Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்பிடித் தான் நடந்தது

Featured Replies

அழைப்பு மணி ஒலித்த பத்தாவது நிமிடம் கதவு திறக்கிறது. புலநாய்வில் கைதேர்ந்த சீலனிற்கு ஒரு தடவைக்கு மேல் மணி ஒலி எழுப்பும் அவசியம் இருக்கவில்லை. உள்ளே அவர்கள் இருக்கிறார்கள் என்பதும் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதும் மணியினை அமிழ்த்து முன்னரே அவனிற்குத் துல்லியமாய்த் தெரிந்திருந்தது. அதனால் கதவு திறக்கும் வரை பொறுமையாய்க் காத்திருந்தான்.


நிலா கதவினைத் திறந்தாள். பம்பாய் வெங்காயத்தின் மூன்றாவது அடுக்கின் நிறத்தில் அழகிய மென்மையான மேற்சட்டை அணிந்திருந்தாள். வெள்ளி நிறத்தில் பாதணிகள் அணிந்திருந்தாள். அவள் தொப்புளிற்கும் பாதணிகளிற்கும் இடைப்பட்ட பகுதியில் எந்த ஆடையும் இருக்கவில்லை. விமான ஓடுதளத்தில் பாதைதெரிவதற்காகப் பொருத்தப்பட்டிருக்கும் விளக்குகள் போன்று, அவளது பெண் குறிக்கு வழிகாட்டுவது போன்று அவளது பூப்பின் முடி சீராகப் பராமரகிக்கப்பட்டு மற்றைய இடங்களில் முடி அகற்றப் பட்டிருந்து. நிலாவின் முகத்தில் மழையில் நனைந்த நந்தியாவட்டை மலரின் குளிர்ச்சி இருந்தது. ஆனால் மழை ஓய்ந்த பின்னர் சிலிர்க்கும் இலை நீர் போன்று கண்ணீர் முற்றாகக் காயவில்லை.


பெற்றோள் தீர்ந்துவிட்டது, பெற்றோள் சாவடி செல்லும் வரைக்கான பெற்றோள் கிடைக்குமா எனக் கேட்பதற்காகத் தான் வந்ததாக, தெருவில் நின்ற தனது காரைக் காட்டி சீலன் கேட்டான். தேனீர் பருகுகிறாயா என நிலா கேட்டாள். முன்னறிமுகம் சற்றுமற்ற நிலா இத்தனை இயல்பாய் உபசரித்தது சீலனின் மூளையில் பதியவில்லை. அவளிற்கு அவனைத் தெரியாதிருக்கலாம் ஆனால் அவன் அவளைக் கடந்த மூன்று மாதங்களாக வேவு பார்க்கிறான். ஆதலால் பரிட்சயமானவளிடம் தேனீர் சம்மதித்தான்.


மாளிகையின் கூடத்தில் போடப்பட்டிருந்த விலையுயர் கதிரையில் அமர்ந்து சுவரில் இருந்த சித்திரத்தைச் சீலன் பார்த்துக்கொண்டிருந்தான். தேனீருடன் வந்தவள் அவனருகில் அமர்ந்து தேனீர் பரிமாறினாள். ஆடையற்றிருந்த அவளது பாகங்கள் எவர் கவனத்தையும் பெறவில்லை.

பென்ச்சமின் கண்ணைக் கசக்கிக் கொண்டு தூக்கம் முறித்தபடி கூடத்திற்கு வந்தான்.  சீலன் பெற்றோள் கேட்டு வந்திருப்பதாக நிலா சொன்னாள். வீட்டின் பின் பகுதியில் காலடி ஒலி கேட்டது. ஒரு ஆணும் பெண்ணும் கூடத்திற்குள் வந்தார்கள். அவர்கள் போதையில் இருந்தார்கள். நாற்பதுகளில் வயதிருக்கும். பெண் வெள்ளை நிறத்தில் மிருதுவான விலையுயர் ஆடை உடுத்தியிருந்தாள். அவள் ஒரு சீனப் பெண். அவன் குள்ளமாக இருந்தான். வெள்ளை முடி சவரம் செய்யப்படாது அவனது முககத்தில் இரு நாளின் கதைசொல்லிக் குத்தி நின்றது. குட்டை நரைமுடி அவன் மண்டையில். அவனது கண்களில் சோபை இல்லை. தனிமை அவற்றுக்குள் படர்ந்திருந்தது. சீனப் பெண்ணும் வந்தவனும் தம்பதியர் என நம்ப முடியாத தம்பதியராக இருந்தனர். சீலனிற்கு அவர்களைத் தெரியாது.


