Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல்களுக்கெதிரான கண்டன அறிக்கை

ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல்களுக்கெதிரான கண்டன அறிக்கை


“கலாசாரமானது ஆதிக்கத்தன்மையுடையதாக இருக்கும்போது, அது வன்முறையானதாக இருப்பது மட்டுமன்றி அனைத்து உறவுகளையும் அதிகாரத்திற்கான போரட்டங்களாகவும் கட்டமைக்கும்” 

- பெல் ஹூக்ஸ்  The Will to Change: Men, Masculinity, and Love

“நாம் ஆற்றல் மிக்கவர்கள். ஏனெனில்  வன்முறையிலிருந்து வெளியேறி தொடர்ந்து வாழ்வதென்பதே நமது ஆற்றலுக்கு சாட்சிதான். இதன் மொத்த சாராம்சமும் முற்றுமுழுதாக நமது ஆற்றலையும் வளர்ச்சியையும் பற்றியது”

- ஓட்ரி லோர்ட் https://www.blackpast.org/african-american-history/1982-audre-lorde-learning-60s/


பெண்ணிய அக்கறையாளர்கள் இணைந்து தயாரித்த கண்டனக் கூட்டறிக்கையை உங்கள் கவனத்திற்கு வைக்கிறோம். 

எழுத்தாளர் நடிகர் ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் நடவடிக்கைகளால் பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பல பெண்கள் மற்றும் குயர் சமூகத்தினரின் வாக்குமூலங்களை  ஆழமாகவும் விரிவாகவும் பரிசீலித்ததின் அடிப்படையில், அவர்களுக்கான எங்களின் முழுமையான ஆதரவையும், ஆணதிகார துஷ்பிரயோகத்திற்கான எதிர்ப்பையும் பரவலாக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் பொறுப்பேற்று அதற்கமைந்த பெண்கள் கூட்டமைப்பொன்றினை உருவாக்கியுள்ளோம்.

பெண்களின் குரல்கள் எழும்போதெல்லாம் காக்கப்படும் கள்ள மெளனங்கள் நம்மை மேலும் மேலும் பலவீனமாக்குவதை அனுமதிக்க முடியாதென்பதாலும் கலை இலக்கிய அரசியல் வெளிகளுக்குத் துணிந்து செயலாற்ற வரும் பெண்களுக்கும் பால்பல்வகையினருக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அதிமுக்கியமான தேவை என்பதாலும் இந்த கையெழுத்து இயக்கத்தை முன்னெடுக்கிறோம். 

பாலியல் சுரண்டலானது ஆண் பாலினத்திற்கு வழங்கப்பட்ட சலுகையாக இயல்பாக்கப்பட்டிருப்பதும், வரலாறு நெடுகிலும் வன்முறையை அனுபவிப்பதே பெண் பாலினத்திற்கும், பால்பல்வகைமையினர்களுக்கும் விதிக்கப்பட்ட நியமமாக இருப்பதும் கண்கூடு. இதை வெற்று மெளனத்தால் கடப்பது, ஒடுக்குமுறைகளிலேயே அதிமுதன்மையான நிறுவனமான ஆணாதிக்கத்தின் அடிமைச் சங்கிலிகளை இன்னும் இறுக்கி கொள்வதற்கு சமமானது தான் என்பதால் நாங்கள் அதை உடைத்து நொறுக்குவதில் உறுதியாக இருக்கிறோம். 

எழுதும் ஆண் தன் ஆதிக்கப்பால்நிலை (cis gender) அடையாளத்தை, அது தரும் அதிகாரத்தை, பாலியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக பெண்களைச் சுரண்டுவதற்கும், பெண்களுக்கும், பால்பல்வகைமையினர் (queer) மற்றும் திருநர்களுக்கும் எதிரான வன்முறைகளுக்குப் பயன்படுத்துவதும், அதை அறிவுப்பித்து, கலைமனப்பிறழ்வு, மீறல், கட்டுடைத்தல் என்று முட்டுக் கொடுப்பதும் தமிழ்ச்சூழலில் தொடர்ச்சியாக நடந்துவருகிறது. சுயமரியாதை சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, தாங்கள் சார்ந்த குடும்பம் - சாதி- மத அமைப்புகளின் கடும் எதிர்ப்புகளைத் தாண்டி அரசியல், கலை, இலக்கியம் என்று அறிவுத் துறைகளைத் தேர்ந்தெடுத்து வரும் பெண்களும் திருநங்கைகளும் அதே சுரண்டலால் பாதிக்கப்படும்போது சமூக ரீதியாக எந்த பாதுகாப்புமற்ற சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். திரும்புவதற்கு இடமில்லாமல் அநாதரவாகின்றார்கள். கனவுகளைக் காவு கொடுத்துவிட்டு தங்கள் கூண்டுகளுக்கே திரும்ப நேர்கின்றனர். 


தமிழில் தேர்ந்த எழுத்தாளர் என்று தன் தொடர்ச்சியான படைப்புகளால் அடையாளம் காணப்படுபவர் ஷோபாசக்தி. பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய, பெண்ணியக் கோட்பாடுகளால் வழிநடத்தப்படுவராகவும் தன்னை முன்னிறுத்திக்கொண்டவர். ஆனால் அவர் மேல் பாலியல் சுரண்டல் புகார்களை பல பெண்களும் குயர் சமூகத்தினரும் எழுப்பியுள்ளனர். இந்தியாவிலும், கனடாவிலும் ஐரோப்பாவிலும்  பல பெண்களுக்கு பொய் வாக்குறுதிகள் தந்து உறவில் ஈடுபடுத்திவிட்டுப் பின், அதில் இரண்டு பெண்களைத் தற்கொலை முயற்சிக்கு  தள்ளுமளவு மனச்சேதத்தை ஏற்படுத்தியுள்ளார். 

இவ்வறிக்கை  பாதிக்கப்பட்டவர்களின் தீவிர பங்கேற்புடனும், ஷோபாசக்தியால்  தங்களுக்கு இழைக்கப்பட்ட துஷ்பிரயோகத்தின் அனுபவங்களை வெளிப்படையாகவும் தனிப்பட்ட முறையிலும் வெளிப்படுத்திய பல பெண்களுடனும் ‘குயர்’ சமூகத்தினருடனும் இடம்பெற்ற தொடர்ச்சியான உரையாடல்களின் விளைவாகவும் உருவாக்கப்பட்டதாகும்.

ஷோபாசக்தியால் பாதிக்கப்பட்ட நபர்களுடனான இந்த உரையாடல்களில் வெளிப்பட்ட துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலின் வடிவங்கள்/போக்குகள்:

  1. ஷோபாசக்தி தன்னையொத்த கண்ணோட்டம் கொண்ட  பெண்களைச் (பெண்ணிலைவாதிகள், மார்க்சியவாதிகள், சாதி மறுப்பாளர்கள், ‘குயர்’ சமூக கூட்டாளிகள்) சுரண்ட தனது அரசியல், கலை சார்ந்த பார்வைகளை பயன்படுத்துகின்றமை.

  2. ஷோபாசக்தி பொதுவெளியில் அறியப்பட்ட பெண்ணிலைவாதிகள், கலைஞர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களுடனான தனது தொடர்புகள் மற்றும்/அல்லது உறவுகளைப் பயன்படுத்தி தனது துஷ்பிரயோக மற்றும் சுரண்டல் நடத்தைகள் குறித்த சந்தேகங்கள் எழாதவாறான சூழலை உருவாக்குகின்றமை.

  3. ஷோபாசக்தி தான் அகதியாக இருந்த வரலாற்றையும், ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பின்  முன்னாள் உறுப்பினராக இருந்த அடையாளத்தையும், தன்மீது அனுதாபத்தினை ஏற்படுத்துவதற்கும், அதன்மூலம் பெண்களை ஏமாற்றித் தன்வசப்படுத்துவதற்கும் பயன்படுத்துகின்றமை.

  4. ஷோபாசக்தி சர்வதேச தொடர்புகளையும் செல்வாக்கையும் பயன்படுத்தி, குடியுரிமை தொடர்பான சட்டச்சிக்கல்களைக் கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் ‘குயர்’ சமூகத்தினருக்கு புகலிடக் கோரிக்கைகள்/குடியுரிமைகள் விடயத்தில் உதவுவதாக நம்பிக்கை ஏற்படுத்தியதோடு தனது அந்தஸ்தையும் அனுபவங்களையும் பயன்படுத்தி நீண்டகால வதிவுரிமைப் பாதுகாப்பிற்கான பொய் நம்பிக்கைகளை விதைத்தமை.

  5. ஷோபாசக்தி தன்மீது உணர்வு ரீதியாக நெருக்கமாகி, சார்ந்திருக்க வேண்டிய  நிலையை (co-dependency) உந்துகிற வகையில்  தனது வயதையும், உடல் நலம் சார்ந்த பராமரிப்புக்கான தேவையையும் கூறி பெண்களிடம்  கழிவிரக்கம் தேடுகின்றமை.

  6. ஷோபாசக்தி திருமணம், குடும்பமாக சேர்ந்து வாழ்தல் போன்ற பொய்யான வாக்குறுதிகளைத் தந்து, உணர்வுரீதியாகவும் உடல்ரீதியாகவும் நெருங்கி வாழத்  தொடங்கியப்  பெண்களிடம் ஆரம்பக்கட்டத்தில் அளவுக்கதிகமாக அன்பை கொட்டுவதைப்(love bombing)  போல காட்டி அவ்வப்போது  தனிமைப்படுத்திப் பின் ஒரேயடியாக புறக்கணித்து அவர்களை முற்றிலும் பலவீனப்படுத்திப் பயன்படுத்திக்கொண்டமை.

  7. ஷோபாசக்தி அவரை விட்டு விலக முடிவெடுக்கும் பெண்களுக்கு அமையும் வேறு உறவுகளைக் குழப்பும் வகையில், அவர்களின் வாழ்வை அத்துமீறிப்  பின்தொடர்வதோடு (stalking) அவர்கள் மீதான தனது 'உடைமை உணர்வையும்’(territorializing) தக்கவைத்துக் கொள்கின்றமை.

  8. ஷோபாசக்தி தனது அரசியல், இலக்கிய சகபாடிகளைத்  திரட்டி பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும்  ‘குயர்’ சமூகத்தினரின்  பாடுகளையும் அனுபவங்களையும் கீழ்மைப்படுத்தி, 'கலைஞனின் பிறழ்வு இயல்பானது' எனக் கற்பிதங்களைப் பரப்பி தனது வக்கிரங்களை நியாயப்படுத்துகின்றமை. 

  9. ஷோபாசக்தி தனது  விசுவாசமிக்க ஆதரவாளர்களைக்கொண்டு பெண்களையும் ‘குயர்’ சமூகத்தினரையும் ஏளனப்படுத்தியும் அச்சுறுத்தியும் மலினப்படுத்தியும் வாயடைக்கச் செய்கின்றமை. இதன்மூலம் பாதிப்புக்குட்படுத்தப்பட்டவர்களின் சுயத்தை  உடைத்து அவர்களை கழிவிரக்கத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்துகின்றமை.

  10. ஷோபாசக்தி ஒரே சமயத்தில், பல்வேறு நாடுகளில், நகரங்களில் பல பெண்களிடம் அவர்கள்  ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக, நிலைத்த துணைக்கான - நீடித்த பந்தத்துக்கான  உத்தரவாதத்தைப் பொய்யாக அளித்து, உறவு வைத்துக் கொண்டு ஏமாற்றி பித்தலாட்டம் செய்து வஞ்சித்தமை.


பாதிப்புக்குட்படுத்தப்பட்டவர்களால் வெளிப்படுத்தப்பட்ட அனுபவங்கள்:


பாலியல் சுரண்டல் இடம்பெறும் வகையில் சூழலை உருவாக்குவது:   ஷோபாசக்தி பாலியல் ரீதியாக சுரண்டிய பெண்களில் பெரும்பாலானோர், அவருக்கு எப்போதும்  நற்சான்றிதழ் தரும் அறிவுஜீவிகள் மற்றும் கலைஞர்கள் நிறைந்த சபைகளிலும் இடங்களிலும்  தான் அவரை சந்தித்ததாகவும், அவர்கள் அவரிடம் காட்டும் அதே மரியாதையுடனும் அக்கறையுடனும் தம்மையும் நடத்துவார்கள் என்று நம்பியதாகவும்  தங்கள் வாக்குமூலத்தில்  தெரிவித்தனர். அவரோடான உறவை ஊக்குவித்த மேன்மக்களை அணுகி உறவில் நடக்கும் முறைகேடுகளை பேச முற்பட்ட போதெல்லாம், ஷோபாசக்தி போரினால் பாதிக்கப்பட்டவர் - அகதி, பல கஷ்டங்களை அனுபவித்தவர் என அவர்மீது அனுதாபம் கொள்ளும்வகையில் பேசியதுடன், கலைஞனின் அதீதம் புரிந்துகொள்ளப்படவேண்டியது என வாதாடியதன் மூலமும் மெளனிக்கப்பட்டிருக்கிறார்கள். அவருடைய வெறித்தனமான நடத்தை (obsession) தொடர்பில் பெண்கள் சந்தேகப்பட்டு அவரின் சகாக்களிடம் பேசுகையில், எழுத்தாளனதும் கலைஞனதும் பிறழ்வுகள், அதீதப் போக்குகள் இயற்கையானவை என அப்பெண்களிடம் சொல்லப்பட்டு இவரின் துஷ்பிரயோக நடத்தைகள் நியாயப்படுத்தப் பட்டிருக்கின்றன.  அதன்மூலமாக அந்த உறவினை அவராக முறித்துக்கொள்ளும்வரை, சுரண்டல் என்று உணர்ந்தும் அப்பெண்கள் அந்த உறவில் தொடர்ந்து நிலைத்திருப்பதனை அவரின் கூட்டாளிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

எழுதிவைக்கப்பட்டது போலவே ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகளை ஒரேமாதிரி ‘திடீரென’  முறித்துக்கொள்ளும் போது, தனது ‘ஆளுமையாலும், புகழாலும், மேதைமையாலும்’ ஈர்க்கப்பட்டு அப்பெண்கள், திருமணம் குடும்பம் எனக்கேட்டு   தன்னை ‘நிறுவனமயப்படுத்த’(institutionalise) முற்படுவதாக பொய்சொல்லி, ஷோபாசக்தி தன் சுரண்டலை ஒவ்வொரு தடவையும் நியாயப்படுத்தியிருக்கிறார்.

கட்டுப்படுத்துவதும்(Controlling) தன்னுடைமை(Ownership) என அதீத உரிமை எடுப்பதும்: பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்களின் அனுபவங்களின்படி  ஷோபாசக்தி தன்னுடன் உறவிலிருந்த பெண்கள்மீது அதீத உடமையுணர்வை (possessive) வெளிப்படுத்தி வந்திருக்கிறார். அவருடன் நீண்டகால உறவிலிருந்த ஒரு பெண்ணிடம், அவர் கழிவறை போகும் போதுகூட ‘என்னை விட்டுவிட்டு அப்படியே வெளியே போய்விடுவாயா?’ என்று கேட்டு அழும் அளவிற்கு வெறித்தனமான (obsessive) ஒட்டுதலுடன் இருந்திருக்கிறார். தன்னுடன் உறவிலிருந்த பெண்கள் தங்களது வாழ்க்கையில் கவனம் செலுத்துகையில் குறிப்பாக அவர்கள் மற்றுமொரு உறவிற்குச் செல்லுகையில், ஷோபாசக்தி திடீரென அறிவிக்காமல் அவர்களது வீடுகளுக்குச் செல்லுதல், பொதுவெளிகளில் எதிர்பாராவிதத்தில் சந்திக்கும் இடங்களில்கூட அப்பெண்களின் துணைவர்களுக்கு சந்தேகம்வரச் செய்வதனை நோக்கமாக கொண்டு, அவருடனான உறவு இன்னும் முடியவில்லை என்பதுபோல நிரூபிக்க முயற்சித்தல் ஆகிய நடத்தைகளைக் கொண்டிருந்திருக்கிறார். இதன் காரணமாக இவருடன் உறவிலிருந்த பெண்களை உறவிற்குப் பின்னரும் ஏதோ ஒருவிதத்தில் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதன் மூலம் எப்போதாவது வாய்ப்புக்கிடைக்கும்போது பாலியல் சுரண்டலில் ஈடுபடுவதற்கு ஏதுவான சூழலினைப் பேணியிருந்திருக்கிறார்.

அனுதாபத்தை ஏற்படுத்தி நச்சு சார்புநிலையை உருவாக்குதல்: 

ஷோபாசக்தி அளவுக்கு  மீறிய சுயஅபிமானக் (narcissist) கூறுகள் நிறைந்த நடத்தைகளை அவருடன் பழகிய பெண்கள் எல்லோரோடும் வெளிப்படுத்தியிருக்கிறார். உறவுகளின் ஆரம்பத்திலிருந்தே அளவுக்கதிகமாக அப்பெண்களை நேசிப்பதாக நடிப்பதில் தொடங்கி, பிறக்காத கற்பனைப் பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பது வரை எதிர்காலத்திற்கான பொய்யான உத்தரவாதத்தினை வழங்கி நம்பிக்கையைக் கட்டியெழுப்பி திட்டமிட்டு பாலியல் சுரண்டலை நடத்தியிருக்கிறார். ஐரோப்பாவில் பால்நிலைசார் அகதியாக புகலிடம் பெற்றுத் தருவதாக வாக்குத்தந்து குயர் உறவுகளைப் பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். உறவிலிருக்கும் பெண்கள்மீது இவர் வைத்திருந்த கட்டுப்பாடு (control); மிகையான அன்பைக் கொட்டுவது(love bombing); அதன்பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு அப்பெண்களை கண்டு கொள்ளாமல் விடுவதன் மூலம் (neglect) தன்னை நினைத்து ஏங்கச் செய்வது; இவ்வாறான ஒரு வன் (abusive) உறவு ஏற்படுத்தும் பதட்டங்களை உருவாக்கி, அப் பெண்களைவிட்டு இவர் விலகும்போது, இலகுவில் அவரைவிட்டு விலகமுடியாத நிலையினையும், அதன் காரணமாக ஆழ்ந்த மனச்சிதைவையும் ஏற்படுத்தியிருந்திருக்கிறார். தான் கடந்த காலத்தில் அகதியாக இருந்த கதைகளை சொல்லியும் தன் நோய்களைச்  சுட்டியும், தன்னைப்  பார்த்துக்கொள்ள யாருமே இல்லை என்று பச்சாதாபத்தை ஏற்படுத்தியும், தான் செத்தால் கொள்ளி போட வேண்டும் என்று கேட்டும், தன் மேல் அனுதாபத்தை ஏற்படுத்தி, உணர்வுகளைச் சுரண்டி, ஒரு நச்சான சார்பு நிலையை உறவுகளில்  உருவாக்கியிருக்கிறார். பாதிப்புக்குட்படுத்தப்பட்ட  பெண்ணொருவர் கூறுகையில் ஷோபாசக்தி  குடிக்கு அடிமையாக இருப்பதுடன்  தன்னையும்  அப்பழக்கத்திற்கு  ஆளாக்கிவிட முனைந்தார் என்பதாலேயே  அவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டதைக் குறிப்பிட்டார்.  ஆக இவருடன் உறவில் இருந்த பெண்களோ, குயர் சமூகத்தினரோ இவர் பரப்பிய பொய்யான பிம்பத்தைப் போன்று  இவரின் ஆளுமைமீது மோகம் கொண்டு இணைந்து வாழ விரும்பியிருக்கவில்லை. மாறாக இவர் அவர்கள்மீது காட்டிய வெறித்தனமான பிடித்தம், எதிர்காலம் குறித்து ஷோபாசக்தி ஏற்படுத்திய நம்பிக்கை, முற்போக்கு சித்தாந்தங்களைப் பேசி உருவாக்கிய பாதுகாப்புணர்வு என்பவற்றின் காரணமாகவே அவர்மீது ஆழமான நேசத்தினை வளர்த்திருந்தனர்.

விளிம்புநிலை திருநங்கைகளை சுரண்டுதல்:  ஷோபாசக்தி வெளிநாட்டில் பால்நிலைசார் அகதியாக புகலிடம் பெற்றுத் தருவதாக கூறி திருநங்கை செயற்பாட்டாளரை பாலியல் ரீதியாக சுரண்டியதோடு மட்டுமல்லாமல், தான் திரைக்கதை எழுதி நடித்த ரூபாவிலும்(Roobha) அந்த உறவில் நடந்தவற்றையெல்லாம் பயன்படுத்தி காட்சிகளாக்கியுள்ளார். பாதிப்புக்குட்படுத்தப்பட்ட  அத்திருநங்கை, “ரூபா” திரைப்படத்தைப் பார்த்தபோது தனக்கேற்பட்ட உணர்வுகள் தொடர்பில் கூறுகையில், அந்தப் படத்தில் வெளிப்பட்ட திருநங்கை வெறுப்பே (transphobia) திருநர்கள் தொடர்பில் ஷோபாசக்தி யின் உண்மையான நிலைப்பாடு எனவும், தன்னை அவர் மற்ற ஆண்களைப் போல மனிதத்தன்மையற்ற முறையில் தனது பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளவே பயன்படுத்திக் கொண்டதாகவும் குறிப்பிட்டார். பொதுச் சமூகத்தில் திருநங்கைகளைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவது இயல்பானதாயிருக்கின்றதாயினும் திருநர் கூட்டாளியாக (trans ally) தன்னைக் காட்டிக்கொண்ட இவரிடம் அத்தகைய கீழ்மையான செயலைத் தான் எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் கூறி வருந்தினார். 

