Jump to content

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் கூட்டணி அமைவதில் சிக்கல்கள் நீடிப்பது ஏன்?

ஸ்டாலின்

பட மூலாதாரம்,MK STALIN / FACEBOOK

படக்குறிப்பு,

தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவையும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடங்களை எதிர்பார்க்கின்றன.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 27 பிப்ரவரி 2024, 04:49 GMT

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் கூட்டணிகளை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. கட்சிகளுக்குள் என்ன நடக்கிறது?

இந்தியாவின் 18வது நாடாளுமன்றத்தை தேர்வுசெய்வதற்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. நாடளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாகச் செயல்படும் நிலையில், இந்தியா முழுவதுமே அரசியல் கட்சிகள் கூட்டணிக்கான பேச்சு வார்த்தைகளில் தீவிரமாக இருக்கின்றன.

தமிழ்நாட்டில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க - அ.தி.மு.க. தலைமையில் பிரதான கூட்டணிகளும் வேறு சில கட்சிகள் தனித்தும் போட்டியிடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களில் தமிழக அரசியல் சூழல் வெகுவாக மாறியிருக்கிறது.

தற்போது தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணி, அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணி, பா.ஜ.க. தலைமையில் ஒரு கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி உருவாகியிருக்கிறது.

இதில் தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணியில், இந்திய ஜனநாயகக் கட்சிக்குப் பதிலாக கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் இடம்பெறும்; அதைத் தவிர வேறு மாற்றங்கள் இருக்காது எனக் கூறப்பட்டது.

 
தேர்தல் கூட்டணிகள் தமிழ்நாட்டில் தாமதமாவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஸ்டாலின்-ராகுல் (கோப்புப்படம்)

பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை

தற்போதுவரை இந்தக் கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் இந்திய யூனியன் முஸ்லீம் லீகிற்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுடனான பேச்சு வார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சி கடந்த முறை தமிழ்நாட்டில் 9 இடங்களிலும் புதுச்சேரியில் ஒரு இடம் என பத்து இட போட்டியிட்ட நிலையில் இந்த முறை எப்படியாவது இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட விரும்பியது.

இந்த நம்பிக்கையில்தான் கடந்த ஜனவரி 28ஆம் தேதி சல்மான் குர்ஷித் தலைமையில் அப்போதைய மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, முகுல் வாஸ்னிக், அஜய் குமார் ஆகியோர் அறிவாலயத்திற்கு வந்து தி.மு.கவுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், அந்தப் பேச்சு வார்த்தையில் இடங்களை அதிகரிக்க எந்த வகையிலும் வாய்ப்பில்லை என்பதை தெரிவித்த தி.மு.க குழுவினர், 7-8 இடங்களையே தர முடியும் என்றும் தொகுதிகளிலும் மாற்றம் இருக்கலாம் என்றும் கூறியது. இதற்குப் பிறகு அடுத்தகட்டப் பேச்சு வார்த்தை இதுவரை நடக்கவில்லை.

தி.மு.கவுடன் பேச்சு வார்த்தையை இறுதி செய்து அறிவிக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழ்நாட்டிற்கு வருவதாக இருந்தது. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், அவரது வருகை ஒத்திப்போடப்பட்டிருக்கிறது.

கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளைப் பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிதம்பரத்தில் பானைச் சின்னத்திலும் விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டது. இந்த முறை தனது சின்னத்தில் போட்டியிடவும் கூடுதலாக ஒரு பொதுத் தொகுதியில் போட்டியிடவும் விரும்புகிறது அக்கட்சி. ஆனால், தி.மு.க. தரப்பில் கூடுதல் தொகுதிகளைத் தர மறுப்பதால் பேச்சு வார்த்தையில் பெரிய முன்னேற்றமில்லை.

இடதுசாரிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளையே எதிர்பார்க்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டனம், திருப்பூர் தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, கோயம்புத்தூர் தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஆனால், இந்த முறை கோயம்புத்தூர், திருப்பூர் தொகுதிகளில் தாமே போட்டியிட விரும்புகிறது தி.மு.க.

 
தேர்தல் கூட்டணிகள் தமிழ்நாட்டில் தாமதமாவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலில் தி.மு.கவுடன் இணைந்து போட்டியிடும் என்று பேச்சுகள் அடிபட்டாலும் வெளிப்படையாக பேச்சுவார்த்தைகள் இன்னும் துவங்கவில்லை

கமல்ஹாசனின் நிலை என்ன?

இந்த நிலையில் திங்கட்கிழமையன்று பேச்சு வார்த்தை நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர், பேச்சு வார்த்தை சுமுகமாக இருந்ததாக மட்டும் தெரிவித்தனர். மார்ச் 3ஆம் தேதி மீண்டும் பேச்சு வார்த்தை நடக்குமெனக் கூறப்பட்டிருக்கிறது.

ம.தி.மு.கவைப் பொறுத்தவரை கடந்த முறை, மக்களவையில் ஒரு இடமும் மாநிலங்களவையில் ஒரு இடமும் அளிக்கப்பட்டன. ஈரோடு தொகுதியில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். மாநிலங்களவைத் தொகுதி வைகோவுக்கு அளிக்கப்பட்டது. இந்த முறை ம.தி.மு.கவுக்கு ஒரு மக்களவை இடத்தை மட்டுமே அளிக்க தி.மு.க. முன்வந்திருக்கிறது. விருதுநகர் அல்லது திருச்சி தொகுதியை தி.மு.க. முன்வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த இரு தொகுதிகளுமே காங்கிரசின் தொகுதிகள் என்பதால் இழுபறி நீடிக்கிறது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலில் தி.மு.கவுடன் இணைந்து போட்டியிடும் என்று பேச்சுகள் அடிபட்டாலும் வெளிப்படையாக பேச்சுவார்த்தைகள் இன்னும் துவங்கவில்லை.

கடைசி கட்டத் தகவல்களின்படி, இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் காங்கிரசுடனான கூட்டணி இறுதிசெய்யப்படும் என்றும் அன்றைய தினமே மக்கள் நீதி மய்யத்திற்கான இடங்களும் முடிவுசெய்து அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. காங்கிரசிற்கு வழங்கப்படும் இடங்களில் இருந்து ம.நீ.மவுக்கு இடங்கள் ஒதுக்கப்படும் வகையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம்.

சி.பி.ஐ.யைப் பொறுத்தவரை மக்களவை இடம் ஒன்றும் மாநிலங்களவை இடம் ஒன்றும் ஒதுக்கி, கூட்டணி இறுதிசெய்யப்படலாம். சி.பி.எம்மிற்கு மதுரை, கோயம்புத்தூர் தொகுதிகளே திரும்ப வழங்கப்படலாம். அல்லது மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் அளிக்கப்படலாம் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவையும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடங்களை எதிர்பார்க்கின்றன. ஆனால், அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவே தெரியவருகிறது.

2021 சட்டமன்றத் தேர்தலில் ஒன்றாகப் போட்டியிட்ட அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் தற்போது தனித்தனியாகப் போட்டியிடுவதால் ரொம்பவும் திண்டாடிப் போயிருப்பது அந்தக் கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள்தான்.

 
தேர்தல் கூட்டணிகள் தமிழ்நாட்டில் தாமதமாவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க. ஆகிய இரு கட்சிகளை கூட்டணியில் இணைப்பதில் அதிமுக தீவிரம் காட்டுகிறது.

அதிமுக, பாஜக என்ன செய்கிறது?

அ.தி.மு.கவைப் பொறுத்தவரை, பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க. ஆகிய இரு கட்சிகளை கூட்டணியில் இணைப்பதில்தான் தீவிரம் காட்டுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியுடன் தீவிரமாக பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. சில நாட்களில் அறிவிப்புகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தே.மு.தி.கவைப் பொறுத்தவரை பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுடனுமே பேச்சு வார்த்தை நடத்திவருகிறது. ஆனால், அக்கட்சியின் எதிர்பார்ப்புகள் அதிகம் இருப்பதால் இரு கட்சிகளுமே இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை.

"அடுத்த திங்கட்கிழமையை ஒட்டி அறிவிப்புகள் வெளியாகலாம். பெரிய கட்சிகள் எங்களுடன்தான் கூட்டணி அமைப்பார்கள்" என்கிறார் அ.தி.மு.கவைச் சேர்ந்த தலைவர் ஒருவர்.

பிரதமர் தமிழ்நாட்டுக்கு வரும்போது அந்த மேடையில் பா.ம.க., தே.மு.தி.க. இடம்பெறாவிட்டால், அக்கட்சிகள் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.

பா.ஜ.கவுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கப்போவதாக ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் அறிவித்திருக்கின்றன.

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தேவநாதன் யாதவ் இந்தக் கூட்டணியில் ஒரு இடத்தை எதிர்பார்க்கிறார். பிரதமர் நரேந்தர மோதி தமிழ்நாட்டிற்கு வரும்போது அவருடன் மேடையில் பா.ம.க., தே.மு.தி.க. போன்ற பெரிய கட்சிகளை கூட்டணிக் கட்சிகளாக மேடை ஏற்ற நினைத்தது பா.ஜ.க. ஆனால், ஜி.கே. வாசன், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் மட்டுமே கூட்டணிக் கட்சிகளாக பிரதமரைச் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
தேர்தல் கூட்டணிகள் தமிழ்நாட்டில் தாமதமாவது ஏன்?

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,

டிடிவி தினகரன்

கூட்டணிகள் எப்போது இறுதியாகும்?

இதற்கிடையில், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடனும் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து வருகின்றன. ஓ. பன்னீர்செல்வம் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற ஆர்வம் காட்டினாலும், அதே போன்ற ஆர்வம், பா.ஜ.க. தரப்பிலிருந்து வெளிப்படவில்லை.

ஆனால், கூட்டணிகள் எல்லாம் இறுதிசெய்யப்பட இன்னும் காலம் இருக்கிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம்.

