பாகிஸ்தான் வீரரை வாங்கிய சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் ஏன் விவாதிக்கப்படுகிறார்?
பட மூலாதாரம்,John Phillips - ECB/ECB via Getty Images
படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
3 மணி நேரங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
'தி ஹண்ட்ரட்' தொடருக்கான ஏலத்தில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி வாங்கியுள்ளது, ஆனால் அதன்பிறகு சமூக வலைதளங்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து கடுமையான எதிர்வினைகள் எழுந்துள்ளன.
ரசிகர்கள் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறனை டிரோல் செய்து வருகின்றனர்.
இந்தப் போட்டி பிரிட்டனில் நடைபெறுகிறது, இதில் இந்தியர்களுக்குச் சொந்தமான நான்கு அணிகளும் அடங்கும்.
பிப்ரவரி மாதத்தில், 'தி ஹண்ட்ரட்' லீக் ஏலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை வாங்குவதை இந்தியர்களுக்குச் சொந்தமான நான்கு அணிகளும் பரிசீலிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகின. இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றம் இதற்கு காரணமாக இருந்தது.
இதையடுத்து, வீரர்களை வாங்கும் போது எந்தவிதமான பாகுபாடும் காட்ட வேண்டாம் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) எட்டு அணிகளுக்கும் கோரிக்கை விடுத்திருந்தது.
சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி அப்ரார் அகமதுவை வாங்கியதற்கு ஈசிபி-யின் இந்தக் கோரிக்கையே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
சன் குழுமம் ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வைத்துள்ளது. 'தி ஹண்ட்ரட்' லீக்கில் உள்ள சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியும் இந்த குழுமத்திற்குச் சொந்தமானது.
பட மூலாதாரம்,ADEL SENNA/AFP via Getty Images
படக்குறிப்பு,அப்ரார் அகமது சுமார் 2.3 கோடி ரூபாய்க்குச் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
அப்ரார் மார்ச் 12 அன்று நடைபெற்ற ஏலத்தில் வாங்கப்பட்டார்
வியாழக்கிழமை, மார்ச் 12 அன்று நடைபெற்ற 'தி ஹண்ட்ரட்' ஏலத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி ஆகியோர் அப்ரார் அகமதுவை ஏலத்தில் எடுத்தனர்.
சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி அப்ரார் அகமதுவை 1,90,000 பவுண்டுகளுக்கு (சுமார் 2.30 கோடி ரூபாய்) வாங்கியது.
இதற்குப் பிறகு, இந்திய சமூக வலைதளங்களில் காவ்யா மாறன் கடுமையாக டிரோல் செய்யப்பட்டு வருகிறார்.
சர்ச்சை முற்றியதை அடுத்து, சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
அப்ராரைத் தவிர, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப்பும் 'தி ஹண்ட்ரட்' ஏலத்திற்காகத் தனது பெயரைப் பதிவு செய்திருந்தார், ஆனால் அவரை எந்த அணியும் வாங்கவில்லை.
இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் காரணமாக 2009 முதல் இந்தியன் பிரீமியர் லீக்கில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடவில்லை.
பட மூலாதாரம்,ANI
படக்குறிப்பு,காவ்யா மாறனின் 'சன்ரைசர்ஸ் லீட்ஸ்' அணியின் எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் என்ன சொல்கிறார்கள்?
"தி ஸ்கின் டாக்டர்" என்ற பெயரிலான எக்ஸ் பயனர் ஒருவர், இந்தியருக்குச் சொந்தமான ஒரு நிறுவனம் அதன் வெளிநாட்டு கிரிக்கெட் லீக்கிற்காக பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமதுவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது, இது இந்தியாவை பகிரங்கமாக எள்ளி நகையாடியுள்ளது என்று எழுதியுள்ளார்.