பெண்களையும் ‘குயர்’ சமூகத்தினரையும் இழிவுபடுத்துதல்: ஷோபாசக்தி தான் உறவிலிருந்த பெண்களுடன் உறவினை எதேச்சதிகாரமாக முறித்துக்கொண்டது தொடர்பில் பிறர் வினவும்போது அப்பெண்கள் தன் மீது உடைமை உணர்வுடன் (possessive) இருப்பதாகவும், சில பெண்கள் தனது அம்மா மற்றும் தங்கையுடன் பேசுவதைக்கூட விரும்புவதில்லை எனும் அளவிற்கு தன்னை சொந்தம் கொண்டாடுவதாகவும், உறவென்றான  பிறகு தன்னைத் திருமணம் செய்ய அவர்கள் வற்புறுத்துவதாகவும் கூறி அதனாலேயே தான் அந்த உறவினை முறித்துக்கொண்டதாக சாட்டு சொல்லி நியாயப்படுத்தி வந்த ஷோபாசக்தி, தனது ஆளுமையினைக்  கேடயமாக்கி தன்னைத்தானே தொடர்ந்து பாதுகாத்தும் வந்திருக்கிறார். மற்ற இளைய எழுத்தாளர்கள் மீது பாலியல் புகார்கள் வைக்கப்பட்டபோதும், ஷோபாசக்தி தன் இலக்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கு அரண்கொடுக்கும் நடவடிக்கைகளை திட்டமிட்டவகையில் மேற்கொண்டுவந்திருக்கின்றார். அவர்களோடு  இணைந்து பாலியல் சுரண்டலாளர்களை ஆராதிக்கும் ஒரு கலைக்குழுவை உருவாக்குவது போன்ற செயல்பாடுகள், தன் அழுக்கை மறைத்துக் கொள்வதற்கான பிரயத்தனங்கள் என்றே புரிந்துக்கொள்ள முடிகிறது.

மிரட்டுதலும் மெளனிக்கச்செய்வதும்: ஷோபாசக்தி அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக பேசுபவர்களிடம், நீங்கள் என்ன கலாசார காவலர்களா (cultural Policing) என்று கேட்டதுடன் அவருடைய சக அறிவுஜீவி கூட்டாளிகளை விட்டு அதையொட்டி கட்டுரை எழுத வைப்பது, அறிக்கை விடச் செய்வது என்று தனது செல்வாக்கை ஊடகமாக்கி, பாதிப்புக்குட்பபடுத்தப்பட்ட பெண்களையும் அவர்களுக்காக பேச வந்தவர்களையும் பிற்போக்காளர்களாக அடையாளப்படுத்தி குணக்கொலை (character assassination) செய்திருக்கிறார். இந்தியாவிலும், கனடாவிலும் ஐரோப்பாவிலும் பல பெண்களையும் ‘குயர்’ சமூகத்தினரையும் தனது ஒரே பாணியிலான மூளைச் சலவைக் கதைகளினூடாகச் சுரண்டி அதில் இரண்டு பெண்களைத் தற்கொலைக்கு தள்ளுமளவு மனச்சேதத்தை ஏற்படுத்தியுள்ளார். தற்கொலை முயற்சியினை மேற்கொண்ட பெண்களையும் ஷோபாசக்தி யும் அவரது குழாமும் விட்டுவைக்கவில்லை. “ஆளுமை இருக்கும் பெண்கள் இந்த அனுபவத்திலிருந்து மீண்டு இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தமது வாழ்க்கையில் கவனம் செலுத்துவார்கள், ஆளுமை குறைந்த அல்லது ஆளுமையற்ற பெண்களே இதுதொடர்பில் சதா புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது தற்கொலை முயற்சி செய்கிறார்கள்” என அப்பெண்களை அவர்கள் குற்றம் சுமத்துவதானது (victim blaming)  பாதிக்கப்பட்டவர்களை மனிதத்தன்மை நீக்கம் செய்வதல்லாமல் (dehumanising) வேறேது? பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்கள், பாதிக்கப்பட்டவர்களாக உணரக்கூடாது் - அவ்வாறு உணர்வது இழிவானது, பாதிக்கப்பட்டாலும் அதை சத்தம் போடாமல் கடந்து போவது தான் ‘பின் நவீன சிந்தனை’ எனப் பேசி, ஷோபாசக்தி யின் ‘எழுத்துலக, கலையுலக, அரசியிலுலக’ சகாக்கள், பாலியல் சுரண்டலினை சாதாரணமயப்படுத்தி வந்திருக்கின்றார்கள். அதுதவிர அன்பு செய்த அளவிற்கு ஏமாற்றத்தையும் துரோகத்தையும் ஒரு மனவடுவாக உணர்வதும் அதைத் தாங்கிக்கொள்ளமுடியாதளவிற்கு மனச்சிதைவினை ஏற்படுத்தியவனை விட்டுவிட்டு தற்கொலை முயற்சி செய்யும் பெண்களைக்கூட குற்றஞ்சுமத்தி, ஆளுமையான பெண்கள் இவ்வாறான சுரண்டல்களைக் கடந்துபோய்விடுவார்கள் என்பதாகப்பேசி நேர்மறையான தீர்ப்பு (positive judgement) மூலமாக அவர்களின் குரலை ஒடுக்கியிருக்கிறார்கள். 

ஆண் கலைஞர்களது பிறழ்வுகள் எத்தகையதாயினும் மனநோயாகவோ அல்லது மன அழுத்தமாகவோ கருதப்படுவது பால்நிலை பாரபட்சமும் இரட்டை நிலைப்பாடுமல்லாது வேறேது? இருபதிற்கும் மேற்பட்ட பெண்களிடம் ஒரே நாடகத்தை மீண்டும் மீண்டும் ஆடி பாலியல் ரீதியாக சுரண்டுவதற்கான அனுமதியை(license) 'எழுத்தாளர்', 'கலைஞர்' என்ற பெயரில் ஆண்களுக்கு வழங்குவதை எந்த சித்தாந்தம் வழிமொழிகிறது? ஆக பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவதுடன் அதிலிருந்து தமக்குத்தாமே தண்டனை விலக்கும் பொறுப்புக் கூறலிலிருந்து விலக்கும் பெற்றுக் கொள்வதற்காக, பாலியல் சுரண்டலில் ஈடுபடும் ஷோபாசக்தி போன்றோராலும் அவர்களது குழாமினாலும் உருவாக்கப்பட்டு பரவவிடப்பட்ட கருத்தியல் கட்டுக்கதையே கலைஞர்களின் ‘பிறழ்'வாகும்.

பொதுவாக பாலியல் சுரண்டல்காரர்களின் உத்திகளில் பல பொதுவான போக்குகளை அவதானிக்க முடியும். அவை ஒரேமாதிரியானவை. அதிலொன்றுதான் பெண்களையும் திருநங்கைகளையும் பாலியல் பண்டங்களாக நடத்தும் போக்கு. தன்னைவிட இளவயது பெண்களிடம் உறவிலிருக்கும் போது, அதையும் பெருமையாக, 'I am having a young lover' எனப் பெருமை பாடியும், அவர் குடிக்குமிடங்களில் தன்னோடு உறவிலிருந்து பெண்களைப் பற்றி பிதற்றியும் தனது ஈகோவிற்கும் ஆணாதிக்கச் சிந்தனைக்கும் தீனியளித்து வந்த ஷோபாசக்தி சமூகத்தில் தன்னை முற்போக்கானவராகவும், அநீதிக்கெதிரான ஒடுக்குமுறைக்கான குரலாகவும் காட்டிக் கொண்டாலும், அவர் பார்வையில் பெண்கள் வெறும் பாலியல் பண்டங்களே!

இந்தப் புகார்களுக்கெல்லாம் ஆதாரம் என்ன, அந்தப் பெண்கள் ஏன் அப்போதே பேசவில்லை, ஏன் போலீஸுக்குப் போகவில்லை, ஏன் தற்காப்பு கலைகள்  பயிலவில்லை, அவர்களும் மனம் ஒத்து தானே அவரிடம் பழகினார்கள், என்று கேட்பதற்கான எந்த அருகதையும், பேசத்துணியும் பெண்களையெல்லாம் வார்த்தைகளாலும் பார்வைகளாலும், தங்கள் தீர்ப்புகளாலும் வன்முறை செய்யக் காத்திருப்பவர்களுக்கு இல்லை என்பதையும், ஆண்மைய சமூகத்தில் நிலவும் அதிகார ஏற்றத்தாழ்களில் ஒப்புதல்(consent) எப்படி திரிவுபடுத்தப்படுகின்றது என்ற புரிதல் இல்லாதது போல பாசாங்கு செய்பவர்கள் சுரண்டலுக்குப் பல்லக்கு தூக்குகிறவர்கள் என்பதையும் இங்கு நினைவுறுத்துகிறோம். இந்தச் சமுகம் பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்கள் பேசுவதை மதிக்கக்கூடிய, நம்பக்கூடிய மன உயரங்களை அடையும்போது இந்த அறிக்கைகள் எழுதும் பொறுப்பிலிருந்தும் எம்மை நாம் விடுவித்துக்கொள்வோம்.  

சமூக அழுத்தங்களையும் மீறி குரலெழுப்பிய பெண்கள் மற்றும் குயர் சமூகத்தினரின் வாக்குமூலங்களைக் கேட்டறிந்த பின்னும், அதற்கான எந்தவொரு பொறுப்புக் கூறலையும் கோராத அதேவேளை, ஷோபாசக்திக்கும் அவரது  பாலியல் சுரண்டல் நடவடிக்கைகளை முன்னுதாரணமாகக் கொண்டு அவரைப் பின்பற்றும் இளம் எழுத்தாளர்களுக்கும்  தளங்களை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களுக்கு விருதுகளையும் அங்கீகாரத்தினையும் வழங்கிய ‘முற்போக்கு' இயக்கங்கள், காந்தியவாதிகள், பதிப்பாளர்கள், அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எமது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஷோபாசக்தி, பல பெண்களையும் குயர் மக்களையும் உணர்வுரீதியாகவும்,  உடல்ரீதியாகவும்,  பாலியல் ரீதியாகவும், மோசமாகப் பாதிப்படையச் செய்த தனது நடத்தைகளுக்குப் பொறுப்புக்கூறுவதுடன், இனி இத்தகைய நடத்தைகளில் ஈடுபடுவதை அறவே நிறுத்திக் கொள்ள வேண்டும். 

ஷோபாசக்தி, தான் எதிர்காலத்தில் இதுபோன்ற நடத்தைகளில் ஈடுபடமாட்டார் என்பதை தன்னுடன் தொடர்புள்ள கலை இலக்கியச் சமூகத்திற்கு உறுதிப்படுத்த வேண்டும் .

ஷோபாசக்தியைப் பொறுப்புக்கூறச் செய்வதற்குப் பதிலாக, அவரது முறையற்ற நடத்தையினைச் சாத்தியப்படுத்திய அவரது அனைத்து நட்புசக்திகளிடமும் தமது செயற்பாடுகள் குறித்துச் சிந்திக்குமாறு வலியுறுத்துகிறோம்.

ஷோபாசக்தியுடன் இயங்கும் அனைத்து அமைப்புக்களையும், தெரிந்தும் தெரியாமலும் அவரது இத்தகைய செயற்பாடுகளுக்கு உடந்தையாயிருந்தமைக்காக பொறுப்புக் கூற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

ஷோபாசக்தியால் பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்களையும் குயர் சமூகத்தினரையும் கருத்தில் கொள்ளாத அமைப்புக்களிடமும் நபர்களிடமும் (கலைஞர்கள், அறிவுஜீவிகள் மற்றும் அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள்) இப்பெண்கள் மற்றும் குயர் சமூகத்தினரை நீண்டகாலமாக நச்சுச் சூழலில் நீடிக்கச் செய்தமை தொடர்பிலும்,  அதன் விளைவாக  அவர்கள் பங்களிப்புச் செய்து    கொண்டிருந்த  துறைக்கும், இயக்கங்களுக்கும் ஏற்படுத்திய தீங்கு தொடர்பிலும்  சிந்திக்குமாறு வலியுறுத்துகிறோம். 

அநீதியின் மீதான மெளனமும், பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்குரல்வளைகளின் மீது அலட்சியமாக நடந்து செல்லும் போக்கும் சுரண்டலுக்கும் வன்முறைக்கும் துணை நிற்கும் அநீதியான சூழலில், எதிர்ப்பு ஒன்று தான் மனிதத்தின் மனசாட்சியாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த அறிக்கை அதன் எதிரொலி.

In Solidarity

  1. Ambai (Writer/Mumbai, India)

  2. Ajitha K (Feminist Activist, President - Anweshi/Kozhikode, Kerala)

  3. Ajitha (Youth Leader/Vallamai, Jaffna, Sri Lanka) 

  4. Amala (Advocate/Delhi, India)

  5. Anandhi Suresh (Feminist Activist, Switzerland)

  6. Ananya ( Researcher and Artist/Delhi, India)

  7. Angel Queentus (LGBTQ+ Activist/Sri Lanka) 

  8. Anjana (Feminist Activist/Britain) 

  9. Anitha Vinayagam (Women and Queer Rights Activist and Entrepreneur/Chennai, India)

  10. Ardra Sivan V (Member - Dravidian Political Society/Trivandrum/India)

  11. Arpita Banerjee (Performing Artist and Writer/Mumbai)

  12. Asha Achi Joseph (Film Director - Women in Cinema Collective/Kerala, India)

  13. Asha Latha (Poet and Translator/Kerala, India)

  14. Barathy Sivaraja (Marxist Feminist/Britain)

  15. Bina Paul (Film Editor - Women in Cinema Collective/Kerala, India)

  16. Bisliya Bhutto (Social Activist/Puttalam, Sri Lanka)

  17. Chandra Nalliah (Feminist Activist/Canada)

  18. Chinmayi Sriprada (Singer, Voice Actor and Entrepreneur/India)

  19.  Dhamayanthi (Writer and Filmmaker/ Chennai, India)

  20. J Devika (Feminist Scholar and Writer/Kerala, India)

  21.  Deedi Damodaran (Screenwriter-Women in Cinema Collective/Kerala, India)

  22. Deepalakshmi (Techie-Writer-Feminist/Chennai, India)

  23. Dhivya Marunthaiah (Political Activist/India) 

  24. Divya Bharathi (Independent Filmmaker and Advocate/Madurai, India)

  25. Divya Gopinath (Actor-Women in Cinema Collective/Kerala, India)

  26. Gargi Harithakam (Queer Feminist Activist - Vanaja Collective/ Kerala, India)

  27. Glady Angel (Theatre Artist/Canada)

  28. Geetha Narayanan (Development Consultant and Researcher/Chennai, India)

  29. Harikeerthana (Feminist Activist/Australia) 

  30. Hemalatha (Feminist Activist/Vallamai, Jaffna, Sri Lanka) 

  31. Iris Koala (Poet and Translator/Kerala, India)

  32. Ithayarani (Feminist Activist/Vizhuthu,Trinco, Sri Lanka)  

  33. Jamal Hairunnisha (National Co-ordinator, Shakthi Abhiyan/Chennai, India)

  34. Jothilakshmi (Advocate/Chennai, India)

  35. Juwairiya Mohideen (Feminist Activist/Puttalam, Sri Lanka)

  36. Kaitlin Emmanuel (Writer and Researcher/Toronto, Canada)

  37. Kala Sriranjan (Writer/London, Britain)

  38. Kalpradah (Filmmaker-Lyricist-Screenwriter/Chennai, India)

  39. Kamaleshwary L(Activist/Colombo, Sri Lanka)

  40. Kanthimathi (Advocate and Social worker/Chennai, India)

  41. Kavitha Krishnan (Feminist Activist and Writer/Delhi, India)

  42. Kavitha Muralidharan (Journalist/Chennai, India)

  43. Kounthini R (Feminist Activist-Vallamai/Jaffna, Sri Lanka) 

  44. Kutti Revathi(Poet, Filmmaker/Chennai, India)

  45. Lareena Abdul Haq (Senior Lecturer-University of Sri Lanka/ Belihuloya, Sri Lanka)

  46. Leena Manimekalai (Poet and Filmmaker/India, Canada) 

  47. Leena Yadav (Filmmaker/Mumbai, India)

  48. Leeny Elango (Poet, Researcher and Activist/Chennai, India)

  49. Luxmy Sivasamboo (Feminist Activist, France)

  50. Dr. Marie Drath (Literary Scholar and Activist/Switzerland) 

  51. Malathi Maithri (Poet, Publisher-Anangu/Pondicherry, India)

  52. Meera Sanghamitra (Activist, All India Feminist Alliance, India) 

  53. Menaka (Feminist Activist/Switzerland) 

  54. Mekha Rajan (Actor - Film and Theatre/Chennai/India)

  55. Mohana Dharshini (Political Activist/Sri Lanka)

  56. Moumita Alam (Poet and Essayist/West Bengal, India)

  57. Nalini Ratnarajah (Women’s Human Rights Defender/ Batticaloa, Sri Lanka)

  58. Nedra Rodrigo (Writer - Translator - Activist/Canada) 

  59. Negha (Actor and Activist/Chennai, India)

  60.  Neeruja (Feminist Activist - Thozhamai V/Jaffna, Sri Lanka) 

  61.  Nithika S (Political Activist - Semmugam/Jaffna, Sri Lanka) 

  62.  Nishtha Jain (Independent Filmmaker/Mumbai, India)

  63.  Nivedita Louis (Co-Founder - Her Stories/Chennai, India)

  64.  Nivetha Krishnan (Feminist, Entrepreneur/Chennai, India)

  65.  Niventhini S (Feminist Activist - Vallamai/Jaffna, Sri Lanka) 

  66.  Niyanthini Kadirgramar (PhD Candidate/USA)

  67.  Padma Prabha (Feminist Activist/Davos, Switzerland) 

  68.  Ponni A (Independent Feminist Historian/Sri Lanka)

  69.  Ponni Brinda (Feminist Researcher Consultant/India) 

  70.  Poorani (Co-Founder - Penn Collective/Chennai, India)

  71.  Pranjali (Researcher/Delhi, India)

  72.  Pritha Mahanti (Independent Writer and Editor/West Bengal, India)

  73.  Priya Kanniah (Activist, Entrepreneur/Chennai, India)

  74.  Priya Tharmaseelan (Photographer/Canada) 

  75.  Priyatharshini Vincentperis (Independent Journalist/Canada) 

  76.  Ramya Sampathkumar (Member-Dravidian Political Society/Bangalore/India)

  77.  Ratneswari (Feminist Activist-Aanaikkottai Women’s Organisation/Sri Lanka) 

  78.  Rachel Walter (Political Activist/India) 

  79.  Rajany Rajeshwary (Consultant -Thozhamai V/Jaffna, Sri Lanka) 

  80.  Ranjani Krishnankumar (Writer and Entrepreneur/Chennai, India)

  81.  Revathy (Film Director and Actor -  Women in Cinema Collective/India)

  82.  Rima Kallingal (Film Producer and Actor - Women in Cinema Collective/Kerala, India)

  83.  Sabaritha (Social Worker/Chennai, India)

  84.  Sathiya R (Student/Trinco, Sri Lanka) 

  85.  Selvi ( Co-ordinator - Manithi/ Chennai, India)

  86.  Shabnam Hashmi (Social Activist, Founder - ANHAD/New Delhi, India)

  87.  Shamini V (Feminist Activist, Thozhamai V/Jaffna, Sri Lanka) 

  88.  Sharmila Sagara (Professor - Anant National University/Gujarat, India)

  89.  Sheeva Dubey (National Alliance For People’s Movements/Pune, India)

  90.  Shobhitha Krishnamoorthy (Writer/Chennai, India)

  91.  Shreen Abdul Saroor (Co-Founder, Women’s Action Network/Sri Lanka)

  92.  Shydhah Zara Nizamudeen (Human Rights Activists/Mount Lavinia, Sri Lanka)

  93.  Siva Malathy (Feminist Activist/Sri Lanka) 

  94.  Sreejaya Radhakrishnan (Screenwriter/Mumbai, India)

  95.  Subanya Sivajothy (Writer and Librarian/Toronto, Canada)

  96.  Subhathra Devi ( Vice President - Rajiv Gandhi Panjayati Raj Sangathan/Chennai, India)

  97.  Sutha Selvarajah (HIV Peer Educator/Vavuniya, Sri Lanka)

  98. Sumathy Karupy (Writer & Filmmaker/Toronto, Canada)

  99.  Suganthi (Feminist Activist, Vallamai/Sri Lanka) 

  100.  Dr. Tadchaigeni Panchalingam (Health Educator/USA)

  101.  Tamil Arts Collective, Canada

  102.  Tamil Feminist Collective, Canada

  103.  Tamilini (Artist/Canada)

  104.  Tangella Madhavi (Independent Filmmaker/Kolkata, India)

  105.  Tharmika (Lawyer/ Sri Lanka

  106.  Dr. Tanuja Thurairajah (Feminist Geographer and Human Rights Enthusiast/Sri Lanka, Switzerland) 

  107.  Uma Shanika (Feminist Activist/Germany) 

  108.  Uma Makheswari K (Tamil Professor/Pollachi, India)

  109.  Usha P.E (Feminist Activist/Trivandrum/Kerala, India)

  110.  Utpala (Activist/Allahabad, India)

  111.  Vanaja Kanthiah (Feminist Activist/ Paris, France)

  112.  Vasuki (Social Activist/Toronto, Canada)

  113.  Vigy Nalliah (Feminist Activist/France) 

  114.  Viji Murugaiyah (Community Organiser/Toronto, Canada)

  115.  Vinta Nanda (Filmmaker, Writer and Editor of The Daily Eye/Mumbai, India)zs

  116.  Vinothini Balasubramaniam (Journalist, Social Activist/Colombo, Sri Lanka)

  117.  Vijayalakshmi T (Professor, Writer and Activist/Kerala, India)

  118.  Vithursha Kamaleswaran (Feminist Activist, Sri Lanka)

  119. Yalini (Writer/Canada)

  120. https://adhocfeministcollective.blogspot.com/2025/04/blog-post.html?fbclid=IwY2xjawJrym5leHRuA2FlbQIxMAABHrO5zkyAg8Lqvk5qeMB-GE5wQXRyh4WIx9tIWN_Zgq-d8qZvSWzp1LNNFV9v_aem_tFqfG9aOf5jZuHyAXIE3Ag

  • கருத்துக்கள உறவுகள்

ஓணாண்டியை யாராவது டாக் பண்ணி விடவும்.

