Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளாலிக் கடலோடு கரைந்த கடற்கரும்புலிகள் வரதன், மதன்

 

 

Black-Sea-Tigers-Mejor-Varathan-Captain-Mathan.jpg

 

கிளாலிக் கடலோடு கரைந்த கடற்கரும்புலிகள் மேஜர் வரதன் / நிலவன், கப்டன் மதன்.

‘மகனைப் பார்த்து எவ்வளவு காலமாகிவிட்டது! இப்ப எப்படி இருப்பானோ?’

அம்மாவுக்கு ஏக்கம். மூன்றாண்டுகளுக்கு முன்பு திரும்பவும் சிங்களவர்கள் தாக்கத்துவங்கிய போது “புலிக்கு……” என்று புறப்பட்டுப் போனவன்தான். அதன் பிறகு அவர்கள் ஒருநாள்கூட காணவில்லை.

இடையில் ஒரு நாள் சண்டை ஒன்றில் மைன்ஸ் வெடித்து பிள்ளைக்கு கால் போய் விட்டதாம் என்ற துயரச் செய்தி அம்மாவுக்கு எட்டியது.

அம்மாவின் கண்களில் அருவி. வேதனையால் துடித்துக்கொண்டிருப்பானோ……? “அம்மா……!” என்று அழுவானோ……? அவள் மகனையே நினைத்துக்கொண்டிருப்பான். கொஞ்ச நாட்களாக அம்மாவின் இரவுகள் தூக்கமற்று நீண்டு கழிந்தன.

காலம் அசைந்தது “பிள்ளை இப்ப யாழ்ப்பாணத்திலையாம்…… கடற்புலியாக கிளாலியில நிக்கிறானாம்…… சிங்கள நேவியிட்ட இருந்து சனங்களைக் காப்பாத்துகிற வேலையாம்……” அவர்கள் அறிந்தார்கள்.

‘எவ்வளவு காலமாகிவிட்டது……? எப்படி இருக்கிறானோ……? மகனைப் பார்க்க அம்மா ஆசைப்பட்டாள். பாசமும், ஆவலும் அவளை அவசரப்படுத்தியது.

சோதனைச் சாவடிகள், இராணுவக் கெடுபிடிகள் கொச்சைத்தமிழில் துளைத்தெடுக்கும் கேள்விகள். கிரானில் துவங்கி தாண்டிக் குளத்தில் முடிந்த துயரப் பயணத்தின் இறுதியில், அம்மா யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தாள்.

மட்டக்களப்பு தொடர்பகத்தில் பெயரைப் பதிந்து, பிள்ளைகளுக்குத் தகவல் அனுப்பிவிட்டு ஆவலோடு காத்திருந்தாள். தங்கியிருந்த வீட்டின் வாசலையே பார்த்துக்கொண்டிருக்க ஒரு நாள் கடந்து போனது; ஆனால் மகன் வரவில்லை.

“கிளாலியில நேவிக்கு கரும்புலித் தாக்குதல் நடந்ததாம்…… கனக்க நேவியும் முடிஞ்சுதாம்……” என்று ஒருசெய்தி மட்டும் வந்தது.

எல்லோருக்கும் சோகம் கலந்த மகிழ்ச்சி. அம்மாவுக்கும்தான். மாலையானதும் பரபரப்பாகப் பேசப்பட்ட அந்தச் செய்தியைத் தாங்கி, ‘ஈழநாதம்’ விசேட பதிப்பு அம்மாவின் கைகளிற்கு வந்த போது…… அந்தப் படங்கள்……! அந்தப்படம்……! அம்மா உற்று உற்றுப் பார்த்தாள்…… கண்கள் இருண்டன……! உடல் விறைத்துப் போனது. நம்பவே முடியவில்லை. அம்மாவின் பிள்ளை…… வரதன்……? அவன் தானா என்று பெயரை மீண்டும் மீண்டும் பார்த்தாள். ஆம்! அது அம்மாவின் பிள்ளையேதான். அள்ளி அணைத்து முத்தமிட ஆசையோடு ஓடோடி வந்தாளே…… அதே பிள்ளைதான்.

