Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இர்பான் கான்:  மிகச்சிறந்த நடிகரின் மறைவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இர்பான் கான்:  மிகச்சிறந்த நடிகரின் மறைவு!

95145670_2832235583565869_85389664899762

தேர்ந்த கதாப்பாத்திரங்கள் மூலம் எப்போதும் உலக மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருந்த இர்பான் கான் மரணமடைந்தார் என்ற செய்தி பலரை சோகக் கடலில் மூழ்கியிருக்க செய்திருக்கிறது. தன்னுடைய அசாத்திய நடிப்பின் மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்று பல ஹாலிவுட் படங்களில் நடித்த இர்பான் கான் இன்று காலை(29.04.2020) மரணமடைந்தார்.

1967ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிறந்த இர்பான் கான் இளம் பிராயத்திலே தன் தந்தையை இழந்தார். கிரிக்கெட், நாடகத்துறை என்று பல துறைகளில் ஆர்வம் கொண்டிருந்த இர்பான் கடைசியாக தஞ்சமடைந்தது சினிமாத்துறையில். தான் ஏற்றுகொண்ட கதாபாத்திரத்திற்கு மிகையாக ஒரு துளி நடிப்பைக்கூட இர்பானிடமிருந்து எதிர்பார்த்திடமுடியாது. துல்லியமான நடிப்பு, முறையான கதாபத்திர தேர்வு, சக நடிகர்களை நேசிக்கும் நல்ல மனிதர் என்று அவருடைய வளர்ச்சி வெகு சில நாட்களிலே பாலிவுட் சினிமாக்களில் உச்சத்தை தொட்டது.

94488143_847833212397204_525296127608619

தொடக்க காலகட்டத்தில் பல நேர்மறை கதாப்பாத்திரங்களில்  நடித்துவந்த இர்பான் நாளடைவில் மெல்ல மெல்ல எதிர்மறை கதாபாத்திரங்களுக்கு பேர்போனவராக உருமாறினார். தன்னுடைய மிரட்டும் கண்கள் மூலம் கதைக்குத் தேவையான நடிப்பை எந்தவித அலட்டல்களும் இல்லாமல் மிகச் சிறப்பாக வெளிப்படுத்த தெரிந்த இர்பானுக்கு பல உலக சினிமாக்களில் இருந்து வாய்ப்புகள் வந்தவண்ண இருந்தன. சலாம் பாம்பே, ஹாசில், மக்பூல், பான் சிங் தோமர், லன்ச் பாக்ஸ், ஹைதர், பிக்கூ என இந்திய சினிமாவின் பல முக்கிய திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். அதுமட்டுமில்லாமல் ஸ்லம்டாக் மில்லினியர், தி அமேஸிங் ஸ்பைடர் மேன், லைஃப் ஆஃப் பை, ஜூராஸிக் வேல்டு, இன்ஃபெர்னோ போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

94729827_2726879600771393_15997617631196

இந்நிலையில்தான் இர்பான் கானுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு  எண்டோகிரைன் புற்றுநோய் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டது.  இந்த வினோதமான புற்றுநோய் ரத்தத்தில் உள்ள ஹார்மோன்களை பாதித்து கொஞ்ச கொஞ்சமாக ரத்த செல்களைப் அழிக்கும். 53 வயதான இர்பான் கான் கடந்த இரண்டு வருடங்களாக இந்த புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென்று மும்பை கோகிலா பென் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின் மறைவையொட்டி பல திரைப் பிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இர்பான் கானின் மறைவு இந்திய சினிமாவில் ஒரு சிறந்த நடிகருக்கான வெற்றிடத்தை உருவாகியுள்ளதை யாராலும் மறுக்க முடியாது

