Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையிலும் உங்கள் சாயல் தெரிகிறது என்று சொல்லலாமா! :D 

 

 

உங்களின் கவிதைகளை நீண்ட நாட்களாக காணவில்லையே?? கவிதைக்காலம்(season) வர வேண்டுமோ?

  • Replies 338
  • Views 118.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    சே' எனது டீஷர்ட்டில் சின்னப்பயல் வாய்க்காலில் கட்டுக்கடங்காத பிணங்கள், அலையடிக்கும் அலைக்கற்றையின் எண்ண முடியாத கணக்குகள், அடுத்த வேளை எச்சில் சோற்றுக்கென அடித்

  • கரும்பு
    கரும்பு

    கடந்த ஆறு, ஏழு வருடங்களில் யாழில் இதுவரை காணாத ஆபாசமான கவிதையா/கருத்தா இது? உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள்? புங்கையூரன் இணைத்த பாடலில் உள்ளதுபோன்ற தமிழில் அல்லாமல் பேச்சுத்தமிழில் கவிதை எழுதப்பட

  • துளசி, நீங்கள் லீனா மணிமேகலை , மற்றும் சில பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை வாசிக்கவில்லைப் போலும். இதில் எது சரி எது பிழை என்பதை நாங்கள் தான் எமக்காகத் தீர்மானிக்க முடியும். நடைமுறை வாழ்வை இலக்க

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கவிதைகளை நீண்ட நாட்களாக காணவில்லையே?? கவிதைக்காலம்(season) வர வேண்டுமோ?

ம்...... எழுத வேண்டும்தான். மூட் தான் இல்லை.

ஒரு கதை எழுதியே பாதியாய் நிற்கிறது.அதை முதலி எழுதி முடித்து விட்டு பார்ப்போம். :)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலம்

எஸ்.எம்.ஏ.ராம்

 

 

பொற் காலங்களை

இழந்தாயிற்று;

இழந்தபின்னரே அவை

பொற்காலங்கள்

என்று புலனாயின.

 

புதிய பொற்காலங்களுக்காகக்

காத்திருப்பதில்

அர்த்தம் இல்லை.

 

காலம் கருணையற்றது.

பூமியின் அச்சு முறிந்து

அது நிற்கும் என்று

தோன்றவில்லை.

 

பிரபஞ்சத்தின்

பெருஞ் சுழற்சியில்

தனி மனிதனின்,

ஏன், ஒரு

சமூகத்தின்-

துக்கங்களுக்குக் கூட

மரியாதை இல்லை.

 

 

http://puthu.thinnai.com/?p=19173

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்ந்து தழை!
 

Ari%27s+Poem+112012.jpg

புள்ளல்லவே? - நீ
புழுவல்லவே? - பின்
புல்லரைக் கண்டேன் அஞ்சுகிறாய்?
கல்லல்லவே? - நீ
கசடல்லவே? - பின்
கயவரைக் கண்டேன் இஞ்சுகிறாய்?
மண்ணல்லவே? - நீ
மரமல்லவே? - பின்
மடயரை ஏன்நீ கெஞ்சுகிறாய்?
விழலல்லவே? - நீ
வெற்றல்லவே? - பின்
வீணரைக் கண்டேன் துஞ்சுகிறாய்?
 
கண்ணைத் திற! - கீழ்
விண்ணை அறி! - இரு
கைகளை ஏனினும் கட்டுகிறாய்?
கூட்டை உடை! - சங்கை
ஊதி எழு! - சேவல்
கூவிய பின்னுமேன் தூங்குகிறாய்?
அச்சம் அறு! - தலை
வணங்க மறு! - பழம்
ஆண்டையைக் கண்டேன் மருளுகிறாய்?
அழுகை விடு! - தாழ்
வகத்தை ஒழி! - விதிச்
சகதியில் ஏனினும் பிறழுகிறாய்?
 
இலக்கை அமை! - அதை
எட்ட முனை! - அதில்
இடைவரும் தடைகளைத் தாண்டவிழை!
தொடர்ந்து முயல்! - தோன்றும்
துயரம் களை! - உன்றன்
தோள்வலி நன்கு துலங்கஉழை!
விளையும் பயன்! - பகிர்வில்
வேண்டும் சமன்! - அதை
வென்றிடத் தோழமை மறுத்தல்பிழை!
ஒப்பை அழை! - மனம்
ஒன்றி உழை! - இந்த
உலகம் பொதுவென வாழ்ந்துதழை!
 
காக்கைச் சிறகினிலே - சனவரி 2013 - பக்.32-33
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்குட்டியை வசியம் செய்தல்.

சுழியன்

ஒரு நாய்க்குட்டியை

வசியப்படுத்துவதென்பது

ஒரு கலை.

முதலில் தாயோடு இருக்கும் குட்டிகளில்

செழிப்பானதொரு செவளையையோ

வெள்ளையையோ தெரியாமல்

கவர வேண்டும்.

