Leaderboard
-
ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்69Points8907Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்64Points87984Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்25Points3043Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்18Points2947Posts
Popular Content
Showing content with the highest reputation since 12/08/25 in Posts
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள் அண்மையில் இஸ்ரேலுக்குப் பயணம் செய்த தனது அனுபவங்களை திரு நிராஜ் டேவிட் அவர்கள் காணொளிகள் வாயிலாக வெளியிட்டு வருகிறார். அவற்றில் சில காணொளிகளில் அவர் அங்கு தங்கியிருந்த நாட்களில் பயணித்த பலவிடங்களையும் காட்சிப்படுத்தியிருந்தார். அவற்றுள் ஒன்று யூத மக்கள் மீது இரண்டாம் உலக யுத்த காலத்தில் நாசிகளால் மேற்கொள்ளப்பட்ட இனக்கொலை தொடர்பான சாட்சியங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றினை பாரிய நினைவாலயம் ஒன்றினுள் காட்சிப்படுத்தியிருந்தமை பதிவுசெய்யப்பட்டிருந்தது. தம்மீது நிகழ்த்தப்பட்ட இனக்கொலை தொடர்பாக தமது சந்ததிகள் தொடர்ச்சியாக அறிந்துகொள்ளவேண்டும் என்பதும், இனிமேல் அவ்வாறனதொரு இனக்கொலை தமது இனம் மீது நடக்காது தவிர்ப்பது எந்தளவு முக்கியமானது என்பதையும் தம் இன மக்களுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்துவதும் இந்நினைவாலயத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். கொல்லப்பட்ட அறுபது இலட்சம் யூதர்களில் ஒரு பகுதியினர் பயன்படுத்திய காலணிகள், அவர்களால் அணியப்பட்ட கறுப்பும் வெள்ளையும் சேர்ந்த வரிரியிலான ஆடைகள், அவர்கள் பயன்படுத்திய உணவருந்தும் பாத்திரங்கள், அவர்களின் புகைப்படங்கள் என்பவற்றோடு அவர்களை வதைப்படுத்திக் கொன்றுபோட்ட பல நாசிப் படைத் தளபதிகளின் புகைப்படங்களும் அங்கு மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இவற்றைத் தனது காணொளிகளில் காண்பித்த டேவிட் அவர்கள், எமதினத்திற்கு நடந்த அக்கிரமங்கள், அழிவுகள் குறித்து நாம் பேசுவதை எம்மில் ஒரு பகுதியினரே தடுத்து வருவதையும், சிங்கள இனத்தோடு நாம் ஒன்றித்து வாழ்வதை இவ்வாறான "பழங்கதைகள் பேசுதல்" எனும் முயற்சி தடுத்துவிடும் என்றும், அது இனவொற்றுமையினைக் குலைத்துவிடும் என்றும் காரணம் கூறிவருவதையும் குறிப்பிட்டு அங்கலாய்த்திருந்தார். யூதர்கள் தமக்கு நடந்த அழிவினைத் தொடர்ச்சியாகப் பேசியும், காட்சிப்படுத்தியும், ஆவணப்படுத்தியும் வரும் நிலையில், நாமோ எம்மீது நடத்தப்பட்ட அழிவுகளை வேண்டுமென்றே மறுத்தோ அல்லது மறைத்தோ வாழத் தலைப்படுதல் ஈற்றில் எமது இருப்பிற்கே முடிவாய் அமைந்துவிடும் என்பதும் அவரது ஆதங்கமாக இருந்தது. இக்காணொளிகளின் இறுதிப்பகுதியில் தமிழ் மக்களை நோக்ல்கி வேண்டுகோள் ஒன்றினை அவர் முன்வைத்தார். அதுதான் நாம் அனைவரும், தனிப்பட்ட ரீதியிலோ அல்லது ஒரு குழுவாகவோ எம்மீது நடத்தப்பட்ட அனைத்து அக்கிரமங்களையும் ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒருவடிவில் கட்டாயம் ஆவணப்படுத்தியோ அல்லது காட்சிப்படுத்தியோ தீரவேண்டும் என்பது. அவரது காணொளிகளைப் பார்த்தபோது அவர் கூறுவது எனக்குச் சரியென்றே பட்டது. ஏனென்றால், எம்மீது நடத்தப்பட்ட அநீதிகளை நாமே பேசவோ அல்லது காட்சிப்படுத்தவோ மறுப்பின், வேறு யார்தான் இதைச் செய்யப்போகிறார் எனும் கேள்வி எனக்குள் வந்தது. ஆகவேதான் எம்மீது நடத்தப்பட்ட அக்கிரமங்கள் தொடர்பான எனது அனுபவங்களை இங்கு பதிவிடலாம் என்று நினைக்கிறேன். இத்தளத்தில் இருக்கும் ஏனையவர்களும் தமது தனிப்பட்ட அனுபவங்களை இங்கு பகிருமாறும் வேண்டிக்கொள்கிறேன்.8 points
-
வாழைப்பூ வடை
8 pointsவாழைப்பூ வடை -------------------------- வீட்டுக்கு வெளியே என்னை இருக்க வைத்திருப்பதற்கு அவன் ஏற்கனவே இரண்டு தடவைகள் மன்னிப்பு கேட்டிருந்தான். வீட்டுச் சுற்றுமதிலுக்கும் வெளியே இரண்டு பிளாஸ்டிக் கதிரைகளையும், ஒரு சின்ன பிளாஸ்டிக் மேசையும் போட்டிருந்தான். எனக்கு துடக்கு என்று அவன் சொன்னான். இறந்தவர் எனக்கு ஆண் வழியில் உறவுமுறை என்பதால் இந்த துடக்கு 31 நாட்கள் வரை இருக்கும் என்றான். அவனின் வீட்டில் ஏதோ கோவில் விரதமோ அல்லது மாலை போட்டிருக்கின்றார்கள், அதனால் என்னை வீட்டின் உள்ளே விடவில்லை என்றும் சொன்னான். நான் அதை சரியாகக் கவனிக்கவில்லை. பிளாஸ்டிக் பொருட்கள் அழிவதும் அரிது, அவற்றை துடக்கு கூட தொட முடியாது போல என்று நினைத்துக் கொண்டே கவனமாக கதிரையின் உள்ளே வசதியாக உட்கார முயன்று கொண்டிருந்தேன். நேற்று துக்க வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வந்த ஒரு குடும்பத்தில் ஒரு மகன் மிகவும் செழிப்பாக இருந்தார். அவர் அங்கிருந்த பிளாஸ்டிக் கதிரைக்குள் மிகவும் சிரமப்பட்டே தன்னை திணித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு தடவை எட்டி எடுப்பதற்காக அசைந்த போது அந்தக் கதிரை ஒரு கணம் வளைந்து படீரென்று உடைந்து போனது. துக்கம் விசாரிக்க வந்தவர்கள் பதறிப் போனார்கள், அவர்களின் பிள்ளைக்கு ஏதேனும் அடிபட்டு விட்டதோ என்று. அவனை நான் கடைசியாகப் பார்த்து 35 வருடங்களுக்கு மேல் இருக்கும். சிறு வயதில் ஒரே வகுப்பில் படித்தோம். பாடசாலையிலிருந்து என்னுடைய வீட்டுக்கு வரும் வழியிலேயே அவனுடைய வீடு இருந்தது. அவனுடைய வீட்டுக்கு அடிக்கடி போயிருக்கின்றேன். அங்கே எல்லோருமே அழகாக இருந்தார்கள். பயில்வான்கள் போன்ற உடற்கட்டும் அவர்களுக்கு இருந்தது. படிப்பு தான் சுத்தமாக வரவில்லை. அவனோ அல்லது அவன் வீட்டிலோ அதையிட்டு எவரும் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. என் வீட்டிலும் அதே நிலைதான். பிள்ளைகள் காலை எழும்பி கண் காணாமல் எங்கேயாவது போனால் போதும் என்றே பல குடும்பங்கள் இருந்தன. தினமும் பாடசாலை முடிந்த பின்னும் நாங்கள் உடனேயே வீடு போய் சேர்ந்ததும் இல்லை. அங்கங்கே நின்று இருந்து என்று வீடு போக பொழுது செக்கல் ஆகிவிடும். எவரும் எவரையும் தேடவில்லை என்பது இப்போது ஆச்சரியமாக இருக்கின்றது. ஒரு நாள் பாடசாலை முடிந்து கடலாலும், கரையாலும் நடந்து வந்து கொண்டிருந்த போது, இரண்டு ஆட்கள் அளவு இருக்கும் பெரிய சுறா மீன் ஒன்றை கடல் தண்ணீரில் வைத்து துண்டு துண்டாக்கிக் கொண்டிருந்தார்கள். நீலக் கடல் செக்கச் சிவந்து இருந்தது அப்போது. பின்னரும் அந்தக் கடல் பல சமயங்களில் சிவப்பாகியது. உலகில் கடல் போல வேறு எதுவும் தன்னைத் தானே உடனடியாக விரைவாகச் சுத்தம் செய்து கொள்வதில்லை. பயில்வான் போன்று இருந்தவன் இப்போது மிகவும் மெலிந்து இருந்தான், ஆனால் முகம் அதே அழகுடன் இருந்தது. அடுத்த கதிரையின் நுனியில் ஒரு எச்சரிக்கையுடன் இருந்து கொண்டே எப்படியடா இருக்கின்றாய் என்று ஆரம்பித்தான். அவன் வீட்டிலேயும் யாரோ ஒரு கதிரையை உடைத்து இருப்பார்கள் போல. நல்லா இருக்கின்றேனடா என்று சொல்ல வேண்டிய பதிலைச் சொன்னேன். மனைவியையும், மகளையும் கூப்பிட்டு அழைத்து என்னை அறிமுகப்படுத்தினான். நாங்கள் சிறு வயது நண்பர்கள் மட்டும் இல்லை, சொந்தக்காரர்கள் கூட என்று அவர்களுக்கு சொன்னான். அவர்கள் கொஞ்சம் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். துக்கம் நடந்த வீட்டுக்கும் அவனுக்கும் போன வாரம் கூட பெரிய சண்டை நடந்து கொண்டிருந்ததாக எனக்கு முன்னரேயே சொல்லி இருந்தார்கள். அவன் வளர்க்கும் கோழிகளை அவர்களின் வீட்டு நாய்கள் கடித்துக் கொன்று விட்டன என்பதே கடைசி சண்டைக்கான காரணம். அவர்களோ தங்களிடம் நாய்களே இல்லை என்கின்றார்கள். ஆனால் தெருவில் போய் வரும் வாழும் எந்த நாய்க்கும், அதன் குட்டிகளுக்கும் அவர்கள் மிஞ்சுவதை போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களின் வீட்டின் முன்னால் எப்போதும் ஒரு நாலு ஐந்து படுத்தே இருந்தன. எல்லோருமே சொந்தமா என்பதே அவனுடைய மனைவியினதும், மகளினதும் ஆச்சரியமாக இருக்கவேண்டும். தலைமுறை தலைமுறையாக அங்கேயே பிறந்து, அங்கேயே திருமணமும் முடித்தால், அங்கே எல்லோரும் சொந்தமாகத்தானே இருக்கவேண்டும். பிராமண குடும்பங்களில் வழக்கத்தில் இருக்கும் ஒரே கோத்திரத்தில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற முறையை அந்த ஊரில் அறிமுகப்படுத்தினால், அந்த ஊரின் நிலை சிக்கலாகிவிடும். நீ எப்படியடா இருக்கின்றாய் என்று தான் நானும் ஆரம்பித்தேன். வசதிக்கு ஒரு குறைவும் இல்லை என்றே தெரிந்தது. அழகான பெரிய புது வீடு கட்டியிருந்தான். வீட்டின் வெளியே தெருவிலேயே இரண்டு வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு உள்ளூர் சுற்றுலாக்களையும், வாகனங்களையும், ஏனைய வசதிகளையும் செய்து கொடுக்கும் தொழிலில் இருந்தான். தொழிலும் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது என்றே தெரிந்தது. நான் நினைத்தவற்றையே அவனும் சொன்னான். வாழைப்பூ வடை என்றபடியே அவனுடைய மகள் ஒரு தட்டு நிறைய வடைகளை கொண்டு வந்து பிளாஸ்டிக் மேசையில் வைத்தார். வாழைப்பூ வடை சாப்பிட்டு சில வருடங்கள் ஆகியிருந்தது. தமிழ்நாட்டு நண்பன் ஒருவன் ஒரு நாள் வேலையில் கொண்டு வந்திருந்தான். வீட்டில் செய்ததாக ஞாபகம் இல்லை. வாழைத் தண்டிலும் அவர்கள் கூட்டு அல்லது கறி என்று ஏதோ செய்வார்கள். பல மரக்கறிகளைப் போலவே அதுவும் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் மிகவும் நல்லது, உடல்நலத்திற்கு உகந்தது என்றார்கள். உடல்நலத்திற்கு உகந்தவை எல்லாம் கொஞ்சம் முயற்சி செய்தே சாப்பிட வேண்டியவை போல, 'கொஞ்சம் சுகர்..........' என்று சொன்னான். அப்பொழுது தான் அவனை கவனமாக உற்றுப் பார்த்தேன். பயில்வான் போல இருந்தவன் மெலிந்து போயிருந்த காரணம் தெரிந்தது. கொஞ்சம் என்றில்லை, மிக நன்றாகவே நீரிழிவு அவனை தாக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. மருந்து ஏதும் எடுக்கின்றாயா என்றேன். தான் முந்தி ஆங்கில மருந்துகள் எடுத்ததாகவும், ஆனால் இப்போது எடுக்கவில்லை என்றும் சொன்னான். ஆங்கில மருந்துகள் எதுவுமே வேலை செய்யவில்லை என்றான். நல்ல ஒரு நாட்டு வைத்தியர் அங்கே இருப்பதாகவும், அத்துடன் தான் சில பத்தியங்களை பின்பற்றுவதாகவும் சொன்னான். அதில் ஒன்று வாழைப்பூ வடை. உடம்புக்கும், இரத்தத்திற்கும் மிகவும் நல்லது என்றான். சுவையாகவும் இருந்தது. பழங்கள் சாப்பிடாமல்ல் காய்களைச் சாப்பிடுவதாகவும் சொன்னான். மாம்பழம் சாப்பிடாமல்ல் மாங்காய் சாப்பிடுவதாகச் சொன்னான். அதுவும் ஒரு மருந்து என்றான். இதை ஆபிரிக்காவில் ஒரு ஆராய்ச்சியில் கண்டு பிடித்து இருக்கின்றார்கள் என்றான். ஆபிரிக்காவில் மனிதர்கள் தோன்றினார்கள் என்ற தகவலை விட வேறு எந்த தகவலையும் நான் அதுவரை ஆபிரிக்காவுடன் இணைத்து வைத்திருக்கவில்லை. ஆபிரிக்க மாங்காய் புதிய தரவு ஒன்றாக தலைக்குள் போனது. ஒரு சிவராத்திரி பின் இரவில் ஒரு வீட்டு மாமரத்தில் ஏறி மாங்காய்கள் பிடுங்கிக் கொண்டிருந்தோம். நான் தான் மரத்தில் ஏறி இருந்தேன். உச்சியில் நின்று கொண்டிருந்தேன். சத்தம் கேட்டோ அல்லது இயற்கை உபாதை ஒன்றை கழிக்கவோ அந்த வீட்டுக்காரர் எழம்பி அவர்களின் பின் வளவு நோக்கி வந்து கொண்டிருந்தார். கீழே நின்றவர்கள் எல்லோரும் ஓடிவிட்டார்கள். டேய்............டேய்.......... என்று சத்தம் போட்டுக் கொண்டே வீட்டுக்காரர் நடந்து வந்தார். அவருக்கு வயிறு முட்டியிருந்தது போல, அவர் ஓடி வரவில்லை. உச்சியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த நான் இனிமேல் இறங்குவதற்கு நேரமில்லை என்று ஒரே குதியாகக் குதித்து விழுந்து ஓடினேன். கைகால்கள் எதுவும் உடையவில்லை. சில உடம்புகள் மிகப் பாவம் செய்தவை. அவை சில ஆன்மாக்களிடம் மாட்டுப்பட்டு எந்தக் கவனிப்பும் இல்லாத ஒரு சீரழிந்த வாழ்வை வாழ்கின்றன. அவன் தனக்கு இது எதுவுமே ஞாபகம் இல்லை என்றான். ஆனால் நாங்கள் அப்பவே மாங்காய்கள் நிறைய சாப்பிட்டது நல்ல ஞாபகம் என்றான். சில நாட்களின் பின், நான் திரும்பி வருவதற்கு விமான நிலையம் போவதற்கு அவனுடைய இரண்டு வாகனங்களையே எடுத்திருந்தோம். ஒன்றில் அவனும் வந்தான். அருகே இருந்தான். கோழிச் சண்டைக்காக அங்கே இருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டான். வழியில் போக்குவரத்து மிகவும் நெரிசலாகி விமான நிலையம் வந்து சேர்வதற்கு மிகவும் தாமதமானது. யாரோ அமைச்சரோ அல்லது பிரபலமான ஒருவர் அந்த வழியால் போய்க் கொண்டிருந்தார் போல. அவசரமாக இறங்கி, இரண்டு வாகனங்களிலும் வந்த சொந்தபந்தங்களிடம் இருந்து விடைபெற்று, ஓடி ஓடி, விமானம் கிளம்பும் கதவடிக்கு வந்த பின் தான் அவனுக்கு நான் போய் விட்டு வருகின்றேன் என்று சொல்லவில்லை, அவனை நான் திரும்பிக் கூட பார்க்கவில்லை என்பது புரிந்தது. அவன் இறந்து விட்டான் என்ற செய்தி சில மாதங்களில் வந்தது.8 points
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