 

https://uyirmmai.com/செய்திகள்/சினிமா/இர்பான்-கான்-மிகச்சிறந்/

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி . நல்ல நடிப்பாற்றலும் , நற்குணமும் கொண்ட ஒரு நடிகர். அவரது நேர்காணல் வீடியோக்களை பார்த்தபோது அவர் தத்துவத்தில் மிக ஆர்வம் கொண்டிருந்தார் என்று தெரிகிறது. அவரது தாயார் ராஜஸ்தான் அரச வம்சாவளி என்று அறிந்தேன். 19 வயதில் தந்தையை இழந்திருந்தாலும் பண வசதிக்கு குறைவிருக்கவில்லை. சினிமாவை தாயார் விரும்பாத போதும் அவருக்கிருந்த சினிமா நாட்டத்தினால் ஒரு நடிகன் ஆனார். தனது சொந்த முனேற்றத்துக்கு அரச பரம்பரை பெயர் தடையாகி விட்டாலும் என்று நினைத்து Sahabzade  என்ற அவரின் பெயரின் முதற்பகுதியை அகற்றிவிட்டு Irrfan Khan என்று தன்னை அறிமுகப்படுத்தியவர். அவரது ஆன்மா சாந்தி அடைவதாக.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்......!

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான நடிகனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

 

நம்பவே முடியாதவொரு இழப்பு ... ஆத்மா சாந்தியடையட்டும் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இர்ஃபான் கான்: கோடானு கோடி மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்த நடிகர்!

spacer.png

குமுதினி பதி

இர்ஃபான் கான் 29 ஏப்ரல் 2020 அன்று நம்மைவிட்டு மறைந்தார். ஆனால், அவர் மிகச்சிறந்த பாரம்பரியத்தையும் பல திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை பாத்திரங்கள் நிறைந்த பொக்கிஷத்தையும் நமக்கு விட்டுச் சென்றுள்ளார். வரும் ஆண்டுகளில் பல இளம் கலைஞர்களுக்கு அவை வழிகாட்டும்.

இந்தியத் திரைப்படத்துறையில் அறிவுஜீவித் திறனும் மிகுந்த அறிவாற்றலும் கொண்ட நவீன கலை உணர்வுகளுடன் கூடிய புதியதொரு தலைமுறை மீண்டும் உருவாகி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இவர்களே நம் நாட்டில் அதிலும் பாலிவுட்டில், புதிய கலாச்சார மாண்புகளை வளர்த்து வருகின்றனர். இர்ஃபான் கான் அவர்களுள் ஒருவர்.

 

இர்ஃபான் மசாலா படங்களில் வரும் சராசரி கதாநாயகன் போன்றவர் அல்லர். ஒரு குறுகிய ரசிகர்கள் வட்டத்தை மட்டுமேகொண்ட கலைப்படங்கள் என்ற தனி உலகைச் சேர்ந்தவரும் அல்லர். நசிருதீன் ஷா மற்றும் ஓம் பூரி ஆகியவர்களைப் போல கலைப் பண்புகளையும் பிரதிபலித்து வணிகரீதியாகவும் வெற்றி காணும் பரந்த ரசிகர்களைக் கொண்ட இடைநிலை சினிமாவால் உருவானவர்.

பல கதாநாயகர்களைப் போல இவரும் ஒருவர் என்று அவரைக் கூற முடியாது. இர்ஃபானை வித்தியாசமானவராகக் காட்டியது என்ன? அவரது மரணத்தின் இழப்பால் கோடிக்கணக்கானவர்கள் வருந்துவது ஏன்? மிகப்பரந்த அளவில் ரசிகர்கள் மத்தியில் அவர் பிரபலமானது ஏன்?

 