"எங்கிருந்து வருகிறாய்" என பென்ச்சமின் சீலனைக் கேட்டான். தான் ஒரு வியாபாரப் பயணத்தில் பாதை தவறவிட்டதனால் இவ்வழி செல்வதாயும், கன தூரம் பெற்றோல் நிலையமெதுவும் வரிவில்லை எனவும் கூறினான். "நீ கனடாவிற்குப் புதியவனா, ஆங்கிலம் தற்போது தான் கற்கின்றாயா" என்றான் பென்ச்சமின். சீலன் அவனிடம் உங்கள் தொலைபேசியில் ஒரு அழைப்பை மேற்கொள்ளலாமா என்றதும் பென்ச்சமின் சீலனிடம் தன் கைப்பேசியினைக் கொடுக்க, அதை வாங்கிய சீலன் இலக்கங்களை அழுத்துகிறான். பின் தமிழில் உரத்து யாருடனோ பேசத் தொடங்கினான்.


“ரெண்டுபேரும் நிக்கினம். ஆரோ ஒரு புதுச் சப்பைப் பெட்டையும் என்னண்டு சொல்லமுடியா ஒருத்தனும் எதிர்பாராமல் நிக்கிறாங்கள். போட்டுட்டு வெளிக்கிடவா” என்று கூறி, பதிலைக் கேட்ட பின்னர் தொலைபேசியினை பென்ச்சமினிடம் கொடுக்கிறான். பென்ச்சமினின் முகத்தில் வியர்வை ஊற்றெடுத்தது. அருகில் வந்த மற்றையவன் பென்ச்சமினின் கைப்பேசியினை வாங்கிப் பார்த்துவிட்டு, “இவன் சும்மா இலக்கங்களை அழத்தியிருக்கிறான் ஆனால் கோல் அடிக்கேல்ல. சும்மா நடிச்சிருக்கிறாண்ட்டா” என்கிறான். சீனப் பெண் கதிரையில் அமர்ந்து கொள்ள, பென்ச்சமினும் மற்றையவனும் சரளமாய்த் தமிமிழில் உரையாடுகிறார்கள். பின்:


“யார் நீ. உனக்கு என்ன பிரச்சினை. யுhரைப் போடப் போறாய். ஏங்க துவக்கு வச்சிருக்கிறாய்” என்று அடுக்கடுக்காய் பென்ச்சமின் சீலனைப் பார்த்துக் கேட்கிறான். சீலன் மற்றையவனைப் பார்த்து "உனது பெயரென்ன" என்கிறான். யாரும் ஆயுதம் எதனையும் எடுக்காதபோதும், சீலன் துப்பாக்கியினைப் பிடித்திருப்பது போன்ற தோரணையில் சீலனின் கேள்விகளிற்கு மற்றையவன் கண்ணுங்கருத்துமாய் ஒரு கதையினையே பதிலாககச் சொன்னான்:

"மட்டக்களப்புச் சொந்த ஊர். கில்பேர்ட் றையன் என்ற்ர பேர். அம்மா தமிழ். அப்பா பேகர். பின்ன நாங்கள் தமிழ் தான் கதைக்கிறது. அங்கையிருந்தால் இயக்கங்களில சேர்தாலும் எண்டிட்டு அனுப்பி விட்டாங்கள். பல நாடு அடிபட்டு பிறகு கனடா வந்தன். இஞ்சதான் இவவைக் கண்டது. இவ இஞ்ச தான் பிறந்த மூண்டாம் தலைமுறை. சைனாப் பாசை தெரியாது. இங்கிலிசில தான் நாங்கள் கதைக்கிறது. நாலு பிள்ளையள். மூத்த மூண்டும் பெட்டையள். கடைசி பெடியன். பெட்டையள் தாயோட தான் நெருக்கம். அவளவை என்னோட கொஞ்சம் தூரமாய்த் தான் இருக்கிறாளுவள். பின்ன கடையிப் பெடியரோட தான் நான் கதைக்கிறது. அவரிற்குக் கொஞ்சம் தமிழ் விழங்குது."


