Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புறாப்பித்து

Featured Replies

புறாப்பித்து - சிறுகதை

 
 

சிறுகதை: எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ஸ்யாம்

 

p50aa_1523340127.jpg

ற்செயலாகத்தான் அலுவலக மாடி ஜன்னலில் சாய்ந்தபடியே அந்தப் புறாக்களை கோவர்தன் பார்த்தார். அவரது அலுவலகத்தின் எதிரில் மத்திய உணவு சேமிப்புக் கிடங்கு இருந்தது. அதன் சுற்றுச்சுவர் மிக உயரமானது. கறுத்த சுவரின்மீது புறாக்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தன. ஒரேயொரு சாம்பல் நிறப் புறா. மற்றவை வெள்ளை நிறப் புறாக்கள்.

மொத்தம் எத்தனை என எண்ணிப்பார்த்தார். பதினாறு புறாக்கள். அலுவலகம், கோவர்தன் இயல்பை மாற்றியிருந்தது.  இளைஞனாக இருந்த நாள்களில் இதுபோன்ற புறாக்களைப் பார்த்திருந்தால் இப்படி எண்ணியிருக்க மாட்டார். புறா என்றாலே காதலுக்குத் தூது விடுவது என்ற கற்பனையில் அமிழ்ந்து போயிருப்பார். ஆனால், இன்னும் ஓய்வுபெறுவதற்கு மூன்று வருடங்களே இருக்கும் அரசாங்க குமாஸ்தாவால் இதுபோன்ற கற்பனைகளில் ஈடுபட முடியாது அல்லவா? ஆகவே, வெறுமனே எண்ணிக்கொண்டிருந்தார்.

உண்மையில் 30 வருடங்களுக்குமேல் அரசுப் பணிபுரிந்தவர்களுக்கு, அரசாங்கத்தின் குணங்கள் வந்துவிடுகின்றன; அவர்களை அறியாமலேயே முகமும் உடலும் செய்கைகளும் மாறிவிடுகின்றன. அரசு அலுவலக நாற்காலி மேஜைகளைப்போல அவர்களும் உருமாறிவிடுகிறார்கள். அதுவும் காலையில் அலுவலகம் வந்தது முதல் இரவு வரை வெறும் கூட்டல் கழித்தல் டோட்டல் என எண்ணிக்கைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிற ஒருவருக்கு, எதைப் பார்த்தாலும் எண்ணத்தானே தோன்றும்!

கோவர்த்தனை, அவரின் பிள்ளைகள் கேலி செய்தார்கள். சாப்பிட ஹோட்டலுக்குப் போனால், சாப்பிட்டு முடிப்பதற்குள் டோட்டல் எவ்வளவு என மனக்கணக்காகச் சொல்லிவிடுவார். ``அதான் கம்ப்யூட்டர்ல பில் வருமேப்பா... நீ எதுக்குக் கணக்குச் சொல்றே?” என மகள் கேட்பாள். என்ன பதில் சொல்வது?

ஒவ்வொரு பைசாவையும் பார்த்துப் பார்த்துச் செலவழிக்க வேண்டும். சுத்தமாகக் கணக்குத் தர வேண்டும் என்று வளர்த்த தலைமுறை அல்லவா! இப்போது யார் அப்படிக் கணக்குப் பார்க்கிறார்கள்? ஐந்து பைசா பலசரக்குக் கடையில் விடுதல் என்பதற்காக அம்மா எவ்வளவு சண்டை போட்டிருக்கிறாள். இன்று பைசாக்களும் முக்கியமில்லை; ரூபாய்களுக்கும் அப்படித்தான்.

p50a_1523340115.jpg

ஆனால், அந்தப் பழக்கத்தில் ஊறியவர்களால் கணக்குப் போடாமல் இருக்க முடியாது. ஆகவே, சமீபமாக ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனால் மனதுக்குள் மட்டும் கணக்குப்போட்டுக் கொள்வார்.

`சென்னையில் வாழ்க்கையைத் தொடங்கப் போகிறோம்’ என, கல்லூரி முடித்த நாள்களில் நினைத்தபோது எவ்வளவு சந்தோஷமாக இருந்தது! ஆனால், இந்த 33 வருஷ மதராஸ் வாழ்க்கை அப்படியொன்றும் சோபிக்கவில்லை. வீடு வாங்கியதும் பிள்ளைகள் படித்து முடிக்கப் போவதும்தான் மிச்சம்.

சிதம்பரம், கடலூர், கரூர், ராசிபுரம் என வேலைக்காக மாறிய ஊர்கள் எதுவும் மனதில் ஒட்டவேயில்லை. உண்மையில் ஒரு கோடி பேருக்கும் அதிகமாக வசிக்கும் இந்த மாநகரில், அவரும் ஒரு துளி; அடையாளமில்லாத துளி. கொட்டும் மழையில் தனித்துளிக்கு ஏதாவது அடையாளம் இருக்கிறதா என்ன? எல்லாத் துளிகளும் ஒன்றுபோல்தானே இருக்கின்றன.

