Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீலக் கடலின் ஓரத்தில்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீலக் கடலின் ஓரத்தில்...

 

கூட்டைவிட்டு விடுதலையாகிய ஒரு சிட்டுக்குருவியைப் போல மேலே மேலே இயந்திரப்பறவை இறக்கை விரிக்க கனடாவில் எல்லைகள் புள்ளிகளாக கட்டிடக்காடு, வாகன நெரிசல், வேலைப்பளு, நாளைய ஏக்கம், அனைத்தையும் மூட்டைகட்டி ஓர் மூலையில் போட்டு விட்ட உணர்வுடன் வெட்ட வெளியில்; கொட்டிக் கிடக்கும் கொள்ள அழகை ரசித்தபடி மனம் பரவசத்தில் பரபரக்க வேகமெடுக்கும் வெஸ்ற் ஜெட் விமானத்தினுள் நாம்.

 

WestJet-737-MAX-over-Montreal.jpg

 

விமானத்தினுள் அமர்ந்திருந்த அனைவருமே தம் விடுமுறையை கழிக்கச் செல்பவர்கள் என்றபடியால் அனைவர் முகத்திலும் உல்லாசமான மனநிலை.
எமது குடும்பத்தினர் அறுபது வயது தொடக்கம் ஆறுமாதக் குழந்தைவரை ஏறக்குறைய இருபத்திஜந்து பேர்வரை விமானத்தில் பறந்து கொண்டிருந்தோம். விமானம் புறப்பட ஆயத்தமாகும் முன்பே என் தம்பியின் மகன் விமான ஓட்டுனரிடம் எம் குடும்பப் பெயரைச் சொல்லி நாம் ஒரு பெரிய குழுவாக உல்லாசப் பயணம் மேற்கொண்டிருப்பதை தெரியப்படுத்தி விட்டார். விமானத்தில் பாதுகாப்பு விளக்கங்களெல்லாம் முடிந்ததும் எம் குடும்பத்தினரின் உல்லாசப்பயணம் பற்றி ஒலிபரப்பாகியது. இளசுகள் அதிகம் கொண்ட குழுவென்ற படியால் உற்சாகத்திற்கு குறைவில்லை.

கியூபா மற்றன்சஸ் நகரில் உள்ள வறடிறோ விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியது. வெப்பநிலை 25 பாகை. தென்னை மரங்கள் தலையாட்டி வரவேற்றன.

பொதிகள் அனைத்தையும் மோப்பநாய்களின் உதவியுடனும் வழக்கமான உடல் பரிசோதனை, கமரா பரிசோதனை என்று ஏகப்பட்ட பரிசோதனைகள். குழந்தையின் பால் சூடாக்கும் கருவி எம் பெட்டியில் இருந்தது. பெட்டியை திறந்து பார்த்த இளம் பெண் பரிசோதகர் அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார். சந்தேகத்துடன் தலைமை அதிகாரியை அழைத்தார். அங்கு வந்த தலைமை அதிகாரி அந்தப் பெண்ணை தமது மொழியில் கடுமையாகப் பேசியதும் அப்பெண்ணின் முகம் வாடியதைப் பார்க்க எமக்கு கவலையாக இருந்தது. ஆனாலும் நாம் பலமுறை அது குழந்தையின் பால்புட்டி சூடாக்கும் கருவி என்று சொல்லியும் அவர் புரிந்து கொள்ளாதது அவரது பிழைஎன எண்ணியபடி நாம் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தோம்.
வெளியே எம்மை ஏற்றிச் செல்ல பெரிய அளவிலான சொகுசுபஸ் வண்டி காத்திருந்தது. அதற்குள் வாகன ஓட்டியைத் தவிர வழிகாட்டி ஒருவர் எம்மை வரவேற்று தமது நாட்டின் நடைமுறைகள் சிறப்புக்கள் வரலாறு பணமாற்று மற்றும் பல விடயங்களை சுருக்கமாக நகைச்சுவையுடன் விபரித்துக் கொண்டு வந்தார்.
எங்கள் ஊர், எங்கள் மண், எங்கள் குடும்பம் என்ற சின்ன வட்டத்திற்குள் சுற்றிச் சுற்றி செக்கு மாடுகளாய் சுழன்ற நாம் இன்றைய பொழுதுகளில் உலகின் எல்லாத் திசைகளிலும் பரந்து விரிந்து பல இனம் மொழி கலாச்சாரம் பழக்கவழக்கம் என்று எல்லாவற்றிலும் எம் எல்லைகளைத் தாண்டி எம் அடுத்த தலைமுறையினருக்கு ஈடு கொடுக்கும் வகையில்; எம்மை நாமே மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயச் சூழல்.
கடற் குளியலில் நீச்சலுடை அணியவும் நீச்சல் குளத்தில் நீந்தி மகிழவும் உல்லாசமாய் பல மென் பானங்களைச் சுவைக்கவும் கணவன் மனைவி, காதலன் காதலி, நண்பன் நண்பி கை கோத்து காலாற நடக்கவும் இன்று நம்மவர் தம்மையே மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
தாயகத்தில் சில கடற்கரைகளில் இங்கு நாம் பண்டிகைகளுக்கு அணியும் பளபளக்கும் சுடிதார் போன்ற உடைகளுடன் இளம் பெண்கள் கடலில் குளித்ததைப் பார்த்த என் பிள்ளைகள் திகைத்தனர். இன்று அங்கும் நிலமைகள் மாறிவிட்டன.

