Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீர்கொழும்பில்,  போர்த்துக்கேயரால்... இடித்தழிக்கப்பட்ட  நஞ்சுண்டார் சிவன் கோயில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of outdoors and monument    May be an image of outdoors, monument and brick wall
 
நீர்கொழும்பில்,  போர்த்துக்கேயரால்... இடித்தழிக்கப்பட்ட  நஞ்சுண்டார் சிவன் கோயில்!
 
சிவ பூமியின் சுவடுகளைத் தேடி நான் சென்ற இடங்களில் ஒன்று தான் நீர்கொழும்பு. இங்கு போர்த்துக்கேயரின் வருகைக்கு முன்பு பல கோயில்கள் இருந்தமை பற்றிய குறிப்புகள் சில கிடைத்தன. இக்குறிப்புகளின் படி இங்கு ஓர் சிவன் கோயிலும், அம்மன் கோயிலும் பண்டைய காலத்தில் இருந்துள்ளன. இவை போர்த்துக்கேயரால் முற்றாக இடித்தழிக்கப்பட்டுள்ளன. அழிக்கப்பட்ட இக்கோயில்கள் நஞ்சுண்டார் சிவன் கோயில் எனவும், காமாட்சி அம்மன் கோயில் எனவும் பெயர் பெற்று விளங்கியுள்ளன. இக்கோயில்களின் சுவடுகளைத் தேடி நீர்கொழும்புக்குச் சென்றேன்.
 
தற்போது நீர்கொழும்பில் உள்ள கடல் வீதியில் பல கோயில்கள் காணப்படுகின்றன. ஆனால் இவற்றிற்கு முற்பட்ட கால வரலாற்றைக் கொண்ட கோயில்களாக சிவன் மற்றும் அம்மன் கோயில்கள் விளங்கியுள்ளன. அப்பகுதிக்குச் சென்று பார்த்தபோது, அங்கு காமாட்சி அம்மன் கோயில் அமைந்திருந்த இடத்தை அடையாளம் கண்டேன்.
 
நஞ்சுண்டார் கோயில் அமைந்திருந்த நஞ்சுண்டான் கரை
நஞ்சுண்டார் சிவன் கோயில் நஞ்சுண்டான் கரை என்னுமிடத்தில் அமைந்திருந்ததாக குறிப்புகள் கூறுகின்றன. எனவே நீர்கொழும்பில் நஞ்சுண்டான் கரை என்னுமிடத்தைத் தேடினேன். அப்படி ஓர் இடம் இப்போது இல்லை எனத் தெரிந்தது. ஆனால் முன்னக்கரை என்றோர் இடம் உள்ளதாக அங்குள்ள மக்கள் கூறினார். பண்டைய காலத்தில் இருந்த நஞ்சுண்டான் கரையே தற்போது முன்னக்கரையாக திரிபடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதை உறுதி செய்து கொளவதற்காக முன்னக்கரைக்குச் சென்றேன்.
முன்னக்கரை என்னுமிடம் இரண்டு தீவுகளைக் கொண்ட பிரதேசமாகும். இது நீர்கொழும்புக் கோட்டையின் தெற்கில், களப்பு நீர் கடலில் கலக்கும் சங்கமத்தின் அருகில் உள்ளது. வடக்கு தெற்காக ஒடுங்கிய, நீளமான இத்தீவுகளில் முதலாவது தீவு 800 மீற்றர் நீளமும், 600 மீற்றர் அகலமும் கொண்டது. இத்தீவின் தெற்கில் அமைந்துள்ள இரண்டாவது தீவு 800 நீளமும், 300 மீற்றர் அகலமும் கொண்ட சிறிய தீவாகும். இவ்விரண்டு தீவுகளிலும் இரண்டு கிறிஸ்தவ தேவாலயங்கள் காணப் படுகின்றன. முதலாவது தீவில் காலத்துக்குக் காலம் பல தெய்வச் சிலைகளும், சிவாலயச் சின்னங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே முதலாவது தீவில் தேவாலயம் அமைந்திருக்கும் இடத்தின் அருகில் பண்டைய நஞ்சுண்டார் சிவன் கோயில் இருந்துள்ளது என்பதை உறுதி செய்து கொண்டேன்.
 
நீர்களப்பு - நீர்கொழும்பு – நிகம்பு
நீர்கொழும்பு கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய நகரமாகும். இம்மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு கடல் முகப்புத் தள நகரம் நீர்கொழும்பு என்பது குறிப்பிடத்தக்கது. பொ.ஆ 14 ஆம் நூற்றாண்டில் ஓர் துறைப்பட்டினமாக விளங் கிய நீர்கொழும்பு நகரில், இக்காலப்பகுதியில் பிரசித்தி பெற்று விள ங்கிய இரு இந்து ஆலயங்களில் ஒன்றே நஞ்சுண்டார் சிவன் கோயி லாகும். பொ.ஆ. 14 ஆம் நூற்றாண்டில், இப்பகுதி யாழ்ப்பாண ஆரிய ச்சக்கரவர்த்தி களின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில், நஞ்சுண்டார் சிவன் கோயில் கட்டப்பட்டதாகத் தெரிய வருகிறது.
 