"இதையெல்லாம் தாமதம் என்றே சொல்ல முடியாது. ஏப்ரல் மாதம்வரை கூட்டணியை இறுதிசெய்யலாம். முன்பே கூட்டணிகளை அறிவித்து, இடங்களையும் அறிவிப்பதில் பல சிக்கல்கள் இருக்கும். கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் உள்ள கட்சிக்காரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள், வெளியேறுவார்கள். அதையெல்லாம் பெரிய கட்சிகள் தவிர்க்க நினைக்கும். ஆகவே இன்னும் பல நாட்கள் கழித்தே கூட்டணிகள் இறுதியாகும்" என்கிறார் ஷ்யாம்.

https://www.bbc.com/tamil/articles/c9040gp3y7do

Link to comment
Share on other sites

  • Replies 437
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

வைரவன்

நாம் தமிழர் கச்சி மெய்யாலுமே புத்தி கூடிய கச்சி தான் எல்லா கட்சிகளும் தேர்தலில் தோற்ற பின் தான், எல்லாவற்றிலும் பழி போடும். ஆனால் நாம் தமிழர் கச்சி தோற்கப் போகிறோம் எல்லா இடங்களிலு

ரசோதரன்

Quora இல் இந்த அர்த்தம் இருந்தது. இவர்கள் சொல்வது எல்லாம் சரியா அல்லது தப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு தெளிவு கிடையாது... திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்ற சொல் தமிழின் சமக்கிருத த

நிழலி

மேலே எழுதியும் இணைத்தும் உள்ளன்.  அங்கீகரிக்கப்படாத கட்சி எனில் ஒவ்வொரு தேர்தலிலும் சின்னம் ஒன்றை கேட்டுப் / விண்ணப்பித்து பெற வேண்டும். நா.க. அவ்வாறு விண்ணப்பிக்க முன், இன்னொரு கட்சி அதே வி

  • கருத்துக்கள உறவுகள்

திமுக – மநீம தொகுதி பங்கீடு : கமல்ஹாசன் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல்!

27 FEB, 2024 | 02:20 PM
image

திமுக – மநீம கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக கமல்ஹாசன் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்மையில் நடத்தியது.

 

இதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்தது.  அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,  மதிமுக,  கொமதேக ஆகிய கட்சிகள் பங்கேற்றன.  இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொமதேக கட்சிகளுக்கு ராமநாதபுரம் மற்றும் நாமக்கல் ஆகிய தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனைத் தொடர்ந்து திமுக,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை  அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.  இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.  இரண்டு இடதுசாரி கட்சிகளும் பேச்சுவார்த்தையில் இணக்கமாக அமைந்ததாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசனை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த சந்திப்பில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 மற்றும் 2021 பொது தேர்தல்களில் 61 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு 7.35 சதவீதம் முதல் 9.62 சதவீதம் வாக்கு பெற்றுள்ளதால் மக்கள் நீதி மய்யத்திற்கு குறைந்தது 2 தொகுதிகள் வேண்டும் என ம.நீ.ம கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல காங்கிரஸ் கட்சியுடன் ஓரிரு நாளில் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையை திமுக நடத்த உள்ளது.  ஒரு வாரத்திற்குள் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்று அடையாளம் கண்டு தொகுதி பங்கீடை முடிக்க திமுக திட்டமிட்டுள்ளது.  மார்ச் 2 வது வாரத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வுக்காண நேர்காணலை நடத்தவும் அக்கட்சி முடிவு செய்யவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

https://www.virakesari.lk/article/177426

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க - இடதுசாரி கூட்டணிப் பேச்சுவார்த்தை இறுதி ஆகியும் தொகுதிகள் சொல்லப்படாதது ஏன்?

தி.மு.க கூட்டணிப் பேச்சுவார்த்தை

பட மூலாதாரம்,FILE PHOTO

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 37 நிமிடங்களுக்கு முன்னர்

தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கான இடங்களின் எண்ணிக்கை இறுதிசெய்யப்பட்டாலும், தொகுதிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

கூட்டணியில் என்ன நடக்கிறது?

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணிகளை இறுதிசெய்வதில் தி.மு.க. தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. அ.தி.மு.க. தரப்பிலும் கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் நடந்துவந்தாலும், வெளிப்படையாக அது குறித்து ஏதும் சொல்லப்படவில்லை.

தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுடன் ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டு இரு கட்சிகளுக்கும் தலா ஒரு இடம் என அறிவிக்கப்பட்டுவிட்டது.

இதற்குப் பிறகு எல்லா கட்சிகளுடனும் முதற்கட்டமாக பேச்சு வார்த்தை நடந்த பிறகும், பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை தேங்கி நிற்கிறது. கடந்த ஜனவரி 28-ஆம் தேதி சல்மான் குர்ஷித் தலைமையில் அப்போதைய மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முகுல் வாஸ்னிக், அஜய் குமார் ஆகியோர் அறிவாலயத்திற்கு வந்து தி.மு.கவுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அந்தப் பேச்சு வார்த்தையில் காங்கிரஸ் ஏற்கனவே வெற்றிபெற்ற 8 என்ற எண்ணிக்கையில் மட்டுமே தொகுதிகளை தருவதாகவும் ஒன்றிரண்டு தொகுதிகள் மாறலாம் என்றும் தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், காங்கிரசைப் பொறுத்தவரை தமிழகத்தில் 9, புதுச்சேரியில் 1 என்ற எண்ணிக்கையில் உறுதியாக நிற்பதால், மேற்கொண்டு எதுவும் நடக்கவில்லை.

இந்த நிலையில்தான் மீதமிருக்கும் கட்சிகளுடன் பேச்சு வார்த்தையை நடத்தி முடிக்க முடிவுசெய்தது தி.மு.க. திங்கட்கிழமையன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சு வார்த்தைக்குப் பிறகு ஊடகத்தினருடன் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், பேச்சு வார்த்தை சுமுகமாக இருந்ததாகவும் அடுத்த கட்ட பேச்சு வார்த்தை மார்ச் 3-ஆம் தேதி நடக்கும் என்றும் கூறியிருந்தனர்.

 
தி.மு.க கூட்டணிப் பேச்சுவார்த்தை

பட மூலாதாரம்,FACEBOOK/STALIN

தொகுதிப் பெயர்கள் ஏன் வெளியிடப் படவில்லை?

ஆனால், அதற்கு முன்பாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும் வியாழக்கிழமையன்று பேச்சு வார்த்தைக்கு அழைத்த தி.மு.க. இடங்களை இறுதிசெய்திருக்கிறது. அதன்படி, இந்த இரு கட்சிகளுக்கும் கடந்த தேர்தலைப் போலவே தலா இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆனால், எந்தெந்த தொகுதிகளில் இந்தக் கட்சிகள் போட்டியிடும் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. 2019-ஆம் ஆண்டு தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டனம், திருப்பூர் தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, கோயம்புத்தூர் தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஆனால், இந்த முறை கோயம்புத்தூர், திருப்பூர் தொகுதிகளை பல்வேறு காரணங்களுக்காக மாற்றிக்கொள்ள விரும்புகிறது தி.மு.க.

"எங்களைப் பொறுத்தவரை நாங்கள் ஏற்கனவே போட்டியிட்ட இரண்டு இடங்களையும் கேட்டிருக்கிறோம். அதேபோலத்தான் அவர்களும் கேட்டிருக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ், ம.தி.மு.கவுடனான தொகுதிகளை இறுதிசெய்வதில் இழுபறி நீடிக்கிறது. குறிப்பாக ம.தி.மு.கவுக்கு திருச்சி அல்லது விருதுநகரை ஒதுக்க நினைக்கிறார்கள். ஆனால், அவை காங்கிரசின் தொகுதிகள். இதில் ஒரு தீர்வைக் காண்பதற்கான பேச்சு வார்த்தைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன. அப்படியிருக்கும்போது இடதுசாரிக் கட்சிகளுக்கு மட்டுமான தொகுதிகளை அறிவித்தால் நன்றாக இருக்காது என்பதால் அவற்றை அறிவிக்கவில்லை. காங்கிரசுடனான இடங்கள் இறுதிசெய்யப்படும்போது தொகுதிகள் என்பது அறிவிக்கப்படும்" என்கிறார் இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர்.

 
தி.மு.க கூட்டணிப் பேச்சுவார்த்தை

திமுக-மதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை

இதற்கிடையில் ம.தி.மு.கவும் தி.மு.கவும் இன்று மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தின. இந்தப் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. தி.மு.கவைப் பொறுத்தவரை ஒரு இடத்தை அளிப்பதோடு, கடந்த முறையைப் போலவே தி.மு.கவின் சின்னத்தில் போட்டியிடும்படி கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், ம.தி.மு.கவைப் பொறுத்தவரை கடந்த தேர்தலைப் போல ஒரு மக்களவைத் தொகுதியையும் ஒரு மாநிலங்களவை தொகுதியையும் எதிர்பார்க்கிறது. மேலும், பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட விரும்புகிறது.

இதன் காரணமாகவே, மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருக்கிறார். தன்னுடைய மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வில் வைகோ சார்பில் முறையிடப்பட்டிருக்கிறது. அதன்படி இந்த வழக்கு நாளை (மார்ச் 1) விசாரணைக்கு வருகிறது.

"தி.மு.க. கூட்டணியில் பேச்சு வார்த்தைகள் இழுத்துக்கொண்டே போவதற்கு முக்கியக் காரணம், காங்கிரசுடனான இடங்கள் இறுதிசெய்யப்படாததுதான். ம.தி.மு.கவுக்கு திருச்சியைக் கொடுத்துவிட நினைக்கிறது தி.மு.க. ஆனால், திருச்சியில் அமைச்சர் நேருவின் மகன் போட்டியிட விரும்புகிறார். காங்கிரசிற்கு திருச்சிக்குப் பதிலாக கடலூரைத் தர தி.மு.க. முன்வந்திருக்கிறது. ஆனால், தங்களிடமிருந்து திருப்பூரை எடுத்தால், கடலூரைத் தர வேண்டும் என்கிறது சி.பி.ஐ. அதேபோல, கமலுக்கு கோவையைத் தரலாம் என கருதியது தி.மு.க. ஆனால், அவர் தென் சென்னைத் தொகுதியை விரும்புகிறார். இதனால்தான் பேச்சு வார்த்தைகள் இழுத்துக்கொண்டே செல்கின்றன" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

காங்கிரசுடனான இடங்கள் இறுதிசெய்யப்பட்டால், மற்ற கட்சிகளுடனான இடங்களையும் தொகுதிகளையும் இறுதிசெய்துவிடலாம் என்பதால் காங்கிரசுடனான பேச்சு வார்த்தைகளை ஒன்றிரண்டு நாட்களில் மீண்டும் துவங்கவிருக்கிறது தி.மு.க.

