இஸ்ரேலினை உலக வரைபடத்திலிருந்து முற்றாகத் துடைத்தழித்து விடுவோம் என்பதே ஈரானின் தாரக மந்திரம். இவ் இலக்கினை நோக்கியே ஈரான் தனது இராணுவ, ஆயுத பலத்தினை உருவாக்கி வந்திருக்கிறது. இஸ்ரேலினைத் தொடர்ச்சியாக முற்றுகைக்குள் வைத்திருக்கும் நோக்கத்திலேயே இஸ்ரேலினைச் சூழ்வுள்ள இஸ்லாமிய நாடுகள், மற்றும் தனது முகவர் அமைப்புக்களை உருவாக்கி, வளர்த்து, இராணுவ மயப்படுத்தி வந்திருக்கிறது. பலஸ்த்தீன அமைப்புக்களான ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத், லெபனானின் ஹிஸ்புள்ளா, ஆசாத்தின் சிரிய அரசு, ஈராக்கின் இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள், யெமெனின் ஹூத்தீக்கள் என்று பல முகவர் அமைப்புக்களை இஸ்ரேலின் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்துமாறு ஊக்குவித்து வந்திருக்கிறது. ஆக 1967 ஆம் ஆண்டின் ஆறு நாள் யுத்தம் மற்றும் 1973 ஆம் ஆண்டின் யொம் கிப்புர் யுத்தம் ஆகியவற்றை நடத்தி இஸ்ரேலினை முற்றாக அழித்துவிட சூழவுள்ள இஸ்லாமிய நாடுகள் முயன்று, தோற்றதன் பின்னர், நவீன காலத்தில் ஈரான் தனது முகவர்களைக் கொண்டு இவ்வாக்கிரமிப்பினை நடத்த முயல்கிறது. யூத இனம் இரண்டாம் உலக யுத்தத்தின்போது சுமார் ஆறு மில்லியன் மக்கக்ளை இழந்திருந்தது. கடந்த நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரும் இனக்கொலையாக இது பார்க்கப்படுகிறது. இன்று வெறும் 9 மில்லியன் மக்களை மட்டுமே கொண்டு, 20,000 சதுரக் கிலோமீட்டர்கள் பரப்பளவைக் கொண்டிருக்கும் இஸ்ரேல் மீது நடத்தப்படும் எந்தவொரு அணுவாயுதத் தாக்குதலும் நிச்சயமாக இன்னொரு பாரிய இனக்கொலையாகவே முடிய வாய்ப்பிருக்கிறது. ஆகவேதான், தமது இனம் இரண்டாவது முறையாகவும் இன்னொரு இனக்கொலையினைச் சந்தித்துவிடக் கூடாதென்பதில் யூதர்கள் மிகக் கவனமாக இருக்கிறார்கள். (கிறீஸ்த்துவிற்குப் பின்னரான காலத்தில் அன்றைய இஸ்ரேலில் இருந்து அகதிகளாக உலகெங்கும் அடித்துவிரட்டப்பட்ட யூதர்களைத் தேடித்தேடி மீளவும் தமது சரித்திர நிலத்திற்குக் கொண்டுவந்துசேர்க்க இஸ்ரேலிய அரசாங்கங்கள் கடந்த 70 வருடங்களாக முயன்று வருகின்றன. இதன் ஒரே நோக்கம் யூதவினம் அழியாது, ஓரினமாக ஓரிடத்தில் வாழவேண்டும் என்பதுதான்). தனது இனத்தை முற்றாக அழித்தும், தனது சின்னஞ்சிறிய நாட்டை முற்றாக ஆக்கிரமிக்கவும் மட்டுமே ஒரு நாடு அணுவாயுதத்தினைத் தயாரிக்கின்றது என்றால், அவ்வணுவாயுதத்தை எப்பாடுபட்டாவது அழித்துவிட பாதிக்கப்பட்ட அவ்வினம் முயல்வதில் தவறு இருக்கின்றதா? ஈரானினால் உருவாக்கப்பட்டு வரும் அணுச்சக்தி எதற்காகப் பயன்படுத்தப்படப் போகின்றது? தனது சக்தித் தேவைக்காக வெறும் 1 வீதத்தினை மட்டுமே அணுச்சக்தியில் இருந்து பெற்றுக்கொண்டுவரும் ஈரானிற்கு மிகப்பெரும் அணுச்சக்தியைக் கொடுக்கப்போகும் பல அணுவாலைகள் எதற்கு? தனது நிலப்பரப்பில் பெருமளவு