சீலனின் இதயத்தில் இரண்டுதலைமுறைத் தனிமை நுழைந்து அழுத்தியது. மட்டக்களப்புத் தமிழிச்சி பேகரைக் கட்டிப் பட்ட தனிமையும், கில்பேட் சீனாக்காறியைக் கட்டிப்பட்ட தனிமையும் சீலனிற்குள் உணரப்பட்டது.


நிலா தேனீருடன் உண்பதற்கு கேக் கொண்டு வந்து வைத்தாள். அவள் தொப்புள் முதல் பாதம் வரை ஆடையின்றி இருந்தமை எவரின் கவனத்தையும் பெறவில்லை.

“யார் தம்பி நீங்கள். என்ன நோக்கத்தில வந்திருக்கிறியள்” பென்ச்சமின் மீண்டும் கலவரத்துடன் சீலனைக் கேட்டான். சீலன் உறைந்த பார்வையினை பென்ச்சமின் மீது பொருத்தி நிலைகுத்தியிருந்தான்.

நிலா எழுந்து மீண்டும் சமயலறை நோக்கிச் சென்றாள். அவளது வலது பிட்டத்தில் குதிரை பச்சை குத்தப்பட்டிருந்தது.


ஒரு தோட்டா பெனச்சமனின் தலை புகுந்து வெளியேறி கூடத்தின் சுவரில் இருந்த சித்திரத்தின் கண்ணாடியினை நொருக்கியது.

நிலா நில்லாது நடந்து கொண்டிருந்தாள். சீலன் கதைவைத் திறந்து வெளியேறினான். கில்பேட் “பின்ன இவன் யார்? ஏன் சுட்டான்” என்று திருப்பத்திருப்ப ஈனக்குரலில் கேட்டபடி கதிரையில் அமர்ந்திருந்தான். சீனப் பெண், அலறியபடி கூடத்தைச் சுற்றிச் சுற்றிச் செக்குமாடு போல் ஓடிக் கொண்டிருந்தாள். 

இவன் யார்? ஏன் சுட்டான்.??

இந்த கேள்விகள் திரும்ப திரும்ப மனதில் ஒலிக்கும் படி செய்துவிட்டீர்கள். அதில் நீங்கள் வெற்றியும் கண்டுவிட்டீர்கள்.

 

நன்றி இன்னுமொருவன்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான துப்பறியும் நிகழ்வுகளை சந்திக்க இப்பொழுதே எம்மை தயாராக்கிக் கொள்கிறோம். தொடருங்கள்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் தீர்க்க முடியாத பழி வாங்கல் எல்லாம் கனடாவுக்கு வந்து தீர்க்கினம் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

Indie படம் மாதிரி கதை இருக்கு. “ஏன் சுட்டான்” என்பதை விட நிலா ஏன் தொப்புளுக்குக் கீழே ஒரு உடுப்பும் இல்லாமல் இருந்தாள் என்பது புதிராக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

Indie படம் மாதிரி கதை இருக்கு. “ஏன் சுட்டான்” என்பதை விட நிலா ஏன் தொப்புளுக்குக் கீழே ஒரு உடுப்பும் இல்லாமல் இருந்தாள் என்பது புதிராக இருக்கின்றது.

 

பணக்கார பெட்டையள் இப்படித் தான் உடுப்பு போடுறவை:rolleyes: தெரியாதோtw_cookie:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

 

பணக்கார பெட்டையள் இப்படித் தான் உடுப்பு போடுறவை:rolleyes: தெரியாதோtw_cookie:

பணக்காரருக்கு காசுப் பஞ்சமாக்கும்.?

33 minutes ago, கிருபன் said:

Indie படம் மாதிரி கதை இருக்கு. “ஏன் சுட்டான்” என்பதை விட நிலா ஏன் தொப்புளுக்குக் கீழே ஒரு உடுப்பும் இல்லாமல் இருந்தாள் என்பது புதிராக இருக்கின்றது.