அவரின் சங்கத்துக்கு ஒரு கேஸ் வந்துள்ளது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல்களுக்கெதிரான கண்டன அறிக்கை

In Solidarity

  1. Leena Manimekalai (Poet and Filmmaker/India, Canada) 

சோபாசக்திக்கு முட்டுக்கொடுப்பவர்கள் தற்காலத்தில் வெள்ளை வேட்டி சால்வை போட்டிருப்பதால் முட்டு கொடுக்க வரவில்லை என்று நினைக்கிறேன்

லீனா மணிமேகலை ( பொம்பிளை சோபாசக்தி.... பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை)

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Maruthankerny said:

சோபாசக்திக்கு முட்டுக்கொடுப்பவர்கள் தற்காலத்தில் வெள்ளை வேட்டி சால்வை போட்டிருப்பதால் முட்டு கொடுக்க வரவில்லை என்று நினைக்கிறேன்

லீனா மணிமேகலை ( பொம்பிளை சோபாசக்தி.... பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை)

கிருபன் தீவிர பக்தனை காணவில்லை இங்கே முட்டுக்கொடுக்க, 🫠

சோபா ஒரு வெளி வேச மனிதன்,

  • கருத்துக்கள உறவுகள்

கண்டன அறிக்கை : உண்மைகளும் பொய்களும்

April 15, 2025 ஷோபாசக்தி

என்மீதான ஒரு கண்டன அறிக்கை நேற்று இணையத்தில் ‘அதற்கமை பெண்ணியக் குழு’ என்றொரு அமைப்பால் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தக் கண்டன அறிக்கை குறித்து எனது தரப்பைத் தெளிவுபடுத்தும் நோக்கமொன்றுக்காகவே இந்தப் பதிவை எழுதுகிறேன். எவரையும் அவதூறு செய்வதோ, குணச்சித்திரப் படுகொலை செய்வதோ, கடந்தகால உறவுகளின்போது நிகழ்ந்த தனிமனித அந்தரங்கங்களையோ, உணர்வுச் சிக்கல்களையோ, முரண்களையோ பொதுவெளியில் அறிக்கையிட்டு, கீழ்மையான கிசுகிசுப் பசி பிடித்து அலையும் சமூக வலைத்தளவாசிகளுக்கு மலிவுத் தீனி போடுவதோ எனது பதிவில் நிகழவே கூடாது என்ற கவனத்துடனும் பொறுப்புடனுமே இதை எழுதுகிறேன்.

கண்டன அறிக்கையில் 116 கையெழுத்துகள் என்பது பெருந்தொகைதான். ஆனால், இந்த அறிக்கையில் கையொப்பமிட்டிருப்பவர்களில் முக்கால்வாசிப் பேர்களை நான் முன்பின் அறிந்ததில்லை. அவர்களுக்கும் என்னைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்களில் பெரும்பாலானோர் கேரளா – டில்லி – வங்காளம் போன்ற இடங்ளைச் சேர்ந்தவர்களாகத் தெரிகிறார்கள். அறிக்கையில் கையொப்பமிட்டிருக்கும் மிகுதிக் கால்வாசிப் பேர்களில் பெரும்பாலானோரை எப்போதாவது இலக்கியக் கூட்டங்களில் அல்லது புத்தகச் சந்தையில் பார்த்திருப்பேன். அவ்வளவே அறிமுகம்.

அதேவேளையில், கண்டன அறிக்கையில் கையொப்பமிட்டிருப்பவர்களில் ஒருசிலர் என்னோடு இணைந்து பல வருடங்களாகக் கலை – அரசியல் செயற்பாட்டிலும், நெருங்கிய நட்பிலும் உறவிலும் தோழமையிலும் இருந்தவர்கள். இவர்களிடம் என்னுடைய அலைபேசி எண்ணும் மின்னஞ்சல் முகவரியும் இருக்கின்றன. இவர்களில் பலர் இந்த விநாடிவரை எனது முகநூல் நட்புப் பட்டியலிலும் இருக்கிறார்கள். ஆனால், இவர்களில் ஒரே ஒருவருக்குக்கூட கண்டன அறிக்கையில் கையெழுத்திட முன்பாக என்னிடம் எனது தரப்பு விளக்கத்தைக் கேட்டு அறிய வேண்டும் என்று தோன்றவில்லை. முதலாளித்துவ நீதிமன்றங்களில் கூட குற்றம் சாட்டப்பட்ட தரப்புக்கு விளக்கமளிக்கப் பல வாய்ப்புகளைக் கொடுத்த பின்பே தீர்ப்பிடுகிறார்கள். ‘அதற்கமை பெண்ணியக் குழு’வின் விசாரணை மன்றத்திலோ அவ்வாறான வாய்ப்புகள் ஏதும் கொடுக்கப்படாமல், நேரடியாகவே ‘குற்றவாளி’ எனத் தீர்ப்பிடும் நடைமுறை அமலில் இருக்கலாம். ஆனாலும், நான் எனது தரப்பைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.

எனது தரப்பை அறிந்துகொள்ளாது முன்னரும் ஒருமுறை ‘பாலியல் குற்றவாளி’ எனச் சமூக வலைத்தளங்களில் நான் அநீதியாகத் தீர்ப்பிடப்பட்டிருக்கிறேன். அந்த நிகழ்வை முதலில் இங்கே சுருக்கமாகக் குறித்துக் காட்டிவிடுகிறேன். ஏனெனில், அந்த நிகழ்வுக்கும் தற்போதைய கண்டன அறிக்கைக்கும் நெருங்கிய ஒற்றுமையிருக்கிறது.

அந்தப் பாலியல் குற்றச்சாட்டு இன்றைக்குப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு என்மீது சுமத்தப்பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் கடந்த பதினைந்து வருடங்களாக என்மீது தொடர்ந்து அந்தக் குற்றத்தைச் சுமத்தினார்கள். தனிநபர்களோடு அரசியல் இயக்கங்களும் என்மீது அந்தக் குற்றத்தைச் சுமத்தின. ம.க.இ.க. மற்றும் சார்லஸ் ஆன்டனி போன்ற மே 17 இயக்கத்தின் அன்றைய முக்கிய செயற்பாட்டாளர்கள் நேரடியாகவே களத்தில் இறங்கி என்மீது குற்றம்சாட்டினார்கள்.

குற்றச்சாட்டும் மிகக் கடுமையானதுதான். பிரான்ஸ் தமிழச்சியிடம் நான் பாலியல் அத்துமீறல் செய்தேன் என்பது குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டை நான் மறுத்தேன் (Link). அந்தக் குற்றச்சாட்டு திட்டமிடப்பட்ட கூட்டு அவதூறுக் குரல் என்றேன். ஆனாலும், அந்தப் பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்து இன்றுவரை என்மீது பழி சுமத்தப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு அவ்வப்போது சற்றே தூசி தட்டப்பட்டுச் சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. பிரான்ஸ் தமிழச்சி மறுபடியும் யூ – டியூப் நேர்காணல்களில் தோன்றுகிறார். என்னோடு சேர்த்து என்னுடைய தோழர்களில் பலர் அவதூறுகளால் தாக்கப்படுகிறார்கள். அதைத் தாண்டியும் சகட்டுமேனிக்குப் பலரின்மீது தமிழச்சியால் பாலியல் குற்றம் சுமத்தப்படுகிறது. இவை எல்லாற்றுக்கும் ஆரம்பம் என்மீதான தமிழச்சியின் அவதூறுகளுக்கு 2010-இல் நூற்றுக்கணக்கான நபர்களும் சில அரசியல் இயக்கங்களும் கூட்டாகக் களம் அமைத்துக் கொடுத்ததே. அதுதான் இப்போது மறுபடியும் இந்தக் கண்டன அறிக்கை மூலம் நிகழ்த்தப்படுகிறது.

கடந்த வருடம் பாரிஸில் நடந்த 51-வது இலக்கியச் சந்திப்பில் ‘பாலியல் சுரண்டல்: எதிர்கொள்ளலும் பொறுப்புக்கூறலும்’ என்றொரு அமர்வு நிகழ்ந்தது. அந்த அமர்விலும் தமிழச்சி என்மீது வைத்த பாலியல் குற்றச்சாட்டுக் குறித்த கேள்வி மறுபடியும் ஒருமுறை எழுப்பப்பட்டது. அமர்வை ஒருங்கிணைத்த விஜி அந்தக் கேள்விக்கு “தமிழச்சியின் குற்றச்சாட்டு ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்பது எங்களுக்குத் தெரியும்” எனப் பதிலளித்தார். அதாவது, நீண்ட பதினைந்து வருடங்கள் நான் பொய்ப் பழியைச் சுமந்து அலைந்ததன் பின்னாக, முதற்தடவையாக ஒரு பொது அரங்கில் என்மீதான குற்றச்சாட்டுப் பொய்யானது எனச் சொல்லப்பட்டு, அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், அதுவரை காலமும் தமிழச்சியின் இந்தப் பொய்க் குற்றச்சாட்டைத் தோன்றியபோதெல்லாம் தங்களது கையிலெடுத்து என்மீது அவதூறை வீசியெறிந்தவர்களும் தற்போதைய இந்தக் கண்டன அறிக்கையில் கையழுத்திட்டிருப்பவர்களுமான மோகனதர்ஷினி, பாரதி சிவராஜா, அஞ்சனா போன்றோர் தங்களது அந்த அவதூறுகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்களா என்ன! இல்லை. இப்போதும் அந்த அவதூறுகள் முகநூலில் கிடக்கின்றன. இந்தப் பொறுப்பின்மையின் இன்னொரு வடிவம்தான் இப்போதைய கண்டன அறிக்கை.

இந்தக் கண்டன அறிக்கையைத் தயாரித்தவர்கள் யார் என அறிக்கையில் விபரமில்லை. இதில் கையொப்பமிட்டிருக்கும் அனைவருமே இணைந்து இந்த அறிக்கையைத் தயாரிக்கவில்லை. ஏனெனில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கண்டன அறிக்கையே மின்னஞ்சலில் பலருக்கும் அனுப்பப்பட்டுக் கையெழுத்துகள் கோரப்பட்டன. லீனா மணிமேகலையின் மின்னஞ்சல் மூலமாக எனது தோழமைகள் சிலருக்கும் இந்தக் கண்டன அறிக்கை அனுப்பப்பட்டுக் கையெழுத்துக் கோரப்பட்டிருந்தது. எனவே, கையெழுத்திட்டவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து இந்த அறிக்கையைத் தயாரிக்கவில்லை என்பது தெளிவாகிறது. அறிக்கையின் உண்மைத்தன்மையைத் தீர விசாரித்துத் தெரிந்துகொள்ளாமல் Solidarity என்ற அடிப்படையில் பெரும்பாலான கையெழுத்துகள் பதிவாகியிருக்கின்றன. பகிரங்கமான ஓர் அரசியல் நிகழ்வுக்கு எதிராக, அதிகார அடக்குமுறைகளுக்கு எதிராக இந்தமுறையில் ஒரு கூட்டுக் கண்டன அறிக்கை வெளியாவதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதுதான் நடைமுறை. ஆனால், உறவிலிருந்த இரு நபர்களுக்கு இடையேயான அந்தரங்கப் பிரச்சினைகளையும் உணர்வுச் சிக்கல்களையும் ஒருதரப்பின் மீதான Solidarity என்ற அடிப்படையில் மட்டுமே அணுகிக் கையெழுத்திடுவது ஒருபோதும் சரியாக இருக்காது.

‘ஷோபாசக்தியால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை ஆழமாகவும் விரிவாகவும் பரிசீலித்தோம்’ எனக் கண்டன அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பரிசீலனையாளர்கள் யார்? அவ்வாறு பரிசீலித்து இந்த அறிக்கையைத் தயாரித்தவர்கள் யார்? இந்த விபரங்களை மறைத்து வைப்பதன் மூலம் கண்டன அறிக்கையைத் தயாரித்த பொறுப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். Solidarity கையொப்பங்களின் பின்னே அவர்கள் மறைந்து நிற்கிறார்கள்.

ஆனாலும், இந்த அறிக்கையை முன்னின்று உருவாக்கியவர்கள் எவர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களின் சாரம் ஏற்கனவே சிவா மாலதியால் முகநூலில் (13 டிசம்பர் 2024) வைக்கப்பட்டது. அதைப் போன்றே கடந்த இரண்டு வருடங்களாகவே இந்தக் குற்றச்சாட்டுகள் அரசல்புரசலாகவும் கவிதையாகவும் லீனா மணிமேகலையால் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்தக் குற்றச்சாட்டுகளை இணைத்து உருப்பெருக்கி எழுதப்பட்டிருப்பதே இந்தக் கண்டன அறிக்கை.

சிவா மாலதி கடந்த டிசம்பர் மாதத்தில் எந்தச் சூழ்நிலையில், என்னமாதிரியான குற்றச்சாட்டை என்மீது வைத்தார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. 51-வது இலக்கியச் சந்திப்பில் ‘இமிழ்’ தொகுப்பு வெளியீடு, யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த ‘இமிழ்’ வெளியீட்டு நிகழ்வுக்கு எழுத்தாளர் கிரிசாந் பேசுவதற்கு அழைக்கப்பட்டது தொடர்பான விவாதங்களில் ‘இமிழ்’ தொகுப்பின் பதிப்பாசிரியர்களில் ஒருவன் என்ற முறையில் எனது நிலைப்பாட்டை ‘இமிழ் – வால்டேயரை நினைவுபடுத்தல்’ என்ற தலைப்பில் கட்டுரையாக (Link) எழுதியிருந்தேன். கிரிசாந் எழுதிய கட்டுரைகள் மீது எதிர்க் கருத்து இருப்பதற்காக அவரைச் சமூகப் புறக்கணிப்புச் செய்யுமாறு (சிவா மாலதி போன்றோர்) கோருவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லியிருந்தேன்.

கடந்த டிசம்பர் மாதத்தில் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது, கிரிசாந்தின் கவிதை நூல் வெளியீடு யாழ் நூலக மண்டபத்தில் நிகழ்ந்தது. ஒரு பார்வையாளனாக நானும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டேன். இதை விமர்சித்து சிவா மாலதி ‘பெண்களுக்கெதிரான பாலியல் சுரண்டலும் சோபாசக்தியும்’ என்றொரு முகநூல் பதிவை எழுதியிருந்தார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டது மூலமாகப் பாலியல் குற்றவாளிகளை நான் காப்பாற்ற முயற்சிக்கிறேன் என்று சொன்னார். அவரது அர்த்தமற்ற வாதத்திற்குப் பலம் சேர்ப்பதற்காக என்மீதான பொய்களையும் தனது பதிவில் இணைத்திருந்தார்.

அந்தப் பதிவில், என்னால் பல பெண்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாகவும் என்னால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள் என்றும் சிவா மாலதி குறிப்பிட்டார். தற்கொலைக்கு முயன்றாக ஒரு பெண்ணின் அடையாளத்தைக் குறிப்பிட்டே எழுதியிருந்தார். சிவா மாலதி குறிப்பிடும் அந்தப் பெண் யார் என்பதை என்னைப் போலவே பலராலும் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், எனக்கும் இங்கே குறிப்பிடப்படும் அந்தத் தோழிக்கும் இருந்தது இரகசிய உறவல்ல. அது பகிரங்கமாகவே இருந்தது.

சிவா மாலதி இந்தக் குற்றச்சாட்டை வைப்பதற்கு முன்பும் பின்பும் கூட அந்தத் தோழி என்னுடன் நல்ல நட்பிலேயே இருந்தார். சிவா மாலதியின் இந்தக் குற்றச்சாட்டு வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பின்பு, என்னால் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாகச் சொல்லப்பட்ட அந்தத் தோழி என்னைச் சந்திப்பதற்காகச் சென்னைப் புத்தக சந்தைக்கு வந்திருந்தார். இருவரும் நீண்ட நேரமாகப் பல விஷயங்களைப் பேசிக்கொண்டாலும், சிவா மாலதியின் பதிவு குறித்து நான் எதுவும் அவரிடம் சொல்லவில்லை. ஏனெனில், அந்தப் பொய்ச் செய்தியைச் சொல்லி அந்தத் தோழியைப் பதற்றப்படுத்த நான் விரும்பவில்லை. அன்று தில்லையின் ‘தாயைத்தின்னி’ நாவலை நான் புத்தக சந்தையில் வெளியிடுவதாக இருந்தது. நீங்களும் வாருங்கள் என அந்தத் தோழியையும் என்னுடன் அழைத்துச் சென்றேன். நானும் அவரும் சேர்ந்திருந்தே ‘தாயைத்தின்னி’ நாவலை மிகுந்த மகிழ்ச்சியோடு வெளியிட்டோம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் (29 டிசம்பர் 2024) இப்போதும் தில்லையின் முகநூலில் இருக்கின்றன. என்னால் தற்கொலைக்குத் தூண்டப்பட்ட ஒருவர் இவ்வாறு நடந்துகொள்வது சாத்தியமா? இந்தத் தற்கொலைப் பொய் தற்போது வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையிலும் வெளியாகியுள்ளது.

சிவா மாலதியின் இந்தப் பதிவைத் தனது முகநூலில் பகிர்ந்துகொண்ட (14 டிசம்பர் 2024) லீனா மணிமேகலை ‘இத்தனை வருடங்களாக நான் எனது கண்களைக் கட்டிக்கொண்டு இருந்துவிட்டேன். கனடா வந்ததும்தான் என் கண்கள் திறக்கப்பட்டு ஷோபாசக்தி பெண்களை வேட்டையாடுபவர் எனத் தெரிந்துகொண்டேன்’ என எழுதினார். லீனா மணிமேகலை போன்ற கூரிய புத்திசாலித்தனமும் மிகுந்த தைரியமும் கொண்ட ஒருவரின் கண்கள் பதின்மூன்று வருடங்களாகக் கட்டப்பட்டிருந்தன என்றால் அது வருந்தத்தக்கதுதான். ஆனால், அவரது கண்கள் கட்டப்பட்டிருக்கவில்லை.

2009 முதல் லீனா மணிமேகலைக்கும் எனக்கும் இருந்த உறவு எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். நாங்கள் பிரிந்து இருவருமே வெவ்வேறு உறவுகளுக்குப் போய்விட்ட பின்பும்கூட இருவரும் நட்பாகவே இருந்தோம். சேர்ந்து வேலைகள் செய்திருக்கிறோம். 2021-இல் அவரது ‘Black July’ குறும்படத்திற்கு நான்தான் பிரதியெழுதிக் குரல் நடிப்பும் செய்திருந்தேன். 18 மே 2021-இல் அவர் படித்துக்கொண்டிருந்த பல்கலைக்கழக வகுப்பில் நடந்த Zoom meeting-லும் கலந்துகொண்டு நான் உரையாற்றினேன். ‘கோவிட்’ கெடுபிடிக் காலத்திற்குப் பின்பாக 2022 -இல் நான் இந்தியாவுக்குச் சென்றபோது, புதியதொரு உறவில் நுழைந்தேன். அப்போதிலிருந்துதான் லீனா மணிமேகலை என்மீது ‘பெண்களை வேட்டையாடுபவன்’ என்ற குற்றத்தைச் சுமத்த ஆரம்பித்தார். இதை அவர் இந்தக் கண்டன அறிக்கை சொல்வதுபோன்று பரிசீலனை – ஆய்வு செய்தெல்லாம் அறிக்கையிடவில்லை.