நீர்கொழும்பு பெரிய கடல் நீரேரியைக் கொண்ட பிரதேசமா கும். இதனால் இது “நீர் களப்பு” என அழைக்கப்பட்டு வந்தது. இதுவே போர்த்துக்கேயர் காலத்தில் நீர்கொழும்பு என மருவி விட்டது. போர் த்துக்கேயர் இப்பெயரே “நிகம்பு” என உச்சரித்து வந்தனர். இன்றும் ஆங்கிலத்தில் நிகம்பு என்றே உச்சரிக்கப் படுகிறது. இப்பெயர் வரக் காரணமான நீர்கொழும்பு களப்பு வடக்கு தெற்காக சுமார் 12 கி.மீ. நீளத்தையும் 4 கி.மீ. அகலத்தையும் கொண்ட உப்பு நீர் வாவியாகும். இக்கடல் நீர் ஏரி பெருங்கடலுடன் இணையும் இடத்தின் வடக்கிலும் தெற்கிலும் உள்ள இரண்டு முனைகளும் உள்ள பகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்கின. இந்து சமுத்திரத்திலிருந்து வரும் கப்ப ல்களும், படகுகளும் கடல் நீரேரிக்குள் நுழையும் வாயிலாக இருந்த இந்த சிறிய நீர்ப்பரப்பின் வடக்கிலும், தெற்கிலும் இருந்த நிலப்பரப் பில் தமிழ் மக்கள் பெருமளவில் குடியேறினர்.
 
தென்பகுதி ஒடுங்கிய நிலப்பரப்புடன் வடக்குத் தெற்காக 12 கி.மீ. நீளத்தையும், ஒரு கி.மீற்றருக்கும் குறைவான அகலத்தையும் கொண்டதாகும். இந்நிலப்பரப்பின் மேற்கில் இந்து சமுத்திரமும், கிழக்கில் நீர்கொழும்பு களப்பும், தெற்கில் பமுனுகம எனும் கிராமமும் அமைந்துள்ளது. கடல் நீர் ஏரியின் வடபகுதி பெருநிலப் பரப்புடன் தொடர்பு பட்டிருந்தது. அத்துடன் நுழை வாயிலாகவும் அமைந்திருந்த படியால் இப்பகுதியே நீர்களப்பு என்ற பெயருடன் துறைப்பட்டினமாக உருவானது.
 
யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்தியின் கோட்டை
பொ.ஆ. 1341 இல் இலங்கையின் தென்பகுதியில் உருவான கம் பளை இராச்சியத்திற்குட்பட்ட பகுதியாக அக்காலத்தில் நீர்கொழு ம்பு விளங்கியது. நீர்கொழும்பு உட்பட கம்பளை இராச்சியத்திற்குட் பட்ட மாயரட்டையின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளை யாழ்ப்பாண மன்னனான சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி கைப்பற்றினான். இக்கா லப்பகுதியில் ஆரியச் சக்கரவர்த்தியின் கோட்டை ஒன்றும் நீர்கொ ழும்பில் கட்டப்பட்டது. இக்கோட்டையை பின்பு போர்த்துகேயர், ஒல் லாந்தர் ஆகியோர் கைப்பற்றி புனரமைத்தனர். ஆரியச் சக்கரவர்த் தியால் கைப்பற்றப்பட்ட பகுதிகளுக்காக கம்பளை மன்னனான 3 ஆம் விக்கிரமபாகு (பொ.ஆ. 1357 -1374) சிங்கை ஆரியச் சக்கரவர்த்தி க்கு திறை செலுத்தி வந்தான்.
ஆரியச் சக்கரவர்த்தி காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில்
 
இக்காலப்பகுதியில் தான் நீர்கொழும்பில் பல இந்துக் கோயில் கள் ஸ்தாபிக்கப்பட்டன. இவற்றில் ஒன்றே நஞ்சுண்டார் சிவன் கோயிலாகும். இக்காலப்பகுதியில் நீர்கொழும்பு கடல் நீரேரியைச் சுற்றியிருந்த இடங்களில் இந்துக்கள் பெருமளவில் வாழ்ந்து வந்த னர். ஏரியின் தென்மேற்குக் கரையில் பிரமணகாமம் எனும் பிராம ணர் குடியிருப்பு உருவானது. இதுவே தற்போது பமுனுகம என அழை க்கப்படுகிறது. தென்கிழக்கில் சந்நியாசிகளுக்கும், துறவிகளுக்கு மான மடாலயம் ஒன்றும் அமைக்கப்பட்டது. ஏரி கடலில் கலக்கும் நுழைவாயிலின் தெற்கில் நஞ்சுண்டார் சிவன்கோயிலும், வடக்குப் பகுதியில் காமாட்சி அம்மன் கோயிலும் அமைக்கப்பட்டன. இவை யாவும் 14 ஆம், 15 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் நிலவிய சைவ சமய வழிபாட்டின் உன்னத நிலைக்குச் சான்றாக அமைகின்றன.
 
