Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. இந்தக் கதை எனது ‘நெஞ்சில் நின்றவை’ பதிவுகளில் வெளிவந்ததுதான். கோபிசங்கர் எழுதியிருக்கும் ‘தண்டனையே குற்றம்’ https://yarl.com/forum3/topic/301723-தண்டனையே-குற்றம்-t-gobyshanger/ இந்த நினைவை எனக்கு மீண்டும் நினைவூட்டியிருக்கிறது 1968, ஒன்பதாவது வகுப்பு. இரசாயனவியல் ஆசிரியரான பொன்னம்பலம் மாஸ்ரர்தான் எங்களது வகுப்பாசிரியராகவும் இருந்தார். அதுவும் ஒரு சில மாதங்களே. திடீரென அவருக்கு இடமாற்றம் வந்ததால் நல்லதொரு ஆசிரியரை இழக்கும் நிலை எங்களுக்கு. அவருக்கு பிரியாவிடை வைப்பதற்கு மேல் வகுப்பு மாணவர்கள் முடிவு செய்து 9, 10, 11, 12 விஞ்ஞான வகுப்பு மாணவர்களிடம் தலைக்கு இரண்டு ரூபா (அப்போதெல்லாம் இரண்டு ரூபா என்பது பெரிய காசு) வாங்கிக் கொண்டார்கள். இந்த பிரியாவிடை விடயத்திற்கு பொறுப்பாக இருந்தது 12வது படித்துக் கொண்டிருந்த மாணவர் தலைவன் ரவி. அவன் நாட்டில் ஒரு சட்டத்தரணியாகி, பருத்தித்துறை நகரபிதாவாக இருந்து சில வருடங்களுக்கு முன்னர் காலமாகிவிட்டான். ரவியின் தம்பி சபா எனது வகுப்பில்தான் படித்துக் கொண்டிருந்தான். ஆதலால் இந்த பிரியாவிடை விடயம் எங்களது வகுப்பிலும் தடல் புடலாகப் பேசப்பட்டது. பிரியாவிடை நிகழ்ச்சிக்கு சில வாரங்களுக்கு முன்னால் அதிபர் தங்கராஜா மாஸ்ரரிடமிருந்து நிகழ்ச்சிக்கான அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மாணவர்களிடம் ஒரு குழப்பமான சூழ்நிலை. இதில் முன்ணணியில் செயற்பட்டு வந்த ரவி, சபா இருவருக்கும் தன்மானப் பிரச்சினை. பாடசாலை பிரியாவிடை செய்வதால் மாணவர்கள் தனியாக பிரியாவிடை நிகழ்ச்சி நடத்தத் தேவையில்லை என்பது அதிபரின் வாதம். மாணவர்களிடம் நிதி வசூலித்த பின்னால் நிறுத்த முடியாது என்பது மாணவர் தலைவரது கருத்து. இவர்களுக்கு நடுவில் பாவம் மாணவர்களாகிய நாங்கள். பிரியாவிடை நிகழ்ச்சியை மாணவர்கள்தான் நடத்த வேண்டும் என்பதில் ரவி பிடிவாதமாக இருந்தான். அவனுக்குப் பின்னால் சில ஆசிரியர்களும் இருந்தார்கள் என சாடைமாடையாக சிலர் பேசிக் கொண்டார்கள். அதிபர் தங்கராஜா மாஸ்ரரோ அமைதியாக இருந்தார். மாணவர்களிடம் வசூலித்த பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுத்து விடவேண்டுமென அதிபரிடமிருந்து இறுதி அறிவிப்பு வந்தது. எனக்கு மனதுக்குள் சந்தோசம். பிரியாவிடைக்கு அம்மாவிடமிருந்து பணம் வாங்கியாயிற்று. பணம் திருப்பித் தரப்பட்டால் அதை எனது வேறு