கியூபாவின் பழங்கள், கடலுணவு, வாழை, தென்னை போன்ற மரங்கள் பூ மரங்கள் அனைத்தும் எம் தாயகத்தின் மறுபதிப்பாக இருந்தன. சுவையான மாம்பழம் கொய்யாப்பழம் பாப்பாப்பழம் போன்றவையும் போகன்வில்லா, கொன்றை, செவ்வரளி, போன்ற பல பூமரங்களும் வடலி தென்னை என்று எம் மண்ணின் வாசனை மனதெங்கும் தூவானமாய்...

கண்ணுக்கெட்டிய தூரம் விரிந்து கிடந்தது நீலக்கடல்.

 

நீலக்கடலும் நீள்விசும்பும் எங்கே முடிவு எங்கே தொடக்கம் என்றில்லாமல் எல்லைகளற்ற வெளியில் இரண்டுமே சங்கமித்துக் கிடந்தன.
அலைக்கரங்கள் தழுவித் தழுவி முத்தமிட்டு ஆனந்தமாய் ஆர்ப்பரித்து கைகொட்டிச் சிரிக்கும் அழகு மங்கையாய் கடற்கரை. வெண்மணற் பரப்பில் விரித்து வைத்த சாய்ந்த இருக்கைகள், நிழற் குடைகள், கடற்குளியல் இப்படியோர் உலகில் எந்தத் தொல்லைகளுமற்று இருந்து விட மாட்டோமா என மனம் ஏங்கியது.

 

11406985_10206871216728551_4722526910069

 

 

11392937_10206871163127211_5148234326888

 

பகல் முழுவதும் ஓய்வாய் நடைப்பயிற்சி உல்லாச பானங்கள் உவப்பான உணவுகள் இரவு நிலவெறிக்கும் நீலக் கடற்கரையில் அலையோசையின் ஆர்ப்பரிப்பில் மனதிற்கு கிளர்ச்சியாய் உறவுகள் அனைவரும் வட்டமாய் அமர்ந்து இசையின் பின்னணி ஒலியில் கைதட்டிப் பாட்டுப்பாடி மகிழ்ந்த அந்த நிமிடங்கள் எம் வீட்டு முற்றமும் நிலாச்சோறும் எம் அன்னை தந்தையுடன் அமர்ந்திருந்து எம் தந்தை ஆமோனியம் இசைக்க நாம் அனைவரும் பாடிக் கழித்த பொழுதுகள் மனதில் பவனி வந்தது.

