Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீசைக்காரர்

Featured Replies

மீசைக்காரர் - சிறுகதை

 
 

சிறுகதை: ம.காமுத்துரை, ஓவியங்கள்: ஸ்யாம்

 

மீசைக்காரரின் பிரேதத்தை முதன்முதலில் நான்தான் பார்க்க நேர்ந்தது. அவ்வளவு பெரிய உருவம், மரத்தி லிருந்து  உதிரவிருக்கும் பழுத்த இலைபோலக் காற்றில்  முன்னும் பின்னுமாய் ஆடிக்கொண்டிருந்தது. வாசலின் விட்டத்தில் தொங்கியதால் கூடுதல் அதிர்ச்சி. அப்படியே காம்பவுண்டு இரும்புக்கதவில் மோதிக்கொண்டேன்.

பலரும் சொல்வதுபோல, கண்கள் பிதுங்கி, நாக்கு வெளியே தள்ளி. . . போன்ற கோரமெல்லாம் இல்லை. ஏதோ கண்ணா மூச்சி விளையாட்டு காட்டுவதுபோல இமைகளை மூடித்தான் தொங்கிக் கொண்டிருந்தார். அவரது இடுப்பு வேட்டி பாதம் வரை இறக்கிவிடப்பட்டிருந்தது. அதன் நுனி, அறுபட்ட பல்லியின் வாலாய், வீசும் காற்றின் வேகத்திற்கேற்ப படபடத்துக் கொண்டிருந்தது. கற்றையாய் ஒதுக்கியிருந்த மீசை, கம்பீரம் மாறாதிருந்தது.  

p46a_1521616479.jpg

மதிய சாப்பாட்டுக்காக வீட்டுக்கு வந்திருந்தேன். மனைவி, சமையலை முடித்துவிட்டுக் குளித்துக்கொண்டிருந்தாள். அதனால் கை கால் அலம்ப, காம்பவுண்டு உள்ளிருக்கும் பொதுக்குழாய்க்கு வந்தேன். வார்டு கவுன்சிலர் உபயத்தால் எங்கள் தெருவுக்கும் ஓர் ஆழ்குழாய் தண்ணீர்த்தொட்டி கிடைத்திருந்தது. எங்கள் வீதி `ப’ வடிவில் உட்குழிந்திருந்ததால் அடுத்த தெருக்காரர்களுக்கு இந்தக் குழாயை அறியும் வாய்ப்பு ரொம்பவும் குறைச்சல். ஆகவே, இங்கே இருக்கும் எட்டு வீட்டுக் காரர்கள் மட்டும் ஏக சுதந்திர மாய்க் கொண்டாடுவோம்.

குழாயடியை ஒட்டினாற் போல்தான் மீசைக்காரர் வீடு.

அதை முழுமையான வீடு எனச் சொல்லிவிட முடியாது. எட்டுக்குப் பத்து அளவில் மேலே தகரம் வேய்ந்து அளவான வாசலும் கதவும் சின்ன அளவில் ஜன்னலும் பொருத்தி இருக்கும் ஓர் அமைப்பை ‘வீடு’ எனச் சொல்லாமலும் இருக்க முடியுமா? ஆனால், அந்த இடத்தின் விஸ்தீரணத்தில் ஆறில் ஒரு பங்கே அந்த அறை என்ற உண்மை தெரியும்போது மனசு ஏற்கத்தான் மறுக்கும்.

அந்த அறையில் அவர் தனியாகவே இருந்தார். மனைவி இல்லை, மகன்கள் இருவர். வேலைக்காக வெளியூர் போய் அங்கே குடும்பமாகிவிட்டனர். உள்ளூரில் ஏதாவது முக்கியமான கல்யாணம் காட்சி என்றால், அதற்கு வருகிற சாக்கில் தந்தையை விசாரித்துவிட்டுப் போவார்கள்.

மீசைக்காரர், ‘மணியன்பிள்ளை பேக்கரி அண்டு டீ ஸ்டாலி’ன் ஆஸ்தான வடை மாஸ்டர். அவரது தவளை வடைக்கு ரசிகர்கள் ஜாஸ்தி. ஒருநாள்கூட அவரை லீவெடுக்க அனுமதிக்க மாட்டார்  மணியன்பிள்ளை. ``ஒமக்கென்னயா லீவு! ஒண்ணு, நான் மண்டயப் போடணும்... இல்ல, நீ கட்டையில போவோணும். அதுக்கெடையில ஒனக்கும் லீவு கெடையாது, கடைக்கும் லீவு கெடையாது. ஆமா..!” என அவரது மீசையைத் திருகிவிட்டபடியே சொல்வார்.

``என்னத்த வடையில பெரிய ருசியக் கண்டாக! என்னா, எல்லாரும் சேக்குற சரக்குதே, கடலமாவுல கூடுதலா நாலு தேங்காச்சில்ல சீவிப் போடுறான். சோடாப்பு சேத்து எண்ணெயக் குடிக்கவிடுறான். எண்ணெய்க்கினு ஒரு ருசி உண்டில்ல!”

எகடாசி பேசுகிற நபர்களால் எத்தனை தேங்காயை உடைத்துப் போட்டாலும், வகைவகையாய்ப் பருப்புகளை வறுத்துப் போட்டாலும், தாராளமாக எண்ணெய் குடிக்க விட்டாலும் உமட்டல் வந்ததேயொழிய, ஏவாரம் நடக்கவில்லை. ``கைப்பக்குவம், கைராசி’’ என்றார்கள்.

