Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"ரெண்டு பவுண்" - [04]

Featured Replies

[01]

அந்தக் கடற்கரையில் அன்றைக்கு அலைகள் கொஞ்சம் அதிகமாகவே கரைதொட்டன. பெளர்ணமி நாளின் நிலவினை அவைகளும் ரசித்தன போல்!

3RIMD00Z.jpg

பரந்து கிடந்த மணற்பரப்பில் 'குட்டிப்பவுண்' அண்ணர் வலை பின்னிக் கொண்டிருந்தார்! ஐம்பத்தெட்டு வயசானாலும், நிலவு வெளிச்சத்தில் வலை பின்ன முடியாத அளவுக்கு கண் பார்வை மட்டுமல்ல அவர் உடலும் வலுவிழந்து போகவில்லை.

அவரின்ர உண்மையான பெயர் சூசைப்பிள்ளை. சொந்த இடம் மயிலிட்டி. சம்மாட்டியாரா..... கைவிரல் முழுக்க மோதிரம் , கழுத்தில பெரிய சங்கிலி........ என அவர் வலம் வந்ததைப் பார்த்திட்டு அவரின்ர ஊர்ச்சனம் செல்லமா வைச்ச பெயர்தான் "குட்டிப்பவுண்". இவரின்ர மனிசிக்காரி தங்கராணி. அவவின்ர பெயரிலயே தங்கம் இருந்ததால்.... இந்தமாதிரி செல்லப்பெயரில் இருந்து அவ கொஞ்சம் தப்பீட்டா. ஆனாலும் 1975 இலயே 25பவுண் தாலிக்கொடிக்குச் சொந்தக்காரி.

இந்த மயிலிட்டிச் சம்மாட்டியாருக்கு... ஒன்று ஆணும் மற்றது பெண்ணுமாய், இரண்டே இரண்டு வாரிசுகள். அதுகளையும் பொத்திப் பொத்தித்தான் வளர்த்தார் செல்லமாக. எல்லாமே நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது. என்ன ஆச்சுது? என்று விளக்கம் தேவையில்லாத விதமாக, எல்லாருமே அனுபவித்த இடப்பெயர்வு இழப்புக்களினால்...... இன்று, இந்தக் கடற்கரையில் வலைபின்னிக் கொண்டிருந்தார் 'முன்னாள் சம்மாட்டியார்' குட்டிப்பவுண்.

அலைகளின் மிதமான சத்தம்... இதமான கடற்காற்று...நிலவின் ஒளி... மணற்கரை... என எல்லாமே இயற்கையின் கைகளில் அழகாகத் தவழ்ந்து கொண்டிருந்த பருத்திக்கடலின் அழகிய இயல்பினைக் கெடுப்பதாய்.... எங்கோ தூரத்தில் ஒரு டோறாப் படகின் குறு குறு இரைச்சல் மட்டும் குழப்பிக் கொண்டே இருந்தது.

Bicycle_under_Coconut_tree_by_fajars.jpg

எப்பவுமே ஏழெட்டு மணிக்குள்ள வாற சிவலிங்கத்தார் அப்பொழுதுதான்.... தன்ர பேரனுடன் கடற்கரை வந்தடைந்தார். ஒரு தென்னம்பிள்ளையுடன் தன்ர பழைய "ரளி" சைக்கிளை சாத்தி நிப்பாட்டிட்டு... ஆறு வயது பேரனை கையில பிடித்துக்கொண்டு குட்டிப்பவுண் இருந்த இடத்தை நோக்கி நடந்தார்.... வழமைபோல.

பாதித் தூரம் தாண்ட முன்னரே.... பேரன் அவர் கையிலிருந்து தன்னைத் தானே விடுவித்தவனாய்... கடற்கரை அலைகளில் 'நிலவு நண்டு' பிடிக்க ஆர்வமாய் ஓடிப்போனான். ஓயாத அலைகளும் அவனை வரவேற்பதாய் அவனை நோக்கி ஓடி வந்தன!

***************************************************************************************************************************************

[02]

"வணக்கம்! வாங்கோ சிவலிங்கத்தார்! ஏன் இண்டைக்கு பிந்திப்போட்டுது? வழமையா... ஏழு மணிக்கெல்லாம் வந்திடுவியள்... இன்டைக்கு என்ன ரொம்ப வேலையோ?" என சிரித்துக்கொண்டே வரவேற்றார்.... குட்டிப்பவுண். "அப்பிடியெல்லாம் இல்ல குட்டிப்பவுண்... கொஞ்சம் வேலைதான். என்ர மகளோட கொஞ்சம் கதைச்சிட்டு வந்தன். சம்மந்தம் பேசி வந்திருக்கு....... ! அதுவிசயமா அவளோட கதைச்சிட்டு வர பிந்திப்போட்டுது " என விஷயத்தினை சிவலிங்கத்தார் சொல்ல....