இதற்குப் பிறகு விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம் கட்சிகளுடன் பேச்சு வார்த்தையை நடத்தி முடிக்க விரும்புகிறது தி.மு.க. ஆகவே அடுத்த சில நாட்களில் தி.மு.க. கூட்டணியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என நம்பலாம்.

https://www.bbc.com/tamil/articles/cn3n83kydeeo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் மறுப்பு - பின்னணி என்ன? தேர்தல் ஆணைய நடைமுறை என்ன?

நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் மறுப்பு

பட மூலாதாரம்,X/நாம் தமிழர் கட்சி

3 மணி நேரங்களுக்கு முன்னர்

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் இந்த முறை கிடைக்கவில்லை. இதுதொடர்பாக அக்கட்சியின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் சீமான் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார்.

கடந்த தேர்தல்களைப் போலவே கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தனர். வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை நீதிபதி மன்மோகன், நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்திருந்த மனுவைத் தள்ளுபடி செய்து இன்று(திங்கள்கிழமை) வழக்கை முடித்து வைத்தனர்.

வழக்கின் இன்றைய நிலையில், நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட முடியாது. கடந்த ஆண்டு இறுதியில், கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதே காரணம். அதனால்தான், இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னம் கிடைக்கவில்லை.

என்ன நடந்தது?

தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாம் தமிழர் கட்சி 2010-இல் தொடங்கப்பட்டது. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் அக்கட்சி தேர்தலில் போட்டியிடத் தொடங்கியது.

கடந்த 2019 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஆண், பெண் இரு பாலருக்கும் சரிபாதி தொகுதிகளை ஒதுக்கியது. அதாவது, அக்கட்சி சார்பில் 20 தொகுதிகளில், ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண்களையும் களமிறங்கினர்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, பதிவுபெற்ற கட்சிகளுக்கான சின்னங்களை ஒதுக்கும் பணியை, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆணடு அக்டோர் மாதம் தொடங்கியது.

இந்த நிலையில், டிசம்பர் 17 ஆம் தேதி, கர்நாடகாவைத் சேர்ந்த ஒரு பதிவுபெற்ற கட்சி, கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டதால், அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் அந்தச் சின்னத்தை ஒதுக்கியது. அந்தச் சின்னத்திற்காக நாம் தமிழர் கட்சியினர் தாமதமாகவே அணுகியிருக்கிறார்கள்.

இது பாஜகவின் சதி எனச் சாடினார் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

ஊடகங்களிடம் பேசிய அவர்,”நாங்கள் முதன் முதலில் தேர்தலில் போட்டியிடுவதற்காக சின்னத்தை கோரிய போது, நாங்கள் மயில் சின்னத்தைக் கேட்டோம். அது தேசியப் பறவை என்பதால், அந்தச் சின்னத்தை ஒதுக்க மறுத்தனர். ஆனால், தேசிய மலரான தாமரையை பாஜக,விற்கு ஒதுக்கியுள்ளார். இருவருக்கும் ஒரே நியாயம் என்றால், அவர்களுக்கும் தாமரையை ஒதுக்கியிருக்கக் கூடாது,” என்றார்.

இதுதொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி, கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கே மீண்டும் ஒதுக்கக் கோரி, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிற்கு கடிதம் எழுதினார். அதற்கு எந்த பதிலும் வராத நிலையில், அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார்.

 

என்ன சொன்னது உயர் நீதிமன்றம்?

தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம்,TWITTER

நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு மார்ச் 1 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, பல தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டிருப்பதை கருத்தில் கொண்டு இந்த முறையும் அந்தச் சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என அக்கட்சி சார்பில் வாதிடப்பட்டது.

வாதத்தின் போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி மோகன், “பொது சின்னம் பட்டியலில் உள்ள அந்த சின்னத்தை முதலில் கோருபவர்களுக்கு முன்னுரிமை அளித்து தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அதன்படி, அந்த சின்னம் தற்போது வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது,”எனக் கேட்டார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி, “எந்த ஒரு குறுப்பிட்ட கட்சிக்காகவும் ஆணையத்தின் நடைமுறையை மாற்ற முடியாது. நாம் தமிழர் கட்சி இன்னும் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சி. அப்படியிருக்கும் போது எப்படி ஒரு குறிப்பிட்ட சின்னத்தை உரிமை கோர முடியும்,”எனக் கேட்டார்.

வழக்கு விசாரணை முடிந்த பிறகு வழக்கு மீதான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என வழக்கை ஒத்தி வைத்தார். இந்நிலையில், வழக்கு தொடர்பாக தீர்ப்பு இன்று வெளிவந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்திற்கு எந்த உத்தரவும் இடாமல், நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

 

நாம் தமிழர் கட்சி கூறுவது என்ன?

நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் மறுப்பு

அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கே சின்னங்கள் ஒதுக்கப்படும் என்பது உண்மைதான் என்று கூறும் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி,“பதிவு செய்யப்பட்ட கட்சி தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு, அதே சின்னத்தில் ஒரு விழுக்காடு வாக்குகளுக்கு மேல் பெற்றால், அவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்.

நாங்கள் எட்டு விழுக்காடு வரை வாக்குகள் பெற்றுள்ளோம். இந்த முறை எங்களுக்கு இந்தச் சின்னத்தைக் கொடுத்தால், நிச்சயம் அதை விட அதிக சதவீத வாக்குகள் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் பட்டியலில் இடம்பெறுவோம். அதைத் தடுக்கவே, இப்படி சதி செய்துள்ளார்கள்,”என்று கார்த்தி சாடினார்.

உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதாகவும் கார்த்தி கூறினார்.

கட்சிகள் அங்கீகாரம் - தேர்தல் ஆணைய நடைமுறை என்ன?

தேர்தல் ஆணையம் தேர்தல் சின்னங்கள்(ஒதுக்கீடு) 1968 ஆணையின் மூலம் அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கன்றது. அதன்படி, தேர்தல் ஆணையம், இரண்டு வகையாக கட்சிகளை அங்கீகரிக்கிறது. ஒன்று- அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி; இரண்டு- அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி.

  • அரசியல் கட்சிகள் இந்த அங்கீகாரத்தை பெறவேண்டும் என்றால் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யவேன்டும். ஒரு கட்சி மாநில கட்சி அங்கீகாரத்தை பெற கீழுள்ள நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டப் பேரவை தேர்தலில் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும்.
  • மாநில சட்டப் பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 2 இடங்களில் வெற்றிப் பெற்றிருக்க வேண்டும்.
  • மாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை 234 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் 3 சதவீதம், அதாவது 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
  • அதேபோல அம்மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 1 நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிப் பெற்றிருக்க வேண்டும்.
  • நாடாளுமன்றத் தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி. தொகுதிகளில் 25 இடங்களுக்கு ஒன்று வீதம் வெல்ல வேண்டும். அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதியில் 2 தொகுதிகளில் வெல்ல வெண்டும்.
 

ஒரு கட்சி தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற கீழுள்ள நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றில் தகுதி பெற்றிருக்கவேண்டும்.

  • நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் பதிவாகும் வாக்குகளில் 6 சதவீத வாக்குகள் பெறுவதோடு, 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
  • நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள தொகுதிகளில் 2 சதவீத இடங்களை(11 இடங்கள்) 3 வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வெற்றி பெற வேண்டும்.
  • ஒரு அரசியல் கட்சி 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிப்பட்ட மாநில கட்சியாக இருக்க வேண்டும்.

https://www.bbc.com/tamil/articles/c51ex253z28o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டிற்கு ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பிரதமர் மோதி வருகை - பா.ஜ.க. வியூகம் என்ன?

பிரதமர் மோதி அடிக்கடி தமிழகத்திற்குப் பயணம் செய்வது ஏன்?

பட மூலாதாரம்,@BJP4TAMILNADU/X

5 மார்ச் 2024, 02:56 GMT
புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த 7 நாட்களில் இரண்டாவது முறையாக தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் நரேந்திர மோதி, அரசியல் கூட்டங்களிலும் பங்கேற்றிருக்கிறார். ஆளும் தி.மு.கவைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். ஆனால், இந்தக் கூட்டங்களில் கவனிக்க வேண்டிய வேறு சில அம்சங்களும் இருக்கின்றன.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரனுடன் உரையாடினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். பேட்டியிலிருந்து:

கடந்த சில நாட்களுக்குள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு பயணம் செய்துவிட்டார். தேர்தலே அறிவிக்காத நிலையிலும் அரசியல் கூட்டங்களிலும் பங்கேற்றுப் பேசியிருக்கிறார். என்ன காரணம்?

இன்னும் பத்து நாட்களில் பல மாநிலங்களுக்குப் பயணம் செய்து, பல திட்டங்களைத் துவக்கி வைக்கவிருக்கிறார். அவரது பயணத் திட்டத்தின் அடிப்படையில்தான் தேர்தலே அறிவிக்கப்படப் போகிறது. 7 நாட்களுக்குள் தமிழ்நாட்டிற்கு இரண்டாவது முறையாக வந்திருக்கிறார். காலை தெலங்கானா வந்துவிட்டு, மதியம் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். மீண்டும் தெலங்கானா சென்று இரவு தங்குகிறார். பா.ஜ.க. 370 - 400 தொகுதிகளைப் பெற வேண்டும் என நினைக்கிறார்கள். அந்த அளவு தொகுதிகளைப் பெறுவோமா என்ற சந்தேகம் வந்துவிட்டது. இதன் காரணமாக எல்லா மாநிலங்களுக்கும் தொடர்ந்து பயணம் செய்கிறார்.

 

உண்மையிலேயே வளர்ச்சி, சாதனைகளைச் செய்திருந்தால் இத்தனை பயணங்கள் தேவையில்லை. ஒரு முறை மன் கீ பாத் பேசுவதைப் போல பேசிவிட்டுப் போய்விடலாம். ஊர் ஊராக பிரசாரம் செய்யத் தேவையில்லை. இதற்கு முன்பாக 303 இடங்களை உச்சபட்சமாக பெற்றார்கள். மீண்டும் அந்த அளவுக்கு இடங்களைப் பெறுவார்களா என்பது அவர்களுக்கே சந்தேகமாக இருக்கிறது. இந்தியா கூட்டணி கலகலத்துப் போய்விடும் என்றார்கள். ஆனால், உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைந்துவிட்டது. பிகாரில் அமைந்துவிட்டது. டெல்லியில், குஜராத்தில், மத்திய பிரதேசத்தில் அமைந்துவிட்டது. இப்படியாக ’இந்தியா’ கூட்டணி வலுவடைந்து வருகிறது.