கண்களில் கொலை வெறி கொப்பளிக்க அவர்கள் அப்பகுதியெங்கும் மனிதர்களைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் தம்பியின் முதுகில் துப்பாக்கியை வைத்து அழுத்தி, "வீட்டிற்குள் போ, நீங்கள மறைத்துவைத்திருக்கும் ஆயுதங்களை எங்களுக்குக் காட்டு" என்று அதட்டினான். தகப்பானரையும், சிற்றன்னையையும் என்னையும் தலையில் கைகளை வைத்தபடி முழங்காலில் இருக்கவைத்துவிட்டு தம்பியை அழைத்துக்கொண்டு வீட்டினுள் சென்றார்கள் சில இராணுவத்தினர். முதல் நாள் எமது வீட்டிற்கு அருகில் வீழ்ந்து வெடித்த செல்களின் துகள்கள், சில வெற்று ரவைக்கூடுகள் என்று சிலவற்றை அலுமாரியினுள் ஒளித்து வைத்திருந்தது அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது. அடக் கடவுளே, அவற்றைக் காணப்போகிறார்கள், அவைதான் ஆயுதங்கள் என்று கூறிக்கொண்டே எம்மைத் தாக்கப்போகிறார்கள் என்று அச்சப்படத் தொடங்கினேன்.நான் நினைத்தவாறே நாம் ஒளித்துவைத்திருந்த செல்த் துகள்களையும், வெற்று ரவைக் கூடுகளையும் அவர்கள் கண்டார்கள். நான் நினைத்தவாறே அவற்றை எங்கிருந்து எடுத்துவந்தீர்கள் என்று எம்மைப் பார்த்துக் கேட்டார்கள். வீட்டினருகில் வீழ்ந்தவற்றைத்தான் எடுத்துவைத்தோம் என்று நாம் சொல்லியும் அவர்கள் நம்பவில்லை. மறுபடியும் தாக்கத் தொடங்கினார்கள். தமது ஆத்திரம் அடங்கியதும் வரிசையில் எம்மை நிற்கவைத்து, அப்பகுதியில் தாம் கண்டுபிடித்து இழுத்துவந்த இன்னும் சிலரையும் எம்முடன் சேர்ந்து பலாலி வீதி நோக்கி நடக்கச் சொன்னார்கள். ஒழுங்கை வழியே நடந்துகொண்டு இருபுறமும் பார்க்கத் தொடங்கினேன். கட்டிட இடிபாடுகளுக்கிடையில் இரத்தக் காயங்களுடன் தெரிந்த கால்கள் இரண்டு, உடலைக் காணவில்லை. சில மீட்டர்கள் தூரத்தில் உயிரற்றுக் கிடந்த வயோதிபர் ஒருவரது உடல். முகம் முழுதும் இரத்தத்தினால் தோய்ந்திருக்க கடுமையாகக் காயங்களுக்கு அவர் உள்ளாகியிருக்கிறார் என்று தெரிந்தது. பலாலி வீதியை அடைந்த போது அப்பகுதியெங்கும் அன்றிரவு முழுவதும் காந்தியின் பேய்கள் ஆடியிருந்த நரவேட்டை தெளிவாகத் தெரிந்தது. பலாலி வீதியினை அப்பேய்களது தாங்கிகள் உழுது வைத்திருக்க, தெருவோரக் கடைகள் இடிந்துபோய் தரைமட்டமாகியிருக்க அப்பகுதியே சுடுகாடுபோலக் காட்சியளித்தது. பலாலி வீதியின் ஓரத்தின் அமைந்திருந்த சைக்கிள் திருத்தும் கிளியண்ணையின் கடையின் முன்னால் ஏற்கனவே சிலரை இழுத்துவந்து நிறுத்தியிருந்தார்கள். அவர்களுடன் சேர்த்து எம்மையும் சுவரைப் பார்த்தபடி நிற்குமாறு பணித்தார்கள். கோண்டாவில் டிப்போ அருகில் இந்திய ராணுவத்தின் முன்னரங்கு அமைந்திருக்க, அப்பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர்கள் தொலைவில், வாமாஸ் பகுதியில் புலிகளின் நிலைகள் அமைந்திருந்தன. பலாலி வீதியின் நடுவே நின்று கொண்டிருந்த தாங்கியிலிருந்து 50 கலிபர் துப்பாக்கியினால் புலிகளின் நிலைகள் நோக்கித் தொடர்ச்சியாகத் தாக்கிக்கொண்டிருந்தது இந்திய ராணுவம். நாம் நிற்கவைக்கப்பட்ட கடையில் இருந்து சுமார் 20 மீட்டர் தொலைவிலேயே தாங்கி நிலையெடுத்திருந்தது. இடையிடையே இந்தியத் தாங்கியை நோக்கி புலிகளும் துப்பாக்கியினால் சுட்டுக்கொண்டிருந்தார்கள். தாங்கியில் பட்டுத் தெறித்த சன்னங்கள் எமக்கருகிலும் வந்து வீழ்ந்தன. இவ்வாறான ஒரு தாக்குதலில் புலிகள் ஆர் பி ஜி உந்துகணையினால் தாக்கியிருக்கவேண்டும், தாங்கி தப்பித்துக்கொண்டது. ஆத்திரமடைந்த இந்திய ராணுவம் நாம் நிற்கவைக்கப்பட்டிருந்த கடையினை நோக்கி தாங்கியின் பீரங்கியினால் தாக்கியது. கடையின் மேற்பகுதிச் சீமேந்துக் கூரை இடிந்து எம்மீது வீழ்ந்தது. அங்கே நின்றிருந்த பலருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. தம்பியின் நெற்றியில் சீமேந்து கிழித்து இரத்தம் கொட்ட ஆரம்பித்தது. எம்மைக் கொல்லப்போகிறார்கள் என்று எண்ணி அலறத் தொடங்கினோம். ஆனால் அவர்களோ எம்மைப் பார்த்துச் சிரித்து எக்காளமிட்டார்கள். காயப்பட்டு கீழே குருதி சொட்டக் கிடந்த பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு சிறிதும் இருக்கவில்லை. எம்மை நோக்கித் தாக்குதல் நடத்தியதே அவர்கள் தான் என்கிறபோது எம்மைக் காப்பாற்ற வேண்டிய தேவையென்ன அவர்களுக்கு? தம்பியின் நெற்றியில் இருந்து வழிந்துகொண்டிருந்த குருதியைக் கட்டுப்படுத்த தனது சட்டையின் கைப்பகுதியைக் கிழித்து தகப்பனார் கட்டுப்போட்டார். இரத்தம் ஓடுவது குறைந்தபோதிலும், முழுதுமாக நிற்கவில்லை. அவன் களைத்துப் போய் மயங்கிவிட்டான். அவனது உடலில் இருந்து உயிர் பிரிந்துவிட்டதென்று ஒருகணம் நாம் அச்சப்பட்டோம். அவனைப்போலவே இன்னும் சிலரும் இரத்தவெள்ளத்தில் கீழே மயக்கமுற்றுக் கிடந்தார்கள். ஒருசிலர் இறந்தும் இருக்கலாம். ஆனால் யாரும் யாரையும் காப்பற்றும் நிலையில் இருக்கவில்லை. தமது உயிருக்கே உத்தரவாதம் இல்லாத நிலையில் அருகில் இருப்பவர் பற்றி எவரும் அதிகம் சிந்திக்கவில்லை. சில மணித்துளிகள் அப்படியே கழிந்துவிட அப்பகுதியெங்கும் இருந்து அங்கு இழுத்துவரப்பட்ட இன்னும் 30 முதல் 40 வரையான பொதுமக்களும் எம்முடன் இணைந்துகொண்டார்கள். உரும்பிராய் தெற்கு, அன்னுங்கை, டிப்போவிற்குப் பின்புறமாக அமைந்திருந்த குடியிருப்புக்கள் என்று பல பகுதிகளில் இந்திய இராணுவத்திடம் மாட்டுப்பட்ட பொதுமக்கள் அவர்கள். ஆண்களை நிற்கவைத்துவிட்டு பெண்களையும் சிறுவர்களையும் அப்போது இருக்கவைத்தது இந்திய இராணுவம். எமக்குள் நாம் பேசத் தொடங்கினோம். அன்று காலை முழுவதும் தாம் கண்ட அகோரங்களை சிலர் வர்ணிக்கத் தொடங்கினார்கள். இந்திய இராணுவத்தின் ஒரு படைப்பிரிவு கத்திகளால் தமது உறவினர்களை வெட்டிக் கொன்றதாகவும், வயது வேறுபாடின்றி சுட்டுப் படுகொலை செய்ததாகவும் அவர்கள் பேசினார்கள். பாமா அக்கா வீட்டில் , "ஐயோ எங்களை வெட்டாதையுங்கோ " என்று யாரோ மன்றாடி அழுதது நினைவிற்கு வந்தது. வீதிகளில் கொல்லப்பட்டிருந்த தமிழர்களின் உடல்களை நாய்கள் இழுத்துச் சென்று உண்டதைத் தாம் கண்டதாக ஒரு பெண்மணி கூறினார். இப்படிப் பலர் தமது அனுபவங்களை மற்றையவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். அப்பொழுதுவரை எமது அயல் வீட்டில் அன்றிரவு நடத்தப்பட்ட அகோரத்தை நாம் அறிந்திருக்கவில்லை. சுமார் 3 மாத காலத்தின் பின்னரே அப்படுகொலை குறித்த மொத்தமும் எமக்குத் தெரியவந்தது. அதுகுறித்து பின்வரும் பகுதியில் எழுதுகிறேன்.8 points
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இவ் வகையான குடியேற்றங்கள் முன்னரும் நிகழ்ந்தது. டேவிட் ஐயாவின் 'காந்தியம்' அமைப்பு, 1970கள் மற்றும் 1980களில் வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்தது. 1977 ஆம் ஆண்டில் மருத்துவர் சோ. இராஜசுந்தரத்துடன் இணைந்து டேவிட் ஐயா (எஸ். ஏ. டேவிட்) இந்த அமைப்பை நிறுவி அதன் மூலம் 1970களில் ஏற்பட்ட இன வன்முறைகளால் / இனப்படுகொலைகளா; இடம்பெயர்ந்த சுமார் 5000 மலையக (இந்திய வம்சாவளி) தமிழர்களை வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மற்றும் திருகோணமலை போன்ற தமிழ்ப் பிரதேசங்களில் குடியமர்த்தினர். 80 களின் பின் வன்னியில் பிறந்து போராட்டத்தில் இணைந்து மாவீரர்களான பலரின் முழுப்பெயரை கவனித்தால் தெரியும், அதில் பலரது தந்தையின் பெயர் மலையக / இந்திய வம்சாவளி தமிழர்களின் பெயர்களாக இருக்கும். வன்னி மண்ணின் வீரத்துக்கும் தியாகத்துக்கும் இவர்களின் பங்களிப்பும் ஒரு காரணமாக இருந்தது. தாயகத் தமிழர்கள் வாஞ்சையுடன் இவர்களை அணைத்து அரவணைத்து உள் வாங்கிக் கொள்ள வேண்டும்.7 points
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
என்னை பொறுத்தவரையில் இது எப்போதோ நடந்திருக்க வேண்டிய ஒரு காலக் கடமை. 200 வருட அடிமை சாசன வாழ்க்கையில் அந்த பெருந்தோட்ட மக்கள் கூட்டம் அடைந்த முன்னேற்றம் என்பது ஆமை வேகத்தில் தான் நடந்திருக்கிறது. இன்று தேயிலையும் கூட இலங்கையின் ஏற்றுமதி பொருளாதார வருவாய் சுட்டியில் முன்னிலையில் இல்லை. மலையக மக்களின் புதிய சந்ததி ஒன்றும் தேயிலை கூடையை தலையில் மாட்டி.. சாக்கு துணியை இடுப்பில் கட்டி கொழுந்த்து பறிக்கும்தொழிலுக்கு போகப் போவதும் இல்லை. இப்போதே அநேக இளையவர்கள் கொழும்பு, கண்டி என்ற பெரு நகரங்களை நோக்கியும் வெளிநாடு செல்லுவதுமாகத்தான் அவர்கள் வாழ்க்கை இருக்கிறது. சுமந்திரன், மற்றும் தமிழ் அரசியல்வாதிகளின் இந்த வெண்டுகோள் தூர நோக்கில் சரியானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நடைமுறையில் நிறைய சிக்கல்கள் வரலாம். அடையாள இழப்பு, பொருளாதார சிக்கல், சமூக சிக்கல் இப்படி பல இன்னல்களை சந்தித்தாலும், ஓரிரு தலைமுறைகளின் பின்னர் இவர்களின் வாழ்வு ஓரளவுக்கு சுபிட்சமாக இருக்கும் என நான் நம்புகிறேன். எனக்கு தெரிந்த பல குடும்பங்கள் 1983 காலங்களிலும், அதன் பின்னரும் மலையகத்தை விட்டு வெளியேறி வடக்கில் குடியேறியவர்கள் ஆரம்பத்தில் பல சிக்கல்களை அனுபவித்தாலும், இன்று வட, கிழக்கு மக்களின் யதார்த்த வாழ்வை போல கல்வி, தொழில், வெளிநாடு, கோயில் குளம் என்று சந்தோசமாக இருக்கிறார்கள். சிங்களத்தின் கருணையில், பச்சாதாபா பிச்சையில் வாழ வில்லை என்ற கௌரவத்தோடு தமிழராக வாழ்கிறார்கள். தவிர இந்த உரையாடல், அரசுக்கு மலையக மக்களுக்கு செய்யவேண்டிய காலம் கடந்த நீதியை செய்ய ஒரு அழுத்தத்தை கொடுக்கும் என்றும் கூட நினைக்கிறன்.7 points
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
சுமார் மதியம் 12 மணியிருக்கலாம். இந்திய இராணுவம் கோண்டாவில்ச் சந்தி நோக்கி முன்னகர ஆரம்பித்தது. முருகேசுவின் தேநீர்க் கடையினை அடுத்துவரும் தோட்டவெளியினை அவர்களது தாங்கி அண்மித்தவேளை புலிகள் தாக்கத் தொடங்கினார்கள். கடுமையான தாக்குதலையடுத்து இந்திய ராணுவத்தின் தாங்கி பின்னால் வர ஆரம்பித்தது. சில நிமிடங்களுக்குப் பின்னர் பொதுமக்களை இரு வரிசைகளில் வீதியின் இருமருங்கிலும் நிற்கும்படி கட்டளையிட்டான் இந்திய படைப்பிரிவின் தளபதிபோன்று காட்சியளித்த ஒருவன். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று சுமார் 50 இல் இருந்து 60 வரையான பொதுமக்களை அவர்கள் வீதியின் இருபுறமும் வரிசையாக நிற்கக் கூறிவிட்டு எமக்குப் பின்னால் அவர்களின் தாங்கி நின்று கொண்டது. தாங்கியின் மேல் அமர்ந்திருந்தவன் எம்மை கோண்டாவில்ச் சந்தி நோக்கி நடக்கும்படி சத்தமிட்டான். வேறு வழியின்றி நடக்கத் தொடங்கினோம். புலிகளின் தாக்குதல்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவே எம்மை மனிதக் கேடயங்களாக இந்திய இராணுவம் பாவிக்கின்றது என்பதைப் புரிந்துகொண்டோம். ஆனாலும் வேறு வழியில்லை. முன்னால்ப் போனால் சண்டையில் அகப்பட்டு மடிவோம், போகமாட்டோம் என்று மறுத்தால் பின்னாலிருந்து இந்திய இராணுவம் எம்மைச் சுட்டுக் கொல்லும். ஆகவே வேறு வழியின்றி கோண்டாவில்ச் சந்தி நோக்கி நடக்கத் தொடங்கினோம். வமாஸ் பகுதி கடந்து, மதகடி வரும்வரை நடந்திருப்போம். நில்லுங்கள் என்று பின்னாலிருந்து கட்டளை வந்தது. தாங்கியும் எமக்குப் பின்னால் நின்றிருக்க, அதனைச் சூழ இந்திய இராணுவ வீரர்கள் கால்நடையாக வந்துகொண்டிருப்பது தெரிந்தது. சிறிது நேரத்தின் பின்னர் எம்மை மீளவும் நடக்கச் சொன்னார்கள். ஆனால் எம்மைப் பின் தொடர்ந்து இம்முறை அவர்கள் வரவில்லை. வாமாஸ் பகுதியுடன் தாங்கி நின்றுவிட்டது. இந்தியத் தாங்கி நின்றிருந்த இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர்கள் தூரத்தில் இருந்த வீடுகளின் மதில்களுக்கிடையே புலி வீரர்கள் நின்றிருந்தார்கள். கைகளில் ஆர் பி ஜி. முகத்தில் அச்சமில்லை. வீதியில் நின்ற இந்தியத் தாங்கியே அவ்வீரனது இலக்கு என்பது தெரிந்தது. தன்பக்கம் திரும்பிப் பார்க்காது தொடர்ந்து நடக்குமாறு அவர் கைகளால் சைகை செய்தார். நாம் அப்படியே செய்தோம். அவரைப்போலவே இன்னும் சில புலி வீரர்கள் அப்பகுதியெங்கும் நிலையெடுத்திருந்தார்கள். நாம் கோண்டாவில்ச் சந்தியை அடைந்தபோது அங்கிருந்த புலிகளின் ஒரு அணியினர் எமக்குக் குடிக்க தண்ணீர் கொடுத்தார்கள். தவறாது இந்திய இராணுவத்தின் விபரங்கள் குறித்தும் அறிந்துகொண்டார்கள். அவர்கள் கேட்ட விடயங்களைக் கூறிவிட்டு, பொற்பதி வீதி நோக்கி நடக்கத் தொடங்கினோம்.7 points
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