"ஓ... அப்பிடியே விஷயம்... நல்லது!!!!!!! மாப்பிள்ளை எந்த இடம்?" எனக் கேட்டார் குட்டிப்பவுண் சந்தோசமாக...!

france_tower.jpg

"மாப்பிள்ளை பிரான்சில.... சீதனம் தேவையில்லையாம். அவருக்கு முதல்தாரம் 'டிவொர்ஸ்' எடுத்திட்டாவாம். பிள்ளையள் இல்ல. என்ர மகளின்ர 'போட்டோ'வை ஏற்கனவே பார்த்திட்டினம். அவையளிற்கு பிடிச்சுப் போச்சு. இவளும் சின்ன வயசில தன்ர வாழ்க்கையை தொலைச்சுப்போட்டு இந்த பெடியனோடு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள்..." என நண்டு பிடித்து விளையாடுவதில் மும்முரமாயிருந்த தன் பேரனை பார்த்துக்கொண்டே சொல்லும்போது... சிவலிங்கத்தாரின் குரல் கொஞ்சம் கரகரத்தது.

"பிறகென்ன..... நல்ல சம்மந்தம்தான் வந்திருக்கு. அவளுக்கும் சின்ன வயசுதான். பாவம் பிள்ளை! முடிக்க வேண்டியதுதானே! உங்களின்ர மகள்புருசன் செல்லடியில செத்ததில் இருந்தே நீங்களும் சரியா நொந்து போட்டியள். ஏதோ... உங்களுக்கு பென்ஷன் காசு வாறதால மகளைப் பார்க்கிறியள். உங்களுக்குப் பிறகு யார் பார்ப்பினம்...??? சொந்தபந்தம் எல்லாம் பார்க்குமெண்டு நினைக்காதையுங்கோ.... ! அதெல்லாம் நாள் கணக்குத்தான். 'என்னத்தைப் பண்ணியாவது..... அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் குடுத்திடுங்கோ...!' எண்டு சொல்ல நினைச்சனான்...... அதுக்குள்ள அந்த சிவனின்ர அருளால நல்ல சம்மந்தம் வந்திருக்கு...! நல்லபடியா இதைப் பேசி முடிச்சிடுங்கோ...!" என சொல்லி முடித்தார் 'சூசைப்பிள்ளை' எனும் குட்டிப்பவுண் .

குட்டிப்பவுண்... என இழுத்தபடி ஆரம்பித்தார் சிவலிங்கத்தார். "ஏதோ அந்தோனியாரின்ர ஆசீர்வாதத்தால நல்ல சம்மந்தம் வந்திருக்கு... !! ஆனால், என்ர நிலமை.... உங்களுக்கு நல்லாத் தெரியுந்தானே?! எங்கட சீவியமே என்ர பென்ஷன் காசிலதான் ஓடுது."

"அவையளுக்கு சீதனம் தேவையில்லை என்றுதானே சொன்னவையள். பிறகென்னத்துக்கு யோசிக்கிறியள்?" என்று இடைமறித்துக் கேட்டார் குட்டிப்பவுண்.

"ஓம் ஓம்.... அது பிரச்சினை இல்லை .... ஆனால் இப்ப எங்கட பெடியள்..... எல்லாக் குடும்பத்திட்ட இருந்தும் ஆகக் குறைஞ்சது 'ரெண்டு பவுண்' குடுங்கோ எண்டு கேக்கத் தொடங்கியிருக்காங்களாமே... ???!!! .....'மண்மீட்பு நிதி' எண்டு! அங்கதான் குட்டிப்பவுண் என்ர பிரச்சினையே...." என ஒரு பெருமூச்சோடு சொன்னார் சிவலிங்கத்தார்.

ltterupice015b135d.jpg

இப்படி இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே..... அன்பரசன் தன்னுடைய 'ரேடியோ'வை எடுத்துக்கொண்டு அப்போது அங்கிருந்த (தேசத்தின் குரல்) "அன்ரன் பாலசிங்கம் பேஸ்" என அழைக்கப்பட்ட 'கடல்புறா 'காம்'பிலிருந்து' ........."புலிகளின்குரல் வானொலி" அலைவரிசையை திருகியபடி.... இவர்கள் இருந்த இடத்தை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தான்.

PointPedroLKA.jpg

அவனுடைய சின்னஞ்சிறிய 'பொக்கற் றேடியோ' ரொம்பச் சின்னதுதான். ஆனால் அப்போதிருந்த பொருளாதாரத் தடைகள்.... அவனது 'ரேடியோ'விற்குப் பின்னால் 'எஸ்லோன் பைப்'புக்குள் போடப்பட்ட பெரிய 'பற்றரிகளின்' சக்தியில் இயங்கும்படி அமைக்கப்பட்ட "தமிழீழ தொழில்நுட்பம்" சின்னஞ்சிறிய அந்த ரேடியோவையும் கொஞ்சம் பெரிதாகவே காட்டியது.அந்த நாட்களில் இப்படியான அசாதாரணங்கள் சாதரணமானவையாகவே இருந்தன.

fm_am_2_band_rf_524_495747.jpg

"புலிகளின் குரல்" கேட்கவந்த இந்த அன்பரசனிற்கு....... குட்டிப்பவுண் அண்ணரும், சிவலிங்கத்தாரும் கதைச்சுக்கொண்டிருந்த "ரெண்டு பவுண்" கதை காத்துவாக்கில் தெளிவாகக் கேட்க....................இதைக் கேட்பதற்காகவே அவர்களை நோக்கி நெருங்கினான்.