இதற்கு முக்கிய காரணம் அவர் மக்களிடமிருந்து ஒதுங்கியுள்ள ஒரு மேட்டுக்குடி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் அல்லர். அவர் சாதாரண மக்களின் மத்தியில் ஒருவராய் இருந்து உருவானவர். எனவே அவர்களுடைய கலை நயங்களை இயல்பாகவே வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தவர். இர்ஃபான் தொடக்கத்தில் சாஹேப்சாதே இர்ஃபான் அலி கானாகத்தான் பிறந்து வளர்ந்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் டோன்க் ஜில்லாவில் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அது எத்தகைய பத்தாம் பசலிக் குடும்பம் என்றால் திரைப்படம் பார்ப்பதற்குகூட அனுமதி இல்லை. அத்தகைய குடும்பத்திலிருந்து வந்த ஓர் இளைஞன் முப்பது ஆண்டுகளுக்குப் பின் திரைப்பட உலகில் தன் முத்திரை பதிப்பார் என ஒருவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. தான் சிறுவனாக இருந்தபோது கதைகள் என்றால் தனக்கு பெரும் மோகம் என ஒரு பேட்டியில் இர்ஃபான் கூறியிருந்தார். அவர் வீட்டுக்குப் பின்னால் ஒதுக்குப்புறமாக இருந்த ஓர் அறையில் அவரும் அவர் நண்பர்கள் சிலரும் கூடி தங்களுக்குள்ளேயே நடித்துக்காட்டுவதும் கதைசொல்லிக் கொள்வதும் வழக்கமாம். சில நேரங்களில் அவர்கள் ஜெய்ப்பூர் - அஜ்மேர் வானொலியிலும் பிபிசி வானொலியிலும் வரும் கதைகளைக் கேட்பார்களாம். இர்ஃபானுக்கு அப்போது 14 வயது.

 

ஷியாம் பெனகலின் ஜுனூன் படத்தைப் பார்த்த பிறகு அதில் நடித்த நடிகர் ராஜேஷ் விவேக் எப்படி மந்திர சக்தி கொண்டவரைப் போல நடித்தார் என இர்ஃபான் ஆச்சரியப்பட்டதுண்டாம். புனேவிலுள்ள திரைப்படக் கல்லூரிக்கு நிகரான டெல்லியிலுள்ள தேசிய நாடகப் பயிற்சிப்பள்ளியிலிருந்துதான் (National School of Drama/NSD) அத்தகைய நடிகர்கள் தயாராகி வருகின்றனர் என அவர் நண்பர் யூசுப் குரானா அவருக்குத் தெரிவித்தார். என்எஸ்டியில் சேர வேண்டும் என அவருக்கு ஒரு கனவு பிறந்தது. அதை நனவாக்குவதில் வெற்றியும் கண்டார். இர்ஃபானின் திரைப்படத் துறைப் பயணம் அங்கிருந்து தொடங்கியது.

"வித்தியாசமாக ஏதோ செய்ய வேண்டும் என இர்ஃபானுக்கு ஒரு வேட்கை இருந்தது. என்எஸ்டியில் தேர்ச்சி பெற்று நீங்கள் வெளிவரும்போது நசிருதீன் ஷா, ஓம் ஷிவ்புரி மற்றும் ஓம் பூரி போன்ற ஜாம்பவான்கள் உங்கள் முன் உள்ளனர். அவர்கள் முன் மிகச் சிறியவர்களாக நீங்கள் உணருவீர்கள். அவர்கள் மட்டத்துக்கு எவ்வாறு உயருவது என நீங்கள் பிரமிப்பீர்கள். ஆனால் மீரா நாயரின் சலாம் பாம்பே படத்தில் நடிப்பதற்கு 1988இல் இர்ஃபானுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர், இர்ஃபான் ஒரு கணமும் தேங்கவில்லை" என என்எஸ்டியில் அவருக்கு மூத்தவரும் அவருடைய நெருங்கிய நண்பரும் திரைப்படப் படைப்பாளியான சுதர்ஷன் ஜூயால் தெரிவித்தார்.