கருப்புகள் வளர்ந்தபின்

வசீகரிப்பதில்லை,

எனவே அவை வேண்டா !

உங்கள் விட்டுக்கு வந்தபின்

கழுத்தில் சிறு மணி கோர்த்து

விலைஉயர்ந்த ஒரு

சங்கிலியில் கட்ட வேண்டும்.

பின்பு தனியாய் அது

தூங்கிக் கொண்டிருக்கும் போது

சீட்டி அடித்தோ சத்தம் செய்தோ

அதன் கவனத்தை உங்கள் பக்கம்

நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்

உங்களுக்கு பிடித்த ஒரு

செல்லப் பெயர் கொண்டு

அதைக் கொஞ்ச வேண்டும்

முதுகை தட்டிக் கொடுத்தல்,

சிற்சிறு முத்தங்கள்

சீக்கிரம் பலன் தரும்

இப்போது அது

உங்களைப் பர்த்தவுடன் வாலாட்டும்.

இந்த பருவம் மிக முக்கியம்

கொஞ்சம் சிரமம் பாராமல்

ரொட்டித் துண்டும், பாலும்

கொடுத்து பரிவுடன்

தடவிக் கொடுக்க வேண்டும்

இனி அது உங்களை

பார்த்தவுடன்

செல்ல சத்தம் எழுப்பி

காலைப் பிடித்துக் கொண்டு

விளையாட ஆரம்பிக்கும் - நீங்கள்

'ஷேக் ஹேண்ட்" கொடுக்க,

தாவி பந்தை பிடிக்க என

புதுப் புது விளையாட்டை

சொல்லிக் கொடுக்க வேண்டும்

அந்த குட்டி இனி உங்கள் வசம்

உங்கள் பார்வைக்கு, விரலசைவிற்கு

அடிமையாய் வாலாட்டி

எப்போதும் உங்களையே

சுற்றத் துவங்கி விடும்.

இப்போது,

நீங்கள் அதைக் கண்டு கொள்ளாமல்

உங்கள் வேலையை செய்ய வேண்டும்

உங்களை தொந்தரவு செய்து

எரிச்சல் படுத்துவது போல

குழையக் குழைய வலம் வரும் போது

எட்டி உதைத்து தள்ள வேண்டும்

நீங்கள் எத்தனை முறை தள்ளினாலும்

வாலாட்டிக் குழைவதை ஒரு போதும்

நிறுத்தாது அந்த அடிமை.

ஏனென்றால்,

உங்கள் வசியம் அப்படி.

இதே முறையை நீங்கள்,

பெண்களை வசியம்

செய்வதற்கும் பயன்படுத்தலாம்.

ஜாக்கிரதை !

ஒரு பூனைக் குட்டியை

வசியம் செய்ய

இந்த முறையை

பயன்படுத்தாதீர்கள்.

http://suzhiyam.blogspot.co.uk/2010/03/blog-post_22.html

  • கருத்துக்கள உறவுகள்

இதே முறையை நீங்கள்,

பெண்களை வசியம்

செய்வதற்கும் பயன்படுத்தலாம்.

ஆஹா..... அருமையான யோசனை. 

நாய்க்குட்டியும் பெண்ணும் ஒன்றாகிபோனதே!

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடலை விட்டு எப்படி வெளியேறுவது?

குட்டி ரேவதி

 

பகல் இரவு என்றில்லாது

எலும்பின் மஜ்ஜையும் நிணம் பாய்ந்த வெளிகளும் கூட

ஒவ்வொரு கணமும் சிந்தித்துக்கொண்டிருக்கின்றன

கனவுகளின் பெருவெளிகளாய் சிதறிக்கிடந்த அங்கங்களை

வாரிச்சுருட்டி அள்ளி எடுக்கவே

நூறாண்டுகள் ஆயிற்று

 

இவ்விடம் இக்கணம் என்னிடம் மிச்சமிருப்பது

இவ்வுடல் மட்டுமே நீ கூட உடனில்லை

புழுக்கள் நெளியும் சிந்தனை வெளியை விசிறி விசிறி

தின்றுக் கொழுத்தப் புழுக்களிடமிருந்து

எலும்புகளின் திட மிச்சங்களைப் பொறுக்கி எடுப்பதற்கே

வாழ்வின் வறண்ட பாலைகளையும் பாறைகளையும்

கடக்க வேண்டியிருந்தது

 

மொழியைத் துலக்கித் தான் கண்கள் என்றும்

செய்து கொள்ளமுடிந்தது

கங்குகள் விரித்த பாதைகள் எங்கும்

வரலாற்றின் பொதிகளைச் சுமந்து வந்திருக்கிறேன்

 