*************************************************************************************************************************************************

[03]

அன்பரசன்...... அவன் பெயருக்கு உகந்தாற்போல் அன்பானவன், பண்பானவன். வடமராட்சிப் பிரதேசத்தின்

அப்போதைய இயக்கப் பொறுப்பாளராக இருக்கின்றவன். அவனது வலது கையின் சுட்டுவிரலினை முன்னொரு களத்தினில் இழந்திருந்தான். அவனது உடலில் பல விழுப்புண் தழும்புகள் இருந்தாலும்,

அந்த 'நான்குவிரல்' விடயம் அவனுக்குரிய அடையாளமாகவே இருந்தது. பிரச்சாரக் கூட்டங்களில்

அதிகமாக ஈடுபடும் இவனை , இளையவர்கள் எல்லோருக்கும் பொதுவாகத் தெரிந்திருக்கும்.

சிறந்த பேச்சாற்றல் கொண்ட ஒரு போராளி. ஆனாலும் பிள்ளையைப் பெற்றவர்கள் இவனைக்

கொஞ்சம் 'ஆபத்தானவனாகப்' பார்ப்பதும் காரணத்தோடு கூடிய வழக்கமாயிருந்தது.

இவனுக்கு இப்பொழுது மேலதிகமாக இன்னொரு பணியும் கொடுக்கப்பட்டிருந்தது. அது, இந்த 'ரெண்டு' பவுண் விஷயம். அவனது பொறுப்பிலுள்ள பிரதேசத்தில் உள்ள அத்தனை குடும்பங்களின் விபரங்கள் ... அதாவது, வருமான அளவு, வங்கியிருப்பு, வெளிநாட்டில் உள்ள இரத்த உறவுகள் விபரம், சொத்துப்பத்து..... இன்னபல என குடும்பங்களின் வருமான விபரங்கள் அனைத்தையும் திரட்டுதல் மற்றும்

மக்களுடன் இது சம்மந்தமாக உரையாடவேண்டிய பொறுப்பும் இப்போது, இந்த அன்பரசனின் கடமையாயிருந்தது. இண்டைக்கு பகல் முழுக்க இந்த வேலையாவே திரிஞ்ச இவனுக்கு சிவலிங்கத்தாரும் , குட்டிப்பவுணும் கதைச்சுக் கொண்டிருந்த அந்த விஷயம் அவையள் கதைக்கிறத கேக்கவேணும் என்ற ஆர்வத்தினைத் தூண்டியது அவனுக்குள் .

மணற்பரப்பில் நிலவின் ஒளி பட்டுத் தெறிக்க .... அவை தங்கம்போல தகதகவென மின்னியது.

அந்த அழகை அவன் ரசித்தான் என்றாலும்.... "இந்த மண் உண்மையிலயே தங்கமணலா இருந்தால், எங்கட சனத்திட்ட இப்பிடியெல்லாம் 'ரெண்டுபவுண்' கேட்டு அதுகளையும் கஷ்டப்படுத்த வேண்டியதேவை வந்திருக்காது....." என மனதுக்குள்ளேயே நினைத்துக் கொண்டான்.

'அவர்களுக்குப் பக்கமாக எங்க போய்க் குந்தலாம்...?' என யோசித்தவனுக்கு.... போனகிழமை நேவிக்காரன் அடிச்சதில... இரண்டு உயிரற்ற மனிசரோடு கரையொதுங்கிய "மேரிமாதா" என பெயர் போட்ட அந்த 'போட்'தான் கண்ணில் பட்டது. மணலில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த அந்தப் படகோடு தன் முதுகினை சாய்த்து தன் ஒரேயொரு செல்லச் சொத்தான தன் ரேடியோவை தன் வலது பக்கத்தில் வைத்துக்கொண்டு அமர்ந்தான் அன்பரசன்.

அந்த ரேடியோவை அவனுக்கு பரிசாகக் கொடுத்திருந்தது... ஈழத்தின் மதிப்புக்குரிய வீரப்பெண்மணி திருமதி. அடேல் அன்ரன் பாலசிங்கம் தான்!

antonadelebalasinghams.jpg

அப்போதெல்லாம் எப்பொழுதாவதுதான் அவனது முகாமுக்கு வருவார்கள்.... பாலா அண்ணாவும் அடேல் அன்ரியும். அவர்கள் லண்டனில் இருக்கின்றார்களா....? அல்லது இங்கைதான் இருக்கின்றார்களா? என சொல்லமுடியாமல் இருந்தது. ஆனால், அடேல் அன்ரி வந்திருக்கிறா! என்றால் .... "கப்பல் வந்து போயிருக்கு" என்று மட்டும் ஊகிக்கக் கூடியதாக இருக்கும். அதேபோல....... அந்த முகாமில் வளர்க்கப்பட்ட மான்குட்டி, புறாக்கள்,லவ் பேர்ட்ஸ் என தன் அன்புக்குரிய ஜீவன்களையும்..... அதற்குமேல் தன் பிள்ளைகளாய் அவ நேசித்த கடல்புறாவின் செல்லச் சிட்டுக்களையும் பார்க்க வராமல்.....

