Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் போட்ட பூட்டை சம்பந்தன் உடைக்கின்றாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் போட்ட பூட்டை சம்பந்தன் உடைக்கின்றாரா?
முத்துக்குமார்


வடமாகாணசபை தேர்தல் ஆரவாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இழுபறிகள் காணப்பட்டாலும், இந்தியாவின் அழுத்தத்தினால், மாவை வாபஸ்பெற தமிழரசுக் கட்சிக்காரர்களும் புகைந்து அடங்கிவிட்டனர். விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளர் என்பது உறுதியாகி வேட்புமனுத் தாக்கல் செய்வதும் மாலை, மரியாதைகளுடன் முடிந்துவிட்டது. தனது தம்பியை மாகாண அமைச்சராக்குவது என்ற உறுதிமொழியை சம்பந்தன் வழங்கியதுடன் சுரேஷ் பிரேமச்சந்திரனும் அடங்கிவிட்டார். அவரது கட்சியைச் சேர்ந்த ஐங்கரநேசனுக்குத்தான் இலவுகாத்த கிளிபோல ஓர் ஏமாற்றம். 'புரூட்டஸ் நீயுமா' என மனதுக்குள்ளே குமுறுவதைத் தவிர அவருக்கு வேறுவழிகள் இருக்கவில்லை. தம்பியாரை அரசியலில் இறக்கியதன் மூலம், தமிழர் வரலாற்றில் அதிகம் பரீட்சயமில்லாத வாரிசு அரசியலை சுரேஷ் பிரேமச்சந்திரன் தொடக்கிவைத்திருக்கின்றார்.

வேட்பாளர்களை கூட்டமைப்பின் கட்சிகளுக்கு ஒதுக்கும் விடயத்தில்கூட சம்பந்தன் தலைமை பெருந்தன்மையோடு நடந்துகொண்டது. தமிழ்த்தேசியநீக்க அரசியலே அவரின் நிகழ்ச்சிநிரலில் முதன்மையாக இருந்தமையினால், இந்த விடயத்தை அவர் பெரிதுபடுத்தவில்லை. ஜனநாயகத் தோற்றம் வேட்பாளர் தெரிவிற்கு கொடுக்கப்பட்டது. வேட்பாளர் தெரிவுக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டு, அதன் அடிப்படையிலேயே தெரிவுகள் இடம்பெற்றன. மிகத் தாராளமான வகையில் கூட்டமைப்பின் கட்சிகளுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டது. எவரும் எதிர்பார்த்திராத வகையில் சுரேஷின் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழரசுக் கட்சிக்கு அடுத்தபடியாக பெரிய கட்சி அந்தஸ்தினை அது பெற்றிருக்கின்றது. யாழ் மாவட்டத்தில் மக்கள் வாக்குவங்கியை கவரத்தக்க நான்கு வேட்பாளர்களை சுரேஷ் பிரேமச்சந்திரன் இறக்கியிருக்கின்றார்.

தமிழரசுக் கட்சிக்காரர்களுக்குத் தங்களது முதன்மை நிலை கீழிறங்குகின்றது என்பதையிட்டு புகைச்சல்தான். ஆனாலும் ஒருவாறு அடக்கிக்கொண்டனர். "தமிழரசுக்கட்சியாக முன்னேறுவதை விடுத்து, கூட்டமைப்பாக முன்னேறு" என இந்தியா போதித்ததன் விளைவாக இம்மாற்றங்கள் இருக்கலாம். தேர்தல் முடிந்த கையோடு கூட்டமைப்பைப் பதிவுசெய்வதில் சம்பந்தன் இறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சம்பந்தன் தலைமைக்குப் பின்னால் நின்று வியூகம் வகுக்கும் அமெரிக்க - இந்திய கூட்டின் இலக்கு மிகவும் தெளிவானது. இலங்கையில் ஆட்சிமாற்றம் ஒன்றைக் கொண்டுவருவதே அதன் இலக்கு. அதற்கு வடமாகாணசபைத் தேர்தலை எவ்வளவு உச்சத்திற்கு பயன்படுத்தலாமோ அந்தளவிற்கு பயன்படுத்த முனைகின்றது.

இந்த ஆட்சிமாற்றம் நிகழவேண்டுமானால், தென்னிலங்கையில் பேரினவாத அணியிலிருந்து மகிந்தர் அரசாங்கம் தனிமைப்படுத்தப்பட வேண்டும். மகிந்தர் அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்துக்கொண்டிருக்கின்ற, மகிந்தருக்குப் பலம்சேர்க்கின்ற பேரினவாத அணி அவரிடமிருந்து விலகவேண்டும். வடமாகாணசபைத் தேர்தல் அதற்கு உதவும் என இந்திய – அமெரிக்கக் கூட்டு திடமாகவே நம்புகின்றது.

13வது திருத்தத்தையும், அதன் அடிப்படையில் அமைந்த மாகாணசபை முறையையும், பேரினவாதிகளும், அரசாங்கத்தில் இருப்பவர்களும் ஊதிப் பெருப்பித்தினால், வடமாகாணசபைத் தேர்தல் நடைபெறுவதை பேரினவாதிகள் விரும்பவில்லை. 13வது திருத்தம் பிரிவினைக்குச் சமனானது என தற்போது அவர்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். மகாநாயக்கர்களே 13வது திருத்தத்தினை நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

எனவே, மாகாணசபைகளுக்கு எந்தவித அதிகாரங்களும் இல்லாவிட்டாலும் கூட, வடமாகாணசபைத் தேர்தல் நடைபெற்று கூட்டமைப்பு நிர்வாகத்தைப் பெற்றுக்கொண்டால் பேரினவாதிகள் அதிருப்தியடைய வாய்ப்புக்கள் உண்டு. இது பண்டாரநாயக்கா கால நிலமைகளை உருவாக்கலாம். பண்டாரநாயக்காவை ஆட்சிக்குக் கொண்டுவந்த பேரினவாத சக்திகளே பின்னர் எதிராகக் கிளர்ந்தார்கள் என்பது வரலாறு. அந்த வரலாற்றினைத் திரும்பவும் கொண்டுவரலாம் என்பதே அமெரிக்க - இந்திய கூட்டின் நினைப்பாக உள்ளதுபோல் தெரிகின்றது.

தென்னிலங்கையில் இச்செயற்பாடு நடைபெற வேண்டுமானால் அதற்கு முன்னர் தமிழர்அரசியல் தமிழ்த்தேசியநீக்கம் செய்யப்படவேண்டும். ஏனெனில் தமிழ்த்தேசியவாதமும், பேரினவாதமும் ஒன்றையொன்று பலப்படுத்துபவை. புலிகளும், மகிந்தரும் பலமானது இந்தப்போக்கினால்தான். எனவே தற்போதைய நிலையில் ஆட்சிமாற்றம் ஒன்று இடம்பெற வேண்டுமானால், தென்னிலங்கையில் மகிந்தர் தனிமைப்படுத்தப்பட வேண்டும். வட - கிழக்கில் தமிழ்த்தேசியநீக்கம் இடம்பெற்று தமிழ்த் தேசியவாதிகள் சிறுகுழுவாக மாறுதல் வேண்டும்.

தென்னிலங்கையில் மகிந்தர் தனிமைப்படுத்தப்படுகின்றாரோ இல்லையோ தமிழர் அரசியலில் தமிழ்த்தேசியநீக்கம் செய்வதற்கு, போர்க்காலத்திலேயே சம்பந்தன் தலைமை உத்தரவாதம் கொடுத்துவிட்டது. போர் முடிந்த கையோடு, தமிழ்த்தேசியநீக்க வேலைத்திட்டத்தினைக் கட்டம், கட்டமாக நகர்த்தத் தொடங்கியது.

அந்த நகர்த்தல் செயற்பாட்டில் முதலாவது கட்டம்தான், கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது புலிநீக்கம் இடம்பெற்றமையாகும். முதலில் புலிநீக்கம், பின்னர் தமிழ்த்தேசியநீக்கம், தொடர்ந்து மக்களை அதற்குத் தயார்படுத்தல் என்பதே இதுவிடயத்தில் சம்பந்தன் தலைமையின் நிகழ்ச்சிநிரலாக இருந்தது. அந்தத் தேர்தலில் புலிகளுடன் நேரடியாக அடையாளம் காணப்பட்ட செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் என்போர் இந்தியாவின் ஆலோசனையின் பேரில் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்த்தேசியநீக்க அரசியலுக்கு உடன்படாததினால், கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார்.

இரண்டாவது கட்டத்தில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கொழும்பு மேட்டுக்குடியைச் சேர்ந்த சுமந்திரன் களமிறக்கப்பட்டார். தமிழ்த்தேசியநீக்க அரசியல் செயற்பாட்டை சர்வதேச மட்டத்தில் முன்னெடுப்பதற்கு சம்பந்தனுக்கு ஒரு உதவியாள் தேவைப்பட்டார். உண்மையில் சம்பந்தன் கஜேந்திரகுமாரையே இதற்குப் பயன்படுத்த விரும்பியிருந்தார். அவர் சம்மதிக்காததினாலேயே இந்தியாவின் ஆலோசனையின் பேரில் சுமந்திரன் கொண்டுவரப்பட்டார். சர்வதேசத் தொடர்புகளில் மருந்திற்குக்கூட தமிழ்த்தேசிய வாசனை இருக்கக்கூடாது என்பதே சுமந்திரன் வருகைக்குக் காரணமாக அமைந்தது. அவரும் அரசாங்கத்துடன் இணைந்து கிறிக்கட் விளையாடியும், ஒற்றையாட்சி அடிப்படையிலான ஐக்கியதேசியக் கட்சியின் அரசியல் தீர்வை வரவேற்றும், சம்பந்தனுக்கு தமது விசுவாசத்தைத் தெளிவாகவே தெரிவித்துக்கொண்டார்.

