காஸாவின் குழந்தைகள் sudumanal Thanks: Aljazeera கடந்த சில மாதங்களாக எனது கைபேசித் திரையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்தக் காட்சிகள் எனது வாழ்நாளின் எல்லைவரை என்னை துரத்தித் துரத்தி வேட்டையாடிக் கொண்டே இருக்கப் போகின்றன. காஸாவின் சிறிசுகள், பச்சைக் குழந்தைகள் திரையில் வரும் காட்சிகளைத்தான் குறிப்பிடுகிறேன். மரணித்தவர்கள், காயம்பட்டவர்கள், பசியால் உயிர்பிரிந்து கொண்டிருப்பவர்கள் என்பதான காட்சிகள் அவை. காயம்பட்ட குழந்தைகள் வலியால் கதறுகிறார்கள். தமக்கு பாதுகாப்பாயிருக்கிற தமது அப்பாக்களுக்காக அம்மாக்களுக்காக சகோதரங்களுக்காக என தமது குடும்ப உறவுகளுக்காகவும் சேர்த்து அவர்கள் அச்சப்படுகிறார்கள். குண்டு வீசும் விமானத்தின் பயங்கரம் ஒரு சிறுவனை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. வார்த்தைகளில் சொல்ல முடியாத பயங்கரத்தையும் வன்முறையையும் காவிவரும் இக் காட்சிகள் என்னை சிதைக்கின்றன. சிலவேளைகளில் காணச் சகிக்காமல் படங்களையும் காணொளிகளையும் எனது விரல்கள் கைபேசித் திரையில் வழுக்கிச் செல்ல வைக்கிறது. அடுத்த காட்சியாக எதையெதைப் பார்க்க நேரிடலாம் என்ற அச்சம் எழுகிறது. பெரும்பாலும் இவற்றை சகித்துக் கொள்ள நான் நிர்ப்பந்திக்கப் படுவதாக உணர்கிறேன். நான் தனியாக இல்லை என எனக்குத் தெரியும். வசதிவாய்ப்புகளும் பாதுகாப்பு உணர்வும் பெற்று வாழ்கிற நம்மில் பலரும் இந்தக் காஸா குழந்தைகளின் அவலத்தை சமூகவலைத் தளத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பாதுகாப்பாகவும் சிரித்து மகிழ்ந்தும் இருக்கும் மற்றக் குழந்தைகளையும், விளம்பரங்களையும், மீம்களையும் காவிவரும் திரைகளினூடு காஸா குழந்தைகளின் அவலத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அது இன்னும் கொடுமை நிறைந்த உணர்வை கிளர்த்துகிறது. அது உங்கள் குழந்தையாக இருந்திருக்கக் கூடும் அல்லது எனதாகவும் இருந்திருக்கக் கூடும் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒரு குழந்தையாகவும் இருந்திருக்கக் கூடும். அந்த கொடுமைக்குள் அகப்படாத, பிறப்பின் அதிர்ஷ்டம் கிடைத்தவர்கள் எமது குழந்தைகள் என சொல்லத் தோன்றுகிறது. இந்த காஸா குழந்தைகளுக்காகவும் அவர்தம் குடும்பங்களுக்காகவும் பல்லாயிரக் கணக்கான மக்கள் குரலெழுப்பி வருகின்றனர். அரசியல்வாதிகளுக்கு எழுதுகின்றனர். உதவிப் பணி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவு நிதி வழங்குகின்றனர். இந்த அவலத்தை வீதிக்கு கொண்டுவந்து நியாயம் கேட்கின்றனர். ஆனாலும் இப்போதும் குழந்தைகள் மீதான இந்தப் போர் தொடர்கிறது. அவர்களுக்கு உதவ முடியாத நிலையிலுள்ள, எந்த அதிகாரமும் அற்ற மக்களின் திரட்சியான உணர்வலை ஓங்கியிருக்கிறது. இந்த குழந்தைகளின் நிலை இன்னும் எவளவு மோசமாகப் போகிறது என்பதை ஊகிக்க முடியாதிருக்கிறது. ஐநா இன் செய்திப்படி, இந்த வாரம் 14000 குழந்தைகள் ஊட்டச் சத்தின்மையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என தெரியவருகிறது. பட்டினிதான் காரணம். பசி போருக்கான ஓர் ஆயுதமாகப் பாவிக்கப்படுகிறது. அழித்தொழிப்பின் ஓர் ஆயுதமாக பட்டினி ஏவப்படுகிறது என மனித உரிமை அமைப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. கற்பனை பண்ணமுடியாத பயங்கரத்தை எதிர்நோக்கும்போது, கவிழ்ந்துகொள்ளும் உணர்வானது மக்களின் கூட்டு உளவியலில் காயத்தை ஏற்படுத்துகிறது. இன்னொரு புறம் உதவிப் பணியாளர்கள் மற்றும் வைத்தியப் பணியாளர்கள் மனித பெறுமதிக்கும் உளக்கட்டமைப்புக்கும் எதிராக செயற்பட வேண்டிய கையறு நிலைக்கு