''இந்தியாவில் அனுமதி இல்லை என்பதால் மட்டுமே அவர்கள் பாகிஸ்தானியர்களை எடுப்பதில்லை. தடை நீக்கப்பட்ட கணமே, யோசிக்காமல் அவர்களை எடுப்பார்கள்'' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அப்ரார் அகமது இந்திய ராணுவத்தை அவமதித்ததாகவும் அதையெல்லாம் மீறி காவ்யா மாறன் மற்றும் சன்ரைசர்ஸ் அணி அவரை 'தி ஹண்ட்ரட் லீக்கில்' வாங்கியுள்ளனர் எனவும் பயனர்கள் கூறி வருகின்றனர்.
ஆனந்த் கிருஷ்ணா என்ற பயனர், காவ்யா மாறன் அப்ரார் அகமதுவை வாங்கியதை விட அவமானகரமானது எதுவும் இருக்க முடியாது என்று எழுதியுள்ளார்.
சன்ரைசர்ஸ் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி சொன்னது என்ன?
பட மூலாதாரம்,John Phillips - ECB/ECB via Getty Images
படக்குறிப்பு,மார்ச் 12 அன்று லண்டனில் நடைபெற்ற 'தி ஹண்டிரட்' ஏலத்தின் போது சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி.
சன்ரைசர்ஸ் லீட்ஸ் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி பிபிசி ஸ்போர்ட்ஸிடம், "அப்ராரின் பந்துவீச்சில் நிறைய நுணுக்கங்கள் உள்ளன, மேலும் பல உள்ளூர் வீரர்கள் அவரை இதற்கு முன் பார்த்திருக்க வாய்ப்பில்லை," என தெரிவித்தார்.
பாகிஸ்தான் வீரர்கள் தொடர்பான ஊகங்கள் குறித்துத் தான் அறிந்திருப்பதாகக் கூறிய வெட்டோரி, ஆனால் ஏலத்தில் எந்த வீரரையும் கண்டு கொள்ளவேண்டாம் என தமக்கு எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்றார்.
"கிடைக்கக்கூடிய ஒவ்வொரு வீரரையும் கருத்தில் கொண்டே நாங்கள் ஏலத்திற்கு வந்தோம். சர்வதேச அணிகளிலிருந்து பல சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் வாய்ப்பில் இருந்தனர், ஆனால் அப்ரார் தான் எங்களின் முன்னுரிமையாக இருந்தார்," என அவர் தெரிவித்தார்.
சர்ச்சை எப்போது தொடங்கியது?
பிப்ரவரி 21 அன்று, இந்தியர்களுக்குச் சொந்தமான அணிகள் 'தி ஹண்ட்ரட்' லீக் ஏலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை வாங்குவதில்லை என்ற முடிவை பரிசீலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகின.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின்(ஈசிபி) தலைமை நிர்வாகி ரிச்சர்ட் கோல்ட் கடந்த ஆண்டு கூறுகையில், 'தி ஹண்ட்ரட்' போட்டியில் "அனைத்து நாடுகளிலிருந்தும் வீரர்கள்" தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், "பாகுபாடு எதிர்ப்பு கொள்கைகள்" நடைமுறையில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
ஈசிபி செய்தித் தொடர்பாளர் ஒருவர்,''தி ஹண்ட்ரட் உலகம் முழுவதிலுமிருந்து வரும் வீரர், வீராங்கனைகளை வரவேற்கிறது, மேலும் எட்டு அணிகளும் இதைக் கருத்தில் கொள்ளும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்." என்றார்.
இந்தியர்களுக்குச் சொந்தமான அணிகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் வாங்காது என்ற செய்திகளுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் எதிர்வினையாற்றியிருந்தார்.
இந்த விவகாரத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இது போன்ற ஒரு விஷயம் நடக்க அனுமதிக்கக் கூடாது என்றார்.
மைக்கேல் வாகன் தனது சமூக வலைதள தளமான எக்ஸ்-இல், "நாட்டின் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் ஒரு விளையாட்டில் இது போன்ற விஷயங்களை அனுமதிக்க முடியாது" என்று எழுதியிருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/cjen8kg9evxo
By
ஏராளன் ·