Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஷினுகாமி

Featured Replies

ஷினுகாமி - சிறுகதை

 

சிறுகதை: லதாமகன், ஓவியங்கள்: ஸ்யாம்

 

``ஹிரோஷிமானி இக்கோ தெசுகா?’’ கொஞ்சல் ஜப்பானிய மொழியில் அந்தப் பெண் புன்னகைத்துக் கேட்டபோது புரியவில்லை.

``மன்னிக்கவும், ஜப்பானிய மொழி தெரியாது’’ என்றேன். ``ஹிரோஷிமா போறீங்களா?’’ நல்லதொரு நுனி நாக்கு ஆங்கிலம். சிகரெட் சாம்பலை அதற்காக வைக்கப்பட்டிருந்த நீண்ட தொட்டியில் முடிந்தவரை நளினமாகத்  தட்டிவிட்டு ‘`ஆம்’’ என்றேன். `‘தனியாகவா’’ ஜப்பானியப் பெண்கள் எல்லாவற்றிலும் ஆச்சர்யம் கொண்ட கீச்சுக்குரலை நுழைத்துவிடுகிறார்கள் என்று தோன்றியது. மீண்டும் `‘ஆம்’’ .

‘`ஏன் ஹிரோஷிமா?’’ 

p62a.jpg

 இந்த இரண்டு ஆண்டுகளில் சுற்றும் பாதைகளெல்லாம் இந்தக் கேள்வியைச் சந்தித்திருக்கிறேன். பெரும்பாலும் ஒரு விருந்தினன். வேடிக்கை பார்க்க வந்தவன். ஊர் சுற்ற வந்தவன். நம் ஊரில் எது இவனை ஈர்த்துக்கொண்டு வந்திருக்கும் என்றொரு ஆர்வம் அவர்களின் கேள்விகளில் இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு பதிலுக்கும் ஓர் ஆச்சர்ய முகபாவனை. பெரும்பாலானவர்கள் நான் இங்கே வேலை செய்கிறேன் என்பதை அறிந்தபின் அடங்கிவிடுவார்கள். வேலை செய்கிறவன் இடைவெளிகளில் எங்கு வேண்டுமானாலும் போகலாம். நாடுவிட்டு நாடு கடந்து சுற்றுகிறவன் மீதுதான் கரிசனம். இதுவரை என் நாட்டில் நான் காணாத எதைத் தேடி வந்திருக்கிறான் என்னும் ஆச்சர்யம்.

“ஜப்பான் பயணம் என்று முடிவான கணத்தில் தோன்றிய உணர்வு. அங்கே ஒருநாள் அமர்ந்திருக்க வேண்டுமென்று.’’

“எங்கே?”

“அணுகுண்டு விழுந்த இடத்தில்.  உடலெல்லாம் எரிய பல ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் இறந்து போன இடத்தில்” என்றேன். கொஞ்சம் அதிகமாகச் சென்றுவிட்டோம் என்று தோன்றியது. அவளிடம் அப்போதும் அதே புன்னகை.

“ஏன்?”

“மரணம் என்னை வசீகரிக்கிறது.”

“கொலைகள். இல்லையா?’’

நேரடியான கேள்வி. உண்மையானதும்கூட. அதை மறைக்க முயற்சிசெய்தேன். நடுங்கி விழவிருந்த சிகரெட்டை லாவகமாக மறைப்பவன் போலத் தொட்டியில் அமிழ்த்தி அடுத்த சிகரெட்டை எடுத்துப்  பற்றவைத்துக்கொண்டேன்.

“ இருக்கலாம். உள்ளூர் சுடுகாட்டில், காசியில், எரியும் பிணங்களைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறேன்.மரணம் வசீகீரமானதுதானே?” மெல்லப் பந்தை அவள் பக்கம் உருட்டிவிட்டேன். புன்னகை மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தவள், இழுத்து மூச்சு விட்டாள்.

“இல்லை. மரணம்,  வெறும் சோம்பலான நாய்.கொலை, ஒரு வேட்டை நாய். சோம்பலில் எந்த வேடிக்கையும் இல்லை. வேட்டையில்தான் வேடிக்கை இருக்கிறது. வேட்டை நாய் சோம்பலாக இருக்கும்போது பார்த்திருக்கிறாயா? அது அழகுதான். ஆனால், உண்மையில்லை.”

