Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

கண்ணன் - சிறுகதை

 
 

சிறுகதை: ஷான் கருப்பசாமி, ஓவியங்கள்: ஸ்யாம்

 

லாரி விரைந்து கொண்டிருந்தது. பரமசிவம் வெளியே தலையை நீட்டி புளிச்சென்று வெற்றிலை எச்சிலைத் துப்பினான். அது காற்றில் சாரலாகி மறைந்தது. இருபது வருடங்களாக லாரி ஓட்டுகிறான். இந்தியாவின் எல்லா மூலைகளுக்கும் எல்லாவிதமான சரக்குகளையும் ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறான். காதை மறைத்துக் கட்டியிருந்த உருமாலைக் கட்டு குளிருக்குக் கதகதப்பாக இருந்தது. நாக்பூரிலிருந்து கிளம்பி ஒரு மணி நேரம்தான் ஆகியிருந்தது.

p46a_1519739071.jpg

இன்னும் பிலாஸ்பூர் வரை செல்லவேண்டியிருந்தது. பீடி கையிருப்பு வேறு குறைவாக இருந்ததால் இன்னொரு பீடியைப் பற்ற வைக்கும் யோசனையைக் கைவிட்டான். தவிர அவனுக்கு இன்னொரு முக்கியமான வேலை இருந்தது. ஆளரவமற்ற இடம் ஒன்றைத் தேடிப் பிடிக்க வேண்டும். அதற்காகவே தேசிய நெடுஞ்சாலையை விட்டு இவ்வளவு விலகி லாரியை ஓட்டிக்கொண்டிருந்தான். கண்ணில் கடைசி வாகனம் தென்பட்டு அரை மணிநேரம் இருக்கும்.

பக்கத்தில் நல்ல தூக்கத்தில் இருந்த கண்ணனை ஓரக்கண்ணால் பார்த்தான். முப்பது வயதுக்கு மேல் இருக்கும். களையான கறுப்பு நிறம். ஐந்து நாள்கள் முன்பாக அவனைப் பார்த்த போது லாரி புக்கிங் ஆபீஸ் வாசலில் குத்த வைத்து அமர்ந்திருந்தான். தாடியும் மீசையும் புதர் போல் மண்டியிருந்தன. தலை சிக்கடைந்து கிடந்தது. அவ்வப்போது தலையைச் சொறிந்துகொண்டிருந்தான்.

“எந்திரிச்சுப் போடா.. யாவாரம் பண்ற எடத்துல வந்து...”

பரமசிவம் அவனை விரட்டத் தொடங்கிய போது செந்தாமரை இடைமறித்தான். அவன் அங்கே புக்கிங் ஏஜன்ட்.

“அட தொரத்திப் போடாத... எங்கியாவது ஓடீட்டான்னா எழுவத்தஞ்சாயிரம் நீதாங் குடுக்கோணும்... பாத்துக்க..”

p46b_1519739090.jpg

பரமசிவத்துக்கு உடனே புரிந்தது. இது ஒன்றும் புதிதல்ல. மோட்டார் தொழிலில் நடப்பதுதான். இப்படியான நிலைமையில் இருப்பவர்களை லாரிகளில் ஏற்றிச் சென்று காட்டுப் பகுதிகளிலோ கண்காணாத இடங்களிலோ இறக்கிவிட்டு வரவேண்டும். கணிசமான தொகை கிடைக்கும். லாரி முதலாளியும் ஏஜன்ட்டும் டிரைவரும் பிரித்துக்கொள்வார்கள். பரமசிவம் இதுவரை அப்படி ஒரு காரியத்தில் ஈடுபட்டதில்லை. அது அவன் மனதுக்கு ஒப்பவில்லை. சிலர் கேட்டபோது மறுத்திருக்கிறான். செந்தாமரை எதற்கும் தயங்காத ஆள். எனவே இந்த மாதிரி வேலைகள் அவனைத் தேடி வரும்.