எமது வீட்டின் முன்னால் வந்து நின்ற இந்திய இராணுவ அணி வீட்டின் மீது சரமாரியாகத் துப்பாக்கியினால்ச் சுடத் தொடங்கியது. சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் அவரை தொடர்ச்சியான துப்பாக்கி வேட்டுக்கள் எமது வீடு நோக்கி நடத்தப்பட்டன. அந்த இருள்வேளையிலும் எமது வீடு திருவிழாக் கோல போலக் காட்சியளித்தது. சிறிது நேரத்தில் அவர்கள் வீட்டினுள் புகுந்தார்கள். எவரையும் காணாததால் எமது அயல் வீட்டிற்குச் சென்றார்கள். ஆனால் அவர்கள் எல்லோரு நல்லூரிற்குப் போய்விட்டார்கள் என்று நாம் எண்ணியிருக்க, "ஐயோ, பிள்ளைகள் இருக்கினம், சுடாதேயுங்கோ, வெட்டாதையுங்கோ" என்று அவலக் குரல்கள் கேட்கத் தொடங்கின. "அடக் கடவுளே, அவர்கள் எவரும் நல்லூரிற்குப் போகவில்லை" என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். அந்த அவலக் குரல்கள் எவையுமே இந்திய இராணுவத்தின் காதுகளுக்கு ஏறவில்லை. சரமாரியாகச் சுடத்தொடங்கியது இந்தியாவின் சாத்தான் படை. இடைவிடாது 30 நிமிடங்கள் வரை துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. அதன்பின்னர் எந்த அழுகுரலும் எமக்குக் கேட்கவில்லை. சுமார் காலை 4 மணியிருக்கலாம். கிழக்கில் கீற்றலான வெளிச்சம் பரவத் தொடங்கியிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் நாமிருக்கும் பகுதியும் வெளிச்சமாகி விடும். நிச்சயம் எம்மைக் காண்பார்கள், நாமும் கொல்லப்படுவோம் என்பது உறுதி என்பது புரிந்தது. "சரி, இனி இதுக்குள்ள இருக்கேலாது, கையை தலைக்கு மேலால தூக்கிக்கொண்டு வெளியில போவம்" என்று தந்தையார் மெல்லிய குரலில் கூறிக்கொண்டிருக்க, "யாராவது இன்னும் உள்ளே ஒளிந்திருந்தால் இப்போதே வெளியே வாருங்கள், அல்லது நாம் உள்ளே வந்து சுட்டுக் கொல்வோம்" என்று ஆங்கிலத்தில் ஒருவன் கத்தினான். "வேறு வழியில்லை, இனிமேல் இருந்தால் கொன்றுவிடுவார்கள், சரி வெளியில் வரலாம்" என்று தந்தையார் கூறவும், இருந்த இடத்திலிருந்து எழுந்து, கைகளைத் தலைக்கு மேலே தூக்கிப் பிடித்தபடி, "நாம் சிவிலியன்கள், எங்களைச் சுடவேண்டாம்" என்று அழுதபடியே வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினோம். சில அடிகள்தான் முன்னால் எடுத்து வைத்திருப்போம். எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியவில்லை, சுமார் 30 அல்லது 40 இந்திய இராணுவத்தினர் எம்மைச் சூழ்ந்துகொண்டார்கள். சிலர் துப்பாக்கிகளை எமக்கு நேரே பிடித்தபடி சுட ஆயத்தமாவது தெரிந்தது. எமது வாழ்க்கை முடிவிற்கு வரப்போவது தெரியவே அழத்தொடங்கினோம். அவர்களுள் ஒருவன் முன்னால் வந்தான். சுமார் 50 இல் இருந்து 55 வயது வரை இருக்கலாம், ஹிந்தியில் ஏனைய இராணுவத்தினருக்கு ஏதோவொன்றைச் சொல்லிவிட்டு, "நீ புலிதானே, எங்கே ஆயுதங்களை ஒளித்து வைத்திருக்கிறாய்?" என்று கேட்டுக்கொண்டே தந்தையாரை துப்பாக்கியின் பின்புறத்தால் கடுமையாகத் தாக்கத் தொடங்கினான். அடியின் அகோரம் தாங்காது அவர் கீழே வீழ்ந்தபடி, "நான் ஒரு தபால் அதிபர், எனக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பில்லை" என்று ஆங்கிலத்தில் அலறத் தொடங்கினார். அருகில் நின்ற இன்னொரு இராணுவத்தினன் எனது பிடரியில் ஓங்கி அறைந்தான், சிறிதுநேரம் கண்கள் கலங்கி தலைசுற்றத் தொடங்கியது. தந்தையார் தன்னை தபால் அதிபர் என்று கூறியதும் அதுவரை அவரைத் தாக்கிக்கொண்டிருந்தவன் தாக்குவதை நிறுத்திவிட்டு பேசத் தொடங்கினான். "இங்கிருந்துதான் புலிகள் தாக்கினார்கள். உனக்குத் தெரியாமல் அவர்கள் இங்கு இருந்திருக்க முடியாது. அவர்களை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் என்று சொல். ஆயுதங்களைக் காட்டு, அல்லது உங்கள் அனைவரையும் சுட்டுக் கொல்லப்போகிறேன்" என்று அதட்டினான். நாம் புலிகள் இல்லை, எம்மிடம் ஆயுதங்களும் இல்லை என்று நாம் கூறியதை அவர்கள் கேட்கும் நிலையில் இல்லை. காலை நன்றாக விடிந்திருந்த அவ்வேளையில் எம்மைச் சுற்றி நடந்திருந்த அகோரங்களை அப்போதுதான் நான் கண்டுகொண்டேன். எமது வீட்டின் முற்பகுதி முற்றாக இடிந்துபோயிருக்க, இந்திய இராணுவத்தின் தாங்கியொன்று வீட்டின் முன்னால் நின்றிருந்தது. கூரை முற்றாக எரிந்து போய் கீழே வீழ்ந்து காணப்பட்டது. ஒழுங்கையின் முழு நீளத்திற்கும் கட்டப்பட்டிருந்த மதில்கள் முற்றாக இடிந்து தரைமட்டத்துடன் சேர்ந்திருக்க, மின்கம்பங்கள், வேலிகள், மரங்கள் என்று அனைத்துமே முற்றாகத் தறிக்கப்பட்டு அப்பகுதி முற்றான அழிவினைக் கண்டிருந்தது.7 points
-
பூரணநாயகி
6 pointsஅழைப்பு மணியின் சத்தம் கேட்டு அவசரமாகக் கதவைத் திறந்தாள், றீட்டா காபென்பிறாண்ட்ல். கதவைத் திறந்தவள் முன்னால் எட்டுப் பேர்கள் நின்றிருந்தனர். நிறத்தால் வேறுபட்ட அந்நிய நாட்டவர்கள். அந்த எண்மரில் ஒருவர் பெண்ணாக இருந்தார். அந்தப் பெண்ணின் முகத்தில் ஒட்டியிருந்த சோகம், குளமாயிருந்த அவளது கண்கள், றீட்டாவின் மனதை கலங்க வைத்தது. "நாங்கள்….."அவர்களில் ஒரு ஆண் அங்கு நிலவிய நிசப்தத்தை நீக்க முயற்சித்தான். றீட்டா அந்த சத்தம் வந்த திசையை நோக்கித் தன் பார்வையைத் திருப்பினாள். வந்திருந்த பெண் மட்டுமல்ல, ஆண்களும் சோகத்தில்தான் இருந்தார்கள். “இலங்கைத் தமிழர்கள். பாரிசிலிருந்து வருகின்றோம். பூரணநாயகியின் விசயம் கேள்விப்பட்டு….” பேச்சை அவர்கள் முடிக்கவில்லை. இல்லை, அவர்களால் மேற்கொண்டு பேச முடியவில்லை என்பதே சரியாக இருக்கும். இதயத்தின் அடியில் இருந்து எழுந்த அந்தச் சோகம், தொடர்ந்து சொற்களை வரவிடாமல், விழுங்கிக் கொண்டிருந்தது. றீட்டா புரிந்து கொண்டாள், இவர்கள் ஏன் வந்திருக்கிறார்கள் என்று. “உள்ளே வாருங்கள்” அன்பாக அவர்களை அழைத்தாள். மேற்கொண்டு றீட்டா எதுவும் பேசவில்லை. பேசக்கூடிய நிலையில் அவளும் இப்போதில்லை. அவர்களது சோகம் அவளிடமும் சேர்ந்து கொண்டது. சூடான உணவுகளையும், தேநீரையும் அவர்கள் முன் கொண்டு வந்து வைத்தாள் றீட்டா. "நீண்ட தூரப் பயணத்துக்கும், குளிரான இந்த நேரத்துக்கும், இச்சூடான உணவும், தேநீரும் உங்களுக்கு இதமாக இருக்கும். தயவு செய்து உணவருந்துங்கள். “நீங்கள் உணவருந்தி முடிவதற்குள் நான் 'போன்' செய்து பாதர் அம்ரொஸ் றூமரை இங்கு வரவழைக்கிறேன். அவர் உங்களுக்கு முழு விபரமும் தருவார். நான் அவரது வீட்டுச்சமையல் வேலை செய்பவள். எனது பெயர் ரீட்டா காபென்பிறான்ட்ல்." டிசம்பர் 7ம் திகதி செக் நாட்டில் இருந்து ஜேர்மனியில் உள்ள பயர்ன் மாநில எல்லையை நோக்கி முழங்கால் வரை புதையும் உறைபனியூடாக நால்வர் நடந்து வந்து கொண்டிருந்தனர். அதில் பூரணநாயகியும் இருந்தாள். அவளுடன் இன்னும் ஒரு தமிழ் இளைஞனும், இரண்டு ஏஜென்சிகளும் நடந்து வந்தனர். இரண்டு ஈழத் தமிழர்களதும் அணிந்திருந்த உடைகள் குளிர்காலத்திற்கு ஏற்றவை அல்ல. . பனிக்குளிர், பூரணநாயகி அணிந்திருந்த மெல்லிய உடுப்புகளுக்கூடாகவும், அவளது சாதாரண சப்பாத்துக்கூடாகவும் உட்புகுந்து, அவளது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் உறையச் செய்து கொண்டிருந்தது. இவர்களது திசை ஓசர் மலையை நோக்கிய குறுகிய ஒரு பாதையாக இருந்தது. ஒரு கிலோமீற்றர் உயர மலையை ஒரு விதமாகச் சென்றடைந்தார்கள். அந்த மலையின் முடிவில் ஆரம்பமாகியது ஜேர்மனிய எல்லை. முழங்கால் வரை உள்ள பனியில் காலை வைத்து திரும்ப எடுத்து நடப்பதே பெரும் சிரமமாக இருந்தது. இப்படி ஒரு தடவை காலை பனியில் வைத்து எடுக்கும் போது காலில் போட்டிருந்த இளைஞனின் சப்பாத்து பனிக்குள் புதைந்து போனது அதைத்தேடி எடுக்க அந்த இளைஞனுக்கு அவகாசமில்லை. முன்னால் சென்று கொண்டிருக்கும் அந்த ஏஜென்சிகள் தங்கள் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். பின்னால் வரும் இவ் இருவரைப் பற்றிய கவலைகள், அவர்கள் படும் வேதனைகள் அவர்களுக்குத் தேவையில்லாதிருந்தது. அவர்களுக்குத் தேவையான 'தரகு'ப் பணம் அவர்களுக்குக் கிடைத்து விட்டது. ஜெர்மனிய எல்லைக்குள் இருவரையும் விட்டுவிட்டால் ஏஜென்சிகளின் வேலை முடிந்து விடும். இருட்டுநேரம் பார்வையைத் தவறவிட்டால் ஏஜென்சிகள் மறைந்து விடுவார்கள். இளைஞன் சப்பாத்தைப் பனிக்குள் விட்டுவிட்டு காலில் போட்டிருந்த காலுறையுடன் தனது பயணத்தைத் தொடர்ந்தான் பூரண நாயகியால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. ஜேர்மனிய எல்லைக்குள், 500 மீட்டர் தூரத்தில் இருந்த ஹோட்டல் ஒன்றின் வெளிச்சம் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. பூரணநாயகியால் மேற்கொண்டு நடக்க முடியாத நிலையில் அந்த பனிக்குள் தள்ளாடியபடி இருந்து விட்டார். மறுநாள் பொழுது வழமைபோல் விடிந்தது. ஹோட்டல் உரிமையாளர் யூர்கன் கோல்ஸ், தனது ஹோட்டலின் முன்பாக நின்ற இளைஞனை உற்று நோக்கினார். ஒரு காலில் Cowboy Stiefelம், மறுகாலில் வெறும் காலுறையும் அணிந்து கொண்டு, பயத்துடன் என்ன செய்வது? என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த அந்த இளைஞனை அநுதாபத்துடன் அணுகினார். "ஏதாவது உதவி வேண்டுமா?" என்று அந்தத் தமிழ் இளைஞனை பார்த்து அவர் ஜேர்மனிய மொழியில் கேட்டதை, அந்த தமிழ் இளைஞன் விளங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.ஆனாலும் தான் ஒரு தடவை தொலைபேசியில் கதைக்கவேண்டுமென்று தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அந்த இளைஞன் கேட்டான். அதைப் புரிந்து கொண்ட யூர்கன் கோல்ஸ், அவனைத் தனது தொலைபேசியைப் பாவிக்க அநுமதித்தாரர். தொலைபேசியில் அந்த இளைஞன் கதைத்து முடித்தபின் யூர்கன் கோல்ஸிற்கு தனது நன்றிகளைத் தெரிவித்து விட்டு வெளியில் நடக்கத் தொடங்கினான். காட்டுப் பாதையொன்றில் திடீரென வந்த ஜேர்மனியப் பொலிஸாரின் கண்களில் அந்த இளைஞன் பட்டு விடுகிறான். கேள்விகளுக்கு மேல் அவர்கள் அந்தத் தமிழ் இளைஞனை கேட்கத் தொடங்கினார்கள். அவனும் எதையும் மறைக்க விரும்பவில்லை நடந்தவற்றை அப்படியே. ஒப்புவித்தான். பூரணநாயகியைத் தனது சகோதரியெனச் சொல்லி வைத்தான். ஆனால் உண்மையிலேயே பூரணநாயகி அவன் சொந்தச் சகோதரியல்ல. நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட பொலிஸார், அந்த இளைஞனையும் கூட்டிக் கொண்டு பூரணநாயகியைத் தேடிச் சென்றார்கள். அவர்கள் கண்டது, பனிகளுடன் உறைந்து போயிருந்த பூரணநாயகியின் உடலைத்தான். ஜேர்மனியப் பத்திரிகைகள், இத்தகவலை பத்திரிகைகளில் பிரசுரித்த போதும், யாருமே பூரணநாயகியைப் பற்றி உரிமை கோராத பட்சத்தில், அவரது பூதவுடல் கிறிஸ்தவ தேவாலயத்தின் பின்புறமாக இருந்த சேமக் காலையில் டிசம்பர் 14ந் திகதி கத்தோலிக்க முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. அவளின் கல்லறையில் "அமைதியாக உறங்கு" என்ற வாசகங்கள் பொருந்திய மரத்தினால் செய்த சிலுவையை வைத்து, அந்த நகரத்து மக்கள் பூக்களினால் அஞ்சலி செய்தனர். "நான் கத்தோலிக்க பாதிரியார் அம்புரோஸ் ரூமர்" பாதிரியார் தன்னை அந்த எட்டுப் பேருக்கும்" அறிமுகம் செய்து கொண்டார். தன்னுடன் கூடவந்த அந்த நகரத்து மேயர் ஜோகன் முல்பவுரையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் எல்லோருமாக பூரண நாயகியை அடக்கம் செய்த இடத்துக்குச் சென்றனர். நன்றாக இருண்டு விட்ட நேரத்திலும், பயங்கரமான குளிருக்கு மத்தியிலும் எல்லோரும் பூரணநாயகியின் கல்லறை முன் நின்றனர். எண்மரில் ஒருவரான ஒரு பெண், இவர் பூரண நாயகியின் மூத்த சகோதரி, கல்லறை மேல் விழுந்து கதறியழுத காட்சி மேஐரை கரைத்துவிட்டது. "ஒரு பெண்ணின் சடலம். இறந்தது டிசம்பர் 7ந் திகதி காலை 9.45 மணிக்கு, என்ற தகவலே எனக்குத் தெரியும். ஆனால்...... இப்படி ....இதன் பின்னால் ஒரு மனித சோகத்தை நான் எதிர்பர்க்க வில்லை." என்று மேஜர் கண்கள் கலங்க அந்த இடத்தில் கூறினார். "பூரண நாயகி ஒரு இந்துவாக இருந்த போதிலும், அவரை அடக்கம் செய்து அஞ்சலி செய்வது எங்களது கடமை. நான் அரசியல்வாதியாகவோ, காவல் துறையிலோ இருக்க விரும்பவில்லை. அகதிகளாக அல்லல் பட்டு, உயிர் வாழ நம்பிக்கையுடன் ஓடி வரும் மக்களை அரவணைத்து ஆதரவு தரவே விரும்புகிறேன" எனப் பாதிரியார் அம்புரோஸ் ரூமர் தனது உரையில் தெரிவித்தார். ஏஜென்சிகளை நம்பி, ஜேர்மன் எல்லையில் ஆற்றைக் கடக்கும் போதும், குளிரினாலும் பல அகதிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள் லொறிகளில் அடைத்து வரப்பட்டு மூச்சுத்திணறியும் பலர் இறந்திருக்கிறார்கள். 1995ம் ஆண்டு ரூமேனியாவில் இருந்து ஹங்கேரி ஊடாக ஜேர்மனிக்கு கொண்டு வரப்பட்ட 18 அகதிகள் லொறிக்குள் மூச்சுத் திணறி இறந்திருக்கிறார்கள். கண்மூடித்தனமாக ஏஜென்சிகளை நம்பி, பெரும் பணத்தைக் கொடுத்து, உயிரைப் பணயம் வைக்கும் செயல் இதுவென ஜேர்மனிய காவல்துறை தெரிவித்திருந்தது. ஐரோப்பிய நாடுகள், அகதிகளாக வரும் வெளி நாட்டவர்கள், தங்கள் நாடுகளுக்குள் நுளைய முயலும் ஒவ்வொரு வழிகளையும் கண்டறிந்து மூடி வருகிறார்கள். ஆனாலும் அகதிகளாக வருபவர்கள் ஏதாவது வழியில் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். கிருபன் இணைத்திருந்த ஷோபா சக்தியின் “பொப்பி என்பது புனை பெயர்” கதையை வாசித்த போது, எனக்கு நினைவுக்கு வந்தது பூரணநாயகியின் சம்பவம்தான். 1995ம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவம். நான் நினைக்கிறேன், ஐரோப்பிய நாட்டுக்குள் நுளையும் ஈழத் தமிழர்களின் முதல் மரணம் பூரணநாயகியினுடையதாகவே இருக்க வேண்டும். 07.12.1995இல் நிகழ்ந்த அந்த மரணத்தைப் பற்றி அப்பொழுது நான் எழுதியது இது. சரியாக முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு (07.12.2025) கிருபன் பூரணநாயகியை நினைவூட்டியிருக்கின்றார்.6 points
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
