போய்ச்சேர்ந்தான் நண்பனும் முன்னாள் வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினருமான அகீபன்!!! அவன் இறந்துவிட்டான் தற்கொலை முயற்சி செய்து வைத்தியசாலையில் அனுமதித்து மீண்டெழ போராடுகையில் இறுதியில் காலன் தான் வென்றான். அவன் தற்கொலைக்கு பின்னால் இன்றைய சமூக ஊடகங்கள் தீயாய் பரவுகின்ற செய்தியாக "பப்ஜீ" கேம் விளையாட்டிற்கு அடிமையாகி பண இழப்பினால் உயிர்மாய்த்தான் என்று. ஆனால் நாம் உண்மையையும் ஆராய்ந்து இவன் தற்கொலைக்கு பின் எம் சமூகத்தில் இப்படி இனியொரு ஆபத்து ஏற்படாமல் இருக்க விழிப்புணர்வூட்டுவதும் அவசியம் அல்லவா! அகீபன் நல்ல பண்பான குணமுள்ள நண்பன். யாருக்கு உதவி என்றாலும் முன்நிற்பவன், "அண்ண அண்ண" என எப்போதும் அரசியல் ரீதியாகவோ நட்புரீதியாகவோ பேசும் போது அவன் அழைக்கும் வார்த்தைகள் ( எப்போதும் என் பேர் சொல்லி அவன் அழைத்ததில்லை), ஓர் சிறந்த கிரிக்கெட் வீரன், இளைஞர்கள் மத்தியில் கிரிக்கெட் போட்டிகளை நிகழ்த்தி அவர்களை வேறுபாதைகளுக்குள் உள்நுழைய விடாமல் பார்த்து கொண்டவன். பெரியவர்களுக்கு மதிப்பளிக்கும் ஓர் பண்பாளன். இலங்கை மின்சார சபையின் ஓர் உத்தியோகத்தன். விளையாட்டு வீரனாக இருப்பவன் அதுவும் மக்கள் பிரதிநிதியாக தலைமைத்துவ பண்பு கொண்டவன் ஏன் இப்படி தற்கொலை செய்யும் எண்ணுமளவு பலவீனமாகி போனான் என்பதை யோசிக்கையில் அவனின் இறப்பு செய்தி கேட்டதும் இரா நித்திரைகள் தொலைத்தேன்! முன்மாதிரியாக திகழ்ந்தவன் ஏன் இப்படி ஓர் முடிவெடுத்தான் என அதிர்ந்தே போனேன். ஆக எம் சமூகத்தின் மத்தியில் பல அடிமைத்தனமான விடயங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றினை பொதுவெளிக்கு கொணர்ந்து சமூகத்தை விழிப்புணர்வடைய செய்ய வேண்டும். நண்பன் அகீபனின் தற்கொலைக்கு " பப்ஜீ" வீடியோ கேமிற்கு அவன் அடிமையானதாகவும் அதற்காக அதிக பணம் கடன்பட்டு இழந்ததாகவும் அதனால் தான் தற்கொலைக்கு முயன்றான் என்பது தான் சமூக ஊடகங்கள் பூராகவும் கொட்டி கிடக்கின்றன. அவன் இறப்பின் பின் பல நண்பர்களோடு கலந்துரையாடியதன் விளைவாக அவன் எதற்கு உண்மையில் அடிமையாகியிருந்தான் என்பது வெளிச்சமாகியது. அவன் கிரிக்கெட் வீரன், கிரிக்கெட்டை ஆழமாக நேசித்தவன், பல உள்ளூர் வெளியூர் மட்ட கிரிக்கெட் சுற்று போட்டிகளை முன்நின்று நடாத்தியவன். அந்த கிரிக்கெட் எனும் போதையே அவனுக்கு எமனாகவும் மாறியிருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆம்! உள்ளூர் மட்டங்களில் தற்போது பிரபலமாக நடைபெறும் கிரிக்கெட் சுற்றுபோட்டிகளில் தானும் ஓர் அணியை தயார் செய்து அந்த அணியை லட்சம் ரூபா