எண்ணெய்வளத்தையியும், இயற்கை வாயுவையும் கொண்டிருக்கும் ஈரான், அணுச்சக்தியில் மிகுந்த கவனம் செலுத்த விரும்புவது எதற்காக? அணுவாயுதம் ஒன்றினை உருவாக்குவதற்கான மிகத்தூய . செறிவான யுரேனியத்தை உருவாக்கியும் சேமித்து வைப்பது எதற்காக? மருத்துவத் தேவைக்காகவும், சக்தித் தேவைக்காகவும் என்று கூறிக்கொண்டே இத்தேவைகளை நிவர்த்திசெய்யும் அளவினை விட பலமடங்கு சக்திவாய்ந்த யுரேணியம் பாதுகாப்பாக தயாரிக்கப்பட்டு வருவது எதற்காக? தான் உருவாக்கும் அணுச்சக்தி வெறுமனே மருத்துவத் தேவைக்காகவும், மின்சாரத்திற்காகவும் மட்டும்தான் என்றால், இஸ்ரேலினை உலக வரைபடத்திலிருந்து முற்றாகத் துடைத்தழிப்போம் எனும் கொள்கையினை ஈரானின் முல்லாக்கள் இதுவரை கைவிடாது இருப்பதும், அக்கொள்கையினை நோக்கி தமது கவனத்தை தொடர்ச்சியாக வைத்திருப்பதும் எதற்காக? அணுவாயுதத்தை தயாரிக்கும் நோக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, தன்னைச் சுற்றியிருக்கும் நாடுகளுடன் சுமூகமான முறையில் பயணிப்பதற்கு ஈரானிற்கு பல சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. ஒபாமாவின் ஆட்சியில் அணுவாயுத நோக்கத்தினைக் கைவிட்டு ஏனைய துறைகளில் கவனம் செலுத்தவென அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன ஈரானுடன் ஒப்பந்தம் செய்திருந்தன. ஆனால் இவ்வொப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டபோதும், 2006 இல் எதிரிகள் எவரிடமிருந்து வரும் தாக்குதல்களில் இருந்து தனது அணுவாயுதத் திட்டத்தைப் பாதுக்காகவென போர்ட்டொவில், மலைகளுக்கு நடுவில், 300 அடிகள் ஆளத்தில், மிகப்பாதுகாப்பான அணு ஆராய்ச்சி நிலையத்தை நிறுவி, அணுவாயுத உற்பத்திக்கான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் பாதுகாத்து வருகிறது. இந்த அணு ஆராய்ச்சி நிலையம் உட்பட மூன்று அணுவாராய்ச்சி நிலையங்களே இன்று தகர்க்கப்பட்டிருக்கின்றன. என்னைப்பொறுத்தவரையில் சர்வாதிகாரிகளிடமும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமும் இருக்கும் மிகப்பெரும் அழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்கள் மனித குலத்தின் இருப்பிற்கே ஆபத்தானவை. வட கொரியா, ஈரான், பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை இதற்காகக் குறிப்பிடலாம். ஏனெறால், தமது சொந்த நலனிற்காகவும், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், மதவெறியினால் உந்தப்பட்டும் இவர்கள் தம்மிடமிருக்கும் நாசகார ஆயுதத்தினை எப்போது வேண்டுமானாலும் பாவித்துவிடுவார்கள். ஆகவேதான் இவர்களிடம் அணுவாயுதங்கள் உட்பட நாசகார ஆயுதங்கள் சேர்வதை எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்பது அவசியமாகிறது. ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் நடத்திய தாக்குதல்களை நியாயப்படுத்த முடியும். தவறேயில்லை.