“யாரோ சித்தப்பங்காரன்னு கூட்டீட்டு வந்தான். நாந்தான் கிருஷ்ணபரமாத்மான்னு சொல்லிட்டுத் திரியறானாமா... இத்தனை நாள் அம்மாகாரி எப்பிடியோ கூட வெச்சுப் பாத்திருக்கறா... போன மாசம் அவளும் போய்ச் சேந்துட்டாளாமா.... நீயா நானான்னு சண்ட போட்டுட்டு சொந்தக்காரங்க எல்லாம் கைக்காசப் போட்டுக் கொண்டாந்து உட்டுட்டுப் போயிட்டானுங்க...”

“பாத்தா சாதுவாத்தான இருக்கறான்...”

“அப்பப்ப வெறி வந்து ஆடுவானாம்.. ஒரு மாமங்காரனை வெறகுக் கட்டைல அடிச்சு மண்டையக் கிழிச்சுப் போட்டானாமா... குறுக்க போன அத்தைகாரிக்கும் அடி... ரெண்டு பேரும் ஆஸ்பத்திரியில... போலீஸ்ல கேசு குடுத்தாலும் நிக்காதில்ல.. அதுனாலதான் ஏற்பாட்டுக்கு வந்தாங்க....”

பரமசிவம் யோசனையாக அவனைப் பார்த்தான். பார்த்தால் அப்படி ஆபத்தானவனாகத் தெரியவில்லை. பூனைபோல் இருந்தான். ஒரு மஞ்சள் பையை இறுகப் பிடித்தபடி அமர்ந்திருந்தான். உள்ளே நீளமான குச்சி போல் ஏதோ இருந்தது. ஏதோ முணுமுணுத்தபடி இருந்தான். இவனைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தான்.

“செரி, உனக்கெதுக்கு அதெல்லாம்... நீதான் உத்தமனாச்சே.. இதெல்லாம் பண்ண மாட்டே... லாரி செட்டுல நிக்குது. எடுத்துட்டு லோடு அடிச்சுட்டு வா.. மொதல்ல நாக்பூர் அப்பறம் பிலாஸ்பூர்.. ரிட்டன் அங்க இருந்தே சரக்கு வருது...”

சாவியை எடுத்துக் கொடுத்தான் செந்தாமரை. வாங்கிக்கொண்டு திரும்பியவன் மனதில் ஒரு போராட்டம். பரமசிவனுக்கு மூன்று தங்கைகள். அப்பா அவனுடைய சிறு வயதிலேயே இறந்துவிட்டார். முதலிரண்டு தங்கைகளுக்கும் இழுத்துப்பிடித்துத் திருமணம் செய்தாகிவிட்டது. மூன்றாவது தங்கையின் திருமணம் தள்ளிப் போயிருந்தது. இடையில் தனது  திருமணத்தைப் பற்றியெல்லாம் யோசிக்கவே நேரமில்லை.  இப்போதுதான் ஒருவழியாக மூன்றாவது தங்கைக்கு வரன் அமைந்திருந்தது. கடன் வாங்க இயலும் இடங்களிலெல்லாம் முன்பே வாங்கியாகிவிட்டது. அம்மாவுக்கும் வர வர உடம்பு முடிவதில்லை. நிறைய மருந்து மாத்திரை செலவுகளும். சற்றுத் தொலைவு நடந்தவன் அப்படியே திரும்பினான். செந்தாமரை டீயை ஊதி ஊதிக் குடித்துக் கொண்டிருந்தான்.

“நான் வேணா ஏத்தீட்டுப் போவட்டுமா” என்றான் அவனிடம் தயக்கமாக.

“என்னத்த ஏத்தீட்டுப் போறே.. ” என்றான் செந்தாமரை குழப்பமாக.

“அதா அவனத்தான்...” என்று பார்வையால் சுட்டினான் பரமசிவம்.

“இதென்றா அதிசயமா இருக்குது... நீதாம் பண்ண மாட்டயே இதெல்லாம்...”

பரமசிவம் சில விநாடிகள் தயங்கிவிட்டுச் சொன்னான்.

