Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காகித ஓடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காகித ஓடம்
 
நீடித்த மழைக்குப் பின் வானம் வெளுக்க ஆரம்பித்தது.
சிலு சிலு வென்ற காற்று உடலை வருடி சிலிர்ப்பூட்டியது.
மரத்திலிருந்து சொட்டும் நீர்த்துளிகளின் அழகை ரசித்தபடி அமர்ந்திருந்தாள் அருந்ததி.
நட்பு, காதல், திருமணம், குடும்பம், உரசல், மோதல், கசப்பு, பிரிவு, வெறுமை..
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் எத்தனையோ அனுபவங்களுக்கு பழக்கப்பட்டுவிட்ட அருந்ததிக்கு தன் உணர்வுகளை நிதானமாகக் கையாள்வது இலகுவாக இருந்தது.

 

சென்ற வாரம் நடைபெற்ற ஒன்றுகூடலின் பின் சலனமுற்ற மனம் சமநிலைக்கு வந்திருந்தது.
பல வருடங்களின் பின் பழகிய பல நண்பிகளும் நண்பர்களும் ஒன்றுகூடிய அந்த தருணம் அற்புதமானது.
பசுமை நிறைந்த நினைவுகளை மனதில் விதைத்து பொத்திப் பொத்திப் பாதுகாத்த அந்த இனிய பொழுதுகள் அனைவர் மனக்கண்ணின் முன்னும் மந்தகாசமாய் மணம் பரப்பிக்கொண்டிருந்தது.
மனஅரங்கில் காட்சிகள் துல்லியமாகப் பதிவாகி இருந்தன.
வாலிப வயதில் காணப்பட்ட இளமையின் துள்ளல், துறுதுறுப்பு அனைத்தும் ஓய்ந்து ஆளுமையுள்ள ஆண்களாக பெண்களாக பொறுப்புள்ள பெற்றவர்களாக உரையாடிக்கொண்டிருந்தனர்.
அன்று கனவுகள் மிதந்த கண்களில் இன்று கடமை உணர்வுகள் குடும்பப் பொறுப்புக்கள்
அநேகரை அடையாளங் காண்பதே அபூர்வமாக இருந்தது.
அங்கு அருந்ததியைச் சுற்றி நண்பிகள் சரோ, வதனி, யோகா, சகுந்தலா, ஜனனி, கவிதா இன்னும் பலர்.
'என்ன அருந்ததி உன்ர ஆள் வந்திருக்கிறேர் போல' குறும்புச் சிரிப்புடன் சகுந்தலா தொடங்கினாள்.
'ஏய் சகுந்தலா நீ இன்னும் அண்டைக்கு இருந்தது போலத்தான். இன்னுமா அதையெல்லாம் ஞாபகம் வைத்திருக்கிறாய்'
'ஓகோ அப்ப நீ மட்டும் மறந்திற்றியாக்கும்'
'மறந்தோம் மறக்கவில்லை என்பதெல்லாம் இருக்கட்டும். அதெல்லாம் பள்ளிக்கால பருவக் குறும்புகள். பழைய கனவுகள்.             
'அப்ப கனவில பழைய கனவு புதிய கனவு என்றெல்லாம் இருக்கும்போல.' சகுந்தலா குறும்பில் குழந்தையாக அருந்ததியைச் சீண்டினாள்
புன்னகைக்க முயன்றாள் அருந்ததி.

சிரிப்பு செயற்கையாக இருந்தது.
ஜனனி மட்டும் சகுந்தலாவை முறைத்தாள்.

'ஏய் சகுந்தலா நீ இன்னும் அருந்ததியைக் காயப்படுத்தாத.'
'ஏன் ஜனனி சகுந்தலாக்கு என்ன?' சகுந்தலா கேள்வியுடன் ஜனனியை ஏறிட்டாள்.

ஜனனி என்ன சொல்லி சகுந்தலாவை சமாளிக்கலாம் என்று தடுமாற அவளது மனநிலைக்கு இசைவாக மற்றைய தோழிகள் சகுந்தலாவை தமது அரட்டைக்குள் அழைத்துக் கொண்டனர்.