மூன்றாவது கட்டத்தில், சம்பந்தன் சிங்கக்கொடியேற்றி தமிழ்த்தேசிய அரசியல் நீக்கத்திற்குத் தயார் எனப் பகிரங்கமாக அறிவித்தார். அதுவும் ரணிலுடன் சேர்ந்து கொடியேற்றியதன் மூலம் தனது உச்ச விசுவாசத்தைக் காட்டிக்கொண்டார். சிங்கக்கொடி பேரினவாதத்தின் அடையாளக்கொடி என்பது பற்றி சம்பந்தனுக்கு எந்தவிதக் கவலையும் கிடையாது. 'நிர்ப்பந்தம் எதுவும் இல்லாமல், விருப்பத்தின் அடிப்படையிலேயே கொடியை ஏற்றினேன்' என துணிச்சலுடன் கூற அவரால் முடிந்தது. இதுவிடயத்தில் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களுடைய வெளிப்பாடு வெறும் புறுபுறுப்புக்கள் மட்டும்தான்.

நான்காவது கட்டம், கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டமையாகும். இதன் மூலம் வடக்கு - கிழக்கு பிரிப்பிற்கு அரசியல் அந்தஸ்து வழங்கப்பட்டது. வடக்கு - கிழக்கு இணைப்பு தமிழ் மக்களது கூட்டிருப்பின் அடையாளம். இது அரசியல் ரீதியாகவும், பிரிப்புக்குள்ளாகும்போது தமிழ்த்தேசிய அரசியல் தானாகவே சிதைவடையும் என்பது சம்பந்தன் தலைமைக்கு நன்றாகவே தெரியும்.

இத்தேர்தலிலும் தமிழ்த்தேசிய நீக்கத்தைக் கருத்தில்கொண்டு தமிழ்த்தேசிய சாயம் இல்லாத முன்னாள் கல்வி அதிகாரி தண்டாயுதபாணி முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருந்தார். அவரும் சம்பந்தனின் கொள்கைக்கு மிகுந்த விசுவாசம் தெரிவிக்கும் வகையில் கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றபோதும், தமிழ்த்தேசிய அரசியல் பற்றி வாயே திறப்பதில்லை. தனது சொந்த மாவட்டமான திருகோணமலையில் பேரினவாத ஆக்கிரமிப்பு பச்சையாக இடம்பெறுகின்றபோதும் சம்பந்தன் போலவே அவரும் அதுபற்றி அக்கறைப்படுவதில்லை.

"எதுவும் செய்யவேண்டாம்" என சம்பந்தன் கட்டளையிட்டிருக்கக்கூடும். ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது தமிழ்த்தேசிய அரசியலை வெளிப்படையாகக் காட்ட முற்படும் என சம்பந்தனைப் போல அவரும் கருதியிருக்கலாம். கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தினைப் பேரினவாதிகள் முழுமையாக ஆக்கிரமித்தபோதும், அங்குள்ள தமிழ் அடையாளங்களை அழிக்க முற்பட்டபோதும் அந்த விடயத்தை பெரியளவிற்கு பேசுபொருளாக்க இவர்கள் இருவரும் முன்வரவில்லை. அன்று அங்குள்ள இந்துக்கோயில் கட்டுவிக்க தடைவிதித்த பேரினவாதம், இன்று மிகப் பிரமாண்டமான பௌத்த விகாரை ஒன்றினைக் கட்டுவதற்கு முயற்சிக்கின்றது.

ஐந்தாவது கட்டம்தான் வடமாகாணசபைத் தேர்தலில் விக்னேஸ்வரனை களமிறக்கியமையாகும். இவ்வளவு காலமும் சம்பந்தன் தலைமையின் தமிழ்த்தேசியநீக்கச் செயன்முறை விக்னேஸ்வரனின் வருகையோடு முழுமை பெறுகின்றது. அதாவது பண்புமாற்றத்தினைப் பெறுகின்றது. தமிழ்த்தேசியநீக்கம் செய்யப்பட்ட அரசியலை வருங்காலத்தில் நகர்த்துவதற்கான தொடக்கப்புள்ளியாக அமைகின்றது. சம்பந்தனின் இதுவரைகால உழைப்பிற்கு தற்போது தான் வெற்றி கிடைத்திருக்கின்றது.

கூட்டமைப்பிற்குள் சம்பந்தனும், சுமந்திரனும் மட்டும் தமிழ்த்தேசிய நீக்கத்தை ஏற்றுக்கொணடவர்களல்ல. சுரேஸ் பிரேமச்சந்திரன், மாவை, செல்வம் உட்பட எல்லாத் தலைவர்களுமே தமிழ்த்தேசிய நீக்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள்தான். இவர்கள் எப்போது இந்தியாவின் எடுபிடிகளாக செயற்பட முன்வந்தார்களோ, அன்றிலிருந்தே தங்கள் அளவில் தமிழ்த்தேசிய நீக்கத்தை செய்துவிட்டனர். ஆனால் மக்களிடம் வாக்குப் பெறவேண்டும் என்பதற்காக தமது தமிழ்த்தேசிய நீக்கத்தை வெளிப்படையாகக் கூறத் தயாரில்லை. அதனால் தமிழ்த்தேசிய சாயத்தை அடிக்கடி பூசிக்கொள்கின்றனர். மாகாணசபைத் தேர்தல் போன்ற குறிப்பான விடயங்களில் மட்டும் இவர்களுடைய சாயம் வெழுத்து கறுப்பும் அல்லாத, வெள்ளையும் அல்லாத செம்மஞ்சள் நிறம் தெரியத் தொடங்குகின்றது.

மகிந்தர் ஒரு நாடகமாக 13வது திருத்தத்தினை மேலும் பலவீனமாக்க முற்பட்டபோது இவர்களும் 13வது திருத்தத்தினை பாதுகாக்கும் வீரர்களாயினர். பட்டுவேட்டி கேட்டவர்கள், மகிந்தர் கோவணத்தை உருவத்தொடங்க, கோவணத்தை பொத்திப்பிடிக்க முற்பட்டுள்ளனர். இக் கோவணத்தைப் பொத்திப்பிடிக்கும் அரசியலைத் தமிழர்கள் செய்யவேண்டும் என்பதுதான் இந்தியாவினதும், மேற்குலகத்தினதும் விருப்பம். தமிழர் அம்மணமானால் புது உடுப்புப் போடவேண்டிய தார்மீகப் பொறுப்பு அவர்களுக்கு வந்துசேரும். புது உடுப்புபோடும் செயற்பாடு என்பது பேரினவாதத்துடன் நேரடியாக மோதுகின்ற ஒன்று என்பதால் அவை அதற்கு தயாராக இல்லை.

கோவணத்தை உருவும் செயற்பாட்டினை முன்னெடுத்தபோதே மகிந்தருக்கு இந்திய - அமெரிக்கக் கூட்டு இதற்கு அனுமதிக்காது என்பது நன்றாகவே தெரியும். ஆனாலும் முயற்சித்தமைக்கு காரணம் தமிழ்அரசியலை இப் பொத்திப்பிடிக்கும் அரசியலோடு மட்டுப்படுத்தி வைத்திருக்கவேண்டும் என்பதுதான். இதுவிடயத்தில் இந்திய - அமெரிக்கக் கூட்டு, மகிந்தர் அரசாங்கம், சம்பந்தன் தலைமை எல்லாமே ஒரு கட்ட வெற்றியை அடைந்துவிட்டார்கள் என்றே கூறவேண்டும்.

இங்கு மாவையா? விக்கினேஸ்வரனா? என்பது ஒரு பிரச்சினையே அல்ல. விக்கினேஸ்வரன் எந்த அரசியலின் குறியீடாகக் கொண்டு வரப்படுகின்றார் என்பதுதான் பிரச்சினை. தமிழ்த்தேசியநீக்க அரசியலின் குறியீடாகவே அவர் கொண்டுவரப்படுகின்றார்.

கொழும்பு மேட்டுக்குடியின் அடிவருடிகள் சிலர் விக்கினேஸ்வரனுக்கு தமிழ்த்தேசிய சாயம் பூச முயற்சிக்கின்றனர். விக்கினேஸ்வரன் ஒரு லிபறல்வாதி. அவரிடம் இனப்பற்று, மொழிப்பற்று, கலாச்சாரப்பற்று இருக்கலாம். ஆனால் அவரால் ஒருபோதும் தமிழ்த் தேசியவாதியாக மாறிவிட முடியாது. தமிழ்த்தேசியம் என்பது ஒரு தேசியஇனம் அல்லது தேசம் தன்னைத் தானே ஆள்வதுடன் தொடர்புடையது. தேசத்தின் இருப்பு பாதுகாப்பதுடன் தொடர்புடையது. இது வாழ்ந்து அனுபவித்து அதனூடாக எழுச்சியடையும் ஓர் உணர்வு. விக்னேஸ்வரனுக்கு வாழ்ந்து அனுபவித்த பழக்கம் இல்லை. அவருடைய இருப்பு, அவருடைய குடும்பத்தின் இருப்பு எல்லாம் தென்னிலங்கையைச் சார்ந்தது.

விக்கினேஸ்வரன் இதுவரை தெரிவித்த கருத்துக்களில் எந்த இடத்திலும் தேசியக் கோரிக்கைகளைப் பற்றிக் கூறவில்லை. ஜனநாயகக் கோரிக்கைகளையே கூறியிருக்கின்றார். ஒற்றையாட்சியின் கீழ் அமைந்த மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படவேண்டும் எனக் கூறியிருக்கின்றார். இராணுவம் பறித்த காணிகள் திருப்பிக் கொடுக்கப்படவேண்டும் எனக் கூறியிருக்கின்றார். ஒற்றையாட்சிக்குப் பதிலாக சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த இணைப்பாட்சி உருவாக்கப்படல் வேண்டும் என்றோ, சிங்களக் குடியேற்றங்கள் அமைத்தல், விகாரைகளை அமைத்தல், மீனவர் படையெடுப்பைத் தடுத்தல் என்பவை பற்றியோ எதுவும் கூறவில்லை. பின்னையவையெல்லாம் தேசியக் கோரிக்கைகள் - அவற்றைக் கூறுவதற்கு அவர் தயாரில்லை.