வெள்ளி நிலா விளக்கேற்றி இருந்த அந்த இரவுப் பொழுதில் வெள்ளை மணல் கொள்ளை அழகு. அலையோசையின் ஆர்ப்பரிப்பு மனதில் துள்ளும் உணர்வு. வானில் ஒளிரும் தாரகைகள் எமைத் தாலாட்டும் பொன்னூஞ்சலாய்.
எமது பிள்ளைகளுடன் கழிக்கும் இவ் இனிய தருணங்கள் எப்பொழுதாவதுதான் எமக்குக் கிடைக்கும். இனிவரும் காலங்கள் அவர்களுக்கானது. இவ்வினிய தருணங்களை, மகிழ்வான நினைவுகளை, மறக்கமுடியாத பொழுதுகளை அவர்களிடம் நாம் விட்டுச் செல்வது அவசியம்.
பாரவண்டிகளாய் சுமைகளைச் சுமந்து சுமந்து சோர்ந்து கிடக்கும் உள்மனம் சுகமாய் வீசும் கடற்காற்றில் பட்டாம் பூச்சிகளாய் சிறகடிக்கத் தொடங்கின. 

11406947_10206871216288540_7612084220031

 

குளுகுளு என்று வீசிய தென்றல் எம் மண்ணில் மணம் சுமந்த சாயலாய்.
தலையாட்டும் தென்னை மரங்களின் அழகை ரசித்தபடி கரை தவழும் அலைகளில் கால் நனைத்தபடி மணல் வீடு கட்டும் மழலைகளாய் மாறிய அந்த மம்மல் பொழுதுகள்; எம் இளமைக்கால நினைவுகளை மனதில் மத்தளமிட்டபடி..

 

பல கண்டங்களில் வசிக்கும் முகம் தெரியாத பல இன மத நிற மக்கள் ஒப்பனைப் புன்னகையுடன் வணக்கம் சொல்லும் பாங்கும் அந்த நாட்டு மக்கள் அனைவரும் 'ஓலா' என்று வணக்கம் சொல்லிப் புன்னகைக்கும் அழகும் இன்னும் எம் காதுகளில் ரீங்காரமிட்டபடி உள்ளன.
பீனகொலாடாவும் சம்பைனும் பல வித மென் பானங்களும் குளிர் பானங்களும் கோப்பி தேனீர் மட்டுமன்றி எம் தாயகத்தில் உள்ளதுபோல் தென்னை மரங்களில் இருந்து உடன் பிடுங்கப்படும் இளநீரும் அனைவரின் தாகம் கீர்க்க உதவின.
பணியாளர்கள் ஒவ்வொருவரும் என்ன வேண்டுமென்று எந்த நேரமும் கேட்டுக் கேட்டு உபசரித்தனர்.
சுவையாக உணவுண்ணும் விருப்புடன் நாம் எடுத்துச்சென்றிருந்த கட்டைச் சம்பலும் பொரித்த மோர் மிளகாயும் எம் உணவின் சுவை குறையாமல் சாப்பிட எமக்குதவியது.

 

11407233_10206871186407793_6894379378147

 

 

11406863_10206871325211263_3322294224974

 

நாம் தங்கி இருந்த விடுதி ஊழியர்கள் கவனிப்பு மிக அருமையாக இருந்தது. நாள் முழுவதும் ஓடிஓடி வேலை செய்தாலும் முகத்தில் சிறிதும் களைப்போ அலுப்போ தெரியாமல் வேலை செய்வதில் ஒருவரை ஒருவர் சளைத்தவராகத் தெரியவில்லை.
விடுதியின் தூய்மையும் நன்றாக இருந்தது.
அன்பளிப்புப் பொருட்களோ பணமோ பெறும் ஒவ்வொரு பணியாளரும் மிகவும் மகிழ்வுடன் நன்றி சொன்னார்கள்.
ஜம்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட மோட்டார் வண்டிகள் இன்றும் பாவனையில் இருக்கின்றன.
அதில் பயணிக்கும் போது தட்டிவானில் சென்றது ஞபகத்தில்; வந்தது.
'சந்தோசம் தரும் சவாரி போவோம் சலோ சலோ' என்று பாடிய படி குதிரை வண்டிச் சவாரி சென்றதை மறக்க முடியாது.
கருநீலத்தில் அரைவட்டமாய் வானைப் பிரித்த நீலக்கடல்.
கண்ணுக்கெட்டிய தூரம் நீர்ப்பரப்பு.
வெளிர் நீலமாய் கரையோரம்.
அலைதவழும் கடற்கரை.
வெண்மணலில் விதவிதமாய் நீச்சலுடைத் தாரகைகள்.
நீச்சல் தடாகத்தில் நீந்தும் தாமரைகள்.
கொழுத்தும் வெய்யில்.
வியர்க்கும் உடம்பு.
உஸ்ணம் விரட்டும் குளிர்பானங்கள்.
ஆனந்தமாய் கழிந்த அந்த சந்தோசப் பொழுதுகளின இனிய நினைவுகளுடன்;.....அடுத்த விடுமுறை நாட்களுக்காய்.......