ஒரு கிழமை போனாலும் விளங்கும்......... அவர்கள் தற்போது தொலைவில் என்று.

issuespic.jpg

"அம்மப்பா...... இந்த நண்டுக்கு ஒரு கொடுக்கு இல்ல பாருங்கோ!" என ஒரு நண்டினை கையில் பிடித்தவாறு

சிவலிங்கத்தாரை நோக்கி ஓடிவந்த அவர் பேரனின் சின்னக்குரல்....... இந்தவாறான பாலா அண்ணாவின்

சிந்தனையில் இருந்த அன்பரசனை மீண்டும் நினைவுக்கு கொண்டுவர..... தன் வலது கையின் நான்குவிரல்களையும் தன் றேடியோவிலிருந்து விடுவித்தவனாய்..... குட்டிப்பவுண், சிவலிங்கத்தார் பக்கம் தன் கவனத்தினைச் செலுத்த ஆரம்பித்தான்........அன்பரசன்.

***********************************************************************************************************************************************

புதிய பகுதி: [04]

பலமாக வீசிய 'கச்சான்' காத்து.... உடம்பில ஒட்டியும் ஒட்டாமலும் உரசிக்கொண்டே...... போய்க்கொண்டிருந்தது. கடற்கரையோரம் என்றபடியால்... கொஞ்சம் கூதலாக இருந்திச்சு.

நண்டைக் கையில பிடிச்சுக் கொண்டு ஓடிவந்த தனது பேரனை தன்மடியில் உட்காரவைச்ச சிவலிங்கத்தார், அவன் கையில் இருந்த நண்டினை வாங்கி ஓரமாகப் போட்டுவிட்டு... "அலையடிக்குது ராசா...! அந்தப் பக்கம் போகாதப்பா! " என அந்தச் சின்னவனின் தலையை வருடியபடியே சொல்லிவிட்டு.... குட்டிப்பவுணர் பக்கம் திரும்பினார்.

"அண்ணை! என்ர மகளுக்கு எப்பிடியும் இந்தக் கலியாணம் சரி வந்திடும். மாப்பிள்ளை பிரான்ஸில இருந்து வந்து முடிச்சிட்டு போன பிறகு, இவளையும் அனுப்பி வைக்கவேணும். ஆனா, ரெண்டு பவுணைக் கட்டினால்தான்... எங்கட பெடியளும் 'பாஸ்' குடுப்பாங்களாம்! அவளின்ர... காதிலயும் கழுத்திலயும் உள்ளதே... ரெண்டு பவுண் தேறாது அண்ணை! என்ன பண்ணுறது? எண்டு எனக்குத் தெரியேல. ஒரே யோசனையாக் கிடக்கு..." என கவலையோடு சொன்னார் சிவலிங்கத்தார்.

வலை பின்னிக்கொண்டிருந்த குட்டிப்பவுண் அதை விட்டுட்டு... சிவலிங்கத்தாரை நிமிர்ந்து பார்த்து, "அண்ணை! மாப்பிள்ளை பிரான்ஸில....! அவர் எல்லாத்தையும் பாத்துக்கொள்ளுவார்தானே!? சீதனமே வேண்டாம், கலியாணவீட்டுச் செலவெல்லாத்தையும் தானே பாத்துக் கொள்ளுறன்.... எண்டு சொன்ன ஆள்...., ஒரு ரெண்டு பவுண் விசயத்தை செய்யாமல் விடமாட்டார்தானே...!?? நீங்கள் ஏன் யோசிக்கிறியள் அண்ணை?" என தைரியமூட்டினார்.

"அப்பிடியில்லை.... குட்டிப்பவுண்! அந்தப் பெடியன் அப்பிடி எண்டுறதுக்காக... என்ர பிள்ளைக்கு நான் ஒண்டுமே செய்யாமல் விடக்கூடாது. அந்தப் பெடியன் ஒண்டும் சொல்லாட்டிலும்... நாளைக்கு ஒரு சந்தர்ப்பம் வரக்குள்ள, அவையின்ர சொந்தங்கள் தன்னும் ஏதாவது சொல்லிக் காட்டுவினம்! என்ர பிள்ளையோட.... இருபது முப்பது பவுணையாவது சேர்த்து அனுப்பினால்தான், எங்களுக்கும் மரியாதை கண்டியளோ!

அதுக்கே நான் என்ன பண்ணுறதெண்டு யோசிச்சுக் கொண்டு இருக்கைக்குள்ள...... இந்த நாசமாய்ப் போவார் 'ரெண்டு பவுண்' கேக்கத் தொடங்கீட்டாங்கள்!" என கொஞ்சம் கோபமாகவே சொன்னார் சிவலிங்கத்தார்.

கோபமாச் சொல்லிமுடிச்ச சிவலிங்கத்தாரின்ர கதையைக் கேட்ட குட்டிப்பவுணருக்கு கடுப்பாகி இருந்திருக்கோணும் போல, உடனையே கேட்டார்........

"ஏனண்ணை.... இப்பிடிச் சொல்லுறீங்கள்? அவங்கள் இருக்குறபடியால்தானே... நாங்களும் கொஞ்சம் நிம்மதியா இருக்கிறம். உங்களுக்கு விளங்காத விஷயமே?! பழுத்த பழம் நீங்களே இப்பிடிச் சொன்னால், மத்தச் சனம் என்ன சொல்லும் எண்டு நினைச்சுப் பாருங்கோவன்!"

