Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜா இசை: யாருக்கு உரிமை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா இசை: யாருக்கு உரிமை?

88.jpg

காப்புரிமை பெறாமல் தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ நிறுவனம் மீது இளையராஜா தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

திரையுலகில் 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்தவர் இளையராஜா. 2010ஆம் ஆண்டு இளையராஜா எக்கோ நிறுவனம் மீது தனது பாடல்களை தனது அனுமதி பெறாமல், காப்புரிமையை மீறி விற்பனை செய்துவருவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். இதனால் குற்றப்பிரிவு போலீஸார் எக்கோ நிறுவனத்திடம் இருந்து 20,000 சிடிக்களை பறிமுதல் செய்தது. இந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி எக்கோ நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை பல்வேறு நீதிபதிகள் விசாரித்து வந்தனர்.

தற்போது நீதிபதி முரளிதரன் இந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், “ இளையராஜா, எக்கோ நிறுவனம் ஆகிய இரு தரப்புக்குமிடையேயான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதே விவகாரத்தில் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்றுக்கொள்ளமுடியாதது. இது கீழமை நீதிமன்றத்தின் விசாரணைகளைத் தாமதப்படுத்துவது போலாகிவிடும். அதே போல் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படுவோரை துன்புறுத்துவதாக ஆகிவிடும். எனவே குற்றவியல் நடைமுறை விசாரணை தேவையற்றது” எனக்கூறி எக்கோ நிறுவனம் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளார்.

எக்கோ நிறுவனம் தரப்பில், இளையராஜா பணத்தை பெற்றுக்கொண்டு தான் பாடல்களுக்கு இசையமைத்துக் கொடுக்கிறார். அத்துடன் அவரது பணி முடிந்துவிடுகிறது. காப்புரிமை பெற்றுள்ள பாடல்களுக்கு மட்டும் தான் அவர் உரிமை கோரமுடியும். அனைத்துப் பாடல்களுக்கும் அவர் உரிமை கோரமுடியாது. அதன் உரிமை அந்த படத்தை தயாரித்த நிறுவனத்துக்குத் தான் உரியது. அவர்கள் தான் நிவாரணம் கேட்கலாம். இசையமைத்த இளையராஜா அப்படி கேட்கமுடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://minnambalam.com/k/2018/10/30/88

  • கருத்துக்கள உறவுகள்

(ஆ)சாமி

  • கருத்துக்கள உறவுகள்

மேல் உள்ள YT லிங்கில் இளசுவின் இசையமைப்பு கிந்தியர்களினால் எப்படி சுரண்டபடுகின்றது என்பதை விளக்கமாய் போட்டு தாக்குகிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

மேல் உள்ள YT லிங்கில் இளசுவின் இசையமைப்பு கிந்தியர்களினால் எப்படி சுரண்டபடுகின்றது என்பதை விளக்கமாய் போட்டு தாக்குகிறார்கள் .

நம்ம தலைவரும் பங்குக்கு 
அங்கிருந்து கொப்பி அடித்து இருக்கிறார்தானே?

இசை தெரிந்தவர்களுக்கு 
சில ராகங்கள் தாளங்கள் மிகவும் பிடித்து விடுகிறது 
அதனால் வரும் ஈர்ப்பால் .... 
அதை மேலும் மெருகூட்டுகிறார்கள் என்று எண்ணுகிறேன்.

ஆனால் இப்போதும் இசையை எழுதி கொடுக்கும் திறமை உள்ள 
ஒரு இசை அமைப்பாளர் இந்தியாவில் இளையராஜா என்பது பெருமைக்கு உரியது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 10/31/2018 at 12:07 PM, பெருமாள் said:

மேல் உள்ள YT லிங்கில் இளசுவின் இசையமைப்பு கிந்தியர்களினால் எப்படி சுரண்டபடுகின்றது என்பதை விளக்கமாய் போட்டு தாக்குகிறார்கள் .

