Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முரளீதரன், சங்ககாராவுடன் நீங்களும் சேர்ந்து கொண்டு அரசியல்தான் பேசுகிறீர்கள்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முரளீதரன், சங்ககாராவுடன் நீங்களும் சேர்ந்து கொண்டு அரசியல்தான் பேசுகிறீர்கள்..

17 ஜூலை 2011 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்

எனது பல நண்பர்களைப் போலவே கிரிக்கெட்டில் என்றும் எனக்கு ஈடுபாடு இருந்ததில்லை. இந்தியாவிலும் தமிழகத்திலும் அது மேட்டுக்குடியினரதும் மேல்சாதியினரதும், இன்றைய நிலையில் அது கார்ப்பரேட்டுகளால் முழுமையாக இலாபத்தை முன்வைத்து மட்டுமே நடத்தப்படும் ஊழல் புழுத்த ஒரு தொழில் என்பதுதான் எமது அவதானமாக இருக்கிறது. இது விளையாட்டின் பிழையா எனும் கேள்வி மிக நேர்மையான, பதில் காணவேண்டிய கேள்வி. ஆப்ரிக்க மார்க்சியரான சி.எல்.ஆர். ஜேம்ஸின் கிரிக்கெட்டின் காலனியாதிக்க வரலாறும் அழகியலும் குறித்த எழுத்துக்களை (Beyond A Boundry : C.L.R.James : 1963 - fair play is what justice done ) வாசிக்க, வரலாறு கடந்து கிரிக்கெட்டை வெறுப்பது சரிதானா என்ற கேள்வியோடு அவ்வப்போது தொலைக்காட்சி கிரிக்கெட் நிகழ்ச்சிகளில் மனம் பறிகொடுத்ததும் உண்டு.

கிரிக்கெட்டுடன் ஒப்பிடும்போது நான் தனிமையில் வாழ்ந்த நாட்களில் சக நண்பர்களோடு அமர்ந்து நீண்ட நேரங்கள் கால்பந்து விளையாட்டுக்களைப் பார்ப்பதில் கழிப்பதில் ஈடுபாடு வந்ததும் உண்டு. மரடோனா, ஜிடேன் போன்ற விளையாட்டு வீரர்களோடு ஐக்கியப்படுத்திக் கொள்வதற்கான புவியியல் சார்ந்த காரணங்கள் இருந்ததும் இந்த ஈடுபாட்டுக்கான ஆதாரமாக அமைந்திருந்தது. கால்பந்தின் மீதான ஈடுபாட்டுக்கு பிறதொரு காரணம், இருத்தலியல் தத்துவத்தினையும் கால்பந்தனையும் ஒப்பிட்டு ஒரு துறவியின் மனநிலையிருந்து பேசும் பிரெஞ்சுக் கால்பந்து வீரரான எரிக் காண்டனோவின் மந்திரவயமான விளையாட்டுத் தருணங்களை அனுபவிக்கவெனவே அதனை ஈடுபாட்டுடன் பார்த்ததும் உண்டு.

கிரிக்கெட்டில் அரசியல் நுண்மையாகச் செயல்படுகிறது. கால்பந்தில் மிக வெளிப்படையாகச் செயல்படுகிறது. மேற்கில் கிரிக்கெட்டும் டென்னிசும் ஒருவகையில் கனவான்களின் விளையாட்டு. கால்பந்து என்பது உடலுழைப்புத் தொழிலாளிகளதும் உதிரிப்பாட்டாளிகளினதும் விருப்பமான விளையாட்டு. இதற்குப் பெரிய ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை. டென்னிசிலும் கிரிக்கெட்டிலும் அந்த விiளாட்டுக்கள் முடிந்த பிறகு ரசிகர்களுக்கிடையில் தெருச்சமர்கள் நடப்பதில்லை. இன்னும் நிறவாதத்தினாலும், இனவெறியனாலும் பீடிக்கப்பட்டதாக கால்பந்து இருப்பனால்தான், கால்பந்து வீரர்களுக்கு இடையில் நிற மற்றும் இனவாதத்துக்கு எதிரான ஒற்றுமையும், அதனை எதிர்ப்பதற்கெனவே அமைப்பும் இருக்கிறது.