காலையில் சுள்ளென விடிவதற்குள் போய் எண்ணெய்ச் சட்டிகளைக் கழுவச் செய்துவிட்டு சாவகாசமாய் காலை காபியைக் கையில் பிடித்துக்கொண்டு வேலையைத் தொடங்கினார் என்றால், ரவா கேசரியில் ஆரம்பித்து உளுந்துவடை, சுசியாப்பம், ஆட்டுபோண்டா, தவளைவடை போட்டு பால்பன்னில் முடித்து  மதியம் சாப்பாடு உண்டுவிட்டு அறைக்குத் திரும்புவார். அங்கே நல்லதோர் உறக்கத்தைப் போட்டு விட்டு 4 மணிக்கு எழுந்திருப்பார். குளிரக் குளித்துவிட்டு மறுபடி கடைக்குப் போனால் மிக்ஸர், காரசேவு, பழையபடி தவளை வடை மட்டும். தேவைக்குப் போடுவார். கடையில் விளக்கு பொருத்திவிட்டால் மீசைக் காரருக்கு வேலை இருக்காது.  கடைக்கு வெளியே வந்து அமர்ந்து 8 மணி வரை அரசியல், சினிமா, ஊர்ப்பொரணி என இலக்கில்லாமல் போகும். சரியாக 8 மணிக்கு மணியன்பிள்ளை செலவுக்குப் பணம் தருவார். வெளிக்குப் போய்விட்டு வரும்போது ஒரு கோட்டரும் இரண்டு வயல்காட்டுப் பழங்களுமாய் வீடு திரும்புவார்.

தெருவாசிகள் யாராவது எதிர்ப்பட்டால் கொஞ்சநேரம் அளவளாவிவிட்டு அறைக்குள் போவார். வாங்கிய சரக்கைக் குடித்துவிட்டு, வாழைப் பழத்தைக் கடித்து விழுங்கிவிட்டு பிளாஸ்டிக் வொயர் பின்னிய கட்டிலில் சாய்ந்துவிடுவார்.

மூன்றாம் சாமத்தைப்போல இந்த மதியவேளையும் நிசப்த மானது.  அதுவும் இதுபோன்ற ஒரு வீதி அபூர்வம். உதிரிப்பூ விற்பவர்கள், `கொய்யா...ப்  பழம்’ எனக் கூவுபவர்கள் வரலாம். அவர்களும்கூட எதிர்க்குரல் எழும்பாவிட்டால் தெரு முனையிலேயே நின்று திரும்பி விடுவார்கள்.

கை கால் அலம்பிய நீர், துணிகொண்டு துடைக்காமலேயே காய்ந்துபோனது. பின்வாக்கிலேயே நடந்து குழாயடியைத் தொட்டேன். மறுமுறை முகம் அலம்பத் தோணவில்லை. 

மாடிப்படி ஏறிய வீட்டில் தம்பியும், கடைசி வீட்டில் சரசு சித்தியும்தான் குடியிருக்கிறார்கள். யாரையாவது கூப்பிட்டுச் சொன்னால் நல்லது. ஏனோ எதையுமே செய்யத் தோன்றாமல், கால்கள் வீட்டுக்குள் நுழைந்தன.

``எங்க போய் வாய் பாத்துக் கிட்டிருந்தீங்க இம்புட்டு நேரம்? வீட்டுக்கு வந்தா ஒரு நிமுசம் நெலயா நிக்க முடியாதா?” மனைவி பாட்டு படித்தாள்.

``நீ குளிச்சிக்கிட்டிருந்த...”

``அது எந்நேரம்? குளிச்சி முடிச்சு சிக்கெடுத்து சீவி முடிச்சிட்டேன்.”

நான் என் தம்பி வீட்டுக்குப் போயிருப்பேன் எனக் குமைகிறாள். ``நீ நெனைக்கிறாப்ல சின்னவெ வீட்டுக்கெல்லாம் போகலத்தா.”

``நா இப்பக் கேட்டனா? நீங்களா சொல்றதப் பாத்தா எங்காத்தாவ நா குளுதாணிக்குள்ள அமுத்தலன்னு ஒப்புச்சொன்ன மாதிரில்ல இருக்கு. நீங்க சின்னவெ வீட்டுக்குப் போனா எனக்கென்ன... பெரியாள் வீட்டுக்குப் போனா எனக்கென்ன! வீசப்போவுதா, நாறப்போவுதா?” பேசிக்கொண்டே சோற்றுச் சட்டியின் மூடியைத் திறந்து வியர்வைநீரை வடித்து விட்டாள்.

``சாப்பிடலாம்ல. . . ‘’

``ஒங்களத்தே, சோறு சாப்பிடலாம்ல..!”

மீசைக்காரரின் கோலம் இன்னமும் கண்ணுக்குள் ஆடிக்கொண்டே இருந்தது. நிலைவாசலில் தொங்கும் நெடிய உருவம்... காற்றில் படபடக்கும் அவரது வேஷ்டியின் நுனி. . .  அது அழிந்தால்தானே சோற்றில் கை வைக்க முடியும்.

சோறு வேணாம் எனச் சொல்லலாம். மனைவியோ, பெரும் யுத்தம் ஒன்றுக்குத் தயாராய் நிற்கிறாள். அவளிடம் கண்டதைச் சொல்லிவிடலாமா?

ஒரு காலை நீட்டி, இன்னொரு காலை சம்மணமிட்டு உட்கார்ந்து சோறு, குழம்பு, காய், ரசம், ஊறுகாய் இன்னபிற வகைகளை முன்னால் நிறுத்தி, தட்டில் சோற்றைப் பரிமாறியபடி என்னைப் பார்த்தாள்.