 

துப்பறிவில் முடிச்சுக்கள் அவிளும்போது ஆடை அவிழ்ப்பின் நுண்ணியத்தை இன்னுமொருவன் திறமையாகக் கையாள்வார் என்ற அபாரித நாம்பிக்கை உள்ளது. (ளகர ழகர பிசறுகளை யாழ் வித்துவான்கள் பொறுத்தருள்க)

  • தொடங்கியவர்

அனைவரின் கருத்துக்களிற்கும் மிக்க நன்றி. இது தொடர்கதை அல்ல. கதை முடிந்து விட்டது. நானே பொழிப்புரை எழுதின் சரியாக இருக்காது. எனவே வாசகர் கையில் விட்டுவிடுகிறேன்.

இந்த வாரம் நான் சந்தித்த ஒரு விடயம் தந்த இன்ஸ்ப்பிறேசனை வைத்து ஒரு திரைப்படப் பாணியில் பதிவு. எப்போதும் போல, எழுத ஆரம்பித்ததும் மனதின் இடுக்களில் ஒளிந்திருந்த திட்டமிடாத சங்கதிகளும் தமக்கு ஏதுவான பந்திகளில் வந்து அமர்ந்து கொள்ளும். அது இங்கும் நடந்தது. மற்றையபடி ஒரு சந்திப்பு ஏற்படுத்திய அதிர்வு தான் இக்கதைக்கான காரணம். 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் நடந்தது என்பது சரி.

ஏன்தான் நடந்தது என்பதில்தான்குழப்பமாக இருக்கிறது.

ஒருவேளை சம்பவத்தை தெரிந்தவர்களுக்குப் புரிந்திருக்கும்

  • தொடங்கியவர்

குறிப்பு: தொடர்கதையினை உறவுகள் எதிர்பார்த்தமையினால், எவ்வாறு இந்தச் சிறுகதைக்குள் முடிவு சாத்தியம் என்ற கேள்வி பரவலாக எழுந்தது புரிகிறது. கதைக்குள் வைத்த சில வர்ணனைகள் கதையினை விளக்கியிருக்கும் என நினைத்தேன், ஆனால் அந்தக்குறியீடுகள் உரிய தெளிவினை அனைவரிற்கும் கொடுக்கவில்லை என்பதை உள்வாங்கிக் கொள்கிறேன். அதனால் வழமைக்கு மாறாக, சிறுகதைக்குச் சாத்தியமான ஒரு வாசிப்பை பின்னுரை ஆக்கிக் கொள்கிறேன். இது முழுவதும் கற்பனை.

ஒன்பது வயதில் சயமதீட்சை நடக்கவேண்டும் என்பதை சீலனின் அம்மாவும் அப்பாவும் அடுத்த கதைக்கு இடமின்றி நம்பினார்கள். 47நாட்கள் விரத அனுட்டானங்களுடன் சீலன் தீட்சை பெற்றுக் கொண்டான். புராணக் கதைகளிலும் சமய பாடங்களிலும் சொல்லப்பட்ட சித்தரிப்புக்களை சீலன் கேள்விக்கிடமின்றி ஏற்றுக் கொண்டிருந்தான். சுவர்க்கமும் நரகமும் சித்திரகுப்த்தனும் சீலனிற்குக் கேழ்விக்கிடமற்ற உண்மைகள்.

யாழ் இந்துவில் கல்வி சீலனிற்குப்; பொருத்தமாக இருந்தது. ஒன்பதாம் வகுப்பில் பத்தாம் வகுப்புச் சோதனை எடுத்து அதி சிறப்புச் சித்தியடைந்தமையினால், ஒரு வருடம் முன்பாக, தனியார் வகுப்புக்கள் வாயிலாகச் சீலன் உயர்தரம் கற்க ஆரம்பித்திருந்தான். மொத்தத்தில் பக்கத்துவீட்டுப் பையன்களின் அம்மாக்கள் உதாரணம் காட்டும் ஒருவனாக சீலனின் வாழ்வு ஆரம்பித்தது.