தாராளவாதச் சிந்தனையின்படி எவரும் எங்கும் குடியேறலாம். எங்கும் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடலாம். பெரும்பான்மை ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளலாம். இதன்படி சிங்களக் குடியேற்றமும் தவறல்ல, மீனவர் படையெடுப்பும் தவறல்ல. விகாரைகளை அமைத்தலும் தவறல்ல. ஒற்றையாட்சியும் தவறல்ல. விக்னேஸ்வரன் இதனையே பிரதிபலிக்கின்றார். தேசியக் கோரிக்கைகளை முன்வைத்து தனது பிள்ளைகளின் இருப்பிற்கு நெருக்கடிகளைக் கொண்டுவர அவர் ஒன்றும் பிரபாகரன் அல்லவே.

முதலமைச்சராக வருவதற்கு முன்னரே டயஸ்போறாவிற்கும், தமிழ்நாட்டு தேசிய சக்திகளுக்கும் கட்டளையிடுகின்றார். கூட்டமைப்பின் தமிழ்த்தேசியநீக்க அரசியலுக்கு ஒத்துழையுங்கள் எனக் கேட்கின்றார். பாதுகாப்பான இடத்தில் நின்றுகொண்டு அரசியல் செய்யாமல் நாட்டிற்குத் திரும்புங்கள் எனக் கிண்டலடிக்கின்றார். இவையெல்லாம் அவர் என்ன அரசியலை நகர்த்தப்போகின்றார் என்பதை வெளிப்படையாகக் காட்டுகின்றன.

இன்று கூட்டமைப்பின் தமிழ்த்தேசியநீக்க அரசியலால் பலவீனப்படப்போகின்றவர்கள் புலம்பெயர் சக்திகளும், தமிழ்நாட்டுச் சக்திகளுமே. தமிழர் விவகாரத்தை சர்வதேச மயமாக்குவதிலும், இந்திய மயமாக்குவதிலும் இவர்களின் பங்கு அளப்பரியது. கூட்டமைப்பின் அரசியலினால் இந்த முயற்சிகள் எல்லாம் விழுந்து நொருங்கப் போகின்றன. தமிழ்நாட்டு இளைஞர்களின் எழுச்சியினால் இந்திய மத்திய அரசாங்கம் திணறுகின்றது. கூட்டமைப்பு அந்தத் திணறலை இல்லாமல் செய்கின்றது.

இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்று இருப்பதை தெளிவாக வெளிப்படுத்துவது தமிழ்த்தேசிய அரசியலே. அதனை நீக்கம் செய்துவிட்டால் நாட்டில் இனப்பிரச்சினை இருக்காது. அதன் பின்னர் ஜனநாயகப் பிரச்சினையே இருக்கும்.

ஜனநாயக முரண்பாடு என்பது ஆளும்கட்சி, எதிர்க்கட்சி அரசியலுக்குரியது. சம்பந்தன் தலைமை இன அரசியலை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி அரசியலாக மாற்ற முனைகின்றது. இந்த அரசியல் உருவாகிவிட்டால் சிங்களக் கட்சிகளோடு கூட்டுச் சேர்வதற்கு எந்தவிதத் தடையும் கிடையாது. அமெரிக்க - இந்தியக்கூட்டு விரும்புவது இதைத்தான். சம்பந்தன் தலைமையும் அந்த இலக்கினை நோக்கியே நகர்ந்துகொண்டிருக்கின்றது. இது தமிழர் அரசியலை 40களுக்கு இழுத்துக்கொண்டு செல்லும் முயற்சியாகும்.

ஆட்சிமாற்றம் ஒன்றிற்கு இன அரசியலைக் களத்திலிருந்து அகற்றவேண்டியது முன்நிபந்தனையாக உள்ளது. அமெரிக்க - இந்தியக்கூட்டு இந்த இலக்கினை நோக்கியே நகர்கின்றது. சம்பந்தன் தலைமை அதற்கு பாதை அமைத்துக் கொடுக்கின்றது.

புலிகள் மகிந்தரை ஆட்சிக்கு கொண்டுவந்ததன் மூலம் இந்திய - அமெரிக்கக் கூட்டின் புவிசார் அரசியலுக்கு ஒரு பூட்டுப்போட்டிருந்தனர். இப்பூட்டை உடைக்க வேண்டுமாயின் தமிழ்த்தேசிய அரசியலை ஏற்கவேண்டிய நிர்ப்பந்தம் இந்திய - அமெரிக்கக் கூட்டிற்கு இருந்தது. தமிழ்த்தேசிய அரசியல் உறுதியாக இருந்தால் அங்கீகாரம் வழங்குவதைத் தவிர அவைகளுக்கு வேறு தெரிவு இருந்திருக்காது. புலிகள் தொடர்ச்சியாக இருந்தால் அங்கீகாரத்தை கொடுக்கவேண்டி வரும் என்பதற்காகவே முதலில் புலிகளை அழித்தனர். தற்போது அங்கீகாரம் எதுவும் இல்லாமலே கூட்டமைப்பின் தலைமையைக் கொண்டு உடைக்க முயற்சிக்கின்றனர்.

பிரபாகரன் போட்ட பூட்டை சம்பந்தன் உடைக்கின்றார். இதற்கு கைமாறு வெறும் 13வது திருத்தம் மட்டுமே!


http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=7000b4ed-a1e5-47ba-babf-c15fd29bdc5a

  • கருத்துக்கள உறவுகள்

புலி பயங்கரவாதியான கதையை தெளிவாக எழுதியுள்ளார்கள்..! நன்றி இணைப்பிற்கு..!

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அறிவிலிகள்.. பிரபாகரன் படிப்பறிவில்லாதவர்.. ஆயுதத்தால் மட்டும் தான் பேசத் தெரியும்..! சம்பந்தன்.. கணவான் அரசியல் தெரிந்த படித்த சாணக்கிய மனிதர். அவர் எல்லாம் உப்படிச் செய்வாரே..????! :lol:

 

சம்பந்தன் இதனைச் செய்யப் போகிறார் என்று எப்போதோ இங்கு யாழில் எழுதி இருந்தோம்..! இல்லை அன்றைய இக்கட்டான கட்டத்தில் அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்துப் பார்க்கலாம் என்று கள உறவுகள் பலர் அன்று கருத்துச் சொல்லி இருந்தனர். இன்று அந்தச் சர்ப்பத்தை பயன்படுத்தி சம்பந்தன் தமிழ் மக்களை எங்கு நோக்கிக் கொண்டு போகிறார் என்பதை புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறோம்.

 

தமிழ் தேசிய அரசியலை அடியோடு வெறுக்கும் சங்கரி.. சித்தார்த்தனை உள்வாங்கியதில் இருந்தாவது சம்பந்தனைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஒற்றுமை என்ற பசப்பு வார்த்தையால் அதனை மூடி முழுகி விட்டனர். இன்று சங்கரி.. சித்தார்த்தன்... புலி அழிப்பை அடுத்து தமிழ் தேசிய அழிப்புக்கு தம்மை தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 

தேசிய தலைவர் போன்ற ஒரு தீர்க்கதரிசி.. தமிழர்களில் இன்றில்லை என்பதே யதார்த்த பூர்வ உண்மை..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

2010 ஜனவரியில் எழுதியது....................................

 

Friday, January 15, 2010
சம்பந்த சாணக்கியம்...?!

 

464px-Tamil_eelam_stamp.jpg

சிறீலங்காவில் 1983 இல் நிகழ்ந்த இனக்கலவரத்தின் போது தென்னிலங்கை வாழ் சிங்கள விசுவாசத் தமிழர்கள் உட்பட பலரும் ஜே ஆர், காமினி, லலித் அத்துலத்முதலி உட்பட்ட சிங்களத் தலைமைகள் ஏவிவிட்ட காடையர்களின் பிடியில் சிக்கி சித்திரவதைப்பட்டு இறந்ததும்.. துன்பப்பட்டதும் கண்டு அண்டை நாடான இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொஞ்சம் பதறித்தான் போனார்.

அவரின் பதட்டத்திற்கு காரணமாக இருந்தது தமிழர்கள் சிங்களவர்களால் துன்பப்படுத்தப்பட்டது என்பதிலும்.. அன்றைய ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனவின் அமெரிக்க - இஸ்ரேல் - பாகிஸ்தான் நெருக்கமே. அப்போது இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை என்பது பனிப்போர் காலத்திற்கான ஒன்றாக இருந்ததுடன் அமெரிக்க எதிரியான சோவியத் யூனியனை மையப்படுத்தி அமெரிக்க ஆதரவு பாகிஸ்தானையும்.. எல்லையில் எப்போதும் போல தொந்தரவாக இருந்து கொண்டிருந்த சீனாவை எதிரிகளாகவும் நோக்கும் நிலையைக் கொண்டிருந்தது.

அப்போதும் கூட ஈழத்தமிழர்களின் "படித்த மேதாவி சாணக்கிய சட்டாம்பி அரசியல்வாதிகளான" அமிர்தலிங்கம் போன்றோர் இந்தியாவை மையப்படுத்தி ஏன் இந்தியாவின் தத்துப்பிள்ளைகளாகி இந்திய நலனைக் கொண்டு ஈழத்தில் தமிழ் மக்களின் அரசியலை இருப்பை பாதுகாக்க முடியும் என்று நம்பித்தான் செயற்பட்டனர். அவர்களைப் பொறுத்தவரை இந்தியா தான் எல்லாம்.அதன்சொற்படியே செயற்பட்டும் கொண்டனர்.