“கடசியாளுக்குக் கல்யாணம் வெச்சிருக்குது... கொஞ்சம் நெறயாவே கையக் கடிக்குது... கெளம்பறப்பக் கூட அம்மாகிட்ட ஒரே சண்டை...உங்கிட்ட கேக்கலாம்னுதான் இருந்தேன்... இந்த இருவத்தஞ்சாயிரம் கெடைச்சா வெச்சு சமாளிச்சுப்போடலாம்.”

“அட என்னப்பா... நான் கணேசங்கிட்ட வேற சொல்லிப்போட்டனே...” என்றான் செந்தாமரை போலி ஏமாற்றத்தோடு.

பரமசிவம் அமைதியாக நின்றான். செந்தாமரை பலமாக யோசிப்பதுபோல் பாவித்துவிட்டுத் தொடர்ந்தான்.

“செரி, நீயுந் தெரிஞ்ச ஆளாப் போயிட்ட... நான் ஒண்ணு பண்றேன்... கணேசங்கிட்ட ஒரு அஞ்சாயரத்தைக் குடுத்து சமாளிச்சுக்கறேன்... உனக்கு இரவதாயிரம்... பழக்கமில்லாத ஆளு.. பாத்து செரியாப் பண்ணிருவியா?”

பரமசிவத்துக்கு அந்த ஐந்தாயிரத்தைச் செந்தாமரைதான் வைத்துக் கொள்வான் என்று தெரியும். ஆனாலும் தலையாட்டினான். இருபதாயிரம் இன்றைய சூழலில் அவனுக்குப் பெரிய பணம்.
“செரி, நீ போய் வண்டிய லோடு அடிச்சு எடுத்துட்டு வா... நான் இவனுக்குக் கொஞ்சம் சேவு பண்ணிட்டு நல்ல துணிமணி போட்டு வெக்கறேன்... எந்த ரூட்டுல போயி எப்பிடி எறக்கியுடோணும்னும் சொல்லறேன்... அதே மாதிரி பண்ணுனாப் போதும்.”

பரமசிவம் திரும்பி வந்தபோது கண்ணன் அடையாளம் தெரியாமல் மழுமழுவென்று மாறியிருந் தான். சிரைக்கும்போது திமிறியிருக்க வேண்டும். மேவாயில் ஓரிரு வெட்டுகள் இருந்தன. சுத்தமான பேன்ட் சட்டையில் இருந்தான். அவ்வப்போது வானத்தைப் பார்த்துப் பேசினான்.

“டேய் கண்ணா.. இங்கே வா” என்று செந்தாமரை அழைத்ததும் அவசரமில்லாமல் திரும்பிப் பார்த்தான். “நீ இங்கே வாடா” என்றான் செந்தாமரையைப் பார்த்து. செந்தாமரையின் முகம் மாறியது. ஆனால் எழுந்து சென்றான். 

“இங்க பாரு, இவர்தான் பரமசிவம். உன்னைய துவாரகைக்குக் கூட்டீட்டுப் போறாரு... அவரு சொல்றதக் கேட்டுச் சத்தங்கித்தம் போடாம கூடப் போவோணும்... இல்லைன்னா வழீலயே எறக்கி உட்டுருவாரு...”
“இவர்தான் என் சாரதியா”

பரமசிவத்தைப் பார்த்து சிரித்தான். அதன் பிறகு பரமசிவம் நடந்தால் நடந்தான். நின்றால் நின்றான். ஒரு நிழலைப்போலத் தொடர்ந்தான். சாப்பிடும் இடங்களில் அமைதியாக சாப்பிட்டான். பெரும்பாலும் பேசவில்லை. இயற்கை உபாதைகளுக்கு மட்டும் சைகை காட்டுவான். ஒரு கட்டத்துக்குப் பிறகு தானே துரத்தினாலும் அவன் ஓடிவிடமாட்டான் என்று பரமசிவத்துக்குப் புரிந்தது.

லாரியை எடுத்துக் கிளம்பியபோது சுயம்பு கண்ணனைக் கேள்வியாகப் பார்த்தான். அவனுக்கு வயது இருபது. ஐந்து வருடங்களாக பரமசிவத்தின் லாரியில் க்ளீனராக ஓடுகிறான். பத்து நிமிடங்களில் கண்ணனைப் பற்றி அவனுக்குப் புரிந்துபோனது. கொஞ்சம் விவரமான பயல். மூன்று நான்கு மொழிகள் சரளமாகப் பேசுவான்.  அவன் முகம் சுண்டிவிட்டது.