தேவைக்குப் பயன் படுத்தலாமென கணக்குப் போட்டுக் கொண்டேன். நிகழ்ச்சி நிறுத்தப்பட்ட விசயம் அம்மாவுக்கு எங்கே தெரியப் போகிறது? கணக்குகள் எப்பொழுதும் சரிவராது. நான் போட்ட கணக்கும் தப்பாகப் போயிற்று. ஒருநாள் மாணவர் தலைவரிடமிருந்து ஒரு சுற்றறிக்கை வந்தது. “அதிபர் தங்கராஜா மாஸ்ரர் எங்களது நிகழ்ச்சியை மறுப்பதால் கச்சேரியிலுள்ள கல்வித் திணைக்களத்தில் இது விடயமாக முறைப்பாடு செய்ய உள்ளோம் ஆகவே நாளை காலை எட்டு மணிக்கு விஞ்ஞான வகுப்பு மாணவர்கள் பாடசாலை முன்னால் கூடவும். போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவரும் போக்குவரத்துக்கான செலவாக ஒரு ரூபா கொண்டு வரவும்” அநேகமான மாணவர்கள் ரவியின் பின்னால் நின்றார்கள். போதாதற்கு சபா எனது வகுப்பிலிருந்து எல்லோருக்கும் உரு ஏத்திக் கொண்டிருந்தான். ஆகவே இவர்களது பேச்சுக்கு எடுபடுவது தவிர வேறு மார்க்கம் எனக்கிருக்கவில்லை. முதலில் அம்மா இந்த விடயத்துக்கு ஒத்துவரவில்லை. ஆனாலும் எனது வகுப்பு மாணவர்கள் எல்லோரும் பங்கு கொள்வதை அறிந்த பின்னரே ஒரு ரூபா தந்தார், அதுவும் மனமேயில்லாமல். கச்சேரிக்கான பயணம் பாட்டுக்கள் துள்ளளுடன் மகிழ்வாக இருந்தது. கச்சேரி வாசலில் எங்கள் வண்டிகள் மறிக்கப்பட்டன. வாசலிலேயே நாங்கள் கொண்டு போன புகார் வாங்கப்பட்டது. “உடனடியாக எல்லோரும் பாடசாலை திரும்ப வேண்டும்” என கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டோம். தங்கராஜா மாஸ்ரருக்கு கச்சேரியிலும் அதிக செல்வாக்கு இருந்தது பின்னர்தான் தெரியவந்தது. எது எப்படியோ எனது முதல் போராட்டம் மூன்று ரூபாக்கள் நட்டத்துடன் தோற்றுப் போனது. அடுத்தநாள் வகுப்பறை கரும்பலகையில் எழுதப்பட்டிருந்தது. ‘நேற்று பாடசாலைக்கு வரரத மாணவர்கள் அதற்கான காரணத்தை பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் இருந்து எழுத்து மூலமாகப் பெற்று அதிபரிடம் சமர்ப்பித்து அதன் பின்னரே வகுப்பறைக்கு வரவும்’ பாண்டிய மன்னனின் பிரம்படியை விட தங்கராஜா மாஸ்ரரின் பிரம்படி எப்படியிருக்குமென்று அந்த சிவனுக்கே தெரியும். நெருப்பில் சுட்டு நுனி கறுத்திருந்த பிரம்பு நினைவில் வந்து கலக்கியது. எல்லோரையும்விட அதிகமாகக் கலங்கிப் போயிருந்தது ரவியும், சபாவும்தான். எல்லோரும் ரவியின் வீட்டில் கூடினோம். தனது மகனால்தான் இவ்வளவும் என்பதை அறிந்து ரவியின் தந்தை எங்களுக்கு உதவ வந்தார். அவர் தங்கராஜா மாஸ்ரரை அவரது இல்லத்தில் சந்தித்து எங்களுக்காக