பேச்சை மாற்றலாம் என்று தோன்றியது. நடு முதுகில் பூச்சி ஊரும் எண்ணம். தலையசைத்து அதைக் கலைத்தேன். “நீங்கள் தனியாகச் செல்கிறீர்களா?” என்றேன். “ஆம். ஆனால், அங்கே எனது நண்பர் இணைந்து கொள்வார். எனது பிறப்பிடம் அதன் அருகேதான். அங்கிருந்து வருவார்” என்றாள். தொடர்ந்து, “உங்களுக்கு பிரச்னை இல்லை யெனில், எங்களுடன் இணைந்து கொள்ளலாம்” எளிமையான வார்த்தைதான். ஆனாலும், ஏதோ ஒன்று இயல்பான வெளியூர் பயம் உள்ளே உருட்டியது.

 “ இல்லை. அங்கே தனியே அமரவேண்டுமென விரும்புகிறேன். அந்த இடத்தில்” சொல்லிவிட்டு அவள் முகத்தில் ஏமாற்றம் தெரிகிறதா என்று பார்த்தேன். எந்தச் சலனமும் இல்லை. “சரி. பரவாயில்லை. இந்த ட்ரெயினிலும் அடுத்த  நான்குமணி நேரம் தனியாகச் செல்வதாக எந்த வேண்டுதலும் இல்லாவிட்டால், என்னுடன் இணைந்துகொள்ளலாம். பயப்படாதீர்கள், தின்றுவிட மாட்டேன். ஜப்பானியர்களில் உங்கள் ஊரின் பிஸ்கட் கொள்ளையர்கள் இருக்க சாத்தியம் குறைவுதான்” என்றாள். இந்தியாவைப்பற்றி எங்கோ படித்திருக்கிறாள். குறிப்பாக ரயில்பயணத்தின் பிஸ்கட் கொள்ளையர்களைப் பற்றி. இவளிடம் எ ன் நாட்டுப்பெருமையை எதைச் சொல்லி உருவாக்குவேன் என்ற எண்ணம் ஓடியது. இரண்டாவது சிகரெட்டை அணைத்தேன். புகையறைவிட்டுக் கதவைத் தள்ளி அவளுக்கு வழிவிட்டேன்.புன்னகைத்தபடியே வெளியேறினாள்.தொடர்ந்து பின்னாலே வந்தேன். சிறுபிள்ளை போன்ற உடல். அதிகமும் பதினந்து வயதைத் தாண்டாதென மதிக்கலாம். ஆனால், இந்த ஊரில் குமரிகள் முதல் கிழவிகள் வரை இதே உருவம் என்பதால், சற்று இடறியது. என் இருக்கையைத் தாண்டி நடந்தாள்.

“என் இருக்கை இங்கே இருக்கிறது” குரல் பலவீனமாக ஒலித்தது. “பையை எடுத்துக்கொண்டு இங்கே வாருங்கள். ஜன்னலை ஒட்டி இடம் தருகிறேன்’’ என்றாள். நாங்கள் இருந்த பெட்டி, முன்பதிவு செய்யத் தேவையில்லாதது. யாரும் எங்கும் அமர்ந்துகொள்ளும்படியிலானது. பையை எடுத்துக்கொண்டு நாய்க்குட்டிபோல அவள் இருக்கையின் அருகில் சென்று அமர்ந்தேன். திடீரென ஞாபகம் வந்தது. “உங்கள் பெயர் சொல்லவில்லையே’’ என்றேன்.

“ஷினு. ஷினு காமி. உங்களுக்கு?” என்று கை நீட்டினாள். “நந்து’’ என்றேன். கைகொடுக்கும் முன்னதாகச் சட்டையில் துடைக்கும் உணர்வெழுந்ததைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன். அதற்கும் இந்தியாவை அவள் இழுக்கக்கூடும் என்று தோன்றியது.

“கிட்டத்தட்ட உங்கள் பெயரைப்போலவே எங்கள் ஊரில் ஒரு கடவுள் பெயர் உண்டு. சிவகாமி.”