spacer.png

இர்ஃபான், நசிருதீன் ஷாவிடமிருந்து பெரும் உத்வேகத்தைப் பெற்றார். ஆனால் திரைப்படத் துறையில் ஒரு வாழ்க்கைத்தொழிலை வளர்த்தெடுப்பது பெரும் போராட்டமாக இருந்தது. அவருக்குக் கிடைத்த அடுத்த முக்கியமான படம் திக்மான்ஷு துலியாவின் திரைப்படம் ஹாசில். அதில் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் என்பதற்கான ஃபிலிம்ஃபேர் விருது இர்ஃபானுக்கு கிடைத்தது. 2001இல் பிரிட்டிஷ் திரைப்படத் தயாரிப்பாளர் ஆசிப் கபாடியா இயக்கிய தி வாரியர் படத்தில் நடிக்க இர்ஃபானுக்கு ஒரு புதிய வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் இர்ஃபான் போராளி லாஃப்கார்டியா பாத்திரத்தில் நடித்தார். இந்தப் பட ஷூட்டிங் ராஜஸ்தானில் நடைபெற்றது. இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பு இர்ஃபான் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். நல்ல பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் இது அவருக்கு மிகவும் சலிப்பைத் தந்தது. பணம் சம்பாதிப்பது பற்றி இர்ஃபானுக்கு பெரும் அக்கறை இருக்கவில்லை. பெரும் சவாலாக விளங்கக்கூடிய சில பாத்திரங்களில் அவர் நடிக்க விரும்பினார். அவற்றில் நடிப்பதன் மூலம் தன் திறனைத் தானே கண்டறிய விரும்பினார். ஆனால், இந்திய திரைப்படத் துறையின் அடிப்படை ஆட்ட விதிகள் தனக்குப் பொருந்தவில்லை என விரைவிலேயே உணர்ந்தார்.

இந்தக்கோணத்திலிருந்து பார்த்தால் தி வாரியர் படத்தில் அவருடைய பாத்திரம் அவருக்கு பெரும் சவாலாக முன்வந்தது. சிறந்த பிரிட்டிஷ் படம் என அந்தப் படத்துக்கு அலெக்சாண்டர் கோர்டா விருது கிடைத்தது. அது அகாடமி விருதுக்கும்கூட முன்மொழியப்பட்டது. ஆனால் அந்நிய மொழிப் படமாக இருந்ததால் அதற்கு விருது கொடுக்கப்பட முடியவில்லை.

 

2003இல், விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் வெளியான மக்பூல் மூலம் இர்ஃபான் மீண்டும் பிரபலமானார். இந்தக் கதை மும்பை நிழலுலக தாதா ஜஹாங்கீர் பற்றியது. ஜஹாங்கீர் துணைவி நிம்மி ஜஹாங்கீர், தன் கணவரின் முக்கிய தளபதியான மக்பூல் மீது மையல் கொள்கிறாள். நிம்மியின் தூண்டுதல் பேரில் மக்பூல் ஜஹாங்கீரைக் கொல்கிறான். இந்தக்கதை ஷேக்ஸ்பியர் நாடகம் மேக்பெத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் படத்தில் இர்ஃபானின் கண்களும் உடல்வாகுமே பெரும்பாலும் பேசின. படத்தயாரிப்பாளர்கள் இர்ஃபானை எப்போதுமே ஒரு வில்லனாக, ஓர் எதிர்மறை கதாநாயகனாக சித்திரிக்க தலைப்பட்டனர். ஆனால் இர்ஃபான் கான், பின்னர் மீரா நாயர் இயக்கிய நேம்சேக் படத்தில் ஒரு தலைசிறந்த குணச்சித்திரப் பாத்திரத்தில் நடித்ததன் மூலம் இந்தப் போக்கிலிருந்து தப்பினார்.

பான் சிங் தோமரின் வாழ்க்கையைப் பற்றி ஒரு படமெடுக்கவேண்டுமென திக்மாங்ஷு துலியா முடிவு செய்தபோது மற்றொரு மகத்தான வாய்ப்பு இர்ஃபானுக்குக் கிடைத்தது. பான் சிங் தோமர் நிஜ வாழ்க்கையில் ஒரு ராணுவ வீரரும் தடகள வீரருமாவார். ஆனால், ஒரு துண்டு நிலம் குறித்த குடும்பத் தகராறு காரணமாக ஒரு கொள்ளையனாக மாறினார். இந்தப் படம் வாயிலாக திக்மாங்ஷு இர்ஃபானை தீவிர நடிப்பு பாதைக்குக் கொண்டுவந்து சேர்த்தார். தனக்கும் சரி இர்ஃபானுக்கும் சரி இந்தப் படம் மிகப்பெரும் சவாலாக அமைந்தது என திக்மாங்ஷு கூறுகிறார். இந்தத் திரைப்படத்துக்காக ஏராளமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பான் சிங் தோமரின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தனர். மில்கா சிங் உட்பட பல தடகள வீரர்களோடு உரையாடினர். சம்பல் பள்ளத்தாக்கில் கொள்ளையர்களோடு தங்கி உரையாடினர். திரைப்பட ஷூட்டிங் நடைபெற்ற போது கொள்ளையர்களின் வசிப்பிடமாக இருந்த அந்த வனாந்திரப்பகுதியின் வெம்மையையும் புழுதிப்படலத்தையும் அவர்கள் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது.

