Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆனைக்கிணறு தெரு - சிறுகதை

Featured Replies

ஆனைக்கிணறு தெரு - சிறுகதை

உதயசங்கர் - ஓவியங்கள்: ரமணன்

 

தினைந்து வருடங்களுக்குப் பின்னால் ஊருக்குத் திரும்புகிறான் சுந்தர். ஒன்றுவிட்ட சித்தப்பா இறந்த துஷ்டி கேட்பதற்காக இந்த ஊருக்கு மீண்டும் வரவேண்டியதாயிற்று. அடையாளம் தெரியாதபடி ஊரின் முகம் மாறிவிட்டது. பேருந்திலிருந்து இறங்கி நூறுமீட்டர் தூரம் நடந்து சென்று வலது புறம் திரும்பினால் ஆனைக்கிணறு தெரு. இடிந்த கட்டைமண் சுவர்தான் தெருவைத் தொடங்கிவைக்கும். அதற்கு அடுத்தபடியாகத் தகரக்கொட்டாய் போட்ட கரீம்பாய் டீக்கடை. எப்போதும் டீயும் வடை தினுசுகளும் கலந்து தெருவே மணத்துக்கிடக்கும்.  நீண்ட தாடி வைத்த கரீம்பாய் ஒரு நொடிகூட நிற்காமல் ஆடிக்கொண்டேயிருப்பார். தலையாட்டி பொம்மை பக்கவாட்டில் ஆடுவதைப்போல லேசான ஆட்டத்துடனே டீ ஆத்துவார்; வடை போடுவார், பேசுவார், காசு வாங்கிக் கல்லாவில் போடுவார். சுந்தருக்கும் அவனுடைய சேக்காளி களான மணி, மாரியப்பன்,  இவர்களுக்கு மட்டும் எப்போதும் டீ கடன்தான். ஒரு சமயம் கூட காசு கொடுத்துக் குடித்த தில்லை. கரீம் பாய் எப்போது காசு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார். கணக்குப் பார்த்த மாதிரியே தெரியாது. அவர்கள் தான் கணக்கு நோட்டில் எழுதுவார்கள். கொடுக்கும்போது கழித்து எழுதுவார்கள். கரீம் பாயின் ஏலக்காய் டீயும், செய்யது பீடியும், தகிக்கும் அந்தத் தகரக்கொட்டாயும் அருகிலேயே இருந்த கட்டைமண் சுவரும், அவர்களுடைய வாழ்க்கையில் எத்தனையெத்தனை கனவுகளை சிருஷ்டித்திருக்கும்.

இப்போது தெருவின் துவக்கத்தில் ஆனைக்கிணறு தெரு என்று நீலநிறப் பலகை அம்புக்குறிபோல விரலை நீட்டிக்கொண்டிருந்தது. அப்போது எந்தப் பலகையும் கிடையாது. ஆனால், ஊருக்கே தெரியும்; ஆனைக்கிணறு தெரு. சுந்தர் பிறந்து வளர்ந்தது இந்தத் தெருவில்தான். இந்தத் தெருவின் ஒவ்வொரு அடியிலும் அவனுடைய பால்யகால வாழ்வின் ரேகைகள் அடர்த்தியாய் அப்பிக்கிடந்தன. வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கும் என்று யாராவது கணித்துச் சொல்லிவிட்டால் வாழ்க்கையில் சுவாரசியம் இருக்குமா என்ன?

68p1.jpg

அப்பாச்சியின் மரணம்தான் சுந்தரின்மனதில் விழுந்த முதல் அடி. அதற்குப்பின் மிகக் குறுகிய காலத்துக்குள் சுந்தரின் அப்பா திடீரென இறந்து குடும்பத்துக்கு அதிர்ச்சி யளித்தார். அவர் குடும்பத்துக்காகவும், அவருக்காகவும் வாங்கி வளர்த்துவந்த கடன்கள் பெரும்பாறைகளென உருண்டுவந்து குடும்பத்தின் முன்னால் உட்கார்ந்துகொண்டன. மூச்சுவிடவும் நேரம் இல்லாமல் கடன் கொடுத்தவர்கள் கொத்திக் கொண்டிருந்தார்கள்.  சுந்தரும், அம்மாவும், கல்யாணத்துக்குக் காத்திருந்த அக்கா செம்பாவும் ஓர் ஐந்தாம்பிறை இரவில் ஆனைக் கிணறுத்தெருவைவிட்டுத் தலைமறைவானார்கள். அவர்களது குச்சுவீட்டை ஒட்டி ஓடிய வாய்க்கால் முடியும் இடத்தில் இருந்தது ஆனைக்கிணறு. அந்த ஆனைக்கிணறு சாட்சியாகத்தான் ஓடிப் போனார்கள். அதில் தான் அம்மா, அக்கா, ஏன் அப்பாச்சிகூட அவளுடைய சிறுவயதில் குடிதண்ணீர் எடுத்தார்கள்.