கிரிக்கெட் என்பது வரலாற்று ரீதியில், ஆரம்பம் தொட்டு, அது பிரித்தானியாவுடனும் ஆஸ்திரேலியாவுடனும் பினைக்கப்பட்டிருப்பதால் அது காலனியாதிக்கத்துடனும், குறிப்பாகத் தெற்காசிய நாடுகளில், இந்தியா-பாகிஸ்தான்-இலங்கை என தேசியப் பெருமிதத்துடனும் பிணைக்கப்பட்டிருக்கிறது. காலனியாதிக்கத்துடனும், தேசியப் பெருமிதத்திற்கு அடிப்படையான தேசிய விடுதலை உணர்வுடனும் கிரிக்கெட்டை வைத்துப் பேசும் சி.எல்.ஆர்.ஜேம்ஸ் அதனுடன் ஒரு ஓழுங்குடனும் நியதியுடனும் அதற்கென்றான அறத்துடனுமான கிரிக்கெட் விளையாட்டின் அழகியல் பற்றியும் அவர் பேசவே செய்கிறார்.

இந்த விளையாட்டின் அழகியல் என்பது அனைத்து விளையாட்டுக்களுக்கும் வேறு வேறு மட்டங்களில் பொருந்தி வருவதுதான். பிற விளையாட்டுக்களுடன் ஒப்பிடும்போது கால்பந்தின் அழகியல் என்பது அதனது எளிமையான விதிகளிலும் காட்சியனுபவத்திலும்தான் இருக்கிறது.

இந்த இடத்தில் ஒரு தகவலுக்கு என்னை அனுமதிக்கவும். நான் தமிழகம் செல்ல நேரும்போதெல்லாம் எனது நண்பர்கள் கார்ல் மார்க்ஸ்,கிராம்ஸி,தெரிதா போன்றவர்களின் டீசர்ட்டுகள் வாங்கிவரக் கேட்பதுண்டு. அதனைத் தேடிக் கொண்டு போன போது 'பிலாஸி புட்பால்(Philosophy Football)' எனும் அமைப்பைக் கண்டுபிடிக்க நேர்ந்தது. கால்பந்தின் வரலாறும் அரசியம் குறித்த மிகச் சிறந்த புத்தகங்களைப் பதிப்பித்திருக்கும் அவர்கள்தான், கால்பந்திற்கும் தத்துவாதிகளுக்கும் இடையிலான ஆய்வின் அடிப்படையில் கால்பந்து குறித்த இடதுசாரித் தத்துவாதிகளின் - மாரக்ஸ் முதல் தெரிதா வரை- மேற்கோள்களுடன் அழகான டீசரட்டுகளைத் தயாரித்து வெளியிடுவதைக் காணமுடிந்தது. அதிலிருந்து சில டீசர்ட்டுகளைத் தேர்ந்து வாங்கினேன் என்பதோடு, அவர்கள் எவ்வளவு உயர்ந்த அபிப்பிராயத்தை இந்தக் கால்பந்து விளையாட்டின் மீது வைத்திருக்கிறார்கள் என்பதனையும் அறிய முடிந்தது.

இந்த விளையாட்டு பாமரமக்களின் விளையாட்டு என்பது அல்லாது அதற்கு வேறென்ன காரணம் சொல்ல முடியும்? அதே விளையாட்டு இன்று காரப்பரேட்டுகளின் வலையில் வீழந்திருக்கிறது என்பது வரலாற்றின் சோகம்.

