Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர்

Featured Replies

'ரி-56 ஆல் 'ரச்' அடிச்சுப் பாத்தபோது, ற்றிகரை விரல் அமுக்கியதற்கும், குண்டு வெளிக்கிட்டு இலக்கை அடைந்ததற்குமிடையேயான நேரம் எத்தனை சிறியது என்பது என் மூளை கிரகிக்க முடியாத சிறியதாய் இருந்தது.... படங்களிலும் கதைகளிலும் துப்பாக்கி சுடுதலைப் பார்த்ததற்கும் சுட்டபோது உணரப்பட்டதற்குமிடையேயான வித்தியாசம் வர்ணனைக்கு அப்பாற்பட்டது. சுடுதலின் ஒலி எத்தனை பெரியது! அது செவிப்பறையில் எத்தனை கடினமாய் உதைத்தது என்பதும், துப்பாக்கியின் எனது தோளின் மீதான உதைப்பின் பரிமாணமும் நான் நினைத்திருந்ததைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு பெரிதாய் இருந்தது. சண்டைகளைத் திரைப்படத்தில் பார்ப்பதற்கும் ஒரு குண்டு சுடுவதில் உள்ள உடல் வருத்தத்திற்குமிடையேயான வேறுபாடு அப்போது தான் என்னால் உணரப்பட்டது. அந்த சுடுகலன், அந்த மைதானம்...'
 
சொல்லிக்கொண்டு போனவனை இடைமறித்தவள் 'நீ எந்த சுடுபயிற்சி நிலையத்திற்குச் சென்றாய்?' என்றாள்.
 
'நான் எந்தப் பயிற்சி நிலையத்திற்கும் இங்கு செல்வதில்லை. வாழ்வில் ஒரே ஒரு முறை ரி-56 ஆல் மட்டும் சில ரவகைள் சுட்டுள்ளேன். அதைத் தான் 'ரச்' அடித்தவர்களோடு சேர்ந்தடித்தேன் என்றேன்' என்றான்.
 
'அது என்ன 'ரச்' அடித்தல்' என்றவளிற்கு 'அது ஒரு முடிந்து போன காலத்தின் சொல்லாடல்' என்பதோடு நிறுத்திக்கொண்டான்.
 
'என்ன இன்று நீ கனவுலகில் நடப்பது போல் தோன்றுகின்றாய்..' என்றாள்.
 
'அயன் றான்ட்டின் அற்லஸ் ஷறக்ட் (Ayn Rand's Atlas Shrugged) நாவலில் ஹென்றி, ட்டாஜனி சார்ந்து நினைக்கும் ஒரு பக்கம் வரும். அத்தனை ஆழமையும் புத்திக்கூர்மையும் மிக்க ஒரு பெண்ணோடு, அதி அடிப்படை, அல்லது விலங்கு இச்சை என்று மட்டும் கொள்ளப்படவேண்டிய கலவிக்கான ஆசை தனக்குள் எழுந்தது சார்ந்து அவன் துவழும் ஒரு காட்சி. உன்னில் கூட சமயத்தில் எனக்கு அவ்வாறான எண்ணமே எழுகிறது. எத்தனை அறிவு மிக்க அற்புதம் நீ' என்றான்.
 
ஒரு கணம், மகிழ்ச்சியும் வெட்கமும் கூச்சமும் சோந்த பலரச வெளிப்பாட்டினை முகத்தில் காட்டியவள் பின் சுதாகரித்துக் கொண்டு, அவன் மார்பில் ஒரு கணம் தன் முகம் புதைத்து எடுத்துக் கொண்டாள்.
 
'ரி-56 பற்றி ஏன் இன்று திடீரென நினைத்துக்கொண்டாய்?'
 
'ஏ.கே-47 ரக துப்பாக்கியின் மலிவான சீன வடிவம் ரி-56. ஆனால், நகல் அசலிற்கு விசுவாசமானதாகவே பிறந்தது. அந்தக் கருவியினைக் கையில் வைத்திருந்த கணத்தில்...'
 
'ஏன் நிறுத்திவிட்டாய். என்ன நடந்தது உனக்கின்று?'
 