 

ஜனனி அருந்ததியின் உயிர்த்தோழி. அவளுக்கு அருந்ததியின் வாழ்க்கையின் அனைத்து விபரங்களும் தெரியும். ஆனாலும் அடுத்தவரிடம் தன் நண்பியின் அந்தரங்கங்களை அலசுபவள் அல்ல அவள்.
அருந்ததிக்கு திருமணம் நிச்சயமாகி வெளிநாடு வந்ததும், அங்கு வந்து அரவிந்தைத் திருமணம் செய்ததும், அதன் பின் நடந்த அத்தனை நிகழ்ச்சிகளும் ஜனனிக்குத் தெரியும்.
அருந்ததியும் ஆயிரம் கனவுகளுடன்தான் இல்வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தாள்.
ஆனால் அத் திருமண பந்தம் ஏற்படுத்திய காயம் மிகப் பெரிது.
ஆறிய காயம் பெரிய வடுவாக இதயத்தில் விழுந்திருந்தது.
வாழ்க்கை அவ்வப்போது உத்வேகங்களினால் அலைக்கழிக்கப்படுகிறது.
உறவுகளினால் வழிநடத்தப்படுகிறது.
இதில் உண்மை, பொய், நன்மை, தீமை என்று கோடுபோட்டு பிரித்துக் கொண்டிருப்பது சாத்தியமில்லை.
கனடா வந்திறங்கிய அருந்ததியை அரவிந்தன் விமான நிலையம் சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றதும் அருந்ததி புல்லரித்துப் போனாள்.

படத்தில் பார்த்ததை விட நேரில் அரவிந்தன் எடுப்பாகவே காணப்பட்டான்.
அருந்ததிக்கு இங்கு நெருங்கிய உறவுகள் இல்லாதபடியால் அரவிந்தன் தனது வீட்டிற்கே அருந்ததியை அழைத்துச் சென்றான்.
பழகுவதற்கு இனிமையான பண்பு.
ஆதரவான பேச்சு.
அழகான புன்னகை.
பரிவான பார்வை.
அருந்ததி மனநிறைவடைந்தாள்.

பெற்றவரைப் பிரிந்த சோகத்தில் இருந்த மனம் இலேசாகி இருந்தது.
திருமண நாள் வரும்வரை அருந்ததியை அவளது உணர்வுகளை மதிப்பவனாக அவளுடன் கண்ணியமாக நடந்து கொள்வது அருந்ததிக்கு திருப்தியாக இருந்ததுடன் அரவிந்தனில் தனி மதிப்பையும் ஏற்படுத்தியது.
அவனது தொடுகை, காதல் பேச்சுக்கள், சின்னச் சின்ன ஸ்பரிசங்கள் மனம் உற்சாகத்தில் துள்ளியது.

அரவிந்தனுக்குள் ஆயிரம் போராட்டங்கள்.

விபரம் தெரிந்த காலம் தொட்டு இதுவரை காலமும் தனக்குள் பூட்டி வைத்த தனக்கு மட்டுமே தெரிந்த அந்த ரகசியம் பூதாகாரமாய் அவனை பார்த்து கை கொட்டிச் சிரித்தது.
அந்த பொல்லாத விடயத்தை இனியும் பூட்டி வைப்பது சாத்தியமா?
அதுவும் அருந்ததியிடம்.

மனம் சஞ்சலப்பட்டாலும் ஏதோ ஒரு அசட்டுத் துணிச்சல்.
சில வேளை அருந்ததியின் அருகாமை அவளது அரவணைப்பு தனக்குள் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தாதா என்ற நப்பாசை.
மனதைத் திடப்படுத்தியபடி தெய்வத்திடம் பாரத்தைப் போட்டுவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஆயத்தமானான்.
தனது சந்தோசங்களெல்லாம் திருமணம் முடிந்து தாம்பத்திய வாழ்க்கை ஆரம்பிக்கும் வரைதான் நீடிக்கும் என்று அருந்ததி கனவிலும் நினைக்கவில்லை.