“ஓ.”

p62b.jpg

”தெரிந்திருக்கும் என நினைத்தேன். எங்கள் ஊர் ரயில் திருட்டையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.”
பெரிதாகச் சிரித்தாள். “மனதைப் புண்படுத்தி விட்டேனா. மன்னிக்கவும். நிஜமாகவே சிவகாமி தெரியாது. ஆனால், இந்தியாவில் ஒரு பயணியாகச் சுற்றித் திரியவேண்டும் என நினைத்திருக்கிறேன். அதைப்பற்றிப் படிக்கும்போதுதான் ரயில் திருட்டு பற்றியும் படித்தேன். புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.”

“புண்பட்டாலும் அது உண்மைதானே” சங்கடத்தை மறைத்துப் புன்னகைத்தேன்.

“மரணம்போல.”

“என்ன?”

“மரணத்தைப்போல. எல்லோரையும் புண்படுத்தும். எல்லோருக்கும் வரும். சாஸ்வதமான உண்மை. சரிதானே.”

“சரிதான்.”

சாய்ந்து அமர்ந்துகொண்டேன். ஊர்கள் ஜன்னலில் பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தன.  அதிவேகத் தொடர்வண்டிகள்மீது ஆரம்ப நாள்களில் இருந்த ஆச்சர்யம் குறைந்து மற்றுமொரு பயணம் என்ற அளவில் மாறியிருந்தது. ஆனாலும், மரங்களுக்குப் பதிலாக ஊர்களே வருவதும் மறைவதுமாக இருப்பது இன்னும் ஆச்சர்யமூட்டு வதாகவே இருந்தது. “உறங்கப்போகிறீர்களா?” அருகிலிருந்தவள் கேட்டாள். திரும்பி அமர்ந்தேன். “அப்படியெல்லாம் இல்லை. சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். நீங்கள் ஏன் ஹிரோஷிமா போகிறீர்கள்?” நானும் பேசத் தயார் என்பதைப்போல மெல்ல சொற்களை நீட்டினேன்.

 “புத்தாண்டு கொண்டாட்டம். ஒவ்வொரு புத்தாண்டும் ஊருக்குப்போய் ஊர் நண்பர்களுடன் கொண்டாடுவது வழக்கம். இப்போது அங்கே யாருமில்லை. எல்லோரும் டோக்கியோ வந்துவிட்டார்கள். அல்லது வெகு தொலைவில் ஏதாவது வேலையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஒருவன் மட்டும் அங்கே இருக்கிறான்.அவனை வரச்சொல்லியிருக்கிறேன், புத்தாண்டு நள்ளிரவுக்காக. இரவெல்லாம் ஆட்டம் போட்டுவிட்டு, புத்தாண்டு பகல் முழுவதும் உறங்குவோம்.  மீண்டும்  எழுந்து டோக்கியோவிற்குத் திரும்பி வரவேண்டும்.’’

சென்னையிலிருந்து திருச்சிக்கு வாராவாரம் துவைக்கவேண்டிய துணிகளுடன் போய்வந்துகொண்டிருந்த பழைய அறை நண்பன் ஞாபகம் வந்தது. அவள் பெட்டியில் அவளது ஆடைகள் ஒரு வார அழுக்குடன் சுருட்டி வைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றியது. சிரிப்பு வந்தது.

“ஏன் சிரிக்கிறீர்கள்?’’

“இல்லை. எங்கள் நாட்டிலும் இப்படித்தான். வாராவாரம் பெட்டிகட்டி ஊருக்குப்போகும் பழக்கம் உண்டு. ஊரில் குளத்தில் துவைப்பதற்காக ஆடைகள் சுருட்டிக் கொண்டுபோவோம். அது ஞாபகம் வந்தது.”
``நிச்சயமாக என் பெட்டியில் அழுக்குத் துணியில்லை. ஒரு நாய்க்குட்டி மட்டும் வைத்திருக்கிறேன். நேற்று இறந்தது.”

தூக்கிவாரிப்போட்டது.  இறந்த நாய்க்குட்டியை பெட்டியில் வைத்துக்கொண்டு சிரித்தபடிவரும் ஒரு பெண்.