தலைகுளித்து முடித்த அவளின் முகம் பூரணச்சந்திரன்போலப் பொலிவு மிகுந்திருந்தது. எண்ணெய் தடவாத அவளின் கூந்தலிலிருந்து விலகிய நீளமான ஒரு முடி, தன்னுடன் நான்கைந்தை இணைத்துக்கொண்டு அவளின் முகத்தில் விழுந்து, பவுடர் பூசிக் குங்குமம் இட்ட அவளது வதனத்தில் கீறல் விழுந்த கண்ணாடியைப்போல ஒரு தோற்றத்தை உருவாக்கியிருந்தது.

`பக்கத்துவீட்ல, மீசைக்காரர் பொணமா தொங்குறார் நாகு!’ - சொன்னால் தாங்குவாளா? நொடிப்பொழுதில் முகம் கலவர பூமியாகிவிடும். சிங்காரித்த முடிக்கற்றைகள் சிலிர்த்துப்போய் நட்டமாய் நிற்கும். முகத்தில் பொலிவு முற்றிலுமாய் மாறி  வெளிறிப்போய் சவக்களை தாண்டவமாடும். ஏற்கெனவே பயந்தாங்குளி. நான்கைந்து நாளைக்கு யாரையும் வீட்டை விட்டு வெளியேற விட மாட்டாள். அவளே மனநோயாளிபோலப் புலம்ப ஆரம்பித்துவிடுவாள். ஆனாலும், எப்படியும் தெரியத்தானேபோகிறது. . .  தெரியும்போது தெரியட்டும்! இப்போது வேண்டாம். சொல்வதற்கு நாக்கு எழும்பவில்லை.

``என்னா... ஐயாவுக்கு யோசன பலமா இருக்கு? தம்பி வீட்ல பலமான விருந்தோ?” சோற்றைப் பிசைந்து முதல் கவளத்தை வாயில் வைத்தாள். தொங்கிய மயிர்க்கொத்து சோற்றோடு சேர்ந்து வாய்க்குள் நுழைய அதை லாகவமாய் இடதுகையால் ஒதுக்கி காதுமடலில் கோத்துவிட்டாள்.

நானாக ஒரு தட்டை எடுத்து சாதம் போட்டுக் கொண்டேன். வயிற்றுக்குள் சோறு இறங்க மறுத்தது.

`என்னடா மகனே..!’ மீசைக்காரர், நெற்றியில் ஏறி நின்று பேசினார். ஒருவகையில் அவர் எனக்குச் சித்தப்பா. எந்த வகையில் எனக் கேட்டால் நானும் குழம்பி நீங்களும் குழம்பவேண்டிவரும்.

தெருவில் எந்த ஒரு வீட்டு நிகழ்விலும் அவருக்கென்று பிரதான பங்கு இருக்காது. ஆனாலும், நடைபெறும் அத்தனை விசேஷங்களிலும் முன்னணியில் வந்து நிற்பார். அந்த நாளில் கடைக்கு டிமிக்கிதான். மணியன்பிள்ளை எல்லோரிடமும் ஒரு தாழ்மையான வேண்டுகோள் விடுத்திருப்பார். `முன்னக்கூட்டியே அந்தாளுக்கு எந்தத் தாக்கலும் சொல்லாதீங்கப்பா, ஆவியா கெளம்பீடுவான்.’  என்ன செய்ய, மீசைக்காரர் அமைதியாய் இருந்தாலும் தெருக்காரர்கள் அப்படியிருக்க மாட்டார்கள். அத்தனை உறுத்தாக உறவுக்காரர்போல முன்னுக்கு நின்று வேலைசெய்ய இந்நாளில் வேறு யார் இருக்கிறார்கள்? அப்படியே இருந்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதையும் செலவும் செய்தாகவேண்டும். அதில் கொஞ்சம் குறைந்தாலும் ஏசிக்காட்டிவிடுவார்கள்.

``மீசய நம்பித்தே காரியத்த நடத்துறேன்” என வெறும் வாய்ச்சொல் ஒன்று போதும், உதிக்கிற சூரியனையும் உசுப்பி இழுத்துக்கொண்டு வந்துவிடுவார் மீசைக்காரர்.

அப்படித்தான் மணியன் பிள்ளையின் கடைக்கு வாடிக்கையாய் கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை கொண்டு வரும் ஒரு பெண்மணி, தன் மகளுக்குச் சடங்கு வைக்க மண்டபம் பேசவேண்டும் என மீசைக்காரரிடம் பேச்சுவாக்கில் ஒருநாள் சொல்லியிருந்தாள். `ஆம்பளை இல்லாத வீடு. ஓடியாடிச் செய்ய நாதியில்லண்ணே!’ அவ்வளவுதான், வாழைமரம் வெட்டுவதிலிருந்து சமையல் ஆள் முதற்கொண்டு நானென்று நின்றுபார்த்தார். கடைசியில் எதிர் பார்த்த மொய் வரவில்லையாம். வாழை மரத்துக்கும் இலைக் கட்டுக்கும் மீசைக்காரர்தான் சொந்தக்காசில் கணக்கு முடிக்க வேண்டிவந்தது. ``என்னைக் கிருந்தாலும் ஒங்க கடனத் தீக்காம எங்கட்ட அடங்காதுண்ணே’’ என கறிவேப்பிலைக்காரப் பெண்மணி வாக்குக் கொடுத்திருந்தார்.

