Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவை ஊளையிடுகின்றன

Featured Replies

அவை ஊளையிடுகின்றன - கலைச்செல்வி

ஓவியங்கள் : ரமணன்

 

சுவரின் மறுபக்கம் அவை உறுமத் தொடங்கியிருந்தன. ஆரம்பக்கட்ட உறுமல்தான். ஆனால், அந்த ஒலியே அவளை மருளவைத்தது. கைகள் இரண்டையும் மடித்து, உடலைக் குறுக்கிச் சுவரோரமாகப் பம்மிக்கொண்டு அமர்ந்திருந்தாள். சில சமயங்களில் உறுமலோடு நின்றுவிடலாம். ஆனால், அது வெகுசில நேரங்களில் மட்டுமே. பெரும்பாலும் அவை பெருங்குரைப்புகளாக மாறிவிடும். தொடர்ந்து உறுமல் ஒலி கேட்பதுபோலிருந்தாலும் சாளரத்தின் வழியே எட்டிப் பார்க்கும்போது, ஏதும் தட்டுப்படுவதில்லை. ஆனால், அதுகூட வெகுசில நேரங்களில் மட்டுமே. ஒருவேளை இப்போதும் அப்படித்தானோ... சுவரோடு காதை நெருக்கிவைத்துக்கொண்டாள். இல்லை... அவை நடமாடுகின்றன. அவளைக் கண்காணிப்பதற்குத் தோதான இடத்தைத் தேடி அங்குமிங்கும் அலைகின்றன. விறுக்கென்று அடிவயிறு குழைந்து பயம் கவ்வி இழுத்தது அவளை.

72p1_1522059078.jpg

அவளைக் கண்காணிக்கவே அவை வருகின்றன. அவளுடையவை அத்தனையும் இப்படித்தான் உருவப்பட்டன. தொடர்ந்து தான் கண்காணிப்பில் இருப்பதை அவள் உணர்ந்தேயிருந்தாள். முதலில் உறுமல்கள் சன்னமாக எழும். பிறகு, குரைப்பாக மாறும். குரைப்பு முதலில் ஒன்றிலிருந்துதான் தொடங்கும். பிறகு, நாலைந்து இல்லையில்லை... ஏழெட்டு இருக்கலாம். குரைப்பு அடக்க முடியாததாகிவிடும். அடர்க் கருப்பில், அல்லது திட்டுத்திட்டான கருப்பில், வெளிர் செம்மண் நிறத்தில்... நிறம் வெவ்வேறாக இருந்தாலும் எல்லாமே வளர்த்தியாகவும் தாட்டியமாகவும் இடைவிடாது குரைக்கும் சுபாவத்துடன் இருந்தன. கலவரத்தோடு கதவை ஏறிட்டாள். தாழிடப்பட்டுத்தானிருந்தது. ஆனாலும், உளுத்துப்போன தாழ்ப்பாள். எப்படியாக இருந்தாலும் தாழ்ப்பாள் வீட்டுக்குப் பாதுகாப்பு; வீடு அவளுக்குப் பாதுகாப்பு. வீடு என்றாலே பாதுகாப்புதானே... அதுவும் நிறைந்த வீடென்றால்... கணவன், மூன்று மகன்கள் என நிறைந்த வீடு. பூர்விக வீட்டை இடித்துவிட்டு, புதிதாகக் கட்டத் தொடங்கியபோது அகலக்கால் வைக்கிறோமோ என அவளுக்குப் பயம் வந்தது. கணவன் சொன்னான், “வருசம் ஒருக்காவா கட்றோம்..?” பிறகு கணவனுக்குப் பயம் வந்தது. ‘‘மூணு பயலுவன்னு ஆயிடுச்சு. சின்னதுன்னாலும் ஆளுக்கொரு ரூமா தடுத்துட்டா நல்லாருக்கும்.” அவள் சொன்னாள், “நல்லாதான் இருக்கும்.” ஆமோதித்தான். இரட்டைக்கட்டு வீடோ முற்றம்வைத்த பெரிய பரப்போ இல்லையென்றாலும், முன்கூடம், சமையலுக்கு ஒன்று, பத்தாயம் வைக்க ஒன்று, படுக்க ஒன்றுமாக இருந்த அறைகளைப் புதிதாக்கினார்கள். மிஞ்சிய மணலில் பயல்கள் ஏறி விளையாடுவதும், விளையாடிய களைப்பில் அதிலேயே உறங்குவதுமாக நாள்கள் கடந்தபோது, அந்தத் தொழிற்சாலை அங்கு வரப்போவது யாருக்கும் தெரியவில்லை அல்லது யாரும் உணரவில்லை.

