"சங்ககால மாவீரர்கள், நடுகல் & அன்னி மிஞிலி"
ஒருவனோடு ஒருவன் போரிடுதலும் ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிடம் ஒருவன் தோற்பதும் புதியது அன்று; அது இவ்வுலகத்து இயற்கை என்கின்றது புறநானூறு. இவ்வாறு போர் என்பது மன்னர்களுக்கிடையில் மிக இயல்பாக நடைபெறும் நிகழ்வாக இருந்தது என்னும் உண்மையை,
"ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை"
என புறநானுறு 70 கூறும். மேலும் சங்ககால வீரர்கள் என்றும் போர் வேட்கை உடையவர்களாய் இருந்தனர் என, "போரெனிற் புகலும் புனைகழல் மறவர்" என்று புறநானுறு 31 உணர்த்துகின்றது.
போரிடுதலே புதல்வன் கடமை என்பதை, வாளைக் கையிலேந்திச் சென்று தடுத்தற்கரிய போரைச் செய்து; பகைவர் களிற்றியானைகளைக் கொன்று வெற்றி யொடு மீளுவது காளையாகிய மகனுக்குக் கடமையாகும் என புறநானுறு 312 பாடற்பகுதிகள் உணர்த்துகின்றன.
"ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" (புறம்.312)
மகன் எங்கு உள்ளான் என்ற தனக்கு தெரியாதது, ஆயினும் புலி கிடந்து சென்ற கல் குகை போல அவனை ஈன்ற வயிறு இதுவே. போர் ஒன்று நடந்தால் எங்கிருந்தாலும் போர்களத்திற்கு வருவான் என்று கூறும் சங்க தாயை புறநானுறு 86 இல் காண்கிறோம்.
"......................ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறே இதுவே
தோன்றுவன் மாதோ போர்களத் தானே" (புறம்.86)
போர்ப் பறை கேட்டுத் தன்னுடைய குலத்தினரும் போர் செய்ய வேண்டும் என்னும் விருப்பம் கொண்டவளாய் தனக்கு ஒருவனே யன்றி வேறு மகன் இல்லாத நிலையில் அவன் மிகவும் சிறியவனாதலால் தலைக்கு எண்ணெய் தடவி வாரியும், வெண்மையான ஆடையை உடுக்கச் செய்தும், கையில் வேலைக் கொடுத்துப் போர்க்களம் நோக்கிச் செல்க என ஏவி,தனக்குத் துணையாய் இருக்க வேண்டிய ஒரே மகனையும் போருக்கனுப்பிய தாயின் மறப்பண்பை,பாடினார் ஒக்கூர் மாசாத்தியார் புறநானுறு 279 இல்:
"ஒரு மகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்கென" (புறம்.279)
அது மட்டும் அல்ல, மறத்தினும் அறம் திறம்பாதவர் தமிழர் என்னும் உண்மையை,
"வேந்துவிடு முனைஞர் வேற்றுபுலக் களவின்
ஆதந்து ஓம்பல் மேவற் றாகும்" (தொல்.1003)
எனவும்,
"ஆவும் ஆணியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வற் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதூஉம் நும்மரண் சேர்மின்" (புறம்.9)
எனவும் வரும் சான்றுகள் உணர்த்துகின்றன.
பூதப்பாண்டியன் என்ற அரசன் ‘பகைவரை நான் வெல்லாவிடில் நான் என் மனைவியைப் பிரிந்த குற்றத்திற்கு ஆட்படுவேனாக என புறநானுறு 71 இல் சூள் உரைத்தான். அதே போல,சோழன் நலங்கிள்ளி
‘பகைவரை நான் வெல்லாவிடின் என் கழுத்திலுள்ள மாலை பொது மகளிர் மார்பில் புரண்ட குற்றத்தை எய்தட்டும் என புறநானுறு 73 இல் கூறுகிறான்.
சங்க காலத்தில் தன்னால் இயன்றவரையில் போர்புரிந்து உயிர்விட்ட வீரனது உடலைப் புதைத்த இடத்தில் அல்லது எரித்த இடத்தில் ஒரு கல்லை நடுவர். அக்கல்லில் அவனது உருவத்தையும், பெயரையும் இன்னபோரில், இவ்வாறு போர்புரிந்து மாண்டான் என்ற விவரத்தையும் பொறிப்பர். வீரர் நினைவாக நட்டகல் என்பதால் 'நடுகல்' எனப்பட்டது.