“பரமண்ணே... இதெல்லாம் நமக்குத் தேவையாண்ணே... பாவம்ணே” என்றான் பதற்றமாக.

“போடா... அஞ்சாறு பாவ புண்ணியம் பாத்து மயிராச்சு. இவனப் பாரு... இவன் தெக்க இருந்தா என்ன வடக்க இருந்தா என்ன..?”

“என்னண்ணே... நீயே இப்பிடிப் பேசற... எனக்கு சரியாப் படலைன்னே.”

“டேய், மூடீட்டு உக்காரு...” என்றான் பரமசிவம் கோபமாக, அதே நேரம் சுயம்புவின் கண்களைத் தவிர்த்தவாறே.


சுயம்பு சமாதான மாகவில்லை. அப்பாவின் மரணத்தால் பத்தாவது படிப்போடு லாரிப் பட்டறைக்கு வந்தவனுக்குப் பரமசிவம்தான் அடைக்கலம். அவனுக்குப் புத்தகங்களை வாங்கித் தந்து பன்னிரண்டாவது எழுதச் சொன்னான்.

“எங்கப்பா சாவறப்ப எனக்கு உன் வயசுதான்... உன்ன மாதிரியே குடும்பத்தைக் காப்பாத்த இந்தத் தொழிலுக்கு வந்தேன்... படிப்பு ஏறாதுங்கறது ஒரு பக்கம்... ஆனா நீ கெட்டிக்காரன்டா...  எப்பிடியாவது பன்னண்டு பாஸ் பண்ணீரு.. அப்பறம் தபால்ல டிகிரி படிச்சுக்கலாம். லாரி ஓடறப்ப சும்மாதான இருப்ப.. அப்ப உக்காந்து படி...”

மற்ற டிரைவர்களெல்லாம் க்ளீனர்களை எப்படி நடத்துகிறார்கள் என்று சுயம்புவுக்குத் தெரியும். தன்னை ஒரு தம்பி போல் நடத்தும் பரமசிவத்தின் மீது கூடுதல் பாசம். அதனாலேயே அவன் இப்படி ஒரு காரியத்தில் ஈடுபடுகிறான் என்றபோது கோபமும் வந்தது.  அமைதியாக இருளில் கடந்து கொண்டிருந்த மரங்களைப் பார்த்தபடி வந்து கொண்டிருந்தான்.

கண்ணன் இந்த நான்கு நாள்கள் பயணத்தில் எந்தவிதத் தொல்லையும் தரவில்லை. தனியாக ஏதாவது பேசிக் கொண்டிருப்பான். பெரும்பாலும் கீதை வசனங்களாக இருக்கும். பசிக்கும்போது மட்டும் சுயம்புவின் தோளைத் தட்டி வயிற்றைத் தடவுவான். கண்ணன் அசந்திருந்த தருணத்தில் அவனுடைய பையில் என்னதான் வைத்திருக்கிறான் என்று தேடினான் சுயம்பு. ஒரு புல்லாங்குழலும் சில மயிலிறகுகளும் இருந்தன. ஒரு வெண்சங்கு இருந்தது. சுயம்புவிடமிருந்து வெடுக்கென்று பையைப் பிடுங்கிக்கொண்டான் கண்ணன்.

அன்றைய காலை நேரத்தில் ஒரு ஏரிக்கரையில் குளிப்பதற்காக லாரியை நிறுத்தியிருந்தார்கள். கரையில் சில மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. சுயம்பு லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு வேப்பமரத்தின் குச்சியை ஒடித்து மென்றுகொண்டிருந்தான். திடீரென்று எழுந்த குழலோசைக்குத் திரும்பிப் பார்த்தான். கண்ணன்தான் வாசித்தான். சுயம்புவுக்கு இசை குறித்தெல்லாம் அதிக ஞானம் இல்லை. ஆனால், கண்ணன் வாசித்தது அவன் காதுகளுக்கு அத்தனை இதமாக இருந்தது. மனதை உருக்கும் ஒரு கதையை அவன் தனது புல்லாங்குழலில் சொல்ல முனைவது போலிருந்தது. மாடுகள் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு முனைப்பாக மேய்ந்துகொண்டிருந்தன. சுயம்பு பல்குச்சியை மெல்ல மறந்து கேட்டுக் கொண்டிருந்தான். ஆசுவாசமாக வந்த பரமசிவம் கூச்சலிட்டான்.