திங்கட்கிழமை பேசும்போது மோதி சொன்னார், "நான் சென்னை வரும்போதெல்லாம் சிலருக்கு அடிவயிற்றைக் கலக்குகிறது" என்றார். ஆனால், உண்மையில் இவர்கள்தான் பயந்துபோயிருக்கிறார்கள்.

 
மு.க.ஸ்டாலின்

370- 400 என்ற எண்ணிக்கையில் இடங்களை உறுதிப்படுத்த வேண்டுமென்றால், அவர்கள் வலுவாக இருக்கும் மாநிலங்களிலேயே இதைச் செய்யலாமே... தமிழ்நாடு போல கட்சி பலவீனமாக இருக்கும் மாநிலத்தில் ஏன் செய்ய வேண்டும்?

இங்கே 39 இடங்களையும் தி.மு.க. பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. ஆனாலும் மோதி இங்கே வருகிறார். தி.மு.க. ஆட்சிக்கு எதிரான அதிருப்தி இருக்கிறது. ஆனால், மோதி எதிர்ப்பு என்ற ஒற்றை விஷயத்தின் காரணமாக தி.மு.க. அதனை அறுவடை செய்கிறது. தி.மு.கவை வீழ்த்த பா.ஜ.க. மட்டும் போதாது. அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகியவையும் வேண்டும். இப்படி ஒரு வலுவான கூட்டணியை அமைத்தால், 12- 15 இடங்களைப் பிடிக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அது உண்மையும்கூட. தி.மு.க. வீழ்த்த வலிமையான கூட்டணி தேவை. இது அவர்களுக்கும் தெரியும். அதனால், இப்போதுவரை அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த வாரத்தில் மட்டும் ஐந்தாறு முறை பா.ஜ.கவின் தூதர்கள் சந்தித்துவிட்டார்கள். முதலில் வாசன் சந்தித்தார். பிறகு அமித் ஷாவின் நண்பர் ஒருவர் வந்து பார்த்தார். சில நாட்களுக்கு முன்பாக முன்னாள் நீதிபதி ஒருவர் வந்து சந்தித்தார். அப்படி ஒரு கூட்டணி அமைந்தால், அந்தக் கூட்டணிக்கு 12 இடங்களும் அதில் பா.ஜ.கவுக்கு 4-5 இடங்களும் கிடைக்காதா என்ற நோக்கம்தான் மோதியை திரும்பத் திரும்ப இங்கே வர வைக்கிறது.

கடந்த கூட்டத்தில் அ.தி.மு.கவின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா ஆகியோரைப் புகழ்ந்து பிரதமர் பேசினார். அது அ.தி.மு.கவின் வாக்குகளை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சி என அரசியல் நோக்கர்கள் கருதினார்கள். ஆனால், நீங்கள் பா.ஜ.க. இன்னமும் அ.தி.மு.க. கூட்டணிக்கு முயல்வதாகச் சொல்கிறீர்கள். முரணாக இருக்கிறதே..

 
ஜெயலலிதா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மோதி பேசிய பேச்சு எதிர்மறையாகிவிட்டது. எடுபடவில்லை. எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசினால், அ.தி.மு.க. தொண்டர்கள் தங்கள் பக்கம் வருவார்கள், எடப்பாடி பழனிசாமி இறங்கிவருவார் என நினைத்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை. எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் பேசிய மோதி, ஏன் எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசவில்லை என தொண்டர்கள் நினைக்கிறார்கள். ஒன்று, அவரது ஆட்சி மோசம் என சொல்ல வேண்டும். இல்லையென்றால், நல்லாட்சி எனச் சொல்ல வேண்டும். எதுவுமே சொல்லவில்லையென்றால் எப்படி என்றுதான் கேட்பார்கள்.

பல்லடத்தில் பேசிய பேச்சுக்கு பலன் இல்லை என்றவுடன் திருநெல்வேலியில் தி.மு.கவை கடுமையாகத் தாக்கிப் பேசினார் மோதி. தி.மு.கவைத் தாக்கிப் பேசும்போது, தி.மு.க. கொள்ளையடித்த பணத்தை மீட்போம் என்கிறார். மூன்றாண்டுகளாகிவிட்டன, எவ்வளவு பணத்தை மீட்டார்கள்?

அ.ம.மு.கவின் டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் பா.ஜ.க. கூட்டணியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், கடந்த இரு கூட்டங்களிலும் அவர்கள் பங்கேற்கவில்லை. என்ன காரணம்? அவர்கள் கூட்டணிக்குத் தேவையில்லையென பா.ஜ.க. கருதுகிறதா?

ஓ.பன்னீர்செல்வம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எடப்பாடி பழனிசாமி கோபித்துக் கொள்ளக்கூடாது என நினைக்கிறார்கள். அதுதான் காரணம். பா.ஜ.கவின் கூட்டணிக் குழு, ஜான் பாண்டியன், ஜி.கே. வாசன், தமிழருவி மணியன் போன்றோரையெல்லாம் சந்திக்கிறது. ஆனால், தென் மாவட்டங்களில் 3.5 - 4 சதவீதம் வாக்கு வங்கியுள்ள டிடிவி தினகரனை சந்திக்கவில்லை. இத்தனைக்கும் ஓ.பன்னீர்செல்வம் பேச்சைக் கேட்டு, பா.ஜ.க. கூட்டணியில்தான் இருப்பதாக அவர் திரும்பத் திரும்பச் சொல்கிறார். இருந்தபோதும் சந்திக்க மறுக்கிறார்கள். கடந்த நான்கைந்து தடவைகளாக, பா.ஜ.க. தலைவர்கள் யார் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்திப்பதில்லை.

சில வாரங்களுக்கு முன்பாக பா.ஜ.கவின் தலைவர் ஜே.பி. நட்டா சென்னைக்கு வந்தார். அப்போது அவரைச் சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் விரும்பினார். அவரைச் சந்திப்பதற்காக விமான நிலையத்திலும் லீ மெரிடியன் ஹோட்டல் வாசலிலும் காத்திருந்தார் ஓ. பன்னீர்செல்வம். இருந்தபோதும் வாய்ப்பளிக்கப்படவில்லை.

பல்லடம் கூட்டத்தில் கூட்டணித் தலைவர்கள் அனைவரும் மேடை ஏற்றப்பட்டார்கள். ஆனால், ஓ.பி.எஸ். - டிடிவி அழைக்கப்படவில்லை. சென்னையிலும் அவர்கள் மேடையேற்றப்படவில்லை. காரணம், எடப்பாடி பழனிசாமிக்காக பா.ஜ.க. காத்திருக்கிறது.

பிரதமர் சென்னைக்கும் வரும் நாளில் முதல்வர் மயிலாடுதுறைக்குப் போய்விட்டார். பிரதமர் வரும்போது முதல்வர் ஊரில் இல்லாத வகையில் பார்த்துக் கொண்டதற்கு என்ன காரணம்?

தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் இருக்கும் மேடையில் முதலமைச்சர் இருக்க விரும்பவில்லை. அதேபோல, பிரதமருடன் மேடையில் இருந்தால் அவர் கட்டி அணைப்பார், மிக நெருக்கமாக இருப்பதாகக் காண்பிப்பார். அது தவறான சமிக்ஞைகளைத் தந்துவிடக்கூடாது என மு.க. ஸ்டாலின் நினைக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளத்தின் துவக்க விழாவில் பங்கேற்க எ.வ. வேலுவை அனுப்பினார். இத்தனைக்கும் அது அரசு விழா. அப்படியிருந்தாலும் ஒரே மேடையில் இருக்க முதலமைச்சர் விரும்பவில்லை. அதைப்போலத்தான் சென்னையில் இருந்தால், அவரைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் தவிர்த்துவிட்டார் முதலமைச்சர்.

 

கடந்த திருநெல்வேலி கூட்டத்தில் தி.மு.கவை பிரதமர் கடுமையாகத் தாக்கிப் பேசினார். தங்கள் திட்டங்களுக்கு தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக குறிப்பிடுகிறார். இந்தப் பேச்சுக்கு மக்கள் மத்தியில் தாக்கம் இருக்கும் என நினைக்கிறீர்களா?

மு.க.ஸ்டாலின் - நரேந்திர மோதி

பட மூலாதாரம்,@MKSTALIN

படக்குறிப்பு,

மு.க.ஸ்டாலின் - நரேந்திர மோதி (கோப்புப்படம்)

சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. நிவாரண உதவியாக தமிழ்நாடு அரசு 37,000 கோடி ரூபாயைக் கேட்டது. தன் பங்களிப்பாக மத்திய அரசு ஏதாவது கொடுத்ததா? எதுவும் கொடுக்கவில்லை. ஆனால், தாங்கள் கொடுக்கும் பணத்தில்தான் மாநில அரசு நிதி தருவதாக மேடையில் சொல்கிறார் பிரதமர்.

சமீபத்திய சட்டமன்றக் கூட்டத் தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு தகவலைத் தெரிவித்தார். அதாவது பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பெருமளவு நிதியை மாநில அரசுதான் தருவதாக புள்ளிவிவரங்களுடன் அவர் குறிப்பிட்டார். இப்படி மாநில அரசு அதிக நிதி தரும் திட்டத்திற்கு பிரதமரின் பெயர் சூட்டப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அதேபோல, மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை பணம் தரவில்லை, இதனால் மாநில அரசே முழுச் செலவையும் ஏற்க வேண்டியிருப்பதாகவும் நிதியமைச்சர் கூறுகிறார். ஆனால், மெட்ரோ திட்டத்திற்கு பொத்தாம்பொதுவாக தாங்கள்தான் நிதி அளித்ததாகச் சொல்கிறார் பிரதமர்.

ஒரு நிதியமைச்சர் சட்டமன்றத்திலேயே குற்றம்சாட்டிய பிறகு, சென்னைக்கு வரும் பிரதமர் மோதி அதற்குப் புள்ளிவிவரங்களுடன் பதில் சொல்லியிருக்க வேண்டாமா?

கடந்த இரண்டு முறைகளாக தி.மு.கவை கடுமையாகத் தாக்கிப் பேசியிருக்கிறார் பிரதமர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு இது பலனளிக்குமா?