அவர்கள் இந்தியாவைத் தாண்டி வேறு எவரையும் அன்று தமிழர்களின் துன்பியல் தொடர்பில் ஆறுதல் ஆதரவு வேண்டி நாடிச் செல்ல முயலவும் இல்லை. தமிழர்களுக்கு சிங்களவர்களால் நேர்ந்த கதியை இந்தியாவைத் தவிர பிற உலகிற்கு தெளிவாகச் சொல்லக் கூட இவர்கள் முனையவில்லை. இந்திரா காந்தியின் முந்தாணைக்குள் தான் தமிழர்களின் நலன் அடங்கிக் கிடப்பதாக தவம் இருந்தனர். இந்திரா காந்தியும் அதையே பெரிதும் விரும்பினார். அன்றைய நிலையில் இந்திராவுக்கு ஈழத்தில் தமிழர்களுக்கு இருந்த பிரச்சனை பிராந்தியத்தில் தனது செல்வாக்கை சிங்கள அரசு மீது செலுத்தவும் சிங்கள அரசை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் ஒரு வாய்ப்பை அளிப்பதாக இருந்தது.

அமிர்தலிங்கம் கோஷ்டியினர் டெல்லிக்கும் சென்னைக்கும் பறப்பதையே 1983 இல் இருந்து 1989 இறக்கும் வரை கொள்கையாகக் கொண்டிருந்தனர். இதனால் அவர்கள் தமிழ் மக்களுக்கு ஈட்டிக்கொடுத்த இராஜதந்திர வெற்றி என்று எதுவும் கிடையாது. விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் இந்தியாவின் செல்வாக்கை தாண்டி வளரும் நிலைக்கு வந்த ஒரு கட்டத்தில் தான் இந்திய - இலங்கை ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் இந்திய ஒருமைப்பாடு இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முதன்மையாக இருந்தது. ஈழத்தில் தமிழர்களின் அரசியல் அபிலாசை தீர வேண்டும் என்பதல்ல அன்று முக்கியமாக அந்த ஒப்பந்தத்தில் இடப்பெற்றிருந்தது.

இந்திய - இலங்கை ஒப்பந்தம் கூட அமிர்தலிங்கம் கோஷ்டியினரின் இராஜதந்திர வெற்றியால் ஏற்பட்ட ஒன்றல்ல. விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தை கட்டுப்படுத்த போடப்பட்ட ஒப்பந்தம் அது. அதன் மூலம் கிடைத்ததை வைத்தே இன்று வரை அமிர்தலிங்கம் கோஷ்டியினரும் பிற தமிழர் விரோத தமிழ் ஆயுதக் கும்பல்களும் அரசியல் நடத்தி வருகின்றனர் என்பதையும் இந்த இடத்தில் நினைவு கூற வேண்டும்.

1989 வாக்கில் ஏற்பட்ட சிங்கள அரசுத்தலைமை மாற்றங்கள் இந்தியப் படை விலகலுக்கும் இந்திய - சிறீலங்கா உறவு மோசமடையும் நிலைக்கும் இட்டுச் சென்றது. அன்று இந்தியாவின் வடகோடியில் முனைப்புப் பெற்றிருந்த காஷ்மீர் பிரச்சனையில் சிறீலங்காவின் அப்போதைய பிரேமதாச அரசு பகிரங்கமாகவே பாகிஸ்தானின் நிலைப்பாட்டை ஆதரித்து கருத்து வெளியிட்டு வந்ததும் அன்றி இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரங்களிலும் ஈடுபட்டிருந்தது. அப்போதும் கூட ஈழத்தமிழர்களின் மத்தியில் இருந்து இந்தியாவால் பொறுக்கி எடுத்து வளர்க்கப்பட்ட வரதராஜப் பெருமாள் உட்பட்ட ஈபிஆர்எல்எவ் கட்சியினர் (இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரேமசந்திரன் உட்பட) இந்தியாவே தஞ்சம்.. இந்தியாவே எல்லாம் என்று ஈழத்தமிழர்களின் அரசியல் நலனை இந்தியாவை நம்பியே தீர்மானித்தனர். விடுதலைப்புலிகளைத் தவிர வேறு எவரும் இந்தியாவின் நலனுக்கு அப்பால் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளை முன்னுறுத்திப் பார்க்க முன்வரவில்லை. அப்படிச் செய்வதை சாணக்கியமற்ற.. படிப்பறிவற்ற.. சட்டம் தெரியாத சின்னப்பொடியள்களின் மண்விளையாட்டாகவே காட்டி வந்தனர்.

ஆனால் விடுதலைப்புலிகளின் நகர்வுகளோ வேறுமாதிரி இந்ததன. அவர்கள் இந்தியா ஈழத்தமிழர்களின் பிரச்சனையை வைத்து தனது நலனை பாதுகாக்கிறது அல்லது பாதுகாக்க முற்படுகிறது என்று சரியாக அறிந்து அதன் வழி இந்தியாவை தமிழர்களின் வழிக்குக் கொண்டு வர அதற்கான வழிவகைகளைக் காண முயற்சித்தனர். இது மிதவாதிகள் என்றும் ஜனநாயக வாதிகள் என்றும் வன்முறையை வெறுப்போர் என்றும் (1977 இல் வட்டுக்கோட்டை பிரகடனத்தைக் கொண்டு வந்து இரத்தத் திலகம் இட்டு வன்முறைக்கு வழிகாட்டியவர்கள் இவர்கள் என்பதையும் இந்த இடத்தில் பதிந்து வைத்துக் கொள்வது நன்று.) தம்மை அடையாளப்படுத்தி அரசியல் செய்து வந்த அமிர்தலிங்கம் கோஷ்டியினருக்கும் மற்றும் இதர தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் எந்த மாற்றுச் சிந்தனையும் இன்றி இந்திய வழியில் போய் அதுபோடும் பிச்சையில் தான் தமிழர்களின் அரசியல் உரிமையை பெற முடியும் என்ற நம்பிக்கைக்கு நெருக்கடியாக அமைந்ததும் அன்றி இந்தியாவின் பார்வையில் அதன் நலனுக்கு எதிரானதாகவும் பட்டது.

இந்த நிலையில் தான் 1995 இல் பதவிக்கு வந்த இந்திய விசுவாசியான சந்திரிக்கா அம்மையாரும் சமாதானம் பேசி வந்து போரின் மூலம் சமாதானம் என்ற நிலைப்பாட்டுக்கு இந்தியாவால் கொண்டு வரப்பட்டார். அப்போதும் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவராக இருக்கும் சம்பந்தன் உட்பட பலரும் மெளனமாக இருந்து சந்திரிக்காவின் போரின் மூலம் சமாதானம் திட்டத்தை செயற்படுத்த உதவினர். இந்தியாவின் மறைமுக ஆதரவோடு அன்று நடந்த போரில் ஈழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய மையமாக விளங்கிய யாழ்ப்பாணம் சிங்கள இராணுவத்தின் கைகளுக்குப் போனது. அப்போதைய இந்திய ஆளும் வர்க்கம் யாழ்ப்பாணம் மீட்சியை வரவேற்று கருத்து வெளியிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அதுமட்டுமன்றி யாழ்ப்பாண வெற்றியோடு விடுதலைப்புலிகளைப் பூண்டோடு அழித்து சிங்கள மேலாதிக்கத்தை இலங்கைத் தீவு எங்கனும் நிறுவி விட துடித்தார் சந்திரிக்கா. ஆனால் அதற்கு முதல் சர்வதேசத்தின் முன்னும் இந்தியாவின் முன்னும் தன்னை ஒரு சமாதான விரும்பியாகக் காட்டிக்கொள்ளவே சந்திரிக்கா விரும்பினார். தமிழ் மக்கள் முன்னும் தன்னை ஒரு பேரினவாதியாகக் காட்டிக்கொள்வதை சந்திரிக்கா அன்றைய நிலையில் வெளிப்படையாக விரும்பாத போதும் அவருக்குள் பேரினவாதச் சிந்தனைகளே பெரிதும் குடிகொண்டிருந்தன என்பதை மாங்குளம் வெற்றியோடு அவர்கள் நடந்து கொண்ட முறைகள் விளக்கி இருந்தன.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை நோக்க வேண்டும். பொத்தல் விழுந்திருந்த சந்திரிக்காவின் சமாதான தேவதைக்கான முகத்திரையினூடு வெளித்தெரிந்த பேரினவாதத் தோற்றத்தை தையல் போட்டு மறைக்க வேண்டிய தேவை இருந்தது. அதைச் செய்ய தீவிரமாகப் பங்களிப்புச் செய்ய சிலர் தாமாகவே முன்வந்தனர். அப்படி முன்வந்தவர்களில் கதிர்காமர் அஷ்ரப் நீலன்-திருச்செல்வம் சம்பந்தன் ஆனந்தசங்கரி பிரேமச்சந்திரன் டக்கிளஸ் தேவானந்தா சித்தார்த்தன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அப்போதும் கூட பிரித்தானிய சமாதான ஏற்பாடுகளை இயன் பொக்சின் முயற்சிகளை.. ஈழப்பிரச்சனையில் பிரித்தானிய தலையீட்டை விரும்பாத இந்திய விசுவாசிகள் இயன் பொக்சின் முயற்சிகளுக்கு முடிவுகட்டி சந்திரிக்காவை சமாதான தேவதையாகக் காட்ட 1998 வாக்கில் ஒரு தீர்வுப்பொதியை உருவாக்கி தந்துவிட்டிருந்தனர். அந்தத் தீர்வுப்பொதியை வரைந்தவர்களில் நீலன் திருச்செல்வம் முக்கிமானவர். வரவேற்றவர்களில் சம்பந்தன் முக்கியமானவர்.

இறுதியில் அந்தத் தீர்வுப் பொதி வந்த மாத்திரத்திலேயே சிங்கள எதிர் தரப்புக்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டது. அதில் ஐக்கிய தேசியக் கட்சி ஜே வி பி புத்த பிக்குகளின் பங்களிப்பு முதன்மையானது. விடுதலைப்புலிகள் அந்தத் தீர்வுப்பொதியில் எதுவும் உருப்படியாக அமையப் போவதில்லை.. அது சந்திரிக்காவின் போர் முகத்தை மறைக்க போடப்படும் முகமூடி என்று தீர்வுப்பொதிக்கான ஆயத்தங்கள் செய்யப்பட்ட போதே சொல்லிவிட்டனர். இறுதியாக நடந்தி முடிக்கப்பட்டதும் அதுதான். ஒரு வெற்றுப்பொதிக்கு பெரிய ஆர்ப்பாட்டம் அளித்தவர்களில் சம்பந்தன் உட்பட்ட சிலரும் அடக்கம்.

