Leaderboard
-
suvy
கருத்துக்கள உறவுகள்9Points34065Posts -
alvayan
கருத்துக்கள உறவுகள்9Points5648Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்9Points20141Posts -
மெசொபொத்தேமியா சுமேரியர்
கருத்துக்கள உறவுகள்8Points8586Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/22/26 in all areas
-
அப்பிள்போன் வேணும் தம்பி….
7 pointsபோன தடவை கேட்க மறந்திட்டன்… இப்ப இது அவசியமாய் இருக்கு.. இது இல்லாமல் இங்கு வாழுறதே கஸ்டம் இல்லையென்று சொல்லிவிடாதே.. மாடு .வளர்த்து ..பால் வித்த காலம் போயிட்டுது பாலுக்கு இப்ப சனம் பூட் சிற்றிக்கு போகுது பகுதிநேர உழைப்பொன்று தேடப் போறன் பார்த்து நல்ல போனா அனுப்பிவிடு… ஆடு வளர்த்து கிடாய் வித்த காலம் போயிட்டுது ஆரிப்ப ஆடடித்து பங்கு போடுகினம் ஆட்களெல்லாம் இப்ப மட்டன் திருவிழாவுக்கு போகினம் ஆரெட்டையென்றாலும் ஒரு போன் கொடுத்துவிடு.. தோட்டத்திலை கத்தரி வெண்டி போட்டாலும் போயிலையை நட்டாலும் விலை போகாதாம் கஞ்சாவும் ..குடுவும் அடிக்கிற வாய்க்கு இவை ஏன் அப்பிள் நல்லதாம் அதைத்தான் அனுப்பிவிடு மானாண்டிச் சந்தையில்..மாலை நேரத்தில் பாய் பெட்டி இழைத்து வித்த காலமும் போச்சு பாயையும் பெட்டியையும் இப்ப ஆர் தேடிகினம் பார்சலில் என்றாலும் போனை அனுப்பிவிடு அவசரம் ஆச்சிக்கு ஏன் இப்ப அப்பிள் போனென்று கேட்கிறாய் ஆச்சி டிக் –ரொக் போடப்போறன் ஆரெட்டை பழகப் போறன் என்று நினைப்பாய் அயலட்டையெல்லாம் உதுதான் தொழில் ஆயிரக்கணக்கில் காசுவருதாம்.. ஆச்சியின் அறிவுக்கும் ..இந்த குரலுக்கும் ஆயிரம் வியூஸ் வரும் … வயதுதான் போட்டுது அதுக்கும் வழியிருக்கு…மேக்கப் படிப்பது.. அப்பன் உன்னை நம்பி அயலட்டையெல்லாம் சொல்லிப்போட்டன் அவையும் ஆச்சியின் ரிக்-ரொக் பார்க்க ரெடி அப்பிள் போன்தான்..வேணும்தம்பி அதை மறக்காமல் அனுப்பிவிடு…7 points
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
சாதாரணமாக மலிவான விமானச் சீட்டைத்தான் சாதாரணர்கள் எல்லோரும் தெரிவு செய்வது. கடந்த ஆண்டு ஸ்ரீலங்கன் விமானத்தில் நேரே செல்வோம் என்று நூற்றைம்பது பவுண்டஸ்கள் அதிகம் கொடுத்து கொழும்பில் இறங்கியபோது விரைவில் வந்து சேர்ந்தாச்சு. இனிமேல் இதிலதான் வாறது என்று முடிவெடுத்து, திரும்ப வரும்போது மலசலகூடம் சுத்தம் செய்யப்படாமல் நாறிக் கிடந்ததில் இனிமேல் அதில் போவதில்லை என்று முடிவெடுத்து ஒன்லைனில் தேடினால் எல்லாம் 700 பவுண்சுக்கு மேலே காட்ட, “ஸ்கைவிங்ஸ்” மூலம் கடவுச்சீட்டைப் பதிவு செய்து ஐப்பசி மாதம் பதினெட்டாம் திகதி கட்டார் ஏயார்வேஸ் விமானத்தில் டோகா வழியாக இலங்கை போய் இறங்கியாச்சு. ஒரு கட்டுமான வேலைக்காகத்தான் முதலில் போக யோசித்தது. ஆனால் இம்முறை சரியான மழை என்று எல்லோரும் கதைத்ததனால் சரி தை மாதம் அளவில் செல்லலாம் என்று எண்ணியிருக்க, கணவரின் அண்ணன் அழைத்து கடைசி மகளுக்கு இன்னும் இரு மாதத்தில திருமணம் செய்துவைக்க இருக்கிறம். குடும்பத்தோட வாங்கோ என்றுவிட, நான் இப்ப எல்லாத்தையும் விட்டிட்டு வர ஏலாது. போக வெளிக்கிட்டனி இப்பவே போவன் என்று மனிசன் எனக்குக் கூற, எனக்கோ பெரிதாக விருப்பம் வரவில்லை. கணவரின் தமையன் மகளும் போன் எடுத்து சித்தி கட்டாயம் வாங்கோ என்று கூற மறுக்க முடியாமல் சரி வருகிறேன் என்று கூறி போனை வைத்தபின் மனிசனை வீட்டில் விட்டுவிட்டுப் போகவும் மனமின்றி நீங்கள் தான் கட்டாயம் போகவேணுமப்பா, நீங்களும் வாங்கோ என்கிறேன். எமது வீட்டின் பின்னால் ஒரு மேலதிக அறையும் மலசலக்கூடமும் கட்டும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதனால் தான் விட்டுவிட்டு வரமுடியாது. நீ மட்டும் போ என்கிறார். சரி என்று அங்கிருப்பவர்களுக்குக் கொண்டுபோவதற்கான சொக்லற்,பிஸ்கட் என வாங்கி அடுக்கி, எனக்கும் ஐந்தாறு மாதங்கள் நிற்பதற்கான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வாங்கி நிரப்ப இரண்டு பெரிய பொதிகள் ஒவ்வொன்றும் 23 கிலோக்கள். கையில் கொண்டுபோவது ஏழு கிலோ என எல்லாம் நிரம்ப, “எப்ப பாத்தாலும் அள்ளி கொண்டு போய் தானதருமம் பண்ணு” என்று திட்டும் மனிசனைக் கணக்கெடுக்காமல் எல்லாவற்றையும் கச்சிதமாக முடித்து, செல்லும் நாளுக்காகக் காத்திருந்து யாழ்ப்பாணமும் போயாச்சு. திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் குளிர், மழை, புயல் என்று ஓய, கார்த்திகை மாதக் கடைசியில் வீடு திருத்தும் வேலை ஆரம்பித்து அத்தனை பேருடன் மல்லுக்கட்டி ( அதை விபரமாக இன்னொரு பதிவில் போடுறன் ) இன்னும் வேலை முடிந்தபாடில்லை. மாசி மாதம் 15 போட்ட விமானச் சீட்டை பங்குனி 11 ற்கு வீணாக 70 பவுண்ட் கட்டி மாற்றிய பின் ஈரான் போர் தொடங்க என்ன செய்றது எந்த யோசனையும் ஓடிது. மாதக் கடைசியில் யாழ்ப்பாணம் வரவிருந்த கணவரும் கடவுச்சீட்டு மூன்று மாதங்களே இருந்த காரணத்தால் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துவிட்டு, அதுதான் சாட்டென்று வீட்டு வேலை முடிய கிளம்பி வா. இங்கை ஒரு அசுமாத்தமும் இல்லை என்கிறார். எனக்கு இன்னும் பயணத்துக்கு நான்கு வாரங்கள் இருக்க, மூன்று வாரங்களில் கிளம்பவேண்டும். வேலையை விரைவாக முடியுங்கள் என்கிறேன், இரு வாரங்களின் பின் எனக்குக் கடவுச் சீட்டை மாற்றித் தந்த ஸ்கை விங்ஸ் இலங்கை முகவருடன் தொடர்புகொண்டு என்ன நிலமை என்று கேட்க, அக்கா எனக்கு இன்னும் சொல்லத் தெரியேல்லை. எதுக்கும் 9 ம் திகதி உங்கள் விமானம் பற்றிக் கூறுகிறேன். மறக்காமல் எனக்கு போன் எடுங்கோ என்கிறார். மனதில் சிறு பயம் எட்டிப் பார்க்கிறது. கணவர் பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் போகுமோ என்னும் யோசனையும் எழ மூத்த மகளுக்குப் போன் செய்கிறேன். அம்மா நீங்கள் போன் செய்ய முதலே நான் பாத்துக்கொண்டுதான் இருக்கிறன். நேரில் வரும் விமானம் எல்லாம் 1500/ 2000 பவுண்டஸ் போடுகிறார்கள். டெல்லி வந்து துருக்கி போய் லண்டன் வர 800 பவுண்டஸ் டிக்கற் இருக்கு. புக் செய்யவோ என்கிறாள். வீணாக ஏன் அவ்வளவு காசு. எதுக்கும் ஒன்பதாம் திகதிவரை பொறும் என்றுவிட்டு வீட்டு வேலைகளில் மூழ்கிப்போகிறேன். காசைப் பார்த்து போர் அதிகமானால் என்ன செய்வது? நான் தனிய இங்க மாட்டுப்படப் போறேனோ என்று யோசனையாகவும் இருக்க இரண்டாவது மகள் அழைக்கிறாள். கோவிட் நேரம் போல பொருட்கள் எல்லாம் கடைகளில் தட்டுப்பாடோ என்று கேட்க. யாரும் எதையும்பற்றிக் கவலை கொள்ளவில்லை. எல்லாம் சாதாரணமாகத்தான் போகுது. வீட்டுவேலைகள் முடிந்துவிட்டதா? என்கிறாள். இன்னும் ஒருவாரத்தில் முடிப்பதாகச் சொல்கிறார் பொறுப்பானவர். பார்ப்போம் என்கிறேன். காசைப் பார்க்காதைங்கோ. நான் டிக்கற் போடுறன் என்றவளைத் தடுத்து எதுக்கும் ஒன்பதாம் திகதிவரை பார்ப்போம் என்கிறேன். ஏழாம் எட்டாம் திகதிகளில் வேலையாட்களுடன் பொழுது போய்விட, இரவில் பிரையாணம் சரிவருமா என்ற குழப்பத்தில் தூக்கமே வரவில்லை. அடுத்தநாள் காலை ஒன்பதுக்கு கொழும்புக் கிளைக்குத் தொலைபேசியில் அழைத்தால் என்னுடன் பேசவேண்டியவர் தற்போது இல்லை. மதியம் இரண்டு முப்பதுக்குப் பின் போன் செய்யுங்கள் என்கின்றனர். அதுவரை காத்திருந்து போன் செய்தால் உங்கள் விமானம் 11 ம் திகதி ஓடாது அக்கா. இப்ப மூன்று நாட்களாக எதுவும் ஓடவில்லை என்கிறார். ஓடவில்லை என்றால் ஒடுற விமானமாப் பார்த்து நீங்கள் தான் டிக்கற் மாற்றிப் போட்டுத் தரவேணும் என்கிறேன். நான் பார்க்கிறன், பார்த்திட்டு இண்டைக்கு நான்கு மணிக்கு உங்களுக்கு போன் செய்யிறன். எதுக்கும் உங்கள் இலங்கை இலக்கத்தைத் தாங்கோ என்று கூற, நான் இப்ப கதைக்கிற இலக்கம் தான் என்கிறேன். ஒருக்காச் சொல்லுங்கோ அக்கா நான் எழுதிறன். இந்த போனில காட்டாது என்று கூற நான் இலக்கத்தைச் சொல்கிறேன். நேரம் நான்கு ஆகி நாலரை ஆன பின்னும் அவரிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. நான்இரண்டு மூன்று தடவைகள் போன் செய்தும் யாருமே எடுக்கவில்லை. விடாமல் பத்து நிமிட இடைவெளியில் ஒரு பத்துத் தடவையாவது போன் எடுத்தும் யாரும் எடுக்கவில்லை. அவர்களின் இலக்கம் சாதாரணமாது. அதனால் எந்த செய்தியையும் கூட அனுப்ப முடியாமல் டென்ஷன், கோபம் எல்லாம் எழ, கணவருக்குப் போன் செய்து விடையத்தைக் கூற அவர் வேலையில் நிற்பதாகவும் வேலை முடிய லண்டன் முகவரிடம் போய்க் கதைக்கிறேன் என்கிறார். இரவு பதினொரு மணிக்குக் கணவர் வற்சப்பில் வருகிறார். இந்தா உன்னோடை கதைக்கவேணுமாம் என்கிறார். நான் அவர்களுக்கு விபரத்தைக் கூறுகிறேன். என்னை போனில் வைத்துக்கொண்டே கொழும்புக்குப் போன் செய்கின்றனர். கஷ்டமருக்கு சரியான தகவல் சொல்ல வேணுமல்லா? நிறையத் தடவை போன் செய்தும் நீங்கள் ஏன் போனை எடுக்கவில்லை என்று கேட்க அந்தப்பக்கம் ஏதோ சொல்கிறார். பதினொரு மணிவரை Office இல் நிக்கவேணும். வேறை அலுவல் பார்க்கப் போகக்கூடாது என்று திட்டிவிட்டு, அக்கா இன்னும் ஒரு மணித்தியாலத்துக்குள்ள உங்களுக்கு மெயில் போடுறம் என்றுவிட்டு கணவரிடம் போனைக் குடுக்க, அப்ப சரி பிறகு கதைக்கிறன் என்றுவிட்டு மனிசன் போனை நிறுத்த, எனக்கு முன்னர் இப்பிடித் திட்டுவதாக நடித்துவிட்டு என்ன செய்யப்போறாங்களோ என்ற யோசனை ஓட வேறு வழியின்றிக் கண்ணயர்கிறேன். அடுத்தநாள் காலை எழுந்து பார்த்தால் கொழும்பு முகவர் எனக்கு 18ம் திகதிக்கு அதே டோகா வழியாக டிக்கட் போட்டு இது ஓகே என்றால் மெயில் செய்யுங்கள் என்று தகவல் அனுப்புகிறார். அவரைப்பற்றி முறைப்பாடு கொடுத்துவிட்டு மீண்டும் அவருக்கு போன் செய்யவும் ஒரு மாதிரியாக கிடக்க, ஒன்பதரைக்கு அங்கு வேலை செய்யும் பெண்ணிடம் கதைக்க, நீங்கள் அவரிடம்தான் கதைக்கவேண்டும். அவர் இன்று மூன்றரைக்குத்தான் வருவார் என்கிறா. வீட்டில் வேலைகள் நடந்துகொண்டிருக்க இன்னும் எத்தனை நாட்களில் முடித்துத் தருவீர்கள் தம்பி என்று பொறுப்பானவரைக் கேட்க இன்னும் ஒரு நாளில் உள் வேலை முடிந்துவிடும். அதுக்கு அடுத்தநாள் வெளிவேலை முடித்து உங்களிடம் திறப்புத் தாறன் அக்கா என்கிறார். அன்று பத்தாம் திகதி. 18 என்றால் கொழும்பு போக ஏழு நாட்கள் இருக்கு. இரண்டு நாளில் திறப்புத் தந்தால் ஒருநாள் சினிமாவுக்கும் போகலாம். திரியாய்ப் பாரைக் கருவாடும், மிச்சசொச்சச் சாமான்களும் வாங்கவும் நேரம் போதுமானதாக இருக்கும் என்று கணக்குப் போட்டபடி மதிய உணவுக்கான ஆயத்தங்களைச் செய்துவிட்டு அப்பப்ப அவர்கள் செய்யும் வேலைகளையும் கண்காணித்துவிட்டு மீன்காறருக்காகக் காத்திருக்கிறேன். பதினொரு மணிக்கு அவர் வர அவரிடம் பொரிப்பதற்கு நான்கு சிறிய மீன்களும் குழம்புக்கு ஒரு விளை மீனும் 700 ரூபாய்களுக்கு வாங்கி சுத்தம் செய்து வளவில் கிடந்த மரவள்ளியை இழுத்து அதிலும் ஒரு கறியை வைத்துவிட்டு நிமிர 12.30 ஆக சுடச் சுட உண்டபின் ஒருமணிநேரம் போனில் நாடகங்கள் ஓடஓடப் பார்த்துக்கொண்டிருக்க, வேலை செய்யும் எட்டுப் பேரும் கடையில் வாங்கிவந்த உணவுப்பொதிகளைத் திறக்க, சரி அவர்கள் உண்டு முடித்து ஓய்வெடுத்து மீண்டும் வேலை தொடங்க ஒரு மணித்தியாலம் ஆகிவிடும். நானும் ஒரு மணித்தியாலத்துக்கு அலாம் வைத்துவிட்டுக் கட்டிலில் சாய்கிறேன். 