"இனப்படு கொலை"
[இது எந்தவொரு அரசியலையோ அல்லது நிகழ்வையோ சார்ந்தவையல்ல. இது எனது பார்வையில் , எனக்கு தெரிந்த அளவில், ஒரு பொதுவான சுருக்கமான அலசல் மட்டுமே]
இனப்படுகொலை பொதுவாக ஒரு போர் சூழலில் அல்லது இரண்டு இனங்கள் / குழுக்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட , முரண்பட்ட அரசியல், பண்பாட்டு சூழலில் அல்லது ஒரு இனம் அதிகாரம் , படை , ஆள் பலம் அதிகரித்த நிலையில் தன்னிச்சையாக மற்ற சிறுபான்மை இனத்தை நசுக்க, ஒடுக்க முயலும் சூழலில் அல்லது எதோ சில பல காரணங்களால் ஒரு இனம் மற்ற இனத்தை வெறுக்கும் சூழலில் அல்லது இவைகள் எல்லாம் கலந்த ஒரு சூழலில், பொதுவாக நடை பெறுகிறது.
ஆகவே இனப்படு கொலையைப் பற்றி சிந்திக்கும் போது , அவைகளுடன் போர் குற்றங்கள் [War Crimes] ,' மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் ['crimes against humanity'] போன்றவையும் பொதுவாய் வந்து விடுகின்றன.
இப்ப இனப்படு கொலை என்றால் என்ன என பார்ப்போம்.
இனப்படு கொலை என்பது ஒரு இனம் மற்ற இனத்தை ஆயிரம், பத்தாயிரம், இலட்சம் என கொன்று குவிப்பதோ, அழிப்பதோ மட்டும் அல்ல. அதற்கு மேலாக ஒரு இனத்தின் அடையாளமான மொழி, பண்பாடு, பரம்பரை பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை தடுப்பதும், இடையூறு விளைவிப்பதும் , அழிப்பதும் அத்துடன் அதன் வாழ்வை, வளர்ச்சியை, வளத்தை முடக்குவதும் ஒரு இனப்படு கொலையே!
இனப்படு கொலை என்ற சொல் [THE TERM "GENOCIDE" ] 1944 க்கு முன் இருக்கவில்லை. போலந்து-யூதச் சட்ட வல்லுனரான ராபேல் லெம்கின் [Raphael Lemkin (1900-1959)] என்பவரே இனப்படுகொலை என்னும் கருத்துருவுக்கு முதன் முதலில் சொல்வடிவம் கொடுத்தவராவார். இனத்தை குறிக்கும் geno என்ற கிரேக்க சொல்லையும், கொலையை குறிக்கும் cide என்ற லத்தீன் சொல்லையும் ஒன்றிணைத்து இந்த சொல்லை உருவாக்கினார். ஆகவே இனப்படு கொலை என்பது ஒரு சர்வதேச குற்றம் [International Crime] ஆகும்
அதாவது கிழே தரப்பட்டவைகளை, முழுமையாகவோ பகுதியாகவோ ஒரு தேசிய குடிமக்களை, இனத்தை, சாதியை அல்லது ஒரு மதம் சார்ந்த குழுவை அழிக்கும் நோக்குடன் ஈடுபடுதலைக் குறிக்கிறது .
அதாவது ஒரு குழுவின் உறுப்பினர்களை
*கொல்லுதல்
*உடலிற்கு அல்லது மனதிற்கு கடும் தீங்கு ஏற்படுத்துதல் / விளைவித்தல்.
*வேண்டும் என்று பகுதியாகவோ முழுமையாகவோ ஒரு உடல் அழிவை ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துதல்
*அந்த குழுவிற்குள் இனப்பெருக்கத்தை அல்லது பிறப்புகளை தடுப்பதற்கான வழி முறைகளை சுமத்துதல்.
*அந்த குழுவின் சீரார்களை கடாயப்படுத்தி மற்ற குழுக்குள் மாற்றுதல் .
ஆகியவை இனப்படு கொலையாகும்!