கதைத்துப் பார்த்தார். பாடசாலைக்கு வரமுடியாமற் போனதற்கான காரணத்தை எழுத்து மூலமாக ஒவ்வொரு மாணவரும் சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் தங்கராஜா மாஸ்ரர் உறுதியாக இருந்தார். சரி ஏதாவது ஒரு காரணத்தை எழுதி கொண்டுபொய்க் கொடுங்கள். பிரச்சினை வராது என்று ரவியின் தந்தை உறுதி தந்தார். இது விசயமாக வீட்டில் கேட்டால் அங்கேயும் பூசை நடக்குமென்பதால் நாங்களே கடிதங்களைத் தயாரித்துக் கொண்டோம். எனது அம்மம்மா காலமாகிவிட்டார் என்று எனக்கான காரணத்தைக் குறிப்பிட்டு கடிதம் எழுதிக் கொண்டேன். அடுத்தநாள் கடிதங்களுடன் மண்டபத்தில் கூடினோம். மண்டபதின் ஒரு வாசலினூடகத்தான் அதிபரின் அறைக்குச் செல்ல வேண்டும். நான்கு நான்கு பேராக உள்ளே அழைத்தார்கள். துணிவுள்ளவர்கள் (இல்லையென்றாலும் இருப்பதாகக் காட்டிக் கொண்டு) முன்னுக்குப் போனார்கள். உள்ளே போனவர்கள் பிறிதொரு வாசலினூடக அனுப்பப் பட்டுக் கொண்டிருந்தார்கள். எனது முறை வந்தது உள்ளே போனேன். என்னுடன் சங்கர், முகுந்தன், நடராஜா ஆகியோரும் உள்ளே வந்தார்கள். முறிந்து சிதறிய பிரம்புத் துகள்கள் நிலத்தில் இருந்து பயமுறுத்தின. தங்கராஜா மாஸ்ரரைப் பார்க்கும் துணிவில்லை. முகத்தை எவ்வளவு பாவமாக வைத்திருக்க முடியுமோ அப்படி வைத்திருந்தேன். கிளாக்கர் வந்து எங்களிடமிருந்து கடிதங்களைப் பெற்றுக் கொண்டார். என்ன எழுதியிருக்கு? சிங்கம் கர்ஜித்தது. நாலு பேருக்கும் அம்மம்மா செத்துப் போச்சாம் கிளாக்கர் ஏளனமாகச் சொல்லி விட்டு கடிதங்களை மேசையில் வைத்தார். பரீட்சையில்தான் பார்த்து எழுதுவார்கள் என்று சொல்வார்கள். கடிதத்தில் உள்ள காரணத்தையும் பார்த்து எழுதியதை அன்றுதான் பார்த்தேன். தங்கராஜா மாஸ்ரர் கிளாக்கரை நோக்கி கண் அசைத்தார். சுவரைப் பார்த்தபடி நால்வரும் நிறுத்தப் பட்டோம். குனிந்து கால் பெருவிரலை கைகளினால் பிடிக்கும் வண்ணம் பணிக்கப்பட்டோம். நாலுபேருக்கும் ஒரே அம்மம்மாவா? வேறை வேறையா? தங்கராஜா மாஸ்ரர் கேட்பது கேட்டது. அதுக்குப் பிறகு எதுவுமே நினைவில்லை. சுளீர், சுளீர் என்று பிற்பக்கத்தில் பிரம்பின் இரண்டு இழுவைகள். தண்ணீரில் இருந்து வெளியில் போட்ட மீன் கூட என்னளவுக்குத் துள்ளியிருக்காது. வகுப்பறைக்கு வந்தால் எனக்கு நாலு, எனக்கு மூன்று , எனக்கு இரண்டு என்று ஆளாளுக்குப் பேசிக் கொண்டார்கள். பேசும் நிலையில் நானில்லை. மூன்று ரூபா கொடுத்து இரண்டு சுளீர் வாங்கிய கெட்டித்தனத்தைப் பற்றி பேச என்னயிருக்கிறது?