தெருவில் ஏதோ சத்தம் கேட்டது. இரண்டாவது சோறு போட்டுக்கொள்ளாமல் கை கழுவினேன். மனைவி தண்ணீர் குடித்தபடி ஓரக்கண்ணால் பார்த்தாள். ``என்னாச்சு?”

``ப்ச், வவுறு சரியில்ல!”

கை கழுவி, தட்டை எடுத்து கழுவுதொட்டியில் போட்டுவிட்டு வாசலுக்கு வந்தேன். தம்பி வீட்டுத் திண்ணையில் அமர்ந்து இரண்டு பள்ளிச் சிறுவர்கள் கால்களைத் தொங்கலாட்டம் போட்டபடி பேசிக்கொண்டிருந்தனர். இன்னமும் சில பேர் வந்ததும் தங்களின் ஆட்டத்தைத் தொடக்கிவிடுவார்கள். கபடி, செதுக்குமுத்து, கால்தாண்டி இப்படி எதுவுமாக இருக்கலாம். நண்பர்களுக்காகக் காத்திருக்கிறார்கள்போலும்.

கொஞ்சம் பதைபதைப்பாய் இருந்தது. என்ன இருந்தாலும் சிறுவர்கள். திடீரென யாராவது ஒருத்தன் மீசைக்காரர் வீட்டுக்குள் நுழைந்து தொங்கிக்கொண்டிருக்கிற பிரேதத்தைப் பார்க்க நேர்ந்தால்... அலறுவது மட்டுமா? பயத்தில் ஏதாவது நடந்துவிட்டால். . . நம்ம பிள்ளை வேறு, அடுத்த வீட்டுப் பிள்ளை வேறா? விரட்டிவிடத் தோன்றியது. என்ன சொல்லி விரட்டுவது? இதுவரையிலும் யாரையும் அப்படி ஒரு நாளும் விரட்டியது கிடையாது. யாராவது அவர்களை விரட்டினாலும், `விடுங்க, பசங்க இந்த வயசில ஓடியாடி விளையாடாட்டி எப்ப விளையாடுவாங்க?’ என ஆதரவுக் குரல் கொடுப்பதே எனது வழக்கம். `வேலவெட்டி பாத்த அலுப்பில சித்தநேரம் கண்ணசர விட மாட்டேங்கிதுக பக்கிக. அமைதியா சத்தம் போடாம விளையாடலாம்ல’ என நாகுவே சில சமயம் எனக்கு எதிராய்ப் பேசுவாள். `ஆளோடி வீதிய உசிர்கொடுத்து நிறுத்துறவனுக இந்தப் பசங்கதான். இல்லாட்டா பகல்லயே தெருவுக்கு செக்யூரிட்டி ஒராள் போடணும்’  என மனைவியின் கூக்குரலை நிறுத்திய பொழுதுகள் நிறைய.

p46b_1521616505.jpg

பள்ளிவிடுமுறை நாளாக இருந்தால், இந்நேரம் பள்ளிச் சிறுவர்களே மீசைக்காரரைக் குளிப்பாட்டி பாடையில் ஏற்றியிருப் பார்கள். அவர்களின் உறைவிடம் குழாயடியும் மீசைக்காரரின் குடியிருப்பும்தான். தெருவுக்குள் வந்தால் அவரை உறங்கவிட மாட்டார்கள். அவரும் தான் உறங்க வேண்டுமென அவர்களை விரட்டவும் மாட்டார்.

சரசு சித்தி வெளியில் வந்தார். கையில் பெரிய எவர்சில்வர் தாம்பாளத்தட்டும் தோளில் பழைய துணியும் வைத்திருந்தார். சித்தியைக் கண்டால் பசங்களுக்குக் கொஞ்சம் பயம். எந்நேரமும் பிள்ளைகளைக் கடிந்துகொண்டே இருப்பார். அப்படி ஒரு சுபாவம் அவருக்கு. இப்பவும் திண்ணையில் அமர்ந்திருக்கும் பசங்களைப் பார்த்துக்கொண்டேதான் வந்தார்.

``என்னங்கடா இந்நேரத்துல... பள்ளியுடத்துக்குப் போகலியா?’’

``இல்ல பாட்டி, எங்களுக்கு மட்டும் மத்தியானத்துக்குமேல லீவு விட்டுட்டாங்க.”

``உடனே இங்க வந்து ஆஜர் ஆயிட்டீங்களாக்கும். போங்க போங்க, வெயில்ல வீட்ல சித்த நேரம் கண்ணசர ஒறங்கி எந்திரிச்சு வெயில் தாழ சாய்ங்காலமா வாங்க” விரட்ட ஆரம்பித்தார்.

``சின்னப்பிள்ளையெல்லா பகல் தூக்கம் தூங்கக் கூடாதுன்னு வீட்ல வெரட்டிவிட்டாக பாட்டி.”

``ம், ஒங்கள இங்கிட்டு ஓட்டிவிட்டு ஒங்க ஆத்தாலும் அப்பனும் சாலியா ஒறக்கம் போடுறாகளாக்கும்? ஒறக்கம் பிடிக்காட்டி வீட்டுப் பாடத்த ஒக்காந்து எழுதலாம்ல, இங்கன வந்து கும்மர்ச்சம் போடாம!”
``வீட்டுப்பாடமெல்லா இன்னிக்கி ஸ்கூலயே முடிச்சிட்டோம் பாட்டி” சரிக்குச் சரியாக விகல்ப மில்லாமல் பேசினர். அது என்னவோ சரசு சித்திக்கு தன்னை அவமதிப்பதாகப் பட்டது மேலும் குரல் உயர்த்திப் பேசலானார்.

