Jump to content

மலரும் நினைவுகளில் மறக்காத மனிதர்கள் - அங்கம் - 1,2,3,4,5,6


shanthy

Recommended Posts

மலரும் நினைவுகளில் மறக்காத மனிதர்கள்

அங்கம் - 1

13வருடங்கள் கழித்து பிறந்த ஊரையடைந்திருந்தாள். பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட எல்லைக்குள் யாரையும் அனுமதிக்கமாட்டார்களென்ற உறவினர்களின் சொல்லையும் மீறி தான் பிறந்த வீட்டையும் நடந்த தெருவையும் பார்க்கப் போவதாய் அடம்பிடித்தாள்.

 

அவள் நடந்து திரிந்த நிலத்தைப் பிள்ளைகளுக்கு காட்ட வேணுமென்ற கனவோடு போயிருந்தவளுக்கு உறவினர் சொன்ன காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

 

ஒற்றையடிப்பாதையளவு தான் போகலாம்...கொஞ்சம் அரக்கினாலும் மிதிவெடியள் ஏன் இந்த வில்லங்கத்தை குழந்தையளோடை ? அம்மா புறுபுறுத்தா. அவள் தனது முடிவை மாற்றுவதாக இல்லை. கட்டாயம் பிறந்த வீட்டைப் பார்க்க வேணுமென்றே நின்றாள். கடைசியில் அவள்தான் வென்றாள்.

 

அன்று பிள்ளையாருக்கு அபிசேகம் செய்ய அம்மா ஐயருக்கு காசு கட்டியிருந்தா. காலமையே கோவிலுக்கு போனார்கள். 87இல் எரிந்த தேர் 2003இல் புதிதாய் நிமிர்ந்து நின்றது. அந்தத் தேரை அதேயூரைச் சேர்ந்த ஒருவர் சுவிசில் இருந்து 80லட்சரூபாய் கொடுத்து புதிதாக செய்து கொடுத்ததாகச் சொன்னார்கள்.

 

தேர் முட்டிக்கு வடக்காயிருந்த புளியமரம் தனது கிளைகளையும் தன்னோடு வாழ்ந்தவர்களையும் மறந்து உருக்குலைந்து கிடந்தது. இன்னும் அந்த மர அடியில் பல போராளிகளின் வாழ்வு பதியமிடப்பட்டிருக்கும் அடையாளமாக அந்த மரம் உயிரோடு நின்றது.

LTTE1.jpg

இந்திய இராணுவ காலம் அந்தப் புளியமரத்தடி பல போராளிகளின் பகல்நேர மாலைநேர தங்கிடமாகவும் விளையாட்டு மைதானமாகவும் மாறியிருந்தது. 1989இன் மழை நாளொன்றில் வெற்றியென்ற ஒரு போராளி அந்த மரநிழலில் நனைந்தபடி வந்திறங்கினான். சில வாரங்கள் வெற்றியை அந்த நிழல் காத்து வைத்திருந்தது. பின்னர் சில வீடுகளுக்கு வெற்றியென்ற போராளி வெற்றியண்ணாவாகப் போகத் தொடங்கினான்.

 

அவனுக்கு உறவுகள் யாருமில்லையென்றான். அவனது பூர்வீகம் மலையகமெனச் சொல்லப்பட்டது. கறுத்த இருட்டென்று சொல்ல முடியாத நிறம். கனக்க அலட்டாத ஆனால் தேவைக்கு கதைக்கும் ஒருவனாக அந்த வட்டாரத்தில் பலரை தன்னோடு சேர்த்துக் கொண்டான்.

 

ஒருநாள் விடியற்பறம் வெற்றியண்ணா எங்கோ போய்விட்டானென சொல்லப்பட்டது. போகின்றவர்கள் கடமைகள் முடிய தாங்கள் நேசித்தவர்களைக்காண வருவார்கள் என்றுதான் நம்பியிருந்தார்கள் அந்த வட்டாரத்தில் வெற்றியை நேசித்தவர்கள். போய் சிலநாள் கழிந்த ஒரு பகல் வெற்றி வித்துடலாய் வந்து சேர்ந்தான்.

 

தொட்டிலடியில் ஈபிஆர்எல்எவ் கும்பலுடனான நேரடி மோதலில் அந்தக் கிராமத்தின் நேசத்துக்குரிய வெற்றி வீரச்சாவடைந்து போயிருந்ததாகச் சொன்னார்கள். புளியமரத்துக்கு கிழக்கேயமைந்த வேலியோடு கட்டப்பட்டிருந்த நாகேந்திரம் வீட்டு விறாந்தையில் வைக்கப்பட்ட வாங்கில் வெற்றி வளர்த்தப்பட்டான்.

 

தலைமாட்டில் சாம்பிராணி புகைத்துக் கொண்டிருந்தது. அவனோடு களமாடி அவனைச் சயிக்கிளில் ஏற்றிச் சென்ற தோழர்கள் அவனையிழந்த துயரில் மௌனித்து நின்றனர்.

 

அவசர அவசரமாக அவனுக்காகப் பூக்கள் பறிக்கப்பட்டது. அவனுக்கான மாலையை நித்தியகல்யாணிப்பூவில் கட்டிக் கொடுத்தது இவள்தான். வெற்றியண்ணா என இவளாலும் அழைக்கப்பட்டு அன்பு செலுத்தப்பட்ட அவன் கண்முன் கிடந்தான்.

 

கண்ணீரைத் தவிர வேறெந்த உணர்வையும் வெளிப்படுத்த முடியாத நிலமை. முதல் முதலில் புளியடியில் வந்து உறவான போராளிகளில் முதலாமவனாக வெற்றி வீரச்சாவடைந்து போனது ஏற்றுக் கொள்ள முடியாத துயராகியது. ஆமி வருவதற்கிடையில் அந்த மாவீரனுக்கான அஞ்சலியை முடித்துவிட வேண்டுமென அவன் தோழர்கள் கடமையைச் செய்தார்கள்.

 

அம்மா அப்பா உறவுகள் எவரும் இல்லாது வெற்றியென்ற வேங்கையை நேசித்த அந்த வட்டாரத்தில் உறவானவர்களும் தோழர்களுமே அவனுக்கு இறுதி வணக்கம் செய்தார்கள். உறுதிமொழி சொல்லி அந்த வேங்கையைத் தோழில் தூக்கிச் சென்றார்கள் அவன் தோழர்கள்.

 

சிலவாரம் மட்டுமே வந்து உறவாகி அங்கு வாழ்ந்த நாட்களை மட்டும் நினைவு கொடுத்து அவன் போய்விட்டான். அவன் நடந்த அந்தப் பிள்ளையார் வடக்கு வீதியில் அவனது தடங்கள் அழிக்கப்பட்டது. ஆனால் அவனது கனவுகள் அந்த வீதியில் விதைக்கப்பட்டிருந்தது.

IPKF.jpg

கட்டாயம் போக வேணுமே பிள்ளை ? அம்மா அவளது சிந்தனையைக் கலைத்தா. ஓம் என ஒற்றைச் சொல்லில் பதில் சொன்னவள் பிள்ளைகள் இரண்டு பேரையும் கையில் பிடித்துக் கொண்டு நடந்தாள்.

 

கடுகுநாவல் பற்றைகள் தொட்டாற்சுருங்கி முட்கள் இரு மருங்கும் அங்கங்கே பூவரவு , வாதநாராணி , கிழுவையென மரங்கள் அழுது வடிந்து கொண்டிந்தது. முன்னுக்கு அப்பாவும் சின்னமாமாவும் போக அடுத்துப் பிள்ளைகளோடு அவள் , அவளைத் தொடர்ந்து பின்னால் அம்மா , தங்கைச்சி, அத்தை நடக்கத் தொடங்கினார்கள்.

அன்றொரு காலம் அந்தப் பாதை  பெரிய லொறி போகக்கூடிய பாதை இன்று ஒற்றையடிப்பாதையாகி கொஞ்சம் அரக்கினால் மிதிவெடி எச்சரிக்கையோடு பழைய நிமிர்வை இழந்து குறுகியிருந்தது வீதி. ஓவ்வொரு காலடியும் ஓராயிரம் கதைகளை அவளுக்கு நினைவுபடுத்திக் கொண்டிருந்தது.

 

அந்த வீதியில் தெற்குக்கரையில் இருந்த இலுப்பை மரத்தைத் தேடினாள். அது அரைக்கம்பத்திற்கு இறக்கப்பட்ட கொடிபோல அவள் பார்த்த காலத்து நிமிர்வையும் உயர்வையும் இழந்திருந்தது. இலுப்பையோடும் அதனை அண்டியும் சூழ்ந்திருந்த பனைமரக்கூடல் வெட்டித் தறிக்கப்பட்டு அடையாளங்களையே காணவில்லை.

 

அந்த இலுப்படி நிழல் அவளது வாழ்வோடு மறக்காத பெரும் வரலாறொன்றைச் சுமந்தது ஒருகாலம். அவளுக்கு அன்பையும் ஒரு அண்ணனையும் அந்த மரம் தந்ததும் ஒருகாலம். அந்த மரத்தின் ஆழப்பரவிய வேரில் இருந்து அவள் தனது அண்ணனோடு கதைகள் பேசியிருக்கிறாள். பல கதைகள் கேட்டிருக்கிறாள்.

 

அவனது வீரம் விடுதலைப் போராட்ட வாழ்வென ஒரு சந்ததியின் வாழ்வையும் வரலாற்றையும் அவளுக்கு அறிவித்த ஆசானாக இருந்த அவனுக்கும் அவளுக்குமான கோபம் சண்டை சந்தோசம் என பல கதைகளை அந்த மரத்தடியே அறியும்.

 

அவளுக்குப் பல விடுதலை வீரர்களை அறிமுகம் செய்ததும் இதயத்தில் நீங்கா நினைவுகளை விட்டுச்  சென்றவர்களின் அன்பும் கிடைத்தது 1988இன் இறுதிக்காலமே. ஊர்களை உழுது போகும் இந்திய இராணுவத்தின் கண்ணிலிருந்து தப்பித்து தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்த போராளிகளைக் காத்த ஊர்களில் அவளது ஊரும் ஒன்று.

 

ஒருநாள் இரவு வீடுகளில் அத்துமீறி நுளைந்து பின்னர் நிரந்தரமான அன்பையும் உறவையும் பெற்றுக் கொண்ட பலருள் அவன் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டான். அவனைச் சந்தித்த மறுநாள் அவள் பள்ளிக்கூடம் போகும் போது இலுப்பை மரத்தின் கீழ் அவன் தனித்திருந்தான். இவளைக் கண்ட போது சினேகமாகப் புன்னகைத்தான். பதிலுக்கு இவளும் புன்னகைத்தாள்.

 

இஞ்சை வாங்கோ ? அவன் கூப்பிட்டான். அவனிடம் போனாள். உங்களுக்கென்ன பேர் ? எனத் தொடங்கியவன் தனது பெயரையும் சொல்லி அவளோடு அறிமுகமானான். அவன் சொல்லும் பாதைகளில் ஆமியின் நடமாட்டத்தைப் பார்த்துச் சொல்லும்படி கேட்டான்.

 

அவன் சொன்ன பாதையில் போய் ஆமியின் நடமாட்டத்தை அவதானித்து வந்து சொன்ன போது அவள் அடையாளம் சொன்ன வழியால் அவனது தோழர்கள் அடுத்த ஊரையடைந்தார்கள். அவன் அந்த இலுப்பை மரத்தின் கீழேதான் இருந்தான். அவள் காணும் நெரமெல்லாம் அவன் அதிகம் இலுப்பையின் பெரிய வேரில் இருப்பான். ஏதாவது புத்தகம் ஒன்றை வாசித்தபடி அல்லது காதுக்குள் வோக்மனை வைத்து பாட்டு கேட்டபடி அல்லது வீதியில் போகின்றவர்களை அவதானித்துக் கொண்டிருப்பான்.

 

ஒரே நேரத்தில் தனது காதுக்குள் இசையையும் கண்ணுக்குள் புத்தகத்தையும் கிரகித்துக் கொண்டாலும் அந்த வட்டாரத்தைத் தாண்டிப் போகும் சயிக்கிளிலிருந்து மனிதர்கள் வரையுமான சகல தரவுகளையும் அவன் தனக்குள் சேமித்து வைத்திருந்தான்.

 

ஊரில் உலவும் எல்லோரைப்பற்றிய மதிப்பீடும் தனித்தனியாக ஒவ்வொருவரின் கண்ணையும் கதையையும் எடைபோடும் வல்லமையை அந்தப்புலிவீரன் கற்று வைத்திருந்தான். ஊரில் வாழ்ந்த ஒவ்வொருவரையும் சரியாக கணிப்பிட்டு அவர்களது இயல்புகளை ஒன்று விடாமல் சொல்லக்கூடியவனாக இருந்தது பலருக்கு ஆச்சரியம்; ஆக அவன் ஒரு அதிசயம்.

 

ஒவ்வொரு போராளிக்குள்ளும் ஒளிந்திருந்த இதயத்தினுள்ளும் எரிந்து கொண்டிருந்த தாயகவிடுதலைத் தீ அந்தப் புலவீரனுக்குள் அதிகப்படியாகவே அவனது ஒவ்வொரு அசைவும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

 

தலைமைத்துவப்பண்பும் மற்றவர்களைத் தன் பார்வையால் சில வார்த்தைகளால் வெல்லும் வரமும் சிலருக்கே கிடைத்த பேறு. அந்தப் பேற்றை அந்தப் புலிவீரனும் பெற்றிருந்தான். பின்னாளில் அவனுடனான நெருக்கமான பழக்கம் அவனையொரு முன்னோடியாகவே அவளுக்கு அறிமுகப்படுத்தியது.