இலங்கையின் தென்பகுதித் தலைநகரம் கம்பளையிலிருந்து கோட்டை ஜயவர்த்தனபுரத்திற்கு மாறியபோது 6 ஆம் பராக்கிரம பாகு கோட்டை இராச்சியத்தின் மன்னனானான். இவனது காலத்தில் தான் நீர்கொழும்புப் பிரதேசம் சிங்கை ஆரியச் சக்கரவர்த்தியிடமிருந்து மீட்கப்பட்டது. இருப்பினும் இங்கிருந்த ஆலயங்கள் யாவும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்தன. 6 ஆம் பராக்கிரமபாகு காலத்தில் கோட்டை இராச்சியத்தில் மேலும் பல இந்துக் கோயில்கள் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
ஆலயத்தின் தூண்களைக் கொண்டு கட்டப்பட்ட கோட்டை
பொ.ஆ. 1505 இல் இலங்கையின் மேற்குக் கரையோரத்தை வந் தடைந்த போர்த்துக்கேயர் முதல் மூச்சில் கைப்பற்றிய மேற்குக் கரையோர நகரங்களில் நீர்கொழும்பும் ஒன்றாகும். நீர்கொழும் பைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர் இங்கு பிரசித்தி பெற்று விளங் கிய நஞ்சுண்டார் சிவன் கோயிலையும், காமாட்சி அம்மன் கோயி லையும் இடித்துத் தரைமட்டமாக்கியதோடு, இவற்றின் கற் தூண் களைக் கொண்டு ஓர் கோட்டையையும் கட்டினர். பொ.ஆ. 1640 இல் ஒல்லாந்தர் போர்த்துக்கேயரிடமிருந்து நீர்கொழும்பைக் கைப்பற் றினாலும் மீண்டும் இவ்விடத்தை போர்த்துக்கேயரிடம் இழந்து, பின்பு 1644 இல் மீண்டும் கைப்பற்றிய போது இக்கோட்டை அழிக்கப் பட்டது.
 
பின்பு ஒல்லாந்தர் தமது பலம் வாய்ந்த கோட்டையை இங்கே கட்டியதோடு, இதனுள்ளே பெரிய கறுவாப்பட்டை களஞ்சியத்தை யும் கட்டினர். அன்றுமுதல், இக்கோட்டை “கறுவாக்கோட்டை” என அழைக்கப்பட்டது. 1796 இல் கறுவாக் கோட்டை ஆங்கிலேயர் வசமா னது. அன்றுமுதல் இக்கோட்டை ஓர் சிறைச்சாலையாகப் பயன்படு த்தப்பட்டது. இன்றும் சிறைச்சாலை இக்கோட்டையினுள்ளே அமை ந்துள்ளது. கோட்டையின் எஞ்சிய பகுதிகளாக இதன் ஆர்ச் வடிவி லான நுழைவாயிலும், மணிக்கூட்டு கோபுரமும் இவற்றின் முன்பாக உள்ள மதிற்சுவருமே தற்போது காணப்படுகின்றன. இவை தொல் பொருட் திணைக்களத்தின் பாதுகாக்கப்பட்ட தொல்பொருட் சின்ன ங்களாக விளங்கின்றன.
 
பாதிரியார் குவைரோசின் குறிப்புகள்
பொ.ஆ. 1575 ஆம் ஆண்டளவில் நஞ்சுண்டார் கோயிலும் காமா ட்சி அம்மன் கோயிலும் இடிக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது. போர் த்துக்கேய பாதிரியாரான குவைரோஸ் அவர்கள் தான் எழுதிய குறி ப்பில் இவ்வாலயங்கள் இடிக்கப்பட்டமை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இங்கிருந்து இருபெரும் இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டதாகவும், இவை இங்கிருந்த மக்களால் சிறந்த முறையில் பூஜிக்கப்பட்டு வந்த தாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்புகள் மூலமே நீர் கொழும்பில் இரண்டு பெரிய கோயில்கள் இருந்தமை பற்றித் தெரிய வந்தது.
 
போர்த்துக்கேயர் வருகைக்கு முன்பு, முழுமையாக... இந்து மக்களைக் கொண்ட நீர்கொழும்பு நகரம் தற்போது கிறிஸ்தவர்களை அதிகளவில் கொண்டுள்ள ஓர் நகரமாகவும், பல கிறிஸ்தவ தேவால யங்களை உடைய நகரமாகவும் விளங்குகிறது. இதன் காரணமாக இங்கு வரும் மேல்நாட்டவர் இந்நகரை “லிட்டில் ரோம்” (குட்டி ரோமா புரி) என அழைக்கின்றனர்.
 
இந்திரஜித் தவம் புரிந்த நிகும்பலையில் சிவலிங்கக் கோயில்
இராமாயண காலத்துடன் நீர்கொழும்பு பிரதேசம் தொடர்புடை யதாகக் காணப்படுகிறது. இலங்கையின் மிகப் பழைமை வாய்ந்த இடங்களில் ஒன்றாக நீர்கொழும்புப் பகுதி விளங்குகிறது. இலங்கை யின் மன்னனான இராவணனின் மகன் இந்திரஜித் உத்தியாவனத் தில் தவம் புரிந்து சிவனின் அருளைப் பெற்றதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இந்திரஜித் தவம் புரிந்த உத்தியாவனம் “நிகும் பலை” என்ற பெயருடன் விளங்கியது. இராவணன் காலத்தில் இரு ந்த நிகும்பலை தான் இன்றைய நீர்கொழும்பு என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நீர்கொழும்பு ஐரோப்பியர்களால் “நிகம்பு” என அழைக்கப்படுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. தந்தை இராவண னின் வேண்டுகோளின் பேரில் இலங்கையின் பல பாகங்களிலும் 108 சிவலிங்கங்களை இந்திரஜித் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக நூல்கள் கூறுகின்றன. இந்த 108 சிவலிங்கங்களில் ஒன்று நிச்சய மாக நிகும்பலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்க வேண்டும் என வும் கூறப்படுகிறது. இதன்படி மிகப்பழைமை வாய்ந்த சிவலிங்கக் கோயில்களில் ஒன்று நிகும்பலை எனும் நீர்கொழும்பில் அமைந்திரு ந்தது என நம்பக் கூடியதாக உள்ளது.
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்.
ஈழம்(இலங்கை)
 
