Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைவழியா நிகழ்வுகள் - மாவீரர் நாளும் பாடலும்

Featured Replies

  • தொடங்கியவர்

 

மொழியாகி, எங்கள் மூச்சாகி, நாளை
முடிசூடும் தமிழ் மீது உறுதி.
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன்
வரலாறு மீதிலும் உறுதி.
விழிமூடி, இங்கே துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி.
இழிவாக வாழோம், தமிழீழப் போரில்
இனிமேலும் ஓயோம் உறுதி.

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே! - இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் - அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே
நாமும் வணங்குகின்றோம் - உங்கள்
கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் - அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியர(சு) என்றிடுவோம் - எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

Edited by போல்

இலங்கை மாவீரர் தினம்: தடைகளுக்கு மத்தியில் அஞ்சலி செலுத்திய மானவர்கள்

 

_109913230_maavirar.jpg

இலங்கையில் நீடித்து நடந்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு இறந்த போராளிகளை நினைவு கூறும் நாள் இன்று புதன்கிழமை இலங்கையின் தமிழர் பகுதிகளிலும், இந்தியா மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் அனுஷ்டிக்கப்படுகிறது.

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுவாக மாலை 6.05 மணிக்கு அக வணக்கதுடன் மாவீரர்தின அஞ்சலி நிகழ்வு ஆரம்பமாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தும் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான போராளிகள் உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து உயிர் நீத்த முதல் போராளி லெப். சங்கர் (சத்தியநாதன்) இறந்த நவம்பர் 27ம் தேதியைதான் தமிழீழ விடுதலைப் புலிகள் மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தினர். ஒவ்வொரு ஆண்டும் இதே தேதியில் மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து உயிர் நீத்தவர்களின் உடல்கள் எந்த சந்தர்ப்பத்திலும் எதிரியின் கைகளில் அகப்பட்டுவிடக்கூடாது உயிர் நீத்தவர்களை முழுமையான இராணுவ மரியாதைகளுடன் புதைப்பது அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என விடுதலைப் புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இந்த நடைமுறையை பேணி வந்தனர்.

முதலாவது மாவீரர் நிகழ்வு

1989ஆம் ஆண்டு தொடக்கம் மாவீரர் தினம் எனும் பெயருடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்த் தியாகம் செய்த போராளிகளை நினைவு கூறும் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுவருகிறது.

இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் முல்லைத்தீவு மணலாற்றுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

_109913234_puligal.jpg

அன்று தொடங்கி ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ம் தேதி மாவீரர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினமே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உரை இடம்பெறும். வருடத்தில் ஒருமுறை மட்டுமே அவரது உரை இடம்பெறுமென்பதால் மாவீரர் தின உரைக்கு உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

ஒவ்வொரு மாவீரர் தினத்திலும் அந்த வருடத்தின் மாவீரர்களின் எண்ணிக்கையை தமிழீழ விடுதலை புலிகள் உத்தியோக பூர்வமாக வெளியிடுவார்கள். உரிமைகோர முடியாத தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை அவர்கள் இந்த எண்ணிக்கையோடு இணைப்பதில்லை. அது தமிழீழ விடுதலைப் புலிகளால் இரகசியமாக பேணப்பட்ட பட்டியலாக இருந்தது.

மாவீரர் வாரத்தில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிக்கப்படுதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

2008ம் ஆண்டு மாவீரர் தினமே தமிழீழ விடுதலைப் புலிகளால் அனுஷ்டிக்கப்பட்ட இறுதி மாவீரர்தினமாகும். அந்த வருடத்தின் அக்டோபர் 30ம் தேதி வரை 22,114 மாவீரர்கள் வீரச்சாவு அடைந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர். இவர்களில் 17,305 ஆண் போராளிகளும் 4,809 பெண் போராளிகளும் உள்ளடங்குகின்றனர்.

_109913236_srilanka-3.jpg

2009 மே 19ம் தேதி வரையான போரின் இறுதிநாள் வரை சுமார் 40,000க்கும் அதிகமான போராளிகள் வீரச்சாவு அடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

2009 போர் முடிந்த பின்னர் மாவீரர்களுக்கு அஞ்சலி செய்வதை தடுக்க இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. போரின் பின்னர் இலங்கை இராணுவத்தினரால் மாவீரர்களின் கல்லறைகளும் நினைவிடங்களும் சிதைக்கப்பட்டன. 'மாவீரர் துயிலும் இல்லங்கள்' இருந்த இடங்களை அழித்துவிட்டு அதில் இராணுவ முகாம்களை அமைத்தனர். எனினும் பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் ஒவ்வொரு வருடமும் மாவீரர் நாளினை அனுசரிக்கின்றனர்.