கோண்டாவில்ச் சந்தியில் இருந்து வலதுபுறம் திரும்பி, பொற்பதி வீதி நோக்கி நடக்கத் தொடங்கினோம். வீதியில் சனநடமாட்டம் பெரிதாக இருக்கவில்லை. அப்பகுதியில் செல்கள் வந்து வீழ்ந்து வெடித்த அடையாளங்கள் தெரிந்தன. ஆனாலும் சில வீடுகளில் மக்கள் இருந்தார்கள். எம்மைக் கண்டதும் தங்கள் வீடுகளுக்குள் அழைத்துச் சென்று உண்ண உணவும் நீரும் கொடுத்தார்கள். எமக்கு என்ன நடந்தது என்பதுபற்றி அறிந்துகொள்ளும் ஆவல் அவர்களிடம் இருந்தது. முடிந்தவரையில் அவர்களிடம் கூறிவிட்டு எம் வழியே நடக்கத் தொடங்கினோம். செல்லும் வழியில் எம்மைப்போன்றே வெளியேற்றப்பட்ட இன்னும் பலர். எல்லோரது பயணமும் நல்லூர்க் கோயிலை நோக்கியெ அமைந்திருந்தது. நல்லூர்க் கோயிலை அண்மித்தபோது அங்கு ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் புகுந்திருப்பது தெரிந்தது. மேலும் பலருக்கு அடைக்கலம் கொடுப்பதென்பது அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு கடிணமானதாகப் பட்டதனால், உறவினர்கள் வீடுகள் இருந்தால் அங்கே செல்லுங்களேன் என்று கேட்டுக்கொண்டார்கள். தகப்பனாரின் சகோதரர் ஒருவர் கொய்யாத்தோட்டத்தில் வசித்து வந்தார். ஆகவே அங்கே போகலாம் என்று எண்ணி தொடர்ந்து நடந்தோம். நாம் கொய்யத்தோட்டத்தை அடைந்தபோது கோண்டாவில், உரும்பிராய் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட படுகொலைகள் பற்றி அவர்கள் ஓரளவிற்கு ஏற்கனவே அறிந்து இருந்தமையினால் எம்மை உயிருடன் கண்டது அவர்களுக்கு ஆறுதலைத் தந்திருக்க வேண்டும். சில நாட்கள் அங்கு தங்கலாம், பின்னர் நிலைமையினை அவதானித்து முடிவெடுக்கலாம் என்று தங்கினோம். ஒருவாரம் தங்கியிருப்போம் என்று நினைக்கிறேன். அங்கும் செல்த்தாக்குதல்கள் கடுமையாக நடத்தப்படத் தொடங்கின. இடைவிடாது பெய்த மழையினால் கொய்யத்தோட்டம், குருநகர் ஆகிய பகுதிகளில் வெள்ளம் போட்டுவிட, மக்கள் தஞ்சம் அடைவதற்குத் தன்னும் இடமின்றி அங்கலாய்த்தபடி இருந்தார்கள். இடைவிடாத மழையினூடே செல்த்தாக்குதல்கள் உச்சம் பெறத் தொடங்கின. யாழ்நகர் நோக்கி மிகக் கடுமையான செல்த்தாக்குதலை இந்திய இராணுவம் மேற்கொள்ளத் தொடங்கியது. கொய்யத்தோட்டம், சுண்டுக்குளி, ஈச்சமொட்டை ஆகிய பகுதிகளில் பரவலாக செல்கள் வந்து விழத் தொடங்கின. பல மணிநேரம் தொடர்ச்சியாக நடத்தப்படும் இத்தாக்குதல்கள் மதியமளவில் சற்று ஓய்வுக்கு வரும். அந்த ஓய்வு வேளையினைப் பாவித்து வீதிகளில் இறந்தும் காயப்பட்டும் கிடந்தவர்களை ஊர்மக்கள் எடுத்து வந்தார்கள். கொய்யத்தோட்டத்திலிருந்து ஈச்சமொட்டை செல்லும் வழியில் கொல்லப்பட்ட சுமார் 8 பொதுமக்களின் உடல்களை மாட்டு வண்டியில் கிடத்தி தென்னை ஓலைகளால் போர்த்திக்கொண்டு வந்தார்கள். மழை நீரில் முற்றாக நனைந்திருந்த உடல்களில் இருந்து இரத்தம் சொட்டச் சொட்ட மட்டு வண்டிகளில் உடல்கள் நாம் தங்கியிருந்த வீட்டின் முன்னால் எடுத்துச் செல்வதை அச்சத்தோடு பார்த்துக்கொண்டிருந்தோம். பழைய பூங்கா வீதியிலிருந்து பாசையூர் நோக்கிச் செல்லும் வழியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியின் ஓரத்தில் சரிந்துகிடக்க அதில் பயணம் செய்தவர் உடல் கடுமையாகச் சேதமாக்கப்பட்டு மழிநீரில் நனைந்தபடி இருந்தது. இப்படியே அப்பகுதியெங்கும் பலர் கொல்லப்பட்டார்கள். சில நாட்களின் பின்னர் நாமிருந்த வீட்டுப் பகுதியின் சுற்றத்திலும் செல்கள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கவே கொய்யாத்தோட்டத்தில் அமைந்திருக்கும் கிறிஸ்த்து ராசா ஆலயத்தில் அகதிமுகாம் ஒன்றினை அமைத்திருக்கிறார்கள், அங்கு சென்றால் தப்பித்துக்கொள்ளலாம் என்று யாரோ சொல்லவே, இருள் சூழ்ந்திருந்த பொழுதொன்றில் அங்கு சென்று அடைக்கலமானோம். ஆனால் அங்கு நாமிருந்த சில மணிநேரத்திலேயே மிகக் கொடூரமான செல்த்தாக்குதலை இந்திய ராணுவம் அப்பகுதி மீது நடத்தியது. பல நூற்றுக்கணக்கான மக்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என்று கூடியிருந்த கூட்டம் ஒப்பாரி வைக்குமாற்போல் கூக்குரலிட்டு அழத் தொடங்கியது. அங்கிருந்த அனைவரும் கொல்லப்படப்போகிறோம் என்கிற எம்மை ஆட்கொண்டது. இனி இங்கே இருந்தால் நிச்சயம் கொல்லப்படுவோம், வேறு எங்காவது சென்றாக வேண்டும் என்று பலர் பேசத் தொடங்கினர். புதிதாக அப்பகுதிக்கு அடைக்கலம் தேடி வந்தவர்கள் கூறத்தொடங்கிய கதைகளைக் கேட்டபோது இந்திய ராணுவம் மிகப்பெரும் படுகொலை ஒன்றினை நடத்தவே யாழ்நகர் நோக்கி முன்னேறி வருவது என்று பலர் பேசத் தொடங்கினர்.6 points
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
சுமார் 8 அல்லது 9 மணியிருக்கலாம். செல்வீச்சின் அகோரம் குறைந்துபோயிருந்தது. இடையிடையே வீழ்ந்து வெடிக்கும் செல்களைத்தவிர அதிகளவான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. "அவங்கள் அப்படியே ரோட்டால போயிட்டாங்கள் போலக் கிடக்கு, இனிப்பிரச்சினையில்லை, அவங்கள் சனத்துக்கு ஒண்டும் செய்யம்மாட்டங்கள், பயங்கரவாதிகள் சுரண்டினால் ஒழிய அவங்கள் ஏன் சனத்தைச் சுடப்போறாங்கள்"? என்று தந்தையார் கூறினார். நாம் எதுவும் பேசவில்லை. இப்படியே சில மணித்துளிகள் போயிருக்கும். செல்வீச்சின் அகோரம் முற்றாக நின்று போயிருக்க, துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்கத் தொடங்கின. தூரத்தே கேட்க ஆரம்பித்த அச்சத்தம் நேரம் செல்லச் செல்ல எம்மை நோக்கி நகர்ந்துவருவது தெளிவாகத் தெரிந்தது. புலிகள் பயன்படுத்தும் ஏ கே 47 துப்பாக்கியின் ஒலி நான் நன்றாக அறிந்தது. ஆனால் அதனைக் காட்டிலும் வேறு வகை ஒலியொன்று தொடர்ச்சியாகக் கேட்க ஆரம்பித்தது. அன்று இரவுவரை எமது வீட்டின் முன்னால் நின்று பேசிக்கொண்டிருந்த புலிகளின் குரல்கள் அப்போது கேட்கவில்லை. அவர்கள் போயிருக்கலாம். அல்லது கொல்லப்பட்டிருக்கலாம். தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருந்த துப்பாக்கி வேட்டுக்களைத் தவிர இன்னொரு ஒலியும் தற்போது கேட்கத் தொடங்கியிருந்தது. பாரிய இரும்புச் சங்கிலியொன்றினை யாரோ வீதியால் இழுத்துவருவது போன்ற ஒரு ஒலி. இது நான் அதுவரை கேட்டிராதது. அது என்னவாக இருக்கும் என்று யோசிக்கத் தொடங்கினேன். சிலவேளை நல்லூர்க் கோயில் நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சனங்கள் தமது பொருட்களை இழுத்துச் செல்கிறார்களோ என்னவோ என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். அவ்வொலியும் விட்டு விட்டு கேட்டுக்கொண்டிருக்க, கனர இயந்திரத் துப்பாக்கியின் ஒலியும் தற்போது மிக அருகில் கேட்கத் தொடங்கியிருந்தது. இலங்கை விமானப்படை வானிலிருந்து நடத்தும் 50 கலிபர் தாக்குலின்போது எழுப்பப்படும் தொடர்ச்சியான தாக்குதல் ஒலியினை ஒத்த ஒலி மிக அருகில் கேட்கத் தொடங்கியது. இரவு 11 அல்லது 12 ஐக் கடந்திருக்கலாம். திடீரென்று வீட்டின் மத்திய பகுதியில் செல்லொன்று வந்து வீழ்ந்து வெடித்தது. வெடிப்பின் தாக்கத்தின் பெரும்பகுதியைக் கூரை தாங்கிக்கொண்டதால் கூரையின் உச்சிப்பகுதி வீட்டினுள் வந்து வீழ்ந்தது. இனிமேல் தொடர்ந்தும் வீட்டில் இருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்த நாம் பின்னால் இருந்த மரவள்ளித் தோட்டத்தினுள் சென்று படுத்துக்கொண்டோம். அன்று காலையில்த்தான் நீர்ப்பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும், தோட்டாம் முழுவதுமாக சேறாயிருக்க வேறு வழியின்றி குப்புரப் படுத்துக்கொண்டோம். சிறிது நேரத்தில் எமது வீட்டின் முன்னால் யாரோ சத்தமாகப் பேசுவது கேட்டது. அது இந்திய இராணுவம்தான் என்பது எமக்குத் தெரிந்தது. "வீட்டிலிருப்பவர்கள் வெளியே வாருங்கள்" என்று சத்தமாகக் கத்திக்கொண்டிருந்தான் ஒருவன். நாம் அசையவில்லை. நடுச் சாம இருளில் அவர்கள் முன்னால் செல்லும்போது எமக்கு என்ன நடக்கும் என்பது எமக்கு நன்றாகவே தெரிந்திருந்தது, ஆகவே சத்தமின்றி அங்கேயே படுத்துக் கிடந்தோம். நாம் படுத்திருந்த தோட்டவெளிக்கும் இந்திய இராணுவ அணிக்கும் இடையிலான தூரம் சுமார் 25 அல்லது 30 மீட்டர்கள் மட்டுமே இருக்கும். இருளும், உயர்ந்து வளர்ந்திருந்த மரவள்ளிக் கன்றுகளும் எம்மை முற்றாக மறைத்துவிட்டிருந்தன. அங்கு படுத்திருந்தவாறே எம்மைச் சுற்றி நடக்கும் படுகொலைகளைப் பார்க்கத் தொடங்கினோம்.6 points
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
சாத்தானின் படையுடனான எனது அனுபவம் இடம்: கோண்டாவில், யாழ்ப்பாணம் காலம் : ஐப்பசி, 1987 அது ஒரு மாலை வேளை. பலாலி வீதியூடாக இந்திய இராணுவம் பலாலியில் இருந்து யாழ்நகர் நோக்கி நகர்ந்துவருவதாக அயலில் பேசிக்கொண்டார்கள். மிகக்கடுமையான செல்வீச்சு எமது பகுதிநோக்கி நடத்தப்பட்டுக்கொண்டிருந்தது. காலையில் இருந்து அயலில் உள்ளவர்கள் நல்லூர் கந்தசுவாமிக் கோயிலுக்குப் போவதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தனர். "நீங்கள் போக இல்லையோ? இருக்கவே போரியள்? வந்தாங்கள் எண்டால் சுட்டுக் கொண்டு போடுவாங்கள். உரும்பிராயில நியாயமான சனத்தைக் கொண்டுட்டாங்களாம். நாங்கள் போகப்போறம். கொப்பரிட்டைக் கேட்டுப்போடு நீங்களும் வாங்கோ" என்று பக்கத்துவீட்டு பாமா அக்கா கூறிவிட்டுச் சென்றார். அவர் சொன்னதை தகப்பனாரிடம் கூறினேன். "தேவையில்லை, அவை போறதெண்டால் போகட்டும், நாங்கள் வீட்டிலை இருப்பம்" என்று ஒரே போடாய்ப் போட்டுவிட்டார். முதல் நாள் மாலையில் இருந்து எமது ஒழுங்கையில் சில போராளிகள் ஆயுதங்களோடு தரித்து நின்றிருந்தார்கள் நான்கு அல்லது ஐந்து பேர் இருக்கலாம். எமது வீட்டின் முன்னால் அமர்ந்திருந்த அவர்களுக்கு தேநீரும் சில உணவுப் பொருட்களையும் கொண்டுபோய்க் கொடுத்தேன். என்னைப்போலவே அருகில் இருந்தவர்களும் அவர்களைக் கவனித்துக் கொண்டார்கள். தகப்பனாரின் முகத்தில் ஈயாடவில்லை, வேறு நேரமாக இருந்திருந்தால் என்னை கொடுமையாகத் தாக்கியிருப்பார், ஆனால் புலிகளின் பிரசன்னம் அவரைத் தடுத்து விட்டிருந்தது. உரும்பிராய்ப் பகுதியை வட்டமடித்தபடி இந்திய விமானப்படையில் எம் ஐ 24 உலங்குவானூர்திகள் வானிலிருந்து மிகக்கடுமையான கனரக பீரங்கித் தாக்குதலையும் இயந்திரத் துப்பாக்கித் தாக்குதலையும் நடத்தத் தொடங்கியிருந்தன. அவை வானில் வட்டமடித்தவேளை கோண்டாவில் டிப்போவின் மேலாகவும் வந்துபோயின. புலிகள் அப்பகுதியில் நிற்பதைக் கண்டால் எமது பகுதிமீதும் தாக்குதல் நடக்கலாம் என்று அஞ்சிய நாம் வீட்டினுள் புகுந்துகொண்டோம். சில நாட்களாகவே மின்சாரம் தடைப்பட்டு இருந்தது. சந்தைகளும் இயங்கவில்லை. வீட்டில் கிடந்த பொருட்களைச் சேர்த்து சிற்றன்னையார் சமைத்திருந்ததை மதியம் அனைவரும் உட்கொண்டோம். மதியவேளைக்குப் பின்னர் செவீச்சின் உக்கிரம் அதிமானது. ஒவ்வொரு செல்லும் ஏவப்படும் போது எழுப்பும் ஒலியும், அது வீழ்ந்து வெடிக்கும்போதும் எழும்பும் ஒலியும் மிகத் துல்லியமாக இப்போது கேட்கத் தொடங்கின. ஒரு சில கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்தே அவற்றினை ஏவுகிறார்கள் என்பது தெரிந்தது. சுமார் பத்து செக்கன்களுக்கு ஒன்று என்ற ரீதியில் செல்கள் வந்து வீழ்ந்து வெடிக்க ஆரம்பித்தன. எமது வீட்டின் மேலாகப் பறந்துசென்று கோண்டாவில்ச் சந்திப்பகுதியில் அவை வீழ்ந்து வெடித்தன. ஒவ்வொருமுறையும் அவை வந்து வெடிக்கும்போது எங்கள் வீட்டின் கூரைகள் சலசலத்து, கீழே வீழ்ந்து நொறுங்குவது தெரிந்தது. வீட்டின் பின்புறத்தில் ஒடுங்கலான பகுதியொன்றில் சீமேந்தினால் கட்டப்பட்ட கூரைப்பகுதியின் கீழ் நாங்கள் நின்றுகொண்டோம். வீட்டின்மீது செல் வீழ்ந்தாலும் நாம் நின்றபகுதி பாதுகாப்பானது என்பது எமது எண்ணம். சுமார் பகல் 2 மணியிலிருந்து இரவு 8 மணிவரை அவ்விடத்திலேயே அசையாது அமர்ந்திருந்தோம். இடைவிடாது நடத்தப்பட்ட செல்வீச்சினால் மனதளவிலும், உடலலளவிலும் அச்சத்துடன் நடங்கியபடி அங்கு அமர்ந்திருந்தோம். இரவாகியிருந்தாலும் கூட செல்கள் எமக்கு மேலால் பறந்து சென்று வெடித்தபோது மின்னல் பாய்ச்சியதுபோன்ற வெளிச்சத்தை ஏற்படுத்திச் சென்றது. ஒவ்வொருமுறையும் வீழ்ந்து வெடிக்கும் செல்களினூடு இதயமும் நின்று மீளவும் இயங்கியதுபோன்ற வலி.6 points
-
வாழைப்பூ வடை
5 pointsஇது எங்கள் தமிழ் ஆட்களிடம் தனித்துவமாக இருக்கும் கிரகிப்புக் குறைபாடோ தெரியவில்லை. மருத்துவர்கள் "வாழைத் தண்டிலும் பூவிலும் நிறைய நார்த்தன்மை இருக்கிறது, எனவே கிளைசீமிக் இண்டெக்ஸ்" குறைவு, அதனால் சாப்பிட்டாலும் சுகர் ஏறாது" என்று எழுதினால், வாசிப்போர் "வாழைத்தண்டு, வாழைப்பூ சுகர் வருத்தத்தைக் குணப் படுத்தும் மருந்து" என்று பெருப்பித்து விளங்கிக் கொள்கிறார்கள்! சுகர் வருத்தத்திற்கான மருந்து என்பது இன்சுலின் சுரப்பையோ அல்லது சுரக்கும் இன்சுலின் தொழில்பாட்டையோ அதிகரிக்கும் வேலையைச் செய்தால் மட்டுமே அது சுகர் வருத்தத்திற்கான மருந்து. தற்போதைக்கு மெற்போமின் போன்ற ஆங்கில மருந்துகள் மட்டும் தான் இந்த வேலையைச் செய்கின்றன. வேறெந்த மந்திர மாயமும் நாட்டு வைத்தியமும் இந்த வேலையைச் செய்வதாக ஆதாரங்கள் இல்லை! இந்த கிரகிப்புக் குறைபாட்டை வேறு பல வடிவங்களிலும் காண்கிறேன். அண்மையில் ஒரு நண்பர் தான் வொட்கா குடிக்க ஆரம்பித்திருப்பதாகச் சொன்னார். "நீங்கள் அல்கஹோல் குடிப்பதில்லையே, இப்போது புதிதாக ஆரம்பித்திருக்கிறீர்களா?" என்று கேட்ட போது "வொட்கா குடித்தால் இரத்த சுகர் ஏறாது என்பதால் குடிக்கிறேன்" என்றார்😂. நடந்தது என்னவென்றால், "உடலில் சுகரை ஏற்றாமல் எந்த மதுபானத்தைக் குடிக்கலாம் டொக்ரர்?" என்று எங்கள் தமிழ் நோயாளிகள் கேட்கும் போது சில டொக்ரர் மார் "வொட்காவில் சுகர் இல்லை, எனவே கொஞ்சம் குடிக்கலாம்" என்று பதில் சொல்கிறார்கள். இதனைத் தான் "வொட்கா குடித்தால் சுகர் ஏறாது" என சிலர் விளங்கிக் கொண்டிருப்பதாகத்தெரிகிறது.5 points
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