 

இர்ஃபானின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு திரும்பிய பின்னர் இந்தக் கட்டுரையாசிரியருடன் உரையாடும்போது திக்மாங்ஷு கூறினார்: “நானும் இர்ஃபானும் தினந்தோறும் சந்திப்போம். நாங்கள் சேர்ந்தே வாழ்ந்தோம். இன்று நான் என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை இழந்தது போல உணருகிறேன். இர்ஃபானின் சிறப்புத் தன்மை என்னவென்றால் அவர் ஏதோ ஒரு பாத்திரத்தில் நடிப்பது மட்டுமல்ல, ஒரு கதாபாத்திரத்தையே படைப்பார். அவர் திரைக்கதைக்கு மேலாக எழுவார். சொல்லப்போனால், ஒரு சாதாரணத் திரைக்கதைக்கும்கூட புத்துயிரூட்டுவார். இந்த ஆற்றலைப் பல நடிகர்களிடம் காண முடியாது.”

பான் சிங் தோமர் படத்துக்காக இர்ஃபானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் ஃபிலிம்ஃபேர் விமர்சகர்கள் விருதும் கிடைத்தன. வேறு சில படங்களும் சிறந்த நடிப்புக்காக இர்ஃபானுக்கு புகழ் சேர்த்தன. அவை ஏக் டாக்டர் கி மோத் (1990), தி லஞ்ச் பாக்ஸ் (2013), ஹைதர் (2014), குண்டே (2014), பிக்கு (2015), தல்வார் (2015) மற்றும் கரீப் கரீப் சிங்கிள் (2017) ஆகியன. 2017இல், இந்தியாவிலும் சீனத்திலும் மிகவும் பிரபலமடைந்த சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது உட்பட பல விருதுகளை இர்ஃபானுக்குத் தேடித்தந்த படம் இந்தி மீடியம். இர்ஃபான் இயல்பாக நடித்தது ஹாலிவுட் இயக்குநர்களின் கண்களிலும்பட்டது. அவர் நடித்த ஆங்கிலப் படங்களில் முக்கியமானவை ஸ்லம் டாக் மில்லியனர் (2008), அமேஜிங் ஸ்பைடர்மேன் (2012), லைப் ஆப் பை (2012), ஜுராசிக் வேர்ல்டு (2015), இன்ஃபெர்னோ (2016) மற்றும் பஸ்ஸில் (2018) ஆகியன. ஸ்டீவன் ஸ்பீல்பெர்கிடமிருந்து வந்த ஒரு வாய்ப்பு உட்பட இதர பல ஹாலிவுட் வாய்ப்புகளை அவர் நிராகரித்தார். காரணம், வேறு சில படங்களுக்கு அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்தது அல்லது அவருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரம் அவருக்குப் பிடிக்காமல் போனது.

பாரத் ஏக் கோஜ், சாணக்யா, சந்திரகாந்தா, பநேகி அப்னி பாத், கெஹகஷான், ஸ்பர்ஷ் மற்றும் தார் ஆகிய பிரபல தொலைகாட்சி தொடர்களிலும்கூட இர்ஃபான் நடித்திருந்தார். தூர்தர்ஷன் டெலிநாடகமான லால் கஹாஸ் பர் நீலே கோடே நாடகத்தில் அவர் லெனின் பாத்திரத்தில் நடித்தார். ஆனால் வாழ்க்கைத் தேவைக்காக தனக்குப் பிடிக்காத பல பாத்திரங்களிலும்கூட நடித்ததாக அவர் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