இன்னும் இன்றும் கூட

யாக்கை என்பது வாக்கிற்கும் உன் தீண்டலுக்கும்

வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கருவறைச் சிற்பம்

நீ உருவி எடுத்த பின்னும் உன் குறியை மறந்து

சிந்தித்துக் கொண்டிருக்கும் கலையைச்

செய்து கொண்டிருக்கும் உடல்

உன்னுடன் வெளிகளுக்கிடையே

வேகமாய்ப் பயணித்தும் கொண்டிருக்கும்

நீ நினைப்பது போல உடல் சொற்பமுமன்று

நான் நினைத்திருப்பது போல

அது அற்புதமுமன்று

அற்பங்களால் கட்டியெழுப்பப்பட்ட உடலை

இன்னது இதுவென சுட்டிக்காட்ட நான் மட்டுமே

எஞ்சியிருக்கிறேன்

 

என் காலடியில் உடலை எறிந்து விட்டு எட்டப் போ

அல்ல அதற்கு உன் யாக்கையை அறிமுகப்படுத்து

உன்னால் இப்பொழுது இயலாது என நான் அறிவேன்

இன்னும் உனக்கும் ஒரு நூறு ஆண்டுகளேனும் ஆகும்

ஆகட்டும் அதற்குள் என் உடலுக்கு

சில நூறு வானங்களையேனும் விரிக்க வேண்டும்

 

http://kuttyrevathy.blogspot.co.uk/2013/04/blog-post_22.html

 

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சள் தடவிய மரணப் பத்திரிக்கை.

கமலேஷ்

 

 
உன் மௌனம் பாய்ந்து

சிதைந்து போன

என் இதயத்தின் துணுக்குகளை

சேகரித்துக் கொண்டே கேட்கிறேன்.

அதற்க்கு முன்

உன் நாசியினில் ஓர்

கைக்குட்டையை கட்டிக் கொள்.

ஏனெனில்

உன்னால் காயம் பட்ட

என் சுவாசப் பைகளிலிருந்து

இரத்தத்தின் வாடை வீசக் கூடும்.

*

நரமாமிசம் தின்னும்

இந்த செவிட்டு உலகின் பிடியிலிருந்து

என்னை ரட்சிக்கும் பொருட்டு

நம் நிறை மாத சிசுவை

இரையிடுகிறேன் என்கிறாய்.

நீரிலிருந்து ஈரம் கழித்த பின்

பாவி ! மிச்சமென்னடி

இன்னும் மிச்சம்.

ஒற்றை சிறகை இழந்த பறவை

முறிந்த கிளையில் அமர்ந்து

உறைந்த முகாரியை

எத்தனை காலம் இசைக்குமென

எண்ணித் துணிந்தாயா இக் கர்மம்.

இதோ -

துடிக்க துடிக்க

என் காதலை புசிக்கிறது பார்

உன் பெரு மௌனம்.

*

சலனமற்று நீ நீட்டும்

இந்த உன் மண ஓலை

உறையிடப்பட்ட எனது கல்லறை

நடுங்கும் விரலோடு

மெல்ல மயானத்தின்

கதவுகள் திறக்கிறேன்.

அங்கே அச்சிடப்பட்டிருக்கிறது

என் மரணத்தின் தேதி.

*

இக் கவிதையின்

இறுதி ஊர்வலத்தில்

எதிரொலிக்கும் பறையோசையில்

உனக்காக நான் விட்டு போவது

ஒற்றை குறிப்பை மட்டும்தான் தோழி.

என் தீர்ப்பின் முற்றுப் புள்ளியில்

நீ ஒடித்த பேனா முனையென

உன் இமையிலிருந்து

ஒரு சொட்டுக் கண்ணீர்

எனக்காக முறியுமெனில்

உன்னை மன்னித்ததின் அடையாளமாய்

எரியும் என் சிதையிலிருந்து

பிறண்டு விழும் ஓர் விறகு.

 

 

http://kkamalesh.blogspot.co.uk/2010/06/blog-post_23.html

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு செடியின் கதை

அமீதாம்மாள்

பொத்திக் கிடந்த

பூவித்து

புறப்பட்டது-மண்

வழிவிட்டது

நாளும் வளர்ச்சி

நாலைந்து அங்குலம்

ஆறேழு தளிர்கள்

அன்றாடம் பிரசவம்

தேதி கிழித்தது இயற்கை

புதுச் சேதி சொன்னது செடி

முகம் கழுவியது பனித்துளி

தலை சீவியது காற்று

மொட்டுக்கள் அவிழ்ந்து

பூச்சூட்டியது

பட்டாம்பூச்சிக் கெல்லாம்

பந்தியும் வைத்தது

முதுகுத் தண்டில்

பச்சைப் பூச்சிகள்

கிச்சுச் செய்தது

தேன் சிட்டொன்று

முத்தமிட்டது

கூசுகிறதாம்

சிரித்தது செடி

உதிர்ந்தன சருகுக்

கழிவுகள்

திமிறிய அழகில்

திமிரும் வளர்ந்தது

மமதைச் செருக்கில் செடி

மண்ணிடம் சொன்னது

‘கடவுளும் காதலும்

எனக்காக

என் கழிவுகள் மட்டுமே

உனக்காக

என் கழிவைத் தின்று

கழுவிக் கொள்

உன் வயிறை’

நக்கலடித்தது செடி

தத்துப் பூச்சிகளிடம்

தட்டான்களிடம்

சொல்லிச் சொல்லிச்

சிரித்தது

அறியாமை பொறுக்கலாம்

ஆணவம் பொறுப்பதோ?