 

அன்றுதான் தனிமையில் அரவிந்தனும் அருந்ததியும் தம் வாழ்வின் முக்கியமான நாளான முதல் உறவின் ஆரம்பம்.
அரவிந்தனின் அன்பிற் கட்டுப்பட்டு அவனது அணைப்பின் ஆளுமைக்குள் கிறங்கிய அருந்ததி மயங்கினாள். மனதுக்குள் மத்தாப் பூக்கள் பூக்க ஆரம்பித்த தருணங்கள் அவை.
அருந்ததியின் உடலை அணைக்க முடிந்த அரவிந்தனால் அவளது உணர்வுகளை அணைக்க முடியவில்லை.
இயங்கமுடியாத இயலாமையில் அரவிந்தன் துவண்டுபோன தருணத்தில் அங்கு வெறுமைகள் மிஞ்சின.
ஆரம்பத்தில் அருந்ததியால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.
முடிவில் அரவிந்தனின் இயலாமை தெரிய வந்தபோது அருந்ததி உள்ளுக்குள் உடைந்து போனாள்.
இருந்தும் அருந்ததி அரவிந்தனில் வைத்திருந்த பிரேமை காரணமாக இதைப்பற்றிய எந்த விபரமும் யாருக்கும் தெரியாமல் தனக்குள் புதைத்துக் கொண்டாள்.
தொடர்ந்து வந்த நாட்கள் அருந்ததியின் வாழ்வில் துயரமானவை.
சில நாட்களிலேயே அரவிந்தனின் இயலாமை அவனை மனஅழுத்தத்துக்கு உள்ளாக்கிளது.
அவன் தேவையின்றி அருந்ததியை குறை கூறினான்.
எடுத்ததெற்கெல்லாம் எரிந்து விழுந்தான்.

 

அவனது இயலாமையே ஒரு வெறியாக மாறி அவனை இனம் புரியாத எரிச்சல் ஆட்கொண்டது.
ஒரு நல்ல தோழியாகக் கூட அவளை ஏற்றுக் கொள்ள அவனது மனம் இடம் கொடுக்க மறுத்தது.
அருந்ததியின் மனதில் கோபம் வேகம் எல்லாம் குறைந்து சலிப்பும் வெறுமையும் குடி கொள்ளத் தொடங்கியது.
எல்லாம் பழகி விட்டதால் எதிலும் புதுமை தெரியவில்லை.
கண்களில் ஒளியின்றி காட்சி தெளிவற்றதாகி விடுவதுபோல் ஒரே படகில் பயணத்தை ஆரம்பித்த அரவிந்தனும் அருந்ததியும் இறுதியில் இல்லறம் என்ற பிணைப்பில் இருந்து விடுதலை பெற்று வௌ;வேறு பாதையில் பயணப்பட ஆரம்பித்தனர்.
மனக் கண்ணில் நிழலாக வந்துபோன நினைவுகளை கலைத்தாள் அருந்ததி.
சுற்றி இருந்தவர்களின் கலகலப்பான பேச்சும் உற்சாகமும் அருந்ததியையும் தன்னிச்சையாக் தொற்றிக் கொண்டது.
அருண் அருந்ததியை நோக்கி வருவதை ஜனனி அவதானித்தாள்.
'அருந்ததி அருண் உன்னோட கதைக்கத்தான் வாறான். நீ கதைத்துக்கொண்டிரு. நான் சரோவோட கதைத்துப் போட்டு வாறன்' சொல்லியபடி ஜனனி விலகிச் சென்றாள்.
'என்ன அருந்ததி என்றும் பதினாறா? உங்கள் இளமையின் ரகசியம் என்னவோ'? பாதி கேலியும் மீதி கிண்டலுமாக அருந்ததியை சீண்டினான்.
'அருண் இந்தக் கேலிதானே வேணாம் என்கிறது. இளமைக்காலம் எங்கோ ஓடி மறைந்து விட்டது. இப்ப திரும்ப வா என்றால் வரவா போகுது.'
அருணின் வாழ்வில் ஏற்பட்ட இழப்பு பற்றி ஜனனி மூலம் அருந்ததி அறிந்திருந்தாள்.
அருண் தன் ஒரே மகனின் திருமணத்தின் பின் தனியாகத்தான் வாழ்ந்து வருகிறான்.
வசதி வாய்ப்புக்கும் குறையில்லை.
அவனும் தன் துயரங்களை வெளியே காட்டாமல் மனதுக்குள் போட்டு மூடி மறைத்திருந்தான்.
'அருந்ததி நீர் எப்படி இருக்கிறீர்?'
'நான் ஓகே நீங்க எப்படி?'
'எனக்கு அந்த பசுமையான காலங்கள் திரும்ப வராதா என்று ஏக்கமா இருக்கு' விழிகளில் கனவுகளுடன் அருண் அருந்ததியை ஏறிட்டான்.
அருந்ததி அவனது பார்வையை சந்திக்க திராணியற்று பார்வையை பக்கத்திலிருந்த பூங்கொத்தை ரசிப்பதாக பாவனை செய்தாள்.
'அருந்ததி உங்கட வாழ்க்கை எப்படி போகுது'
'அருண் எனக்கு இப்ப இந்த வாழ்க்கை பழகிப்போச்சு. வேலை வீடு நட்பு என்று எனது உலகம் பரந்தது.'
'அப்படியென்றால்?' அருணின் மனதில் சிறு சலனம்.
இளமைக்காலத்தில் இழந்த உறவு முதுமையிலாவது தொடராதா என்ற ஏக்கம்.
நான்கு சுவர்களுக்குள் தனிமையில் தன் வாழ்வின் எதிர்காலம் பற்றிய பயம் அருணையும் இப்பொழுதெல்லாம் அச்சுறுத்த ஆரம்பித்திருந்தது.