வேலை கிடைத்துச் சென்னை வந்த நாள்களில் அறை எடுத்துதான் தங்கினார். அலுவலகம் விட்டவுடன் உடனே அறைக்குப் போய்விட மாட்டார். ஊர் சுற்றிக்கொண்டே இருப்பார். கோயில், கடற்கரை.  திருவல்லிக்கேணி வீதிகள், அரசியல் பொதுக்கூட்டம், நூலகம், பிரசங்கம், இசைக் கச்சேரி, இரவுக் கடைகள் என நேரம் போவதே தெரியாது.

மேன்ஷன் அறையில் ஒரு வசதியும் கிடையாது. ஆனால், அது எதுவும் மனதில் ஒரு குறையாகத் தோன்றவேயில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் சில வேளை மூன்று திரைப்படங்கள்கூடப் பார்த்திருக்கிறார். இரவு தேடிப் போய் பிலால் பிரியாணி சாப்பிட்டுவிட்டு வருவார். எல்லாமும் திடீரென அலுத்துப்போனது. உடனே திருமணம் செய்துகொண்டார். புதுமனைவியுடன் சென்னை வந்து தனி வீடு பிடித்துக் குடியேறிய பிறகு, மதராஸ் மிகவும் சுருங்கிப்போய் விட்டது.

கடற்கரைக்குப் போய் வருவதே கூடச் சலிப்பூட்டும் வேலையாகி விட்டது. ஒருமுறை கடற்கரையில் ஆயிரக்கணக்கான ஆள்கள் கூச்சலிட்டுக்கொண்டிருப்பதைக் கண்டதும் அவருக்கு மூச்சுத் திணறத் தொடங்கியது. ``கடல் அலைகள் காலில் படும் வரை போகலாம்’’ என மகள் அழைத்தபோது `அலைகள் தன்னை இழுத்துக்கொண்டு போய்விட்டால் என்ன ஆவது!’ என்ற பயம் மேலோங்கியது.

அவர் போகாதது மட்டுமின்றி, மகளையும் `அருகில் போகக் கூடாது’ எனத் தடுத்தார். ``உங்களுக்கு வயதாகிவிட்டது. அதான் தேவையில்லாமல் பயப்படுகிறீர்கள்’’ என மனைவி கோபித்துக் கொண்டாள்.

அது நிஜம்தான் என உணர்ந்தார். உண்மையில், இது தேவையில்லாத பயம்தானா, வயதானவுடன் ஏன் உலகின் சின்னஞ்சிறு விஷயங்கள்கூட இத்தனை பூதாகரமாகத் தெரிகின்றன? எதற்கெடுத்தாலும் பயம் வருகிறது. கவலையும் கோபமும் பீறிடுகின்றன. ஒருநாள் அதைப் பற்றி அவரது அலுவலகத்தில் பேச்சு வந்தபோது டைப்பிஸ்ட் சுந்தரி சொன்னாள்,

``உடம்பு நாம சொன்னபடி கேட்காமப் போக ஆரம்பிச்சுட்டா,   மனசு நிலையில்லாமப்போயிடும். அதுக்கப்புறம் நாள்பூரா  உடம்பைப் பற்றியேதான் நினைச்சுக்கிட்டு இருக்கணும்னு தோணும். இருபது வயசுல யாரு உடம்பைப் பற்றிக் கவலைப்பட்டா? இரும்பைக் குடுத்தாலும் கடிச்சுத் தின்னுட்டுப் போயிட்டே இருந்தோம். அது இப்போ முடியுமா? உளுந்துவடை சாப்பிட்டா ஜீரணமாக அரை நாள் ஆகுது.``

அதை கேட்டுப் பலரும் சிரித்தார்கள். ஆனால், கோவர்தனுக்குத் துக்கமாக இருந்தது. அவள் சொல்வது உண்மை. தனது பயத்தின் ஆணிவேர் உடம்பு. உண்மையில் நாமாகத்தான் அதைக் கெடுத்துக்கொண்டோம். அதில் அரசாங்க அலுவலகத்துக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. இனி கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது? மாநகரில் ஒவ்வொரு நாளையும் கடந்து போவதும் சலிப்பாக இருக்கிறது.

சினிமா, நியூஸ்பேப்பர், கோயில், பாட்டு எதையும் பற்றிக்கொண்டுவிட முடியவில்லை. எல்லாமும் சலிப்பாக இருக்கின்றன. அலுவலகத்தில் முன்பெல்லாம் கேரம் ஆடுவார்கள். டீ குடித்தபடியே மணிக்கணக்கில் அரட்டையடிப்பார்கள். அதெல்லாமே செல்போன் வந்தவுடன் முடிந்துபோனது. அலுவலகத்தில் கூடி விளையாடுவதும் பேசிச் சிரிப்பதும் அறுந்து போய்விட்டன.