அவள் வெடித்துச் சிரித்தாள். ``பதறாதீர்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. பெண்களின் வழக்கமான ஆடைகள்தான்” அவள் கண்ணடித்தாள். சிறிய கோடுபோன்ற கண்கள். தூண் சிற்பங்களில் இருக்கும் மூடிய கண்களைப்போல. டைல்ஸில் குறுக்கே ஓடும் கறுப்பு நாய்க்குட்டிபோன்ற கருவிழிகள். மஞ்சள்துணி போட்டு மூடிய, துணியை விடுவிப்பதற்காகப் பதறி ஓடும் கறுப்பு நாய்க்குட்டிகள்.

``ஆனால், உண்மையில் எனது குடியிருப்பில் மாடியில் ஒரு நாய்க்குட்டி இறந்துவிட்டது. அந்தப் பெண் இரவெல்லாம் அழுதுகொண்டே யிருந்தார். விளக்கு எரிந்துகொண்டேயிருந்தது. அவள் கணவர் சமாதானம் செய்ய முயற்சி செய்துகொண்டேயிருந்தார். என்னவோ திடீரென நினைவு வந்தது. அதைச் சொன்னேன். சிறிது நிமிடத்தில் முகமெல்லாம் வெளிறிவிட்டது பார்.”

உண்மையிலேயே உள்ளூர நடுங்கிக் கொண்டிருந்தேன். இன்னும் அதிவேக ரயிலிலில் ஆள் குறைவாக இருக்கும் பெட்டியில், கைப்பையில் இறந்த நாயை வைத்திருக்கும் பெண் என்பதாகவே அவள் சித்திரம் உள்ளே மின்னிக்கொண்டிருந்தது. அவளது ஒவ்வொரு தலையசைவுக்கும் ஒளி விடுபடப் பார்த்தேன். பிறகு, மீண்டும் மின்னலென வெட்டும் அந்தச் சித்திரம். இடையே அந்த டைல்ஸில் ஓடும் நாய்க்குட்டிகள். ஈரம் பொதிந்த திசுத்தாள்களைப் பையிலிருந்து எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்தேன். டைல்ஸில் ஓடும் நாய்க்குட்டிகளை. பெட்டியில் இருக்கும் நாய்க்குட்டிகளை. இதுவரை பார்த்த அத்தனை நாய்க்குட்டிகளையும் அழுந்தத் துடைத்து எடுத்தேன். அவள் எந்தச் சலனமும் இன்றி எதிர்ப்புற ஜன்னல்களுக்கு வெளியே ஓடும் மரங்களைப் பார்த்துக்கொண்டேவந்தாள். இடையில் புகைவண்டி நிலையம் ஏதோ ஒன்று வேகமாக கடந்து சென்றது. நடைமேடையிலிருந்து ஒரு நாய்க்குட்டி ஓடிவந்து ஓடும் ரயிலின் கண்ணாடியில் பளீரென அறைந்ததுபோல இருந்தது. முகத்தை மீண்டும் அழுந்தத் துடைத்தேன். அவள் இயல்பாகத் திரும்பினாள்.
“என்ன செய்யப்போகிறாய் குடித்தபின்?”

“என்ன?”

``இல்லை. அந்த இடத்தில் அமர்ந்து இரவில் குடிக்கவேண்டும். பிறகு என்ன செய்வதாக உத்தேசம்?”

“எதுவும் இல்லை. அவர்களில் யாராவது ஆவியாக வந்து காட்சி தந்தால், கொஞ்சம் பேசிக்கொண்டி ருக்கலாம் என்று நினைக்கிறேன்.”

அதே சிறிய விலக்கமான புன்னகை. வெடித்துச் சிரிப்பாள் என்று எதிர்பார்த்தேன். அல்லது சீண்டப்பட்டிருக்க வேண்டுமென்று. ஏதோ கதை கேட்பவள் பாவனையில், கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டாள். என்னை நோக்கிச் சாய்ந்து அமர்ந்தாள்.

“என்ன பேசப்போகிறாய்? அவர்களிடம் ஏதாவது கேட்க வேண்டுமா?”

“ஆம். மனிதர்களைப்பற்றி. அவர்களைக் கொல்வதாக முடிவெடுத்தவர்கள் பற்றி. அரசியல் காரணங்களுக்காக எங்கோ அமர்ந்து ஒரு பொத்தானை அழுத்தி அத்தனை பேரைக் கொன்ற ஒரு விரலைப்பற்றி.”
“ஒருவேளை நீ அங்கு இறந்திருந்தால், உன்னிடம் யாராவது வந்து இதே கேள்வியைக் கேட்டால், உன் பதில் என்ன?”

