Everything posted by புங்கையூரன்
-
அப்புவிட அப்புவும், பேரனும்.!
ஏறத்தாள இரண்டாயிரம் ஆண்டுகளூக்கு முன்பே, கணியன் திருப்பூங்கனார் கூறியது, யாதும் ஊரே....யாவரும் கேளிர் எம்மைச் சுற்றி வட்டங்களை நாங்கள் போடவில்லை! மற்றவர்களே போட்டார்கள்! உலகம் முழுவதும் விதைக்கப் பட்டிருக்கிறோம்! அறுவடை காலமும் அண்மித்து வருகின்றது! ஏக்கம் சுமந்து வரும் கவிதை! நன்றி....!
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (இறுதிப் பகுதி)
பசுவூர்க் கோபி... மிக்க நன்றி....! உங்கள் கவிதைகளை அடிக்கடி காண ஆசை...!
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (இறுதிப் பகுதி)
பகிர்வுக்கு மிக்க நன்றி, சுவியர்! இந்த வரிகள் இன்னும் அப்படியே நினைவிலிருக்கின்றன! ஒருத்தியின் அழகில் மயங்கி வருகின்ற 'ரத்ன வாசா' காதல்கள் ஒரு வகை! ஒருவரது செயல்களாலோ அல்லது அவர்களது கருணை மனதால் கவரப்படுவதாலோ உண்டாகும் காதல் இன்னொரு வகை! அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்...அருகினில் வந்த முனிவனும் நோக்கினான் போன்ற காதல்கள் நமக்கு வரச் சாத்தியமேயில்லை! ஒரு வில்லை ஒடிக்கும் வலிமை மட்டும் அல்ல...அந்த வில்லை நினைத்துப் பார்க்கும் வலிமை கூட இல்லை! எனவே சில காதல்கள் மறக்க முடியாதவை தான்...! "வைடூரியத்தின் நடுவே ஓடும் சுவர்ணரேகைபோல்" உங்கள் உவமானங்களுக்காகவே, நீங்கள் நிறைய எழுத வேண்டும் என்பது எனது ஆவல்...!
-
இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
யாழ்ப்பாணத்தானா, கொக்கா?🙃
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (இறுதிப் பகுதி)
வணக்கம், சாந்தி...! துணிச்சல் புங்கையூருக்கு வந்திட்டுது என்பதை விடவும்...காலம் துணிச்சலைக் கொடுத்து விட்டது என்பதே அதிகம் பொருத்தமாக இருக்கும்! மூன்று நாட்களுக்குத் தலயை உடைத்துக் கொண்ட பின் முடிவு ஒரு மாதிரி மனதில் தோன்றி விட்டது! ஞாபகங்கள் தொடரும்....!
-
இன்னொரு அம்மா
நல்ல ஒரு கதை நிலாக்கா! பொதுவாக எல்லோருக்கும் மாலதி போல...மாமியார்கள் கிடைத்து விடுவதில்லை! பெண்கள், பெண்களைப் புரிந்து கொண்டாலே....பாதிப் பிரச்சனைகள் தீர்ந்து போ விடுமென்பது தான் யதார்த்தம்!
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (இறுதிப் பகுதி)
ஒரு கதையை அல்லது ஒரு கவிதையை எழுதிச் செல்லும் போது, இடைக்கிடை ஆராவது வந்து ஏதாவது ஒரு கருத்தை அது நல்லதோ அல்லது கெட்டதோ எதுவாக இருந்தாலும் சொல்லிச் செல்லும்போது அது எழுதுபவனுக்கு ஒரு உந்து சக்தியை அழிப்பதுண்டு! அந்த விதத்தில் உங்கள் கருத்துக்களின் பெறுமதி அளவிட முடியாதது! நீங்கள் குறிப்ப்பிபிட்டது போலவே, நினைவு மீட்டல்கள் மிகவும் இனிமையானவை! அவற்றுள் சில பொத்திப் பாதுகாக்கப் பட வேண்டியவை! சில ஓரளவுக்குப் பகிர்ந்து கொள்ளத் தக்கவை! இன்னும் சில கல்லறை வரைக்கும் காவிச் செல்ல வேண்டியவை! நன்றி....விசுகர்..! உண்மை தான், சுவியர்! எங்கேயிருந்து இந்த உவமானங்களை எடுக்கிறீர்களோ தெரியாது! அந்த வலி எப்படியிருக்கும் என்று கற்பனை பண்ணிப் பார்த்தேன்! நன்றி சுவியர்...!
-
என் கொறோனா அனுபவம்
நல்ல ஒரு அனுபவப் பகிர்வு, சுமே! ஒவ்வொருவரது உடல்களும் வெவ்வேறு வகையானவை! அவர்கள் தான் ...நிலைமைகளுக்கு ஏற்ற மாதிரி முடிவுகளை எடுக்க வேண்டும்! உங்கள் வீடியோ பதிவில் ஒரு 'பொறுப்புத் துறத்தல்" எச்சரிக்கை ஒன்றைப் போட்டால் நல்லது என்று நினைக்கின்றேன்! இந்தப் பதிவால்...நாளைக்கு ஒரு பிரச்சனை வரக்கூடாதெல்லோ? 😃
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தனிக்காட்டு ராஜாவுக்கும், கொழும்பானுக்கும் எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -3)
நன்றி....சுவைப்பிரியன்! வணக்கம், யாயினி! உங்கள் ஊக்கமும், ஆக்கமும் என்றும் குறைந்ததேயில்லை! மிக்க நன்றி....!