Black-Sea-Tiger-Mejor-Varathan.jpg

கறியில்லாமல், காசுமில்லாமல் அடுப்பெரியாத நாட்களில் “சோறு காய்ச்சணை கறியோட வாறன்” என்று துவக்கெடுத்துக் கொண்டு காட்டுக்குப் போவானே…… அதே மகன்!

வீதியில் சிங்களப் படை மறித்து, கிறனைட்டைக் கையில் கொடுத்து “வாயுக்குள்ள போடடா……” என்றபோது, “விருப்பமென்டா உன்ர வாயுக்குள்ள போடு……” என்று துணிவோடு திருப்பிக் கொடுத்துவிட்டு வந்தானே…… அந்த மகன்!

சோகத்தோடு அணைத்து நிற்கும் தலைவனுக்கருகில், பூரிப்போடு சிரித்து நின்றான் அந்தக் கரும்புலி.

தாங்கமுடியாத பெரும் சுமையாய் துயரம் நெஞ்சை அழுத்த அம்மா அழுதாள். கவலையைத் தீர்க்க கண்ணீர் தீரும் வரை அழுதாள்.

கந்தசாமி ஐயாவுக்கும் அம்மாவுக்கும் பிறந்த ஒன்பது குழந்தைகளுக்குள் நான்காவது வரதன். இராமச்சந்திரன் என்பது இயற்பெயர்.

1973ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஒவ்வொரு வருடமும் தமிழ்ப் புத்தாண்டிற்கு இரண்டு நாள் முன்னதாக வரதனின் பிறந்த நாள் வந்து போகும்.

கல்வியிலும், விளையாட்டுத்துறையிலும் ஆர்வம் மிகுந்தவனாக துடிப்புடன் பள்ளிக்குப் போனவனை, அப்பாவோடு வயலுக்குப் போக வைத்தது குடும்பநிலை.

குடும்பச் சுமை பகிர்ந்து உழைத்து, 16 வயதுவரை வீட்டோடு இருந்தவனை இயக்கத்துக்குப் போக வைத்தது நாட்டுநிலை.

மன்னம்பிட்டிக்குக் கிழக்கே 15 மைல் தூரத்திலுள்ள கள்ளிச்சை வடமுனைதான் ஊர். ஆக்கிரமிப்பின் கொடிய வலியை அனுபவிக்கும் எங்கள் தாயகத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்று.

மட்டக்களப்பில் பயிற்சியை முடித்தவனுக்கு அங்கு கண்ணிவெடிப் பிரிவில் பணி.

சிங்களப் படையுடன் மீண்டும் போர் துவங்கி வெடியோசைகளால் நிறைந்து, நகர்ந்துகொண்டிருந்த நாட்களுள் ஒன்று. கள்ளிச்சை வடமுனைக்கும் – பெண்டுகல் சேனைக்கும் இடையில் எதிரி விதைத்துவிட்டுப் போயிருந்த மிதிவெடிகளில் ஒன்று, விநியோக வேலைகளில் ஈடுபட்டிருந்த வரதனின் வலது காலை பிய்த்தது.

காட்டு முட்கள் கீறிக் கிழிக்க நரக வேதனைக்கு நடுவில் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டான் வரதன். சிகிச்சை முடிய புகைப்படப்பிரிவில் பணி.

கிளாலியிலிருந்த கடற்புலிகளின் தளம்; எங்கள் அன்புக்கினிய மக்களை, இரத்தப்பசி கொண்டலையும் இனவாதப் பேய்களிடமிருந்து காத்து நிற்கும் உன்னத பணியில் அவர்கள்.