கோவர்தனுக்கு, ஒவ்வொரு நாள் அலுவலகத்துக்கு வரும்போதும் விருப்பமே இல்லாத வேலையைச் செய்வதாகவே தோன்றும். டிபன்பாக்ஸை மேஜைக்குக் கீழே வைத்துவிட்டு மேஜை டிராயரை இழுக்கும்போது 30 வருடங்களை இழுப்பதுபோலவே தோன்றும். அலுவலகத்தில் மட்டுமல்ல, தன் மீதும் சிலந்திவலை படிந்து கொண்டேவருகிறது. அதைத் துடைத்துச் சுத்தம் செய்ய முடியாது. இனி, தான் ஒரு சிலந்திவலை படிந்த மனிதன் மட்டுமே என நினைத்துக்கொள்வார்.

இப்படிச் சொல்ல முடியாத மனவேதனையும் இறுக்கமும் சலிப்புமான ஒரு நாளில்தான் கோவர்தன் அந்தப் புறாக்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.

ஐந்து நிமிடம் பார்த்தபிறகு அந்தப் புறாக்களின் வெண்மை மீது ஈர்ப்பு உருவாக ஆரம்பித்தது. எவ்வளவு வெண்மை, தூய்மை! இந்த நகரின் எந்தத் தூசியாலும் புகையாலும் அந்த வண்ணத்தை மாற்ற முடியாது.
புறாக்கள்  வரிசையாக உட்கார்ந்திருந்தன. எதற்கோ காத்திருப்பது போன்ற அதன் பாவனை. இவற்றில் யார் பாஸ், யார் ஸ்டெனோ, யார் ஹெட்கிளார்க்? புறாக்களுக்குள் ஒரு பேதமும் இல்லை. ஒரு புறா, சிறகைக் கோதிவிட்டபடியே இருந்தது. இன்னொரு புறா, பறக்க எத்தனிப்பதுபோல் தயாராக இருந்தது. இரண்டு புறாக்கள், ஒன்றோடு ஒன்று அலகை உரசிக்கொண்டிருந்தன. இந்த வரிசையைவிட்டு ஒரு புறா தனியே விலகி உட்கார்ந்திருந்தது. தன்னைப்போல அதற்கும் இந்த நகரம் சலிப்பாகியிருக்கும்போல!

கோவர்தன் புறாக்களையே பார்த்துக்கொண்டிருந்தார். சட்டென எல்லாப் புறாக்களும் கோட்டைச் சுவரைவிட்டு வானில் பறந்தன. எங்கே போகின்றன? இந்தப் புறாக்கள் எங்கே தங்கியிருக்கின்றன? எதற்காக இந்த அவசரம்?

புறாக்கள் இல்லாத கோட்டைச் சுவரைக் காணும்போது, விடுமுறை நாளில் காணப்படும் அரசாங்க அலுவலகத்தின் சாயல் தெரிந்தது. அந்தச் சுவரையே நெடுநேரம் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.ஹெட்கிளார்க் அருணன் திரும்பிப் பார்த்து, ``என்ன சார்... குடோன்ல அப்படி என்ன பார்க்கிறீங்க?’’ எனக் கேட்டார்

``சும்மாதான். காற்று வரலை!’’ என்று சமாளித்தார்.

அன்று கோவர்தன் வீடு திரும்பும் வரை மனதில் புறாக்களே நிரம்பியிருந்தன.  வீட்டுக்கு வந்தவுடன் வழக்கத்துக்கு மாறாகப் பழைய டைரி ஒன்றில் பென்சிலால் புறா ஒன்றை வரைய முற்பட்டார். அதையும் ஏதோ அலுவலக வேலை என்றே மனைவி நினைத்துக் கொண்டாள். கோவர்த்தனால் நினைத்ததுபோலப் புறாவை வரைய முடியவில்லை. நான்கைந்து முறை வரைந்து பார்த்துத் தோற்றுப்போனார்.

மறுநாள் காலையில் அலுவலகம் போனவுடன் புறாக்கள் சுவருக்கு வந்துவிட்டனவா என ஆர்வமாகப் பார்த்தார். புறாக்களைக் காணவில்லை. மதியம் வரை அடிக்கடி எட்டிப்பார்த்துக் கொண்டே இருந்தார். 3 மணி அளவில் ஒவ்வொரு புறாவாக வந்து அமர ஆரம்பித்தது. சரியாக அதே 16 புறாக்கள். பிரிக்க முடியாத தோழர்களைப் போன்று ஒன்றாக அமர்ந்திருந்தன.

தானியத்தைக் கொத்திக்கொண்டு வந்து சாப்பிடத்தான் அமர்ந்திருக்கின்றன என முதலில் நினைத்தார். ஆனால், அந்தப் புறாக்களை உன்னிப்பாகக் கவனித்தபோது அவை எதையும் உண்ணவில்லை என்பதைத் தெரிந்துகொண்டார். பிறகு என்னதான் செய்கின்றன, எதற்காக இங்கே கூடுகின்றன?