செலவு செய்து "ஸ்பான்சர்" எடுத்து விளையாட விடுவதும் அவன் பழக்கமாக இருந்திருக்கிறது. அதாவது அந்த போட்டிகளில் தான் ஸ்பான்சர் பண்ணிய அணி வெல்லும் என்ற நோக்கில் அதை ஸ்பான்சர் பண்ணினால் போட்ட பணத்தை விட அதிகமாக கிடைக்கும் என்ற நோக்கமும், அதைவிட கிரிக்கெட் மீதான மோகமுமே ஆகும். ஸ்பான்சர் என்றால் சாதாரண விடயமல்ல அந்த அணிக்கு ரீசேட் அடிப்பது, பனர் அடிப்பது, சப்பாத்துக்கள், பந்துகள், மட்டைகள் தொடக்கம் உணவு சிற்றுண்டி எல்லாமே பொறுப்பேற்க வேண்டுமானால் அதன் செலவு இலட்சங்களை தாண்டும். போட்டியில் அணி தோற்றால் அந்த பணம் இல்லாமல் போகும். ஆக கடன் படவேண்டி வரும். இப்படி பல கிரிக்கெட் அணிகளினை ஸ்பான்சர் பண்ணியும் பணம் இழந்துருக்கிறான். அதவிட இன்னொன்று கிறிக்கெட் மேலான அதீத ஈடுபாடும் மோகத்தினால் ஒன்லைன் கிறிக்கெட் பந்தயங்களில்(கிறிக்கெட் சூதாட்டம்) பல லட்சங்களில் பணங்களை போட்டு பங்குபற்றியிருக்கிறான். இரு நாடுகளுக்கு இடையில் நடைபெறும் கிறிக்கெட் போட்டிகளில் யார் வெல்வார்கள் தோற்பார்கள் என்ற பல ஒன்லைன் பந்தயங்களில் பணத்தினை லட்சக்கணக்கில் போட்டுவிட்டு அந்த போட்டியை விடாது பார்த்துகொண்டுமிருப்பானாம். அந்த ஒன்லைன் சூதில் வரும் கேள்விகளுக்கு பதிலளித்து பணமும் இட்டியிருக்கிறான் அந்த மோகத்தில் இன்னும் பல இலட்சம் பணங்களினை ஒன்லைன் கிரிக்கெட் சூதில் போட்டிருக்கிறான். அது தான் அவனுக்கு விபரீதமாயிருக்கிறது . ஒரு போட்டியில் வென்றால் அடுத்ததில் பெற்றுவிடலாம் என்பது போல, அதாவது மகாபாரதத்தில் பாண்டவர்கள் சூதில் தோற்றுகொண்டிருக்க எல்லாம் இழந்த பின் இறுதியில் ஒன்றுமே இல்லை என்ற நிலை வந்த பின் தம் மனைவியான திரெளபதையினையே சூது வைக்கும் அளவிற்கு அந்த சூதாட்டம் மிக கொடியது. அப்படி தான் இவனும் அடுத்ததில் பெறலாம் பெறலாம் என கடன் பட்டு கடன் பட்டு கிறிக்கெட் சூதில் முதலிட்டிருக்கிறான். அந்த விளையாட்டு வினையாகி போகவே எப்படி மனைவியை சூது வைத்தும் மானமும் மண்ணும் இழந்து பாண்டவர்கள் நிர்க்கதியானார்களோ! அதுபோல அகீபனும் தன் பணத்தினையும், வீட்டார் பணத்தினயும், அதுபோக பல லட்சங்களில் கடன் பட்டும் ஈடுபட்ட கிறிக்கெட் சூதாட்டத்தில் எல்லாமுமே இழந்தான். அதனால் எல்லாம் இழந்தவனாக தற்கொலைக்கு துணிந்துவிட்டான். இப்போது இறந்தும் விட்டான். ஓர் விளையாட்டு வீரன் உடலளவிலும் மனதளவிலும் எவ்வளவு உறுதியாக இருப்பான். ஆனால் அவனை இந்த ஒன்லைன் சூது விளையாட்டு அடிமையாக்கி அழித்தொழித்து விட்டது. கடந்த மாதமும் யாழ் போதனா வைத்தியசாலையில் ஓர் இளைஞன் ஒன்லைன் கிரிப்ரோ கரன்சியில் பல