  2. வழமைபோல் அழகாக எழுதியிருக்கிறீர்கள் கோபி சங்கர். வாழ்த்துக்கள் அறுபதுகளில் ஆசிரியர் என்றால் சிம்ம சொப்பனம். நெருப்பால் சுட்டு நுனி கருகியிருக்கும் பிரம்புடன் ஆசிரியர் வகுப்பறைக்குள் நுளையும் போதே நடுங்கத் தொடங்கிவிடும். தொண்டை வரண்டு விடும். ஆறாம் வகுப்பு படிக்கும் போது சுப்பிரமணிய வாத்தியாரின் (ஆள் கரவெட்டி என்று நினைக்கிறேன்) நேரமும் வேலையும், நேரமும் தூரமும் கணக்கில் நிறைய வாங்கியிருக்கிறேன். ஏழாம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் வைரமுத்து மாஸ்டரிடம் வாங்கியிருக்கிறேன். வைரமுத்து மாஸ்டரின் தண்டனை வேறு விதமாக இருக்கும். பென்சிலை காதின் சோணையுடன் சேர்த்து அழுத்துவார். வேதனை தாங்காமல் கால் பெருவிரலில் எம்பி நின்றாலும் விட மாட்டார். ஒன்பதாம் வகுப்பில் அதிபர் தங்கராஜா மாஸ்டரிடம்…… எந்த ஆசிரியர் அடித்தாலும் வீட்டில் சொல்வதில்லை. அங்கேயும் அடி விழும். ஆனாலும் ஆசிரியர்களின் மேல் ஒரு மரியாதை இருந்தது. ஏற்றி வைத்த ஏணிகள்.
  3. உங்களுக்கு அங்கிள் வயது என்பதால் அன்ரிமார்களைத்தான் ரசிக்க முடியும். இப்படியான படத்துக்குப் போனால் பலதையும் ஆற அமர்ந்து இரசிக்க முடிகிறது. அதற்காகத்தானோ இப்படியான படங்களை எடுக்கிறார்கள்.
  4. விடுமுறையே இல்லாமல் தாய் வேலை செய்கிறாள் (Amber Egan) அம்பர் ஏகனுக்கு (33) மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். அவரின் டிக்டாக் வீடியோ பதிவொன்று இப்பொழுது வைரலாக இருக்கிறது. குடும்பப் பெண்ணாக வீட்டினில் இருக்கும் பெண்கள் செய்யும் வேலைகள் கூடுதலாகப் பேசப்படுவதில்லை. அவர்கள் செய்யும் வேலைக்கான சம்பளம் தரப்படாவிட்டாலும், அவர்களுக்கு அவர்களது வேலைகள் மதிப்புமிக்கது என்பதை உணர்த்துவதும், அது சம்பந்தமாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் தான் தனது நோக்கம் என அம்பர் தெரிவிக்கின்றார். ஒரு தாயாக, மனைவியாக தான் செய்யும் வேலையின் மதிப்பைக் கணக்கிட்டு அவர் தந்திருக்கும் ‘பில்’ கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு மூன்றாவது குழந்தைக்குத் தாயான அம்பர், வீட்டில் இருக்கும் பல அம்மாக்கள் எதிர்கொள்ளும் சவால்களை நன்கு அறிந்து வைத்திருக்கின்றார். "ஒரு குடும்பப் பெண், தனது நாள் முழுவதையும் குழந்தைகளுடன் செலவிடுகிறாள் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் வீட்டில் அவளுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கின்றன" என்று