Featured Content
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள் அண்மையில் இஸ்ரேலுக்குப் பயணம் செய்த தனது அனுபவங்களை திரு நிராஜ் டேவிட் அவர்கள் காணொளிகள் வாயிலாக வெளியிட்டு வருகிறார். அவற்றில் சில காணொளிகளில் அவர் அங்கு தங்கியிருந்த நாட்களில் பயணித்த பலவிடங்களையும் காட்சிப்படுத்தியிருந்தார். அவற்றுள் ஒன்று யூத மக்கள் மீது இரண்டாம் உலக யுத்த காலத்தில் நாசிகளால் மேற்கொள்ளப்பட்ட இனக்கொலை தொடர்பான சாட்சியங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றினை பாரிய நினைவாலயம் ஒன்றினுள் காட்சிப்படுத்தியிருந்தமை பதிவுசெய்யப்பட்டிருந்தது. தம்மீது நிகழ்த்தப்பட்ட இனக்கொலை தொடர்பாக தமது சந்ததிகள் தொடர்ச்சியாக அறிந்துகொள்ளவேண்டும் என்பதும், இனிமேல் அவ்வாறனதொரு இனக்கொலை தமது இனம் மீது நடக்காது தவிர்ப்பது எந்தளவு முக்கியமானது என்பதையும் தம் இன மக்களுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்துவதும் இந்நினைவாலயத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். கொல்லப்பட்ட அறுபது இலட்சம் யூதர்களில் ஒரு பகுதியினர் பயன்படுத்திய காலணிகள், அவர்களால் அணியப்பட்ட கறுப்பும் வெள்ளையும் சேர்ந்த வரிரியிலான ஆடைகள், அவர்கள் பயன்படுத்திய உணவருந்தும் பாத்திரங்கள், அவர்களின் புகைப்படங்கள் என்பவற்றோடு அவர்களை வதைப்படுத்திக் கொன்றுபோட்ட பல நாசிப் படைத் தளபதிகளின் புகைப்படங்களும் அங்கு மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இவற்றைத் தனது காணொளிகளில் காண்பித்த டேவிட் அவர்கள், எமதினத்திற்கு நடந்த அக்கிரமங்கள், அழிவுகள் குறித்து நாம் பேசுவதை எம்மில் ஒரு பகுதியினரே தடுத்து வருவதையும், சிங்கள இனத்தோடு நாம் ஒன்றித்து வாழ்வதை இவ்வாறான "பழங்கதைகள் பேசுதல்" எனும் முயற்சி தடுத்துவிடும் என்றும், அது இனவொற்றுமையினைக் குலைத்துவிடும் என்றும் காரணம் கூறிவருவதையும் குறிப்பிட்டு அங்கலாய்த்திருந்தார்.யூதர்கள் தமக்கு நடந்த அழிவினைத் தொடர்ச்சியாகப் பேசியும், காட்சிப்படுத்தியும், ஆவணப்படுத்தியும் வரும் நிலையில், நாமோ எம்மீது நடத்தப்பட்ட அழிவுகளை வேண்டுமென்றே மறுத்தோ அல்லது மறைத்தோ வாழத் தலைப்படுதல் ஈற்றில் எமது இருப்பிற்கே முடிவாய் அமைந்துவிடும் என்பதும் அவரது ஆதங்கமாக இருந்தது.இக்காணொளிகளின் இறுதிப்பகுதியில் தமிழ் மக்களை நோக்ல்கி வேண்டுகோள் ஒன்றினை அவர் முன்வைத்தார். அதுதான் நாம் அனைவரும், தனிப்பட்ட ரீதியிலோ அல்லது ஒரு குழுவாகவோ எம்மீது நடத்தப்பட்ட அனைத்து அக்கிரமங்களையும் ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒருவடிவில் கட்டாயம் ஆவணப்படுத்தியோ அல்லது காட்சிப்படுத்தியோ தீரவேண்டும் என்பது. அவரது காணொளிகளைப் பார்த்தபோது அவர் கூறுவது எனக்குச் சரியென்றே பட்டது. ஏனென்றால், எம்மீது நடத்தப்பட்ட அநீதிகளை நாமே பேசவோ அல்லது காட்சிப்படுத்தவோ மறுப்பின், வேறு யார்தான் இதைச் செய்யப்போகிறார் எனும் கேள்வி எனக்குள் வந்தது. ஆகவேதான் எம்மீது நடத்தப்பட்ட அக்கிரமங்கள் தொடர்பான எனது அனுபவங்களை இங்கு பதிவிடலாம் என்று நினைக்கிறேன். இத்தளத்தில் இருக்கும் ஏனையவர்களும் தமது தனிப்பட்ட அனுபவங்களை இங்கு பகிருமாறும் வேண்டிக்கொள்கிறேன்.-
-
- 19 replies
Featured by மோகன் -
-
சாத்தான் படை (IPKF)
சாத்தான் படை (IPKF)
* அன்பான உறவுகளே, இந்தப் புத்தகம் அன்றைய இந்திய அமைதிப்படை (ஆக்கிரமிப்புப் படை) கால சம்பவங்களையும், அன்று ஊடகங்களில் வெளியான செய்திகளையும் தொகுத்து செய்யப்பட்டுள்ளது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில், இன்றைய சூழல் கருதியும் தேவை கருதியும் ஈழத்திலிருந்து எடுப்பித்திருக்கிறோம். இதனை உங்களின் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அனுப்பி உண்மைகளை அறியச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். [குறிப்பாக உங்களுக்குத் தெரிந்த தமிழக நண்பர்களுக்கு, மக்களுக்கு, ஊடகங்களுக்கு, அரசியற் கட்சியனருக்கு, அமைப்புகளுக்கு அனுப்பிவைக்கவும்.]* * flash: http://ebook.yarl.com/ipkf/ * pdf zipped: Part 1 http://www.mediafire.com/?emj0zigyjyu Part 2 http://www.mediafire.com/?i5tzkzyjfny Part 3 http://www.mediafire.com/?tz1mvzdgggz * pdf: Part 1 http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part1.pdf Part 2 http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part2.pdf Part 3 http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part3.pdf அன்பான உறவுகளே, தற்போதைய இலங்கையின் போர்ச்சூழல் பற்றி நீங்கள் அறிவீர்கள். திட்டமிட்ட வகையில் நடத்தப்படும் இனவழிப்பு / இனக்கருவறுப்புப் போரில் - ஒவ்வொரு நாளும் - குழந்தைகள், பெண்கள், முதியோர் என ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள் - எந்தவிதப் பாகுபாடுமின்றி - கொத்துக்கொத்தாக கொத்தணிக் குண்டுகளாலும், பொஸ்பரஸ் அடங்கிய