நீர்கொழும்புக் கோட்டை
நீர்கொழும்புக் கோட்டை (Negombo Fort) என்பது சிறிய, ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த கொழும்பைப் பாதுகாக்க போர்த்துக்கேயரால் கட்டப்பட்ட கோட்டையாகும். இது கொழும்பு நகரின் வடக்கிலிருந்து கிட்டத்தட்ட 30 km (19 mi) தூரத்தில் நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ளது.
அக்காலத்தில் இது கொழும்பு, யாழ்ப்பாணம், காலி ஆகிய கோட்டைகளுக்கு அடுத்து தந்திரோபாய முக்கியத்துவம் பெற்று விளங்கியது.
ஆரம்பத்தில் இக்கோட்டை பலவீனமான கட்டமைப்பைக் கொண்டிருந்தது. அதனால் பெப்ரவரி 1640 இல் ஒல்லாந்துப் படைகள் இதைக் கைப்பற்றின.போர்த்துக்கேயர் இதனை மீளவும் தங்கள் வசம் எடுக்க சில முயற்சிகளின் செய்த பின் திசம்பர் 1640 இல் வெற்றி பெற்றனர். அவர்கள் இதனை பலப்படுத்தி, ஒல்லாந்ததினர் சனவரி 1644 இல் மீளக் கைப்பற்றும்வரை பாதுகாத்தனர்
 
நீர்கொழும்பு என்பது இலங்கையின் மேற்குக் கரையில் உள்ள ஒரு மாநகரமாகும். சிங்கள மொழியில் இது மீகமுவ என அழைக்கப்படுகிறது. இது நாட்டின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றான வடமேல் மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இதன் கடற்கரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெயர் பெற்றவை. இதனால் இந் நகரத்தினதும், அதனை அண்டியுள்ள பகுதிகளினதும் கடற்கரையோரங்களில் ஏராளமான சுற்றுலா விடுதிகள் அமைந்துள்ளன. இது பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
 
நீர்கொழும்பு நகரப்பகுதியில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் உரோமன் கத்தோலிக்கர்கள் இதற்கு அடுத்தாக பௌத்தர்களும், மிகவும் சிறுபான்மையாக சைவர்களும் உள்ளனர்.
 
எல்லாளன் காலத்தில் ஈழம் முழுவதும் பரவி வாழ்ந்த தமிழர்கள்...
இன்று... அருகி,  சுருங்கி வாழ்ந்த... இடம் தெரியாமல் போன நிலப் பகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.
நன்றி.
  • கருத்துக்கள உறவுகள்

அரியதோர் பதிவு.  வாழ்த்துகள் தமிழ் சிறீ.

 

Edited by karu
எழுத்துப்பிழை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, karu said:

அரியதோர் பதிவு.  வாழ்த்துகள் தமிழ் சிறீ.

கரு...  வாசித்து, கருத்து எழுதியமைக்கு மிகவும் நன்றி. 🙂
சாதாரணமாக... இப்படியான தலைப்புக்குள், பெரும்பாலானோர் வருவதில்லை.
மீண்டும் உங்களுக்கு நன்றி ஐயா. 🙏

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, தமிழ் சிறி said:


சாதாரணமாக... இப்படியான தலைப்புக்குள், பெரும்பாலானோர் வருவதில்லை.
மீண்டும் உங்களுக்கு நன்றி ஐயா. 🙏

அண்ணா,

நான் இதையும் இதை போல் அம்பாந்தோட்டை பற்றிய திரு திருசெல்வத்தின் பதிவையும், அதை ஒத்த ஏனைய முகநூல் பதிவுகளையும் வாசித்தேன்.

இது சம்பந்தமாக என் கேள்விகள்

1. இவர் தன்னை வரலாற்று ஆய்வாய்வாளர் என்கிறார். இவரின் வரலாறு சம்பந்தமான கல்வி தகமைகள் என்ன?

2. எந்த ஒரு முதன்மை நூலில் இருந்தும், இன்ன பக்கத்தில் இப்படி இருக்கிறது என இவர் ஆதாரம் தருவதில்லை.

3. ஒரு மண்வெட்டியை தன்னும் எடுத்து போய் அகழ்வாராய்சி செய்வதில்லை.

4. மக்களிடம் வாய்வழி கதைகள் பற்றி கள ஆய்வு செய்த கேள்வி கொத்து, அதை cross check பண்ணிய ஆதாரங்கள் எதுவுமில்லை.

5. ஒரு journal இல் தன்னும் இந்த எடுகோள்களை பிரசுரிக்கவில்லை. ஒரு வரலாற்று ஆசிரியர் கூட இதை மதிப்பீடு செய்யவும் இல்லை.

ஒரு பஸ்டிகெட் எடுத்து ஒரு ஊருக்கு போவது, அங்கே சிலபேரிடம் பேசுவது, தன் மனதுக்கு பட்டபடி கட்டுரை எழுதுவது.