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (இறுதிப் பகுதி)
பிலோமினாவின் தந்தையாருடன் அளவளாவிக் கொண்டிருந்த சந்திரன் ஒரு சிறுவன் வீட்டை நோக்கி ஓடி வருவதை அவதானித்தான்! அதே சுருண்ட முடியும், நீல நிறக் கண்களும்...! அந்தக் குழந்தை யாருடையது என்பதற்குப் பெரிய அறிமுகம் எதுவும் அவனுக்குத் தேவைப்படவில்லை! சந்திரனைக் கண்ட குழந்தையின் கண்களில் ஒரு மிரட்சி தெரிந்தது! அப்பன் பயப்பிடாதை...இவர் உனக்கு மாமா! வெளி நாட்டில இருந்து வந்திருக்கிறார்! குழந்தை தாத்தாவைக் கட்டிப் பிடித்த பிடித்த படி....அவனைக் கூர்ந்து கவனித்தபடியே இருந்தது! இருவரில் ஒருவருமே...பிலோமினாவைப் பற்றிய கதையை ஆரம்பிக்கவில்லை! நான் அப்ப போயிற்று...நாளைக்குக் காலமை வாறன்! பிலோமினா நிப்பா தானே எனச் சந்திரன் கேட்கவும், தந்தையார் ஓமோம்...நான் அவவிட்டைச் சொல்லி விடுகிறன் மகன் என்று கூறினார்! அவரது கண்களில் ஏதாவது செய்தி இருக்கின்றதா என்று உற்றுப் பார்த்த போதும் ஒரு வெறுமை மட்டுமே....அதில் தெரிந்தது! பின்னர் சைக்கிளை உழக்கும் போது கொஞ்சம் எதிர்க் காத்து வீசவே, சைக்கிளைத் தூக்கித் தோள்களில் வைத்த படி நடக்கலாமா என்று யோசித்தவன்...தான் இன்னும் சிறு பிள்ளையில்லை என்று நினைத்துச் சைக்கிளை உருட்டிய படியே நடக்கத் தொடங்கினான்! செல்லும் வழியில் சில வீட்டுத் தோட்டங்கள் தெரிந்தன! பொதுவாகச் சின்ன வெங்காயமும், மிளகாய், கத்தரி, வெண்டி போன்ற சில மரக்கறி வகைகளும் நடப்பட்டிருந்தன! அதன் பின்னால் உள்ள உழைப்பின் அளவை அவன் ஓரளவுக்குத் தெரிந்திருந்தான்! வெறும் கல் படர்ந்த நிலத்தின் மீது கொஞ்சம் மண்ணை உயர்த்தி..அதன் மீது தான் நாற்றுக்களை நட்டிருப்பார்கள்! தரவை நிலங்களில் நிறையக் காய்ந்த எருக்கள் கிடைக்கும்! அதையும் மழையையும் மட்டும் நம்பியே அந்தத் தோட்டங்கள் இருந்தன! வீட்டுக்கு வந்த பின்னரும் பிலோமினாவைப் பற்றிய சிந்தனை அவனை விட்ட பாடில்லை! இன்னும் நல்ல வெளிச்சம் இருந்ததால்...கால் போன திசையில் கொஞ்ச நேரம் நடக்கத் தொடங்கினான்! வீதிக்குக் கொஞ்சம் தார் காட்டியிருந்தார்கள்! இப்போதெல்லாம் வீட்டு நாய்களைக் காணும் போது...உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக இருந்தது! அந்த நாட்களில் நாய்கள் துரத்தும் போது, கால்களைத் தூக்கிச் சயிக்கிள் ஹாண்டிலில் வைத்து ஓடி, நாய்களுக்கே நிலாக் காட்டியதை நினைத்துப் பார்த்தான்! ஓரு இடத்தில் நிறைய ஆவரம் மரங்கள் சிறு..சிறு பற்றைகளாக இருந்தன! இவற்றின் காய்கள் சீயாக்காய் போல நீளமாக இருக்கும்! இவற்றைத் தலையில் வைத்துக் கழிகளில் குளித்ததும் நினைவுக்கு வந்தது! இப்போதும் அவ்வாறு குளிக்க வேண்டும் போல இருந்தது! இப்போது அவனுக்கு ஒரு உண்மை...ஓடி வெளித்தது! எவ்வளவு நாட்கள் பிற தேசங்களில் வசித்தாலும்...இளமைக் கால நினைவுகள் ஒரு போதும் அழிந்து போவதில்லை! அதே சூழலுக்குள் திரும்பப் போகின்ற போது...