 

அருந்ததிக்கு அருணின் மனதில் ஓடும் எண்ணங்கள் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்த,
'என்ன அருண் கடுமையான யோசனை?'
'அருந்ததி...'ஏதோ சொல்ல முயன்றவன் தன் மனஉணர்வுகளை தொடர முடியாமல் அருந்ததியை ஏறிட்டான்.
'அருண் நட்பு நட்பாகவே இருக்கும்வரை எந்த பிரச்சனையும் இல்லை.'
அருண் புரிந்து கொண்டான்.
நட்பு தன் எல்லைகளைத் தாண்டி உரிமையை எடுத்துக் கொள்ளும்போது அங்கு சலனங்களும் சபலங்களும் ஏற்படும் என்று எங்கோ படித்தது ஞாபகத்தில் வந்தது.
அருந்ததி தெளிந்த மனதுடன் பேசிய பேச்சு அருணின் மனதில் சிறிது ஆசுவாசம் தந்தது.
சிட்டுக்குருவி தன் இறக்கைகளை உதிர்க்க என்றுமே விரும்புவதில்லை.
நினைவுகளில் இருந்து விடுபட்ட அருந்ததி சாளரங்களை திறந்து வைத்தாள்.
மெல்லிய காற்று இதமாக உடலை வருடியது.

 

-- xxx --- xxx --- xxx ---

Edited by Kavallur Kanmani

  • கருத்துக்கள உறவுகள்

அழகாக கதை சொல்லியுள்ளீர்கள்...!

 

அருந்ததி தனக்கேற்ற பிறிதொரு துணையைத் தேடி அடைந்தால் கூடத் தப்பில்லை..., அரவிந்தன் தன் இயல்பு தெரிந்தே அப்பெண்ணை ஏமாற்றியுள்ளார். அது தப்பு...!

அடுத்து அருந்ததியைச் சந்திக்கும்போது சொல்லுங்கள்...! டேக் இட் ஈசி .. யா , கெட் வன் பியான்சி ... யா...! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நேரத்தை ஒதுக்கி வாசித்து கருத்தெழுதியமைக்கு நன்றிகள் சுவி. அருந்ததி வாழ்க்கையில் மீண்டம் வசந்தம் வர வேண்டுமென்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பும் ஆனால் அருந்ததி விரும்ப வேண்டுமே?