இதை நான் எழுதிய உடான்ஸ்சாமியாரின் நகைச்சுவை வரலாற்று கதைகள் போலத்தான் என்னால் பார்க்க முடிகிறது.

ஜஸ்டின் அண்ணா இப்படியானவர்களை snake oil sellers என்பார்.

இவர்களின் இந்த மேம்போக்கான ஆய்வுகள் உண்மையான ஆய்வுக்குரிய விடயங்களை கூட பேரினவாதிகள் மூடி மறைக்க உதவும் என்பது என் நம்பிக்கை.

ஆகவே யாழ் போன்ற தளங்களில் இப்படியான போலி ஆய்வுகள் வரக்கூடாது வந்தால் கேள்வி கேட்க வேண்டும் என்று முன்னர் பலவாறு எதிர்த்து எழுதி உள்ளேன்.

ஆனால் தொடர்ந்தும் இவ்வாறான போலி ஆய்வுகளை “எம்மை பற்றி நாமே பொய்கதை பேசி மகிழ வேண்டும்” என்ற ஒரே காரணத்தினால் இணைக்கும் போது, அதை பற்றி தொடர்ந்து எழுதவும் சலிப்பாக இருக்கிறது.

ஆகவேதான் உங்களின் இந்த இரு பதிவுகளையும் சலிப்புடன் கடந்து போனேன். 

இதில் உங்களை குறை கூறவில்லை. நீங்கள் உங்கள் இன உணர்வால் இதை பதிகிறீர்கள்.

ஆனால் ஒரு வரலாற்று ஆய்வு மட்டும் அல்ல, எந்த ஆய்வுமே எப்படி நடத்தபட வேண்டும் என ஒரு நடைமுறை உண்டு. உங்கள் மகன் சந்திர ச்கிச்சை நிபுணர் என நினைக்கிறேன்  - ஒருக்கால் நான் மேலே கூறிய விடயங்களை அவரிடம் கூறி, இப்படி பட்ட ஒரு கட்டுரையை 100க்கு எத்தனை சதவீதம் அவர் நம்புவார் என கேட்டுப்பாருங்கள். நான் சொல்வது புரியும்.

தொடர்ந்து இவற்றை இணைப்பது உங்கள் இஸ்டம் ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். 

நாம் எமது வரலாற்றை  பற்றி போதிய  ஆதாரமில்லாமல் இப்படி கதைகளை பரப்புவதால் “உலகம் எம் வரலாற்றை இருட்டடிப்பு செய்கிறது”  என்ற எம் ஆதங்கம் மேலும் மேலும் வளருமே ஒழிய, உலகம் இவற்றை ஒரு போதும் ஏற்று கொள்ளப்போவதே இல்லை.

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

நீர்கொழும்பிலுள்ள இடிந்துபோன நஞ்சுண்டார் கோவிலின் எச்சங்கள் படங்கள்மூலம் காட்டப்படுகின்றன.  நீர்கொழும்பு சிலாபம் போன்ற பிரதேசங்கள் பலதசாப்தங்களின் முன் தமிழர்களின் பூர்வீக நிலங்களாயிருந்தனவென்று தமிழரசுக் கட்சிக் காலத்திலேயே கேள்விப்பட்டிருக்கிறேன்.  இப்போதும் சிலாபம் முன்னேஸ்வரம் இலங்கையிலுள்ள பஞ்சஈஸ்வரங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது.   கட்டுரையாசிரியர் தேவையான ஆதாரங்களைக் காட்டியே தரவுகளைத் தந்துள்ளார்.  வேண்டுமானால் இராமாயணகால ஆதாரங்களைப் புறக்கணிக்கலாம்.   தற்காலத்தில் இலக்கியச் சான்றுகளையும் கருத்திலெடுத்துத்தான் ஆய்வுகளைச் செய்கிறார்கள்.  வரலாற்றை ஆய்வுசெய்வதற்குப் பல்கலைக்கழகச் சான்றிதழ்கள் வேண்டியதில்லை.  எனவே கட்டுரையை மறுப்பவர்கள் தங்களது ஆய்வு முடிவுகளைக் கூறி நீர்கொழும்பில் தமிழர்கள் வாழவில்லையென்று நிரூபிப்பதே சரியான அறிவியல் அணுகுமுறையாகும்.

Edited by karu

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கரு...  வாசித்து, கருத்து எழுதியமைக்கு மிகவும் நன்றி. 🙂
சாதாரணமாக... இப்படியான தலைப்புக்குள், பெரும்பாலானோர் வருவதில்லை.
மீண்டும் உங்களுக்கு நன்றி ஐயா. 🙏

அப்படிக் கூறமுடியாது,

முழுவதுமாய் வாசித்தேன். கருத்து எழுத விரும்பவில்லை. காரணம் 

1) முகநூலில் வந்வத, ஆய்வு செய்யப்பட்டதுபோன்ற தோற்றத்தைக்கொண்டுள்ள கட்டுரை.  முழுவதுமாய் நம்பவோ அல்லது விலத்தவோ முடியாது.  ஏனென்றால் உசாத்துணை ஆதாரங்களோ அல்லது தரவுகளோ இணைக்கப்படவில்லை.