அந்த நினைவுகள் அப்படியே திரும்பவும் வரும்! இப்போது பிற் காலத்தில் இங்கு வந்து வசிக்க வேண்டும் என்ற அடி மனத்து ஆசை மேலும் வீறு கொண்டெழுந்தது! மறு நாள் காலையில் விடிந்தும் விடியாத வேளையிலேயே கண் விழித்தவன் இன்றைய நாளைப் பெரும் எதிர்பார்ப்புகளோடு வரவேற்றான்! அவனுக்கே பிடித்தமான பிட்டும், கப்பல் வாழைப்பழமும், சம்பலும் பெரியவர் அவனுக்காகச் செய்து வைத்திருந்தார்! பின்னர் காலையின் வாசனையை முகர்ந்த படியே சைக்கிளை எடுத்துக் கொண்டு அவன் புறப்படவும்....வெளியே யாரோ வருவது போல அரவம் கேட்கவே, பிலோமினாவும் அவளது குழந்தையைக் கையில் பிடித்த படியே நடந்து வந்து கொண்டிருந்தாள்! அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதில் பெரியவரின் நினைவு திடீரென வந்ததும், அவளை வரவேற்பதற்காக வெளியே ஒடினான்! அதற்குள் பெரியவர் முந்திக்கொண்டார்! என்ன பிள்ளை இந்தப் பக்கம்? பேச்சு நடை விபரீதமாகப் போய் விடக் கூடாது என்பதற்காக, இவ எனது நண்பனின் உறவினர்...என்னிடம் தான் வந்திருக்கிறா என்று கூறியவன் பிலோமினாவை அழைத்துக் கொண்டு விறாந்தையில் கிடந்த கதிரையில் உட்காரச் சொன்னான்! அவனது கைகளில் தோன்றிய நடுக்கம்...வெளியே தெரிந்து விடுமோ என்று அவன் அஞ்சிய மாதிரித் தெரிந்தது! தான் எவ்வளவு கோழையாகிப் போனேன் என்று அவனுக்கே வெட்கமாக இருந்தது! பெரியவரிடம் இவள் என்னோடு ஒரே பாடசாலையில் படித்தவள் என்றோ....எனக்கு மிகவும் நெருக்கமானவள் என்றோ அறிமுகப் படுத்தியிருக்கலாமே என்று மனதுக்குள் புழுங்கிக் கொண்டான்! ஒரு ராஜதந்திரப் பார்வை ஒன்றை அவள் மீது வீசிய படியே பெரியவர் அப்பால் நகர்ந்து போனார்! பெரியவர் போன பின் அவளது கரங்களை இறுகப் பற்றிய படியே வெகு நேரம் நின்று கொண்டிருந்தவனை....எப்படி இருக்கின்றீர்கள் என்ற அவளது குரல் இவ்வுலகத்துக்கு அவனை திரும்பவும் கொண்டு வந்தது! ஓம்...ஓம்...சுகத்துக்கு ஒரு பிரச்சனையும் இல்லை! நான் உங்களை மறந்து போகேல்லை! ஆனாலும் வெளி நாடு சென்றதும் எதிர்பாராத எவ்வளவோ பிரச்சனைகள், படிப்பு...வேலை என்று சிந்திக்கவே நேரம் கிடைக்கேல்ல! தமிழனுக்கே உரித்தான தனித்துவமான பொறுப்புக்கள், எதையுமே நனைச்சுச் சுமக்க வைக்கும் எமது சமுதாய அமைப்பு எல்லாமே சேர்ந்து எனது வாழ்வைத் தின்று விட்டன! எல்லாம் முடிந்து கண்ணாடியைப் பார்த்த போது....காதோரத்தில் நரை முடி அரும்பிப் போயிருந்தது! அவன் சொல்லி முடிக்க, அவளும் சிரித்த படியே தனது புத்தம் புதிய நரை முடிகளைத் தடவிக் கொண்ட்டிருந்தாள்! இதையெல்லாம் பற்றி நீங்கள் கவலைப் படவே வேண்டாம்! எழுதிச் செல்லும் விதியின் கை, யாருக்காகவும் எழுதுவதை நிறுத்துவதில்லை! எப்படி உங்கள் குடும்பம் என்று அவள் விசாரித்த போது...அவனது மௌனமே அவளுக்கான பதிலாக அமைந்தது! அதன் பின்னர் அவளும் அந்தக் கேள்வியை மீண்டும் கேட்கவேயில்லை! வானத்துச் சந்திரனைப் போலவே.....நீங்கள் என்னிடமிருந்து வெகு தூரம் போய் விட்டீர்கள்! நீங்கள் அண்மையில் இருந்திருந்தாலும் இந்த உலகம் எம்மிருவரையும் சேர்ந்து வாழ ஒரு போதும் அனுமதித்திருக்க மாட்டாது! ஏன், இன்றும் கூட அது பெரிதாக மாறி விடவில்லை! நான் இந்த வீட்டின் படலையத் தாண்டி வந்த போது...