நல்ல உயரமான சுற்றுச்சுவருடன் உயரமான மேடை கட்டி ஆனைக்கிணறு கம்பீரமாக இருக்கும். சுற்றிலுமிருந்த பத்துத் தெருக்களுக்கு குடிதண்ணீர் கொடுத்தது ஆனைக்கிணறுதான். எப்போதும் பெண்கள் கூட்டம் மொய்த்துக்கிடக்கும். கிணற்றின் இரண்டு பக்கமும் இரண்டு உருளிகளில் நல்ல வடக்கயிறு தகரவாளியுடன் கிடக்கும். அதுபோக ஏராளமான பேர் சொந்தமாகக் கயிறும் வாளியும் போட்டு இறைத்துக் கொண்டிருப்பார்கள். இரவும் பகலும் இறைப்பு நடந்துகொண்டேயிருக்கும். பத்துத் தெரு பெண்களையும் ஆனைக்கிணற்றில் பார்க்கலாம். அதனால் அந்தப் பத்துத் தெருவிலிருக்கும் ஆண்களையும் அங்கே பார்க்கலாம். அநேகமாக வீட்டிலிருக்கும் அத்தனை பேருமே தண்ணீர் சுமந்தார்கள். குழந்தைகள் நடைபழகியதுமே சின்னச் செப்புக்குடங்களை அல்லது சொம்புகளை அல்லது  தகரக்குடங்களை இடுப்பில் வைத்து தண்ணீர் எடுத்து விளையாடினார்கள். கொஞ்சநாள்களில் அந்தக் குடங்களோடு ஆனைக்கிணற்றுக்கு வந்துவிட்டார்கள்.  வீட்டில் இருக்கும் நாலைந்து சிமென்ட் தண்ணீர்த்தொட்டிகளில் நிறைந்திருக்கும் தண்ணீரில் குழந்தைகள் எடுத்துவரும் ஒரு சொம்புத்தண்ணீரும் தன் பங்காக விழுந்திருக்கும்.

சுந்தர் பள்ளிக்கூடம் படிக்கும்போது அம்மாவிடம் கேட்டிருக்கிறான். “ ஏம்மா அந்தக் கிணறுக்கு ஆனைக்கிணறுன்னு பேரு வந்தது.”

“சித்திரைத்திருளா வரும்போது தென்காசியிலிருந்து யானை வரும். அந்த யானை நம்மூருக்கு வந்தா எப்பவும் இங்கதான் தண்ணி குடிக்கும். அதனால ஆனைக்கிணறுன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க...” என்று சொன்னாள். ஆனால், தன்னுடைய பாம்படக் காதுகளை ஆட்டிக்கொண்டே வேறு ஒரு கதை சொன்னாள் அப்பாச்சி.

``செண்பகக்கோட்டை ராஜாவுக்கு தெய்வானை என்று ஒரு மகள் இருந்தாள். அழகும் அறிவும் நிறைந்த அவளுக்குக் கல்யாணம் முடிக்க எட்டுத்திசையும் பொருத்தமான இளவரசனைத் தேடி ஆள் அம்பு பரிவாரங்களை அனுப்பி வைத்தான் ராஜா. ஆனால், பாவி மகள் இளவரசிக்கு ராஜாவின் படையில் ஒற்றுவேலை பார்த்துக்கொண்டிருந்த வீரன் என்ற பகடைமீது ஆசை. பகடைக்கும் இது தெரியும். அவனும் அப்படியிப்படி இளவரசி கூட பழகினான். ரகசியம் வெளியாகிவிட்டது. இளவரசிதான் காட்டிக்கொடுத்துவிட்டாள். அவள் வீரனோடு பழகியதில் சூலியாகி விட்டாள். அவ்வளவுதான் ராஜாவுக்குத் தனது பரம்பரை இழிவுபட்டதாக நினைத்தான். அப்போது எல்லாம் புரோகிதர்கள் வெச்சதுதான் சட்டம். உடனே அவர்கள் பரம்பரை இழிவைப் போக்க வழி சொன்னார்கள். வீரனைப் பிடிக்க முடியவில்லை. அவன் தப்பித்துவிட்டான். இதுவரை அவன் போக்கிடம் எதுவெனத் தெரியாது. ஆனால், பாவம் இளவரசி.