2.30 இற்கு அலாம் அடிக்க எழுத்து உடனேயே கொழும்பு முகவருக்குப் போன் செய்ய, அவர் இன்னும் வரவில்லை ஒரு மணிநேரம் கழித்து எடுங்கள் என்கிறார் அந்தப் பெண் மீண்டும். ஒரு மணி நேரத்தில் பின் மீண்டும் அழைக்க அந்த ஆண் குரல் போலவே ஒருவர் கதைக்கிறார். ஆனால் வேறு பெயர் சொல்கிறார். வேண்டுமென்றே அப்படிச் சொல்கிறாரா என்ற ஐயம் எழ, அவர் எங்கே என்கிறேன். அவர் ஒரு அரைமணி நேரத்தில் வந்துவிடுவார். வந்ததும் உங்களுக்குக் கட்டாயம் போன் செய்யச் சொல்கிறேன் என்கிறார். சொன்னதுபோலவே அரைமணி நேரத்தில் போன் வருகிறது. என்ன தம்பி 18 விமானம் ஓடுமா? அல்லது சும்மாதான் டிக்கட் புக் செய்திருக்கா? உள்ளதைக் கூறுங்கள். என் மகளுக்கு 18 ம் திகதி சிவில் வெடிங்க் இருக்கு. நான் இரண்டு நாட்களுக்கு முன்பாவது அங்க நிக்கவேணும். தயவுசெய்து எனக்கு டிக்கட்டை மாத்தித் தாருங்கள் என்று அழுவாரைப்போல் சொல்கிறேன். அக்கா அவங்கள் எங்களுக்குத் தந்ததைத்தான் உங்களுக்குப் போட்டிருக்கிறம். “நீங்கள் இப்ப எங்க நிக்கிறியள்? கொழும்பிலா யாழ்ப்பாணத்திலா? “நான் யாழில்தான் நிக்கிறன்” “அப்ப உடனம் வெளிக்கிட்டு கொழும்பு வாங்க. இங்க வந்து கட்டார் ஏயாயர்வேஸ் நிறுவனத்துக்கு நேரில் சென்றீர்கள் என்றால் அங்க மாத்திக் குடுக்கிறாங்கள் எண்டு சொல்லினம்” “சரி அப்ப இண்டைக்கே கிளம்புறன், நன்றி தம்பி” ஒரு நிமிடம் என்ன செய்யலாம் என்று கண்களை மூடி யோசித்தவுடன் முக்கியமான வேலைகள் முடிந்திட்டுது. இங்க நிக்க நிக்க பிரச்சனை கூடினாலும். கிளம்புவதே நல்லது என்று முடிவெடுத்து பொறுப்பான பெடியனுக்கு போன் செய்ய அவரும் அரை மணி நேரத்தில் வருகிறேன் என்கிறார். பின்னர் இரவு கொழும்பு செல்லும் வான்களுக்கு அடித்து ஒரு இடம் தருமாறு கேட்க, இரவு எழு மணிக்கு ஒரு வான் வெளிக்கிடுவதாகக் கூற சரி என்றுவிட்டு உடனேயே அறைக்குச் சென்று தேவையானவற்றை எடுத்துக்கொண்டு எனது மிச்சக் கறிகள், மற்றும் அனைத்து உணவுப் பொருட்களையும் வீட்டின் மாற்றப் பகுதியில் இருப்பவர்களுக்குக் கொடுத்துவிட்டு,எனது சமையல் உபகரணங்கள் மற்றும் மண்வெட்டி கடப்பாரை, அலவாங்கு என்பவற்றையும் உள்ளே எடுத்து வைத்துவிட்டு அனைத்துக் கதவுகள் யன்னல்களையும் மூடித் திறப்பெடுக்க பொறுப்பானவர் வருகிறார். அவரிடம் முன் கதவுத் திறப்பைக் கொடுத்துவிட்டு வேலை முடிந்ததும் கணவரின் தங்கையிடம் திறப்பைக் கொடுக்குமாறு கூறிவிட்டு பிக்மீ மூலம் ஓட்டோவை வரவழைத்து வேலையாட்கள் முதற்கொண்டு அனைவரிடமும் விடைபெற்று வீட்டில் நின்ற உடையுடன் ஓட்டோவில் ஏறி அமர கண்களில் நீர் முட்டுகிறது. ஐந்து மாதங்கள் சும்மா நின்ற என்னை விதி இப்படி ஓட விடுகிறதே என எண்ணியபடி இணுவிலுக்கு சித்தி வீட்டுக்குக் கிளம்புறேன். போகும் வழியில் கணவரின் தங்கைக்கு விபரத்தைக் கூறி இன்னும் இருபது நிமிடங்களில் வந்துவிடுவேன். திரித்து வைத்த அரிசிமா, மிளகாய்த்தூள், குரக்கன, கோப்பித்தூள் என்பவற்றை சித்தி வீட்டுக்குக் கொண்டுவரும்படி கூறுகிறேன். நான் பிறந்து வளர்ந்த வீட்டில் தான் சித்தி இருக்கிறார். வயதானவர். அங்குதான் நான் போய் இறங்குவது. எனது பயணப் பொதிகளும் அங்குதான் வைத்திருந்தேன். போய் இறங்கியவுடன் சித்தியிடம் விடையத்தைக் கூறிவிட்டு சூட்கேசைத் திறந்து பிள்ளைகளுக்கு வாங்கிய உடைகளை எல்லாம் எடுத்து வைக்க நிரம்பிவிடுகிறது. திரும்பிப் போகும்போது போடவேண்டிய குளிராடைகள், காலனி எல்லாம் எடுத்து வைத்துவிட்டு நிறுத்துப் பார்க்க 23 kg காட்ட அதைப் பூட்டி வைத்துவிட்டு அடுத்ததைத் திறக்க மச்சாள் உணவுப்பொதிகளுடன் வந்து சேர அதையும் வைத்துவிட்டு நிறுக்க அது 23.6 என்று காட்ட, அட இனி வேறு எதுவுமே வைக்க முடியாதே என்றபடி கையில் கொண்டு போகும் சிறியதை எடுத்து முக்கியமான ஆவணங்கள் சில ஆடைகள் துவாய்கள், எண்டு அடுக்க அதுவும் ஏழு கிலோ எனக் காட்டுது. இனிமேல் உந்த அரிசிமா, மிளகாய்த்தூள் எதுவும் கொண்டுபோவதில்லை என எண்ணியபடி நேரத்தைப்பார்க்க மாலை ஆறு மணி என்கிறது மணிக்கூடு, இன்னும் ஒருமணிநேரம் இருக்கு. சாப்பிட்டுவிட்டுப் போவதுதான் நல்லது என எண்ணி மச்சாளிடம் சொல்ல அவர் கொண்டுவந்த இடியப்பத்தைத் தருகிறார். இடியாப்பம் உண்டபடியே சித்தி மற்றும் கேள்விப்பட்டு வந்த முன்வீட்டு அக்கா ஆகியோருடன் கதைத்துக்கொண்டிருக்க வான்காரர் இன்னும் பத்து நிமிடத்தில் வருவதாக போன் செய்கிறார். அப்பதான் எனது ஸ்கூட்டி அங்கு வெளிப் விறாந்தையில் நிற்பது தெரிய எப்படி அதை உள்ளே தூக்கி விடுவது என்று யோசித்துக்கொண்டிருக்க, என் ஒன்றுவிட்ட அண்ணா ஓட்டோ ஒன்றில் வந்து இறங்குகிறார். அவர்கள் இருவரும் சேர்ந்து ஸ்கூட்டியை உள்ளே தூக்கி வைத்த சிறிது நேரத்தில் வானும் வர உடை மாற்ற மறந்துவிட்டது அப்போதுதான் நினைவில் வருகிறது. எல்லாவற்றையும் வைத்துப் பூட்டிவிட்டேன். திரும்பத் திறந்து எடுக்க நேரம் போய்விடும். ஒரு பிஜாமாவும் முழுக் கைச் சட்டையும் போட்டிருந்ததானால் அப்படியே போவோம். இரவுப் பயணம் தானே என முடிவெடுத்து காலணியை அணிய வான் வந்து நிற்கவும் சரியாகிறது. ஓட்டுனர் இருக்கைக்குப் பின்னால் எனக்கு இடம் கிடைக்க ஜன்னலில் தலையணையை சாய்த்து வைத்துவிட்டு தூங்க முயல, அப்பதான் கொழும்பில் தங்குவதற்கான ஒழுங்கை இன்னும் செய்யவில்லை என்கிற நினைவு வருகிறது. போனில் Hotel சிலதைத் தேடிப் பார்த்தால் அந்தஇரவு எதுவும் காலி இல்லை என்று காட்ட பயமும் எட்டிப் பார்க்க, தெரிந்த வான் ஓடும் ஊர் பெடியன் ஒருவருக்கு போன் செய்ய தான் தேடிப் பார்த்துச் சொல்வதாகக் கூறுகிறார். அரை மணி நேரம் செல்ல எல்லா கொட்டேலும் இடம் இல்லை என்கின்றனர். எனக்குத் தெரிஞ்ச இடம் ஒண்டு இருக்கு. அது உங்களுக்கு சரிவருமா என்று தெரியவில்லை என்கிறார். எதுக்கும் அதை புக் செய்யுங்கோ. பிறகு நான் பார்க்கிறேன் என்கிறேன். அவர் தொலைபேசி இலக்கத்தைப் போட்டு எதுக்கும் நீங்களும் கதையுங்கோ என்றதும் நான் போன் செய்கிறேன். அட்டாச் டாய்லெட் பாத் இருக்கா, ஏசி இருக்கா என்று கேட்க எல்லாத்துக்கும் ஓம் என்கிறார். ஒரு நாளுக்கு நான்காயிரம் என்றதும் காலை 3.30 -4.00 இக்குள் வருவேன் என்றுவிட்டு போனை வைக்கிறேன். 3.45 இற்கு வான் என்னைக் கொண்டுபோய் இறக்க ஆளரவமற்ற இடத்தில் நிற்பது போல் இருக்க போன் செய்கிறேன் அவர் எடுக்கவில்லை. பதட்டமும் சேர எனக்கு புக் செய்தவருக்கு போன் செய்ய அவரும் உடனே எடுத்துக் கதைப்பதாகக் கூறி வைத்துவிட கொட்டாவி விட்டபடி ஒருவர் வந்து கதவைத் திறக்கிறார். வான்காரரும் அவருமாக எனது பொதிகளை இழுத்துவந்து முதலாம் மாடியில் அறைக்கு முன்னால் வைத்துவிட்டுச் செல்ல சசி என்பவர் கதவைத் திறக்கிறார். உள்ளே சென்று fan போட்டதும் காற்றோட்டம் இல்லாத அறை என்று மணம் சொல்ல டாய்லெட்டீன் உள்ளே சென்று பார்க்கிறேன். பரவாயில்லை என்று எண்ணியபடி திரும்ப பக்கத்திலும் ஒரு கதவு தெரிய குளியலறைதான் தனியாக இருக்கோ என்றபடி திறந்தால் அது இன்னொரு அறை. ஆனால் நல்ல வேளை யாரும் அங்கில்லை. உடனேயே என்ன தம்பி தனி அறை என்று சொன்னீர்கள். இரண்டு அறைகள் இருக்கு. என்னால் இங்கு தங்க முடியாது. வேறை அறை மாற்றுங்கள் என்கிறேன். இப்ப மாற்ற முடியாது அக்கா. அந்த அறையில் யாரும் இல்லை. அதன் திறப்பையும் பூட்டி உங்களிடமே தருகிறேன். நீங்கள் கொண்டியையும் போடுங்கள். யாரும் வர முடியாது என்கிறார். கணவரிடம் விபரம் கூற சரி நாளைக்கு வேற இடம் பாரான் என்றுவிட்டு அவரும் தூக்கக் கலக்கத்துடன் போனை வைக்கிறார். வானில் 7 மணிநேரம் இருந்து வந்ததில் முதுகு வலிவேறு. கொண்டுவந்த துவாயை தலையணைக்குமேல் விரித்துவிட்டு காலை 6.30 இற்கு அலாம் வைத்துவிட்டுப் படுத்ததுதான். இரண்டரை மணிநேரம் நல்ல தூக்கம். எழுந்து பல் துலக்கித் தோய்ந்துவிட்டு வெளியே வந்து தலைகாயவிட்டு நல்ல ஆடைகளை அணிந்தபடி அறையைப் பூட்டியபடி வெளியே வந்தால் யாரையுமே காணவில்லை. அந்த சசி என்பவருக்கு போன் செய்தால் அவரும் போனை எடுக்கவில்லை. நிமிர்ந்து பார்த்தால் அந்த கொட்டேலுக்குப் பெயரையும் காணவில்லை. நடந்து வெளியே வந்தால் ஒரு சிறிய வீதி தெரிகிறது. தொடர்ந்து நடக்க ஒரு பிரதான வீதி தெரிய வீதியில் போய் ஒருவரை நிறுத்தி ஏதும் உணவகம் இருக்கிறதா என்று கேட்க நேரே நடந்து போக ஒன்று வருவதாகக் கூற நடந்து செல்கிறேன். இப்போது எனக்கு இடம் கொஞ்சம் விளங்குகிறது. நான்கு மாதங்களின் முன்னர் விசா எடுப்பதற்காக வந்தபோது அதற்கு அண்மையில் உள்ள தங்குவிடுதியில் தங்கி இங்கு வந்து உணவு உண்டிருக்கிறேன். அங்கு சென்று தோசையும் சாம்பார் வடையும் உண்டு கோப்பியும் குடிக்க ஒரு உற்சாகம் வருகிறது. அங்கிருந்தவாறே ஒன்லைனில் கட்டார் ஏயார்வேஸ் முகவரியை எடுத்து பிக்மீ யில் போட்டுவிட்டு ஒரு ஓட்டோவின் இலக்கமும் ஓட்டுநரின் பெயருடன் 4 நிமிடங்களில் வருவதாகக் காட்ட வெளியே வந்து போகும் ஓட்டோக்களைப் பார்க்கிறேன். ஓட்டோக்காரரிடம் இருந்து போன் வர எடுத்துக் கதைக்க எங்கே நிற்கிறீர்கள் என்று கேட்கிறார். அந்த உணவகத்துக்கு முன்தான் என்று கூற நானும் அங்குதான் நிற்கிறேன் என்றவர் எனக்கு அருகில் வருகிறார். ஓ நீங்கள் தானா என்றபடி அவருடன் சென்றால் அவரின் ஓட்டோ வேறு இலக்கம் காட்டுகிறது. இதில் நான் வரமுடியாது. என்னிடம் பிக்மீயில் வந்த இலக்கம் இதில்லை. என்றபடி நான் திரும்பிவர, பயமில்லை வாங்கோ என்று அவர் ஆங்கிலத்தில் கூற நான் மறுப்பாகத் தலையாட்டிவிட்டு பிக்மீயை கான்சல் செய்துவிட்டு புதிதாக ஒன்றைப் போட ஐந்து நிமிடங்களின் பின் இன்னொன்று வர அதில் ஏறி அமர்கிறேன். நேரம் எட்டேகால். அங்கு போவதற்கு முக்கால் மணிநேரம் காட்டுகிறது. ஒன்பதுக்குள் போய்விடலாம் என்று எண்ணினால் வீதியில் மெதுவாக நகர்கின்றன வாகனங்கள். 