தமிழ்நாடு ஆளுநர் ரவி இங்கு வந்த நாள் முதல் சநாதனம், ரிஷி அல்லது முனிவர்களால் கட்டமைக்கப்பட்ட பாரம்பரியம், நீட் தேர்வின் சிறப்பு, புதிய கல்விக் கொள்கை என்று தமிழ்ச் சமூகத்திற்கு எதிரான கேவலமான விஷயங்களையே பேசித் திரிகிறார். ஒன்றிய அரசின், இன்னும் சொல்லப் போனால் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனியத்தின், தூதுவராக முழுநேரப் பணி செய்கிறார் என்பதைத் தமிழ்நாட்டில் அறம் அறிந்தோர் அறிவர்.
சமீபத்தில் இந்தியத் தொலைக்காட்சித் துறையில் (தூர்தர்ஷன்) கடைப்பிடிக்கப்பட்ட 'இந்தி மாத' (!!!) நிறைவு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய ஒருவர் "தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல்திருநாடும்" எனும் வரியினை விலக்கிப் பாடினார். தமிழ்ச் சமூகத்தில் அது பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியதும், பாடியவரின் கவனச் சிதறலால் நிகழ்ந்தது என்றும், அதனால் ஆளுநருக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு மன்னிப்புக் கோரி தூர்தர்ஷன் துரிதமாக அறிக்கை வெளியிட்டது. அதாவது, ஆளுநர் அலுவலகம் சொன்னதன்படியோ அல்லது ஆளுநரை மகிழ்விக்கத் தானாகவோ தூர்தர்ஷன் இவ்வாறு பாடவில்லையாம். இதை நம்புவதற்கு தமிழ்ச் சமூகம் எடுப்பார் கைப்பிள்ளையா, என்ன ! தூர்தர்ஷன் மன்னிப்புக் கேட்க வேண்டியது தமிழ் மக்களிடம்; ஆர்.எஸ்.எஸ்.ரவியிடம் அல்ல (ஆர்.என்.ரவி என்பது ஆர்.எஸ்.எஸ்.ரவியானது நமது கவனச் சிதறல். ஆளுநரும் தூர்தர்ஷனும் நம்பித்தான் ஆக வேண்டும்). மன்னிப்புக் கேட்கும் முகமாக மனோன்மணியம் சுந்தரனார் பாடிய அந்த முழுப் பாடலையும் ஒளி பரப்புவதே சிறந்த பரிகாரமாக அமையும். அதில், "உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதைந்த ஆரியம் (சமஸ்கிருதம்)" என்று சுந்தரனார் அடிக்கும் ஆணியில் ஆளுநரும் சங்கிகளும் கதறுவது தமிழர்தம் காதுகளில் தேனிசையாய்ப் பாயும்.
இனி அந்த முழுப் பாடலும் பொருளும் இதற்கு முன் கேளாதோர் வாசித்து இன்புறத் தரப்பட்டுள்ளன (தமிழக அரசின் அறிவிக்கப்பட்ட வாழ்த்திற்காக மூலப் பாடலில் நீக்கப்பட்ட பகுதி தடித்த எழுத்துகளில்) :
பாடல் :
"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!"
பொருள் : நீர் நிறை கடலினை உடுத்தியவள் நிலமாகிய மடந்தை; அவளது எழில் மிகுந்த சிறப்பு வாய்ந்த முகமாகத் திகழ்வது பாரத துணைக் கண்டம்; அந்த எழில் முகத்திற்குத் தகுதியான சிறிய பிறை போன்ற நெற்றியே தென்னாடு (தெக்கணம் - தென்னிந்தியா); அந்நெற்றியில் வாசனைப் பொருட் கலவையினால் இட்ட திலகமே (பொட்டு) தென்னாட்டில் சிறந்த திராவிடத் திருநாடு (இன்றைய தமிழகம்); அத்திலகத்தின் வாசனை எங்கும் பரவி இன்பம் பயப்பது போல், எல்லாத் திசைகளிலும் புகழ் மணம் பரவி நிற்கும் தமிழ்ப் பெண்ணே ! பல்வகை உயிர்களையும் பல உலகங்களையும் படைத்து அழித்தாலும் ஒரு எல்லையில்லாத பரம்பொருள் முன் இருந்தபடியே இருக்கவல்லது; அப்பரம்பொருளைப் போலவே கன்னடம், இன்பத் தெலுங்கு, இனிய மலையாளம், துளு ஆகிய மொழிகள் தமிழணங்காகிய உன் வயிற்றில் உதித்துப் பலவாக ஆனாலும், ஆரியம் (சமஸ்கிருதம்) வழக்கொழிந்து போனதைப் போல் அல்லாமல் என்றும் சிதையாத உன் சீரும் சிறப்பும் வாய்ந்த இளமைத் திறத்தை வியந்து, அவ்வியப்பில் வேறு செயலற்று உன்னை வாழ்த்தி அமைகிறோம்.
பின்குறிப்பு : நிலத்தை மடந்தையாகவும், பாரத நாட்டை அவளது எழில் முகமாகவும், தென்னாட்டை அவளது நெற்றியாகவும், தமிழகத்தை அந்நெற்றியின் திலகமாகவும், திலக வாசனையைத் தமிழ் மணமாகவும் உருவகித்தது உருவக அணி. பாடலில் பரம்பொருள் என்று பேரா. சுந்தரம்பிள்ளை சொல்வது உலகளாவிய சிவனையே குறிக்கும் என்பர் (சுவாமி விவேகானந்தர் 1892ல் திருவனந்தபுரம் வந்திருந்தபோது, அவரது உரையின் பின் நடந்த ஆரோக்கியமான விவாதத்தில் பேரா.சுந்தரம் பிள்ளை,"I am not a Hindu, I am a Saivite" என்று வாதிட்ட குறிப்பு உண்டு). எனவே குறிப்பிட்ட மதம் சார்ந்த வரி எனும் விவாதங்களைத் தவிர்க்கவும், ஏனைய மொழிகளைப் பற்றிய குறிப்புகளைத் தவிர்க்கவும் அப்பகுதி அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தில் நீக்கப்பட்டது அன்றைய தமிழக அரசின் மாண்பு.
இக்கட்டுரைக்கான எனது முகநூற் பதிவு கீழ்வரும் இணைப்பில் :
https://www.facebook.com/share/p/MiYLxthH6xdEt9oP/