இரவில் விழித்திருந்து அலைமடியில் காவல். பகலை இரவாக்கித் தூங்க முயலும் வாழ்வு.

முகாமில் எப்பொழுதும் கலகலப்பை நிறைத்திருப்பவன் மதன்தான். துடிதுடிப்பான சுபாவம் அவனுடையது.

வரதனும், மதனும் உற்ற நண்பார்கள். புகைப்படப் பிரிவில் ஒன்றாக வேலைசெய்தபோது மெல்ல அரும்பிய உறவுதான் இன்று உயிருக்குயிரான சிநேகிதமாக இறுக்கம் பெற்றிருந்தது.

ஒன்றாகத் தலைவருக்குக் கடிதம் எழுதி, ஒன்றாகக் கடற்புலிகளுக்கு வந்து, ஒன்றரைக் கால்களோடு நீந்திப் பழகி, பயிற்சி பெற்று, படகேறிக் கடலில் களமாடி, ஒன்றாகக் கிளாலியிலும் பணி செய்தவர்கள் ஒன்றாகக் கரும்புலிக்கும் பெயர் கொடுத்து, இறுதியிலும் ஒன்றாகவே போனார்கள்.

Black-Sea-Tige-Captain-Mathan.jpg

மதன் துடிதுடிப்பானவன். ஒற்றைக் காலில் நின்று கூத்தாடி…… ஊன்று தடியோடு துள்ளியோடி…… கும்மாளமடித்தபடி திரிந்து…… அவன் ஓய்ந்ததேயில்லை.

திருமலைக் காட்டில் மிதிவெடி ஒன்று கழட்டிவிட்ட இடது காலக்குப் பதிலாக மதனுக்கு ஜெய்ப்பூர் கால் கொளுவப்பட்டிருந்தது. பொய்க்காலை கழற்றிவிட்டு, ஒன்றரைக் காலில் மரத்திலேறி மாங்காயும் இளநீரும் பிடுங்கித் தந்து, எங்களோடு சேர்ந்திருந்து சாப்பிட்ட உயர்ந்த நண்பன் அவன்.

இரவெல்லாம் படகோடி கடலில் சமராடிவிட்டு, பகலில் ஓய்வெடுத்துத் தூங்க முயலும் தோழர்களை ஊன்று தடியால் தட்டிக் குழப்பித் தொந்தரவு செய்துவிட்டு துள்ளிஓடி அவர்களுடைய அன்பான சினப்பிற்கு ஆளாகின்றவன் அந்தக் குழப்படிக்காரன். அவன் கூட தானும் இரவு சண்டைக்குப் போயிருப்பான்; ஆனால் பகலிலும் ஓடித்திரிவான்.

சண்டைக்குத் தயாரான ஓடுபாடுகள் இல்லாத ஒய்வான ஒரு மாலைப்பொழுதில் மதன் ஒரு தென்னைமர அடியில் சாய்ந்திருப்பான். கடற்காற்றோடு கலந்து ஒரு பாடல் விரியும். தன்னுடையது பாடுவதற்கு ஏற்ற ஒரு குரல் இல்லையென்பது தெரிந்திருந்தும் அவன் பாடுவான். அதில் ஒரு கவர்ச்சியிருக்கும்; அருகிலிருப்பவர்களை ஈர்க்கும்.

எப்போதும், எதிலும் கவனமில்லாத ஒருவனைப்போல் பகிடி சொல்லித் திரிகின்ற மதன், தனது திறமையை வேலைகளின் போது செயலில் காட்டுவான். எங்களால் செய்யமுடியாமல் போகிற சில சில வேலைகளை, ஒரு காலை இழந்தவனாயிருந்தும் அவன் செய்து முடிப்பான். பெரும்பாலும் தவறுகள் செய்யாமலே இருக்கின்ற மதன்இ சக தோழர்கள் தவறு செய்யும் போது சொல்லித் திருத்துகின்ற போராளி.