“என்னடா இங்க கச்சேரி மசுரு நடக்குது... நிறுத்தச் சொல்லுடா”

“ஏனுங்ணா... அருமையா வாசிக்கறான்... கொஞ்ச நேரம் கேக்கலாமே...”

“மூடீட்டு நிறுத்தச் சொல்லு... ஊலு ஊலுன்னு ஊளையுடறாப்ல”

கண்ணன் கண் மூடி வாசித்துக்கொண்டிருந்தான். சுயம்பு பழையபடி முரண்டு பிடிக்கும் முகபாவத்துக்கு மாறினான்.  

p46c_1519739107.jpg

“வேணுமுன்னா நீங்களே நிறுத்தச் சொல்லுங்க.. ஒருவேளை இதுக்குத்தான் மாமங்காரன் மண்டைய ஒடச்சானோ என்னுமோ?”

சொல்லிவிட்டுப் பல் துலக்குவதில் தீவிரமானான் சுயம்பு. ஒரு விநாடி தயங்கிவிட்டு லாரியில் சென்று ஏறிக்கொண்டான் பரமசிவம். அதன் பிறகு மதிய சாப்பாட்டின்போது துவாரகை எப்போது வரும் என்று கண்ணன் கேட்டபோது ராத்திரி போயிடலாம் என்றான் பரமசிவம். பெரும்பாலும் ஒரு புன்னகையுடன் சாலையையும் நகரும் நிலக்காட்சிகளையும் பார்த்தபடி வந்தான் கண்ணன்.

இப்போது அவனை இறக்கிவிடத்தான் வாகான இடம் தேடிக் கொண்டிருந்தான் பரமசிவம். அவன் நோக்கம் புரிந்த சுயம்புவின் முகம் இறுகிக் கிடந்தது. எப்போதாவது கடக்கும் வாகனங்களின் விளக்கொளியில் கம்பளிக்குள் புதைந்து உறங்கும் கண்ணன் தெரிந்து மறைந்தான். கிசுகிசுப்பாக சுயம்புவிடம் பேசினான் பரமசிவம்.

“டேய்... நான் நிறுத்தற எடத்துல பாத்ரூம் போறாப்ல எறக்கிக் கூட்டீட்டுப் போ.. நூறடி தள்ளி உட்டுப்போட்டு ஓடியாந்துரு... நான் லாரிய ரன்னிங்லயே வெச்சிருக்கறேன்...”

“பரமண்ணா... இந்த மாதிரி அத்துவானக் காட்டுக்குள்ள உட்டா அவன் எங்கீங்கண்ணா போவான்.. கொஞ்சமாச்சு மனுச நடமாட்டமிருக்கற பக்கம் எறக்கியுடுவோம்...”

“மூடீட்டு நான் சொல்றதப் பண்ணீட்டு வா... யாரும் பாக்காம இருக்கறதுதான் நல்லது...”

சொல்லிவிட்டானே தவிர ஏனோ லாரியை நிறுத்தவில்லை. சில இடங்களில் வேகத்தைக் குறைத்துவிட்டு நிறுத்த மனமின்றி மீண்டும் அதிகரித்தான். அவன் தனக்குள்ளே ஒரு போராட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருப்பது சுயம்புவுக்குப் புரிந்தது.

“அண்ணா... உங்களுக்கே புடிக்காத ஒரு விஷயத்தை எதுக்குப் பண்ணோணும்.. ஏதாவது இல்லத்துல சேத்தியுட்டரலாம்...”