இடையில் தடம் மாறிப்போனது. சீலனின் அறம் மாறிக்கொண்டது. பாவம் புண்ணியம் என்பன சார்ந்து புதிய மனவமைப்பு அவனிற்குப் பயிற்சியானது. துப்பாக்கி அவனோடு ஒட்டிக்கொண்டது. அசாத்தியங்களைச் சாத்தியமாக்கிக் காட்டும் பணிகள் சீலனிடம் தெரிந்து கொடுக்கப்பட்டன. துப்பாக்கி விட்டு வெளியேறும் தோட்டா இலக்கைக் துளைத்து வெளியேறிச்செல்லும் அச்சை உணரும் அளவிற்கு அவனது தேர்ச்சி. அவனது பணிகள் ஒற்றைத் தோட்டாவிற்குரியனவாகப் பலசமயம் அமைந்தன. புகழின் மத்தியில் சீலனின் உயர்ச்சி.

தோட்டாவின் அச்சை உணரும் வல்லமை பெற்ற சீலனிற்குக் கனடா வந்துசேர்ந்த பாதை கனவு போல் இருந்தது. வந்துவிட்டோம் என்பது பல சமயங்களில் தெளிவற்ற உண்மையாக இருந்தது. நாளைக்குப் பதினாறு மணிநேரம் வேலை கிடைத்தது. ஊதியம் தேவைக்கு அதிகமாயிருந்தது. ஆனால் இன்னமும் எட்டு மணிநேரம் நரகமாய் இருந்தது. இரவு விடுதிகளில் விழித்திருந்தோரோடு சீலன் விழித்திருந்தான். அதிகபட்சம் இருமணிநேரம் தூங்கினான்.

அந்த நிர்வாண நடனகூடத்திற்குள் முதற்தடவை சீலன் எதேச்சையாய்ச் சென்றிருந்தான். அவன் எதிர்பார்த்திரா வண்ணம், கூட்டத்திற்குள் தனிமையாய் இருத்தல் அங்கு அவனிற்குச் சாத்தியப்பட்டது. வெளிச்சத்திற்குள் இருள் அவனிற்கு அங்கு கிடைத்தது. நாளாந்தம் வேலை முடிந்ததும் அம்மண்டபத்தில் அவன் பிரசன்னம் வாடிக்கையானது. அவனது கண் எங்கேனும் நிலைகுத்தியிருக்கும். உடல் உட்கார்ந்திருக்கும். ஆனால் மனம் இப்போதெல்லாம் அவன் பிடியில் இல்லை. ஏதேச்சையாய் ஒரு நாள் நிலாவின் பெயரறிவித்து நிலா கம்பத்தைப் பிடித்து நடனமாடியபோது, அவன் அடக்க முடியாது சிரித்தான். அதனால் மண்டபத்தில் இருந்து அன்றைக்கு அவன் அப்புறப்படுத்தப் பட்டான்.

கம்பத்தில் நிலா நிர்வாணமாய் ஆடியமை ஒரு குறியீடாய், அவன் வாழ்வை, அவனிற்கு மிக நெருக்கமாய் அவன் கட்டிக் காத்த பெறுமதிகளை அவன் முன் விரித்தமை தான் அவனது சிரிப்பின் காரணம். ஏறத்தாள அந்த நிர்வாண நடனத்தின் கணத்தில் அவனிற்குள் ஒரு கணநேர மாயையில் இருந்து நிர்வாணம். அதனால் அடக்கமுடியாத சிரிப்பு. ஆனால் வெளியில் தள்ளப்படுகையில் மீண்டும் உறைந்தபார்வை மீண்டு கொண்டது. அடுத்த நாளும் அதன் பின்னும் தொடர்ந்து அந்த மண்டபத்திற்கு வந்து கொண்டிருந்தான்.

—-

வழமை போன்றுதான் மூன்று மாதங்களின் முன்னொருநாள் வேலை முடித்து நேரடியாக மண்டபம் வந்திருந்தான். இரவு ஒன்பது மணியிருக்கும். இவனது உறைந்த பார்வையினை உருக்கிய காட்சி உள்ளேறி மறைந்தது. உறைவு முற்றாய் உருகிப் போனது. எங்கிருந்தோ ஒரு பழைய குவியம் உள்ளிற்குள் புகுந்து கொண்டது. தூசுபடிந்து கிடந்த றோபோட் ஒன்றிற்கு இயங்கும் கட்டழை எதிர்பாரா வண்ணம் கிடைத்ததுபோல் எழுந்து நின்றான். தன்னை உறைநிலை விட்டு மீட்டு வந்த கணநேரக் காட்சியின் நீட்சியினைத் தேடி மண்டபத்துள் நடந்து கண்டும் கொண்டான். தெளிவாகப் பார்க்கக் கூடிய கோணத்தில் ஒரு புதிய மேசையில் அமர்ந்து கொண்டான்.