இந்த ஆண்டு மாவீரர் தினம்

இறுதி யுத்தத்தின் போது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ தற்பொழுது இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்று இருக்கும் நிலையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் இம்முறை மாவீரர் நாளை கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இல்லாத துயிலும் இல்லங்களில் மாவீரர் நாளை நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை தமிழ் மக்கள் செறிந்துவாழும் புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாளை கடைப்பிடிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்துவதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடுகளை முன்னெடுத்து வந்த நிலையில் அதனைத் தடைசெய்வதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி, மாணவர்களைப் பல்கலைக்கழகத்தினுள் இன்றும் நாளையும் நுழைவதற்குத் தடைவிதித்து அறிவித்தல் விடுத்துள்ளார்.

_109913232_1ma1.jpg

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவாலாயத்திற்கு முன்பாக 25,000 மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன. இன்று இரவு வரையில் இந்த கல்வெட்டுக்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

போரில் வீரச்சாவடைந்த சுமார் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெயர்கள் இந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலைக் கழகத்தில் மாவீரர் தினம்

நிர்வாகத்தின் தடைகளை மீறி யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள மாவீரர் நினைவு தூபியில் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவாயில் கதவினை உடைத்து உள் நுழைந்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50576669

 

 

Edited by Rajesh

பலர் கனவிலும் நினைக்காத அளவுக்கு வட-கிழக்கு மக்கள் தங்கள் பிரதேசங்களிலே ஒன்றிணைந்து மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டித்துள்ளனர்.

தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் பலர் தாங்க கோழைகள் இல்லை என வெளிப்படுத்துள்ளார்கள். அந்த மக்களுக்கு அனைவரும் தலை வணங்க வேண்டும். 

On 11/28/2019 at 7:00 PM, Gowin said:

பலர் கனவிலும் நினைக்காத அளவுக்கு வட-கிழக்கு மக்கள் தங்கள் பிரதேசங்களிலே ஒன்றிணைந்து மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டித்துள்ளனர்.

தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் பலர் தாங்க கோழைகள் இல்லை என வெளிப்படுத்துள்ளார்கள். அந்த மக்களுக்கு அனைவரும் தலை வணங்க வேண்டும். 

அதே!

விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக பிரகடனம் செய்தவர்கள் அதிகாரத்தில்! உறுதிப்படுத்தப்பட்ட உரிமை

அழுத்தங்கள், கெடுபிடிகள் இருந்த போதும் வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் நிகழ்வுகள் பெரும்பாலும் தடையின்றி நடந்தேறியிருக்கின்றன.

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் கேள்விக்குறியாக இருந்த பல விடயங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்பதும் ஒன்று.

2009இல் போரை முடிவிற்கு கொண்டு வந்து விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாகப் பிரகடனம் செய்தவர்கள், அதில் நேரடியாகப் பங்களித்தவர்கள் அனைவரும் இப்போது நாட்டின் மிக முக்கிய பதவிப் பொறுப்புகளில் இருக்கிறார்கள்.

அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச இப்போது பிரதமராக இருக்கிறார். அப்போது பாதுகாப்புச் செயலாளராக இரந்த கோட்டாபய ராஜபக்ச இப்போது ஜனாதிபதியாக இருக்கிறார்.

போரின் இறுதிக்கட்டத்தில் 52ஆவது டிவிஷனை வழிநடத்திய மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இப்போது பாதுகாப்புச் செயலாளராகவும் 58ஆவது டிவிஷனுக்குத் தலைமை தாங்கிய லெப். ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாகவும் இருக்கின்றனர்.

இவர்கள் எல்லாம் அதி உச்ச அதிகாரத்தில் இருக்கின்ற நிலையில் அவர்களாலேயே அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுக்கு புதிய அரசாங்கம் அனுமதி அளிக்குமா என்ற சந்தேகங்கள் இருந்தன.

போர் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகளை நினைவு கூர அனுமதிப்பதில்லை என்ற உறுதியான கொள்கையை கடைப்பிடித்து மஹிந்த ராஜபக்ச அரசாங்கம்.

விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னங்களாக இருந்த துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டு பெரும்பாலும் அவற்றின் மீது இராணுவத் தளங்கள் கட்டியெழுப்பப்பட்டன.

புலிகளை நினைவுப்படுத்தக் கூடிய எந்தவொரு நினைவுச் சின்னத்தையும் விட்டு விடாமல் எல்லாவற்றையும் துடைத்து அழித்திருந்தார் இப்போதைய ஜனாதிபதியும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச.