'அந்த உன்னத தொழில் நுட்பத்திற்கு ஏகப்பட்ட அழகு. ஆனால் உயிர் பறிக்கும் ஒரே நோக்கிற்காகவே அந்தக் கருவி பிறப்பிக்கப்பட்டது. தன் நோக்கம் சார்ந்து அது என்றுமே எந்த பித்தலாட்டமோ நாடகமோ செய்வதில்லை. அந்தக் கருவியினை உருவாக்கிய உயிரின் அறிவினை வியப்பதா இல்லையேல் அக்கருவி பறித்த பறிக்க இருக்கின்ற உயிர்களை நினைப்பதா?...'
 
'கருவி சடம் தானே. பார்வைகளும் செயலும் உன்னுடையவை அல்லவா?'
 
'அதைக் கையில் வைத்திருந்த கணங்கள், ஒரு பூதத்தைச் சிறைப்பிடித்து மடியில் வைத்துத் தடவிய உணர்வு போல் இருந்தது. அந்த உயிர்கொல்லியினை மடியில் வைத்திருக்கையில் வைத்திருப்பவரின் உயிரிற்கு அதன்மேல் ஒரு ஈர்ப்புப் பிறந்தது வினோதமாய் இருந்தது. ஒரு அதிவேக காரினை வாங்கி ஓட்டியது போலிருந்தது...'
 
'ஏன்னாச்சு உனக்கு..'
 
'உனது உடல் இன்று இருக்கும் மினுமினுத்த இறுக்கம்...ட்டாஜினி நீ ஒரு பிரமிப்பு எனக்கு' 
 
'சொல்ல மறந்து போனன். நேற்று ஒரு ஜோடியினை எதிர்பாராமல் காண நேர்ந்தது. அவனை எனக்கு நெடுநாளாத் தெரியும். ஏகப்பட்ட வாசிப்பும் அனுபவமும் மிக்கவன். பல்கலைக்கழகநாட்களில், பெடியளிற்குள் பியர் அடித்தபடி நடக்கும் விவாதங்களில் அனேகமா நானும் அவனும் எதிர்க்கன்னைகளில் தான் இருந்திருக்கிறோம்.திருமணம் என்ற நிறுவனத்தில் உடன்பாடற்றவன். அதால அநேகமாக அவனை நான் ஒரு பெண்ணுடன் இருமுறை பாப்பதில்லை. நேற்று வந்தவளை நான் இதுக்கு முதல் பாத்ததில்லை'
 
'ரி-56 ஐ நீ எப்ப சுட்டுப் பாத்த?'
 
'இல்ல இரண்டு தரம் வரைக்கும் எல்லாம் நல்லாருக்கும், அதுக்குப் பிறகு அவளைப் போன்ற ஒருத்தியோட என்னத்தை அவனால் பேச முடியும்? ஸ்ஸ்சப்பா கண்ணக்கட்டாதா என்று தோன்றிச்சு...'
 
'சுடுபட்டவனிற்குச் சுடுகலன் சார்ந்து வலி வேறுபடவா போகுது? எத்தினை ஆயுதம் உயிர் பறிக்க....'
 
'பசிக்கு மட்டும் சாப்பிட்டா உணவிற்கு அலங்காரம் தேவையா என்ன? வாழைஇலை, மண் சட்டி அல்லது கையில் கவளம், அனகேமாய் ஏழைகளிற்கு உணவு திருப்த்தியாகவே எப்போதும் இருக்கும் என்றே நினைக்கிறேன்'
 
'வீதியில் ஐசில் சறுக்கி விழும்போது, உடல் தரையில் படும் போது, அந்தக் கணத்தில் நோ தெரிவதில்லை பாத்திருக்கிறியா? துப்பாக்கியால் பொயின்ற் பிளாங் றேஞ்சில சுடுபட்டு இறப்பவர்களிற்கு இறப்பு எந்த வலியையும் கொடுக்காது என்று நான் முழுதா நம்புறன்...'
 
'அச்சும்....என்னாச்சு?...நான் அந்த சோடி பத்திப் பேச ஆரம்பிச்சன்.... நீ ரி-56 பற்றியும் சுடுபட்டு இறப்பது பற்றியும் பேசத் தொடங்கினாய். ஆனால் கடந்த இந்த சில வினாடிகளில் நீ பேசிய அனைத்தும் எனக்குள் கிரகிக்கப்பட்டது நான் பேசிய அனைத்தும் உனக்குள்ளும் பதிவானது. இது தான் உன்னில் என்னைக் கட்டிப்போடுவது'
 
அணைந்த விளக்கைத் தொடர்ந்து அறையுள் அடர்ந்த இருட்டு நாளின் முடிவினை உறுதி செய்தது.