``போயிட்டு அப்பறமா வாங்கடான்னா, உத்திக்கி உத்தி பேசுறீக! ஒங்க வயசு என்னா, வாலிவம் என்னா... போங்கடா எந்திரிச்சு!”

சிறுவர் இருவரும் எழுந்து  என்னைக் கடந்து சென்றனர்.

தாம்பாளத்தையும் பழைய துணியையும் வெளியில் வைத்துவிட்டு உள்ளே சென்ற சரசு சித்தி, வடகம் வார்ப்பதற்கான கூழுடன் மறுபடியும் வந்தார். துணியை விரித்து வடகத்தைப் பிழிந்தார்.
எனக்கு உள்ளேயும் போக முடியாமல் வெளியிலும் செல்ல முடியாத இக்கட்டான சூழல். வீட்டுக்குள் மனைவி பாயை விரித்து தலையணையைப் போடும் டமால் எனும் பேரோசை கேட்டது. நாலு நாலரை மணி வரை தலை சாய்ப்பாள். பள்ளிவாசலில் வாங்கு சொல்லும் நேரத்தில் எழுந்து அடுத்த வேலைகளைக் கவனிப்பாள். எனக்கும் தலை சாய்க்கவேணும்போலிருந்தது. உள்ளே சென்று அவளது பாயில் அணைத்துப்படுத்து சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டால் படபடப்பு அடங்கலாம். பகலில் தொட்டால் சும்மாவே அலறுவாள்.

``என்னங்யா மதிய சாப்பாடு ஆச்சா ?” சரசு சித்திதான் கேட்டார்.

``சாப்ட்டாச்சு சித்தி.”

``அம்மாபிள்ள என்னா செய்து?”

``இப்பதே படுக்கையப் போட்ருக்கா சித்தி” என்றவன் தொடர்ந்து, ``சோத்து வடகமா சித்தி” எனக் கேட்டேன்.

``ஆமாங்யா, நேத்து வெரதம்னு ஆரும் சரியா சோறு திங்கல. வீணாப் போக்காட்டி என்னான்னு தோணுச்சு. மொளகாப்பொடி, உப்பு சேத்து பிழிஞ்சிவிட்டா வெஞ்சனத்துக்கு ஆகும்ல.”

``மொட்டமாடில போட்டா நல்லா காஞ்சிடும்ல சித்தி.” பேச்சு பேச்சாக இருந்தாலும் சித்தியின் பார்வை அவரது வீட்டுக்கு எதிர்ப்புறம் இருக்கும் மீசைக்காரரின் அறைப்பக்கம் போகவேண்டும் எனப் பிரார்த்தித்தேன்.

``மாடில காக்காச் சனியே வந்து துணியோட தூக்கிட்டுப் போய்த் தொலையிது.”

``மச்சி... என்னாவாம், இன்னியாரத்துல. . . வெயில் போன பெறகு வடகம் போடுற?” முதல் வீட்டு நாயகம் அத்தை, கொசுவ சேலையை இழுத்துச் செருகியபடி சரசு சித்தியின் முன்னால் வந்து நின்றது.

இனி இருவரும் திண்ணையில் உட்கார்ந்து பேச்சில் கூடிவிடுவார்கள். மீசைக்காரர் முழித்துக்கொண்டிருந்தால் சில நாள்கள் அவரும் வந்து கலந்துகொள்வார்.

எதுவும் தோன்றாமல் நானும் அப்படியே வீட்டுவாசலில் அமரலானேன். 4 மணிக்குக் கடையைத் திறக்க வேண்டும். இங்கே நடுவீட்டில் ஒரு பிணத்தைத் தொங்கவிட்டுக்கொண்டு இப்படிக் கையாலாகாமல் இருப்பது கேவலமாய் இருந்தது.

இவர்கள் இருவரையும் பயன்படுத்தி விஷயத்தைத் தெரியப்படுத்திவிடலாமா? அப்படிச் செய்தால் காரியம் சுலபமாய் இருக்கும். எப்படிச் சொல்வது? `நீ எப்போ பார்த்தாய்? உனக்கு எப்படித் தெரியும்? ஏன் இவ்வளவு நேரம் சொல்லவில்லை?’ இத்தனைக் கேள்விகள் வரும்.

ஒருவேளை யாரும் பார்க்காமல்போனாலும் சிக்கல்தான். இரவெல்லாம் பிரேதம் ஊசலாடிக்கொண்டிருக்கும். நடுசாமத்துக்குப் பின் நடமாடும் நாய்கள் ஏதும் செய்தால்தான் பயங்கரம்.

`ஊரெல்லாம் போய் ஒப்பாரி வைக்கிற கிழடுகள், எதிர்க்கத் தொங்கும் பிணத்தைப் பார்க்க மாட்டேங்குதுகளே!’

கடைக்குப் போவதே உசிதம் எனப் பட்டது.

வீட்டுக்குள் சென்று தலையை வாரிக்கொண்டு கிளம்பலானேன். மனைவி மல்லாக்கப் படுத்து வலக்கையை நெற்றியின் குறுக்கே கிடத்தியபடி உறக்கத்தில் இருந்தாள். ஒருகால் குத்திட்டு நிற்க இடதுகால் சற்று வளைத்து நீட்டி இருந்தது.

வாசலை விட்டு இறங்கியதும் கால் செருப்பை மாட்டிக்கொண்டு, மறுபடியும் சரசு சித்தி இருந்த இடம் சென்றேன். ஓரப்பார்வையில், மீசைக்காரரின் வெள்ளை வேட்டி கொடியில் காயப்போடப்பட்ட துணிபோலக் காற்றில் அசைந்துகொண்டிருந்தது.