உண்மையில் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. அவளைச் சீண்டுவதற்காக, தூண்டிவிட்டு வாயைப் பிடுங்குவதற்காக எண்ணி எடுத்த ஒவ்வொரு சொல்லையும் அவள் எளிதாகக் கடந்து சென்றாள்; அதைவிட கூரிய ஆயுதங்களை என்னை நோக்கி எறிந்துவிட்டு.

”தெரியவில்லை. பெரும்பாலும் ஏற்கெனவே எதோ ஒரு விதத்தில் பழிவாங்கிவிட்டேன். அல்லது இறந்தபிறகு இது ஒரு விஷயமாகத் தெரியவில்லை. இரண்டில் ஒன்றுதான் பதிலாக இருந்திருக்கும். உன் பதில் என்ன?”

“என்னிடம் பதில் இல்லை” வெடுக்கென சொன்னாள். கையில் வைத்து அழகு பார்த்த அழகிய பூந்தொட்டி விழுந்து நொறுங்கியதைப்போல என்னில் திடுக்கிடல் எழுந்தது. “என்னை மன்னித்துவிடு” என்றேன்.

அவள் என் கண்களை ஊடுருவிப் பார்த்தாள். பதில் சொல்லாமல் மறுபுறம் முகந்திருப்பி மீண்டும் ஓடும் மரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இலகுத்தன்மை ஏதோ ஒன்று உடைந்ததுபோல் இருந்தது. இழுத்துப் பெருமூச்சுவிட்டு ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டு வந்தேன். மரங்கள். சூரிய மின்சாரத்திற்கென புறம்போக்கு நிலங்களில் அரசாங்கத்தால் பதிக்கப்பட்ட தகடுகள். பழைய ஜப்பானிய பாணியிலான ஓட்டுவீடுகள். கடந்துசெல்லும் ரயில் நிலையங்கள். அங்கே அந்த நிறுத்தத்தில் நிற்கப்போகும் புகைவண்டிகளுக்காகக் காத்திருப்பவர்கள். தள்ளுவண்டிகளில் அமரவைக்கப்பட்டு உறங்கிவிட்டிருந்த குழந்தைகள். அவள் உறங்கியிருக்கக்கூடும் என்று தோன்றியது. பின்கழுத்தில் உறுத்தத் திரும்பினேன்.கூர்மையாகப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

``பெரியவர்கள் இறந்ததைவிட குழந்தைகள் தான் அதில் அதிகம். பேச முடியாத குழந்தைகள். உடல் எரிய,  நா வறண்டு, தண்ணீர் என வாய் திறந்து கேட்கத் தெரியாத குழந்தைகள். அவர்களிடம் பதில் கிடையாது. கேள்விகள் இருந்திருக்கலாம். யாருக்கும் தெரியாது. ஆனாலும், இறந்தார்கள். சிறிய பொத்தான். எங்கோ யாரோ அழுத்திய ஒரு பொத்தான். யாரோ யாரிடமோ சொல்லிய ஒரு வார்த்தை. மெல்ல ஊர்ந்து எழுந்து பறக்கிறவர்களிடம் வந்து சேர்ந்து, அவர்கள் திறந்த சிறிய கதவு. அங்கிருந்து விழுந்த ஓர் உலோகத்துண்டு. மொத்த பேரையும்  நா திறக்கவிடாமல் சாகடித்துவிட்டது. அத்தனை பேரையும் கொல்லவேண்டும்.