முதலில், என்னுடன் உறவிலிருக்கும் தோழியின் முகநூலின் ‘கொமென்ட்’ பகுதியில் நுழைந்து என்னைக் குறித்த பொய்களை எழுதினார். அதை எனது தோழி அழித்தவுடன் ‘இதை உன்னால் அழித்துவிட முடியும். ஆனால், ஷோபாவைப் பொதுவெளியில் அம்பலப்படுத்த எனக்கு ஒரு நிமிடம் ஆகாது’ என்று மேசேஜ் அனுப்பினார். பின்பு எனது நெருங்கிய நண்பர்கள் வட்டத்திற்கு இதேபோன்று ‘பெண்களை வேட்டையாடுபவன்’ மின்னஞ்சல்களை அனுப்பினார். பின்பு ‘அந்தோணிதாசன்’ என என்னை விளித்துச் சாபமிடும் கவிதையும் எழுதினார். ஏற்கனவே என்னில் கோபமுற்றிருந்த சிவா மாலதி போன்றவர்களும் இவரோடு சேர்ந்துகொள்ள, இப்போது அவை எல்லாமே புனைவுகளாகவும் பொய்களுமாகச் சேர்ந்து மூன்றரைப் பக்கங்களில் கண்டன அறிக்கையாகப் பரிணமித்திருக்கிறது.

நான் பல பெண்களோடு உறவில் இருந்தேன் என்பது உண்மை. என்னுடைய 23 வயதிலிருந்தே எனக்குத் தொடராகக் காதல்கள் இருந்தன. திருமணம், குழந்தைகள், ஒழுக்கவாதம், கலாசாரம் போன்ற எல்லைகளுக்குள் வாழ விரும்புவர்களுக்கு என்னுடைய வாழ்க்கைமுறையும் தேர்வுகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கலாம். ஆனால், நான் மிக இளம் வயதிலேயே திருமணம் – குழந்தைகள் என்ற நிறுவன முறைக்கு வெளியே வாழும் ‘சுதந்திரக் காதல்’ வாழ்க்கைமுறையை வரித்துக்கொண்டவன். என்னுடைய அரசியல் கல்வியாலும் இளமையிலேயே அனார்க்கிஸத்தின் மீது எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பாலும் நான் இந்த வாழ்க்கைமுறையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவன். இதைப் பகிரங்கமாகவே பொதுவில் பலமுறை அறிவித்திருப்பவன். ‘எதுவரை’ இதழில் 2010 -இல் வெளியாகிய என்னுடைய நேர்காணலில் கீழ்க்கண்டவாறு சொல்லியிருந்தேன்.

”காதல், பாலுறவு போன்றவை உட்பட எனக்கு எவ்விதமான ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகளும் கலாசாரத் தளைகளும் கிடையாது. இரு உயிரிகளுக்கு இடையேயான உறவு அவர்களது தனிப்பட்ட தேர்வு. இதில் மதம், சட்டம், கலாசாரம் போன்றவற்றிற்கு எந்த வேலையும் கிடையாது.”

எனது வாழ்க்கைமுறை பகிரங்கமானது. எனக்கு இருந்த காதல் உறவுகளும் பகிரங்கமானவை. இந்தக் கண்டன அறிக்கையில் ‘திருமணம், குடும்பமாக சேர்ந்து வாழ்தல் போன்ற பொய்யான வாக்குறுதிகள் என்னால் கொடுக்கப்பட்டது’ எனச் சொல்லப்பட்டிருப்பதை நான் முற்றிலும் மறுக்கிறேன். நான் எவருக்கும் அவ்வாறு வாக்குறுதி கொடுத்ததில்லை என்பது எவ்வளவு உண்மையோ அதேபோன்று என்னுடன் உறவிலிருந்த யாருமே அவ்வாறு என்னிடம் வாக்குறுதி கேட்டதில்லை என்பதும் உண்மையே.

பாலியல் வன்முறை, பொருளாதாரரீதியாகச் சுரண்டியது, அதிகாரத்தை உபயோகித்துப் பாலியல் துர்ப்பிரயோகம் செய்தது போன்ற எந்தக் குற்றச்சாட்டுகளும் கண்டன அறிக்கையில் கிடையாது. பின்பு என்னதான் குற்றச்சாட்டு? காதல் உறவில் இருந்தவர்களை மேலாதிக்கம் செய்தேன், நம்பிக்கைத் துரோகம் செய்தேன், அவர்களுடன் திடீரெனத் தொடர்புகளைத் துண்டித்தேன் என்பவையே சாரமான குற்றச்சாட்டுகள்.

இந்தக் குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். எவரொருவர் மீதும் நான் மேலாதிக்கமோ பாலியல் சுரண்டலோ செய்ததில்லை. நம்பிக்கைத் துரோகம் சுட்டுப் போட்டாலும் – உண்மையாகவே துப்பாக்கியால் சுட்டாலும் – செய்வது என் இயல்பில்லை. உறவிலிருந்து பிரிந்த பின்பும் பலருடனும் நட்புரீதியான தொடர்புகளையும் சந்திப்புகளையும் இப்போதுவரை நான் வைத்திருக்கிறேன்.

பொத்தாம் பொதுவாக அவருக்கு அப்படி நடந்தது, இவருக்கு இப்படி நடந்தது எனக் கண்டன அறிக்கை சொல்கிறது. இப்படி யாரும் எவர்மீது வேண்டுமானாலும் எளிதாகக் குற்றம் சொல்லலாம். தனியொரு முகநூல் வம்பரும் இப்படிச் சொல்லலாம், 116 கையெழுத்துகள் சேர்ந்தும் சொல்லலாம். எண்ணிக்கை அல்ல உண்மையைத் தீர்மானிப்பது.

இவ்வாறான ஒரு பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டை முன்வைக்கும்போது, சில குறிப்பான சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பெயரைச் சொல்லாமல் இருப்பதில் நியாயம் இருக்கலாம். எனினும், எனது வாழ்க்கை எப்படிப் பகிரங்கமானதோ அவ்வாறே எனது காதல் உறவுகளும் பகிரங்கமானவையே, எல்லோருக்கும் தெரிந்தவையே என்றிருக்கும்போது இங்கே அந்தப் பெயர்களைக் குறிப்பிட்டிருக்க முடியும். அவ்வாறு குறிப்பிட்டிருந்தால் என்னால் ஆதாரபூர்வமாகக் காலவரிசைப்படி இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து எது உண்மையென நிரூபணம் செய்திருக்க முடியும். அந்த வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. இதை ஓர் எடுத்துக்காட்டோடு விளக்குகிறேன். 2010-இல், பிரான்ஸ் தமிழச்சியின் பெயரைக் குறிப்பிடாமல் ‘ஒரு பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்’ எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்லியிருந்தால் அந்தக் குற்றச்சாட்டின் தன்மையை நான் எவ்வாறு புரிந்துகொண்டிருக்க முடியும்? அந்தக் குற்றச்சாட்டை எப்படி ஆதாரத்தோடு என்னால் மறுத்திருக்க முடியும்? இந்தக் கண்டன அறிக்கையும் இவ்விதமே கற்பனைக் குற்றச்சாட்டுகளோடு வெளியாகிப் பொறுப்புக்கூறுமாறு என்னிடம் கேட்கிறது. பெயரற்ற பெண்கள் – கற்பனைக் குற்றச்சாட்டுகள் என்றிருந்தால் என்னால் எவ்வாறு எனது தரப்பைச் சொல்ல முடியும். பொத்தாம் பொதுவாக ‘மறுக்கிறேன்’ என்றுதான் சுருக்கமாகச் சொல்ல முடியும். எனினும், கண்டன அறிக்கையை மிகக் கவனமாகப் படித்து, முடிந்தவரை நான் பொறுப்புடன் என்னுடைய மறுப்பை இங்கே விளக்கமாக எழுதியிருக்கிறேன்.

கண்டன அறிக்கையின் பொய்களின் அணிவகுப்பில் அடுத்த குற்றச்சாட்டு ‘திருநங்கை செயற்பாட்டாளரை பாலியல் ரீதியாக சுரண்டியதோடு மட்டுமல்லாமல், தான் திரைக்கதை எழுதி நடித்த ரூபாவிலும்(Roobha) அந்த உறவில் நடந்தவற்றையெல்லாம் பயன்படுத்தி காட்சிகளாக்கியுள்ளார்’ என்பது. இந்தப் பாரதூரமான குற்றச்சாட்டை நான் முழுமையாக மறுக்கிறேன்.

‘ரூபா’ திரைப்படம் 2016-இல் கனடாவில் தயாரிக்கப்பட்டது. ஆனால், அந்தத் திரைப்படத்தின் கதை ‘செங்கடல்’ திரைப்படம் முடிந்த கையோடு லீனா மணிமேகலைக்காக என்னால் 2011- இல் ‘சிட்டு’ என்ற தலைப்பில் திரைக்கதையாக எழுதிக் கொடுக்கப்பட்டது. எனினும், முயற்சி மேற்கொண்டு நகரவில்லை. இதே கதை கனடாச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டு, ‘ரூபா ‘என்கிற கதையாக என்னால் எழுதப்பட்டு, ‘ரூபா’ திரைப்பட இயக்குனரிடம் என்னால் கொடுக்கப்பட்டது. ‘ரூபா’ திரைக்கதை என்னுடைய உறவில் நடந்த உண்மைக்கதை என்பதில் சற்றும் உண்மையில்லை.

குயர் சமூகத்தோடு எனக்கு நீண்டகாலமாகத் தொடர்பும் தோழமையும் இருக்கின்றன. நான் அவர்களோடு நிறைய உரையாடி அவர்களது வாழ்பனுபவம் குறித்து அறிந்திருக்கிறேன். கூவாகத்திற்குச் சென்று கள ஆய்வு செய்து லீனா மணிமேகலைக்காக ‘ரதிலீலா’ என்று இன்னொரு திரைக்கதையையும் எழுதிக் கொடுத்திருக்கிறேன். குயர் சமூகத்தவர்களுக்கு இலங்கை – இந்தியாவில் உரிமைகள் மறுக்கப்படும்போது, அவர்கள் அய்ரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோர என்னவகையான சட்ட வழிகள் இருக்கின்றன எனச் சொல்லியிருக்கிறேன். பிரான்ஸில் தஞ்சம் கோரிய சிலருக்கு ‘கலை மற்றும் சினிமாவுக்கான பிரெஞ்சு அகாதமி’யின் உறுப்பினர் என்ற முறையில் சாட்சியச் சான்றிதழ் கொடுத்திருக்கிறேன். ஆனால், இதையெல்லாம் நான் பாலியல் சுரண்டலுக்காகச் செய்தேன் என்று கண்டன அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது எனக்கு இழைக்கப்படும் அநீதி அல்லாமல் வேறில்லை.

பத்து வருடங்கள் காதலித்துத் திருமணம் செய்து குழந்தையும் பெற்றுவிட்டு, உறவில் ஏற்படும் சிக்கல்களாலும் முரண்பாடுகளால் விவாகரத்து வாங்கிப் பிரிந்துவிடுபவர்கள் உண்டு. அதற்கான உரிமை தார்மீகரீதியாக மட்டுமல்லாமல் சட்டப்படியும் அவர்களுக்குண்டு. அதுபோலவே காதலர்களுக்கும் பிரிந்து செல்வதற்கான உரிமை உண்டு. சிலவேளைகளில் இந்தப் பிரிவு நட்புணர்வுடன் சுமூகமாக நடக்கும். சிலவேளைகளில் முரண்பாடுகளால் எழுந்த கசப்புகளோடும் பழிவாங்கும் வன்மத்தோடும் இந்தப் பிரிவுகள் நிகழும். அங்கே நிச்சயமாக உணர்வுரீதியான பாதிப்புகளும் உளக்கொந்தளிப்புகளும் இருக்கும். ஆனால், இருவருக்கு இடையேயான இந்த உறவுச் சிக்கலை ‘பாலியல் சுரண்டல்’ எனச் சொல்லிப் பழிதீர்க்க நினைப்பது அருவருப்பானது. அதைப் பெண்ணியச் சாயம் பூசிய கண்டன அறிக்கையாக வெளியிடுவது தவறான முன்னுதாரணம். கண்டனத்திற்கு உரிய செயல். இத்தகைய பொய் அறிக்கைகளை உலாவவிடுவது என்பது எதிர்காலத்தில் உண்மைகளின், ஆதாரங்களின் அடிப்படையில் வெளியிடப்படும் அறிக்கைகளையும் சமூகம் சந்தேகத்தோடு அணுகத் தூண்டும் பொறுப்பற்ற செயல்.

கண்டன அறிக்கையில் குறிப்பிடப்படும் இன்னொரு விஷயம் “மிரட்டுதலும் மெளனிக்கச்செய்வதும் – ஷோபாசக்தி அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக பேசுபவர்களிடம், நீங்கள் என்ன கலாசார காவலர்களா (cultural Policing) என்று கேட்கிறார்” என்பது.

இந்தக் கண்டன அறிக்கையைத் தயாரித்தவர்கள், கையொப்பமிட்டவர்கள் இதை நிரூபிக்கத் தயாரா? ஏன் இந்தப் பொய்கள்! இது உண்மை என்றால் யாரை மிரட்டினேன் என இங்கு பகிரங்கமாகச் சொல்வதில் என்ன சிக்கல் உங்களுக்கு? கலாசாரக் காவலரா எனக் கேட்டு எங்கு எழுதினேன்? யாரை மிரட்டினேன்? ஆளும் சொல்லாமல் பேரும் சொல்லாமல் ‘ஷோபாசக்தி அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக பேசுபவர்களிடம் கலாசாரக் காவலரா எனக் கேட்கிறார்’ எனக் கண்டன அறிக்கையில் புகார் சொல்லப்படுகிறது. என்னுடைய புகார் என்னவென்றால், அப்படி என்னால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பெண்களின் சார்பில் இந்த நிமிடம்வரை எவரொருவரும் என்னிடம் பேசவில்லை என்பதுதானே.

அடுத்த குற்றச்சாட்டு ‘அவருடைய சக அறிவுஜீவி கூட்டாளிகளை விட்டு அதையொட்டி கட்டுரை எழுத வைப்பது, அறிக்கை விடச் செய்வது என்று தனது செல்வாக்கை ஊடகமாக்கி, பாதிப்புக்குட்பபடுத்தப்பட்ட பெண்களையும் அவர்களுக்காக பேச வந்தவர்களையும் பிற்போக்காளர்களாக அடையாளப்படுத்தி குணக்கொலை (character assassination) செய்திருக்கிறார்’ என்பது.

எனது அறிவுஜீவி கூட்டாளிகளை எப்போது எவர்மீது நான் ஏவிவிட்டேன்? இதற்காவது உங்களிடம் ஏதாவது ஆதாரம் உண்டா? சேறடிக்க வேண்டுமென்று இறங்கிவிட்டால் எந்த எல்லைக்கும் இறங்கிச் சேறு வீசிவிடுவீர்களா? எனது ‘அடியாள் எழுத்தாளர்கள்’ என ஒரு பட்டியல் அவ்வப்போது முகநூல் வம்பர்களால் வெளியிடப்படுவதுண்டு. இந்தப் பட்டியலில் உள்ள எழுத்தாளர்கள் ஒவ்வொரும் தங்களது எழுத்துத் திறனால் தங்களை இலக்கிய உலகில் நிறுவிக்கொண்டவர்கள். தங்களுக்கு எனத் தனித்துவமான பார்வைகளைக் கொண்டவர்கள். இலக்கியத்திற்கு எந்த மதிப்புமளிக்காத சமூகச் சூழலிலிருந்து தங்களது உழைப்பாலும் திறனாலும் எழுந்துவரும் இளம் எழுத்தாளர்களை இவ்வாறு கொச்சைப்படுத்துவது நாணயமற்றது.

கண்டன அறிக்கையில் நகைச்சுவை அம்சங்களுக்கும் இடம் இருக்கக்கூடாது என்றில்லை. ஆனால், அது அசட்டு நகைச்சுவையாக இருப்பது இரசிக்கத்தக்கதல்ல. ‘தனது வயதையும், உடல் நலம் சார்ந்த பராமரிப்புக்கான தேவையையும் கூறி பெண்களிடம் கழிவிரக்கம் தேடுகின்றமை’ என்பதும் என்மீதான ஒரு குற்றச்சாட்டாம். இதை மறுப்பதென்றால் நான் மிகுந்த உடல் நலத்தோடு இருக்கிறேன் என்று மருத்துவச் சான்றிதழ் பெற்று இங்கே சமர்ப்பித்தால்தான் முடியும். வேண்டுமென்றால் அதையும் பொறுப்பாகச் செய்துவிடுகிறேன்.

‘பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்ணொருவர் கூறுகையில் ஷோபாசக்தி குடிக்கு அடிமையாக இருப்பதுடன் தன்னையும் அப்பழக்கத்திற்கு ஆளாக்கிவிட முனைந்தார் என்பதாலேயே அவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டதைக் குறிப்பிட்டார்’ என்றொரு கண்டனக் குற்றச்சாட்டு. இதெல்லாம் ‘குமுதம்’ கிசுகிசுவுக்கு நிகரான கண்டனம். இந்தக் கண்டனத்திற்கு என்ன பொறுப்புக் கூறுவது என்று எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. ஒரு குடி அடிமையால் முப்பது வருடங்களாக இலக்கியத்திலும் சினிமாவிலும் இடையறாது இயங்க முடியுமா? ஒரேயொரு கிட்னியோடு முப்பது வருடங்களுக்கும் மேலாக முழுமையான தேக ஆரோக்கியத்தோடு இருக்க முடியுமா? என்றெல்லாம் நீங்களாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டியதுதான்.

கற்பனைக் குற்றச்சாட்டுகளுடன் கண்டன அறிக்கை வெளிவந்துவிட்டது. இனி என்ன நடக்கும்?

என்மீது அரசியல்ரீதியாக நெடுங்காலமாகவே பகைமை பாராட்டிவரும் பெருமக்கள் இந்தப் பொய் அறிக்கையைப் பரப்பிச் செல்வார்கள். பாலியல் கிசுகிசுகளுக்காகவே காத்துக்கிடக்கும் முகநூல் வம்பர்கள் இதைக் காவிச் செல்வார்கள். கண்டன அறிக்கையை ஆதரிக்கிறேன் எனப் பொய் ஆதாரங்களும் பொய்ச் சாட்சியங்களும் இனி அணிவகுக்கும். அதேவேளையில் தீர ஆராய்ந்து தெளிந்து நடப்பவர்கள் இந்த அறிக்கையிலுள்ள பொய்களையும் அறிக்கையின் உண்மையான நோக்கத்தையும் தெரிந்துகொள்வார்கள்.

இந்த மறுப்புப் பதிவை எழுதி முடிக்கும் இந்தத் தருணத்தில் எனக்குத் தயக்கமோ வருத்தமோ ஏதுமில்லை. மாறாக, கடந்த இரண்டு வருடங்களாகவே என்மீது அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பரப்பப்பட்டுக்கொண்டிருந்த அவதூறுகளுக்கு ஒட்டமொத்தமாகப் பதில் சொல்லி முடித்திருக்கும் மனநிறைவே என்னிடம் இருக்கிறது.

கடைசியாக ஒன்று… இந்த அறிக்கையின் நோக்கம் என்னைப் பொறுப்புக்கூற வைப்பதுதான் என்றால், நான் பொறுப்பாக மறுப்புக்கூறி அந்த நோக்கத்தை இங்கே நிறைவேற்றி வைத்துவிட்டேன். ஆனால், அறிக்கையின் மைய நோக்கம் அதுவல்லவே. அது என்னவென்று அறிக்கை அறிவிக்கிறது:

“ஷோபாசக்திக்குத் தளங்களை ஏற்படுத்திக் கொடுத்து, விருதுகளையும் அங்கீகாரத்தினையும் வழங்கிய ‘முற்போக்கு’ இயக்கங்கள், காந்தியவாதிகள், பதிப்பாளர்கள், அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எமது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.” என்கிறது கண்டன அறிக்கை.

