அனீட்டா பிரட்டாப் வெளையிட்ட இனக்கொலை பற்றிய அறிக்கை
டெலிகிராப் பத்திரிக்கை அனீட்டா பிரடாப்பின் இனக்கொலை தொடர்பான செய்தியை முதற்பக்க செய்தியாக வெளியிட்டபோது இந்தியாவிலும், சர்வதேசத்திலும் அது கடுமையான அதிர்ச்சியலையினை ஏற்படுத்தியது. இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை பாராளுமன்றத்தில் விவாதித்ததோடு, இந்தியா இப்பிரச்சினையில் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.இத்தாக்குதல்கள் தமிழர்களின் மீதும், அவர்களின் பொருளாதார தளத்தினை அழிக்கும் நோக்கத்திலும் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட வகையிலும் திட்டமிட்ட ரீதியிலும் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் என்பது சர்வதேசத்திற்குத் தெளிவாகத் தெரிந்தது.
தான் கண்டுகொண்ட காட்சிகள் ஊடாகவும், அழிவுகள் தொடர்பாக தான் வரைந்துகொண்ட விபரங்களைத் தொகுத்தும், தாக்குதலுக்குள்ளான தமிழர்களின் வாக்குமூலங்களைக் கொண்டும் மிகவும் தத்ரூபமாக இனக்கொலையின் நிகழ்வுகளை அனீட்டா பதிவுசெய்திருந்தார்.
"வாக்ககளர் பட்டியலை ஆயுதமாகப் பாவித்து வெற்று லொறிகளில் வந்திறங்கிய காடையர்கள் தமிழர்களின் வீடுகளிலிருந்த பொருட்களை அந்த லொறிகளில் நிரப்பிக்கொண்டு சென்றனர். அவற்றுள், தொலைக்காட்சிப் பெட்டிகள், வானொலிகள், குளிர்சாதனப்பெட்டிகள், இசைக்கருவிகள், நகைகள், கடிகாரங்கள், உடைகள் உட்பட பல பொருட்கள் காணப்பட்டன. தமிழர்கள் எங்கெங்கெல்லாம் வாழ்கிறார்கள் என்பதை மட்டுமல்லாமல், அவர்களிடம் எவ்வகையான பொருட்கள் இருந்தன என்பது குறித்தும் அவர்களிடம் தகவல்கள் இருந்தன" என்று அவர் எழுதுகிறார்.
பல இந்தியர்களூடாகவும் தனது செய்தியை அனீட்டா நகர்த்தியிருந்தார். "இந்திய உயர்ஸ்த்தானிகரான மோகன் சந்திரனின் மனவியான ஓமனாவும் அவர்களுள் ஒருவர். 1983 ஆம் ஆண்டு ஆடி 26 ஆம் திகதி தனது வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் வீழ்ந்து நொறுங்கும் சத்தம் அவருக்குக் கேட்டது. நடப்பதை அறிந்துகொள்ள அவர் வீட்டின் முற்பகுதிக்குச் சென்றபோது பலர் வீட்டின் மூன்னால் குழுமி நின்று வீட்டின்மீது கற்களை எறிவது தெரிந்தது. அவர் பார்த்துக்கொண்டிருக்க கைகளில் இரும்புக் கம்பிகள், கோடரிகள், வாட்கள், பொல்லுகளுடன் அவர்கள் வீட்டினுள்ளே நுழைந்தார்கள். வீட்டை விட்டு வெளியேறுமாறு அவரை நோக்கிக் கூச்சலிட்ட அந்தக் கும்பல் தாம் கொண்டுவந்த ஆயுதங்களால் வீட்டிலிருந்த தளபாடங்களை அடித்தி நொறுக்க ஆரம்பித்தது. ஒரு கையில் தனது ஐந்துமாதக் குழந்தையினையும், மறுகையில் அழுதுகொண்டிருக்கும் தனது ஐந்து வயது மகளையும் இழுத்துக்கொண்டு ஓமனா அருகிலிருக்கும் வீட்டிற்குள் அடைக்கலம் தேடி ஒளிந்துகொண்டார். அவர்களும் சிங்களவர்கள்தான், ஆனாலும் அவர் உள்ளேவர அவர்கள் ஒத்துக்கொண்டார்கள்" என்று அனீட்டா எழுதுகிறார்.