"ஆயுஷ்மான் பாரத்" திட்டத்தில் ஒரே மொபைல் நம்பரில் பல லட்சம் பேர் காப்பீடு பெற்றிருப்பது உட்பட பா.ஜ.க. அரசு மீது சி.ஏ.ஜி. பல விஷயங்களில் குற்றம்சாட்டியது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்ததோடு பா.ஜ.க. நிறுத்திக்கொண்டது. எந்த விளக்கமும் சொல்லவில்லை. ரயில் பாதை போடுவதற்கு அதிக செலவு, சுங்கச்சாவடிகளில் மோசடி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. எதற்குமே பதில் இல்லை.

தமிழ்நாட்டில் மழை - வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டபோது தமிழக அரசு ஊடக மேலாண்மை செய்ததாக குற்றம்சாட்டுகிறார் மோதி. சமீபத்தில் திறக்கப்பட்ட மும்பை - நாக்பூர் சாலையில் ஒட்டை விழுந்திருக்கிறதே... இது யார் செய்த தவறு? எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

போதைப் பொருள் பிடிக்கப்பட்டது குறித்தும் பேசியிருக்கிறார் பிரதமர். இது தி.மு.கவுக்கு பாதகமாக அமையுமா?

இந்தியா முழுமையுமே போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் அதிகரித்திருக்கிறது. அதைத் தடுக்க தி.மு.க. தடுமாறியிருக்கிறது. ஒப்புக்கொள்ளலாம். ஆனால், 2021க்கு முன்பாக தமிழ்நாட்டில் போதைப் பொருள் கிடையாதா? இப்போதுதான் வருகிறதா?

ஆனால், சமீப காலமாக போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பது வேதனையானதுதான். பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால், இந்தப் பொருட்கள் எங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வருகின்றன? குஜராத்தில் உள்ள இரு துறைமுகங்கள் வழியாக வருகின்றன.

போதைப் பொருள் அதிகரிப்பது குறித்து பிரதமர் கவலைப்படுவது நியாயம். ஆனால், இதைத் தடுக்க வேண்டிய தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு என்ன செய்கிறது? தி.மு.க. மீது குற்றம்சாட்டலாம். ஆனால், இதையெல்லாம் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/c4njpenj2lqo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“மோடி சுட்ட வடை” – தமிழ்நாடு முழுவதும் வடை விநியோகித்து திமுக நூதன பிரச்சாரம்

05 MAR, 2024 | 01:38 PM
image

“மோடி சுட்ட வடை”  என தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு வடை கொடுத்து திமுக நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 

மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

modi_vaday2.jpeg

அந்த வகையில் திமுக எல்லோருக்கும் எல்லாம் என்கிற பெயரில் பொதுக்கூட்டத்தை மூன்று நாட்களாக நடத்தி வருகிறது. மேலும் பல பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி வாயிலேயே வடை சுடுவார் என புதுவிதமான நூதன பிரச்சாரத்தில் இன்று ஈடுபட்டனர். மோடி சுட்ட வடை எனக்கூறி, தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு வடை கொடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட மேடை அருகே கிரைண்டர் மூலம் மாவாட்டி மோடியின் முகமூடி அணிந்தவாறு அங்கேயே சுட சுட வடை சுட்டு கூட்டத்திற்கு வந்த சிறுவர், சிறுமிகள், பெண்கள் என அனைவருக்கும் இது மோடி சுட்ட வடை என்று பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரம் மூலம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. கூட்டம் ஆரம்பித்து முடியும் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடைகள் வழங்கப்பட்டது.

சிவகங்கையில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பொது

மக்களுக்கு பிரதமர் மோடியின் உருவப்படம் மற்றும் மோடி சுட்ட வடை என்கிற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களில் வைத்து உளுந்த வடைகளை விநியோகம் செய்தனர்.

திருச்சியிலும் இந்த நூதன பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடியின் முகமூடி அணிந்து கொண்டு, மோடி சுட்ட வடை, மோடி சுட்ட வடை எனக்கூறி பொதுமக்களுக்கு வடை கொடுத்தனர்.

மேலும் கோவை, பொள்ளாட்சியில் காவி நிறத் துண்டுகளுடனும், மோடியின் முகமூடி அணிந்தும் பேருந்து நிலையங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில், வடை வழங்கினர். பிரதமர் மோடி வாயிலேயே வடை சுடுவதாகவும், அறிவித்த எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என கூறியும் பிரசாரம் செய்தனர். வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவேன்; மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல வாக்குறுதிகள் செயல்படுத்தப்படாமல் இருப்பதை சுட்டி காட்டும் வகையில் பதாகைகளையும் அவர்கள் கையில் ஏந்தி முழக்கம் எழுப்பினர்.

இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் திமுகவினர் பிரதமர் மோடியை விமர்சித்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

https://www.virakesari.lk/article/177954

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DMK Alliance-ல் VCK-க்கு மீண்டும் 2 தனித் தொகுதிகள் - Thirumavalavan Reaction என்ன?

திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திமுக கூட்டணியில் கமல்ஹாசன் செய்த செயல்: மக்கள் நீதி மய்யம் இனி என்ன ஆகும்?

ராஜ்ய சபா சீட்டுக்கு மட்டும் ஒத்துக்கொண்ட கமல்ஹாசன்: ‘ஒன் மேன்’ கட்சியாக மாறிவிட்டதா மநீம?

பட மூலாதாரம்,MAIAMOFFICIAL/X

கட்டுரை தகவல்
  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த சில தினங்களாக தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் நிலவிவந்த ஒரு ஊகத்திற்கு திமுக முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்படும் என்றும் திமுக தலைமை சனிக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது. 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம், ஒரு மாநிலங்களவை சீட்டுடன் முடங்கியது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

சமீப காலமாகவே கமல்ஹாசன் காங்கிரஸுக்கு நெருக்கமானவராக இருந்தார். ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ’ பயணத்திலும் அவர் கலந்துகொண்டார்.

இந்நிலையில், நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில், காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கும் இடங்களில் இரண்டு தொகுதிகளை மக்கள் நீதி மய்யத்திற்குக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதேநேரம், கடந்த தேர்தல்களில் குறிப்பிடத் தகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய தென்சென்னை மற்றும் கோயம்புத்தூர் தொகுதிகளை கமல்ஹாசன் திமுகவிடம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், தங்களின் வலுவான தொகுதியான தென்சென்னையை விட்டுத்தர திமுக முன்வரவில்லை என்றும் அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில்தான், மக்கள் நீதி மய்யத்திற்கு 2025 மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, மக்களவை தேர்தலில் இக்கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் பரப்புரை மேற்கொள்ளப்படும் என திமுக அறிவித்துள்ளது.

 

'தேசத்திற்காக கைகோர்த்துள்ளோம்'

ராஜ்ய சபா சீட்டுக்கு மட்டும் ஒத்துக்கொண்ட கமல்ஹாசன்: ‘ஒன் மேன்’ கட்சியாக மாறிவிட்டதா மநீம?

பட மூலாதாரம்,MAIAMOFFICIAL/X

இந்த ஒப்பந்தம் இறுதியான பின்பு, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபின் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்றும் மாறாக, இக்கூட்டணிக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்த முடிவு பதவிக்கானது அல்ல என்றும் தேசத்திற்காக கைகோர்த்திருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த 2018ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கிய கமல், அதிமுக, திமுக இரு கட்சிகளையும் விமர்சித்து வந்தார். 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டது.

மக்களவை தேர்தலில் சுமார் 4% வாக்குகளையும் சட்டமன்ற தேர்தலில் சுமார் 2.5% வாக்குகளையும் பெற்றது. மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் சுமார் 1.5 லட்சம் வாக்குகளையும் தென் சென்னை தொகுதியில் சுமார் 1.44 லட்சம் வாக்குகளையும் அக்கட்சி பெற்றது.

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமல், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் சுமார் 1,600 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

 

கட்சியை பலப்படுத்த தவறிவிட்டாரா?

ராஜ்ய சபா சீட்டுக்கு மட்டும் ஒத்துக்கொண்ட கமல்ஹாசன்: ‘ஒன் மேன்’ கட்சியாக மாறிவிட்டதா மநீம?

பட மூலாதாரம்,MAIAMOFFICIAL/X

இந்நிலையில் ஒரேயொரு மாநிலங்களவை சீட்டுக்கு கமல் திமுகவுடன் கைகோர்த்தது ஏன் என்ற கேள்வியை அரசியல் ஆலோசகரும் மூத்த பத்திரிகையாளருமான லட்சுமணனிடம் முன்வைத்தோம்.

"ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற கோஷத்துடன் கட்சி ஆரம்பித்தவர் கமல்ஹாசன். அது வெற்று முழக்கமாக இல்லாமல் ஓரளவுக்கு அர்த்தம் இருக்க வேண்டும் என்றால் முதலில் கட்சி கட்டமைப்பு இருக்க வேண்டும். கிராமங்கள்தோறும் கிளைகள் இருக்க வேண்டும். இந்த அடிப்படையான விஷயங்கள் குறித்துத் துளிகூட கமல் கவலைப்படவில்லை. இதில் ஒருசதவீதத்தைக்கூட கமல் செய்யவில்லை.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அக்கட்சி பெற்ற சுமார் 4 சதவீத வாக்குகள், கமல் என்ற தனி மனிதரின் பிரபலத்திற்கும் அவர் முன்வைத்த புதிய முழக்கத்திற்காகவும்தான் கிடைத்தது. அதைத் தக்கவைக்க கட்சியைப் பலப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அக்கட்சி அதில் தோற்றுவிட்டது," என்றார்.

இந்தத் தேர்தலில் 1-2 தொகுதிகளை திமுகவிடம் கமல் கேட்டது நிஜம் என்றும் தென்சென்னை தொகுதியில் கமல் உறுதியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கமல் வசிக்கும் இடம், மேல்தட்டு வகுப்பினர் பெரும்பாலானோர் உள்ள தொகுதி என்ற சாதகம் இருந்தாலும் அந்தத் தொகுதியை திமுக விட்டுக்கொடுக்க முன்வரவில்லை என லட்சுமணன் தெரிவித்தார்.

மகேந்திரன் அக்கட்சியிலிருந்து விலகிய பிறகு கோவையில் அக்கட்சிக்கு தளகர்த்தர் இல்லை என்பதால், அடுத்த வாய்ப்பாக கோவையை கேட்கும் கள யதார்த்தத்தையும் கமல் இழந்துவிட்டார் என அவர் கூறினார்.