கூடவே கூடாது

வேரை விட்டு

விலகிக் கொண்டது

மண்

முதுகுத் தண்டு முறிந்து

மண்ணில் சாய்ந்தது செடி

செடியிடம் சொன்னது மண்

‘உனக்கு

உன்னையும் தெரியவில்லை

என்னையும் தெரியவில்லை

நீ வாழ்வதிலும் பொருளில்லை

செடியைச் செரித்து

மீண்டும் அசைவற்றுக்

கிடந்தது மண்

 

http://puthu.thinnai.com/?p=20574

  • கருத்துக்கள உறவுகள்

வழமையான செய்திகள்

மனித நேயம் எங்கோ

பதுங்கிக்கொண்டபோது – வெறும்

மண்டை ஓடுகளே இங்கே விதைக்கப்பட்டன

பூவும் கொடியுமாய்ப்

பூத்துப்பொலிந்த – எங்கள்

கிராமத்து மண்ணிலெல்லாம் – இன்று

எருக்கலை மட்டும் பூத்திருக்கு!

பச்சை மரங்கள்

காற்றசைவில் படபடக்ககூட

அச்சப்பட்டு வாழ்கின்றது

எங்கள் அயலட்டம்..

இருண்டுவிட்ட தெருவோரத்தில்

இரவிரவாய்த் ‘தேடுதல்’நடக்கும்

இங்கொன்று அங்கொன்றாய்

எம்மவர் காணாமல் போவர்…

தேசத்தின் பிறிதொரு மூலையில்

அடையாளம் காணப்படாதவர்களாக

புலிச் சின்னம் பொறித்து – அவர்கள்

புதைக்கப்படுவார்கள்

தேசம் ‘வழமைக்குத் திரும்பியதாக’

தெற்கில் செய்தி வரும் – ஆம்

இவைகள் தான் வடக்கிலும் கிழக்கிலும்

வழமையான செய்திகள்

தனேஸ்-

நன்றி: மாணவர் முரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னேர் வழிசெல்லும் பின்னேர்

சுழியன்

அவர்கள்

தோழிகளாக இருக்கும் போது,

எதிர்பார்ப்புகள் ஏதுமில்லா

பரிசுத்த அன்பை

பொழிபவனைப் போலவே இருந்தான்.

அவர்கள்

காதலிகளாக மாறும் போது,

அன்பின் ஆழ அகலத்தின்

பரிமாணங்களை நீக்கமற

விளக்குபவனைப் போலவே இருந்தான்.

அவர்கள்

மனைவிகளாக எதிபார்த்துக்

காத்திருக்கையில்,

புறமுதுகைக் காட்டிக் கொண்டு

பக்கத்து வீடுகளில்

பேராண்மையை நிரூபித்துக் கொண்டிருந்தான்.

இதெற்கெல்லாம் முன்னமும் முன்னொரு காலத்தில்,

அவன் தான்

தேவதைகளாக இருந்தவர்களை சிறைப்பிடித்து

தான் பாதி தின்ற கனியை தின்னக் கொடுத்து

பெண்களாக மாற்றிக் கொண்டிருந்தான்.

http://suzhiyam.blogspot.co.uk/2010/09/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்
கட்டப்பஞ்சாயத்து
 

 

