"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற வாழ்வை இன்னும் காணோம்!" [இரா. சம்பந்தனுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் இந்த நேரத்தில் ஆவது, ஒற்றுமையாக, ஒரே குரலில் தமிழுக்காக, தமிழ் பேசும் மக்களுக்காக ஒன்றாக இணைவோம் , உறுதியாக இருப்போம் என்று சபதம் எடுப்பார்களா ?? அப்படி எடுத்தால் அதுவே உண்மையான அஞ்சலி !!!]
தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் மிக நீண்ட காலமாக செயற்பட்டு வந்த இரா சம்பந்தன், தந்தை செல்வா முதல் இன்றைய தலைமுறையினர் வரை அனைத்துக் காலங்களிலும் கை கோர்த்துப் பயணித்த ஒரு தலைவராக திகழ்ந்தவர், இன்று [30 ஜூன் 2024] ஞாயிறு இரவு 11 மணியளவில் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமாகியிருக்கின்றார். என்றாலும் அன்று தொடக்கம் இன்று வரை, தமிழர் பிரிந்து பிரிந்து போவதைத் தவிர, ஒன்று படுவதைக் காணவேயில்லை. ஆனால் ஒரு தற்காலிகமாக அவரின் மறைவில் எல்லா தமிழ் தலைவர்களும் ஒரே கருத்தில் அவரின் புகழ் பாடுவதையும் அஞ்சலி செலுத்துவதையும் காண்கிறோம் . அது ஏன் நிரந்தரமாகக் தொடரக் கூடாது?
அப்படியான ஒரு ஒற்றுமை, ஒன்றுகூடல், தமிழர் சரித்திரத்தில் ஒரு முறை கண்டோம். அது 300BC அளவில். அதன் பின்பு இன்று வரை நிரந்தரமாக
நாம் ஒன்றுபடவில்லை. இனி இதை எங்கு காண்போம்?
வட இந்தியாவை ஆண்ட நந்த வம்சம் [Nandhas] தென் இந்தியாவை ஆண்ட மூன்று பேரரசுகளுடனும் சகோதரரைப் போன்ற ஒரு தொடர்பை ஏற்படுத்தி இருந்தனர். என்றாலும் அவர்களை தொடர்ந்து வந்த மௌரியப் பேரரசு [Mauryas] (322–185 கிமு) தென் இந்தியா மேல் படையெடுத்தது. சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயம் வரை படை நடத்திச் சென்றவன். வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன் . அது மௌரியர்களை சேர நாட்டின் மேல் பலி வாங்கும் தாக்குதலுக்கு தூண்டியது. என்றாலும் மௌரியப் பேரரசால் சோழ எல்லைக்குள் நுழைய முடியவில்லை. இந்த படை எடுப்பு மூவேந்தர்களுக்கும் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியது. இதனால் 313 B.C, யில் இவ் மூவேந்தர்களும் ஒரு ஒற்றுமைக்கான உடன்படிக்கை ஒன்றில் ஒப்பம் இட்டார்கள் என Dr.மதிவாணன் [author Dr.Mathivanan] கூறுகிறார்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கருங்கை ஒள் வாட் பெரும் பெயர் வழுதி , 70 ஆவது பாண்டியனாகிய தேவ பாண்டியன் ஆகிய மூவரும் கையொப்பம் இட்ட அந்த ஒற்றுமை ஒப்பந்தம் ஆக 113 வருடமே நிலைத்து இருந்தது . அது, அந்த ஒற்றுமை , வட இந்தியர்களின் தாக்குதல்களில் இருந்து தமிழகத்தை அசைக்க முடியாத குன்றாய் நின்று காப்பற்றியது. சங்க பெண் புலவர் முடத்தாமக் கண்ணியார் தாம் இயற்றிய பொருநராற்றுப் படை [53-55] யில் மூவேந்தர்களும் ஒரே மேடை யில் இருக்க கண்டதாக பதிந்து உள்ளார் .
“பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள்,
முரசு முழங்கு தானை மூவருங்கூடி,
அரசவை இருந்த தோற்றம் போலப்”
பெருமையுடைய செல்வத்தையும், பெரிய பெயரையும், வலிய முயற்சியையும், வெற்றி முரசு முழங்கும் படையையும் உடைய மூவேந்தர்கள் ஒன்றாகக் கூடி அரச அவையில் இருக்கும் தோற்றம் போல என்கிறது. அதாவது, போரொழுக்கத்தில் வெற்றிகளைச் சாதித்த மூவேந்தர்களை அப்பாடல்களில் சந்திக்கின்றோம்.
மேலும் இரண்டாம் பத்தை பாடிய குமட்டூர்க் கண்ணனார் என்பவரும் தாணும் இதை கண்டதாகக் பதிந்து உள்ளார். பின் ஔவையாரும் இதை கண்டுள்ளார். ஆனால் அந்த ஒற்றுமை அதன் பிறகு இன்று வரை ஏற்படவே இல்லை.
இப்ப நாம் காரிக் கண்ணனார் என்ற இன்னும் ஒரு சங்க புலவர் கண்ட காட்சியை பார்ப்போமா ?
ஒருசமயம், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கே இருந்தனர். அதைக் கண்ட புலவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பெருமகிழ்ச்சி அடைந்தார். சோழனும் பாண்டியனும் ஒருங்கே இருந்ததைப் பலராமனும் திருமாலும் ஒருங்கே இருப்பதற்கு ஒப்பிட்டு, “அவர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்தால் இவ்வுலகம் அவர்கள் கையகப்படுவது உறுதி" என்று இப்பாடலில் கூறுகிறார்.
"நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே,
முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்
......................................................
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும்
உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப்
பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே;
..........................................................
நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே."
[புறநானூறு 58]
நீ குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்; இவன் முன்னோர் புகழைக் காப்பாற்றும் பஞ்சவர் ஏறு.
இன்னும் கேள். ’நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிடுவீர். இருவரும் இப்படி இணைந்திருந்தால் இந்த உலகம் முழுவதும் உங்கள் கையில் இருக்கும்.
பிறருடைய நாடுகளிலுள்ள குன்றுகளில், வளைந்த கோடுகளையுடைய புலிச் சின்னமும், பெரிய நீரில் வாழும் கயல்மீன் சின்னமும் பொறிக்கப்படுவதாகுக என்கிறது!
இதை நாம் இன்னும் உணர்ந்தோமா ? தமிழர் கூட்டணி சூரியன் போல் கதிர்களை வீசாமல், ஒவ்வொரு கதிராக , எதோ ஒரு கதிரைக்கு உடைந்து போனது மட்டும் அல்ல, அப்படி உடைந்ததில் ஒன்றான தமிழ் அரசு என்ற வீடு கூட இரண்டாக உடைந்திடுமோ என்ற நிலைக்குப் போகிறது.
எனவே, இரா. சம்பந்தனுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் இந்த நேரத்தில் ஆவது, ஒற்றுமையாக, ஒரே குரலில் தமிழுக்காக, தமிழ் பேசும் மக்களுக்காக ஒன்றாக இணைவோம் , உறுதியாக இருப்போம் என்று சபதம் எடுப்பார்களா ?? அப்படி எடுத்தால் அதுவே உண்மையான அஞ்சலி !!!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]