"இந்த யதார்த்தமான பலவீனத்தை கமல் புரிந்துகொண்டார் என எடுத்துக்கொள்ளலாம். உதயநிதி உடனான நெருக்கம் இதற்கு ஓர் காரணமாக இருக்கலாம். பரப்புரை செய்வதற்கு ஒரு பலன் இருக்க வேண்டும் என்பதால் ராஜ்ய சபா சீட் கொடுத்திருக்கின்றனர். நிச்சயம் அந்த இடம் கமல்ஹாசனுக்குதான்" என்றார் லட்சுமணன்.

மேலும், "ஒன் மேன்' கட்சி என்றுகூட மக்கள் நீதி மய்யத்தைச் சொல்ல முடியாது. இதே நிலைமை நீடித்தால் இக்கட்சி மிக விரைவில் காணாமல் சென்றுவிடும். வளரும் ஒரு கட்சியின் எந்த நிர்வாகிக்கும் இந்த முடிவு நிச்சயம் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்காது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கமல்ஹாசனே கட்சியைப் பலவீனப்படுத்தி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்," என்றார்.

 
ராஜ்ய சபா சீட்டுக்கு மட்டும் ஒத்துக்கொண்ட கமல்ஹாசன்: ‘ஒன் மேன்’ கட்சியாக மாறிவிட்டதா மநீம?

பட மூலாதாரம்,MAIAMOFFICIAL/X

'கிராமங்களை சென்றடையவில்லை'

கட்சி கட்டமைப்பு பலமாக இல்லை என்பதை ஒப்புக்கொள்ளும் விதமாகவே பிபிசியிடம் பேசினார், மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் (ஊடகப்பிரிவு) முரளி அப்பாஸ்.

"கட்சியை ஆக்கபூர்வமாக உருவாக்க வேண்டும். மீண்டும் தேர்தலில் நின்று தோற்று சோர்வடைந்தால், அது தவறான முடிவாக இருக்கும்.

கிராமங்களில் நாங்கள் சரியாகச் சென்றடையவில்லை.அதற்காக தலைவரை அங்கு தெரியவில்லை என்பது அர்த்தம் இல்லை. ஆதரவை நிர்வாக ரீதியாக இணைக்கவில்லை. தொண்டர்கள் மட்டத்தில் சரியாக இல்லாமல் தேர்தலைச் சந்திப்பதால் ஏற்படும் இழப்புகளை நாங்கள் பார்த்துவிட்டோம்.

இந்த தேர்தலில் தேசிய அரசியலில் மாற்றம் உருவாவதுதான் முக்கியம். எங்களுக்கு தொகுதி ஒதுக்கும் சூழலில் திமுக இல்லை. இந்தச் சூழலில், மாற்றுக் கூட்டணிக்கு செல்ல முடியாது. கமல்ஹாசனின் வலிமையான அரசியல் குரல் விரயமாகக்கூடாது என்பதற்காக இதற்கு ஒப்புக்கொண்டோம்," என்றார் அவர்.

நகரங்களை மையமாக வைத்து சில தொகுதிகளைக் கேட்டதாக அவர் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் 'ஒன் மேன்' கட்சி என்பதைவிட வலிமையான தலைமை உள்ள கட்சி எனச் சொல்லலாம் என்கிறார் முரளி அப்பாஸ்.

முன்பு திமுகவை விமர்சித்தது குறித்துப் பேசிய அவர், "பழைய கதைகளைப் பேசக்கூடாது. இந்த அரசை மக்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துவதுதான் நல்லது. காழ்ப்புணர்ச்சியுடன் புறக்கணிக்கக் கூடாது. எங்களின் சுயலாபத்திற்காக இதைச் செய்யவில்லை.

தேசிய நலனுக்காக தளர்த்திக்கொள்வது தாழ்ந்து போவதல்ல, அனுசரித்துப் போவது," என்றார்.

https://www.bbc.com/tamil/articles/crgv22pn2eno

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, ஏராளன் said:

 

ராஜ்ய சபா சீட்டுக்கு மட்டும் ஒத்துக்கொண்ட கமல்ஹாசன்: ‘ஒன் மேன்’ கட்சியாக மாறிவிட்டதா மநீம?

பட மூலாதாரம்,MAIAMOFFICIAL/X

 

புதுப்பாதை இதுதானா கமல்?

எல்லாமே குப்பைகள் பொறுக்க முடியாமல் வந்திருக்கிறேன் என்றதும் இது தானா கமல் ஹாசன்??

கூட்டணி அமைத்தால் மட்டுமே வாழ்வு அது இல்லையெனில் சாவு??

வாக்குகளை சேகரித்து தனித்து நிற்கும் சீமானுக்கு அன்பளிப்பு செய்கிறீர்கள் போலும்?

(படங்களை பார்த்தால் கட்சிப் சந்திப்பு போல தெரியவில்லை சினிமா குடும்பச் சந்திப்பு என்று தெரிகிறது. )

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விசுகு said:

புதுப்பாதை இதுதானா கமல்?

எல்லாமே குப்பைகள் பொறுக்க முடியாமல் வந்திருக்கிறேன் என்றதும் இது தானா கமல் ஹாசன்??

கூட்டணி அமைத்தால் மட்டுமே வாழ்வு அது இல்லையெனில் சாவு??

அண்ணை எல்லாம் அந்த ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி்க்காகவா? என எண்ணத் தோன்றுகிறது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஏராளன் said:

அண்ணை எல்லாம் அந்த ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி்க்காகவா? என எண்ணத் தோன்றுகிறது.

அரசியல்

கமலும் நல்ல அரசியல்வாதி ஆகிவிட்டார். அரசியலில் பிழைக்க தெரிந்ததாக காட்ட முயற்சித்து காணாமல் போகச் போகிறார் விஜயகாந்த் போன்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

அரசியல்

கமலும் நல்ல அரசியல்வாதி ஆகிவிட்டார். அரசியலில் பிழைக்க தெரிந்ததாக காட்ட முயற்சித்து காணாமல் போகச் போகிறார் விஜயகாந்த் போன்று. 

அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று சொல்லி காசு பார்த்தார் ரஜனி

எந்தக்காலமும் அரசியலுக்கு வரமாட்டேன் , ஒருவேளை துப்பாக்கி எடுத்து எல்லோரையும் சுட்டு தள்ளணும்னு ஒரு நினைப்பு வந்தால் அரசியலுக்கு வருவேன் என்றார் கமல்.

பின்னாளில் வருவேன் என்றவர் வரவில்லை வரவேமாட்டேன் என்றவர் வந்தார்.

கமல் கட்சி ஆரம்பிச்சு அரசியலுக்கு வந்தது ஒன்றும் முதல்வராகவோ அல்லது தமிழகத்தை காப்பாத்தவோ அல்ல , தனிப்பட்ட கோவத்துக்காகவே வந்தார்.

பிரதமர் கனவிலிருந்த ஜெயலலிதாவை வெறுப்பேத்த வேட்டிகட்டிய தமிழன் ஒருவர் பிரதமராவதையே வரவேறிகிறேன் என்று கமல் ஒருபோது அறிக்கைவிட்டார், அதனால்கோபத்தின் உச்சிக்கே போனார் ஜெயலலிதா அதன் தொடர்ச்சியாக 

தனது பணம் முழுவதையும் கொட்டி எடுத்த விஸ்வரூபம் படத்தை வெளிவரவிடாமல் பண்ணி அவரை பொருளாதார ரீதியாகவும் மனநிலை ரீதியாகவும் சினிமாவைவிட்டே  ஓடவிட பார்த்தார் ஜெயலலிதா,

இயல்பாகவே கர்வமும்  கோப குணமும்   அதிகமான தன்மான உணர்வும் கொண்ட கமல் தன் இயலாமையால் கண்கலங்கி அழுது தமிழகத்தை விட்டே வெளியேறுவேன் என்றது விஸ்வரூப விவகாரத்தில்தான்.

அதனால்தான் ஜெயலலிதா மறைவின்போது இரங்கல்கூட தெரிவிக்கவில்லை கமல், பின்னர் பலரின் விமர்சனங்களால்’;சார்ந்தோர்க்கு அனுதாபங்கள்’’ என்று மட்டும் டிவிட்டரில் ஒருவரி போட்டார்.

அதன் உள்ளார்ந்த அர்த்தம்கூட ஒருவகையில் நக்கல்தான் அதாவது ஜெயலலிதாவின் அல்லகைகளுக்கு அனுதாபங்கள் என்பதே அது.

அதற்கு பின்னர்தான் அரசியலில் முழுமூச்சாய் இறங்கினார், அவர் அரசியலில் இறங்கியது அதிமுக ஓட்டுக்களை பிரிக்க ஏதாவது ஒருவகையில் தானும் ஒரு காரணியாக அமையத்தான்.

 சினிமா, பிக்பாஸ் என்ற வியாபாரங்களை கவனித்தபடி அரசியலை சும்மா தொட்டுக்கொள்கிறார், மற்றும்படி தமிழக அரசியலில் ஏதும் புதுமைகளை நிகழ்த்துவது என்பதும் ஆட்சியை கைப்பற்றுவது என்பதும் நடைமுறை சாத்தியமில்லை என்பது இயல்பாகவே அறிவுஜீவியாக இருக்கும் கமலுக்கு எப்போதோ தெரிந்திருக்கும்.

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

மய்யம்

ஆடாமல் அசையாமல் இருக்கும்.

 

9 hours ago, ஏராளன் said:

மக்கள் நீதி மய்யம் இனி என்ன ஆகும்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சீமான் கட்சி ஆதரவாளன். இருந்தாலும் வட நாட்டு கட்சிகள் தமிழ்நாட்டில் காலூன்றக்கூடாது என்பவர்களுக்கு என் ஆதரவு என்றும் உண்டு.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

நான் சீமான் கட்சி ஆதரவாளன். இருந்தாலும் வட நாட்டு கட்சிகள் தமிழ்நாட்டில் காலூன்றக்கூடாது என்பவர்களுக்கு என் ஆதரவு என்றும் உண்டு.

த‌மிழ் மொழி அழியாம‌ இருக்க‌

த‌மிழ‌க‌ம் செல்ல‌ செழிப்பாய் இருக்க‌...........த‌மிழ‌ர்க‌ள் வ‌ட‌ நாட்டானிட‌ம் அடி வேண்டி வாழாம‌ சுத‌ந்திர‌மாய் வாழ நாம் த‌மிழ‌ர‌ ஆத‌ரிக்கிறேன்..............த‌லைவ‌ர் புக‌ழ் மாவீர‌ர் தியாக‌ங்க‌ள் அழியாம பார்த்து கொள்ள‌ நாம் த‌மிழ‌ரை ஆத‌ரிக்கிறேன்🙏.....................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது - மகளிர் அணி தலைவரிடம் கட்சி தலைவர் நேர்காணல்

xyz.jpg

1.உங்களை பற்றி சொல்லுங்க.. ?
2.உங்கள் தொகுதியில் நீங்கள் செய்தது என்ன ?
3.உங்களுக்கு ஏன் மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் ?
4.... ? ....
5.....? ....