சுயம்புவுக்கு அவன் மனதை மாற்றிவிடலாம் என்று லேசான நம்பிக்கை வந்திருந்தது. பரமசிவம் ஏதோ சிந்தனையோடு லாரியின் வேகத்தை அதிகரிப்பதும் குறைப்பதுமாக இருந்தான்.

“டேய் சுயம்பு...” அவன் குரல் மாறியிருந்தது. லேசான பதற்றம்.

“என்னங்ணா”

“பின்னால ஒரு வண்டி வருதுடா.. நான் நின்னா நிக்குது.. நவுந்தா நவுருது...”

சுயம்பு எட்டிப்பார்த்தான். தூரத்தில் விளக்கொளி தெரிந்தது.

“ஆமாங்கண்ணா... வண்டில என்ன லோடு?”

பரமசிவம் நினைவு வந்தவனாகத் தலையில் அடித்துக்கொண்டான்.

“ஐயோ... சிகரெட்டுடா...”

வழக்கமாக சிகரெட், எலக்ட்ரானிக்ஸ், மசாலாக்கள் ஏற்றி வரும்போது கவனமாக இருப்பார்கள். தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்து விலகாமல் பயணிக்க வேண்டும். நாக்பூர் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் லாரியை மடக்கி டிரைவரைக் கொன்றுவிட்டுத் திருடுவது சாதாரணம். இதன் காரணமாகவே குழுவாக இணைந்து செல்வார்கள். இன்று கண்ணனுக்காக நெடுஞ்சாலையிலிருந்து விலகி இத்தனை தூரம் வந்து விட்டிருந்ததால் அந்தக் குளிரிலும் பரமசிவத்தின் முகம் வியர்த்துவிட்டது.

கியரை ஓசையுடன் மாற்றிப் போட்டு லாரியை வேகமாக ஓட்டத் தொடங்கினான். பின்னால் வந்த வண்டியும் வேகமெடுத்தது. விரட்டிக் கொண்டு வந்தார்கள், அல்லது பரமசிவத்துக்கு அப்படித் தோன்றியது. தலை தெறிக்க ஓட்டத் தொடங்கினான். பின்னால் வந்தது சுமோ போன்ற ஒரு வாகனம். வேகமாக வந்து இவர்களை ஒட்டிக்கொண்டது. பழக்கமில்லாத சாலை, எங்கு செல்கிறோம் என்று தெரியவில்லை. பெயர்ப் பலகைகள் எதுவும் இருளில் தெரியவில்லை. பரமசிவனும் சுயம்புவும் வெலவெலத்துப் போயிருந்தார்கள்.

அகலமான ஓர் இடத்தில் பின்னால் வந்த வாகனம் முரட்டுத்தனமாக ஒதுங்கி சாலையோரப் புதர்களை நசுக்கிக்கொண்டு முந்திச் சென்றது. அது ஒரு டாடா சுமோ. உள்ளே ஆட்கள் இருந்தார்கள். இப்போது பின்னால் இன்னொரு வாகனம் தெரிந்தது. அவர்கள் ஒரு கூட்டமாக வந்திருப்பது புரிந்தது பரமசிவத்துக்கு.

“பரமண்ணா... வண்டிய நிறுத்திடலாமாண்ணா... ”

“கைல கெடச்சா கொன்னு போடுவாங்கடா” அவன் குரல் மெலிதாக நடுங்கியது. முன்னால் சென்ற வாகனம் இவர்களை இடம் வலமாக வளைத்து நிறுத்த முயன்றது. பரமசிவம் வேகத்தைக் குறைப்பதாக இல்லை. சுமோவின் பின்பக்கக் கண்ணாடி திறந்து உள்ளே இருந்து பிரகாசமான விளக்கொளி ஒன்று பரமசிவனின் கண்களில் பாய்ந்தது. பரமசிவம் தடுமாறிப்போனான். ஏதோ ஒன்றைத் தூக்கி இவன் வண்டியின் முன் எறிந்தார்கள். மறுவிநாடி முன்சக்கரம் வெடித்தது போல் உணர்ந்தான் பரமசிவம். லாரியின் வேகம் தானாகவே குறைந்தது. எவ்வளவு முயன்றும் இடது பக்கமாக இழுத்துக்கொண்டு சென்றது. சாலையிலிருந்து இறங்கி மரங்களுக்குள் ஓடியது. அந்தப் பிரகாச வெளிச்சம் பரமசிவத்தின் பார்வையை முழுதாக ஆக்கிரமித்திருந்தது. பலத்த சத்தத்துடன் எதன் மீதோ லாரி மோதியது. பிறகு மொத்தமும் இருண்டு போனது.