அந்தப் பெரியவரின் முகத்தில் தோன்றிய கோடுகளை, நீங்களும் பார்த்தனீங்கள் தானே? நீங்கள் வெளி நாடு போய், ஐந்து வருடங்கள் ஆனதும், எங்களுடன் படித்த பீற்றர் என்னைக் கட்டித் தரும்படி அப்பாவிடம் கேட்க, நானும் கழுத்தை நீட்டினேன்! பீற்றரும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு வள்ளம் வாங்கி வைத்திருந்தார்கள்! பிடிக்கும் மீன்களை எல்லோருமே பங்கிட்டுக் கொள்வார்கள்! ஒரு வருடத்துக்கு முன்பு வரை எல்லாமே நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது! ஒரு நாள் இந்திய இழுவைப்படகுகள் இவர்கள் போட்டிருந்த வலைகளை அப்படியே சேதப் படுத்தி விட்டுப் போய் விட்டன! இவர்களது வலைகள் மட்டுமல்ல, இன்னும் பலரது வலைகளுக்கும் அதே கதி தான்! இப்போதெல்லாம் இந்தியப் படகுகள் கரைக்கு அருகேயே வருகின்றன! நீங்கள் வந்து பார்த்தால் அவற்றின் எஞ்சின் சத்தத்தைக் கூடக் கரையிலிருந்தே நீங்கள் கேட்கலாம்! சந்திரன் நீண்ட நேரம் யோசித்து விட்டு....என்னால் ஓரளவுக்கு உதவ முடியும்! ஆனால் இதை நீங்கள் நிச்சயம் மறுக்கக் கூடாது என்றான்! இதைக் கேட்டுத் திடுக்கிட்ட பிலோமினா, சந்திரன் நீங்கள் எந்தப் பிராயச்சித்தமும் செய்ய வேண்டிய அவசியமில்லை! உங்கள் மீது எந்தத் தவறுகளும் இல்லையே என்று கூறினாள்! இல்லை, எனது ஆத்ம திருப்திக்காக என்னால் முடிந்த ஒரு உதவியை உனக்காகச் செய்ய என்னை அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தவே, அவளும் ஒரு நிபந்தனையுடன் ஒப்புக் கொண்டாள்! மறு நாள் வங்கிக்குச் சென்று பிலோமினா பெயரிலும், அவளது குழந்தையின் பெயரிலும், அவனது பெயரிலும் ஒரு வங்கிக்கணக்கு ஒன்றைத் திறந்து வலைகளுக்குத் தேவையான பணத்துடன் மேலதிகமாகக் கொஞ்சப் பணத்தை மேலதிகமாகவும் போட்டு, மாதம் ....மாதம் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை அந்தக் கணக்குக்குத் திரும்பக் கட்டுமாறு கூறியவன்...அந்தக் கடன் கட்டி முடியும் வரை...அந்த வங்கிப் புத்தகம் தன்னிடமேயிருக்கும் என்றும் கூறிய படியே, அந்தக் குழந்தையின் தலையை வருடிய படியே விடை பெற்றான்! சில நாட்களின் பின்னர்..அவனது வீட்டில் அவன் விடிகாலையில் நித்திரையால் கண் விழிக்கும் போது, அவனது மனைவி 'என்னப்பா...ராத்திரி முழுக்கப் பிலோ...பிலோ எண்டு பினாத்திக் கொண்டிருந்தீங்கள், தலைகணி விலகிப் போச்சோ என்று கேட்கவே, ம்ம்...தலையே விலகிப் போச்சுது என்ற படி....அன்றைய நாளுக்கான கடமைகளில் மூழ்கத் தொடங்கினான்! அடுத்த வருசம் இந்தப் பாஸ் புத்தகத்தை எப்படியாவது பிலோமினாவிடம் சேர்த்து விட வேண்டும்! இனிமேல் அவன் ஊருக்குப் போக மாட்டான்! முற்றும்....!
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
எனக்கும் ஆரோ பிடரியில தட்டின மாதிரி இருந்தது! திடுக்கிட்டுத் திரும்பினால் தானாச் சீனா!😝
-
எழு எல்லாம் இயலும்
அனைத்தும் அழகு....! பாடலின் கருத்தும் உள்ளடக்கம்! வாழ்த்துக்கள்....!
-
காதுகளும் கதவுகளும்! - தோழி
வணக்கம், தோழி...! ரோஜாப் பூவை உங்கள் கதையின் நாயகன் சந்திக்காமலே போனது நல்லது போலவே உள்ளது! இப்படியான கூட்டுப் புழுத் தனமான வாழ்வு இப்போது அதிகரித்த படி செல்கின்றது! கால அட்டவணை போட்டு வாழ்வதில் எனக்கு என்றுமே உடன்பாடு இருந்ததில்லை! தொடர்ந்தும் உங்கள் சிறு கதைகளை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!
-
அண்ணா அறிவாலயம்.