என்னைத் தனிமைப்படுத்திச் சமூகப் புறக்கணிப்புச் செய்வது, என்னோடு தோழமை பாராட்டும் இயக்கங்களிலிருந்து என்னைப் பிரித்துவைப்பது, என்னைக் குறித்து எழுதும் ஊடகவியலாளர்களைத் தடுப்பது, எனது பதிப்பக வாய்ப்புகளைக் கெடுப்பது, என்னைத் தேடி வந்துகொண்டேயிருக்கும் சர்வதேச அளவிலான சினிமா வாய்ப்புகளுக்கு வேட்டு வைப்பது என்பவைதான் கண்டன அறிக்கையின் மைய நோக்கம். இதையெல்லாம் செய்யுமளவுக்குக் கற்பனைகளுக்கும் பொய்களுக்கும் சக்தி இருக்குமானால், முப்பது வருடங்களாக எந்த அதிகார சக்திகளுக்கும் ஆயுதங்களுக்கும் அஞ்சாமலும் பணியாமலும் எழுதிவரும் எனது எழுத்திலுள்ள நேர்மைக்கும் உண்மைக்கும் அதைவிட அதிக சக்தியுண்டு என்பதே எனது நன்நம்பிக்கை.

-ஷோபாசக்தி
15.04.2025

https://www.shobasakthi.com/shobasakthi/2025/04/15/கண்டன-அறிக்கை-உண்மைகளும/?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR43YTEm6EiiMBVsbEpDyij4Tlsosd_5QlFrRgQlWlYv-yjzXDyREzvslMgcxQ_aem_XMWxW8ugOe8AUcND3d66aA

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கிருபன் said:

கண்டன அறிக்கை : உண்மைகளும் பொய்களும்

April 15, 2025 ஷோபாசக்தி

என்மீதான ஒரு கண்டன அறிக்கை நேற்று இணையத்தில் ‘அதற்கமை பெண்ணியக் குழு’ என்றொரு அமைப்பால் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தக் கண்டன அறிக்கை குறித்து எனது தரப்பைத் தெளிவுபடுத்தும் நோக்கமொன்றுக்காகவே இந்தப் பதிவை எழுதுகிறேன். எவரையும் அவதூறு செய்வதோ, குணச்சித்திரப் படுகொலை செய்வதோ, கடந்தகால உறவுகளின்போது நிகழ்ந்த தனிமனித அந்தரங்கங்களையோ, உணர்வுச் சிக்கல்களையோ, முரண்களையோ பொதுவெளியில் அறிக்கையிட்டு, கீழ்மையான கிசுகிசுப் பசி பிடித்து அலையும் சமூக வலைத்தளவாசிகளுக்கு மலிவுத் தீனி போடுவதோ எனது பதிவில் நிகழவே கூடாது என்ற கவனத்துடனும் பொறுப்புடனுமே இதை எழுதுகிறேன்.

கண்டன அறிக்கையில் 116 கையெழுத்துகள் என்பது பெருந்தொகைதான். ஆனால், இந்த அறிக்கையில் கையொப்பமிட்டிருப்பவர்களில் முக்கால்வாசிப் பேர்களை நான் முன்பின் அறிந்ததில்லை. அவர்களுக்கும் என்னைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்களில் பெரும்பாலானோர் கேரளா – டில்லி – வங்காளம் போன்ற இடங்ளைச் சேர்ந்தவர்களாகத் தெரிகிறார்கள். அறிக்கையில் கையொப்பமிட்டிருக்கும் மிகுதிக் கால்வாசிப் பேர்களில் பெரும்பாலானோரை எப்போதாவது இலக்கியக் கூட்டங்களில் அல்லது புத்தகச் சந்தையில் பார்த்திருப்பேன். அவ்வளவே அறிமுகம்.

அதேவேளையில், கண்டன அறிக்கையில் கையொப்பமிட்டிருப்பவர்களில் ஒருசிலர் என்னோடு இணைந்து பல வருடங்களாகக் கலை – அரசியல் செயற்பாட்டிலும், நெருங்கிய நட்பிலும் உறவிலும் தோழமையிலும் இருந்தவர்கள். இவர்களிடம் என்னுடைய அலைபேசி எண்ணும் மின்னஞ்சல் முகவரியும் இருக்கின்றன. இவர்களில் பலர் இந்த விநாடிவரை எனது முகநூல் நட்புப் பட்டியலிலும் இருக்கிறார்கள். ஆனால், இவர்களில் ஒரே ஒருவருக்குக்கூட கண்டன அறிக்கையில் கையெழுத்திட முன்பாக என்னிடம் எனது தரப்பு விளக்கத்தைக் கேட்டு அறிய வேண்டும் என்று தோன்றவில்லை. முதலாளித்துவ நீதிமன்றங்களில் கூட குற்றம் சாட்டப்பட்ட தரப்புக்கு விளக்கமளிக்கப் பல வாய்ப்புகளைக் கொடுத்த பின்பே தீர்ப்பிடுகிறார்கள். ‘அதற்கமை பெண்ணியக் குழு’வின் விசாரணை மன்றத்திலோ அவ்வாறான வாய்ப்புகள் ஏதும் கொடுக்கப்படாமல், நேரடியாகவே ‘குற்றவாளி’ எனத் தீர்ப்பிடும் நடைமுறை அமலில் இருக்கலாம். ஆனாலும், நான் எனது தரப்பைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.

எனது தரப்பை அறிந்துகொள்ளாது முன்னரும் ஒருமுறை ‘பாலியல் குற்றவாளி’ எனச் சமூக வலைத்தளங்களில் நான் அநீதியாகத் தீர்ப்பிடப்பட்டிருக்கிறேன். அந்த நிகழ்வை முதலில் இங்கே சுருக்கமாகக் குறித்துக் காட்டிவிடுகிறேன். ஏனெனில், அந்த நிகழ்வுக்கும் தற்போதைய கண்டன அறிக்கைக்கும் நெருங்கிய ஒற்றுமையிருக்கிறது.

அந்தப் பாலியல் குற்றச்சாட்டு இன்றைக்குப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு என்மீது சுமத்தப்பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் கடந்த பதினைந்து வருடங்களாக என்மீது தொடர்ந்து அந்தக் குற்றத்தைச் சுமத்தினார்கள். தனிநபர்களோடு அரசியல் இயக்கங்களும் என்மீது அந்தக் குற்றத்தைச் சுமத்தின. ம.க.இ.க. மற்றும் சார்லஸ் ஆன்டனி போன்ற மே 17 இயக்கத்தின் அன்றைய முக்கிய செயற்பாட்டாளர்கள் நேரடியாகவே களத்தில் இறங்கி என்மீது குற்றம்சாட்டினார்கள்.

குற்றச்சாட்டும் மிகக் கடுமையானதுதான். பிரான்ஸ் தமிழச்சியிடம் நான் பாலியல் அத்துமீறல் செய்தேன் என்பது குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டை நான் மறுத்தேன் (Link). அந்தக் குற்றச்சாட்டு திட்டமிடப்பட்ட கூட்டு அவதூறுக் குரல் என்றேன். ஆனாலும், அந்தப் பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்து இன்றுவரை என்மீது பழி சுமத்தப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு அவ்வப்போது சற்றே தூசி தட்டப்பட்டுச் சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. பிரான்ஸ் தமிழச்சி மறுபடியும் யூ – டியூப் நேர்காணல்களில் தோன்றுகிறார். என்னோடு சேர்த்து என்னுடைய தோழர்களில் பலர் அவதூறுகளால் தாக்கப்படுகிறார்கள். அதைத் தாண்டியும் சகட்டுமேனிக்குப் பலரின்மீது தமிழச்சியால் பாலியல் குற்றம் சுமத்தப்படுகிறது. இவை எல்லாற்றுக்கும் ஆரம்பம் என்மீதான தமிழச்சியின் அவதூறுகளுக்கு 2010-இல் நூற்றுக்கணக்கான நபர்களும் சில அரசியல் இயக்கங்களும் கூட்டாகக் களம் அமைத்துக் கொடுத்ததே. அதுதான் இப்போது மறுபடியும் இந்தக் கண்டன அறிக்கை மூலம் நிகழ்த்தப்படுகிறது.

கடந்த வருடம் பாரிஸில் நடந்த 51-வது இலக்கியச் சந்திப்பில் ‘பாலியல் சுரண்டல்: எதிர்கொள்ளலும் பொறுப்புக்கூறலும்’ என்றொரு அமர்வு நிகழ்ந்தது. அந்த அமர்விலும் தமிழச்சி என்மீது வைத்த பாலியல் குற்றச்சாட்டுக் குறித்த கேள்வி மறுபடியும் ஒருமுறை எழுப்பப்பட்டது. அமர்வை ஒருங்கிணைத்த விஜி அந்தக் கேள்விக்கு “தமிழச்சியின் குற்றச்சாட்டு ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்பது எங்களுக்குத் தெரியும்” எனப் பதிலளித்தார். அதாவது, நீண்ட பதினைந்து வருடங்கள் நான் பொய்ப் பழியைச் சுமந்து அலைந்ததன் பின்னாக, முதற்தடவையாக ஒரு பொது அரங்கில் என்மீதான குற்றச்சாட்டுப் பொய்யானது எனச் சொல்லப்பட்டு, அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், அதுவரை காலமும் தமிழச்சியின் இந்தப் பொய்க் குற்றச்சாட்டைத் தோன்றியபோதெல்லாம் தங்களது கையிலெடுத்து என்மீது அவதூறை வீசியெறிந்தவர்களும் தற்போதைய இந்தக் கண்டன அறிக்கையில் கையழுத்திட்டிருப்பவர்களுமான மோகனதர்ஷினி, பாரதி சிவராஜா, அஞ்சனா போன்றோர் தங்களது அந்த அவதூறுகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்களா என்ன! இல்லை. இப்போதும் அந்த அவதூறுகள் முகநூலில் கிடக்கின்றன. இந்தப் பொறுப்பின்மையின் இன்னொரு வடிவம்தான் இப்போதைய கண்டன அறிக்கை.

இந்தக் கண்டன அறிக்கையைத் தயாரித்தவர்கள் யார் என அறிக்கையில் விபரமில்லை. இதில் கையொப்பமிட்டிருக்கும் அனைவருமே இணைந்து இந்த அறிக்கையைத் தயாரிக்கவில்லை. ஏனெனில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கண்டன அறிக்கையே மின்னஞ்சலில் பலருக்கும் அனுப்பப்பட்டுக் கையெழுத்துகள் கோரப்பட்டன. லீனா மணிமேகலையின் மின்னஞ்சல் மூலமாக எனது தோழமைகள் சிலருக்கும் இந்தக் கண்டன அறிக்கை அனுப்பப்பட்டுக் கையெழுத்துக் கோரப்பட்டிருந்தது. எனவே, கையெழுத்திட்டவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து இந்த அறிக்கையைத் தயாரிக்கவில்லை என்பது தெளிவாகிறது. அறிக்கையின் உண்மைத்தன்மையைத் தீர விசாரித்துத் தெரிந்துகொள்ளாமல் Solidarity என்ற அடிப்படையில் பெரும்பாலான கையெழுத்துகள் பதிவாகியிருக்கின்றன. பகிரங்கமான ஓர் அரசியல் நிகழ்வுக்கு எதிராக, அதிகார அடக்குமுறைகளுக்கு எதிராக இந்தமுறையில் ஒரு கூட்டுக் கண்டன அறிக்கை வெளியாவதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதுதான் நடைமுறை. ஆனால், உறவிலிருந்த இரு நபர்களுக்கு இடையேயான அந்தரங்கப் பிரச்சினைகளையும் உணர்வுச் சிக்கல்களையும் ஒருதரப்பின் மீதான Solidarity என்ற அடிப்படையில் மட்டுமே அணுகிக் கையெழுத்திடுவது ஒருபோதும் சரியாக இருக்காது.

‘ஷோபாசக்தியால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை ஆழமாகவும் விரிவாகவும் பரிசீலித்தோம்’ எனக் கண்டன அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பரிசீலனையாளர்கள் யார்? அவ்வாறு பரிசீலித்து இந்த அறிக்கையைத் தயாரித்தவர்கள் யார்? இந்த விபரங்களை மறைத்து வைப்பதன் மூலம் கண்டன அறிக்கையைத் தயாரித்த பொறுப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். Solidarity கையொப்பங்களின் பின்னே அவர்கள் மறைந்து நிற்கிறார்கள்.

ஆனாலும், இந்த அறிக்கையை முன்னின்று உருவாக்கியவர்கள் எவர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களின் சாரம் ஏற்கனவே சிவா மாலதியால் முகநூலில் (13 டிசம்பர் 2024) வைக்கப்பட்டது. அதைப் போன்றே கடந்த இரண்டு வருடங்களாகவே இந்தக் குற்றச்சாட்டுகள் அரசல்புரசலாகவும் கவிதையாகவும் லீனா மணிமேகலையால் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்தக் குற்றச்சாட்டுகளை இணைத்து உருப்பெருக்கி எழுதப்பட்டிருப்பதே இந்தக் கண்டன அறிக்கை.

சிவா மாலதி கடந்த டிசம்பர் மாதத்தில் எந்தச் சூழ்நிலையில், என்னமாதிரியான குற்றச்சாட்டை என்மீது வைத்தார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. 51-வது இலக்கியச் சந்திப்பில் ‘இமிழ்’ தொகுப்பு வெளியீடு, யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த ‘இமிழ்’ வெளியீட்டு நிகழ்வுக்கு எழுத்தாளர் கிரிசாந் பேசுவதற்கு அழைக்கப்பட்டது தொடர்பான விவாதங்களில் ‘இமிழ்’ தொகுப்பின் பதிப்பாசிரியர்களில் ஒருவன் என்ற முறையில் எனது நிலைப்பாட்டை ‘இமிழ் – வால்டேயரை நினைவுபடுத்தல்’ என்ற தலைப்பில் கட்டுரையாக (Link) எழுதியிருந்தேன். கிரிசாந் எழுதிய கட்டுரைகள் மீது எதிர்க் கருத்து இருப்பதற்காக அவரைச் சமூகப் புறக்கணிப்புச் செய்யுமாறு (சிவா மாலதி போன்றோர்) கோருவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லியிருந்தேன்.

கடந்த டிசம்பர் மாதத்தில் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது, கிரிசாந்தின் கவிதை நூல் வெளியீடு யாழ் நூலக மண்டபத்தில் நிகழ்ந்தது. ஒரு பார்வையாளனாக நானும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டேன். இதை விமர்சித்து சிவா மாலதி ‘பெண்களுக்கெதிரான பாலியல் சுரண்டலும் சோபாசக்தியும்’ என்றொரு முகநூல் பதிவை எழுதியிருந்தார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டது மூலமாகப் பாலியல் குற்றவாளிகளை நான் காப்பாற்ற முயற்சிக்கிறேன் என்று சொன்னார். அவரது அர்த்தமற்ற வாதத்திற்குப் பலம் சேர்ப்பதற்காக என்மீதான பொய்களையும் தனது பதிவில் இணைத்திருந்தார்.

அந்தப் பதிவில், என்னால் பல பெண்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாகவும் என்னால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள் என்றும் சிவா மாலதி குறிப்பிட்டார். தற்கொலைக்கு முயன்றாக ஒரு பெண்ணின் அடையாளத்தைக் குறிப்பிட்டே எழுதியிருந்தார். சிவா மாலதி குறிப்பிடும் அந்தப் பெண் யார் என்பதை என்னைப் போலவே பலராலும் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், எனக்கும் இங்கே குறிப்பிடப்படும் அந்தத் தோழிக்கும் இருந்தது இரகசிய உறவல்ல. அது பகிரங்கமாகவே இருந்தது.

சிவா மாலதி இந்தக் குற்றச்சாட்டை வைப்பதற்கு முன்பும் பின்பும் கூட அந்தத் தோழி என்னுடன் நல்ல நட்பிலேயே இருந்தார். சிவா மாலதியின் இந்தக் குற்றச்சாட்டு வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பின்பு, என்னால் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாகச் சொல்லப்பட்ட அந்தத் தோழி என்னைச் சந்திப்பதற்காகச் சென்னைப் புத்தக சந்தைக்கு வந்திருந்தார். இருவரும் நீண்ட நேரமாகப் பல விஷயங்களைப் பேசிக்கொண்டாலும், சிவா மாலதியின் பதிவு குறித்து நான் எதுவும் அவரிடம் சொல்லவில்லை. ஏனெனில், அந்தப் பொய்ச் செய்தியைச் சொல்லி அந்தத் தோழியைப் பதற்றப்படுத்த நான் விரும்பவில்லை. அன்று தில்லையின் ‘தாயைத்தின்னி’ நாவலை நான் புத்தக சந்தையில் வெளியிடுவதாக இருந்தது. நீங்களும் வாருங்கள் என அந்தத் தோழியையும் என்னுடன் அழைத்துச் சென்றேன். நானும் அவரும் சேர்ந்திருந்தே ‘தாயைத்தின்னி’ நாவலை மிகுந்த மகிழ்ச்சியோடு வெளியிட்டோம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் (29 டிசம்பர் 2024) இப்போதும் தில்லையின் முகநூலில் இருக்கின்றன. என்னால் தற்கொலைக்குத் தூண்டப்பட்ட ஒருவர் இவ்வாறு நடந்துகொள்வது சாத்தியமா? இந்தத் தற்கொலைப் பொய் தற்போது வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையிலும் வெளியாகியுள்ளது.

சிவா மாலதியின் இந்தப் பதிவைத் தனது முகநூலில் பகிர்ந்துகொண்ட (14 டிசம்பர் 2024) லீனா மணிமேகலை ‘இத்தனை வருடங்களாக நான் எனது கண்களைக் கட்டிக்கொண்டு இருந்துவிட்டேன். கனடா வந்ததும்தான் என் கண்கள் திறக்கப்பட்டு ஷோபாசக்தி பெண்களை வேட்டையாடுபவர் எனத் தெரிந்துகொண்டேன்’ என எழுதினார். லீனா மணிமேகலை போன்ற கூரிய புத்திசாலித்தனமும் மிகுந்த தைரியமும் கொண்ட ஒருவரின் கண்கள் பதின்மூன்று வருடங்களாகக் கட்டப்பட்டிருந்தன என்றால் அது வருந்தத்தக்கதுதான். ஆனால், அவரது கண்கள் கட்டப்பட்டிருக்கவில்லை.

2009 முதல் லீனா மணிமேகலைக்கும் எனக்கும் இருந்த உறவு எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். நாங்கள் பிரிந்து இருவருமே வெவ்வேறு உறவுகளுக்குப் போய்விட்ட பின்பும்கூட இருவரும் நட்பாகவே இருந்தோம். சேர்ந்து வேலைகள் செய்திருக்கிறோம். 2021-இல் அவரது ‘Black July’ குறும்படத்திற்கு நான்தான் பிரதியெழுதிக் குரல் நடிப்பும் செய்திருந்தேன். 18 மே 2021-இல் அவர் படித்துக்கொண்டிருந்த பல்கலைக்கழக வகுப்பில் நடந்த Zoom meeting-லும் கலந்துகொண்டு நான் உரையாற்றினேன். ‘கோவிட்’ கெடுபிடிக் காலத்திற்குப் பின்பாக 2022 -இல் நான் இந்தியாவுக்குச் சென்றபோது, புதியதொரு உறவில் நுழைந்தேன். அப்போதிலிருந்துதான் லீனா மணிமேகலை என்மீது ‘பெண்களை வேட்டையாடுபவன்’ என்ற குற்றத்தைச் சுமத்த ஆரம்பித்தார். இதை அவர் இந்தக் கண்டன அறிக்கை சொல்வதுபோன்று பரிசீலனை – ஆய்வு செய்தெல்லாம் அறிக்கையிடவில்லை.

முதலில், என்னுடன் உறவிலிருக்கும் தோழியின் முகநூலின் ‘கொமென்ட்’ பகுதியில் நுழைந்து என்னைக் குறித்த பொய்களை எழுதினார். அதை எனது தோழி அழித்தவுடன் ‘இதை உன்னால் அழித்துவிட முடியும். ஆனால், ஷோபாவைப் பொதுவெளியில் அம்பலப்படுத்த எனக்கு ஒரு நிமிடம் ஆகாது’ என்று மேசேஜ் அனுப்பினார். பின்பு எனது நெருங்கிய நண்பர்கள் வட்டத்திற்கு இதேபோன்று ‘பெண்களை வேட்டையாடுபவன்’ மின்னஞ்சல்களை அனுப்பினார். பின்பு ‘அந்தோணிதாசன்’ என என்னை விளித்துச் சாபமிடும் கவிதையும் எழுதினார். ஏற்கனவே என்னில் கோபமுற்றிருந்த சிவா மாலதி போன்றவர்களும் இவரோடு சேர்ந்துகொள்ள, இப்போது அவை எல்லாமே புனைவுகளாகவும் பொய்களுமாகச் சேர்ந்து மூன்றரைப் பக்கங்களில் கண்டன அறிக்கையாகப் பரிணமித்திருக்கிறது.