அவை அழிக்கப்பட்ட போது கடுமையான விமர்சனங்களும் எதிர்க்கருத்துக்களும் வந்த போதும் அவர் அதில் உறுதியாக இருந்தார். விடுதலைப் புலிகளின் தடயங்களே இருக்கக்கூடாது என்றும் அது எதிர்காலத்தில் இன்னொரு எழுச்சிக்கு காரணமாகி விடும் என்றும் அவர் நியாயம் கற்பித்திருந்தார்.

அதுமாத்திரமன்றி மாவீரர் நாள் நினைவுகூரல்களையும் அவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் நடத்துவதற்கு அனுமதிக்கவில்லை. மாவீரர் நாளை அண்டியதாக இந்துக்களின் கார்த்திகை விளக்கீடும் வருவது வழக்கம்.

அவ்வாறு காரத்திகை விளக்கீட்டுக்கு வீட்டின் முன்பாக விளக்கேற்றியவர்கள் பலர் தாக்கப்பட்ட சம்பவங்களுகம் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்களும் நடந்தேறியிருந்தன.

அந்த காலக்கட்டத்தில் மிக இரகசியமாகவே வீடுகளில் மாவீரர்களுக்கு விளக்கேற்றப்பட்டன. மாவீரர் நாள் நிகழ்வை நடத்தியதற்காக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டன.

இவ்வாறான ஒரு சூழலே 2014ஆம் அண்டு வரை இருந்தது. ஆனால் 2015ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் மாவீரர்களை நினைவு கூர அரசாங்கம் அனுமதியளிக்காவிடினும் அதற்கு தடை விதிக்கவில்லை.

சில இடங்களில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று தடைவிதிக்கும் முயற்சிகள் இடம்பெற்ற போதும் அவை பெரும்பாலும் மாவீரர் நாள் நிகழ்வுகளை தடை செய்யும் அளவுக்கு வீரியமான முயற்சிகளாக இருக்கவில்லை.

இதனால் பெரம்பாலான துயிலும் இல்லங்களில் மீண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தேறி வந்தன. கடந்த 2018ஆம் ஆண்டு மாவீரர் நாள் கூட கேள்விக்குறியான ஒன்றாகவே இருந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆட்சிக் குழப்பம் ஏற்பட்டிருந்த காலம் அது. பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவியில் இருந்தார். அதனால் ஏதேனும் குழப்பங்கள் ஏற்படுத்தப்படுமோ என்ற கவலை இருந்தது.

எனினும் ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் மைத்திரிபால சிறிசேனவே இருந்ததால் கடந்த முறை எந்தப் பிரச்சினையுமின்றி மாவீரர் நாள் நிகழ்வுகள் நடந்தேறியிருந்தன.

இந்த முறை எல்லமே மாறிவிட்டது. விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக பிரகடனம் செய்தவர்கள் அனைவரும் அதிகாரத்தில் இருக்கின்ற நிலையில் இந்த முறை மாவீரர் நாளை நடத்துவதற்கு அனுமதிக்கப்படுமா என்ற கேள்வி இருந்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் அவரது இடைக்கால அரசாங்கத்திற்கும் கூட இது ஒரு சிக்கலான விடயமாகவே இரு்நதது.

கடந்த காலங்களில் மாவீரர் நாளை நினைவுகூர மைத்திரி - ரணில் அரசாங்கம் அனுமதியளித்திருந்த போது மீண்டும் புலிகள் வந்து விட்டதாகவும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுவதாகவும் கூட்டு எதிரணியில் இருந்தவர்கள் கூச்சல் எழுப்பினர்.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, தினேஸ் குணவர்த்தன போன்ற இனவாதிகள் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டனர். கடந்த ஆண்டு அவர்கள் ஆட்சியில் இருந்த போதே மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தன.

இந்த முறையும் அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் முள்ளில் விழுந்த சேலை போல பக்குவமாகவே அதனை எடுக்க வேண்டியிருந்தது. ஏற்கனவே இந்த அரசாங்கம் சிறுபான்மையினரின் நம்பிக்கையை பெற்றதல்ல என்ற அடையாளத்துடன் தான் பதவிக்கு வந்திருக்கிறது.

எனவே அவர்களை இனிமேலும் பகைத்துக் கொள்ளாமல் அரவணைத்துக் கொள்ளும் அவசியம் அரசாங்கத்துக்கு இருக்கிறது.

மாவீரர் நாள் போன்ற உணர்வுபூர்வமான விடயங்களின் மீது கை வைக்கும் போது அது பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறது.

போரில் இறந்து போன உறவுகளுக்கு நினைவு கூரும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நிலைப்பாடாகவும் இருந்து வருகிறது. தற்போதைய அரசாங்கம் சர்வதேச நம்பிக்கையைப் பெற்ற ஒன்று அல்ல. அதன் நிலைப்பாடுகளும் கருத்துக்களும் இன்னமும் சர்வதேசத்துக்கு நம்பிக்கையை அளிக்கவில்லை.