p62c.jpg

அதற்குக் காரணமான அத்தனை பேரையும் ஒருத்தர் விடாமல்...” அவள் ஜப்பானிய வாசம் வீசும் ஓர் ஆங்கில உச்சரிப்பில் தடதடவென பொரிந்தாள். குரல் தழுதழுத்ததுபோல் இருந்தது. ஆனால், கண்களில் கோபம் இருந்தது. எச்சில் விழுங்கி எதுவும் சொல்ல முடியாமல் விழித்தேன். ``இன்னொரு சிகரெட்?” அவளது பதிலுக்குக் காத்திராமல் இருக்கையிலிருந்து எழுந்தேன். அவளைக் கடந்து போகவேண்டும். அவளை மீறிப் போக முடியாது. அவளும் அமர்ந்திருந்தாள். சில நொடிகளுக்குப் பிறகு, பெருமூச்சுவிட்டு கைப்பையிலிருந்து சிகரெட் பெட்டியையும்  நெருப்புக்குச்சியையும் எடுத்துக்கொண்டு எழுந்து வெளியேவந்து வழிவிட்டாள். நான் முன்னால் நடந்தேன். பின்கழுத்தில் அவள் பார்வை குறுகுறுத்து.

பெட்டியோடு இணைந்திருந்த புகையறைக்குள் நுழைந்தேன். ஒதுங்கி அவளுக்கு வழிவிட்டேன்.  நுழைந்து கதவை அடைத்தாள். “மன்னித்துவிடு. உன்னைக் காயப்படுத்தும் நோக்கமில்லை. தோன்றியது, சொன்னேன்” என்றாள்.

இலகுவானேன். சிகரெட்டைப் பற்றவைத்து அவளிடம் நீட்டினேன். பழைய உதட்டோரப் புன்னகையுடன் அதை வாங்கி தன் சிகரெட்டைப் பற்றவைத்து என்னிடம் தந்தாள். நான் கொடுத்த சிகரெட்டை வாயில் பொருத்திக்கொண்டாள்.

“பிணங்கள் எரியும் ஊர் ஒன்று சொன்னாயே. காஜி. அதுவும் இப்படித்தானா? படித்ததில்லையே’’

“இல்லை. இப்படியில்லை. அது மதம் சார்ந்த ஒரு நம்பிக்கை. அங்கே இறந்தால், இறந்தவர்களை எரித்தால், கடவுளை அடைவதாக ஒரு நம்பிக்கை.”

“அதற்காக எரிப்பார்களா... உயிரோடா?” அவள் கண்களில் பதற்றத்துடன் கூடிய ஆச்சர்யம்.

“அய்யோ அப்படி இல்லை. இறந்தவர்களை; பிணங்களை. சிலர் வயதான காலத்தில் இறப்பதற்காக அங்கே போய்த் தங்கிக் காத்திருப்பார்கள். இறந்தபிறகு, யாராவது எரித்தால் நல்லது என்று. சில சமயங்களில் பாதி எரிந்த  பிணங்களை அந்த ஆற்றில் இழுத்து விட்டுவிடுவார்கள். அதைப்பற்றி நிறைய காணொளி இணையத்தில் கிடைக்கும்.’’

“ஆக எதுவுமே அரசியலோ கொலையோ இல்லை.”

“இல்லை.”

“நீ பார்த்த மற்ற சுடுகாடுகள்?”

``எதுவுமே கொலையல்ல. எல்லாமே மரணங்கள்.”

“நீ உயிர்களுக்காக அலையவில்லை. வெறும் நெருப்பிற்காக அலைகிறாய். இல்லையா?”

“ஆம்” காற்று நீக்கிய பலூன்போல உள்ளுக்குள் சுருங்கினேன். தலையைக் குனிந்துகொண்டேன். ஏனென்று தெரியாத ஒரு சங்கடம் அடிவயிற்றில் குமிழென எழுந்தது.

``அதுதான் கையிலேயே வைத்திருக்கிறாயே” மிகச் சாதாரணமாகக் கேட்டாள். திடுக்கிட்டேன். சிகரெட்டைச் சுண்டினேன். மிகச் சரியாக அதற்கான தொட்டியில் போய் விழுந்தது.

“நெருப்பு எல்லாபுறமும் இருப்பதுதான். அதைத் தேடும் உனது வேட்கையைப்போல. ஆனால், மரணம் என்று நீ சொல்லிக்கொள்வதில் ஒரு  நெருப்பு கிடைக்கிறது. அதைப் பற்றிக்கொண்டிருக்கிறாய். உன் தனிமைப் பயத்தைப் போக்க, என்னுடன் இணைந்து கொண்டதுபோல.  இல்லையா...” சீண்டுவதற்கான வார்த்தைகளைப் பொறுக்கி அளிக்கிறாளா அல்லது அவள் சாதாரணமாகப் பேசுவதே சீண்டுகிறதா என்ற குழப்பம் வந்தது.