ஒரு ரூபாய் இருந்தால் மொக்கங் மன்னிக்கவும், ஹமீதியா கபேயில எட்டுப் புட்டும் (நாற்பது சதம்), ஒரு குறுமாவும் ( அறுபது சதம்) சாப்பிடலாம்! ஆணம் இலவசம்! இடைகிடை மொக்கனைக் கூப்பிட்டு அலுப்படிச்சால்...அவரது மூளை தாங்காது! வெளியால வரேக்குள்ள...அண்ணை எவ்வளவு? தம்பி...ஒரு ரூபாய்..!😄
-
அண்ணா அறிவாலயம்.
எல்லாருக்கும் விளங்கிற மாதிரி.....நீராவியடிப் பிள்ளையார் கோயில் எண்டு சொன்னால் என்னவாம்? நாங்கள் எங்களுக்குள்ள கலரி எண்டு சொன்னால் கெளரவப் பிரச்சனை எண்டு சொல்லிக் காந்திக் கிளாஸ் என்று தான் எங்களுக்குள் அழைத்துக் கொள்வோம்! ஈழப்பிரியன்...அனுபவங்களைக் கொஞ்சம் நீட்டினால் என்ன?😄
-
அசரீரி..!
இந்த வரிகளுடன் முழு உடன்பாடு எனக்கு உண்டு, கோபி...! கடலிலை நீந்தப் போறவனைச் சுறா மீன் கடிச்சால்..அவன் சுறாவைக் குற்றம் சாட்டுகின்றான்! சுறா எந்த ஐ.நா. சபையில் போய் முறையிடுவது? அப்படி முறையிட்டாலும் சீனா வீட்டோ பண்ணாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?😄
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -2)
யாழ்கவிக்கும் கொஞ்சம் கொடுத்திருக்கலாமே, புத்தன்..!😄 புத்தன், கனநாளைக்குப் பிறகு யாழில எழுதிற படியால், கொஞ்சம் சுறாவையும் புட்டையும் கொடுத்து சமாதானப் படுத்த நினைத்தேன்! அண்டைக்கு ஒருநாள் ரூங்கப்பியிலையும் ஒரு மீன் கடையொன்டைக் கண்டனான்! ஒருக்கா அங்கையும் வாங்கிப் பாக்க வேணும்! வரவுக்கும் கருத்துக்கும் ,நன்றி..!
-
பாவத்தின் சம்பளம்
கதை...ஒரு முக்கிய திருப்பத்திலை நுழையப் போகின்றது போல உள்ளது..! தொடருங்கள், அக்னி..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தனாள் வாழ்த்துக்கள், பகலவன்....!
-
விட்டுக்கொடுப்பு அகிம்சைவழி ஆயுதவழி மௌனம்.................????
இயற்கையும் தன்னாலான வரை போராடுது? இயலாமல் போனதும் போராட்ட முறையை மாத்திப் பாக்குது! அது தான் கொரோனாவைச் சொன்னேன்!😄 இன்னொரு திரியில் சொல்லப்படுகின்றது...இன்னும் 24 வகை , ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் கண்டு பிடிக்கப் பட்டிருக்காம்! ம்ம்...இயற்கையிடம்...இன்னும் பல ஆயுதங்கள் கை வசம் இருக்குது!🥱
-
காற்றாய் நீயும் மாறிவிடு
பூவாக இருக்கும் வரை தான், அவள் ஒரு பெண்ணாக இருப்பாள்...! புயலாக மாறும் போது, பெண்மை அவளிடமிருந்து விடை பெற்று விடும்...! அர்த்த நாரீஸ்வரம்.....அது தான் முழு உலகத்துக்கும் நல்லது! அது சரி....அமெரிக்க உப ஜனாதிபதி கமலா Harris அவர்களின் காரியாலயத்தில் ஒரு ஆண் கூட இல்லையாமே? இது செருக்கு இல்லையா? இது ஒரு ஆணின் காரியாலத்தில்,நடந்திருந்தால் அவர் என்ன பாடு படுத்தப் பட்டிருப்பார்? இருந்தாலும்...ஆண்கள் மனது பெரிய மனது தான்...! கவிதை....அழகு..!
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -2)
வணக்கம், விசுகர்! பழையதை நினைப்பது தான் இனி எமது வாழ்வில் வசந்தம்! அப்படியெல்லாம் இல்லை என்று தான் நினைக்கிறேன்! எனது கருத்துப் படி வாழ்வு என்பது அந்த நிமிடத்தில் வாழப்பட வேண்டும்! நாளை..நாளை என்று பின்போட்டுக்கொண்டு போனால், ஒரு நாளும் அந்த நாளை வரப்போவதில்லை! இதை உங்கள் வீட்டுக்குக்கிட்ட வசித்த ஆசிரியை ஒருவர் தான் எனக்குக் கூறி விளங்கப் படுத்தினார்! அவர் இங்கு விடுமுறையில் வந்திருந்த போது, பல இடங்களுக்கு அழைத்துக் கொண்டு சென்றேன்! பணமிருக்கின்றது, வசதியுமிருக்கின்றது. எனினும் உடம்பில் அதை அனுபவிக்கும் வலுவில்லையே தம்பி..! எதையும் உடம்பில் வலுவிருக்கும் போதே அனுபவித்து விட வேண்டும்! வரவுக்கும் கருத்துக்கும் நன்றி, விசுகர்! நன்றி....நிலாக்கா! உடனுக்குடன் பதிலெழுதத் தான் முயற்சிக்கிறேன்! நேரம் வெகு விரைவாக ஓடி விடுகின்றது! வணக்கம் திரு. சு.ப. சோமசுந்தரம்! நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் தொடர எண்ணியிருக்கின்றேன்! மிக்க நன்றி..! நன்றி...பசுவூர்க்கோபி. தொடருகின்றேன்! வணக்கம், குமாரசாமி அண்ணை! தொடருகின்றேன். நன்றி..!
