Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொட்டல் காட்டில் ஒரு கதை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                                                                    பொட்டல் காட்டில் ஒரு கதை.

 

அது ஒரு பொட்டல் காடு.ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.ஒரு ஒற்றையடிப் பாதை. தினசரி ஆட்கள் நடந்து நடந்து, மிதிவண்டிகளும் பிரயாணப்பட்டு ஒரு பாம்பின் முதுகுபோல் நீண்டு கிடந்தது.எப்போதும் அந்த காட்டு  வெளி ஆளரவமற்றே இருக்கும். விதம் விதமான பறவைகள் மற்றும் பாம்பு, கீரி, ஓநாய்,நாரி, முயல் என்று சிறுசிறு விலங்கினங்களும் உண்டு.

காவேரி தினமும் அந்தப் பாதையால்தான் பக்கத்து ஊருக்கு வேலைக்கு போய் வருவதுண்டு. அப்படி போய்வரும் நேரங்களில் ஒரு சிறு பையில் நொறுக்குத் தீனிகள் (பொரி ,கடலை,அரிசி இப்படி ஏதாவது)கொண்டு செல்வாள். அந்த பொட்டல் காடு வந்ததும் கொண்டுவரும் நொறுக்குத் தீனியை கொரிக்க தொடங்குவாள்.அவள் கையில் இருந்து சிந்துவதை சில குருவிகள் பொறுக்கி கொத்திக் கொண்டு பின்னாலே வரும். நாளடைவில் அவைகளை கவனித்த காவேரி அவைகளுக்கும் கொஞ்சம் கொஞ்சம் ஆங்காங்கே கூடுதலாக போட்டுகொண்டு நடப்பாள்.அதேபோல் அவள் மாலையில் வேலையால் வரும்போதும் இது தொடரும்.

                    அன்று வேலை நேரத்துக்கே முடிந்து விட்டது. அதனால் கொஞ்சம் வெள்ளனவாகவே எட்டி நடை போட்டு வருகிறாள்.அப்படி வரும்போது எதிரே மிதிவண்டியில் ஒருத்தன் வருகின்றான்.பின்னால் கேரியரில் இருக்கும் கூண்டில் சில பறவைகள் கத்திக் கொண்டிருக்கின்றன. காகம் போன்ற ஓரிரு பறவைகள் அந்த மனிதனை விரட்டி விரட்டி கொத்துகின்றன.அவன் ஒருகையால் அவற்றை விரட்டிக்கொண்டு மறுகையால் மிதிவண்டியை பிடித்து சிரமத்துடன் மிதிக்கின்றான்.அவன் பின்னால் ஒரு நாய் வேறு நின்று கொண்டு பெரிதாக குரைத்துக் கொண்டு வருகுது.

இவற்றை அவள் பார்த்துக்கொண்டு வரும்போதே சில அடி தூரத்துக்கு முன்னால் மிதிவண்டி ஒரு கல்லின்மேல் மோதி சமநிலை இல்லாது கவுண்டு விழுகின்றது. நாய் பாய்ந்து வெளியில் நின்று கொண்டு குரைப்பதுடன் அவளைப் பார்த்து உறுமிக்கொண்டு கடிக்கவும் வருகின்றது. விழுந்த கூண்டுக்குள் இருந்து குருவிகள் சிறகடித்து பெரிதாக கத்துகின்றன. காவேரிக்கு நிலைமை புரிகின்றது. இவன் ஒரு பறவைத் திருடன்.இந்தப் பொட்டல் காட்டுப் பறவைகளை தந்திரமாக பிடித்து போகிறான் போலும். இதை சும்மா விடக்கூடாது என்று ஒரு சுள்ளியால் நாயை "அடீக் அடீக் " என்று விரட்டிக் கொண்டே கூண்டைத் திறந்து விடுகிறாள். பல பறவைகள் திடுமென வெளியே பறக்கின்றன.பறக்க முடியாமல் அடிபட்ட பறவைகள் சில உள்ளே இருந்து கீச்சிடுகின்றன. உடனே சுதாகரித்து கொண்டு எழுந்த அந்த மனிதன் "எடியே என்னடி செய்கிறாய்" எழுந்து அவளை அடிக்க பாய்ந்து வருகின்றான். காவேரியும் பக்கத்தில் கிடந்த ஒரு கல்லை எடுத்துக் கொண்டு  வா உன்ர மண்டையை உடைக்கிறேன் என்று ஆவேசமாக நிக்கிறாள். அவனும் கோபத்துடன் தூஷண வார்த்தைகளால் அவளைத் திட்டுகின்றான். அப்போது அவ் வழியால் வந்த ஓரிருவர் என்ன ஏது என்று விசாரித்து கொண்டு அவ்விடத்துக்கு வர அம் மனிதன் மிதிவண்டியை எடுத்து கொண்டு அவளை முறைத்து பார்த்தபடி நாயையும் கூட்டிக்கொண்டு அவ்விடத்தை விட்டு போகிறான். போகும் பொது நாயும் அவளைப்பார்த்து உறுமிக்கொண்டு கூடவே போகின்றது.