புறாக்கள் திடீரென பறந்து ஒரு வட்டமடித்துவிட்டுத் திரும்பவும் அதே இடத்தில் வந்து அமர்ந்தன.  இந்தச் சுவர், அதன் விளையாட்டு மைதானமா... அல்லது தியான மண்டபமா?  அந்தப் புறாக்களுக்குள் எது வயதானது? இவை எந்த ஊர்ப் புறாக்கள்? எதையுமே அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், அவற்றைப் பார்க்கப் பார்க்கக் கிளர்ச்சியூட்டுவதாகயிருந்தது. ஜன்னலில் நீண்டநேரம் சாய்ந்தபடி புறாக்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரது பின்னால் நின்றபடி ஹெட்கிளார்க்  சுந்தரம் சொன்னார், ``முன்னாடியெல்லாம் நிறைய புறாக்கள் வரும் சார். இப்போ குறைஞ்சிருச்சு.’’

``நீங்க வாட்ச் பண்ணியிருக்கீங்களோ?’’ எனக் கேட்டார் கோவர்தன்.

``சும்மா பார்ப்பேன். இந்த ஆபீஸ்ல பொழுதுபோக வேற என்ன இருக்கு?’’ என்றபடியே தைலத்தை எடுத்து நெற்றியில் தேய்த்துக்கொண்டார்.

``இந்தச் சுவர்ல மட்டும்தான் புறா வருதா, இல்லை வேற இடங்களும் இருக்கிறதா?’’ எனக் கேட்டார் கோவர்தன்

``மசூதி முன்னாடி நிறைய புறாக்கள் இருக்கும். பழைய சஃபையர் தியேட்டர் எதிர்லகூட நிறைய நிக்கும். இப்போ அமெரிக்காக்காரன் எம்பசிக்குப் பயந்து அதுவும் ஓடிப்போயிருச்சோ என்னவோ!’’ எனச் சொல்லிச் சிரித்தார்

`ஒரே எண்ணிக்கையில் எதற்காக புறாக்கள் வருகின்றன,  எப்படி இந்த இணக்கம் உருவானது, இது வெறும் பழக்கம்தானா, புறாக்கள் ஏன் காட்டைத் தேடிப் போகாமல் இப்படி மாநகருக்குள் சுற்றிக் கொண்டிருக்கின்றன?’

அலுவலகத்தைவிட்டு இறங்கிப் போய்ப் புறாக்களை அருகில் பார்க்கவேண்டும்போலிருந்தது. செருப்பை மாட்டிக்கொண்டு கீழே இறங்கிப் போனார். கேட்டில் வாட்ச்மேனைக்கூடக் காணவில்லை. உலர்ந்துபோன புற்களும் பெயர் அறியாத செடிகளும் அடர்ந்திருந்தன. உள்ளே நடக்க நடக்க நெல் வேகவைக்கும்போது வரும் வாசனைபோல அடர்ந்த மணம். மழைத்தாரை வழிந்து கறுப்பேறிய சுவரில் சினிமா போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுக் கிழிந்துகிடந்தது.

கோவர்தன், புறாக்கள் நின்றிருந்த சுவரின் அருகில் போனார். ஆள் அரவம் கேட்டால் பறந்துவிடுமோ எனப் பதுங்கியபடியே ஓரமாக நின்றார். அந்தப் புறாக்களில் ஒன்று, அவரைக் கண்டபோதும் காணாதது போல கழுத்தைத் திருப்பிக்கொண்டது. புறாக்களின் விம்மல் சத்தம் தெளிவாகக் கேட்டு க்கொண்டிருந்தது. அது  காசநோயாளியின் இழுப்புச் சத்தம்போல இருந்தது.  புறாக்கள், தங்கள் நேரம் முடிந்துவிட்டது என்பதுபோல எழுந்து அவரைக் கடந்து பறந்தன.  விலகி நின்றிருந்த ஒற்றைப் புறா, தனியே கடந்து போனது.

அவர் அலுவலகத்துக்குப் போவதற்காகத் திரும்பி நடந்து வந்தபோது வாட்ச்மேன் ``என்ன சார், உள்ளே யாரைப் பார்க்கப் போனீங்க?’’ என்று கேட்டார்.

``பக்கத்து ஆபீஸ்’’ என்று சொல்லி, பொய்யாக ஒரு சிரிப்பை வெளிப்படுத்தினார்.

அதற்குமேல் வாட்ச்மேன் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. `இது என்ன பைத்தியக்காரத்தனம்... எதற்காக இப்படிப் புறாக்களைக் காண்பதற்காக இறங்கி வந்திருக்கிறேன்?’ என, தனக்குத் தானே கேட்டுக்கொண்டார். பிறகு, ஆபீஸ் வந்தபோதும் அந்தப் புறாக்களைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார்.

