Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் கடந்த 2017-ல் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்துக்கொன்ற வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தூக்கு தண்டனைக்குள்ளான தஷ்வந்த்தை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

Published:Today at 8 AMUpdated:Today at 8 AM

தஷ்வந்த்

தஷ்வந்த்

Join Our Channel

31Comments

Share

சென்னையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு போரூர் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற வழக்கில் நீதிமன்றத்தில் மரண தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குள்ளான குற்றவாளி தஷ்வந்த்தை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்திருக்கிறது.

தமிழகத்தை உலுக்கிய கொடூரம்!

இந்த வழக்கின் பின்னணியைப் பொறுத்தவரையில், 2017 பிப்ரவரி 5-ம் தேதி, போரூர் அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த், அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றார்.

சம்பவம் நடந்த இரண்டே நாளில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட தஷ்வந்த், அடுத்த மாதமே ஜாமீனில் வெளிவந்தார்.

தஷ்வந்த்

தஷ்வந்த்

தாயைக் கொன்ற தஷ்வந்த்!

அதையடுத்து, பெற்றோருடன் வசித்து வந்த தஷ்வந்த் டிசம்பரில் செலவுக்குப் பணம் தரவில்லை என தாயை அடித்துக் கொன்றுவிட்டு மும்பைக்கு தப்பியோடினார்.

பின்னர், மும்பைக்கு விரைந்த தமிழக தனிப்படை போலீஸார் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தஷ்வந்த்தை கைதுசெய்து சென்னை கொண்டுவந்தனர்.

தனது வாக்குமூலத்தில் தாயைக் கொலைசெய்ததை தஷ்வந்த் ஒப்புக்கொண்டார் எனக் கூறப்பட்டது.

தூக்கு தண்டனை + 46 ஆண்டுகள் சிறை!

மறுபக்கம், சிறுமி வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் தஷ்வந்த்தை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து தூக்கு தண்டனையும், 46 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தஷ்வந்த் மேல்முறையீடு செய்தார். சென்னை உயர் நீதிமன்றமோ செங்கல்பட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

அடுத்தபடியாக தஷ்வந்த் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார்.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

நிறுத்தி வைக்கப்பட்ட தூக்கு தண்டனையும், பிறழ் சாட்சியான தந்தையும்!

தூக்கு தண்டனை என்பதால் விசாரணைக்கு எடுத்துக்கொண்டதாகத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதில் உரிய விளக்கமளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டதுடன் தூக்கு தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. தஷ்வந்த்தும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, தஷ்வந்த் தனது தாயைக் கொலை செய்த வழக்கில் முக்கியமான சாட்சியான அவரின் தந்தை பிறழ் சாட்சியாக மாறினார்.

இதனால், செங்கல்பட்டு நீதிமன்றம் இந்தாண்டு ஏப்ரலில் போதிய ஆதாரங்கள் இல்லை என தஷ்வந்த்தை இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்தது.

ஆதாரமில்லை... DNA ஒத்துப்போகவில்லை... விடுதலை!

இந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கெதிரான தஷ்வந்த்தின் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று, அவர் மீதான தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறது.

நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், "தஷ்வந்த் வழக்கில் முறையான ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை.

சமர்ப்பிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் இருப்பது தஷ்வந்த் என உறுதிப்படுத்தப்படவில்லை. டி.என்.ஏ சோதனை முடிவுகளும் ஒத்துபோகவில்லை.

எனவே, கீழமை நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை தீர்ப்பை ரத்து செய்கிறோம். மேலும், இவ்வழக்கிலிருந்து தஷ்வந்த்தை விடுவிக்க வேண்டும்" என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு காவல்துறை

தமிழ்நாடு காவல்துறை

விடையின்றி நிற்கும் கேள்விகள்... காவல்துறை பதில் என்ன?