அவை நடமாடத் தொடங்கிவிட்டன. உக்கிரமான நடமாட்டம். பெருங்குரைப்பை உள்ளே அழுத்திக்கொண்டு உறுமலை உயர்த்தியிருந்தன. சன்னல்களை அடைக்க முடியாது. கதவுகள் உளுத்து உதிர்ந்துவிட்டன. வெறும் கம்பிகள் மட்டுமே... அதுவும் துருவேறி... ஒருமுறை கம்பியை இறுகப் பிடித்தபோது அது கையோடு பிடுங்கிக்கொண்டு வந்தது. நல்லவேளை, அந்த இடைவெளியில் அவற்றின் உடல் நுழைய முடியாது. ஆனால், புழுதிக்குத் தடையில்லை. தெருப்புழுதி... ஓட்டமும் நடமாட்டமுமாக அவை கிளர்ந்தெழுப்பும் புழுதி. வெயிலும் சேர்ந்துகொண்டதால் உக்கிரமாக இருந்தது. மகன்கள் விளையாடும்போதும் இப்படித்தான் புழுதி கிளம்பும். ஒருவேளை விளையாடச் சென்ற பயல்கள்தான் புழுதியைக் கிளப்பிவிடுகிறான்களோ? அய்யய்யோ... இத்தனை சனியன்களை ஒண்ணா பாத்தா சின்னப்பய பயந்துக்குவானே. தாழ்ப்பாளை நீக்க எழுந்தபோது, அவை ஒருசேர பெருவொலியில் குரைக்கக் தொடங்கின. பேரொலி... குடலை உருவி இழுப்பதுபோன்று காதில் அறையும் ஒலி. காதுகளை இறுகப் பொத்திக்கொண்டு குத்துக்காலிட்டு அமர்ந்தாள். சுவர் பலவீனத்தில் அதிர்ந்துகொண்டிருந்தது. எந்நேரமும் விழுந்துவிடலாம். உடலை நகர்த்தி நகர்த்தி நடுக்கூடத்துக்கு வந்தாள்.
72p2_1522059116.jpg
நடுக்கூடத்தில்தான் அவள் கணவன் படுத்திருப்பான். இறுதியாகவும் இங்குதான் கிடத்திவைக்கப்பட்டிருந்தான். முடிந்துவிட்டது, எல்லாமும் முடிந்துவிட்டது. அந்தத் தொழிற்சாலை இங்கு ஆரம்பிக்கப்பட்டபோது, எல்லோருக்கும் எல்லாமும் முடிந்துவிடும் என்று யாருக்கும் தெரியவில்லை. “மண்ணுந்தண்ணியும் வெஷமாப் போச்சு”னு இப்போ சொல்வதுபோல அப்போ ஒருவர்கூடச் சொல்லவில்லை. சொன்னால் மட்டும் என்ன செய்ய முடியும். சொற்களை அம்பலம் ஏற்றப் பணம் வேண்டுமே. அது சில்லறையாகக்கூட இல்லாததால் எல்லோரும் சிதறிப்போனார்கள். சிலர் அதே தொழிற்சாலையில் கூலிகளாகச் சேர்ந்தார்கள். இவளின் பிள்ளைகள் அதற்கும் லாயக்கற்ற வயதில் இருந்தனர். ஆனாலும், பெரியவன் பத்து முடித்திருந்ததில், ‘‘கம்பெனியில் வேலை இருக்கும்’’ என்றான் குமார், வேலைக்கு ஆள் பிடிக்கும் ஏஜென்ட். நான்குவழிச் சாலைப் பணிக்குச் சிலர் சென்றுவிட்டனர். வயதானவர்கள் பிடிவாதமாக நகர மறுத்துவிட்தைப்போல இவள் கணவனுக்கும் பிடிவாதம் இருந்தது.