அன்றைக்கு ஆபீஸிலிருந்து நேரடியாக வீட்டுக்குப் போகாமல் எங்கெங்கெல்லாம் புறாக்கள் தென்படுகின்றன எனப் பார்க்கத் தொடங்கினார். அது வேடிக்கையான செயலாக இருந்தது. ஆனால், அவர் நினைத்ததுக்கு மாறாக நகரின் பல்வேறு இடங்களில் புறாக்கள் தென்பட்டன. ஒவ்வொன்றாக எண்ணத் தொடங்கினார். மனது ஏனோ மிகுந்த சந்தோஷமாகயிருந்தது.

p50b_1523340147.jpg

அதன் பிறகு ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தி.நகர், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், குரோம்பேட்டை, தாம்பரம் என வீட்டுக்கு வரும் வழியெங்கும் புறாக்களைத் தேடிக் காண ஆரம்பித்தார்.  எங்கே, எந்த இடத்தில் எத்தனை புறாக்கள் ஒன்றுசேருகின்றன. அவை எப்படி இருக்கின்றன என ஆராய ஆராய, மகிழ்ச்சி பெருகியது.

புறாக்களின் எண்ணிக்கையைக் குறித்துக்கொள்வதற்காகச் சிறிய பாக்கெட் நோட் ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டார். திடீரென நகரம் புதிதாக உருமாறியதுபோல் இருந்தது. எத்தனையோ அறியாத ரகசியங்களுடன் நகரம் இயங்கிக்கொண்டிருக்கிறது எனத் தோன்றியது. இத்தனை ஆயிரம் புறாக்கள் இந்த நகரில் இருப்பது ஏன் மக்கள் கவனத்தை ஈர்க்கவேயில்லை?

இந்தப் புறாக்கள் ஏன் இடிபாடுகளுக்குள்ளேயே அதிகம் வாழுகின்றன? புறாக்கள் துறவிகளா, ஏன் அவை எதற்காகவும் உரத்துச் சண்டையிடுவதில்லை? மசூதிகளில், கோயில்களில், தேவாலயங்களில் ஏன் அதிகம் புறாக்கள் காணப்படுகின்றன? ஒருவேளை, புறாக்கள்தான் வானுலகின் தூதுவர்களா!  பார்க்கப் பார்க்க, புறா விசித்திரமான பறவையாகத் தோன்ற ஆரம்பித்தது.

வீட்டுக்கு வந்த பிறகு ஏதேனும் ஒரு சேனலில் புறாவைப் பற்றி ஏதாவது காட்ட மாட்டார்களா எனத் தேட ஆரம்பித்தார். இணையத்தில் தேடி விதவிதமான புறாக்களின் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டே இருந்தார். வீட்டில் அவரது திடீர் மாற்றத்தை மகளோ, மகனோ, மனைவியோ புரிந்துகொள்ளவேயில்லை

ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் புறாக்களைத் தேடிச் சுற்ற ஆரம்பித்தார். `புறாக்கள் ஒருமுறை ஜோடி சேர்ந்தால் அது பிரிந்திடாது’ என்றார்கள். அது உண்மைதான் என நினைத்துக்கொண்டார். வளர்ப்புப் புறாக்கள் எங்கே விட்டாலும் வீடு திரும்பிவிடக்கூடியவை என்பது அவருக்கு வியப்பாக இருந்தது.

தன்னைப்போல்தான் அந்தப் புறாக்களுமா? வீடுதான் அதன் உலகமா? கூண்டை ஏன் இவ்வளவு நேசிக்கின்றன? வானம் எவ்வளவு பெரியது... அதில் பறந்து மறைந்து போய்விடலாம்தானே!

தாங்கள் எப்போதும் அமரும் சுவரை இடித்துவிட்டால்கூட அதே இடத்துக்குப் புறாக்கள் திரும்பி வந்துகொண்டிருக்கும் என்றான் உணவு சேமிப்புக் கிடங்கு வாட்ச்மேன். இது மடமைதானா, அல்லது `அந்தச் சுவர்கள் வெறும் தங்கிச் சென்ற இடமில்லை’ என புறாக்கள் உணர்ந்துள்ளனவா!

புறா பித்து பிடித்துக்கொண்ட பிறகு, அவர் சில நாள்கள் மின்சார ரயிலில் பயணம் செய்தார். சில வேளைகளில் நகரப் பேருந்தில் இருந்தபடியே புறாக்கள் நிற்கும் இடத்தைக் கடந்து போனார். ஒருமுறை அப்படி ராயப்பேட்டையில்  ஷேர் ஆட்டோ ஒன்றில் போய்க்கொண்டிருந்தபோது அருகில் அமர்ந்திருந்த பர்தா அணிந்த இளம்பெண் ஒருத்தி, ஆள்களை இடித்துக்கொண்டு இறங்க முற்படுவள்போல உடலை வெளியே இழுத்துத் தகரக்கூரை ஒன்றின் மீதிருந்த புறாக்களை வேடிக்கை பார்த்தாள். அது அவருக்குச் சிரிப்பாக இருந்தது.