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -3)
காசும் போச்சுது….கையிலையிருந்த சுறாவும் போச்சுது…! கண்களில் கண்ணீர் முட்டிய படியே...கரையிலிருந்து சிரிப்பு வந்த திசையை நோக்கிச் சந்திரன் திரும்பவே ...அந்தச் சிரிப்புக்குரியவள் அங்கே நின்று கொண்டிருந்தாள்! மீனவர்களுக்கேயுரிய கொஞ்சம் பரட்டையான தலை மயிர்! நீல நிறம் கொஞ்சம் கலந்த கண்கள்! வெளிர் நிறம்! அந்தக் கண்களில் ஒரு குறும்பு..! வீட்டை விருந்தாளிகள் வந்திருக்கினம் போல கிடக்குது! வெறும் கையோட போகப் போறீங்களோ? விருந்தினர் வீட்டுக்கு வந்தது அவளுக்கு எப்படித் தெரிந்தது என்று சந்திரன் ஆச்சரியப்பட வேண்டியே இருக்கவில்லை! நெடுந்தீவில் அந்தக் காலத்திலிருந்தது ஒரேயொரு இ.போ.ச பஸ் மட்டும் தான், மாவலித் துறைமுகத்திலிருந்து குருக்கள் மடம் வரைக்கும் ஓடுவதுண்டு! யாராவது தூரத்தில் ஓடி வருவதைக் கண்டால், அவர் பஸ்ஸுக்கு வரும் வரைக்கும் அந்த பஸ் காத்திருக்கும்! அதே போலவே குறிகாட்டுவான் போகும் வள்ளமும் பஸ்ஸைக் காணும் வரை காத்திருக்கும்! அதனால் ஊருக்குப் புதிதாக யார் வந்தாலும் அது ஊருக்கே தெரிந்து விடுவதில் ஆச்சரியம் எதுவும் இருப்பதில்லை! சரி...இப்ப என்ன செய்யப் போறீங்கள் என்று கூறியவள் கடலுக்குள் மெல்ல இறங்கினாள்! தண்ணீர் இடுப்பளவில் வரும் வரைக்கும் நடந்து போனவள்...திடீரெனத் தண்ணீருக்குள் புதைந்து போனாள்! செத்தல் தேங்காய்கள் இரண்டைக் கட்டிக்கொண்டு கரையில் நீந்துவதுடன் அவனது நீந்தல் அறிவு மட்டுப் பட்டிருந்தது! கண்களை அகல விரித்த படி ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில்...அவள் மீண்டும் தண்ணீருக்கு மேலே வருவது தெரிந்தது! பின்னர் நடந்து கரைக்கு வந்தவளின் கைகளில் ஒரு பெரிய கயல் மீன் இருந்தது! கயல் மீனின் பிடரிப்பக்கம் கறுப்பாக இருக்குமென்ற வரையில்..அவனுக்குத் தெரிந்திருந்தது! எதுவும் பேசாமலே...கண்களில் மட்டும் நன்றியைக் காட்டிய படியே மீனை வாங்கிக் கொண்டாள்! கோடாலியைத் தொலைத்து விட்டுக் கவலையுடன் குளத்துக் கரையில் குந்திக்கு கொண்டிருந்த குடியானவன் முன்பு தோன்றிய தேவதையின் கதையின் நினைவு வந்தது! எவரோ போட்டு வைத்த களங்கண்டிப் பட்டியிலிருந்து...அந்த மீனை அவள் கள்ளமாகக் களட்டிக் கொண்டு வந்திருக்கிறாள் என்று அப்போது அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை! அதன் பின்னர் அவளைக் காணும் போதெல்லாம் ...அவனுக்குள் ஒரு எதிர்பாராத உணர்வு ஒன்று தோன்றுவது உண்டு! எல்லோரும் அவளைப் பிலோ என்று கூப்பிடுவதால்..அவனும் அவ்வாறே அவளைக் கூப்பிடுவான்! அடிக்கடி ‘பிலோவைக் ’ காணும் சந்தர்ப்பங்களை வேண்டுமென்றே அவன் உருவாக்கிக் கொள்வான்! அப்படியான சந்திப்பு ஒன்றின் போது உனது கண்கள் ஏன் நீலமாக இருக்கின்றன எனச் சந்திரன் கேட்கவே, உண்மையிலேயே நீங்கள் ஒரு அப்பாவி தான் என்று கூறியவள் ஒரு நாட்டுப் பாடலொன்றைப் பதிலாகத் தந்தாள்! என்ன பிடிக்கிறாய் அந்தோனி எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே பொத்திப் பொத்திப் புடி அந்தோனி பூறிக் கொண்டோடிற்று சிஞ்ஞோரே அப்போது அவனுக்கு...