காதைப் பிளக்கும் சத்தம். குரைப்புக்கும் ஓட்டத்துக்கும் ஈடுகொடுக்க முடியாமல் வறண்ட பூமி புழுதியாக எழுந்தாடியது. முன்பெல்லாம் மண்ணுக்கு இத்தனை வறட்சியில்லை. பொட்டல்தன்மை இல்லை. ஆற்றை ஒட்டிய மண் இப்படியா வறண்டுவிடும்? ஆனால், அதில் ஆச்சர்யம் இல்லையாம். “கம்பெனிக்காரன் பொழுதன்னைக்கும் மிசினு போட்டு உறிஞ்சுறான். அப்றம் வெள்ளாமைக்குத் தண்ணி எப்டிக் கெடைக்கும்?” இவளுக்கு மட்டுமல்ல... எல்லாருக்குமே புரியத் தொடங்கியது. அதிகாரி அதிகாரியாக, அலுவலகம் அலுவலகமாக எறி இறங்கியாயிற்று. கையூட்டு பெற்றுக்கொண்டு, கள்ளச் சிரிப்பை மறைத்துக்கொண்டு, “ஆவன செய்கிறோம்” என்றார்கள். “எப்போங்க...” என்றபோது, கோபப்பட்டார்கள். எப்போ இதுக்கெல்லாம் விடிவுகாலம். மனசு முழுக்க அரிப்பு. பிறகுதான் உடலிலும் அரிப்பு. ஆலைக்கழிவு கலந்த நீரால் ஏற்பட்ட அரிப்பாம். யாராரோ வந்தார்கள். ஆவேசப்பட்டார்கள். ஆதரவாகப் பேசினார்கள். ஒவ்வொரு முனையிலும் நம்பிக்கை எழும். பிறகு, அதிகாரத்தில் அமிழ்ந்துபோகும். பிறகுதான் ஊரை விட்டுட்டு ஊரே கிளம்பியது.

இவளும் கேட்டாள்.. “ஏங்க நாமளும் போயிரலாமா..?”

“எப்டிறீ போறது... கடனை வாங்கி வீட்ட வேற இடிச்சுக் கட்டித் தொலச்சிட்டோம். எங்கன்னு போறது..?” ஆனாலும், போய்விட்டான் ஒரேடியாக.

“தண்ணியில கனிமம் கலந்துபோச்சு. அதைக் குடிச்சதனாலதான் இந்தச் சீக்கு”. ஆனால், பெரியாஸ்பத்திரியில் அதைக்கூடச் சொல்லவில்லை. வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.

72p3_1522059091.jpg

அன்றிரவும் அவை கூடின. ஏழெட்டுக்கு மேலிருக்கும் எண்ணிக்கையில். ஆனால், குரைக்கவில்லை. இரண்டு கால்களைக் குத்துவசத்திலும் இரண்டு கால்களை நீள்வசத்திலும் வைத்தப்படி தரையிலமர்ந்து தலையை உயர்த்தி ஊளையிட்டன. நீண்ட நெடிய ஊளை. சாளரத்தின் கதவை இழுத்து மூடினாள். அப்போது சாளரத்துக்குக் கதவிருந்தது. அவளுக்கும் கணவன் இருந்தான். ஆனால், அவன் அவளுக்குத் தெம்பு சொல்ல முடியாமல் அல்லது அன்றே இறந்துபோக வேண்டிய கட்டாயத்தில் படுக்கையில் முடங்கிக் கிடந்தான். இதே கூடம்தான். இதே முன்கூடம்தான். அன்று மகன்கள் சுற்றிலும் நின்றிருந்தது, அவளுக்கு ஆதரவாக இருந்தது.

‘‘குடுக்கக் கூடாதத தூக்கிக் குடுத்துட்ட... பேசாமப் புள்ளங்கள அழச்சுக்கிட்டு நீயும் கௌம்பி வந்துருடீ...” புருஷன இழக்கக் கூடாதுதான். இந்தப் பூமியும் நிலமும்கூட அப்படித்தான். ஏன், இந்த வீடுகூட இழக்க முடியாத ஒன்றுதான்.

