பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தமிழர் தரப்புப் பிரதிநிதிகளின்
சட்டபூர்வத் தன்மை பற்றிய கேள்வி
ஆவணி 15 ஆம் திகதி, தமிழ் மக்கள் சார்பாகப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த தமிழர் தரப்புப் பிரதிநிதிகளின் சட்டபூர்வ தன்மை பற்றி அரசுதரப்பு எழுப்பிய கேள்வி குறித்த விளக்கத்தினை தமிழர் தரப்பு கோரியது. ஆவணி 12 ஆம் திகதிய ஆரம்ப அறிக்கையில் ஹெக்டர் , "இலங்கையில் வாழும் தமிழர்களின் குறித்த ஒரு குழுவினரைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் ஆறு ஆயுத அமைப்புக்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
தமிழர் தரப்பினர் விடுத்த ஒருங்கிணைந்த அறிக்கை கீழே,
இலங்கை அரசாங்கம் எமக்குத் தரவிருப்பதாகக் கூறிக்கொள்ளும் தீர்வினை நீங்கள் முன்வைக்கும் முன்னர், இரு விடயங்கள் குறித்து தெளிவான விளக்கத்தை தமிழர் தரப்பு கோருகிறது. இதற்கான உங்களின் பதிலிலேயே நாம் இப்பேச்சுக்களில் தொடர்ந்தும் பங்கேற்பது தங்கியிருக்கிறது. ஆகவே, நான் கூறவிருக்கும் இவ்விடயங்களைக் கவனமாகச் செவிமடுத்து, அதற்கான பதிலை நன்கு ஆராய்ந்து, தீவிரத்தன்மையினை உணர்ந்து பதிலளிக்குமாறு கனவான்களான உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
முதலாவது விடயம், தமிழர்கள் சார்பாக பேச்சுக்களில் ஈடுபட்ட தமிழர் தரப்புப் பிரதிநிதிகளின் சட்டபூர்வத் தன்மை குறித்த இலங்கை அரசு தரப்பின் கேள்வி. ஆவணி 12 ஆம் திகதியில் தனது ஆரம்ப உரையினை ஆற்றிய ஹெக்டர் தமிழர் தரப்புப் பிரதிநிதிகளை "இலங்கையில் வாழும் தமிழர்களின் ஒரு பகுதியினரை பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் ஆறு ஆயுத அமைப்புக்கள்" என்று விழித்ததன் மூலம் சிங்கள மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் சிங்கள அரசு, தமிழர் தரப்பினை எப்படிப் பார்க்கிறார்கள் எனும் செய்தியினைச் சொல்லியிருந்தார்.
திம்புப் பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கும் தமிழர் தரப்புப் பிரதிநிதிகளான நாம், ஏதோ வாடிக்கையாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதிகள் அல்ல, மாறாக நாம் தமிழ் ஈழத்தைச் சேர்ந்த தமிழ் மக்களை உத்தியோகபூர்வமாக பிரதிநிதித்துவம் செய்யும் ஒரே விடுதலைப் போராளிகள் என்பதனை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக்கொள்கிறோம். சுருக்கமாகச் சொல்வதானால், தமிழ்த் தேசத்தின் ஒரே பிரதிநிதிகள் நாங்கள்.
மேலும், ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு வானில் இருந்து வீழ்வதல்ல, மாறாக அடக்குமுறைக்குத் தொடர்ச்சியாக முகம்கொடுத்து வரும் இனம் ஒன்றின் எதிர்வினையிலிருந்து உருவாவது, அம்மக்களின் ஆதரவினாலும், நம்பிக்கையினாலும் வளர்ந்துவருவது. எமது தேசத்தின் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் ஒடுக்குமுறைகளில் இருந்து அவர்களை விடுவிக்கும் இலட்சியத்துடன் ஆயுதம் ஏந்தி நிற்கும் விடுதலைப் போராளிகளே நாம் அன்றி ஆயுத மோகத்தினால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் இல்லையென்பதையும் கூறிக்கொள்கிறோம். தமிழ்த் தேசிய இனத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வுகோரி தமிழினம் சிங்கள அரசுகளுடன் காலம் காலமாக ஜனநாயக வழிகளில் முயன்ற அனைத்துமே தோல்விகண்டதன் விளைவாகவே நாம் ஆயுதங்களை ஏந்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
எமது ஆயுதப் போராட்டம் விளைவித்த அழுத்தம் காரணமாகவே உங்களின் அரசாங்கம் எம்மை தமிழ் மக்களின் நியாயமான பிரதிநிதிகள் என்பதை நன்றாக உணர்ந்தே "ஆறு ஆயுத அமைப்புக்களுடன்" பேசவென்று உங்களை இங்கு அனுப்பி வைத்திருக்கிறது என்பதைக் கனவான்களான நீங்கள் நிச்சயம் அறிவீர்கள்.