முதலில் தாயைக் கொலைசெய்த வழக்கில் தந்தை பிறழ் சாட்சியாக மாறியதால் ஆதாரங்கள் இல்லையென 5 மாதங்களுக்கு முன்பு தஷ்வந்த் விடுதலையானார். எனில், அவரின் தாயைக் கொலைசெய்தது யார்?

இப்போது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் உறுதியான ஆதாரங்கள் இல்லை, டி.என்.ஏ சோதனை முடிவுகள் ஒத்துப்போகவில்லை என உச்ச நீதிமன்றமே தஷ்வந்த்தை விடுவித்திருக்கிறது.

அப்படியென்றால், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது யார்? பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றது யார்?

கீழமை நீதிமன்றத்தில் என்ன மாதிரியான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் காவல்துறையின் பதில் என்ன?

மகளை இழந்த பெற்றோருக்கு கிடைக்க வேண்டிய நீதிக்கு தமிழக காவல்துறை என்ன செய்யப்போகிறது? விடையின்றியே நிற்கிறது இந்த கேள்விகள்!

போதிய ஆதாரம் இல்லை; 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் தஷ்வந்த்தை விடுவித்த உச்ச நீதிமன்றம் | Supreme Court acquits Daswanth in rape and murder case of 6-year-old girl due to insufficient evidence - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய நீதி துறையின் இலட்சணம் - சந்தி சிரிக்கிறது.

இரெட்டை கொலை. ஒருவர் அருகில் உள்ள குழந்தை, மற்றது தாய். வழக்காடிய நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அப்படி என்ன கண்மூடித்தனமாகவா இருந்திருப்பார்கள்?

இவரை விடுதலை செய்த உச்ச நீதிமன்றம் மீள் விசாரணைக்கு கூட ஆணையிட்டதாக தெரியவில்லை.

பாலியல் வன்கொடுமை புகாரை விசாரிக்காமல் தடுத்து, குற்றம் சுமத்தபட்டவரும், சுமத்தியவரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆணையிட்ட “சாத்தப்பன் பஞ்சாயத்து” தானே இந்திய உச்ச நீதிமன்றம்.

கோமிய குடுக்கிகள் நீதிபதியானால், மைனர் குஞ்சுகளுக்கு கொண்டாட்டம்தான்.

அண்மையில் ஒரு சங்கி வக்கீல் தலைமை நீதிபதி மீது சப்பாத்தை வீசி தாக்கியுள்ளார்.

அந்தளவுக்கு சங்கிகளின் காலில் கிடக்கிறது இந்திய நீதித்துறை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நீதிமன்றம் அளித்த தண்டனையை, இன்னொரு நீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கி, அந்த நீதிமன்றத்தை கேலிக்குள்ளாக்குகிறது. எதற்கு இத்தனை நீதிமன்றங்கள்? குற்றவாளிகள் துணிந்து தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடுவார்கள். இந்த நீதிமன்றத்தில் இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்தில் விடுதலையாகிவிடலாமென்கிற துணிவு. இவர் நாளைக்கே பயமில்லாமல் இன்னும் எத்தனை பேரை சீரழித்து கொலை செய்யபோகிறாரோ? அப்படி நடந்தால்; அவரை விடுதலை செய்த நீதிபதியே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

மழைக்குள் நடக்கும் ஐ . பி . எல் மாட்ச் மாதிரி நீதியும் ஆங்காங்கே ஓவரை கூட்டி குறைச்சு கொண்டு போகிறது போல் இருக்கு . ......!

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய நீதித்துறையின் புண்ணியத்தால் இரண்டு பாலியல் சைக்கோக்கள் தப்பிவிட்டார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

தஷ்வந்த் விடுதலை குறித்து கொலையுண்ட சிறுமியின் தந்தை கூறியது என்ன?

தஷ்வந்த் விடுதலை: சிறுமியின் தந்தை கூறுவது என்ன?