“புடிவாதம்டீ ஒனக்கு...” பிடிவாதம் என்று ஏதுமில்லை. கணவன் இருந்தபோது கிளம்புவதற்கு மனம் ஒப்பவில்லை. கணவன் போன பிறகு தைரியம் வரவில்லை.

வெளியில் சத்தம் அடங்கியிருந்தது. குரைத்து அடங்கி எங்கோ ஓடியிருக்கலாம். இதுதான் அவள் வெளியே கிளம்பும் தருணம். கம்பெனி ஷிப்ட் முடியும் நேரம். நெடுக நடந்து பெரிய சாலையைக் கடந்து செல்வாள். தொழிலாளிகளுக்கு இவளைத் தெரியும். பைத்தியக்காரியாக, பிச்சைக்காரக் கிழவியாக. ஆனால், ஒருகாலத்தில் இங்கே பூரிப்பாக வாழ்ந்தவளாக, பிறகு, எல்லாவற்றையும் தொலைத்தவளாக அறிந்தாரில்லை. எல்லோருமே எல்லாமே புதுசு. அவளுக்குக் காசு வாங்கும் பழக்கமுமில்லை. அப்படியே கிடைத்தாலும் அதை என்ன செய்வதென்றும் புரியவில்லை. மீந்த உணவு போதாதா?

ஆனால், தன் கையில் விழும் அந்த உணவுக்காக நாய்கள் சண்டையிட்டால், அவளால் தாங்க முடியாது. ஓலமிட்டு அழுவாள். பயந்து வரும். கணவன் இருந்தால் சாய்ந்துகொள்ளலாம். மகன்கள் இருந்தால் சாய்த்துக்கொள்ளலாம். அவர்களோ இவளின் கதறலைக் கண்டும் காணாமலுமாகத் தள்ளி நின்றுவிடுகிறார்கள். ஓடி ஓடிப் பிடித்தாலும் கைக்கு அகப்படுவதில்லை. இவளின் பரட்டைத் தலையும் அரைகுறையான நைந்த ஆடைகளும் சிறுவர்களுக்குச் சிரிப்பை வரவழைக்கும். இவள் மீது கற்களை, குச்சிகளை விட்டெறிவார்கள். சிறுவர்கள்தான் ஆனால், அவர்கள் இவளின் மகன்கள் அல்ல... விளையாடப் போன மகன்கள் இன்னும் திரும்பவில்லை. திரும்பிவரும்போது, வெந்நீர் காயவைத்துப் புழுதிபோகக் குளிக்க ஊற்ற வேண்டும். ஆனால், குளித்த பிறகும் உடலே பிய்ந்துவிடும்போல அரிப்பு, அரிப்பு.

ஒருமுறை இவளின் பரிதாப நிலையைப் பார்த்துக் கணவன் இவளை நோக்கிக் கைகளை நீட்ட, விம்மியெழுந்த உவகையோடு அருகே ஓடியபோது, அவன் கறிவேப்பிலைக் குச்சியால் அடித்தான். கிழிசலான ஆடையில் சுண்டி விழுந்த அடிகள் அவளைத் துள்ளவைத்தன. ஆனாலும் திரும்பிப் பார்த்துக்கொண்டுதான் ஓடினாள். அது கணவனல்ல... கணவனல்ல... யாரோ ஒருவன். குச்சியோடு துரத்துகிறான். மூச்சிரைக்க வீட்டுக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக்கொண்டாள்.

 அவையும் அவளைத் துரத்தியிருக்கின்றன. மூச்சிரைக்க ஓடியிருக்கிறாள். கூடவே மகன்களும். தாயும் மகன்களுமாகக் கதவை மூடிக்கொண்டு ஆசுவாசிக்க நினைத்த தருணத்தில், திடீரென மகன்களைக் காணவில்லை. தொண்டை வறள வறள அழுதாள். இத்தனை சத்தமாகக் குரைக்கும் அவற்றுக்குத் தொண்டை வறளாதா? வறண்டிருந்தது. ஒருநாள், பின்னும் ஒருநாள், பின்னும் ஒருநாள். இரண்டு கால்களைக் குத்துவசத்திலும் இரண்டு கால்களை நீள்வசத்திலும் வைத்தபடி தரையிலமர்ந்து தலையை உயர்த்தி ஊளையிட்டன. மகன்கள் ஒவ்வொருவராகக் கை நழுவிய தினங்கள் அவை.