 

சில நாட்கள் கழிந்த ஒரு மாலைநேரம் மீண்டும் அவனை இலுப்படியில் கண்டாள். நிச்சயம் அவன் அங்கேயிருப்பான் என நம்பிய அவளது எண்ணம் பொய்யாகவில்லை. அன்று அவன் கூப்பிடாமலேயே அவனிடம் போனாள். வீட்டிலிருந்து எடுத்து வந்த இறைச்சிக்கறியையும் சோற்றையும் நீட்டினாள். அவன் சிரித்தான்.

 

அம்மாவுக்குத் தெரியாமல் எடுத்து வந்தீங்களே ? ஓம்....அவள் கொடுத்த அந்தச் சிறிய பாசலை வாங்கிக் கொண்டான். அது அவளது அன்பு அவனுக்காக வீட்டில் களவெடுத்துக் கொண்டு வந்த உணவு.

 

சாப்பிடுங்கோ....அவள் சொன்னாள். இன்னும் அண்ணாக்கள் இருக்கிறாங்கள் அவங்களோடை சேந்து சாப்பிடுறன் என்ன ? என்றான். எல்லாருக்கும் காணாது இப்ப நீங்க சாப்பிடுங்கோ. நாளைக்கு கூட எடுத்து வாறன். அவளது அன்பை மறுக்க முடியாது அவள் கொண்டு வந்து கொடுத்த உணவைச் சாப்பிட்டான்.

 

அன்றுதான் முதல் முதலாக ஒரு ஆண் அவள் சொன்ன சொல்லைத் தட்டாது ஏற்றுக் கொண்டது முதல் அனுபவம். உரிமையோடும் நம்பிக்கையோடும் அவள் ஏற்றுக் கொண்ட முதல் கதாநாயகன் அவன்தான். இப்போது அவனைத் தினமும் சந்தித்து கதைக்காமல் ஒருநாளையும் தவறவிட்டதில்லை. மாலைநேரம் அவன் இலுப்படி வேரில் அவளோடு பேசுவதற்காகக் காத்திருப்பான். வீட்டிலிருந்து ஏதாவது ஒரு உணவு அல்லது ஏதாவதொரு பாசல் அவனுக்காக கொண்டு போவாள்.

 

நாளை அடுத்த பகுதி 2 தொடரும்....

(பி:கு :- சீரியல் போல இழுபடாது 3 பகுதியோடு முடிந்துவிடும். அட நீயுமா தொடர் எழுதிக் கொண்டு என திட்டாதையுங்கோ உறவுகளே)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு அனுபவப்பகிர்வு, சாந்தி!

 

இடையில் வந்து போன எத்தனையோ சம்பவங்கள், நினைவுக் கோவையிலிருந்து விரைவாக அகன்று விட, இளமைக்காலத்து நினைவுகள் மட்டும் எப்போதும் அழியாமலிருப்பது ஏன் என்பது என்றுமே புரியாத புதிர்!

 

நான் சிறுவனாகப் பாடசாலைக்கு நடந்து செல்லும்போது, வண்டித்தடங்கள் பதிந்த பாதையில், ஒரேயொரு கல்லு மட்டும் துருத்திக் கொண்டிருந்து, எனது பெருவிரலைப் பதம் பார்த்து  விடும்! அண்மையில், எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தபோது, அந்த இடத்துக்கு மினக்கட்டுப் போய், செருப்பைககழற்றி விட்டு, அதே பாதையில் நடந்து பார்த்தேன்!

 

திடீரெனப் பெருவிரலில் வலி!

 

நம்பினால் நம்புங்கள்! அதே 'கல்லு; ! :D

 

தொடருங்கள், சாந்தி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சாந்தி.....ஆனால் 3வது பகுதியில் முடித்து விடுங்கள் :D

Link to comment
Share on other sites

மலரும் நினைவுகளில் மறக்காத மனிதர்கள் -அங்கம் - 2

 

பாகம் 2

அவள் தனது பள்ளிக்கூடம் நட்பு வீடு தனக்குப் பிடித்தது பிடிக்காதது என யாவற்றையும் அவனுக்குச் சொல்லத் தொடங்கினாள். அக்கறையோடு எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருப்பான். அண்ணா என்றவள் அழைக்கும் அவளது உரிமையோடு கூடிய  அன்பும் அக்கறையும் பிடித்தது. அப்பாவித்தனமான அவளது கதைகள் விளக்கமற்ற கேள்விகள் யாவுக்கும் பொறுமையோடு பதில் சொல்வான்.

 

வீட்டில் யாரும் அவளது கதையை இப்படி ஆறுதலாகக் கேட்டதுமில்லை பதில் சொன்னதுமில்லை. அவனே அவளது ஆதாரமென்பது போல ஒன்றும் விடாமல் அவனுக்கு எல்லாவற்றையும் சொல்லுவாள். தாங்கத் தோழில்லையென்ற நினைவு போய் அவளது வெற்றியில் அவன் தோழாய் நிற்கிறான் என்பதனை தனது ஒவ்வொரு அக்கறையிலும் வெளிப்படுத்தியிருந்தான்.

 

அந்த நெருக்கடி மிக்க நாட்களில் அவர்களுக்கு இரவில் தங்குவதற்கு ஒரு இடம் தேவைப்பட்டது. அவளுக்குச் சொன்ன போது ‚'எங்கடை வீட்ட வாங்கோ அண்ணா...'என அழைத்தாள். அப்போதைய சூழலில் வீடுகளில் போராளிகளை வைத்திருக்கப் பயந்து கதவுகள் மூடிக்கொண்ட காலம். அவளது வீட்டிலும் அவர்களை விரும்பியேற்கப் பயந்தார்கள். அவள் அப்போது அம்மம்மாவுடன் வாழ்ந்து கொண்டிருந்தது வாய்ப்பாகியது.

 

அண்ணா அம்மம்மா நித்திரையானப் பிறகு நீங்க சாப்பாட்டறைப் பக்கத்துக் கதவாலை வாங்கோ நான் திறந்து விடுவேன். அவளது யோசனை பொருத்தமாகத்தானிருந்தது. சொல்லி மறுநாள் இரவு தங்குவதற்கு 3போராளிகளும் அவனும் அவளும் அம்மம்மாவும் வாழும் வீட்டுக்கு இரவு போவதாக முடிவெடுத்தார்கள். இரவு அக்கம் பக்கம் விளக்குகளை அணைக்கும் வரை இலுப்படி பனைவடலிகளுக்குள் இருந்துவிட்டு ஊரடங்கியதும் அவளது வீட்டுக்குப் போனார்கள்.

 

ஏற்கனவே சொல்லப்பட்ட சமிக்ஞையை அவன் அறிவித்தான். சாப்பாட்டறை யன்னலை ஏற்கனவே பாதி திறந்து வைத்திருந்தாள். அவனது சமிக்ஞை தெரிந்ததும் மெல்ல கதவைத் திறந்தாள். அவனும் 3போராளிகளும் உள்ளே மிகவும் அமைதியாக வந்து சேர்ந்தார்கள். அந்த வெறும்  நிலத்தில் அவர்கள் படுத்துறங்கினார்கள். விடியப்பறம் 4மணிக்கு முன்வீட்டு அப்பு எழும்ப முதல் இவர்கள் வந்த வழியே எழுந்து சத்தமின்றிப் போய்விடுவார்கள்.

 

ஒருவருக்கு அளவான சாப்பாட்டை தினமும் வீட்டில் களவெடுத்து அவர்களுக்காக ஒளித்து வைக்கத் தொடங்கினாள். சிலவேளைகள் உணவு கிடைக்காமல் களைத்து வரும் நேரங்களில் அந்த உணவே உயிரைத் தந்ததாக அவன் பலமுறை சொல்லியிருக்கிறான்.

 

தோய்த்து மினுக்கி ஆடைகள் அணியக்கூடிய வசதியில்லாத அந்தக் கடினமான நாட்களில் அவள் அவர்களது ஆடைகளைத் தோய்த்து காய வைத்து சிரட்டைக்கரி மினுக்கியால் மினுக்கிக் கொடுத்த சேட்டை அணிகிற போது வீட்டில் வாழ்ந்த காலத்தையே நினைத்துக் கொள்வான். அந்த ஞாபகங்களை அவளோடு பகிர்ந்து கொள்வான். அந்த வருடத்துத் தீபாவழிக்கு அவளுக்கு வீட்டில் புதுச்சட்டை தைத்துக் கொடுத்தா அம்மா. அதனை அம்முறை அவள் அணியவில்லை. கோவிலில் போடப்பட்ட மாவிளக்குகளையும் பலகாரங்களையும் அவனுக்கும் அவனது தோழர்களுக்கும் கொண்டு போய் கொடுத்தாள்.

 

பிள்ளைக்கு புதுச்சட்டை வாங்கேல்லயா ? கேட்டவனுக்குச் சொன்னாள். நீங்கெல்லாம் புதுசேட் போடேல்ல அதாலை நானும் போடேல்ல. அன்று அங்கிருந்த 5பேரும் அவளது அந்த வார்த்தையில் சற்று நேரம் மௌனித்துப் போனார்கள்.

 

ஏனம்மாச்சி நீங்க சின்னப்பிள்ளைதானே புது உடுப்பு போட வேணும். நாங்க பெரியாக்கள் தானே அடுத்த வருசமும் போடுவம். என்றான் அவர்களில் ஒருவன். அம்மாச்சியென்ற வார்த்தை அவளுக்கு அன்று புதிதாக இருந்தது. அம்மாச்சியென்று அழைக்கும் வளமை அவளது ஊரில் ஒருநாளும் இருந்ததில்லை. வன்னியாரிடம் அந்த வளக்கம் இருந்ததையும் அந்த அண்ணா மூலமே அறிந்து கொண்டாள்.

 

கிட்டத்தட்ட 2மாதங்கள் அவனும் அவனது தோழர்கள் சிலரும் இரவு நித்திரை கொள்ள அவள் உதவியது தனது பெரிய சாதனைகளில் ஒன்றாகவே அவள் நினைத்து பெருமிதப்படுவதுண்டு. எல்லாம் அவன் தந்த துணிச்சலாகவே எண்ணினாள். தொடர்ந்து ஓரிடத்தில் தங்குவதில் உள்ள பாதுகாப்பு காரணங்களை உணர்ந்து பின்னர் இரவுகளில் வௌ;வேறு இடங்களைத் தெரிவு செய்து அவனும் அவனது தோழர்களும் அலைந்தார்கள்.

எங்கு போனாலும் எவ்வளவு அலைச்சல் என்றாலும் இலுப்படி வேரில் இருந்து தன்னை மறப்பது அவனுக்குப் பிடித்த விடயங்களில் ஒன்றாகியது. மரங்களோடும் மர நிழல்களோடும் ஓய்வில்லாத நிம்மதியில்லாத அலைவு தொடர்ந்தாலும் அந்த வாழ்வில் ஒரு திருப்தியிருந்ததை தனது வார்த்தைகள் ஒவ்வொன்றாலும் வெளிப்படுத்துவான்.

 

போராட்ட வாழ்வின் கடினங்களில் இதுவொன்றும் பெரிதில்லையென்றுதான் சொல்லுவான். அவர்கள் யாவரிலும் பாசம் இருந்தாலும் தனியாக அவள் நேசித்த அண்ணாமீது அவளுக்கிருந்த அன்பு அதீதம்தான். அவனுக்காக உயிரையும் விடச் சொன்னால் விடக்கூடியவளாகவே மாறிப்போனாள்.

 

அந்தப் பதின்மவயதில் அவளுக்கான அன்பை ஆதரவை வீரத்தை வெற்றியை சரியான வழியைக் காட்டியவனும் அவனாகினான். பதின்மவயதுக் கனவுகளைச் செப்பனிட்டு அவளுக்கு வழிகாட்டியாய் சிலநேரம் அதிகாரியாய் ஆசிரியனாய் அவளது குடும்பத்தில் பிறக்கவில்லையென்றதைத் தவிர அத்தனை உரிமையும் அவனுக்கிருந்தது.

 

000                  000                  000

அவள் மாலைநேர வகுப்புக்கு போய் வரும் வழியில் அயல் ஊரைச்சேர்ந்த ஒரு இளைஞன் அவளுக்கு பின்னால் சயிக்கிளில் வருவது பாடல்கள் பாடுவதென தொடர்ந்தது. அவளது மாமி ஒருவர் அந்த இளைஞன் அவளைத் தொடர்வதை அவதானித்து அப்பாவுக்குச் சொல்லிவிட்டிருந்தா. அதனை விசாரித்து அப்பா அவளுக்கு அடித்துவிட்டார்.

 

அவனைத்தான் தேடிப்போனாள். நடந்தது யாவையும் அவனுக்குச் சொல்லியழுதாள். அன்று நிகழ்ந்த சுவாரசியம் அவள் வாழ்வில் நினைத்து நினைத்துச் சிரிக்கும் விடயமாகியும் போனது. அருகில் இருந்த மற்றவர்களுக்கு அவளது அழுகை சிரிப்பாக.... அவன் கேட்டான் பிள்ளைக்கு அந்தப் பொடியனை விரும்பமோ ? இல்லை.

நான் சும்மா பகிடிக்குத் தான் அப்பிடிக் கேட்டனான் அப்பாவில கோவிச்சமாதிரி என்னிலயும் கோவிக்கிறேல்ல சரியா...? பாப்பம் இனிமேல் அந்தப் பொடியன் பின்னாலை வந்தா சொல்லுங்கோ நாங்க பாப்பம் எனச் சொன்னான். வீட்டில் வாங்கிய அடியின் வலி அவன் நாங்கள் இருக்கிறோம் என்றதொடு மறந்து போயிற்று.