சொல்லும் அம்பரின் கணிப்பில், குழந்தைகள் மற்றும் வீட்டு வேலைகள் அனைத்திற்குமான செலவு வாரத்திற்கு சுமார் 2380 யூரோக்கள் ஆகும்! வீட்டு வேலைகள் செலவுகள் பாத்திரங்கள் கழுவுதல் 17,63 யூரோ ஒரு தடவைக்கு, நாளொன்றுக்கு இரண்டு- மூன்று தடவைகள் ஆடைகள் துவைத்தல் 30,85 யூரோ ஒரு தடவை (ஒரு கிழமைக்கு நான்கு தடவைகள்) குளியலறை 60,89 யூரோ ஒரு தடவை துப்பரவாகுதல் (கிழமைக்கு இரு தடவைகள்) தரை சுத்தப்படுத்தல் 88,15 யூரோ, நாளொன்றுக்கு இரண்டு தொடக்கம் மூன்று தடவைகள் பிள்ளைகளின் வீட்டுப் பாடத்துக்கு உதவுதல் 705,17 யூரோ ஒரு கிழமை குழந்தைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்வதும் பின்னர் கூட்டி வருவதும் 132,22 யூரோ ஒரு கிழமைக்கு கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்குவது 66,11 யூரோ ஒரு கிழமைக்கு சமையல் 44,07 யூரோ ஒருவேளை மதிய இரவு உணவு (கிழமைக்கு பத்துத் தடவைகள்) குழந்தைக்கு பாலூட்டுதல் 176,29 யூரோ கிழமைக்கு கூட்டுதல் 8,81 யூரோ ஒரு நாளைக்கு, (கிழமைக்கு ஐந்து தடவைகள்) நாகரீகம் கருதி அம்மணி சிலதைக் குறிப்பிடவில்லை என நினைக்கின்றேன். தன் கணவரிடம் அன்பான வார்த்தைகளைக் காண்பதால் தனது சேவைகளுக்குத் தான் அவரிடம் எதுவும் வசூலிக்க வேண்டியதில்லை எனவும் அம்பர் குறிப்பிட்டுள்ளார்.
  5. நன்றி Suvy. பென்சன் எடுத்தபின்னர் பொழுதைப் போக்குவதற்குப் பலவற்றை செய்ய வேண்டும் என்று கணக்குப் போட்டிருந்தேன். ஆனால் பென்சன் எடுத்த பின்னர் பொழுது போதாது என்ற நிலையில் இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பார்ப்பேன். கண்ணதாசன் பாடல்களுக்குள், தன் தனிப்பட்ட விடயங்களை அழகாக புகுத்தி இருப்பார். மறைமுகமாக சில விடயங்களைச் சொல்லியும் இருப்பார். ஒரு சொல்லை பெயர், வினைச் சொற்களாகப் பயன் படுத்தி இருப்பார். அவற்றை எல்லாம் முன்னர் நான் வாசித்திருக்கின்றேன். ஆனாலும் பலர் கண்ணதாசனின் பாடல்களுக்குள் தேடுதல் செய்து, தங்களுக்கு புரிந்ததை பதிந்து விடுவார்கள். அதை கண்ணதாசனே சொல்லியும் இருக்கின்றார். இதற்கு என் வாழ்வில் நடந்த ஒன்றை குறிப்பிடலாம். ஜபிசி வானொலி லண்டனில் தொடங்கிய நேரம். அங்கே எழுத்தாளர், விமர்சகர், கவிஞர் என பல திறமைகள் கொண்ட ஆசிரியர் அ.இரவி அறிவிப்பாளராக இருந்தார். அவர் எனது நண்பரும் கூட. ஒருநாள்,” பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா..” பாடலை ஒலிபரப்பி விளக்கமும் தந்திருந்தார். “பூஜைக்கு வந்த, பூஜைக்கு உவந்த , பூமிக்கு வந்த, பூமிக்கு உவந்த என்ற இரண்டு கருத்துக்கள் வரும் வகையில் கண்ணதாசன் பாடலை எழுதியிருக்கின்றார்” என்று அ.