ராகதேவன் என்று சும்மாவா சொன்னார்கள்.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பிள் நிறுவனத்தின் வடிவமைப்பை யாராவது பிரதி செய்தால் வழக்கு போடுவார்கள். காரணம் அது ஒரு தனித்த சிந்தனையின் வடிவம் / சொத்து. சுழியமும் ஒன்றும் கலந்த கலவைதானே (binary) என வாதிட முடியாது.

 

அதுபோல ஏழு சுரங்களே அடிப்படை என்றாலும் ஒவ்வொரு மெட்டும், இசைக்கோர்வையும் அதை உருவாக்கிய இசையமைப்பாளருக்கே சொந்தம்.. எத்தனை நூற்றாண்டுகள் கழிந்தாலுமே.. ஆனால் அதன்மூலம் கிட்டும் வருவாயை அவர் வேறு யாருக்காவது அல்லது அமைப்புக்கு அவர் எழுதிக் கொடுக்கலாம். இந்த காணொளியையும் பாருங்கள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவும் இசையில் காப்புரிமையும் – பத்ரி சேஷாத்ரி

54.jpg

இசையின் மீது யாருக்குப் பிரதான உரிமை?

சில நாட்களுக்குமுன் இசையமைப்பாளர் இளையராஜா, தான் இசையமைத்த பாடல்களைக் கட்டணம் தராமல் மேடை நிகழ்ச்சிகளில் பாடுவது சட்டத்துக்குப் புறம்பானது, அதற்குரிய கட்டணத்தைக் கொடுத்த பிற்பாடுதான் அவற்றை மேடையில், பிற இடங்களில் பாடலாம் என்று அறிவித்திருந்தார். அதனையடுத்து, சில திரைப்படத் தயாரிப்பாளர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். பாடல்களுக்கு இசையமைக்கப்பட்டது தங்கள் பணத்தில், தங்கள் படங்களுக்கு, தங்கள் வேண்டுகோளின்படியே என்பதும் எனவே பாடல்களின் உரிமை தங்களுக்கே உள்ளது என்றும் இளையராஜா இவற்றின்மீது உரிமை கோர முடியாது என்பதும் இவர்கள் வாதம்.

யாருக்கு முதன்மை உரிமை?

இந்தியக் காப்புரிமைச் சட்டம் (1957 + அதன் பின் வந்துள்ள சில மாற்றங்கள்), இசையைப் பொறுத்தமட்டில் இரண்டு பேரைக் குறிப்பிட்டுச் சொல்கிறது - ஒருவர் composer, (இசையமைப்பாளர்). இன்னொருவர் performer (வாத்தியங்களாலும் குரலாலும் பாடுபவர்). இந்தச் சட்டம் இசைக்கோர்வையை எழுதும் இசையமைப்பாளரை மட்டும்தான் காப்புரிமைக்கான முதன்மை உரிமையாளராகத் தெளிவாகக் கருதுகிறது.

அதாவது தன் படைப்பூக்கத்தைப் பயன்படுத்தி, இசையை நொட்டேஷனில், குறிப்புகளாக எழுதும் இசையமைப்பாளர்தான் இங்கு படைப்பாளி. அவருக்குத்தான் இந்த அடிப்படை இசைக்கோர்வைமீது முழு உரிமை உள்ளது. இந்த உரிமை இந்தச் செயலைச் செய்யச் சொன்ன, அதற்காகப் பணத்தைத் தந்த, படத் தயாரிப்பாளருக்குக் கிடையாது.