 

சிலநாள் கழித்து ஒருநாள் பின்னேரம் அவனிடம் போனாள். அன்று 15இற்கு மேற்பட்டவர்கள் அங்கேயிருந்தார்கள். அண்ணா இஞ்சை வாங்கோ ஒரு கதை....! அவன் சற்றுத் தூரம் தள்ளி நின்றவளிடம் போனான். அண்ணா ஒரு கதை சொல்லப்போறன் ஒருதருக்கும் சொல்லப்படாது சரியோ ? சரி சொல்லுங்கோ என்ன கதை ?

 

அண்டைக்குச் சொன்னன் ஒருதன் எனக்குப் பின்னாலை வாறானெண்டு அவன் இண்டைக்கு நான் வரேக்க என்ரை கரியரில கடிதமொண்டைச் செருகீட்டுப் போயிட்டான். இந்தாங்கோ என அந்தக் கடிதத்தை அவனிடம் கொடுத்தாள். ஏற்கனவே அந்தக் கடிதம் அவளுக்கு கொடுக்கப்பட்டதை இன்னொரு போராளி அவதானித்ததை அவனுக்குச் சொல்லியிருந்தான் என்பதனைக் காட்டிக் கொள்ளாமல் அப்பிடியா ? அவருக்குப் பொறுங்கோ நல்ல சாத்துக் குடுத்து விடுறன் எனச் சொல்லிக் கொண்டு கடிதத்தைப் பிரித்தான்.

 

என்னண்ணா அந்த லூசு எழுதியிருக்கு ? கேட்டாள். இந்தாங்கோ வாசிச்சு எனக்கும் சொல்லுங்கோ என கடிதத்தை திருப்பி நீட்டிச் சிரித்தவனுக்கு இல்லை நீங்களே வாசியுங்கோ என மறுத்தாள். கடிதத்தை வாசித்தபடி சிரித்தான்.

 

ஏன் சிரிக்கிறீங்கள் ? கடிதத்தை பொடியன் சரியான சீரியசா எழுதியிருக்கிறான். அது சனியன் அவள் கோபித்தாள்.

உங்களுக்கிப்ப எத்தின வயசு ? 15. பெரிய அக்கா. பிறகேன் பயம்....! அவள் அழுதாள். சரி அழப்படாது நீங்க பெரிய பிள்ளை இனி இப்பிடி கடிதம் வரும் பொடியள் பின்னாலை வருவாங்கள் இதுக்கெல்லாம் பயப்பிட்டு ஒளிக்கக்கூடாது. உங்களுக்குப் பிடிக்காததை உங்களுக்குச் செய்தால் இல்லது இப்பிடி கடிதம் யாரும் எழுதினா திருப்பி கதையுங்கோ இல்லது நானிருக்கிறன் அவைக்கு கதைக்க சரியோ ? படிக்கிறதில மட்டும் நல்ல மாக்ஸ் எடுத்தா காணாது எங்கடை உரிமையை மறுக்கிறவையை இல்லது எங்களுக்கு பிடிக்காததை எங்களுக்குச் செய்யிறவைக்கு எதிராயும் நாங்கள் கதைக்க வேணும்.

 

அப்போது அவன் பாரதியாரைப் பற்றிச் சொன்னான். புரட்சியின் அடையாளமாக குறுகிய தொகையில் இயக்கத்தில் இருந்த பெண் போராளிகள் பற்றிச் சொன்னான். ஒரு வித்தியாசமான சிந்தனையாளனாகவும் பெண்ணை அவன் போராடும் குணமுள்ளவளாகவும் விவரித்தான். பெண்ணியம் போராட்ட குணம் இதுவெல்லாம் அந்தப் 15வயதில் அவளுக்கு குழப்பமான சொற்களாகவே இருந்தது. ஆனால் அவன் சொன்ன போது அதுவே அவளில் வீரத்தை விதைத்த வார்த்தைகளாகக் கருதினாள்.

 

அப்ப என்னையும் இயக்கத்துக்கு எடுங்கோவனண்ணா ? உந்த அழுமூஞ்சியளை இயக்கத்துக்கு எடுத்திட்டு பிறகு அண்ணா நீங்கள் தான் எல்லாத்துக்கும் ஓடிப்போக வேணும். சற்றுத் தள்ளியிருந்த ஒரு போராளி சொல்லிச் சிரித்தான். அதற்கும் அழுதாள். முதல் முதல் அவள் முகத்தை நிமிர்த்திச் சொன்னான். இனிமேல் அழுது கொண்டு வரப்படாது எங்களுக்கு முன்னாலை அழவும் கூடாது. இனி நீங்கள் பெரிய பிள்ளை ஒருதருக்கும் பயப்பிடக்கூடாது. அப்பாட்டை அடிவாங்கீட்டும் இஞ்சை வந்து அழப்படாதெண்டும் சொல்லுங்கோண்ணை.... இன்னொருத்தன் சீண்டினான்.

 

உவர் நெடுகலும் என்னோடை கொழுவிறார் அண்ணா ஒருநாளைக்கு என்னட்டை அடி வாங்குவாரெண்டு சொல்லுங்கோ. இவ பெரிய சண்டியன் தான மறுபடியும் அவன் சொன்னான். இவன் இந்த கடிபாட்டை பேசாமல் கேட்டுக் கொண்டு நின்றான். ஒரு கட்டத்தில் அந்தப் போராளிக்கு முதுகில் அவள் அடித்தேவிட்டாள்.

பாருங்கோ உங்கடை தங்கச்சி வயசு மூத்த எனக்கே கைநீட்டிறாள்...! உப்பிடித்தான் அந்தப் பொடியனுக்கும் ஏதும் செய்திருப்பா. அவனும் வேண்டுமென்றே அவளைத் தொடர்ந்து சீண்டினான்.

 

அன்று தான் அவள் கோபத்தை அவர்கள் முன் காட்டினாள். சாதுவாய் அறிமுகமானவள் அன்று காளியாகினாள். அங்கிருந்த மரங்களைச் சுற்றியோடிய அந்தப் போராளியை கலைத்து கலைத்து அடித்தாள். அவன் நகைச்சுவையாக அவளைச் சீண்டியதை தன்மீதான வெறுப்பில் அவன் செய்வதாக நினைத்து நகத்தால் அவனது கைகளில் விறாண்டிவிட்டாள்.

 

ஐயோ காளி விறாண்டீட்டாளண்ணா காப்பாற்றுங்கோ...என அவனுக்குப் பின்னால் போயொழித்தான். உனக்குக் காணாது என்பது போல மற்றவர்கள் சொன்னார்கள். முகத்திலையும் விறாண்டிவிடு பிள்ளை உவனுக்கு வாய் கூட....சிலர் இவளுக்கு ஆதரவாகச் சொன்னார்கள்.

சரி விடுங்கோ பாவம் அவன் சும்மா பகிடிக்குத்தான் அப்பிடிக் கதைச்சவன். என சமாளித்தான். அவளுக்கு கோபம் குறையவில்லை. அவனைத் திருப்பியும் அடிக்கவே நின்றாள். இராணுவப் பயிற்சியெடுத்த ஒருவன் தன்னிடம் அடி வாங்குகிறான் என்றதே தனது துணிச்சல்தான் என பெருமிதப்பட்டாள்.

 

அவன் ஒற்றைக் கையால் பிடித்தாலே தாங்காத வலியை அவனால் தர முடியுமென்றதை அந்தச் சின்ன வயதில் அவள் நினைத்ததேயில்லை. அவளது அந்த அடியை அவன் ரசித்து வாங்கியிருந்ததை அவளுக்கு 17வயதான போது அவன் சொன்ன போது அவளால் சிரிப்பை மறக்க முடியவில்லை.

 

இந்திய இராணுவ காலத்தில் கிட்டத்திட்ட இரண்டரை வருடம் அந்த வட்டாரத்தில் வாழ்ந்த போராளிகள் பலரின் அன்பைப் பெற்றிருக்கிறாள். ஆனால் அவள் நேசித்த முதல் அண்ணாவும் முதல் கதாநாயகனுமானவன் அவனது அம்மா அவனைத் தேடி ஒருமுறை பார்க்க வந்த போது அவளைத் தன் அம்மாவுக்கும் அறிமுகப்படுத்தினான். இதென்ரை தங்கைச்சி...உங்கடை பிள்ளையம்மா.....!

அவன் சொன்னது போல அவனது அம்மாவிற்கும் அன்றைய சில மணித்தியாலத்திலேயே அவள் பிள்ளையாகினாள். அவனிடமிருந்து விடைபெறும் போது அவளை அணைத்து முத்தமிட்டுச் சொன்னா அம்மா ‚'வீட்ட வா மோன'. அம்மா தங்களது வீட்டு முகவரியை எழுதிக் கொடுத்தா.

இவளை வீட்டில் ஆச்சி சொல்லுவா...உன்னை நாங்க மட்டக்களப்புச் சோனீட்டைத் தானே வாங்கினனாங்கள்...அந்தச் சோனிதான் உன்னை வித்தவன். ஆச்சி இவளது அரியண்டம் குழப்படி தாங்கேலாமல் சொன்னதை அப்போது நினைத்துப் பார்த்தாள். அப்ப நான் இவேட வீட்டதான் பிறந்தனோ ?

 

அவனது அம்மா வந்து போய் சிலநாளில் அவனிடம் இதுபற்றிச் சொன்னாள்.; நானும் உங்கடை வீட்டிலதான் பிறந்தனோ அண்ணா ? சிறு வயதில் பிள்ளைகளுக்குச் சொல்கிற வார்த்தைகள் பிள்ளைகளின் மனங்களில் வடுவாகக்கூட மாறிவிடும் வல்லமையை உணர்ந்தானோ என்னவோ ஆச்சி சும்மா சொல்றவா அப்பிடியெல்லாம் இல்லை. நீங்கள் குழப்படியெண்டு ஆச்சி அப்பிடிச் சொல்லியிருப்பா. அவன் சமாளித்தான்.

 

அவள் சொல்ல விரும்பும் கேட்க விரும்பும் எல்லாக் கதைகளையும் சொல்லவும் அவற்றையெல்லாம் பொறுமையுடன் கேட்கவும் அவளுக்காக எல்லாமுமாக அவனிருந்தான். ஒருநாள் அவன் அந்த ஊரைவிட்டு வேறு இடம் பொறுப்பேற்றுப் போவதாகச் சொன்னான். அதுவரையில் அவள் நினைத்திராத பிரிவு அது. பழையபடி அழத்தொடங்கினாள். காலம் அழைக்கும் போது கடமையை ஒவ்வொரு போராளியும் மறுத்து ஒதுங்கியதில்லை அதுபோல அவனும் தனது கடமைக்குத் தயாராகினான். அவன் பிரியப் போகும் ஒவ்வொரு நாளையும் அவள் தனது மனவேட்டில் துயரோடே பதிவு செய்து கொண்டிருந்தாள்.

 

தொடரும்.............
 

Link to comment
Share on other sites

அனுபவக்கதைகளை ஒருசிலரே சுவை குன்றாது சொல்ல முடியும் , தொடருங்கள் சாந்தி .

 

Link to comment
Share on other sites

மலரும் நினைவுகளில் மறக்காத மனிதர்கள்

அங்கம் - 3

--------------------------------------------------------------------------------------------------

 

அவன் அவளையும் அதுவரைகாலம் அடைக்கலம் கொடுத்த வீடுகளையும் விட்டுப் பிரியும் கடைசி நாளது. அவன் அவளுக்காக ஒரு புதிய நாட்குறிப்பேட்டைக் கொடுத்தான். இண்டையிலயிருந்து நீங்கள் இனி டயறி எழுதுங்கோ. திரும்பி நாங்க சந்திக்கேக்க இன்னும் பெரியாளா வளந்திருப்பீங்கள் அப்ப நான் வாசிச்கத் தரவேணும். எதுவும் எழுதப்படாத நாட்குறிப்பேட்டில் அவளது பெயரை முதல் பக்கத்தில் எழுதியிருந்தான்.

 

அவளது ஊரிலிருந்து 7மைல் தொலைவில் இருக்கும் தனது வீட்டுக்கு நேரம் கிடைக்கிற போது போகச் சொன்னான்.

யாரினது தொடர்பு அறுபட்டாலும் நிச்சயம் வீட்டாரின் தொடர்பு இருக்குமென்று நம்பினான் போல. 2தடவைகள் அவனது அம்மாவிடம் போய் வந்தாள். அவன் அங்கிருந்து போன பின்னர் ஒருமுறை விடுமுறையில் வந்து நின்றதாக அம்மா சொன்னா. அவள் வந்தால் தனது அன்பைத் தெரிவிக்கச் சொன்னதாக அம்மாவிடம் சொல்லியிருந்தான்.

 

குறுகிய காலத்தில் பழகி நிரந்தரமாய் அவளின் உலகமாய் ஆகியிருந்த அவன் அவளையும் விட்டு அந்தக் கிராமத்தையும் விட்டுப் போய்விட்டான். அவனில்லாத அந்த நாட்கள் அவனில்லாத இலுப்பமர வேர் அவனுக்காக அவள் மாற்றிக் கொண்ட அவளது இயல்புகள் எல்லாமே அவனில்லாத வெறுமையை ஒவ்வொரு கணமும் உணரத் தொடங்கினாள்.

DSC-8150-1-jpg_103137.jpg
அவன் மாலை வேளையில் இருக்கும் இலுப்பமர வேரில் போயிருப்பாள். அவனோடு பேசியபடி அவனுக்குச் செய்த குறும்புகள் குழப்படிகள் கோபித்த நிமிடங்களெல்லாம் கண்ணுக்குள் வரிசை கட்டி வந்து போகும். அவன் மீண்டும் வருவானென அந்த இலுப்பைமர வேர் சொல்லிக் கொள்வது போலிருக்கும் பிரமையை உணர்வாள். அவனது பெயரை கத்தியால் அந்த வேரில் ஒருநாள் எழுதிவிட்டாள். அவன் ஒருநாள் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையோடு....!