கோடி முதலிட்டு நட்டமாகி தற்கொலை செய்து ஒரு மாதத்திற்குள் அடுத்த ஒன்லைன் சூது மரணம். அதுவும் ஓர் பிரதேச சபை உறுப்பினராக இருந்த தலைமைத்துவ பண்பு கொண்டவன் தற்கொலை செய்திருக்கிறான் என்றால் இந்த ஒன்லைன் வியாபாரங்கள் எவ்வளவு எம்மை அடிமைப்படுத்தி பணம் பொருள் உயிர் என எல்லாம் பறித்துவிடும் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். எம் சிறுவர் பராய சமூகமும் ,இளைஞர் சமூகமும் விழிப்புணர்வடைய வேண்டும் , விழிப்புணர்படைய செய்ய வேண்டும் என்பது அத்தியாவசிதமான ஒன்று. பெற்றோர்களே! ஒரு போதும் உங்கள் பிள்ளைகளுக்கு வீடியோ கேம் விளையாட அனுமதிக்காதீர்கள்! அவர்களை சின்ன பராயத்தில் இருந்தே கல்விக்கு புறம்பாக கிரிக்கெட்டோ/ உதைபந்தோ/ கரப்பந்தோ/ கூடைப்பந்தோ/ மேசைப்பந்தோ/பூப்பந்தோ/ நீச்சலோ/ கராத்தையோ/ செஸ் போன்ற இணைவிதான விளையாட்டுகளில் ஈடுபட வையுங்கள். அத்தோடு பாடல்/ நடனம்/ சித்திரம்/இசை போன்ற கலைத்துறைகளில் அவர் அவர் திறமைக்கு ஏற்றால் போல சின்ன வயசில் இருந்தே இணைத்து விடுங்கள். (சும்மா ஒரே பாடத்திற்கு ஒன்பது இடத்திற்கு ரீயூசன் ஏத்தி இறக்காமல்) அப்போது தான் அவர்கள் தேவையில்லா வீடியோ கேம்களில் ஆரவம் காட்ட மாட்டார்கள். போதைபொருளுக்கும் அடிமையானவர்களாக மாற மாட்டார்கள். அதைவிட எம் அன்பான இளம் தலைமுறை நண்ப நண்பிகளே! ஒருபோதும் ஒன்லைன் கிரிப்டோ கரன்சிகளில் முதலிட வேண்டாம், ஒன்லைன் சூது விளையாட்டுகளில் பெரும் பணம் போட்டு விளையாட வேண்டாம். பிறகு பணம், சொத்து, மரியாதை, உறவு, உயிர் என எல்லாவற்றையும் இழக்க வேண்டி வரும். அதற்கு தான் யாழில் இடம்பெற போதனா வைத்தியசாலை ஊழியர் கிரிப்டோகரன்சியால் தற்கொலை செய்தமை. தற்போது அகீபன் எனும் ஆளுமை ஒன்லைன் கிரிக்கெட் சூதாட்டம் மூலம் தற்கொலை புரிந்தமை உதாரணங்களாக அமைகின்றன. மேற்சொன்ன இருவரும் வட்டிக்கு கடன்பட்டு கோடிகளில் ஒன்லைனில் போடாமல் அதை நிலமாக/ தங்கமாக வாங்கி வைத்திருந்தால் கூட இப்போது கடன் காரன் கேட்டால் கூட கடனை அடைத்து விட்டு நின்மதியாக இருக்கலாம். கண்ணுக்கு தெரிந்த முதலீடுகளில் முதலிடுங்கள். உங்கள் கண்ணுக்கு புலப்படா ஒன்லைன் வியாபரங்களில் பணம் போடாதீர்கள், அதைவிட கடன் வாங்கி பணம் போடாதீர்கள். யாழ்பாணத்தில் ஒன்லைன் வியாபாரத்தினால் போன கடைசி உயிராக அகீபனின் உயிர் இருக்கட்டும். இன்னொருமுறை கல்விக்கும் புத்திசாலித்தனத்திற்கும் பேர்போன யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு துர்சம்பவம் நிகழாதிருக்க அனைவரும் விழிப்புணர்வோடு செயலாற்றுவோம். ஓம் சாந்தி மதுசுதன் 29.10.2025