விளையாடடு மட்டுமல்ல கலை இலக்கியம் போன்ற அனைத்தும் அரசியலுடன் பிணைக்கப்பட்டுத்தான் இருக்கிறது. அதே வேளை அரசியலிலிருந்து திமிறிக் கொண்டு அது சுதந்திரமாக இருக்கவும் விழைகிறது. விளையாட்டும் மனிதனது பல்வேறு ஆதார வேட்கைகளை ஒரு வரைமுறைக்குள்ளும் அறத்திற்குள்ளும் கொண்டுவரும் மனிதனது கண்டுபிடிப்புக்கள்தான். ஓவ்வொரு விளையாட்டுக்கும் இருக்கிற தனித்த அறவியல் அழகியல் நடத்தைகள் போலவே, இவை மனித குலத்தினை ஆற்றுப்படுத்துவதற்கானது, ஆனந்தத்துக்கானது எனும் அளவில் இந்த விளையாட்டுக்களுக்கும் அறம் சார்ந்த கடமைகளும் பொறுப்புக்களும் இருக்கிறது.

மனித குலத்தின் இந்தக் கடப்பாட்டை மிகச் சரியாகச் செயல்படுத்திய ஒரு தருணம்தான் நிறவெறி தென்ஆப்ரிக்காவின் மீதான ஐக்கிய நாடுகள் சபை, உலக ஒலிம்பிக் கமிட்டி, உலக விளையாட்டு அமைப்புக்கள், பொதுநலவாய அமைப்புக்கள் போன்ற உலகின் அனைத்து அமைப்புக்களும் ஒருமனதாகச் செயல்படுத்திய சர்வதேசீயத் தடை. தென் ஆப்ரிக்கத் திரைப்படங்களை எவரும் பிற நாடுகளில் காண்பிக்கவோ, தென் ஆப்ரிக்காவுக்குத் திரைப்படங்களை அனுப்பவோ கூடாது என்ற தடை. தென் ஆப்ரிக்கக் கிரிக்கட் குழுவை பிறநாடுகள் அழைப்பதோ, பிற நாடுகளின் கிரிக்கெட் குழுக்கள் தென் ஆப்ரிக்கா சென்று விளையாடக் கூடாது எனும் தடை.

தெற்கு ஆசிய நாடுகளைப் பொறுத்து இந்தவிடயத்திலும் இலங்கையின் கிரிக்கெட் வீரர்களில் சிலர் பொறுக்கித்தனமாகவே நடந்து கொண்டார்கள. பொறுக்கித்தனம் எனும் வாரத்தையை இங்கு நான் தேர்ந்தெடுத்துப் பாவிக்கிறேன்.

உலக அளவில் இத்தகைய தடை இருந்தபோது தெற்காசியாவில் புகழ் வாய்ந்த கிரிக்கெட் அணிகளைக் கொண்டிருந்த இந்திய, பாகிஸ்தான் அரசும் அதனது வீரர்களும் இந்தத் தடையை ஒருமனதாகச் செயல்படுத்தினார்கள். இலங்கை அரசு வாயளவில் இந்தத் தடையை எதிர்த்தாலும் கூட இலங்கையின் கிரிக்கெட் அணி ஒன்று பந்துள வரண்பராவின் தலைமையில், வெறும் பொருளாதார நலன்களுக்காகத் தென் ஆப்ரிக்கா சென்று விளையாடியது. தமது வெள்ளைநிற விசுவாசத்திற்காக பிரித்தானிய, நியூசிலாந்து,ஆஸ்திரேலிய அணிகள் தென் ஆப்ரிக்கா சென்றன. தலைக்கு தமக்கு வழங்கப்பட்ட ஒரு லட்சம் டாலர்களுக்காக இலங்கை அணியும் தென் ஆப்ரிக்கா சென்று விளையாடியது. நிறவெறியை ஆதரித்த, டாலர்களை ஆராதித்த கிரிக்கெட் பாரம்பர்யமொன்று இவ்வகையில் இலங்கைக்கு உண்டு. நல்லவேளை அன்று தென் ஆப்ரிக்கா சென்ற நிறவாதிகளுக்கு ஆதரவான அணியில் முரளீதரன் போன்ற ஒரு தமிழர் இருக்கவில்லை.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக நாடுகளின், உலக விளையாடடு அமைப்புக்களின் செயல்பாடு என்பது ஒரு அதியற்புதமான முன்னுதாரனத்தை உலகுக்கு வழங்கியிருக்கிறது. நிறவெறிக்கு எதிரான, இனவெறிக்கு எதிரான, இனப்படுகொலைக்கு எதிரான அறச்செயல்பாடு அரசியல்வாதிகளுக்கு மட்டுமுல்ல, கலைஞர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உண்டு எனும் முன்னுதாரணத்தை அது உலகுக்கு வழங்கியது. தென் ஆப்ரிக்காவில் நிறவெறி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது, நெல்சன் மண்டேலா விடுதலையாகிய தருணத்தில், உலகின் அத்தனை இசைக் கலைஞர்களும் ஒன்றிணைந்து இலண்டனில் நடத்திய நான்கு மணிநேர இசை நிகழ்ச்சியை பிபிசி தொலைக்காட்சியில் கண்களில் நீர்மல்கப் பார்த்துக்கொண்டிருந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது.