நான் பல பெண்களோடு உறவில் இருந்தேன் என்பது உண்மை. என்னுடைய 23 வயதிலிருந்தே எனக்குத் தொடராகக் காதல்கள் இருந்தன. திருமணம், குழந்தைகள், ஒழுக்கவாதம், கலாசாரம் போன்ற எல்லைகளுக்குள் வாழ விரும்புவர்களுக்கு என்னுடைய வாழ்க்கைமுறையும் தேர்வுகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கலாம். ஆனால், நான் மிக இளம் வயதிலேயே திருமணம் – குழந்தைகள் என்ற நிறுவன முறைக்கு வெளியே வாழும் ‘சுதந்திரக் காதல்’ வாழ்க்கைமுறையை வரித்துக்கொண்டவன். என்னுடைய அரசியல் கல்வியாலும் இளமையிலேயே அனார்க்கிஸத்தின் மீது எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பாலும் நான் இந்த வாழ்க்கைமுறையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவன். இதைப் பகிரங்கமாகவே பொதுவில் பலமுறை அறிவித்திருப்பவன். ‘எதுவரை’ இதழில் 2010 -இல் வெளியாகிய என்னுடைய நேர்காணலில் கீழ்க்கண்டவாறு சொல்லியிருந்தேன்.

”காதல், பாலுறவு போன்றவை உட்பட எனக்கு எவ்விதமான ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகளும் கலாசாரத் தளைகளும் கிடையாது. இரு உயிரிகளுக்கு இடையேயான உறவு அவர்களது தனிப்பட்ட தேர்வு. இதில் மதம், சட்டம், கலாசாரம் போன்றவற்றிற்கு எந்த வேலையும் கிடையாது.”

எனது வாழ்க்கைமுறை பகிரங்கமானது. எனக்கு இருந்த காதல் உறவுகளும் பகிரங்கமானவை. இந்தக் கண்டன அறிக்கையில் ‘திருமணம், குடும்பமாக சேர்ந்து வாழ்தல் போன்ற பொய்யான வாக்குறுதிகள் என்னால் கொடுக்கப்பட்டது’ எனச் சொல்லப்பட்டிருப்பதை நான் முற்றிலும் மறுக்கிறேன். நான் எவருக்கும் அவ்வாறு வாக்குறுதி கொடுத்ததில்லை என்பது எவ்வளவு உண்மையோ அதேபோன்று என்னுடன் உறவிலிருந்த யாருமே அவ்வாறு என்னிடம் வாக்குறுதி கேட்டதில்லை என்பதும் உண்மையே.

பாலியல் வன்முறை, பொருளாதாரரீதியாகச் சுரண்டியது, அதிகாரத்தை உபயோகித்துப் பாலியல் துர்ப்பிரயோகம் செய்தது போன்ற எந்தக் குற்றச்சாட்டுகளும் கண்டன அறிக்கையில் கிடையாது. பின்பு என்னதான் குற்றச்சாட்டு? காதல் உறவில் இருந்தவர்களை மேலாதிக்கம் செய்தேன், நம்பிக்கைத் துரோகம் செய்தேன், அவர்களுடன் திடீரெனத் தொடர்புகளைத் துண்டித்தேன் என்பவையே சாரமான குற்றச்சாட்டுகள்.

இந்தக் குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். எவரொருவர் மீதும் நான் மேலாதிக்கமோ பாலியல் சுரண்டலோ செய்ததில்லை. நம்பிக்கைத் துரோகம் சுட்டுப் போட்டாலும் – உண்மையாகவே துப்பாக்கியால் சுட்டாலும் – செய்வது என் இயல்பில்லை. உறவிலிருந்து பிரிந்த பின்பும் பலருடனும் நட்புரீதியான தொடர்புகளையும் சந்திப்புகளையும் இப்போதுவரை நான் வைத்திருக்கிறேன்.

பொத்தாம் பொதுவாக அவருக்கு அப்படி நடந்தது, இவருக்கு இப்படி நடந்தது எனக் கண்டன அறிக்கை சொல்கிறது. இப்படி யாரும் எவர்மீது வேண்டுமானாலும் எளிதாகக் குற்றம் சொல்லலாம். தனியொரு முகநூல் வம்பரும் இப்படிச் சொல்லலாம், 116 கையெழுத்துகள் சேர்ந்தும் சொல்லலாம். எண்ணிக்கை அல்ல உண்மையைத் தீர்மானிப்பது.

இவ்வாறான ஒரு பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டை முன்வைக்கும்போது, சில குறிப்பான சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பெயரைச் சொல்லாமல் இருப்பதில் நியாயம் இருக்கலாம். எனினும், எனது வாழ்க்கை எப்படிப் பகிரங்கமானதோ அவ்வாறே எனது காதல் உறவுகளும் பகிரங்கமானவையே, எல்லோருக்கும் தெரிந்தவையே என்றிருக்கும்போது இங்கே அந்தப் பெயர்களைக் குறிப்பிட்டிருக்க முடியும். அவ்வாறு குறிப்பிட்டிருந்தால் என்னால் ஆதாரபூர்வமாகக் காலவரிசைப்படி இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து எது உண்மையென நிரூபணம் செய்திருக்க முடியும். அந்த வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. இதை ஓர் எடுத்துக்காட்டோடு விளக்குகிறேன். 2010-இல், பிரான்ஸ் தமிழச்சியின் பெயரைக் குறிப்பிடாமல் ‘ஒரு பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்’ எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்லியிருந்தால் அந்தக் குற்றச்சாட்டின் தன்மையை நான் எவ்வாறு புரிந்துகொண்டிருக்க முடியும்? அந்தக் குற்றச்சாட்டை எப்படி ஆதாரத்தோடு என்னால் மறுத்திருக்க முடியும்? இந்தக் கண்டன அறிக்கையும் இவ்விதமே கற்பனைக் குற்றச்சாட்டுகளோடு வெளியாகிப் பொறுப்புக்கூறுமாறு என்னிடம் கேட்கிறது. பெயரற்ற பெண்கள் – கற்பனைக் குற்றச்சாட்டுகள் என்றிருந்தால் என்னால் எவ்வாறு எனது தரப்பைச் சொல்ல முடியும். பொத்தாம் பொதுவாக ‘மறுக்கிறேன்’ என்றுதான் சுருக்கமாகச் சொல்ல முடியும். எனினும், கண்டன அறிக்கையை மிகக் கவனமாகப் படித்து, முடிந்தவரை நான் பொறுப்புடன் என்னுடைய மறுப்பை இங்கே விளக்கமாக எழுதியிருக்கிறேன்.

கண்டன அறிக்கையின் பொய்களின் அணிவகுப்பில் அடுத்த குற்றச்சாட்டு ‘திருநங்கை செயற்பாட்டாளரை பாலியல் ரீதியாக சுரண்டியதோடு மட்டுமல்லாமல், தான் திரைக்கதை எழுதி நடித்த ரூபாவிலும்(Roobha) அந்த உறவில் நடந்தவற்றையெல்லாம் பயன்படுத்தி காட்சிகளாக்கியுள்ளார்’ என்பது. இந்தப் பாரதூரமான குற்றச்சாட்டை நான் முழுமையாக மறுக்கிறேன்.

‘ரூபா’ திரைப்படம் 2016-இல் கனடாவில் தயாரிக்கப்பட்டது. ஆனால், அந்தத் திரைப்படத்தின் கதை ‘செங்கடல்’ திரைப்படம் முடிந்த கையோடு லீனா மணிமேகலைக்காக என்னால் 2011- இல் ‘சிட்டு’ என்ற தலைப்பில் திரைக்கதையாக எழுதிக் கொடுக்கப்பட்டது. எனினும், முயற்சி மேற்கொண்டு நகரவில்லை. இதே கதை கனடாச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டு, ‘ரூபா ‘என்கிற கதையாக என்னால் எழுதப்பட்டு, ‘ரூபா’ திரைப்பட இயக்குனரிடம் என்னால் கொடுக்கப்பட்டது. ‘ரூபா’ திரைக்கதை என்னுடைய உறவில் நடந்த உண்மைக்கதை என்பதில் சற்றும் உண்மையில்லை.

குயர் சமூகத்தோடு எனக்கு நீண்டகாலமாகத் தொடர்பும் தோழமையும் இருக்கின்றன. நான் அவர்களோடு நிறைய உரையாடி அவர்களது வாழ்பனுபவம் குறித்து அறிந்திருக்கிறேன். கூவாகத்திற்குச் சென்று கள ஆய்வு செய்து லீனா மணிமேகலைக்காக ‘ரதிலீலா’ என்று இன்னொரு திரைக்கதையையும் எழுதிக் கொடுத்திருக்கிறேன். குயர் சமூகத்தவர்களுக்கு இலங்கை – இந்தியாவில் உரிமைகள் மறுக்கப்படும்போது, அவர்கள் அய்ரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோர என்னவகையான சட்ட வழிகள் இருக்கின்றன எனச் சொல்லியிருக்கிறேன். பிரான்ஸில் தஞ்சம் கோரிய சிலருக்கு ‘கலை மற்றும் சினிமாவுக்கான பிரெஞ்சு அகாதமி’யின் உறுப்பினர் என்ற முறையில் சாட்சியச் சான்றிதழ் கொடுத்திருக்கிறேன். ஆனால், இதையெல்லாம் நான் பாலியல் சுரண்டலுக்காகச் செய்தேன் என்று கண்டன அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது எனக்கு இழைக்கப்படும் அநீதி அல்லாமல் வேறில்லை.

பத்து வருடங்கள் காதலித்துத் திருமணம் செய்து குழந்தையும் பெற்றுவிட்டு, உறவில் ஏற்படும் சிக்கல்களாலும் முரண்பாடுகளால் விவாகரத்து வாங்கிப் பிரிந்துவிடுபவர்கள் உண்டு. அதற்கான உரிமை தார்மீகரீதியாக மட்டுமல்லாமல் சட்டப்படியும் அவர்களுக்குண்டு. அதுபோலவே காதலர்களுக்கும் பிரிந்து செல்வதற்கான உரிமை உண்டு. சிலவேளைகளில் இந்தப் பிரிவு நட்புணர்வுடன் சுமூகமாக நடக்கும். சிலவேளைகளில் முரண்பாடுகளால் எழுந்த கசப்புகளோடும் பழிவாங்கும் வன்மத்தோடும் இந்தப் பிரிவுகள் நிகழும். அங்கே நிச்சயமாக உணர்வுரீதியான பாதிப்புகளும் உளக்கொந்தளிப்புகளும் இருக்கும். ஆனால், இருவருக்கு இடையேயான இந்த உறவுச் சிக்கலை ‘பாலியல் சுரண்டல்’ எனச் சொல்லிப் பழிதீர்க்க நினைப்பது அருவருப்பானது. அதைப் பெண்ணியச் சாயம் பூசிய கண்டன அறிக்கையாக வெளியிடுவது தவறான முன்னுதாரணம். கண்டனத்திற்கு உரிய செயல். இத்தகைய பொய் அறிக்கைகளை உலாவவிடுவது என்பது எதிர்காலத்தில் உண்மைகளின், ஆதாரங்களின் அடிப்படையில் வெளியிடப்படும் அறிக்கைகளையும் சமூகம் சந்தேகத்தோடு அணுகத் தூண்டும் பொறுப்பற்ற செயல்.

கண்டன அறிக்கையில் குறிப்பிடப்படும் இன்னொரு விஷயம் “மிரட்டுதலும் மெளனிக்கச்செய்வதும் – ஷோபாசக்தி அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக பேசுபவர்களிடம், நீங்கள் என்ன கலாசார காவலர்களா (cultural Policing) என்று கேட்கிறார்” என்பது.

இந்தக் கண்டன அறிக்கையைத் தயாரித்தவர்கள், கையொப்பமிட்டவர்கள் இதை நிரூபிக்கத் தயாரா? ஏன் இந்தப் பொய்கள்! இது உண்மை என்றால் யாரை மிரட்டினேன் என இங்கு பகிரங்கமாகச் சொல்வதில் என்ன சிக்கல் உங்களுக்கு? கலாசாரக் காவலரா எனக் கேட்டு எங்கு எழுதினேன்? யாரை மிரட்டினேன்? ஆளும் சொல்லாமல் பேரும் சொல்லாமல் ‘ஷோபாசக்தி அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக பேசுபவர்களிடம் கலாசாரக் காவலரா எனக் கேட்கிறார்’ எனக் கண்டன அறிக்கையில் புகார் சொல்லப்படுகிறது. என்னுடைய புகார் என்னவென்றால், அப்படி என்னால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பெண்களின் சார்பில் இந்த நிமிடம்வரை எவரொருவரும் என்னிடம் பேசவில்லை என்பதுதானே.

அடுத்த குற்றச்சாட்டு ‘அவருடைய சக அறிவுஜீவி கூட்டாளிகளை விட்டு அதையொட்டி கட்டுரை எழுத வைப்பது, அறிக்கை விடச் செய்வது என்று தனது செல்வாக்கை ஊடகமாக்கி, பாதிப்புக்குட்பபடுத்தப்பட்ட பெண்களையும் அவர்களுக்காக பேச வந்தவர்களையும் பிற்போக்காளர்களாக அடையாளப்படுத்தி குணக்கொலை (character assassination) செய்திருக்கிறார்’ என்பது.

எனது அறிவுஜீவி கூட்டாளிகளை எப்போது எவர்மீது நான் ஏவிவிட்டேன்? இதற்காவது உங்களிடம் ஏதாவது ஆதாரம் உண்டா? சேறடிக்க வேண்டுமென்று இறங்கிவிட்டால் எந்த எல்லைக்கும் இறங்கிச் சேறு வீசிவிடுவீர்களா? எனது ‘அடியாள் எழுத்தாளர்கள்’ என ஒரு பட்டியல் அவ்வப்போது முகநூல் வம்பர்களால் வெளியிடப்படுவதுண்டு. இந்தப் பட்டியலில் உள்ள எழுத்தாளர்கள் ஒவ்வொரும் தங்களது எழுத்துத் திறனால் தங்களை இலக்கிய உலகில் நிறுவிக்கொண்டவர்கள். தங்களுக்கு எனத் தனித்துவமான பார்வைகளைக் கொண்டவர்கள். இலக்கியத்திற்கு எந்த மதிப்புமளிக்காத சமூகச் சூழலிலிருந்து தங்களது உழைப்பாலும் திறனாலும் எழுந்துவரும் இளம் எழுத்தாளர்களை இவ்வாறு கொச்சைப்படுத்துவது நாணயமற்றது.

கண்டன அறிக்கையில் நகைச்சுவை அம்சங்களுக்கும் இடம் இருக்கக்கூடாது என்றில்லை. ஆனால், அது அசட்டு நகைச்சுவையாக இருப்பது இரசிக்கத்தக்கதல்ல. ‘தனது வயதையும், உடல் நலம் சார்ந்த பராமரிப்புக்கான தேவையையும் கூறி பெண்களிடம் கழிவிரக்கம் தேடுகின்றமை’ என்பதும் என்மீதான ஒரு குற்றச்சாட்டாம். இதை மறுப்பதென்றால் நான் மிகுந்த உடல் நலத்தோடு இருக்கிறேன் என்று மருத்துவச் சான்றிதழ் பெற்று இங்கே சமர்ப்பித்தால்தான் முடியும். வேண்டுமென்றால் அதையும் பொறுப்பாகச் செய்துவிடுகிறேன்.

‘பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்ணொருவர் கூறுகையில் ஷோபாசக்தி குடிக்கு அடிமையாக இருப்பதுடன் தன்னையும் அப்பழக்கத்திற்கு ஆளாக்கிவிட முனைந்தார் என்பதாலேயே அவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டதைக் குறிப்பிட்டார்’ என்றொரு கண்டனக் குற்றச்சாட்டு. இதெல்லாம் ‘குமுதம்’ கிசுகிசுவுக்கு நிகரான கண்டனம். இந்தக் கண்டனத்திற்கு என்ன பொறுப்புக் கூறுவது என்று எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. ஒரு குடி அடிமையால் முப்பது வருடங்களாக இலக்கியத்திலும் சினிமாவிலும் இடையறாது இயங்க முடியுமா? ஒரேயொரு கிட்னியோடு முப்பது வருடங்களுக்கும் மேலாக முழுமையான தேக ஆரோக்கியத்தோடு இருக்க முடியுமா? என்றெல்லாம் நீங்களாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டியதுதான்.

கற்பனைக் குற்றச்சாட்டுகளுடன் கண்டன அறிக்கை வெளிவந்துவிட்டது. இனி என்ன நடக்கும்?

என்மீது அரசியல்ரீதியாக நெடுங்காலமாகவே பகைமை பாராட்டிவரும் பெருமக்கள் இந்தப் பொய் அறிக்கையைப் பரப்பிச் செல்வார்கள். பாலியல் கிசுகிசுகளுக்காகவே காத்துக்கிடக்கும் முகநூல் வம்பர்கள் இதைக் காவிச் செல்வார்கள். கண்டன அறிக்கையை ஆதரிக்கிறேன் எனப் பொய் ஆதாரங்களும் பொய்ச் சாட்சியங்களும் இனி அணிவகுக்கும். அதேவேளையில் தீர ஆராய்ந்து தெளிந்து நடப்பவர்கள் இந்த அறிக்கையிலுள்ள பொய்களையும் அறிக்கையின் உண்மையான நோக்கத்தையும் தெரிந்துகொள்வார்கள்.

இந்த மறுப்புப் பதிவை எழுதி முடிக்கும் இந்தத் தருணத்தில் எனக்குத் தயக்கமோ வருத்தமோ ஏதுமில்லை. மாறாக, கடந்த இரண்டு வருடங்களாகவே என்மீது அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பரப்பப்பட்டுக்கொண்டிருந்த அவதூறுகளுக்கு ஒட்டமொத்தமாகப் பதில் சொல்லி முடித்திருக்கும் மனநிறைவே என்னிடம் இருக்கிறது.

கடைசியாக ஒன்று… இந்த அறிக்கையின் நோக்கம் என்னைப் பொறுப்புக்கூற வைப்பதுதான் என்றால், நான் பொறுப்பாக மறுப்புக்கூறி அந்த நோக்கத்தை இங்கே நிறைவேற்றி வைத்துவிட்டேன். ஆனால், அறிக்கையின் மைய நோக்கம் அதுவல்லவே. அது என்னவென்று அறிக்கை அறிவிக்கிறது:

“ஷோபாசக்திக்குத் தளங்களை ஏற்படுத்திக் கொடுத்து, விருதுகளையும் அங்கீகாரத்தினையும் வழங்கிய ‘முற்போக்கு’ இயக்கங்கள், காந்தியவாதிகள், பதிப்பாளர்கள், அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எமது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.” என்கிறது கண்டன அறிக்கை.

என்னைத் தனிமைப்படுத்திச் சமூகப் புறக்கணிப்புச் செய்வது, என்னோடு தோழமை பாராட்டும் இயக்கங்களிலிருந்து என்னைப் பிரித்துவைப்பது, என்னைக் குறித்து எழுதும் ஊடகவியலாளர்களைத் தடுப்பது, எனது பதிப்பக வாய்ப்புகளைக் கெடுப்பது, என்னைத் தேடி வந்துகொண்டேயிருக்கும் சர்வதேச அளவிலான சினிமா வாய்ப்புகளுக்கு வேட்டு வைப்பது என்பவைதான் கண்டன அறிக்கையின் மைய நோக்கம். இதையெல்லாம் செய்யுமளவுக்குக் கற்பனைகளுக்கும் பொய்களுக்கும் சக்தி இருக்குமானால், முப்பது வருடங்களாக எந்த அதிகார சக்திகளுக்கும் ஆயுதங்களுக்கும் அஞ்சாமலும் பணியாமலும் எழுதிவரும் எனது எழுத்திலுள்ள நேர்மைக்கும் உண்மைக்கும் அதைவிட அதிக சக்தியுண்டு என்பதே எனது நன்நம்பிக்கை.

-ஷோபாசக்தி
15.04.2025

https://www.shobasakthi.com/shobasakthi/2025/04/15/கண்டன-அறிக்கை-உண்மைகளும/?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR43YTEm6EiiMBVsbEpDyij4Tlsosd_5QlFrRgQlWlYv-yjzXDyREzvslMgcxQ_aem_XMWxW8ugOe8AUcND3d66aA

என்னதான் நீட்டி முழக்கினாலும்…

சோபா….

சகதி…

சகதி தான்🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

ஷோபாசக்தி பற்றி கண்டண அறிக்கையை முன்னின்று தயாரித்தவர் அவருடன் உறவில் இருந்த பெண்ணியவாதி லீனா மணிமேகலை என்றுதான் தெரிகின்றது.

சீமான் மீது விஜயலட்சுமி வழக்குப் போட்டதுபோல் ஏன் பாதிக்கப்பட்டதாகக் கூறுபவர்கள் வழக்கைப் போடமுயலவில்லை? கேஸ் நிற்காது என்பதனால்தான் இருக்கும்😜

கையெழுத்து வைத்தவர்கள் கேட்டவரின் “ முகத்திற்காக” வைத்திருக்கலாம்!

ஷோபாசக்திக்கு முட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவரின் நீண்ட பதிலில் தெளிவாகத்தான் இருக்கின்றது.. அவருக்கு பல்லிருக்கு பக்கோடா சாப்பிடுகின்றார்.. பக்கோடா மொறுமொறு இல்லாவிட்டால் வேறு பிராண்ட்டுக்குப் போகின்றார்!!