இரண்டு சுமோக்களும் அரைவட்டமடித்துத் திரும்பி வந்தன. உள்ளே இருந்து பத்துப் பதினைந்து பேர் இறங்கினார்கள். முகத்தில் துணி கட்டியிருந்தார்கள். பிரகாசமான டார்ச் ஒன்றை அடித்தார்கள். லாரியின் முன் பகுதி ஒரு மரத்தில் மோதி நொறுங்கியிருந்தது. பரமசிவம் ரத்தம் தோய்ந்து பாதி உடல் வெளியில் தொங்கிக் கொண்டிருந்தான். கண்ணனும் சுயம்புவும் இருந்த இடம் தெரியவில்லை. வந்தவர்கள் எந்த சலனமும் இல்லாமல் லாரியின் பின்புறம் ஏறி தார்ப்பாயைக் கிழித்தார்கள். பத்து நிமிடங்களில் இன்னொரு லாரி வந்தது. பெட்டிகளை அதற்கு மாற்றத் தொடங்கினார்கள். பெரிதாக சத்தம் எழுப்பவில்லை. அந்தப் பகுதி சாலையிலிருந்து கொஞ்சம் உள்வாங்கியிருந்தது. அவர்கள் வேலையில் ஓர் அவசரம் இருந்தது. சொல்லி வைத்தது போல சிகரெட் இருந்த பெட்டிகளை மட்டும் எடுத்துக்கொண்டார்கள். வேறு சில பார்சல்களைக் கிழித்துப் பார்த்துவிட்டு வீசியெறிந்தார்கள். அரை மணி நேரத்தில் தங்களுக்குத் தேவையானவற்றை ஏற்றிக் கொண்டு இவர்கள் லாரியின் மீது சில மரக் கிளைகளை வெட்டிப் போட்டு மறைத்துவிட்டுப் போய்விட்டார்கள்.

சுயம்பு கேபினுக்குள் கிடந்தான். அவனுக்கு சுய நினைவு வந்தபோது விடிந்து லேசான வெளிச்சம் வந்திருந்தது. முகத்தின் மீது கண்ணாடித் துகள்கள் கிடந்தன.  வாயில் இரும்பின் சுவை. கால்களை அசைக்க முடியவில்லை. தலையைத் தூக்கிப் பார்த்தான். ஒரு பெரிய மரத்தின் மீது மோதி லாரியின் முன்பாகம் நசுங்கியிருந்தது. பரமசிவம் அவன் பேரைச் சொல்லித்தான் கதறிக்கொண்டிருந்தான்.

“அண்ணா... இங்க இருக்கேன்…”

“சுயம்பு.. டேய்... தண்ணி தெவைக்குது... தாகமா இருக்குதுடா... செத்துருவேன் போல இருக்குடா... வலிக்குதுடா...”

சுயம்பு மெள்ள எழ முயன்றான். கண்ணைத் திறக்க முடியாமல் பிசுபிசுவென்று ஒட்டியது ரத்தம். இடது காதுக்கு மேல் ஏதோ தீயாக எரிந்தது. உடலை இழுத்து நகர்த்தி கேபினில் இருந்து குதிக்க முயன்றான். இடது கால் ஏதோ ஓர் உலோகக் குவியலில் சிக்கி நசுங்கியிருந்தது. அசைத்தாலே உயிர் போனது. அவர்கள் இருந்த இடம் சாலையிலிருந்து குரல் கேட்காத, பார்வை படாத தொலைவில். மரங்கள் அடர்ந்திருந்தன. சாலையில் எப்போதாவதுதான் ஒரு வாகனம் சென்று கொண்டிருந்தது.

p46d_1519739138.jpg

சுயம்பு பெருங்குரலில் அலறினான். காப்பாற்றும்படி அவனுக்குத் தெரிந்த அத்தனை மொழிகளிலும் கத்திப் பார்த்தான். பறவைகளின் சப்தமே பதிலாகக் கிடைத்தது. அவனுக்கும் தொண்டை வறண்டுகொண்டே வந்தது.