எம்முடன் கூட வந்த இந்திய ராணுவத்தினன் பலாலி வீதியுடன் நின்றுவிட நானும் தகப்பனாரும் மெதுவாக எமது ஒழுங்கைக்குள் நுழைந்தோம். அப்பகுதி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போயிருந்தது. மதில்கள் ஒழுங்கையின் நீளத்திற்கு வீழ்ந்துகிடக்க, ஒழுங்கையின் இருபக்கமும் பற்றைகள் வளர்ந்து ஒழுங்கையினை மறைத்தபடி நின்றது. அங்கிருந்த 5 வீடுகளில் ஒன்றேனும் தப்பியிருக்கவில்லை. இந்திய இராணுவம் இப்பகுதியில் நிலைகொண்ட பின்னர் மீதமாயிருந்த வீடுகளையும் இடித்துத் தள்ளியிருக்க வேண்டும். எல்லாமே அழிவுகளைச் சுமந்து காணப்பட்டன. ஆளுயரத்திற்கு மேலாய் வளர்ந்திருந்த பற்றைகளைத் தாண்டி எமது வீட்டினை அடைந்தோம். வீட்டின் பெரும்பகுதி எரியூட்டப்பட்டது போலக் காணப்பட்டது. முதலாவது அறையில் இந்திய ராணுவம் தங்கியிருக்கிறது என்பது தெரிந்தது. அவர்கள் பாவித்த சில பொருட்கள், இந்தியாவின் ப்ரூ கோப்பி என்று சில இந்தியப் பொருட்களும், அயலில் உள்ள வீடுகளில் இருந்து அவர்கள் எடுத்து வந்திருந்த தளபாடங்களும் அவ்வறையில் பரவிக் கிடந்தன. இடிந்த மதில்களின் கற்களை எடுத்துவந்து காப்பரண் கட்டியிருந்தார்கள். இவ்வீடுகளில் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதோ அல்லது இவ்வீடுகளை அவர்கள் தமது வாழ்நாள் உழைப்பின் மூலமே கட்டியிருந்தார்கள் என்பதோ அவர்களுக்கு ஒரு பொருட்டாக இருந்திருக்காது. நாம் வெகு நேரம் அங்கு நிற்க விரும்பவில்லை. 30 நிமிட நேரமே இருக்கமுடியும், அதற்குள் எடுத்துக்கொள்ள முடியுமானவற்றை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடவேண்டும் என்று அந்த அதிகாரி பணித்தது எமக்கு நினைவில் இருந்தது. ஆகவே சில தேங்காய்கள், சமயலறையில் இன்னமும் மீதமாயிருந்த மாப்பியன் அரிசி, வாழைக்காய் என்று சிலவற்றையும் ஓரிரு பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு எமது சைக்கிள்களில் கட்டிக்கொண்டோம். இவற்றுக்கு மத்தியில் அப்பகுதியெங்கும் துர்நாற்றம் வீசுவதை நான் அவதானித்தேன். இறந்த விலங்குகளின் உடல்களாக இருக்கலாம் என்று எண்ணினேன். அவை மனிதர்களின் உடல்களாகவும் இருக்கலாம். ஆனால் பற்றைகளுக்குள் என்னவிருக்கின்றது என்று பார்க்கும் துணிவு எனக்கு இருக்கவில்லை. வீட்டிலிருந்து துரத்தப்பட்டபோது எம்முடைய மூன்று நாய்கள் பற்றி நாம் யோசிக்கவில்லை. ஆனால் மீண்டும் அங்கு சென்றபோது அவற்றுக்கு என்னவாகியிருக்கும் என்று எண்ணத்தொடங்கினேன். அப்பகுதியில் இருந்த இந்திய ராணுவத்தினரின் காதுகளுக்கு எட்டாத வகையில் அவற்றின் பெயர் சொல்லி அழைத்தேன், எவையுமே வரவில்லை. எமது வீட்டைச் சுற்றிப் படர்ந்திருந்த பற்றைகளும், துர்நாற்றமும், அயல்வீடுகளில் இருந்து வந்த உய்த்தறிய முடியாத சத்தங்களும் அச்சத்தை ஏற்படுத்தின. பேய்நகரம் போன்று காட்சியளித்த அப்பகுதியில் தொடர்ந்தும் நிற்க விரும்பாது அங்கிருந்து வெளியேறினோம். மீண்டும் பலாலி வீதி, கோண்டாவில்ச் சந்தி என்று இந்திய ராணுவ நிலைகளூடாக வெளியேறி சைக்கிள்களைத் தள்ளிக்கொண்டே பாசையூரை வந்தடைந்தோம்.5 points
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
அன்றிரவு முழுதும் நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களில் யாழ்நகர், குருநகர், பாசையூர், சின்னக்கடை, கொழும்புத்துறை, சுண்டுக்குளி ஆகிய பகுதிகளில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். இதில் வேதனை என்னவென்றால் அப்பகுதியெங்கிலும் புலிகளையோ அல்லது அவர்களது முகாம்களையோ நாம் காணவில்லை என்பதுதான். பழைய பூங்கா பகுதியில் அமைந்திருந்தத் புலிகளின் பயிற்சிமுகாமும் அன்றைய நாட்களில் இயங்கியிருக்க வாய்ப்பில்லை. அப்படியிருந்தபோதிலும், சனநெரிசல் மிகவும் அதிகமான அப்பகுதி மீது மிகவும் கண்மூடித்தனமான முறையில் செல்த்தாக்குதலை இந்தியாவின் சாத்தான்படை சகட்டுமேனிக்கு நடத்திக்கொண்டிருந்தது. நாம் பாசையூரில் அடைக்கலமாயிருந்த சில நாட்களில் யாழ்நகரினை இந்தியப் படை ஆக்கிரமித்துக்கொண்டது. வீதிகளில் ரோந்துவரும் இந்திய ராணுவத்தினை தூரத்திலேயே ஊர் நாய்கள் காட்டிக் கொடுத்துவிட சனமெல்லாம் வீடுகளுக்குள் அடைந்துவிடும். இந்திய ராணுவத்தின் பிரசன்னம் வீதியில் இருப்பது தெரியாது வீடுகளுக்கு வெளியே வந்தவர்கள் சிலர் வீதிகளிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பல மணிநேரமாக வீதிகளில் கிடந்த உடல்களை இந்திய ராணுவம் சென்றபின்னர் ஊரில் இருப்பவர்கள் எடுத்துவந்து அடக்கம் செய்தார்கள். சில சடலங்களின் மேலால் இந்திய ராணுவ வாகனங்கள் ஏறிச்சென்ற அடையாளங்களும் காணப்பட்டன. சுமார் ஒன்று அல்லது ஒன்றரை மாத காலம் பாசையூரில் இருந்திருப்போம், கோண்டாவில், இருபாலை ஆகிய பகுதிகளில் மக்கள் தமது வீடுகளுக்குச் சென்று தேவையான பொருட்களை எடுத்து வர இந்திய ராணுவம் அனுமதியளித்திருக்கிறது என்று யாரோ சொன்னார்கள். ஆகவே பாசையூரில் நாம் தங்கியிருந்த வீட்டில் ஒரு சைக்கிளை கேட்டு எடுத்துக்கொண்டு கோண்டாவிலுக்குச் செல்லலாம் என்று தந்தையார் சொல்லவே, நானும் ஆம் என்றேன். பலாலி வீதியால் செல்லாதீர்கள். தின்னைவேலியில் இன்னும் சண்டை நடக்கிறதாம். பிரதான வீதிகளைத் தவிர்த்துவிடுங்கள் என்று ஆளாளுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார்கள். அவர்கள் கூறியவாறே குச்சொழுங்கைகளுக்கூடாக எமது பயணத்தை ஆரம்பித்தோம். பின்னர் ஆலய வீதி வழியே சென்று தின்னைவேலியில் ஆடியபாதம் வீதி, பாற்பண்ணை, மாதிரிக்கிராமம் என்று முழுவதுமாக உள் வீதிகளுக்கூடாக நுழைந்து கோண்டாவில்ச் சந்திக்கும், பாமர்ஸ் ஸ்கூல் (கமல நல சேவைகள் நிலையம்) அமைந்திருந்த பகுதிக்கும் இடைப்ப்ட்ட பகுதியில், பலாலி வீதி கண்ணுக்குத் தென்படும் தூரத்தில் நாம் வந்தபோது, கோண்டாவில்ச் சந்தியில் இருந்து தின்னைவேலி நோக்கி இந்திய ராணுவத்தின் வாகனத் தொடரணி போய்க்கொண்டிருந்தது. வீதியின் இடதுபுறத்தில், சுமார் 50 மீட்டர்கள் தொலைவில் நின்றிருந்த எம்மைக் கண்டதும் வாகனத் தொடரணியை நிறுத்திவிட்டு துப்பாக்கிகளை நீட்டியவாறு பாய்ந்து வந்தது இந்திய ராணுவம். எனது கையில் ஒரு ஷொப்பிங் பை நிறைய தேசிக்காய்கள், வழியில் வரும்போது யாரோ ஒருவருடைய மரத்தில் பிடுங்கி எடுத்துக்கொண்டது. அப்பகுதியெங்கும் பற்றைக்காடுகளாய் மூடி வளர்ந்திருக்க, எம்மைக் கொன்றாலும் எவருக்குமே தெரியப்போவதில்லை என்று உணர்ந்துகொண்ட நாம், இந்திய ராணுவம் கட்டளையிட்டவாறே நிலத்தில் விழுந்து படுத்துக்கொண்டோம். எம்மைச் சுற்றிவளைத்த அவர்கள், "நீங்கள் புலிகளா, இங்கு ஏன் வந்தீர்கள், எங்கே போகிறீர்கள்?" என்று சரமாரியாக கேள்விகளை அடுக்கிக் கொண்டு போனார்கள். "நாம் புலிகள் இல்லை, பொதுமக்கள், எமது வீடுகளைப் பார்க்க வந்திருக்கிறோம்" என்று தந்தையார் கூறவும், எனது பக்கம் திரும்பி, "பையில் என்ன வைத்திருக்கிறாய்?" என்று ஒருவன் ஆங்கிலத்தில் கேட்டான். தேசிக்காய் என்று நான் கூறவும், அதனை நம்பாது பையைப் பறித்து நோட்டமிட்டான். பின்னர் எங்கள் இருவரையும் இழுத்துக்கொண்ம்டு பலாலி வீதிக்கு வந்தார்கள். வீதியின் நீளத்திற்குக் காப்பரண்களும், இந்திய ராணுவ வாகனங்களும் தென்பட்டன. கோண்டாவில்ச் சந்திப்பகுதியில், வீதியினை மறித்து பாரிய ராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. எம்மை அங்கு கொண்டு சென்றார்கள். நிலத்தில் இருத்திவைக்கப்பட்ட எம்மை அவர்களின் அதிகாரியொருவன் வந்து பார்த்தான். ஆங்கிலத்தில் தந்தையாருடன் பேச்சுக்கொடுக்கவே, தன்னை மீளவும் தபால் அதிபர் என்று அவர் கூறியபோது, "என்னை ஞாபகம் இருக்கிறதா?" என்று அவர் கேட்டான். எமது வீட்டிற்கு வந்து, எம்மை வெளியே இழுத்துவந்து தாக்கிய அதே அதிகாரிதான் அவன். "உங்களின் புலிகள் எங்களில் பலரைக் கொன்றுவிட்டார்கள், நாம் அவர்களை விடப்போவதில்லை, அழித்தே தீருவோம்' என்று கர்வத்துடன் கூறிவிட்டு, "ஏன் இங்கே வந்தீர்கள்? இன்னமும் உங்களது வீட்டுப்பகுதியில் சண்டை நடக்கிறது, நீங்கள் அங்கு போகமுடியாது" என்று அவன் கூறினான். "வீட்டில் சமைப்பதற்குக் கூடப் பாத்திரங்கள் இல்லை, எமது சைக்கிள்களும் எமக்குத் தேவை. வீட்டிலிருந்து சில தேங்காய்களையும், மரக்கறிகளையும் எடுத்துவரத்தான் வந்திருக்கிறோம். ஒரு 30 நிமிடத்திற்குள் முடித்துவிட்டுக் கிளம்பிவிடுவோம்" என்று தந்தையார் மன்றாட்டமாகக் கேட்கவும், "நாம் உங்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, சண்டையில் அகப்பட்டு வீணாகச் சாகப்போகிறீர்கள், உங்கள் விருப்பம்" என்று கூறிவிட்டு, எமது வீடு அமைந்திருந்த ஒழுங்கை வரை எம்மை அழைத்துச் செல்லுமாறு ஒரு ராணுவ வீரனைப் பணித்தான். அவன் எங்களை அங்கு அழைத்துச் செல்லும்போது அப்பகுதியெங்கும் நிலையெடுத்திருந்த ஏனைய இந்திய ராணுவத்தினர் ஏதோ ஜந்துக்களைப் பார்ப்பது போன்று பார்த்துக்கொண்டார்கள்.5 points
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
சுமார் நான்கு அல்லது ஐந்து மணித்தியாலங்கள் கிறீஸ்த்து ராசா கோயிலில் தங்கியிருந்தோம். செல்த்தாக்குதல் மெது மெதுவாக குறையத் தொடங்கியது. அதிகாலை 4 மணியளவில் மீளவும் கொய்யத்தோட்டத்தில் அமைந்திருந்த வீட்டிற்கு வந்தோம். ஆனால் வழமைபோல மறு நாள் மாலையும் செல்த்தாக்குதல்கள் ஆரம்பித்தன. அதே கொடூரமான, இடைவிடாத தாக்குதல்கள். பாசையூர் அந்தோணியார் ஆலயத்தை அகதிகள் முகாமாக அறிவித்திருக்கிறார்கள். இந்திய இராணுவம் அப்பகுதி மீது தாம் தாக்குதல் நடத்தப்போவதில்லை என்று உறுதியளித்திருக்கிறது. ஆகவே அங்கே போகலாம் என்று யாரோ சொன்னார்கள். ஆகவே இரவு 8 மணியளவில் சில உடுதுணிகளை எடுத்துக்கொண்டு பாசையூர் நோக்கிச் சென்றோம். எதிர்பார்த்ததுபோலவே அப்பகுதியெங்கும் சனக்கூட்டம். கோயிலின் உட்பகுதிக்குச் செல்ல முடியவில்லை, முற்றாக மக்களால் நிரம்பி வழிந்தது. ஆகவே ஆலய முன்றலில், கொடிக்கம்பத்தைச் சுற்றியிருந்த மணற்றரையில் அமர்ந்திருந்த பல நூற்றுக்கணக்கான மக்களுடன் நாமும் அமர்ந்துகொண்டோம். பாய்கள், படுக்கை விரிப்புக்கள் என்று கைகளில் அகப்பட்டதை மணலில் விரித்து குடும்பம் குடும்பமாக மக்கள் அமர்ந்திருந்தார்கள். யாழ்நகர் நோக்கி முன்னேறிவரும் இந்திய ராணுவம் அப்பகுதி நோக்கிக் கடுமையான செல்த்தாக்குதலைனை நடத்திக்கொண்ன்டிருந்தவேளை, கடலில் இருந்து கரையோரப் பகுதிகள் மீது கடுமையான பீரங்கித் தாக்குதலினை இலங்கை கடற்படை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக குருநகர், பாசையூர், கொழும்புத்துறை ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த குடியிருப்புக்களை இலக்குவைத்தே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பாசையூர் அந்தோணியார் ஆலயத்தில் அகதிகள் தஞ்சமடைந்திருப்பது இலங்கைக் கடற்படைக்குத் தெரியுமாதலால், அப்பகுதி இலக்குவைக்கப்படலாம் என்று பலர் கருதினர். ஆகவே சில குடும்பங்கள் அங்கிருந்து வேறு பகுதிநோக்கி கிளம்பிச் செல்ல ஆரம்பித்தன. தொடர்ச்சியாகப் பெய்துகொண்டிருந்த மழை, ஆலயமும் இலக்குவைக்கப்படலாம் என்கிற அச்சம் ஆகியவை எம்மை ஆட்கொள்ள நாமும் ஆலயத்திலிருந்துந்து புறப்பட்டு கொழும்புத்துறை நோக்கிச் செல்லும் வீதியில் ஒரு வீட்டில் அடைக்கலமானோம். அவ்வீட்டில் வசிப்பவர்கள், அன்றிரவு அங்கு வந்து அடைக்கலமானவர்கள் என்று சுமார் 30 அல்லது 40 வரையான மக்கள் அன்றிரவு அங்கு அச்சத்துடன் அமர்ந்திருந்தோம். செல்த்தாக்குதல் மீளவும் ஆரம்பமானது. ஒவ்வொரு இரவும் நடத்தப்படும் இத்தாக்குதல்களில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டார்கள். அன்றிரவும் அப்படித்தான். அப்பகுதியெங்கும் பல வீடுகள் செல்பட்டு உடைந்து நொறுங்குவது எமக்குக் கேட்டது. பாசையூர் அந்தோணியார் ஆலயத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்திலேயே நாம் அடைக்கலமாகியிருந்த வீடு அமைந்திருந்தது. இரவு 10 அல்லது 11 மணியிருக்கலாம், ஆலயப்பகுதியினை இலக்கு வைத்து கடுமையான தாக்குதலினை இந்திய ராணுவமும், இலங்கைக் கடற்படையும் நடத்தின. ஆலய முன்றலில் வீழ்ந்து வெடித்த செல்களினால் அங்கிருந்த பலர் துடிதுடித்து இறந்து போனார்கள். குறைந்தது 30 பேராவது கொல்லப்பட்டிருக்கலாம், பலர் காயப்பட்டார்கள் என்று அங்கிருந்து வெளியே ஓடிவந்தவர்கள் கூறியபோது, சில மணிநேரத்திற்கு முன்னர் நாம் அமர்ந்திருந்த இடமே தாக்குதலுக்கு உள்ளானது என்று அறிந்தபோது நாம் அச்சத்தில் உறைந்துபோனோம்.5 points
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
அண்ணா, பிரதேசவாதமும், பிரதேச மேட்டிமைவாதமும் வேறுபட்டவை. உலகெங்கும் பெரும்பாலான மனிதர்கள் தங்களுக்கென்ற சில அடையாளங்களுடனேயே வாழ்கின்றார்கள். அது இனம், மொழி,மதம், பிரதேசம் என்று பல வகைகளில் இருக்கலாம். குலம், கோத்திரம் என்று கூட இந்த அடையாளங்கள் இருப்பதுண்டு. தங்களின் அடையாளங்களுக்கு விசுவாசமாகவும், தங்களின் அடையாளங்களை முன்னிறுத்தியும் மனிதர்கள் வாழத் தலைப்படுகின்றார்கள். ஆனால் தங்களை நிகர்த்த அடையாளங்கள் இல்லாதவர்கள் கீழானவர்கள், இழிவானவர்கள், திறமையற்றவர்கள், வீரம் அற்றவர்கள் என்பது போன்ற ஒப்பீடுகளும், கணிப்புகளும் மேட்டிமைவாதம் என்னும் வகையிலேயே வருகின்றது. பிறப்பினாலேயே தங்களை மேலானவர்கள் என்று நினைத்துக் கொள்வது மட்டும் இல்லாமல், அப்படியே நடந்து கொள்வதும் மேட்டுமைவாதமே. இந்த பிரதேச மேட்டுமைவாதமே இலங்கையில் சில பிரதேச மக்களிடம் இருக்கின்றன என்று தான் நான் சொல்ல முயன்றிருந்தேன். உதாரணம்: யாழ்ப்பாண தமிழ் மக்கள், கண்டி சிங்கள மக்கள். இவர்கள் இருவரும் இந்த விடயத்தில் வெளிப்படுத்தும் மேட்டுமைவாதத்தை இலங்கையில் வேறு எவரும் வெளிப்படுத்துவதில்லை என்பதே என் அனுபவம். பிறப்பினாலேயே ஒருவர் சிறந்தவர் ஆகி விடுகின்றார் என்றால், இங்கே எதற்குமே பொருள் இல்லை என்று ஆகிவிடுகின்றது அல்லவா.4 points
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
உள்நாட்டு யுத்தத்தால், புலம் பெயர்ந்து தமிழர்கள் இலட்சக்கணக்கில் இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழமுடியுமென்ற நிலை இருக்கும் போது. இது முடியாதா என்ன? சுமந்திரனுக்கு ஒரு ‘சபாஸ்’👏4 points
-
“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!