எரிகுண்டுகளாலும் படுகொலை செய்யப்படுகிறார்கள். "பாதுகாப்பு வலயம்" என அறிவித்து - அங்கும் மக்களை அரக்கத்தனமாகக் கொல்கிறார்கள். சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரச்சொல்லி - ஆண்கள் பெண்களென வகைபிரித்து - பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிப் பின் கொன்று புதைக்கிறார்கள். புதிய ஆண்டும் அவர்களுக்கு கொலைக்களமாகத்தான் பிறந்தது. இந்த ஆண்டின் இரண்டு மாத காலத்தில் மட்டும் - 1500 க்கும் அதிகமான மக்கள் சிறிலங்கா பேரினவாத அரசால் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஒரு இளம் சந்ததியே - ஒரு புதிய தலைமுறையே - கை, கால் இல்லாத சந்ததியாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் - இந்த இன்னல் நிறைந்த காலகட்டத்தில் - தமிழகத்திலிருந்து எழும் ஒவ்வொரு ஆதரவுக் குரலும் புலம்பெயர் மக்களாகிய எமக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறதென்பதை நீங்கள் அறீவீர்களோ தெரியாது. உங்களின் ஆதரவான ஒவ்வொரு சொல்லும் எங்கள் கண்ணீரைத் துடைக்க வல்லன. எமக்கு ஆதரவாக நீங்கள் வீதியில் இறங்கும் போதும் - உரக்கக் குரல் கொடுக்கும் போதும் - நாம் நம்பிக்கை கொள்கிறோம். சாதாரண நம்பிக்கையல்ல - சரித்திரம் படைக்கிற நம்பிக்கை. ஆனாலும் உறவுகளே - இன்னொரு கசப்பான உண்மையையும் நாம் உங்களுக்கு சொல்ல விரும்புகிறோம். உங்கள் ஆதரவான நம்பிக்கை தரும் குரல்களுக்கும் மத்தியிலிருந்து - தமிழகத்திலிருந்து - எம்மீது வெறுப்பைக் கக்குகிற சில குரல்கள் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவை, மீண்டும் மீண்டும் எம்மைக் காயப்படுத்துகின்றன. நாம் காயப்படுவதைப் பற்றி கவலைப்படவில்லை. அந்தக் குரல்கள் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் ஆதரவுக் குரலையும் பலவீனப்படுத்திவிடும் என்றே பயப்படுகிறோம். உலகத் தமிழினமே இன்று ஒன்றுபட்டு நிற்கையில் - பகைவளர்க்கும் இந்தச் சில குரல்கள் - தமிழினத்தின் விடுதலையில் கீறல்களை ஏற்படுத்திவிடக் கூடாதென்றே விரும்புகிறோம். ஈழத்தமிழர் பிரச்சனை/அவலம் பற்றி நீங்கள் பேசுகிற போதெல்லாம் - ராஜீவ்காந்தியின் கொலையை முன்னிறுத்தி - உங்களின் வாயை அடைக்கப் பார்க்கிறார்கள். ஈழத்தின் விடுதலை பற்றிப் பேசுகிறபோதெல்லாம் - ராஜீவ்காந்தியின் கொலையை முன்னிறுத்தி - கொச்சைப்படுத்துகிறார்கள். உங்களின் எழுச்சியை அவர்கள் ஒற்றை வார்த்தை கொண்டு ஒதுக்கிவிடப் பார்க்கிறார்கள். உலகத் தமிழரின் ஒற்றுமையை ஒற்றைவார்த்தையால், சாத்தியமற்றதாக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். எனவே அன்பான உறவுகளே, எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் சோர்ந்துவிடக்கூடாது - எவருக்கு முன்னும் நீங்கள் தலைகுனியக்கூடாது - உண்மைகளை உணர்ந்துகொள்ளவேண்டும் என்கிற நோக்கோடு இந்தப் புத்தகத்தை மின்னூல் வடிவில் உங்கள் முன் வைக்கிறோம். ராஜீவ்காந்தியின் கொலையை யார் செய்தார்கள்? அவர் கொலை செய்யப்பட்டது சரியா பிழையா? யார் யாருக்கு அதில் பங்குள்ளது என்பது பற்றியெல்லாம் நாம் இங்கு பேச முனையவில்லை. அவற்றை ஒருபுறம் நாம் ஒதுக்கிவைத்துவிட்டு - எங்கிருந்து எல்லாம் தொடங்கியது என்று பார்த்தால் - சிலவேளை உண்மைகள் புரியக்கூடும். அமைதிப்படை என்கிற பேரில் ஈழத்து மண்ணில் கால்வைத்த இந்திய சாத்தான் படை - எப்படியெல்லாம் ஈழத்தமிழர்களைக் கொடூரமாகக் கொலை செய்ததென்பதைப் பாருங்கள். ஈழத்தமிழரின் விடுதலைப் போரைச் சிதைக்க எப்படியெல்லாம் துணைநின்றார்கள் என்பதைப் பாருங்கள். மீண்டும், அதே கொடுமையையும் துரோகத்தையும் - சிங்கள அரசுக்கு உதவுவதினூடாக/சிங்கள இராணுவத்தின் பின்னாலிருந்து யுத்தத்தை நடத்துவதினூடாக - இந்தியா செய்கிறது. இப்படியான சூழலில் நீங்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எழுப்புகிற குரலை நசுக்க ராஜீவ்காந்தியின் கொலையைத் தூக்கிப்பிடிக்கிறார்கள். இதை தொடர்ந்து கவனிக்கிற போது, ஈழத்தமிழர் பிரச்சனை தமிழகத்தில் பேசப்படக்கூடாது என்பதற்காகவும், ஈழத்தமிழர்களுக்கு தமிழகம் உதவக்கூடாது என்பதற்காகவும், ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி பேசப்படுகிறபோது ராஜீவ்காந்தி கொலை கண்ணுக்கு முன் வரவேண்டும் என்பதற்காகவும் - யாரோ திட்டமிட்டு நீண்டகால அரசியல் இலாபத்தோடு இதைச் செய்திருக்கிறார்கள் என்றே உணர முடிகிறது. இந்திய/தமிழக நண்பர்களே, உறவுகளே, ஊடகங்களே நாம் பழையதை நினைவுபடுத்தி, எமக்குள் உள்ள உறவைக் காயப்படுத்த விரும்பவில்லை. எனினும், உண்மைகளை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறோம். உங்களின் ஆதரவுக் குரல்கள் "ராஜீவ்காந்தியின் கொலை" என்கிற ஒற்றை வார்த்தையைக் கொண்டு அடக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே நாம் இந்தப் புத்தகத்தை உங்களுக்கு அனுப்புகிறோம். நாம் மீண்டும் மீண்டும் எல்லோராலும் ஏமாற்றப்படுகிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். * அன்பான உறவுகளே, இந்தப் புத்தகம் அன்றைய இந்திய அமைதிப்படை (ஆக்கிரமிப்புப் படை) கால சம்பவங்களையும், அன்று ஊடகங்களில் வெளியான செய்திகளையும் தொகுத்து செய்யப்பட்டுள்ளது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில், இன்றைய சூழல் கருதியும் தேவை கருதியும் ஈழத்திலிருந்து எடுப்பித்திருக்கிறோம். இதனை உங்களின் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அனுப்பி உண்மைகளை அறியச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். --நன்றி: யாழ் இணையம்---