 

blau_varadero_4410261e450759f42a469a1420

  • கருத்துக்கள உறவுகள்

விவரணம்  மிக அருமை ... கண்டிப்பாக் வாழ்வில் செல்ல வேண்டி இடம் .  சென்ற வருடம் நானும் இது போன்ற ஓரிடத்துக்கு சென்று இருந்தேன்.  மனது ரிலாக்ஸ் ஆகும் ஓரிடம்.  எல்லோரும் ஒரு தடவையாவது  சென்று வாருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் கியூபாவின் விவரணப் படம் ஒன்று பார்த்தேன். பெரிய பெரிய கட்டடங்களில் எல்லாம் பிடல் காஸ்ரோ, சேகுவேரா போன்றவர்களின் உருவங்களை பிரமாண்டமாய் கம்பிகளில் செய்து பொருத்தியிருந்தார்கள்.

வீதிகளில் எல்லாம் முந்தைய மாடல் கார்கள்களான பிளைமவுத், ஓப்பல், வைக்ஸ்சோல் , செவர்லட், டொட்ச் எனப் பெரிய பெரிய கார்கள்தான் வீதி முழுதும்....!

 

 

பகிர்வுக்கு நன்றி சகோதரி...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்து கருத்தெழுதிய நிலாமதி சுவிக்கும் விருப்புப் புள்ளியிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான விவரண எழுத்துநடை உங்களுக்கே கைவந்த கலை, காவலூர் கண்மணி!

 

இராவணன் மீசையின் காய்ந்து போன பூக்கள், காற்றில் உருளும்.. கண்ணகையம்மன் கோவில் கடற்கரையையும்.... பண்ணைப் பாலத்தின் ஓரத்துக் களங்கண்டிகளில் காற்றாடும் கடற்காகங்களையும்.. உங்கள் விவரணம் கண் முன் கொண்டு வந்து சென்றது!

 

மெல்லிய அலைகளின் நகர்வுகளுக்குள்ளும், சிந்துகின்ற நீர்த்துளிகளின் ஓசைகளுக்குள்ளும் .. புகுந்திருக்கும் 'அசைவுகளின் ஆவர்த்தனங்களுக்குள்'.... அகிலத்தின் அசைவுகள் அத்தனையும் மறைந்திருக்கின்றது!

 

அதனைப் புரிந்து அனுபவிப்பவன்... அகிலத்துடன் ஒன்றிப்போகின்றான்!

 

அவனுக்கு மதமோ....சம்பிரதாயமோ... எதுவுமே தேவையில்லை!

 