அதன் பின்னர் போர்க்கள நிலவரம் தலை கீழாக மாறி சிங்களப் படைகள் புலிகளிடம் அடிவாங்கி ஓடும் நிலை வந்தது. தானே ஏவிவிட்ட சிங்களப் படைகளை மீட்க தனது படைகளை தயார் செய்யும் துர்ப்பாக்கிய நிலையும் இந்தியாவுக்கு உருவானது. இந்த நிலையில் தான் இந்தியா விழித்துக் கொண்டது. பிராந்தியத்தின் தென்கோடியிலும் தனக்கு சவால் ஒன்று உருவாவதை அது உணர ஆரம்பித்தது. அந்தச் சவாலை விடுதலைப்புலிகள் சர்வதேசத்தின் ஆதரவோடு விடுக்கின்றனர் என்பதையும் இந்தியா உணரத்தலைப்பட்டது. ஒன்றில் விடுதலைப்புலிகளுக்கு முடிவுரை எழுத வேண்டும் இன்றேல் தமிழர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வு வேண்டும் என்ற நிலைக்கு வந்த இந்தியா அன்றைய பொழுதில் விடுதலைப்புலிகளுக்கு முடிவுரை எழுதுவதை தள்ளிவைத்துவிட்டு சமாதான வேடம் பூண்டு கொண்டது. சில உறுதிமொழிகளை அளித்து விடுதலைப்புலிகளை போர் நிறுத்தத்துக்குள் தள்ளியது. இருந்தாலும் விடுதலைப்புலிகளோடு ஏற்பட்ட கடந்த கால கசப்புக்களையும் விடுதலைப்புலிகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஒத்துவராத வகைக்கு கொண்டிருக்கும் அரசியல் கொள்கைகளையும் இந்தியா இலகுவாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.

அந்த வகையில் விடுதலைப்புலிகளை முழுமையாக நம்புவதில்லை என்ற நிலைப்பாட்டில் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் சர்வதேசத்திடமே அவர்களைச் சிக்கவைத்து அதன் வழி அவர்களின் செயற்பாடுகளை முடக்கி தேவையான சரியான சந்தர்ப்பத்தில் அவர்களை அழிப்பதை இந்தியா திட்டமாக வரைந்து கொண்டது. இது விடுதலைப்புலிகளுக்கு தெரிய வந்த போது அவர்கள் ஏற்கனவே பின்னப்பட்டிருந்த வலையில் மாட்டிக் கொண்டிருந்தனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை அதன் தெற்குப் பிராந்திய பாதுகாப்பும் ஒருமைப்பாடுமே அதன் இருப்புக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமானது.ஈழத்தில் அல்லது தமிழகத்தில் உள்ள தமிழர்களின் அரசியல் நலன் அல்ல. அந்த வகையிலேயே இந்தியாவின் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. அதற்கேற்றவாறு முதலில் விடுதலைப்புலிகளுக்கு ஒரு முடிவு கட்டிவிட்டால் பின்னர் ஈழத்தில் தனக்கு வேண்டிய சக்திகளை வளர்த்துவிட்டு ஈழத்தமிழர்கள் மத்தியில் தனது செல்வாக்கையும் நலனையும் பாதுகாக்கும் கொள்கைகளைப் பரப்பிவிடலாம் என்பதில் இந்தியா தெளிவாக இருந்து கொண்டது. இந்த விடயத்தில் 1987ல் அது கண்ட பாடம் அதற்கு இவ்வாறான ஒரு தெளிவைக் கொடுத்திருந்ததோடு ஈழத்தமிழர்களின் பலம் புலிகளே தவிர வேறு ஒன்றும் அல்ல என்பதையும் உணர்ந்து கொண்டிருந்தது. புலிகளை முடக்கி தனக்கு சார்ப்பான ஒரு அரசியல் நிலைப்பாட்டை ஈழத்தில் நிறுவுவதே இந்தியாவின் நோக்கம்.

அதன்படி இந்தியாவின் தேவைகள் எதிர்பார்ப்புக்கள் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ஓரளவு நிறைவேறி இருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் இந்தியாவே எல்லாம் என்ற நிலைக்கு மீண்டும் தமிழர்களை கொண்டு செல்லும் நிலையை சம்பந்தன் போன்றவர்கள் உருவாக்கி வருகின்றனர். இது மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை இந்தியா தனது நலனுக்காக பாவிக்கும் நிலையில் வைத்திருப்பதை செய்யுமே தவிர தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க ஒருபோதும் உதவாது.

தமிழ் மக்களுக்கு இன்று அவசியமானது விடுதலைப்புலிகள் கொண்டிருந்த திடமான அரசியல் மற்றும் இராஜதந்திரக் கொள்கைகளே. விடுதலைப்புலிகளிடம் திடமான இராஜதந்திரக் கொள்கைகள் இருந்த போதும் அவை பூரணத்துவம் அற்றனவாக இருந்தன. அதற்குக் காரணம் தமிழர் தரப்புக்களிடம் ஒருவித கண்மூடித்தனமான இந்திய விசுவாசம்.. காதல்.. ஒட்டிக் கொண்டிருந்தது தான்.

ஈழத்தமிழர்கள் இந்த நிலையைக் கடந்து சர்வதேச அளவில் பல நாடுகளோடும் நெருங்கிய உறவுகளை உருவாக்கிக் கொண்டு இந்தியாவிற்கு தம்மீதுள்ள ஆதிக்கத்தை விடுவித்துக் கொண்டு அல்லது கட்டுப்படுத்திக் கொண்டு இந்தியா மீதும் அதன் கொள்கை வகுப்பாளர்கள் மீதும் செல்வாக்குச் செய்யும் அளவுக்கு தமது அரசியல் இராஜதந்திர வெளிவிவகார கொள்கைகளை தொடர்புகளை பலப்படுத்துவதாக அமைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி இந்தியா ஈழத்தமிழர்கள் மீது செலுத்தும் சுதந்திரமான தலையீட்டுக் கொள்கைக்கு முடிவுகட்ட வேண்டும். அதற்கு முடிவு வராமல் ஈழத்தில் தமிழர்களுக்கு அவர்கள் விரும்பும் வடிவில் அரசியல் விடுதலையை இந்தியாவும் சிறீலங்காவும் வழங்க இடமளிக்கப் போவதும் இல்லை.

35 வருட போர் அவலங்களைக் காட்டி (இவ்வளவு அவலங்களையும் தந்தவர்களில் இந்தியாவின் பங்களிப்பே அதிகம்) அதில் இருந்து விடுதலை பெற்றுத்தருகிறோம் என்ற பாணியில் இந்தியா ஈழத்தமிழர்களை சரிக்கட்டி விடலாம் என்று நினைக்கிறது. 35 ஆண்டுகளுக்கு முன்னர் போர் அரசியலை ஈழத்தமிழர்கள் தெரிவு செய்ய இருந்த அத்தனை காரணிகளும் அப்படியே இந்தியாவால் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றிற்கு முடிவு கட்ட சிங்கள ஆளும் வர்க்கம் மட்டுமல்ல.. இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் விரும்பமில்லை. அப்படி முடிவு கட்டிவிட்டால் இந்தியாவின் தென்கோடியில் தனக்கு எழும் சவால்களை தமிழர்களை வைத்து சரிக்கட்ட வாய்ப்புக்கிடைக்காது என்ற ஒரு பயம் இந்தியாவிடம் இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது. இப்போது கூட தமிழர்களின் துன்பியலை தனது ஒருமைப்பாடு இறையாண்மையை பிராந்திய ஆதிக்கம் ஆகியவற்றைப் பாதுகாக்க இந்தியா பயன்படுத்துகின்றதே அன்றி அதற்கு தமிழர்கள் அவர்கள் விரும்பும் வடிவில் அரசியல் உரிமைபெற்று இந்தியாவின் நிரந்தர நண்பர்களாக வாழ வேண்டும் என்ற அக்கறை கிடையாது.

இந்த நிலையில்.. டெல்லிக்கும் சென்னைக்கும் கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் பாலம் போடும் பறந்து திரியும்.. அமிர்தலிங்கம் கோஷ்டியினரின் கடந்த கால அரசியலையா மீண்டும் சம்பந்தன் போன்ற நவீன சாணக்கியர்கள் செய்து ஈழத்தில் இந்திய நலன் காக்கும் அரசியல் செய்யப் போகின்றனர்..???!

இந்தியா எமது நண்பனா எதிரியா என்பது அது எம்மோடு வைத்துக் கொள்ளும் நட்பின் உண்மைத் தன்மையில் இருக்கிறது. அதற்காக இந்தியா மட்டுமே எமது நண்பன் என்றிருப்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

தமிழீழ தேசிய தலைவர் சொன்னது போல் ஆசியாவின் கைகளுக்கு மாறி வரும் உலகின் பொருண்மிய பலம் இந்தியாவை நம்பி நடக்க முனைவதிலும் இந்தியா எம்மை நாடி வர நடப்பதுதான் அவசியம். இந்தியா எமது நண்பன் என்பது இந்தியாவையே நம்பு என்பதாகாது..!

எனவே மேற்குறிப்பிட்ட விடயங்கள் மற்றும் கடந்த காலங்களில் புலிகள் சம்பந்தப்படாத மற்றவர்கள் தமிழ் மக்களுக்கு இழைத்த தவறுகள் தொடர்பில் சம்பந்த சாணக்கியர்கள்.. சிந்திக்க வேண்டிய நேரம் இது. நாடு கடந்த தமிழீழ அரசும் பரிசீலிக்க வேண்டிய விடயம் இது.