-
- 4 replies
Featured by மோகன் -
-
🕯️ ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு தீபம் / “A Lamp for Every Soul”
🕯️ ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு தீபம் / “A Lamp for Every Soul”
🕯️ ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு தீபம் / “A Lamp for Every Soul” ஓ… முள்ளிவாய்க்கால் ஆன்மாக்களேகாற்றில் அலையும் ஜீவன்களே அலைகளுடன் நகரும் மென்மையானவர்களே உங்களின் முன் தலை குனிந்து வணங்குகிறோம்!உங்கள் துன்பம் மறக்கமுடியாதது உங்கள் பெயர்கள் மறையமுடியாததுஉங்கள் கனவுகள் எங்களால் வாழட்டும்!குழந்தைகளைப் பாதுகாத்த தாய்மார்களுக்கும் கதிரவனைக் காணாத குழந்தைகளுக்கும்நம்பிக்கையை மட்டுமே சுமந்த இளைஞர்களுக்கும்நாங்கள் இந்த தீபத்தை ஏற்றுகிறோம்!உங்களை கைவிட்ட உலகிற்கு இந்த தீபம் வழிநடத்தட்டும்!நாங்கள் வழங்க முடியாத பாதுகாப்பை அமைதி சூழ்ந்து கொடுக்கட்டும்! முள்ளிவாய்க்காலின் ஆன்மாக்களேநாங்கள் உங்களைப் போற்றுகிறோம்உங்களுக்காகப் பேசுகிறோம்!ஒவ்வொரு தீபத்திலும் ஒவ்வொரு கண்ணீரிலும்ஒவ்வொரு இதயத் துடிப்பிலும் உங்களை நினைவில் கொள்கிறோம்!🕯️ உங்கள் ஒளி நிலைத்திருக்கட்டும்🕯️ உங்கள் உண்மை உயரட்டும்🕯️ உங்கள் நினைவு என்றென்றும் ஒளிரட்டும்![கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,அத்தியடி, யாழ்ப்பாணம்] “A Lamp for Every Soul”O spirits of Mullivaikkal,restless in the wind,gentle in the waveswe bow our heads before you.May your sufferingnever be forgotten.May your namesnever fade from memory.May your dreamslive through us.To the mothers who shielded their children,to the babies who never saw the sunrise,to the youth who carried only hopewe light this lamp.May this flame guide youwhere the world failed you.May peace hold youin the embrace we could not give.O souls of Mullivaikkalwe honour you.We speak for you.We remember youin every lamp,every tear,every heartbeat.🕯️ Let your light endure.🕯️ Let your truth rise.🕯️ Let your memory shine forever.[Kandiah Thillaivinayagalingam,Athiady, Jaffna]துளி/DROP: 1910 [🕯️ ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு தீபம் / “A Lamp for Every Soul”]https://www.facebook.com/groups/978753388866632/posts/32502659262715967/?-
-
- 0 replies
Featured by மோகன் -
-
தாயகத்தின் தாய் – ச.பொட்டு
தாயகத்தின் தாய் – ச.பொட்டு
தாயகத்தின் தாய் – ச.பொட்டு அம்மா எமக்கு அறிமுகமான அந்தநாள் இப்போது நினைவில் இல்லை. அது மணிமனைக் கோவைகளை பரிசீலித்தே அறிய வேண்டியதான ஒன்றாக எம் நினைவுப்பதிவுகளில் இருந்து மறந்து போய்விட்டது. எதொவொரு இலக்கத்தாலும் நினைவில் வைத்திருக்க வாகாகத்தெரிவு செய்யப்பட்ட வழமையல்லாத ஏதோவொருயெராலும், கறிப்பிடப்பட்டிருக்கக்கூடிய அம்மாவின் கோவையும்பொல் ஒன்றாகத்தான் தூங்கும். ஆனால் அம்மா எல்லோரையும் போன்ரவரல்ல. என்றென்றும் மறக்கப்பட முடியாதவராக அந்த அம்மா எம் நிணைவுப்பதிவுகளில்…. கரீர் என்ற கறுப்பு நிறமும், மெலிவான மலர்ந்த முகமும் சளசள வென்ற ஒயாத கதையுமாய்… நகைச்சவை உணர்வுமிக்க ஒரு புலனாய்வாளனால் தமிழகத்து சிரிப்பு நடிகைகளது பெயரில் ஒன்றை புனைபெயராக அம்மாவில் வெளிப் பார்வைக்குத் தெரியும். சில பெண்பிள்ளைகளுடன் இளையவனாய் ஒரேயொரு மகன் என்பது அந்த மகன் மீது அதீத அன்புக்கு காரணமாய் அமைவது இயல்புதான். அம்மாவுக்கும் அப்படித்தான். சில பெண் சகோதரிகளுடனான அந்த ஒரேயொரு மகன் மீது கொள்ளைப் பாசம். காலத்தின் தேவையாக அந்த ஒரேயொரு மகன் போராளியாக ஆனபோது, அம்மாவின் அந்த அதீத பாசத்திற்க்கு சோதனை வந்தது. அந்தச் சோதனை எல்லா அம்மாமாருக்கும் வருவது போன்றபாசத்தின்தளத்தில் எழும்வேதனை மட்டுமல்ல. ****** அம்மா அந்தக் காலத்து பழசுதான். ஆனால் பழமையில் ஊறிய பிற்போக்கு வாதியல்ல. இளமைக்காலத்தில் இருந்தே சமூகத்தின் மீதான பார்வையை செலுத்தக்கூடியவர். எம்மினத்தின் அரசியல் பயணத்தின் அம்சங்களை காலத்தால் அறிந்தவர். மென்முறையில் எழுந்த அரசியல் கோரிக்கைகள் ஆக்கிரமிப்பு வன்முறைகளால் ஒடுக்கப்பட்டதை கண்ணால் கண்டறிந்து குமறியவர். அரசியல் மென்முறைகள் அக்கிரமிப்பு வன்முறைகளால் ஒடுக்கப்பட்டதன் மறவடிவமாக அரசியல் வன்முறை வடிவம் கொண்டதை ஆரம்ப காலத்தில் இருந்தே வியப்புடன் பார்த்தவர். காலம் தன்பாட்டில் ஓடி, அம்மா குடும்பமாகி, பிள்ளைகள் பெற்று வளர்த்து..