ஷேர் ஆட்டோவில் இருந்தவர்கள், அவளது செய்கையால் எரிச்சலடைந்து திட்டினார்கள். அதைப் பொருட்படுத்தாதவள்போலச் சிரித்துக்கொண்டாள். பிறகு அவர்  கேட்காமலே சொன்னாள்,

``எனக்குப் புறான்னா ரொம்பப் பிடிக்கும். எங்க வீட்ல புறா வளர்த்திருக்கோம். வாப்பா, புறா பந்தயமெல்லாம் விடுவாங்க!’’

`அப்படியா!’ என்பதுபோலத் தலையாட்டிக் கொண்டார்

ஷேர் ஆட்டோ போய்க்கொண்டேயிருந்தது. ஒரு வளைவை நோக்கிச் செல்லும்போது அவராகச் சொன்னார் ``உங்க லெஃப்ட்ல ஒரு மெக்கானிக் ஷாப் வரும். அதுமேல புறாக்கூட்டம் இருக்கும் பாருங்க.``

அவர் சொன்னதுபோலவே புறாக்கள் கூட்டமாக இருந்தன. அவள் அவசரமாகப் புறாக்களை எண்ணத் தொடங்கினாள். அவள் எண்ணி முடிப்பதற்குள் அவர் எண்ணிக்கையைச் சரியாகச் சொன்னார்.
``உங்களுக்கு எப்படிப் புறா இங்க நிக்கும்னு தெரியும்?`` என்றாள்.

`இருபது வயதுப் பெண் இப்படிச் சிறுமிபோல வியப்போடு கேட்கிறாளே!’ என நினைத்தபடியே ``எல்லாப் புறாக்களையும் எண்ணி, கணக்கு எடுத்து வெச்சிருக்கேன்`` என்று தனது சிறிய நோட்டை எடுத்துக் காட்டினார்.

அவளால் நம்ப முடியவில்லை.

சட்டைப்பையில் இருந்த பாக்கெட் நோட்டை அவளிடமே கொடுத்தார். அவள் அவசரமாக அதைப் புரட்டினாள். உள்ளே இடம்வாரியாகப் புறாக்களின் எண்ணிகை பதிவுசெய்யப்பட்டிருந்தது

``எதுக்குப் புறாவை கவுன்ட் பண்றீங்க?`` என்று கேட்டாள்.

``சும்மாதான்`` எனச் சொல்லிச் சிரித்தார்

``எனக்கும் இப்படிச் செய்யணும்னு ஆசையா இருக்கு. ஆனா, ஹஸ்பண்டுக்கு இதெல்லாம் பிடிக்காது`` என்றபடியே அந்த நோட்டைத் தடவிக்கொடுத்தாள்.

பாலத்தையொட்டி ஷேர் ஆட்டோ நின்றபோது, அதிலிருந்து இறங்கும் முன்னர் அவரிடம் அந்த நோட்டைக் கொடுத்தபடியே சொன்னாள், ``புறாவை ஃபாலோ பண்ணக் கூடாது. அப்படிப் பண்ணினா, அது கனவுல வந்துடும்.``

அப்படி அவள் சொன்னது, அவரை மிகவும் சந்தோஷப்படுத்தியது. அன்றைய கனவில் ஒரு புறாவாவது வந்துவிடாதா என ஏங்கினார். உண்மையில் அவருக்குக் கனவு வருவதேயில்லை. அலுவலகத்தில் சில வேளை பகற்கனவு வந்திருக்கிறது. ஆனால், இரவில் கனவே வருவதில்லை.

வீட்டுக்கு வரும்போது அந்தப் பெண்ணைப் பற்றியும் புறாக்களைப் பற்றியுமே நினைத்துக்கொண்டு வந்தார். இரவு 9 மணிக்கெல்லாம் உறங்கவும் சென்றுவிட்டார். அவர் கனவில் புறாக்கள் வரவேயில்லை. ஆனால், அவரது வாழ்க்கையில் முன்பு ஒருபோதுமில்லாத புதிய சந்தோஷம் பரவத் தொடங்கியிருந்தது.

காலையில் சவரம் செய்து கொள்ளும்போதே `அந்தப் பர்தா அணிந்த பெண்ணை மீண்டும் காண்போமா?’ என யோசித்தபடியே சவரம்  செய்தார்.  திடீரென அவரும் புறாவைப்போல வெள்ளை உடை அணிந்துகொள்ள ஆசைப்படத் தொடங்கினார்.  கோபத்தில் கத்துவதைவிட்டு, மெதுவாகப் பேச ஆரம்பித்தார். கண்ணுக்குத் தெரியாத ஒழுங்கு, புறாக்களுக்குள் இருக்கின்றன. அவை உத்தரவுக்காகக் காத்திருப்பதில்லை. ஆனால், சட்டென ஒரே நேரத்தில் ஒன்றாகப் பறக்கின்றன. காகங்களைப்போலக் கத்திச் சத்தம்போட்டுப் பசியை வெளிக்காட்டிக்கொள்வதில்லை எனப் புறாக்கள் அவருக்குப் புதிய வகை அனுபவத்தின் கதவைத் திறந்துவிட்டன.