"நான் மட்டும் சொல்லேல குட்டிப்பவுணர். இப்ப சனம் எல்லாத்துக்கும் இதுதான் பெரிய பிரச்சினையே!!!

Bread%202.jpg

இண்டைக்கு விடியக்காலம நாலரை மணிக்கே... 'தீன்சுவை' பேக்கரியில பாண் வாங்குறதுக்கு லைனில நிண்டனான். பேக்கரிக்காரன் விடிய ஏழு மணிக்கு பாண் குடுக்கத் தொடங்கும்வரைக்கும்.... இந்தக் கதைதான் ஓடினது அங்கையும்! வேலாயுதம், கந்தசாமி அண்ணர் எல்லாரும் நிண்டவையள். அவையளும் இந்த விஷயத்தில எதிரும் புதிருமாத்தான் நிக்கினம். அதில..... வேலாயுதத்தின்ர பெடியன் ஒண்டு இப்பவும் இயக்கத்தில இருக்கிறான். ஆனால் அவையளும் கட்டத்தான் வேணுமாம். மாவீரர் குடும்பக்காரர் மட்டுந்தான் கட்டத் தேவேலையாம்.அதால வேலாயுதம் பெருங் கோபத்தில இருக்குது. பெடியனையும் உள்ளுக்கை வைச்சுக்கொண்டு பவுணையும் கேக்குறாங்கள் எண்டு பொங்கு பொங்கெண்டு பொங்கீட்டான் பாவி.

சனம் எல்லாத்துக்கும் இப்ப இது பெரிய தலையிடியாத்தான் கிடக்கு . ஒரு றாத்தல் பாணுக்கே நாங்கள் லைனில அடிபட்டுக் கொண்டிருக்கிறம். சனங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்படைக்குள்ள..... இவங்கள் இந்தக் கோதாரியை வேற கேக்குறாங்கள்!

நீங்கள் மாவீரர் குடும்பந்தானே குட்டிப்பவுண்! நீங்கள் இந்த ரெண்டு பவுணெல்லாம் கட்டத் தேவையில்லை. அதனால உங்களுக்கு நிம்மதி" என,

சிரித்தபடியே கொஞ்சம் நக்கலாகவே சொன்னார்... சிவலிங்கத்தார்.

"இவ்வளவுநாளா அவங்கள் எப்பிடி எப்பிடியோ சமாளிச்சு.... இத்தினை நாளா சண்டை பிடிச்சுக்கொண்டு இருக்குறாங்கள்! சிங்களவனுக்கு வெளிநாட்டுக்காரன் எல்லாம் ஆயுதம் குடுக்குறதுக்கு முண்டியடிக்கிறாங்கள்!! ஆனா எங்கட பெடியள் என்னத்தைப் பண்ணுவாங்கள்...? சரிசமனா நிண்டு சண்டை பிடிக்க வேணுமெண்டால்.... அவங்களும் அதுக்கேத்த மாதிரி எல்லாத்தையும் வேண்டத்தானே வேணும்...! அதுக்குத்தானே கேக்குறாங்கள்...!!

சிவத்தார்! நான் ஒண்டு கேக்குறன்... தப்பா நினைக்காதையுங்கோ! நான் உங்களுக்கு நாலு பவுண் குடுக்கிறன். உங்களுக்கு என்ர பெடியன திருப்பிக் குடுக்க முடியுமே?

எனக்கு ஒரேயொரு மகன்தான். எவ்வளவு செல்லமா வளத்தனான். ஆனா இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து வந்ததிலயே அந்த பிஞ்சு மனசுக்கும் வெறுத்துப் போச்சு. இளரத்தம்.... அவனும் இயக்கத்துக்குப் போய்.... கடைசியில சின்ன வயசிலையே மாவீரன் ஆயிட்டான்.

அண்ணை! நான் மயிலிட்டியில அந்த நேரத்தில எப்பிடி இருந்தனான் தெரியுமே...? நீங்கள் 'குட்டிப்பவுண் - குட்டிப்பவுண்' எண்டு அடிக்கடி கூப்பிடுறீங்களே... அந்தப் பெயர் எனக்கு எப்பிடி வந்தது தெரியுமே? பவுணுக்கும் வசதிக்கும் எந்தக் குறைச்சலும் இல்லாமல்தான் இருந்தனான். அந்தக் காலத்தில நாங்கள் இந்தியாவுக்கு "லைன்" ஓடின நேரம் உழைச்ச செல்வம் அப்பிடி! எவ்வளவை உழைச்சம்!!! இந்தக் "கடற்புலி" எல்லாம் வராத காலத்தில...இவங்களுக்காக எவ்வளவு 'சாமானைக்' கொண்டுவந்து குடுத்திருப்பம்! சும்மா சொல்லக் கூடாது, அவங்களாலையும் கொஞ்சம் உழைச்சனாங்கள்தான். உழைச்சதை அவங்களுக்கும் திருப்பிச் செய்தனான்தான்.