unto.jpg
 
 
காலங்கள் கடந்தாலும்,
மாற்றங்கள் நிகழ்ந்தாலும்,
கிராமத்தின் பெயர்சொல்லும் இந்த,
ஆலமரத்தடி பஞ்சாயத்துக்கள் ஓய்ந்தபாடில்லை.
மரத்தைச் சுற்றி மாந்தர்களின் கூட்டம்,
‘மா’ மரத்தின் ஒருபுறத்தில் காகங்கள் கரைய,
கரை போட்ட வேட்டியுடன் நரைத்த தலைகள் அமர்ந்திருக்க,
தழும்பிய நீருடன் செம்பொன்று காத்திருக்க,
காவலனாய் நின்றிருக்கும் அந்தத் தலைவன் வந்தமற,
அமைதி நாற்காலியிட்டு அமர்ந்திருந்தது.
சாதி சண்டையிலே காலுடைந்த கருப்பசாமி கைகட்டி நின்றிருக்க,
அவன் காலுடைத்ததை பெரும் சாதனையாக எண்ணி,
இறுமாப்புடன் அந்த முனியாண்டி நின்றிருக்க,
அமைதியின் ஆணவத்தை முறியடிக்க வந்த மாவீரன் போல்,
பற்களில் பலவற்றை இழந்துவிட்ட அந்த வாலிபக் கிழவர்,
“கருப்பசாமி உன் புகாரை சொல்லு” என்று தொடங்கினார்.
“சாமி, சாதிச்சண்டையில இவன் என் காலை உடைச்சிட்டாங்க”
தீராத மௌனவிரதத்தை திடுக்கென உடைத்துக்கொண்ட தலைவன்,
அவன் புகாருக்கு உன் பதில் என்ன?”
தலையில் முண்டாசு கட்டியிருந்த முனியாண்டி,
முழிகளை ஆட்டியவாறே தலைவனிடம்,
“சாமி, இவன் என் சாதியப் பத்திக் கேவலமாப் பேசிட்டான்”
“அதான் சாமி ஒரு கால  வாங்கிப்புட்டேன்.”
தலைவர் தீர்ப்பை சொல்ல தயாரானார்,
“எலே சாதி என்னலே சாதி,
பூமில ரெண்டே சாதிதான் ஒண்ணு ஆண்சாதி,
இன்னொன்னு பெண்சாதி,
இன்னும் எத்தன காலத்துக்கு
இந்த சாதி பேரச் சொல்லி அடிச்சுக்குவீங்க?
போங்கடா போங்க போயி,
வேலையப்பாருங்க” என்று கூறி துண்டை உதறி
தோளில் போட்டு வீடு நோக்கி நடந்தார்.
அரண்மனை போன்ற அந்த அழகான வீட்டின்முன்,
வாயிலில் ஓர் தோட்டத்துப் பணியாள்,
பசியாற கிண்ணத்திலிருந்த பாயசத்தை குடித்துக் கொண்டிருக்க,
கண்கள் சிவக்க அந்த தங்கத்தலைவன்,
தன் மனையாளைப் பார்த்து,
“ஏண்டி உனக்கு எத்தன முறை சொல்றது
கீழ்சாதிக்காரப் பயலுக்கு அலுமினியத்தட்டுல
திங்கக் குடுக்காதேன்னு!”  
 

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதனும் பறவையும்

ராஜமார்த்தாண்டன்

சாலையோரம் கிடக்கிறது

அந்தக் காக்கை

அனாதைப் பிணமாக.

சற்று முன்தான்

நிகழ்ந்திருக்க வேண்டும்

அதன் மரணம்.

விபத்தா?

எதிரிகளின் தாக்குதலா?

இயற்கை மரணமா?

எதுவென்று தெரியவில்லை.

மரக்கிளைகளில் மதில்சுவர்களில்

கரைந்திரங்கல் தெரிவித்து

கலைந்து போயிற்று

உறவுக்கூட்டம்

அனாதையாகக் கிடக்கிறது அது.

சற்று முன்னதாக

ஏதேனும் வீட்டு வாசலில்

அல்லது கொல்லை மரக்கிளையில்

உறவின் வருகையறிவித்து

அதற்கான உணவை

யாசித்திருக்கலாம்.

செத்துக்கிடந்த எலியை

இனத்துடன் சேர்ந்து

கொத்திக் குதறியிருக்கலாம்.

மைனாக் குருவியை

விரட்டிச் சென்றிருக்கலாம்.

கருங்குருவியால் துரத்தப்பட்டிருக்கலாம்.

தன் ஜோடியுடன்

முத்தமிட்டுக் கொஞ்சியிருக்கலாம்.

கூடுகட்ட நினைத்திருக்கலாம்.

இப்போது அனாதையாய்

இந்தச் சாலையோரம்.

மனிதன் இறந்துகிடந்தால்

காவலர் தூக்கிச்செல்வர்.

அற்பப் பறவையிது.

கவனிப்பாரில்லை.

சற்று நேரத்தில்

நாயோ பூனையோ

கவ்விச் செல்லலாம்.

குப்பையோடு குப்பையாய்

மாநகராட்சி வாகனத்தில்

இறுதிப்பயணம் செய்யலாம்.

அற்பப் பறவையன்றோ அது

http://azhiyasudargal.blogspot.co.uk/2013/06/blog-post_23.html
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மாக்கள் இறவாத வானமெங்கே..

வித்யாசாகர்

வயதாக வயதாக

வருகிறதந்த பயம்

என்னம்மா பற்றியந்த பயம்;

மரணத்தைக் கண்டு

முதலில் அஞ்சவைப்பவள்

அவள் தான் என் அம்மா மட்டும் தான்;

அம்மாக்கள் இறக்கையில்

நண்பர்கள் அழுகையில்

அம்மாவைதான் முதலில் நினைத்தழுகிறேன் நான்;

இரவில் நனைந்த என் தலையணை

எனதம்மாவின் நினைவைத் தான்

நிறையச் சுமந்திருக்கிறது;

நிலாச்சோறு நாட்களின்

இனிமையைப் போலவே

அம்மா இல்லாத நொடிகளும் கொடுமையானது;

வெறும் அழைக்கவும்

அழைக்கையில் இருக்கேன்பா என்று

சொல்லவும் மட்டுமேனும் அம்மா வேண்டும்;

அம்மாவை அழைத்த நாளும்

அவள் என்னோடு பேசியிருக்கும் பொழுதுமே

என் உயிருள்ள பொழுதாகும்..