68p2.jpg

வறண்ட பொட்டலாகக் கிடந்த இந்த இடத்தில் ஒரு கிணறு தோண்டச்சொன்னான் செண்பகக்கோட்டை ராஜா. அந்தக் கிணற்றில் ஒரு சொட்டுத் தண்ணீர் ஊறவில்லை. புழுதி பறந்தது. வறண்ட அந்தக் கிணற்றில் ஒரு குடம் புனிதநீரை ஊற்றச் சொன்னார்கள் புரோகிதர்கள். இளவரசி தெய்வானையும் அவர்கள் சொன்னபடியே புனிதநீர்க் குடத்தைச் சுமந்து கொண்டு கிணற்றருகில் சென்றாள். அவள் குனிந்து ஊற்றிக்கொண்டிருக்கும்போது பின்னாலிருந்து யாரோ தள்ளிவிட்ட மாதிரி இருந்தது. அவள் `வீரா’ என்று அலறியபடி உள்ளே விழுந்தாள். அவளுடைய அலறல் சத்தம் அடங்குவதற்குள் கிணற்றின் தூரில் அடைபட்டிருந்த ஊற்றுகளின் கண்கள் திறந்தன. அருவியிலிருந்து சோவென நீர் பாய்ந்து விழுவதைப்போல ஊற்றுகளிலிருந்து நீர் மேல்நோக்கி எழுந்தது. கிணற்றின் விளிம்புவரை நீர் ததும்பியது.  ஆனால்,  உள்ளே தள்ளிவிடப்பட்ட இளவரசி தெய்வானையைக் காணவில்லை. எப்படி மாயமாய் மறைந்தாள் என்று யாருக்கும் தெரியவில்லை. அதைப் பார்த்த புரோகிதர்கள் ஊரைவிட்டே ஓடிவிட்டார்கள். முதலில் தெய்வானைக்கிணறாக இருந்தது நாளாவட்டத்தில் ஆனைக்கிணறாகி விட்டது’’ என்று சொன்ன அப்பாச்சி இடுப்பிலிருந்து பொடிமட்டையை எடுத்துப் பிரித்து ஆட்காட்டி விரலையும் கட்டைவிரலையும் சேர்த்து ஒரு சிட்டிகைப் பொடியை அள்ளியெடுத்து மூக்கில் திணித்தாள். சுந்தருக்கு அடுத்து என்ன நடக்கும் என்று தெரியும். அவன் எழுந்து பையன்களிடம் இந்தக் கதையைச் சொல்லத் தெருவுக்கு ஓடினான்.