இனப்படு கொலை என்ற சொல் 1944 ற்கு பின்பு வந்த படியால் அதற்கு முன் அப்படி ஒன்று நிகழவில்லை என்று பொருள் அல்ல. பல சாட்சிகள் எமது பண்டைய சரித்திரத்திலும் இதிகாசத்திலும் புராணத்திலும் மற்றைய சமய இலக்கியங்களிலும் காணப்படுகின்றது. ஆனால் இனப்படு கொலை என்ற சொல்லை நேரடியாக பாவிக்காமல். அவ்வளவுதான் !
உதாரணமாக கி.மு. 2000 ஆண்டுகளில் நாகரிகம் அடைந்து பின்னர் கி.பி. 300 ஆண்டுகளில் இருந்து, 700 ஆண்டுகள் வரை மிக செழிப்பாக வாழ்ந்த மாயன் நாகரிகத்தை படைத்த மாயன் மக்களை ஸ்பெயின் நாடு பீரங்கிகளை கொண்டு தாக்கி 'யுகடான்" (Yucatan) மாநிலத்தை கைப்பற்றயது. அத்துடன் நிறுத்தி விடவில்லை.
'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' என்பார்கள். அது போல, 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்'.
வரலாற்றில் இது பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது.
1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் வன்முறைக் குழுவொன்றால் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது!
இப்படி ஒன்றையே மாயான்களுக்கு உதவி செய்ய, மீட்பவர் [இரட்சகர் ] போல வந்து சேர்ந்த ஸ்பானிய கிருஸ்தவ மதகுரு டியாகோ டி லாண்டாவும் (Diego de Landa) செய்தார்.
இனப்படு கொளையாளிகள் என்றதும் ஹிட்லர் மற்றும் முசோலினியின் உருவங்கள் உடனடியாக நம் நினைவுக்கு வருகிறது. ஏன் என்றால் லட்சக் கணக்கானவர்களின் மரணத்துக்கு அவர்கள் நேரடிக் காரணம் என்பதால். ஆனால், இவர்களைக் காட்டிலும் குரூரமான பலரை வரலாறு கண்டிருக்கிறது. அப்படி ஒருவரே ஸ்பானிய மதகுரு,டியாகோ டி லாண்டா ஆவார் .
அமாம் வானியல், அறிவியல், கணிதவியல், விவசாயம் என மாயன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து- அனைத்தையும் புத்தகங்களாக எழுதி வைத்திருந்தனர் மாயான்கள். எழுதி வைத்திருந்த ஆயிரக்கணக்கான அந்த நூல்களை, ஸ்பானிய இராணுவத்தின் உதவியுடன் மொத்தமாகத் தீயில் போட்டுக் கொளுத்தினார் லாண்டா. இவரால் அழிக்கப்பட்ட நூல்கள் அனைத்தும், விலை மதிப்பற்ற, மீண்டும் பெறமுடியாத களஞ்சியமாகும். அவை எல்லாம் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் என்றால், உலகின் பல இரகசியங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் விடை கிடைத்திருக்கலாம் அல்லவா ?.