அதற்குள்ளாகவே நினைவுகூரல் உரிமைகளை பறித்தெடுத்து விட்டால் சர்வதேச அளவில் நெருக்குதல்களைச் சந்திக்க வேண்டிய நிலை வரக்கூடும் என்ற சிக்கலும் இருந்தது.

இதற்கு அப்பால் மாவீரர் நாளுக்கு அடுத்த நாளான கடந்த 28ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தியாவிற்கு புறப்பட திட்டமிட்டடிருந்தார்.

மாவீரர் நாள் நிகழ்வுகளை இந்தியா அங்கீகரிக்காது போனாலும் தமிழ் மக்களின் நினைவுகூரல் உரிமைகள் பறிக்கப்பட்டால் அது இந்தியப் பயணத்தின் போது கோட்டாபய ராஜபக்சவிற்கு சங்கடமான சூழ்நிலைகளை ஏற்படுத்தும் என்பதையும் அரசாங்கம் கவனத்தில் கொண்டிருக்கும்.

தமிழ்மொழி பெயர்ப்பலகைகள் அழிப்பட்டதையே கோட்டாபய ராஜபக்சவின் இந்திய பயணத்தை சீர்குலைக்க முனையும் சக்திகளின் சதி என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச கருதுகிறார் என்றால் நினைவுகூரல் உரிமை தடுக்கப்படுவதை எந்தளவுக்கு பாரதூரமானதாக எடுத்துக் கொண்டிருப்பார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இவை எல்லாவற்றுக்கும் அப்பால் போர் முடிந்து பத்து ஆண்டுகளாகி விட்ட நிலையில் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டிய ஒரு பக்குவ நிலையை தற்போதைய அரசாங்கம் அடைந்திருக்கக்கூடும்.

தமிழ் மக்கள் போரில் இழந்தவைகள் ஏராளம். அவர்கள் தமது உறவுகளை பலர் தமது தலைமுறைகளை இழந்திருக்கிறார்கள். அவர்களின் காயங்களை ஆற்றுவதற்கு ஒரு வழி தேவை.

நீதி விசாரணைப் பொறிமுறைகளும், பொறுப்புக்கூறலும் இத்தகைய காயங்களை ஆற்றுகின்ற ஒரு வழிமுறையாக இருந்தாலும் அவ்வாறான ஒரு சூழல் இன்னமும் உருவாக்கிக் கொடுக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் மாவீரர் நாள் போன்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் தான் உறவுகளை இழந்தவர்கள் அழுந்து புரண்டு தமது காயங்களுக்கு மருந்திடும் ஆறுதல் கிடைக்கும்.

துயிலும் இல்லங்களில் கேட்கின்ற அழுகுரல்கள் ஆறுதலையும் தேறுதலையும் அவர்களுக்கு கொடுக்கிறது என்பதையே உணர்த்துகின்றது. இவ்வாறான அழுகுரல்களை அடக்கி வைப்பதும் ஆறுதல் அடைவதை தடுப்பதும் தான் மக்கள் மத்தியில் இன்னும் இன்னும் முரண்பாட்டை வளர்தெடுக்கும்.

இதனை புதிய அரசாங்கம் புரிந்து கொண்டிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இவை எல்லாவற்றுக்கும் அப்பால் மாவீரர்களை நினைவுகூர அனுமதிக்கப்பட்டதால் எங்கும் சட்டம் ஒழுங்கு மீறப்படவோ வன்முறைகள் நிகழவோ இல்லை. அதிகபட்சம் ஒரு மணி நேரம் அமைதியான நினைவுகூரலுடன் மக்கள் கலைந்து செல்கின்றனர்.

இதனை முன்வைத்து விடுதலைப் புலிகளின் மீள் எலுச்சி பற்றி கவலை கொள்வது மிகையான கற்பனை. இதனால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு விட்டதாக யாரும் கூறவும் முடியாகது. ஏனெனில் அவ்வாறான எந்த நிகழ்வம் நடக்கவில்லை.

அரசாங்கம் இன்னொரு போரைத் தடுப்பதற்கான எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருக்கிறது. இவ்வாறான நிலையில் மாவீரர் நினைவுகூரல் போன்ற தமிழ் மக்களின் உணர்வுகளையும் மதிக்கின்ற வகையில் அவர்களையும் அனுசரித்துச் செல்வது நிலையான அமைதியை ஏற்படுத்தும். அதன் இலக்கை இன்னும் இலகுபடுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

https://www.tamilwin.com/articles/01/232701?ref=rightsidebar-article

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.