 

அவன் போய் ஒருவாரத்தின் பின் அவன் கொடுத்த நாட்குறிப்பேட்டில் எழுத முதல் பக்கத்தை விரித்தாள். அவளது பெயரை எழுதி அதன் கீழ் அன்புள்ள என் தங்கைச்சிக்கு எனது ஞாபகமாக விட்டுச் செல்கிறேன். திரும்ப நான் வரும் போது எனக்குச் சொல்ல என்னோடு கதைக்க விரும்பும் எல்லாவற்றையும் இதில் எழுதி வைக்கவும்.

 

அடுத்த பக்கத்தை விரித்தாள். 11.04.1990. என வலது மூலையில் திகதியிட்டாள்.
என் அன்புள்ள அண்ணாவிற்கு, என ஆரம்பித்து எழுத வேணடும் போலிருக்கும் போதெல்லாம் எழுதத் தொடங்கினாள். அவன் திரும்பி வரும் போது அந்த நாட்குறிப்பை அவன் வாசிக்க வேண்டுமென்ற விருப்போடு எழுதத் தொடங்கியிருந்தாள். அவனில்லாது  போன நாட்கள் ஒவ்வொன்றும்  வெறுமையாகியது.

 

எங்கிருந்தோ வந்தான் இந்த இடைப்பட்ட காலத்தில் அவளது மாற்றங்கள் யாவுக்கும் காரணியாக இருந்தவன். வீட்டில் எவ்வளவோ பேர் உறவாக அன்பாக இருந்த போதும் அவன் காட்டிய அன்பு எல்லாரையும்  விட மேலாயிருந்தது. அண்ணாக்கள் ஒவ்வொரு வீட்டிலும் அவனைப் போல் தான் இருப்பார்களோ ? தங்கள் தங்கைகள் மீது இவன் போலத்தான் ஆழுமையும் அன்பும் செலுத்துவார்களோ என பலமுறை யோசித்திருக்கிறாள்.

அவனைப் பார்க்க விரும்பும் தருணங்களில் அவன் உலவிய தெருவில் அவன் அமர்ந்து இவளோடு கதைத்த இலுப்படி வேரில் போயிருப்பாள். யாருக்கும் தெரியாது அவனுக்காக அழுதிருக்கிறாள்.

 

அவன் இறுதியாய் சொல்லிவிட்டுப் போனவற்றில் அவளது கல்வியையே அதிகம் கவனப்படுத்தியிருந்தான். அந்த முறை றிப்போட் வந்திருந்தது. அதனைப் பார்க்கவும் தனது அன்பைச் சொல்லவும் அவனில்லாது போனான்.

20081124173031215734_8.jpg
காலம் போய்க்கொண்டிருந்தது. அவன் போனதன் பின்னர் ஊரில் புதிதாய் வந்த போராளிகள் வீடுகளுக்கு வந்து போனார்கள். யாரோடும் அதிக அன்பைச் செலுத்தக் கூடாதென்பதில் அவதானமாக இருந்தாள். நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகியது அவன் திரும்பி வரவேயில்லை. அவனது அம்மாவும் சகோதரர்களும் இருந்த இடத்தைவிட்டு இடம்பெயர்ந்து போனார்கள். அவர்களது தொடர்பும் இல்லாது போனது.

 

2ம் கட்ட ஈழப்போரின் ஆரம்பம் அவளது ஊர் ஒட்டுமொத்தமாக மனிதர்களை இழந்தது. போராளிகள் மட்டுமே மிஞ்சி ஊரைக்காக்க மக்கள் இடம்பெயர்ந்து போனார்கள். அவளது குடும்பமும் இடம்பெயர்ந்து போனது. போன இடத்தில் தனியார் கல்வி நிலையமொன்றில் படிக்கச் சேர்ந்தாள். அங்கே அறிமுகமான தோழன் ஒருவன் அவனது ஊர் இடப்பெயர்வு பற்றிச் சொன்னபோது இவள் அன்புக்குரிய அண்ணாவின் குடும்பமும் அடுத்த ஊரில் இடம்பெயர்ந்து வந்து இருப்பதனை அறிந்து கொண்டாள்.

 

அவனிடம் அவர்களது முகவரியைக் கேட்டாள். முதலில் யோசித்தவனுக்கு அவள் அந்தக் குடும்பத்தின் போராளி மகன் பற்றிச் சொன்னாள். தானே அவர்களது வீட்டுக்கு அவளைக் கூட்டிப்போவதாக வாக்குறுதியும் கொடுத்து ஒருநாள் பின்னேரம் மாலைநேர வகுப்பு முடிய அவளைக் கூட்டிக் கொண்டு போனான். திரும்பவும் தனக்குப் பிடித்தவனின் குடும்பத்தைச் சந்திக்க போவதையிட்டு மனசுள் ஊறிய மகிழ்ச்சியை சொல்லால் புரிவிக்கத் தெரியவில்லை.

 

அவன் தான் முதலில் அவர்களது வீட்டிற்குள் போனான். பெரியம்மா....! என அவன் அழைக்க அம்மா வெளியில் வந்தா. அவளைக் கண்டதும் அம்மா வா மோன என அழைத்தா. வாணை உள்ளைவா என அவளை விறாந்தையில் இருக்க வைத்தா. பிள்ளை பிளேன்ரி குடிக்காது கடையில போய் சோடா வாங்கிவா தம்பி...! என அவளது வகுப்புத் தோழனை அனுப்பினா.

 

அவள் பிளேன்ரீ குடிப்பதில்லை. சிறுவயது முதலே அந்தப் பழக்கத்தை விட்டிருந்தாள். பிளேன்ரீ  குடிக்கும் பழக்கம் விடுபட்டுப் போனது பற்றி அவள் ஒருமுறை அவனுக்குச் சொன்னது நினைவில் வந்து போனது. அதைக்கூட நினைவில் வைத்து அம்மாவுக்குச் சொல்லியிருக்கிறான். அவளை அந்த வீடு தனது மகளாக ஏற்றுக் கொண்டதற்கு சான்றாக அம்மா அவளைக் கவனித்தா.

 

அண்ணா வாறவரே ? அவள் யோசித்து யோசித்துக் கேட்டாள். அண்ணா போனாப்பிறகு ஒரு நாளும் எங்கடை வீட்டை திரும்பி வரேல்ல. சொல்லி முடிக்க முதல் முன்னுக்கு வழிந்தது கண்ணீர். அம்மா அதிர்ந்து போனா. ஏனடா பிள்ளைக்குத் தெரியாதே ? போனமாதம் அவன் வீரச்சாவெல்ல ? என்ரை பிள்ளை சேதி அறிஞ்செல்லோ வந்ததெண்டு நினைச்சனடா.....!

 

அம்மா சொன்ன அந்த வார்த்தைகள் உயிரை இடுங்கியெடுத்தது போலிருந்தது. அதிர்ச்சி , அழுகை , ஏமாற்றம் , என உணர்வுக் குழையலாய் அவன் பற்றிய அவளது எண்ணங்கள் கண்ணீராய் வழிந்தது. அம்மா அவளுக்காக வாங்குவித்த சோடாவைக் குடிக்கவோ அதன் சுவையை உணரவோ முடியவில்லை. அவள் நேசித்த அவளது அண்ணா அவளுக்குத் தெரியாமலேயே வீரச்சாவடைந்து போனதை அவனது வித்துடலைக் கடைசியாய் பார்க்கவும் கிடைக்காத தனது இராசியில்லா முகம் மீது கோபமாக இருந்தது.

 

என்ரை பிள்ளையை நான் நினைக்கேல்லயடா இப்பிடி கெதியிலை போயிடுவனெண்டு....! அம்மாவும் அவளோடு சேர்ந்து அழுதா. அந்த விறாந்தையில் மூடப்பட்டிருந்த பலகை அலமாரியை அம்மா திறந்து காட்டினா. அந்த அலமாரிக்குள் அவளது அண்ணா சிரித்தபடி வரிச்சீருடையில் மாலையணிந்து வீரவணக்கம் என எழுதப்பட்டிருந்த படமாய் தொங்கினான்.

Bild1.jpg
லீவில வீட்டை வந்தானெண்டா வீடு கூட்டிறதில இருந்து சமையல் மட்டும் என்ரை பிள்ளை எல்லாம் செய்து தரும். ஒரு தங்கைச்சியிருந்தா அம்மாக்கு உதவியா இருந்திருக்குமெண்டு அடிக்கடி சொல்லும் என்ர பிள்ளை. தம்பிமாருக்கெல்லாம் அவன் தான் உடுப்பெல்லாம் தோச்சுக் குடுப்பான். என்ரை பிள்ளை இயக்கத்துக்கு போக முதலும் எனக்கு நல்ல உதவி நாட்டு நிலமை அவனை எங்களோடை இருக்கவிடாமல் பிரிச்சுப் போட்டுது.

இயக்கத்துக்கு போன பிள்ளைக்கு களத்தில மரணம் வருமெண்டு நினைச்சனான் தான் ஆனா இப்பிடி 24வயதில வருமெண்டு நான் கனவிலயும் நினைக்கேல்ல...!

 

பிள்ளையைப் பற்றி நெடுகக் கதைக்கிறவன். நீங்கள் என்ரை வயித்தில பிறந்தமாதிரித்தான் அவனுக்கு நல்ல பாசம். நெடுகலும் தங்கைச்சி தங்கைச்சியெண்டு உங்களைப் பற்றி இந்த வீட்டை வந்து நிண்ட நாளெல்லாம் கதைக்க மறந்ததில்லை. சாகிறதுக்கு முன்னம் ஒரு 4நாள் லீவில வந்து நிண்டவன். உங்களைத் தேடினவனாம் நீங்கள் இடம்பெயர்ந்து போட்டீங்களாமெண்டு யாரோ சொன்னவையாமெண்டு சொன்னவன்.

 

அந்த வீட்டில் அவளுக்கான தொடரும் உறவுகளையும் அன்பையும் அவன் மீதமாக விட்டுச் சென்றிருந்தான். எங்காவது தேடி அவனது குடும்பத்தைக் கண்;;டு பிடிப்பாள் என நம்பினானோ என்னவோ அவளைப்பற்றி அந்த வீட்டில் சொல்லி வைத்ததோடு நின்றுவிடாமல் தனது குடும்பத்தில் ஒருத்தியாகும் தகுதியையும் கொடுத்துவிட்டு மறைந்திருந்தான்.

 

அவன் திரும்பி வரும் போது அவன் வாசிப்பானென அவள் எழுதிய நாட்குறிப்பேட்டை அம்மாவிடம் கொடுத்தாள். இதானம்மா எனக்குக் கடைசியா அண்ணா தந்தது. சொல்ல முதலே அழுகை முந்திக் கொண்டது. அம்மா அவளைத் தன்னோடு அணைத்து அவளை ஆறுதல்படுத்தினா.

 

கருவிலிருந்த காலம் தொடக்கம் இறுதிச் சந்திப்பு வரையும் அம்மாவின் செல்லப்பிள்ளையாக வாழ்ந்தவன் மீதான அம்மாவின் பாசத்துக்கு நிகராக குறுகியகால அறிமுகத்தில் அவன்மீது கொண்ட பாசத்தைச் சொல்லத் தெரியாதவளாக அவள் அழுது கொண்டேயிருந்தாள். அவளது அழுகையில் அம்மாவும் கலங்கித்தான் போனா.

 

அம்மா அவன் பற்றி தனது கருவிலிருந்த காலம் முதல் கடைசியாய் அவனைச் சந்தித்தது வரையும் கதைகளை தனது நினைவுகளை அவளுக்குச் சொல்லிக் கொண்டிருந்தா. அந்த வீட்டில் அம்மாவுக்கு எல்லாமே ஆண்பிள்ளைகள் அம்மாவுக்கு அவனே எல்லாமுமாயிருந்திருக்கிறான்.

 

தொடரும்.............

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவத்தை மிக நேர்த்தியாகப் பதிந்துள்ளீர்கள் சாந்தி.

Link to comment
Share on other sites

தொடருங்கள் சாந்தி.....ஆனால் 3வது பகுதியில் முடித்து விடுங்கள் :D

 

புத்தா உங்களுக்குச் சோதனை. 3இல் முடியாது 5வரை நீழ்கிறது.....!

 

Link to comment
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கள் சாந்தியக்கா...  தொடர்ந்து வாசிக்க! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலரும் நினைவுகளில் மறக்காத மனிதர்கள்...

 

ம்ம்ம்....தொடருங்கோ..

Link to comment
Share on other sites

மலரும் நினைவுகளில் மறக்காத மனிதர்கள்

பாகம் 4

அம்மாவிடமிருந்து விடைபெற்ற போது அவனது படங்களில் சிலவற்றை அம்மாவே அவளுக்கு கடித உறையில் வைத்துக் கொடுத்தா. அத்தோடு அவள் அம்மாவிடம் கொடுத்த நாட்குறிப்பேட்டையும் திருப்பிக் கொடுத்தா அவன் தந்தது அவன்ரை ஞாபகமா வைச்சிரம்மா. கிட்டத்தான இருக்கிறீங்கள் ஏலுமான வேளை வா ராசாத்தி.

 

அம்மாவிடமிருந்து விடைபெற்றாள். வீதி வழியே அழுகையாகவே இருந்தது. விதியை கடவுளை எல்லாரையும் நொந்தாள். அவள் நேசித்த முதல் உறவு அவள் வாழ்வில் பெரும் பங்கையும் பாதிப்பையும் தந்த பெருமைக்குரிய அவனைக் கொண்டு போன காலத்தை திட்டினாள். கடவுளெல்லாம் கல்லென்று மனசுக்குள் மறுகினாள்.

traurig_zpsf894ddc9.jpg
யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத துயரை மனசுக்குள் சுமந்து கொண்டு காலத்தைக் கடத்தினாள். காலங்கள் மாறியது. இடப்பெயர்வுகளும் எறிகணைகள் விமானத் தாக்குதல்கள் என யாழ்மாவட்டம் தனது இயல்பை இழந்தது. தினசரி ஒவ்வொரு ஊர்ச்சந்தியிலும் சோக இசையோடு யாரோ ஒரு வீரனின் மரணத்தை அல்லது நினைவுநாளை நினைவு கூரும் ஒலிபெருக்கிகள்.....!