நகரம் என்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல, ஆயிரமாயிரம் புறாக்கள், பறவைகள், நாய்கள், பூனைகள், எலிகள், நுண்ணுயிர்கள் எல்லாமும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கும்தான். அதனதன் பசிக்கு அதனதன் தேடல். யாருக்கும் எதுவும் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. நகரில் எதுவும் நிரந்தரமில்லை. கிடைக்கிற சுவரில் நிற்கவேண்டியதுதான். அவருக்கு, வாழ்க்கையைப் பற்றியிருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போக ஆரம்பித்தது.

பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று  ராயப்பேட்டை மணிக்கூண்டுப் பகுதியில் புறாக்களைத் தேடி அலைந்துகொண்டிருந்தபோது ``நான்தான் முதல்ல  பார்த்தேன்” என்ற குரல் கேட்டது.
அதே பர்தா அணிந்த இளம்பெண். கையில் ஒரு கூடையுடன் இருந்தாள். அவளைப் பார்த்துச் சிரித்தார்.

``இங்கேயா சார் உங்க வீடு?`` என்று கேட்டாள்

``இல்லை, கிழக்குத் தாம்பரம்`` என்றார்.

``புறாவைத் தேடியா இங்க அலையுறீங்க?” எனக் கேலிசெய்தாள்.

``அதெல்லாமில்லை. இன்னிக்கு ஹாலிடே. அதான் இப்படி...” எனச் சமாளித்தார்.

அவள் சிரித்தபடியே ``எங்க வாப்பாகூட உங்களை மாதிரிதான். எந்நேரமும் புறா புறானுதான் கிடப்பாரு. அவரு புறாகூடப் பேசுவாரு. நீங்க பேசுவீங்களா?”

``அதெல்லாம் தெரியாது”

``நாம பேசினா புறாவும் பேசும்னு வாப்பா சொல்வாரு”

``நீங்க சொன்னா நிஜமாத்தான் இருக்கும்” என்றார் கோவர்தன்.

``என்மேல அவ்வளவு நம்பிக்கையா?” எனக் கேட்டாள் அந்த இளம்பெண்.

என்ன சொல்வது எனத் தெரியாமல் மௌனமாக நின்றார்.

``அந்த நோட்டை எனக்குக் குடுப்பீங்களா?”

``தந்தா, என்ன குடுப்பே?”

``ஒரு டீ வாங்கித் தர்றேன்”

``நிஜமாவா?”

``ஆமா. ஆனா, நோட்டை எனக்கே குடுத்தரணும்”

``நீ என்ன செய்வே?”

``வீட்ல அதை வெச்சுக்கிட்டு நானா கற்பனை பண்ணிக்கிட்டு இருப்பேன். அதான் எந்த இடத்துல எத்தனை புறா வருதுனு டீடெயிலா போட்டிருக்கீங்களே!”

``நேர்ல போய்ப் பார்க்க ஆசை வராதா?”

``நான் என்ன ஆம்பளையா... புறா பின்னாடி சுத்திக்கிட்டே இருக்கிறதுக்கு, பொழப்பைப் பார்க்க வேணாமா?”

அவள் சொன்னவிதம் அவரைக் குத்திக் காட்டியதுபோல அவளுக்குத் தோன்றியிருக்கக் கூடும்.

``நான் உங்களைச் சொல்லலை” என்று மறுபடியும் சிரித்தாள்.

``உண்மையைத்தானே சொன்னே?” என்றார்.

``உங்களுக்குக் கோபம் வரலையா?” எனக் கேட்டாள்

``இல்லை” எனத் தலையாட்டினார்.

``அப்போ வாங்க” என அருகில் உள்ள டீக்கடைக்கு அழைத்துப்போய் ஒரு டீ வாங்கித் தந்தாள்.

``நீ குடிக்கலையா?” என்றதற்கு ``ஐயயோ! ரோட்ல நின்னு டீ குடிச்சேன்னு தெரிஞ்சா கொன்னுபோட்ருவாங்க” என்றாள்.

கோவர்தன் டீயை மெதுவாக உறிஞ்சிக் குடித்தபடியே அவளையே பார்த்துக்கொண்டிருந்தார். அவள் கைகள் அந்த பாக்கெட் நோட்டுக்காக நீண்டபடியிருந்தன.

``நோட்டைத் தர மாட்டேன்” என்றார் கோவர்தன்.