மோகன் சந்திரன் தம்பதிகளின் உடமைகள் அனைத்தும் சூறையாடப்பட்டன. "எங்களிடம் தற்போது எதுவுமே இல்லை, பிச்சைக்காரர்களாகிவிட்டோம்" என்று ஓமனா அனீட்டாவிடம் கூறியிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட இன்னொரு இந்தியரூடாக மேலும் பல அவலங்களை அவர் வெளிக்கொணர்ந்தார். திரிலோக் சிங் தம்பதிகள் தொடர்மாடிக் கட்டடம் ஒன்றின் முதலாவது மாடியில் வசித்து வந்தார்கள். அவர்களது வீட்டிற்குக் கீழே வசித்த 60 வயதுடைய தமிழ்ப்பெண் ஒருவரின் வீட்டினை உடைத்துக்கொண்டு ஒரு கும்பல் உள்நுழைவதை அவர் கண்டார். அக்கும்பலால் அவர் கூட்டாகப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதோடு அவரது உடமைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. அருகிலிருந்த தமிழரின் வீடொன்றிற்குள் சென்ற அக்கும்பல் அங்கிருந்த ஆண் ஒருவரின் கையை வாட்களால் வெட்டி வீழ்த்தியது. திரிலோக் தம்பதிகள் வீதிக்கு இறங்கி ஓடத் தொடங்கும்போது ஒரு தமிழ்க் குடும்பமும் அவர்களுடன் சேர்ந்து ஓடிக்கொண்டிருந்தது. தமது ஏழு வயது மகனை திரிலோக்கின் கைகளில் எறிந்துவிட்டு அத்தமிழ்த் தம்பதி தொடர்ந்து ஓடத் தொடங்கியது. இந்தியர்களின் மகனென்று அச்சிறுவனை சிங்களவர்கள் உயிருடன் விட்டுவிடலாம் என்று அவர்கள் நம்பியிருக்கலாம். அச்சிறுவனின் தமிழ்ப் பெற்றோர்கள் அன்று கொல்லப்பட திரிலோக் தம்பதிகளே அவனைப் பராமரிக்கத் தொடங்கினார்கள்.
தமிழர்கள் அகதிகளாகத் தஞ்சம் அடைந்திருந்த முகாம் ஒன்றிற்கு அனீட்டா சென்றவேளை அங்கு அவர் கண்ட காட்சி அவரை மனம் நெகிழச் செய்திருந்தது. "நான் பல பெற்றோர்களை அங்கே கண்டேன். பணம் படைத்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினர்கள், ஏழைகள் என்று அனைவருமே ஒன்றாகக் குழுமியிருந்தார்கள். படுகொலைகள் தலைவிரித்தாடியபோது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடியவேளை தாம் தவறவிட்ட தமது குழந்தைகளை எண்ணி அவர்கள் அழுதுகொண்டிருந்தார்கள். அவ்வாறே இன்னுமொரு முகாமில் பெற்றோர்களைப் பலிகொடுத்துவிட்டு அழுது கொண்டிருக்கும் குழந்தைகளையும் நான் கண்டேன்" என்று அவர் எழுதுகிறார்.
அகதி முகாம்களில் காணப்பட்ட மிகவும் அசெளகரியமான சூழ்நிலை பற்றிக் குறிப்பிடும்பொழுது, "அங்கிருந்த நிலைமைகள் மிகவும் கவலைக்கிடமாக இருந்தன. ஐந்து நாட்களாக உணவின்றி அம்மக்கள் அவஸ்த்தைப்பட்டார்கள். ஆறாவது நாள் வெறும் 30 உணவுப் பொட்டலங்களை யாரோ கொண்டுவந்து கொடுத்தார்கள், ஆனால் முகாமிலிருந்தவர்களோ ஏறக்குறைய 1,000 பேர். முகாமின் சுகாதார நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருந்தது. அங்கு நீர் வசதிகள் இருக்கவில்லை, ஆகவே மலசல கூடங்கள் பூட்டப்பட்டிருந்தன. அம்முகாமின் இன்னொரு மூலைக்குச் சென்று மலங்கழிக்கவும், சிறுநீர் கழிக்கவும் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். ஒரு சில நாட்களிலேயே அம்முகாம் எங்கும் கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. அன்றிருந்த வெப்பமான காலநிலை முகாமினை கிருமிகள் உற்பத்திசெய்யும் நிலையமாக மாற்றிவிட்டிருந்தது. அம்முகாமெங்கும் இருந்த மலக்கழிவுகளில் உயிர்வாழ்ந்த சாதாரண வீட்டு இலையான்கள் பருத்துப் போய் பல்வேறு நிறங்களில் வலம்வந்துகொண்டிருந்தன. நோய்கள் பரவத் தொடங்க, பல அகதிகள் வாந்திபேதியினாலும், வயிற்றுப்போக்கினாலும் அவஸ்த்தைப்பட்டுக்கொண்டிருந்தனர். ஏற்கனவே பரவிவந்த துர்நாற்றத்துடன் இவையும் கலந்துகொள்ள அப்பகுதி வசிப்பதற்கே மிகவும் கடிணமான இடமாக மாறிவிட்டிருந்தது. காய்ச்சலால் இரத்தச் சிவப்பாகிவிட்ட கண்கள், தண்ணீரின்மையினால் வெடித்துப்போயிருந்த உதடுகள், வயிற்றோட்டத்தால் எரிந்துகொண்டிருந்த பின்புறங்கள் என்று அம்மக்கள் நரக வாழ்வினை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்".