மதனுக்கிருந்த இயல்பான குழப்படித்தனத்தால், வரதனோடு துவங்கிய ஒரு பகிடிச்சண்டை கடைசியல் சீரியசாக முடிந்தது. அந்த உயிர் நண்பர்கள் கதைக்காமல் பிரிந்து போய்விட்டார்கள். அடுத்த 24 மணிநேரம் வெறுப்பூட்டுவதாகக் கழிந்தது. வரதன் குளிக்கப்போனான். எப்போதும் இருவரும் சேர்ந்தே போவார்கள்; இப்போது வரதன் தனியே. முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு மதன் ஒரு மரக்குற்றியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான். “போ” என்று நட்புத் தூண்டவும் தன்மானம் தடுத்தது. ஆனாலும், அன்பே வெறுத்தது. ஊன்றுதடியுடன் துள்ளிக்கொண்டு முந்தி ஒடிப்போய் வாளியை எடுத்து, வரதனுக்குக் குளிக்கவார்க்கத் தொடங்கினான் அவன். சேரனிடம் இதைச் சொல்லும் போது வரதனின் கண்கள் பனித்திருந்தன.

வரதன் அமைதியானவன் அதிகம் பேசத் தெரியாதவன். கதைகளை விட செயல்களிலேயே அதிக ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டவன். “கதைக்கும் போதெல்லாம் இயக்கத்துக்குப் பயன்படக்கூடியதாய் ஏதுங்கதையுங்கடா” என்று எங்களுக்குப் புத்தி சொல்பவன். அது வெளியில் தெரியாமல் தனக்குள்ளேயே குமுறிக் கொண்டிருந்த ஓர் எரிமலை.

அம்மா அப்பாவைப் பிரிந்து, உறவுகளைப் பிரிந்து நீண்ட காலம் எங்கு இருக்கின்றார்களோ……? ஆமிப் பிரச்சினைகளால் ஓடுப்பட்டுத் திரிகின்றார்களோ……? வீட்டுக்கு ஒரு கடிதம் எழுதிப் பார்ப்பம் என்ற ஆவல் வரதனுக்கு எழுந்தது. வரதன் கடிதம் எழுதினான்; பதிலுக்காகக் காத்திருந்தான். அடுத்த தரம் எழுதினான்; காத்திருந்தான். பதிலில்லை மூன்றாம் தரம் பதிலில்லை. நான்காவது கடிதமும் போனது; பதில் வரவே இல்லை.

இடம்பெயர்ந்து வந்து கிளாலியில் இறங்கிய உறவினர்கள் சிலரை எதிர்பாராமல் வரதன் சந்திக்க நேர்ந்தது. “ஒரு இரவு ஊருக்குள்ள ஆமி புகுந்து வெட்டியும், சுட்டும் நூற்றுக் கணக்கில சனங்களைக் கொண்டவங்கள்…… தம்பி…… தப்பி ஓடிவந்த எங்களுக்குள்ள உன்ரை வீட்டுக்காரர் வரேல்லை…… என்ன நடந்ததோ……? கடவுளுக்குத்தான் தெரியும்!” வானத்தைப் பார்த்து கைகளை விரித்துச் சொல்லிவிட்டு, ஒரு பெரு மூச்சோடு அவர்கள் போய்விட்டார்கள்.

காதுகளில் இடியென இறங்கிய செய்தியால் அவன் துடித்துப் போனான். ஏற்கனவே அவனுக்குள் வீசிக்கொண்டிருந்த புயல் ஆவேசம் கொண்டெழுந்தது. ஆனாலும், அது ஒரு வதந்தி மட்டுமே என்பது, கடைசிவரை அவனுக்குத் தெரியாமலே போய்விட்டது.

கிளாலியின் விரிந்த கடல். தமிழர்களின் இரத்தமே அலைகளாய் அசையும் 20மைல் நீளச் செந்நீர்ப்பரப்பு.