2) சமயம் தொடர்பானது. உணர்வுபூர்வமானது. (ஏற்கனவே இருக்கின்ற பிரச்சனை போதுமப்பு 😉)

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, karu said:

கட்டுரையாசிரியர் தேவையான ஆதாரங்களைக் காட்டியே தரவுகளைத் தந்துள்ளார்.  வேண்டுமானால் இராமாயணகால ஆதாரங்களைப் புறக்கணிக்கலாம்.   தற்காலத்தில் இலக்கியச் சான்றுகளையும் கருத்திலெடுத்துத்தான் ஆய்வுகளைச் செய்கிறார்கள்.  வரலாற்றை ஆய்வுசெய்வதற்குப் பல்கலைக்கழகச் சான்றிதழ்கள் வேண்டியதில்லை.

மிகவும் தவறான கருத்து. 

ஆய்வுகளை மேற்கொள்வதெற்கென்று உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அணுகுமுறை உள்ளது (Methodology).

இந்தக் கட்டுரை அப்படியான அணுகுமுறையைக் கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை. 

(கட்டுரையாளர் தவறான தகவலைத் தருகிறார் என்பது என் கூற்று அல்ல. அவர் கூறுவது உண்மையாக இருக்கலாம். ஆனால் அதனை நிறுவுவதற்கு ஆதாரமாக சான்றுகள் எதனையும் அவர் முன்னிலைப்படுத்தவில்ல.)

 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, karu said:

நீர்கொழும்பிலுள்ள இடிந்துபோன நஞ்சுண்டார் கோவிலின் எச்சங்கள் படங்கள்மூலம் காட்டப்படுகின்றன.

இல்லை. அவை போத்துகேயர் அல்லது அதன் பின்னர் கட்டிய கட்டிடத்தின் எச்சங்கள். அந்த அந்த காலப்பகுதியின் கட்டிடகலையை பார்த்தாலே இது சட்டென புரியும். 

கட்டுரை எழுதியவர் கூட எங்கேயும் அவை கோவிலின் எச்சங்கள் என எழுதவில்லை ஆனால் அந்த படங்களை மட்டும் போட்டு, படிப்பவரின் மனதில் ஒரு மயக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார்.

 

48 minutes ago, karu said:

நீர்கொழும்பு சிலாபம் போன்ற பிரதேசங்கள் பலதசாப்தங்களின் முன் தமிழர்களின் பூர்வீக நிலங்களாயிருந்தனவென்று தமிழரசுக் கட்சிக் காலத்திலேயே கேள்விப்பட்டிருக்கிறேன். 

இது மறுக்கவியலாத உண்மை. கொழும்பு நீர்கொழும்பு - புத்தளம் ரயில் பாதையில் உள்ள ஒவ்வொரு ரயில் நிலையத்தின் பெயரும் ஒரு தமிழ் ஊர்தான். முன்னர் இதை பற்றியும் demala pattuva (தமிழர் பற்று) பற்றியும் நானே யாழில் எழுதியுள்ளேன்.

இவை தமிழர் நிலங்கள் என்பதிலும் இவற்றின் வரலாற்றை பேரினவாதம் மறைக்கிறது, உருமாற்றுகிறது என்பதிலும் மாற்று கருத்து இல்லை.

ஆனால் அதைவிட மோசமான ஒரு புரட்டை நாம் அதற்கு பதிலாக வைத்தால் - அவர்கள் சொல்வதுதான் சரி என்றே ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, karu said:

இலக்கியச் சான்றுகளையும் கருத்திலெடுத்துத்தான் ஆய்வுகளைச் செய்கிறார்கள்

உண்மை. இங்கே கட்டுரை எழுதியவர் எந்த இலக்கியத்தை ஆதாரமாக முன்வைத்துள்ளார்?

55 minutes ago, karu said:

வரலாற்றை ஆய்வுசெய்வதற்குப் பல்கலைக்கழகச் சான்றிதழ்கள் வேண்டியதில்லை

முக நூலில் எழுத தேவையில்லை. ஆனால் எந்த துறையிலும் ஆய்வு செய்ய குறைந்தபட்ச தகுதி, அல்லது ஆய்வு செய்வது எப்படி என்ற அடிப்படை அறிவாவது தேவை. 

கட்டாயம் இது பல்கலைகழக பட்டமாக இருக்க வேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, karu said:

கட்டுரையை மறுப்பவர்கள் தங்களது ஆய்வு முடிவுகளைக் கூறி நீர்கொழும்பில் தமிழர்கள் வாழவில்லையென்று நிரூபிப்பதே சரியான அறிவியல் அணுகுமுறையாகும்.

இப்படி கேட்பது பற்றி முன்பு பலதடவை இங்கே யாழில் எழுதியாகிவிட்டது. ஆய்வை முன்வைப்பவர்தான் அதை நிறுவ வேண்டும்.

அதை வாசிப்பவர்கள் திருவிளையாடல் தருமி போல நியாயமான கேள்விகளை மட்டும் கேட்டால் போதும்.

The burden of proof is on the researcher not on the reader.

 

  • கருத்துக்கள உறவுகள்

என்.கே.எஸ்.திருச்செல்வம் இந்து சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களம் ஊடாக தென்னிலங்கையின் புராதன இந்துக்கோயில்கள் என்ற நூல் ஒன்றை  வெளியிட்டுள்ளார். அவர் எந்த பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் வரலாற்றுத்துறையில் உள்ளார் என்று தெரியவில்லை!