``என்னை ஏமாத்திட்டீங்களா?” என வருத்தமான குரலில் கேட்டாள்.

``இல்லை, சும்மா சொன்னேன். இந்தா” என அந்த நோட்டை எடுத்து நீட்டினார்.

p50c_1523340165.jpg

அவள் வாங்கிப் பிரிக்கக்கூட இல்லை. கையில் இருந்த கூடையில் போட்டுக்கொண்டாள்.

``உன் பேரு என்ன?” என்றார் கோவர்தன்.

அவள் பெயரைச் சொல்லாமலேயே ரோட்டைக் கடந்து போனாள். டீக்கடை முன்பாகவே நெடுநேரம் நின்றுகொண்டிருந்தார் கோவர்தன். சந்தோஷமும் வருத்தமும்  ஒன்றுகலந்து  மனதில் பீறிட்டுக்கொண்டிருந்தன.
அன்று இரவு, கடைசிப் பேருந்தைப் பிடித்துதான் வீடு திரும்பினார். வீடு வந்த பிறகும் உறக்கம் கூடவில்லை. எழுந்து சாய்வு நாற்காலியில் படுத்தபடியே அந்தப் பெண்ணைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தார். `அந்தப் பெண் இந்நேரம் வீட்டில் தன் பாக்கெட் நோட்டை வைத்துக்கொண்டு புறாக்களைக் கற்பனையில் பார்த்துக் கொண்டிருப்பாள்’ எனத் தோன்றியது

திடீரென, தான் 25 வயதுக்குத் திரும்பிவிட்டதுபோல் இருந்தது. தனது பழைய கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்களை பீரோவிலிருந்து எடுத்துப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பையன் நான் அல்ல. அந்தப் புகைப்படங்களிலிருந்து வெகுதூரம் விலகி வந்துவிட்டேன். இப்போதைய தன் முகம் தனக்கே பிடிக்க வில்லை. அன்று அவளது நினைவாகவே சாய்வு நாற்காலியில் உறங்கிப்போனார். கனவில் புறா வந்திருந்தது.
அதன் பிறகு அவர் ஒவ்வொரு முறை புறாவைக் காணும்போது அவருக்கு அந்த இளம்பெண் நினைவு வரத் தொடங்கியது. புறாக்களை எண்ணத் தொடங்கியபோது அவரை அறியாமல் ஒரு குற்றவுணர்ச்சி எழுந்தது. `இதைத் தன் மனைவி கண்டுபிடித்துவிடுவாளா!’ எனச் சந்தேகம்கொண்டார். பிறகு, தனக்குத்தானே `இது வெறும் சந்திப்புதான்.  அதற்குமேல் ஒன்றுமில்லை’ எனச் சொல்லிக் கொண்டார்.

பர்தா அணிந்த இளம்பெண்ணைப் பற்றி நினைக்க நினைக்க, தன் மீது ஒரு புறா வந்து அமர்ந்துவிட்டுப் பறந்து போய்விட்டதுபோல் இருந்தது.

`தான் ஒரு கற்சுவர். சுவர்கள் விரும்பினால் புறாக்கள் வந்து விடுவ தில்லை. புறாக்கள் அமர்வ தாலேதான் சுவர் அழகுபெறுகிறது. சுவர்கள், புறாக்களை நினைத்து வருந்திக்கொண்டே இருக்க வேண்டியதுதான்போலும்’ என நினைத்துக்கொண்டார்

ஹெட்கிளார்க், அவர் காதில் விழும்படி யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்...

``திங்கறதும் தூங்குறதும் மட்டுமா சார் மனுஷன்... அவனுக்குனு ஒரு சந்தோஷம் வேணாமா? என்ன சார் இருக்கு இந்த ஊர்ல? எல்லாத்துக்கும் காசு காசுனு புடுங்கிருறாங்க. வீடும் அப்படித்தான் இருக்கு... ஊரும் அப்படித்தான் இருக்கு.’’

``சரிதான்’’ என்று சத்தமாகச் சொன்னார் கோவர்தன்.

ஏன் இவ்வளவு சத்தமாகச் சொன்னார் என, குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் ஹெட்கிளார்க்.

அவர் பார்வையில் படாமல் தலையைக் குனிந்துகொண்டார் கோவர்தன். அந்த நிமிடம் இருக்கையையொட்டிய ஜன்னல் திறந்திருப்பது தொந்தரவாகத் தோன்றியது.

https://www.vikatan.com/

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதை எனக்கானதல்ல, யாரும் வயசானவர்கள் வந்து படித்துப் பயன் பெறட்டும்.....!  tw_blush:

  • தொடங்கியவர்
5 minutes ago, suvy said:

இந்தக் கதை எனக்கானதல்ல, யாரும் வயசானவர்கள் வந்து படித்துப் பயன் பெறட்டும்.....!  tw_blush:

நோ கமெண்ட்ஸ்..:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.