அவளில்லாத பொழுதை எண்ணும்

நொடியில் மட்டுமே

எனக்கு வாழ்க்கை அப்படி வலிக்கிறது;

அம்மா இல்லாத பிள்ளைகள்

பாவம்

முள்ளில் நடப்பவர்கள் அவர்கள்;

மறுசட்டை எடுக்கவும்

ஒருவேளைப் பட்டினிக்கு வருந்தவும்

அம்மாப் போல் உலகில் யார் வருவா ?

முகத்தில் சிரிப்புடுத்தி

மஞ்சளாய் சிரிக்கும் நிலவு

வராதஇருளில் வரும் பகல் வெண்மையற்றது;

அம்மாவிற்காக நான்

தினம் தினம் நிறைய அழுகிறேன்

நிறைய சேமிக்கிறேன் நாட்களை; ஆனாலும்

சுகர் என்றும் பிரசர் என்றும் சொல்லிக்கேட்கையில்

அம்மாயென்றும் ஒரு மனசு பதறுவதை

கடவுள் புரிவாரா தெரியாது;

புரிவாரெனில் மட்டும் விடியட்டும்

எனக்கான காலை..

 

 

http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=6216

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறிமுகம்

கு. அழகர்சாமி

 

பிரயாணத்தில்

பக்கத்தில் அமர்ந்திருக்கும் அவளோடு

நான்

பேசாமலேயே போய் விடக் கூடுமோ?

ஒரு இனம் புரியாத்

தயக்கத்தின் தீவிரம்

இரத்தத்தில்

தீப்பற்றியிருக்கும்.

மரக்கிளைகளில் பறவைகள்

மாறி மாறி அமர்வது போல

மனத்தில் சொற்கள்

மாறி மாறி வந்தும்

என்ன பேச அவளோடு என்று தோன்றும்?

அவள் பேசினாலென்ன?

தர்க்கிக்கும் மனம்.

அறிமுகத்துக்கான

தருணம்

தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும்.

தலையணையும்

தலையணைப் பக்கம்

கரடி பொம்மையுமாய்

கறுப்பினப் பெண் இப்போது

கண்மூடிக் கொண்டிருப்பாள்.

இனிப் பேச அவசியமில்லை

என்பது

எனக்கு நான் நெருக்கமாய்

இருக்கச் செய்யும்.

சொற்கள் வீசாமல்

மனக்கேணி

கண்ணாடியாய்த் தெளியும்.

பக்கம் திரும்பிப் பார்க்க

இருக்கை

காலியாயிருக்கும்.

ஒரு பேருந்து நிறுத்தத்தில்

இறங்கிச் செல்லும்

அவளை நோக்கி

இயல்பாய்க் கையசைப்பேன்..

அவளும் கையசைப்பாள்.

கரடி பொம்மையும் கையசைக்கும்.

http://solvanam.com/?p=27699

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
நிரம்பும் பாத்திரம்
 
 
இறுக மூடிய பின்னும்
சொட்டும் துளிகள்
நிரம்பி வழிகிறது
 
ஒன்றை மறந்து
பிறிதொன்றை கேட்டபடி இருக்கும்
மகனின் ஆசைகளும்
 
நாளை பார்க்கலாம்
அடுத்த வாரம்
கட்டாயம் வரும் மாதமென
பாத்திரங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறேன்...
 

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செய்தவனே சீமான்

-சோலைக்கிளி-

 