தான் எத்தனை நாள் பின்தொடர்ந்த உயர் இலக்கு அது. அருகாய்ச் சென்றும் அணுகமுடியாது போன பழங்கணக்கு. அதைக் கண்ட மாத்திரத்தில் அவன் விட்ட இடத்தில் இருந்து இயங்கத் தொடங்கினான். 

அவர்கள் உட்காhந்;திருந்த மேசையினை வைத்த கண் வாங்காது பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவர்கள் கதைப்பதைக் கேட்கும் சக்த்தி மீண்டும் அவனிற்குள் எழுந்தது. புதிதாய் இருவர் அவர்களின் மேசைக்கு வந்தார்கள். ஒருத்தி நிலா. மற்றையவன் அம்மண்டபத்தின் உரிiமாயளன் என்பதைக் அவர்களின் அறிமுகம் கொண்டு அறிந்து கொண்டான். அப்போது தான் பென்ச்சமினை முதற்தடவை அவன் பார்த்தான். மண்டபம் மூடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னாய் இலக்கு பென்ச்சமினைத் தழுவி விடைபெற்றுச் சென்றது. தோட்டா அற்ற துப்பாக்கியாய் அவன் அமர்ந்திருந்தான். அன்றைய இரவு அமைதியாய் முடிந்தது.

—-

சீலன் பதினாறு மணி நேர வேலையினை எட்டுமணியாகக் குறைத்துக் கொண்டான். அவனிற்கு ஒரு துப்பாக்கி தேவைப்பட்டது. அதற்கான தேடல் ஒரு புறமிருக்க, பென்ச்சமினின் வீட்டைக் கண்டு பிடித்தல் அவசியப்பட்டது. இலக்கு பென்ச்சமினிற்கு நெருக்கமானவன் என்பதையும் இன்னும் பல விடயங்களையும் அன்றைய இரவில் அம்மண்டபத்தில் அவன் ஒட்டுக்கேட்பில் உய்த்தறிந்திருந்தான். இலக்கை அடைவதற்குப் பென்ச்சமினைக் கவனித்தல் சீலனிற்கு அவசியமானது. பென்ச்சமின் ஒரு தமிழன் என்றறிந்தபோது தன்னையறியாது உள்ளுர ஒவ்வாமைகள் எழுந்ததை சீலனின் குவியம் குறித்துக் கொண்டது. ஆனால் இலக்கு என்னவென்பதில் சீலன் தெளிவாய் இருந்தான்.

இரண்டு மாதங்களின் தேடல் ஒரு துப்பாக்கியினை சீலனிற்குப் பெற்றுக் கொடுத்தது. நேரத்தை உச்சப்பயன் படுத்துவதற்காய் ஒரு பழைய காரினை வாங்கிக் கொண்டான். மூன்று மாதங்களாய் பென்ச்சமினின் வாழ்வு சீலனின் கவனத்திற்குள் இருக்கின்றது. உள்ளே ஒரு முறை செல்வது இலக்கு பற்றிய புதிய தகவல்கள் எதையேனும் கொடுக்கும் என சீலன் நம்பிய போதும், பணக்கார வீடு, ஏகப்பட்ட கமராக்கள். அரை மணிநேரம் முன்னர் சீலன் அங்கு வந்திருந்தான். ஏனோ இன்றைக்கு அவனால் வீட்டின் உள் செல்ல வேண்டிய உந்துதலை அடக்கமுடியவில்லை. மணியினை அழுத்தினான்

அவ்வீட்டின் கூடத்தின் சுவரில், ஜேசுநாதர் தனது பன்னிரு சீடர்களுடன் உண்ட “கடைசி உணவு” சித்திரம் போன்று ஒரு சித்திரம். ஆனால் சித்திரத்தில் ஜேசு இல்லை. பென்ச்சமின், இலக்கு மற்றும் பலர் மகிழந்து உணவருந்திக்கொண்டிருந்த புகைப்படம். தனக்கு வழங்கப்பட்ட திட்டம் இலக்கு. பென்ச்சமினும் நிலாவும் தான் எதிர்பாரா வண்ணம் தனக்கும் எழுந்த ஒவ்வாமைகள். இவ்வொம்மாமை சார்ந்து தானாக முடிவெடுத்து அவர்களை கொல்ல கட்டழை இல்லை. எதற்கும் ஒரு முறை, சங்கேத பாசையில் தனது தொடர்போடு தொடர்பெடுத்துக் கேட்டுவிடலாம் என்றது மனம். பென்ச்சமினின் தொலைபேசியில் தனது மனதில் அழியாதிருந்த இலக்கத்தை அழுத்துகிறான்