இரவி குறிப்பிட்டார். நான் அதை மறுத்திருந்தேன். “இது கண்ணதாசனின் கற்பனை கிடையாது. உங்கள் கற்பனை” என்று சொல்லியிருந்தேன். அவர் ஏற்கவேயில்லை. இந்தப் பாடலைப் பற்றி கண்ணதாசன் குறிப்பிட்டதைச் சொல்லலாம். “ இந்தப் பாடல் எம்ஜிஆருக்காக எழுதப் பட்ட பாடல் என பலர் நினைத்திருப்பார்கள். உண்மையில் இது எனக்காக எழுதப்பட்ட பாடல்” என கவியரசு கண்ணதாசன் குறிப்பிட்டிருந்தார். “தவளும் நிலவாம் தங்கரதம் தாரகை பதித்த மணிமகுடம் குயில்கள் பாடும் கலைக்கூடம் கொண்டது எனது அரசாங்கம்”
  6. உண்மைதான் வில்லவன். சமீபத்தில் கூட நடிகரும் ஓவியருமான சிவகுமார், “இந்தியாவில் ஓவியர்களாகப் பிறக்கக் கூடாது. பாவப்பட்ட ஐன்மங்கள்” என்ற கருத்துப்பட பேசியிருந்தார். இந்தியாவிலேயே இந்த நிலை என்றால் இலங்கையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஓவியர்களுக்கான சிறப்பு எங்களுக்கு (அதாவது எங்கள் நாட்டில் எப்பொழுதும்) விளங்காமற்தான் இருக்கிறது. பருத்தித்துறையில் தும்பளைக்குப் போகும் பாதையில் சிவபாதம் கடை ஒன்றிருந்தது. படங்களுக்கு பிறேம் போடும் கடை அது. எனது ஓவிய ஆசிரியர் ஏ.மார்க் அவர்கள் படங்களை வரைந்து சிவபாதத்திடம் கொடுப்பார் அவரும் பிறேம் போட்டு கடையில் பார்வைக்கு வைத்திருப்பார். எப்போதாவது யாராவது திருமணம், குடிபுகுதல் போன்றவற்றுக்கு பரிசாகக் கொடுப்பதற்காக ஐந்து ரூபாக்கள் கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். அப்பொழுதே ஒரு இலங்கைத் தமிழ் ஓவியனின் படைப்பை ரசிக்கும் நிலையில் நாங்கள் இல்லை. இப்பொழுது மிக மோசம். நான் யேர்மனிக்கு வந்த நாட்களில் ஓவியக் கண்காட்சிகள் அதிகம் நடக்கும். இப்பொழுது அப்படியான கண்காட்சிகள் பற்றிய அறிவித்தல்களைக் காண்பதே அரிதாகிவிட்டது. ஓவியத்துக்கான உப பொருட்கள் வாங்கும் கடைகளே எனது நகரில் இல்லாமல் போயிற்று. எதுவும் வாங்க வேண்டுமானால் இணையத்தில்தான் வாங்க வேண்டியிருக்கிறது. எங்களது கற்பனைகளுக்கு, தேவைகளுக்கு ஏற்ப AIஇல் படங்களை பெற்றுக்கொள்வது இலகுவாக இருக்கிறது. எங்களுக்குத் திருப்தி தரும்வரை ஒன்றல்ல ஒரு நூறு படங்களை உருவாக்கச் சொல்லலாம். யாரிடமும் போய் கேட்காது தங்களுக்குத் தேவையான ஓவியங்களை அவரவர்கள் உருவாக்கிக் கொள்வது ஒரு கொடைதான். நீரோடு செல்லும் ஓடம் போல் நாங்களும் காலத்தோடு பயணிப்போம்.
