Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பருந்துகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் வணக்கம். இது எனது கன்னி முயற்சி. அதனால் முழுவதுமாக எழுதவில்லை. தயவு செய்து உங்கள் கருத்துக்களை முன்வைக்கவும்.

//////////////////////////////////////////

எங்கும் ஒரே களோபரம். எல்லோரும் சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தார்கள். நேரத்துடன் நித்திரை விட்டெழுந்து குளித்து நல்ல உடை உடுத்திக்கொண்டு வளாகம் நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்துகொண்டிருந்தார்கள். அன்று புது மாணவர்கள் வரும் நாள். அது தான் இத்தனை சுறுசுறுப்பு. பொதுவாகவே பொறியியல் மாணவிகளை 'காய்ந்ததுகள்' என்று தான் சொல்லுவார்கள். கணக்கிலே மட்டுமே கவனம் செலுத்துவதனாலோ என்னவோ. அத்தி பூத்தால் போல சிலர் மட்டும் விதி விலக்காக வருவதுண்டு. அப்படி தான் ஒருத்தியும் இந்த முறை வருவதால் தான் இத்தனை ஆர்ப்பாட்டம்.

சிரேஷ்ட மாணவர்களிடையே இரு பிரிவு. பகிடிவதை ஆதரவாளர்கள், எதிராளர்கள். இரு பகுதியினரும் தங்கள் பக்கத்திற்கு ஆள் பிடிக்கும் வேலையில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுகொண்டிருந்தனர். மிக முக்கியமாக 'அந்த அவளை' எப்படியும் தம் பக்கம் இழுத்து விட வேண்டும் என்பதில் மிக மிக கவனமாக இருந்தனர். ( அப்பத்தானே கடலை போட்டு காய் நகர்த்த முடியும்).

புது மாணவர்கள் வரத்தொடங்கிவிட்டார்கள். மொத்தம் 400 மாணவர்களில் 10% தான் தமிழ் மாணவர்கள். எனவே கூட்டத்தில் தமிழ் முக சாயல் உள்ளவர்களின் பக்கத்தில் போய் அவர்கள் தமிழ் தான் என்று உறுதி செய்து அவர்களை ஓரம் கட்டுவதில் இரு பகுதியினரும் மிக மும்முரமாக ஈடுபட்டுகொண்டிருந்தனர். இருப்பினும் பலருக்கு 'அந்த அவளை' கண்டுபிடிப்பது தான் முக்கியமாக இருந்தது.அந்தோ ஒருவன் கண்டுபிடித்துவிட்டான். 'மச்சான் அங்கை பாரடா. அவள் தான் நான் சொன்ன ஆள்' என்று கண்களால் காட்டி கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டான். (காட்டிகொடுப்பதில் தான் எவ்வளவு சந்தோசம் அவனுக்கு.) அவர்களில் ஒரு வீரன் (ஆம் பெண்களுடன் கதைப்பதையே வீரமாக எண்ணுபவர்களும் உண்டல்லவா. அப்படிப்பட்டவர்களில் ஒருவன்) அவளை அணுகி, 'எக்ஸ்கியுஸ் மீ, நீங்கள் தமிழா?' அவளும் ஆம் என்று தலையாட்டினாள். 'நாங்கள் எல்லா தமிழ் ஜுனியர்சையும் ஒரு இடத்தில வைத்து கதைக்க வேண்டும். நீங்களும் அந்த கிரௌண்ட்ஸ் பக்கமாக போங்கோ' என்று கூறியதோடு நின்று விடாமல் 'ஒன்றுக்கும் யோசியாதையும். நான் எல்லாத்தையும் பார்த்து கொள்ளுகிறேன்' என்று மெல்லிய குரலில் குழைந்தான். இல்லையில்லை வழிந்தான் என்று சொல்லுவதே பொருந்தும். அவளும் எதுக்கு வம்பு என்று அவர்கள் சொல்லிய இடம் நோக்கி நடந்தாள். வழியில் எதிர்ப் 'பார்டி' (அது தான் பகிடிவதை எதிர்பாளர்கள்) ஒருவன் குறுக்கிட்டு 'ஹல்லோ ஹொவ் ஆர் யு. நீர் அங்கை போக வேண்டாம். அவங்கள் ரொம்ப மோசமா நடந்துகுவாங்கள். இங்கை ராக்கிங் வாங்க வேண்டிய அவசியமில்ல. அதையும் மீறி ஏதாவது செய்தாங்கள் என்றால் எனக்கு சொல்லும். நான் அவங்களை ஒரு வழி பண்ணுறன்' என்று வீர வசனம் பேசி பல்லிளித்தான். 'ஓம் நான் அப்படியே செய்யிறன்' சொல்லிவிட்டு அங்கிருந்து கழன்று கொண்டாள். இவனுக்கோ பெரிய வெற்றி கிடைத்த சந்தோசம். அப்படியே திரும்பி தனது சிங்கள நண்பனிடம் 'You know.. those people are village people. They don't know how to behave..' என்று சொல்லிக்கொண்டே போனான். 90 இல் சண்டை மறுபடியும் தொடங்கியதும் கொழும்புக்கு ஓடி வந்து இன்னமும் 5 வருடமும் ஆகவில்லை அதற்குள் city boy ஆகிவிட்டவனின் பேச்சு தான் அது.