அனீட்டா பிரட்டாப்.
அகதிகளாக்கப்பட்ட தமிழர்களின் அவலங்களைத் தனது அறிக்கையில் சேர்த்ததன் மூலம் அவ்வறிக்கையினை சோகம் நிறைந்ததாக மாற்றியிருந்தார். அவ்வகையான மூன்று அகதிகளின் கதைகள் பகிரப்பட்டிருந்தவற்றில் முக்கியமானவையாகத் தெரிந்தன.
சச்சிதானந்தன் எனும் வயோதிபர் வாழ்ந்துவந்த தொடர்மாடி வீட்டினுள் நுழைந்த சிங்களவர்கள் அங்கிருந்த பொருட்களைக் கொள்ளையிட்ட பின்னர் வீட்டிற்குத் தீமூட்டினர். தாக்குதலில் ஈடுபட்ட ஒரு சிங்களவன் அவ்வயோதிபரைப் பிடித்து இழுத்துவந்து கைகளைப் பின்னால்க் கட்டினான். இன்னும் மூன்று சிங்களவர்கள அவரது மகனையும் இழுத்துவந்து பின்னால் கைகளைக் கட்டி இருத்தினார்கள். தமது வீட்டின் விறாந்தையில் அவர்கள் இருத்தி வைக்கப்பட்டார்கள். பின்னர் கீழே எரிந்து கொண்டிருந்த மொறிஸ் மைனர் காரின் மீது மகனை உயிருடன் தூக்கி வீசியது அச்சிங்களக் கூட்டம். மகன் எரிந்து கருகுமட்டும் தகப்பனாரை அதனைப் பார்க்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தினார்கள் மீதிச் சிங்களவர்கள்.
இன்னொரு தமிழரான சிவானந்தன் நான்கு மாடிகளைக் கொண்ட குடியிருப்பில் இருந்து கீழே பாய்ந்து உயிர் தப்ப முனைந்தார். கீழே வீழ்ந்தபோது அவரது கால்கள் இரண்டும் நொறுங்கிப்போக, நடமாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். அவரை கொழும்பு பிரதான வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்றபோது இன்னும் பல தமிழர்களை வைத்தியசாலையில் பணிபுரிந்த சிங்களவர்கள் அவமதித்துத் திருப்பியனுப்பியது போன்று அவரையும் திருப்பியனுப்பினார்கள்.
மேர்சி மொறாயஸ் 29 வயது நிரம்பிய சட்டக்கல்லூரி மாணவி. அகதி முகாம்களின் ஒன்றின் நிர்வாகத்தை அவரே கவனித்து வந்தார். நீண்டநேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவரது கணவரான மொறாயஸ் குறித்து அனீட்டா வினவினார். இதைக் கேட்டதும் மேர்சி அழத் தொடங்கினார், "எனக்குத் தெரியாது, அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்" என்று அவர் தேம்பியபடியே கூறினார்.
அனீட்டாவின் அறிக்கையினை படித்த ஒவ்வொரு தமிழரும் அவருக்கென்று ஒரு இடத்தை அவர்களின் மனங்களில் அமைத்தார்கள். அதற்கு நன்றிக்கடனாகவே தனது முதலாவது நேர்காணலுக்கான அனுமதியினை பிரபாகரன் அனீட்டாவிற்கு வழங்கினார்.