ஒரு பத்திரிகை நிறுவனத்தின் முழுநேர வேலையாளாக ஒருவர் உருவாக்கும் எழுத்து அல்லது படத்துக்கான உரிமை அந்தப் பத்திரிகை நிறுவனத்துக்கே என்று தெளிவாகச் சொல்லும் காப்புரிமைச் சட்டம், இசையை இதற்குள் சேர்ப்பதில்லை. மேலும் திரைப்படத் துறையைப் பொறுத்தமட்டில், இசையமைப்பாளர்கள் முழுநேர அல்லது பகுதிநேர ஊழியராக, ஊழியர் ஒப்பந்தம் வாயிலாகச் சேர்வதில்லை. அவர்கள், ஒரு செயலை சேவையாகச் செய்துதரும் ஒப்பந்தத்தில் மட்டுமே ஈடுபடுகிறார்கள் (அப்படிப்பட்ட ஒப்பந்தம் வாய்மொழியாக இருந்தாலும் சரி, எழுத்துபூர்வமாக இருந்தாலும் சரி). எனவேதான் அவர்கள் இந்தச் செயலுக்கு வாங்கும் கட்டணத்துடன் ஜிஎஸ்டி வரியையும் சேர்த்து வாங்க வேண்டும் (இதற்குமுன் சேவை வரி). ஊழியர் ஒப்பந்தம் என்றால் அதில் பிஎஃப், கிராஜுவிட்டி, இ.எஸ்.ஐ, வேலை நாள்கள், வேலை நேரம், விடுப்பு, பணியிடம் போன்ற பல விஷயங்கள் இருக்க வேண்டும். ஊழியர்கள் பெறும் சம்பளத்துக்கு சேவை வரியோ அல்லது இன்று ஜிஎஸ்டியோ கிடையாது.

எனவே இசையமைப்பாளர்கள் ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் அல்ல. மேலும் நான் ஏற்கெனவே சொன்னதுபோல இசை என்பது இந்தச் சட்ட ஷரத்துக்குள் வருவதே இல்லை. எனவே படத் தயாரிப்பாளர்கள், தங்கள் படத்துக்குத் தயாரிக்கப்பட்டிருக்கும் இசைக்கோர்வைக்குக் காப்புரிமை கோரவே முடியாது.

தயாரிப்பாளர்களின் உரிமை என்ன?

அப்படியானால் படத் தயாரிப்பாளர்களின் உரிமைதான் என்ன?

காப்புரிமை யாரிடம் உள்ளதோ, அவர்கள் அந்த உரிமையைக் கொண்டு என்ன விதமான பணம் சம்பாதிக்கும் செயலிலும் சட்டபூர்வமாக ஈடுபடலாம். குறிப்பிட்ட உரிமைகளை யாருக்கு வேண்டுமானாலும் குறிப்பிட்ட காலத்துக்கு விற்கலாம். எழுத்துபூர்வமாக எந்த ஒப்பந்தமும் இல்லையென்றால், இசையமைப்பாளர், தான் இசையமைத்த இசைக்கோர்வையைக் கொண்டு, பாடலாசிரியர் எழுதிய பாடலை, சில இசைக் கலைஞர்களைக் கொண்டு இசையுடன் பாடவைத்து, அந்தப் பாடலைப் படத்தில் பயன்படுத்திக்கொள்ளும் உரிமையை மட்டுமே படத் தயாரிப்பாளர்களுக்கு வழங்குவதாகப் பொருள் கொள்ளப்படும். இசைக்கோர்வையை உருவாக்கியதற்கு எத்தனை கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் இதுதான் அதற்குப் பொருள். தயாரிப்பாளர், பாடலாசிரியருக்கும் பாடகர்களுக்கும் இசைக் கலைஞர்களுக்கும் பணம் கொடுத்திருப்பார். எக்கச்சக்கமான பொருட்செலவில் சினிமாவையும் எடுத்திருப்பார். ஆனாலும், அந்தப் பாடலைத் தன் படத்தில் பயன்படுத்திக்கொள்ளும் உரிமையை மட்டுமே அவர் கையாள முடியும்.

தயாரிப்பாளர் என்ன செய்யலாம்?

இது ஏற்புடையதல்ல என்று கருதும் படத் தயாரிப்பாளர்கள் இரண்டு செயல்களைச் செய்யலாம்.