கலைஞர்களின் இந்தத் தார்மீகம் அறம்தான் இலங்கையில் நடைபெற்ற இந்திய சர்வதேசீயத் திரைப்பட விழாவைப் பறக்கணித்த, பிக்பி அமிதாப்பச்சனிடமும், கமல்ஹாஸனிடமும், உடனடியாக விழா அழைப்பிதழைப் புறக்கணித்த ரஜினிகாந்திடமும் வெளிப்பட்டது. இவர்கள் மனசாட்சி கொண்ட மனிதர்களாகவும் வெளிப்பட்ட ஒரு அழகான, அபூர்வமான தருணம் அது. இயக்குனர் சீமான் ‘தம்பி’ சூர்யாவுக்காக ‘ரக்தசரித்திரத்தை’த் தமிழகத்தில் திரையிட அனுமதித்த போதும், இளையதளபதி விஜய் மகிந்தாவின் விருந்தாளியாகித் திரும்பிய அசினைப் பாதுகாத்து தனது ‘காவலன்’ படத்தின் கதாநாயகியாக ஆக்கிக் கொண்டபோதும், தமிழகம் நாணித் தலைகுனிய வேண்டிய நிலையை அவர்கள் உருவாக்கினார்கள் என்பது நெஞ்சில் முள்ளாய்த் தைக்கத்தான் செய்கிறது.

கலை வேறு அல்ல, அரசியல் வேறு அல்ல என்பதை மட்டுல்ல மனிதகுலத்தைப் பாதிக்கிற எதுவும் வேறு அல்ல, அரசியல் வேறு அல்ல என்பதையும் நாம் தென் ஆப்ரிக்க அனுபவத்தை வைத்து உலகில் உரத்துச் சொல்ல முடியும். இலங்கையில் இன்று நடந்திருப்பது இனக்கொலையா இல்லையா என்பதுதான் உலக அளவில் நடந்து வரும் விவாதம். இது குறித்துக் கூட முரளீதரன் பேசவேண்டிய அவசியமில்லை. இதை இவர் பேச வேண்டும் என எவரும் எதிர்பார்க்கப் போதும் இல்லை. இப்பிரச்சினையைப் பொறுத்து முரளிதரன் எனும் நபருக்கு உள்ள முக்கியத்துவம் ஒரு தூசு. இப்போது முரளீதரன் பேசியிருப்பது 'திமிர்த்தனமான' அரசியல். கிரிக்கெட் எனும் மட்டத்தில் நின்று அவர் பேசியிருப்பாரானால் இவரது பேச்சை எவரும் பொருட்படுத்த வேண்டிய அவசியமேயில்லை. நடைபெற்று வந்திருக்கிற அரசியல் உற்பவங்கள் பற்றியும் அவர் போகிற போக்கில் கருத்துச் சொல்லியிருக்கிறார்.