அங்கிருந்து நகர்ந்து சென்றவளை சக மாணவன் ஒருவன் எதிர் கொண்டு சமாளித்து பேசி மைதானம் நோக்கி கூட்டிச்சென்றான் சிரேஷ்ட மாணவர்களின் நாடித்துடிப்பு தெரிந்தவன். இப்போது மைதானத்தின் ஒரு மூலையில் அனைத்து புதிய தமிழ் மாணவர்களும் சிரேஷ்ட மாணவர்களால் சூழப்பட்டிருந்தார்கள். (வேட்டை நாய்களால் சூழப்பட்ட மான் கூட்டம் போல - நேற்றைய மான்கள் இன்றைய வேட்டை நாய்கள். இன்றைய மான்கள் நாளைய வேட்டை நாய்கள். இது தானே காலம் காலமாக நடப்பது). இப்போது சுற்றி நிற்பவர்கள் எல்லோரும் வீரர்கள். சூழப்பட்டவர்கள் கோழைகளாக்கப்பட்டவர்கள் - ராக்கிங் என்ற பெயரால். தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளும் அங்கு சரளமாக பாவிக்கப்பட்டது. பலர் 'அந்த அவளுக்கு' கேளாத மாதிரி மற்றவர்களை பேசிக்கொண்டு இருந்தார்கள். இமேஜ் பாழாகிவிடாதபடி மிகவும் கவனமாக நடந்து கொண்டார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் தனித்தனியே 'கவனிப்பு' தொடங்கிவிட்டது. எல்லோரது போட்டியும் எப்படியும் 'அந்த அவளை' தனியே கூட்டிச்சென்று தங்கள் இமேஜை உயர்த்தி காட்டிவிட வேண்டும் என்பதே குறியாக இருந்தது. அந்த இடத்தில் அவளைத் தவிர அனைவரும் பயந்தபடியே (அல்லது பயந்த மாதிரி நடித்து கொண்டாவது - சீனியர்ஸ் எதிர்பார்ப்பது இதைத்தானே) இருந்தனர். அவள் மட்டும் சிரித்து சிரித்து கதைத்துக்கொண்டு இருந்தாள்.

இப்படியே சிரித்து சிரித்து 'ராக்கிங்' காலம் முழுவதையும் எதுவித பிரச்சினையும் இன்றி கடத்திவிட்டாள். இந்த காலத்தில் அவளை பல பேருடன் சேர்த்து வைத்தது வதந்தி தானே தவிரவும் உண்மை அல்ல. அதே நேரம் 'எட்டாப் பழம் புளிக்கும்' என்பது போலவும் பலர் விலகிவிட்டனர். விலகியவர்கள் சும்மா இருந்தால் பரவாயில்லை. அவளைப் பற்றி பலவாறாக கதையும் கட்ட தொடங்கிவிட்டார்கள். அது மட்டுமா... புத்தகப் பூச்சிகளான சிலரை பிடித்து (புத்தகம் தவிரவும் உலகில் வேறு என்னவெல்லாம் நடக்குது என்று ஒன்றுமே தெரியாது), உசுப்பேத்தத் தொடங்கிவிட்டனர். 'மச்சான் அவளை பாத்தியே. உன்னைப்பார்த்து தான் சிரிக்கிறாள். அவளுக்கு உன்னில ஒரு இது போல தான் கிடக்கு' என்று ஒருவன் கூற, அதை ஆமோதிப்பதற்கு என்று ஒரு கூட்டம். இப்படி ஒருவரை உசுப்பேத்தினாலும் பரவாயில்லை. மூன்று நான்கு வடிகட்டிய புத்தக பூச்சிகளை பிடித்து குழைக்கடித்துவிட்டார்கள்.