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நேரத்தை ஒதுக்கி வாசித்து கருத்தெழுதியமைக்கு நன்றிகள் சுவி. அருந்ததி வாழ்க்கையில் மீண்டம் வசந்தம் வர வேண்டுமென்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பும் ஆனால் அருந்ததி விரும்ப வேண்டுமே?

 

அருந்ததி தன் வசந்ததை தானே தேடிக் கொள்ள வேண்டும் ...எனையோரால் கொடுக்க முடியாது

Edited by putthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் மனதை தொட்டுவிட்டது கதை . உண்மை கதையாக இருக்க கூடாது என்பதே என் பிரார்த்தனை .

அழகாக சொல்லியிருக்கிறீர்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கும் பாடல் பதிவுக்கும் நன்றிகள் புத்தன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எம்மைச் சுற்றி எத்தனையோ கதைகள் இப்படி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு புரியாத பல விடயங்களை வைத்து பெண்ணையோ ஆணையோ குறைகூறுவோம் அல்லது விட்டுக்கொடுத்து வாழத்தெரியாது புரிந்துணர்வு இல்லை என்று புறம் பேசுவோம். எத்தனையோ பெண்கள் இப்படியான நிகழ்வுகளை எதிர்கொள்வதை நான் அறிந்திருக்கிறேன். அருந்ததிகள் பலர் இன்றும் எம்முடன் வாழ்கிறார்கள். வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள் மீரா குகன்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கதை சொல்லி நீங்கள் அக்கா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றிகள் சுமே.

  • கருத்துக்கள உறவுகள்

அருந்ததி அருணை ஏற்க மறுக்கும் நிலைக்கு வரக் காரணங்கள் எவை?

 

அருந்ததியின் கடந்த காலக் கசப்பான வாழ்க்கையின் பட்டறிவா?

 

அல்லது காலம் கடந்தும் எமது சமுதாயம் கட்டிக்காத்து வைத்திருக்கும் சம்பிரதாயம் என்ற மாயையா?

 

வீடு, வேலை, நட்பு, பரந்த உலகம் எனத் தங்களையே ஏமாற்றிக்கொள்ளும்
பெண்களின் பிற்போக்குச் சிந்தனையா?

என உங்களின் கதை பல கேள்விகளையும் விட்டுச் செல்கின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காரணங்கள் பலவாக இருந்தாலும் காலம் கடந்து விட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். சமுதாய வேலிகளைத் தாண்டுவது எல்லோருக்கும் இலகுவாக இருப்பதில்லை. இன்றைய காலக்கட்டத்தில் விவாக ரத்துக்களும் மறுமணமும் இலகவாக நடைபெற்றுக்கொண்டிருந்தாலும் அவரவர் சுய விருப்புக்களை மதிக்கத்தான் வேண்டியுள்ளது. படித்து கருத்தெழுதியமைக்கு நன்றிகள் வாத்தியார்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறுகதையாக எழுதி முடித்துவிட்டு கதைக்கான முடிவைக் கொடுத்துவிட்டதாக நினைக்கிறீர்கள். இந்தக்கதையைப் பொறுத்தவரையில்