எவ்வளவு நேரம் கத்தியிருப்பானென்று தெரியாது. சூரியன் உச்சியை அடைந்திருந்தது. பரமசிவத்திடமிருந்து இப்போது சத்தமில்லை. இறந்திருப்பானோ என்று தோன்றியது. தனக்கும் அதே கதிதான் என்று நினைத்தான் சுயம்பு. மெள்ள நினைவு மயங்கத் தொடங்கியது. கனவில் மனிதக் குரல்கள் கேட்டன. இந்தியில் கட்டளைகள்.

“உயிர் இருக்கிறது” என்றது ஓர் ஆண் குரல்.

“டிரைவருக்கும்... ஆனால் அடி அதிகம்... லாரியை இழுத்துதான் வெளியே எடுக்க வேண்டும்... ஆம்புலன்ஸ் வந்துகொண்டிருக்கிறது... போலீசுக்கும் சொல்லிவிட்டோம்” இது மற்றொரு ஆண் குரல்.

“ரோட்டுல சங்கு ஊதி நம்மை நிறுத்தினானே, ஒருத்தன் அவன் எங்கே... அவனுக்கும் உடம்பெல்லாம் காயம் இருந்தது...”  இது ஒரு பெண் குரல்.

“இங்கதான் இருப்பான்... ஆனா அவனுக்குப் பெரிய காயம் எதுவும் இல்லை...” மறுபடி முதல் ஆண் குரல்.

சுயம்புவுக்கு யாரோ லாரிக்குள் ஏறி தண்ணீர் கொடுத்தார்கள். மறுபடி நினைவு வந்தபோது இடதுகாலில் உயிர் போகும் வலி. தன்னை ஒரு ஆம்புலன்ஸில் படுக்க வைத்திருப்பதை உணர்ந்தான். சுற்றிலும் இருந்த மரங்கள் இன்னும் அதே வனப்பகுதியில்தான் இருப்பதை அவனுக்கு உணர்த்தின. வெகு அருகில் சிறு இயந்திரங்கள் இயங்கும் சத்தம் கேட்டது. மனிதர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

நீண்ட நெடிய அரை மணி நேரத்துக்குப் பிறகு இன்னொரு ஸ்ட்ரெச்சரில் பரமசிவம் அவனுக்கு அருகில் வந்து சேர்ந்தான். கண்கள் மூடியிருந்தன. வயிறு சீராக ஏறித் தாழ்ந்தது.

“கவலைப்படாதே... உனக்குக் காலில் ஒரு ஃப்ராக்சர்தான்... அவருக்குதான் நிறைய டேமேஜ்... ஆபத்தில்லை.. வலி தாங்க செடேட் பண்ணியிருக்கோம்... பொழைச்சுக்குவார்... ஆனா நடக்க ரொம்ப நாளாகும். உங்க கூட இன்னொருத்தர் இருந்தாரா?”

சுயம்பு தலையாட்டினான்.

“தேடிட்டிருக்காங்க... ஆனா யாரையும் பக்கத்துல காணோம்...” என்றான் வெள்ளுடை அணிந்த ஒரு வட இந்தியன். பட் பட்டென்று டிரைவர் கேபினின் பின்பகுதியில் தட்ட ஆம்புலன்ஸ் அவசரமாக நகர்ந்தது.
இருளைக் கிழித்துக்கொண்டு எங்கிருந்தோ புல்லாங்குழல் ஒலிக்கத் தொடங்கியது. சுயம்பு விம்மி விம்மி அழத்தொடங்கினான்.

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

ஆசைப் பட்டதுக்கு குடுத்த விலை ரொம்ப அதிகம்.....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.