காதலும் வீரமும் தமிழர் பண்பாட்டின் அடிப்படை. உயிரையும் உடமையையும் காக்கும் வீரமறவர்களைப் போற்றுவது - சமூகம் என்ற சேர்ந்து வாழும் பண்பாட்டின் அடையாளம். இதனை தமிழர் தம் வாழ்வியல் கோட்பாடாகவே இன்றும் கைக்கொள்கின்றனர். உயிர்காத்த, ஊரைக்காத்த வீரனுக்கு அவன் நினைவு போற்ற 'நடுகல்' வைப்பது தமிழ் மரபு ஆகும். இதை தொல்காப்பியம் இப்படி கூறுகிறது:
"காட்சி, கால்கோள் நீர்ப்படை 'நடுகல்'
சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல்"- தொல்காப்பியம்
இனி தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு கூறும் செய்தி ஒன்றை கீழே தருகிறேன்:
"பாசாற்றூர் எருமைத் தொறு எயினாட்
டார்கொள்ள பாசாற்றூர்ப் பூசல்லிட
பூசல் சென்று கோவூர் நாட்டுச்
சிற்றிடையாற்று முதுகொன்றை
மூக்கின் மீமலை அயங்கயக் கரையில்
சென்று முட்டி மலையநூருடைய
செம்பர் மகன்னான காரிப்பெருமான்
உரையில் அம்பு மாள எவ்வி
பத்திரம் உருவி எதிரே
சென்று பட்டான்."
மாற்றான் படை அவன் நாட்டின் மீது பாய்ந்தது. அதை எதிர்த்து நின்றான் அவ்வீர மகன். தன்னிடமிருந்து சரங்களை மாரியாகப் பொழிகிறான். உரையிலிருந்து அம்புகள் தீர்ந்துவிட்டன. எதிரிப்படை அவ்வளவு பெரியது. மலைத்தானா இல்லை. இடுப்பில் இருந்த குறுவாளை கையிலே உருவிக் கொண்டான். வெள்ளம் போன்ற மாற்றான் படை மீது பாய்ந்தான். அந்நிலையில் இறந்து பட்டான் அவ்வீரன் என கல்வெட்டு கூறும் "காரிப்பெருமான்" என்பது அப்பெரும் வீரனின் பெயர்.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்." (குறள் -50),
என்பது மனித தெய்வங்கள் பற்றிய வள்ளுவரின் மதிப்பீடு. மாவீரர்களும் மனிதர்களே. எனினும் அவர்கள் தமது ஆசாபாசங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டுக்காக தமது உடைமை, உயர்வு, உயிர் அனைத்தையும் நல்க முன்வந்தவர்கள்.
புறநானூறு 221ம் பாடல் கோப்பெருஞ்சோழன் என்ற மன்னனுடைய நடுகல்லைக் குறிப்பிடுகிறது. மன்னனின் உயிர் நண்பரான பொத்தியார் நடுகல்லைப் பரவிய செய்தி இப் பாடலிற் கூறப்படுகிறது.
"பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே;
ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே;
அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே;
திறவோர் புகழ்ந்த தின்நண் பினனே;
மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து;
துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்;
அனையன் என்னாது, அத்தக் கோனை,
நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்த்ன்று;
பைதல் ஒக்கல் தழீஇ, அதனை
வைகம் வம்மோ; வாய்மொழிப் புலவீர்!
‘நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்,
கெடுவில் நல்லிசை சூடி,
நடுகல் ஆயினன் புரவலன்’ எனவே".
அகன்ற இடமுள்ள இந்த உலகு துன்பம் அடைய, கேடில்லாத நல்ல புகழ்மாலையைச் சூடி, எம்மைப் பாதுகாத்தவன் நடுகல்லாகிவிட்டான் என்று வருந்தும் நம் சுற்றத்தாரோடு சேர்ந்து அக்கூற்றுவனை வைகுவம்; வாரீர் என்கிறார்.
இதே போல, அதியமான் நெடுமான் அஞ்சிக்கு நடுகல் நாட்டி விழாக் கொண்டாடப்பட்டது. அதில் ஒளவையார் கலந்துகொண்டார். அப்போது அவனது பெருமையை நினைத்து ஒளவையார் வருந்திப் பாடிய பாடல் புறநானூற்றில் 232ம் பாடலாக இடம்பெற்றுள்ளது.
"இல்லா கியரோ, காலை மாலை
அல்லா கியர்யான் வாழும் நாளே!
நடுகல் பீலி சூட்டி நார்அரி
சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ
5 கோடு உயர் பிறங்குமலை கெழீஇய
நாடுடன் கொடுப்பவும் கொள்ளா தோனே."