இவர் கூறியதில் என்ன தவறு இருக்கின்றது? தாம் இஸ்லாம் என கிறிஸ்தவ நாடுகளில் வரிந்துகட்டிக்கொண்டு நிற்பவர்களின் அஜாரகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.... அவர்கள் கை கழுவும் தொட்டிகளில் காலை தூக்கி கழுவியிருக்கிறார்கள். அந்த இடம் எப்படி இருக்கும் என்பதை நீங்களே சிந்தித்து பாருங்கள்.4 points
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
4 pointsசுமத்திரன் கடைசி சண்டையின் பின் தமிழர்களுக்காக அல்லும் பகலும் பாடு பட்டவர் சிங்களவர்களுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியவர் என்று அவரின் அடிவருடிகளுக்கு சொன்னால் தான் நிம்மதியாய் இருக்கும்கள் . இங்கு வடகிழக்கு தமிழர்களுக்கு தீர்வு முக்கியமல்ல சுமத்திரன் தலைவராகனும் அதுதான் சுமத்திர விசுவாசிகளுக்கு முக்கியம் .4 points -
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
4 pointsஇரண்டு வரியிலேயே முடித்திருக்க வேண்டிய கறுத்தது வீணாக இரண்டு பந்திகள் உதவி செய்ய போனவன் பொருட்களுடன் போகிறான் படம் பிடிக்க போனவன் காமெராவுடன் போகிறான்4 points -
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
பலருக்கு பிரஜைகள் குழு என்றால் என்ன என்று இப்போது விளங்குமா என தெரியவில்லை. நான் நினைக்கின்றேன் பிரஜைகள் குழு 1986/7 ம் ஆண்டளவில் விடுதலை புலிகள் அமைப்பினால் தோற்றுவிக்கப்பட்டது. குறிப்பாக உளவாளிகள் நடமாட்டம், கிராமங்களிற்கு வரும் வெளியார் பற்றிய தகவல் இவர்களினால் பெறப்பட்டு ஒரு விழிப்புணர்வு குழுவாக செயற்பட்டது. காலப்போக்கில் பிரஜைகள் குழுவின் செயற்பாடுகள் விஸ்தாரணம் பெற்றது என நினைக்கின்றேன். எனது தகவல் சிலவேளைகளில் தவறாகவும் அமையலாம் ஏன் என்றால் நான் நீண்ட காலத்தின் பின் பழைய நினைவுகளை கிரகிக்கின்றேன். பிரஜைகள் குழு பற்றிய விரிவான விளக்கம் தெரிந்தவர்கள்/ஏக காலத்தில் அப்போது ஊரில் வாழ்ந்தவர்கள் உங்கள் கருத்தை பகருங்கள். இந்திய அமைதிப்படை காலத்தில் பிரஜைகள் குழு உறுப்பினர்கள் கொலை செய்யப்படுவது வழமையாக நடைபெற்றது. பிரஜைகள் குழு தலைவர்களும் முக்கியமாக குறி வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். வலிகாமம் பிரதேசத்து பிரஜைகள் குழு தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நினைவு சாதுவாக உள்ளது. அவர் பெயர் நினைவில்லை. பிரஜைகள் குழுவில் அங்கத்தவம் பெற்ற சிலர் பின்னர் இலங்கை தேர்தல்களிலும் நின்று வென்றார்கள் எனும் நினைவும் வருகின்றது. விடுதலை புலிகள் அமைப்பின் ஆதவாளர்கள் அல்லாத ஒருவர் பிரஜைகள் குழு உறுப்பினராகவோ தலைவராகவோ விளங்க முடியாது என நினைக்கின்றேன். இவை எனது பழைய நினைவு மீட்டல்கள் மட்டுமே. எனது தகவல் தவறாகவும் அமையக்கூடும்.3 points
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
விவிலியத்தைப் படித்தது கிடையாது. தோழர் ஷோபாசக்தி போன்றோ அல்லது எனது நெருங்கிய நண்பன் போன்றோ சிறையில் விவிலியத்தை பலதடவை படித்த அனுபவம் இல்லை! AI ஐக் கேட்டபோது விவிலியத்தில் சிவிங்கி பற்றிய குறிப்பு இல்லை என்றது. ஆனால் மேலே உள்ளதைக் காட்டியது😀 மலையக மக்களும் கிழக்கு, வன்னி மக்களும் கடும் உழைப்பாளிகள். அவர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து சோம்பேறிக் கூட்டமாக மாற்றவேண்டாம்!3 points
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
குருவானவர் சந்திரா பெர்ணான்டோ அவர்களின் படுகொலை காலம் : ஆனி, 1988 இடம் : மட்டக்களப்பு , மரியண்ணை பேராலயம் நான் மட்டக்களப்பில் தங்கி வசிக்கத் தொடங்கியிருந்த காலம். மரியாள் ஆண்கள் விடுதியில் இன்னும் 40 மாணவர்களுடன் தங்கி பாடசாலை சென்று வந்தேன். விடுதி கத்தோலிக்க பாதிரிகளால் நடத்தப்பட்டு வந்தமையினால் பெரும்பாலான மாணவர்கள் கத்தோலிக்கர்கள், ஓரிருவரைத் தவிர. ஆகவே ஒவ்வொரு காலையும் தவறாது 6 மணிக்கு அருகில் அமைந்திருந்த புனித மரியண்ணை தேவாலயத்திற்கு காலைத் திருப்பலிக்காகச் செல்வது எமது நாளாந்தக் கடமைகளில் முதலாவது. சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் திருப்பலியினை ஒவ்வொரு நாளும் அத்தேவாலயத்தின் பங்குத் தந்தையான, குருவானவர் சந்திரா பெர்ணான்டோவே நடத்துவார். அவரது கனிவான முகவும், மென்மையான குரலும், அவர் திருப்பலியினை நடத்திச் செல்லும் விதமும் ஈர்ப்பினை உருவாக்கும். நாம் மிக்கேல் கல்லூரியின் மாணவர்கள் என்பதை அறிந்த அவர் எம்முடன் சிலவேளைகளில் பேசுவதுண்டு. எமது விடுதி நடத்துனரும், குருவானவர் சந்திராவும் நண்பர்கள் ஆதலால் திருப்பலி முடிந்தபின்னர் சிலவேளைகளில் அவர்கள் பேசும்வரை நாம் காத்திருப்போம். வார விடுமுறை நாளான சனி காலையில் அவரது திருப்பலி முடிந்தவுடன், சிசிலியா பெண்கள் பாடசாலையில் நடைபெறும் கத்தோலிக்க வகுப்புகளுக்கு நாம் செல்வோம். அங்கு தவறாது குருவானவர் சந்திராவும் கலந்துகொள்வார். சிலவேளைகளில் வகுப்புகளுக்கு வந்து மாணவர்களுடன் பேசுவதும் நடக்கும். இவ்வாறு மாணவர்களாலும், ஆசிரியர்கள், பெற்றோர்களாலும் நன்கு அறியப்பட்ட ஒருவர் சந்திரா அவர்கள். புலிகள் தொடர்பாக மென்மையான போக்கினைக் கொண்டிருந்தவர் என்று அறியப்பட்ட சந்திரா அவர்கள், அக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவந்த மனிதவுரிமை மீறல்கள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பேசிவந்தவர். மட்டக்களப்பில் இயங்கிய பிரஜைகள் குழுவின் தலைவராகவும் அக்காலத்தில் பணியாற்றியவர். இராணுவத்தினராலும், துணைராணுவக் குழுவினராலும் கைதுசெய்யப்பட்ட பல இளைஞர்களை மீட்கும் காரியங்களில் அவர் ஈடுபட்டிருக்கிறார். ஆகவே கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாமல் மட்டகளப்பு வாழ் தமிழர்கள் அனைவராலும் நேசிக்கப்படும் ஒரு மனிதராக அவர் வலம்வந்தார். இவ்வாறான ஒரு நாள், ஆனி மாதம் 6 ஆம் திகதி மாலை வேளையில், விடுதி மாணவர்கள் சிலருடன் எமது விடுதிக்கு முன்னால் இருந்த வெற்றுக் காணியில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தேன். விடுதி நடத்துனரான ஸ்டீபன், ஒவ்வொரு நாளும் பத்திரிக்கை படிப்பதை வாடிக்கையாகக் கொண்டவர். ஆகவே அவர் படிக்கும் வீரகேசரிப் பத்திரிக்கையினை வழக்கமாக போல் என்று அழைக்கப்படும் ஒரு மாணவனே மட்டக்களப்பு நகருக்குச் சென்று வாங்கிவருவான். அன்று வழமை போல போல் நகருக்கு பத்திரிக்கை வாங்கச் சென்றான்.சென்ற சிறிது நேரத்திலேயே அதிர்ச்சி மேலிட்டவனாக திரும்பி வந்தான். "பாதர் சந்திராவைச் சுட்டுப் போட்டாங்கள். கோயிலுக்குள்ள நிறைய ஆக்கள் நிக்கிறாங்கள்" என்று படபடக்கக் கூறினான். மரியாள் பேராலயம், எமது விடுதியில் இருந்து பார்க்கும் தூரத்திலேயே இருக்கிறது. ஓடிச்சென்றால் இரு நிமிடங்களில் ஆலயத்தை அடைந்துவிட முடியும். ஆகவே அவன் கூறியவுடன் மைதானத்தில் நின்ற அனைவரும் தேவாலயம் நோக்கி ஓடினோம். தேவாலயம் பூட்டிக் கிடந்தது. ஆனால் அதன் அருகில் இருக்கும் குருவானவர் சந்திரா பெர்ணான்டோவின் அலுவலகம் சனக்கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஒருவாறு சனக்கூட்டத்தினுள் நுழைந்து, அவரது அறையினுள்ச் சென்றோம். எனக்கு நன்கு பரிச்சயமான ஒருவரை, நாம் மதிக்கும் ஒருவரை, இரத்த வெள்ளத்தில் நான் முதன் முதலாகப் பார்த்தது அங்கேதான். குருவானவர் தனது கதிரையில் அமர்ந்தபடி கொல்லப்பட்டிருந்தார். அவரது உடல் கதிரையில் இருந்து பின்புறமாகச் சரிந்திருக்க, நெற்றியின் அருகிலிருந்து குருதி வழிந்தோடி அவரது ஆசனம் இருந்த அறையின் பகுதியை நனைத்திருந்தது. அவர் சுடப்பட்டு வெகுநேரமாக இருக்கமுடியாது, ஏனென்றால் குருதி இன்னமும் காயாது அப்படியே கிடந்தது. அவர் அணிந்திருந்த வெண்ணிற ஆடை குருதியில் நனைந்திருக்க அவர் அங்கு கிடந்த காட்சி பார்த்த அனைவரையும் மிகுந்த துன்பத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருந்தது. எவ்வளவு நேரம் அங்கிருந்தோம் என்று நினைவில் இல்லை. அதிர்ச்சியும், பயமும் எம்மை ஆட்கொள்ள மெதுமெதுவாக விடுதி நோக்கி நடக்க ஆரம்பித்தோம். இதனை யார் செய்திருப்பார்கள் என்கிற கேள்வியே எம்மிடம் அன்று இருந்தது. குருவானவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அவரைச் சந்திக்கவென்று இருவர் வந்ததை தேவாலயத்தில் தோட்டவேலைகளில் ஈடுபட்டு வரும் ஒருவர் பார்த்திருக்கிறார். குருவானவருடன் வந்த இருவரும் முரண்பாட்டுடன் சத்தமாகப் பேசுவது கேட்டிருக்கிறது. அதன்பின்னரே அவர்கள் குருவானவின் நெற்றியில், மிக அருகில் நின்று சுட்டிருக்கிறார்கள். மரியாள் பேராலயம் அமைந்திருந்த பகுதி இந்திய ராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதியாகும். இப்பகுதியில் அமைந்திருந்த ஒவ்வொரு இந்திய இராணுவ முகாமின் முன்னாலும் தவறாது தமிழ் துணை ராணுவக் குழுவினரின் பிரசன்னமும் அக்காலத்தில் இடம்பெற்றிருக்கும். குருவானவர் கொல்லப்பட்டு சில நாட்கள் கடந்தபின்னர் அவரைக் கொன்றது இந்திய ராணுவத்துடன் மட்டக்களப்பு நகரில் இயங்கிவந்த புளோட் மற்றும் ஈ பி ஆர் எல் எப் துணை ராணுவக் குழுவினரே என்று பேசிக்கொண்டார்கள். குருவானவரைக் கொன்றவர்கள் மிக நிதானமாகவே அப்பகுதியில் இருந்து வெளியேறிச் சென்றிருக்கிறார்கள். தாம் அகப்பட்டுவிடுவோம் என்றோ, அருகில் அமைந்திருக்கும் இந்திய ராணுவ முகாமில் தடுக்கப்படுவோம் என்றோ அவர்கள் கலவரம் அடைந்திருந்ததாகத் தெரியவில்லை. இந்திய இராணுவத்தினதும், துணை ராணுவக் குழுக்களினதும் மனிதவுரிமை மீறல்கள் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசிவந்த குருவானவர் சந்திராவின் குரலை அடக்கவேண்டிய தேவை இந்திய இராணுவத்திற்கும் இருந்தமையினால், அவர்களின் பூரண ஆசீர்வாதத்துடனேயே சந்திரா துணை ராணுவக் குழு உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். குருவானவர் சந்திராவின் இறுதிக் கிரியைகள் மட்டக்களப்பில் நடைபெற்றன. மிகப்பெருந்திரளான மக்கள் மத வேறுபாடின்றி அதில் கலந்துகொண்டார்கள். நானும் அந்த இறுதிநிகழ்வில் கலந்துகொண்டேன்.3 points
-
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் - நிலாந்தன்
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் - நிலாந்தன் அனர்த்த காலங்கள் அவற்றுக்கேயான புதிய பேச்சாளர்களை வெளிக் கொண்டு வரும். இறுதிக்கட்டப் போரின்போது வன்னி கிழக்கில் வாழ்ந்த மக்களின் சார்பாக குரல்தரவல்ல அதிகாரியாக மருத்துவர் சத்தியமூர்த்தி காணப்பட்டார். அப்படித்தான் அண்மை ஆண்டுகளில் இயற்கை அனர்த்தங்களின்போது மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கைகளை விடுக்கும் ஒரு “பப்ளிக் இன்ரலெக்சுவலாக” பேராசிரியர் பிரதீபராஜா மேலெழுந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 03.09.2025 புதன்கிழமை அவர் முகநூலில் எதிர்வரும் மாதங்களுக்கான வானிலை மாற்றங்கள் குறித்து நீண்ட முன்னறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நொவம்பர் மாத நடுப்பகுதியிலும் இறுதிப்பகுதியிலும் ஏற்படக்கூடிய தாழமுக்கங்கள் தீவிர தாழமுக்கங்கள் ஆகவோ அல்லது புயல்களாகவோ மாறலாம் என்பதை கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்னரே முன்னறிவித்திருந்தார். அரச வளிமண்டலவியல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக வானிலை மாற்றங்களை அறிவிக்கும். வரக்கூடிய ஆபத்துக்களையும் முன்கூட்டியே அறிவித்து எச்சரிக்கும். ஊடகங்கள் அவற்றை உடனுக்குடன் அறிவித்து மக்களை எச்சரிக்கை செய்யும். இம்முறை டித்வா புயல் தாக்கப்போவது குறித்து அரச வளிமண்டலவியல் திணைக்களம் பொருத்தமான எச்சரிக்கைகளை முன்னறிவிக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. புயல் அனுராதபுரத்தை அடையும் வரையிலும் அதுதொடர்பான எச்சரிக்கைகள் விடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் தமிழ்ப் பகுதிகளைப் பொறுத்தவரை குறிப்பாக யாழ்ப்பாணத்தில், பிரதீபராஜா இதுபோன்ற இயற்கை அனர்த்தங்களைக் குறித்து ஏற்கனவே சில நாட்களுக்கு அல்லது பல நாட்களுக்கு முன் எச்சரிப்பதுண்டு. அவருடைய எச்சரிக்கைகள் சில சமயங்களில் பிழைக்கலாம். மிகைப்படுத்தலாகவும் இருக்கலாம். அதனால் சில சமயங்களில் மீனவர்களுக்கோ விவசாயிகளுக்கோ அல்லது ஏனைய துறையினருக்கோ நட்டங்கள் ஏற்படலாம். ஆனால் அவர் எதிர்வு கூறியதுபோல இயற்கை அனர்த்தங்கள் நிகழ்ந்து அதனால் ஏற்படக்கூடிய உயிர்ச் சேதங்களோடு ஒப்பிடுகையில், வருமுன் காக்கும் நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய பொருட்சேதம் பொருட்படுத்தத்தக்கது அல்ல. மழைக்காலங்களில் மலைகளில் மண் சரிவு ஏற்படுவது வழமை. ஒவ்வொரு பருவ மழைக்கும் மலையக மக்கள் மண் சரிவுகளில் சிக்கி உயிரிழந்து வருகிறார்கள். மழை வீழ்ச்சி அதிகரிக்கும்போது,மண் சரிவு ஏற்படக்கூடிய பிரதேசங்களில் வாழும் மக்களை எச்சரிக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு உண்டு. அந்த மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. இக்கட்டுரையில் முன் கூறியதுபோல வருமுன் காக்கும் நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய சிரமங்கள், நட்டங்களை விடவும் அந்த முன்னெச்சரிக்கையின்படி நிகழும் அனர்த்தத்தால் இழக்கும் உயிர்களின் நட்டம் பெரிது. நாடு இப்பொழுது அவ்வாறான உயிர்ச் சேதத்தைத்தான் எதிர்கொண்டிருக்கிறதா?. ஒரு புயல் தாக்கப் போகிறது என்பதனை பிரதீபராஜா ஏற்கனவே தெளிவாகக் கூறியிருந்தார். அதை அவர் வழமைபோல தனது முகநூல் பக்கத்தில் மட்டும் பகிரவில்லை. இந்தமுறை வடமாகாண ஆளுநர் அவரை தன்னுடைய அலுவலகத்துக்கு உத்தியோகபூர்வமாக அழைத்து உரையாடியுள்ளார். அந்தச் சந்திப்பில் சம்பந்தப்பட்ட துறைசார் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது பிரதீபராஜா தெரிவித்த தகவல்கள் பின்னர் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளிவந்தன. அதன்படி 130 ஆண்டுகளுக்குப் பின் ஒரு பேரிடர் நாட்டை நெருங்கி வருவதனை அவர் முன்கூட்டியே எச்சரித்திருந்தார். இந்த விடயத்தில் இப்போதுள்ள வடமாகாண ஆளுநர் வேதநாயகன் பாராட்டப்பட வேண்டியவர். ஏனென்றால் அவருக்கு முன் இருந்த ஒரு பெண் ஆளுநர் பிரதீபராஜாவை பொருட்படுத்தவில்லை. அந்தப் பெண் ஆளுநரின் காலத்தில் நடந்த ஒரு மெய்நிகர் சந்திப்பில் பிரதீபராஜா தனது கருத்தைக் கூற முற்பட்டபோது ஆளுநர் அவரைப் பொருட்படுத்தவில்லை. இதுதொடர்பாக அரச வளிமண்டலவியல் திணைக்களங்கள் தரும் தகவல்களைத்தான் நாங்கள் உத்தியோகபூர்வமாக எடுத்துக்கொள்ள முடியும். உங்களுடைய தகவல்கள் எங்களுக்குத் தேவையில்லை என்ற பொருள்பட அவர் பிரதிபராஜாவை அவமதித்திருக்கிறார். ஆனால் இம்முறை டித்வா புயலுக்கு முன்னரே வடமாகாண ஆளுநர் பிரதீபராஜாவுக்கு உரிய கௌரவத்தை கொடுத்து அவரை அழைத்துப் பேசியிருக்கிறார். பிரதீபராஜா எச்சரித்ததை போலவே புயல் பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் பிரதீபராஜாவைப் போலவே சென்னையை மையமாகக் கொண்ட செல்வக்குமார் என்ற வானிலை முன்னறிவிப்பாளரும் இலங்கையை நோக்கி முன்னெச்சரிக்கைகளை விடுத்திருக்கிறார். “வானிலை அறிவியல்” என்ற யூடியூப் தளத்தில், செல்வகுமார் இலங்கைக்கான வானிலை அறிக்கை என்ற தலைப்பில் ஒரு காணொளியை 24ஆம் திகதி வெளியிட்டார். நவம்பர் 26 தொடக்கம் 28 வரையிலுமான மூன்று நாட்களில் முன்னப்பொழுதும் காணாத பெருமழை பெய்யும் என்றும் நிலச்சரிவு ஏற்படும் என்றும் எச்சரித்திருந்தார். ( https://youtu.be/p-ayF49Ov7Q?si=lf20WuDgEkL-hr0R ) இந்த இயற்கை அனர்த்தத்தில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கு மக்கள் கால்நடைகளையும் முக்கிய ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார். இந்த இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் அவசர கால நிலையை பிரகடனம் செய்ய வேண்டிவரும் என்பதையும் செல்வகுமார் முன்கூட்டியே