“மன்னிக்கவும். நீதான் என்னுடன் இணைந்துகொண்டாய் என நினைத்தேன் ‘‘ முதலில் அவள்தான் வந்து பேசினாள் என்பதை சுட்டிக்காட்ட விரும்பினேன். “ஹா ஹா. நான் சிகரெட்டுக்காக வரும்போது நீ தனியே அமர்ந்திருந்ததைக் கவனித்தேன். பதற்றமாக இருந்தாய். நாங்கள் ஆறு வயதிலிருந்து தனியே நகரத்து ரயில்களில் குறுக்கும் நெடுக்குமாகப் போய் பழகியவர்கள். சந்திக்கும் முகத்தில் அவர்கள் தனியாக வந்தவரா, குடிபோதையில் இருக்கிறாரா, பதற்றத்தில் இருக்கிறாரா என்பதை எங்களால் உணர முடியும். நான் ஹிரோஷிமாவின் தெருக்களில் வளர்ந்தவள். சுற்றுலாப் பயணிகளின் முகக் குறிப்புகள் எனக்கு தலைப்பாடம்” என்றாள்.

“நான் சுற்றுலாப் பயணியல்ல.”

“வேலை செய்கிறாயா?”

“ஆம். டோக்கியோவில். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக.”

“ஆனால், ஹிரோஷிமா இதுதான் முதல்முறை.”

“ஆம். ஆனால்...”

“இதுவரை ஏன் வரவில்லை”

“நேரம் வாய்க்கவில்லை” என் குரல் உள்ளடங்கியதுபோல் எனக்கே ஒலித்தது “என் வேலை அப்படி.”p62e.jpg

``ஆனால், மற்ற இடங்களெல்லாம் சுற்றியிருக்கிறாய்.”

“கொஞ்சம். பெரும்பாலும் டோக்கியோ. சில நேரங்களில் அருகிருக்கும் சிறப்புத்தீவுகள்.”

“ஆனால், ஹிரோஷிமா இல்லை.”

“ஆம். ஆனால்…”

“நான் சொல்கிறேன். உனக்கு பயம். ஹிரோஷிமாமீது பயம். மரணத்தின்மீது பயம். இன்னும் சொல்லப்போனால் உன் ஊர்மீது பயம். அதற்கான சாக்கு ஜப்பான். ஹிரோஷிமா கொலைகள்மீது பயம். அதற்குச் சாக்கு வேலை. தனியாகப் போக முடிவெடுத்தாலும், இடம் நெருங்க நெருங்க அங்கே இறந்தவர்கள் நினைவுக்கு வந்து மீண்டும் பயம். அதற்குச் சாக்கு மரணம் வசீகரிக்கிறது. போய் அமர்ந்து குடிக்கப்போகிறாயா?”

ஆழத்தைப் பிளந்து பிளந்து நுழைந்துகொண்டேயிருந்தாள். தொண்டைக் கமறியது. இருமினால் அல்லது அசைந்தால் அழப்போகிறேன் என்று முடிவெடுத்துவிடக்கூடும்.

“ஊரில் என்ன பிரச்னை?ஏன் காசிக்குப் போனாய்?”

திடுமென அந்தப் புள்ளியையும் தொட்டாள். “சும்மாதான். அந்த நதிக்கரையில் கோயில் இருக்கிறது. அங்கே பெளர்ணமி அழகாக இருக்குமென்றதால், பார்க்கப் போனேன்.”

“பார்த்தாயா? பார்த்திருக்க மாட்டாயே?”

“ஆம். நதியில் ஒரு பிணத்தைப் பார்த்தேன். ஒரு குழந்தை. திறந்திருந்த கண்கள். நீர்ப்பரப்பின் மீது, ஈயாடிக்கொண்டிருந்தது. அதற்குமேல் அந்த ஊரில்  இருக்க முடியவில்லை. திரும்பிவிட்டேன் வந்த வேகத்திலேயே.”

“சரி. உண்மையைச் சொல். எதற்காக ஹிரோஷிமா போகிறாய்?”