1. அருணின் இயலாமை

2. அருந்ததியின் தனிமை வாழ்வு

3. அரவிந்தனின் மனவிருப்பு

இந்த 3 விடயங்களுக்கும் கதாசிரியர் முன்வைத்த முடிவு எனக்குள் கேள்விகளாக முளைக்கின்றன. அருணின் இயலாமை அதற்கான தீர்வு இறக்கும்வரையில் குடும்ப சுகம் இன்றியே தனக்குள் அருண் மனநோயாளியாக வாழ்வதா? அருந்ததி வசந்தமான வாழ்வின்றி தனிமை வெறுமை சூழ முதுமையில் பேச்சுத்துணைக்குக்கூட ஆட்கள் அற்ற  தனிமைக்குள் மருகுவதா?  அரவிந்தன் வாழ்கையை ஓரளவுக்கு கடந்திருந்தாலும் அங்கும் தனிமையே குடி கொண்டிருக்கிறது. ஆக இந்த முக்கோணத்தில்  மூவரும் தனிமையுடனும் வெறுமையுடனும் முதுமை எனும் பருவத்தை கடக்கவேண்டிவர்களாக இருக்கிறார்கள். மனங்களில் சலனங்கள் என்பது முதுமையில் வெறுமைக்குப்பயந்தும் மீளத் தோன்றுவதில் பிழை இருப்பதாகத் தெரியவில்லை. இங்கு புறக்காரணிகளே உயிர்களின் தேடலை மறுக்கிறது. தனிமை முதுமை வெறுமை இவற்றோடு வாழ்ந்து முடிக்க கண்களுக்குப் புலப்படாத சமூகக்கட்டுகள் இறுகிக்கிடக்கின்றன. கட்டவிழ்த்துவிட கதாசிரியர் தயாராக இல்லை. வந்தா வாசித்துவிட்டு போக வேண்டியதுதானே இப்படியெல்லாம் கேள்வி வைக்கக்கூடாது என்று ஆசிரியர் எண்ணமாட்டார் என்பதாலேயே நன்றாக இருக்கிறது என்பதற்கு அப்பால் கொஞ்சம் எழுதி உள்ளேன் கி கி.^_^

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகாரா நீங்கள் பாத்திரங்களின் பெயர்களை மாற்றி விட்டீர்கள். அரவிந்தனும் அருணும் உங்கள் பதிவில் ஆள்மாறாட்டம் பெற்றுள்ளனர். அதைவிட கதாசிரியர் கதையைச் சொல்லலாம் முடிவுகளை நிர்ணயித்து வரையறைக்கள் அடைக்க முடியாது, முடிவுகள் சிலசமயம் சமுகுக் கட்டுக்குள் முடங்கித்தான் கிடக்கின்றன. கட்டவிழ்த்துவுிட கதாசிரியர் தயாராக இரந்தாலும் கதையின்முடிவு பல சமயங்களில் எங்கள் எதிர்பார்ப்பக்களையும் பொய்யாக்கிவிட வாய்ப்புள்ளது, நன்றிகள் சகாரா.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஓ.... பெயரை மாற்றிவிட்டேனா...?!!!! மன்னிக்கவும்.

இப்படிப்பட்ட பல விடயங்கள் செப்பனிடப்பட்டு தோல்வியில் முடிந்திருக்கின்றன. காரணம் சரியான புரிதல்களோடு மீள்வாழ்க்கைக்குள் நுழையாமல் வாழ்க்கை அமைக்கப்பட்டால் போதும் என்பதாலாக இருக்கலாம் அத்தோடு பழிவாங்கும் அவசரம் அல்லது பருவக்கிளர்ச்சி இப்படியாக வகைப்படுத்தலாம் அல்லது உறவுகளின் அழுத்தம் இதில் ஏதோ ஒன்றாக இருக்கலாம் அத்தகைய வாழ்வு நீண்டகாலத்திற்குப்பயணிக்காமல் சின்னாபின்னப்பட்டவிடும். எங்கள் சமூக அமைப்பும் சரியான ஒருவரைத் தேர்ந்தெடுக்க அவகாசம் அளிப்பதில்லை என்பதே கசப்பான உண்மை.அந்தரங்கத்திற்குள் பாரிய தோல்விகளைச்சந்தித்து சகித்து வாழ்ந்து முடித்தே பழகிப்போனவர்கள் மனம்விட்டு பேச வாய்ப்புகள் கிடைத்தாலும் மறுத்து உள்ளொடுக்கம் கொண்டு வாழ்பவர்கள்......... இப்படியாக வெளியே தெரியாமல் வாழ்கிறவர்களுக்கு தோல்விகளை வெற்றிகளாக்க வாய்ப்புகள் கிடைத்தாலும் பயன்படுத்தும் திறன் குறைவே..இவ்விடயத்தில் மட்டுந்தான் வெற்றிபெறுபவர்களைப்பற்றி எவரும் பேசுவதில்லை தோல்வி அடைபவர்களையே எப்போதும் உதாரணமாக எடுத்து எதிர்காலம் என்ற அச்சத்தை பெரிய அளவில் உருவாக்கி விடுகிறார்கள் :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.