தினக்குரல் பத்திரிகையில்தான் வரலாற்றை எழுதுகின்றார் போலிருக்கு!🤭

நூல்: https://noolaham.net/project/579/57900/57900.pdf

இந்த முகநூல் பதிவு 2020 இல் தினக்குரலில் வந்துள்ளது👇🏾

நீர்கொழும்பில் போர்த்துக்கேயரால் இடித்தழிக்கப்பட்ட நஞ்சுண்டார் சிவன் கோயில்: https://admin.thinakkural.lk/நீர்கொழும்பில்-போர்த்து/

 

  • கருத்துக்கள உறவுகள்

@தமிழ் சிறி அண்ணா சொல்றன் என்று குறைநினைக்க வேண்டாம் இப்படித்தான் isaac asimov வின் நூல்களை தமிழ்நாட்டில் இருந்து முகநூல் அன்பர் பிளந்துகட்டினார் நானும் விழுந்து விழுந்து பார்த்தால் கடைசியில் அது ஒரு பயித்தியம் .

காந்தியின் மகன் மகள்  காந்தி போல் வரமுடியாது வாத்தியார் பிள்ளை மக்கு அதே போல் வேணுகோபால் என்ற  உயரிய ஆசானின் மகன் என்ற தகுதியை வைத்துக்கொண்டு சகட்டு மேனிக்கு முகநூலில் புளுக கூடாது இப்படியானவர் புத்தகமாக ஆவணப்படுத்தலாமே இரவுகளில் தண்ணியை போட்டுவிட்டு உளறி எழுதும் கூட்டத்தை சேர்ந்தவர் இவர் .

தாய் தந்தை ஊர் பெயர்களை வைத்து அறிமுகம் தேடுவோரை நான் மதிப்பதில்லை இயல்பாகவே அவர்களுக்கென்று திறமையை வளர்த்துக்கொண்டு அவர்களின் பெயரின் பின் சேர்த்துக்கொள்வது அழகு .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கட்டுரை எழுதியவர் கூட எங்கேயும் அவை கோவிலின் எச்சங்கள் என எழுதவில்லை ஆனால் அந்த படங்களை மட்டும் போட்டு, படிப்பவரின் மனதில் ஒரு மயக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார்.

நான் இணைத்த நூலக நூல் இணைப்பில் உசாத்துணை கொடுக்கப்பட்டுள்ளன. 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

என்.கே.எஸ்.திருச்செல்வம் இந்து சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களம் ஊடாக தென்னிலங்கையின் புராதன இந்துக்கோயில்கள் என்ற நூல் ஒன்றை  வெளியிட்டுள்ளார். அவர் எந்த பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் வரலாற்றுத்துறையில் உள்ளார் என்று தெரியவில்லை!

தினக்குரல் பத்திரிகையில்தான் வரலாற்றை எழுதுகின்றார் போலிருக்கு!🤭

நூல்: https://noolaham.net/project/579/57900/57900.pdf

இந்த முகநூல் பதிவு 2020 இல் தினக்குரலில் வந்துள்ளது👇🏾

நீர்கொழும்பில் போர்த்துக்கேயரால் இடித்தழிக்கப்பட்ட நஞ்சுண்டார் சிவன் கோயில்: https://admin.thinakkural.lk/நீர்கொழும்பில்-போர்த்து/

 

ஆகா  பல இடங்களில் மேய்ந்து சொந்த சரக்கு போல் அடித்து விட்டுள்ளார் . அவர் யாழிலும் அங்கத்துவராய் இருந்தவர் என்ன பெயர் என்பது மறந்துவிட்டது 

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, goshan_che said:

முன்னர் இதை பற்றியும் demala pattuva (தமிழர் பற்று) பற்றியும் நானே யாழில் எழுதியுள்ளேன்.

ஐயனே வாசிக்கக் கிடைக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது. ”தமிழில் வளர்த்தெடுக்கப் படவேண்டிய உசாத்துணை முறைமை” என்ற தலைப்பில் மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க ஆண்டு மலரில்  - 2020 ஜுன், எனது கட்டுரையொன்றுள்ளது.  ஹவாட் பல்கலைக்கழக உசாத்துணை முறைமையைப் பின்பற்றி தமிழில் அதில் வழிகாட்டல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  முடிந்தால் அதனைத் தேடியெடுத்து யாழ் களத்தில் பதிவிடுகிறேன், பலருக்கும் அது உதவக்கூடும்.  தக்க உசாத்துணைப் பாரம்பரியம் இல்லாததால்த்தான் பல ஆய்வுக் கட்டுரைகள் கருத்திழந்து போகின்றன்.  இனிவருங்காலங்களில் அறிவியல் தமிழை உலக மட்டத்தில் வளர்த்தெடுக்க உசாத்துணைமுறைமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

என்.கே.எஸ்.திருச்செல்வம் இந்து சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களம் ஊடாக தென்னிலங்கையின் புராதன இந்துக்கோயில்கள் என்ற நூல் ஒன்றை  வெளியிட்டுள்ளார். அவர் எந்த பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் வரலாற்றுத்துறையில் உள்ளார் என்று தெரியவில்லை!