ஆண்டு முழுவதும் இரவும் பகலும் இறவையாகிக் கொண்டிருக்கும் ஆனைக்கிணறு. இரவும் பகலும் பெண்களின் பேச்சு, சிரிப்பு, கோபம், அழுகை, சண்டை, காதல் என்று ஒரு மனிதச்சந்தையின் அத்தனை குணாதிசயங்களையும் ஆனைக்கிணற்று மேடையில் பார்க்கலாம். ஆனால், அத்தனை சத்தமும் இல்லாமல் மயானமாக சில நாள்கள் ஆனைக்கிணறு மாறிவிடும். ஆளரவம் இல்லாமல் சின்னச்சத்தம்கூட பெருங்கூப்பாடாகக் கேட்கும் நாள் வந்தது என்றால், ஆனைக்கிணற்றில் யாரோ ஒரு பெண் மிதக்கிறாள் என்று அர்த்தம். அவன் பலதடவை பார்த்திருக்கிறான். தண்ணீரில் தலைமுடி மிதந்தலைய, புடவையின் முந்தானை விழுந்த பெண்ணின் துயரைச்சொல்வதைப்போல மேலும் கீழும் முங்கி எழுந்துகொண்டிருக்கும். அந்தக் காட்சி அவன் கண்களைவிட்டு அகல  நிறைய நாள்களாகும். அவர்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் இருந்த ராணியக்கா ஒருநாள் காலையில் ஆனைக்கிணற்றுக்குள் கிடந்தாள். கால்களைக் கயிற்றால் கட்டியிருந்தாள். புடவையை நன்றாகக் கழுத்துவரை இறுக்கியிருந்தாள். உடலை வெளியே எடுத்துப்போட்டிருந்தார்கள். அவளுடைய புருஷன் முகத்தில் எந்த உணர்ச்சியுமில்லை.ராணியக்கா வேலை பார்க்கிற தீப்பெட்டி கம்பெனியில், கூட வேலைபார்க்கிற ஓர் ஆணோடு தொடர்புபடுத்திப் பேசியிருக்கிறான் அவளுடைய புருஷன். அவளால் தாங்க முடியவில்லை. 

பிள்ளையார் கோயில் தெருவில் இருந்த பேச்சியம்மாள் தன் கைகுழந்தையோடு ஆனைக்கிணற்றில் விழுந்து இறந்துபோனாள். பக்கத்து வீட்டுக்காரி தன்னுடைய பிள்ளையைத் திட்டிவிட்டாள் என்ற கோபம் அவளுக்கு. மேட்டுத்தெருவில் இரவில் தனியாக வந்த பெண்ணைப் பலவந்தப்படுத்தி, கையையும் காலையும் கட்டிக்கொண்டுவந்து ஆனைக்கிணற்றில் போட்டுவிட்டார்கள். யார் என்றே தெரியவில்லை. தெப்பக்குளத் தெருவில் இருந்துவந்து அக்கா, தங்கை இரண்டுபேரும் ஒருவரையொருவர் சேர்த்துக் கட்டிக்கொண்டு விழுந்து இறந்துபோனார்கள். ஆனைக்கிணறு மரணக்கிணறாக மாறிக்கொண்டிருந்தது. மாசம் ஒருத்தர் இறந்து போனார்கள்.  கணவனுடன் சண்டை, பக்கத்து வீட்டுக்காரியின் ஏச்சு, கள்ளக்காதல், குழந்தைகள் சண்டை, கடன் தொல்லை இப்படியே ஆயிரம் காரணங்கள் இருந்தன. எல்லா காரணங்களின் முடிவில் ஒரு பெண் ஆனைக்கிணற்றில் மிதந்தாள். ஊரில் பத்துக் கிணறுகள் இருந்தன. ஆனால், எல்லா தெருப்பெண்களும் ஆனைக்கிணற்றிலேயே தங்களது வாழ்க்கையை முடித்துக்கொண்டனர்.

68p3.jpg

நிறைய வீடுகளில் பெண்கள் சாமியாடினார்கள். தெய்வானை வந்திருப்பதாகச் சொன்னார்கள். ராணி வந்திருப்பதாகச் சொன்னார்கள். பேச்சியம்மாள் வந்திருப்பதாகச் சொன்னார்கள். அதைச்செய் இதைச்செய் என்று ஆணையிட்டார்கள். என்ன செய்தும் ஆனைக்கிணற்றின் பசி அடங்கவில்லை. மேலும் மேலும் உடல்களைக் காவு வாங்கிக்கொண்டேயிருந்தது. அப்பாச்சிக்கும் சாமி வந்தது. தலையை விரித்துப்போட்டு உட்கார்ந்த நிலையிலேயே ஆடினாள். `ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...  ஊஊஊஊஊ... ஆஆஆஆஆ’ என்று வாயால் காற்றை ஊதினாள். அம்மா பயபக்தியுடன் அப்பாச்சி முன்னால் நின்று கும்பிடுவதை முதல்முறையாகப் பார்த்தான் சுந்தர். ஒருநாளும் அம்மா, அப்பாச்சியைத் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. எப்போது அவளைப் பார்த்துவிட்டாலும் வெளியில் யாருக்கும் கேட்காதபடிக்கு வைவாள். அவள் வைவது அப்பாச்சிக்குத் தெரியும். ஆனால், ஏதாவது விஷேச நாட்கள் என்றால் அப்பாச்சிக்கு சாமி வந்துவிடும். அப்போது அம்மா உண்மையான பக்தியுடன் அப்பாச்சியின் காலில் விழுந்து திருநீறு பூசிக்கொள்வாள். இப்போது தெய்வானை பழிவாங்குகிறாள் என்று அப்பாச்சி சொன்னாள். நூத்தியெட்டு தேங்காயை உடைத்து சேலை எடுத்துவைத்துக் கும்பிட வேண்டும் என்று சொன்னாள். தெருக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து காசு பிரித்து அதையும் செய்து பார்த்தார்கள். சுந்தர் ஒருநாள் சாதாரணமாக அப்பாச்சியிடம் கேட்டான்.