செய்வார்களா.. அல்லது மீண்டும் பழைய குருடி கதவைத் திறவடி கதைதானா...???!

 

http://kundumani.blogspot.co.uk/2010/01/blog-post_15.html

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை காலமும் பொறுத்திருந்த நாங்கள் இன்னும் சில காலங்கள் பொறுத்திருப்பதில்

எதுவும் கைவிட்டுப் போகப் போவதில்லை.

சம்பந்தரின் கூட்டுக்குள் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் காகங்கள் பலதிசைகளிலும் 

சிதறிப் பறக்கும் காலம்  விரைவில் வரும்.

அப்போது மக்கள் தேசியக் கிளிகளை அடையாளம் கண்டு கொள்வார்கள் 

அவர்கள் பின் அணிதிரள்வார்கள் 

இத்தனை அடிகளையும் வாங்கிய தமிழர்கள் இன்னும் கொஞ்சம் அடிகளை 

வாங்கிக் கொண்டு பொறுத்திருப்பதே நல்லது

"புலிகள் மகிந்தரை ஆட்சிக்கு கொண்டுவந்ததன் மூலம் இந்திய - அமெரிக்கக் கூட்டின் புவிசார் அரசியலுக்கு ஒரு பூட்டுப்போட்டிருந்தனர்"

  :mellow::icon_mrgreen::blink:

இந்தாள் குப்பைதான் எப்போதும் எழுவது. இந்த முறை இப்படி ஒன்றையும் தொடாத ************** கட்டுரை ஒன்றை எழுதியிருக்கு. இது வரையில் பல இடங்களில் இந்தியாவுக்கும் அமெரிக்கவுக்கும் ஒற்றுமையை ஏற்பட முடியவில்லை. இதில் பல விடையங்கள் ஈழத்தமிழருடையதானது. இந்தியா சுப்பிரமணியசாமியை சமாதனம் பிடிக்க அனுப்பிப்பார்த்தது. அதுவும் சரிவரவில்லை. இது வரையில் அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணை எல்லாவற்றையும் இந்தியா தோற்கடித்துவிட்டது. இந்தியா பொன்சேக்காவை விழுத முயன்றது. அமெரிக்க பொன்சேக்காவுக்காக கூட்டமைப்பின் கையை முறுக்கியது. 

 

சில தனியார் கமபனிகள் அமெரிக்காவ்லிருந்து இந்தியாவுக்கு சென்றிருக்கின்றன. அதோ தான் ஒப்பந்தம் எழுதி கொடுத்து சாட்சிக்கு கைழெதும் போட்டுவிட்டு வந்திருந்து எழுவது மாதிரி அமெரிக்க - இந்திய கூட்டுக்கதை எழுதுகிறார். 

 

இந்தாள் அரசுக்குக்காக புலி ஆதரவாளர் மாதிரி நடிக்கிறதா அல்லது அதி தீவிர வாதியா என்பதை அறிந்தவர்கள் எழுதலாம்.

 

தலைவர்  மகிந்தாவை கொண்டுவந்தார் என்பது அரசியல் குழந்தைகளின் விளக்கம். அவர் SLFP யிடம் காசு கேட்டு தூது அனுப்பவில்லை. தமிழ் மக்களை சிறிலங்கா நடத்தும் தேர்தலில் பங்கு எடுக்க வேண்டாம் என்றார். அவர் மகிந்தா வருவதை தடுக்க மறுத்தார். எனவே அவர் எங்குமே ஒரு பூட்டும் போடவுமில்லை. சிங்கள சிறிலங்க அரசியலில் மூக்கை நுளைக்கவுமில்லை.  

 

சம்பந்தர் மேற்கு நாடுகளுடன் அரசியல் தொடர்பு வைத்திருப்பது இந்துயாவுக்கு பிடிக்காத ஒன்று. அமெரிக்கா இந்தியாவை வெளிப்படையாக எதிரித்து ஒரு நடவடிக்கையிலும் இலங்கையில் இறங்காமல் பொறுத்து வருகிறது. அதன் எதிர்பார்ப்பு இந்தியா திரும்பி வரும் என்று. அது காங்கிரஸ் தோற்றால் நடக்கும். அதன் பின்னர் அமெரிக்கா இலங்கை அரசுக்கு எதிராக காய்களை நகர்த்தும். அப்போது இலங்கை பணிந்தால் 13+ மாதிரி ஒரு தீர்வு வரும். இலங்கை பணியாவிட்டால் 13- தொடக்கம் சுயாட்சி வைக்கும் தீர்வு மாறுபடலாம்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டமையாகும். இதன் மூலம் வடக்கு - கிழக்கு பிரிப்பிற்கு அரசியல் அந்தஸ்து வழங்கப்பட்டது. வடக்கு - கிழக்கு இணைப்பு தமிழ் மக்களது கூட்டிருப்பின் அடையாளம்.

 

விக்கினேஸ்வரன் இதுவரை தெரிவித்த கருத்துக்களில் எந்த இடத்திலும் தேசியக் கோரிக்கைகளைப் பற்றிக் கூறவில்லை. ஜனநாயகக் கோரிக்கைகளையே கூறியிருக்கின்றார். ஒற்றையாட்சியின் கீழ் அமைந்த மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படவேண்டும் எனக் கூறியிருக்கின்றார். இராணுவம் பறித்த காணிகள் திருப்பிக் கொடுக்கப்படவேண்டும் எனக் கூறியிருக்கின்றார். ஒற்றையாட்சிக்குப் பதிலாக சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த இணைப்பாட்சி உருவாக்கப்படல் வேண்டும் என்றோ, சிங்களக் குடியேற்றங்கள் அமைத்தல், விகாரைகளை அமைத்தல், மீனவர் படையெடுப்பைத் தடுத்தல் என்பவை பற்றியோ எதுவும் கூறவில்லை.

 

பின்னையவையெல்லாம் தேசியக் கோரிக்கைகள் - அவற்றைக் கூறுவதற்கு அவர் தயாரில்லை. தாராளவாதச் சிந்தனையின்படி எவரும் எங்கும் குடியேறலாம். எங்கும் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடலாம். பெரும்பான்மை ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளலாம். இதன்படி சிங்களக் குடியேற்றமும் தவறல்ல, மீனவர் படையெடுப்பும் தவறல்ல. விகாரைகளை அமைத்தலும் தவறல்ல. ஒற்றையாட்சியும் தவறல்ல. விக்னேஸ்வரன் இதனையே பிரதிபலிக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் மேற்கு நாடுகளுடன் அரசியல் தொடர்பு வைத்திருப்பது இந்துயாவுக்கு பிடிக்காத ஒன்று. அமெரிக்கா இந்தியாவை வெளிப்படையாக எதிரித்து ஒரு நடவடிக்கையிலும் இலங்கையில் இறங்காமல் பொறுத்து வருகிறது. அதன் எதிர்பார்ப்பு இந்தியா திரும்பி வரும் என்று. அது காங்கிரஸ் தோற்றால் நடக்கும். அதன் பின்னர் அமெரிக்கா இலங்கை அரசுக்கு எதிராக காய்களை நகர்த்தும். அப்போது இலங்கை பணிந்தால் 13+ மாதிரி ஒரு தீர்வு வரும். இலங்கை பணியாவிட்டால் 13- தொடக்கம் சுயாட்சி வைக்கும் தீர்வு மாறுபடலாம்.

 

சம்பந்தர் பற்றி அவர் எழுதினது எல்லாம் குப்பை என்றே வைத்துக் கொள்வோம்.

 

நீங்கள் எழுதுவது போல சம்பந்தர் எந்தெந்த மேற்கு நாடுகளோடு தொடர்பு வைச்சு என்னென்ன மாதிரியான இராஜதந்திர நகர்வுகளை இதுவரை செய்துள்ளார்..???!

 

புலம்பெயர் அமைப்புக்கள் செய்த அளவிற்குக் கூட சம்பந்தன் செய்ததில்லை..! களத்தில் நின்று செயற்படுகின்ற ஒரு அரசியல்வாதி அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களை சான்றுகளோடு அவர்களின் நேரடி வாக்குமூலங்களோடு ஒரு அறிக்கையாக சர்வதேச சமூகத்தின் முன் வைத்திருக்கலாம். அதன் மூலம் ஐநாவுக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுத்திருக்கலாம். அது கூடச் செய்யவில்லை. சனல் 4 வெளியில் இருந்து செய்த அளவிற்குக் கூட சம்பந்தனால் ஒன்றும் புடுக்க முடியவில்லையே.. ஏன்..????! மாறாக சிங்கக் கொடியை தூக்கிப் பிடித்தார்..! இதனால் என்ன நன்மை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது..???! :icon_idea::rolleyes:

 

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் நாட்டில் உங்கள் தெரிவு வை கோ,சீமான் ,நெடுமாறன் இந்த மூவரும் அங்கு கட்டுகாசு கூட எடுக்கமுடியாத நிலை .அதை ஏற்றுக்கொள்ள பழகுங்கள்.