 

spacer.png

2018 மார்ச் மாதம் நியூரோ எண்டோகிரைன் டியூமர் என்ற அரியதோர் நோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது அவருக்குப் பேரிடியாக வந்தது. “நான் ஒரு வேகமான ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தேன். எனக்கு கனவுகள் இருந்தன. திட்டங்கள் இருந்தன. அபிலாஷைகள் இருந்தன. லட்சியங்கள் இருந்தன. நான் அவற்றில் முழுவதுமாக மூழ்கியிருந்தேன். அப்போது எவரோ என் தோளில் தட்டினார். நான் திரும்பிப் பார்த்தேன். அது டிடிஆர். ‘நீங்கள் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது. தயவுசெய்து இறங்குங்கள்’ என்று அவர் கூறினார். நான் குழம்பிப்போனேன். இல்லை, இல்லை, நான் இறங்கவேண்டிய இடம் வரவில்லை. இல்லை, இதுதான் அது. சில நேரங்களில் இப்படித்தான் நிகழ்கிறது.”

இர்ஃபான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்றார். 2019இல் நன்கு குணமடைந்து இந்தியா திரும்பினார். இந்தி மீடியம் திரைப்படத்தின் தொடர்ச்சியான இங்கிலீஷ் மீடியம் படத்தில் நடித்தார். இந்தப் படம் மார்ச் 23 அன்று வெளியானது. ஆனால் முதல் நாளுக்குப் பிறகு முழு அடைப்பால் காட்சிகள் நடைபெறவில்லை.

 

இர்ஃபானின் துணைவியாரும் பிரபல திரைக்கதை ஆசிரியருமான சுதப்பா சிக்தர் இர்ஃபானின் தொழில் வாழ்க்கையில் பெரும் பங்காற்றினார் என இர்ஃபானின் நண்பர் சுதர்ஷன் நினைவுகூர்கிறார். அவர் இர்ஃபானின் விவகாரங்களை நிர்வகிப்பார். மிகவும் கடினமான நிலைமைகளில் பொறுமை காப்பார். இர்ஃபானின் இறுதிப்போராட்டத்தின்போது சுதப்பா இர்ஃபானின் அருகிலேயே இருந்தார். அவரைவிட்டு ஒருகணமும் பிரியவில்லை.

இர்ஃபான் பஞ்சாபின் புரட்சிகரக் கவிஞர் பாஷ் அவர்களைப்பற்றி ஒரு படமெடுக்க திட்டமிட்டிருந்தார். இதர பல திட்டங்களும் அவர் மனத்தில் இருந்தன. அவரது சொந்த வாழ்க்கையில்கூட இர்ஃபான் மிகவும் மாறுபட்ட மனிதராகத் திகழ்ந்தார். அவரது வண்டி ஓட்டுநரை மணப்பேன் என்று அவர் மைத்துனி முடிவு செய்தபோது இர்ஃபானே திருமணத்துக்கு ஏற்பாடு செய்து நாஷிக்கிலிருந்த அவரது பண்ணைவீட்டை அவர்களுக்கு அன்பளிப்பாக அளித்தார். அவர் அனைவரின்பாலும் கவனம் செலுத்தினார். குறிப்பாக வாழ்க்கையில் போராடிக்கொண்டிருக்கும் மக்களின்பால் அக்கறை செலுத்தினார். இர்ஃபான் தலைசிறந்த நடிகர் மட்டுமல்லர்; எதிர்காலத் தயாரிப்பாளர் மட்டுமல்லர்; அவர் ஒரு குழந்தையைப்போல துறுதுறுப்பான உணர்வுடன் இருந்தார், எப்போதுமே உயிரோட்டமாகவும் சமுதாயத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி கவனத்துடனும் இருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் மிகவும் நேர்மையான ஒரு மனிதராக இருந்தார்.

இர்ஃபான் கானின் நினைவுக்கு அஞ்சலி!

[இந்த அஞ்சலி இந்தி நியூஸ் கிளிக் இணையதளத்தில் வெளியானது. தமிழில் பா.சிவராமன்]

 

https://minnambalam.com/public/2020/05/03/9/irfhan-an-unforgettable-actor-in-the-hearts-of-millions

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.