தள்ளப்படும்போது, ஏன் செயற்படாமல் இருக்கும் நிலையிலும்கூட அவர்கள் உளவியல் நெருக்கடிக்கு உள்ளாக நேர்கிறது. கோவிட் தொற்று காலத்தில் வைத்தியர்கள் தாதிகள் பணியாளர்கள் பலர் இந்த நெருக்கடிக்கு உள்ளானார்கள். சிகிச்சை தேவையாயிருந்த நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க போதிய மருந்துகள், உபகரணங்கள், வளங்கள், தலைமைத்துவம் என்பன தடையாக இருந்ததே அதற்குக் காரணம். ஆனாலும் இந்தவகையான துன்பம் காஸாவைத் தவிர வேறெங்கும் இவளவு கூர்மையயாக உணரப்பட்டதாக இல்லை. வைத்தியத்துறை பணியாளர்களும் உதவிப் பணியாளர்களும் துயரத்தாலும், குற்றவுணர்வாலும், ஏமாற்றத்தாலும், ஏன் எல்லோருக்குமே உதவிசெய்ய முடியாமலிருக்கிற கையறுநிலையாலும் ஏற்படுகிற மனநெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகின்றனர். உதவுவதற்கும் உணவூட்டுவதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் என்றாகிப்போன பணியில் இருக்கும் அவர்கள் அதையெல்லாம் செய்ய முடியாமல் போய்விடுகிறபோது உளநெருக்கடிக்கு ஆளாகிறார்கள். காஸா தாய் தந்தையர் தமது குழந்தை பசியில் துடிதுடித்து அழுகிறபோது, தாம் ஒரு பிடி உணவுகூட ஊட்ட முடியவில்லையே என்ற பெருந்துயருள் முழ்கிப் போகிறார்கள். குண்டுவீச்சுக்கு நடுவிலேயும் மருத்துவ மனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் புதிதாய்ப் பிறந்த குழந்தைகளை நினைத்துப் பார்க்கிறேன். அல் ஷீபா மருத்துவமனையில் ஒரே கட்டிலில் கிடத்தப்பட்டிருக்கும் ஏழு பச்சைக் குழந்தைகளை புகைப்படத்தில் பார்க்கிறேன். உயிர் வேண்டி, சூடான கதகதப்பு வேண்டி அவர்கள் அந்த மெத்தையில் கிடத்தப்பட்டிருக்கிறார்கள். வலியைப் போக்கும் மருந்துகளோ மகப்பேற்றுச் சிகிச்சை உபகரணங்களோ வசதிகளோ இன்றி இந்தக் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களை நினைத்து ஆச்சரியப்படுகிறேன். அந்தத் தாய்மார்கள் இப்போ எங்கே? அவர்களில் எத்தனை பேர் தப்பிப் பிழைத்தார்கள்? அவர்களைக் காப்பாற்ற குறைந்த வளங்களுடன் போராடிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்த முயற்சியெல்லாம் எதைப் பரிசளித்திருக்கும்? அவர்களின் இடத்தில் என்னை பதிலியாக்கி யோசித்துப் பார்க்கிறேன். அவர்கள் அடைந்திருக்கக் கூடிய உளக்காயங்களின் தாக்கங்களை எண்ணிப் பார்க்கிறேன். அதிசயமாக இருக்கிறது. கள அனுபவங்களில் நசிபடும் அவர்களின் இடத்தில் இணையாக நின்று முழுமையாக உணர எனக்கு எந்த வழியுமேயில்லை. ஆனால் அதிகாரமற்ற நிலையினை உணர்கிறேன். இந்தக் குற்றங்களுக்கு எல்லாம் நாமும் உடந்தையாக இருக்கிறோமா என்ற எண்ணப் பாதிப்பை உணர்கிறேன். காஸாவில் என்னதான் நடக்கிறது என அறியத் துடிப்பவர்களிடம் இந்த உணர்வுகள் எதை தொற்றவைக்கும்? காட்சித் திரையினூடாகத் தன்னும் இந்த பெருந்துயரை காண்பவர்களிடம் என்ன பாதிப்பு நிகழும்? இதற்கெதிராக எதையுமே செய்ய முடியாத அல்லது இதற்குக் காரணமாக இருப்பவர்களை நிர்ப்பந்திக்க முடியாத செயலறுநிலை தருகிற உணர்வு எத்தகையது? நான் பிறந்த அந்தக் காலங்களிலே எனது அம்மா செய்திகளை பார்ப்பதை ஏன் நிறுத்திக் கொண்டாள் என்பது இப்போ எனக்குப் புரிகிறது. அவளால் இப்படியானவற்றை சகித்துக் கொள்ள முடிவதில்லை. எனக்கு மகன் பிறந்தபோது நானும்கூட இவ்வாறானவற்றை உள்நுழைந்து பார்க்க முடியாதிருந்தது. எமக்குக் கிடைத்த சலுகைகொண்ட வாழ்வின் சூடான அரவணைப்பும் பாதுகாப்பும் கொண்ட கூட்டினுள் இருக்கவே விரும்பினோம். ஆனால் எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து எமது வாழ்வை துண்டித்து முடங்கிப் போக இணையம் விடவில்லை. செய்திகள் எமது