தினக்குரல் பத்திரிகையில்தான் வரலாற்றை எழுதுகின்றார் போலிருக்கு!🤭

நூல்: https://noolaham.net/project/579/57900/57900.pdf

இந்த முகநூல் பதிவு 2020 இல் தினக்குரலில் வந்துள்ளது👇🏾

நீர்கொழும்பில் போர்த்துக்கேயரால் இடித்தழிக்கப்பட்ட நஞ்சுண்டார் சிவன் கோயில்: https://admin.thinakkural.lk/நீர்கொழும்பில்-போர்த்து/

 

இணைப்புக்கு மிக்க நன்றி. இந்த புத்தகம் காத்திரமானதொன்றாகவே தெரிகிறது. பேரா புஸ்பரட்ணம் முன்னுரை கொடுத்துள்ளார். 

முகநூல் பதிவாளர் முக்கியமானதை எல்லாம் வெட்டி போட்டு தனக்கு பிடித்தமானமாரி எழுதியுள்ளார். 

புத்தகத்தை படித்து விட்டு மீதம் பதிகிறேன்.

 

55 minutes ago, நன்னிச் சோழன் said:

ஐயனே வாசிக்கக் கிடைக்குமா?

ஆருக்கோ எழுதின பதிலில் எழுதினேன்…ஆய்வெல்லாம் இல்லை என் அவதானிப்புகள்.

கிருபன் ஜி உதவமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

என்.கே.எஸ்.திருச்செல்வம் இந்து சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களம் ஊடாக தென்னிலங்கையின் புராதன இந்துக்கோயில்கள் என்ற நூல் ஒன்றை  வெளியிட்டுள்ளார். அவர் எந்த பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் வரலாற்றுத்துறையில் உள்ளார் என்று தெரியவில்லை!

 

On 26/5/2022 at 11:37, தமிழ் சிறி said:

நீர்கொழும்பில்,  போர்த்துக்கேயரால்... இடித்தழிக்கப்பட்ட  நஞ்சுண்டார் சிவன் கோயில்!

தமிழ்சிறீ அவர்களுக்கும் கிருபனவர்களுக்கும் இருவரது இணைப்புக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்+
5 minutes ago, goshan_che said:

நன்றி ஐயனே,

இதன் தமிழ்ப் பெயர்கள் எல்லாவற்றையும் எடுத்து ஆவணப்படுத்த வேண்டும்.

காலத்தின் தேவை!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நன்னிச் சோழன் said:

நன்றி ஐயனே,

இதன் தமிழ்ப் பெயர்கள் எல்லாவற்றையும் எடுத்து ஆவணப்படுத்த வேண்டும்.

காலத்தின் தேவை!

கட்டாயம். இப்பவே ஆனை-விழுந்தான், மீன்காமம், வாய்க்கால், கட்டுவன்  என்ற தமிழ் காரணப்பெயர்களை, ஆனைவிழுந்தம, மீகமூவ, வாய்க்கால, கட்டுவ என்ற சிங்கள இடுகுறி பெயர்களாக மாற்றிவிட்டார்கள் ( சிங்களம் தேர்ந்தோர் இவற்றுக்கு காரணப்பெயர் இருப்பதாயின் கூறலாம்) .

பெரிய நாகவில்லும், கரடி போவலும், தில்லையடியும், பாலாவியும், எருக்கலம்பிட்டியும், மருதங்குழியும், முந்தலும் இப்படி பெயர்மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை.

https://en.m.wikipedia.org/wiki/Kingdom_of_Tambapanni
 

இதுதானாம் விஜயன் வந்திறங்கிய தம்பபண்ணி.

இதுவும் தமிழ் காரணப்பெயர் என்கிறார்கள்.

இலங்கையின் வடமேற்கு கரையில் சூரியன் சாயும் வேளையில், கடலும், கரையும், உள்ளக நீர் நிலைகளும் தாமிர நிறத்தில் ஜொலிக்கும்.

ஆகவே - தாமிரபரணி.

  • கருத்துக்கள உறவுகள்+
37 minutes ago, goshan_che said:

கட்டாயம். இப்பவே ஆனை-விழுந்தான், மீன்காமம், வாய்க்கால், கட்டுவன்  என்ற தமிழ் காரணப்பெயர்களை, ஆனைவிழுந்தம, மீகமூவ, வாய்க்கால, கட்டுவ என்ற சிங்கள இடுகுறி பெயர்களாக மாற்றிவிட்டார்கள் ( சிங்களம் தேர்ந்தோர் இவற்றுக்கு காரணப்பெயர் இருப்பதாயின் கூறலாம்) .

பெரிய நாகவில்லும், கரடி போவலும், தில்லையடியும், பாலாவியும், எருக்கலம்பிட்டியும், மருதங்குழியும், முந்தலும் இப்படி பெயர்மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை.

https://en.m.wikipedia.org/wiki/Kingdom_of_Tambapanni
 

இதுதானாம் விஜயன் வந்திறங்கிய தம்பபண்ணி.

இதுவும் தமிழ் காரணப்பெயர் என்கிறார்கள்.

இலங்கையின் வடமேற்கு கரையில் சூரியன் சாயும் வேளையில், கடலும், கரையும், உள்ளக நீர் நிலைகளும் தாமிர நிறத்தில் ஜொலிக்கும்.

ஆகவே - தாமிரபரணி.

உண்மைதான்.
இவையெல்லாம் வரலாற்று ஆய்வாளர்களால் நோண்டப்பட வேண்டியவை. ஆனால் ஆர் செய்வார்?  

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.