அது நாள் வரையில் நிலத்தையே பார்த்து திரிந்தவர்கள், இப்போது அவளை கடைக்கண்ணால் பார்க்கத் தொடங்கி விட்டார்கள். எப்போதும் போலவே அவளும் சிரிப்புடன் கடந்து செல்வாள். அது அவர்களுக்கு நண்பர்கள் (இப்படி கூற சங்கடமாக இருக்கிறது. இப்படியானவர்களை நண்பர்கள் என்று கூறி உண்மையான நண்பர்களை அவமதிப்பதாக நினைக்கவேண்டாம். கதைக்காக அந்த சொல்லை பாவிக்க வேண்டியதாக இருக்கிறது - மன்னிக்கவும்) கூறியதை வழிமொழிவதாக தென்பட்டது. பாவம் அவர்களும். அது நாள் வரையில் தங்களை அலங்கரிக்காமல் புத்தகத்துடன் வாழ்க்கை நடத்தியவர்கள், இப்போது கண்ணாடி முன்னால். நாள் முழுவதும் புத்தகத்துள் மூழ்கியிருந்தவர்கள் இப்போது நாள் முழுவதும் தங்களை அலங்காரம் செய்வதில் மும்முரமாக இறங்கிவிட்டார்கள். இவர்களின் இந்த மாற்றத்தை அவதானித்த நண்பர்கள் மேலும் மேலும் 'ஏற்றி'விட தொடங்கிவிட்டார்கள். அவர்களின் நினைப்பு எல்லாம், இவர்களை கொண்டு 'லவ் லெட்டர்' கொடுக்க வைத்து அவளை அவமான படுத்த வேண்டுமென்பதே. அவர்களின் நினைப்பு என்னவென்றால் இவர்கள் 'பேக்குகள்', தாங்கள் 'ஹீரோ'க்கள். 'பேக்குகள்' பார்க்கிற அளவில் தான் அவள் இருக்கிறாள் என்று அவள் உணர வேண்டுமென்பதே.

ஒருவாறாக உசுப்பேத்தியவர்களை கொண்டு 'லெட்டர்' குடுக்கும் அளவிற்கு அவர்கள் வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.

வந்தது வினை. பெண்களை நிமிர்ந்து பார்க்கக் கூட தைரியம் இல்லாதவர்கள், இப்போது கடிதமும் கையுமாக அலையத்தொடங்கிவிட்டார்கள். இருந்தும் அவர்களுக்கு தாங்களே நேரில் சென்று கடிதம் கொடுக்க இன்னும் தான் தைரியம் இல்லை. எனவே தங்களின் மிக நெருங்கிய (அப்படி தான் நம்பினார்கள்) நம்பிக்கையான ஒருவரிடம் கடிதத்தை கொடுத்து விட்டு நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள். ஒவ்வொரு கடிதத்தையும் பெற்றவள், கொஞ்சம் ஆடித் தான் போய்விட்டாள். ஒருவாறு தன்னை சுதாரித்தவளாய், கடிதம் கொண்டு வந்தவர்களின் குசும்புக்கு ஏற்றவாறு பதில்களை சூடாகவும் குளிராகவும் அனுப்பிவைத்தாள். தரகு வேலை பார்த்தவர்களோ, இப்போது 'தண்டோரா' அடிப்பவர்களாக மாறி விட்டார்கள். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பார்களே, அதுவே தான். 'அவளை' மட்டம் தட்டுவதுடன், 'அப்பாவிகளை' மேலும் மிதிப்பதற்கு இன்னுமொரு 'topic' கிடைத்த சந்தோசம். அடுத்த 'get togther' இல் நையாண்டி பண்ணுவதற்கு நல்ல அவல் கிடைத்த சந்தோசம்.

அந்த 'அப்பாவி பலிக்கடாக்கள்' தான் பாவம். மிகவும் மனமுடைந்து போய்விட்டார்கள். அடுத்து என்ன செய்வதென்றே தெரியாத புத்தக பூச்சிகள். மரம் விட்டு மரம் தாவும் மந்திகளாக மாறவும் தெரியாதவர்கள். அப்படியே அறைக்குள் அடங்கிவிட்டார்கள். ஒருவனை தவிர. அவன் கொஞ்சம் மனம் கொஞ்சம் கூட பாதிக்கப்பட்டு விட்டது. 'அபிராமி அபிராமி' என்று சொல்லித்திரியும் கமலஹாசன் லெவெலுக்கு.