இது போலவே இந்து சம வெளி மக்களையும் அவர்களது நாகரிகத்தையும் இந்தியாவிற்குள் 1700 கி மு வந்த ஆரிய இனம் அழித்து துரத்தியது.? சிந்து சம வெளி நாகரிகம் 4,500-5,000 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்புற்று விளங்கியது. மேலும் அவர்களுக்கும் திராவிடருக்கும் நெருங்கிய தொடர்புண்டு என வரலாற்றாசிரியர் கூறுவர். ஏறத்தாழ கி மு 2000 ஆண்டு காலப் பகுதியில் அலை அலையாக அதிகமாக கைபர் கணவாய் (Khyber Pass) மூலம் மலைகளை கடந்து இந்தியாவிற்குள் வந்த நாடோடி மக்களான ஆரியரே சிந்துவெளி நாகரிகத்தின் அழிவுக்குக் காரணமாயிருந்தனர் என்பது இப்பொழுது ஆராய்ச்சி யாளர்களின் ஒரு முடிவாகும். என்றாலும் வேறு சில முடிவுகளும் உண்டு. ஆரியர்கள், தமது மேம் பட்ட படைக் கலத்தாலும் போரிடும் தேர்ச்சித் திறமையாலும் விவசாயம் சார்ந்த பழங்குடி இனமான [agricultural and tribal peoples] சிந்து சம வெளி மக்களை வென்று அவர்களை தென் இந்தியா நோக்கி தள்ளினார்கள் ஒரு முடிவு. அது உண்மையா இல்லையா என்பது இன்னும் விவாதத்துக்குரியது . சிந்துவெளி நாகரிகம் கி.மு.1700-ம் ஆண்டளவிற்குப் பின்னர் வரலாற்றில் இருந்து மறைந்து விடுகிறது. இதன் வீழ்ச்சிக் காலம் குறித்த தொல்லியல் சான்றுகளும், ஆரியர் உள்வரவு தொடர்பான கணிப்புக்களும் பொருந்தி வந்தது இந்த கருது கோளை மேலும் உறுதிபடுத்துகிறது. 1953 ஆம் ஆண்டு , தொல்லியலாளரான மார்ட்டிமர் வீலர் (Mortimer Wheeler) மேலே குறிப்பட்ட கோட் பாட்டை முன்மொழிந்து அதற்கு சான்றாக போரில் இறந்த அடையாளங்களுடனான பலரின் புதை குழிகள் அங்கு மேற்படைகளில் காணப்பட்டதை இக் கோட்பாட்டிற்கு மேலும் ஒரு சான்றாக காட்டி அதற்கு வலு சேர்த்தார். உதாரணமாக, புதை குழிக்குள் அவசரம் அவசரமாக எறியப்பட்ட இறந்த மனித உடலின் எலும்புக்கூடுகளின் தொகுதி ஒன்று அங்கு கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இது அந்த இறந்தவர்களை புதைத்தவர்கள் கால அவகாசம் இல்லாததால் அப்படி செய்திருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. மேலும் ஒரு ஆண், ஒரு பெண், இருவரினதும் எலும்புக்கூடுகள் மாடி படிக்கட்டில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இது இந்த இருவரும் அவசரம் அவசரமாக தப்பி ஓடுவதை தெளிவாகக் காட்டுகிறது. அத்துடன் அந்த எலும்புக் கூட்டை பரிசோதித்ததில் அவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என தெரிய வருகிறது. இது பற்றி மேலும் குறிப்பிட்ட போது, இந்தோ-ஆரிய போர்க் கடவுளான இந்திரனே [Indra, the leader of the Devas], இந்த அழிவுக்காகக் குற்றம் சாட்டப்படுகிறான் என்றார். மேலும் ஆடு மாடு மேய்த்து வந்த நாடோடி கூட்டமாகிய ஆரியர்கள் தங்களுடன் போர் தொடுத்த திராவிடர்களை திட்டி, கேவலப் படுத்தி, பழித்து தங்கள் வேதங்களில் எழுதி வைத்தனர் என "ரோமேஷ் மஜும்தார்" தமது "பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும்" என்ற புத்தாகத்தில் 22 ஆம் பக்கத்தில் கூறுகிறார். மேலும் ஆரியர் அல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் எனவும் தஸ்யுக்கள், அசுரர்கள் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளன என Dr. ராதாகுமுத முகர்ஜி Phd "இந்து நாகரிகம்" பக்கம் 69 இல் குறிப்பிடுகிறார். இதற்கு ஒரு மாதிரி எடுத்துக்காட்டாக ஒரு பாடலை கிழே தருகிறோம் .
"இந்திரா! ஆந்தையைப்போலும், ஆந்தைக் குஞ்சைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் [தமிழர்களை] கொல்லவும். நாயைப் போலும் கழுகைப்போலும் உள்ள தஸ்யூக்களைக் (தமிழர்களை) நசுக்கி ஒழிக்கவும்."