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, தஷ்வந்த்

கட்டுரை தகவல்

  • நந்தினி வெள்ளைச்சாமி

  • பிபிசி தமிழ்

  • 10 அக்டோபர் 2025

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

"இந்த வழக்குக்காக, என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டி, நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் போராடினேன். இதற்காக எங்களின் மீத வாழ்க்கையையும் இழந்துவிட்டோம். இத்தனைக்குப் பிறகும் தஷ்வந்தை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்போது நாங்கள் என்ன செய்ய முடியும்? இன்னும் எத்தனை ஆண்டுகள் நாங்கள் போராடுவது?" என்கிறார் சென்னையில் 2017-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் தந்தை.

இந்த வழக்கில் பொறியியல் பட்டதாரி தஷ்வந்திற்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அக்டோபர் 8 அன்று உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சந்தேகத்துக்கு இடமில்லாமல் குற்றத்தை நிரூபிப்பதற்கு அரசுத் தரப்பு தவறிவிட்டதாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

'தஷ்வந்தை விடுவிப்பது சமூகத்தில் துயரத்தை ஏற்படுத்தும் என்றாலும் ஊகத்தின் அடிப்படையில் தண்டனை வழங்க முடியாது' எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இப்படியான சூழலில் தான் சிறுமியின் தந்தையிடம் பிபிசி தமிழ் பேசியது.

சிறுமியின் இறப்புக்குப் பிறகு தானும் தன் மனைவியும் பிரிந்துவிட்டதாக அவர் கூறினார்.

தஷ்வந்த் விடுதலை: சிறுமியின் தந்தை கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தஷ்வந்திற்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அக்டோபர் 8 அன்று உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சிறுமியின் தந்தை சொன்னது என்ன?

"பணத்தை செலவழித்தது பொருட்டல்ல, ஆனால் நாங்கள் எங்கள் வாழ்க்கையையே இதனால் இழந்தோம்." என்றார் சிறுமியின் தந்தை

"கீழமை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என இரண்டு நீதிமன்றங்களிலும் சட்ட ரீதியாக போராடினோம். இப்போது உச்ச நீதிமன்றம் இப்படியொரு தீர்ப்பை அளித்துள்ளது. இனி நான் போராடினாலும் நீதி கிடைக்காது. இனி என்ன செய்ய முடியும்?" என தெரிவித்தார்.

யாருடைய அனுதாபமும் தனக்கு தேவையில்லை எனக்கூறிய அவர், "இந்த வழக்கில் நீதி கிடைக்க செய்ய வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் இருந்தது. இன்று (அக்.,10) என் மகளின் பிறந்தநாள், ஆனால் அவளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது" என்றார்.

தன்னுடைய 14 வயது மகனும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் பள்ளிக்கு செல்வதில்லை என்றும் சிறுமியின் தந்தை கூறினார்.

"இங்கு பாதுகாப்பு இல்லை, அதனால் தமிழ்நாட்டை விட்டு வேறு இடத்திற்கு குடிபெயர உள்ளேன். என் மகன் மனைவியுடன் இருப்பதால், அவனிடமும் என்னால் பேச முடியவில்லை." என்றார்.

தஷ்வந்த் விடுதலை: சிறுமியின் தந்தை கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சந்தேகத்துக்கு இடமில்லாமல் குற்றத்தை நிரூபிப்பதற்கு அரசுத் தரப்பு தவறிவிட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

'உடனடியாக நீதியை பெற முடிவதில்லை'

கடந்த 2018-ஆம் ஆண்டில் என்னிடம் பேசியிருந்த சிறுமியின் தந்தை, "இங்கே, நீதியைப் பெற தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது. என் மகளின் வழக்கில் விசாரணை வேகமாக நடந்தும், காவல் துறையினர் தங்களால் இயன்ற ஒத்துழைப்பை வழங்கியும் நீதியை உடனடியாக பெற முடிவதில்லை.