“தற்கொலை செய்துகொள்ள” என்றேன். ஏன் அவளிடம் இதைத் திறந்தேன் எனத் தயக்கம் எழுந்தது. ஒருவேளை அதுவும் தெரியும் என்று சொல்லிவிடுவாள் என்று பயந்தேன்.

“ஏன்... ஏன் ஓடுகிறாய்?” என்றாள்.

“ஒரு பெண்.”

``ஆண்கள்’’ முணுமுணுத்தாள். மறுபுறம் திரும்பிக்கொண்டாள். “விலக விரும்பியவளைத் திரும்பிப்பார்க்க வைக்கவேண்டும். குற்ற உணர்ச்சியைத் தூண்டவேண்டும். அவ்வளவுதானே? அதற்காகத்தானே இந்த நாடகம்?”

“அப்படியில்லை. ஒருவேளை இது அவளுக்குத் தெரியாமலேகூட போகலாம் இல்லையா. இதில் என்ன குற்ற உணர்ச்சி? இது எனக்கு ஒரு தப்பித்தல்.”p62d1.jpg

``என் இனிய நண்பா...” அவள் வார்த்தையை இழுத்த வேகத்தில் கிண்டல் தொனியிருந்தது.

“நீ எங்கும் இறக்கப்போவதில்லை. இறக்க விரும்புகிறவனுக்கு நாடு, ஊர் வித்தியாசங்கள் தேவையில்லை. நீ அதைச் சொல்லிச்சொல்லி ஊதிப்பெருக்கிப்பிறகு, காற்றுபோன பலூனைப்போல தென்றலில் அசைந்தாடி இறங்கப்போகிறாய். எதுவும் நிகழப்போவதில்லை. ஏன் உன்னையே ஏமாற்றிக்கொள்கிறாய்.”

“நான்...வந்து…” எனக்கு வார்த்தைகள் குழறியது. அவள் சொல்வது உண்மைதான் என்று தோன்றியது.

“அங்கே அருகருகே அருமையான ஜப்பானிய பாணிக் கோயில்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று உங்களூர் பெண் தெய்வம் சாயல் என்றும் இந்தியக் கலாசார பாணியென்றும் சொல்கிறார்கள். சுற்றிப்பார். சில புகைப்படங்கள் எடுத்துக்கொள். திரும்பிப்போ. வேலையைக் கவனி. எண்ணம்வரும்போதெல்லாம் ஒரு முறை இந்த நாளை நினைத்துக்கொள். புரிகிறதா” என்றாள். அவள் குரலில் உத்தரவிடும் தோரணைக்கு எந்தக் கணத்தில் மாறினாள் என்று ஆச்சர்யமாக இருந்தது. எந்தத் தருணத்தில் நான் அவளிடம் அடங்கியவனாக மாறினேன் என்றும்.

ரயில் நிலையத்தில் நாங்கள் இறங்கியபோது அதிகக் கூட்டமில்லை. மெல்ல குதிகால்களை உயர்த்தி விரல்களில் நின்றபடி நெற்றியில் முத்தமிட்டாள். பெட்டியைத் தள்ளிக்கொண்டு விறுவிறுவென இறங்கிப்போனாள். சக்கரங்கள் பொருத்தப்பட்ட அந்தப் பெட்டி சிவப்பு நிற நாய்க்குட்டி அவள் பின்னால் துள்ளி ஓடுவது போல் தோன்றியது.

இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை வருடங்கள் இருக்கும். சமீபத்தில் ஜப்பானிய மொழி கற்பதற்காக சிறப்பு வகுப்பில் இணைந்திருக்கிறேன். எழுத்துகளைத் தாண்டி வார்த்தைகள் வரை வந்திருக்கிறேன். ஷினு என்ற வார்த்தைக்கு மரணம் என்று அர்த்தம் என்றபோதுதான் இந்த நிகழ்வும் மொத்தமாக நினைவுக்கு வந்தது. வீட்டிற்கு வந்து காமி என்பதற்கான அர்த்தங்களைத் தேடினேன். கமி,காமி, பல எழுத்து வகைகள். மாற்றி மாற்றித் தேடி இறுதியாகத் தேடியதை அடைந்தேன். காமி என்றால் கடவுள். ஷினு காமி என்றால் மரணத்தின் கடவுள்.

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.