சில நாட்களின் பின் ஒருநாள் மாலை நேரம், வழக்கம்போல் அந்த மனிதன் அந்த பொட்டல்  காட்டுக்கு வருகின்றான்.கூடவே நாயும் வருகின்றது. மிகச் சரியான ஒரு புதரைத் தேர்ந்தெடுத்து அங்குள்ள செடியில் தான் கொண்டுவந்த ஒரு குருவியை கட்டி விடுகின்றான். பின் சில ஈர்க்குச்சிகளை எடுத்து அவற்றின் மீது கொஞ்சம்  பிசின் போன்ற பசையை பூசிவிட்டு அந்த செடியில் அங்கங்கே வைத்து விட்டு சற்று தூரத்தில் போய் நாயோடு அமர்ந்து கொள்கிறான்.கட்டி இருந்த குருவி கீச் கீச் என்று கத்துகின்றது.

அதை குசலம் விசாரிக்க பறந்து வந்த சில குருவிகளும் பறவைகளும் ஒவ்வொன்றாக வந்து அந்த செடியில் அமர்கின்றன. இன்று நல்ல வேட்டைதான் என்று மகிழ்ச்சியுடன் அவன் அந்த புதருக்கு அருகில் வருகின்றான். அவனையும் நாயையும் கண்டதும் பறவைகள் எல்லாம் ஒருசேரப் பறக்கும் போது பசை தடவிய ஈர்க்குச்சிகள் அவைகளின் சிறகில் ஒட்டிக்கொள்ள அவை நிலைதடுமாறி விழுந்து துடிக்கின்றன.அவன் ஒவ்வொன்றாக அவற்றைப் பிடித்து கூண்டுக்குள் போடுகின்றான். இப்படியே எடுத்து கொண்டு வந்தவன் அந்தப் புதருக்குள் துடித்துக் கொண்டு  இருந்த ஒரு குருவியை எடுக்கும்போது அதனுள் இருந்த சர்ப்பம் ஒன்று சடுதியாக அவன் கையில் தீண்டி விடுகின்றது. விபரீதத்தை நாயும் உணர்ந்து கொண்டது.அது புதரை சுற்றி சுற்றி வந்து ஆக்ரோஷமாக குலைக்க பாம்பு புதருக்குள் இருந்து கிளம்பி வேகமாக ஓடி விடுகின்றது. சற்று தூரத்துக்கு பாம்பை  விரட்டி சென்ற நாயும் திரும்பிவந்து அவனருகே நின்று ஊளையிடுகின்றது.

                                        காவேரியும் அவள் தோழியும் சுவாரஸ்யமாக கதைத்து கொண்டு அவ் வழியே வருகின்றார்கள். அப்பொழுது நாய் வேகமாய் புதரை நோக்கி ஓடுவதை காவேரி பார்த்து விட்டாள். உடனே அங்கே கிடந்த ஒரு கல்லையும் எடுத்து கொண்டு தோழியிடம் பொறடி வாறன் இண்டைக்கு இவங்கட மண்டையை உடைக்காமல் விடுறேல்ல. தோழியும் நில்லடி காவேரி, எங்கடி போறாய் என்று கேட்டுக்கொண்டு பின்னால் ஓடி வருகிறாள்.  அங்கே  அவள் கண்ட காட்சி கொஞ்சம் நிதானிக்க வைக்குது. நாயும் இப்போது குலைக்காமல்  அவனை விட்டு விலகி எட்ட நின்று அனுங்குது. அதன் கண்களில் கண்ணீரும் வருவதை பார்த்தவள், அவனை நெருங்கி என்னடா நடந்தது என்று கேட்க அவன் பாம்பு கடித்ததை சொல்லிக் கையை காட்டிக் கொண்டே மயங்கும் நிலைக்கு போகின்றான்.

                                                                                            காவேரியும் தோழியிடம் எடியே இவனை தூங்கவிடாமல் பேச்சு குடடி என்று சொல்லி விட்டு விரைவாக புதரில் கட்டியிருந்த குருவியை அவிட்டு விட்டு அந்தக் கயிற்றால் அவன் கையில் இறுக்கி கட்டி விடுகிறாள். பின் தாமதிக்காமல் கூண்டைத் திறந்து குருவிகளைத் திரத்தி விட்டுட்டு கூண்டையும் அவிட்டு எறிந்து விட்டு, தோழியின் உதவியுடன் அவனை மிதிவண்டி கேரியரில் இருத்தி தானும் அதில் ஏறி இருந்து கொண்டு அவனது கையிரண்டையும் தனது வயிற்றுடன் சேர்த்து கட்டிக்கொண்டு மெதுவாக பக்கத்தில் இருக்கும் விஷக்கடி வைத்தியர் வீட்டுக்கு வண்டியை ஒட்டிக்கொண்டு முன்செல்ல பின்னால் தோழியும் நாயும் ஓடி வருகின்றார்கள். அவன் உறக்கத்துக்கு போகாமல் அவள் பேச்சு கொடுக்கிறாள். அவனும் தான் இனிமேல் எந்த பறவைகளையும் பிடிக்கவும்  துன்புறுத்தவும் போவதில்லை என்று உளறிக்கொண்டு வருகிறான்.