நன்றி..! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் விவரணத்திற்கு அழகாகப் பதிவிட்ட உங்கள் எழுத்தைப் பார்த்த பொழுது மிகவும் மகிழ்வாக இருக்கிறது. அந்த பண்ணைக்கடலையும் பனங்கூடல்களையும் அழகிய கடற்கரைகளையும் எம்மண்ணின் மணத்தையும் நாம் மண்ணோடு போகும் வரை மறக்கமுடியாது. அலைகளின் அசைவுகளுக்குள்ளும் நீர்த்துளிகளின் ஓசைக்குள்ளும் அந்த ஈரநினைவுகள் எம்மை உரசியபடியே இருந்தன. படித்து பதிலிட்டமைக்கு நன்றிகள் புங்கையூரன்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்புத்தோழி கண்மணியின் எழுத்துக்குள் நான் எதிர்பார்ப்பது அதிகம். கிடைப்பது...... தன்னைச்சுற்றி ஒரு வட்டத்தைப்போட்டு அதற்குள் முடங்கும் படைப்பாளியாகத்தான் உலா வருகிறார். தோழிக்குள் இருக்கும் திறமைகளை சகபெண்ணாக நின்று பார்த்து வியப்படைவது நமக்குள் மட்டுமானதாகவே இருக்கிறது. நல்லதோர் பதிவு பயணக்கட்டுரையை கச்சிதமாக சிக்கனமாக எழுதி வாசிப்பவர்களை அலுப்படைய விடாமல் நிறைவாக்கி விட்டீர்கள். உங்கள் பதிவைப் பார்த்தபின்னர் என்னுடைய பயணக்கட்டுரையைத் தொடராக எழுதி வாசிப்பவர்களை அலுப்படைய வைத்துவிட்டேனோ என்று எண்ணத் தோன்றுகிறது. இங்குமங்குமாக சிதறிக்கிடக்கும் தொடர்களை ஒழுங்குபடுத்தி பதிவிடவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கிறது இந்தப்பதிவு. அனுபவக்கட்டுரைக்கும் எனக்குள் உருவாக்கிய நேர்த்திக்கும் நன்றி தோழி :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகாரா நீங்கள் என்னைத் தோழி என்று அழைத்தாலும் நான் எனது அகவைக்கும் அனுபவத்திற்கும் ஏற்றாற்போல்தான் என் படைப்புக்களை உருவாக்க முடிகிறது. உடைந்து விட்ட சிறகுகளை ஒட்ட வைத்தபடி உயரப்பறக்க முயன்றாலும் வடு தந்த வலி என்னுடன் நிரந்தரமாக நிலைத்து விட்டதை என்னால் மறுக்க முடியவில்லை. உல்லாசப் பயணம் வெளியே உல்லாசமாக இருந்தாலும் உள்ளுக்குள் என் உயிர் உருகுவதை வெளியே கொட்ட முடியாமல் விழுங்கிக் கொள்கிறேன். இது இறைவன் போட்ட வட்டம். அதனால்தான் நீங்கள் எதிர்பார்ப்பதை உங்களுக்ககுத் தர முடியவில்லை. உங்கள் நேரத்தை ஒதுக்கி படித்து கருத்தெழுதியமைக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

உறவினர்கள் சூழ, 25 பேர் விமானத்தில்... உல்லாசப் பயணம் சென்றதை கேட்க எமக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
இதற்கு நீண்ட கால திட்டமிடல் இருந்திருக்கும் என்று நம்புகின்றேன்.
உல்லாசப் பயணத்தின் போது.... மோர் மிளகாயும், கட்டாச் சம்பல் போத்திலையும் கொண்டு போனதையும் நினைக்க சிரிப்பு வந்து விட்டது.
வித்தியாசமான, அனுபவ பயணக் கட்டுரையை... எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கண்மணி அக்கா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது சகோதரர்கள் இருவரைத்தவிர ஏழுபேர் கனடாவில் இருக்கிறோம். ஒவ்வொரு வருடமும் நாம் ஒன்று சேர்ந்து விடுமுறையைக் கழிப்பதற்கு கொட்டேஜ் போவோம். இம்முறை நீண்ட நாள் ஆயத்தத்துடன் அனைவரும் வேலைக்கு விடுப்பு எடுத்து கியூபா போனோம். மிகவும் சந்தோசமான நாட்கள். விசேடமாக பிள்ளைகள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து தமது உறவைப் பலப்படுத்த இப்படியான சுற்றுலாக்கள் உதவுகின்றன. உங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றிகள் தமிழ்சிறி.

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அக்கா.. ஒவ்வொரு வருடமும் உங்க குடும்ப ஒன்றுகூடல் படம்பார்த்து பொறாமையாக இருக்கும்.. சகோதரங்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேணும்.. கண்ணுபடக்குடாது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அப்பா எம்மைவிட்டுப் பிரியமுன் மூத்தமகளான என்னிடம் விடுத்த விண்ணப்பம் சகோதரர்கள் அனைவரும் ஒற்றுமையாக சந்தோசமாக இருக்க வேண்டும் என்ற ஒன்றுதான். அவர் எம்மைப் பிரிந்து இருபத்துமூன்று ஆண்டுகளாக அந்த விருப்பத்தை நாம் ஒன்றுகூடும் நேரத்திலெல்லாம் ஞாபகப்படுத்த தவறுவதில்லை. ஒற்றைக் கண்ணில் அடிபட்டால் பதினெட்டுக் கண்களில் வலியெடுக்கும்..... வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் சுபேஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.