மண்டலம் 7, அதிகாரம் (சூக்தம்) 104, பாடல் (சுலோகம்) 22
மேலும் இதில் ஒருவர் கவனிக்க வேண்டியது என்ன வென்றால் , மாயனும் இந்து சம வெளி மக்களும் தமிழர்களின் மூதாதையர் அல்லது அவர்களுடன் தொடர் உடையவர்கள் என அறிஞர்கள் இப்ப சான்றுகளுடன் கூறுவது . ஆகவே இந்த இரு முதன்மை இனப்படு கொலைகளை தாண்டித்தான் நாம் இப்ப வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் . அது மட்டும் அல்ல இக் கொலைகளை /அழிவுகளை புரிந்தோர் இருவரும் ஒரே இந்தோ -ஐரோப்பிய மொழிக் குடும்பத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மொழி குடும்பத்திற்குள் உள்ள இந்திய-ஈரானிய மொழி குடும்பத்தில் தான் பல வட இந்தியா மொழியும் உள்ளன என்பதும் கவனிக்கதக்கது.
மேலும் ஒரு கடைசி உதாரணமாக எமது பார்வையை மகாபாரதம் அல்லது விஸ்ணு புராணம் பக்கம் திருப்புவோம். விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் என கருதப்படும் பரசுராமரை இங்கு சந்திக்கிறோம். பரசு என்றால் கோடாலி என்று பொருள். இவர் ஜமதக்னி முனிவரின் மகன் ஆவார்.
ஒரு முறை கார்த்தவீரியன் என்றோர் அரசன் [சத்திரியன் / க்ஷத்ரியர்] ஜமதக்கினி முனிவரின் காமதேனு பசுவை கடத்தி சென்று விட்டான், இதை அறிந்த பரசுராமர் அவனைக் கொன்று பசுவை மீட்டார். ஆத்திரம் அடைந்த கார்த்தவீரியனின் புதல்வர்கள் ஆசிரமத்திற்கு வந்தார்கள். அங்கு பரசுராமர் இல்லாததால் , அவனின் தந்தை ஜமதக்னி முனிவரின் தலையை பலிக்கு பலி வெட்டினர். தாயின் அலறலைக் கேட்டு பரசுராமர் ஓடோடி வந்தார். நடந்ததை அறிந்தார். அப்பொழுதே இந்தக் க்ஷத்திரியப் பூண்டை அடியோடு அழிப்பேன் என்ற சபதம் எடுத்தார் பரசுராமர். அரச குமாரர்களின் தலைகளை அறுத்து மலைகளாகக் குவித்தார். இரத்த ஆறு ஓடியது. குரு - க்ஷத்திரத்தில் இருந்த குளங்களில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் நிரம்பி வழிந்தது. இதை அடுத்து கொடிய கொலைக்காரனாக மாறி பூமியில் உள்ள க்ஷத்திரிய வம்சம் இல்லாமல் போகும்படி இருபத் தொரு திக்விஜயம் செய்து, இருபத் தொரு தலை முறையை வேரறுத்தார் என கூறுகிறது.
இவர் தனி மனிதனாக அழித்த அரச வம்சத்தின் எண்ணிக்கை செங்கிஸ்கான் [mongolian king genghis khan], ஹிட்லர் [Adolf Hitler], ஸ்டாலின் [Joseph Stalin], முசோலினி [Benito Amilcare Andrea Mussolini], மாசேதுங் [Mao Zedong ] இவர்கள் எல்லாம் சேர்ந்து செய்த கொலைகளை விட மிக மிக அதிகம். சத்திரியர் குலத்தை அழித்ததினால் பிராமணர்கள் இவரை கடவுளின் அவதாரமாக்கி விட்டனர் போலும். என்றாலும் க்ஷத்திரிய வம்சம் பூண்டோடு போன பின்பும் அந்த வம்சத்தை தழைக்கச் செய்தான் மூலகன். சூர்ய குலத்தில் பிறந்தவன் இந்த அரசன். இராமாயண ராமன் இவனது எட்டாவது தலை முறையாகும். பெண்கள் பலர் மூலகனைச் சூழ்ந்து நின்று கொண்டு பரசுராமர் கண்ணில் படாதவாறு காப்பாற்றினார்கள். அதனால் அவனை நாரிவசன் என்றும் அழைப்பர். இப்படித் தான் க்ஷத்திரய வம்சம் மீண்டும் தழைக்க ஆரம்பித்தது.