                                         அன்றிரவு முழுவதும் வைத்தியர் வீட்டில் அவருக்கும் உதவியாக அவனைத் தூங்கவிடாமல் அங்கேயே காவேரி தங்குகிறாள்.தோழியிடம் தனது வீட்டுக்கு தகவல் சொல்லி அனுப்பி விட்டாள். வைத்தியரும் கடிவாயை கீறி கட்டி ரத்தங்களை வெளியே பிதுக்கி விட்டு சில மூலிகைகளை வைத்துக் கட்டிவிட்டு இனி பயமில்லை என்கிறார். காவேரியும் அங்கிருந்த விசிறியால் அவனுக்கு விசிறிக்கொண்டிருக்க நாயும் அவளின் தொடையோடு உரசிக்கொண்டு படுத்து குறட்டை விட்டுக்கொண்டிருக்கு.......!

 

ஆக்கம் சுவி.....!

Edited by suvy

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுப் பறவைகளை... பிடிக்காதே என்று மனிதர் சொன்னால் கேட்க மாட்டாதவர்,
ஒரு, பாம்பு கடித்து திருந்தியதும்... நன்மைக்கே.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

காட்டுப் பறவைகளை... பிடிக்காதே என்று மனிதர் சொன்னால் கேட்க மாட்டாதவர்,
ஒரு, பாம்பு கடித்து திருந்தியதும்... நன்மைக்கே.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிறியர்.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அமளியிலும் குருவிகளை திறந்து விட்ட மிருக காருனியம் அசுத்துகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

ஆக்கம் சுவி.....!

வேறு யாரும் எழுதினதென்று சொன்னமா என்ன ????😁

தொடருங்கள் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

காவேரி தினமும் அந்தப் பாதையால்தான் பக்கத்து ஊருக்கு வேலைக்கு போய் வருவதுண்டு. அப்படி போய்வரும் நேரங்களில் ஒரு சிறு பையில் நொறுக்குத் தீனிகள் (பொரி ,கடலை,அரிசி இப்படி ஏதாவது)கொண்டு செல்வாள். அந்த பொட்டல் காடு வந்ததும் கொண்டுவரும் நொறுக்குத் தீனியை கொரிக்க தொடங்குவாள்.அவள் கையில் இருந்து சிந்துவதை சில குருவிகள் பொறுக்கி கொத்திக் கொண்டு பின்னாலே வரும். நாளடைவில் அவைகளை கவனித்த காவேரி அவைகளுக்கும் கொஞ்சம் கொஞ்சம் ஆங்காங்கே கூடுதலாக போட்டுகொண்டு நடப்பாள்.அதேபோல் அவள் மாலையில் வேலையால் வரும்போதும் இது தொடரும்.

 

சிறிய வயதில் பள்ளிக்கூடங்களில் பணிஸ் தருவார்கள்.மேல் பகுதியை மாத்திரம் தின்றுவிட்டு உள்ளுக்குள்ளதை கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து உருட்டி மேலே எறிய காகம் அதைக் கீழே விழவிடாமல் கொத்தும்.

அதே ஞாபகம் தான் வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டல் காட்டில் குருவிகளைப் பிடிக்கும் கலை இலகுவாக இருக்கின்றது. சின்ன வயதில் தெரிந்திருந்தால் நாங்களும் நாலு புலுணிக்குருவிகளைப் பிடிச்சிருக்கலாம்!

பேரப்பிள்ளைகளுக்குச் சொன்ன கதையா இது, சுவி ஐயா?🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பொட்டல் காட்டில் குருவிகளைப் பிடிக்கும் கலை இலகுவாக இருக்கின்றது. சின்ன வயதில் தெரிந்திருந்தால் நாங்களும் நாலு புலுணிக்குருவிகளைப் பிடிச்சிருக்கலாம்!

பேரப்பிள்ளைகளுக்குச் சொன்ன கதையா இது, சுவி ஐயா?🤔

சில வருடங்களுக்கு முன்பு ஒரு காட்டு வழியால் போகும்போது வழியில் ஒய்வு எடுப்பதற்காக தங்கினேன். அங்கு இன்னொருத்தர் வாங்கில்  படுத்திருந்தார். அருகில் அவரது காரும் உள்ளே நாயும் இருந்தது.நான் பிளாஸ்கில் இருந்து கோப்பியை கப்பில்  ஊற்றிவிட்டு அவருக்கும் வேணுமா என்று கேட்க அவரும் எழுந்து வந்தார்.சிறிது நேரம் கதைத்துகொண்டிருக்கும்போது குருவிகள் சத்தமாய் இருந்தது.  அவர் எழுந்து சென்றார். நானும் பின்னால் போனேன்.அங்கு நான் பார்த்த காட்சிதான் அது.அவற்றின் செட்டையில் குச்சி ஒட்டிக் கொண்டால் அப்புறம் அவைகளால் பறக்க முடியாது.மற்றும்படி காவேரி எனக்குள் இருந்திருக்க வேண்டும்........!   😂

இங்கு அப்படி பிடிக்கக் கூடாது.....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.