முரளீதரன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் குழு பற்றிப் பேசிய சந்தர்ப்பத்தில் இலங்கையின் சிங்கள கிரிக்கெட் வீரர் சங்ககாரா இங்கிலாந்து லார்ட்ஸ்ஸில் கௌட்ரி நினைவுரையை ஆற்றியிருக்கிறார். முரளீதரனின் கருத்துக்களோடு ஒப்பீடுகிறபோது, ஆத்திரமூட்டுகிற வகையில் அல்லாது ஒரு இலங்கை தேசபக்தி கொண்ட கனவானது மொழியில் சங்ககாரா அவரது வர்க்க அரசியலைப் பேசியிருக்கிறார். கடந்த முப்பதாண்டு கால ‘விடுதலைப் புலி பயங்கரவாத’ அரசியலைப் பற்றிய தமது கருத்துக்களோடு ‘ஜேவிபியினால் தலைமை தாங்கப்பட்ட கிளர்ச்சி’ பற்றியும் அவர் குறிப்பிடுகிறார். புலிகள் தற்கொலைதாரிகள் எனவும், அவர்களது பயங்கரவாதத்தினால் நாட்டின் வளர்ச்சி பின் தள்ளப்பட்டதென்றும் கூறுகிறார். ஜேவிபியினரது சர்வாதிகார நடத்தை பற்றியும் அவர்கள் பள்ளி கல்லூரி மாணவர்களை கிளர்ச்சியில் சேர வற்புறுத்தியது பற்றியும் சொல்கிறார். இவையனைத்தையம் சொல்லிவிட்டு இந்தக் காரணங்களால் வறிய நிலைமையிலுள்ள மக்கள் ஆயிரக்கணக்கிலான ஆண்களையும் பெண்களையும் இலங்கை ராணுவத்திற்குக் கொடுத்து தியாகம் செய்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம், ஜேவிபி கிளர்ச்சி அவர்களது கொலைகள், ராணுவத்தின் தியாகம் இவைதான் இலங்கையின் உள்நாட்டுப் போர் பற்றிய அவரது மதிப்பீடு (Kumar Sangakkara's 2011 MCC Spirit of Cricket Cowdrey Lecture in full : The Telegraph : 16 July 2011 : United Kingdom). இந்த உரை இலங்கையின் அழகான நிலப்பரப்பு, காலனியாதிக்கத்தை எதிர்த்த அவர்தம் கலாச்சாரம், விருந்தினரது பங்களிப்பாக தேயிலைத் தோட்டம் போடவந்த இங்கிலாந்தின் முதலாளிகளிடமிருந்து அவர்கள் பெற்ற கிரிக்கெட், இலங்கை கிரிக்கெட்டின் வரலாறு எனச் சொல்கிற, கவித்துவமான சொற்களில, ஆற்றொழுக்காக, திட்டமிட்டு எழுதப்பட்டு வாசிக்கப்பட்ட, ஒரு உரை. இந்த உரை இலங்கை அரசியல்வாதிகளுக்கும், இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அவர்களது தலையீட்டுக்கும் எதிரான அலைகளை எழுப்பியிருக்கிறது என்பதுதான் கிரிக்கெட் விமர்சகர்களது அவதானம். அதே இந்த உரை சமயத்தில் ஜேவிபி இளைஞர்களது கலகம், அது இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட விதம், விடுதலைப் புலிகள் அல்லாத தமிழ் வெகுமக்கள் கொல்லப்பட்டமை என்பது குறித்தெல்லாம் மௌனம் காக்கிறது.