 

புலிகளின்குரல் ஒலிபரப்பு அன்றாட மக்களின் வாழ்வை அவலத்தை தொடரும் விடுதலைப் போராட்டத்தின் வீரத்தைத் தனது குரலால் பகிர்ந்து கொண்டிருந்தது. ஈழநாதம் நாளேடு அன்றைய காலத்தில் மண்ணுக்கானவர்களின் கதைகளைச் சொல்லும் பத்திரிகையாக மக்களிடம் சென்று கொண்டிருந்தது.

 

படிப்பு அலைவு என அவளது காலமும் தன்வழியே....! காலவோட்டம் அவளது வாழ்விலும் மாற்றங்கள். நினைத்தவை வேறாயும் நடந்தவை வேறாயும் காலம் எழுதிய கதைகளில் பலரது வாழ்வும் மரணமும் அவலத்தின் உச்சகாலம் போலாகியது.

 

அவளது அண்ணாவின் குடும்பத்தினரும் அடுத்தடுத்து வந்த இடப்பெயர்வில் இடம்மாறிப்போனார்கள். அவர்களது தொடர்புகள் விடுபட்டுப் போனது. என்றாவது அவர்களை மீளவும் சந்திக்கலாம் என்ற நம்பிக்கை மட்டும் அவளுக்குள் பெருமரமாய் விரிந்தது.

 

ஒரு உயிரை இழந்து போனாள் ஆனால் மேலும் பலர் அவள் இழந்து வருந்திய உயிரை நினைவில் தருமாப்போலவும் மீளுயிர் தந்தாற்போலவும் ஆண் பெண் போராளிகளில் அவளும் ஒருத்தியாக அவர்களின் விருப்பத்துக்கு உரியவளாக பலர் மீண்டும் வந்தார்கள்.

 

FemaleLTTE1980s.jpg
ஒருமுறை உம்மோடை கதைச்சா பிறகு அவையளை உம்மடை ஆக்களாக்கீடுவீர் என்ன ? ஒரு போராளி சொன்னான். நீர் அரசியல் செய்யலாம் அதையும் அவன்தான் சொன்னான். சிரிச்சுச் சிரிச்சு ஆக்களை விழுத்தீடுவீங்கள் இன்னொரு போராளி அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

தனக்கான கடமைகளைப் புரிந்து தன்னால் முடிந்ததைச் செய்யும் கனவில் அலைந்தாள். புதிய புதிய தொடர்புகள் உறவுகள் அவளைத் தங்கள் வீடுகளில் ஒருத்தியாக உறவில் ஒருத்தியாக சேர்த்துக் கொண்டார்கள்.

 

அந்தப்பயணத்தில் ஒரு போராளி வந்தான். அடிக்கடி அவனைச் சந்தித்துக் கொள்ளும் தேவைகள் இருந்தது.எல்லோரையும் போலல்லாது எல்லாவற்றிற்கும் மேலான உறவாய் அது மலர்ந்தது. நெஞ்சுக்குள் சத்தமின்றி வந்தமர்ந்தான் அந்தப்புலிவீரன்.

 

தொடரும்.............

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சாந்தி அக்கா ......

Link to comment
Share on other sites

கருத்திட்ட புங்கையூரான், புத்தன், கரன்,கோமகன், சுமேயக்கா , கவிதை, யாயினி ,விசுகு அண்ணா உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.
இறுதிப் பகுதி விரைவில் பதிவாகும். அனைவரின் பொறுமைக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

மலரும் நினைவுகளில் மறக்காத மனிதர்கள்

பாகம் 5

 

அவளது வாழ்வில் அடுத்த பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் கொடுத்த இரண்டாவது ஆண் அவன். நட்புக்கு அர்த்தம் சொன்னவனும் அவனேயாகினான். நண்பனாய் , நல்லாசானாய் அவனுடனான நாட்கள் வித்தியசமானவை.

 

அவளிலும் 3வயதால் மூத்தவன். வடபகுதியில் கடற்கரைக் கிராமமொன்றில் பிறந்து பெரு நகரமொன்றில் கல்வி கற்றுக் கொண்டிருந்த அவனை காலம் புலியாக்கியது. திறமையான மாணவனாகவும் அதேநேரம் பல்கலைக்கழகம் செல்லும் கனவையும் மனசுக்குள் எழும்பிய கோட்டையில் ஆயிரமாயிரம் கனவுக் கூடுகள் அவனது வாழ்வு பற்றிய எண்ணங்களை விதைத்திருந்தான்.

 

அவனது கனவுகளில் 1989 பகுதியில் இடியிறங்கியது. பாடசாலை விடுமுறையில் ஊரில் போய் நின்றவனை தேசத்துரோகக்கும்பல் தேசிய இராணுவத்தின் இணைக்க முற்பட்டு அவனைக் கொண்டு போனது. நாட்கணக்காய் அவர்கள் அடித்த அடியும் சித்திரவதைகளும் அந்த வதையிலிருந்து மீண்ட போது அவனை ஒருநாள் புலிகளோடு இணைத்தது.

 

போராடும் குணத்தையும் தமிழீழ தேசத்தின் விடுதலையையும் விடுதலைப்புலிகளால் மீட்டுவர முடியுமென்று நம்பிய போராளிகளோடு மணலாறு காட்டில் பயிற்சி முடித்து யாழ்மாவட்டத்தில் வந்திறங்கியவன். விடுதலைப் போராட்டத்தின் வீரம் மிகுந்த பக்கங்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் பலரது வாழ்வின் இழப்பும் ஈடு செய்ய முடியாத தியாகமும் இறைந்து கிடப்பதை வினாடிக்கு வினாடி ஞாபகப்படுத்தியவன்.

 

உலக விடுதலைப் போராட்ட வரலாறுகள் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளவும் அப்போது யாழில் வெளிவந்த பத்திரிகைகள் அவர்களுக்காக சிறப்பாகப் போகும் நூல்கள் வரையும் வாசிக்கவும் வாசிப்பின் மூலம் வரலாறுகளை அறிந்து கொள்ளவும் அவளுக்கு வழிகாட்டிய நண்பன் அவன்.

ltte_mortar_units.jpg
ஒரு முதுகுப்பையில் பத்திரப்படுத்த வேண்டிய தனது டயறி , தனது பொருட்களில் பலவற்றை அவளிடமே கொடுத்து வைத்திருந்தான். அழகான தனது கையெழுத்தில் எழுதப்பட்ட டயறியில் அவனால் எழுதப்பட்ட ஒவ்வொரு விடயமும் தேசத்திற்கான பயனுடைய விடயங்களாகவும் தன்னோடு வாழ்ந்து மறைந்தவர்களின் நினைவுகளாலுமே நிறைந்திருந்தது.

 

நீழும் போராட்ட வாழ்வில் மரணத்தையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு மடியும் தத்துவத்தைத் தனக்குள்ளே வரித்துக் கொண்ட அந்தப் புலவீரனின் மனசுக்குள்ளும் சின்னச்சின்ன மகிழ்ச்சிகளும் இளவயதுக்குரிய கனவுகளும் கரையாமலேயே நிரப்பப்பட்டிருந்தது. இளவயதின் கனவுகளோடும் இலட்சியக் கனவுகளோடும் போராட்ட வாழ்வில் பயணித்துக் கொண்டிருந்தான்.

 

தனது கனவுகள் விருப்பங்கள் யாவையும் அவளோடு பகிர்ந்து கொள்வான். நீண்ட நேரம் உரையாடல் சிலவேளை சண்டையாக , கோபமாக , அவளைச் சினப்படுத்துவதாக எத்தனையோ முறை அவள் கோபித்துப் போனாலும் தனது சிரிப்பால் சீண்டல்களால் மீண்டும் ஆற்றுப்படுத்திவிடுவான்.

 

மகிழ்ச்சியின் காலம் எப்போதும் அவளுக்கு நீடித்ததில்லை. ஒரு இழப்பின் கனம் அவனது புதிய உறவின் துளிர்ப்பில் மெல்ல மெல்ல மாற்றம் வருவதாய் நம்பிய காலம் களம் அவனையும் கடமைக்கு அழைத்து அவனும் தூர இடம் மாறிப்போவதாய் ஒருநாள் வந்து நின்றான். போகாதேயென தடுத்து நிறுத்த முடியாத பயணம் ஒவ்வொரு போராளியின் வாழ்வும். அவள் மௌனமானாள்.

 

தனியே அழுது தனியே துயரில் கரைந்து வாழ்வில் முதல் வந்த நட்பை ஒரு பொழுது அள்ளிக் கொண்டு போகவென விடிந்தது. இறுதிச் சந்திப்பு. மீண்டும் வருவேன் என்றுதான் சொல்லிவிட்டுப் போனான். போகும் போது பெறுமதி மிக்க தனது டயறியை அவளிடம் கொடுத்துவிட்டுச் சென்றான்.

 

அவனுக்குப் பிடித்த அவன் விரும்பியணியும் ஒரு சேட் தனக்கு வேணுமென அவள் அடம்பிடித்த போது என்ன நினைத்தானோ தெரியாது 'சரி வைச்சிரு' எனச் சிரித்துவிட்டுக் கொடுத்தான். அதிக நெருக்கத்தையும் நேசத்தையும் கொட்டி நேசித்தவர்களில் ஒருவன் அண்ணாவாய் மற்றொருவன் நண்பனாய் இருவருமே இடையில் பிரிந்து போனார்கள். ஒருவன் மாவீரனாக மற்றையவன் மரணத்தைத் தேடிக் களத்தில்....!

 

இனி யார் மீதும் அதிக அன்பைச் செலுத்துவதில்லையெனத்தான் முடிவெடுத்தாள். தான் அதிகம் அன்பைக் கொட்டி நேசித்தால் அந்த உறவைக் காலம் நிரந்தரமாய் தன்னிடமிருந்து பிரித்துப் போவதாக நினைத்தாள். அவளைப் பலர் நேசித்தார்கள். உறவாகினார்கள். அவள் கதை அல்லது சிரிப்பு இரண்டில் ஏதோ ஒன்று ஒவ்வொருவருக்கும் பிடித்துப் போனது.

 

மெல்ல மெல்லத் தன்னை வருத்தும் துயர்களிலிருந்து விடுபட்டு வெளியேறி இயல்பாக விரும்பினாள். ஆனால் இழந்து போன இரு பிரிவும் அவளை யார் மீதும் அதிக அன்பைச் செலுத்தவிடாது தடுத்துக் கொண்டிருந்தது. இந்த இடைவெளியில் அவளும் மாறிப்போனாள். புதிய பாதைதேடிய பயணத்தில் அவளது கனவுகளும் ஆயிரமாயிரம் பேரின் நினைவுகளோடு....!

 

577179_656888387689081_1909200902_n_zps8
000                    000                           000

திடீரென புதிய மாற்றமாய் காலம் எல்லாரையும் போல அவளுக்கான பாதையைத் தீர்மானித்தது. பாதைகள் மாறியது பயணங்களும் மாறியது. அவளது வாழ்வுப் பயணமும் மாறியது. அது புலப்பெயர்வாக பல்லாயிரம் மைல்கள் கடந்து ஐரோப்பிய நாடொன்றில் அவளும் அகதியாகினாள்.

 

நாட்டைவிட்டு வெளியேறும் போது நண்பனைத் தேடியலைந்தாள். அவனைக்காணவும் தனது பயணத்தைச் சொல்லவும் தேடினாள். அவன் நின்ற இடத்தை அவளால் அடைய முடியாத தொலைவில் இருந்தான். அவன் கொடுத்த அவனது டயறியை நம்பிக்கைக்கு உரியவர்களிடம் கொடுத்து தான் சென்றடையும் நாட்டின் விலாசம் தரும் போது அதனை அனுப்புமாறு சொல்லிவிட்டு வெளியேறினாள். அவனுக்குப் பிடித்த சேட் மட்டும் தன்னோடு கொண்டு சென்றாள்.

 

பயண முகவர்கள் அலைத்த நாடுகளில் அலைந்து திரிந்த போது அவள் காவித்திரிந்த அவளது பிரியத்துக்கினிய தோழனின் சேட் யாரோ கொள்ளையடித்துக் கொண்டு போய்விட்டார்கள். அவனையே இழந்தமாதிரியான துயரோடு அழுத நாட்களை மறக்க முடியாது.

 

 என்றாவது தேவைப்படின் தொடர்பு கொள்ளுமாறு அவன் கொடுத்த முகவரிதான் கடைசியில் கைகொடுத்தது. அவனுக்காக அவள் எழுதிய கடிதங்கள் சில அவனுக்குக் கிடைத்து தனது பதிலையும் எழுதியிருந்தான். என்றும் மாறாத மண்ணின் பாசத்தோடும் அவன் எழுதிய கடிதங்கள் ஒரு காலத்தின் பதிவாக....!

 

மாதக்கணக்காகக் காத்திருந்து வரும் அந்தக் கடிதங்கள் ஊரை உறவை அவளது நேசிப்புக்கு உரிய யாவரையும் கண்முன்னே நிறுத்திவிடும் வல்லமையின் வடிவாக...! ஒருமுறை தனது நிழற்படங்கள் சிலவற்றை அனுப்பியிருந்தான். அவனது டயறி இருக்கும் இடத்தின் முகவரியை ஒருதரம் எழுதிவிட்டாள். அதனை எடுத்து தனக்கு அனுப்புமாறு கேட்டும் எழுதியிருந்தாள்.