ஒருசராசரி பெண்ணாக, தாயாக ஆனார். இது வரை அம்மாவால் அப்படியாக வாழவும் முடிந்தது. ஆனாலும் மனதில் ஆயுதப் போராட்ட நியாயத்தின் கடமைக்காய் தன் கடைசிப்பிள்ளை அம்மாவின் பாசத்தை கொள்ளை கொண்ட செல்லமகன் ஆயுதம் ஏந்தப்புறப்பட்டதை அம்மா எப்படி எதிர்கொள்வது? பெற்ற பாசமா? இனத்தின் சோகமா? என்ற தர்ம சோதனையில் அம்மா குழம்பி மகனது ஆயுதப்போர் வடிவத்தெரிவை மனதால் எற்று சமநிலைக்கு வர காலம் பிடித்தது. ***** இப்போது மகன் போராளி. தெருவில் போகவர அம்மாவை எதரிகொள்வான். மகன் இப்போது வளர்ந்து விட்டான். வளர்ந்தவனையே கூட கழந்தையாய் பார்க்கும் அம்மா மனம், இப்போது மகனைக் கண்டு வியந்தது தன்ர சின்னப்பிள்ளை இப்போது எபரிய ஆளாய், ஏதேதோ வேலையாய் அங்கிங்கு ஓடித்திரிவது அம்மாவுக்கு சொல்ல முடியாத பெருமைதான். இயக்கத்தில் இணைந்த காலத்தில் மகன் சின்னப்பெடியன். வயதுக்கே உரிய வேகமான செயற்பாடும் குழப்படியும் கொண்ட இளைய போரளி. அவன் செய்யும் குழப்படிகள், வாங்கும் தண்டனைகள் எதுவும் அம்மாவுக்குத் தெரியய நியாயமில்லைத்தான். அதே போல் வடமராச்சி பொறுப்பாளர் தண்டனை கொடுத்து களைத்துப்போயா அல்லது இவன்தான் தண்டனை செய்து களைத்தப்போயா என்னவோ ஆள் நெல்லியடியில் இருந்து சாவகச்சேரிக்கு நடந்தெ வந்து சேர்ந்தும் அம்மாவுக்கு தெரிய எந்தநியாயமும் இல்லைத்தான். இதற்கிடையில் மகன் சண்டைக்களத்தில் என்ற செய்தியை மட்டுமே கேள்விப்பட்டு கவலைப்பட்ட அம்மா. கடும் சண்டை என்ற செய்தியால் எல்லா அம்மாக்களையும் போல அம்மாவும் பதறிக் கொண்டிருந்த ஒரு பொழுதில் மகன் காயமடைந்த செய்தி, பதறிய மனதுடன் அம்மா ஓடித்திரிந்தும், மகனின் நண்பர்கள் மூலம் அவன் நிலையறிந்து துடித்ததுமாக கழிந்தது நாட்கள். அம்மாவுக்கு மகனின் சுகநலன் அறியும் தொடர்புகளும் ஏற்பட்டுவிட்டன. ‘இதுவொரு சின்னக்காயம் இன்னும் கொஞ்ச நாள்ள காம்புக்கு வந்திடுவான்” என்று பொறுப்பாளர் சொல்லும் பொய்யான கதையை மீறி’ வயிற்றுக்காயம்” பதிணைந்து தையலுக்கு மேல் போட்டிருக்கு” ‘இன்னும் சாப்பிடத் தெடங்கேல்ல” என்று உண்மைகளை அறிந்துவிடும் அளவுக்கு அம்மாவுக்குத் தொடர்புகள் எற்பட்டு அதனை தொடர்ந்து மருத்துவனைக்கு போய்வரவும் தொடங்கிவிட்டா. மருத்துவமனை’கெதியாக என்னை துண்டு வெட்டி விடுங்கோ உடனே சண்டைக்குப் போகவேணும்” உறுதியின் வெளிப்பாடுகள். "என்ர இடத்தில ஆமியின்ர பொடியும் ஆயுதமும் இருக்கு காவு குழு அனுப்புங்கோ” ‘……….” எம்மையா? எதிரியையா? என சிந்திக்க வைக்கும் எழுத்தில் சொல்லமுடியாத வசவுகள். மருந்தின் மயக்கத்தில் தம் நிலை மறந்து உளறல்கள். ’ஜயோ தங்கேலாமல் கிடக்கு பெத்தடினைப் போடுங்கோ…..ஓ…” வேதனை தாங்கேலாமல் கிடக்கு இந்தக் காலை வெட்டுங்கோ” கேட்போரின் கண்களில் இரத்தம் கசிய வைக்கும் வேதனைக்குரல்கள். மருந்துக்களின் நெடியை மீறிய புண்களின் மணம். ****** மகனைப் பிரிந்திருந்த அம்மா தனது பாச உணர்வுகளும் அடிமனத்து விடுதலை உணர்வுக்குமாக ஒரு வடிகாலை தேடிக்கொள்ள, காயமடைந்த போராளிகளை பராமரிப்பவர்களில் ஒருவராகிவிட்டார். இந்தக் காலம் அம்மாவுக்கு விடுதலைப் போரை முன்னை விட கூடுதலாகவே அறிமுகம் செய்து வைத்தது. காயமடைந்த போராளிகளுடனான பரிச்சயமும், பழக்கமும் அம்மாவுக்கு போராட்டத்தின் இன்னொரு பக்கத்தை அறிமுகம் செய்து வைக்க அவவுக்கே தெரியாமல் அம்மா கொஞ்சம் கொஞ்சமாய் மாறிப்போனார். வெளியில் இருந்து போராட்டச் செய்திகளை மட்டும் கேட்பதற்கும், வெற்றிகளை கேட்டு மகிழ்சி அடைவதற்கும் அப்பால் அந்தச் செய்திகளின் உருவாக்கத்தின் யதார்த்தம் அம்மாவை அதிகமாக சிந்திக்க வைத்தது. விட்டுக் கொடுக்கப்பட முடியாததான இவ்விடுதலைப் போராட்டம் இத்தனை கடினமானதா? இவ்வளவு கண்ணீரை வரவழைப்பதா? இழப்புக்களை குறைத்தோ அல்லது குறைக்கவோ ஏதாவது செய்யமுடியாதா? அம்மா அரசியல், இராணுவ வித்தகத்தடன் சிந்தித்தாவோ? இல்லையோ? அம்மாவாகச் சிந்தித்தா. எல்லாப் போராளிகளையும் தன் பிள்ளையாய் பார்த்த அம்மாவாக சிந்தித்தா.. ******* எம் தாயகத்தில் விளைவிக்கும் ஆக்கிரமிப்பு கொடுமையின் ஒரு சிறு பங்காவது எதிரியின் கோட்டைக்குள் திருப்பிக் கொடுக்கப்படுவது அம்மா திருப்தியுடன் பார்க்கும் செய்திதான். அதுவுமல்லாது எதிரியின் பெரும் நிலைகள் அவ்வப்போது ஆங்காங்கே அழிக்கப்படுவதும் அது எதிரிக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சியும் அம்மா அறிவார். அதில் எம் போராளிகள் இங்க போல் பெரும் இழப்புக்களை சந்திப்பதில்லை என்பதும் அம்மாவுக்கு தெரியும். ஏற்கனவே எரிபற்று நிலையில் இருந்த அம்மாவின் மனம்தான் இந்த வழியை நாடிப்போனதோ அல்லது அம்மாவை அறிந்து சந்தித்த அந்த போராளிகள்ததான் அம்மாவின் மனதில் தீயை மூட்டினரோ? என்னவோ? அம்மா இப்போது புலனாய்வுத்துறையின் ஆள், முகவராம் வெளிவேலைக்கான முகவாரம். அம்மா இப்போது மாறி விட்டா. முன்பு குடும்பம் அயலவர் என்று எல்லா இடமும் செய்தி சொல்லி மருத்துவமனை சென்று வருபவர். இப்போது சுருக்கமாக வேறெங்கோ தனியாகப் போய்வரத்தொடங்கிவிட்டா. மருத்துவமனை போய்வர நேரம் இருக்குதோ இல்லையோ அம்மா இப்ப அங்கை எல்லாம் போய்வரக்கூடாதம். மருத்துவமனை என்றில்லை. இயக்கம் இருக்கிற இடம் ஒன்றுக்கும் போய் வரவும் கூடாதாம்.