மிகச்சரியாக ஊகித்திருந்தார். தன்னுடைய எச்சரிக்கையை இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் அந்த காணொளியில் அவர் கேட்டிருந்தார். அவர் பயன்படுத்திய வார்த்தைகளில் மிகைப்படுத்தல்கள் இருந்திருக்கலாம். ஆனால் இழக்க கொடுத்தவர்களின் நோக்குநிலையில் இருந்துபார்த்தால் அவை மிகைப்படுத்தலாகத் தெரியாது. அதாவது நாட்டுக்குள் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு புவியியல் துறை பேராசிரியரும் நாட்டுக்கு வெளியே அயலில் தமிழகத்திலிருந்து ஒரு துறைசார் வல்லுநரும் எச்சரித்த போதும்கூட அந்த எச்சரிக்கைகள் சம்பந்தப்பட்டவர்களின் காதில் விழவில்லை. அதற்குக் காரணம் என்ன? பொதுவாக சமூக வலைத்தளங்களில் யூடியூப்களில் வரும் செய்திகள், தகவல்கள், எச்சரிக்கைகள் தொடர்பாக பொருட்படுத்தாத ஒரு பொதுப் புத்தி வளர்ந்து வருகிறது. யூடியூப் தலைப்புக்கள் அல்லது எச்சரிக்கைகள் மிகைப் படுத்தப்பட்டவை என்ற அபிப்பிராயம் பரவலாக உண்டு. வியூவர்ஸை கவர்ந்திழுப்பதற்காக கவர்ச்சியான தலைப்புகளைப் போடும் யூடியூப் பாரம்பரியமானது பாரதூரமான விடையங்களின் மீதான சீரியஸான கவனிப்பைக் குறைத்து விடுகிறது. பல யூடியூப்களில் தலைப்புக்கும் உள்ளடக்கத்துக்கும் தொடர்பு இருப்பதில்லை. இதனால் தலைப்பைக் கண்டு உள்நுழைந்து ஏமாற்றமடைந்த வியூவர்ஸ் குறிப்பாக அறிவுதெளிந்த, புத்திசாலித்தனமான வியூவர்ஸ் மீண்டும் ஒரு தடவை யூடியூப்களின் கவர்ச்சியான தலைப்புகளை, எச்சரிக்கைகளைக் கண்டு ஏமாற விரும்புவதில்லை. இந்த யூடியூப் பண்பாடு, வானிலை முன்னெச்சரிக்கை போன்ற விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. யூடியூப் பார்வையாளர்கள் மட்டுமல்ல ஏனைய சமூக வலைத்தள நுகர்வோரும் அவ்வாறுதான். எல்லாவற்றையும் ஸ்குரோல் பண்ணிக் கடக்கும் ஒரு சமூக வலைத்தளச் சூழல் வளர்ந்து விட்டது. உண்மையான எச்சரிக்கை எது உண்மையான ஆபத்து எது என்பதனை பகுத்தறிய முடியாத அளவுக்கு சமூக வலைத்தளச் சூழல் மேலோட்டமானதாக,அதிகம் ஜனரஞ்சகமானதாகக் காணப்படுகிறது. பிரதீபராஜாவையும் செல்வகுமாரையும் தொடர்ந்து அவதானித்துவரும் சீரியசான சமூக வலைத்தளப் பாவனையாளர்கள் அவர்களுடைய எச்சரிக்கைகள் முன்னுணர்த்தும் ஆபத்துக்களை விளங்கிக் கொள்வார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரட்ன கூறுவதுபோல,இலங்கை அரசாங்கம் அல்லது சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் வருமுன் காக்கும் நடவடிக்கைகளை எடுத்திருந்தால், அழிவை ஒப்பீட்டளவில் குறைத்திருக்கலாமா ? நாடாளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரட்ன,நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, கம்பளை பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவுக்கும், உயிரிழப்புகளுக்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம் சாட்டினார். அது இயற்கை அனர்த்தம் என்ற போதிலும் உயிரிழப்புகள் இந்தளவுக்கு அதிகரிக்கக் காரணம், உரியநேரத்தில் முன்னெச்சரிக்கை விடுக்கப்படாமையே என்றும் கூறினார். வழக்கமாக 160 மில்லிமீற்றர் மழை பெய்தாலே மகாவலி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உண்டு. ஆனால், இம்முறை 400 மில்லிமீற்றர் மழை பெய்யும் என முன்கூட்டியே தெரிந்திருந்தும், மக்களுக்கு அதுகுறித்து எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றும், குறிப்பாக, நவம்பர் 27ஆம்திகதி ஏற்படவுள்ள ஆபத்தை உணர்ந்து, 26ஆம் திகதி நடைபெறவிருந்த உத்தியோகபூர்வ கூட்டங்கள் ரத்து செய்யப்பட்ட போதிலும், சாதாரண மக்களுக்கு அந்த ஆபத்துக் குறித்து அறிவிக்கப்படாததற்கு, சம்பந்தப்பட்ட திணைக்களங்களே பொறுப்பு என்று அவர் குற்றம் சாட்டினார். நாவலப்பிட்டி நீர்ப்பாசனத் திணைக்கள உபஅலுவலகம் நீர்மட்டத்தை அளவிட்டிருந்தும்,அந்தத் தகவலை கம்பளை மக்களுக்குப் பரிமாறத் தவறியதே பல உயிர்கள் பறிபோகக் காரணமாக அமைந்தது என்றும் அவர் கூறினார். மேலும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கொத்மலை அணை திறக்கப்பட்டமை நிலைமையை மேலும் மோசமாக்கியது என்றும் அவர் குற்றம் சாட்டினார் புயலுக்கு பின்னரான உரையாடல்கள் அவ்வாறு அரசு திணைக்களங்களின் மீதான விமர்சனங்களாகவே காணப்படுகின்றன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பகுதியினர் அரசு திணைக்களங்களில் பிழை பிடிக்கிறார்கள் என்று அரசாங்கத்துக்கு ஆதரவானவர்கள் கூறுகிறார்கள். எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் இயற்கை அனர்த்தங்களை துல்லியமாக எதிர்வுகூற முடியாது என்று அரசாங்கத்துக்கு ஆதரவான தமிழ் விரிவுரையாளர்கள் நியாயம் கூறுகிறார்கள். உண்மை. பேரியற்கையோடு ஒப்பிடுகையில் மனிதர்கள் அற்பமானவர்கள். சீனர்களுடைய பாரம்பரிய ஓவியங்களில் வரும் நிலக்காட்சிகளை இங்கு சுட்டிக்காட்டலாம். அந்த நிலக் காட்சிகளில் இயற்கை மிகப் பிரமாண்டமாக வரையப்படும். மனிதர்களோ மிகச் சிறிய,அற்ப புள்ளிகளாக காட்டப்படுவார்கள். எனவே பேரியற்கையின் போக்கை துல்லியமாக எதிர்வுகூறுவது கடினம்தான். ஆனால் அவ்வாறு சில துறைசார் நிபுணர்கள் எதிர்வுகூறிய போதிலும் அதை சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்கள் கவனத்தில் எடுத்திருந்தால் இந்த அளவுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்குமா? முன்னெச்சரிக்கை மிக்க வருமுன் காக்கும் நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய நட்டத்தை விடவும் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் இடர் பெரியது.இழப்பு பெரியது. துயரம் பெரியது. https://www.nillanthan.com/7984/3 points
-
அரச அறிவிப்புகள் அனைத்தும் மும்மொழிகளிலும் கட்டாயம் - அதிரடி அறிவிப்பு
சிறந்த அறிவிப்பு. நடைமுறைப்படுத்துவார்கள் என நம்புவோம். இப்போது அரச அலுவலகங்களில் பதவி உயர்வு கிடைக்க மூன்று மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் என்ற நடைமுறை இருக்கிறது. தனிச் சிங்கள அறிவிப்புக்களையும் அரசாங்க சுற்று நிரூபங்களையும் பார்க்கும் போது பயங்கரக் கோபம் வருவதுண்டு. சிங்களம் நன்கு தெரிந்திருந்தாலும் வேணுமெண்டு தமிழிலோ ஆங்கிலத்திலோ கதைத்தும் இருக்கிறேன். சிறிலங்கன் விமான சேவையில் தமிழர்கள் அபூர்வம். சில தமிழ் விமானிகள் இருந்தார்கள். குறிப்பாக மட்டக்களப்பிலிருந்து ஒருவர். அழகு தமிழிலே அறிவிப்புக்களை செய்திருக்கிறார். தமிழர்கள் இப்படியான துறைகளை தெரிவு வேண்டும். இல்லாவிட்டால் தமிழை ஆங்கிலத்தில்/சிங்களத்தில் எழுதி வாசிப்பதை நிறுத்த முடியாது.3 points
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
ஒரே மூச்சில் முழுவதையும் வாசித்தேன். நாம் அப்போது கொக்குவில் பகுதியில் வசித்தோம். பிரம்படியில் இந்திய இராணுவம் செய்த படுகொலைகளை தொடர்ந்து உடனடியாக சங்கானைக்கு சென்றுவிட்டோம். பழைய சம்பவங்கள் பல இப்போது நினைவில் இல்லை. உங்கள் பகுதியில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி இப்போதுதான் அறிகின்றேன். இந்திய இராணுவத்தினர் முல்லைத்தீவில் மனிதாபிமான உதவிகள் செய்வதாக கூறும் செய்தி நேற்று படங்களுடன் வந்தபோது பழைய நினைவுகள் வந்தன.3 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த இளைஞர்..!
யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த இளைஞர்..! 13 Dec, 2025 | 12:15 PM ரயிலில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்த அனாதை பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பீகார் மாநிலம் பக்ஷர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கோலு யாதவ். இவர், அண்மையில் ரயில் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, அதே பெட்டியில் இளம்பெண் ஒருவர் யாசகம் பெற்றுக் கொண்டிருந்தார். பயணிகளில் சிலர் அவரை தவறான நோக்கத்துடன் பார்த்துள்ளனர். சிலர், ஆபாசமான முறையில் பேசியுள்ளனர். இதனால், யாசகம் பெற்ற அந்தப் பெண் மிகவும் தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாகி, கூனி குறுகியுள்ளார். இதைக் கண்ட கோலு யாதவ், அப்பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன், அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அந்தப் பெண்ணின் பரிதாபமான நிலை, அவரது பின்னணி மற்றும் அவர் சந்தித்த இன்னல்கள் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். மகனின் மனிதநேயச் செயலைக் கண்டு நெகிழ்ந்த பெற்றோர், அந்த அனாதை பெண்ணுக்கு தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுக்க சம்மதித்தனர். நாட்கள் செல்லச் செல்ல, பெண்ணின் நிலையை முழுமையாக புரிந்து கொண்ட கோலு யாதவ், தனது பெற்றோரின் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்ய முடிவெடுத்தார். இதையடுத்து, சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது. ‘மனிதநேயம், பச்சாதாபம் மற்றும் விதி ஒன்றாக வருவதற்கான அரிய எடுத்துக்காட்டு’ என்று, கோலு யாதவையும் அவரின் பெற்றோரையும் பலரும் பாராட்டி வருகின்றனர். https://www.virakesari.lk/article/2332612 points- Carrom World Cup-ல் தங்கம் வென்ற கீர்த்தனா
"வாங்குன Cup-ஐ கூட வைக்க வீட்டுல இடம் இல்ல" - Carrom World Cup-ல் தங்கம் வென்ற Keerthana Carrom விளையாட்டில் நடப்பு உலக கோப்பை சாம்பியனான சென்னை காசிமேட்டை சேர்ந்த கீர்த்தனாவின் கதை இது. #Carrom #CarromWorldCup Producer: ShanmughaPriya Shoot & Edit: Ranjith இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு2 points- மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு, கிழக்கு, மலையகமாக ஒன்றுபடுவோம் - அருட்தந்தை சத்திவேல்
சொந்த இடத்தைவிட்டு புலம்பெயர்வின் வலியை உணர்ந்த நாம், அந்த மக்களை அவர்களின் சொந்த இடத்தில் வாழ வசதிகள் அமைத்து கொடுப்பதே நல்லது2 points- கருத்து படங்கள்
2 points2 points- வணக்கம்.
2 points- ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
பெப் 07 தானே ஆரம்பம். கிறிஸ்மஸுக்கு முன்னர் கேள்விக்கொத்து தயாரிக்கலாம். மழையால்☔️ எத்தனை போட்டிகள் தடைப்படும் என்றும் ஒரு கேள்வி போடலாம்.🤣 20 பேர் வரை கலந்துகொண்டால்தான் சுவாரஸ்யம்😁2 points- கருத்து படங்கள்
2 points2 points- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
அன்று இனக்கலவரத்தினால் அடியுண்டு சிதறுண்ட மக்களை காந்தீயம் என்கிற அமைப்பு வரவேற்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து குடியமர்த்தினர். ஆனாலும் கணிசமான மக்கள் மீண்டும் தமது பழைய இடங்களுக்கு சென்றனர். ஒரு இடத்தில வாழ்ந்து பழக்கப்பட்டவர்களை திடீரென வேறொரு இடத்திற்கு மாற்றுவது அவர்களின் இயல்பான வாழ்வை பாதிக்கும், அதோடு ஆண்டாண்டு காலமாக நாட்டுக்காக உழைத்து ஓடாகிப்போன அவர்களுக்கு வேண்டிய நிவாரணத்தை கொடுத்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டியது அரசின் கடமை. இவர்களை நாம் வரவேற்பது பிரச்சனையல்ல, அவர்கள் எமது தயவில் வாழ வேண்டிய நிலையிலும் சங்கடத்திலும் வாழ்வதிலும் பார்க்க அவர்களுக்குரிய நஷ்ட ஈடு கொடுக்கப்படவேண்டும், வாழ்வாதாரம் உயர்த்தப்படவேண்டும், அதற்கு அவர்கள் உரித்துடையவர்கள். அவர்களுக்கு சேரவேண்டிய உரிமைகளை தடுத்து, தடங்கல்களை ஏற்படுத்தி அரசின் கடமைப்பாட்டிலிருந்து வலிய விலக்கிக்கொள்வதாக அமையும். அவர்கள் பெற வேண்டிய நிவாரணங்களை நஷ்ட ஈட்டைப்பெற முழு உரித்துமுடையவர்கள் அது அவர்களது உரிமை. அதை தடுத்து பரோபஹாரம் செய்கிறோம் எனும் பெயரில் ஏதிலிகளாக்காமல் இருந்தால் சரி. அதன் பின் அரசும் தனது கடமையிலிருந்து அவர்களை கைகழுவி விடும். பிறகு அவர்களுக்கு எந்த ஆதரவுமில்லாமல் போய்விடும். தமிழரசியல் வாதிகள் தமது மக்களையே அவர்களின் தேவைகளையே கவனிப்பதில்லை இதில் இவர்களை அழைத்து வாழ வைத்து விடுவார்கள். மனோ கணேசன் தனது கடமையிலிருந்து இலகுவாக தப்பித்துக்கொள்ள முயற்சிக்கிறார்.2 points- ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
கிருபன் சிறப்பாக கடந்த T20 போட்டியினை நடாத்தியதினால் அவரை மீண்டும் இம்முறையும் போட்டியை நடாத்தும் படி வேண்டிகொள்கிறேன்.2 points- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
வட கிழக்குத் தமிழர்கள் மட்டும் இலங்கையில் தங்கள் உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுக்கலாம் . மலையக மக்கள் மட்டும் அப்படியே எல்லாவற்றையும் துறந்து இன்னொரு பிரதேசத்தில் ஏதும் இல்லாதவர்களாக, குடியேறிகளாக வாழ வேண்டுமா? அவர்களுடைய பிரச்சனைகளுக்காக அவர்கள் போராடும் நிலையில் நாம் வட கிழக்குத் தமிழர்கள் அவர்களுக்கான தார்மீக ஆதரவை வழங்குவதுதான் சிறப்பான தெரிவாக இருக்கும் இன்றும் தமிழ் நாட்டில் எந்த உரிமையும் இல்லாமல் வாழும் வட கிழக்குத் தமிழர்களின் நிலை எல்லோருக்கு தெரியும் வடகிழக்கில் குடியேறி வாழ்ந்த இஸ்லாமிய சகோதரர்களுடைய நிலை போராட்ட காலத்தில் எப்படி இருந்தது இப்போது எப்படியான நிலையில் உள்ளது என்பதும் யாவரும் அறிந்ததே.2 points- ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு.!
எண்பதுகளில் நாங்கள் பட்ட துன்பங்கள் பெரிது. விசா இல்லாமல், வேலையில்லாமல், ஊரில் உள்ளவர்களோடு தொடர்பு கொள்ள முடியாமல், கரிகளைப் போட்டு எரித்து குளிர் காய்ந்து, புரியாத மொழியில் விழி பிதுங்கி, மூன்று வருடங்கள் முகாம்களில் முடங்கிக் கிடந்து……. “உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்தது நிம்மதி தேடு..” என்ற பழைய பாடல் வரியொன்றுதான் நினைவுக்கு வந்தது.2 points- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
ஆனல் எங்கட தென்பகுதி தமிழ்மக்கள் சிங்களாவனுடன் இருந்தாலுல் இருப்பன் யாழ்பாணாத்தவனோடு இருக்க ஏலாதப்ப என்று சொல்வார்கள்2 points- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
நான் குடியேற்றத்திற்கு முழு ஆதரவு.2 points- முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
2 pointsபிரச்சனைகளை இனங்கண்டு அதை உரிய முறையில் தீர்ப்பதை விடுத்து செய்தி மிகைப்படுத்துதல் வெற்று உசுப்பேற்றுதல், வெற்று கோசங்கள், கற்பனைகள் மூலம் கட்டி எழுப்பப்பட்டதே தமிழ் தேசிய கோமாளிக் கருத்தியல். கடந்த 15 வருடங்களில் சமூக ஊடக வருகையால் பொய் செய்திகள் விஸ்வரூபம் எடுத்துள்ளதே யொழிய அத்தனையும் காலாகாலமாக அந்த காலத்திற்கேற்ற முறையில் தமிழ் தேசியம் பேசியவர்களிடம் இருந்தவையே. அதனாலேயே அதனால் ஒரு அங்குலம் கூட முன்னே நகர முடியமல் நின்ற இடத்தில் அப்படியே நின்று குறளி வித்தை காட்டுகின்றனர். வெட்டி வீரம் பேசுவதும் பின்னர் புலம்புவதும் தமிழ் தேசிய அரசியலில் மாறாத சுற்றுவட்டம். இந்த வட்டத்தை சுற்றிச் சுற்றியே தமிழ் தேசியம் பேசும் தாயக/ புலம் பெயர் கோமாளிகள் பொழுது போக்குகின்றனர்.2 points- கருத்து படங்கள்
2 points2 points- உலகின் மிக அழகான பெண்களின் பட்டியல்
2 pointsதிரிசா, நயன்தாரா, தமன்னா… ஒருவரும் இந்தப் பட்டியலில் இடம் பிடிக்கவில்லையா. 😢 😡 😂2 points- ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
நிழலாடுகின்றது அனைத்தும் ...நீர்த்தாரை பெருகும் கண்களைத்தவிர ...யாரெமக்கு ஆதரவு...இப்படியே ஒவ்வொருவரும் தனித்தனியே அழுது ஆறுதல் அடைய வேண்டியதுதான் ....உங்கள் ...வேதனை சோதனைளை ..ஆவணப்படுத்துங்கள் ... புத்தகமாக வெளியிடுங்கள் ... எம்மினம் எப்படியான வேதனைகளை சந்தித்தது என்பதை வரும்காலத்தில் யாரேனும் ஒருவராவது அறியட்டும் கண்ணீர் விடட்டும் ..2 points- அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
https://nsarchive.gwu.edu/briefing-book/russia-programs/2017-12-12/nato-expansion-what-gorbachev-heard-western-leaders-early2 points- ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