பிழியப்பட்ட வடகத்தின் அருகே நீளமான கழை ஒன்றைக் காவலுக்கு வைத்துவிட்டு, சரசு சித்தியும் நாயகம் அத்தையும் தம்பி வீட்டின் திண்ணையில் ஜோடியாய் அமர்ந்திருந்தனர். தம்பி வீட்டுக் கதவு இன்னும் திறக்கப்படாதிருந்தது. இது பின்வாசல். தம்பியின் பிள்ளைகள் பள்ளிகூடம் விட்டு வந்த பிறகுதான் அது திறக்கப்படும் அல்லது காலை மாலை என, குளிர்ந்த பொழுதில் திறந்துவைத்து உட்காரு வார்கள். மற்றபடி அத்தனை உபயோகமும் முன்புறம் உள்ள பிரதான வாசல்தான்.

``கடைக்குக் கெளம்பியாச்சாங்கய்யா?”

``ஆமா சித்தி.”

``தம்பிக்கு மத்தியான உறக்கம் பழக்கமில்லியா?”

``நெனச்சா ஒறங்குவேன்த்த”  நாயகம் அத்தைக்குப் பதில் சொன்னவன், ``இன்னிக்கி என்னமோ தண்ணி பிடிக்கக்கூட ஒர்த்தரையுங் காணோம்?” எனச் சொல்லியபடியே சுற்றிலும் பார்வையை அலைய விடுவதுபோல மீசைக்காரர் வீட்டில் நிறுத்தினேன்.

``ஒருத்தியும் வரக்குடாதுன்னு கண்டிசன் போட்டுட்டேன்ல. வேணும்னா காலைலயும் சாயங்காலமும் மட்டும்தா வரணும். கண்டநேரம் வந்து கரச்சல் குடுக்கக்குடாது. மோட்டாரப் பூட்டி சாவிய வச்சுக்கிட்டேன்ல” - சரசு சித்தி.

``சர்க்காரு கொழாயப் பூட்டி சாவியக் கைல வச்சுக்கறது . . . தைரியந்தே!”

``இல்ல நாயகம்!  அதேன் தெருவுக்கு ஒரு மோட்டாரு இருக்குல்ல. அவ அவ தெருவுல நின்னு பிடிக்கவேண்டிதான. இங்க வந்தா ஒழுக்கமாப் பிடிக்கணும்ல. ஆளில்லன்ன ஒடனே சோப்புபோட்டு நொட்டுநொட்டுன்னு துணியத் தொவைக்க ஆரம்பிச்சிடுறாளுக. ஊர்ல இருக்க ஊத்தையெல்லா நம்ம தலவாசல்ல வந்து சேருது.”

``ஆனா, இப்ப பாருங்க. இத்தம்பெரிய தெருவுல பேச்சுத் தொணைக்குக்கூட ஆருமில்லாம ஒத்தையா ஒக்காந்து இருக்கீங்கள்ல” என்றேன்.

``ரெண்டுபேரையும் பேயா தூக்கிட்டுப் போவப்போவுது. என்னா மச்சி? வேணும்னா மீசக்காரரக் கூப்புட்டுக்குவம். வெட்டியா குப்புற அடிச்சுப் படுத்துக் கெடப்பாப்ல. யே மீசக்கார்ரே ... மாமா... மீச மாமா...” சரசு சித்தி உட்கார்ந்த வாக்கில் சத்தம்போட்டுக் கூப்பிட ஆரம்பித்ததும், எனக்கு குப்பென வியர்த்தது. கால்கள் வலுவிழப்பதுபோல உணர்ந்தேன்.

``ச்சும்மாதே இரு மச்சி. பாவம். அவர் பாட்டுக்கு ஒறங்குனா ஒறங்கீட்டுப்போறாரு.”

அப்படியே ஏதும் பேசாமல் கிளம்பி, கடையை நோக்கி நடக்கலானேன். கால்கள் பின்னிக்கொண்டது மாதிரி நடக்கவே சிரமமாயிருந்தது. இழுத்து நடக்க முடியவில்லை. மீசைக்காரர் அழைப்பதுபோலவும், அவர் பின்தொடர்ந்து வருவது போலவுமான ஒரு பிரமை.

இதே வீதியில்தான் ஒருமுறை அவர் சொன்ன ஞாபகம். `எனக்கு இனி சொந்தபந்தமெல்லா இங்கதே. யாரும் என்னத் தேடி அங்கிருந்து வர வேணாம். ஐயா, புள்ள, பேரெம்பேத்தின்ன பாசமெல்லாம் போதும். காச்ச, மண்டவலின்னா ஒரு சீரகத் தண்ணி வச்சுத்தர தம்பாபிள்ள தெருவுல ஆளிருக்கு. ஒருவேளை நா செத்துப் போனாலும் நீங்கள்லாம் அரக்கப் பரக்க வரணும்ன அவசியமில்ல. கைப்பிடி மண்ணள்ளிப்போட இதோ எம்மகெ இருக்கான். என்னடா மகனே! நீங்க ஒங்க சோலி தொந்தரவப் பாத்து முடிச்சு சாவகாசமா வரலாம்’ எனச் சொந்த மக்களிடம் சொன்னது இப்பவும் கணீரென ஒலித்தது.