  7. இது ஒருவகையில் உரிமை மீறல். வாடகைக்குக் கொடுத்துவிட்டு அவர்களின் செயல்களை கமராவில் கண்காணிப்பது ஏற்புடையதில்லை. யேர்மனியில் வீட்டை ஒருவருக்கு வாடகைக்குக் கொடுத்தால் , வாடகைக்கு இருப்பவர் அனுமதித்தால் மட்டுமே வீட்டின் உரிமையாளர் வீட்டுக்குள்ளே போக முடியும். நாங்கள் எங்கள் உரிமைக்காகப் போராடும் இனம் என்பதால் எங்களிடம் கூடுதல் தகுதி இருக்கிறதோ என்னவோ?
  8. செம்மண்ணிலே தண்ணீரைப்போல் உண்டான சொந்தம் இது சிந்தாமணி ஜோதியைப்போல் ஒன்றான பந்தம் இது தங்கை அல்ல தாயானவள் கோடி பாடல் அண்ணன் பாட பொருளானாள் ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
  9. சுமேரியரும், குமாரசாமியும் பென்சன் எடுத்துவிட்டு, நாட்டுக்குப் போய் காணியைத் துப்பரவாக்கி ரஜினி மிளகாய்த் தோட்டம் வைக்க ஆலோசனைகள் செய்து கொண்டிருப்பதைக் ‘நானும் ஊர்க்காணியும்’இல் வாசித்ததன் பின்னர், எனக்கு இந்தச் செய்தி வாசிக்கக் கிடைத்தது. அலெக்ஸாண்ட்ரா ஹில்டெபிராண்ட்டுக்கு இப்பொழுது 66 வயது. அவருக்கு மார்ச் 19ந் திகதி பெர்லினின் சாரிடே மருத்துவமனையில் பத்தாவது குழந்தை பிறந்திருக்கின்றது. பத்துப் பிரசவங்களில் ஏழு பிரசவங்கள் சிசேரியன் மூலம் நிகழ்ந்திருக்கின்றன. அவரது முதல் (பெண்) குழந்தைக்கு தற்போது 45 வயது. மருத்துவராக இருக்கிறார். சரி எப்படி இதெல்லாம் உங்களுக்குச் சாத்தியமாயிற்று என்று அலெக்ஸாண்ட்ரா ஹில்டெபிராண்ட்டைக் கேட்டால், நான் மிகவும் “ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுகிறேன், ஒவ்வொரு நாளும், தவறாமல் ஒரு மணி நேரம் நீந்துவேன், இரண்டு மணி நேரம் ஓடுவேன். புகைபிடிப்பதில்லை. மது அருந்துவதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தியதில்லை” என்கிறார். ஏற்கனவே அலெக்ஸாண்ட்ரா ஹில்டெபிராண்ட்டுக்கு சிறு பிள்ளைகள் இருக்கிறார்கள். அத்துடன் இப்பொழுது பிறந்த குழந்தையையும் சேர்த்துக் கொண்டால் அலெக்ஸாண்ட்ரா ஹில்டெபிராண்ட்டுக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. 66வயது என்பது யேர்மனியில் பென்சனுக்குப் போகும் வயது. இந்த வயதில் அலெக்ஸாண்ட்ரா ஹில்டெபிராண்ட் செய்ய வேண்டிய வேலைகளைப் பார்த்தால் 6 ஏக்கர்களென்ன 60 ஏக்கர்களிலே கூட ரஜினி மிளகாய்த் தோட்டம் செய்ய குமாரசாமியால் முடியும் என்ற நம்பிக்கை வருகிறது. ஆனாலும் ஒன்றைச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. எனக்குத் தெரிந்த ஒருவருக்கு குமாரசாமிக்கு இருப்பது போன்று முழங்கால்ப் பிரச்சனை. அடிக்கடி மருத்துவ விடுமுறைகள் எடுத்துக் கொள்வார். வேலையிடத்தில் முகம் சுழிக்க,எதற்குத் தொல்லை என வேலையை விட்டு விட்டார். பதினெட்டு