செய்தி மூலம் :

https://tamil.oneindia.com/news/chennai/dmk-mp-kanimozhi-was-interviewed-by-cm-stalin-for-tuticorin-seat-in-lok-sabha-elections-589803.html

ரொம்ப கடினமான கேள்விகளை கேட்டதாக சொல்கிறார்கள் .. இந்த நேர்காணலில் தேர்வாகி வேட்பாளாராக நிறுத்தபடுவாரா ? ..ரெல் மீ..!

டிஸ்கி :

மற்ற வேட்பாளர்களிடம் கேட்கபடும் 4வது மற்றும் 5வது கேள்விகள் விடுபட்டுள்ளன அது என்ன..?

4. கட்சிக்கு எவ்வளவு நன்கொடை தருவியல்.?
5. தேர்தலுக்கு ( ஒரு ஒட்டுக்கு ) எவ்வளவு செலவு செய்வியல் ?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, valavan said:

அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று சொல்லி காசு பார்த்தார் ரஜனி

எந்தக்காலமும் அரசியலுக்கு வரமாட்டேன் , ஒருவேளை துப்பாக்கி எடுத்து எல்லோரையும் சுட்டு தள்ளணும்னு ஒரு நினைப்பு வந்தால் அரசியலுக்கு வருவேன் என்றார் கமல்.

பின்னாளில் வருவேன் என்றவர் வரவில்லை வரவேமாட்டேன் என்றவர் வந்தார்.

கமல் கட்சி ஆரம்பிச்சு அரசியலுக்கு வந்தது ஒன்றும் முதல்வராகவோ அல்லது தமிழகத்தை காப்பாத்தவோ அல்ல , தனிப்பட்ட கோவத்துக்காகவே வந்தார்.

பிரதமர் கனவிலிருந்த ஜெயலலிதாவை வெறுப்பேத்த வேட்டிகட்டிய தமிழன் ஒருவர் பிரதமராவதையே வரவேறிகிறேன் என்று கமல் ஒருபோது அறிக்கைவிட்டார், அதனால்கோபத்தின் உச்சிக்கே போனார் ஜெயலலிதா அதன் தொடர்ச்சியாக 

தனது பணம் முழுவதையும் கொட்டி எடுத்த விஸ்வரூபம் படத்தை வெளிவரவிடாமல் பண்ணி அவரை பொருளாதார ரீதியாகவும் மனநிலை ரீதியாகவும் சினிமாவைவிட்டே  ஓடவிட பார்த்தார் ஜெயலலிதா,

இயல்பாகவே கர்வமும்  கோப குணமும்   அதிகமான தன்மான உணர்வும் கொண்ட கமல் தன் இயலாமையால் கண்கலங்கி அழுது தமிழகத்தை விட்டே வெளியேறுவேன் என்றது விஸ்வரூப விவகாரத்தில்தான்.

அதனால்தான் ஜெயலலிதா மறைவின்போது இரங்கல்கூட தெரிவிக்கவில்லை கமல், பின்னர் பலரின் விமர்சனங்களால்’;சார்ந்தோர்க்கு அனுதாபங்கள்’’ என்று மட்டும் டிவிட்டரில் ஒருவரி போட்டார்.

அதன் உள்ளார்ந்த அர்த்தம்கூட ஒருவகையில் நக்கல்தான் அதாவது ஜெயலலிதாவின் அல்லகைகளுக்கு அனுதாபங்கள் என்பதே அது.

அதற்கு பின்னர்தான் அரசியலில் முழுமூச்சாய் இறங்கினார், அவர் அரசியலில் இறங்கியது அதிமுக ஓட்டுக்களை பிரிக்க ஏதாவது ஒருவகையில் தானும் ஒரு காரணியாக அமையத்தான்.

 சினிமா, பிக்பாஸ் என்ற வியாபாரங்களை கவனித்தபடி அரசியலை சும்மா தொட்டுக்கொள்கிறார், மற்றும்படி தமிழக அரசியலில் ஏதும் புதுமைகளை நிகழ்த்துவது என்பதும் ஆட்சியை கைப்பற்றுவது என்பதும் நடைமுறை சாத்தியமில்லை என்பது இயல்பாகவே அறிவுஜீவியாக இருக்கும் கமலுக்கு எப்போதோ தெரிந்திருக்கும்.

ஜெயலிதா இறந்தபொழுது எனக்கும் மனம் சற்றேனும் கலங்கவில்லை மாறாக ஆறுதல் கொண்டது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்? - கமல்ஹாசன் விளக்கம்

11 MAR, 2024 | 10:56 AM
image

திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்? என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் விளக்க மளித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியபோது, திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என உறுதிபட கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வந்தார். இந்நிலையில், திமுகவுடனான கூட்டணியை நேற்று முன்தினம் கமல்ஹாசன் உறுதி செய்தார்.

இந்த செயல் பல்வேறு தரப்பினரிடையே கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. இதுதொடர்பாக கட்சியின் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் பன்முகத்தன்மை தான் அதன் தனித்துவம் என நான் நம்புகிறேன். தற்போதைய நிலை என்பது ஒரு அவசரநிலை. இது, தமிழகத்துக்கும் தேசத்துக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும்.

எதிர்வாத சக்திகளுக்கு இது கைகூடி விடக் கூடாது என்பதற்காக நாங்கள் எடுத்திருக்கும் முடிவு. இந்த நேரத்தில் எந்த கட்சியில் இருந்தாலும் அனைவருமே சகோதரர்கள் தான். எதிர்க்கட்சியாக இருந்தாலும் என்னுடைய சகோதரர்கள் தான்.

தேச நலனின் முக்கியத்துவம் கருதி நான் சிலவற்றை தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். தேசத்துக்காக நாம் அனைவரும் ஒரே மேடையில் அமர வேண்டும். அது தான் என்னுடைய அரசியல் என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/178396

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்ற தேர்தல் பாவம்கள்..

 

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

40-யும் வெல்ல வியூகம்: சிக்கலான இடங்களில் திமுகவே களமிறங்க திட்டம்

14 MAR, 2024 | 02:36 PM
image

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் வெல்லும் வகையில் வியூகம் அமைத்துள்ள திமுக,கூட்டணி கட்சிகளால் வெல்ல முடியாத,சிக்கலானதாக கருதப்படும் தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டு அத்தொகுதிகளை பெற நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்க்கட்சியாக இருந்தபோதே 2019 மக்களவைத் தேர்தலில் தேனியைத் தவிர அனைத்து தொகுதிகளையும் வசமாக்கியது திமுக.இந்த முறை, எந்த ஒரு தொகுதியையும் யாரும் பிடித்து விடக்கூடாது என்பதற்காகவே, கூட்டணியில் எந்த கட்சியையும் விட்டுக் கொடுக்காமல், வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. இந்த தேர்தலில், திமுக நேரடியாக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் கொமதேக மட்டுமே போட்டியிடுகிறது. மதிமுக, விசிக கட்சிகள் தனிச்சின்னத்தில் போட்டியிடுகின்றன. ஐஜேகே விலகியதால், பெரம்பலூர் தொகுதியை திமுக எடுத்துக் கொண்டது. மதிமுகவை பொறுத்தவரை கடந்த முறை ஈரோட்டில் போட்டியிட்டது.

இந்த முறை கொங்கு மண்டலத்தை திமுக வைத்துக் கொள்ள நினைப்பதால் ஈரோட்டில் திமுக போட்டியிடுகிறது. அதற்கு பதில், காங்கிரஸ் வசம் உள்ள திருச்சி அல்லது விருதுநகரை மதிமுக கோரியுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 மற்றும் புதுச்சேரி என 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த முறை தமிழகத்தில் போட்டியிட்ட, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், ஆரணி, சிவகங்கை, கன்னியாகுமரி, தேனி, கரூர், திருச்சி தொகுதிகளை அப்படியே ஒதுக்கும்படி கேட்டது.

ஆனால், கள நிலவரம், வேட்பாளர்கள் மீதான மக்களின் நம்பிக்கை ஆகியவற்றை சுட்டிக்காடி, இந்த முறை கரூர், ஆரணி, கிருஷ்ணகிரி, திருச்சி, விருதுநகர், சிவகங்கை தொகுதிகளில் சிலவற்றை தங்கள் வசம் வைத்துக் கொள்ள திமுக திட்டமிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/178714

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை VS மகன் | அதிமுகவை விரும்பும் ராமதாஸ், பாஜகவுடன் செல்ல துடிக்கும் அன்புமணி

14 MAR, 2024 | 02:39 PM
image
 

அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் விரும்பும் நிலையில், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை அன்புமணி நடத்தி வருவதால் பாமக யாருடன் கூட்டணி என்ற இழுபறி நீடித்து வருகிறது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் கணிசமாக வாக்கு வங்கியை வைத்துள்ள பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுகவும், பாஜகவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டன.

அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், பாமக நிறுவனர் ராமதாஸை 2 முறை நேரில் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகும் நிலையில் இருந்தது.

அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் விருப்பம் தெரிவித்த நிலையில், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி, பாஜகவுடன் கூட்டணி வைக்கவே விரும்புவதாக கூறப்படுகிறது.

அன்புமணியிடம் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய பாஜக குழுவினர் மத்திய அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் அதிமுக கொடுப்பதைவிட கூடுதல் தொகுதிகளை வழங்குவதாக உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது.

2004 - 2009 வரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணிக்கு, மீண்டும் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்காததால், பாஜகவுடன் கூட்டணி வைக்க அன்புமணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணி அறிவிப்பை வெளியிட இருந்த நிலையில், அன்புமணியின் இந்த முடிவு ராமதாஸுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சென்னை வந்த மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி ஆகியோரை நேற்று காலை அன்புமணி தனியாக சந்தித்து கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசியதாகவும், பாஜக - பாமக கூட்டணி உறுதியாகும் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸும், பாஜகவுடன் கூட்டணி வைக்க அன்புமணியும் விரும்பும் நிலையில், இறுதியில் வெற்றி பெறப்போவது தந்தையா? மகனா? என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.

https://www.virakesari.lk/article/178716

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஏராளன் said:

தந்தை VS மகன் | அதிமுகவை விரும்பும் ராமதாஸ், பாஜகவுடன் செல்ல துடிக்கும் அன்புமணி

14 MAR, 2024 | 02:39 PM
image
 

அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் விரும்பும் நிலையில், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை அன்புமணி நடத்தி வருவதால் பாமக யாருடன் கூட்டணி என்ற இழுபறி நீடித்து வருகிறது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் கணிசமாக வாக்கு வங்கியை வைத்துள்ள பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுகவும், பாஜகவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டன.

அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், பாமக நிறுவனர் ராமதாஸை 2 முறை நேரில் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகும் நிலையில் இருந்தது.

அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் விருப்பம் தெரிவித்த நிலையில், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி, பாஜகவுடன் கூட்டணி வைக்கவே விரும்புவதாக கூறப்படுகிறது.

அன்புமணியிடம் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய பாஜக குழுவினர் மத்திய அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் அதிமுக கொடுப்பதைவிட கூடுதல் தொகுதிகளை வழங்குவதாக உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது.

2004 - 2009 வரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணிக்கு, மீண்டும் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்காததால், பாஜகவுடன் கூட்டணி வைக்க அன்புமணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணி அறிவிப்பை வெளியிட இருந்த நிலையில், அன்புமணியின் இந்த முடிவு ராமதாஸுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சென்னை வந்த மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி ஆகியோரை நேற்று காலை அன்புமணி தனியாக சந்தித்து கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசியதாகவும், பாஜக - பாமக கூட்டணி உறுதியாகும் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸும், பாஜகவுடன் கூட்டணி வைக்க அன்புமணியும் விரும்பும் நிலையில், இறுதியில் வெற்றி பெறப்போவது தந்தையா? மகனா? என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.

https://www.virakesari.lk/article/178716

நேற்று எடப்பாடியார் தாங்கள் தேதிமுகவுடன் பேசிக் கொண்டிருப்பதாகவும், பாமகவுடன் பேசவே இல்லை என்றும் சொன்னார். பாமக தான் எந்தப் பக்கம் போவது என்று இன்னும் முடிவு எடுக்கவில்லை போல.
 
மேலும் எடப்பாடியார் தங்களின் கூட்டணியே மிகப் பலமான கூட்டணி என்றும் சொன்னார், ஏனென்றால் தங்களின் அதிமுக கட்சி கூட்டணி வைத்திருப்பது மக்களுடனேயே என்று ஒரு காரணமும் சொன்னார்!!
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு விவசாயி சின்னம்.. வாய்ப்பில்ல ‘ராஜா’.. சீமானை சீண்டிய கட்சி..

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சம்பந்தனின் மறைவுக்கு இந்திய பிரதமர் இரங்கல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தன்னுடைய X தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,  “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா. சம்பந்தனின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடனான சந்திப்புகளின் இனிய நினைவுகளை எப்போதும் போற்றுவார். இலங்கையின் தமிழ் தேசங்களுக்கு அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் கண்ணியம் நிறைந்த வாழ்க்கையை அவர் இடைவிடாமல் பின்பற்றினார். இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள அவரது நண்பர்கள் மற்றும் பின்பற்றுபவர்களால் அவர் இழக்கப்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.    https://www.tamilmirror.lk/செய்திகள்/சம்பந்தனின்-மறைவுக்கு-இந்திய-பிரதமர்-இரங்கல்/175-339688   மூத்த தமிழ் அரசியல்வாதி சம்பந்தன் காலமானார் : அரசியல்வாதிகள், பிரமுகர்கள்   இரங்கல் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் இயற்கை எய்தினார். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணித்ததாக குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். 1933ஆம் ஆண்டு பெப்ரவரி ஐந்தாம் திகதி பிறந்த சம்பந்தன் இயற்கை எய்தும்போது அவருக்கு வயது 91 என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த அரசியல்வாதியான இரா. சம்பந்தனின் மறைவுக்கு அரசியல்வாதிகள், பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இரங்கல் ! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் எனது நீண்டகால நண்பர் நாங்கள் கடந்த பல காலங்களாக பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். சம்பந்தனின் மறைவு இலங்கை அரசியல் சகோதரத்துவத்திற்கும் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஒரு பாரிய இழப்பாகும் என்று மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள இரங்கலில் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் இரங்கல் ! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தனின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். அவரது கொள்கைகளுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச்சென்றுள்ளது. இந்த சோகமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மேலும் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இரங்கல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கையின் மூத்த அரசியல்வாதியுமான பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் இழப்பு எம் நாட்டு அரசியலுக்கு பேரிழப்பாகும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். அன்னாரின் இழப்பால் துயறுரும் குடும்பத்தினர் மற்றும் நலன்விரும்பிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இரங்கல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களின் மறைவில் நான் ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைகின்றேன். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நீண்டகால நண்பரும், இலங்கையின் ஒரு முன்மாதிரியான மற்றும் நம்பிக்கைக்குரிய தலைவர் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.   https://thinakkural.lk/article/304895   சம்பந்தன் மறைவுக்கு அங்கஜன் இரங்கல் இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மறைவுக்கு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தவிசாளர் அங்கஜன் இராமநாதன் இரங்கல் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அன்னாரின் இழப்பு தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்கு பேரிழப்பாகும். தனது சட்டத் தொழிலை தியாகம் செய்து தன்னை மக்கள் அரசியலில் ஈடுபடுத்திய பெருமகனார் அவர். தமிழர்களின் மூன்று வகையான போராட்ட காலங்களிலும் தனது அரசியல் சாணக்கியத்தையும், அனுபவத்தையும் பல சந்தர்ப்பங்களில் இராஜதந்திரங்களாக அவர் பயன்படுத்தியிருந்ததை இத்தருணத்தில் நினைவில் கொள்ள வேண்டும். திருகோணமலை மாவட்டத்தின் தமிழர் பிரதிநிதித்துவத்தின் இறுதி நம்பிக்கையாக திகழ்ந்த அவரது இழப்பு ஈடுசெய்யப்பட முடியாதது. வரலாற்று பாரம்பரியம் மிக்க கட்சியையும், வேறுபட்ட நீரோட்டங்களில் பயணித்த கட்சிகளின் கூட்டமைப்பையும் தனது இயலுமைக்காலங்கள் அனைத்திலும் தன் ஆளுமையால் சிதைவடையாது காப்பாற்றியதில் அவருக்கு இணை அவர் மட்டுமே. இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றின் நீண்டகால அனுபவப் பக்கமொன்றை எங்கள் இனம் இன்று இழந்துள்ளது.  அன்னாரின் இழப்பால் துயரடைந்துள்ள குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சியினர், ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.  https://www.tamilmirror.lk/செய்திகள்/சம்பந்தன்-மறைவுக்கு-அங்கஜன்-இரங்கல்/175-339678 பாராளமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களின் மறைவையொட்டி இந்துக் குருமார் அமைப்பின் இரங்கல் செய்தி !     இரங்கல் பகிர்ந்து, ஆத்ம சிவப்பிராப்திக்கு இறை பிரார்த்தனை செய்கிறோம். எமது தமிழினம் ஓர் பெரும் பலத்தினை இழந்த சூழலில் உள்ளது. சுமார் ஆறு தசாப்தங்களாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினராக விளங்கித் ஆற்றல்மிகு சக்தியாக தமிழ் மக்கள் மத்தியில் விளங்கிய ஓர் பண்புமிக்க அறிவாளனை இழந்துள்ளோம். இராஜதந்திர நகர்வுகளை செய்யும் சிறப்பாளர். பல்வேறு நாட்டு தலைவர்களாலும் இராஜதந்திரிகளாலும் மதிக்கப்பட்டவர். எமது தமிழ் பிரதிநிதிகளை ஓர் அணியாக செயற்பட வேண்டும் என செயற்பட்டவர். நிதானமாக நுண்ணறிவுடன் செயலாற்றிய, தலைமை தாங்கிய தலைவரை இழந்துள்ளோம். இச்சமயத்தில் அமரரது ஆத்ம சிவப்பிராப்திக்கு இந்துக் குருமார் அமைப்பின் சார்பில் இறை பிரார்த்தனை செய்கிறோம். ஓம் சாந்தி. கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள். தலைவர் இந்துக் குருமார் அமைப்பு. சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள். செயலாளர், இந்துக் குருமார் அமைப்பு. https://www.battinews.com/2024/07/blog-post_47.html
    • தொடர் தற்கொலை தாக்குதல்: நைஜீரியாவில் பயங்கரம் damithJuly 1, 2024   நைஜீரியாவில் (Nigeria) நடந்த தொடர் தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதுடன் 19 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்படி தாக்குதல் சம்பவமானது நேற்றுமுன்தினம்(29)இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் பெண் தற்கொலை குண்டுதாரிகளால் குவோசா நகரில் திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் மருத்துவமனைகளை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களில் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களும் உயிரிழந்துள்ளதாக போர்னோ மாநில அவசர முகாமைத்துவ அமைப்பின் (State Emergency Management Agency) தலைவர் பார்கிண்டோ சைட் உறுதிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, உட்புற உறுப்பு சேதம் முதல் மண்டை ஓடு மற்றும் மூட்டு முறிவு வரை பலருக்கு அதி தீவிரமான காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் விபரித்துள்ளார். மேலும், இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை என்று நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   https://www.thinakaran.lk/2024/07/01/world/69441/தொடர்-தற்கொலை-தாக்குதல்/
    • சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பான அறிவித்தல்! உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (30) இரவு உயிரிழந்த தமிழரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவர் சம்பந்தனின் உடல் இறுதிக் கிரியைகளுக்காக சொந்த ஊரான திருகோணமலைக்கு கொண்டுச் செல்லப்படவுள்ளது. அன்னாரின் உடல் கொழும்பில் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்திலும் ஒரு நாள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன் பின்னர், சம்பந்தனின் உடல் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் நேற்று (30) இரவு 11 மணியளவில் காலமானார். அவர் உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.   http://www.samakalam.com/சம்பந்தனின்-இறுதிக்-கிரி/
    • நெடுந்தீவில் 25 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது! adminJuly 1, 2024   இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 25 தமிழக கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை (01.07.24) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையே அவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களின் 4 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைதான கடற்தொழிலாளர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சொல்லப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரினர் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   https://globaltamilnews.net/2024/204818/
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.