நான் பெத்து பொத்திப் பொத்தி வளத்த என்ர பெடியன் இயக்கத்துக்கு போயிட்டான் எண்டு அறிஞ்ச நேரத்தில கொஞ்சம் கலங்கினான். ஆனா அவன் உணர்ந்து போனவன். அதனால 'அவனை விட்டிடுங்கோ ராசா!' என நான் போய்.... இயக்கக் காம்ப் வாசலில நிக்கேல! என்னால முடியாதத... அவன் செய்யப்போறான் எண்டு, பெருமையா நினைச்சுத்தான் விட்டனான். அவன் மாவீரனா ஆனபோது கூட நான் கவலைப்படல சிவத்தார்! சத்தியாமச் சொல்லுறன்... பெருமைப்பட்டனான்!!!

1983 கலவரத்தில எல்லாம் நான் கொழும்பில சிங்களவனிட்ட மாட்டுப்பட்டு அடிவாங்கிக் கொண்டு ஓடி வந்தப்போதும் சரி, என் சொத்துப்பத்து எல்லாத்தையும் விட்டுட்டு மயிலிட்டியிலயிருந்து கையில கிடைச்சதோட ஓடி வந்தபோதும் சரி... என் மனசில என்னால எதையுமே செய்ய முடியல எண்ட கோபம் இருந்திச்சு. ஆனா என்ர மகன் போராளியாகி பிறகு மாவீரன் ஆனபோது கூட நான் அழுதாலும் பெருமைப்பட்டனான். என்னாலதான் அப்ப திருப்பி அடிக்க முடியேல... ஆனால், எங்கட பிள்ளையள் தன்னும் நிண்டு போராடி அடிக்கிறாங்கள் எண்டு.

என் செல்வத்தையும் இழந்து செல்ல மகனையும் இழந்து நான் இருந்தாலும்.... இப்ப என்னிட்ட அவங்களுக்காகக் குடுக்குறதுக்கு செல்வமும் இல்ல... பிள்ளையளும் இல்ல... எண்ட கவலைதான் எனக்கு.

என்ர மகளையும் அவளை லவ் பண்ணின பெடியன் கனடாவுக்கு எடுத்திட்டான். நானும் இந்தக் கிளாலிக் கடல் எல்லாம் தாண்டி... தாண்டிக்குளம் தாண்டிப்போய்... கொழும்பில என்ர மகளை அனுப்பி வைக்க ஒரு நல்ல ஏஜென்சிக்காரனை பிடிக்குறதுக்குள்ள நொந்துபோனன்.

18943_1334447563977_1314710912_958907_4521787_n.jpg

அவளுக்கும் சின்ன வயசுதான். ஆனா, என்ர மனிசிக்கு பயம்... இவளும் இயக்கத்துக்கு போயிடுவாள் எண்டு. அதனாலதான், அந்தப் பெடியன் கேட்ட உடனயே என்ர மனிசி உடனயே ஓகே சொன்னவ! இல்லாட்டில்... ஆயிரத்தெட்டு மாப்பிள்ளை பார்த்து... அதில இருந்து செலக்ட் பண்ணுறதுக்குள்ள என்ர மகளுக்கு வயசு போயிருக்கும். எப்பிடியோ... அவளும் ஒருமாதிரி கனடா போய்ச் சேர்ந்திட்டாள்.

எது எப்பிடியோ.... எங்கட சனம் படுற இவ்வளவு கஷ்டத்தையும் அவங்கள்தான்.... இண்டைக்கு இல்லாட்டிலும் எண்டைக்காவது ஒரு நாளைக்கு தீர்த்து வைப்பாங்கள் அண்ணை! அவங்களுக்குச் செய்யாம நாங்கள் இருக்கக்கூடாது சிவத்தார்! " என தன் அபிப்பிராயத்தினையும் ஆதங்கத்தினையும் சொல்லிமுடித்தார் குட்டிப்பவுணர்.

பெளர்ணமி நிலவு வெளிச்சத்திலும்.... குட்டிப்பவுணின் கலங்கிய கண்கள் யாருக்கும் தெரியவில்லை என்றாலும், தன் தலையினைக் குனிந்து வலைப்பின்னலில் ஈடுபடுத்துவதான சாயலால் தன் இயலாமையை இப்பொழுதும் மறைத்துக் கொண்டார்... அந்த வீரத் தந்தை.

சிவலிங்கத்தாருக்கும் குட்டிப்பவுணருக்கும் இடையில் புதிதாக முளைத்திருந்த அமைதி வழமைக்கு மாறாகவே இருந்தது.

இதற்கிடையில்...

சிவலிங்கத்தாரின் மடியில் இருந்த அவரது பேரனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. நிலவொளியில் பால்நுரைபோல் கரையேறிய அலைகளில் கால்நனைக்க, மணல்வீடுகட்ட, அதில் தான் பிடித்த நண்டுகளை குடியேற்ற... என அவனது சின்னத்தனமான வண்ண வண்ண எண்ணங்களுடன் மீண்டும் அவர் மடியிலிருந்து எழுந்த அவர் செல்லப் பேரன்... தன் மணற்பரப்பில் உரிமையோடு காலடி பதித்தபடி அலைதொடும் கரை நோக்கி நடந்தான்.

tumblr_kysuepYmjs1qahuhjo1_500.jpg

சிவலிங்கத்தாரும் ... ஒன்றும் சொல்லாமல் மணலில் பதிந்த அவனது பிஞ்சுக் கால்தடங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

*************************************************************************************************************************************************

தொடரும்...