ஆகவே பொதுவாக விவேகமும் வீரமும் ஆற்றலும் கொண்ட ஒரு இனத்தை முழுமையாக தடை செய்யவோ அழிக்கவோ முடியாது என்பது கண்கூடு எப்படி என்றாலும் ஒரு இனப்படு கொலை நடை பெறும் போது ஒரு தற்காலிக பின்னடைவு நிகழ்கிறது. அதனால் தான் பொதுவாகத் எல்லோரும் அறிய விரும்புவது :
*உண்மையில் என்ன நடந்தது ?
*இது ஏன் நடந்தது ?
*இதற்கு யார் பொறுப்பு ?
*இந்த அட்டூழியத்திற்கு யார் யார் உடந்தையாக பின் புறத்தில் இருந்தவர்கள் ?
*நாம் யாரை குற்றம் சுமத்த வேண்டும் ?
இதனால்த் தான் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வள்ளுவரும், தனது திருக்குறள் 548 இல்:
"எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்."
என்று கூறுகிறார். அதாவது, நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பல வகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான் என்கிறார்.
இப்படியான கேள்விகளுக்கான உண்மையான, ஆக்கபூர்வமான, பக்க சார்பு அற்ற, பதில்களையே இவர்கள் எதிர்பார்க்கிறார்கள் ! ஆகவே இந்த நேர்மையான கோரிக்கைகள் சிக்கலான ஒன்று அல்ல. மிக மிக இலகுவான ஒன்றே !!
*"உண்மைகளை வெளிபடுத்துவது "
*"நேரடியாகவோ மறைமுகமாவோ இதில் ஈடு பட்டவர்களை அல்லது குழுக்களை பகிரங்கமாக தண்டிப்பது"
*"இதை ஒரு பாடமாக மற்றவர்களுக்கும் உணர்த்துவது "
அப்படி என்றால் இவை மேலும் தொடராமல் தடுக்கலாம் . அடுத்த பரம்பரைக்கும் இந்து சம வெளி மற்றும் மாயன் ? போல் தொடராமல் இருக்க . அது மட்டும் அல்ல பரசுராமர் போல் பரம்பரை பரம்பரையாக அழிப்பதை நேரத்துடன் தடுக்கலாம் என்பதாலும் . இன்னும் ஒரு மூலகன் வரும்வரை இருபத்தி ஒரு தலை முறைக்கு காத்திருக்க தேவை இல்லை என்பதாலும் ஆகும் .
"வாருங்கள், வந்து கை கொடுங்கள்-
இமைகள் மூடி பல நாளாச்சு
மூடுங்கள், மூடி கண்ணை கட்டுங்கள்-
வரிசையாய் வருங்கள் பல சடலங்கள்
தாருங்கள் தீர்வை, தந்து கவலை தீருங்கள்-
கேள்விகள் கேட்டு என்னை வதைக்கின்றன
நாக்கை அறுத்தனன் நாதி யற்றவன்-
நங்கை இவள் உண்மை உரைத்ததால்
முலையை சீவினான் கொடூர படையோன்-
வஞ்சி இவள் காமம் சுரக்காததால்
கண்களுக்குள் புதையாத இவர்களை தருகிறேன்-
அப்பாவிகளை ஒன்று ஒன்றாய் புதைக்க
வரிசையில் வரிந்து வருகினம் பல்லாயிரம்-
இடையில் சின்னஞ் சிறுசு சில ஆயிரம்
முழங்கினர், கதறி கண் முன் வந்தனர்-
விசாரணை எடு- உண்மையை நிறுத்து
கூடுங்கள், ஒன்றாய் உண்மையை உரையுங்கள்-
படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]