அந்தப் பாடலின் கருத்துப் புரியவேயில்லை! அது புரியும் காலத்தில் அவள் அருகில் இருக்கவில்லை!! ஒரு நாள் அருகிலிருந்த தேவாலயத்தில் அவள் பிரார்த்தனையில் இருந்தாள்! சந்திரனும் கண்களை மூடிப் பிரார்த்தித்தான்! தேவாலயங்களில் எப்போதுமே ஒரு அமைதி குடி கொண்டபடி இருப்பதால், அது ஒரு பொதுவான சந்திப்பிடமாக அமைந்தது! கடவுளிடம் என்ன வேண்டிக்கொண்டாய் என அவள் கேட்டாள்! வலசைப் பறவைகளைப் போல எனக்கு இறக்கைகள் வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்! நீ என்ன கேட்டாய்? மீனைப் போல...பூவல்கள் வேண்டுமென்று கேட்டிருப்பாய் என்றான்! இல்லையே...நீ நல்லாயிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்! நீ நல்லாயிருந்தால் தானே...நான் நல்லாயிருக்க முடியும் என்று அவள் கூறிய போது தான் அவர்களது நட்பு எவ்வளவு தூரம் ஆழமாகி விட்டது என்று அவனுக்குப் புரிந்தது! அதெல்லாம் சரி….எதற்காக வலசைப் பறவைகளைப் போல நீ வலசை போக வேண்டும்? அந்தப் பறவைகள் வாழுகின்ற இடத்தில்...இரவுகள் மிகவும் நீளமானவை! பகல் பொழுதுகள் மிகவும் குறைந்தவை! பனிக்காலம் அதிகம்! கோடை காலம் குறைவு! அதனால் அவை வலசை போக வேண்டியது காலத்தின் கட்டாயம்! வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரும் பறவைகள்…..தென்னிந்தியாவின் வேடந்தாங்கல் சரணாலயம் நிரம்பிய பின்னர்...அவற்றின் கண்களில் அடுத்த தெரிவு நெடுந்தீவு தான்! அதனால் அங்கு வாழும் மக்களின் பேச்சு வழக்கில்..வலசை போகும் பறவைகள் உதாரணமாக அடிக்கடி வருவதுண்டு! தம்பி...தோசைக்குப் போட்டிருக்கிறன்...கொண்டு வரட்டே? அந்தப் பெரியவரின் குரல் அவனது சிந்தனையை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்தது! சரி...ஐயா ..என்று கூறியவன் பிலோமினா அன்று கூறியது எவ்வளவு உண்மை என்று சிந்தித்தான்! நான் எதற்காக வெளி நாடு போனேன்? இன்று வரையில் அந்தக் கேள்விக்கான பதில் அவனுக்கு கிடைக்கவேயில்லை! எல்லோரும் போகின்றார்களே என்ற ஒரு மந்தை மனநிலையில் தான் சந்திரன் அந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்! தோசையைக் சாப்பிட்டு விட்டுச் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீதியில் இறங்கியவன் கொஞ்ச நேரம் காற்றை நன்றாக உள்ளிளுத்து..வெளியே விட்ட படியே சைக்கிளை மிதித்தான்! நீண்ட நாட்களாக ஓடாததால்...கிட்டத் தட்ட ஒரு நீராவி எஞ்சினைப் போலவே, அவனது மூச்சுச் சத்தம் அவனுக்குக் கேட்டது! கொஞ்சம் களைத்துப் போனவன் கண்களில் ஒரு பெட்டிக்கடை தெரிந்தது! சைக்கிளை நிறுத்தி விட்டுக் கடையில் நின்ற சிறுமியிடம் ஒரு சோடா வாங்கிக் குடித்தவன் சிறுமியிடம் காசைக் கொடுக்கக் காசை வாங்கிய சிறுமி மெத்தப் பெரிய உபகாரம் என்றாள்! வெள்ளைக்காரர் கடைகளில் காசு கொடுக்கும் போது அனேகமாகத் தாங்க் யூ என்று சொல்லுவார்கள்! அதைத் தான் அந்தச் சிறுமியும் சொல்லுகின்றாள்! இந்த வழக்கம் ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்திலும் இருந்திருக்குமா? இப்போதெல்லாம் சாமான் ஏதாவது வாங்கினால், ஒரு இடமும் நன்றி கூடச் சொல்வதில்லையே! தொலைந்து போகின்ற நல்ல பழக்கங்களில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது தான் என நினைத்துக் கொண்டான்! எங்கேயோ நிறையக் கிளைகள் விட்ட பனை மரம் ஒன்று நின்றது