Edited by Innumoruvan

  • தொடங்கியவர்

கிருபன், சுபேஸ், புங்கையூரான், சுமே மற்றும் ஈசன். நன்றி உங்கள் வாசிப்பிற்கும் பச்சைக்கும்.

முதன் முதலில் துவக்கை சுட்ட பின்னர் கைகளில் மணக்கும் அந்த வெடி மருந்தின் வாசத்தை அடிக்கடி நான் ரசித்ததுண்டு. கையை கூட கழுவாமல் நீண்ட நேரம் அதை முகர்ந்ததுண்டு.

அடிக்கடி காதலியை மாற்றுபவனுக்கு ரசிப்பு தன்மை குறைந்து போகும் என்று அவனை நேற்றைய சோடியுடன் பார்க்கும் போது எனக்கு மனசில் பட்டது.

ஆனால் சாவின் வாசம் தெரிந்த பின்னர் இப்போதும் அதை நினைக்க அருவருப்பாக இருக்கிறது.

இவர்களை போல இன்னும் எத்தனையோ பேர் இந்த உலகில் வெளித்தெரியாமல் உலாவுகின்றனர்.



நன்றி பதிவுக்கு இன்னுமொருவன்.

  • தொடங்கியவர்
நன்றி முதல்வன்.
 
பகலவன்,  கதையின் அலைவரிசை உள்வாங்கப்பட்டிருப்பதை, உங்கள் பின்னூட்டம் வாயிலாக அறிவதில் மகிழ்ச்சி. நன்றி உங்கள் வரவிற்கும் கருத்திற்கும்.

பழைய நினைவை மீண்டும் கிளறிய பதிவு.. நண்றி இன்னும்மொருவன்

 

பயிற்சி முடிஞ்சதும் எனக்கு ஒரு SAR தந்து இருந்தார்கள்  Singapore Assault Rifle   என்பதாக இருக்கும் அதன் விளக்கம்...   புலிக்களுக்குள் அமெரிக்க வகை 5.56 ரகைகளுக்கு எப்போதும் தட்டுப்பாடு இருந்ததால் அந்த துவக்கை சீண்டுவார் யாரும் இருக்கவில்லை....  கடைசியில்  எனது கைகளில் கிடந்தது...  நான்கு மேலதிக ரவைக்கூடுகள் அதிலை இரண்டில் மட்டும் தான் ரவைகள் முழுமையாக இருந்தன...  இரண்டு எப்போதும் வெறுமைதான்...  இருக்கிற ரவைகளை சுட்டு முடிச்சால் பிறகு...?? கேள்வி எப்போதும் எனக்குள் இருக்கும்...

 

புலிகளில் அனேகரின் ஆயுதங்கள் AK வகையை சார்ந்த 7.62 ரவை வகை துவக்குகளே தான் அதிகம் என்பதால் எனக்கு ரவைகள் கிடைப்பதில் நம்பிக்கை அறவே இல்லை ஆதலால் எனக்கு அந்த துவக்கால் பாதுகாப்பு இருக்கும் எண்டு நான் எப்போதும் நம்பி இருந்தது இல்லை... அதே போல என்னால் மற்றவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும் எண்டும் நம்பி இருக்கவில்லை... எனக்கு என்னவோ ஒரு முட்டைகோதை கையிலை வைத்து இருக்கிற்து போலவே படும்... ஆரம்ப பயிற்சிக்கு கையிலை ஒரு கட்டையை தந்து இதுதான் உங்கட ஆயுதம் என்பார்கள்... அந்த கட்டைக்கும் SAR க்கும் பெரிசாக வித்தியாசம் எனக்கு தெரியவில்லை...

அதை என்னட்டை இருந்து திருப்பி வாங்கிய போது நான் பட்ட சந்தோசம் இருக்கே...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி இன்னுமொருவன் . கதையில் உங்கள் தனித்துவம் மிளிர்கிறது...!  :)

 

'

'அயன் றான்ட்டின் அற்லஸ் ஷறக்ட் (Ayn Rand's Atlas Shrugged) நாவலில் ஹென்றி, ட்டாஜனி சார்ந்து நினைக்கும் ஒரு பக்கம் வரும். அத்தனை ஆழமையும் புத்திக்கூர்மையும் மிக்க ஒரு பெண்ணோடு, அதி அடிப்படை, அல்லது விலங்கு இச்சை என்று மட்டும் கொள்ளப்படவேண்டிய கலவிக்கான ஆசை தனக்குள் எழுந்தது சார்ந்து அவன் துவழும் ஒரு காட்சி. உன்னில் கூட சமயத்தில் எனக்கு அவ்வாறான எண்ணமே எழுகிறது. எத்தனை அறிவு மிக்க அற்புதம் நீ' என்றான்.
 