(1) முழு வணிக உரிமை: இசைக்கோர்வைக்கான காப்புரிமை இசையமைப்பாளரிடம் இருக்கும்போதிலும், அதன் முழுமையான வணிக உரிமையை, அதாவது பல்வேறு விதமான முறைகளில் அந்தப் பாடலைப் பணமாக ஆக்கும் உரிமையை முழுமையாக, ஏகபோகமாக, இசையமைப்பாளரிடமிருந்து எழுத்துபூர்வமாக வாங்கிவிடலாம். அந்த ஒப்பந்தம் நிலைத்திருக்கும் காலம்வரை படத் தயாரிப்பாளரிடம் மட்டுமே அந்த உரிமை இருக்கும். இது ஐந்து, பத்து, நூறு என்று தொடங்கி காப்புரிமை நிலைத்திருக்கும் காலம் வரை இருக்கலாம். இந்தக் காலகட்டத்தில் இசையமைப்பாளர் தான் அமைத்த இந்த இசைக்கோர்வையைக் கொண்டு பணம் செய்ய முடியாது. அந்த உரிமை முழுவதும் படத் தயாரிப்பாளரிடம் மட்டுமே இருக்கும்.

(2) காப்புரிமையையே “பெற்றுவிடுவது”: காப்புரிமைச் சட்டங்கள் அனைத்துமே assignment என்ற கையளிக்கும் உரிமையை முதன்மைக் காப்புரிமையாளருக்கு வழங்குகின்றன. இசையமைப்பாளர் தன் காப்புரிமையை இன்னொருவருக்குக் கையளித்துவிடலாம். அப்படி ஆன பின், அந்தக் கையளிப்பைப் பெற்றவர் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். காப்புரிமை என்பது சொத்து போன்றது. காப்புரிமை பெற்ற நபர் இறந்தால் அது அவருடைய வாரிசுகளுக்குச் சென்றுவிடும். அல்லது அது யாருக்குக் கையளிக்கப்பட்டிருக்கிறதோ அவருக்குப் போய்விடும்.

இந்த இரண்டில் ஏதோ ஒன்றை எழுத்துபூர்வமாகப் படத் தயாரிப்பாளர்கள் செய்திருந்தால் மட்டுமே இன்று அவர்களுடைய வழக்கு நிற்கும்.

காப்புரிமைக்குக் கால வரையறை உண்டு. இந்தியச் சட்டங்களின்படி, காப்புரிமை பெற்ற நபர் இறந்து 60 ஆண்டுகளில் காப்புரிமை முற்றிலும் நீங்கி அது பொதுத்தளத்துக்கு வந்துவிடும். காப்புரிமை பெற்றவர், தான் வாழும் காலத்திலேயே தன் படைப்புகளை யார் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று ‘கிரியேட்டிவ் காமன்ஸ்’ போன்ற பல ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவதன்மூலம், அல்லது காப்புரிமையை முற்றிலுமாக நீக்கிப் படைப்பைப் பொதுத் தளத்துக்கு வரச்செயவதன் மூலம் செய்ய முடியும். இந்த நிலையில் யார் வேண்டுமானாலும் இந்தப் படைப்பைப் பயன்படுத்திக்கொண்டு அதிலிருந்து வருமானம் பெறலாம்.

பாடலாசிரியர், பாடகர், இசைக் கலைஞர்கள்…

சரி, படத் தயாரிப்பாளர் - இசையமைப்பாளர் உறவு இப்படி என்றால், பாடலாசிரியர், பாடகர், இசைக் கலைஞர் ஆகியோர் நிலை என்ன? அவர்களும் இந்தப் பாடலின் தயாரிப்பில் பங்களிக்கவில்லையா?

