்படுவோம் எனக் குறிப்பிட்டிருக்கும் முதலமைச்சர், தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்வது குறித்த அழைப்புக்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை. அதன் மூலம் ஊகங்களுக்கு இடமளிக்கும் வகையிலேயே அவரது பதில் அமைந்திருக்கின்றது.

“முதலில் ஒற்றுமையாகச் செயற்படுவோம்” முதலமைச்சர் கோரியிருப்பதன் மூலம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பதவியை ஏற்பது, அதற்கான அரசியல் செயற்பாடுகளுக்கு முன்னதாக மேலும் சில படிகளைத் தாண்டிச் செல்ல வேண்டியிருக்கின்றது என்பதை அவர் சுட்டிக்காட்டியிருப்பதாகவே தெரிகின்றது. அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு அவர் தயாராகவில்லை. அவருடைய அரசியல் பாணியே அதுதான்.

போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எவ்வளவோ செய்யவேண்டியிருக்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய பணி அனைத்துத் தமிழ்க் கட்சிகளிடமும் உள்ளது. அதனைவிட கட்சித் தலைமைப் பதவியைப் பற்றி விவாதிப்பது அவசியம் இல்லை. அதற்கான தருணம் இதுவல்ல என்பதுதான் முதலமைச்சரின் கருத்து எனத் தெரிகின்றது.

அதேவேளையில், அழைப்பை அவர் ஒரேயடியாக நிராகரித்துவிடவும் இல்லை. முதலமைச்சரின் பதிலில் முக்கியமான செய்திகள் உள்ளன. தமிழ்க் கட்சிகள் (கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் உட்பட ஏயை கட்சிகள்) அதனை எவ்வாறு பயன்படுத்தப்போகின்றன என்பதன் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நகர்வுகள் அமைந்திருக்கும். பந்து இப்போது தமிழ்க் கட்சிகளின் பக்கம்.

- டேவிட்ட ராமன்.

http://tamilleader.com/?p=52172

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பை பலவீனம் அடையச் செய்யும் முயற்சியில் யதீந்திரா போன்ற சிலர் ஈடுபட்டுக்கொண்டு இருகின்றனர். இப்போது அவர்களுக்கு இருக்கும் துரும்புச் சீட்டு முதல்வர் விக்னேஸ்வரன் தான். எப்படியாவது தனது அரசியல் எத்திரிகளைப் பழிவாங்கிவிட வேண்டும் எனத் துடிக்கும் ஆனந்த சங்கரியும் மக்களால் நிராகரிக்கப்பட்ட கஜே குழுவும், சுமந்திரனின் வரவால் தனது எம்பி பதவியை இழந்த சுரேசும் ஓரே நேர்கோட்டில் பயணிக்க விரும்புவதாக தெரிகின்றது. இவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள தவறிவிடுகின்றார்கள் அடுத்த தேர்தல் தொகுதிவாரி தேர்தலாகவே அமையும். ஒவ்வொரு தொகுதிக்கும் தெளிவான ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இருக்கவேண்டியதன் அவசியம் இப்போது அனைத்துத் தரப்பினராலும் புரிந்துகொள்ளப் பட்டிருக்கின்றது. தமிழ் மக்கள் தெளிவானவர்கள் எந்தவித அழுத்தங்களுமில்லாமல் தமது பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் நிலைமை இப்போது ஏற்பட்டிருக்கின்றது. மற்றவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை முன்னாள் பத்திரிகையாளர் திரு வித்தியாதரனை கூட்டமைப்பு உள்வாங்க வேண்டும். இங்கு மீண்டும் இலவுகாத்த கிளிகளாக ஏமாறப்போவது எங்கள் புலம்பெயர் விசில் குஞ்சுகள்தான்!<_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.