 

 

சித்தார்த்தன்.. சங்கரியே கதிரைக்கு வழியில்லாமல்.. பிரபாகரனின் தமிழ் தேசிய நிழலில் எலிப் புழுக்கைகளாய் காய்கின்ற நிலையில்... வை.கோ.. சீமான்.. நெடுமாறன் ஐயா போன்றவர்களை உச்சரிக்கக் கூட தகுதியில்லாதவர்கள்.. அவர்களின் அரசியல் வரலாறு அறியாதவர்கள் பிதட்டிக் கொண்டு திரிவது எவருக்கும் எந்த வகையிலும் அவசியமற்றது. மூளை குழம்பினதுகள்.. பலவாறு உளறுகள் அதையெல்லாம் ஊர் கேட்கனுன்னு அவசியமில்லை..! :lol::D

Edited by nedukkalapoovan

கட்டுரை ஆசிரியர் அரசியலை விவாத்திக்காமல் காழ்ப்பை விதைக்க மட்டும்தான் முயல்கிறார் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன் . ஆசிரியருக்கு, சம்பந்தார் தான் பிரச்சனையாயின், அவர் இரண்டை நோக்கலாம். தாயகத்தில் எடுபடத்தக்க பாணியில் சம்பந்தரின் இயலாமை, தவறுகளை எழுதலாம். இதனால் தாயகத்தில் அவரை பிரதியிட ஒரு வழி பிறக்கும். அல்லது சம்பந்தரின் நிலைக்கு தன்னை உயர்த்தி சம்பந்தரை விவாதத்தால் மேவி தன் பாதைக்கு இழுத்து வர வேண்டும். அப்போது பிரதியீடு தேடத் தேவை இல்லை. இரண்டில் ஒன்றைத்தைதன்னும் பெற்றுகொள்ளும் நோக்கில்லாமல் சில புலம் பெயர் மக்களுக்கு பேப்பர் விற்று தாயக மக்களின் வாக்குகளை மாற்றிவிடலாம் என்று அப்பாவித்தன அரசியல் எழுதி என்ன லாபம்? உங்களுக்கு இருக்கும் அரசியல் அறிவுக்கு, நீங்கள் அந்த கட்டுரையால் எதையாவது புதிதாக தெளிந்து கொண்டீர்கள் என்று சொல்ல வந்தால் யாழ்களம் சிரிக்கும். அது வெறும் குப்பை கட்டுரை. 

 

1).சம்பந்தரின் தொடர்புகள் பற்றி நான் நிறைய எழுத வேண்டியத்தில்லை. அமெரிக்காவுக்காக சம்பந்தர் செயல்படுவதற்கான ஆதாரங்கள்  கட்டுரையாசிரியர் தன்னிடம்  இருக்கு என்று அடித்துதான் கூருகிறார். :D  எனவே தொடர்பை பற்றி பிரச்சனை இல்லை. ஆனால்: தொடர்பை வைத்து என்ன செய்தார்?

2). நான் தொடர்பை மட்டும்தான் குறிப்பிட்டேன். அந்த தொடர்பால் அவர் அடைந்த வெற்றிகளை நிரல்ப் படுத்த வரவில்லை. அரசியலில் ஒரு வெற்றியை இவர் தான் கொண்டுவந்தார் என்று எழுதுவது மிக கவனமாக செய்ய வேண்டியது. ஆசிரியர் வலிந்து முயல்வது இன்றைய தோல்விகளுக்கெல்லாம் சம்பந்தர்தான் காரணம் என்ற மாயையை உருவாகுக்குவது.

 

பொது வேட்பாளர் கூட்டமைப்பில் போடப்பட்டிருக்கு. நல்லவர் கெட்டவர் பாராமல் (தேசிய முன்னணியை தவிர-தேர்தலில் அவர்களை இணைக்காதது பிரதானமல்ல ஏன் எனில் அவர்கள் தேர்தலில் ஒதுங்கியே இருக்க விரும்புகிறார்கள்) எல்லோரும் ஒரு கன்னையில். தேர்தல் வந்தது வடமாகணத்தவருக்கு வெற்றியே. அதன் இழப்பு, அசியல் பொருள் என்பன வேறுகதை. விரிவாக்கப்பட்டுகொண்டிருந்த ஆமியில் சில தடுமாற்றம் காணப்படுகிறது. அது நிரந்தர மாற்றமா இல்லையா என்பது வேறு கதை. 5 வருடங்கள் பிற்போட்ட நவநீதம் பிள்ளையை வரவேற்க வேண்டிய நிலை. இவற்றை செய்வது தமிழ் மக்களுக்கு இருக்கும் வெளிநாட்டுத் தொடர்புகள் என்பதை மறுக்க முடியாது. இதில் இந்தியாவால் கச்சதீவில் தாக்கப்படும் மீனவர்களை காக்க முடிய வில்லை. 13ம் திருத்தத்தை திருத்துவதை மாற்ற முடியவில்லை. தனது வியாபார உடன்படிக்கைகள ரத்து செய்யப்படுவதை தடுக்க முடியவில்லை. இந்தியாபக்க முயற்சிகளால் நமக்கு எதுவும் வரவில்லை என்பது மட்டும் அல்ல அவை 100% தோல்வி. வீட்டுத்திட்டம் கூடத்தான்.  இதை ஆசிரியரால் பேதம் காண முடியாமல் கூட்டமைப்பு இந்தியாவுக்கும், மேற்கு நாடுகளுக்கும் ஆடுகிறது என்று விபரம் இல்லாத மொட்டையாக முடிக்கிறார். 

 

சம்பந்தர் இழப்புக்கள், நிலபரங்கள் பற்றி  கொடுக்கும் விபரங்கள் அதிகார பூர்வமானதாக இருக்க வேண்டும். சம்பந்தர் அவசரமவசரமாக 40,000 மக்கள் மட்டும் தான் கொல்லப் பட்டார்கள் என்று ஏற்றுகொள்ள வேண்டியதில்லை. எனவே புள்ளிவிபரம் எடுக்க அரச ஆணையை எதிர்பார்க்கிறார்கள். வடக்கு அவர்களின் கையில் வர வேண்டும். ஆமி அவர்கள் செய்வதை தடுக்காமல் இருக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு சம்பந்தர் மக்களின் அவலங்களை எடுத்து சொல்வத்தில்லை என்பது உண்மையானதல்ல. ஒரு பிரச்சனையை பற்றி வெளிநாட்டுடன் பேசினால், அந்த நாடு அதில் தலையிட விரும்பினால், அதை அவர்கள் அரசிடம் சொல்வார்கள். அதற்கு பதிலாக அரசு சம்பந்தரை கூப்பிட்டு மூலப்பொருள்களை கொடுத்து அதை திருத்தும் படி விடபோவதில்லை. சிறிதரன் போன்றோர் ஐ.நா காட்டும் விபரப்படி முகாம்கள் முழுவதாக மூடப்பட்டு, மக்கள் குடியேற்றப்படவில்லை என்ற குறை சொன்ன போது ஐ.நா திரும்பி வந்து அவர்கள் சரி என்றது. அரசு பதிலுக்காக, அகதிகளை ட்றக் வண்டிகளில் ஏற்றிக்கொண்டுபோய் கோப்பல புலவு கட்டுகளுக்குள் இறக்கிவிட்டு வந்துவிட்டது. எனவே ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள் என்று அரசு நடக்கும் போது எதையும் ஒழுங்காக செய்ய முடியாது. கூட்டமைப்பு சில புனர் வாழ்வு முயற்சிகளில் இறங்கியிருக்கு. புலம் பெயர் மக்கள் செய்கிறார்கள். யாரும் இதை அநாவசியமாக பேப்பர்களில் போட என்று பௌசுக்காக செய்து TRO மாதிரி மாட்டாமல், அடக்கமாக செய்ய வேண்டும்.

 

கூட்டமைப்பின் கூட்டத்திற்கு அருச்சுன் போக இருக்கிறார். யாழில் எல்லோரும் நிதானமாக கதைத்து பிரச்சனைகளை ஒழுங்கு பண்ணி கேள்விகளை தயார் செய்யலாம். Gari நமது எண்ணத்தை கூட்டமைப்புக்கு முற்கூட்டி அறிவிக்கலாம். அருச்சுன் அந்த கேள்விகளை எடுத்து சென்று கூட்டத்தில் பதில்கள் யாரிடமாவது பெற முடியுமா என்று முயலலாம்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயற்படுகின்றன என்கிறார் கட்டுரையாளர்.. பிரிந்து செயற்படுகின்றன என்கிறார் நமது மல்லை.. :D

பிரச்சினைகளின் அடிப்படையில் சேர்ந்தோ அல்லது பிரிந்தோ வேலை செய்கிறார்கள் என நான் நினைக்கிறேன்.. சீன-ரஷ்ய உறவும் இவ்வாறானதே..

மற்றும்படி 1987இல் பிராந்தியத்தின் பிரச்சினையாக இருந்தஎமது போராட்டம் 2009 வாக்கில் சர்வதேச அரங்கிற்கு வந்துவிட்டது. அதை மீண்டும் பிராந்திய அளவில் கொண்டுபோய் பொதுக்கும் வேலையைத்தான் இப்போது இந்தியா செய்து வருகிறது..

இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயற்படுகின்றன என்கிறார் கட்டுரையாளர்.. பிரிந்து செயற்படுகின்றன என்கிறார் நமது மல்லை.. :D

பிரச்சினைகளின் அடிப்படையில் சேர்ந்தோ அல்லது பிரிந்தோ வேலை செய்கிறார்கள் என நான் நினைக்கிறேன்.. சீன-ரஷ்ய உறவும் இவ்வாறானதே..

மற்றும்படி 1987இல் பிராந்தியத்தின் பிரச்சினையாக இருந்தஎமது போராட்டம் 2009 வாக்கில் சர்வதேச அரங்கிற்கு வந்துவிட்டது. அதை மீண்டும் பிராந்திய அளவில் கொண்டுபோய் பொதுக்கும் வேலையைத்தான் இப்போது இந்தியா செய்து வருகிறது..

நான் கட்டுரை ஆசிரியர் அரசியல் ஆராச்சி செய்யவில்லை; மாறாக தனது காழ்ப்புணர்வால், மூளைச்சலவை, உணர்ச்சிவச உசுப்பேத்தல் முயற்சி, கூட்டம் சேர்த்தல் போன்றவற்றை முயல்கிறார் என்றுதான் கூறவந்தேன். எழுத்தாளன் கூட்டம் சேர்க்க முயலக்கூடாது. அது அரசியல்வாதிக்குரியது. 