மணியன்பிள்ளை கடையில் வேலைபார்த்துக்கொண்டிருந்த போது ஒருநாள் எண்ணெய்ச் சட்டி தடுமாறி காலில் கவிழ்ந்து விட்டது. நல்லவேளையாய் பாதத்தில் மட்டும் எண்ணெய் சிதறியிருந்தது. காலை இழுத்து ஒதுக்கிக்கொண்டார். சுதாரிக் காமல் இருந்தால் அடிவயிற்றில் கொட்டியிருக்கும். ஆஸ்பத்திரிக்கு வேண்டாம் எனச் சொல்லி விட்டார். ``கைப்பக்குவம் நாம் பாத்துக்கறேன்’’ என அறைக்கு வந்துவிட்டார். தெரு ஜனங்கள் கூடிவிட்டனர். சரசு சித்தி, என் மனைவியைத் துணைக்கு வைத்துக்கொண்டு சிஷ்ருசைகள் செய்தார். மனைவியின் தலையீட்டால் நானும் போக வேண்டிவந்தது. நான் போனதால் கூச்சமற்று அவரால் வைத்தியத்தைத் தொடர முடிந்தது. குதறிப்போன புண்கள் ஓரளவு வாடிய சமயம் மீசைக்காரரின் மருமகளும் மகனும் பார்க்க வந்திருந்தனர். அன்றைக்குத் தான் அப்படி ஒரு முடிவைச் சொன்னார். அது என்னவோ ரத்தபந்தம்போல நெஞ்சில் ரீங்காரமிட்டுக் கொண்டேயிருக்கிறது. மீசைக்காரர் `என்னடா மகனே..?’ எனும் போதெல்லாம் அவரது அந்தப் பேச்சு மறுபடி மறுபடி புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது.

`மணியன்பிள்ளை கடையில் போய்ச் சொல்லிவிட வேண்டியதுதான்’ எனத் தீர்மானித்தேன். ஒருவேளை மீசைக்காரரின் துர்மரணத்தின் காரணம் அவர்களுக்குத் தெரியலாம். இல்லாவிட்டாலும் அவர்களது பாதுகாப்பில் இருப்பதால் மேற்கொண்டு என்ன செய்வது என அவர்கள் முடிவுசெய்வார்கள். விஷயத்தைச் சொன்னால் போதும். கடை ஆள்களைக்கொண்டு இறக்கி, ஆகவேண்டியதைச் செய்வார்கள். ஒருவேளை போலீஸுக்குப் போனாலும் அவர்கள் பாடு.

போலீஸ் என்றவுடன் மறுபடியும் மனம் பின்னுக்கு ஒளிந்தது. `மொதல்ல பாத்தது யாரு? எப்ப பாத்தீங்க? எதுக்காகப் போனீங்க? அவரா தொங்குனாரா... இல்ல நீங்க தொங்கவிட்டீங்களா? கைரேகையக் குடுத்துட்டுப் போங்க. எப்பக் கூப்பிட்டாலும் வரணும்!’ தலை கிறுகிறுத்தது.

மணியன்பிள்ளை காபிக் கடையை நோக்கி வேகமாய் எட்டுவைத்து நடந்தேன். கண்களை மூடிக்கொண்டு நடந்தவற்றை ஒப்பித்துவிட்டு வந்து விடவேண்டும். என்ன நடந்தாலும் நடக்கட்டும். தூரத்தில் இருந்தபடியே பார்க்க அதன் பழைமை மாறாத தோற்றம் மீசைக் காரரையே நினைவு படுத்தியது. கான்கிரீட் கட்டட மென்றாலும் பார்வைக்காக முன்புறம் கிடுகுக்கூரை வேய்ந்து மூங்கில் தப்பைகளால் தட்டுக்கதவு போட்டிருந்தார் மணியன்பிள்ளை.

கடையை நெருங்கியபோது விசுக்கென்றது.

`இன்று விடுமுறை.’

சிவப்பு ஸ்கெட்ச் பேனாவால் எழுதப்பட்ட காலண்டர் அட்டை, மூங்கில் தட்டில் தொங்கவிடப்பட்டிருந்தது.

வேறு வழியின்றி எனது கடைக்குச் சென்றேன். கடையில் உட்கார்ந்து நிம்மதியாய் வியாபாரம் பார்க்க முடியும் எனத் தோன்றவில்லை. கடையைத் திறக்காமலேயே சிறிது நேரம் உலாத்தினேன்.

``என்ன மொதலாளி... கட லீவா?” பக்கத்துக் கடைக்காரர் கேட்டார். கண்ணில் படுவோரெல்லாம் அவருக்கு முதலாளிதான்.

``ஆமா ராமரு, ஒடம்பு சரியில்ல. அதேன் தெறக்கலாமா, வேணாமான்னு நிக்கிறேன்.” வயசில் இளையவன்.

``கடை என்னா மொதலாளி கடை, அத எப்பவேணா தெறக்கலாம். ஒடம்பு முக்கியம். அதப்பாருங்க. ரெஸ்ட்டப் போடணும்னு தோணுச்சுன்னா போட்ருங்க. வாரதப் பாப்பம்.”

அங்கேயே கொஞ்ச நேரம் நின்றேன். ஒவ்வொரு விநாடியும் மணிக்கணக்கில் நகர்ந்தது. ராமர் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான். எதுவும் புத்தியில் ஏறவில்லை. தம்பாபிள்ளை தெருவிலேயே மையம்கொண்டிருந்தது. என்ன பொழப்பு... ச்சே! இத்தனை வயசுக்கு வாழ்ந்து என்ன பிரயோசனம்? எத்தனை பேருடன் பழகி, என்னென்ன அனுபவங்கள் அத்தனையும் அடைந்து என்ன பலன்? சின்னஞ்சிறு பிரச்னையை எதிர்கொள்ள முடியவில்லை. அப்பா, அண்ணன், தம்பி, புருஷன், முதலாளி எத்தனை பெயர்? ‘மலட்டு ராசாவுக்கு மண்டபம்கொள்ளாத மனைவிமார்களாம்!’ சரசு சித்தி பேசுகிற சொலவடை காதில் ஒலித்தது.