அதிரடியாக பல காரியங்கள் செய்யத்தொடங்கிவிட்டான்.

அப்படி அவன் என்ன தான் செய்துவிட்டான்... அது அவனை எங்கே கொண்டு போய் விட்டது...

(அடுத்த பத்தியில்..)

//////////////////////////////

கதையின் மிகுதி

//////////////////////////////

'குணா' பட கமலஹாசன் போல மாறியவன், தனது கனவிலே அம்மன் தோன்றுவதாகவும், அந்த அம்மன் வேறு யாருமல்ல 'அந்த அவளே' என்றும் கூறிக்கொண்டும் எப்போதும் அவளை எதிர்கொள்ளுமாறு வலம்வர ஆரம்பித்துவிட்டான். ஏதோ எதேச்சையாக தான் அவன் தன் முன்னால் அடிக்கடி வருவதாக எண்ணிய அவள், முதலில் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எதேச்சையாக ஒரு நாள் அவனை நேருக்கு நேர் பார்க்கும் சந்தர்ப்பத்தில் தான் அவனது முகத்தில் ஒரு மாறுதலை அவனது சிரிப்பினுடாக கண்டாள். இருப்பினும் அதை கண்டு கொண்டதாக காட்டிக்கொள்ளவில்லை.

முதல் தவணை விடுமுறைக்காக அவள் ஊருக்கு சென்றுவிட்டாள். அது அவனுக்கு பரீட்சை காலம். அவளின் தரிசனமின்றி அவனால் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. ஏதோ ஒப்பிற்கு பரீட்சை எழுதினான். இன்னும் இரு பாடங்கள் தான் மிச்சம். இருப்பினும் முடியவில்லை அவனால். காலையில் நித்திரையால் எழுந்தவன், பயணப் பையை அடுக்கிக்கொண்டிருந்தான். 'மச்சான் என்னடா செய்கிறாய்' என்று கேட்ட அறை சகபாடியிடம், 'ராத்திரி அம்மன் கனவில வந்து சொன்னவ, exam postpone பண்ணப் போறாங்களாம். ரெண்டு மாசம் கழிச்சு தான் மற்ற ரெண்டு பாடமுமாம். அது தான் நான் வீட்டை வெளிக்கிடுறன். நீயும் வாறதெண்டால் சொல்லு நான் வெயிட் பண்ணுறன்' என்று கூறிக்கொண்டே பயணத்திற்கு ஆயத்தமாகிகொண்டு இருந்தான். விபரீதத்தை உணர்ந்து கொண்ட நண்பன், அவனை ஆசுவாசப் படுத்த பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தான். அவன் ஒன்றையுமே செவிமடுப்பதாகவில்லை. இதற்கிடையில் கதை அடுத்தடுத்த அறைகளிட்கு பரவ, அவர்களும் தங்கள் பங்கிற்கு அவனை தடுத்தனர். எவரையும் சாட்டை செய்யாதவன், தன் பாட்டிற்கு வெளிக்கிட்டுச்சென்றுவிட்டான்.