இரத்தப்பசிகொண்டு அலையும் சிங்களப்படை. உயிர் விழுங்கும் துப்பாக்கி வாய்களோடு காத்து நிற்கும் மரணவலையம், அந்த மரண வலையத்திலும் – கடலரண்களாய் கடற்புலிகள் காவல் நிற்க, எங்கள் மக்கள் துணிவுடன் பயணிக்கும் குடாநாட்டுக்கான தனியொரு பாதை.

நாகதேவன்துறையில் பொருத்தப்பட்டிருக்கும் சக்திவாய்ந்த ராடர்களின் திரைகளில் புள்ளிகளாய் அசையும் எங்கள் படகுகளை, துல்லியமாக இனங்கண்டு தாக்கி மூழ்கடிக்க விரைந்து வரும் எதிரிப்படகுகளை, உள்ளங்கையைக்கூட பார்க்க முடியாத கும்மிருட்டிலும்கூட, கண்களை மட்டுமே நம்பி எதிர்கொண்டு விரட்டியடிக்கும் சாதனைக் களம்.

எதிரி தடை செய்த வலையத்தை எதிரிக்குத் தடை செய்து வீர சாதனை படைக்கும் கடற்புலிகளின் போர்த்திறனையும், அதனைப் பிரமாண்டமான ஒரு வளர்ச்சி நிலையை நோக்கி உயர்த்திச் செல்லும் தலைவர் பிரபாகரனின் முயற்சியையும், ஆற்றலையும் உலக அரங்கில் பறைசாற்றிக் கொண்டிருந்த போர்முனை.

கிளாலிக் கடலில் மக்கள் போக்குவரத்துச் செய்யத்துவங்கிய நாளிலிருந்து அங்கு காவல் பணியாற்றிக்கொண்டிருக்கும் கடற்புலிகளின் அணி, வரதனையும் மதனையும் கொண்டிருந்தது.

அந்தக் கடற்களத்தில் புலிகள் எதிரியைச் சந்தித்த ஒவ்வொரு சண்டையிலும், இவர்களின் கைகளிலிருந்து துப்பாக்கிகள் கனன்றிருக்கின்றன.

விடிகாலைகளில், பயணம்போன எம்மக்கள் செத்த பிணங்களாய் கரையொதுங்கிய போதெல்லாம், அவர்களுக்குள் ஒரு நெருப்பு கொழுந்துவிட்டெரியும்.

அவர்கள், துணிகரமான சண்டைக்காரர்கள். அவர்களுடைய வண்டிகளில், எதிரியின் படகுகளை மூக்குக்கு நேரே எதிர்கொண்டு அவனைத் திகைப்பிலாழ்த்துவார்கள். கண்ணைக்கட்டி இருளில் விட்டது போன்ற இருட்டிலும் எதிரியின் படகுகளை இனங்கண்டு நல்ல வியூகங்களில் தளம்பலின்றி வண்டியைச் செலுத்தி அவனைத் தாக்கி திணறடிப்பார்கள். அந்த மயிர்க்கூச்செறியும் கணங்களில் எதிரி தலை தெறிக்க ஓட்டமெடுப்பான். அந்த நேரங்களில் அவர்கள் சொல்வார்கள் “இப்ப மட்டும் ஒரு சக்கை வண்டி இருக்குமெண்டால் இவங்களின்ர கதை இதிலையே முடியும்.”

அவர்கள் ஒரு கரும்புலித் தாக்குதலுக்காகக் காத்திருந்தார்கள். “எங்களின் மக்களைக் கொன்றொழித்தவர்களை இதே கடலில் வைத்துக் கொன்றொழிக்க வேண்டும்” என்ற வீர சபதம், அவர்களின் இதயங்களில் முழங்கிக்கொண்டிருந்தது. கரும்புலித்தாக்குதலை நடாத்தும் இரவை அவர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்திருந்தார்கள்.