—-
“யார் தம்பி நீங்கள், என்ன நோக்கத்தில வந்திருக்கிறியள்” என்பது பென்ச்சமின் கேட்ட கேழ்வி தானா என்பதை சீலனால் நிச்சயமாகக் கூற முடியாது. அது அவனிற்குள் முன்னொரு பொழுதில் ஏறி உட்கார்ந்து கொண்ட, அப்பப்போ தொல்லைப் படுத்தும் ஒரு கேள்வி. பென்ச்சமினும் அதனைக் கேட்டிருக்கக்கூடும்.

சித்திரத்தைப் பார்த்தபோது, இலக்கு மீண்டும் மனதுள் சென்றபோது, தோட்டா பென்ச்சமினின் தலையைத் துழைத்துச் சென்று சித்திரத்தில் இருந்த இலக்கின் நெற்றியில் ஏறியது. கண்ணாடி உடைந்தது, ஆனால் புகைப்படம் சுரில் தோட்டவோடு தங்கி நின்றது. இலக்கு நெற்றியில் பொட்டோடு கம்பத்தில் தொங்கியது போலிருந்தது. இப்போது நிலாவைச் சுடும் அவசியம் சீலனிற்குள் மறைந்து போனது.

போதையின் பிடியில், சத்தங்களிற்குள் வாழப் பழகிய நிலாவிற்கு துப்பாக்கிச் சத்தம் கேட்டபோது நிற்கும் அவசியம் எழவில்லை. பச்சை குத்தப்பட்ட குதிரையில் அவள் பயணித்துக்கொண்டிருந்தாள்.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இலக்கு மீண்டும் தப்பி விட்டது:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் பகுதி எழுதாமல் விட்டு இருக்கலாம்tw_dissapointed_relieved:

ஆக்கத்திற்கு நன்றிகள்

(முதற்பகுதி)

உங்கள் கதை ஒரு கிளிக்செய்யப்பட்ட புகைப்படம் போன்ற ஒரு உணர்வு. சம்பவம் எப்படி நடந்தது என்ற கேள்விக்கு இப்படித்தான் நடந்தது என்று அந்த சம்பவக் காட்சியை பிரதிசெய்கின்றது. ஏன் ஏதற்கு சம்பவத்தின் பின்புலங்கள் இக் கதைத் தலைப்பிற்கு அப்பாற்பட்டது. 

ஒரு புகைப்படம் அல்லது ஓவியமானது சம்பவம் அல்லது காலத்தின் ஏன் எதற்கு என்ற கேள்விகளுக்கான விடைகளைத் தாண்டி உணர்வுபூர்வமாக நிறைய விசயங்களை தொடர்ந்து உணர்த்திக்கொண்டிருக்கும். கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கும். அது பொதுவானதாக இருக்காது..அவரவருக்கு அது வேறுபடும். இக்கதையும் அவ்வாறானது. 

 

  • தொடங்கியவர்

அனைவரின் கருத்துக்களிற்கும் நன்றி.

சுவி, இலக்கு பென்ச்சமின் வீட்டில் தப்பவில்லை. கதையிழந்த கதாநாயகனாக சீலன் ஆகிப்போன ஒன்பது வருடங்களின் முன்னரே அது தப்பிப் போனது.

ரதி உங்கள் விமர்சனமத்pற்கு நன்றி. குறியீடுகளைக்கோடிட்டுட் காட்டத் தோன்றியதால் ஒரு வாசிப்பபு சேர்க்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரிற்கும் ஒவ்வொரு வாசிப்புச் சாத்தியப்படும்.

சுகன் நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஆதலால் தான் பின்னையது பின்னிணைப்பாக மட்டும் ஆனது. 

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.