 

திடீரென அவனது தொடர்புகள் விடுபட்டுப் போனது. காரணம் சொல்லப்படாது அவன் மௌனமாகியதாகத்தான் நினைத்தாள். ஆனால் அவன் ஒரு களத்தில் வீழ்ந்தானென்ற செய்தி பல மாதங்கள் கழிந்த ஒரு காலத்தில் வெளி வந்தது. புலத்தில் வெளியாகிய ஒரு சஞ்சிகையில் அவனது படமும் நினைவுப்பகிர்வும் வெளியாகியிருந்தது.

 

நாட்கணக்காய் அந்தச் செய்தியைப் படித்தாள். பலநாள் தனியே இருந்து அழுதாள். ஆற்றவோ தேற்றவோ ஆட்களற்று அந்த இழப்பை நம்ப முடியாது....!அவன் தனது ஞாபகங்களை மட்டும் அவளுக்கு நிரந்தரமாக்கிவிட்டு மாவீரனாய் துயிலிடம் ஒன்றில் கல்லறையாக....!

9.jpg

தொடரும்.............

 

நாளையோடு இத்தொடர் முடிவடையும்.

Link to comment
Share on other sites

மலரும் நினைவுகளில் மறக்காத மனிதர்கள்

 

பாகம் 6இறுதிப்பகுதி

 

அவளுக்கானதொரு குடும்பம் குழந்தைகள் என ஒரு உலகம். விதிப்பயனோ அல்லது வாழ்வின் தொடரோ அகதி வாழ்வோடு அவளது உலகம் இன்னொன்றாகியது.

 

என்னதான் வாழ்வும் வாழும் நாடும் மாறினாலும் அவள் பிறந்த நாட்டின் நினைவையும் அந்த நிலத்தில் அவளோடு வாழ்ந்தவர்களின் நினைவுகளையும் காலம் ஒருபோதும் பிரித்துப் போட்டதில்லை. அகதியானாலும் அழியாத தாயகத்தின் நினைவுகளைச் சுமக்கும் ஆயிரமாயிரம் பேரைப்போல அவளுக்கும் ஒருநாள் ஊர்போகும் கனவுகளே வந்து கொண்டிருந்தது.

 

காலநதி வேகவேகமாக தன் கரைகளை அரித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. இழப்புகளின் துயர் இதயத்தை நிறைத்தாலும் இறந்தகாலத்தில் போயிருந்து அந்த நாட்களோடு அலைதலும் உலகை மறத்தலும் சிறய ஆற்றுதல் தான்.

 

அவ்வப்போது மனசை அலைக்கும் தருணங்களில் ஏதாவதொரு வகையில் ஏதோவொரு நிறைவில் காலங்கள் பயணித்துக் கொண்டிருந்தது. நீழும் காலவோட்டத்தில் நீண்டு செல்லும் வாழ்வின் நீளமும் மாற்றங்களோடு அவளும் பயணித்துக் கொண்டிருந்தாள்.

936162_463399217061909_976756942_n_zps79
000                000                  000
நிரந்தர சமாதானம் வந்துவிட்டதாக நம்பிய 2003இல்; நடைமுறையில் இருந்த யுத்த நிறுத்தத்தில் பிறந்தமண்ணை தனது உதிரத்தில் விளைந்த தனது குழந்தைகளுக்குக் காட்டுவதற்காகச் சென்றிருக்கிறாள். அவள் பிறந்து அளைந்து அள்ளித்தின்று விளையாடி மகிழ்ந்த நிலம் மிதிவெடிகள் கவனம் என எச்சரிக்கப்பட்ட எச்சரிக்கைப் பலகைகளைத் தாங்கியபடியிருந்தது.

 

சூனியத்தெருவில் நிற்பது போல அவள் தனது பிறந்த வீட்டின் காணிக்குள் போக முடியாதென்ற எச்சரிக்கைப் பலகையின் ஓரத்தில் நின்றாள்.

 

அதுதான் அம்மா பிறந்த வீடு எனப் பிள்ளைகளுக்குச் சொன்னாள். அம்மா நீங்க காட்டிலயோ பிறந்த நீங்கள் ? 5வயது மகள் கேட்டாள். ஏனம்மா ? காடாக்கிடக்கு ஒரு வீட்டையும் காணேல்ல ? சொன்ன மகளுக்குச் சொன்னாள்.

 

அம்மா பிறந்து வளர்ந்து உங்களைப் போல வயசில திரிஞ்ச இடம் ஆமிக்காறங்கள் வந்து அழிச்சிட்டாங்கள் அதாலை காடாகீட்டுது செல்லம்.....!  அந்தப் பிஞ்சுக்குழந்தைகளுக்கு அவள் சொன்ன விளக்கங்கள் திருப்தியைக் கொடுக்கவில்லை. ஆனால் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார்கள்.

 

இனிக்காணும் உதுக்கங்காலை போனா ஆமிக்காறன் வந்திடுவன்....அம்மா அத்தோடு திரும்பச் சொன்னா. அடுத்து 50மீற்றர் போனால் இன்னும் அவள் வாழ்வில் மறக்காத தடயங்களைச் சுமக்கும் வயிரவ கோவில் சிவகாமியம்மன் கோவில்களின் சிதைவுகளைக் காணலாம். ஆனால் அதற்குமேல் போக முடியாதபடி எச்சரிக்கைப்பலகை தடுத்து நிறுத்தியது.

 

ஆயிரம் வருடங்கள் போனாலென்ன ஐயாயிரம் வருடங்கள் போனாலென்ன கடந்த காலங்களை  மீளப்பெறத்துடிக்கும் மலரும் நினைவுகளாக மனசை அலைக்கழிக்கும் நினைவாக எந்த மனித மனத்தாலும் மறுத்து வாழ முடியாதென்பதற்கு அவளே உதாரணமாகினாள்.

 

பிறந்த வீட்டின் வீதிவரையும் சென்று திரும்பிக் கொண்டிருந்தது கால்கள் அவள் மனசு மட்டும் அந்தத் தெருவில் படர்ந்து கிடந்த முட்செடிகளின் கீழும் மிதிவெடிகளின் கீழும் போய்த் தொலைந்தது.

 

திரும்பும் போது இலுப்படி வேரைப்பார்த்தாள். அங்கே அவள் வாழ்வில் முதல் பாதிப்பைத் தந்த அண்ணாவென்ற அற்புதம் உயிர்த்துக் கொண்டிருந்தான். அவள் சொல்லை மதித்த அவளுக்கு ஒருகாலத்தின் கைவிளக்காக இருந்த அந்த உயிர் காலம் முழுவதும் விடிவிளக்காக வந்து கொண்டிருந்தது.

waiting.jpg
காலம் எவ்வளவுதான் தன்னைப் புதிது புதிதாய் பிறப்பித்துக் கொண்டாலும் காலநகர்வில் கைபற்றி வந்து மனசின் அடியில் புதைந்து கிடக்கும் நினைவுகள் ஒவ்வொரு மனித மனத்தையும் ஆயுள் முழுவதும் அலைத்துக் கொண்டிருக்கும் என்பதனை அனுபவிக்கத் தொடங்கினாள். ஒவ்வொரு காலடியின் கீழும் ஆயிரக்கணக்காக கோடிக்கணக்காக் நினைவுகளால் சுற்றிப் பிணைக்கப்பட்டுக் கொண்டிருந்தாள்.

 

பழைய நினைவுகளை அழித்துப் புதிய காலத்தை மட்டுமே ஞாபகம் கொடுக்கும் பழசையெல்லாம் அழிக்கும் ஒரு அழிகருவி இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்....? என்ற ஆசை அவளையும் விடவில்லை.

 

போன உயிரையே திரும்ப உயிர்ப்பிக்கும் வசதிகளை விஞ்ஞானம் கொண்டிருக்கும் இக்காலம். நொடிக்குநொடி புதிய புதிய கண்டுபிடிப்புகள் சாதனங்கள் வெளியீடு நிறைந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் மனித மனங்களைத் தின்று தொலைக்கும் நினைவுகளை அழிக்க.... ஒரு அழிறப்பர் கண்டு பிடியுங்கடா விஞ்ஞானியளே உங்களுக்கு காலம் முழுக்க நன்றியுடனிருப்பேன் எனச் சொல்லிக் கொள்கிறாள்.

 

 

 

இத்தோடு இத்தொடர் நிறைவடைகிறது. பொறுமை காத்த அனைவருக்கும் நன்றிகள்.

 

Link to comment
Share on other sites

தொடருங்கள் சாந்தி.....ஆனால் 3வது பகுதியில் முடித்து விடுங்கள் :D

 

3பகுதியென ஆரம்பித்து ஆறு பகுதியாகி முடிஞ்சிட்டுது புத்தா. :lol:

அருமையான ஒரு அனுபவப்பகிர்வு, சாந்தி!

 

இடையில் வந்து போன எத்தனையோ சம்பவங்கள், நினைவுக் கோவையிலிருந்து விரைவாக அகன்று விட, இளமைக்காலத்து நினைவுகள் மட்டும் எப்போதும் அழியாமலிருப்பது ஏன் என்பது என்றுமே புரியாத புதிர்!

 

நான் சிறுவனாகப் பாடசாலைக்கு நடந்து செல்லும்போது, வண்டித்தடங்கள் பதிந்த பாதையில், ஒரேயொரு கல்லு மட்டும் துருத்திக் கொண்டிருந்து, எனது பெருவிரலைப் பதம் பார்த்து  விடும்! அண்மையில், எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தபோது, அந்த இடத்துக்கு மினக்கட்டுப் போய், செருப்பைககழற்றி விட்டு, அதே பாதையில் நடந்து பார்த்தேன்!

 

திடீரெனப் பெருவிரலில் வலி!

 

நம்பினால் நம்புங்கள்! அதே 'கல்லு; ! :D

 

தொடருங்கள், சாந்தி!

 