54a.jpg

இசைக்கோர்வைதான் அடிப்படையான தளம். இதன்மேல் லிரிக்ஸ் - பாடல் வரிகள் வருகின்றன. அதற்குமேல் இசையும் பாடுதலும். பாடலாசிரியருக்கு இரண்டாம் நிலை உரிமை அந்தப் பாடலில் உள்ளது. அவர் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்தப் பாடல் வரிகளை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று அவர் சொல்லலாம். அந்தப் பாடல் வரிகளுக்கான காப்புரிமை பாடலாசிரியரிடம்தான் உள்ளது. இசைக் கலைஞர், பாடகர்களுக்கு மூன்றாம் நிலை உரிமை மட்டுமே உள்ளது. என்னைப் போல் பிறர் பாடக் கூடாது என்றோ என்னைப் போல் பிறர் வயலின் வாசிக்கக் கூடாது என்றோ அவர்களால் சொல்ல முடியாது. ஏனெனில் அவர்களே யாரோ எழுதிய வரிகளை யாரோ உருவாக்கிய இசைக்கோர்வையின்மீது ஏற்றிப் பாடுகிறார்கள், இசைக்கிறார்கள். வேறு பாடகர்களை, இசைக் கலைஞர்களைக் கொண்டு இதனைச் செய்துவிடலாம். அதே இசைக்கோர்வைக்கு இன்னொரு பாடலாசிரியரைக் கொண்டு வேறு வரிகளை எழுதிவிடலாம். ஆனால் பாடலின் ஆதாரமான இசைக்கோர்வைதான் இங்கு அசல்.

ஆக, ஒப்பந்தம் கையில் இல்லாத படத் தயாரிப்பாளர்கள் போடும் வழக்கு உருப்படாது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் போன்றோர் பிடிக்கும் முரண்டு சரிப்படாது.

இனி யார் யார் என்ன செய்ய வேண்டும்?

1. நான் தயாரிப்பாளராக இருந்தால், அனைத்துவிதமான வருமானம் பார்க்கும் உரிமையையும் ஒப்பந்தம் மூலமாக வாங்கிவிடுவேன். அதனை ஓர் இசையமைப்பாளர் ஏற்கவில்லை என்றால் அவருக்குப் பதில் வேறு யாராவது கிடைப்பாரா என்று பார்ப்பேன். இந்த இசையமைப்பாளர் மிக மிக முக்கியம் என்றால், அவருடன் ஒப்பந்தரீதியில் ஒரு சமரசத்தை ஏற்படுத்திக்கொள்வேன். அதில் யாருக்கு எத்தனை சதவிகிதம் வருமானம் போன்ற தகவல்கள் தெளிவாக இருக்குமாறு பார்த்துக்கொள்வேன்.

2. பாடலாசிரியராக நான் இருந்தால், என் உரிமைகள் என்னென்ன, அந்தப் பாடல் வரிகளை நான் எங்கு, எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று முன்னாலேயே எழுதி வாங்கிக்கொள்வேன்.

3. பாடகராக இருந்தால், தான் மேடைகளில் பாடுவதற்கு நிரந்தரமாக, எந்தக் கட்டணமும் இன்றி உரிமை வேண்டும் என்று படத் தயாரிப்பாளரிடம் கேட்டு, இசையமைப்பாளர் முதல் பாடலாசிரியர் வரை அனைவரிடமும் தடையில்லாக் கடிதம் / ஒப்பந்தம் வாங்கிவைத்துக்கொள்வேன். அது கிடைக்காவிட்டால், எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்குப் பணத்தைப் பெற்றுக்கொண்டு பேசாமல் போய்விடுவேன். சண்டை போட மாட்டேன்.

(கட்டுரையாளர் பத்ரி சேஷாத்ரி, சென்னை ஐ.ஐ.டியில் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் கோர்னெல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். www.cricinfo.com (தற்போது www.espncricinfo.com) என்ற கிரிக்கெட் இணையத்தளத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர். நியூ ஹொரைசான் மீடியா என்ற தமிழ்ப் புத்தகப் பதிப்பு நிறுவனத்தை உருவாக்கி, அதன் பதிப்பாசிரியராகவும் பதிப்பாளராகவும் இருக்கிறார். கிழக்கு பதிப்பகம் என்னும் பெயரில் பல்வேறு துறைகள் சார்ந்த நூல்களை வெளியிட்டுவருகிறார். சிறுவர்களுக்காகச் சில அறிவியல் புத்தகங்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ள இவர், சில ஆங்கிலப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் இருக்கிறார். அறிவியல், கணிதம், அரசியல், சமூகவியல் ஆகிய துறைகளில் கட்டுரைகள் எழுதிவருகிறார்.

 

https://minnambalam.com/k/2018/12/30/54

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.