பல வழக்குகளை காவல் நிலையத்தில் பதியவே முடிவதில்லையே. அத்தகைய வழக்குகள் நீதிமன்றத்திற்கு வருவதற்கே மிகப்பெரிய சட்ட போராட்டம் நடத்த வேண்டியுள்ளது." என கூறியிருந்தார்.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, இனி தன்னால் வழக்கில் எத்தகைய சட்ட ரீதியான போராட்டத்தைத் தொடர முடியும் என தெரியவில்லை என்றும் வழக்கறிஞர்களிடம் பேச வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இது குறித்து தமிழக அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக்,'' தமிழ்நாடு அரசுக்கு மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன'' என்றார்

வழக்கின் பின்னணி

2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதியன்று, தங்களின் 7 வயது மகளைக் காணவில்லை என காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.

'வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்குவதற்காக ஆறு மணியளவில் சிறுமியின் தாய் வெளியில் சென்றுள்ளார். சுமார் 7.15 மணியளவில் வீடு திரும்பியபோது மகளைக் காணவில்லை' என, சிறுமியின் தந்தை அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

தங்கள் வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களின் உதவியுடன் சிறுமியை தேடும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டனர். ஆனால், அதற்கான முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை.

இந்தநிலையில், சிறுமியின் நிலையைப் பற்றி அறியும் வகையில் சிசிடிவி காட்சி ஒன்று அவரின் தந்தைக்கு கிடைத்தது. அது வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலில் பொருத்தப்பட்டிருந்தது.

சிறுமியின் பெற்றோர் குடியிருக்கும் அபார்ட்மென்ட்டின் இரண்டாவது மாடியில் வசித்து வந்த தஷ்வந்த் என்ற 23 வயது இளைஞர் மீது சந்தேகப் பார்வை திரும்பியுள்ளது.

தஷ்வந்த் விடுதலை: சிறுமியின் தந்தை கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

2017, பிப்ரவரி 8-ஆம் தேதியன்று காலையில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். காவல்துறையில் அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், எரிந்த நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டதாக நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்தது.

சிறுமி கொலை வழக்கில் நீதிமன்றக் காவலில் தஷ்வந்த் வைக்கப்பட்டார். தொடர்ந்து, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் விசாரணையில் அரசுத் தரப்பில் 30 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. ஆனால், இதனை மறுத்து, 'குற்றம் செய்யவில்லை' என தஷ்வந்த் தெரிவித்துள்ளார்.

வழக்கின் ஆவணங்களை ஆராய்ந்து, 'தஷ்வந்த்தை ''குற்றவாளி'' என கீழமை நீதிமன்றம் அறிவித்தது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தஷ்வந்த் மேல்முறையீடு செய்தார்.

மனுவை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், 'இந்த வழக்கு அரிதிலும் அரிதானது' எனக் கூறி கீழமை நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்தது. இதை எதிர்த்து தஷ்வந்த் செய்த மேல்முறையீடு வழக்கில்தான் அவரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

''சம்பவ இடத்தில் பொருட்களை கைப்பற்றியவுடன் சாட்சிகள் முன்னிலையில் அவை சீல் வைக்கப்பட்டதாக சாட்சிகள் கூறவில்லை. மேலும் கைப்பற்றப்பட்ட தடயப் பொருட்கள் யார் பாதுகாப்பில் இருந்தது, யார் அந்த பொருட்களை தடய அறிவியல் அலுவலகத்திற்கு ஒப்படைத்தார்கள் என்று அவரை ஒரு சாட்சியாக இந்த வழக்கில் விசாரிக்கவில்லை. எனவே கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படும் தடய பொருட்கள் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது'' எனத் தீர்ப்பில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை கடைசியாக நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்த முருகன் குறித்துக் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், 'சிறுமியை தேடிய நபர்களில் ஒருவராக முருகன் இருந்த போதிலும் இந்த உண்மையை அவர் பெற்றோரிடம் கூறவில்லை. காவல்துறையிலும் தெரிவிக்கவில்லை' எனக் கூறியுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c89d4qnd7j1o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.