இயக்கத்திற்கு ஆதரவாக கதைக்கக் கூடாதாம். அம்மாவுக்கு தன்னையே நம்ப முடியாதபடி ஆச்சிரியம் கலந்த பெருமை சி.ஜ.ஏ, கே.ஜி.பி மொசாட் என்று புலனாய்வு அமைப்புக்களை பட்டியலிடுவதுடன் எங்கட வேலைத்திட்டம் என்று ஏதோ விளக்கங்கள். அம்மாவுக்கு எதுவெது விளங்குகிறதோ? இல்லையோ? மனதுக்குள் குறுகுறுவென்று ஆர்வ முனைப்பு. அம்மாவுக்குள் இப்போது வேறொரு உலகம் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அவர் இப்போது இன்னொரு ஆளாகவும் செயற்படக் கூடியவராக ஆகிவிட்டார். தலைநகர் அதிர்ந்தது” தற்கொலையாளி அடையாளம் காணப்பட்டார் ‘புலிகளைத் தேடி வலைவிரிப்பு” சூத்திரதாரி தலைமறைவு” அடையாளம் காணப்பட்டவரின் பெயர் போலியானதென பொலிசார் தெரிவிப்பு” உலகமே செய்திகளை வியப்புடன் நோக்கும். சூழ உள்ள சுற்றத்தினரும் கூட தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பது போல செய்திகளும் கற்பனைகளுமாக கதைகதையாய் பீற்றித்திரிவார். எல்லாவற்றையும் அமைதியாக அமத்தலாக பார்த்தபடி பட்டுக்கொள்ளாமல் இருப்பா அம்மா. ஆக, அம்மாவுக்குள் இப்போ வேறொரு உலகம் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. அவ்வப்போது வந்து அன்பு மகனை பார்த்துக்கொள்வது தவிர மற்றும்படி எவ்வளவோ மாறிப்போனா அம்மா. ***** இதற்கிடையில் அம்மாவுடன் மகனுக்கு சரியான கோபமாம். அம்மாவின் அக்கா பெரியம்மா – மூலமாக செய்தியனுப்பியிருந்தான்.’ இட இவர் பெரிய மனுசானாகி இப்ப இவருக்கு கோபமும் வருமே” என செல்லமாய் சொல்லிவிட்டிருந்தா அம்மா. இவனது போராளி நண்பனொருவன் ஊர்ப்பக்கமாய் வந்தபோது’ சின்னதாய் ஒரு மூஸ் அடித்து அம்மாவிடம் போய் இவனது சுகநலன் சொல்லியுள்ளான். அவனுக்கு சாப்பாடு கொடுக்காமல் அனுப்பிவிட்டவவாம் அம்மா. போய்வந்தவன் குறையாகவோ இல்லை பகிடியாகவோ சொன்னானோ அல்லது அவன் சொல்லாமல்விட இவன்தான் கதைவிட்டு அறிந்தானோ என்னவோ? ஆளுக்கு சரியான கோபம். அம்மா வழமையில் அப்படியில்லை. எல்லோரையுயம்’ குறிப்பாக போராளிகளை” உபசரிப்பதில் அதுவும் சக்திக்கு மீறியே உபசரிப்பதில் முன்னிப்பவர்தான். அன்று அந்த ஏழைத்தாய்க்கு என்ன கஸ்ரமோ வசதிக்குறைவோ? வீம்புக்காக அம்மாவில் கோபம் போட்டாலும் அவ்வப்போது பெரியம்மாவின் வீடு வந்து’ அம்மாவில் இப்போதும் கோபம்தான்” என்று சொல்லிப் போவான். மகன் பெரியம்மா வீடு வந்து. அம்மாவில் கோபம் சொல்லி நிற்பதும். அம்மாவின் சமையல் வேலிக்குள்ளால் பயணித்துபெரியம்மா வீடு வந்து மகனிடம் சேர்வதும் நல்லதொரு நாடகம். அம்மாவின் கை மணம் தெரிந்தும் தெரியாதது போல நல்ல சாப்பாடு என பெரியம்மாவை புகழ்ந்து விட்டு போகும் பிள்ளையை வேலியால் பார்த்திருப்பா அம்மா. தான் பார்ப்பது தெரிந்தால் அவருக்கு இன்னும் எழுப்பமாய்ப் போய்விடும் என அம்மா, மறைவாய் நின்று சிரிப்பது தெரியாமல் அம்மாவை தேடுவான் பிள்ளை. அன்றைய சுகமும் இன்றைய சோகமுமாய் ஆகிப்போன சின்னச்சின்ன ஞாபகங்கள் இப்படி எத்தனை? ****** காலம் கொஞ்சம் ஓடிப் போக மகன் இப்போது முதிர்ந்தவனாகி விட்டான். அம்மா எதிர்பார்க்க முடியாதபடி என் அவனே கூட எதிர்பார்க்காமல் பொறுப்புள்ளவனாகிப் போனான். இயக்கத்தின் ஆசிரியர் அணியொன்றின் உதவியாளன் என்பதும், அவ் ஆசிரியர் அணியுடனும் அவர்தம் பணியுடனும் அவனுக்கேற்பட்ட ஈடுபாடுமாக அவனைப் படிப்படியாக முதிர்ந்தவனாக ஆக்கிவிட்டதோ? சண்டை அணியில் நிற்கும் போது நண்பர்கள் செய்தது போல அவனும் கரும்புலி விண்ணப்பக் கடிதம் எழுதிக் காத்திருந்தது பழையகதை. இப்போது மொழிப்பெயர்ப்புத் திரைப்பட உருவாக்கற்பொறுப்பை கைமாற்றிக் கொடுத்து விட்டு, அவன் கரும்புலிக்கான அழைப்பை ஏற்றுக்கொண்டதே புதிய நிலை. அணிசேர்ப்பு, தொடர்வகுப்பு,கடும்பயிற்சி,எதிரியின் தலைநகர் அறிமுகமென தயார்படுத்தல்களுடன், தனிமைப்படுத்தப்பட்ட முகாம் வாழ்வுமாக மகனும் இப்போ வேறொரு உலகிற்கு மாறிப்போனான். ******** மகன் வழிதெருவில் எதிர்படாமல் போனதும், வழமைபோல தேடிப்போன இடத்தில் சரியான பதில் இல்லாது போனதும் அம்மாவுக்கு என்னவோ போலானது. காணாத மகனை தெருவில் கண்டபோது அவனது புதிய கூட்டாளிகளும், வழமையல்லாத நடை, உடை,பாவனையும் அம்மாவுக்கு எதையெதையோ எண்ணவும் வைத்தது. அம்மாவும் இப்போதும் பழைய அப்பாவி அம்மா இல்லையே. மகன் இவ்வழியில் கரும்புலியாய் தெரிவு செய்யப்பட்டுவிட அம்மா வெளிவேலைகளில் இருந்து நிறுத்தப்படுவது தவிர்க்க முடியாததாக ஆனது.’ தேவை ஏற்படும் போது அவசரமாக அழைக்கப்படுவீர்கள்” என்ற விளக்கத்தை அம்மாவால் முற்றாக நம்பவோ, புறக்கணிக்கவோ முடியவில்லை. தனக்கு கூறப்படுவது போலிக்காரணம் என்று தெரிந்தாலும் அதற்கு மேல் அம்மாவாலும் ஒன்றும் செய்யமுடியாமல் போக அம்மா, வழமையான அம்மாவாக வாழத்தொடங்கிவிட்டா. அம்மாவின் சந்தேகத்தை இன்னும் அதிகரிக்க அல்லது தீர்த்து வைக்க காரணமாக இன்னொரு செய்தியும் வந்து சேர்ந்தது. அம்மாவின் உறவுக்கார பெண்மணியொருவர் கொழும்பில் இருந்து வந்திருந்தார். மகனை கொழும்பில் கண்டதை அம்மாவுக்குச் சொன்னது மட்டுமின்றி, தன்னைக் கண்டதை அம்மாவுக்குச் சொல்ல வேண்டாமென்று அவன் சொன்னதையும் வலு கவனமாய் மறக்காமல் சொல்லிவிட்டுப் போனார். அம்மாவின் மனப்புதிர் மெல்ல மெல்ல விடுபட்டுப்போகும் காலத்தின் ஒரு நாளில்,’சொல்லாமல் கொள்ளாமல் திடுதிப்பென்று” வீடு வந்தான் மகன். பழைய கோபத்தை நினைவூட்டுவதும் செல்லம் கொஞ்சுவதுமாய், அதே பழைய மகனாய்……..ஒரே கொண்டாட்டம். வீடு நிறைந்து போனது. அப்பாவி அப்பாவுக்கும் அக்காளுக்கும், உறவுகளுக்கும் மகனது வீடு வருகையின் காரணம் தெரியாமல் ஒரே கொண்டாட்டம். அம்மாவுக்கு மட்டும் என்ன தெரியும்? ஒன்றுமே தெரியாதுதானே.’மகனது புதிய நடை, உடை பாவனையில்,வித்தியாசம் விளங்காது”‘அவன் கொழும்புக்கு போனதும் தெரியாது”‘அவனது அன்ரி வந்து ஒன்றுமே சொல்லவும் இல்லை” ஒரே மகிழ்ச்சி வீடு நிறைந்த மகிழ்ச்சி.. பிள்ளை ‘அம்மாவை தனக்கு சாப்பாடு ஊட்டி விடக்கேட்டது’ அம்மாவுக்கு நான் தான் தீத்துவேன் என்று கூறி உணவூட்டிவிட்டதும் ஏன் என்று வீட்டில் மற்றயோருக்குத் தெரியாது.’தம்பி இப்ப தான் செல்லம் கொஞ்சுது என்று அவர்கள் பரிகசித்து பேசும் போதும் அம்மா கண்ணீர் மறைத்து, முகம் சிரித்து,’உணர்வு மறைத்து உணவூட்டி…. வீட்டில் ஒரே சிரிப்பும் கொண்டாட்டமும் தான். அம்மாவுக்குத்தான் ஒன்றும் தெரியாதே. மகன் முகாம் திரும்ப முன்புபோல் அவசரப்படவும் இல்லை. எல்லோரிடமும் விளையாட்டும் , கதையுமாய் கொண்டாடி, உணவுண்டு, பாய்போட்டு நித்திரை கொண்டு அவன் முகாம் திரும்பும் வேளையில் அன்றைய பொழுது இரவைத் தொட்டுவிட்டிருந்தது. அன்று அவன் சொல்லிவிட்டுப் போனது போல தனயாக வரவில்லை அரை டசினுக்கு அதிகமான அவனது நண்பர்களால் வீடு மீண்டும் களைகட்டியது. அவனது அம்மா,அப்பா, அக்காக்கள், வந்திருந்த அனைவருக்கும் அம்மா, அப்பா,அக்கா ஆயினர். அத்தனை பிள்ளைகளும் மாறி மாறியும் ஒன்றாயும் அம்மா…..என்று உறவு சொல்லி அழைக்க வீடு களைகட்டியது. ஒன்றும் தெரியாத அப்பாவி அப்பாவும் அக்காக்களும் அவனது புதிய நண்பர்களின் உற்சாகத்தில் கரைந்து போயினர் அம்மாவும் தான். அவவுக்கும் தான் ஒன்றுமே தெரியாதே. அவவும் சேர்ந்து அந்த உற்சாகத்தில்…….. வந்திருந்த எல்லோருக்கும் தடல்புடலாய் சமையல், சாப்பாடு என்று வீடு அமர்க்களப்பட்டபோதும், குசினியும் முற்றமுமாய் பம்பரமாய் சுழன்ற போதும் அப்பாவி அப்பாக்கும் அக்காக்களுக்கும் ஒன்றுமே தெரியாதே…. அம்மாவுடன் வீடே வாசல் வரை வழியனுப்ப அவர்கள் புறப்பட்டு போயினர். ****** அவர்கள் விடைபெற்று போயினர். அந்தத்தாயின் வழியனுப்பலின் பின்னர் அவர்கள் தாயகத்திடமும் விடை பெற்றுப் போய்……போய் விட்டனர். நல்ல சூரியனின் பெயரால் கொடியோரின் ஆக்கிரமிப்புக் கதிர்கள் விலிகாமத்து மண்ணை சுட்டெரித்த காலத்தின் ஒரு பொழுதில் அவர்கள் எதிரியின் கோட்டைக்குள் புதுவரலாறு படைத்தனர். வீரமும் அர்பணிப்பும் மட்டுமன்றி மனிதாபிமான நிதானமும் நிறைந்த அவர்களது வெற்றிச் செய்தியால் உலகமே உறைந்து நின்ற வேளையில், தமிழீழத்து எல்லோரையும் போலவே அவனது குடும்பத்திலும் மகிழ்ச்சி வளிப்பாடுகள். ஆனால் அம்மா மனதில்?… ****** மகனது பொறுப்பாளர்களை அம்மா சந்திக்கும் அந்த நாள் வந்தேவிட்டது. மகன் எங்கே? என்பதற்கான வழமையயான பதில்கள் அம்மாவிடம் எடுபடாமல் போக, சந்திக்க வேண்டியது தவிர்க்க முடியாததாக ஆகிப்போனது. மனுசியின்ர வாயை முதலே அடைச்சுப்போட வேணும். கதைக்க விட்டால் தப்பேலாது” என்ற சிந்தனையில் மகன் நிற்குமிடம் அவனைச்சந்திப்பதில் உள்ள வசதிக் குறைவு…என பொருத்தமற்ற பொய்யான பதில்களுடன் பொருப்பாளர். ‘மகன் தூரத்தில்…., மட்டகளப்பில்…நிற்கிறான்…வர கொஞ்சம் காலம் செல்லும்” அம்மாவின் முன்னால் இரத்தம் நீராகிப்போன பொருபாளரின் வார்த்தைகள். அவரது உயிரற்ற வார்த்தைகளை மீறி அம்மாவின் உறுதியான கேள்வி. ‘எப்படி என்ர மகன் கடைசி வரைக்கும் சரியாக செயற்பட்டவனே………? ‘எனக்கு எல்லாம் தெரியும். நான் பெத்து வளத்த பெடியன் அவன் சொல்கிறது பொய் எண்டு எனக்குத் தெரியாதே” ‘உப்பிடி எத்தனை பொய்களை எனக்கு நீங்கள் சொல்லித்தந்திருப்பியள்” ‘வீட்ட வந்து அவன் நித்திரை கொள்ளேக்க அவன்ர பொக்கற்றுக்குள்ள பார்த்தன் வட்டுக்கோட்டை அடையாள அட்டை வச்சிருந்தவன்” என்ர பிள்ளை அம்மாவுக்கு சொல்லேலாதெண்டு எனக்குத் தெரியும். அதில நான் ஏதும் பிழை விட்டிடக்கூடாது என்று தான் நானும் அவனோடை ஒன்றும் கதைக்கேல்லை. ‘செய்தியை கேட்டுப்போட்டு அக்கா வீட்டை ஒடிப்போய் ரூபவாகினிதான் பார்த்தனான்” முகம் தெரியாததால ஒருதருக்கும் விளங்கேல்லை – பெத்ததாய் எனக்கு தெரியாமல் போகுமே. ‘றெயில் தண்டவாளத்துக்குப் பக்கத்துல