“ஏன் அப்பாச்சி பொம்பளைங்க மட்டும் ஆனைக்கிணத்துல விழுந்து சாகறாங்க. அவங்க செத்தா எல்லாம் சரியாயிருமா?”

அதைக் கேட்டதும் அப்பாச்சி கொஞ்ச நேரத்துக்கு எதுவும் பேசவில்லை. அவளுடைய கண்கள் கலங்கின.கண்களைத் துடைத்துக் கொண்டே, “பொம்பளங்கள படைச்ச கடவுளும் ஆம்பளதானே... பிறகு என்ன செய்ய முடியும். பொம்பிளங்க தலைவிதி அவ்வளவுதான்… செத்தா எல்லாம் சரியாயிரும். பிரச்னையும்  தீந்திரும்.  திருடியும் நல்லவளாயிருவா. ஏன்... தெய்வங்கூட ஆயிருவா” என்று சொன்னாள். ஆச்சியின் தழுதழுத்த அந்தக் குரல் சுந்தரின் மனதை ஏதோ செய்தது. ஆனால், ஆனைக்கிணற்றின் துயரம் தீரவில்லை. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆனைக்கிணற்றுக்குத் தண்ணீர் எடுக்க வருகிற கூட்டம் குறைந்தது.

காலம் இருண்டது. அப்பாச்சியும் ஒருநாள் ஆனைக்கிணற்றில் மிதந்தாள். எப்போதும் அம்மாவின் அலட்சியத்தையும், சுடுசொற்களையும் கேட்டுப்பழகியவள்தான் அப்பாச்சி. அதைப்பற்றி என்றுமே கவலைப்பட்டதில்லை. ஆனால், அன்று என்னவோ தெரியவில்லை. அப்பா ஏதோ பேசியிருக்கிறார். கேவலம் மூக்குப்பொடி மட்டை விவகாரம். மூக்குப்பொடி வாங்கக் காசு கேட்ட அப்பாச்சியைப் பார்த்து அப்பா, “நீயெல்லாம் இருந்து ஏன் கழுத்தறுக்கே… இந்த வயசில மூக்குப்பொடி ஒரு கேடா? மனுசந்தன்னால கண்ணுமுழிப் பிதுங்கிக்கிட்டு வாரேன்… என்னமோ இனிமேத்தான் சாதிக்கப்போற மாதிரி…” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

68p4.jpg

அன்று முழுவதும் மோட்டைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தாள் அப்பாச்சி. தரையில் எதையோ தேடுவதைப்போல விரல்களால் பரசிக் கொண்டேயிருந்தாள். சில சமயம் இடுங்கிய கண்களில் கசிந்த நீரை முந்தானையால் துடைத்துக்கொண்டாள். அம்மா அன்று அப்பாவைக் கடிந்தாள். அப்பாச்சியிடம் வாஞ்சையாய் பேசவும் செய்தாள். அவளே சுந்தரிடம் காசு கொடுத்து எஸ்.ஆர்.பட்டணம் பொடி மட்டையை வாங்கிவரச்சொல்லி அப்பாச்சியிடம் கொடுத்தாள். அப்பாச்சி அதைக் கையில் வாங்கி அருகில் வைத்துக்கொண்டாள். ஆனால், அன்று முழுவதும் பொடிமட்டையைப் பிரிக்கவில்லை. இதையெல்லாம் அம்மாதான் அப்பாச்சி இறந்த வீட்டில் மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். சுந்தர் இதை எதையும் கவனிக்கவில்லை. அவன் பாப்புலர் டைப் இன்ஸ்டிடியூட்டில் டைப் முடிந்துவரும் வனஜாவின் ஞாபகமாகவே இருந்தான். மணியின் யோசனைப்படி இன்று வனஜாவிடம் எப்படியும் காதல் கடிதத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்ற ஒரே சிந்தனை மட்டும்தான் அன்று இருந்தது. அதனால் அப்பாச்சியை ஏறிட்டுக்கூட பார்க்கவில்லை. மறுநாள் காலையில் அம்மாவின் வார்த்தைகளற்ற அலறல்சத்தம் கேட்டபிறகு தான் சுந்தருக்கு உணர்வு வந்தது.