அந்தக்கல்லையும் பற்றி எழுதுங்கோ புங்கையூரான்.நினைவுகள் என்றும் மறக்காதவை. காலம் எத்தனைதான் மாறினாலும் நினைவுகள் மட்டும் அழியாது ஒவ்வொரு மனங்களிலும் வாழும் வைராக்கியம் கொண்டவை.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU 27 APR, 2024 | 01:12 AM   (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால்  செயற்பட்டுள்ளார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தின் உண்மை தன்மை என்ன,இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதா,? இந்த தாக்குதலால் இலங்கை தேர்தலில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை,இந்திய தேர்தலிலேயே பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன .எதிர்காலத்தில் தாக்குதல்கள் இடம்பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரசன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் பின்னணியின் உண்மை இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை. இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்திலும் இடம்பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் வழங்கப்படவில்லை. குண்டுத்தாக்குதல் தொடர்பான விவாதம் இடம்பெறும் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்,நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க சபைக்கு வருகை தராமல் இருப்பது கவலைக்குரியது.  பிரதான சூத்திரதாரி யார் என்று அனைவரும் கேட்கிறார்கள்.ஆனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதான சூத்திரதாரியை தான் அறிவதாக குறிப்பிட்டுக் கொண்டு  குற்றப்புலனாய்வு  திணைக்களத்துக்கும்,நீதிமன்றத்துக்கும் இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார். குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் யுடியுப் வலைத்தளத்தில் நேர்காணல் ஒன்று வழங்கியுள்ளார்.இந்த தாக்குதலின் பின்னணியில்  இந்திய பிரதமரின்  பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவால் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.ஆகவே இதன் உண்மை என்னவென்பதை ஆராய வேண்டும்.  உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட மறு நாளன்று அதாவது 2019.04.22 ஆம் திகதி இந்தியாவில் கோவா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு ஏற்பட்ட நிலையை இந்தியாவில் உள்ள கத்தோலிக்கர்களுக்கு நேரிட இடமளிக்க போவதில்லை என்று உத்வேகமாக உரையாற்றினார்.அக்காலப்பகுதியில் அவரது பிரசாரங்கள் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை முன்னிலைப்படுத்தியதாகவே காணப்பட்டது.இதனால் இந்தியாவில் வாழும் கத்தோலிக்கர்கள் அவருக்கு வாக்களித்தார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பெறுமளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. கத்தோலிக்கர்கள் செறிவாக வாழும் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றார்.தேர்தலில் வெற்றிப்பெற்ற கோட்டபய ராஜபக்ஷவுக்கு பெருமளவில் வாக்குகள் கிடைக்கப் பெறவில்லை.ஆகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இந்திய தேர்தலில் தான் மாற்றம் ஏற்படுத்தியது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் கத்தோலிக்கர்கள் பாதிக்கப்படுவதற்கு முன்னர் சுதேசிய முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டார்கள். பயங்கரவாதி சஹ்ரான் சுதேசிய முஸ்லிம்களின் பாரம்பரிய மத நம்பிக்கைக்கு எதிராக செயற்பட்டான். 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் சுதேசிய முஸ்லிம்களின் 117 குடியிருப்புக்கள் அழிக்கப்பட்டன.காத்தான்குடி பகுதியில் பயங்கரவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில்  சுதேசிய முஸ்லிம்கள் அப்போதைய அரசாங்கத்திடமும்,பாதுகாப்பு தரப்பினரிடமும் முறைப்பாடளித்தார்கள்.ஆனால் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் சுதேசிய முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டார்கள்.அதனை அரசாங்கம் அலட்சியப்படுத்தியது.இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலாக உச்சமடைந்தது.ஆகவே சமூக கட்டமைப்பில் மறைந்துள்ள அடிப்படைவாதம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்றார். https://www.virakesari.lk/article/182060
    • மதுரையைச் சுற்றியுள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தலங்கள் பட மூலாதாரம்,KERALATOURISM படக்குறிப்பு,இடுக்கி ராமக்கல்மேடு 10 நிமிடங்களுக்கு முன்னர் மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கும் கள்ளழகர் திருவிழா, ஜல்லிக்கட்டு போன்ற கலாசார நிகழ்வுகளுக்கும் பெயர் போனது. இவைதவிர பல சுற்றுலா தலங்களும் குறிப்பாக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் இங்குள்ளன. குறிப்பாக, மதுரைக்கு அருகே உள்ள மாவட்டங்களில் இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பகுதிகள் உள்ளன. தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலும் பல சுற்றுலா தலங்கள் உள்ளன. அப்படி, இந்த கோடைக்காலத்தில் மதுரைக்கு அருகே உள்ள சில இயற்கை சூழல் நிறைந்த இடங்களையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலங்களையும் இங்கு அறியலாம். இடுக்கி ராமக்கல்மேடு ‘டைட்டானிக்' புகழ் ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகேப்ரியோ, தான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த இடம் என ராமக்கல்மேட்டைக் குறிப்பிட்டுப் புகழ்ந்துள்ளார். பசுமையான மலைகள், குளிர்ச்சியான மலைக்காற்று இரண்டும் ராமக்கல்மேட்டுக்கு செல்பவர்களை மயக்கிவிடும். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ராமக்கல்மேடு, தேக்கடியில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள ராமக்கல்மேடு, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு வீசும் இதமான காற்றுக்கு ராமக்கல்மேடு மிகவும் புகழ்பெற்றது. ஆசியாவிலேயே அதிக காற்று வீசும் பகுதிகளுள் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது. இங்கு பழங்குடியின தம்பதியான குருவன்-குருவாட்டியின் மிக உயர்ந்த சிலைதான் இங்கு மிகவும் ஈர்க்கக்கூடிய ஒன்று. கேரளாவில் உள்ள மிக உயர்ந்த சிலைகளுள் இதுவும் ஒன்று. ஹைக்கிங், பாரா கிளைடிங் போன்றவற்றை இங்கு மேற்கொள்ளலாம். ‘தமிழ்நாடு வியூ பாயிண்ட்', ‘ஆமைப் பாறை வியூ பாயிண்ட்’ போன்ற இடங்களுக்கும் இங்கு செல்லலாம். இடுக்கியின் நெடுங்கண்டம் எனும் இடத்திலிருந்து சுமார் 12.4 கி.மீ. தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு நெடுங்கண்டத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.   திண்டுக்கல் மலைக்கோட்டை பட மூலாதாரம்,TAMILNADUTOURISM படக்குறிப்பு,திண்டுக்கல் மலைக்கோட்டை மலைக்கோட்டை என்றாலே திருச்சிதான் உடனே நம் நினைவுக்கு வரும். ஆனால், திண்டுக்கல் பகுதியிலும் மலைக்கோட்டை உள்ளது. வரலாற்று ரீதியாக பல முக்கியத்துவம் இந்த இடத்திற்கு உண்டு. மதுரை நாயக்கர் வம்சத்தால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, பின்னர் விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர் மற்றும் ஆங்கிலேயர்கள் உட்படப் பல ஆட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது. சுமார் 280 அடி (85 மீட்டர்) உயரமுள்ள பாறையில் அமைந்துள்ள திண்டுக்கல் மலைக்கோட்டையின் கட்டடக்கலை உண்மையிலேயே நம்மைப் பிரம்மிக்க வைக்கும். இது பண்டைய இந்திய கல்வெட்டு கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. கோட்டை வளாகத்தில் கோவில், தானியக் கிடங்கு, தண்ணீர் தொட்டி உட்படப் பல கட்டமைப்புகள் உள்ளன. இவை அனைத்தும் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கு மத முக்கியத்துவம் வாய்ந்த பல பழமையான கோவில்களும் உள்ளன. கோட்டையில் உள்ள சிவன் கோவில் மற்றும் கோட்டை மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஆன்மீக பயணத்தில் நாட்டம் உள்ளவர்கள் செல்லலாம். 350 படிகள் ஏறி மேலே சென்ற பிறகு, பார்வையாளர்கள் அழகான காட்சியை அனுபவிக்க முடியும்.   கும்பக்கரை அருவி பட மூலாதாரம்,TAMILNADUTOURISM படக்குறிப்பு,கும்பக்கரை அருவி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த அழகான கும்பக்கரை அருவி. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் நீர் இருக்கும். கோடை நாட்களில் தண்ணீரின் அடர்த்தி குறைவாகவும், குளிர்கால நாட்களில் அதிகமாகவும் இருக்கும். மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து இதற்கு நீராதாரம் கிடைக்கிறது. எனினும், கும்பக்கரை நீர்வீழ்ச்சி ஆபத்தானது என்பதால், மிகவும் பாதுகாப்பாகவே இங்கு குளிக்கச் செல்ல வேண்டும். கும்பக்கரை அருவிக்குச் சென்றால் அதன் அருகிலுள்ள சுருளி அருவிக்கும் செல்லலாம். சுற்றுலாத் தலமாக விளங்கும் இன்றைய கும்பக்கரை, ஒரு காலத்தில் அருவிகள் நிறைந்த காடாகவே இருந்தது. அந்தக் காலத்தில் பெரியகுளத்தைச் சேர்ந்த வசதியான தொழிலதிபர் கே.செல்லம் ஐயர் கும்பக்கரை நீர்வீழ்ச்சியை குற்றாலத்தைப் போலவே மற்றொரு சுற்றுலாத் தலமாக மாற்ற விரும்பி,1942ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசிடம் அனுமதி பெற்று அந்தப் பகுதியில் தனது சொந்த செலவில் ஆடை அறைகள், படிக்கட்டுகள் மற்றும் குளியலறைகளைக் கட்டியதாக, கும்பக்கரை அருவியில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.   தேனி மேகமலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேனி மேகமலை தேனி மாவட்டத்தின் மேகமலை ஊராட்சியில் அமைந்துள்ள மேகமலை, மேகங்களுக்கு நடுவே அமைந்துள்ளது போன்றே இருக்கும். 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து, மேகமலையை அடையும்போது அதற்கு இந்தப் பெயர் எவ்வளவு பொருத்தம் என்பது உங்களுக்கே புரியும். தேயிலைத் தோட்டங்கள், பசுமையான மலைத் தொடர்கள் என மேகமலை உண்மையில் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது. மேகமலை நீர்வீழ்ச்சி, சுருளி நீர்வீழ்ச்சிகள், அணைகள், மகாராஜா மெட்டு ‘வியூ பாயிண்ட்', தேயிலை, ஏலக்காய் தோட்டங்கள், வெள்ளிமலை ஆகியவை இங்கு குறிப்பிடத்தக்க அடையாளங்கள். யானை, புள்ளிமான் போன்ற காட்டுயிர்களையும் நீங்கள் இங்கு காணலாம். கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வெள்ளி மலைக்குச் செல்லுங்கள். வெள்ளி மலை என்பது, மேகமலை வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். மதுரை யானைமலை பெயருக்கு ஏற்றாற்போல் இந்த மலை பார்ப்பதற்கு யானை உருவில் இருக்கும். விமானத்திலிருந்தோ, வெகு தூரத்திலிருந்தோ பார்த்தால், ஒரு யானை காலை மடக்கிக்கொண்டு படுத்திருப்பது போன்று இருக்கும். இந்த மலையில் சமண படுகைகளும் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. மதுரை மாநகரிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் நெடுஞ்சாலையை ஒட்டி, இந்த யானை மலை அமைந்துள்ளது. சுமார் 4 கி.மீ. நீளம் கொண்ட இந்த மலை, சுமார் 1,200 மீட்டர் அகலம் உடையது. பல்வேறு தமிழ் திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. யானை மலையில் ஏறுவது சற்று சிரமம் என்பதால், கவனத்துடன் செல்ல வேண்டும். இது, இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. சமணர் மலைகள் பட மூலாதாரம்,TAMILNADUTOURISM மதுரையில் உள்ள சமணர் மலைகள் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகவும், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாகவும் இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மலை என அழைக்கப்படும் இந்த சமணர் மலை மதுரை மாவட்டத்தில் உள்ள கீழக்குயில்குடி கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. மலைகளில் காணப்படும் நினைவுச் சின்னங்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 12ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டவை. கோமதேஸ்வரர், மகாவீரர், யக்ஷி மற்றும் யக்ஷா ஆகியோரின் சிற்பங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செட்டிபொடவு தளம் மற்றும் பேச்சிப்பள்ளம் தளம் ஆகியவை இங்குள்ள முக்கிய இடங்கள். செட்டிப்பொடவு தளத்தில் சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரரின் உருவம் உள்ளது. சமண துறவிகள் ஓய்வெடுக்கப் பயன்படுத்திய தட்டையான கற்கள் அல்லது கல் படுக்கைகளையும் இங்கு காணலாம். பேச்சிப்பள்ளத்தில் பாகுபலி, மஹாவீர் மற்றும் பார்ஸ்வநாதர் உள்ளிட்ட எட்டு சமண சிற்பங்கள் அரிய சின்னங்களுடன் உள்ளன. இந்த தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் கிமு 9ஆம் நூற்றாண்டில் சமண துறவிகளால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகள் 200 ஆண்டுகளுக்கும் மேலானவை என நம்பப்படுகிறது. சமணர் மலையில் உள்ள தொல்பொருள் ஆய்வுகள் மலையின் மேல் ஒரு சமணப் பள்ளி இருந்ததாகக் கூறுகின்றன. இந்த இடத்தின் அமைதியான சூழல் மலைகளின் அடிவாரத்தில் உள்ள தாமரைக் குளத்தால் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cv2x075gy0eo
    • 26 APR, 2024 | 09:33 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மாற்றுத்திறனாளிகளுக்கு  வழங்கப்படும் உதவித்தொகை கொடுப்பனவு  5000 ரூபாவிலிருந்து  7500 ரூபா  வரை அதிகரிக்கப்பட்டாலும் அவை குறித்த திகதிகளில் கிடைப்பதாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் சமூகத்தை இவ்வாறான சிரமங்களுக்கு உள்ளாக்காமல் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) பிரதமரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்த அவர் மேலும் பேசுகையில், பொது நிர்வாக சுற்றறிக்கை 1988/27இன் பிரகாரம், அரச நிறுவனங்களில் வேலைவாய்ப்பை வழங்கும்போது மாற்றுத் திறனாளிக்கு 3 வீத  வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என இருந்தாலும், அது இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்து புதிய சட்டமூலம் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டாலும் இதுவரை அது கொண்டுவரப்படவில்லை. குறித்த புதிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்படாமைக்கான காரணங்கள் என்ன? சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம், இந்நாட்டில் 17 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர்.  இவர்களது உரிமைகள் தொடர்பில் பல முறை கேள்வியெழுப்பியுள்ளேன். சைகை மொழி சட்டத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து அதை நாட்டின் சட்டமாக மாற்றுங்கள். பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகள் பிரவேச  அணுகல் விடயத்தில் பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு வற்  வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், சந்தையில் தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றுக்கான தீர்வுகளை வழங்குங்கள். அதுமட்டுமல்லாமல் இவர்களின் காப்புறுதி குறித்து அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/182038