நினைவிலிருந்தது!! இப்போது அதனைக் காணவில்லை! மகா வித்தியாலயத்தை அண்மித்ததும் அவனது பழைய நினைவுகள் மீண்டும் நினைவுக்கு வந்தன! பிலோமினாவின் வீட்டை அண்மிக்கும் போது, முன்பு கிடுகுகளினால் மேயப் பட்டிருந்த அந்த வீடு, இப்போது ஒரு சின்ன ஒட்டு வீடாக மாறியிருந்ததைக் கண்டு அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! விறாந்தையில் ஒரு வயசானவர் ஒருவர், சாய் மனைக்கதிரையில் சாய்ந்த படியே, வீரகேசரி வாசித்துக் கொண்டிருந்தார்! தூரத்தில் வரும்போதே அவரை அடையாளம் கண்டு கொண்டவன், சைக்கிளைக் கொண்டு போய்ப் பகிர் வேலியில் சாத்தி வைத்தான்! கண்ணாடியைக் கழட்டியவர் தலையை நிமிர்த்திச் சந்திரனைப் பார்த்தார்! ஆச்சரியத்துடன், தம்பி இண்டைக்குக் காலமையிலையிருந்து இந்தக் காகம் விடாமல் கத்திய படியேயிருந்தது! இண்டைக்கு யாரோ வரப் போகினம் எண்டு எனக்கு அப்பவே தெரியும் என்றவர் தனது இரு கரங்களாலும் அவனைக் கட்டிப் பிடித்துத் தழுவினார்! மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக அவர் காணப்பட்டார்! சந்திரனும் தான் கொண்டு வந்த சூட் ஒன்றை அவரிடம் கொடுக்கத் தம்பி...இதைப் போட்டுக் கொண்டு நான் எங்க போறது என்று ஆதங்கப் பட்டார்! ஏன், ஞாயிற்றுக் கிழமைகளில் சேர்ச்சுக்குப் போறதில்லையோ எண்டு கேட்க...அதெல்லாம் முந்திப் போல இல்லை மகன் என்று கூறினார்! அவர் எப்போதுமே சந்திரனை மகன் என்று தான் அழைப்பார்! இப்ப கடலுக்குப் போறதில்லையோ என்று சந்திரன் கேட்க ' இல்லையப்பன், கண்டறியாத சரள வாதம் ஒரு காலில வந்த பிறகு தண்ணிக்குள்ள கன நேரம் நிக்கேலாது! வலது கால் விரல்களில மரத்துப் போன மாதிரி ஒரு விதமான உணர்ச்சியும் இருக்காது! அந்தக் காலத்தில்..அவர் திருக்கைகளைக் கருவாட்டுக்காகக் கீறி எறியும் அழகு இப்போதும் கண் முன்னே தெரிந்தது! பருந்துகள் வானத்தில் வட்டமிட்ட படி...கடலுக்குள் வீசியெறியப் படும் திருக்கைக் குடல்களைத் தூக்கிக் கொண்டு போவதற்காக வட்டம் போட்டுப் போட்டுக் கீழே இறங்கி வருவது, ஒரு சர்வதேச விமான நிலையத்தில் அடிக்கடி விமானங்கள் வந்திறங்குவது போலவே இருப்பதால், சந்திரனும், பிலோமினாவும் அதை எப்போதும் ரசிப்பது உண்டு! அத்துடன் அவளைத் தான் கருவாட்டுக்குக் காவலாக விட்டுப் போவதால் கிடைக்கும் தனிமையையும் சந்திரன் விரும்புவதுண்டு! அங்கு வரும் மீனவர்களின் வலைகளில் சில வேளைகளில் பெரிய சிங்கி றால்கள் சிக்குவதுண்டு! அவ்வாறு கிடைப்பவகளில் பெரிதானவைகளைத் தெரிந்து பிலோவின் அப்பா அவனிடம் கொடுப்பதுமுண்டு! இதை யாழ்ப்பாணம் கொண்டு போனால் நிறையக் காசு வருமே என்று சந்திரன் சில தடவைகளில் அவரிடம் சொல்லும் போது,மகன் இதை யாழ்ப்பாணம் கொண்டு போற காசு இதன் விலையை விடக் கூடவாக இருக்கும் என்று கூறுவதுண்டு! எதுவோ ஒரு பெரிய பொருளாதாரத் தத்துவம் ஒன்றைக் கூறி விட்டது போல, அவரது முகத்தில் ஒரு சிரிப்பொன்று எப்போதும் வந்து போகும்! கருவாடு காய விடும் போது...கொஞ்சம் வெயில் ஏறியதும், கடற்கரை கொஞ்சம் வெறுமையாகத் தொடங்கும்! காய்கின்ற கருவாடுகளை காவலுக்கு நிற்கும் நாய்கள் பார்த்துக் கொள்ள சந்திரனும், பிலோமினாவும் எதிர்பார்க்கும் தனிமை கொஞ்சம் கிடைக்கும்! இன்னும் வரும்....!