9.15 இற்கு World Trade Centre என்னும் கட்டடத்தின் முன்னால் ஓட்டோ நிற்க, பணத்தைக் கொடுத்துவிட்டு இறங்கி உள்ளே சென்றால் நூறுக்கும் அதிகமானவர்கள் Qatar Airways நிறுவனத்தின் முன்னால் நிற்கின்றனர். வரிசை ஒன்றும் இல்லையா என்று நின்றவர்களிடம் கேட்க, ஏற்கனவே நூறுவரை இலக்கங்கள் கொடுத்துவிட்டார்கள். எதுக்கும் இடதுபுறமாகத் திரும்பிச் சென்றால் அங்கே ஓர் அறையில் இலக்கங்கள் கொடுக்கிறார்கள் என்று கேள்வி என்கிறார் ஒருவர், சென்று பார்த்தால் ஒரு அறையின் வெளியே பத்துப்பேர் நிற்க, எங்கே டோக்கிண் கொடுக்கிறார்கள் என்று கேட்க, நாங்களும் அதற்குத்தான் நிற்கிறோம். ஆனால் யாரும் டோக்கிண் கொடுப்பதாகத் தெரியவில்லை என்கிறார் இன்னொருவர். நான் அந்த அறையைப் பார்க்கலாமா என்று கேட்க ஓ போய்ப் பாருங்கள் என்கின்றனர். நான் சென்று பார்த்தால் அங்கே ஒரு ஐம்பது பேர்வரை கதிரைகளை நிறைத்திருக்க நிர்வாக அதிகாரிகளின் இடமோ வெறுமையாக இருக்க வெளியே வந்து இதுவரை இலக்கம் கொடுக்கப்படவில்லையா என்கிறேன். இல்லை என்று அவர்கள் தலையாட்ட இனி இதில் நின்று பயனில்லை என எண்ணி முன்பக்கமாக வர பதினோராம் இலக்கம் கூப்பிடப்படுகிறது. அங்கு கூடி நின்ற சிலரிடம் விபரங்களை அறியலாம் என்று கதைக்க, இருவர் யேர்மனியிலும் மற்றவர் மூவர் சுவீசிலும் ஒருவர் லண்டனிலிருந்தும் வந்தாகக் கூறுகின்றனர். அதில் இருவர் தான் காலை ஆறரையில் இருந்து வரிசையில் நின்று நம்பர் எடுத்ததாகக் கூற அவரின் இலக்கம் கேட்டால் 40 என்கிறார். மற்றவர் 17 மற்றும் 25 என்கின்றனர். அப்ப உங்கள் இலக்கம் என்ன என்று மற்றவரைக் கேட்க, நான் இவருடன் வந்தனான் என்கிறார். அப்ப இன்று நின்று பயன் இல்லை. காலை நான்கு மணி போல்தான் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து களைத்துவிட்டேன். இனிப் போட்டு நாளை காலை 6 மணிக்கு வரவேண்டியதுதான் என்றபடி கிளம்ப எத்தனிக்க, சுவிசில் நின்று வந்த ஒருவர் “தங்கச்சி இவ்வளவு தூரம் வந்திட்டியள். போகாமல் தனிய நிற்கும் வேறு யாரையாவது சேர்ந்து போகக் கேட்டுப் பாருங்கோ என்கிறார். உங்களுக்கு யாரையும் தெரியுமா என்று கேட்க, நாங்கள் மூன்று பேர்தான் நம்பர் எடுத்தது. மற்றவை எங்களோட சேர்ந்து வர நிக்கினம். போய் ஆரையும் விசாரியுங்கோ என்கிறார். கேட்டு யாரும் மாட்டான் என்று சொன்னால் என்ன செய்யிறது என்று தயக்கமாகவும் இருக்க, இரு பெண்கள் நிற்பதைப் பார்த்து அவர்கள் அருகில் செல்கிறேன். நீங்கள் எங்கு போகிறீர்கள் என்று கேட்க கனடா செல்லவேண்டும். 48 ம் இலக்கம். மாலைதான் கூப்பிடுவினம் போல கிடக்கு என்கிறார் தாய். நான் என் விபரங்களைச் சொல்லி அங்கலாய்த்துவிட்டு நானும் உங்களோட உள்ளே வரலாமோ என்று கேட்க, மகள் வங்ககோ அன்ரி என்கிறா. அப்பாடா என்று மனம் நிம்மதியடைய வாயிலில் நிற்கும் பாதுகாப்பு அதிகாரி விடாது தடுத்தால் என்ன செய்வது என்று எண்ணியபடி முதலில் கதைத்த குழுவினரிடம் வந்து வாசலில நிற்பவர் இருவரை ஒன்றாக விடுவாரா என்ற சந்தேகத்தைக் கேட்க, வெள்ளையள் எல்லாம் அப்பிடித்தான் போயினம். உள்ளே இரண்டே இரண்டு கவுண்டர்கள் தான் இருக்கு. ஒவ்வொரு கவுன்டரிலும் இரண்டு கதிரைகள் போட்டிருக்கு. அதனால பிரச்சனை இல்லை என்கிறார். நேரம் 10.30 என்று காட்ட 17 ம் இலக்கம் கூப்பிடப்படுகிறது. உள்ளேயே பெரிய உணவகம் ஒன்று காணப்பட, அங்கு சென்று ஒரு Hot Chocolate வாங்கி அங்கிருந்தே குடித்துவிட்டு மீண்டும் வெளியே வந்து அந்த இரு பெண்களின் அருகில் சென்று கதைத்துக்கொண்டு இருக்கிறேன். சிறிது நேரம் செல்ல இன்னொரு இந்தியப் பெண் அருகில் வருகிறார். தான் இத்தாலியில் இருந்து வந்ததாகவும் இப்ப தான் உள்ளே வந்ததால் இலக்கம் கொடுத்துமுடித்துவிட்டார்கள் என்று தான் அறிந்ததாகவும் கூறி உங்களில் யாராவது ஒருவர் என்னையும் சேர்த்துக்கொள்கிறீர்களா என்று கேட்க, நாங்கள் மூவரும் சேர்ந்து போகிறோம் என்கிறா மகள். அப்படியா என்று கேட்டுவிட்டு அவர் நகர உங்கள் அம்மாவும் கனடா வருக்கிறாரா என்று கேட்க இல்லை என்று அவர் சொன்னதான் பின் தான் நான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன். மீண்டும் அலுவலக வாசலில் நிறு உள்ளே பார்க்க அவர்கள் ஆடிப்பாடி வேலை செய்வதுபோல் தெரிய, இப்பிடி அவசரமான நேரத்திலையாவது அதிகமான வேலையாட்களைப் போட்டால் என்ன. இவர்கள் இருவரும் எத்தனை மணிக்குப் பார்த்து முடிக்கப் போகிறார்களோ என்கிறேன். உள்ளே இருந்து வாயிற்காப்பாளர் வர எத்தனையாம் இலக்கம் போயிருக்கு என்று கேட்க 19 என்கிறார். உள்ளே நடப்பது ஏதும் விளங்காதுவிட்டாலும் சும்மா பார்த்துக்கொண்டே நிற்கிறேன். மூன்று வெள்ளையர்கள் வந்து வாயிலில் நிற்பவரிடம் டிக்கற் மாற்றவேண்டும் என்கின்றனர். வாருங்கள் என அழைத்துக்கொண்டு நான் போய் வந்த பின்பக்க அறைக்குக் கூடிக்கொண்டு போக, நானும் அவர்களுடன் போவோமா என்னும் எண்ணம் ஒரு நொடி எழுந்தாலும் உள்ளதும் கெட்டுவிடும் என எண்ணியபடி வாசலுக்குத் தள்ளிப் போய் நிற்க ஒரு பெடியன் எனக்கு அருகில் வந்து நிற்கிறார். நான் அவரைத் திரும்பிப் பார்க்க அவரும் என்னைப்பார்த்து சிரித்துவிட்டு நிற்க, உன் இலக்கம் என்ன என்கிறேன். 38 என்றவர் உன் இலக்கம் என்ன என்கிறார். நான் காலையில் தான் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தேன். இலக்கம் எல்லாம் கொடுத்துவிட்டார்கள். என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரு இலக்கத்தில் இரண்டு மூன்று பேர் கூடப் போகிறார்கள். நீ என்னைக் கூட்டிக்கொண்டு போகிறாயா என்று கேட்க, அதனால் என்ன என்னுடன் வா என்கிறார். எனக்கு மனதில் மகிழ்ச்சி எட்டிப்பார்த்தாலும் எதையும் காட்டிக்கொள்ளாது நிற்கிறேன். நேரம் 12 என்று தொலைபேசி நேரம் காட்ட அதை மூடி வைத்துவிட்டுத் திரும்பினால் என்னருகில் அந்தப் பெடியனைக் காணவில்லை. நான் மீண்டும் போய் அந்தப் பெண்கள் இருவருடனும் கதைத்துக்கொண்டு நிற்கிறேன், ஆனால் அந்தப் பெடியிடம் சேர்ந்து போகக் கேட்ட விடயத்தை மட்டும் சொல்லவில்லை. நீண்ட நேரம் நின்றதில் கால்கள் வலியெடுக்க சுற்றுமுற்றும் பார்க்கிறேன். நீர் பூப்போல் தூவிக்கொண்டிருக்க சுற்றிலும் கட்டியுள்ள கட்டில் பலரும் இருந்துகொண்டிருக்க நானும் அதில் சென்று அமர இரு யேர்மன் நாட்டினர் வந்து எனக்கு அருகில் அமர்கின்றனர். தாங்கள் நேற்றும் வந்ததாகவும் நேரம் போய்விட்டதனால் இன்று வரச்சொன்னதாகக் கூறுகின்றனர். அரைமணி நேரத்தில் அவர்கள் எழுந்து சென்றுவிட அந்தத் தாயும் மகளும் என்னருகில் வந்து அமர்கின்றனர். நீங்கள் ஏதும் சாப்பிட்டீர்களா? என்கிறேன். நாங்கள் காலையிலேயே சாப்பிட்டுவிட்டுத்தான் வந்தோம். சிறிது நேரத்துக்கு முன்தான் உந்த உணவகத்துக்குச் சென்று கோப்பி குடித்துவிட்டு வருகிறோம். நீங்கள் எதுவும் சாப்பிட்டீர்களா என்று கேட்க, பசிக்கிறமாதிரி இருக்கு என்கிறேன். அப்ப போய் சாப்பிட்டுவிட்டு வாங்கோ. இன்னும் நிறைய நேரம் இருக்கே என்கின்றார் மகள். நானும் சென்று பார்த்தால் மரக்கறி உணவுகள், மச்ச மாமிச உணவுகள் என்று அடுக்கி வைத்திருக்கும் நேர்த்தியைப் பார்த்தால் எதையும் சாப்பிடலாம் போல் இருக்க, எதுக்கும் மரக்கறி உணவையே உண்போம் என்று சிவப்பு அரிசிச் சோறு மற்றும் ஐந்து கறிகளுடன் தண்ணீர் போத்தல் மற்றும் புடிங் என்று எடுக்க 900 இலங்கை ரூபாய்கள் தான். ஆற அமர இருந்து உண்டு முடித்துவிட்டு வெளிவந்து நிறுவன முகப்புக்கு வந்தால் அந்தப் பெடியன் நிக்கிறார். நீ சாப்பிட்டுவிட்டாயா என்று கேட்க சாப்பிட்டு சிகரற்றும் பற்றிவிட்டு வந்துவிட்டேன் என்கிறார். அப்பதான் நீ எங்கு செல்கிறாய் என்று கேட்க இற்றாலி என்றவர் நீ எங்கே என்கிறார். நான் யூகே என்றதும் நீ தமிழ் கதைப்பாயா என்கிறேன். எனக்கு சிங்களமும் ஆங்கிமும் மட்டும்தான் என்றவுடன், வாயிற் காப்பாளர் ஏதும் கண்டுபிடித்துத் தடுத்துவிடுவாரோ என்ற பயம் எழ, உன் பெயர் என்ன என்கிறேன், ஆண்டனி என்றவுடன் நான் நிவேதா என்கிறேன். என் கையைப் பிடித்துக் குலுக்கியபடி உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி என்றபின் அவரைப் பற்றிய வேலை வசிப்பிடம் என்பவற்றைக் கேட்டு அறிகிறேன். நாம் இருவரும் நின்ற இடத்துக்கு அருகில் இன்னொருவர் வருகிறார். அவரை இலங்கையரா அல்லது ஆபிரிக்க நாட்டவரா என்று அடையாளங்கான முடியவில்லை. உங்கள் இலக்கம் என்ன என்று கேட்க 38 என்கிறேன். நான் இப்பதான் வருகிறேன். என்னையும் கூட்டிக்கொண்டு செல்ல முடியுமா என்றதற்கு நான் திகைப்புடன் பார்க்க ஆண்டனி நானும் இவவும் சேர்ந்து போகிறோம். உள்ளே மூன்றுபேரை விடுவார்கள் என்றால் நீயும் வரலாம் என்கிறார். என்னடா இது நானே ஒட்டிக்கொண்டு போக இவர் வேறு எல்லாவற்றையும் கெடுக்கப் போகிறார்போல என மனதில் எண்ணியபடி பேசாமல் இருக்கிறேன். 31 ம் இலக்கத்தைக் கூப்பிட இன்னும் ஏழுதான் என மனம் குதூகலிக்கிறது.5 points
-
Jaffna Runners - ஓட்டப் பயிற்சி சமூகம்
யாழ்நகரில் சண். சுந்தரம் அவர்களின் முயற்சியால் ஓட்டப் பயிற்சிக் குழுமம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஓடுவதையும் உடல்நலத்தையும் விரும்பும் அனைவருகாகவும் உருவாக்கப்பட்ட இக் குழுமத்துடன் இணைந்து பயன்பெற விரும்புபவர்கள் தாராளமாகப் பங்குகொள்ளலாம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 6:00 மணிக்கு துரையப்பா விளையாட்டரங்கில் சந்தித்து ஒன்றாக ஓடலாம். நீங்கள் என்றுமே ஓடாத புதியவராக இருந்தாலும் தொடர்ந்து ஓடுபவராக இருந்தாலும் இக் குழுவில் சேரலாம். சண். சுந்தரம் அவர்களைப்பற்றிச் சுருக்கமாகக் கூறுவதானால், யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் ஒரு சமூக ஆர்வலர், மனித உரிமை செயற்பாட்டாளர், ஓவியர், ... இரண்டு வாரங்களுக்கு முன் தனது 73 ஆவது வயதில் டோக்கியோவில் தனது ஆறாவது சர்வதேச மரதன் ஓட்டத்தை நிறைவு செய்தவர். வயதோ, உடல் பருமனோ அல்லது வேறு காரணிகளோ ஓட்டப் பயிற்சிக்குத் தடையில்லை. ஆகவே விரும்புபவர்கள் ஒவ்வொரு ஞாயிறும் காலை 6 மணிக்குத் துரையப்பா விளையாட்டரங்கிற்குச் சென்று இக் குழுமத்தில் இணைந்து கொள்ளலாம். நன்றி.4 points
-
அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