ஒரு வருடம் கழித்து ஊருக்கு வந்த மகனைக் கண்ட சந்தோசம் ஒரு பக்கம், மகன் இளைத்து விட்டான் என்ற கவலை ஒரு பக்கமுமாக தாயும் தந்தையும் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்தனர். மகனுக்கு நல்ல சாப்பாடு கொடுத்து தேற்ற வேண்டும் என்பது அவர்கள் கவலை. அவனோ வந்த களைப்பு மாறு முன் சைக்கிளையும் எடுத்துக் கொண்டு, 'அம்மா நான் ஒருக்கால் யாழ்ப்பாணம் போயிட்டு வாறன். பின்னேரம் ஆகும் வர' என்று கூறியவாறு ஓடிக்கொண்டிருந்தான். 'இப்ப தானே தம்பி வந்தனி. எதுவும் தேவையென்றால் நாளைக்கு போகலாம் தானே' என்று தாய் கூறியது அவனின் காதில் விழுந்ததோ தெரியாது. அதற்குள் அவன் புறப்பட்டு விட்டான். எப்படியாவது 'அவளின்' வீட்டை தெரிந்து கொள்ளும் அவசரம். 20 மைல்கள் அப்பால் உள்ள அவளின் ஊருக்கு வந்தவன், ஒருவாறாக அவளின் வீட்டை கண்டுபிடித்து விட்டான். எட்ட நின்று நோட்டம் விட்டுகொண்டிருந்தவனுக்கு பொழுது போனதே தெரியவில்லை. இருப்பினும் அன்று அவளை காணமுடியவில்லையே என்ற தவிப்பு வாட்டியது. இனியும் நின்று பிரயோசனம் இல்லை என்று உணர்த்தவனாய் சைக்கிளை வீடு நோக்கி திருப்பினான் ஒரு தீர்மானத்துடன். போகும் போது இருந்த ஆவல் காரணமாக களைப்பை உணராதவன், இப்போது மன வலியுடன், உடல் வலியும் சேர்ந்ததால் மிகவும் சோர்வுடன் வீடு வந்து சேர்ந்தான்.

நீண்ட நேரமாகியும் காணாததால் துடித்துப் போன தாய், மகனை கண்டதும் 'ஏண்டா தம்பி வந்ததும் வராததுமாய் அப்படி என்ன தான் வேலையோ. சரி சரி குளிச்சுட்டு வா. கடையில சாப்பிட்டு நாக்கு செத்துப் போயிருக்கும். இங்கை நிக்கிற நாளிலையாவது நல்ல சாப்பாடு சாப்பிடு' என்று கூறவும் 'படிக்கிற பிள்ளைக்கு என்ன அவசர வேலையோ. அவனை கேள்வி கேட்கிறதை விட்டு சாப்பாட்டை போடும்' என்று அம்மாவை அதட்டினார். அவர்களின் பாசத்தை உணரும் நிலையில் அப்போது அவனில்லை. ஒப்பிட்காக சாப்பிட்டுவிட்டு, படுக்கையில் விழுந்தான்.

அசதியில் கொஞ்சம் கூட நேரம் தூங்கிவிட்டான். ஏதோ சத்தம் கேட்டு எழுந்தவன், மணி 9 ஆனது உணர்த்தும், துடித்துப் பதைத்து எழுந்து, கிணற்றடிக்கு ஓடினான். அவசரமாக புறப்பட்டவனை, அம்மாவின் குரல் மறித்தது. 'எங்க தம்பி அவசரமாக வெளிக்கிட்டாய்'. 'சும்மா அவனை என்ன குறுக்கு விசாரணை செய்துகொண்டு. (f)பிரன்சை பார்க்க போகிறானக்கும்' என்றார் அப்பா. 'என்னண்டாலும் சாப்பாட்டுக்கு வந்திடு தம்பி' இது அம்மா. ஒப்பிற்கு தலையாட்டிவிட்டு பை ஒன்றுக்குள் சில உடுப்புகளை திணித்துக்கொண்டு சைக்கிளை மிதிக்கத் தொடங்கினான் மீண்டும் அவளது வீடு நோக்கி.

சைக்கிள் மணி ஓசை கேட்டு வெளியில் வந்த தந்தையிடம் 'நான் யாளினின்டை (f)பிரன்ட். யாழினி நிக்கிறாவோ'. அவனுடைய வித்தியாசமான தோற்றத்தையும் விகாரமான சிரிப்பையும் கண்டதும் சற்று நெருடலுன், 'பிள்ளை யாழினி' என்று மகளை அழைத்து விட்டு உள்ளே சென்றுவிட்டார். வெளியே வந்த யாழினிக்கு பெரும் அதிர்ச்சி. ஒருவாறு சுதாரித்துக்கொண்டு 'ஹல்லோ என்ன இந்தப் பக்கம்' என்று பதைபதைப்பை வெளிக்காட்டாதாவாறு கேட்டாள். 'நான் உம்மோடை வாழுறது எண்டு வீட்டை விட்டுட்டு வந்திட்டன். நீதான் என்டை லவ்வை ஏற்க வேணும். நான் இனி இங்கை தான் இருக்கப்போறன்'. தலையில் இடியிறங்கியது போலிருந்தது அவளுக்கு. 'நான் தான் அப்பவே சொல்லிபோட்டனே எனக்கு உம்மில விருப்பம் ஒன்றும் இல்லையென்று. பிறகு ஏன் இப்படியெல்லாம் செய்கிறீர்' என்றாள் அழாத குறையாக. அவனோ நகருவதாக இல்லை.