 

 

ம்ம்ம்... எல்லா இடங்களிலும் ஆண்கள் ஆண்களாகத்தான் இருக்கின்றார்கள் என நினைக்கத் தோன்றுகின்றது. என் அனுபவப் பகிர்வு போன்று இருக்கின்றது இந்த வரிகள். :)

 

'அச்சும்....என்னாச்சு?...நான் அந்த சோடி பத்திப் பேச ஆரம்பிச்சன்.... நீ ரி-56 பற்றியும் சுடுபட்டு இறப்பது பற்றியும் பேசத் தொடங்கினாய். ஆனால் கடந்த இந்த சில வினாடிகளில் நீ பேசிய அனைத்தும் எனக்குள் கிரகிக்கப்பட்டது நான் பேசிய அனைத்தும் உனக்குள்ளும் பதிவானது. இது தான் உன்னில் என்னைக் கட்டிப்போடுவது'
 
அணைந்த விளக்கைத் தொடர்ந்து அறையுள் அடர்ந்த இருட்டு நாளின் முடிவினை உறுதி செய்தது.

 

 

இன்னுமொருவன், இந்த வரிகள் இயல்பாக கதை எழுதிக் கொண்டு இருக்கும் போது தானாகவே வந்து விழுந்தவையா அல்லது இந்த வரிகள் முதலில் மனசுக்குள் தோன்ற இந்த கதை இதையொட்டி விரிந்து கொண்டதா? இக் கதையின் உயிர்மூச்சு இதுதான் என நினைக்கின்றேன். வாசிப்புகள் மாறலாம்.

  • தொடங்கியவர்
நன்றி முதல்வன், தும்பளையான், தயா, சுவி, நிழலி உங்கள் கருத்திற்கும் வரவிற்கும். தயாவின் பின்னூட்டம ஒரு தனிக் கதைக்கான கருவோடு இருக்கிறது. 
 
இக்கதையினை வேறு எவரேனும் எழுதியிருப்பின் நான்கு பக்ககங்களிற்குப் பொழிப்புரை எழுதியிருப்பேன். இங்கு அதைச் செய்ய விரும்பவில்லை. ஆனால், சுருக்கமாக, நிழலியின் அவதானம் சரியானதே. ஒரு அலைவரிசையில் ரியூன்பண்ணப்பட்டிருக்கும் இருவரிற்குள் இரு தடங்களில் சமநேரத்தில் சம்பாசனை சாத்தியம். இரு இசை உபகரணங்களால் முடியுமெனில் ஏன் மனிதரால் முடியாது. மௌனமே உரையாட முடியுமெனின் இருதடங்கள் எம்மாத்திரம்.
 
கடைசி ஐந்து பந்திகளில் உள்ள உரையாடல்கள் அவர்கள் இருவரும் பேசிய இருவேறு விடயங்களிற்கும் அப்படியே பொருந்துவன. அவனது கூற்று அவளது பேசுபொருளிற்கும், அவளது பேச்சு அவனது பேசுபொருளிற்கும் அப்படியே பொருத்தக்கூடியன. இன்னமும் சொல்வதானால், அவர்களது பேச்சுக்களை மற்றையவரின் பேசுபொருளிற்குப் பொருத்துகையில் அவர்களின் பேச்சின் ஆழம் அதிகரிக்கிறது. அதனால் முயற்சியின்றி அவவை மற்றையவருள் கிரகிக்கப்படுகின்றன. அலைவரிசை ஒத்திருக்கிறது.
 
  • கருத்துக்கள உறவுகள்

மும்முறை இக்கதையை வாசித்துவிட்டேன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வடிவத்தை கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது....இன்னுமொருவன் இக்கதை தொடர்பாக இன்னுமின்னும் எனக்கு மீள்வாசிப்புத் தேவைப்படுகிறது... வரவர மூளை சிந்தனை என்பதை  உற்பத்தி செய்வதை தவிர்த்துவருகிறது என்பதை இச்சிறு படைப்பு எனக்கு உணர்த்துகிறது... மீளவும் வாசிக்கப்போகிறேன்...

கதைக்கு வாழ்த்துக்கள் இன்னுமொருவன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.