மாதங்கள் அவருக்கு Kranken Geld (Sick Pay) கிடைத்தது. அதேநேரத்தில் wassergymnastik (water gymnastics)க்குப் போகும்படி மருத்துவரும் மருத்துவக் காப்புறுதி நிறுவனமும் அவருக்கு அறிவுறுத்தினார்கள். முதற் கட்டமாக ஐம்பது தடவைகள் அவர் wassergymnastikக்குப் போக வேண்டியிருந்தது. ஒரு தடவை தவறினாலும் அதற்குக் காரணம் சொல்ல வேண்டும். அத்துடன் தவற விட்ட wassergymnastik பயிற்சிகளையும் அவர் செய்ய வேண்டியிருந்தது. பதினெட்டு மாதங்கள் முடிய Kranken Geld (Sick Pay) நிறுத்தப்பட்டு, இரண்டு வருடங்களுக்கு Arbeitslosengeld (Unemployment benefit) வழங்கினார்கள். அந்த இரண்டு வருடங்களும் முடிய Bürgergeld (Citizen's allowance) வழங்கத் தொடங்கினார்கள். ஆனால் இந்த Arbeitslosengeld (Unemployment benefit) வழங்கத் தொடங்கிய காலம் தொடக்கம் அவர்கள் அவரைச் சும்மா இருக்க விடவில்லை. முழங்காலில் வலி இருப்பதால், இருந்து செய்யும் வேலைகளைப் பரிந்துரைத்தார்கள். வேலை கிடைக்கும் வரை வேறு தொழில்கள் பயில Berufliche Fortbildungszenten (Vocational training centers)க்கு அனுப்பினார்கள். கணிணியில் கொஞ்சம் தெரியும், கணக்கும் நன்றாக வரும் என்று அங்கே அவர் சொல்ல அது சம்பந்தமான சில தொழில் கல்விகளை அவருக்குப் பரிந்துரைத்து, உங்களுக்கு விருப்பமானதைத் தெரிவு செய்யுங்கள் எனச் சொல்லியிருக்கிறார்கள். “அவசரப்பட்டு விட்டேனா?” என அவர் என்னிடம் கேட்டார். யேர்மனியில் பென்சன் எடுப்பது ஒன்றும் லேசான காரியமில்லை. குமாரசாமி தனது முழங்கால் நோவைக் காட்டி சீக்கிரமாகப் பென்சன் எடுக்க நினைத்தால் சற்றுச் சிந்திக்க வேண்டுகிறேன்.
  10. சந்தேகம் ஏன்? உங்கள் கற்பனையும் ஓவியமும் நன்றாகத்தான் இருக்கின்றது. தொடருங்கள்.👌
  11. கண்ணதாசன் திரைப்படங்களுக்கானக்கான வசனகர்த்தாவாக இருந்து பாடலாசிரியரானவர். அந்த நேரத்தில் பாபநாசம் சிவம், தஞ்சை ராமதாஸ், குமா. பாலசுப்ரமணியம், காமு ஷெரிப் போன்றவர்களே திரைப்படங்களுக்கு பாடல் எழுதிக் கொண்டிருந்தனர். அம்பிகாவதி படத்தின் தயாரிப்பாளர், பானுமதி பாட இருந்த பாடலுக்கு கண்ணதாசனை பாட்டெழுதக் கேட்டுக் கொண்டார். கண்ணதாசனை பானுமதிக்கு பெரியளவு தெரிந்திருக்கவில்லை. தான் நடிக்கும் படத்துக்கு கண்ணதாசன் பாடல் எழுதுவதை பானுமதி விரும்பவில்லை. அனாலும் மறுக்க இல்லை. கண்ணதசனுக்கு இந்த விடயம் தெரியவர பாடலில் முடிந்தளவு தன் திறமையைக் காட்டினார். அதிலும் அவர்எழுதிய, “பானுமதி மாறி வரும் வானகத்து மீனே பார்க்க உன்னை தேடுதடி கன்னி இளமானே..” வரிகளில் பானுமதி அசந்தே போய்விட்டார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.