    • KKR vs PBKS: பேர்ஸ்டோ விஸ்வரூபம், வெலவெலத்துப் போன கொல்கத்தா - பஞ்சாபின் வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2024 ஐபிஎல் சீசனில் ஒரு அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோர் என்பது நேற்றைய பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தெரிந்துவிட்டது. 'என்ன அடி... என்ன மாதிரியான ஷாட்கள்...' என்று ரசிகர்களைப் பிரமிக்க வைத்த ஆட்டம் நேற்று நடந்தது. களத்தில் நீயா-நானா பார்த்துவிடலாம் என்ற ரீதியில் கொல்கத்தா அணி வீரர்களும், பஞ்சாப் வீரர்களும் மோதினர். இரு அணி பேட்டர்களின் பேட்டில் இருந்து சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தவாறு இருந்தன. கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் மட்டும் 37 பவுண்டரிகள், 42 சிக்ஸர்கள், 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஏறக்குறைய 10 ஓவர்களை ரசிகர்கள் வானத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்திருக்கும் அளவுக்கு பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தவாறு இருந்தன. இதுவரை ஐபிஎல் டி20 தொடரில், டி20 போட்டிகளில் சேஸிங் செய்ய முடியாத ஸ்கோரை அடைந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்தது. 262 ரன்கள் என்னும் கடின இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் 8 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது.   வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS ஐபிஎல் டி20 போட்டியில், உலக டி20 வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 261 ரன்களை சேஸிங் செய்தது இல்லை. ஆனால், அதையும் 8 பந்துகள் மீதமிருக்கும்போது சேஸிங் செய்து பஞ்சாப் கிங்ஸ் டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் டி20 லீக்கிலும் புதிய வரலாற்றையும், சாதனையையும் படைத்துள்ளது. கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து சேர்த்த ஸ்கோரை பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சேஸிங் செய்து சவால்விட்டது. பஞ்சாப் கிங்ஸ் பேட்டர்கள் பேர்ஸ்டோ, சஷாங் இருவரும் நேற்று இருந்த ஃபார்முக்கு 285 ரன்களைக்கூட சேஸிங் செய்திருப்பார்கள். இருவரும் மதம்பிடித்த யானை போல் பேட்டால் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை வதம் செய்தனர். சவாலாக மாறும் பஞ்சாப் இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் அடையவில்லை என்றாலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி, மற்ற அணிகளுக்கு அச்சத்தைத் தரும். அடுத்து வரும் போட்டிகளில் பஞ்சாப் அணி தொடர் வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்று இன்னும் கடும் போட்டி நிறைந்ததாக மாறிவிடும். பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியால் 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.187 என்ற ரீதியில் இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பஞ்சாப் அணி பெறும் வெற்றி, புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். கொல்கத்தா அணி இந்தத் தோல்வியால் 2வது இடத்திலிருந்து சரியவில்லை. ஆனால் அந்த அணியின் நிகர ரன்ரேட் சரிந்துவிட்டது. இதற்கு முன் ஒரு புள்ளிக்கு மேல் நிகர ரன்ரேட் வைத்திருந்த கொல்கத்தா இந்தத் தோல்வியால் 0.972 ஆகக் குறைந்துவிட்டது. கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது.   பேர்ஸ்டோ விஸ்வரூபம் பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை சந்தித்த 9 போட்டிகளிலும் பேர்ஸ்டோ ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்காமல் இருந்ததால், இந்த சீசன் அவருக்கு மோசமாக அமைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், நேற்று நிதானமாகத் தொடங்கிய பேர்ஸ்டோ, அதன்பின் கோடை இடி முழக்கம்போல் அடிக்கத் தொடங்கினார். பேர்ஸ்டோ பேட்டிலிருந்து தெறித்த பந்துகள் பெரும்பாலும் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறந்தன. மிரட்டலாக பேட் செய்த பேர்ஸ்டோ 45 பந்துகளில் சதம் அடித்து, 108 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். பேர்ஸ்டோ கணக்கில் மட்டும் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் டி20 தொடரில் பேர்ஸ்டோ அடித்த 2வது சதம் இது. மூன்று பார்ட்னர்ஷிப்பில் முடிந்த ஆட்டம் அதேபோல பேர்ஸ்டோவுக்கு நெம்புகோலாக இருந்தது தொடக்க பேட்டர் பிரப்சிம்ரன் சிங். இவரின் அதிரடி ஆட்டத்தால் உற்சாகம் பெற்ற பேர்ஸ்டோ வெளுத்து வாங்கத் தொடங்கினார். பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல சஷாங் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் ஏலத்தில் தவறிப்போய் வேறு சஷாங் சிங்கை எடுத்துவிட்டோமே என்று கவலைப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, தற்போது சஷாங் சிங் பெரிய சொத்தாக, முத்தாக மாறிவிட்டார். இந்த 3 பேட்டர்களும் சேர்ந்துதான் கொல்கத்தா அணி சேர்த்த இமாலய ஸ்கோரை எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றனர். பிரப்சிம்ரன் சிங்-பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப், ரூஸோ-பேர்ஸ்டோ 2வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப், சஷாங் சிங்-பேர்ஸ்டோ 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் என மொத்தமே 3 பார்ட்னர்ஷிப்பில் ஆட்டத்தை முடித்துவிட்டனர்.   நேற்றைய ஆட்டத்தில் படைக்கப்பட்ட சாதனைகள் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் சேஸிங் செய்தது டி20 வரலாற்றிலும், ஐபிஎல் டி20 வரலாற்றில் மிக அதிகபட்சம். இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 259 ரன்களை தென் ஆப்பிரிக்கா சேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஐபிஎல் தொடரில் 224 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது, அந்த ரன்களைவிட 38 ரன்கள் கூடுதலாக சேஸிங் செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் மட்டும் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இதற்கு முன் கடந்த மாதம் மும்பை-சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயும், கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையே 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தது. அது நேற்றைய ஆட்டத்தில் முறியடிக்கப்பட்டது. சேஸிங்கில் பஞ்சாப் கிங்ஸ் அணி 24 சிக்ஸர்களை நேற்று விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த 2வது அதிகபட்ச சிக்ஸர்களாகும். ஐபிஎல் வரலாற்றில் சேஸிங் செய்யும் அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை பஞ்சாப் பெற்றது. இதற்கு முன் ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் 22 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் டி20 போட்டிகளில் இரு அணிகள் சேர்ந்து சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் இது. கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் சேர்ந்து 549 ரன்கள் சேர்த்தன. கொல்கத்தா, பஞ்சாப் அணிகளில் 4 தொடக்க ஆட்டக்காரர்கள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71), பிரப்சிம்ரன் சிங்(54), ஜானி பேர்ஸ்டோ(108) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் 50 ரன்களுக்கு மேல் குவித்தது இதுதான் முதல்முறை. டி20 போட்டியில் இது 11வது முறை. 4 தொடக்க ஆட்டக்காரர்களும் சேர்ந்து 308 ரன்கள் சேர்க்கப்பட்டது ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. இந்த ஆட்டத்தில் 5 பேட்டர்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் வைத்து அரைசதம் அடித்ததும் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. சால்ட்(25பந்துகள்), நரைன்(23பந்துகள்), பிரப்சிம்ரன்(18), பேர்ஸ்டோ(23), சஷாங் சிங்(23) ஆகியோர் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து ஸ்ட்ரைக் ரேட்டை 200க்கு மேல் வைத்திருந்தனர். டி20 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி 7வது முறையாக வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது. இதுதான் டி20 போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச சேஸிங். மும்பை இந்தியன்ஸ், இந்தியா, ஆஸ்திரலேியா, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் 5 முறை மட்டுமே 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளன.   பந்துவீச்சாளர்கள் பாவம் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் போன்ற பேட்டர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட, சொர்க்கபுரி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிலைமை படுமோசமாகும். இந்த ஆட்டத்தில் இரு அணிகளைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களும் துவைத்து எடுக்கப்பட்டனர். இரு அணிகளிலும் சுனில் நரைன், ராகுல் சாஹர் இருவர்தான் ஒற்றை இலக்கத்தில் ரன்ரேட்டை வைத்திருந்தனர். மற்ற வகையில் இரு அணிகளின் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 15 ரன்களை வாரி வழங்கினர். இதுபோன்ற பேட்டர்களுக்கு மட்டும் சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணியாக மாற்றப்படுகிறார்கள். குறிப்பாக ரஸல், ரபாடா, அங்குல் ராய், சாம்கரன், ஹர்சல் படேல், வருண், ஹர்சித் ராணா, சமீரா ஆகியோர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் சராசரியாக 17 ரன்கள் விளாசப்பட்டன. டி20 போட்டி "ரசிகர்களின் ரசிப்புத்தன்மையை அதிகப்படுத்துவதற்காக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேட்டர்களுக்கு மட்டும் உதவும் விக்கெட்டாக மாற்றுவது ஆட்டத்தை ஒருதரப்பாகவே கொண்டு செல்லும். இதில் பந்துவீச்சாளர்களின் பணி, அவர்களுக்கான அறம், மரியாதை அறவே இல்லாமல் போகும்," என்ற விமர்சனம் ஒருபுறம் இதனால் முன்வைக்கப்படுகிறது. பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் விதத்தில் ஆடுகளம் அமைக்கப்பட்டால்தான் ஆட்டம் சுவாரஸ்யமாகச் செல்லும். பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றப்படும்போது, பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை உடைக்கப்படும், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழந்து அடுத்தடுத்த போட்டிகளில் அவர்களின் திறமை பாதிக்கப்படும். எதிர்காலத்தில் இளம் தலைமுறைகள்கூட பேட்டர்களாக மாற விரும்புவார்களே தவிர பந்துவீச்சாளர்கள் மீது வெறுப்பு உண்டாகிவிடும். இதுபோன்ற பேட்டர்களுக்கான விக்கெட் என்பது வீடியோ கேம் பார்த்த உணர்வுதான் ரசிகர்களுக்கு ஏற்படும்.   கொல்கத்தா என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்ள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71) இருவரும் அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த பேட்டர்கள் வெங்கடேஷ் (39), ரஸல்(24), ஸ்ரேயாஸ்(28) என கேமியோ ஆடி உயிரைக் கொடுத்து 261 ரன்கள் சேர்த்தனர். பெரும்பாலும், 120 பந்துகளைக் கொண்ட டி20 போட்டியில் 262 ரன்களை சேஸிங் செய்வது என்பது மிகக்கடினமானது என்று பார்க்கப்பட்டது. 261 ரன்களை அடித்துவிட்டோம் வெற்றி உறுதி என்ற மனநிலையுடன் இருந்த கொல்கத்தா அணிக்கு நேற்றைய சேஸிங் சம்மட்டி அடியாக இறங்கியுள்ளது. 261 ரன்கள் என்பதே மிகப்பெரிய ஸ்கோர் இதையே சேஸிங் செய்துவிட்டதால், எந்த ஸ்கோர் பாதுகாப்பானது என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் 160 ரன்கள் அடித்து ஐபிஎல் தொடரில் டிபெண்ட் செய்யும் அணிகள் இருக்கும் நிலையில் 261 ரன்கள் சேர்த்தும் கொல்கத்தா அணியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பது அந்த அணியின் பந்துவீச்சு மீதும், திறன் மீது பெரிய கேள்வியை எழுப்புகிறது. பஞ்சாப் அணியை 261 ரன்களை சேஸிங் செய்ய அனுமதித்த பந்துவீச்சாளர்கள் மீது குறை சொல்வதா, அல்லது பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றியதைக் குறை சொல்வதா என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் கொல்கத்தா நிர்வாகம் இருக்கிறது. ஆனால், 261 ரன்களைக்கூட டிபெண்ட் செய்ய முடியாவிட்டால், நிச்சயமாக பந்துவீச்சில் பெரிய சிக்கல் ஏதோ இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டர்களை சிந்திக்க வைக்கும் அளவுக்கு, நெருக்கடி தரும் அளவுக்கு கொல்கத்தா பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். இரு ஓவர்களில் நெருக்கடியாக பந்துவீசியிருந்தால் ஆட்டம் மாறியிருக்கும். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருவர்கூட யார்க்கர் வீசவில்லை, ஸ்லோபால் பவுன்ஸர், ஷார்ட்பால் அதிகம் வீசவில்லை. பந்துவீச்சில் வேரியேஷன் என்பதே பெரிதாக இல்லாமல் பேட்டர்களின் பேட்டை நோக்கியே பந்து வீசப்பட்டது பேட்டர்களின் பணியை இன்னும் எளிதாக்கியது. ஆதலால், கொல்கத்தா அணி நிர்வாகம் பந்துவீச்சு குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.   ‘அறியப்படாத ஹீரோ’ சஷாங் சிங் பட மூலாதாரம்,SPORTZPICS சஷாங் சிங், அஷுடோஷ் சர்மா இருவரும் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கிடைத்த இரு சொத்துகள் என்று கூறலாம். பஞ்சாப் அணி கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தோல்வி அடைந்த ஆட்டங்களில் ஆட்டத்தை ஒற்றை பேட்டராக இழுத்து வந்தவர் சஷாங் சிங். ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தாவை சேர்ந்த சஷாங் சிங்கை வாங்குவதற்குப் பதிலாக இந்த சஷாங் சிங்கை ரூ.20 லட்சத்துக்கு வாங்கிவிட்டோமே என்ற கவலையில் இருந்தது. ஆனால், சஷாங் சிங் ஆட்டம் என்பது அவரின் விலையான ரூ.20 லட்சத்துக்கும் அதிகமானது என்பதை பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் புரிந்து கொண்டுள்ளது. பிகாரை சேர்ந்த சஷாங் சிங், சத்தீஸ்கர், மும்பை, புதுச்சேரி அணிகளுக்குக்கூட ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளார். தனது திறமையை அங்கீகரிக்க ஒரு ஆட்டம் கிடைக்காதா என்று ஏங்கியவர் சஷாங் சிங். மும்பை, சத்தீஸ்கர் கிரிக்கெட் வட்டாரங்கள் அறிந்திருந்த சஷாங் சிங்கை இந்தியா முழுவதும் யாரும் இதற்கு முன் அறியவில்லை. ஆனால் கடந்த சில போட்டிகளாக சஷாங் சிங் அடிக்கும் அடி, ஆட்டத்தின் திறமை, உலக கிரிக்கெட்டை திரும்பப் பார்க்க வைத்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாட முடியுமா என்று கேட்கும் அளவுக்கு சஷாங் சிங் ஆட்டம் பேசப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் அணியில் வழக்கமாக 6வது வரிசையில் களமிறங்கும் சஷாங் சிங், நேற்று முதல்முறையாக 4வது வீரராகக் களமிறங்கினார். களமிறங்கி 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் வருண் பந்தவீச்சில் சஷாங் சிக்ஸர் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி என்பது சவாலாக இருந்த நிலையில் சஷாங் சிங் களமிறங்கிய பின் அது இலகுவானது. சமீரா ஓவரில் ஸ்வாட், ஸ்கூப், புல் ஷாட் என 3 விதங்களில் சஷாங் சிங் சிக்ஸர் விளாசி, வெற்றியை எளிதாக்கினார். அது மட்டுமல்லாமல் ஹர்சித் ராணா, ராமன்தீப் ஓவரிலும் சிக்ஸர்களை வெளுத்து வாங்கினார் சஷாங் சிங். 23 பந்துகளில் அரைசதத்தை சஷாங் அடைந்து 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் மட்டும் 8 சிக்ஸர்கள் அடங்கும். பேஸ்பால் ஆட்டமா? பஞ்சாப் சிங்ஸ் கேப்டன் சாம் கரன் வெற்றிக்குப் பின் கூறுகையில், “இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, முக்கியமானவெற்றி. கிரிக்கெட் பேஸ்பாலாக மாறிவிட்டதா என எனக்குத் தோன்றியது. கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தவறவிட்டது கடினமாக இருந்தது. நாங்கள் ஸ்கோரை பார்க்கவில்லை, வெற்றியை மட்டும்தான் பார்த்தோம். பேர்ஸ்டோ மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது அருமை. இந்த சீசனில் நாங்கள் கண்டறிந்த சிறந்த வீரர் சஷாங் சிங். அவருக்கான பணியை இன்றும் சிறப்பாகச் செய்தார். கொல்கத்தாவில் கிடைத்த பெரிய வெற்றியை நாங்கள் ரசிக்கிறோம்,” என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ckdq2ygdqpdo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.