காலைப்பொழுதும் மாலைப்பொழுதும் இல்லாமல் போகட்டும். என் வாழ்நாட்களும் இல்லாமல் போகட்டும். ஓங்கிய சிகரத்தையுடைய உயர்ந்த மலையுடன் கூடிய நாட்டைப் பகைவர் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாதவன், ஒரு நடுகல்லை நட்டு, அதற்கு மயில் தோகையைச் சூட்டி, ஒரு சிறிய கலத்தில் நாரால் வடிக்கப்பட்ட மதுவைக் கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்வானோ? என்கிறார் ஒளவையார்.
இனி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வீரர்களில் ஒரு பெண் வீரியை மட்டும் இப்போது விரிவாக சங்க பாடல் மூலம் பார்ப்போம். மற்றவர்களை பின் ஒரு நேரம் பார்ப்போம்.
"அன்னி மிஞிலி [Anni minjili]: பழிக்கு பழி வாங்க போர்தொடுத்த தமிழ் வீரச்சி [வீரி]":
"முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி,
பகடு பல பூண்ட உழவு உறு செஞ் செய்,
இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து,
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கு என,
வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து, அருளாது,
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்,
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,
மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன்,
செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர்
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து,
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
நுண் பல துவலை புதல்மிசை நனைக்கும்
வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன்
கொண்டல் மா மலை நாறி,
அம் தீம் கிளவி வந்தமாறே!!"[அகநானூறு 262]
அன்னி மிஞிலி ஒரு முல்லை நிலத்து அழகிய பெண். இவளுடைய தந்தை பழமையான காட்டைத் திருத்தி, அதில் உள்ள கொடிகளை விலக்கி.., மருத நிலத்துக்குப் புதுசாக் குடி பெயர்ந்தார். அந்த நஞ்சை நிலத்தில் பல எருதுகளை ஒன்றாய் பூட்டி உழுவு செய்தார். அப்படி உடல் வலிக்க உழவு வேலை செய்யும் போது, ஒரு நாள் அவருடைய மாடு, பக்கத்து பயறு விளையும் வயலில் புகுந்து, அங்கு உள்ள பயிரை மேய்ந்து விட்டது. நிலத்தின் சொந்தக்காரனோ பணக்காரன். மன்னனுக்கு வேண்டியவன். கோச மன்னனின் அவையில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அன்னி மிஞிலியின் வாய்மை தவறாத தந்தை, தமது மாட்டின் குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதற்க்காக ஒரு குற்ற பணத்தை அறவிட்டிருக்கலாம் . ஆனால் மூதூர் மன்னர் குலத்தில் வந்த கோச மன்னன், அருள் என்னும் இரக்கமே இல்லாமல்… மேய்வதைப் பார்க்காமல் இருந்த பசுக்காரனின் கண்ணை எடுக்குமாறு தீர்ப்பளித்து விட்டான். இதனால் அவன் பெரும் குற்றம் [“நவை”] செய்து விட்டான் . கண்ணைக் குத்தி ஊனமாக்கிவிட்டனர்.
பார்வை போனது தந்தைக்கு! . அந்தச் சிறுமையைக் கண்டு, அவளுக்கு மனசே வெம்பிப் போச்சு. மிஞிலி துடிச்சாள்; அப்பாவின் கண்ணைப் பறித்தவர்களைப் பழிவாங்குவேன்; அதுவரை…* கலத்தும் உண்ணாள் = தட்டுல சாப்பிட மாட்டாள் என்றும் * வால் இதும் உடாள் = தூய ஆடை உடுக்க மாட்டாள் என்றும் சூள் உரைத்தாள்! சினம் மாறாமல் இப்படியான விரதம் மேற்கொண்டிருந்தாள்.