கனிந்த இரவின் பின்னணியில் தொழிற்சாலை மின்னியது. கழிவு நீரின் துர்நாற்றம் காற்றில் கலந்து குளிராக வீசியது. சிமென்ட்டும் மணலுமாகக் காரை பெயர்ந்திருந்த தரையில் படுத்துக்கிடந்த அவளை எதுவோ கடித்தது. செவ்வெறும்புகளாக இருக்கலாம். வெற்று மரச்சட்டங்களாகத் தொங்கும் கதவை மூடியிருப்பதும் மூடாமலிருப்பதும் ஒன்றுதான். பூரான், தேள், பாம்பு என எது வேண்டுமானாலும் வரலாம். நாய், நரிகள், ஏன் தொழிற்சாலை ஆட்கள்கூட வரலாம். வீட்டைப் பிடுங்கிக்கொள்ளலாம்.

 திடீரென்று அவளுக்கு உதறலெடுத்தது. அந்தச் சனியன் பிடித்த கண்காணிப்பு நாய்கள் ஒட்டுமொத்தமாகக் கூடி இவளைப் பிடுங்கிக் கடித்து, கடித்துப் பிடுங்கி... எழுந்து உட்கார்ந்துகொண்டாள். நடுங்கும் கைகளால் சேலையைக் கால்கள் வரை இழுத்து விட்டுக்கொண்டபோது கிழிசல்கள் பெரிதாகி விரிந்தன. இரத்தம் வடிந்த புண்களில் ஈக்கள் உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்தன. துணியை இழுத்து உதறியதில் யாரோ போட்டுவிட்டுப்போன ப்ரெட் பாக்கெட் பொத்தென்று நழுவி விழுந்தது. சாப்பிட்டு நாலைந்து நாள்களாகி இருக்கலாம். ஆனாலும், சாப்பிடும் உத்தேசமில்லை. கொஞ்சம் முன்புதான் கருஞ்சாந்தாய் பொங்கி வழிந்த ஆலைக்கழிவு நீரைக் குடித்திருந்தாள்.

அவள் கனவிலும் இதே கூடத்தில்தான் உறங்கிக்கொண்டிருக்கிறாள். அவள் அருகில் படுத்துக்கொள்ள கணவன் உள்பட நான்கு பேருக்கும் கடும்போட்டி. அவர்களிடமிருந்து விடுபட்டு விளையாட்டாகப் பத்தாய அறைக்குள் ஒளிகிறாள். மூன்றாவது மகன் முந்தானையைப் பிடித்தபடி தூக்கிக்கோ என்று கைகளை உயர்த்துகிறான். வீடு முழுக்க அலையலையாய்ச் சிரிப்பு, பேச்சு, சத்தம், விழிப்பு, தூக்கம், விழிப்பு, குரைப்பொலி. இதோ வரும் நேரம்தான்... ஒன்றா இரண்டா நான்கைந்தா இல்லை ஆறேழா? அத்தனையும் இதோ உறுமத் தொடங்கும். பிறகு, ஒலி, ஒலி குரைப்பொலி. ஆனால், நிசப்தம்... எங்கும் நிசப்தம்! அப்படியானால் அவை வரவேயில்லையா. சாளரத்தின் திட்டில் வலதுகையை வைத்து எவ்விப் பார்க்க முயன்றாள். எவ்வி எவ்வி எவ்வ முடியாமல் துவண்டாலும், காதுகள் அவற்றின் வருகையை, காலடியோசையைச் சொன்னது. நடுக்கூடத்தில் பம்மிக்கொண்டாள். பிடிப்பில்லாமல் உட்காரவியலாத தேகம் அவளைக் குப்புறக் கவிழ்த்தியது.

அந்நேரம் அவை வந்திருந்தன. இரண்டு கால்களைக் குத்துவசத்திலும் இரண்டு கால்களை நீள்வசத்திலும் வைத்தப்படி அமர்ந்து தலையை உயர்த்தி ஊளையிட்டன.

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நச்சு ஆலையின் அருகில் வாழும் மக்களின் அவல வாழ்வு.....!  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.