Edited by கவிதை

:) :) :)1 .
  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நித்திரையால இப்பத் தான் முளிச்சிறீங்க போல கவிதை!

மீண்டும் தொடரைத் தொடர்வது கண்டு மிகவும் மகிழ்ச்சி!>>>

  • கருத்துக்கள உறவுகள்

தொடரைத் மீண்டும் தொடர்வது கண்டு

மிகவும் மகிழ்ச்சி.......... :D

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்தக்கதையின் வாசகன்.பகிர்வுக்கு நன்றி.நேரம் இன்மையால் பதில் எழுதுவது குறைவு.அவளவுதான்.

  • தொடங்கியவர்

:) :) :)1 .

எழுத்துக்கள் இல்லாத முகக்குறிகள் அடங்கிய தங்களின் கருத்துக்கள்(?) கிடைத்தது கோ. நன்றி. :)

பச்சையாய் சொல்லப்போனால், உங்களது கருத்துக்கள், விமர்சனங்கள்தான் எனக்குத் தேவை. பச்சைப் புள்ளிகளோடு, பரிசில்களோடு.. தமிழ்ப் பசியாற வரவில்லை.

சுயம் என்பது மாறாதவரைக்கும் சுயம்வரங்கள் தேவையில்லை!

தேர்வுகள் என்பதனையும் சூழ்நிலைகள்தான் தீர்மானிக்கின்றன!!

நீண்ட நித்திரையால இப்பத் தான் முளிச்சிறீங்க போல கவிதை!

மீண்டும் தொடரைத் தொடர்வது கண்டு மிகவும் மகிழ்ச்சி!>>>

இந்தக் கதையினைத் தொடர்வதற்கான மனநிலை என்பது என்னிலிருந்து கொஞ்சம் தூரத்தில் இருந்த காரணத்தால் தாமதமாகிவிட்டது. இனிவரும் நாட்களில் காலக்கிரமத்தில் தொடர்கின்றேன். மிக்க நன்றி புங்கையூரன்! :)

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்தக்கதையின் வாசகன்.பகிர்வுக்கு நன்றி.நேரம் இன்மையால் பதில் எழுதுவது குறைவு.அவளவுதான்.

நானும் தான் கதையைப் போட்ட உடனே வாசித்து விடுவேன் ஆனால் பதில் எழுதுவது தான் குறைவு.

  • தொடங்கியவர்

தொடரைத் மீண்டும் தொடர்வது கண்டு

மிகவும் மகிழ்ச்சி.......... :D

நிலா அக்கா! கதையினை தொடரவேண்டும் என்பதே ..... என் ஆசையும்!

ஆனால் என் சூழ்நிலைகள் கொஞ்சம் மனநிலைகளைக் குழப்பிவிட்டன. அதனால்தான் தாமதம். மன்னித்துக் கொள்ளுங்கள்! :)

இந்தக் கதை என் 1990 காலப்பகுதிகளை மீட்டும் கதை. அந்தநாள் ஞாபகங்களை மனதில் கொண்டுவந்து தொடர்வேன். நிறைய விடயங்களை சொல்லவேண்டி இருக்கும்.

தாமதமானதற்காக வருந்துகின்றேன்.

நன்றி அக்கா! :)

  • தொடங்கியவர்

snapback.pngsagevan, on 24 January 2012 - 03:50 AM, said:

நானும் இந்தக்கதையின் வாசகன்.பகிர்வுக்கு நன்றி.நேரம் இன்மையால் பதில் எழுதுவது குறைவு.அவளவுதான்.

நானும் தான் கதையைப் போட்ட உடனே வாசித்து விடுவேன் ஆனால் பதில் எழுதுவது தான் குறைவு.

உங்களால் இயன்றவரை மற்றவர்களையும் ஊக்கப்படுத்த வேண்டுமென நினைக்கின்றீர்கள்.

மிக்க நன்றி சஜீவன் மற்றும் ரதி அக்கா. :)

< "இவ்வளவுநாளா அவங்கள் எப்பிடி எப்பிடியோ சமாளிச்சு.... இத்தினை நாளா சண்டை பிடிச்சுக்கொண்டு இருக்குறாங்கள்! சிங்களவனுக்கு வெளிநாட்டுக்காரன் எல்லாம் ஆயுதம் குடுக்குறதுக்கு முண்டியடிக்கிறாங்கள்!! ஆனா எங்கட பெடியள் என்னத்தைப் பண்ணுவாங்கள்...? சரிசமனா நிண்டு சண்டை பிடிக்க வேணுமெண்டால்.... அவங்களும் அதுக்கேத்த மாதிரி எல்லாத்தையும் வேண்டத்தானே வேணும்...! அதுக்குத்தானே கேக்குறாங்கள்...!!

சிவத்தார்! நான் ஒண்டு கேக்குறன்... தப்பா நினைக்காதையுங்கோ! நான் உங்களுக்கு நாலு பவுண் குடுக்கிறன். உங்களுக்கு என்ர பெடியன திருப்பிக் குடுக்க முடியுமே?