இது வீம்பா? இல்லை! அவ மனசு அத்துப் போச்சு ; அதுதான் சாப்பாடை உறிய முறையில் உண்ண மறுக்கிறா; ஒரு பெண்ணுக்கு அழகே = அழகுபட உடுத்தல் தான்; அதையும் மறுக்கிறா! அதாவது உணவு என்பது “பகை முடிக்கும் வரை” ஒரு உடல் தேவைதான், பசிச்சா சாப்பிடுவா, உயிரோடு இருக்க வேண்டி, அதுவும் பகை முடிக்க வேண்டி.. ஒரு பெண் உடை மீது எவ்வளவு ஆசை வச்சிருப்பாள்? சீவி சிங்காரிச்சு, போட்டு வைச்சு பூ முடிச்சு… , இன்னும் அதிக காரணமிருக்கு தன்னை அழகா காட்டிக்க… ஆனா அழகான ஆடை கூட உடுக்க மாட்டாளாம்.. அந்த அழுக்கு ஆடை அவள் உடம்பில் இருக்கும் வரை, அப்பன் கண் இழந்த வஞ்சம் நெஞ்சை விட்டு நீங்காம உறுத்திகிட்டே இருக்கும்.. இருக்கணும் … அதுக்கு அப்புறம் தான் மற்றது எல்லாம்… அப்பா மேல பெண்பிள்ளைகளுக்கு இருக்கும் பாசம் அவ்வளவு வலிமையானது என்னும் உளவியல் உண்மையை இந்த சபதம் எவ்ளோ சிறப்பா எடுத்து காட்டுகிறது?
சூளை எப்படி நிறைவேற்றுவது? அவளோ எளிய முல்லை நிலப் பெண்; ஒரு மன்னனைப் பழி வாங்கணும் என்றால் சும்மாவா? இன்னொரு மன்னனையே உதவிக்கு அழைத்தாள் . போர்த் தொழிலில் சிறந்தவனாகிய, பொதியமலைப் பகுதியை ஆண்ட குறும்பிய மன்னன் திதியனிடம் தன் தந்தைக்கு நடந்த அநீதியை முறையிட்டாள். அவள் முறையை ஏற்று, திதியன், அவளுக்கு உதவினான். அந்த சிற்றரசர் திதியன் - அவ ஒருத்திக்காக கோசனின் மீது படையெடுத்தான்; மிஞிலியின் தந்தையைக் கொன்றவனும் ஒரு கோசன் தான், திதியனும் ஒரு கோசன் தான்! கோசர்கள் பழைய குறுநில மன்னர்கள்; கொங்கு நாடுகளில் ஆட்சி செலுத்தியவர்கள்; சேரன் /சோழன் போல, இது தான் கோச நாடு என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது; பல கோசர்கள் பரவியும் கிடந்தார்கள்; கண் பறிச்ச கோசன் போரிலே வீழ, அது கண்டு சினம் மாறினாள் மிஞிலி… அவளும் தன் வஞ்சினம் முடித்தாள்.
அப்போ, அவளுக்கு உள்ளுக்குள்ள எவ்வளவோ உவகை பூத்திருக்கும்? அது போல என் மனசு பூக்குது! உடம்பெல்லாம் ஆடுது [மெய்ம் மலிந்து ]!ஏன்னா, பல நாள் தடைகளை மீறி, இன்னிக்கி அவளைப் என்னவள் ஆக்கிக் கொண்டேன். அவன்! அவ்வளவு ஏங்கிக் கிடந்தவன்; மனசே அத்துப் போனவன்; ரொம்ப நாள் காதல் .. கைகூட மாட்டேங்குது. மனக் களத்தில் உள்ள வெம்மை தீர, அவள் உடல் களத்தில் வெம்மை தீர்த்துக் கொண்டான் இன்றே! மிஞிலி தீர்த்துக் கொண்டது போல்… அந்த அருவிச் சாரலிலே, இருவரும் கூடும் இன்பத்திலே, பட்டுத் தெறிச்சிதாம் இன்பத் துளி.
அருமையான பதிவு. காதலன் காதலியோடு புணர்கின்றான், இருவரும் இன்பம் அனுபவிக்கின்றார்கள். எப்படி என்பதற்கு ஒரு புறப்பொருள் கொண்ட உவமை, கிளைக்கதையாக போகிறது. “நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே புசியுமாம்” என்பது போல, பல கருத்துகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன.
அடிப்படையில் இது ஒரு பழிக்குப் பழி வாங்கும் கிளைக்கதை. இதில் 2 மேற்கோள்களை ஆங்கிலத்தில் இருந்து இறக்குமதி செய்தே ஆக வேண்டும் – one by William Shakespeare and another by Lord Byron.
1. “Sweet is revenge – especially to women” (Lord Byron in Don Juan)
2. “If you prick us, do we not bleed? If you tickle us, do we not laugh? If you poison us, do we not die? And if you wrong us, shall we not revenge?” (William Shakespeare in The Merchant of Venice.)
மேற்சொல்லப்பட்ட இரு மேற்கோள்களுக்கும் இந்த அகநானூறு பாடல் பொருந்திப் போகிறது.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]