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, கிருபன் said:

தக்கஷோபாசக்தி பற்றி கண்டண அறிக்கையை முன்னின்று தயாரித்தவர் அவருடன் உறவில் இருந்த பெண்ணியவாதி லீனா மணிமேகலை என்றுதான் தெரிகின்றது.

சீமான் மீது விஜயலட்சுமி வழக்குப் போட்டதுபோல் ஏன் பாதிக்கப்பட்டதாகக் கூறுபவர்கள் வழக்கைப் போடமுயலவில்லை? கேஸ் நிற்காது என்பதனால்தான் இருக்கும்😜

கையெழுத்து வைத்தவர்கள் கேட்டவரின் “ முகத்திற்காக” வைத்திருக்கலாம்!

ஷோபாசக்திக்கு முட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவரின் நீண்ட பதிலில் தெளிவாகத்தான் இருக்கின்றது.. அவருக்கு பல்லிருக்கு பக்கோடா சாப்பிடுகின்றார்.. பக்கோடா மொறுமொறு இல்லாவிட்டால் வேறு பிராண்ட்டுக்குப் போகின்றார்!!

மன்னிக்கவும் மறுப்பு அறிக்கைக்கு....

மொறுமொறு குறைந்துவிட்டால் வேறு பிராண்ட் ஒன்று வந்து விடுகிறது அல்லது வந்து விழுகிறது என்று வரவேண்டும்.

எனக்கு என்ன சந்தேகம் என்றால் குளிக்காத இந்த மனுசனுடன் எப்படி இவர்கள்?? அப்படியானால் யார் இவர்கள்????

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அவரின் நீண்ட பதிலில் தெளிவாகத்தான் இருக்கின்றது.. அவருக்கு பல்லிருக்கு பக்கோடா சாப்பிடுகின்றார்.. பக்கோடா மொறுமொறு இல்லாவிட்டால் வேறு பிராண்ட்டுக்குப் போகின்றார்!!

IMG-8266.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ வருடங்களின் முன் தமிழச்சி முன்வைத்த குற்றச்சாட்டுகளை வாசித்திருக்கின்றேன். பின்னர் அம்பையும் ஏதோ எழுதியிருந்தார் என்று ஞாபகம். அப்போது ஷோபா சக்தி இவ்வளவு பிரபலமில்லை, அப்போது சினிமாவிலும் இல்லை என்று நினைக்கின்றேன்.

ஷோபா சக்தி மட்டும் இல்லை, இன்னும் சில ஈழ, இந்திய எழுத்தாளர்களும் எழுதும் வகையும், அவர்களே சொல்லிக் கொள்ளும் அவர்களின் பின்னணியும் ஒரு வகையில் விதி மீறல்களாக, ஒரு கலகமாக தெரிகின்றன. இது அவர்களே உருவாக்கிக் கொள்ளும் ஒரு பிம்பம் என்றே நான் நினைக்கின்றேன். சில எழுத்துகள் செயற்கையானவை. அவர்களுக்கு அப்படியான ஒரு தேவை இருக்கின்றது போல. அத்துடன் வாசிப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சியை கொடுத்து, இவற்றை வாசிப்பதும் ஒரு கலகம் என்று தோன்ற வைக்கின்றதோ என்று நான் நினைத்துக்கொள்வேன். இது இருக்கும் நடைமுறைகளை எதிர்க்கும் ஒரு வித மனநிலை. ஒரு வெளிப்பாடு. சிலர் சேர்ந்து கொள்கின்றனர்.

இது ஒரு மிகச்சிறிய வட்டம். மிக இலகுவாக இவர்களை, இந்தப் படைப்பாளிகளை மற்றும் வாசகர்களை, எண்ணிவிடலாம். இதை ஏன் இவ்வளவு தூரம் இழுத்து வந்தார்கள். அன்று தமிழச்சி சொன்னவுடனேயே, இடைவெளி விட ஆரம்பித்திருக்கலாம்.

படைப்பு வேறு, படைப்பாளி வேறு என்று இருந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Maruthankerny said:

சோபாசக்திக்கு முட்டுக்கொடுப்பவர்கள் தற்காலத்தில் வெள்ளை வேட்டி சால்வை போட்டிருப்பதால் முட்டு கொடுக்க வரவில்லை என்று நினைக்கிறேன்

லீனா மணிமேகலை ( பொம்பிளை சோபாசக்தி.... பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை)

பாலியல் குற்றவாளி, பாலியல் குற்றம் சாட்டப் பட்டவர் ஆகியோரின் பக்கம் பலகாலம் advocate ஆக இருந்து விட்டு, திடீரென்று குற்றஞ் சாட்டுவோரின் பக்கம் பாய்வதும் "பெரிய பாய்ச்சல்" தான்😎!

  • கருத்துக்கள உறவுகள்

ஷோபா சக்தியைச் சூழும் கேன்சல் கலாச்சாரவாதிகள் - ஆர். அபிலாஷ்

AVvXsEi1u6lJqwJZoyMcsutQdgXO6eax-UJlYVw824Kc_FeljorrDkNQOFkj9dvzkjevKmO1pGxvpzCcoeTehYTsnkHoz2xYF9F6Kq93Pk5_iUK1OqHeytRKr_ZcwzRIwy8X_OVqQJLmglCozZW_eYxL0VJCH6bRLgkCDh0efSU1KlEbODrFGGJio4ixfQiHXc70=w400-h400



நூற்றுக்கும் மேற்பட்ட பெண்ணியச் செயல்பாட்டாளர்களும் எழுத்தாளர்களுமாகக் கையெழுத்திட்டு வெளியிட்ட ஷோபாசக்திக்கு எதிரான "குற்ற அறிக்கையை" அது வெளியான சமயத்தில்உடனடியாகப் படித்தேன். நான் அடிப்படையில் ஒழுக்கவாதியோநியாயவாதியோ அல்லன். அதேநேரம் எனக்குள் அபத்தமானநீதியுணர்வு உண்டு, அதை மீறும் விழைவும் உண்டு. இந்த இரண்டுஎதிர்விசைகளுக்கு நடுவே நிற்கும் எழுத்தாளர் நான். என் இடத்தில்இருந்து பார்க்கையில் அமைப்பின்மைவாதிகள் மீது தோன்றும்திகைப்பும் பயமுமே அறிக்கையில் தோன்றும் ஷோபா சக்தியின்சித்திரத்தைப் படிக்கையில் ஏற்பட்டது. அவர் கெட்டவரா எனும்அதிர்ச்சியல்ல, அது வேறொன்று - அதை இங்கு அபுனைவில்விளக்க முடியாது. (புனைவில் மட்டுமே இயலும்.)


ஷோபாவின் எதிர்வினையையும் அது வந்த உடனே படித்தேன்: அதுசற்று பலவீனமானது - ஏனென்றால் ஒழுக்கமீறல், துரோகம் போன்றமிக அந்தரங்கமான குற்றச்சாட்டுகளை ஏற்று பின்னர்நியாயப்படுத்த முடியாது. ஒன்று, நமது கட்டுரை வடிவம்அடிப்படையில் அறம் எனும் கட்டமைப்பினுள் எழுப்பப்பட்டது. புத்தொளிக் காலத்தில் மதக்கருத்துக்களை மறுத்து தோன்றியபுரட்சிகர சிந்தனைகளை வெளிப்படுத்தவும், தனிமனிதவாதத்தைமுன்னெடுக்கவும் தோன்றிய வடிவமே கட்டுரை வடிவம். அதுகுற்றங்களுக்கு கடவுளிடம் அல்ல தனிமனிதனின் நடத்தையிலும்மனசாட்சியிலும் பதிலைக் கோரும் வடிவம். அதற்குள் நீங்கள் மனிதநடத்தையின் குழப்பமான நிழலான பகுதிகளை விவரிக்கவோ நம்பவைக்கவோ முடியாது. அடுத்து, நம் சமூகம் மிகவும்கட்டுப்பெட்டியானது. ஆணோ பெண்ணோ பாலியல் மீறலை அதுமன்னிக்காது (ஆனால் தினம் தினம் அதில் ஈடுபட்டவாறும்இருக்கும்). 


இம்மாதிரிக் குற்றச்சாட்டுகளைப் பற்றி நான் ஏற்கனவே என் நூலில்விரிவாக என் கருத்துக்களைப் பதிவு செயதிருக்கிறேன். நான் இந்தwoke பண்பாட்டை, அதன் அம்பலப்படுத்து, சமூகவிலக்கம் செய்என முழங்கும் cancel cultureஐ ஏற்கவில்லை. அது முற்றதிகாரத்தைநோக்கி உலகைக் கொண்டு செல்வதற்கான முன்னெடுப்பே என்றுமுன்பு எழுதியிருக்கிறேன் - இப்போது பாருங்கள் அமெரிக்காவில்டிரம்பின் சர்வாதிகாரத்திற்கு அடிகோலியதே woke பண்பாட்டுக்குஎதிரான வெறுப்பும், அவநம்பிக்கையும்தான். மேலும் இதுஉருவாக்கும் கும்பல் மனப்பான்மை, ஒற்றை உணர்வின் கீழ்மக்களை டிஜிட்டல் ஊடகத்தில் திரட்டும் முறைமை ஆபத்தானது, ஜனநாயகத்துக்கு விரோதமானது. ஏனென்றால் அது நீதியின்பெயரிலான அவநம்பிக்கையில் பிறக்கிறது, ஆனால் வினோதமாகநீதியைக் கோரவோ, பெறவோ செய்யாமலே மனதளவில்முற்றுமுழுமையான அமைதியை நாடுகிறது. அதற்காக குற்றம்சாட்டப்பட்டவரை மிகப்பெரிதாகப் பெருக்கி அவரை ஒற்றைத்தீமையாக நம் முன் நிறுத்துகிறது, அவரைப் போன்றவர்களையும்பட்டியலில் சேர்த்து அவரை மட்டுமே அந்நேரத்தில் நம்கண்முன்னால் பெருக்கிக் கொண்டே போகிறது. அவர் சமூகத்தீமைக்கு மொத்தமான உருவகமாகிறார். அதன்பின்னர் அதுதிருப்தியாகி நின்றுகொள்கிறது. அவரைக் காம வேட்டையாடி, வேட்டை மிருகம் என்று திரும்பத்திரும்பச் சொல்லும்போதே குற்றம்ஏன், எப்படி, எதனால் நடந்தது, அது குற்றம் தானா என்றெல்லாம்விசாரிக்கக் கூடாது என்கிறது. அதற்கான நியாயப்பாடுகளையும்அது சொல்கிறது. இது சமூகக்கூச்சம், பாதிக்கப்பட்டவருக்கானபாதிப்பு சம்மந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல என நினைக்கிறேன். மாறாக கவனம் முழுக்க ஒற்றை நபர் மீது வைப்பதற்கான உத்திஇது. அவரை "வெற்றுக் குறிப்பான்" ஆக்குவதே நோக்கம். அவர்அதன்பிறகு ஒரு பேயாக மாறுகிறார், எல்லாரும் அவரைப் பற்றிமுணுமுணுப்பார்கள், ஆனால் அவரது வாழ்க்கை சட்டென நமக்குஉடலற்றதாக, மர்மமாக மாறுகிறது, அது தன் பொருண்மையை, அர்த்தத்தை இழக்கிறது, யாரும் அதை நாட மறுப்பார்கள். அதைத்தேடாதிருப்பதே அவருக்கான தண்டனை ஆகிறது. இம்மாதிரிகேன்சல் கலாச்சாரத்தில் "விசாரணையும் தண்டனையும்" இந்தநடைமுறையைக் கொண்டிருப்பதைத் திரும்பத்திரும்பப்பார்க்கிறேன். வெற்றுக்குறிப்பான் ஆக்கப்பட்டவர் அதன்பிறகுநம்மிடையே பேயாக மட்டுமே உலவ முடியும். அவரைஆதரிப்பவர்களுக்கும் இதுவே நடக்கும். 


முற்றதிகார வலதுசாரி அரசியலும் இதே நடைமுறையையேபின்பற்றுகிறது. நமக்குத் தோன்றலாம் அவர்களின் இலக்கும், கொள்கையும் வேறுவேறு என்று. ஆனால் முற்போக்கு தாராளவாதசிந்தனையின், பண்பாட்டின் முற்றதிகாரச் சார்பு, வலதுசாரிமுற்றதிகாரத்துடன் தீவிர தாராளவாத முற்போக்காளர்கள்கைகுலுக்கும் சந்தி (intersection) இது. அதனாலே இந்த woke பண்பாட்டைத் தொடர்ந்து வலதுசாரி அரசியல் பெரும் எழுச்சிபெறுகிறது. உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் இது நடக்கிறது. முந்தைய நடுநிலை முற்போக்காளர்கள் இப்படியான அரசியலைவரிக்க மாட்டார்கள். அவர்கள் சமநிலையான நிலைப்பாட்டைஏற்பார்கள். அதை இந்த தீவிர தாராளவாத முற்போக்காளர்கள்ஏற்பதில்லை. ஒரு கட்டத்தில் முன்னவரை ஒழித்து woke அரசியல்செயல்பாட்டாளர்கள் மேடையை ஆக்கிரமித்துக் கொள்வார்கள், அவர்கள் அப்படியே அம்மேடையை அரசியல் மேடையாக்கிமுற்றதிகாரிகளுக்கு கைமாற்றி விடுவார்கள். இந்தியாவில் இது2013இல் காங்கிரஸின் கடைசி கட்டத்தில் நிர்பயா விசயத்தில்நடந்தது. நிர்பயா விவகாரத்தில் மக்களிடம் பரவலாக ஏற்பட்டஅவநம்பிக்கை நீதிமன்றம், காவல்துறை, சிவில் சமூகத்தால்பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முடியாது, ஜனநாயகம்தோற்றுவிட்டது என்பதே. அதன்பிறகு மோடி வந்து இந்தநிறுவனங்களை ஒவ்வொன்றாக ஒழித்தார். 


நிக்கோலே மாட்டேச்சி தன் இத்தாலிய தகவல் களஞ்சியம்டிரெக்கானிய நூலில் சொல்வதைப் பாருங்கள். முற்றதிகாரம்ஜனநாயக அமைப்புகள் மீது அவநம்பிக்கையை உருவாக்கிதனக்கான சித்தாந்தத்தின் அடிப்படையில் தீர்வைக் காணக்கோருகிறது எனும் அந்த விளக்கம் அப்படியே இந்த கேன்சல்பண்பாட்டுக்கும் பொருந்துகிறது: "In totalitarian regimes we have a charismatic bureaucracy alongside a terror-mongering secret police: the moment of legality and predictability is lost, as the enemy is not only the real one because it is possible to invent a target enemy, chosen by whomever has the sovereign power to interpret the ideology.” எட்கர் மோரின் தனது “For a Crisiology” நூலில்முற்றதிகார அரசுகள் பொதுவாக மற்றமைகளைத் தாக்கும்போதுஅவர்களுடைய நோக்கம் அச்சத்தை விளைவித்து எல்லாவிதமானஎதிர்ப்புகளை ஒடுக்குவதாக இருக்கும் என்கிறார். அதாவது ஒழுக்கமீறலுக்கு சமூகத்தில் எப்போதுமே இடமிருக்கிறது. நேரடிவன்முறையை சமூகம் அனுமதிக்காது என்றாலும் அது அராஜகமானதனிமனிதர்களையும், அவர்களுடைய உறவுகளையும்ஒடுக்குவதில்லை. அவர்கள் - ஆணோ பெண்ணோ - ஒன்றுக்குமேலான உறவுகளில் இருப்பார்கள், ஒரேசமயத்தில் கூடஇருப்பார்கள், சரி-தவறு எனும் இருமைக்கு அப்பால் காதலிக்கமுயல்வார்கள், பரஸ்பரம் மனதைக் காயப்படுத்துவார்கள், துரோகம்இழைப்பார்கள், அதை நியாயம் என நினைக்கவும் செய்வார்கள். ஆனால் அதுவும் சேர்ந்ததுதான் ஜனநாயக சமூகம். இவர்களைஒழித்து பரிசுத்தமான sterile சமூகத்தை உருவாக்க முயலும்போதுஅது ஒழுக்கமீறல் குறித்த அபரிதமான பயத்தை சமூகத்தில்விதைக்கிறது, இது பின்னர் அரசதிகாரத்தை எதிர்ப்பதற்கானபயமாக உருவெடுக்கிறது. அப்கானிஸ்தானில் ஹசாராஇனக்குழுவினர் சிறுபான்மையினர். அவர்கள் ஷியா இஸ்லாமியர்எனினும் அப்பகுதியில் உள்ள பிரம்மாண்ட புத்தர் சிலைகள்அவர்களுக்கு கடந்த கால பெருமையின் சின்னமாக (வெற்றுக்குறிப்பானாக) இருந்தன. தாலிபான்கள் அவற்றை தகர்த்தபின்னர்ஏற்பட்ட வெற்றிடத்தில் ஹாசார மக்களால் எதையும் வைக்கமுடியவில்லை. அவர்கள் தலைகுனிந்து தாலிபான்களை(இன்னொரு வெற்றுக்குறிப்பான்) ஏற்றுக்கொண்டு சமரசம்பண்ணிக்கொண்டனர். இந்தியாவில் இப்போது அது இஸ்லாமியமத நிர்வாகத்தில் குறுக்கிடுவதன் வழியாக நடக்கிறது. பண்பாட்டளவில் கேன்சல் பண்பாட்டினர் ஆண்களில் சிலரைக்குறிவைத்து இதைச் செய்கிறார்கள். அவர்கள் தம்மைப்பாதிக்கப்பட்டவர்களாக முன்வைப்பதால் அவர்களுடைய செயலின்தாக்கம் நமக்கு உடனே விளங்காது - ஆனால் மறைமுகமாகஅவர்களும் சமூகத்திற்கு நீதி பரிபாலனம் மீதுள்ள, தீவிரகண்காணிப்பு இன்றி வாழ்வதில் உள நம்பிக்கையைக் குலைக்கஉதவுகிறார்கள். அதாவது நம்மால் கண்ணால் பார்க்க முடியாத சமூகஅரசியல் பாதிப்புகளை இவர்கள் உருவாக்குகிறார்கள். ஸ்டீவன்கிரீன்ஹட் தன் கட்டுரையில் இதை ஒரு எதேச்சதிகாரப் போக்கு எனஅழைப்பது இதனால்தான். அவர் இப்போக்கு முன்பு ரஷ்யாவில்ஸ்டாலினிய குலாக்குகளின்போது தேசத்தை விமர்சிப்போரைஅம்பலப்படுத்துவது எனும் நடைமுறையாக இருந்தது என்கிறார். ஜேம்ஸ் ரெனால்ட்ஸ் தனது கட்டுரையில் முற்றதிகாரம் ஒழிந்தாலும்அதன் தன்மைகள் சமூகத்தில் நீடிக்கும், சாதாரணர்களே அந்தபோக்குகளை முன்னெடுப்பார்கள் என்று ஹானா ஆரெண்ட்சொன்னதைக் குறிப்பிட்டு இன்றுள்ள கேன்சல் கலாச்சாரம் அதன்நீட்சியே என்கிறார். ஏனென்றால் உண்மைக்கும் கற்பனைக்கும்இடையிலான எல்லைக்கோட்டை முழுக்க ஒரு நொடியில்அழித்துவிட்டு, தம்மால் சொல்ல்படுவன எல்லாமே பரிசீலனைக்குஅப்பாலான நிஜங்கள் என நம்பும்படி அவை கோருகின்றன. இதுசமூகத்தை முற்றதிகாரத்துக்குப் பழக்குகிறது. ("For Arendt, a key feature of totalitarianism - in contrast to other forms of tyranny or dictatorship – is the toying with truth, deliberate confusion of fiction and reality, and incessant use of mass media to manipulate the way millions of people experience the world. In our era of fake news, targeted messaging and ‘cancel culture’, there is still something profound in this warning. Arendt is alerting us to the use of propaganda and conspiracy to change the perceived structure of reality on a whim.”)