ஆனால், இந்த யதார்த்தம் உங்களுக்கும், எங்களுக்கும் மட்டுமே புரிந்தால்ப் போதுமானது அல்ல. திம்புப் பேச்சுக்களின் ஊடாக இப்பிரச்சினைக்குச் சர்வதேச பரிமாணம் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருப்பதனால், இந்த யதார்த்தங்கள் பேச்சுவார்த்தைகளில் முற்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், இதுகுறித்த இன்னொரு நடைமுறைச் சிக்கல் ஒன்று குறித்தும் பேசுவது அவசியம் என்று நான் கருதுகிறேன். இலங்கையில் வாழும் தமிழர்களையும், அவர்களின் தேசத்தையும் பிரதிநிதித்துவம் செய்யாது, ஒரு பகுதியை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு ஆயுத அமைப்புக்களுடன் உங்களின் அரசு பேச்சுக்களில் சமமாகப் பேச அமர்ந்திருப்பதனை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நீங்கள் எப்படி விளக்கப்போகிறீர்கள்?
எம்மை, எமது மக்களின் சட்டபூர்வப் பிரதிநிதிகள் இல்லையென்று பிடிவாதம் செய்து, அகம்பாவத்துடன் எமக்கு முன்னால் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்திருக்கும் அரசு தரப்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம் என்பதை நாமும் தான் எமது மக்களிடம் எப்படிக் கூறப்போகிறோம்? திம்புப் பேச்சுக்கள் தொடரவேண்டுமானால் இந்த நடைமுறைச் சிக்கல் களையப்படவேண்டும் என்பதுடன், இதனைக் களைவதற்கான முழுப் பொறுப்பும் அரச தரப்பிடமே இருக்கிறதென்பதையும் நான் கூறிக்கொள்கிறேன், ஏனென்றால் இச்சிக்கலினை உருவாக்கியவர்களே நீங்கள்தான்.
எமது சட்டபூர்வத்தன்மை குறித்து கேள்வி கேட்பதற்கு, மக்களின் விருப்பிற்குப் பயந்தோடி, தேர்தலை இரத்துச் செய்து, சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்ட உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஆனால், மக்களின் விருப்பிற்கு மாறாக, அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்து, சர்வஜன வாக்கெடுப்புக்கள் மூலம் மக்களை அடக்கியாளும் உங்களைப் போன்ற, மக்களின் ஆதரவும் நம்பிக்கையும் அற்ற சர்வாதிகார அரசுகள் உலகில் காணப்படுவதால் அதுகுறித்து சர்ச்சையொன்றினை உருவாக்குவதை நாம் தவிர்த்துவிடுகிறோம்.
பேச்சுக்களைத் தொடர்வதற்கு முன்னர், நாம் முன்னர் குறிப்பிட்ட இரண்டாவது விடயம் குறித்துப் பேசலாம். அரசு தரப்புக் குழுவின் தலைவர் காணி தொடர்பாக தனது நிலைப்பாட்டினை சபையில் தெரிவிக்கவிருப்பதாகக் கூறினார். ஆனால், நாம் முன்னர் பல தடவைகள் கூறியது போல, அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு என்னவென்பது குறித்த தெளிவான முடிவொன்று எடுக்கபாடதவிடத்து, அதிகாரப் பரவலாக்கத்திற்காகக் கருத்தில் கொள்ளப்படும் விடயங்கள் குறித்து பேசுவதில் எந்தபயனும் இல்லையென்பதனால் அவை குறித்து நாம் பேசப்போவதில்லையென்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறோம். தீர்விற்கான கட்டமைப்பு என்று உங்களால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை நாம் சரியான காரணங்களுடன் முற்றாக நிராகரித்திருக்கிறோம். ஆகவே, முன்னைய ஆலோசனைகளின் அடிப்படையில் புதிய ஆலோசனைகளை நீங்கள் முன்வைக்கப்போவதாகக் கூறுவது எம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
ஆகவே, எமது கேள்விகளுக்காக நீங்கள் வழங்கப்போகும் பதில்களிலேயே இப்பேச்சுக்கள் தொடரப்படவேண்டுமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படவிருக்கிறது.
தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட இந்த ஒருங்கிணைந்த அறிக்கை, பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு அச்சுருத்தலாக இருக்கப்போகிறது என்கிற நிலை தோன்றியது. இலங்கையரசாங்கம் இதனால் கொதிப்படைந்தது. தமிழர் தரப்பின் சட்டபூர்வத் தன்மை குறித்த அரசாங்கத்தின் கேள்வியே தமிழர் தரப்பு பேச்சுக்களில் இருந்து விலகிச் செல்வதற்கான வழியினைத் திறந்துவிட்டிருப்பதை அரசு உணர்ந்துகொண்டது. திம்புவில் இருந்து தனது சகோதரரான ஜெயாருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார் ஹெக்டர். தாமே உருவாக்கிய சிக்கலில் இருந்து வெளிவருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அவர்கள் தீர்மானித்தனர்.