“ஏன் கரும்புலியாகப் போகின்றீர்கள்?” என்பதற்கு, ஒரு தத்துவார்த்த விளக்கத்தை அளிக்கக்கூடிய அறிவை அவர்கள் பெற்றிருக்கவில்லையாயினும் அதன் தேவையை, அதன் முக்கியத்துவத்தை, அதன் பலத்தை, உளப்பூர்வமாகவும் தெளிவாகவும் உணர்ந்து கொண்டவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

வரதன் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பான். அருகில் போகிற நண்பனிடம் “தலைவர் சொன்னதையே நான் திரும்பத் திரும்ப நினைச்சுக்கொண்டிருக்கிறன். எனது சிந்தனையெல்லாம் அதிலையே இருக்கு. அந்த ஒரு நொடிப்பொழுதுக்காக நான் எவ்வளவு காலமும் காத்துக்கொண்டிருப்பன். என்றோ ஒரு நாள் கிளாலிக் கடலில ஒரு ‘வோட்டர் ஜெற்’ நொருங்கும்” என்பான்.

மதனும் அப்படித்தான். அவன் அடிக்கடி சொல்லுவான், “எங்கட எவ்வளவு சனங்களின்ரை ரத்தம் இந்தத் தண்ணியோட கலந்திது. இதுக்கெல்லாம் ஒரு நாளைக்குப் பாடம் படிப்பிச்சே ஆகோனும். அதை நான் சாதிச்சே தீருவன். அவனுகளையும் இந்தக் கடலிலேயே அழிக்கவேணும்.”

மதன் மட்டக்களப்பைச் சேர்ந்தவன். சீனிவாசன் சிவகுமார் என்பது அவனுடைய இயற்பெயர். 1975ஆம் ஆண்டு செப்ரெம்பர் திங்கள் 7ஆம் நாள், அந்த வீர மைந்தனை பெற்றாள் ஒரு வீரத்தாய். குடும்பத்தில் மூன்று அண்ணன்களுக்கும், ஒரு தங்கைக்கும் இடையில் அவன். மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் 9ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் போது 1989 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு நாள், பள்ளிக்கூடத்திற்கென்று புறப்பட்டுப் போனவன் திரும்பிவரவில்லை; “இயக்கத்துக்குத்தான் போயிருப்பான்……” என்ற வீட்டிலுள்ளவர்களின் ஊகிப்பும் பிழைத்துவிடவில்லை.

கிளாலியின் கடற்போர் முனை.

ஏறக்குறைய 60 நாட்கள் அலைகள் போல அசைந்து கடந்துவிட்டன.

அந்த உயரிய சாதனையை நிகழ்ந்த அவர்கள் கடலுக்குப் போய்ப்போய்த் திரும்பி வரவேண்டியிருந்தது. நாட்கள் செல்லச் செல்ல அவர்களுடைய உறுதி இறுகிக் கொண்டே போனதேயன்றி, இளகியதில்லை.

ஒவ்வொரு தடவையும் சண்டை துவங்கும். துப்பாக்கிக் குழாய்கள் சிவக்க எங்களது படகுகள் பகைவனை எதிர்கொள்ளும். ‘சக்கை’ வண்டி அவனை மின்னலென நெருங்கும். எதிரி ஓட்டமெடுப்பான். சக்கை வண்டி கலைக்க இடைவெளி குறுகும். எதிரியின் வேகம் கூடும். அதிகரித்த வேகத்தோடு சக்கை வண்டி அண்மிக்க, ஒரு அடி உயர நீரில் ஓடக்கூடிய தன் நவீன படகை எதிரி ஆழம் குறைந்த நீர்ப்பரப்பினூடு செலுத்துவான். சக்கைப் படகுகள் தரை தட்டும். தொடர்ந்தும் கலைக்க முடியாமல் கரும்புலிகள் திரும்ப வேண்டியிருக்கும்.