இலங்கை அரசும், அதனது உறுப்பான ராணுவமும் புரிந்த அத்தனை குரூரங்களும் மௌனமாக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் தியாகம் போற்றப்படுகிறது. இது காரணம் கருதித்தான், விளையாட்டு அமைச்சகத்தை விமர்சித்திருந்தாலும், ராணுவத்தை மகிமைப்படுத்திய காரணத்திற்காகப் பாதுகாப்பு அமைச்சர் இந்த உரையைப் பாராட்டவும் செய்திருக்கிறார். சங்ககாராவின் உரையை ஒருவர, இலங்கை அரசையும் ராணுவக் கொடுங்கோன்மைகளையும் விமர்சித்துவரும் பிரசன்ன விதானகே, ஹந்தகமா போன்ற திரைப்படக் கலைஞர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். எவ்வாறாயினும், ஒரு சிங்கள தேசபக்தரின், கிரிக்கெட் வீரரின் உரை மிக நிதானமாக, அதே சமயத்தின் பற்பல அரசியல் மௌனங்களையும் கொண்டிருக்க முரளீதரனின் கருத்துக்கள் அடர்த்தியான வன்மத்துடன் வருகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் இனி இலங்கை வந்து விளையாடுவதற்கான வாயப்புக்கள் அருகி வருவதனையடுத்து முரளீதரன் நிதானமிழந்து பேசியிருக்கிறார். அவரது உரையின் இரண்டு கூறுகளில் ஒன்று தென் ஆப்ரிக்கா நிறவெறி காரணமாக உலகிலிருந்து ஒதுக்கப்பட்டதற்காக மிகவும் வருந்தும் தொனியில் துவங்குகிறது. தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, இலங்கை என இப்படியே போனால் கிரிக்கெட் அழிந்துவிடும் என்பது அவரது ஆதங்கம். நிறவெறி, ஜனநாயக மறுப்பு, வெகுமக்களின் மான அவமானம், கொலைகள் என உலகம் எக்கேடும் கெட்டுப் போகட்டும். எனக்கு விளையாட்டு வேண்டும். இதன் மூலம் வரும் வருமானத்தில் முரளீதரன் உலகுக்கே வழிகாட்டும் ஒரு நிரந்தரமான சுதந்திரத் தீவை அமைக்கப் போகிறார். நல்லது. அவர் வாழ்வாங்கு வாழட்டும்! அவரது உரையின் பிறிதொரு கூறு அப்பட்டமான அரசியல் கருத்துக்கள். விளையாட்டு வேறு அரசியல் வேறு என்று சொல்வதற்கு அமையவா இருக்கிறது இந்த விஷம் தோய்ந்த சொற்கள்?

இங்கிலாந்தைச் சேர்ந்த, ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்து வசித்து வரும் சில தமிழர்களே இந்த செயல்களுக்குப் பின்னணியில் உள்ளனர். தாயகத்திற்குத் திரும்ப முன்வராத அவர்கள் தங்களது சொந்த நாடான இலங்கைக்கு எதிராக செயல்படுகின்றனர். சுயநலத்துடன் அவர்கள் செயல்படுகின்றனர். இலங்கை அணி இங்கிலாந்தில் விளையாடியபோது மைதானத்திற்குள்ளும் புகுந்து அவர்கள் பிரச்சினை ஏற்படுத்தினார்கள். மைதானத்திற்கு வெளியேயும் போராட்டம் நடத்தினர். இவர்கள் எல்லாம் தங்களது சுயநலத்திற்காக செயல்படக் கூடியவர்கள். இவர்களால் இலங்கைக்கு எந்தவிதப் பிரச்சினையும் வராது என்றே நான் கருதுகிறேன். வேறு ஒரு நாட்டில் புகலிடம் பெற்று வாழ்ந்துவரும் இவர்கள் சொந்த நாட்டுக்கு எதிராக செயல்படுவது கண்டனத்துக்குரியது (14 July 2011 : Th Age : Australia).

நிறவெறி அவருக்குப் பிரச்சினை இல்லை. தென் ஆப்ரிக்கா கிரிக்கெட்டிலிருந்து ஒதுக்கப்பட்டதுதான் அவருக்குப் பிரச்சினை. எதிர்க்கட்சிகளை வேட்டையாடுகிற ஜிம்பாப்வே கொடுங்கோலாட்சி அவருக்குப் பிரச்சினையில்லை. ஜிம்பாப்வே கிரிக்கெட்டிலிருந்து ஒதுக்கப்பட்டதுதான் இவருக்குப் பிரச்சினை. இலங்கையில் நடந்த இனக்கொலை பிரச்சினையில்லை. 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டது பிரச்சினையில்லை. இலங்கை கிரிக்கெட்டிலிருந்து வெளியேற்றப்படுவதுதான் இவருக்குப் பிரச்சினை.