கிடக்கிறான் என்ரபிள்ளை…” அடக்கி வைத்ததெல்லாம் வெடித்ததால் குமுறி அழும் அம்மாவிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை. உலகத்தில் உள்ள பொய்கள் எல்லாம் எங்கோ ஓடிப்போக விக்கித்து நினறவரிடம் அம்மா அந்த கடிதத்தைக் கொடுத்தா. தன் வீரச்சாவு வெளிப்படும் வேளையில் அம்மாவுக்கு கொடுக்கவென மகன் எழுதிய கடிதம். எங்கோ பிசகுப்பட்டு முன்கூட்டியே அம்மாவின் கையில். எண்ணற்ற தடவைகள் படிந்துறைந்த போன அந்தக் கடிதத்தில் அவன் எல்லாம் எழுதியிருந்தான். முத்தாய்ப்பான வரிகள்… உன் கடன் தீர்க்காமல் போகின்றேனம்மா. தமிழீழத்தில் அடுத்த பிறப்பில் உன் வயிற்றில் பிள்ளையாகவே என்னைப் பெற்றிடு அம்மா இப்பிறப்பில் தீர்க்காத உன் கடன் எல்லாம் அப்பிறப்பில் தீர்த்திடுவேன் அம்மா அம்மா தாயே உங்களை எமாற்ற உங்களின் பிள்ளைகள் நாங்கள் எத்தனை திட்டங்கள் போட்டோமம்மா. ஒன்றுமே கூறாது நீ நின்றதும் வென்றதும் எவ்வண்ணம் தாயே. தாயகத்தின் தாயே உங்களிடம் நாங்கள் தோற்றுத்தான் போனோமம்மா… ********* ஆசிரியரை பற்றி…. விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தரான பொட்டம்மான் பற்றி உலகத்திற்கு தெரிந்தவவைகளில் அனேகமானவை புனைவுகளே. புலனாய்வு நடவடிக்கை பணிப்பாளர்களின் துரதிஸ்டம் அவரையும் வாழ்கை முழுவதும் பிடித்திருந்தது. இயற்கையான தனது வெளிப்பாடுகளையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தும் சுதந்திரம் மட்டுப்பட்டிருந்தது. அவர் ஒரு படைப்பளியாகவும், தீவிர வாசகராகவும் இருந்தார் என்பது பலர் அறியாதது. வன்னியிலிருந்த வெளியான பத்திரிகைகளிலும், இலக்கிய சஞ்சிகைகளிலும் எப்பொழுதாவது எழுதிக்கொண்டிருந்தார். வெளிச்சம் சஞ்சிகையில் அவர் எழுதிய சில கதைகளில் இதுவும் ஒன்று. http://pagetamil.com/?p=5409-
-
- 12 replies
Featured by மோகன் -
-
இது ஒரு தீபாவளிக் கதை: பாவம் நரகாசுரன் -பேராசிரியர் சி. மௌனகுரு
இது ஒரு தீபாவளிக் கதை: பாவம் நரகாசுரன் -பேராசிரியர் சி. மௌனகுரு
இது ஒரு தீபாவளிக் கதை: பாவம் நரகாசுரன் -பேராசிரியர் சி. மௌனகுரு நாளைக்குத் தீபாவளி. அடிக்கடி நண்பர்களும் மாணவர்களும் தொலைபேசியில் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார்கள். அனைவரும் மகிழ்ச்சிகரமாக இருகிறார்கள் போலத் தெரிகிறது. கொண்டாட்டம் என்பது மகிழ்ச்சிதானே? மகிழ்ச்சியாக எல்லோரும் இருப்பதைத்தானே நாம் விரும்புகின்றோம். மட்டக்களப்பில் நான் பிறந்த காலங்களில், அதாவது 1940களில், இற்றைக்கு 77 வருடங்களுக்கு முன்னர், தீபாவளியை யாரும் கொண்டாடவில்லை. நாங்களும் வீட்டில் இதைக் கொண்டாடியதாக ஞாபகம் இல்லை. எமக்கு அன்று கொண்டாட்டம், சித்திரை மாதப் புதுவருடம் தான். அன்று தான் எங்கள் வீட்டில் பலகாரம் சுடுவார்கள். முதல் நாளிரவு நான்கைந்து குடும்பங்கள் சேர்ந்து பலகாரம் சுட்டு, அதனைத் தமக்குள் பகிர்ந்து கொள்வார்கள். குடும்பங்களின் விழா அது; கிராமங்களின் விழா அது புது உடுப்புகளை, காலையில் முதலில் தென்னம்பிள்ளைகளுக்கு உடுத்திவிடச் சொல்லுவார் அம்மா. தென்னம்பிள்ளைகள் அணிந்த உடுப்பைத்தான் நாம் பின்னர் அணிவோம். இயற்கையை நேசித்த மனிதர்கள்; அன்றைய சித்திரை நாள், எங்களுக்குப் பெரும் கொண்டாட்ட நாள். தைப்பொங்கலும் கொண்டாட்ட நாள்தான். அதனை விவசாயிகள் கொண்டாடுவர். ஏனையோரும் வீட்டில் பொங்கி மகிழ்வர். ஆனால், சித்திரை வருடமளவுக்கு அது, அன்று பெரும் கொண்டாட்டமில்லை. சின்னவயதில் தமிழ்நாட்டிலிருந்து கல்கி தீபாவளி ஆண்டுமலர், ஆனந்தவிகடன் தீபாவளி ஆண்டுமலர் எனச் சில மலர்கள் வரும். அவற்றின் மூலம்தான் தமிழகத் தீபாவளி எமக்கு அறிமுகமாகியதாக ஞாபகம். அதன்மூலம்தான் தலைத்தீபாவளி, கங்காஸ்னானம், அத்திம்பேர், தீபாவளிச்சீடை முறுக்கு, குடும்பிவைத்து பூணூல் போட்ட தாத்தாமார், மடிசார் வைத்த பெண்கள் எனப் பல தீபாவளி சார்ந்த சமாச்சாரங்கள் சிறுவயது மனதில் படிய ஆரம்பித்தன. தீபாவளிச் சிறுகதைகள் வேறு, இவற்றை மனதில் அழுத்தின. நரகாசுரனைச் சத்தியபாமா துணையுடன் கிருஸ்ண பகவான் அழித்த கதையும் எம்மனதில் வேரூன்றியது. சற்றுவளர்ந்த பின்னர், 15ஆவது வயதில் திராவிடக் கழகக் கருத்துகளுக்கு அறிமுகமானபோது, நரகாசுரன் என்ற திராவிட குலத் தலைவனை, ஆரியனாகிய கண்ணன் அழித்த கதை எமக்கு அறிமுகமானது. நரகாசுரன் என்பவன் நரன்; அதாவது மனிதன். அசுர என்பதன் அர்த்தம், சுரன் அல்லாதவன். சுரர் என்றால் தேவர். தேவர்கள் என அழைக்கப்பட்ட ஆரியர்கள், சுரபானம் எனும் மதுவை அருந்தியதால் சுரர் என அழைக்கப்பட்டனர். திராவிடர்கள் ஒழுக்க சீலர்கள்; மதுஅருந்தாதோர். ஆகவே, அசுரர் என்றால் சுரம் அருந்தாதோர் என்பது அர்த்தம் (அ+ சுரம்) என்ற விளக்கங்களைத் திராவிடக்கழக நூல்கள் தந்தபோது, இளைஞரான நாம் அதனால் ஈர்க்கப்பட்டோம். இவற்றையெல்லாம் தாண்டி, மெல்லமெல்ல தமிழகத் தீபாவளி, தமிழ்ப் பண்பாட்டுக்குள் புகத்தொடங்கி, சித்திரை வருடத்துக்கு அடுத்த பெரும் கொண்டாட்டமாக இடம்பெறலாயிற்று. 