solaikili.jpg

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சுவர்

பண்டங்கள் பலவற்றை நமக்குள்ளே வைத்து

சுற்றி எழுப்பப்பட்ட தோல் வேலி

இந்த வேலிக்குத்தான் நீ ஆடைகள் அணிவதும்

ஆபரணங்கள் அது இது என்று

சூடுவதும்

காலையில் இருந்தே பொங்கித் திரிகின்றாய்

பால் பானைபோல

எங்கு போக

எங்கு போனாலும் இந்த உருண்டைக்குள்தானே

கிலுங்கப்போகிறாய்

அறுத்துச் சமைத்து

சட்டிக்குள் கிடக்கின்ற

மிளகாயில் ஊறிய மீன் துண்டின் தரத்தில்

காலுக்கு

செருப்பையும் மாட்டு

கட்டிய வேலியின் அடியில்

பச்சைக்கு

சிறு கொட்டை தூவியதாய்

முளைத்து

கண்ணுக்குத் தெரியும்

அவை அழகு செய்யும்

விழிகளுக்கு இமைகள்

கை கால் விரல்களுக்கு நகங்களென

நுட்பத்தின்மேல் நுட்பம்

வேலி கட்டியவன் வீரன்தான்

மூக்கின் துவாரத்தினுள்ளும் உரோமங்கள்

தூசு தடுப்பானாய்

செய்தவனே சீமான்

சதைவைத்து

எலும்புவைத்து

நாம் இயங்க

நூறு கருவிகளைப் பூட்டி

நமக்கு மேலாலே தோல் தகரம் அடித்திருக்கும்

தோட்டக்காரனின் இந்த வேலியிலே

நீ செய்திருக்கும் சோடனைகள்

நம் வாசல் மதிலில்

கொடி படர்ந்து பூத்திருக்கும்

எண்ணத்தைத் தருவதனால் எனக்கு

என் தென்னம் வண்டே

நீ அறுத்த குருத்தைப்போல்

சாய்ந்து கிடக்கின்றேன்

ஓரிரண்டு

குரும்பட்டி கொட்டி

அழியப்போகின்ற வேலி

உயிரோடு

ஒரு முள்ளு ஏறிவிட்டால் வீங்கும்

சீழ் வடியும்

நாறும்

பூசி மினுக்கி இதற்கு வெள்ளைவைக்கத் தொடங்கினால்தான்

ஊத்தையாவோம்

http://malaigal.com/?p=2638

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
எதிர்பார்த்த 
போது 
கிடைக்காத 
எதுவும்
 
அதன் பிறகு 
எத்தனை முறை 
கிடைத்தாலும் 
சந்தோசம் 
கொடுப்பதில்லை...
 
அன்பும் 
அப்படித்தான்.
 
(யாரோ)

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

 

எதிர்பார்த்த 
போது 
கிடைக்காத 
எதுவும்
 
அதன் பிறகு 
எத்தனை முறை 
கிடைத்தாலும் 
சந்தோசம் 
கொடுப்பதில்லை...
 
அன்பும் 
அப்படித்தான்.
 
(யாரோ)

 

 

உண்மை தான்...யார் அந்த கவிதை எழுதிய 'யாரோ'வோ தெரியாது ஆனால் அனுபவப்பட்டு எழுதியிருக்கார்
  • கருத்துக்கள உறவுகள்

 

எதிர்பார்த்த 
போது 
கிடைக்காத 
எதுவும்
 
அதன் பிறகு 
எத்தனை முறை 
கிடைத்தாலும் 
சந்தோசம் 
கொடுப்பதில்லை...
 
அன்பும் 
அப்படித்தான்.
 
(யாரோ)

 

 

 

மற்றவர்களின் உணர்வுகளை மதிக்க தெரியாதவர்களால்,புரிந்து கொள்ள முடியாதவர்களால் எதையும் கண்டு கொள்ள முடியாது.யாராக இருந்தாலும் இது உண்மை.

 

 

 

 

 

 

KIRUBAN AND VALVAI SAHARA,

 

NEENGAL IRUVARUM NANRAGAVEY KAVIDHAI EZHUDHUGIREERGAL, AANAL ADHU KONJAM KONJAMAGA PSCHO THANAMAGA POVADHU POL ENAKU THONDRUGIRATHU. KONJAM NIJA ULAGUKU VAARUNGAL, MATRABADI UNGAL KAVIDHAIGAL ARUMAI.