மறுநாள், முகாமின் ஒரு மூலையில் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு இருப்பார்கள். இரவு தங்களால் இடிக்க முடியாமல் போய்விட்டதே என்பதற்காக அவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். 61 நாட்களும் இப்படித்தான் நகர்ந்தன.

25.08.1993 அன்று வழமையான இரவு; நிலா உலா வராத இருண்ட வானம்; சிலிர்ப்பூட்டும் குளிர்; உடலுக்கு அசதியைத் தந்தாலும், உள்ளத்துக்கு உற்சாகமூட்டும் உவர்க்காற்று.

கடற்புலிகள் காவல் உலாவர மக்களின் பயணம் துவங்கிவிட்டது.

சக்கை நிரப்பிய ‘புலேந்திரன்’‘குமரப்பா’வில் மதனும் வரதனும் தயாராக நின்றார்கள்; கடந்துபோனவைகளைப் போல அல்லாமல் இந்த 62ஆவது நாளின் இரவில், அவர்களின் முகங்களில் நம்பிக்கையின் தெறிப்பு; இனம்புரியாத பூரிப்பு.

அருகில் நின்ற கண்ணாளனிடம் குப்பியைக் கழற்றிக் கொடுத்துவிட்டு மதன் சொன்னான்; “இண்டைக்கு இடிச்சே தீருவன் திரும்பி வரமாட்டன்”

நேரம் நடு இரவைத் தாண்டியிருந்தது. நாகதேவன்துறைத் தளத்திலிருந்து அலைகளைக் கிழித்துக் கொண்டு முன்னேறினான் எதிரி. இன்று அவனது தாக்குதல் வடிவம் வித்தியாசமானதாக இருந்தது.

ஓவ்வொரு தடவையும் மாறுபட்டதாக இருக்கின்ற போதிலும் இன்று அவன் அமைத்து வந்த வியூகம் புதுவிதமானது. இரண்டு அணிகள். ஓன்று ஒருபுறத்தில் புலிகளைத் தடுக்க, மற்றையது மறுபுறத்தில் மக்களைத் தாக்கும்.

ஆனால், பகைவன் சற்றும் எதிர்பாராதவிதமாக அவனை இரு முனைகளிலும் எதிர்கொண்டனர் கடற்புலிகள். துப்பாக்கி முனைகள் தீ உமிழ, வானம் விழாக்கோலமானது.

சண்டை உக்கிரமடைந்து கொண்டிருந்த ஒரு கட்டத்தில், காத்திருந்த ‘புலேந்திரன்’ படகை ‘வோக்கி’ அழைத்தது. மதன் ஆவலோடு பதில் கொடுத்து, கட்டளைக்குக் காது கொடுத்தான்.

மக்களைத் தாக்க வந்த எதிரி, புலிகளிடம் சிக்கிப்போயுள்ள முதலாவது சண்டை முனையில் ஏற்கெனவே விளங்கப்படுத்தப்பட்டிருந்த தாக்குதல் திட்டத்தின்படி ‘வோட்டர் ஜெற்’ படகொன்றைத் தாக்குமாறு வோக்கி கூறியது.

சுற்றியிருந்த தோழர்கள் கண்கலங்க, சிரித்த முகத்தோடு மதன் புறப்பட்டான். மின்னல் கீற்றென நெருங்கிய கரும்புலிப் படகைக் கண்டு எதிரி தப்பி ஓட முயல, அதற்கு அவகாசமில்லாமல் மதன் அதன் மையப்பகுதியோடு மோதினான். பிரகாசித்தெழுந்த ஒளி வெள்ளம் மறைந்து, இருளோடு இருளாகக் கரும்புகை கரைந்து கொண்டிருக்கும்போது, இரண்டாகப் பிளந்து மூழ்கிக்கொண்டிருந்த ‘P 115’ இலக்க வோட்டர் ஜெற்றிலிருந்து புலிகள் ஆயுதங்களை எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

தான் நேசித்த கடலோடும்…… காற்றோடும்…… எங்கள் மதனும்…… அவனது ‘புலேந்திர’னும்……

அந்தக் கடற்களம் நீண்டுகொண்டிருந்தது. கடற்புலிகள் கடலில் சந்தித்த முதலாவது பெருஞ்சமர் அதுவாகத்தான் இருக்க முடியும்.