யன்னல் வழியாக நோட்டம் விட்டுக்கொண்டிருந்த அவளது அப்பா, ஏதோ விபரீதம் நடக்கபோவதை உணர்ந்தவராய் வாசலுக்கு விரைந்தார். 'தம்பி உள்ளை வாங்கோ' என்று அவனை உள்ளே அழைத்து சென்றார். ஏனெனில் வாசலில் நடப்பதை அக்கம் பக்கம் பார்த்தால் வேறு வினையே வேண்டாம் என்பதால். உள்ளே அவனை அமரச் செய்துவிட்டு, மகளை உள்ளே கூட்டிச்சென்று நடந்தவற்றை கேட்டறிந்து கொண்டார். அழுதுகொண்டிருக்கும் மகளை சமாதானம் செய்துவிட்டு வெளியே வந்தவர், 'தம்பி நீங்கள் படிச்ச பிள்ளை. இப்படியெல்லாம் அநாகரிகமாக நடக்க கூடாது' என்று அவனை சமாதானம் செய்து அனுப்ப பார்த்தார். அவனோ எதற்கும் மசிந்து விடுபவனாக இல்லை. 'இல்லை அங்கிள். என்னால யாழினி இல்லாமல் வாழ முடியாது' என்று பிடிவாதம் பிடித்தான். நேரம் தான் சென்றதே ஒழிய அவன் நகருவதாக இல்லை. 'சரி இருங்கோ தம்பி வாறன்' என்று கூறியவர் உள்ளே எழுந்து சென்றார். சிறிது நேரத்திட்கெல்லாம் திரும்பி வந்து அவனது படிப்பு பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்.

திடீரென வாசலில் காவல்துறையினர். வந்தவர்கள் அவனை அள்ளி ஜீப்பில் போட்டுக் கொண்டு சென்றுவிட்டனர். நிலைமை விபரீதம் ஆகுமுன் சமயோசிதமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த திருப்தியுடன் மகளை ஆறுதல் படுத்திகொண்டிருந்தார். அள்ளிச்சென்றவர்கள் அவனை விசாரிக்க தொடங்கியதும் அவனது உண்மை நிலைமையை அறிந்து பெற்றோருக்கு அறிவித்து விட்டு அவனை 'மந்திகைக்கு' அனுப்பிவிட்டனர்.

தகவலறிந்த தாய் அயலிலுள்ளவர்கள் யாரோ தன் பிள்ளைக்கு செய்வினை வைத்ததால் தான் இந்த நிலை என்று ஒப்பாரி வைத்துகொண்டிருந்தாள். சோகத்தை வெளியில் காட்ட முடியாமல் உள்ளே போட்டு வைத்துக்கொண்டு பித்துப் பிடித்தவராய் மந்திகையில் உள்ள 'மன நலம் பாதிக்கப்பட்டோர்' நிலையம் நோக்கி சைக்கிளை செலுத்தினார் தந்தை.

விடுமுறை முடிந்து வளாகம் திரும்பியவர்கள் கூட்டம் கூட்டமாக கூடி நின்று கதைத்தார்கள். சும்மா இருந்தவனை 'ஏத்தி' விட்டு தான் இது நடந்தது என்பதை மறந்து. ரெண்டு நாள் அவனைப் பற்றியே பேச்சு. அடுத்த கிழமை எல்லாம் மறந்து மீண்டும் ஒருவனை 'மந்திகைக்கு' அனுப்புவதுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள்.

(முற்றும்)

Edited by alvaiyooraan

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அல்வாய்.... ஊரான் பழைய பல்கலைக் கழக வாழ்கையை நினைவூட்டுகிறீர்கள். தொடருங்கள் வாசிக்க காத்திருக்கிறோம். .....

  • கருத்துக்கள உறவுகள்

அல்வாயூரான்.. நீங்கள் கன்னி முயற்சி என்கிறீர்கள்..! ஆனால் நீங்கள் கோர்வையாக எழுதிக் கொண்டு செல்லும் விதம் உங்களை ஒரு நல்ல நல்ல எழுத்தாளன் என அடையாளம் காட்டுகிறது. நீங்கள் கதை சொல்லும்போது அதனுள் இழையோடும் அந்த மெல்லிய நகைச்சுவையும் மிக நன்றாக உள்ளது..! தொடர்ந்து எழுதுங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

அல்வாயூரான்,

முதல் முயற்சி கதைக்கான சகல கலவைகளையும் உள்ளடக்கியுள்ளது.தொடர்ந்து எழுதுங்கள்.