  • கருத்துக்கள உறவுகள்

வருகை

 
13955208-the-mask-of-the-wizard-of-reinc

திரும்பத் திரும்ப 

நான் 

இந்தப் பூமிக்கு வந்திருக்கிறேன் 

வானத்தில் இருந்தாலும் 

எரிநட்சத்திரமாய் வீழ்ந்தாவது 

இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன் 

மனிதனாய் 

விலங்காய் 

பறவையாய் 

கொடியாய்

பூண்டாய் 

கிருமியாய் 

ஆணாய்

பெண்ணாய் 

அற்றவனாய் 

தமிழ் தேசத்தனாய் 

மகா வம்சத்தனாய் 

வடுகனாய் 

சீனனாய் 

திரும்பத் திரும்ப வந்திருக்கிறேன் 

பாலை நிலங்களில் அலையும் 

மூர் தேசத்தனாய் 

சிலுவைப் போர்களில் மரித்தவனாய் 

பிரமிடுகளில் பிணங்களைத் தொழுதவனாய் 

ரோமர்களின் நிலத்தில் 

சிங்கங்ககளோடு பொருதியவனாய் 

கிரேக்க உடற் பயிற்சிக் கூடங்களில் 

சிறுவர்களைப் புனர்ந்தவனாய் 

வர்ஜீனிய செம்மண நிலங்களில் 

அடிமையாய் 

சிறு முலை கனத்து 

எஜமானர்களின் குழவிக்கு பால் ஊட்டியவளாய் 

நீண்ட தோல் கால் உறைகளோடு 

கண் சாய்ந்த செங்கிகிஸ்கானின் பின்னால் 

புழுதிப் புயலாய் வந்தவனாய் 

பெரிய கோயிலில் உளிதட்டியவனாய் 

கூரை விதானங்களில் 

கழுத்து வலிக்க 

கடைசி விருந்து வரைந்தவனாய் 

ராஜேந்திரனின் அணுக்கியரில் ஒருவனாய் 

பழையனூர் நீலியை 

வஞ்சித்த வேதியனாய்

கை உயர்த்தி 

வாழ்க ஹிட்லர சொல்லியவனாய் 

ஹிரோஷிமாவில் 

கதிர் தாக்கித் துடித்தவனாய் 

காசியில் நிணம் 

சாப்பிடும் அகோரியாய் 

மயிற்பீலி சமணனாய் 

முண்டன பௌத்தனாய் 

முதிர்தாடி முல்லாவாய்

ஒரே இரவில் 

வேறு தேதசத்தவர் ஆகிவிட்ட 

காபிர்களைத் தேடித் தேடிக் கொன்றவனாய்

குஜராத்தில் 

தூக்கிய வாளுடனும் 

குறியுடனும் 

பழி வாங்க அலைந்தவனாய்..

பிறையர்கள் துரத்த 

தீ புகுந்து 

கற்பு காத்த ரஜபுத்ரியாய் 

சோனா கஞ்சில் 

முதிரா யோனிகளின் 

இதழ்களைப் பிரிப்பவனாய் 

திரும்பத் திரும்ப 

நான் 

இங்கு வந்திருக்கிறேன் 

என்னைத் தெரியவில்லையா?

 

http://ezhuththuppizhai.blogspot.ca/

 

  • கருத்துக்கள உறவுகள்
images.jpg?w=1000
 
 
 
 
காதல் பேருந்து   
 
 
 
 
இருபதாவது நாளாய்
 
அவளிடமிருந்து
 
அழைப்பு எதுவும் இல்லை
 
என்னிடமிருந்து
 
எந்த அழைப்பையும்
 
ஏற்கவும் இல்லை
 
பேருந்து நிறுத்தத்திலும் 
 
அவள் இல்லை
 
அலுவலகத்திலும்
 
விடுமுறை என்பதைத்
 
தவிர வேறு தகவல் இல்லை
 
வீடும் மூடிக் கிடந்தது
 
அவளது அடுக்குமாடிக்
 
குடியிருப்பில்
 
அடுத்திருக்கும் சேட்டுக்கு
 
என் பதட்டத்தில் ஆர்வமில்லை.
 
கடைசியாக கடற்கரையில்
 
பிணக்குடன் பிரிந்தோம்
 
என் கோபத்தால்
 
நான் தொலைத்த
 
மற்றுமொரு வேலை
 
பற்றியதாய் அது இருந்தது
 
வழக்கமான ஒன்றுதான்
 
அது
 
வழக்கம்போல்
 
அவளிடம் அடுத்தநாளே
 
மன்னிப்பு கேட்க தயார் ஆகவே இருந்தேன்.
 
ஆனால் அவள் வரவே இல்லை…
 
அடுத்த நாளும்
 
அடுத்த நாளும்
 
அடுத்த நாளும்..
 
சண்டை போட்ட இடத்திலேயே
 
மன்னிப்பு கேட்டு
 
மீண்டும் பணியில் சேர்ந்தேன்
 
அவளுக்காகதான் அதை செய்கிறேன்
 
என்பதை
 
ஒரு கடிதமாக எழுதி வைத்தேன்.
 
விடுமுறை முடிந்து
 
திரும்புகையில் தருவதற்காக.
 
நடைப் பாதைக் கடைகளில்
 
அவளுக்கென
 
ஏதேதோ வாங்கிச்  சேர்த்தேன்.
 
சில கவிதைகளும் செய்தேன்.
 
அவள்
 
அலுவலகம்
 
திரும்பவேண்டிய நாளில்
 
சரியாக சவரம் செய்து
 
படிய வாரி
 
அவளுக்கு பிடித்த நிறத்தில்
 
உடை அணிந்து
 
பேருந்து நிறுத்தம் போனேன்.
 
நான் போகும் முன்பே
 
அவள் வந்திருந்தாள்.
 
ஆர்வத்துடன் விரைந்து ஓடினேன்.
 
அருகில் போன
 
பின்பே கவனித்தேன்
 
அவள்
 
வேறுமாதிரி உடை அணிந்திருந்தாள்.
 
அருகில் வேறு யாரோ நின்றிருந்தான்.
 
நிறைய நகை போட்டிருந்தாள்
 
அதன் நடுவில்
 
புதுக் கருக்குடன்
 
மஞ்சள் கயிறு
 
ஒன்று இருந்தது.
 
என்னை ஏறிட்டு பார்க்கவே இல்லை.
 
”உங்கள் பேருந்து
 
போய்விட்டது”
 
என்றார் பழக்கமானவர்.
 
”ஆம்”என்றேன் அயர்வாய்…
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.