3 pointsஅவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை கவிஞர் வைரமுத்து ஒரு கவிஞர் இல்லை வெறும் பாடலாசிரியர், அவருக்கு ஞானபீட விருது கொடுத்தது தவறு என ஆசான் ஜெயமோகனும், இன்னும் பல படைப்பாளிகளும் முழங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதிராக சில படைப்பாளிகளும், இலக்கியம் என்றால் என்னவென்று தெரிந்த அல்லது தெரியவே தெரியாத கற்றுக்குட்டிகளும் கம்புசுற்றிக் கொண்டிருக்கின்றார்கள்! கவிஞர் வைரமுத்து காம உணர்வுகளை அழகியலோடு, சில நேரங்களில் அதையும் தாண்டி பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார். உதாரணம் ஒன்று: ஜீன்ஸ் படத்தில் வரும் அன்பே அன்பே பாடலில்.. பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி ஆசான் ஜெயமோகனும் தனது படைப்புக்களில் பெண்களை, காம உணர்வுகளை, கலவியை சமரசம் எதுவுமின்றி எழுதி வாசிப்பவர்களை பிரமிக்கவைத்துள்ளார்! ஆசானின் வெண்முரசு காவிய நாவல் தொடர்களைப் பல வருடங்களாகப் படித்து வருகின்றேன் (26 இல் இன்னும் நான்கு நாவல்கள் படிக்க உள்ளன!). படிக்கும்போது குறிப்புக்கள் எடுப்பது வழக்கம். 😀 அவற்றில் காமரசம் ததும்பும் வரிகளை ஒன்றாக்கி AI மூலம் பாடல் ஒன்றை உருவாக்க கடந்த சில நாட்களாக முயற்சித்தேன்😍. தமிழில் லகர, ளகர, ழகர, ந,ன, ண போன்ற இடையினம், மெல்லினங்களில் AI தடுமாறியதால் எதிர்பார்த்த மாதிரி பாடலைக் கொண்டுவருவது இலகுவாக இருக்கவில்லை. ஆனால் பொதுவான தமிழ்ச் சொற்களைக் கொண்டு பாடல் உருவாக்குவது இலகு என்று தெரிந்தது. AI எப்படி வேலை செய்யும் என்பது AI நிபுணர்களுக்கே தெரியாது என்பதால் எப்படியான இசை வாத்தியங்களை அது தேர்வு செய்யும், எப்படிப் பாடல் அமைக்கும் என்பதை அறியமுடியாது. கிடைப்பதில் விருப்பமானதுடன் திருப்தியடையவேண்டியதுதான். அதிகம் பொருத்தமான பாடல்களை உருவாக்க வேண்டும் என்றால் இலவசமான limited model களை விட்டுவிட்டு கட்டணம் செலுத்தி தரமான model களை, AI agent களைப் பாவிக்கலாம் என்று நினைக்கின்றேன். எனக்கு அப்படி எல்லாம் கட்டணம் செலுத்த மனமில்லை! சரி எப்படிப் பாடலை உருவாக்கினேன் என்று கீழே விளங்கப்படுத்துகின்றேன். முதலில் AI tools களைப் பார்ப்போம். பாடல் வரிகளை உருவாக்க பொருத்தமான AI tools: Claude AI (sonnet 4.6 extended) - இலவசம். கட்டணம் செலுத்தி இன்னும் நல்ல tools ஐ பாவிக்கலாம் Gemini AI Pro: இலவசம் ஆனால் ஒரு நாளில் பல தடவைகள் பாவிக்கமுடியாது. கட்டண version உள்ளன. பாடல் உருவாக்க பொருத்தமான AI Tools: Suno AI: பாடல்களை இலகுவாக உருவாக்கலாம். வேறு சில AI tools உள்ளன ஆனால் நேரம் விரயமானதுதான் மிச்சம். படங்களை உருவாக்க: Gemini AI pro, Copilot படங்களில் இருந்து காணொளிகளை உருவாக்க: Grok, Meta AI, Runway போன்றவற்றை 5 செக்கன் காணொளிகளை உருவாக்கப் பாவிக்கலாம். பாடல்வரிகளை உருவாக்குதல்: நான் Claude, Gemini Pro இரண்டையும் பாவித்தாலும் Gemini Pro தான் பிடித்திருந்தது. எனது கேள்விக்குப் பின்னர் வெண்முரசு நாவல்களில் இருந்து எடுத்த குறிப்புக்களை அப்படியே ஒட்டிவிட்டேன்! கொடுத்த Prompt: Suno AI இல் ஒரு பாடல் கீழே உள்ள குறிப்புக்களைக் கொண்டு உருவாக்கவேண்டும். அழகிய இளம்பெண்ணைக் காணும் இளைஞன் ஒருவனின் ததும்பும் காம உணர்வுகளை வெளிப்படுத்தும் நான்கு நிமிடங்கள் வரக்கூடிய பாடலாக உருவாக்க உதவி தேவை. Suno AI இல் உணர்வு பூர்வமாகவும், சரியான தமிழ் உச்சரிப்புடனும் பாடலை உருவாக்க பொருத்தமான பாடல் வரிகளையும், தேவையான tags களையும், பாடலுக்குப் பொருத்தமான Styles களையும் தரமுடியுமா? அவள் இடையிலிருந்து நீலப்பட்டாடை முழுமையாக நழுவிச்சரிய, வெண்பளிங்குயானையின் மத்தக முழையென விரிந்த இடையும் மலர்தார் தொடைகள் நடுவே மான்குளம்பென அல்குலுமாக அவள் நின்றாள். மழைக்கால மலைகள் அருவிகளை அணிந்திருப்பதுபோல நகைகள் மட்டுமே அணிந்திருந்தாள். மூச்சில் முலைகள் மெல்ல ஏறியிறங்கின. முலைக்கண்களின் கருவட்டத்தில் மயிர்ப்புள்ளிகள் சிலிர்த்திருந்தன. விலாவெலும்புகள் வெண்தோலுக்குள் பாலைநில மணலலைகள் போல தெரிந்தன. அவள் விழிகள் அவனை நோக்கி ஒருசொல்லும் இல்லாமல் வெறுமனே விரிந்திருந்தன. நீரைப்பிளந்து எழுந்து கரைநோக்கிச் சென்ற ஒரு செந்நிறப்பேரழகியைக் கண்டான். அவள் உடல் தழலாக இருந்தது. கூந்தல் அதன் புகையென நெளிந்தது. செந்தாமரை இதழிலென நீர்த்துளிகள் ஆடையற்ற அவள் உடலில் ஒளியுடன் உருண்டு வழிந்தன. மலர் சுமந்த பனித்துளிகள் போல முலைகள் ததும்பின. இரையை இறுக்கும் மலைப்பாம்பு போல அசைந்தது இடை. நடையின் அசைவில் இறுகி நெகிழ்ந்தன தொடைத்தசைகள். செம்பொற்தாலத்தில் ஏந்திய அகல்விளக்கின் சுடரென அல்குலின் செந்நிற மென்மயிர். வைரத்தால் செதுக்கப்பட்ட பெண்ணுடல் Gemini AI தந்த பாடல்வரிகள். சில இடங்களில் பொருத்தமான சொற்களை நான் மாற்றினேன்.. கீழே உள்ளது பிந்திய வரைபு.. [Intro] [Seductive Flute with Deep Bass] [Chorus] அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை... நீரைப் பிளந்து எழுந்த செந்நிறப் பேரழகி...! உடல் தழலாக... கூந்தல் புகையென நெளிய... என் உள்ளம் எரிக்கும் காதல் தீ அழகி...! [Verse 1] நீலப் பட்டாடை இடையில் மெல்ல நழுவ... வெண்யானை மத்தகம் என விரிந்தது அவள் இடை...! மலர்தார் தொடைகள் நடுவே மான் குளம்பு சிமிட்டக் கண்டேன்...! என் மூச்சே உறைந்தது ஒரு கணம்..! [Build Up] என் நெஞ்சினிலே... புரவிக் குளம்பு ஓசை! [Pre-Chorus] செந்தாமரை இதழில் பனித் துளிகள் போலே... ஆடை இல்லா மேனியில் நீர்த் தாரை உருள... தழல் உடலோடு அவள் என்னை நோக்க... பனியாகக் கரைந்து போனேன்... அந்த அனலின் சூட்டிலே...! [Chorus] அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை... நீரைப் பிளந்து எழுந்த செந்நிறப் பேரழகி...! உடல் தழலாக... கூந்தல் புகையென நெளிய... என் உள்ளம் எரிக்கும் காதல் தீ அழகி...! [Verse 2] மூச்சில் மார்புகள் மெல்ல மெல்ல ஏறி இறங்க… மலர் சுமந்த பனித்துளிகள் போல அவை ததும்ப…! மலர்முலை கண்களில் மென் மயிர்கள் சிலிர்க்க….! வெண்மேனி விலாவினிலே பாலை மணல் அலை ஆகுதே…! [Verse 3] இரையினை இறுக்கும் பாம்பென நெளிந்தது இடை….! நடையின் அசைவில் இறுகி நெகிழ்ந்தன தொடைத் தசைகள்…! செம்பொன் தட்டில் தவழும் விளக்கின் சுடரென… செந்நிற மென் மயிர் தூவல் என் தேகத்தை அனலாய் சுடுதே….! [Bridge] அவள் விழிகள் என்னை நோக்கி அகல விரிந்தன…! என் ஆண்மை சிறகு விரித்தது…! காம நெருப்பின் கலசமே…! என் தாகம் தீர்க்கும் நதியே…! உன் தீண்டலில் உயிர்த்தெழ ஏங்கித் துடிக்கின்றேனே...! [Chorus] அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை... நீரைப் பிளந்து எழுந்த செந்நிறப் பேரழகி...! உடல் தழலாக... கூந்தல் புகையென நெளிய... என் உள்ளம் எரிக்கும் காதல் தீ அழகி...! [Outro] தழல் உடலே...! ஆஹா...! பனித்துளியே...! ம்ம்ம்...! வைரம் தகிக்கும் கனலே...! என் உயிரே...! உன் விரிந்த விழிகளில்.. நான் வீழ்ந்தேனே...! [Fade out: Sensuous flute and echoing vocals] Styles: Passionate Male Tenor Vocal, Sensual Tamil Cinematic Pop, Seductive Groove, Deep Bass, Traditional Indian Percussion With Modern Synth, Carnatic-Inspired Strings, Tabla Rhythm, Flute Melody, Romantic, Emotional Intense Erotic Vibe, A.R. Rahman Style Fusion, Young Expressive Voice, Accurate Tamil Diction. Pronounce Tamil Words Clearly Without Mistakes, Native Tamil Phonetics. No Accidental Hindi/English Accent In Tamil Lyrics பாடலை உருவாக்குதல்: Suno AI இல் Simple மற்றும் Custom என்று இரு தெரிவுகள் உள்ளன. Custom தெரிவுக்குள் உள்ள Lyrics பெட்டிக்குள் Gemini Pro தந்த பாடல்வரிகளை (tags உடன்) ஒட்டவேண்டும். சரியான தமிழ் உச்சரிப்பு வர நான் சில இடங்களில்: - (hyphen) - syllables ஐ சரியாகப் பிரிக்க , காற்புள்ளி - இடைவெளி விட ! ஆச்சரியக்குறி - நிறுத்த … (ellipses) - நீட்டிப் பாட பாவித்திருந்தேன். இவற்றை பாடல்களின் Suno இணைப்புக்களில் பார்க்கலாம். Styles பெட்டிக்குள் Gemini AI தந்த styles களை அப்படியே ஒட்டவேண்டும். பின்னர் Advanced Options இல்: Style Influence: 100 80 க்கு மேல் கொடுத்தால் கேட்ட style களுக்கு கிட்டவரும் Weirdness: 0 10க்கு கீழ் கொடுத்தால் AI வித்தியாசமாக முயற்சி செய்வதைக் குறைக்கும் எனத் தெரிவு செய்தேன். ஆனால் இவற்றை இப்படியான extreme ஆக தெரிவு செய்வதும் நல்லதல்ல. பாடலுக்கு ஒரு தலைப்பையும் Titles இல் கொடுக்கலாம். இரண்டு பாடல்களை உருவாக்கினேன். அவற்றை தரவிறக்கி Files இல் சேமித்த பின்னர், Copilot AI ஐப் பாவித்து ஒரு பொருத்தமான படத்தை உருவாக்கினேன். படத்திற்கான prompt ஐ ஆசானின் வரிகளை Claude AI இல் கொடுத்துக் கேட்டிருந்தேன்😁 Prompt: Create an image of A Tamil girl, a red enchantress rising from the water. Her body like fire, her hair coiling like smoke, a fiery beauty burning with love. A blue silk saree gently slipping from her waist, revealing her hips like a white elephant’s forehead. Water droplets like dewdrops on red lotus petals, streams of water rolling on her body. Her fiery body gazes at me, and I melt like snow in the heat of that fire. Her reddish black hair floats in the breeze கிடைத்த படத்தை Meta AI, Runaway AI ஐப் பாவித்து 5 செக்கன்கள் வீடியோ உருவாக்கி, அதையே loop ஆக ஓடவிட்டு iMovies இல் காணொளிகளைக் தயாரித்தேன். கீழே உள்ள பாடல்களில் எது உங்களுக்குப் பிடித்துள்ளது என்பதைச் சொல்லுங்கள்😊 ஒன்று 4 நிமிடங்கள் 19 செக்கன்கள் Suno: https://suno.com/s/PsdURePRy1Ahzj8b இரண்டு: 6 நிமிடன்கள் 28 செக்கன்கள் Suno: https://suno.com/s/GohzmvqVFQbeBnvc3 points
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
அவருக்கென்ன? இரண்டு மூன்று தரங்கள் சாப்பிட்டுவிடுவார். நாங்கள் தேத்தண்ணி குடிக்காமல் வாசிக்கிறோம். ஐந்தாறு மாதங்கள் பிரிந்திருந்தாலும், “இஞ்சை ஒரு அசுமாத்தமும் இல்லை, ஆறுதலா வா” என்று அவர் சொல்வதைப் பார்த்தால், மனுசன் happy போலே😏2 points
-
“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!” - புதின்
இதுவரைக்கும் எல்லாம் நல்ல படிதான் போய்கொண்டிருந்தது… செத்த கிளி வாய தொறந்துட்டுது.. இனித்தான் இருக்கு ஈரானுக்கு ஏழரை இவ்வண், மதுரோ, அசாத், சதாம், கடாபி உண்மையில் ஈரானின் உற்ற நண்பனாக நிற்பது சீனா. தருணம் பார்த்து எண்ணை விற்கும் செத்த கிளி பச்சை கள்ளன். செத்த கிளி எண்ணை விற்க மறுத்தால் தம்பர் மீதான நெருக்கடி இன்னும் கூடும்.2 points
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
சுமே ஆன்ரிக்கு பயணக் கதை எழுதுவது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி🤣2 points
-
அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
2 pointsபாராட்டுக்கள் ...தொடரட்டும் கவிதையில் வரும் வரிகள் யாவும் காட்சியாக வரும் என நினைத்து ஏமாந்து போனேன்🤣...ஈரான்காரனின் ஏவுகணைகள் எத்தனை இலக்க்கை தாக்காமல் வீணாக வானில் வெடிக்குது தானே என நினைத்து சமாதானம் அடைந்தேன்...🤣2 points
-
இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !
2 pointsஉண்மை தான்,மதங்கள் தான் இனி தாயகத்தை காப்பாற்ற வேண்டும்...பெளத்தமும் ,இஸ்லாமும் அதை செய்யப்போவதில்லை... சைவமும் கிறிஸ்தவமும் தமிழ்மொழி ஊடாக தாக்கு பிடிக்கும் சந்தர்ப்பம் உண்டு...காலம் பதில் சொல்லும் 50 வருடங்களின் பின் சிங்களவர்களே இந்தியாவிடம் தங்கள் நிலப்பரப்பை இழந்து விடுவார்கள் , சிறிலங்காட ஜெயவேவா என்று சொல்வதற்கு பதிலாக ,ஜெய்ஹிந்த் சொல்லவேண்டிய நிலை வருமோ தெரியாது2 points
-
வீதியோரம்.