வாழ்வுடன் சமாந்தரமாகவும் தொடர்ச்சியாகவும் பயணிக்கத் தொடங்கின. அது எல்லைக் கோடுகளை இல்லாமலாக்கியது. எனது குழந்தை வயிறார உண்டு, துப்பரவானதும் மென்மையானதுமான உடைகளின் சூட்டில் உறங்குகிற பல இரவுகளில் நான் மௌனமாக அழுதேன். படுக்கைகூட இல்லாத, பசியாற்ற முடியாத மற்றக் குழந்தைகளை நினைத்து அழுகை வந்தது. பால்வேண்டி அதிகாலையில் எழும் எனது மகனுக்காக நான் செய்ய வேண்டி இருந்ததெல்லாம் குளிருட்டி சாதனத்தைத் திறந்து பாலை எடுத்துக் கொடுப்பதுதான். குண்டுச் சந்தங்கள் கேட்பதில்லை. காற்றுவெளியை நிரப்பும் பறவைகளின் கீதத்தை கேட்டபடி நாம் சேர்ந்து இருப்போம். அவனை அரவணைத்திருக்கும் பாதுகாப்பும், காஸாக் குழந்தைகளினை சீண்டும் ஆபத்தும் எவளவு முரணாக இருக்கிறது. அது என்னை உலுக்குகிறது. இது உளக் காயத்தின் ஒருவகையா தெரியவில்லை. ஒரு குழந்தையுடன் இணைந்த நாளாந்த வாழ்வானது அப்பாவித்தனம், குளப்படி, குறும்புத்தனம், இயல்பான அன்பு என நடனமாடும் பொழுதுகளாலானது. இவ்வாறான குழந்தைமை உலகின் மீதான மோசமான தாக்குதலை காஸாவில் காணும்போது வலி ஏற்படுகிறது. அதேநேரம் ஒன்றை சொல்லலாம். காஸா குழந்தைகளின் மீது கவிழ்ந்திருக்கும் குரூரத்தை உணர நீங்கள் அவர்களின் பெற்றோராக இருக்க வேண்டிய அவசியமில்லை. மனிதஜீவி என்ற வகையில் இந்தக் குழந்தைகளின் இருத்தல் மீது நாம் ஒரு கூட்டுப் பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருக்கிறோம் என நான் நம்புகிறேன் அல்லது நம்ப முயற்சிக்கிறேன். இந்தக் கூட்டு பொறுப்புணர்வு எல்லைகளைத் தாண்டி விரியக்கூடியது. இந்த மாதிரியான நீதியற்ற செயல்களின் முன் அதிகாரமற்றவர்களாக நிற்கிறோம் நாம். அது ஏற்படுத்துகிற உணர்வானது உண்மையின்மீதும் நம்பிக்கையின் மீதும் இழப்புகளை ஏற்படுத்தவல்லது. அது அரசாங்கங்கள் மற்றும் அதன் நிறுவனங்களின் மீது மட்டுமல்ல, உலகின் அறவொழுக்கத்தின் மீதும்தான். அதுமட்டுமல்ல இக் குழந்தைகளை காப்பாற்றுவதில் அவர்களது இயலாமையையையும் அது வெளிப்படுத்துகிறது. இது ஏற்படுத்தக்கூடிய தாக்கம்தான் என்ன. சில அரசியல்வாதிகள் சந்தேகமின்றி நம்புவதுபோல, எந்த தாக்கத்தையும் உண்டுபண்ணா மந்தநிலைக்கு இட்டுச் செல்லலாம். இவ்வாறான மந்தநிலையும் உளச்சிதைவு நிலையும் உருப்படியான தாக்கத்தை ஏற்படுத்த தடையாக அமைவதோடு, அதன் வீரியத்தையும் அழித்துவிடக் கூடியது. எனவே மில்லியன் கணக்கான மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும். தமது குரலை உயர்த்த வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களின் நியாயமான கோப உணர்ச்சி வெளிப்படக்கூடிய வாய்ப்பும் இருக்கத்தான் செய்யும். பெருமளவுக்கு நம்பிக்கை இழந்த நிலைமையை நான் உணர்கிறேன். இந்த யுத்தத்தில் மனிதநேயம், மனித விழுமியம் எல்லாம் பெயர்த்தெறியப்பட்டிருக்கிறது. நான் அசைக்க முடியாத கனத்த மனதுடன் உலவுகிறேன். காஸாவிலிருந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிறேன். கடந்த 18 மாத காலமும் என்னை மாற்றியிருக்கிறது. நான் கண்டுகொண்டது என்னவெனில், சில மனிதர்களிடம் குழந்தைகள் மீதான இரக்கவுணர்வு என்பது அரசியல் எல்லைக் கோடுகளால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதையே. இவ்வாறான குரூரமான அறிவு ஒருவரது மூளைக்குள் கல்போல் குந்தியிருக்கிறபோது என்ன செய்ய முடியும்? இதற்கான விடையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை! ravindran.pa 07072025 Thanks: the guardian .com Thanks for image: Aljazeera https://sudumanal.com/2025/07/07/காஸாவின்-குழந்தைகள்/#more-7286