எனக்கு ஒரேயொரு மகன்தான். எவ்வளவு செல்லமா வளத்தனான். ஆனா இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து வந்ததிலயே அந்த பிஞ்சு மனசுக்கும் வெறுத்துப் போச்சு. இளரத்தம்.... அவனும் இயக்கத்துக்குப் போய்.... கடைசியில சின்ன வயசிலையே மாவீரன் ஆயிட்டான். >

நான் மூன்று நாட்களாக நானாக இல்லை . அவசரத்தில் முகக்குறியிட்டேன் . இன்று தான் பகுதி நான்கை உள்வாங்கினேன் . நீங்கள் முக்கியமான ஒரு விடையத்தைத் தொடப்போகின்றீர்கள் . அதாவது யாழ்பாணியத்தின் கோரமுகம் . அது ஒன்றும் இலகுவான விடையமில்லை கவிதை . அதற்கு ஒரு தில் கட்டாயம் வேண்டும் :) . ஆனால் சோராது தொடருங்கள் . அதேவேளை எறிகணைகளையும் உள்வாங்கத் தயாருங்கள் . இதில் கதைக்கு படங்களால் உயிர்ப்பு வந்துள்ளது :):) .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்தபடி.........????

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்து நடையிலை முதிர்ச்சி ஒவ்வொரு பாகத்திலும் அதிகரித்திருக்கிறது....நீண்ட இடைவெளி விடாமல் அடுத்த பாகத்தை விரைவாகப் பதிவேற்றுங்கள்..அப்பதான் சுவை குன்றாமல் சூட்டோடு சூடாக நாங்கள் வாசிக்க முடியும்...பாராட்டுக்கள் கவிதை உங்கள் எழுத்துக்களுக்கு....

  • தொடங்கியவர்

நான் மூன்று நாட்களாக நானாக இல்லை . அவசரத்தில் முகக்குறியிட்டேன் . இன்று தான் பகுதி நான்கை உள்வாங்கினேன் . நீங்கள் முக்கியமான ஒரு விடையத்தைத் தொடப்போகின்றீர்கள் . அதாவது யாழ்பாணியத்தின் கோரமுகம் . அது ஒன்றும் இலகுவான விடையமில்லை கவிதை . அதற்கு ஒரு தில் கட்டாயம் வேண்டும் :) . ஆனால் சோராது தொடருங்கள் . அதேவேளை எறிகணைகளையும் உள்வாங்கத் தயாருங்கள் . இதில் கதைக்கு படங்களால் உயிர்ப்பு வந்துள்ளது :):) .

கோ! கருத்துக்கு நன்றி!

நான் ரெண்டு பவுண் என்ற இந்தக் கதையில சொல்ல வாற விடயம் யாழ்ப்பாணியம் என்பதனையும் தாண்டிய ரெண்டு முகங்கள் பற்றியது. ஆனால் ஆழமாக பார்த்தால்தான் அது புரியும்!

மேலோட்டமாக வாசித்தால்..... அது வெறும் சம்பவங்களாகவோ அல்லது கதைபோல்தான் இருக்கும்.

வீட்டில வளர்க்கிற நாயிலிருந்து... றோட்டில பார்க்கிற அறிமுகமில்லாத மனிதர்கள் வரைக்கும் எல்லாரிடமும் ரெட்டை முகங்கள் இருக்கும்!

அதை கொஞ்சம் வெளியால கொண்டுவரும்..... இந்த ரெண்டு பவுண் !!

அதில... இந்த யாழ்ப்பாணியத்தின் முகம் கிழிவதற்கு..... நிறைய சந்தர்ப்பம் இருக்கு என்பதனையும் மறுப்பதற்கில்லை. :)

புலம்பெயர்ந்தவர்கள்தான் இன்னும் பாவம்!!! :)

  • தொடங்கியவர்

அடுத்த கட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்தபடி.........????

ஒவ்வொரு கட்டமும் தாண்டும் போதும் கஷ்டம் எனக்குத்தான்! ஏனென்றால்... கனக்க விஷயத்தை அதாவது, வில்லங்கமான விஷயங்களையும் சொல்லவேண்டிய நிலை இருப்பதால்.

உண்மையை உண்மையாய் உண்மைக்காகவே சொல்லுவேன். :)

பார்க்கலாம்... எப்படி போகுதென்று! :rolleyes:

  • தொடங்கியவர்

எழுத்து நடையிலை முதிர்ச்சி ஒவ்வொரு பாகத்திலும் அதிகரித்திருக்கிறது....நீண்ட இடைவெளி விடாமல் அடுத்த பாகத்தை விரைவாகப் பதிவேற்றுங்கள்..அப்பதான் சுவை குன்றாமல் சூட்டோடு சூடாக நாங்கள் வாசிக்க முடியும்...பாராட்டுக்கள் கவிதை உங்கள் எழுத்துக்களுக்கு....

மிக்க நன்றி சுபேஸ்!

வேலைப்பழுவும் தற்போதைய நாட்களில் அதிகரித்திருப்பதால்... ஆக்கங்கள் எழுதும் மனநிலை வருவது மிகக் கடினமாக இருக்கின்றது. :(

முடிந்தவரைக்கும் விரைவில் எழுத முயற்சிக்கின்றேன். நன்றி! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.