1960களில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், எமக்கு தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், சமணப் புலவர்களின் தனிப்பாடல்கள் என்பன அறிமுகமாகின. அவர்கள் பிராமண மதத்துக்கும் வைதீக மதத்துக்கும் எதிரானவர்கள்; நால்வகைப் வருணப் பாகுபாட்டை விரும்பாதவர்கள்; மக்கள்பால் நின்றவர்கள்; தமிழ்நாட்டில் பெரும் தாக்கத்தை அன்று எற்படுத்தியவர்கள் என்ற விவரங்களும் சமணத் தலைவரான மகாவீரர், ஸ்தாபித்த சமணமதம் அதன் தத்துவங்கள் என்பனவும் அறிமுகமாகின. இவற்றை எமக்கு அறிமுகம் செய்தவர்கள் பேராசிரியர்களான கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன், கைலாசபதி, வேலுப்பிள்ளை ஆகியோராவர். கைலாசபதி வகுப்பில் தொடர்ச்சியாகச் சமண தத்துவத்தை எமக்கு விளக்கினார். வேலுப்பிள்ளையும் தமிழ்ச் சமணம், தமிழ்ப் பௌத்தம் பற்றி ஆராய்ந்து எமக்குக் கூறினார். இதன் காரணமாக, சமண மகாஞானியான மகாவீரர் மீது ஒரு மதிப்பு உண்டானது. பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் வகுப்புகள் வெகுசுவராஸ்யமானவை. சிரித்துக்கொண்டு கதையோடு கதையாகப் பல ஆழமான விடயங்களை எளிமையாகக் கூறிசெல்வார். ஒருநாள், அவர் எங்களுக்குப் படிப்பித்துக் கொண்டிருக்கையில், “உந்தத் தீபாவளி எப்படி வந்தது என்று தெரியுமோடா”? என்று கேட்டார். நாங்கள் நரகாசுரன் கதையைக் கூறினோம். “அதெல்லாம் புழுகடா. சமண மதத்தின் தலைவரான மகாவீரர் சமாதி அடைந்த நாளை நினைவு கூரப் பல தீபங்களை ஏற்றி வைத்து, சமணர் கொண்டாடிய சமண விழாவை, சைவர்கள் தம்வசப்படுத்திக்கொண்ட கதை தாண்டா தீபாவளி. அதற்காக உருவாக்கப்பட்ட கதைதான் நரகாசுரன்கதை” என்றார். சைவம், சமண மதத்திலிருந்து பல விடயங்களைத் தன்வயப்படுத்திச் சைவமாக்கிக் கொண்டது என்பதற்கு நிறைய உதாரணங்கள் கூறி, இதுவும் அதில் ஒன்றடா என்றார். எங்களுக்கு வியப்பு அதிகமாயிற்று. தீபாவளியின் மூலம் பற்றி பேராசிரியர் வேலுப்பிள்ளை கூட, தனது நூலில் ஒரு கட்டுரை எழுதியமை ஞாபகம் வருகிறது. காலங்கள் பல கடந்து விட்டன.... இன்று 2020ஆம் ஆண்டு, இன்று, வடக்கு-கிழக்கு தமிழர் பிரதேசங்களில் தீபாவளி பெரும் கொண்டாட்டம். நரகாசுரனை அழித்த கதை, பாடசாலைகளிலும் சமயச் சொற்பொழிவுகளிலும் சர்வசாதாரணமாகச் சொல்லப்படுவதாயிற்று. அரசியல்வாதிகளும் ஆட்சியதிகாரத்தில் உள்ள பெரும்தலைவர்களும் சமயத் தலைவர்களும் நரகாசுரன் ஒழிந்த நாள் என்றே மக்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றனர். நரகாசுரனுடன் தீபாவளி இணைக்கப்பட்டுவிட்டது; பெரும் சமயக் கொண்டாட்டம் ஆகிவிட்டது. இக்கொண்டாட்டத்தை இனி மக்களிடமிருந்து பிரித்துவிட முடியாது. காரணங்கள் பல; ஒன்று, இது ஒரு பெரும் சமய விழாவாகி விட்டது. இரண்டு, இது ஒரு பெரும் கொண்டாடமாகிவிட்டது. கொண்டாட்டம் ஆனமையால் மக்கள் கூடுதல், அதனால் கிடைக்கும் பெருமகிழ்ச்ச்சி, ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி தெரிவித்தல் என்ற மனிதகுலம் விரும்பும் அடிமனநல்லியல்புகள் இதில் உள்ளன. மூன்று, பெரும் வணிக நிறுவனங்களின் இலாபம், இக்கொண்டாட்டத்தில் அடங்கியுள்ளது. உடுப்புகள், பட்டாசு, பலகார வகைகளுக்கான மூலப்பொருள் வியாபாரம் என்பன இதில் அடங்கும். நான்கு, கோவில் வருமானம், பூசகர் வருமானம் என்பன இன்னொருபுறம் உள்ளன. ஐந்து, பத்திரிகைகளின் தீபாவளிமலர் வருமானம், மற்றொரு புறம் உள்ளது. ஆறு, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் இடைவிடாத கருத்தேற்றமும் அவை, அவற்றால் அடையும் பெருவருமானமும் இன்னொரு புறம் உள்ளது. ஏழு, அதனை விரும்பி ஏற்றுப் புகழ்பெறச் செல்லும் நமது கலைஞர்களும் அறிஞர்களும் இன்னொரு புறம் பெருவாரியாகக் காணப்படுகின்றார்கள். எனவே, தீபாவளியைக் கொண்டாட வேண்டாம் என எப்படிச் சொன்னாலும் அக்கொண்டாட்டத்தை இலகுவில் போக்கிவிட முடியாது. அது, இந்து மக்கள் கொண்டாட்டமாகி விட்டது. கொண்டாட்டங்களை மிகவும் வரவேற்கும் பின் நவீன சிந்தனையாளர்களை நாம் காண்கிறோம். மக்கள் இணைகிறார்கள்; மக்கள் மகிழ்கிறார்கள் என அவர்கள் கொண்டாட்டங்களுக்கு ஒரு புது வியாக்கியானம் அளிக்கிறார்கள். ஆனால், கொண்டாட்டங்களுக்குப் பின்னால் மறைந்து கிடக்கும் சுரண்டலையும் பேதங்களையும் மறக்க வைக்கும் போதைநிலையையும் அவர்கள் தோலுரித்துக் காட்டுவதில்லை. தீபாவளியைக் கட்டுடைத்துப் பார்க்கலாம்; அதன் அதிகாரம் எங்கிருக்கிறது என்று பார்க்கலாம்; தீபாவளிக் கதை கூறும் நரகாசுரன் கதைப் பிரதியைக் கட்டுடைத்துப் பார்க்கலாம். இவை யாவும் ஒரு புலமைத்துவ இன்பப்பயிற்சியுமாகும் (Intelectual pleasure excersise). தீபாவளி அன்றுபோல் இன்றில்லை. நிறைய மாறி விட்டிருக்கிறது. இன்னும் மாறும்; இடையில் வந்து மாட்டிக்கொண்டான் நரகாசுரன்; பாவம் நரகாசுரன். அவனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இது-ஒரு-தீபாவளிக்-கதை-பாவம்-நரகாசுரன்/91-258874-
- 2 replies
Featured by மோகன் -