முரளீதரன் ஒரு தமிழனாக இருக்காவிட்டால் பரவாயில்லை, குறைந்தபட்சம் மனசாட்சியுள்ள ஒரு மனிதனாகக் கூடச் செயல்படவில்லை. தனது நலன் மட்டுமே சார்ந்த கிரிக்கெட்டை முன்வைத்து, நிறவெறி, கொடுங்கோலாட்சி, இனக்கொலை என அனைத்தையும் ஆதரிப்பவன் என்னவிதமான மனிதனாயிருத்தல் முடியும்? நிறவெறிக்கு எதிரான கால்பந்து வீரன் எரிக் கான்டனா, மூன்றாம் உலகின் விடுதலைக்கு ஆதரவான கால்பந்து வீரன் மரடோனா, காலனியாதிக்க எதிர்ப்பு கிரிக்கெட் விமர்சகன் சி.எல்.அர். ஜேம்ஸ் போன்ற விளையாட்டு மேதைகள் எங்கே? இந்த விடலை விளையாட்டுக்காரர் எங்கே? முரளீதரனை நினைக்க, தமிழர்கள் மட்டுமல்ல, தெற்காசிய மனிதர்கள் அனைவருமே அவமானப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

பத்துலட்சத்துக்கும் மேற்பட்ட புகலிடம் ஏகிய தமிழர்கள் சுயநலத்துக்காக வேற்று நாட்டில் புகலிடம் தேடியவர்கள் என்கிறார் முரளீதரன். தமது சொந்த நாட்டிற்கு எதிராகச் செயல்படுகிறார்கள் எனச் சீற்றம் காட்டுகிறார் முரளீதரன். முரளீதரன் தமது நலன் அல்லாது இதனைப் பேசுகிறார் என நாம் நம்ப வேண்டும். அவரது இதுவரைத்திய கிரிக்கெட் வருமானம் எல்லாம் ஒரு சமத்துவ சமூகம அமைக்கத்தான் பயன்பட்டு வருகிறது என நாம் நம்ப வேண்டும். டாலர்களுக்காக நிறவெறி தென் ஆப்ரிக்காவுக்கச் சென்ற இலங்கைக் கிரிக்கெட் மரபின் மிச்ச சொச்சமாகத்தான் இன்றைய தினம் முரளீதரன் இருக்கிறார்.

கிரிக்கெட் என்பது ஒரு முழுமையான அரசியல் என்பது இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் நாடுகளில் வாழ்பவர்களுக்கு, ஆப்ரிக்க நாடுகளில் வாழ்பவர்களுக்கு தெளிவாகத் தெரியும். அவர்களது தேசியப் பெருமிதத்தின் அங்கமாகவே இந்த நாடுகளில் இந்த கிரிக்கெட் அணிகள் கொண்டாடப்படுகிறது. இன்னும் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்திய காலனியாதிக்க எஜமானர்களுக்கு எதிரான பின்காலனிய நாடுகளின் கிரிக்கெட் வெற்றி ஒரு சுதந்திர நாட்டின் பெருமிதமாகவே கொண்டாடப்படுகிறது. அரசியல் வேறு என்பதும் விளையாட்டு வேறு என்ற சொல்வதும் வெறும் பம்மாத்து அரசியல். வேறு எந்த விளையாட்டினை விடவும் தேசிய அபிலாஷைகளை வெளிப்படையாகப் பிரதிபலிக்கும் விளையாட்டு கிரிக்கெட்.