புலிகளைத் தாக்க வந்த அணியை புலிகள் தாக்கிக்கொண்டிருந்த இரண்டாவது சண்டை முனையிலிருந்து, ‘குமரப்பா’ படகிற்கு அழைப்பு வந்தது. காத்துக்கொண்டிருந்த வரதன், களத்திற்கு விரைந்தான்.

புலிகளின் சண்டைப் படகுகளால் வளைக்கப்பட்ட நிலையில், தப்ப வழியின்றித் தளத்துக்கு தகவல் அனுப்பிவிட்டு உதவிவரும் வரை சண்டையிடத் தீர்மானித்துவிட்ட ஒரு ‘வோட்டா ஜெற்’ படகு வரதனின் இலக்கு. ‘வோக்கி’ அவனுக்குத் தாக்குதல் வழிமுறையை வழங்கியது. உதவி கிடைக்குமுன் அதனை உடைக்க வேண்டும்.

இருள் ஆளை ஆள் பார்க்க முடியாத இருள்; வளைத்து நிற்கும் புலிகளின் படகுகளை அவதானித்து விலத்தி ஓடி, ‘வோட்டர் ஜெற்’றை சரியாக இனம்கண்டு அது அவனுடையதுதான் என்பதை உறுதிப்படுத்தி இடிக்க வேண்டும். தவறுதலாக எங்களுக்குள் முட்டுப்பட்டாலோ விளைவு விபரீதமானதாக மாறிவிடும்.

சரியான இலக்கை நோக்கி வரதன் நெருங்கினான் அதிகரித்த வேகத்தோடு. திகைத்த எதிரி எதுவுமே செய்ய முடியாமல் மலைத்துப்போய் நிற்க, அடுத்த கணப்பொழுதில்……! அந்தக் கண்ணிமைக்கும் நேரத்திற்குள்……! எதிரியின் படகு…… எங்கள் அன்பு வரதனும் ‘குமரப்பா’வும் தான்……

நாகதேவன்துறையிலிருந்த கடற்படைத் தளத்தில் தகவல் தொடர்பு சாதனம், ‘P 121’ என்ற தங்கள் போர்ப்படகை அழைத்துக்கொண்டிருக்க, மூழ்கிக்கொண்டிருந்த அந்தப் படகிலிருந்து கடற்புலி வீரர்கள் ஆயுதங்களை எடுத்து முடித்து விட்டார்கள்.

ஒரே பாயில் படுத்து, ஒரே கோப்பையில் சாப்பிட்டு, ஆளுக்காள் தண்ணி ஊற்றி, ஊத்தை தேய்த்து ஒன்றாகவே குளித்து, ஒரே இலட்சியத்தோடு வாழ்ந்த அந்த உயிர் நண்பர்கள் கிளாலிக் கடலில் நடந்த ஒவ்வொரு சண்டையின் போதும், ஒன்றாகவே நின்று, சிங்களப் பிணந்தின்னிகளை நெருப்பெனச் சுட்டெரித்தவர்கள்; சாகும்போதுகூட ஒன்றாகவே போனார்கள். எங்களுக்காக…… மக்களுக்காக……!

நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (புரட்டாதி – ஐப்பசி, 1993).

https://thesakkatru.com/black-sea-tigers-mejor-varathan-captain-mathan/

 

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 வீரவணக்கங்கள். .

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம். 

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

spacer.png

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்.......!

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு  என் வீர வணக்கம் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.