 

மற்றும் படி இந்தியாவும், அமெரிக்காவும் என்ன முல்கின்றன என்பது இன்னொரு விக்கிலீக்ஸ் வந்தால் தெரிய வரலாம். :D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரை ஆசிரியர் அரசியலை விவாத்திக்காமல் காழ்ப்பை விதைக்க மட்டும்தான் முயல்கிறார் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன் . ஆசிரியருக்கு, சம்பந்தார் தான் பிரச்சனையாயின், அவர் இரண்டை நோக்கலாம். தாயகத்தில் எடுபடத்தக்க பாணியில் சம்பந்தரின் இயலாமை, தவறுகளை எழுதலாம். இதனால் தாயகத்தில் அவரை பிரதியிட ஒரு வழி பிறக்கும். அல்லது சம்பந்தரின் நிலைக்கு தன்னை உயர்த்தி சம்பந்தரை விவாதத்தால் மேவி தன் பாதைக்கு இழுத்து வர வேண்டும். அப்போது பிரதியீடு தேடத் தேவை இல்லை. இரண்டில் ஒன்றைத்தைதன்னும் பெற்றுகொள்ளும் நோக்கில்லாமல் சில புலம் பெயர் மக்களுக்கு பேப்பர் விற்று தாயக மக்களின் வாக்குகளை மாற்றிவிடலாம் என்று அப்பாவித்தன அரசியல் எழுதி என்ன லாபம்? உங்களுக்கு இருக்கும் அரசியல் அறிவுக்கு, நீங்கள் அந்த கட்டுரையால் எதையாவது புதிதாக தெளிந்து கொண்டீர்கள் என்று சொல்ல வந்தால் யாழ்களம் சிரிக்கும். அது வெறும் குப்பை கட்டுரை. 

 

1).சம்பந்தரின் தொடர்புகள் பற்றி நான் நிறைய எழுத வேண்டியத்தில்லை. அமெரிக்காவுக்காக சம்பந்தர் செயல்படுவதற்கான ஆதாரங்கள்  கட்டுரையாசிரியர் தன்னிடம்  இருக்கு என்று அடித்துதான் கூருகிறார். :D  எனவே தொடர்பை பற்றி பிரச்சனை இல்லை. ஆனால்: தொடர்பை வைத்து என்ன செய்தார்?

2). நான் தொடர்பை மட்டும்தான் குறிப்பிட்டேன். அந்த தொடர்பால் அவர் அடைந்த வெற்றிகளை நிரல்ப் படுத்த வரவில்லை. அரசியலில் ஒரு வெற்றியை இவர் தான் கொண்டுவந்தார் என்று எழுதுவது மிக கவனமாக செய்ய வேண்டியது. ஆசிரியர் வலிந்து முயல்வது இன்றைய தோல்விகளுக்கெல்லாம் சம்பந்தர்தான் காரணம் என்ற மாயையை உருவாகுக்குவது.

 

பொது வேட்பாளர் கூட்டமைப்பில் போடப்பட்டிருக்கு. நல்லவர் கெட்டவர் பாராமல் (தேசிய முன்னணியை தவிர-தேர்தலில் அவர்களை இணைக்காதது பிரதானமல்ல ஏன் எனில் அவர்கள் தேர்தலில் ஒதுங்கியே இருக்க விரும்புகிறார்கள்) எல்லோரும் ஒரு கன்னையில். தேர்தல் வந்தது வடமாகணத்தவருக்கு வெற்றியே. அதன் இழப்பு, அசியல் பொருள் என்பன வேறுகதை. விரிவாக்கப்பட்டுகொண்டிருந்த ஆமியில் சில தடுமாற்றம் காணப்படுகிறது. அது நிரந்தர மாற்றமா இல்லையா என்பது வேறு கதை. 5 வருடங்கள் பிற்போட்ட நவநீதம் பிள்ளையை வரவேற்க வேண்டிய நிலை. இவற்றை செய்வது தமிழ் மக்களுக்கு இருக்கும் வெளிநாட்டுத் தொடர்புகள் என்பதை மறுக்க முடியாது. இதில் இந்தியாவால் கச்சதீவில் தாக்கப்படும் மீனவர்களை காக்க முடிய வில்லை. 13ம் திருத்தத்தை திருத்துவதை மாற்ற முடியவில்லை. தனது வியாபார உடன்படிக்கைகள ரத்து செய்யப்படுவதை தடுக்க முடியவில்லை. இந்தியாபக்க முயற்சிகளால் நமக்கு எதுவும் வரவில்லை என்பது மட்டும் அல்ல அவை 100% தோல்வி. வீட்டுத்திட்டம் கூடத்தான்.  இதை ஆசிரியரால் பேதம் காண முடியாமல் கூட்டமைப்பு இந்தியாவுக்கும், மேற்கு நாடுகளுக்கும் ஆடுகிறது என்று விபரம் இல்லாத மொட்டையாக முடிக்கிறார். 

 

சம்பந்தர் இழப்புக்கள், நிலபரங்கள் பற்றி  கொடுக்கும் விபரங்கள் அதிகார பூர்வமானதாக இருக்க வேண்டும். சம்பந்தர் அவசரமவசரமாக 40,000 மக்கள் மட்டும் தான் கொல்லப் பட்டார்கள் என்று ஏற்றுகொள்ள வேண்டியதில்லை. எனவே புள்ளிவிபரம் எடுக்க அரச ஆணையை எதிர்பார்க்கிறார்கள். வடக்கு அவர்களின் கையில் வர வேண்டும். ஆமி அவர்கள் செய்வதை தடுக்காமல் இருக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு சம்பந்தர் மக்களின் அவலங்களை எடுத்து சொல்வத்தில்லை என்பது உண்மையானதல்ல. ஒரு பிரச்சனையை பற்றி வெளிநாட்டுடன் பேசினால், அந்த நாடு அதில் தலையிட விரும்பினால், அதை அவர்கள் அரசிடம் சொல்வார்கள். அதற்கு பதிலாக அரசு சம்பந்தரை கூப்பிட்டு மூலப்பொருள்களை கொடுத்து அதை திருத்தும் படி விடபோவதில்லை. சிறிதரன் போன்றோர் ஐ.நா காட்டும் விபரப்படி முகாம்கள் முழுவதாக மூடப்பட்டு, மக்கள் குடியேற்றப்படவில்லை என்ற குறை சொன்ன போது ஐ.நா திரும்பி வந்து அவர்கள் சரி என்றது. அரசு பதிலுக்காக, அகதிகளை ட்றக் வண்டிகளில் ஏற்றிக்கொண்டுபோய் கோப்பல புலவு கட்டுகளுக்குள் இறக்கிவிட்டு வந்துவிட்டது. எனவே ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள் என்று அரசு நடக்கும் போது எதையும் ஒழுங்காக செய்ய முடியாது. கூட்டமைப்பு சில புனர் வாழ்வு முயற்சிகளில் இறங்கியிருக்கு. புலம் பெயர் மக்கள் செய்கிறார்கள். யாரும் இதை அநாவசியமாக பேப்பர்களில் போட என்று பௌசுக்காக செய்து TRO மாதிரி மாட்டாமல், அடக்கமாக செய்ய வேண்டும்.

 

கூட்டமைப்பின் கூட்டத்திற்கு அருச்சுன் போக இருக்கிறார். யாழில் எல்லோரும் நிதானமாக கதைத்து பிரச்சனைகளை ஒழுங்கு பண்ணி கேள்விகளை தயார் செய்யலாம். Gari நமது எண்ணத்தை கூட்டமைப்புக்கு முற்கூட்டி அறிவிக்கலாம். அருச்சுன் அந்த கேள்விகளை எடுத்து சென்று கூட்டத்தில் பதில்கள் யாரிடமாவது பெற முடியுமா என்று முயலலாம்.

 

நீங்கள் நிறையவே பூசி மொழுகிறீங்க. சிறீதரனும்... கஜேந்திரகுமாரும் நாலாம் மாடிக்கு போய் வந்திருக்கினம். தலைவர் சம்பந்தன்.. எத்தினை தரம் போய் வந்திருக்கிறார்..????!

 

சிறீதரனை தமிழ் தேசிய முகத்தை கூட்டமைப்புக்கு வழங்க வைச்சிருக்கிறார் சம்பந்தன். அடிப்படையில் அவருடைய அரசியல் இலக்கு இந்திய நலன்காப்பதோடு தொடர்புடைய.. சிங்கள அதிகார மையத்துடனான... இணக்க அரசியல் தான்..! இதனை மறுக்கும் படியாக சம்பந்தன் செய்யும் ஒரு நகர்வை இனங்காட்டினீர்கள் என்றால்.. உங்கள் பதிலால் மக்கள் கொஞ்சம் என்றாலும்.. ஆறுதல் அடைவார்கள்..!!! :icon_idea:

 

Edited by nedukkalapoovan

சம்பந்தர் சொல்லக்கூடிய வகையில் எதையும் இன்னும் உருப்படியாக செய்யவில்லை!

"புலிகள் மகிந்தரை ஆட்சிக்கு கொண்டுவந்ததன் மூலம் இந்திய - அமெரிக்கக் கூட்டின் புவிசார் அரசியலுக்கு ஒரு பூட்டுப்போட்டிருந்தனர்"

  :mellow::icon_mrgreen::blink:

 

சிங்களவன் தனது தலைவரை தெரிவு செய்ய புலிகள் அனுமதித்ததின் மூலம் எண்டு சொல்லுங்கோ... 

 

பின்னை  நீங்கள் வாக்கு போட இரணில் வெண்டு வந்து தமிழரின் அமோக ஆதரவோடை வந்து உங்களுக்கு தட்டிலை வைச்சு எதையும் தந்திருக்க போவதில்லை...   அவனும் தந்திருக்க போவது போரையும் வறுமையையும் தான்.... !  

 

போச்சுவார்த்தை நடந்த அந்த நாலு வருசமும் இரணில் தந்ததும் அதுதான்...   இரணிலின் அரசாங்கம் போருக்கு ஒதுக்கிய நிதி அப்போதே 12 ஆயிரம் கோடி... !  நான்கு வருடமும் சேர்ந்தால்  45 ஆயிரம் கோடி... !  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.