கிரிக்கெட் காலனியாதிக்க எதிர்ப்பினதும் தேசியப் பெருமிதத்தினதும் குறியீடாகத்தான் அந்தந்த நாடுகளின் நினைவில் வாழ்கிறது என்பதற்கான ஒரு வெகுஜனக் கலாச்சாரச் சான்று அமீர்கான் தயாரித்து நடித்த ‘லகான்’ திரைப்படத்தின் மிகப்பெரும் வெற்றி. இந்தியாவிலும் சரி, உலகெங்கிலும் வாழ்கிற இந்தியர்களிடமும் இப்படம் பெற்ற மகத்தான வெற்றி சொல்லும் செய்தி இதுதான் : விளையாட்டு வேறு, அரசியல் வேறு இல்லை. முரளீதரன் தனது இலங்கை தேசபக்தியைப் பிரகடனப்படுத்திக் கொள்ள இப்போது இதற்கு மாறான கருத்துக்களை உதிர்த்திருக்கிறார். அதுவும் அதிகாரபூர்வமாகக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின் இதனைத் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் தமிழர்களிடத்தில் மட்டுமல்ல, நிறவெறிக்கும், இனக்கொலைக்கும் எதிரான பிரக்ஞை கொண்ட அனைவரிடமிருந்தும் அவர் தீராத அவமானத்தைச் சம்பாதித்துக்

கொண்டிருக்கிறார். இதன் மூலம் தன்னைத்தானே அவர் இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

இறுதியாக இதனை நாம் மறக்காமல் ஞாபகமூட்ட வேண்டியிருக்கிறது : முரளீதரன், சங்ககாராவுடன் நீங்களும் சேர்ந்து கொண்டு இருவரும் அரசியல்தான் பேசியிருக்கிறீர்கள்….

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64208/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

முரளீதரன் போன்றவர்கள் பேசும் குதர்க்கமான பேச்சு சிங்கள இனவாதத்தின் இன்னொரு முகமாகவே பிரபலித்திருக்கிறது. இதனை அடிமையின் விசுவாசமாகப் பார்ப்பதா? அல்லது அறிவீனமாகப்பார்ப்பதா புரியவில்லை. சிறிலங்கா தோற்றாலும் தமிழருக்கு மட்டையடி. வென்றாலும் மட்டையடி என்றதொரு நிலைதான் இருக்கிறது. இந்த நிலையில் இவர்போன்றவர்களுக்கும் அர்யுனா போன்றவர்களுக்குமிடையே பெரும் வேறுபாடில்லை. இவர்போன்றவர்கள் தமிழ்மொழிபேசும் சிங்கள இனவாதிகள் என்றே கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தன் வீட்டுக்கதவை தடி தட்டும்வரை

தமிழனுக்கு தமிழனைவிட அனைவரும் புத்தர்கள்தான்.

இந்த விளையாட்டு வீரர்கள் போர்குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்குவது மூலம் அந்த குற்றங்களுக்கு துணைபோகின்றனர். ஒரு அப்பட்டமான இனப்படுகொலையை நடாத்திக்கொண்டிருக்கும் மகிந்தர் கூட்டம் தாம் தப்ப இந்த விளையாட்டு கறி வேற்பிலைகளையும் பயன்படுத்தி வருகின்றது.

- சனத் ஜெயசூரியாவையும், அவர் இப்பொழுது ஒரு பாராளுமன்ற உறுப்பினர், இங்கிலாந்திற்கு விளையாட அனுப்பியது சிங்களம். காரணம் அதிலும் அரசியல்.

- சங்ககாராவின் பேச்சை கோத்தா பாராட்டினார்.

- இப்பொழுது முரளி

  • கருத்துக்கள உறவுகள்
<_< 1983 கலவரத்தில் இவனது தொழிற்சாலையும் வீடும் எரிந்து நாசமாகியபோது இவனது குடும்பத்தில் யாராவது கொல்லப்பட்டிருந்தால் இப்படிப் பேசியிருக்க மாட்டன் இந்த அடிமை. இவனது கிரிகெட்டும், பெயரும் அர்ஜூன என்கிற கீழ்த்தர சிங்கள இனவாதி போட்ட பிச்சை. ஆகவே அந்த இனவாதியின் வீட்டு நாயான இந்த அடிமை இப்படிப் பேசுவதில் எந்த ஆச்சரியமும் எனக்கில்லை.

ஒரு தமிழ்ச் சாதனையாளான் என்று முரளி மீது வைத்திருந்த அபிமானமும் தகர்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்

தூ.... இந்த விலாங்கை பற்றி பேசுவதே ஒரு பிரயோசனமும் இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.