வீதியில் யாரோ காறித் துப்பினார்கள்.

``டீ குடிக்கலாமா மொதலாளி?”

``கடைல போய்க் குடிக்கலாமா?”

ஒரே இடத்தில் நிற்பது நரகம்போலிருந்தது. எங்கேயாவது இடம்பெயர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.

பொதுவாக, கடைக்காரர்கள் பார்சல் வாங்கிப் பகிர்ந்துகொள்வது வாடிக்கை. ராமரின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. சட்டென அதை மறைத்து, ``எங்க வேணாலும் போலாம் வாங்க. காரியமா முக்கியம்? வீரியம்தான முக்கியம்.”

p46c_1521616524.jpg

டீயைக் குடித்துவிட்டு நிமிடப்பொழுதையும் வீணடிக்காமல் மீசைக்காரரைப் போய்ப் பார்க்க வேண்டும். நல்லவேளையாய் டீக்கடையில் கூட்டமில்லை. ``வடையெல்லாம் வேணாம்’’ என்றேன். டீ கைக்கு வந்தது.
``என்னாய்யா, ஒங்க சித்தப்பா செத்துப் போய்ட்டாராம்ல?” என்ற கேள்வி ஒன்று பின்னாலிருந்து வர, டீ டம்ளர் கை நழுவிக் கீழே விழுந்தது.

தெருவுக்குள் நுழைய அந்தி சாய்ந்திருந்தது. மஞ்சள் வெளிச்சம் மட்டும் தன் மிச்சத்தை அங்கங்கே தெருக்களில் தெளித்திருந்தது. தெருமுனையில் காலெடுத்து வைக்கும்போதே மனதில் பயம் ஒன்று ஏறி உட்கார்ந்து அடைகாத்தது. எப்போது அது அவிழும்? தெருவில் அத்தனை வீட்டிலும் வாசல்கதவுகள் விரியத்திறந்து கிடந்தன. யாரும் வீடுகளுக்குள் இல்லை. குழாயடியில் மொத்தக் கூட்டமும் நின்றிருந்தது.

யார் பார்த்தது? பிரேதத்தை யார் தைரியமாய் இறக்கியது?

இடத்தை நெருங்க நெருங்க கால்கள் வேகமெடுத்தன. எனது காலடி ஓசை கேட்டு கூட்டம் கொஞ்சம் விலகியது. பூராமும் பெண்கள், குழந்தைகள். ஆண்கள் யாருமே இல்லை.

குழாயடியில் மீசைக்காரரின் கட்டில் கிடந்தது. அதன் மேல் மீசைக்காரரின் பிரேதம் கிடத்தியிருந்தது. பக்கத்தில் சரசு சித்தி, மீசைக்காரரின் தலையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தார்.

``வாங்கய்யா. சரியான நேரத்துக்கு வந்துட்ட, குளுப்பாட்ட ஆள் இல்லியேனு தேடிட்டிருந்தம். நீதே வந்து குளுப்பாட்டணும்னு இருந்துருக்கு பாரு!”

``தம்பியும் அப்ப இருந்துச்சுல்ல, நாங்க எல்லாமுந்தான நிண்டு பேசிட்டிருந்தம். நீங்க கடைக்குக் கெளம்புனப்பறம் நானும் போயிட்டென்யா. அதுக்குப் பெறவு மச்சி உள்ள போய்ப் பாத்துருக்கு. அண்ணே கட்டுல்ல நீச்சு நெனவுல்லாம கெடந்திருக்காரு. எந்நேரம் உசிர் பிரிஞ்சதுன்னு தெரியல” நாயகம் அத்தை, சத்தமாய் வாக்குமூலம் தந்தார்.

நான் சரசு சித்தியையே பார்த்துக்கொண்டிருந்தேன். ``வாங்கய்யா, பொழுது விழும் நேரம் சீக்கிரமா குளுப்பாட்டி சாமியக் கும்பிடணும்” என்றவர், என்னைத் தனியே அழைத்தார், ``பாவப்பட்ட மனுசன்யா. என்னா விதியோ தொங்கீட்டாரு. பதறுனம்னா அறுத்து கூறுபோட்ருவாங்க. அதனால அம்மாபிள்ளயத் தொணைக்கு வெச்சுக்கிட்டு எறக்கிட்டோம். ஊரு விட்டு, ஒறவு விட்டு வந்த மனுசெ... நாமதே ஒறவு! வாரதப் பாப்பம்யா. வாங்க, பெத்த தகப்பனா நெனச்சி குளிப்பாட்டுங்க’’ என்றார்.  சித்தியை அப்படியே இறுகக் கட்டிக்கொண்டு கதறலானேன்.

நாகு, குழாயடியிலிருந்து தண்ணீர்க்குடம் தூக்கி வந்து என் முன்னே வைத்தாள். கைகளில் படிந்திருந்த ஈரத்தைத் தன் முந்தானையால் ஒற்றிக்கொண்டு என்னைப் பார்த்தாள்.

அவள் முகத்தில் மீசை ஒட்டியிருப்பதுபோலத் தெரிந்தது எனக்கு.

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது நடக்கணும்னா சட்டத்தையும் சட்டை பண்ணாமல் விடுறதுதான் நல்லது போல.....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.