லெய்டில் மற்றும் தாரியா தாம் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் கேன்சல்கலாச்சாரம் பெரும்பான்மைக்காக சிறுபான்மையை வாய்மூடவைக்கும் கருத்துச் சுதந்திர, ஜனநாயக ஒழிப்புச் செயல்பாடு எனும்பார்வையை வைக்கிறார்கள். “A distinctive feature of the new information culture is thepredominating discourse of the majority group, where the minority, under the threat of pressure, will strive not to express their opinion at all, since their views have ceased to fit into the dominant culture [Noelle-Neumann 1974].) அவர்கள் ரஷ்யாஉக்ரேனில் படையெடுத்ததை ஒட்டி ஐரோப்பா முழுக்க ரஷ்யகலைஞர்களும் சினிமாவும் எழுத்தாளர்களும் “கேன்சல்” செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு, அவர்களிடத்தில் உக்ரேனியஜனாதிபதிக்கு மேடைகளில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதுஎன்கிறார் (ஆனால் இப்போது அவரும் பின்னுக்குப் போய்விட்டார்). இந்த கலைஞர்கள் ரஷ்ய அரசின் நடவடிக்கைகளுக்கு ஏன்தண்டனையை அனுபவிக்க வேண்டுமெனக் கேட்க இயலாது. அதன்பெயர் தான் கேன்சலேஷன். கேன்சல் கலாச்சாரம் கீழிருந்துகுரலற்றவர்கள் அதிகாரத்தை எதிர்ப்பதற்கான கருவி அல்ல, அதுஅயலுறவு விவகாரங்களில் முற்றதிகாரத் தலைவர்களின்கருவியாகவும் மாறுகிறது என அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதனாலே - நான் ஏற்கனவே ஒருமுறைக் குறிப்பிட்டதைப் போல - இந்தியாவிலும் உற்பத்தி சாதனங்களை, முதலீட்டைக் கையில்வைத்திருப்போர் மீது கேன்சல் பிரச்சாரம்முன்னெடுக்கப்படுவதில்லை - முதல்வர், கட்சித் தலைவர், மதத்தலைவர், பெருமுதலாளிகள் எப்போதும் பாதுகாப்பாகஇருப்பார்கள். உதாரணமாக ஜக்கியின் இஷா ஆசிரமத்தில்நடக்கும் பாலியல் குற்றங்களை விசாரிக்கவும் அந்தஅறக்கட்டளையை தடைசெய்யும்படி ஏன் பெண்ணிய கேன்சல்கலாச்சாரக் குழுமங்கள் கோருவதில்லை? ஏன் தேவாலயமதகுருமார்கள் மிது அவர்கள் கேள்வி எழுப்புவதில்லை? அவர்கள்பண்ணாத அட்டகாசமா? பல ஆயிரம் பெண்களும் இளைஞர்களும்புழுங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் கேன்சல்கலாச்சாரவாதிகள் அவர்களுடன் நிற்க மாட்டார்கள். மோடி மீதுகுஜராத்தைச் சேர்ந்த இளம்பெண்ணைப் பாலியல் தொந்தரவுசெய்ததாக, விசாரணை அமைப்புகளை அப்பெண்ணைஉளவுசெய்ய அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தபோது ஏன் அவரைகேன்சல் செய்ய யாரும் கோரவில்லை? ஏனென்றால் கேன்சல்பிரச்சாரகர்களும் தேசத்தின் கருவிகளே. அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள், பெருமுதலாளிகளுக்கு அப்பால் பிரபலங்களைஎடுத்துக் கொண்டால்கூட அவர்கள் தம் மீது வைக்கப்படும் கேன்சல்கலாச்சாரப் பிரச்சாரத்தை தூசைப் போல தட்டிவிட்டுக் கொண்டுநகர்ந்து விடுகிறார்கள். ஏனென்றால் சமூக அவமதிப்பை மீறிச்செயல்படும் செல்வமும் அதிகாரமும் கட்டமைப்பும் அவர்களுக்குஉண்டு. உ.தா., ஆயிரம் கோடிக்கு லாபமீட்டும் படமெடுக்கும் நடிகர்மீது மீடூ குற்றச்சாட்டு எழுந்தால் அவர் அதைப் பொருட்படுத்தவேண்டியதில்லை. அவரால் நீதிமன்றத்துக்குச் சென்று அதற்குஎதிராக தடையுத்தரவு வாங்க முடியும். அவர்களுடையஆதரவாளர்கள் பெரும் தடையரணாக எழுந்து அவர்களைப்பாதுகாப்பார்கள். உ.தா., ஒருவேளை உதயநிதி மீது மீடூ எழுந்தால்(எழ வேண்டுமென நான் கூறவில்லை) பல லட்சம் பேர்கள் அவரைஆதரித்து எழுதுவார்கள், ஊடகங்களில் பலர் கருத்துதெரிவிக்கையில் இதை அரசியல் சதி என்பார்கள். ஆனால் எளியமத்திய வர்க்க ஊழியர்களில் இருந்து தம் அதிகாரத்தைஇழந்துவரும் சோபையிழந்த பிரபலங்கள் வரை சுலபத்தில்இரையாகிவிடுவார்கள். அவர்களே கேன்சல் கலாச்சாரத்தின்உண்மையான இலக்கு, அதிகாரவர்க்கம் அல்லர், கேன்சல்கலாச்சாரம் அதிகாரத்துக்கு எதிரான குரலற்றவர்களின் எழுச்சிஅல்ல, அது குரலற்றவர்களை மேலும் ஊமையாக்கும் முயற்சியே எனசெயித் ஜிலானி சொல்கிறார். எனக்கு இது முற்றதிகாரச்சமூகங்களில் உள்ள “சுயதணிக்கை, சுயகண்காணிப்புக் கருவி” எனவும் தோன்றுகிறது - 2020இல் அமெரிக்காவில் எடுக்கப்பட்டகருத்துக்கணிப்பில் 60%க்கு மேலான மக்கள் தனக்கு அன்றாடவாழ்வில் சொந்தக் கருத்துக்களைத் தெரிவிக்க பயமாகஉள்ளதாகத் தெரிவித்தார்கள். டைம்ஸ் இதழ் நடத்தியகருத்துக்கணிப்பில் ஆண்களைவிட பெண்களே அதிகமாக இந்தகேன்சல் கலாச்சாரத்தை அஞ்சுவதாகத் தெரிய வந்தது (சாதி, மதம், இனம், பாலினம் என எதைப் பற்றியாவது தப்பாகப்பேசிவிடுவோமோ, அதனால் வேலை போய்விடுமோ, சமூக ஒதுக்கம்நடக்குமோ எனும் அச்சம்.). டுரோல்கள் பொதுவாக ஈடுபடுவதும்கேன்சல் கலாச்சாரத்திலே - இம்மாதிரி கேன்சல் டுரோக்களால்பாதிக்கப்பட்டு ஒரு பெண் எழுத்தாளர் ஓராண்டுக்கு மேலாக எழுதமுடியாமல் போய் உளவியல் சிகிச்சை எடுக்க நேர்ந்ததாக என்னிடம்சொன்னார்.


 அதனாலே இதை வலதுசாரி கேன்சல் கலாச்சாரம் என்று இன்றுஅழைக்கிறார்கள் (conservative cancel culture). அமெரிக்காவில்ஆரம்பத்தில் இடதுசாரிகளே கேன்சல் கலாச்சாரத்தைஊக்கப்படுத்துவதாக வலதுசாரிகள் கூறி வந்தனர், ஆனால்அவர்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் தமக்கு எதிரான அரசியல்சக்திகளை ஒடுக்குவதற்கும், சிறுபான்மை இனத்தவர்களின், பாலினத்தின் உரிமையை மறுப்பதற்கு, நிதியை ரத்துசெய்வதற்குமிகப்பெரிய அளவில் வலது கேன்சல் கலாச்சாரவாதிகளை அரசுபயன்படுத்துகிறது என வில்டெல் பிலார் சொல்கிறார். இந்தியாவில்கேன்சல் கலாச்சாரத்தின் இன்னொரு முகமாக உயர்கல்விநிறுவனங்களில் நூல்களைத் தடைசெய்வது, எதிர்ப்பாளர்களைவாயை மூடவைப்பது பரவலாக நடக்கிறது. இரண்டு கேன்சல்கலாச்சாரங்கள் இருவேறு இலக்குகளைக் கொண்டிருப்பதாகத்தோன்றினாலும் ஒன்று மற்றொன்றை தன் முறைமையால்ஆதரிக்கிறது என்பதே உண்மை. டேவிட் பிரென்ச் சொல்வதைப்பாருங்கள்: There’s no question that the Left leads the way in academic cancel culture. Most attempted cancellations have come from the Left — a statistic that makes sense when one considers that the American academy is an overwhelmingly left-wing institution. But while fewer come from the Right, they are responsible for most of the cancellation attempts that included violent threats. அதாவதுமுற்போக்கு கேன்சல்வாதிகள் மூட்டும் நெருப்பை உலகம் முழுக்கப்பரப்பில் பெரும் அழிவாக மாற்றுவது வலது கேன்சல்வாதிகளே. 


முக்கியமாக இதனால் அதிகமாக பாதிக்கப்படுவோர்முற்போக்காளர்களே என்று செபாஸ்டியன் மில்பேங்க் சொல்கிறார் - ஏனென்றால் முற்போக்காளர்கள் கேன்சல் செய்ய அதிகமாகமுயல்வது ஒழுங்குக்குள் வராத தமது சகபாடிகளையே. 


கத்தி ஒன்றுதான் - ஆனால் இன்று எல்லாருமே குத்துப்படுகிறார்கள். அதனாலே பாலியல் குற்றவிசாரணைகளை இம்மாதிரி ஊடகஅம்பலப்படுத்தலாக, சமூக ஒதுக்கமாக, ரத்து செய்வதாகமுன்னெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். நியாயத்துக்காகபேசுகிறோம் என்று நினைத்துக்கொண்டு பெண்ணியவாதிகளில்சிலர் வேறுவிதங்களில் அதிகமாக குரலற்ற மக்களை அழிக்கப்பயன்படுத்தப்படுகிற ஆயுதத்துக்கு தகுதியாக்கலை (validation) அளிக்கிறார்கள். 


நாம் ஷோபா சக்திக்குத் திரும்ப வருவோம் - இந்த அறிக்கையைஎழுதியோரும் அதில் குறிப்பிட்டப்படுவோரும் ஏன் மர்மமாகஇருக்கிறார்கள் என அவர் கேட்கும் கேள்வி முக்கியமானது. அவர்களில் சிலர் ஏன் தன்னுடன் உறவு முறிந்தபின்னரும்நல்லுறவில் தொடர்ந்தார்கள் என்று கேட்கிறார். அவர்கள் தம்மைப்இருட்டில் வைத்திருக்க விரும்புவதில் நியாயமிருக்கலாம் - ஆனால்அறிக்கையின் எழுத்தாளர்கள் விசயத்தில் ஏன்வெளிப்படைத்தன்மை இல்லை? இதுவும் கேன்சல் கலாச்சாரத்தின்இயல்பே - வெளிப்படைத்தன்மையைக் கோருவதே தண்டனைதான்எனக் கூறி எல்லாரையும் அச்சுறுத்துவார்கள். வெளிப்பட்டால் அதுஒரு சிலரின் பிரச்சினை, வெளிப்படாதபோது அது எண்ணற்றபெரும் தொகையொன்றின் பிரச்சினை. அது பூதாகாரமாகிவிடும். சரி ஏன் வெளிப்பட முடியாதெனில் அவர்களுக்கு அந்தரங்கவாழ்க்கை உள்ளது, அதைக் கெடுக்க முடியாதுதானே, டுரோல்களிடம் சிக்கி அழிய முடியாதுதானே எனக் கூறலாம். சரி, அவர்களே சொல்லுவதுபடி பார்த்தால் பாலியல் வன்முறையோதாக்குதலோ நடக்கவில்லை. அப்பெண்களும் பால்புதுமையினரும்மாற்று உறவுக்குள் செல்லும்போது ஷோபா சக்தி அவர்களைவிட்டுவிட மறுத்தார் என்பதும், அவர்களுடன் இருக்கையில் அவர்வேறு நபர்களுடன் உறவில் இருந்தார் என்பதுமே மீளமீள வரும்குற்றச்சாட்டு. இது சம்மந்தப்பட்ட நபர்கள் தமக்குள் பேசி ஏற்படுத்தவேண்டிய எல்லையல்லவா? திறந்தநிலை உறவில் வேறெப்படிஇருப்பார்கள், இருக்க முடியும்? அவர்கள் விட்டுத் தொலைக்கவும்சுதந்திரமாக இருக்கவும் கட்டுப்படுத்தவும் உடைமையாகவும்தத்தளித்துக் கொண்டே இருப்பார்கள். இதைக் குற்றமாக பொதுச்சமூகத்தில் எடுத்து வரக்கூடாது. இன்னொரு குற்றச்சாட்டு ஷோபாசக்தி இப்பெண்களுக்கு துரோகம் இழைத்தார் என்பது - அதுதான்அவ்வுறவின் தாத்பரியம். ஆனால் உறவில் இருக்கும்போது ‘நீதான்என் உலகம், நீதான் எனக்கு காலமெல்லாம் உயிராக இருப்பாய்’ எனச் சொல்பவர்களும் இருப்பார்கள். 

ஷோபாவால் பாதிக்கப்பட்டவர்களாக முன்வந்துள்ளவர்களுக்குஉள்ள  மற்றொரு முக்கியமான புகார் அவர் அவர்களைஅடிப்படையான மரியாதையின்றி நடத்தி அதைக் குறித்தகுற்றவுணர்ச்சி இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதே. இதுஆணின் அடிப்படையான பலவீனம் எனப் புரிந்துகொள்ள வேண்டும்- குற்றவுணர்வில் தள்ளாடுவது, பாவ மன்னிப்பு கோரி தெருவில்நின்று அழுவது, தண்டனையைக் கேட்டுப் பெறுவது ஆணைபலவீனமாக்கும். ஆண்கள் இதை வெளிப்படையாகச் செய்யமாட்டார்கள். சுதந்திரவாதியான, அரசின்மைவாதியான ஷோபாசக்தியின் கதைகளில் மேற்சொன்ன பலவீனமான மனதுக்குள்குமுறிக்கொண்டே தம்மை அழித்துக்கொள்ள விழையும் ஆண்கள், மன்னிப்புக் கோரும் ஆண்கள் வரலாம். அது அவரது சுயமுரண். இயல்பில் ஒருவேளை அவரால் அது இயலாது போவதில்ஆச்சரியமில்லை. இயன்றால் அவர் அரசின்மைவாதியே அல்ல, அவர்ஒரு ரஸ்கோல்நிக்கோவ் மட்டுமே. ஷோபா சக்தி எதிர்காலத்தில் தன்கதைகளில் இந்த எதிர்-ரஸ்கோல்நிக்கோவ் மனநிலையைக்கொண்டு வர வேண்டும் என்பதே என் விருப்பம். 

  

இவ்விவகாரத்தில், விஸா வாங்கித் தருவதாகச் சொல்லிஏமாற்றியதாகச் சொல்லுவது மட்டுமே குற்றமாக எனக்குத்தோன்றுகிறது. அதை ஆதாரத்துடன் சுலபத்தில் முன்வைத்துவிவாதிக்க முடியும். 

சரி, ஒரு ஆண் அதிகாரத்தின் குறியீடாக இருப்பதால் அவன்ஒழுக்கவிதியை மீறும்போது ஆதிக்கத்தை பெண் மீதுசுமத்துவதில்லையா? இக்கேள்வியையே பெண்ணியவாதிகள்பொதுவாக எழுப்புகிறார்கள். பெண் துரோகம் செய்தால் அதுதுரோகம், ஆண் செய்தால் அது மேலாதிக்கம், சுரண்டல் எனவகைப்படுத்துகிறார்கள். அதிகாரம் என்பது ஒரு செயலுக்கு புதியபரிமாணத்தை அளிக்கும், அதிகாரத்தில் இருப்போர் அதிகநீதியுணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை ஏற்கிறேன். ஆனால்ஆண் எல்லா தளங்களிலும் சமயங்களிலும் அதிகாரத்துடன்இருப்பதில்லை. ஏனென்றால் ஆணாதிக்கம் (patriarchy) ஒருபண்பாட்டுக் குறியீடு (ஆணாதிக்கம் எனும் சொல்லேபாசிசத்தன்மை கொண்டதே என்பது தனிப்பிரச்சினை.). அதற்குப்பல உடல்கள். எப்போதும் ஆணுடலை அது தரிப்பதில்லை. அக்கருத்து பெண்ணியத்தின் இரண்டாம் அலையுடன்வழக்கொழிந்து விட்டது. குறிப்பாக, உறவுக்குள் சிலநேரங்களில்ஆண் கவனத்திற்காக மன்றாடும் அதிகாரமற்றவனாகவும், குரலற்றவனாகவும் மாறுகிறான். வேறு சமயங்களில் அவன் கைஓங்குகிறது. பணம், சமூக அடையாளம், ஆரோக்கியம், சாதி, மதம், அமைப்புகளின் ஆதரவு என பல விசயங்கள் ஆணாதிக்கத்தைசாத்தியமாக்குகிறது. ஆணை நிரந்தரமாக அதிகாரத்தின்முகமாகவும் பெண்ணை நிரந்தர பாதிக்கப்பட்டவராகவும் பார்ப்பதுகண்மூடித்தனமான மனநிலையே. உறவுக்குள் பல முடிவுகளும்செயல்களும் அதிகாரத்தின் சஞ்சலம் மிக்கவையாக உள்ளன, நியாய தர்மத்துக்கு வெளியே இருக்கின்றன, சுயநலத்தால்நடத்தப்படுகின்றன எனும்போது அந்த பழுப்பான பகுதிக்குள்வெளியாள் நுழைந்து மேலாதிக்கவாதி யார் எனச் சொல்ல முடியாது. மேலும், அது பெண்ணிற்கு அதிகாரம் பெறும் வாய்ப்பைமுழுமையாக ரத்து செய்யவும் செய்கிறது.     


 “குற்றப்பத்திரிகையில்” வரும் வேறு பிரச்சினைகளைப்படிக்கையில் சிமன் டி பூவரின் The Woman Destroyed நாவல்நினைவுக்கு வந்தது - அதில் பூவர் தான் ஏன் தனக்குப்போட்டியாளராக வரப்போகும் இளம்பெண்ணை உறவுக்குள் தானேகொண்டு வந்தோம் என விசாரிப்பார். திறந்தநிலை உறவுகளில்எல்லாம் அனுமதிக்கப்படும் அனுமதிக்கபடாமலும் இருக்கும், அதைக் குறித்து சம்மந்தப்பட்டவர்கள் வருந்தவும் செய்வார்கள். இந்த பழுப்பான பக்கங்களை அவர்களேதாம் கையாண்டுநியதிகளை உருவாக்க வேண்டும்.    


பின்குறிப்பு:

 1) ஷோபா சக்தி என் நண்பரல்லர். நான் அவரது வாசகன், சக-எழுத்தாளன் எனும் கணக்கில் உரையாடி இருக்கிறேன். ஆனால்இவ்விசயத்தில் தன்னைப் பற்றி எழுத அவர் கேட்கவும் இல்லை. எனக்கு அவரைக் காபபற்றும் உத்தேசமில்லை. என் நோக்கம் இந்தகத்திக்குத்து கந்தன் நடைமுறையை, அதன்முற்றதிகாரத்தன்மையை எதிர்ப்பதே. இது சக்தி ஷோபாவாகஇருந்தாலும் நான் இதையே எழுதுவேன்.  

2)இந்த கேன்சல் கலாச்சாரம் எதிர்காலத்தில் பெண்களுக்குஎதிராகத் திரும்பும் என நினைக்கிறேன் - பாலியல் ஒழிக்கம்மிகத்தீவிரமாக அவர்கள் மீது திணிக்கப்பட்டு அவர்களில் சிலர்தேர்ந்தெடுக்கப்பட்டு பூதாகாரமாகப் பெருக்கப்படுவார்கள். இதேமாதிரி ஆனால் வேறு விழுமியங்களின் அடிப்படையில்(பரத்தை, துரோகி, திருமண அமைப்பிற்கு வெளியே நிற்கும்சூழ்ச்சிக்காரி) குற்ற அறிக்கைகள் வாசிக்கப்படும். நாம் அப்படியேநூறாண்டுகள் பின்னுக்குச் செல்வோம். இன்றுள்ள அடிப்படையானசுதந்திரம் பறிபோகும். நம்பிக்கை இல்லாவிட்டால் நான் கீழேதந்துள்ள தொடுவழிகளில் உள்ள கட்டுரைகளைப் படியுங்கள்.


https://www.wbur.org/onpoint/2022/04/26/women-fascists-democracy-backslides-abortion-rights


https://philosophynow.org/issues/148/The_Origins_of_Totalitarianism_by_Hannah_Arendt


 https://www.researchgate.net/publication/372100356_Cancel_culture_towards_Russia_and_how_to_deal_with_it [accessed Apr 17 2025].


https://www.persuasion.community/p/the-powerless-are-hurt-most-by-cancel


https://sapirjournal.org/cancellation/2022/when-right-cancels-right/


https://www.usnews.com/opinion/articles/2024-07-24/even-while-railing-against-it-the-republican-party-has-become-a-champion-of-cancel-culture


https://www.city-journal.org/article/cancel-culture-conservatives-social-

https://thiruttusavi.blogspot.com/2025/04/blog-post_17.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஷோபாசக்தியின் பாலியல் வேட்டையும் பெண்கள் அமைப்பின் எதிர்ப்புக்குரல்களும் ! சில கேள்விகளும் !

சோபா சக்தியை சுற்றி ஒரு மாயை கட்டப்பட்டிருந்தது.

சோபா சக்தி திட்டமிட்டு பெண்களை காதல் வலையில் சிக்க வைக்கிறாராம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.