வீட்டிலிருந்து கொண்டுவந்த தேங்காய்கள், அரிசி மற்றும் சில மரக்கறிகள் ஓரிரு வாரத்திலேயே தீர்ந்துவிட்டது. மீண்டும் போகலாம் என்று முடிவெடுத்தோம். அந்நாட்களில் வேறு சிலரும் கோண்டாவில் பகுதிகளில் தமது வீடுகளைப் பார்க்கப் போய்வருவது தெரிந்தது. ஆகவே, நாம் இரண்டாவது தடவையாகவும் எமது வீடு நோக்கிப் பயணமானோம். இம்முறை கெடுபிடிகள் சற்றுக் குறைந்திருந்ததைப்போலத் தெரிந்தது. ஆனால் இந்திய ராணுவத்தின் பிரசன்னம் அப்பகுதியில் இருந்தது. பலாலி வீதியின் ஓரத்தில் முகாம்களை அமைத்திருந்தார்கள். போய்வருவோர் கடுமையாகச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். எம்மையும் அவர்கள் சோதித்தார்கள். எதற்காக வீடுகளுக்குச் செல்கிறோம் என்று கேட்கப்பட்டது. இன்னமும் சேதப்படாமல் இருக்கும் பொருட்களை எடுத்துச் செல்ல வந்திருக்கிறோம் என்று கூறினோம், அனுமதித்தார்கள். இம்முறை நாம் வீட்டை அடைந்தபோது பக்கத்து வீட்டில் ஆட்கள் பேசும் சத்தம் கேட்டது. சென்று பார்த்தபோது அவ்வீட்டில் ஒருவரான பழனியண்ணாவும் இன்னுமொருவரும் நின்றிருந்தார்கள். வீட்டிலிருந்து துரத்தப்பட்ட நாளுக்கு முன்னைய நாளில் அவரைக் கண்டதற்கு இன்றுதான் அவரைக் காண்கிறேன். என்னைப் பார்த்தவுடன் அழத் தொடங்கினார். எதற்காக அழுகிறார் என்பது எனக்குப் புரியவில்லை. ஏன் என்று நான் வினவியபோது அவர் . நடந்ததை விபரித்தார். அவர் விபரிக்க விபரிக்க அன்றிரவு நடந்த அகோரம் எனக்கு வெளிச்சமாகியது. எமது வீடுகளுக்குள் இந்திய ராணுவம் நுழைந்த நாளன்று பக்கத்து வீட்டில் எவருமே இல்லையென்றுதான் நாம் நினைத்திருந்தோம். ஏனென்றால், தாம் நல்லூருக்குப் போகப் போவதாக பாமா அக்கா கூறிவிட்டுச் சென்றதனால், அவர்கள் அங்கு இல்லை என்றுதான் முதலில் எண்ணியிருந்தேன். ஆனாலும் அன்றிரவு எமது வீட்டைக் கடந்து சென்ற இந்திய இராணுவம் பாமா அக்கா வீட்டினுள் நுழைந்தபோது கேட்ட அழுகுரல்களும் அதனைத் தொடர்ந்து கேட்ட நீண்ட துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் எனக்கு அங்கு ஆட்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லிற்று. ஆனால் அங்கிருந்தோர் யார், எத்தனைபேர், அவர்களுக்கு என்ன நடந்ததது என்பதுபற்றி பழனியண்ணை சொல்லும்வரை எனக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. காலையில் என்னுடன் பேசிவிட்டுச் சென்ற பாமா அக்காவின் குடும்பம் நல்லூருக்குப் போக ஆயத்தமாகியிருக்கிறது. ஆனால் செல்வீச்சுக் கடுமையாக நடக்க ஆரம்பித்ததையடுத்து, நிலைமை ஓரளவிற்கு சுமூகமானதும் நல்லூருக்குச் செல்லலாம் என்று இருந்திருக்கிறார்கள். ஆனால் நள்ளிரவுவரை செல்த்தாக்குதல் குறையவில்லை. அதன்பின்னர் துப்பாக்கிச் சண்டைகள் ஆர்ம்பமாகிவிட்டிருந்தமையினால் அவர்கள் நல்லூருக்குச் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு வீட்டிலேயே இருக்கலாம் என்று இருந்துவிட்டார்கள். பாமா அக்காவின் வீட்டிற்குப் பின்னால் அமைந்திருக்கும் பேபி அக்காவின் வீட்டினரும் அன்றிரவு பாமா அக்காவின் வீட்டிலேயே அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். இந்திய இராணுவம் அவர்களது வீட்டருகில் வந்தபோது, பாமா அக்காவின் வீட்டிற்கு முன்னால் அமைந்திருக்கும் புகையிலைகளுக்கு புகைபோடும் குடிலுக்குள் பாமா அக்கா, பேபியக்கா, குலம் அண்ணா, மற்றும் பேபியக்காவின் இரு சகோதரர்கள், பேபியக்காவின் தகப்பனார் என்று ஏழுபேர் அடைக்கலம் புகுந்திருக்க ஏனையோர் அனைவரும் வீட்டினுள் இருந்திருக்கிறார்கள். முதலில் வீட்டினுள் நுழைந்த இராணுவம் சமயலறைப் புகைப்போக்கியின் கீழ் அமர்ந்திருந்த குடும்ப உறுப்பினர்களை யன்னலூடாகப் பார்த்துத் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய ஆரம்பித்திருக்கிறது. அதன்போதே "ஐய்யோ, சுடாதேயுங்கோ" என்ற அழுகுரல்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அதன்பின்னர் புகையிலைக் குடில்ப் பக்கம் தனது பார்வையைத் திருப்பிய இந்தியப் பேய்கள் உள்ளிருப்போரை வெளியே வரும்படி அழைத்திருக்கின்றன. தம்மை அவர்கள் கொல்லம்மாட்டார்கள் என்று நம்பிய குலம் அண்ணை முதலில் வெளியே வர அவரை வெட்டிச் சாய்த்தது இந்திய ராணுவம். அப்போதுதான், "ஐயோ, பிள்ளைகளை வெட்டாதேயுங்கோ" என்று பேபியக்காவின் தாயார் அலறியிருக்கிறார். குலம் அண்ணை கொல்லப்பட்டதைக் கண்ட ஏனையோர் தொடர்ந்தும் குடிலுக்குல் ஒளிந்திருக்க, அவர்கள்மீது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டதோடு கைக்குண்டுகளையும் வீசி எறிந்திருக்கிறது இந்தியாவின் சாத்தான்படை. உள்ளிருந்தோர் அனைவரும் கொல்லப்பட்டு குடிலுடன் எரிக்கப்பட்டார்கள். ஆனால் வீட்டினுள் இன்னமும் பதுங்கியிருந்தோருக்கு வெளியே நடக்கும் அகோரம் எதுவுமே தெரிந்திருக்கவில்லை. காலையில் எம்மை இழுத்துச் சென்றது போல அவர்களின் வீட்டினுள் மீதமாயிருந்தோரையும் இந்திய இராணுவம் இழுத்துச் சென்று துரத்திவிட்டிருக்கிறது. ஆகவே குடிலுக்குள் தஞ்சமடைந்திருந்தோர் இன்னமும் உயிருடன் இருப்பதாகவே குடும்பங்களின் ஏனையோர் நினைத்திருந்திருக்கின்றனர். சில வாரங்களின் பின்னர் பாமா அக்கா எமது குடும்பத்துடன் நல்லூர்க் கோயிலில் காணப்பட்டதாக அவரது குடும்பத்திடம் யாரோ கூறிவிட அவர்கள் எம்மை பல வாரங்களாகத் தேடியிருக்கிறார்கள். எம்முடன் பாமா அக்கா இருப்பதாக அவர்கள் நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களது நம்பிக்கைகளையெல்லாம் வேறோடு அறுத்துவிட்ட சம்பவம் நாம் இரண்டாவது தடவையாக வீடுகளைப் பார்க்கச் சென்றபோது அவர்களுக்கு நடந்தது. பாமா அக்காவின் மாமனாரான பழனியண்ணாவும் அவரது உறவினர் ஒருவரும் எம்மைப்போலவே தமது வீடுகளைப் பார்க்க வந்திருக்கின்றனர். முதலில் வீட்டினுள் சென்று அழிவுகளை நோட்டம்விட்டு விட்டு, பின்னர் புகையிலைக் குடிலுக்குள் சென்றிருக்கின்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை கடுந்துயரத்தில் ஆழ்த்திவிட்டது. உள்ளே பாதி எரிந்த நிலையில் ஏழு சடலங்களை அவர்கள் கண்ணுற்றிருக்கிறார்கள். அப்போது அங்கு இருந்தது யாரென்பது ஓரளவிற்குத் தெரிந்துவிட்டது அவர்களுக்கு. அங்கு கிடந்த ஏழு சடலங்களுல் ஒன்று பாமா அக்காவினுடையது. அவர் அணிந்திருந்த மோதிரமும், அவர் தலையில் குத்தியிருந்த இரும்பிலான கிளிப்பும் அவரை அடையாளம் காட்டின. அங்கிருந்த மற்றைய பெண்ணின் சடலம் பேபி அக்காவுடையது. பாதி எரிந்த நிலையில் காணப்பட்ட அவரது ஆடைமூலம் அவரை அடையாளம் கண்டுகொண்டார் பழனியண்ணை. அவர்களைத் தவிர மீதமாயிருந்த நால்வரும் குலம் அண்ணை, பேபியக்காவின் தந்தை மற்று பேபியக்காவின் இரு சகோதரர்கள் என்பதை நாம் உணர்ந்துகொண்டோம். பாமா அக்கா உயிருடன், எம்முடன் இருக்கிறார் என்று அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை அன்று காலையுடன் அற்றுப்போனபோதே அவரை துக்கம் ஆட்கொண்டது. அதனாலேயே என்னைக் கண்டவுடன் அவர் அழத் தொடங்கினார். அன்று அவரும் அவரது உறவினரும் எமது ஒழுங்கையினுள் காணப்பட்ட சடலங்கள் அல்லது எலும்புக் கூடுகளை ஒரு குவியலாகப் போட்டு எரித்தார்கள். அவர்களது உறவினர்கள் ஏழுபேருடையவை தவிர்ந்த இன்னும் இருபது மனித எச்சங்களை அவர்கள் ஒழுங்கையின் அருகிலிருந்து தூக்கிவந்தார்கள். உடைந்த தளபாடங்கள், மரங்கள் , சருகுகள் கொண்டு நாம் அவர்களுக்கான இறுதிக் கிரியைகளைச் செய்தோம். எமது ஒழுங்கையில் மட்டுமே கொல்லப்பட்ட எம்மக்களின் எண்ணிக்கை 27.2 points- அம்மனும் அமிர்தமும் (நாடகம்)
2 pointsநல்லதொரு நாடகம். மேடையில் நடிக்கும் போது பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும். “உண்டு, உருண்டு, உறங்கி..” என்று எழுதியிருந்தீர்கள். இதில் ‘உருண்டு’ ஏன் வருகிறது? அம்மனுக்கும் கஞ்சத்தனம். போகிறபோது அமிர்தத்துக்கு ஏதாவது குடுத்திருக்கலாம். ஆக மொத்தத்தில் இவர் மூக்குத்தி அம்மன் இல்லை😊2 points- அம்மனும் அமிர்தமும் (நாடகம்)
2 pointsகாட்சி 5 (தட்சணாமூர்த்தியும் பார்வதியும் கதைத்துக்கொண்டிடுக்கிறார்கள்.) தட்சணாமூர்த்தி: அமிர்தத்தின்ரை போக்கே வரவர சரியில்லை. பார்வதியோட எல்லோரும் நல்லா பழகிறது பிடிக்கவில்லை போல தெரியுது. அதிலயும் தப்பு இல்லை............. அமிர்தத்திற்கு இந்த வீடுதான் உலகம். அவளை விட வேற ஒருவரை எல்லோருக்கும் பிடிக்கும் என்றால் தாங்க முடியாதுதான்........................ பார்வதி: ஓம் அப்பா, நானும் அதைக் கவனிச்சனான். அம்மா முந்தி மாதிரி இல்லை, கொஞ்சம் குழம்பின மாதிரி இருக்கிறா. தட்சணாமூர்த்தி: (சிரிக்கிறார்) என்ன பிள்ளை, அம்மாவிற்கு மெதுவா தட்டி விட்டுதென்று சொல்லிறாய்............... எங்க ஆளைக் காணவில்லை? பார்வதி: அம்மாவும் பெரியம்மாவும் கோயிலுக்கு போட்டினம். கோயில்ல இன்றைக்கு அம்மனுக்கு ஏதோ விசேசமாம், அம்மாதான் விடாப்பிடியா பெரியம்மாவை கூட்டிக்கொண்டு போனவா. அம்மாவிற்கு பெரியம்மாவில சரியான விருப்பம், ஆனால் நாங்கள் பெரியம்மாவோட அடுகிடைபடுகிடையாக இருக்கிறதுதான் பிடிக்கவில்லை. தட்சணாமூர்த்தி: அதுதான் பிள்ளை. அந்த பாரதத்தின்ட முகத்தைப் சில நேரத்தில பார்த்தால், சாட்சாத் அம்மனே குடி வந்த மாதிரி இருக்குது. பாரதத்தை முந்தி பார்த்த மாதிரி ஞாபகம் ஒன்றும் இல்லை................... பார்வதி: நீங்கள் மறந்துவிட்டியள், அப்பா. பெரியம்மா உங்கட கல்யாண வீட்டில நடந்த எல்லா விசயங்களையும் அப்படியே சொல்லுகிறா. பழைய கதை எல்லாவற்றையும் இப்ப நடந்தது மாதிரி சொல்லுகிறா................. தட்சணாமூர்த்தி: ஓமடி பிள்ளை, வயசும் போகுதுதானே, ஆனால் நான் எதையும் மறக்கிற ஆளில்லை. இப்ப இதுவா முக்கியம், எப்படி அமிர்தத்தை சமாதானப்படுத்திறதென்று பார்ப்பம்................. (அமிர்தமும் பாரதமும் கோயிலிலிருந்து வருகிறார்கள்.) அமிர்தம்: அப்பப்பா, என்ன வெயில், சித்திரை பிறந்தாலே சுட்டெரிக்குது காண்டாவனம்........... பாரதம்: அதுக்கும் கடவுளுக்குத் தான் பேச்சு.......... என்ன மனிதர், இயற்கையாக நடக்கிற விசயங்கள் நடக்கத்தானே வேண்டும். ஆயிரம் ஆயிரம் கோடி உயிரினத்தில ஒரு உயிரினம் தான் மானிடர். எல்லா நிகழ்வும் மனிதருக்கு மட்டுமே வசதியாக இருக்கவேணுமா..................... தட்சணாமூர்த்தி: என்ன பிள்ளை........... என்றைக்கும் இல்லாம இன்றைக்கு கோயிலுக்கு போயிட்டு சலிச்சு போய் வந்திருக்கிறா............ அமிர்தம்: கோயிலுக்கு போய்விட்டு வாற வழியில, சனங்களின்ர பேச்சைக் கேட்டு பார்வதம் மனம் நொந்து போய்விட்டாள். ஒரே வெயில், மழையே இல்லை நிறைய நாளா, அம்மை வருத்தம், அது இது என்று சனத்தின்da பிரச்சனைக்கு பாரதம் தான் காரணம் என்று சனம் ஒரே திட்டு.............. பார்வதி: யார் திட்டினது பெரியம்மாவை? பெரியம்மா என்ன கடவுளோ இவையினர கஷ்டங்களை எல்லாம் தீர்த்து வைக்கிறதுக்கு............. யார் திட்டினது என்று சொல்லுங்கோ, நான் போய் நல்லா நாலு கேட்டிட்டு வாறன்................. அமிர்தம்: வாய் தடுமாறிட்டுது. பாரதத்தை சனம் ஏன் திட்டுது, கோயிலுக்குள்ள இருக்கிற கடவுளைத் தான் காரணம் என்று சொல்லுது. அதுதான் பாரதத்திற்கு ஒரே கவலையா போயிட்டுது. தட்சணாமூர்த்தி: இதுக்குப் போய் நீ ஏன் பிள்ளை கவலைப்படுகிறாய்? சனம் அப்படித்தானே, படைக்கிறதும் அவனே, காக்குறதும் அவனே, அழிக்கிறதும் அவனே, எல்லாமே அவன் தான். நல்லது நடந்தால் போற்றிவினம், பிடிக்காதது நடந்தால் மாறிவிடுவினம். இதுகளையெல்லாம் காதில வாங்கிக் கொள்ளாதே பிள்ளை............. பாரதம்: அப்படி என்னவென்று விட்டிட்டு இருக்கிறது? எவ்வளவு ஜீவராசிகள் தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றன. எதுவுமே யாரையும் எதற்கும் குற்றம் சொல்வதில்லை, மனிதர் மட்டும் சகமனிதரையோ, இயற்கையையோ இல்லாவிட்டால் கடவுளையோ தேடி பழிசுமத்துகிறார்கள். தீதோ நன்றோ, இதுதான் வாழ்க்கை என்று வாழ்ந்து விட்டுப் போறதுதானே? பார்வதி: இல்லை பெரியம்மா, ஒரே ஒரு வாழ்க்கை தான், அதை எப்படி அப்படி சாதரணமா சொல்லிறியள்........... எல்லோரும் ஏதோ முடிஞ்சளவு நல்லா, வசதியா வாழத்தான் விரும்பிவினம். மனிதர் மட்டும்தான் சிந்திக்கினம், மற்ற உயிர்கள் சிந்திக்கிறது இல்லை தானே.................. அமிர்தம்: ஏய் பார்வதி, பெரியவர்களுடன் அப்படி கதைக்ககூடாது.................. பார்வதி: நான் என்ரை பெரியம்மாவோட தானே கதைக்கிறன், நீங்கள் ஏதோ மூன்றாம் ஆளிடம் நான் கதைக்கிற மாதிரி சொல்லிறியள். பாரதம்: அமிர்தம், நீ சும்மா இரு. பிள்ளை என்னோட தானே கதைக்கிறாள். அவள் தனக்கு சரியென்று பட்டதை சொல்லுகிறாள். பார்வதி, மனிதருக்கு மட்டும் சிந்திக்கின்ற இயல்பை கொடுத்ததிற்கு ஒரு காரணம் இருக்கும், ஆனால் அது நிச்சயமாக மற்ற உயிர்களை அழித்து வாழவோ அல்லது பழித்தும், பழி சுமத்தியும் வாழவோ இருக்காது. தட்சணாமூர்த்தி: சரி, சரி இதை விடுங்கோ. மற்றவர்களுக்காக நாங்கள் ஏன் சண்டை போடவேணும்.............. பார்வதி, அந்த புத்தகத்தை எடுத்து தா ஒருக்கால், நான் கொண்டு போய் அதைக் கொடுத்துவிட்டு வருகிறேன். (தட்சணாமூர்த்தியும் பார்வதியும் செல்கிறார்கள். அவர்கள் சென்ற பின்) அமிர்தம்: (பாரதத்தை நோக்கி) தாயே, நான் ஆரம்பத்திலயே சொன்னனான் தானே. மனிதருக்குள் எல்லாம் இருக்குது, சந்தர்ப்பம் கிடைத்தால் அது அது வெளியில வரும். இந்த அற்ப மனிதரை பார்த்து நீங்கள் பதறலாமோ................. இது எல்லாம் உண்டு, உருண்டு, உறங்கி அழிந்து போகிற ஒரு சாதாரண பிறவிதான்......... பாரதம்: நீ சொல்வது முற்றிலும் சரியே அமிர்தம். அவரவர் அனுபவிப்பது அவை அவை செய்தவையே, மழை இல்லாமல் போனது ஏன் என்றால் மனிதன் மழையை அழித்து விட்டான். இது தெரியாமல் கழுதைக்கு கல்யாணம் முடித்து வைத்தால், மழை வருமா........... அமிர்தம், நான் திரும்பிப் போகிற நேரம் வந்துவிட்டது. அமிர்தம்: தாயே, நான் ஒரு மிகச்சாதாரண மனிதப் பிறவி. நான் எதும் தவறு செய்திருந்தால்…. பாரதம்: உன்னை அறிந்துதான் நான் விரும்பி வந்தேன். நீ என்றும் என் விருப்பத்துக்குரியவள். என்றும் என்னுடனேயே இருப்பாய்................ (முற்றிலும் இருட்டாகின்றது.) (அமிர்தம் மட்டும் தனித்து நிற்கிறார்.) (தட்சணாமூர்த்தியும் வருகின்றார்.) தட்சணாமூர்த்தி: என்ன, கோயிலுக்கு போய் வந்தனி, இன்னும் சீலைகூட மாத்தாமல் அப்படியே நிற்கிறாய்? பாரதம் எங்கே? (அமிர்தம் ஒன்றும் பேசாமல் நிற்கிறார்.) தட்சணாமூர்த்தி: ஏனப்பா, பாரதம் எங்கே.......... அமிர்தம்: அவ போயிட்டா.............. தட்சணாமூர்த்தி: எங்க போயிட்டா? அமிர்தம்: எங்கேயிருந்து வந்தாவோ அங்கேயே போயிட்டா.............. தட்சணாமூர்த்தி: இப்ப எப்படி போனா…..ஒன்றுமே விளங்கவில்லை. அமிர்தம், பாரதம் உண்மையில யார்? அமிர்தம்: பாரதம் என்னுடை பெரியம்மா மகள் தான். தட்சணாமூர்த்தி: உனக்கு உண்மையில ஒரு பெரியம்மா இல்லை என்ற எனக்கு தெரியும் அமிர்தம். அமிர்தம்: ஆ............. தலைய சுத்துதே............ யாராவது ஓடி வாங்கோவன்.............. (எல்லோரும் ஒடி வருகிறார்கள்.) (முற்றும்.)2 points- ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
உயிர்ப்புக்கள்.... அழியவிடாதீர்கள் ...ஆவணப்படுத்துங்கள்.... எவ்வளவு கொடூரத்தை அனுபவித்துள்ளீர்கள் ...இப்படிப் பலர் ..... உணர்ந்தவர்கள் .. இதை சொல்லவேண்டும் ....ஏனெனில் ...எமது இனத்தின்வலிகள் ....தொலைபேசிகளின் உதவியினால் திசை திருப்பப்பட்டு ....எங்கோ சென்று கொண்டிருக்கிறது ...தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் வலிகளை...எனக்கும் அனுபவங்கள் பலவுண்டு ...உங்களைப்போல்...எழுதும் ஆற்றல் எனக்கில்லை....2 points- அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. மக்களே அமைதி அமைதி அமைதி.2 points - யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த இளைஞர்..!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.