அடைப்புக்குறிக்குள் உங்கள் அபிப்பிராயம் தெரிவிப்பதைத் தவிர்த்து கதைசொல்லுங்கள் உங்கள் கதை சிறப்பாகும்.

பகிடி வதைகள் இன்னும் தொடர்கதைதானே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்து கூறிய அனைவருக்கும் நன்றிகள்.

கதை நிறைவு பெற்றது. உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

சாந்தி அக்கா, நீங்கள் கூறியதை மிகுதி பகுதியில் கடைப்பிடித்திருக்கிறேன். கருத்துக்கு நன்றி.

நல்ல முயற்சி அல்வாயூரான்.முதல் பகுதியை விட இரண்டாம் பகுதி, எழுதிய விதமும் சம்பவங்களும் மிகவும் நன்றாக இருந்தது.மனிதரில் இத்தனை நிறங்களா? இந்த உலகத்தில் வாழ்க்கையின் சூட்சுமத்தை விளங்கி வாழ்வதென்பது மிகப் பெரிய விடயம்.அதில் சிலரே வெற்றி பெருகின்றார்கள்.சிறுவயதிலேயே வெளிநாடுகளில் இருப்பது போல் தன்நம்பிக்கையை ஊட்டி வளர்த்தால் பிரச்சனைகள் வரும்போது எதிர்கொள்ள இலகுவாக இருக்கும்.பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளைகள் பலர் பிற்காலத்தில் கஸ்டப்பட்டதை பார்த்திருக்கின்றேன்

இதுக்குத்தான் சின்ன வய‌சிலேயே சிகரெட் பத்த,தண்ணி அடிக்க பழக வேண்டும் என்பது???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்திற்கு நன்றி அர்ஜுன்.

பிள்ளைகளை படி படி என்று வற்புறுத்தி அவர்களை வேறு ஒன்றுமே செய்யவிடாது தடுப்பதன் மூலம் அவர்கள் வாழ்கையின் பல பக்கங்களை படிக்கத் தவறிவிடுகிறார்கள். புதிய ஒரு சூழலில் சடுதியாக விடப்படுமிடத்து, ஒன்றில் அவர்கள் அடி பட்டு போகிறார்கள், அல்லது எல்லை தாண்டி சென்றுவிடுவார்கள்.

எமக்கும் படிப்பை தவிரவும் வேறு தெரிவு இல்லை.

இதுக்குத்தான் சின்ன வய‌சிலேயே சிகரெட் பத்த,தண்ணி அடிக்க பழக வேண்டும் என்பது???

'களவும் கற்று மற' என்பது போல அடிச்சு பார்த்தல் தப்பில்லை. தொடர்ந்தால் தான் தப்பு. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் பிற பகுதியும் வாசித்தேன். நன்றாக் இருக்கிறது கதை . வாழ்வில் பிள்ளைகளை பொத்தி பொத்தி வளர்த்தால்...

.....மனம் விட்டு பேச முடியாமல் வளர்த்தால் இப்படித்தான் போகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜஸ்டு மிஸ்ஸு :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை தான் நிலாமதி. செல்லம் கொடுப்பதாக நினைத்து அவர்களின் ஆளுமைகள் மழுங்கடிக்கப்படுகின்றன என்பது கசப்பான உண்மையே.

ஜஸ்டு மிஸ்ஸு :lol:

என்ன சொல்ல வருகிறீர்கள் ஜீவா? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சொல்ல வருகிறீர்கள் ஜீவா? :lol:

இல்லை அண்ணா நானும் மந்திகையிலை இருக்க வேண்டியனான்..இங்கை வந்த படியால்

தப்பிச்சிட்டன். :)

அப்புறம் உங்கள் கன்னி முயற்சி நன்றாக உள்ளது..பகுதி இரண்டு இன்னும் கொஞ்சம்

மெருகேறி உள்ளது.வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

படிக்க போனாலும் பைத்தியமாக்கிறாங்களப்பா எங்கதான் போவது ?? :lol::)

உங்கள் முதல் கதையும் நன்றாக உள்ளது தொடரட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.