சுந்தர் எதற்கும் அழுதோ கலங்கியோ பழக்கமில்லாதவன். எல்லாவற்றையும் உள்ளேயே அமுக்கிவைத்துக்கொள்வான். முகம் மட்டுமே அவன் மன அழுத்தத்தில் இருக்கிறான் என்று காட்டும். ஆனால், அப்பாச்சியின் தற்கொலை அவனை உலுக்கிவிட்டது. அவளுக்குக் குறைந்தது எழுபத்தைந்து வயதாவது இருக்கும். இந்த வயதில் ஆனைக்கிணற்றின் மேடையில் ஏறி  ஓர் ஆள் நெஞ்சுயரம் இருக்கும் சுவரில் ஏறி உள்ளே விழுவதென்றால் எவ்வளவு வைராக்கியம் இருக்க வேண்டும். அவன் உடைந்து அழுதான். கண்கள் ஈரமாகிக்கொண்டேயிருந்தன. அப்பாச்சியின் மடியில் உட்கார்ந்து புரண்டு வளர்ந்தவன் அவன். அவள் சொல்லும் கதைகளில் வரும் இளவரசிகளையும், இளவரசர்களையும், பேய்களையும், பூதங்களையும் அவன் அப்படி நேசித்தான். அப்பாச்சியின் பல்லில்லாத வழுவழுப்பான குரலில் வழுக்கி உறக்கத்தின் மௌனக்குளத்தில் மெல்ல மூழ்குவான் சுந்தர். அவளிடமிருந்து வரும் மூக்குப்பொடியின் மணம் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். சில சமயங்களில் தடுமம் பிடித்திருக்கும்போது அம்மாவுக்குத் தெரியாமல் அவனுக்கு மூக்குப்பொடி உறிஞ்சக்கொடுப்பாள்.

அவனைவிட அப்பாதான் நொறுங்கிப் போய்விட்டார். வெகுநாள்களுக்கு அவருடைய முகம் குராவிப்போய் இருந்தது. உள்ளுக்குள் அவருடைய ஆவி கொஞ்சம் கொஞ்சமாக ஒடுங்கிக்கொண்டிருந்தது. அப்பாச்சி இறந்த ஒரு வருடத்துக்குள் ஏகப்பட்ட காரியங்கள் சடுதியில் நடந்தேறின. வாடகை கொடுக்க முடியாமல் நான்கு வீடுகள் மாறினார்கள். அப்பா வேலை பார்த்துவந்த ராஜகுமாரி ஜவுளிக்கடை வற்றிப்போனது. இனி ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க வழியில்லை என்று முதலாளி வாசலைக் காட்டினார். விசுவாசம், நீண்டநாள் என்ற இரண்டு கயிறுகளில் கட்டிய ஊஞ்சலில் இப்பவோ பிறகோ என்று ஆடிக்கொண்டிருந்தார். ஆனால், முதலாளி சுந்தரின் அப்பாவுக்கும் வாசல் இருக்கும் திசையைக் காட்டும் முன்னாடியே அப்பா பெரிய வாசல் வழியே உலகத்தை விட்டுப்போய் விட்டார்.