2 pointsநீங்கள் இப்படி ஓரிரு வரிகள் எழுதிச்செல்வதே மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கு ....... நன்றி .....! 👍2 points
-
வீதியோரம்.
2 pointsஒரு காலத்தில் எனது சும்மா கிறுக்கலே ஆயிரம் பார்வையாளர்களை கடந்து செல்லும்🤣 ..இன்று நூறு பார்வையாளர்களை எட்டுவதே கடினமாக உள்ளது...செய்திகளுக்கும் அதே நிலை தான்.. இன்று வட்சப்,யூடியுப்,முகபுத்தகம் போன்றவற்றில் பலர் (நான் உட்பட) நேரத்தை செல்வு செய்வதால் இங்கு எட்டி பார்ப்பது குறைந்து கொண்டு செல்லுகிறது .. யூடியுப் போடும் தலையங்கம் வேற கவர்ச்சியாக இருக்குது...அதிரடி,நொருங்கியது,டமால்,புளுடா,செய்த செயல்,😅2 points
-
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!
இவர்கள் உக்ரேனை வைத்து.... ரஷ்யாவுக்கு நொட்டினத்துக்கு, சீனனும், ரஷ்யனும்... ஈரானை வைத்து இஸ்ரேலுக்கும், அமெரிக்கனுக்கும் நொட்டிக் கொண்டு இருக்கிறார்கள். 😂 ஒன்று எடுத்தால்... இரண்டு இலவசம் என்ற மாதிரி, துபாய், கட்டார், சவூதி அரேபியாவுக்கு இலவச சாத்துப்படியும் கிடைக்குது. 🤣 போதாக் குறைக்கு 5000 அமெரிக்க ராணுவத்தினர் வரும் செய்தியை கசிய விட்டுள்ளார்கள். 😂 ஈரானும்... பின்னுக்கு உள்ள மறை கரங்களும் இப்பவே போட்டுத்தள்ள ரெடியாகி இருப்பார்கள். 🤣 இதெல்லாம் தேவையா கோபால்.2 points
-
ரோஜா முள்.
1 pointஇரண்டு கிழமைக்கு முன்பு... தோட்டத்தில் இருந்த ரோஜா செடிகளின் கிளைகளை வெட்டும் போது... முள் ஒன்று நடு விரலில் குத்தி விட்டது. இப்படி வேலை செய்யும் போது, வழமையாக குத்தினாலும்... அடுத்த நாளில், முள் குத்திய இடமே தெரியாமல் மாறிவிடும். இம்முறை, அது குத்திய சில மணி நேரங்களில்... விரல் பயங்கரமாக வீங்கி, சரியான குத்து வலியாக இருந்தது. நானும், இரண்டு நாள் பொறுத்து வைத்தியரிடம் செல்வோம்... அது வரை எமக்குத் தெரிந்த வீட்டு வைத்தியங்களான "ஐஸ்" ஒத்தடம் கொடுத்தல், "நோ" கிறீம் பூசுதல், நோவை குறைக்க சில குளிசைகள் என்று போட்டும், பலன் கிடைக்காததால்... குடும்ப வைத்தியரிடம் போக... அவர் இதுவரை நான் செய்த வைத்திய முறைகளை கேட்டு விட்டு, சிலவேளை கிருமி தொற்று ஏற்பட்டிருக்க சாத்தியக் கூறுகள் உள்ளது என்று... Antibiotic குளிசைகளை காலையும், மாலையும் 5 நாட்களுக்கு போடும்படி தந்தார். 5 நாட்களும் கடந்த பின்பும்... Antibiotic குளிசைக்கு நோவும், வீக்கமும் சொல்வழி கேட்கவில்லை. இப்படியே பொறுத்து இருந்தால்... கடைசியில் பிரச்சினை பெரிதாகி விடும் என நான் முடிவெடுத்து, அருகில் உள்ள வைத்தியசாலையின் அவசர நோயாளர் பிரிவிற்கு சென்று நடந்ததை சொல்ல... அவர்கள் "எக்ஸ் ரே", இரத்தப் பரிசோதனை எல்லாம் எடுத்து சோதித்து பார்த்து விட்டு... மூன்று நாட்களுக்கு, தினமும் மூன்று போத்தல் வீதம்... கையில் Antibiotic ஐ, திரவ வடிவில் ஏற்றி கண்காணிக்க வேண்டும் என்றும், வீக்கம் வற்றாது விட்டால்... அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம் என்றும் சொன்னார்கள். நமக்கும்... ஆஸ்பத்திரி சாப்பாடு சாப்பிட்டு கனநாள், ஒரு மாற்றமாக இருக்கட்டுமே என்று , அவர்கள் நீட்டிய காகிதங்களில் கையெழுத்தை போட்டுக் கொடுத்து விட்டு... நான் அந்த ஆஸ்பத்திரியின் வாடிக்கையாளன் என்ற படியால், எங்கு அடுத்துப் போக வேண்டும் என்று எனக்கு ஒருவரும் கூட்டி வந்து காட்ட வேண்டிய தேவை இருக்கவில்லை . அவர்கள் தந்த சில காகிதங்களை வாங்கிக் கொண்டு, நான் தங்க வேண்டிய பகுதிக்கு பொறுப்பான "நேர்ஸ்" ஐ சந்திக்க சென்றேன். தொடரும்... ✍1 point
-
செய்தியாய் சொல்லுங்கடா…
1 pointஉண்மை பொய் தேவையில்லை உன் செய்தியில்… உண்மையை உரக்கச் சொல்ல தேவையில்லை பொய் செய்திதானென்று பயம் தேவையில்லை கண்ணசைவும் கையசைவும் இருந்திட்டால் உலகம்பூராவும் உன்காலடியில் எடுத்த விடையம் என்னவானாலும்…. எதுகை மோனை உனக்குத் தேவையுமில்லை.. உண்மையோ எள்ளளவும் வேண்டாம் எடுத்தை தூக்கிப் போட்டாலே காணும் கைப்பேசி உன்னை படமெடுக்கும் கண்டதை கதைத்தாலும் கண்டிக்காது சொன்னதை அப்படியே சொல்லும் சொரணை கெட்டசனம் சொக்கிப்போய் திரும்ப திரும்ப பார்க்கும் பார்வைக்கு ஒரு விருப்பும் ஒரு ஏற்பும் இருந்தாலே நீ ஒரு செய்தியாளன் சொந்தமாக சொத்து சேர்த்து விட்டால் மகா செய்தியாளன் செய்திக்கு .ஒரு தாற்பரியம் இருக்கு ஒரு தார்மீகமும் இருக்கு சொல்வதில் ஒரு செம்மையும் இருக்கு சொல்வடிவமும் இருக்கு… இவை இல்லையெனின்… அது செய்தியல்லடா… செய்தியை…சொல்லுங்கடா..உண்மை செய்தியாய் சொல்லுங்கடா…1 point
-
இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்!
இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்! ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் இடையிலான போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் அணுசக்தி மையத்திற்கு அருகிலுள்ள நகரங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நேற்று காலை ஈரானின் ‘நடான்ஸ்’ (Natanz) அணுசக்தி மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் முக்கிய அணுசக்தி நிலையமான டிமோனா (Dimona) மற்றும் அதன் அருகிலுள்ள அராத் (Arad) ஆகிய நகரங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இப்போரில் அணுசக்தி மையங்களை இலக்கு வைத்து நடத்தப்படும் மிக ஆபத்தான கட்டமாக இது பார்க்கப்படுகிறது. அராத் (Arad)திலுள்ள நகர் மையத்தில் விழுந்த ஏவுகணையால் 88 பேர் காயமடைந்தனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டிமோனா (Dimona) அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இந்த நகரில் பல குடியிருப்புகள் தரைமட்டமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 10 வயது சிறுவன் உட்பட 39 பேர் காயமடைந்தனர். ஏவுகணைகள் நேரடியாகக் கட்டடங்களைத் தாக்கியதில் பல இடங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air Defence) ஏவுகணைகளை இடைமறிக்க முயன்ற போதிலும், நூற்றுக்கணக்கான கிலோ எடையுள்ள போர்க்கப்பல்களைக் கொண்ட சில ஏவுகணைகளைத் தடுக்கத் தவறிவிட்டன. இதனால் ஏவுகணைகள் நேரடியாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழுந்து வெடித்துள்ளன. சர்வதேச அணுசக்தி முகமை (IAEA), டிமோனாவில் உள்ள ஷிமோன் பெரெஸ் அணு ஆராய்ச்சி மையத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், கதிர்வீச்சு அளவில் மாற்றங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இருப்பினும், அணுசக்தி மையங்களுக்கு அருகே இராணுவத் தாக்குதல்களைத் தவிர்க்க வேண்டும் என அதன் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் குரோஸி வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களை முறியடிக்கத் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/14695411 point
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
காரணம் தெரியாதபடியால்தான் “படையெடுக்க என்ன காரணம்?” என்று உங்களைக் கேட்கிறார். அதுக்கு நீங்கள், “சொல்லுங்கள் கேட்போம்”என்பது நியாயமாகுமா?1 point
-
தமிழகத்தில் தத்தளிக்கும் த.வெ.க... அப்போ விஜய்யின் கதி?
தமிழ் மிரர் இலங்கை பேப்பர் அல்லவா? இதை எழுதியவர் பெயர் ஏன் போடப்படவில்லை? இந்த பத்திரிகைகக்கு தமிழ் நாட்டில் எத்தனை நிருபர்கள் உளர்? விகடனின் பாணியில், ஏலவே தமிழக பத்திரிகைகளில் வந்த செய்தியை கலந்து, கற்பனையாக எழுதபட்ட ஆக்கம் போல தெரிகிறது.1 point
-
சீன யுவானில் எரிசக்தியை கொள்வனவு செய்த இந்தியா!
அமெரிக்க கடன் 39 ரில்லியன்!!! --- --- --- *சீன யுவான் சர்வதேச சந்தையில் 30 சதவீதமாகும் வாய்ப்பு *சீன யுவானில் எரிசக்தியை கொள்வனவு செய்த இந்தியா! *ஈழத்தமிழர்கள் சீன அபிவிருத்தி திட்டங்களை ஏன் எதிர்த்தனர்? --- --- --- ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் போர், அமெரிக்க டொலரை (Us Dollar) காப்பாற்றும் நோக்கில் சீன யுவானுக்கு (Chinese Yuan) எதிராக நடத்தப்படுகிறது என்பதை பகிரங்கப்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் காலம் காலமாக அமெரிக்க டொலர் ஒற்றை நாணயமாக செல்வாக்குச் செலுத்தி வந்தது. எண்ணெய் வர்த்தகத்தில் கூட அமெரிக்காவே முன்னணியில் உள்ளது. தற்போதும் சர்வதேசச் சந்தையில் சுமார் 80 வீதம் அமெரிக்க டொலர் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச சந்தையில், சீனாவின் யுவான் நாணயம் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது. இதன் காரண - காரியமாக ரசியாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா கடந்த ஒரு வருடமாக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாக டொனால்ட் ட்ரம்ப், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்து, மோடிக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருகிறார். 2026 ஆம் ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் இந்தியா, ரசியாவிடம் இருந்து சீன யுவானில் 10.2 வீதமான கச்சா எண்ணெய்யை கொள்வனவு செய்ததாக ரொய்டர்ஸ் (reuters) செய்தி நிறுவனம் சென்ற 19 ஆம் திகதி தெரிவித்திருந்தது. ஆனால் இது பிரத்தியேகமான கட்டண முறை அல்ல, ஏனெனில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய, நெகிழ்வான கட்டண விதிமுறைகளை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ரசிய எரிசக்தி துணை அமைச்சர் பாவெல் சொரோகின் (Pavel Sorokin) தெரிவித்துள்ளார். சென்ற மார்ச் மாதம் 14 ஆம் திகதி ஈரான் வெளியிட்ட அறிவிப்பின் பிரகாரம், இந்தியா வளைகுடா நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெயை யுவானில் கொள்வனவு செய்தால், அமெரிக்காவுக்கு மிகப் பெரும் தலையிடியாக அது இருக்கும் என்று எக்கனாமிக் ரைமஸ் (economictimes) என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா கடந்த ஆண்டு 120 பில்லியனுக்கு அமெரிக்காவிடம் இருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்திருக்கிறது. சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் ஆகிய உள்ளடக்கிய வளைகுடா நாடுகள், சீன- ரசிய மற்றும் இந்தியாவை மையப்படுத்திய பிறிக்ஸ் பொருளாதார கட்டமைப்பில் இணைந்த பின்னர், உலக எரிசக்தி விற்பனை 80 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக குறைவடைந்துள்ளது. சீன யுவான் சர்வதேச வர்த்தகத்தில் நுழைவது பற்றி அல்ஜசீரா ஊடகம், அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி என வர்ணித்துள்ளது. ரசியா - ஈரான் ஆகிய நாடுகள் தமது சர்வதேச வர்த்தக செயற்பாடுகளை யுவானுக்கு மாற்றியுள்ளதாக அல்ஜசீரா சுட்டிக்காட்டியுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் சீன யுவான் சர்வதேச வர்த்தகத்தில் ஆகக் குறைந்தது 30 சதவீதத்தை எட்டிப் பிடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இது உலக பொருளாதாரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு உள்ளான ஈரான் போன்ற நாடுகள் சீன யுவானில் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடும் வாய்ப்புகள் உண்டு. தற்போது ஆயுத உற்பத்திக்குத் தேவையான அனைத்து மூலப் பொருட்களையும் சீனா, ஈரானுக்கு வழங்குகிறது. ஆகவே, இப்பின்னணியில் ”பிறிக்ஸ்” (BRICS) பொருளாதார கட்டமைப்பின் வளர்ச்சியும் வளைகுடாவை மையப்படுத்திய மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்க நாடுகள் எல்லாமே பிறிக்ஸில் இணைந்துள்ள பின்னணியில், தற்போது அமெரிக்காவின் தேசியக் கடன் $38.5 ட்ரில்லியனாக உயர்ந்து, வட்டிச் செலவுகளை அதிகப்படுத்தியுள்ளதாக எக்கனமிக் ரைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது. 2025 இன் பிற்பகுதியில், மாதாந்த வட்டி செலுத்துதல்கள் மட்டும் $276 பில்லியனைத் தொட்டன, இது இப்போது சில கூட்டாட்சி நிறுவனங்களின் முழு ஆண்டு வரவு செலவுத் திட்டங்களுக்கும் போட்டியாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கடன் விகிதம், ஏறத்தாள 126% இருப்பதால், "நிதி ஆபத்து மண்டலம்" (Financial risk zone) என்று அழைக்கும் பகுதிக்குள் அமெரிக்கா நுழைவதாக எக்கனமிக் ரைம்ஸின் பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பொருளாதாரச் சரிவுகளின் போது அது ஒரு நாட்டின் முன்னோடித் திறனை வரலாற்று ரீதியாக வரம்புக்கு உட்படுத்துகிறது. ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் சுமார் $8 பில்லியன் கடன் அதிகரித்து வருவதால், அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைமையை அடைகிறது. $38.5 ட்ரில்லியன் கடன் என்பது உடனடிக் கணிப்பீடு. ஆனால், இத் தொகை அதிகமாக இருக்கும் எனவும் குறிப்பாக 2025 ஆம் ஆண்டு மிக நீண்ட வட்டி விகிதத்தை அமெரிக்கா செலுத்தியுள்ளதை ஆதாரமாகக் கொண்டு எக்கனமிக் ரைம்ஸ் விளக்கியுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க மொத்த தேசிய உற்பத்தி (GDP) வளர்ச்சி கணிப்புகள் 1.5% இற்கு கீழ்நோக்கி அமைந்துள்ளன. இது அமெரிக்கா சேர்த்து வைத்த உறுதியான நிதிக் கட்டமைப்பை அடித்துச் செல்லும் சுனாமி போன்றது என எக்கனமிக் ரைம்ஸ் வர்ணிக்கிறது. ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்கா தவிர்ந்த மேற்கு நாடுகளும் சர்வதேச சந்தையில், பல்வகை நாணய பயன்பாட்டுக்கு ((Multi currency) இணங்கி வரும் சூழலில், ஒற்றை நாணயச் செயற்பாடு (Single currency) என பிடிவாதமாக நின்ற அமெரிக்காவும் அதன் டொலரும் வீழ்ச்சியடையும் ஆபத்து உள்ளது. ஆனால், இந்த விடயங்கள் தொடர்பாக ட்ரம்ப் ஆராய்வதாக இல்லை. ட்ரம்பினுடைய உடனடிக் கவனம் என்பது ஈரான் அரசின் கட்டிப்பாட்டில் உள்ள ஹார்மூஸ் நீரிணையை கைப்பற்றி அதன் ஊடாக எண்ணெய் வருவாய்களை அதிகரிப்பது மாத்திரமே. சர்வதேச சந்தையில் ஒற்றை நாணய பயன்பாட்டை தொடர முடியும் என ட்ரம்ப் நம்புகிறார். ஆனால், நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர், குறிப்பாக ஈரானின் மூளையாக செயற்படும் சீனாவினால் ட்ரம்பின் இந்தக் கனவுக்கு இடமளிக்கும் வாய்ப்புகள் இல்லை. ஏனெனில், அமெரிக்க கூட்டாளி நாடுகளான ஐரோப்பிய ஒன்றியம் கூட ஹார்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஒத்துழைப்பதாக இல்லை. இந்தியாவும் ரசிய - சீன கூட்டு என்ற நிலைமக்குள் தற்போது வந்துள்ளது போல் தெரிகிறது. ஆகவே, ட்ரம்ப் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்பது பட்டவர்த்தனம். ஆனாலும், அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள்- அமெரிக்க தீர்மானம் எடுப்போர் அது பற்றி தீவிரமாக ஆராய்கின்றனர். இருந்தாலும் சர்வதேச சந்தையில் 2030 ஆம் ஆண்டுக்குள் சீன யுவான் தாக்கம் செலுத்துவதை கட்டுப்படுத்த முடியாது என விஞ்ஞானியும் பசிபிக் இன்ஸ்டிட்யூட்டின் இணை நிறுவனருமான பீட்டர் க்ளீக் (Pacific Institute co-founder Peter Gleik) குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், அமெரிக்காவின் கடன் (loan) என்பது நேரடியானது அல்ல. அமெரிக்க மக்கள் (individual investors) வங்கிகள், பரஸ்பர நிதிகள், ஓய்வூதிய நிதிகள் (mutual funds - pension funds) அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) அரசு அமைப்புகள் (Social Security fund) ஆகியவற்றிடம் இருந்து கடன்களை பெறுகின்றன. அமெரிக்க அரசின் அரச பத்திரங்கள் எனப்படும் பிணைமுறி (Treasury bonds / bills / notes) ஆகியவற்றை அமெரிக்கா விற்பனை செய்தும் நிதியை பெறுகிறது. அமெரிக்க மக்கள் மற்றும் ஏனைய நாடுகள் அந்த பிணை முறிகளை கொள்வனவு செய்கின்றன. இதுவே அமெரிக்க கடனாகவும் மாறுவதாக எக்கனமிக் ரைம்ஸ் சுட்டிக்காட்டுகிறது. சுமார் 70%–75% கடன் அமெரிக்க உள்ளக முதலீட்டாளர்களிடம் இருந்தும் பெறப்படுகின்றன. சர்வதேச சந்தையில் சுமார் 80 சதவீதம் டொலரின் ஆதிக்கம் உண்டு என்ற நம்பிக்கையில் வழங்கப்பட்ட இக் கடன்கள், எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது என்ற தொனியை அல்ஜசீரா ஊடகம் வெளிப்படுத்துகிறது. ஆகவே, 2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அதாவது 2025 ஆம் ஆண்டு மையப் பகுதியில் அமெரிக்காவுக்கு குறிப்பாக ட்ரம்புக்கு இவை தெளிவாக தெரிந்த பின்னணியில் தான், இறக்குமதி ஏற்றுமதிகளில் அதிக வரியை (tariff tax) ஏனைய நாடுகள் மீது சுமத்தியுள்ளார் என்பது கண்கூடு. இந்தப் பின்புலத்தில் இந்தியா, ஏற்கனவே அமெரிக்காவுடன் இருந்த பொருளாதார உறவை மாற்றி ரசிய - சீன உறவு முறைமை ஒன்றுக்குள் வரக்கூடிய சாத்தியங்கள் இருந்தன. இதனை இலங்கையும் சாதகமாக பயன்படுத்தி வந்தது. ஏனெனில், இலங்கை ஏற்கனவே சீன உறவை வைத்திருந்தாலும், ஈழத்தமிழர் விவகாரத்தில் விரும்பியோ விரும்பாமலோ அமெரிக்க - இந்திய தயவை நாடியிருந்தது. ஆனால் ஈரான் போர் மற்றும் அமெரிக்க நிதி நெருக்கடிகள் காரணமாகவும் சீன யுவானில், இந்திய எரிசக்தியை கொள்வனவு செய்ய ஆரம்பித்தமையும் இலங்கைக்கு மேலும் வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆகவே, புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிச் சூழலுக்குள் எந்த ஒரு வல்லரசு நாடுகளையும் நேரடியாக ஆதரிப்பதை விட, தமது நாடு என்ற கொள்கையோடு செயற்பட்டால், நிலைமையை சமாளிக்க முடியும். குறிப்பாக அரசு அற்ற தேசிய இனங்கள் இக்கொள்கையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். குர்திஸ் இன போராளிகள் காலத்துக்கு காலம் அமெரிக்காவை ஆதரித்து பின்னர் அமெரிக்காவினால் தூக்கி எறியப்படுவது போன்ற காரணத்தால் இன்று வரை அவர்கள் தமது அரசியல் விடுதலையை அடைய முடியாத சிக்கல் நிலவுகிறது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஜனநாயக சூழலில் தமிழ்த் தேசியக் கட்சிகள், அமெரிக்க - இந்திய அரசுகள் என்ற இரண்டு அரசுகளைத் தவிர வேறெந்த அரசுகளுடனும் உறவை பேணவில்லை. ஏனைய நாடுகளுடன் ஈழத்தமிழர் விவகாரம் பற்றிய விடயங்கள் பற்றிப் பேசியதும் இல்லை. குறிப்பாக சீனா, வடக்கு கிழக்கில் ஏதேனும் அபிவிருத்தித் திட்டங்களை செய்ய முற்பட்டால் உடனடியாக எதிர்த்து, இந்திய விசுவாசத்தை காண்பிப்பது போன்ற உத்திகளை மாத்திரமே கையாண்டனர். ஆனால் அந்த உத்திகள் மிகத் தவறானது என ஏலவே, இப்பத்தியில் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. ஈரான் போருக்குப் பின்னர் மாறவுள்ள உலக அரசியல் ஒழுங்கில் இந்திய - சீன உறவு, இந்திய - ரசிய உறவு வலுவடையக் கூடிய சாத்தியங்கள் அதிகம். குறிப்பாக பொருளாதார முறைமைகளில் இந்திய - சீன உறவு மேலோங்கவுள்ள பின்னணியில், சீனாவுக்கு எதிரான இந்தோ - பசுபிக் பிராந்திய இராணுவ செயற்பாடுகளிலும் அமெரிக்காவுக்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைக்குமா என்பது சந்தேகமே. பாதுகாப்பு விடயத்தில் இந்தியா, ஏற்கனவே அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கவில்லை. இப்பின்னணியில், ஈழத்தமிழர் தரப்பு இனிமேலாவது தமக்குரிய வெளியுறவுக் கொள்கையை வகுத்து சார்புத் தன்மை அற்ற உத்திகளை கையாள வேண்டும். ஏற்கனவே சிங்கள அரசியல் தலைவர்கள், தனிப்பட்ட கட்சி அரசியலுக்கு அப்பால், ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் ஒரு புள்ளியில் நின்று செயற்படுகின்றனர். அதேபோன்று அமெரிக்கா - இந்தியா - சீனா ஆகிய மூன்று நாடுகளையும், ஒரு புள்ளியில் நின்று கட்சி அரசியலுக்கு அப்பால் கையாளுகின்றனர். இந்திய வெளியுறவுக் கொள்கையோடு ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பு அனுசரித்துச் செல்கிறது. ஆகவே, ஈழத்தமிழர் ”அரசியல் விடுதலை” என்பதை இலங்கை அரசு என்ற கட்டமைப்புக்குள் முற்றாக மாற்றக் கூடிய ஏற்பாடுகளை அநுர அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ள பின்னணியில். ஈரான் போரின் பின்னரான உலக அரசியல் ஒழுங்கில் கூட, ஈழத்தமிழர் பக்கம் நியாயம் வரக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. அதற்கான வழிமுறைகளை தேட வேண்டியது தமிழ்த் தேசியக் கட்சிகள் மாத்திரமல்ல, சிவில் சமூக அமைப்புகளுக்கும் அந்த பொறுப்பு உண்டு. இன்னமும் காலம் சென்றுவிடவில்லை. ஆனால், எந்த வகையான தயாரிப்புகளும் ஈழத்தமிழர் தரப்பில் இருப்பதாக அல்லது அதற்குரிய முயற்சிகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid0AenR8ViQdroSpnMHwMygXRdHfGGHBV82LF1u9JzQ2DFNn3ktrDVcsPov1qztvp92l/?mibextid=wwXIfr1 point
-
இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point
- அப்பிள்போன் வேணும் தம்பி….
1 pointநிவாரணம் என்றால் இருக்கிறவனும் வரிசை கட்டுற கலாச்சாரம் வந்த பின்னர் சொந்தங்களிடம் உரிமையாக அப்பிள் ஐபோன் கேட்பதில் என்ன தயக்கம் வரப்போகின்றது? கேட்டதை கொடுக்காவிட்டால், உங்களுக்குத்தான் எதிர்பாராத இடங்களில் இருந்தும் அழுத்தம் வரும்😁1 point- அப்பிள்போன் வேணும் தம்பி….
1 pointஇதாலதான் ஊரும் வெறுத்து போச்சு... உறவும் வெறுத்து போச்சு..உங்கள் பணி தொடரட்டும் அய்யா.🤭1 point- அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
நான் புரிவதற்கு இலகுவாக எழுதியிருக்கின்றேன் என்றல்லவா நினைத்தேன்🤣 உண்மையில் பாடல் வரிகளையும், பாடலையும் உருவாக்குவது இலகு. ஆனால் சொற்களில் சமரசம் வேண்டும். அதனை Gemini Pro போன்ற AI tools களிடமே கேட்டால் மாற்றித் தரும். பொருத்தமானதா இல்லையா என்பதை நாங்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.😇1 point- அப்பிள்போன் வேணும் தம்பி….
1 point- வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!
Kjy; கலக்கட்டும். கலக்கட்டும்.சிறிலங்கா சீனாவின்பக்கம்தான் நிற்கும். பிராந்திய வல்லரசுக்கு தமிழர்தாயகத்தின் அருமை புரியட்டும். காலம் கடந்த ஞானம் எதற்கும் உதவாது.1 point- ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடியதாகக் கூறுவது அப்பட்டமான பொய் - நாமல் ராஜபக்ஷ!
ராஜபக்ஷ!1 point- இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்!
இப்ப இஸ்ரேலுக்கு பலஸ்தீன மக்களின் வலியின் கனம் புரிந்திருக்கும்1 point- யாழில் நடைபெற்ற போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் மாநாடு!
யாழில் நடைபெற்ற போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் மாநாடு! 22 Mar, 2026 | 12:23 PM “சமகால அரசியலும், போராளிகளின் வகிபாகமும்” எனும் தொனிப்பொருளிலான மாநாடு போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் உள்ள தனியார் விடுதியில் சனிக்கிழமை (21) நடைபெற்றது. அந்நிகழ்வில் “வரலாற்றின் வேர்கள்” எனும் விருது வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. நிகழ்வில் போராட்ட கால பகுதியில் புரட்சி பாடல்களை பாடிய பாடகர்களான மறைந்த பாடகர் எஸ்.ஜி சாந்தன், சுகுமார், நிரோஜன் பார்வதி சிவபாதம் உள்ளிட்ட பாடகர்கள், பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களான , இசைவாணர் கண்ணன் , அருணா உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அத்துடன் விருது விழாவில் புலிகளின் குரல் செய்தி ஆசிரியரான மறைந்த ரி.தவபாலன் மற்றும் யாழ் ஊடக அமையத்தின் தலைவர் குமாரசுவாமி செல்வக்குமார் , முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் ஆகிய இரு மூத்த ஊடகவியலாளர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். https://www.virakesari.lk/article/2416261 point- அப்பிள்போன் வேணும் தம்பி….
1 pointசரி ஆச்சி 15-16-17 எதணை வேணும்? கதையோட கதையா எனக்கும் உந்த டிக்டொக்கை ஒருக்கா பழக்கி விடணை.1 point- அப்பிள்போன் வேணும் தம்பி….
1 point- இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !
1 pointஅடுத்த திருவிழாவுக்கான நேர்த்தியாக இருக்கும்.1 point- அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
1 point- அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
நானும் கண்டேன். காட்சியில் அவள் நடந்து வர, ஆடை சற்று நகர, காட்சி மீண்டும் ஆரம்பத்துக்கு வரும் அந்த நொடியில் அவள் முகம் ஆடை நகர்ந்த இடத்தில் தோன்றுவது அருமை. பாடகர் சிறீநிவாசனை நினைவுட்டும் குரல். நன்றாக வந்திருக்கிறது. இந்த இடத்தில் கொஞ்சம் சறுக்கிறது. ‘ஓர் அழுகை ஆதரவு தேடுகிறது’ என்ற பெயரில் கவிதை நூல் ஒன்றை அரங்கராசன் என்பவர் வெளியிட்டிருந்தார். அந்தக் கவிதை நூலில் இருந்ததுதான் இந்தக் கவிதை “பிரம்மனை கஞ்சன் என்றுதான் நினைத்தேன் உன் இடையைப் பார்த்தபோது சற்று நிமிர்ந்தபோதுதான் தெரிந்தது அவன் வள்ளலாகவும் இருக்கிறான்?…” கவிப்பேரரசு சுட்டதுதான் ஜீன்ஸ் படத்தில் வந்தது. எல்லாப் புகழும் வைரமுத்துவுக்கே. இப்படியான விளக்கங்கள் நல்ல உதவியாக இருக்கும். பலர் இந்த வழியில் ஈடுபட தூண்டுதலாக இருக்கும். நன்றி! உங்கள் காலத்துப் பாடல். அதுதான் உங்களுக்குப் மிடித்திருக்கிறது. என் காலத்துப் பாடல் என்பதால், “மடல் வாழை தொடையிருக்க மச்சம் ஒன்று அதில் இருக்க படைத்தவனின் திறமையெல்லாம் முழுமை பெற்ற அழகி…”😜1 point- இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !
1 pointநீர்கொழும்பு, சிலாபம் பகுதிகள் நீங்கள் சொன்னவை போன்று மாறி, இப்பொழுது ஏறக்குறைய முற்றாகவே மாறிவிட்டன என்று நினைக்கின்றேன். அப்படியே மேலே வந்தால் உடப்பு.............. இன்றைய சனத்தொகையையும், இனப் பரம்பலையும் பார்த்தால், ஒரு ஐம்பது வருடங்களில் இந்திய உயர்ஸ்தானிகர் கிளிநொச்சிக்கே இப்படியான ஒரு நோக்கத்திற்காக வர வேண்டும் போல.......................1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !
1 point🤣................... 'அம்மா திரௌபதி அம்மனே, அவரைக் கூட்டி வந்து தீ மிதிக்க வைக்கின்றேன்..............' என்று ஒரு நேர்த்தி வைக்கவில்லையே என்று சந்தோசப்பட வேண்டும், அண்ணா........... நாங்கள் அங்கு போவதற்கு சில நாட்கள் முன்னரேயே தீ மிதிக்கும் விழா நடந்திருந்தது..................🤣.1 point- வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க F-35 ரக விமானம் மீது தாக்குதல்!
இனி வேற பெயரில வித்தால் வாங்குவார்கள் என நினைக்கிறேன்!1 point- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
மிசைல் கையிருப்பு தீரும் என பலரும் கருதிய நிலையில் டியாகோ கார்சியா நோக்கி இரு மிசைல்கள் பாய்ந்துள்ளன. இது ஐரோப்பாவின் பல நகர்களை வீச்சு எல்லைக்குள் கொண்டு வரும். தம்பர் இன்று சொல்வதை பார்த்தால் தரையிறக்கம் வராது போலவே படுகிறது. ஆனால் போரை இவர்கள் நிறுத்தினாலும், நீரிணையை ஈரான் கட்டுப்படுத்தும் எனில் - அதன் விலை அமெரிக்காவை அரபுநாடுகளில் இருந்து அகற்றுவது அல்லது குறைப்பதாக இருக்கலாம்.1 point- உங்களுக்கு தெரியாத வட கொரியா
1 pointநான் பல திரிகளில் அவதானித்ததை இங்கே பகிர விரும்புகின்றேன். இது இந்த திரிக்கு சம்பந்தம் இல்லாது விட்டாலும்.... தனிமனித தாக்குதல் இல்லாமல் எழுத முயற்சிக்கின்றேன். நான் பல திரிகளில் ரஷ்யா போன்ற நாடுகளுக்காக ஆதரவாக என்பதை விட அவர்கள் பக்கம் இருக்கும் நியாத்தை பிரதிபலித்து எழுதுபவன்.அதே போல் மற்றவர்களுக்கும் நீதி,நேர்மை நியாயங்கள் இருக்கும். ஒருவர் தனது கருத்தை எழுதும் போது அதற்கு பதில் கருத்து எழுதிவது நியாயம். அதை விட்டு மாற்று கருத்து எழுதுபவரை விமர்ச்சித்து மட்டுமே இங்கே பலர் கருத்து எழுதுகின்றார்கள்.விமர்சிப்பவர்களுக்கு அவர்கள் பாணியில் பதில் எழுதினால் தடைகளும் தண்டனைகளுமே மிச்சமாக வருகின்றது. சரி பிரச்சனைகளுக்கு வருவோம். நான் ரஷ்யாவிற்கு சார்பாக எழுதினால் ரஷ்யாவிற்கு போ எனும் பாணியில் எழுதுகின்றார்கள். இதே திரியிலும் அதே தொனி கருத்துக்கள் உள்ளது. மாற்றுக்கருத்தை எதிர் கொள்ள முடியவில்லையா? அல்லது இங்கே மாற்றுக்கருத்துக்கள் எழுதக்கூடாதா எனவும் தெரியவில்லை. ரஷ்ய பொருளாதாரத்தை தடை செய்ததின் விளைவுகளை ஐரோப்பிய நாடுகள் நன்றாக அனுபவிக்கின்றன. இதை நாங்கள் கண்கூடாகவே பார்க்கின்றோம். இதை ஐரோப்பிய மக்கள் நன்கு உணருகின்றனர். உலகம் அரசியலில் தங்கியிருப்பதில்லை. பொருளாதாரத்தில் மட்டுமே தங்கியுள்ளது. இதை உணராதவர்களே ரஷ்யாவிற்கு போ என்கிறார்கள். கம்யூனிசத்தை வெறுப்பவர்களே நீங்கள் வசிக்கும் முதலாளித்துவ நாடுகளுக்கு எத்தனை ஆயிரம் கொள்கலன்கள் கம்யூனிச நாடுகளில் இருந்து வந்து இறங்குகின்றன என கணக்கு பார்த்தீர்களா? ஜேர்மனிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் ருமேனியாவிலும் பல்கேரியாவிலும் முக்கிய பொருட்களை தயாரிக்கின்றன. அதை விட ஜேர்மனிய ஓய்வூதியர்கள் ஏராளமானோர் பிரேசில்,கியூபா,பல்கேரியா,ருமேனியா போன்ற நாடுகளிலேயே வாழ்கின்றனர். அவுஸ்ரேலியா,கனடா,அமெரிக்கா,ஜேர்மனி,இங்கிலாந்து,பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு கம்யூனிச நாடுகளுடன் இருக்கும் பொருளாதார உறவுகள் பற்றி தெரியாமல் உளறுவோர்களே. நான் எனது ரஷ்யா சார்பான சொந்த கருத்துக்களை சொல்ல ரஷ்யா செல்ல வேண்டுமென்றால் நீங்களும் உங்கள் நாடான ஸ்ரீலங்கா பற்றிய கருத்துக்களுக்கு சொந்த மண்ணிலேயே நிற்க வேண்டும். நான் விடும் பிழைகளை விமர்சிக்க யாருக்கும் உரிமையுண்டு. ஏனென்றால் இது கருத்துக்களம்.1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- 90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம்
நீங்கள் தனியே குண்டுச்சட்டிக்குள் நீந்திக்கொண்டிருக்கின்றீர்கள். விடுதலைப்புலிகள் விட்ட ஒரே தவறு அமெரிக்காவை அரவணைக்க மறுத்ததுதான். திருகோணமலையில்Voice of America தளம் அமையவிருக்கும் போது அதை எதிர்க்காமல் இருந்திருந்தாலே இன்றும் உயிர்ப்புடன் இருந்திருப்பார்கள். அன்றைய பிழை இன்று சரியாக தெரியும்... இன்றைய சரி நாளை பிழையாக தெரியும்...1 point- குட்டிக் கதைகள்.
1 pointepntrsoSdo 9L0f69r7m4:fm0ce065 021 3u3a4às5c311t 2l1a56t3567 · ஒரு எலியின் சுவாரஸ்யமான சம்பவம் 👌" சற்று நிதானமாக படியுங்கள் 🙏" இன்று காலை வழமை போல எனது அம்மன் கோவில் ஆலய பூஜைக்கு நான் சென்றேன் கதவை திறந்து உள்ளே போனதும் ஒரு ஆச்சரியம் என்ன என்று பார்த்தால் இரண்டு செம்புகள் தட்டில் இருந்து கீழே உருண்டு கிடந்தன அதை எடுக்க சென்றால் அதன் பின்னே இருந்து ஓர் பெரிய எலி ஓடி வந்தது நான் பயந்துவிட்டேன் காரணம் ஆலயத்தின் உள்ளே எலிகள் இல்லை சரி என்று அதை கலைத்தேன் அது அங்கும் இங்கும் ஓடி ஒளிந்து கொண்டிருந்தது அதை அடித்து கொல்ல பல அவகாசம் கிடைத்த போதும் என் மனம் அப்படியான காரியத்தை செய்யாது ஏனென்றால் அந்த ஜீவன்கள் உணவு தண்ணீர் இவற்றுக்காக மட்டும் தான் தேடி வரும் , பல இடங்களில் இதை உணவு வைத்து ஏமாற்றி கொல்கிறார்கள் பிடித்து வைத்து நீரில் அமிழ்த்தி மூச்சு திணறி சாகடிக்கிறார்கள் பாவம் அவைகள் சரி கதைக்கு வருவோம் ஒரு வழியாக தண்ணீர் வெளியேற்ற குழாய் வழியாக ஓடி சென்று விட்டது நான் வெளியே சென்று பார்த்தேன் அது ஓடி போய் அருகில் இருந்த மதில் சுவற்றில் ஏறி இருந்து பின் காலை ஊன்றி முன் கால் இரண்டையும் கூப்பி என்னை கும்பிட்ட மாதிரி செய்தது நான் அதை பெரிதாக எடுக்காமல் எனது பூஜை அலுவல்களை கவனிக்க சென்று விட்டேன் எல்லா பூஜைகளும் பண்ணி இறுதியாக சண்டிகேஸ்வரர் பூஜை பண்ண வரும் போது பார்த்தால் அந்த எலி அதே மதில் சுவற்றில் நிற்கிறது ஏனென்றால் அதை கலைத்து ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாகிவிட்டது அவ்வளவு நேரம் ஒரு எலி அதே இடத்தில் இருக்குமா?? என்று எனக்கு சந்தேகம் ??என்னை கண்டதும் முதல் செய்த போல இரு கைகளையும் கூப்பி ஏதோ செய்தது நான் என்னடா இது என்று யோசித்து கொண்டு பூஜையை முடித்தேன் பிறகு அடியவர்களிற்கு விபூதி பிரசாதம் கொடுத்து விட்டு வந்து எட்டி பார்த்தேன் ஒரு இஞ்ச் கூட நகராமல் அதே போல் இருந்து செய்தது நான் மிகவும் திகைத்து விட்டேன் என் வாழ்நாளில் இப்படி ஓர் எலியின் செய்கையை பார்க்கவில்லை என் வீட்டில் அதிகமாக பூனைகள் இருப்பதால் எலி இல்லை சரி என்று ஒரு 10 நிமிடத்தில் ஆலய ஒலிபெருக்கி பாடல்கள் நிறுத்தியதும் நான் உள்ளே பூக்கள் எடுத்தி வைக்கும் போது செம்புகள் இருந்த தட்டில் இருந்து சிறிய கீச்சொலி கேட்டது அவ்வளவு நேரம் ஆலய ஒலிபெருக்கியின் சத்தத்தில் அந்த சிறிய ஒலி எனக்கு கேட்கவில்லை என்ன சத்தம் என்று பார்த்தால் அந்த இடத்தில் எலுமிச்சை பழம் அளவில் ஓர் சிறிய ஆனால் அழகான குண்டு எலிக்குஞ்சு ஒன்று நடுங்கிக்கொண்டு இருந்தார் எனக்கு விளங்கிவிட்டது உடனே ஓடிச்சென்று வெளியே பார்த்தேன்....... அதே இடத்தில் மதில் சுவற்றில் அதே எலி என்னை கண்டதும் கைகளை குவித்தது அந்த நொடி என் இதயம் உடைந்து கண்கள் கலங்கி நின்றேன் இப்படியும் ஓர் எலியா என்று ??? சற்றும் தாமதிக்காமல் அந்த குட்டி எலியை ஓர் தடிமனான துணியால் பிடித்து ஓர் வாழைப்பழத்தையும் எடுத்து கொண்டு மதில் சுவற்றில் வைத்து விட்டு தள்ளி வந்து நின்று விட்டேன் உடனே தாய் எலி ஓடி வந்து தன் பிள்ளை முகர்ந்து பார்த்து ஏதேதோ செய்தது பழத்தை உண்ணவில்லை தன் பிள்ளையை மட்டும் கூட்டிச்சென்றது போகும் முன் என்னை ஒரு முறை நின்று திரும்பி பார்த்தது அந்த ஒரு பார்வை என்னை ஓர் மனிதன் என்ற உணர்வை உணர வைத்தது என் பெற்றோர் என்னை வளர்த்த விதத்தை நான் உணர்ந்தேன் பிள்ளையார் முதல் வைரவர் வரை எத்தனையோ தெய்வங்களுக்கு எவ்வளவோ மந்திரங்கள் சொல்லி தீபம் காட்டி செய்திருந்தாலும் இந்த எலிக்கு நான் செய்த அந்த ஒரு செயலுக்கு முன் இந்த பூஜைகள் அனைத்தும் அந்த பாசமான தாய் எலியின் கால் தூசுக்கு முன் ஒன்றுமே இல்லை என உணர்ந்தேன் அந்த ஒரு மணி நேரம் அந்த தாயின் மனது எவ்வளவு போராட்டம் கண்டிருக்கும் தன்பிள்ளைக்கு என்னநடந்திருக்குமோ என இதை எழுதும் போது கூட கண்களில் நீர் வந்தது அனைத்து உயிர்களுக்கும் பாசம் இருக்கிறது என்பதை உணர்ந்து வாழ்வோம் அன்புடன்.... #இராவண_தேசத்தின்விஷ்வாமித்ரன் #விஷ்ணுசர்மா.....1 point- சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்
அப்படி வந்தால்.... ரோபோவுக்கு லஞ்சம் கொடுத்தும், பொலிசார் தப்ப முடியாது. 😂1 point- ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
போரை விரும்பாத வெண் புறா… தம்பருக்கு ….. ஜெயவேவா! ஜெயவேவா😂1 point- கறையான் புற்று
1 point2002ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தை, சமீபத்தில் ஏற்பட்ட சில விவாதங்களின் பின்னணியில் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவை எழுதுகிறேன். அன்று விடுதலைப் புலிகள் வழங்கிய பட்டங்கள் குறித்தும், அவர்கள் இல்லாத இன்றைய காலத்தில் வழங்கப்படும் பட்டங்கள் குறித்தும் சமீபத்தில் யாழ் கருத்துக்களத்தில் சிலர் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்திருந்தனர். அந்த விவாதத்தில் நான் பார்வையாளனாக அமைதியாக இருந்தேன். ஆனால் யாழ் இணையத்தில் மாமனிதர் டொக்டர் சத்தியமூர்த்தி நினைவுநாள் அறிவிப்பைப் பார்த்தபோது, அதில் குறிப்பிடப்பட்டிருந்த ‘வெண்புறா’ திட்டம் குறித்த தகவல், இந்நினைவுகளை மீண்டும் எழுப்பியது. தாயகத்தில் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், காந்தி நிலையம், குருகுலம், இனியவாழ்வு இல்லம், வெற்றிமனை, பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு மையங்கள், முன்பள்ளிகள், தொழில்சார் பயிற்சிநிலையங்கள், சத்துணவு நிலையங்கள் போன்ற பல சமூகநலத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அவற்றில்கால்கள் இழந்தவர்களுக்கு செயற்கைக் கால்களைப் பொருத்தும் ‘வெண்புறா’ திட்டமும் ஒன்றாக இருந்தது. இத்திட்டங்கள் அனைத்தும் சர்வதேச அளவில் இயங்கி வந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கிளைகளுக்கு, அந்தந்த நாடுகளில் உள்ள கிளைகளின் விருப்பத்திற்கேற்ப பொறுப்பளிக்கப்பட்டன. நான் வசித்த யேர்மனியில், உரிய நேரத்தில் விண்ணப்பம் அனுப்பப்படாத காரணத்தால், யேர்மனிக் கிளைக்கு மன்னார் மாந்தை மேற்கு குடியேற்றத் திட்டத்துடன்‘வெண்புறா’ திட்டமும் ஒதுக்கப்பட்டது. ஆனால் ‘வெண்புறா’ திட்டத்தில் யேர்மனிக்கிளைத் தொண்டர்களுக்கு ஆரம்பத்தில் பெரியளவில் ஆர்வம் இருக்கவில்லை. அப்போது வன்னியில் அலுமினியத் தகரத்தில் செய்யப்பட்ட, மடிக்க முடியாத செயற்கைக்கால்களே தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அவற்றுடன் இயல்பான நடை சாத்தியமில்லாது, இழுத்து இழுத்தே நகரவேண்டியிருந்தது. மாற்று வழிகளை ஆராய்ந்தபோது, யேர்மனியத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் பைபர்கிளாஸ் செயற்கைக் கால்களை அங்கு அறிமுகப்படுத்துவது, சாத்தியப்படுமா என்ற யோசனை எழுந்தது. ஆனால் இது செலவான முயற்சி. மூலப்பொருட்கள், பயிற்சி, நிபுணத்துவம் ஆகியவை இதற்கு அவசியம். இந்த விவகாரம் யேர்மனி தமிழர் புனர்வாழ்வுக் கழக கிளைப் பொறுப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரது முயற்சியால், இந்தத் துறையில் நிபுணரான ஹொல்கர் என்பவர் எங்களுக்கு உதவ முன்வந்தார். ஒரு யேர்மனியரை வன்னிக்கு அழைத்துச் செல்வது, அதற்காக சிறீலங்கா அரசின் அனுமதி பெறுவது, குறைந்தது ஒருமாதம் அங்கே தங்கி பயிற்சி வழங்குவது இவை அனைத்தும் போர்நிலைச் சூழலில் பல அபாயங்களைக் கொண்டிருந்தன. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் இருந்தது. எனவே நாட்டில் அமைதியான சூழல்உருவான பின் இந்த முயற்சியை நடைமுறைப்படுத்துவோம் என்று முடிவு செய்து, இடைக்காலமாக மாந்தை மேற்குகுடியேற்றத் திட்டத்தில் கவனம் செலுத்தினோம். 2002ஆம் ஆண்டு சூழல் மாறியது. சமாதானப் பேச்சுவார்த்தைகள், போர்நிறுத்தம் போன்ற மாற்றங்கள் நம்பிக்கையை உருவாக்கின. 2002 மே மாதத்தில், ஹொல்கருடன் வன்னிக்குப் பயணம் மேற்கொண்டோம். போர்நிறுத்தம் ஆரம்பித்த சில நாட்களுக்குப் பின்னர் நாங்கள் போனபோது பல சிரமங்களை எதிர்கொண்டபோதிலும், பயணம் நிறைவேறியது. யேர்மனிய தொழில்நுட்ப முறையில் அளவெடுத்து, உடல் நிலையை கருத்தில் கொண்டு, முதுகெலும்பு பாதிப்பு ஏற்படாதவகையில் வடிவமைக்கப்பட்ட முதல் செயற்கைக் கால் ‘வெண்புறா’ நிறுவனப் பொறுப்பாளர் வீரனுக்கு பொருத்தப்பட்டது. இந்த முயற்சி குறித்து கொழும்பிலிருந்து வெளிவந்த ஆங்கிலப் பத்திரிகையிலும் செய்தி வெளியானது. இந்தியப் பத்திரிகையாளர்களும் அதைப்பற்றி குறிப்பெடுத்துச் சென்றனர். அந்தவேளை, இரண்டு கைகளையும் இழந்திருந்த ஒரு பெண்ணுக்கு செயற்கைக் கைகள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எங்களுக்கு வன்னியில் எழுந்தது. ஒரு கை பொருத்துவதற்கே 30 முதல் 35 ஆயிரம் யூரோ வரை செலவாகும். அத்தோடு கணினிவழிப் பயிற்சியும் அவசியம் என்பதால், தொடர்ச்சியாக பல தடவைகள் தான் வரவேண்டும் என ஹொல்கர் சொன்னார். செலவுகள் அதிகமாக இருந்தாலும், கால்களுடன் சேர்த்து கைகளையும் பொருத்தும் திட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்தோம். எனது வேலை நிமிர்த்தம் அடிக்கடி வன்னிக்கு வர இயலாது என்பதால், யேர்மன் மொழி அறிந்த ஒருவர் அவசியம் தேவை என்று சொன்னேன். அவர்கள் தங்களிடம் யேர்மனிய மொழி தெரிந்த ஒரு இளைஞன் இருப்பதாகவும் அவரை அனுப்பி வைப்பதாகவும் சொன்னார்கள். அந்த இளைஞனுக்கு ஹொல்கர் தனது நிலையத்தில் ஐந்து மாதங்கள் முழுமையான பயிற்சி அளித்தார். வன்னியில் யேர்மனியத் தொழில்நுட்பத்தில் செயற்கைக் கால் பொருத்தும் திட்டம் குறித்த செய்திகள் பத்திரிகைகளிலும், வானொலிகளிலும், இணையத் தளங்களிலும் வெளிவந்து கொண்டிருந்தன. அந்த நேரத்தில், ஜபிசி இலண்டன் வானொலியில், வன்னியில் செயற்கைக் கால் பொருத்தும் திட்டத்தை இலண்டன் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் ஊடாக, தான் முன்னெடுக்க இருப்பதாக மாமனிதர் டொக்டர் சத்தியமூர்த்தி அறிவித்தார். இந்தச் சம்பவங்களை நினைவுகூரும்போது, பட்டங்களையும் புகழ்ச்சிகளையும் தாண்டி, அந்நேரத்தில் பலரின்அமைதியான உழைப்பும், தொழில்நுட்பம் மற்றும் மனிதநேயத்தை இணைக்க முயன்ற சிலர் எடுத்த சவாலான முடிவுகளும்தான் மனதில் முதலில் தோன்றுகின்றன. வரலாற்றைப் பேசும் போது, அந்தப் பின்னணியையும் மறக்காமல் நினைவுகொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.1 point- மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
எனது பேரனின் சில செய்கைகள் அல்லது பேச்சுக்கள் எனக்கு அதிசயமாக ஆச்சரியமாக இருக்கும். ஒரு நாள் வெளியே தோட்டத்தில் நின்று விட்டு வெயில் அதிகமாக இருந்ததால் வீட்டில் வரவேற்பு அறையில் இருந்தேன். அவன் தொலைக்காட்சியில் கார்ட்டூன் காணொளி ஒன்றை பார்த்துக் கொண்டு இருந்தான். நான் சோர்ந்து போய் இருந்தது அவனுக்கு தெரிந்து இருக்கவேண்டும். என்னைப் பார்த்து தாத்தா களைக்குதா? ஏதாவது வருத்தமா?? நித்திரை கொள்ளபோகிறீர்களா??? என்று இந்த மூன்றையும் ஒரே வசனத்தில் கேட்டான். நான் அதிர்ந்து போனேன். ஏனெனில் அவனுக்கு அப்போது இரண்டு வயது தான். அவனுக்கு பிறந்த நாள் வந்தது. பல கடைகளுக்கும் சென்று பார்த்தபோதும் அத்தனை பொருட்களும் அவனது அறையில் கண்டவையாகவே இருந்ததால் ஒன்றையும் வாங்கவில்லை. பிறந்த நாள் அன்று உனது உண்டியலை கொண்டு வா என்று பத்து ஈரோ தாள்களில் பத்தை கையில் எடுத்து வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக உண்டியலுக்குள் போட சொல்லி கொடுத்துக்கொண்டே இருந்தேன். ஐந்தாவது தாளை உண்டியலுக்குள் போட்டவன் என்னை பார்த்து கேட்ட கேள்வி எனக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. உங்களுக்கு வேற காசு பொக்கற்றில் இருக்கா தாத்தா என்று கேட்டான். ஓம் இருக்கு என்றதும் அப்படியானால் மிச்சத்தையும் போடுவோம் என்றான். இதை சொல்லும் போது அவனுக்கு மூன்று வயது தான். எனது கடைக்கு பக்கத்தில் எனது கார் நிற்பாட்டும் இடம் நிலத்தில் கீழே உள்ளது. அதற்கு செல்லும் கதவு திறந்து மேலே சென்று தான் உள்ளே போகணும். ஒரு நாள் அவனுடன் காரை எடுக்க சென்ற போது அவசரமாக செல்ல வேண்டி இருந்ததால் கதவு மேலே செல்வதற்கு முன் தலையை குனிந்து செல்ல முயன்றேன். எனது கையை பிடித்து பின்னுக்கு இழுத்தபடி சொன்னான் நீங்க தலையை குனியக்கூடாது தாத்தா என்று. எனக்கு தூக்கி வாரி போட்டது. இதை சொல்லும் போது அவனுக்கு மூன்றரை வயது தான். ஒரு நாள் மத்தியானம் சாப்பிட்டு விட்டு கொஞ்சம் கண் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தேன். தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த எனது மனைவி பேரனிடம் தாத்தாவை எழுப்பி விடு எனக்கு அவரது உதவி தேவை என்று சொல்வது எனக்கு கேட்டது. அதற்கு அவன் சொன்ன பதில் என்னை கண் கலங்க வைத்தது. தாத்தா கனக்க நல்லது செய்து விட்டார். இனி அவரை தொந்தரவு செய்யாதீர்கள். அதைவிட முக்கியமானது இனி ஏதாவது தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள் என்றான். இந்த கடைசி வரிகளை என் பிள்ளைகள் கூட இதுவரை சொன்னதில்லை. மனைவி பேரனிடம் வந்து உதவி செய்ய சொல்லி கேட்ட அத்தனை உதவிகளையும் அவனே செய்தும் கொடுத்து விட்டு வந்தான். இதை சொல்லும் போது அவனுக்கு நான்கு வயது தான். எனக்கு இவை மிகவும் அதிசயமாக இருக்கிறது. எனது அம்மாவுக்கு ஐந்து பெண்பிள்ளைகளின் பின்னர் தான் நான் பிறந்தேன். அதனால் என்மீது அதீத பாசம் உண்டு அவருக்கு. எனது மனைவி சொல்வார். எனது தாயார் இறந்த அடுத்த கிழமை எனது மகள் தனது வயிற்றில் ஒரு அசைவு இருப்பதை உணர்ந்ததாக சொன்னாளாம். (எனக்கு மறு பிறப்பு மற்றும் அடுத்த பிறவியில் நம்பிக்கை இல்லை.)1 point- கறையான் புற்று
1 pointநன்னிச்சோழன், இது யாழ் 28 அகவைக்காக எழுதியது. “வெண்புறா’ திட்டத்தின் செயற்பாடுகள் மற்றும் பயண அனுபவங்களை 2015இல் பொங்கு தமிழில் எழுதியிருந்தேன். இப்பொழுது அந்தத் தளம் இல்லை. கிருபன் அவற்றை யாழ் இணையத்தில் பதிந்து வைத்திருக்கின்றார். அதற்கான லிங்கை கீழை இணைத்திருக்கின்கேன்1 point- பயோடேட்டா - எம் ஏ சுமந்திரன்
1 pointபெயர்: சுமந்திரன் நண்பர்களுக்கு: சுமா எதிரிகளுக்கு: ஏப்ரஹாம் அலர்ஜி: ஒற்றுமைக்கு விவசாயம்: கமெராவுக்கு முன் போராட்டம்: காணி விடுவிப்பு அறிவித்த பின் வெறுக்கப்படுவது: பெரும்பான்மை தமிழர்களால் விரும்பபடுவது: சிறுபான்மை முஸ்லிம்களால் படித்தது: நாவன்மை படிக்காதது: நாவடக்கம் எப்போதும் செய்வது: எல்லோரிடமும் சண்டை இதுவரை செய்யாதது: இனத்துக்கு நன்மை வாழ்நாள் சாதனை: தமிழரசுக்கு அந்தியேட்டி வாழ்நாள் வேதனை: கடந்த தேர்தல் அநேகம் பயன்படுத்துவது: சாணக்கியனை தேவைபட்டால் பயன்படுத்துவது: சிவஞானத்தை நீண்ட நாள் ஏக்கம் : பிரதமர் பதவி அண்மைய கடுப்பு: முன்னாள் எம்பி அண்மைய வெற்றி: பதில் செயலாளர் தந்திரம்: தமிழரிடம் மட்டும் பிரயோகிப்பது இராஜதந்திரம்: கிலோ என்ன விலை? கிள்ளு கீரை: புலம்பெயர் தமிழர் ஓடில்லாத கூரை: ஏக்கிய ராஜ்ய தீர்வு மறக்கடிக்க முனைவது: இனப்படுகொலை விசாரணையை மறக்க முடியாதது: கெளசல்யாவின் வாக்கு எண்ணிக்கைய இந்தியப் பாசம்: சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஆரம்பித்தது இலங்கை பாசம்: கொழும்பு ரோயல் கல்லூரியில் ஆரம்பித்தது வாழ்க்கைக்கு: கொழும்பு வாழ்வாதாரத்துக்கு: யாழ்ப்பாணம் எதிரிகளின் ஆயுதம்: சமயம் நான் எடுக்கும் கேடயம்: சமயம் அழைத்வருக்கே ஆப்பு: சம்பந்தன் அழைத்தவரே ஆப்பு: விக்னேஸ்வரன் பிடித்த திசை: வடக்கு பிடித்த படம்: முதல்வன் முணுமுணுக்கும் பாடல்: ஒண்ணா இருக்க கத்துகணும் அல்ல பஞ்ச் டயலாக்: ஐ வில் சீ யூ இன் கோர்ட்1 point- பயோடேட்டா - அனுர குமார திசாநாயக்க
பெயர்: அனுர வேறு பெயர்: அரவிந்த, தமிழருக்கு சேர் பழைய தொழில்: கச்சான் விற்பது புதிய தொழில்: கஞ்சா விற்பது அல்ல அப்போது: பொதுவுடமைவாதி தற்போது: தேசியவாதி எப்போதும்: இனவாதி நம்புவது: பெளத்தாகமத்தை நம்பாதது: தமிழர்களை, முஸ்லிம்களை பழைய நண்பர்கள்: சந்திரிக்கா, மகிந்த, பசில், கோட்டா, விமல், டக்லஸ், கருணா, பிள்ளையான் புதிய நண்பர்கள்: இந்தியா, அமெரிக்கா பழைய எதிரிகள்: இந்தியா, அமெரிக்கா புதிய எதிரி: டில்வின் சில்வா எப்போதும் எதிரிகள்: தமிழர் உரிமையை கோருவோர், ரணில் பிடித்த டிவி சீரியல்: சித்தி பிடிக்காத படம்: மேட்டுக்குடி ஆர்ப்பாட்டமாய் செய்வது: யாழில் நடைபயிற்சி அமசடக்கமாய் செய்வது: வவுனியாவில் குடியேற்றம் அகற்றபடக்கூடாது: தமிழர் நிலத்தில் - புத்தர் சிலை அகற்ற பட வேண்டியது: தமிழர் மனதில் -சமஸ்டி நீண்டகால சாதனை: வடக்கு கிழக்கு பிரித்தது குறுகிய கால சாதனை : வடக்கில் 3 எம்பிக்களை பிடித்தது ஶ்ரீதரன் மறக்க கூடாதது: பார் லைசனஸ் விசாரணையை தமிழர்கள் மறக்க வேண்டியது: போர்குற்ற விசாரணையை தியாகிகள்: ஆயுதம் ஏந்திய சிங்கள இளைஞர்கள். பயங்கரவாதிகள்: ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கள் இலங்கையில் இல்லாதது: டொலர் கையிருப்பு, இனப்பிரச்சனை இலங்கையில் இருப்பது: வர்க்க அடக்குமுறை எப்போதும் பெருமை: முள்ளிவாய்க்கால் அவலத்தை சேர்ந்து நடத்தியது ஒருபோதும் வருந்தாதது: முள்ளிவாய்க்கால் அவலத்தை சேர்ந்து நடத்தியது மிரட்டினால் பணிபவர்: ஶ்ரீதரன் மிரட்டாமலே பணிபவர்: சந்திரசேகரன் நிரந்தர தலைவலி: சிங்கள வாக்காளர் ஒரே நிம்மதி: தமிழ் அனுர காவடிகள்1 point- தமிழனின் சிற்பக் கலை.
- அப்பிள்போன் வேணும் தம்பி….
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.