சுந்தர், கரீம்பாய் கடை இருந்த இடத்தில் புதிதாக அலங்கரிக்கப்பட்டிருந்த ஸ்ரேயா தேநீரகம் முன்னால் நின்றான். ஒரு கணம் கரீம்பாய் கண்முன்னே தோன்றினார். ஒரு டீ குடிக்கலாம் என்று நினைத்தான். டீ மாஸ்டரிடம், “ ஒரு டீ ஸ்ட்ராங்கா… மலாய் போட்டு.” என்று சொன்னான். அவர் அவனை ஊருக்குப் புதிது என்று கண்டுகொண்டார். கரீம்பாய் டீக்குத் தனிச்சுவையே மலாய்தான் என்று சுந்தர் சொல்வான். வேறு யாரும் கேட்க மாட்டார்கள். அவனைப் பார்த்ததுமே மலாய் போட்டு ஸ்டிராங் டீ கொடுத்துவிடுவார் கரீம்பாய்.

68p5.jpg

டீக்கடை தாண்டி வலதுபுறம் திரும்பினால் ஆனைக்கிணறு இருக்கும்.  அவன் எதிர்பார்த்த மாதிரியே ஆனைக்கிணறு இல்லை. அப்படி ஒரு கிணறு இருந்ததற்கான எந்தச் சுவடும் இல்லாமல் அங்கே ஓர் அழகான அடுக்குமாடிக் குடியிருப்பு எழுந்து நின்றது. காலம் மாறிக்கொண்டிருக்கிறது.

சித்தி சொன்ன அடையாளங்களை வைத்து வீட்டைக் கண்டுபிடித்தான். சித்தப்பா இறந்து மூன்று மாதங்களாகிவிட்டன. இப்போது எப்படி அந்தத் துக்கத்தை அனுஷ்டிப்பது என்று புரியாமல் குழம்பிப்போய்த்தான் சுந்தர் வீட்டுக்குள் நுழைந்தான். வருத்தமான முகத்தை அணியச்செய்த முயற்சி தோல்வியடைந்து கொண்டிருப்பதைச் சில நொடிகளிலேயே அவன் உணர்ந்துகொண்டான். ஆனால், சித்தி சில நிமிடங்கள்கூட அந்தச் சூழ்நிலையின் தர்மசங்கடத்தில் அவனை மாட்டிவிடவில்லை. சித்தி பெரிய பேச்சுக்காரி. அவளால் காலாவதியான அந்தச் சோகத்தைத் தொடர முடியவில்லை.

வீட்டின் குசலங்களை விசாரித்துவிட்டு ரகசியம் பேசுகிற தொனியில், “சுந்தா... ஆனைக்கிணறு இருந்த இடத்தைப் பார்த்தியா… ஏழுமாடிக் கட்டடம்”என்றாள்.  சுந்தரும் அவளை மாதிரியே தாழ்ந்த குரலில், “ஆமா… சூப்பரா இருக்கு சித்தி... யாரு ஓனரு?” என்று கேட்டான்.
“ யாரு... நம்ம சம்முகம் கவுன்சிலர் அவந்தான் அந்த இடத்தை வளைச்சி கட்டடம் கட்டிட்டான். ம்ஹூம்.. கட்டி என்ன பிரயோசனம்?’’

``ஏன் சித்தி?’’

“இப்பயும் அந்த மாடிக்கட்டடத்திலே திடீர் திடீர்னு பொம்பிளக செத்துப்போறாளுக… போனமாசம் அஞ்சாவது மாடியில ஒரு பொம்பிள தீக்குளிச்சி செத்தா…நேத்திக்கிக்கூட மூணாவது மாடியிலேர்ந்து ஒரு பொண்ணு கீழே குதிச்சிட்டா… புருசங்கூட சண்டையாம். அந்தத் தெய்வானை சாமியான இடமாச்சே… சும்மா விடுவாளா?’’ என்று மிக முக்கியமான ரகசியத்தைச் சொல்வதைப்போல சொல்லிக் கொண்டிருந்தாள் சித்தி. சுந்தர் சில நொடிகள் எதுவும் பேசவில்லை. மனம் கசந்தது. பின்னர் ஒருவித வெறுப்பு கவிய மெல்ல வாயைத்திறந்து, “இது ஆண்களின் உலகம் சித்தி” என்றான்.அவனை மலங்க மலங்க பார்த்தபடியே  ``என்ன சொல்றே நீ...” என்றாள் சித்தி.

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.